அன்பு செலுத்துவதை
வினோத குற்றமாய்
நீ கருதுகிறாய்..!
நீ வினோதமானவளென்பதாலே
உன் மீது அன்பு செலுத்த நேர்கிறது.
——-
தண்டனையாக
இரண்டு நாட்கள் பேசாமலிரு என்கிறாய்.
ம்ம்ம்
இரண்டு நாட்கள் உயிரை விட்டுவிடென
நீ சொல்லி இருக்கலாம்..!
———
கடந்தக்கால ரணங்களை
மறக்க
நீ நடத்தும் நிகழ்கால செய்கைகள்
எதிர்கால ஆபத்து என்கிறேன்.
என் தோள் சாய்ந்து
உனை காப்பாத்து என்கிறேன்.
நீயென் அறிவுரையை
காதலென திட்டுகிறாய்.
காதலென்றாலும் அது தீட்டில்லையடி..!

ஒன்று மட்டும் மறவாதே
மறுமணத்தை வலியுறுத்திய
பெரியாரின் பேரன் நான்,,!

——
உன் விருப்பம் வேண்டாமா என்கிறாய்.
நிச்சயமாக
விருப்பமற்று விளைச்சல் ஏதுமில்லை.
காத்திருக்கிறேன்
எப்போது விருப்பம் கொள்வாய்…
என் மீது…
என் மீது மட்டும்..?
அப்போது சொல்….

மின் மயான
தகன மேடையில்
எரிந்துச் சாம்பலாகுமே
அப்போதும் கூட
நீ விரும்பினால் போதும்
எரியும் என்னுடல்
கொஞ்சம் குளிரும்..


பெண்ணுரிமை ஆராதனைச் செய்பவன்
ஒரு போதும்
என்னுரிமை
உன்னுரிமையில் தலையிடாது,

—-
சரி விலகி போ என்கிறாயா..?
விலகி போகிறேன்.
ஆனால்
உன் நினைவுகளை
நான் என்ன செய்ய…?

—-
முதலில் நீ சாதிக்க வழி தேடு என்கிறாய்.

என் சாதனையே நீதானம்மா…!


ம்ம்ம் உன்னிடமிருந்து விலகுவதுதான்
உன் அடியாழ விருப்பமெனில்…
இதோ விலகுகிறேன்

உன்னிடமிருந்து

விழி ஒளியில்
கத்தி செய்துக்கொடு..
இருதயத்தை வெட்டிக்
கொடுத்து போகிறேன்.


உன்னை அடைந்தே தீருவேனென
நான் அடம்பிடிக்கவில்லை.
உன்னை அடைவதில் தான்
நான் தீருவேன்…!

”நான் இப்படித்தான்
பிடித்தால் பழகு
பிடிக்கலானா விலகு”
என்கிறாய்…

உன்னிடம் பிடித்ததே
இந்த திமிர் தான் தேவதையே!

-இரா.சந்தோஷ் குமார்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.