பெண் குழந்தையைப் பேணுவோம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சின்னஞ் சிறிய செல்லக் கிளியே
உணர்ந்து கொள்ளம்மா – உலகை
உணர்ந்து கொள்ளம்மா!
அன்னை தந்தை வாரி அணைத்தால்
அமைதி அடையுமே – உள்ளம்
அமைதி அடையுமே! – ஓர் அன்னியன் அப்படிச் செய்தல் தவறென
உணர்வு சொல்லுமே – உன்
உணர்வு சொல்லுமே!
கொடிய நோக்கம் கொண்டோன் என்றால்
சொல்லி விடம்மா – தாயிடம்
சொல்லி விடம்மா! – உடனே
அவனை விட்டு தூர விலகி
ஓடி விடம்மா – நீ
ஓடி விடம்மா!
உரிய பருவம் அடையும் போது
மாற்றம் நிகழுமே – உடலில்
மாற்றம் நிகழுமே! – இது
இயற்கை அளிக்கும் இனிய பரிசு
அஞ்சி விடாதே – நீயும்
அஞ்சி விடாதே!
உன்னத உடலை மறைத்துக் கொள்ளவே
ஆடை அணிகலன் – உனக்கு
ஆடை அணிகலன்! – அதை
உணர மறந்து கவர்ச்சிப் பொருளாய்
ஆகி விடாதே – நீ
ஆகி விடாதே!
கொடிய உலகின் தன்மையைப் புரிந்து
நடந்து கொள்ளம்மா – நீயும்
நடந்து கொள்ளம்மா!
கடிய பாதை அனைத்தையும் கடந்து
வெற்றி கொள்ளம்மா – உலகை
வெற்றி கொள்ளம்மா!
– ஆ. செந்தில் குமார்.