மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -7
க. பாலசுப்பிரமணியன்
அஷ்டபுயக்கரம் – (அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் )
கோகுலத்தில் உறியுடைத்து வெண்ணையுண்ட கரமொன்று
கோதையர்கள் துணிகளையே கவர்ந்திட்ட கரமொன்ற
குலம்காக்கக் காளிங்கனின் வால்பிடித்த கரமொன்று
குழலூதி கோவினங்கள் அழைத்திட்ட கரமொன்று
குலமகள் பாஞ்சாலியின் இனம்காத்த கரமொன்று
குருட்சேத்திரத்தில் தேரோட்டித் துணைதந்த கரமொன்று
குற்றுயிரான கர்ணனிடம் கொடைகேட்ட கரமொன்று
குசேலனின் குறைதீர்க்க கருணைகொண்ட கரமொன்று ‘
கோதண்ட இராமனாய் வில்லெடுத்த கரமொன்று
கோபத்தில் இரணியனைக் கூரிட்ட கரமொன்று
குறையெல்லாம் தீர்த்திடுமே கோவிந்தன் அருட்கரமே
குறையாத நலம்பெருக்கிக் குலம்காக்கும் திருக்கரமே
அத்தனை கரங்களும் அன்புடன் அணைத்திடுமே
அட்டபுயத்திலோ அச்சுதன் எடுத்தது ஆயுதமே
அம்போடு வில்லும் அரிவாளும் கதையும்
அரக்கனை அழித்திட சங்கோடு சக்கரமும்.
படைப்பவனின் வேள்வியினை அழித்திடவே பாரதியும்
பகைகொண்ட நெஞ்சோடு பாம்பினையே அனுப்பிவிட
பரந்தாமன் ஆயுதங்கள் அரக்கனையே அழித்துவிட்டுப்
பகலவனாய் ஒளிபெருக்கப் பகைமறந்தாள் பாரதியும் !.
ஊழ்வினையால் உருவத்தில் யானையாய் முனிவனும்
ஊழ்கழிக்கத் தாமரையால் தாமோதரனைப் போற்றிடவே
தாள்பணிந்த யானையின் கால்பிடித்த முதலையின்
நாள்முடிக்க ஓடிவந்தான் உலகாளும் பரந்தாமன் !
கரம்கூப்பி வேண்டுகின்றேன் கண்ணனே காத்திடுவாய்
காரிருள் வாழ்க்கையிலே கதிரொளியாய் வந்திடுவாய்
காததூரம் நீயிருந்தும் காதுகொடுத்தே கேட்டிடுவாய்
காலங்கள் கடந்தவனே கற்பனைக்கும் இனியவனே !

