-மேகலா இராமமூர்த்தி

fishing net

மீன்வலை தைக்கும் மீனவ நண்பர்களைக் கலைநயத்துடன் படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. லோகேஸ். இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் நன்றியுடையேன்!

தரைமேல் பிறந்து தண்ணீரில் பிழைக்கும் பரதவர் (மீனவர்) வாழ்க்கை நிலையில்லாததாகவும் இரங்கத்தக்கதாகவுமே இருந்திருக்கின்றது அன்று. நெய்தல் நிலத்தின் உரிப்பொருளாகத் தமிழ் இரங்கலைத் தேர்ந்தெடுத்ததும் அக்காரணம் பற்றித்தான். ஆனால் தொழில்நுட்பமும் அறிவியலும் போட்டிபோட்டு வளர்ந்திருக்கும் இன்றைய சூழலிலும் அந்த அவலநிலை தொடர்வது நெஞ்சில் வேதனையைப் படரச்செய்கின்றது.

வலையொடு பின்னிப் பிணைந்திருக்கும் பரதவர் வாழ்வு குறித்துப் பாடக் காத்திருக்கும் கவிஞர்களை வரவேற்போம்!

*****

அலையோடு விளையாடி வலையோடு போராடும் வலைஞரின் வாழ்வைக் கலப்படமின்றி படம்பிடிக்கும் ஒரு கவிதை, தமிழக மீனவன் இந்திய மீனவனாய் அடையாளப்படுத்தப்படும் நாளே அவன் களையிழந்த வாழ்வின் களையெடுத்து, அவனையும் ஒரு மனிதனாய்த் தலையெடுக்க வைக்கும்நாள் எனும் எண்ணத்தை வெளிப்படுத்தும் மற்றொரு கவிதை என இரு அழகிய கவிதைகளைப் படைத்தளித்திருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.  

வலைஞரின் வாழ்க்கை
மீன்பிடி வலைதன்னில் முந்தினத்தில் ஏற்பட்ட

முக்கியப் பழுதுகளை முத்தாய்ப்பாய் சரிசெய்து
பாய்மரச்சீலை விரித்து பக்குவமாய் வடம்பிடித்து
கடலோடு உறவாடி அலையோடு விளையாடி 
காற்றோடு கவிபாடி வலையோடு போராடி
கட்டுமரத் தொட்டிலையே கடலலைகள் தாலாட்ட…

நெகிழியிழைப் படகோடு நெஞ்சமெல்லாம் நிறைவோடு
தோணிகளின் துணையோடு தோழர்களின் படையோடு
வள்ளங்கள் மரக்கலங்கள் விசைப்படகின் இசைவுடனே 
எங்கும் நிறைந்திருக்கும் எல்லையில்லாப் பெருங்கடலில் சங்கும் முத்துச்சிப்பியும் அரியபலவும் மீனுங்கொணர
வலைஞர் விரைந்திடுவர் வான்குலவும் கடலாட…

ஆழ்கடலில் வலைவிரித்து அகப்பட்ட மீனையெல்லாம்
அயர்ச்சியென்றும் இல்லாமல் முயற்சிக்கிழுக்கு நேராமல்
மழையென்றும் வெயிலென்றும் புயலென்றும் பாராமல்
முறையாகப் பாதுகாத்து முனைப்புடனே கரைசேர்த்து
காத்திருக்கும் வணிகரின் கூடையெல்லாம் மீன்நிரம்ப – எதிர்
பார்த்திருக்கும் மக்களின் பசிபோக்க முனைந்திடுவர்…

இளைப்பாற வலையுலர்த்த உதவிற்ற கச்சத்தீவை
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அளித்ததனால்
தமிழக மீனவர்கள் பரிதவித்து நிற்கின்றார்
தரங்கெட்ட சிங்களனும் செய்நன்றி மறந்துவிட்டுத்
தமிழனின் வலையறுத்துச் சிறைப்பிடித்து மகிழ்கின்றான் – இதைத்
தட்டிக்கேட்க நாதியற்றுத் தமிழன்தன்னுயிரைக் கொடுக்கின்றான்…

*****
மீனவன்
இன்று

கடந்துவந்த பாதையின் கசப்பான நினைவுகளோடு
மீன்பிடித் தடைக்காலம் நீங்குமுன்னே
பழுதுப்பட்ட வலைகளைச் சரிசெய்தான்
எதிர்வரும் பருவத்தை மனதிற்கொண்டு…

அலை மோதும் கடலினிலே
வலை வீசும் மீனவனின் – உயிருக்
குலை வைக்கும் போராட்டம்
மலை போல ஏராளம் – அதை
சிலை போல தாங்கி – நிதம்
நிலை குலையாது இருந்திடுவான்…

[…]

அன்று
காற்றழுத்தத் தாழ்வுநிலையின் சீற்றம் தாளாமல்
சிதைவுற்ற வலையோடு மீனின்றிக் கரைசேர்ந்தான்…
இழையோடும் சோகத்தால்
களை இழந்து காணப்பட்டான்…

நெகிழி இழை கொண்டு
நேர்த்தியுடன் பின்னப் பட்ட
பெரிய வலை எடுத்து
புறப்பட்டான் ஆழ் கடலுக்கு…மீனோடு வரும்
மணாளனை எதிர்நோக்கி
மனையாள் காத்தி ருந்தாள்
அன்று
[…]
இனிவரும் காலங்களில்
தமிழக மீனவன் சுடப்பட்டான்
தமிழக மீனவன் சிறைப்பட்டான்
என்று செய்திசொல்லும் நிலைமாறி
இந்திய மீனவன் சுடப்பட்டான்
இந்திய மீனவன் சிறைப்பட்டான்
என்று சொல்லிடும் நிலைவேண்டும்…
அப்போதேனும் கன்னடர்க்கும் காசுமீரிக்கும் 
மத்திய அரசுக்கும் மளையாளிக்கும் – நெஞ்சில்
சற்றேனும் ஈரம் பிறக்கும்….!

*****

”வாழ்வாதாரமாகும் வலையே மீனவர்க்குக் கவலை எனும் சேதாரத்தையும் தருகின்றது. கவலையில்லா வாழ்வை மீனவர்க்கு வலை கொண்டுவருவது எந்நாளோ? என்று வினா எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

(க)வலையா…

வலை,
வாழ்வாதாரமாகிறது
மீனவர்களுக்கு..

சிலநேரம் அது
கவலையைக் கொண்டுவருகிறதே-
கடலில் மீன்பிடிக்கச் சென்றால்..

மீன் கிடைக்கவில்லை என்பது
சிறு கவலை,
மீனவனே கிடைக்கவில்லை என்பது
மீளமுடியாக் கவலை..

கவலையேயில்லா வாழ்வைக்
கொண்டுவருமா வலை-
காத்திருப்போம்…!

*****

மீன்களோடும் விண்மீன்களோடும் நடுக்கடலில் உறவாடி, மாதம்பாதி மண்ணிலும் மீதம்பாதித் தோணியிலும் வாழ்க்கையைக் கடத்தி விடியலைத் தேடும் மீனவ நண்பர்கள் வாழ்க்கையைப் பாங்காய்ப் படம்பிடித்திருக்கிறார் திருமிகு. ஹேமா வினோத்குமார்.

விடியலை நோக்கி!!!

கட்டுமரங்கட்டி
கவனத்தோடு வலைபின்னிச்
சொந்தங்களுக்குப்
பிரியா விடையளித்து
நடுக்கடல் நோக்கி…!!
பகலெல்லாம் பாடுபட்டு
இரவெல்லாம் கண்விழித்து
மாதம்பாதி மண்ணிலும்
மீதம்பாதித் தோணியிலும்
அப்பா வருவார் என்று மகளும்
ஐயா வருவார் என்று மகனும்
ஆசையாய் மலர்சூடி
அத்தான் வருவார் என்று என்னவளும்
அன்புடன் தமையாளும்
பிரார்த்தனையோடு பெற்றோரும்
எனக்காக!!
என் பாதச்சுவடுகளுக்காக!!
வழியின் மேல் விழி வைத்து!!
வழியின் மேல் விழி வைத்து…
உப்புக்காற்றில் கரைந்து
எம்மக்கள் நினைவுகளோடு
கட்டுமரத்தில் அயர்ந்து
வயிற்று பிழைப்பிற்காக
ஆயிரம் ஆயிரம்
மீன்களோடும் விண்மீன்களோடும்
நடுக்கடலில்…!!
காற்றோடு கவிபாடி
வலையோடு விளையாடி
சிற்றுயிர் கொய்து
பாவஞ்சுமந்த மனதுடன்
கரையை நோக்கிக்
கட்டுமரத்தில் நான்!!
வழிபுரளாமல்
எல்லை தாண்டாமல்
பெருங்கவனத்துடன்
அலைகளோடு புரண்டு
சுடுமணலில் கால்பதிக்க
ஓடத்துடன் ஓடி
இரண்டாஞ்சாமத்தில் கிழியோடு
கட்டுமரத்தில்!!
சின்னஞ்சிறு ஆசைகளை
சுமந்து…!!!

மீனவனாய்!!

விடியலை நோக்கி!!

*****

அலை குதிரைகளில் சவாரி செய்யும் சமுத்திர ராசனின் செல்லப்பிள்ளைகளாம் மீனவ நண்பர்களின் வலையில் மீன் சிக்கினால் வீட்டில் உலை கொதிக்கும்; இல்லையேல் வயிற்றுத் தீயால் அவர் உடல்கொதிக்கும் என்று உணர்வுபூர்வமாய்க் கவி வடித்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

கண்ணீர்க் கடல்:

அலை குதிரைகளில் சவாரி செய்யும் மன்னர்கள்!
சமுத்திர ராசனின் செல்லப் பிள்ளைகள்!
ஆழ்கடல் பயணம் அனுதினம் போய் வரும்
மீனவ நண்பர்கள்!
உயிரைப் பணயம் வைத்து, மீன்களை நமக்குத்
தரும் கர்ம வீரர்கள்!
வலையில் மீன்கள் சிக்கினால் தான்!
மீனவன் வீட்டில் உலை கொதிக்கும்!
மீன் கிடைக்காத நாட்களிலே!
பசிக் கொடுமையினால் உடல் கொதிக்கும்!
கிழிந்த வலையில் மீன் சிக்காது!
மீனவன் வாழ்வில் என்றும் மகிழ்விருக்காது!
கடலருகில் வலை போட்டால் மீன் கிடைக்காது!
ஆழ்கடல் சென்றாலோ உயிருக்கு
உத்தரவாதம் இருக்காது!
கடல்நீர் ஏன் உப்பென்று காரணம்
இன்று தான் புரிந்தது!
மீனவப் பெண்டிர் வடித்த கண்ணீர் தான்
கடல் நீரை உப்பாய் மாற்றியது!!!
கிழிந்த வலையைத் எளிதாய்த் தைத்து விடலாம்!
தொலைந்த இவர்கள் வாழ்வை
நாம் முயன்றால் தேடிக் கொடுத்து விடலாம்!

*****

ஆழிசூழ் உலகாம் நெய்தல் திணையின் பிள்ளைகள், புயலுக்கும் மழைக்கும் அந்நியரின் கொலைவெறிக்கும் ஆட்பட்டுக் கதறும் அவலத்தை உளம்தொடும் பாவாக்கியிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

கடலோடியின் கதறல்..! 

கடலால் சூழ்ந்திடும் மண்ணுலகம் இருப்பதாலே..
……….கடல்சார்ந்து வாழ்வதுதான் கடலோடியின் நிலை.!
அடலேறுபோல உடலுறுதி கொண்டவரே யாயினும்..
…….அலைநடுவே ஆபத்துடன் கழிப்பதேயம் வாழ்வு.!
இடர்ப்படும் துன்பமும் தொல்லையுமெம்
உடன்பிறப்பு..
……….இல்வாழ்வில் இன்பமென்றால்
யாருக்கும் தெரியாது.!
கடலுக்கும் கரைக்குமுள்ள
தூரத்தாலே எங்களது..
……….உடலுக்கும்
உயிருக்குமொரு உத்திர வாதமில்லை.!.

.
வலைவீசி மீனுக்காகக் காத்திருக்கும் வேளையில்..
…….வஞ்சகர்கள் வீசும் வலையிலும்யாம்
வீழ்வதுண்டு.!
அலைமேலேறித் தாவும்
பெருந்திமிங்கிலம் போல்..
……….ஆயிரமைல்
வேகத்தில் வருமன்னியப் படையது.!
வலையறுக்கும்!
படகுடைக்கும்! பகை விலக்கியாம்..
…….தொலைதூரம் சென்றால்?எல்லை
தாண்டினாயென..
கொலையும் செய்வார்! கொடும்
பாவியரப்போது..
……….அலைதான் எங்களுக்கெலாம்
ஆறுதல் சொல்லும்.!.

.
காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?எனக்..
…….கருத்துக் கவிபுனைந்தான் கவியரசு
கண்ணதாசன்.!
காற்றுடனும் அலையுடனும் போராடி
உறவாடும்..
……….கண்ணீரும் கடல்நீரும்
வற்றாதென்பது இயற்கை.!
காற்றழுத்தம் வரும்
போதலையின் சீற்றத்தால்..
……….காய்ந்த கருவாடு
போலநாளும் கரைசேருவோம்.!
மாற்றுவழி
வாழவொரு வழியில்லை ஆற்றாதழுத..
…….மனதைக் கல்லாக்கி தேற்றியும்யாம் வாழுகிறோம்.! 

*****

சமீபத்தில் ’ஒக்கி’ புயலில் சிக்கி, விக்கிநிற்கும் குமரி மாவட்ட மீனவரின் அவல வாழ்வியல் நிகழ்வுகள் கவிஞர்கள் அனைவரின் கவிதைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கக் காண்கிறேன். காலத்துக்கேற்ற வகையில் கவிவடித்திருக்கும் உங்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டு!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

வலைப்பதிவு

தண்ணீரில் நித்தமும் நீந்திச் செல்லும் என்னால்
கண்ணீரில் நிற்க முடியாது தத்தளிக்கிறேன்

பெற்ற மகனையும் கட்டிய கணவனையும்
பேரலை வந்து அள்ளிச்சென்றதெனக் கேட்டு
பேரதிர்ச்சியில் கதறி அழும் பந்தங்களின் கண்ணீரில்

அப்பா எப்போது வருவார்; முத்தம் தருவார்;
அள்ளி அணைத்து அழகிய புத்தாடை வாங்கித் தருவார் என
ஆயிரம் கனவுகளுடன் ஏங்கிக் கிடக்கும்
அல்லி மலர்களின் கண்ணீரில் –

தத்தளிக்கிறேன்.. தவிக்கிறேன்..
கரைபுரண்டோடும் வெள்ளத்தில் நீந்தி மகிழும் என்னால்
கவலையில் ஊற்றெடுக்கும் இக் கண்ணீரில் நொடி கூட நிற்க முடியவில்லை..

நானே வருகிறேன் தலைவா.. எனை நம்பி வாழ்வை நடத்தும் என் தலைவா..
காலங்காலமாக உனக்காய் மீன்களை பிடித்துத் தரும் என்னால்,
காப்பாற்ற ஆளில்லாமல் பரிதவிக்கும் உனை
காக்க முடியாதென்று நினைத்தாயோ?!
எவரும் வேண்டாம் என் வேந்தனே..
இதோ நான் வருகிறேன்..
உனைக் காப்பாற்றிக் கரை சேர்க்க..
உற்றவரிடம் உனைக்கொண்டு சேர்க்க…!

கடலன்னை புயலாய்ச் சீற்றங்கொண்டால் தன் பிள்ளைகளென்றும் பாராமல் பரதவரையும் பந்தாடிவிடுகின்றாள். அவளின் அடாத செயல்கண்டு துடிதுடித்து நிற்கும் பரதவர் வடிக்கும் கண்ணீர், உயிரற்ற மீன்வலையையும் உயிர்கொண்டு உதவச் செய்திடும் ஆற்றலுடையது எனும் புதிய சிந்தனையைத் தன் பாட்டில் பதியமிட்டிருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.  

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 140-இன் முடிவுகள்

  1. இவ்வாரத்தின் சிறந்த கவிஞருகும், ஏனைய கவிஞர்களுக்கும் எனது  மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.