Blog

  • வ.சுப. மாணிக்கனார் பார்வையில் வினைத்தொகை

    -முனைவர் த. சரவணன்

    தமிழுக்கே உரிய சிறப்புக் கூறுகளாக எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்து எழுத்துக்களைக் கூறுவர். அதேபோன்று சொல்லாக்க முறைகளில் வினைத்தொகை என்னும் தொகைச்சொல் வடிவமும் தமிழுக்கே உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வினைத்தொகைபற்றி இலக்கணிகள் குறிப்பிடுவது பற்றியும் வ.சுப. மாணிக்கனார் அவற்றில் இருந்து வேறுபடுவது பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    வினைத்தொகை

    வினைத்தொகையானது இரண்டு சொற்கூறுகளைக் கொண்டது. அதன் முதற்கூறு வினையடியாகவும் இரண்டாவதுகூறு பெயராகவும் காணப்பெறும். சான்றாகக் கொல்களிறு என்ற சொல்லில் உள்ள கொல் என்பது வினையாகவும் களிறு என்பது பெயராகவும் காணப்படுகிறது.

    வினைத்தொகையைப் பற்றித் தொல்காப்பியர்

    வினையின் தொகுதி காலத் தியலும்” (தொல். எச்சவியல். 19) என்கிறார். இதில் வினைத்தொகை என்பதை வினையின் தொகுதி என வழங்குகிறார் அவர். வினைத்தொகையானது கால இடைநிலை தொக்குப் பொருள் தரும் என்பது இந்நூற்பாவால் பெறப்படுகிறது.

         நன்னூலார் வினைத்தொகையை,

         “காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” (நன்னூல். 364)

    என்கிறார். வினைத்தொகையை விரித்துப் பொருள் கொள்ளும்பொழுது எச்சமாக மாற்றியே பொருள்உரைக்க முடிகிறது. சான்றாகக் கொல்களிறு என்பதைக் கொன்ற களிறு என்னும்போது இறந்தகாலப் பெயரச்சமும், கொல்கின்ற களிறு என்னும் போது நிகழ்காலப் பெயரெச்சமும் கொல்லும் களிறு என்னும் போது எதிர்காலப் பெயரெச்சமும் இடம்பெறுகிறுகிறது. எனவே இப்பெயரெச்சங்களைத் தொகையாக்கிக் கூறும்போது வினைத்தொகை உண்டாகிறது என்பது பொதுவான கருத்து.

    வினைத்தொகை என்னும் சொற்கூட்டின் முதற்கூறு வினையும் வினைப்பெயரும் தோன்றுவதற்குரிய வேர்ச்சொல்லாக அமைந்து இருக்கின்றது. வினை என்பது காலம் காட்டும் தன்மை உடையது ஆகும். ஆகவே வினைத்தொகையும் காலமொடு வருகிறது. வினைத்தன்மையே அச்சொற்கூட்டில் இருப்பதால் வினைத்தொகை என்று பெயர்கொடுக்கப்பெற்றுள்ளது. எனவே வினைத்தொகை என்பதற்கு  வினைத்தன்மை அதாவது காலம்காட்டும் நிலை தொக்கது என்று விளக்கம் அளிக்கலாம்.

    வ.சுப.மாணிக்கனார் பார்வையில் வினைத்தொகை

    வ.சுப. மாணிக்கம் அவர்கள் A Study of Tamil verbs என்னும் நூலில் வினை வடிவங்களை அடையாளம் காண்பதில் உதவும் காரணியாக வினைத்தொகையைக் காண்கிறார்.

     “வினைத்தொகையைக் கட்டமைக்கும் அச்சொற்கூட்டின் முதல் பகுதியானது எந்த ஒரு வினையின் மூலவடிவத்தையும் உறுதிசெய்வதற்குத் தவிர்க்க இயலாக் காரணியாக விளங்குகிறது. சான்றாக ஆகூழ், ஆகாறு, ஆகிடன், அளவாகு மொழிமுதல் ஆகிய சொற்களில் ஆகு என்னும் தூய வினைவடிவத்தை நாம் காணமுடியும்” (A Study of Tamil verbs, ப.37)

    ஏவல் வடிவங்கள் வினையின் உண்மையான வடிவத்தைக் காட்டுவதில் தோல்வி அடையும்போது வினைத்தொகை வடிவங்களே நம்மைக் காப்பாற்றுவதாகவும் வ. சுப. மாணிக்கனார் குறிப்பிடுகிறார். மேலும் சிக்கலுக்குரிய வினைவடிவமாகிய வா, தா என்பவற்றின் வினையடியாக வரு, தரு என்பதையே கொள்ளலாம் என்பதைப் பின்வரும் கூற்றின் மூலம் விளக்குகிறார்.

    “ஐயத்திற்குரிய எந்த ஒரு வினைவடிவத்தின் உண்மையான மூலத்தையும் அடையாளம்காண நமக்கு உதவுவது வினைத்தொகையின் முதற்கூறான வினையடியே. பின்வரும் சான்றுகளில் வரு, தரு என்னும் சொற்கள் வினைத்தொகையில் அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரு    விசிப்புனல் (தொல்.1008) வரு விருந்து (குறள்.83) புனல்தரு பசுங்காய் (குறுந்தொகை. 292)” (A Study of Tamil verbs, ப.44)

    வினைத்தொகை பற்றிப் பிற்கால இலக்கணிகள் கொண்டிருந்த கருத்துக்கு மாற்றாகத் தொல்காப்பியரைப் பின்பற்றி, வினைத்தொகையில் இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் மட்டுமே  உணரமுடியும் என்பதைப் பின்வருமாறு வலியுறுத்துகிறார்.

    “இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் குறிப்பிடும் இரண்டு பெயரெச்சங்களை மட்டுமே      தொல்காப்பியர் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

    அவ்வறு பொருட்குமார் அன்ன உரிமைய
    செய்யும் செய்த என்னும் சொல்லே (தொல். 718)

    கொல் களிறு போன்ற சொற்களில் நிகழ்காலத்தையும் இறந்தகாலத்தையும் மட்டுமே விளங்கிக்கொள்ள முடிவதாகஅவர் எண்ணுகிறார். இதற்குச் சான்றாகப் பின்வரும் நூற்பாவைக் குறிப்பிடலாம்.

    செய்யும் செய்த என்னும் கிளவியின்
    மெய்யொருங்கு இயலும் தொழில்தொகு மொழியும்” (தொல். 482)”                                                                                  (A Study of Tamil verbs, ப.102)

    மேற்கண்ட கூற்றில் தொழில்தொகு மொழியாகிய வினைத்தொகையில் செய்யும் செய்த என்னும் இரண்டு காலமே அதன் விரியில் வருவதை எடுத்துக்காட்டி இடைக்கால இலக்கணிகள் குறிப்பிடும் முக்காலமும் காட்டும் என்பதனை வ.சுப. மாணிக்கனார் மறுப்பதை அறியமுடிகிறது.

    “உம் ஈறு நிகழ்காலத்துக் குரியது எதிர்காலத்துக்குரியதாவது எதனாற் பெறுதும்? என்பது வினா. பெயரெச்ச விகுதிகளுள் அகரம் இறப்பு நிகழ்வுக் காலங்கட்குரியது. உம் நிகழ்வுக்குரியது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லையாதலின் உம் விகுதியைக் கொள்ளவேண்டும்.” (தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் – எச்சவியல், பக்.132) என்று ஆ. சிவலிங்கனார் குறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லாமையாலேயே இரண்டு பெயரெச்சங்களே வினைத்தொகையில் காணப்படுகின்றன என்று வ.சுப. மாணிக்கனார் முடிவு செய்கிறார். தொல்காப்பியர் வினைத்தொகையைப் பற்றிக் குறிப்பிடும் நூற்பாவில் காலத்தியலும் என்று பொதுப்படையாகக் கூறி இன்ன காலம் என்று குறிப்பிடாமல் சென்றுள்ளதும் இதற்குக் காரணமாகும்.

    இறுதியாக, வினைத்தொகை என்பதில் கடந்த கால, நிகழ்காலப் பெயரெச்சங்களே தொக்கி நிற்கின்றன என்பதும் வினையடியின் தூய வடிவைக் கண்டறிவதில் வினைத்தொகையின் முதற்கூறு உதவுகிறது என்பதும் வ.சுப. மாணிக்கனாரின் இலக்கணப் பார்வையின் மூலம் அறிய முடிகிறது.

    ******

    துணைநின்ற நூல்கள்:

    Manickam,V.Sp. 1972. A Study of Tamil Verbs. Annamalai Nagar: Annamalai University.

    சிவலிங்கனார், ஆ. 1998. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (உரைவளம்) எச்சவியல்.  சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

    ******

    கட்டுரையாசிரியர்
    இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
    இலக்கியத்துறை
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    #40, ஐ.ஆர்.டி வளாகம், நூறடிச்சாலை,
    தரமணி, சென்னை – 113.

     

     

     

    Share
  • எழுத்திலா ஓசையும்  மாத்திரையும்

    -முனைவர் ம. பிரபாகரன்

    தொல்காப்பியத்தில் மாத்திரை ஓர் அடிப்படைச் செய்யுளுறுப்பாகக் கொள்ளப்பட்டுள்ளது. பிற நூல்களில் மாத்திரை அடிப்படைச் செய்யுள் உறுப்பாகக் காட்டப்படவில்லை.  எழுத்தைக் கூறும்பொழுதே மாத்திரையும் உள்ளடங்கி விடுகிறது; அதனைக் கருத்தில் கொண்டே தொல்காப்பியம் தவிர்த்த மற்ற யாப்பிலக்கண நூல்கள் மாத்திரையை ஓர் உறுப்பாகக் கொள்ளாமல் விட்டிருக்கின்றன எனலாம். தொல்காப்பியர் மாத்திரையைத்  செய்யுளியல் முதல் சூத்திரத்தில் செய்யுளுறுப்பாக கூறிவிட்டு, இரண்டாம் சூத்திரத்தில் மாத்திரைக்கு விளக்கம் கூற வரும்போது,  மாத்திரையின் இலக்கணம்  மேற்கிளந்தனவே அதாவது எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகிறார் (தொல்.செய்.2). அதே போல் தொல்காப்பியர் செய்யுளியல் முதல்சூத்திரத்தில்  எழுத்து என்பதையும் மாத்திரைக்கு  அடுத்து வைத்துக் கூறிவிட்டு, இரண்டாம் சூத்திரத்தில்  அதற்கு விளக்கம் கூறும் பொழுது மாத்திரைக்குக் கூறியது போலவே ‘ மேற்கிளந்தனவே ‘ அதாவது எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றே கூறுகிறார்(தொல்.செய்.2).  அதற்குப் பிறகு தொல்காப்பியர்   செய்யுளியலின் பல இடங்களிலும் எழுத்து பற்றி விளக்குகிறார். ஆனால் மாத்திரையைப் பொறுத்த வரை’ மேற்கிளந்தனவே ‘ என்று இரண்டாவது சூத்திரத்தில் கூறிய பிறகு தொல்காப்பியர் செய்யுளியலின்  எந்த இடத்திலும் மாத்திரையைப் பற்றிப் பேசவே இல்லை. மாத்திரையைத் தொல்காப்பியம் முதன் உறுப்பாகக் கூறினாலும் எழுத்திற்கே தொல்காப்பியம் மிகவும் முக்கியத்துவம் தருகிறது. தொல்காப்பியம் எழுத்துவகை அடிகள் கூறியிருப்பது இதற்கு நல்ல உதாரணம் ஆகும். இவ்வெழுத்துவகை அடிகளிலும் மாத்திரையின் முக்கியத்துவத்தை அதாவது ஓரடியில் இத்தனை மாத்திரை உள்ள அடிகள்தாம் வரவேண்டும் என்று தொல்காப்பியர் வலியுறுத்தவில்லை. இங்ஙனம் மாத்திரை என்பது தொல்காப்பியத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறாத உறுப்பாகவே இருக்கிறது. இப்படியிருக்க தொல்காப்பியர் ஏன் மாத்திரையை முதல் உறுப்பாகக் கொள்ள வேண்டும்? மாத்திரையை ஏன் தொல்காப்பியர் ஓர் உறுப்பாகக் கொண்டார் என்பதற்குப் பேராசிரியர் தரும் குறிப்பொன்று நல்லதொரு விவாதத்திற்கு  வழிவகுக்கிறது. அந்தக் குறிப்பாவது:

    இனி ஒருசாரார் மாத்திரையென்றது எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர். (தொல்காப்பியம் – பொருளதிகாரம் செய்யுளியல்,பக். 24; 2014, மறுபதிப்பு, மாணவர் பதிப்பகம், சென்னை)

    எழுத்தல்லோசையைக் குறிக்கத் தொல்காப்பியர் மாத்திரை என்பதை பயன்படுத்தியுள்ளார் என்று ஒருசார் ஆசிரியர் கூறுவதாக பேராசிரியர் இவ்வுரைப்பகுதியில் கூறுகிறார். இவ்வாறு கூறும் பேராசிரியர் மாத்திரை என்பது எழுத்தல்லோசையாகிய குறிப்பிசையை குறிக்காது என்று அவ்வொருசார் ஆசிரியர்களை மறுத்தும்  கூறுகிறார்:

    அக்குறிப்பிசை உறுப்பாக வருஞ் சான்றோர் செய்யுள் யாண்டுங் காணாமையின் நாம் அது வேண்டாமாயினாம் (மேலது, பக். 24) பேராசிரியர் கூறும்  எழுத்தல்லோசையை மாத்திரை என்று குறிப்பிடும் ஒருசார் ஆசிரியர் யாரென்று யாப்பிலக்கண வரலாற்றில் அறிய முடியவில்லை. இது குறித்த க.வெள்ளைவாரணரின் கருத்து இவ்விடத்தில் குறிக்கப்பாலதாகும்:

    மாத்திரை என்பதை எழுத்தல்லோசையெனக் கொண்ட ஆசிரியர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்களுள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருசார் ஆசிரியர் ” மாத்திரையென்றதனான் எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர் ” எனவரும். இவ்வுரைத் தொடர் தொல்காப்பியவுரை யாசிரியர்களுள் ஒருசாரார் கூறிய உரைவிளக்கத்தை யுளத்திற் கொண்டு பேராசிரியரால் எழுதப்பெற்றதென்பது, ‘ நாம் அது வேண்டாமாயினாம் ” எனப் பின்வரும் அவரது உரைத்தொடரால் உய்த்துணரப்படும் (பக், 24 அடிக்குறிப்பு, மேலது). நச்சினார்க்கினியர் இது குறித்து ஒன்றும் கூறவில்லை. மாத்திரை என்பது எழுத்தல்லோசையைக் குறிக்க வாய்ப்புண்டா? இது குறித்து இனி விவாதிப்போம்.

    பேராசிரியர் எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை உறுப்பாக வரும் செய்யுள் யாண்டும் சான்றோர் இலக்கியங்களில் காணமுடியாமையின் மாத்திரை என்பது எழுதல்லோசையைக் குறிக்காது என்று கூறுவது விவாதத்திற்குரியது. ஏனென்றால் பொதுவாக இலக்கணத்தில் காணப்படும் பல கூறுகளுக்கு இலக்கியம் கிடைக்கவில்லை. உதாரணமாக தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ள பலவற்றிற்கு உதாரணங்கள் கிடைக்கவில்லை.தொல்காப்பியர் கூறியுள்ள  எழுத்துவகை அடிகளில் ஒரு சில அடிகளைத் தவிர சங்க இலக்கியத்தில் பெரும்பான்மையாக இடம்பெறவில்லை என்பர் ஆய்வாளர்கள். இதேபோல வீரசோழியர் விளக்கியுள்ள ஏழ்வகை பத்தியக் கவிகளுக்கும் இலக்கியங்கள் இல்லை. எனவே பேராசிரியரின் இந்த வாதம் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை. இத்தொடர்பில் ஒருசார் ஆசிரியர் மாத்திரை எழுத்தல்லோசையைக் குறிக்கும் என்ற கூறிய கருத்து நமக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது; அவர்களின் வாதம் எத்தன்மைத்து, அவர்கள் என்னென்ன உதாரணங்களை எடுத்துக் காட்டினார்கள் என்பது நமக்குக் கிடைத்திருந்தால் இது தொடர்பான ஆராய்ச்சி செய்வதற்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும். எனினும் இது தொடர்பாக ஏதேனும் முடிவைப் பெற முடியாவிட்டாலும் இந்த விவாதம் இது குறித்த சிந்தனையைத் தூண்டும் என்று நம்புவோம்.

    மாத்திரை மற்றும் எழுத்தல்லோசை ஆகியவை குறித்துக் கிடைக்கும் கருத்துக்களை முதலில் தொகுத்துக்கொள்வோம்:

    யாப்பருங்கல விருத்தி:

    யாப்பருங்கலத்தில் மாத்திரை அடிப்படை உறுப்பாகக் கொள்ளப்படாத போதும் யாப்பருங்கல விருத்தி உரைகாரர் மாத்திரை பற்றி விவரித்துள்ளார்:

    குற்றெழுத்து ஒரு மாத்திரை, நெட்டெழுத்து இரண்டு மாத்திரை அளபெடை மூன்று மாத்திரை எனக் கொள்க. என்னை?

    குறிலொரு மாத்திரை நெடிலிரு மாத்திரை
    அளபெடை மூன்றென் றறியல் வேண்டும் என்பது பல்காயம். ஆகலின்.

    மாத்திரையாவது கண் இமைத்தலொடு கைநொடித்தல் ஒத்த காலம். என்னை?

    கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
    நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே (தொல் எழுத்து 7)

    என்றார் தொல்காப்பியர். 

    கண்ணிமை கைநொடி என்றிவை இரண்டும்
    மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரைஎன்றார் சங்க யாப்புடையார்.

    ஒன்றிரண்டு டொருமூன் றொன்றரை அரைகால்
    என்றனர் பொழுதிவை இமைநொடி அளவேஎன்றார் பிறரும்.

    விளி முதலாயினவற்றுள் மூன்று மாத்திரையின் மிக்க பல மாத்திரையானும் அளபெடுத்து வருமாயினும். அவை செய்யுட்களுக்குப் பெரியதோர் உபகாரம்பட நில்லா ஆகலின் அவற்றிற்கு இலக்கணம் எடுத்து ஓதினார் இல்லை எனக் கொள்க.
    …………………………………………………….

    அரைநொடி என்ப தியாதென மொழியின்
    நொடிதரக் கூடிய இருவிரல் இயைபே(பக். 22,23, யாப்பருங்கல விருத்தி, இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை:1976)

    அளபெடையைக் குறித்துப் பேசும்பொழுதும் யாப்பருங்கலவிருத்தி மாத்திரை குறித்து சிந்தித்துள்ளது:

    ” அளபெடையாவன, மாத்திரை குன்றலிற் சீர் குன்றித் தளைகெட நின்றவிடத்து யாப்பழியாமைப் பொருட்டு வேண்டப்பட்டன. என்னை?

    மாத்திரை வகையால் தளைதபக் கெடாநிலை
    யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்என்றார் ஆகலின். (பக். 21: மேலது) 

    யாப்பருங்கலக்காரிகை குணசாகரர் உரை:

    அறிஞருரைத்த அளபும் ‘ என்று சிறப்பித்தவதனால் குற்றெழுத்து ஒருமாத்திரை. நெட்டெழுத்து இரண்டு மாத்திரை. அளபெடை மூன்று மாத்திரை. ஆய்தமும் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் அரைமாத்திரை. ஐகாரகுறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் ஒன்றரை மாத்திரை. ஒற்றளபெடை ஒருமாத்திரை. ஆய்த குறுக்கமும் மகரகுறுக்கமும் ஒரோவொன்று கால்மாத்திரை எனக்கொள்க. என்னை, 

    ஒன்றிரண்டொருமூன் றொன்றரை யரைக்கால்
    என்றனர் பொழுதிவை இமைநொடி யளவே

    கண்ணிமை கைநொடி யளவே மாத்திரை
    நுண்ணிதி நுணர்ந்தோர் கண்ட வாறே (தொல். எழுத்7)

    அரைநொடி என்பது யாதென வினவின்
    நொடிதரக் கூடிய இருவிர லளவே (சங்க யாப்பு) 

    ஒற்றுக்கு மாத்திரை யொன்றே அளபெழுந்தாற்
    றெற்றக் குறியது வேயாம் 

    உன்னல் காலே ஊன்ற லரையே
    முறுக்கல் முக்கால் விடுத்த லொன்றேஎன்றாரும் உளரெனக் கொள்க. (பக்.122, 123, யாப்பருங்கலக் காரிகை, வே.பால்ராஜ் பதிப்பு, காவ்யா பதிப்பகம், சென்னை: 2007)

    பேராசிரியர்: மாத்திரை எழுத்தினது குணமாகலானும் அசையும் சீரும் அடியும் தூக்கும் பாவும் வண்ணங்களும் என்ற இன்னோரன்ன எல்லாம் மாத்திரை நிமித்தமாகத் தோன்றுவன ஆகலானும் மாத்திரை முன்னர் வைக்கப்பட்டது (தமிழ் இலக்கணப் பேரகராதி, பொருள்-யாப்பு 2,தமிழ்மண் பதிப்பகம், சென்னை, பக் 119:2005)

    நச்சர்: மாத்திரையானல்லது செய்யுள் வேறுபாடு உணரலாகாமையின் மாத்திரை செய்யுளுறுப்புகளில் முதலாவதாகக் கூறப்பட்டது. (மேலது, பக்.121)

    மேற்கண்ட  விளக்கங்களில் மாத்திரை என்பதற்கு எழுத்துக்களின் கால அளவு என்பதே பொருளாகக் கூறப்பட்டிருப்பதையும் இவ்விளக்கங்களில் எங்கும் மாத்திரை என்பதற்கு எழுத்தல்லோசை என்ற பொருள் இடம்பெறாமையையும் காண்க. இனி நிகண்டுகளில் மாத்திரை என்பதற்கு எழுத்தல்லோசை என்ற பொருள் காணப்படுகிறதா? எனக் காணலாம்:

    சேந்தன் திவாகரம்:

    அளவு:    மாத்திரை

    1. ”தாறு, கால், மாத்திரை, வரை, துணை, நேரம்
    2. காறு, பரிமாணம், அவதி, அளவு ஆகும்”

    இங்கு அளவு என்பதற்கு மாத்திரை பெயராகச் சுட்டப்பட்டிருக்கிறது. இங்கும் எழுத்தல்லோசை பற்றிய குறிப்பு இல்லை.

    பிங்கல நிகண்டு:

    அளவு: மாத்திரை,

    1. தனையுங் காறுங் தாறுந் துணையும்
    2. வரையும் பிரமாணமு மாத்திரையு மட்டு
      மளவின் பெயரென் றறைந்தனர் புலவர்

    மாத்திரை- கால நுட்பம்

    கலையும், துடியும், கணமும், மாத்திரையும்,
    நொடியும், பிதிரும், நுட்பமும், திட்பமும்
    நிமிடமும், கால நுட்பம் (ஆகும்)
    மாத்திரை- காலவிரைவு

    2.189. கணமும் மாத்திரையும் கால விரைவே

    இந்தப் பிங்கல நிகண்டு சூத்திரங்களில் மேலே கண்ட  சேந்தன் நிகண்டு போலவே  அளவு என்பதற்கு மாத்திரை குறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாத்திரை என்பதற்குக் காலநுட்பம் மற்றும் காலவிரைவு என்பது குறிக்கப்பெற்றுள்ளது. இங்கும் காலம் தொடர்பான பொருளே மாத்திரை என்பதற்கு குறிக்கப்பெற்றுள்ளது.

    சூடாமணி நிகண்டு:

    மாத்திரை

    1. 89. ஒல்லையே, இறையே, (உற்ற
      சிறுவரையறை(யுடன்) இலேசம்
      வல்லை, மாத்திரை(கள்), கால
      விரைவின் (பேர் வகுக்கில் ஆறாம்)

    இந்தச் சூடாமணி நிகண்டுச் சூத்திரத்திலும் திவாகரம் பிங்கல நிகண்டுகளைப்  போலவே மாத்திரை என்பதற்கு கால விரைவு குறிக்கப்பெற்றுள்ளது.

    இனி எழுத்தல்லோசை என்பதற்குரிய பொருள் இலக்கணங்களிலும், நிகண்டுகளிலும் காணப்படும் தன்மையைக் குறித்து பார்ப்போம்: 

    யாப்பருங்கல விருத்தி:

    எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும் அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடை அழியாமல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்கப்படும்.

    முற்கு – முக்குதல்; வீளை-சீழ்க்கை அடித்தல்;

    இலதை – கோழையை வெளிப்படுத்தல்: அநுகரணம் – போலச் செய்வது; அஃதாவது வேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவது போலவும் விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன.

    எ-டு  ‘ மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ
    கென்று திரியும் இடைமகனே – சென்று
    மறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லே
    அறியாயோ அண்ணாக்கு மாறு ‘

    என ‘ உஃகுவஃகு ‘ என்று வருதல் போல்வன. இவை இடைக்காடர் பாடிய ஊசிமுறியுள் காணப்படும். ‘ ஊசிமுறி ‘  எழுத்தாணியால் முறையாக எழுத முடியாத எழுத்தல்லாத ஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்ற பெயர். ஊசி- எழுத்தாணி; முறி- தடுமாறச் செய்தல் (பக். 146,தமிழ் இலக்கணப் பேரகராதி)

    எழுத்தல் ஓசையைப் பற்றி கிடைக்கும் விரிவான குறிப்பு இதுவே ஆகும். மேலே கண்ட பகுதியில் குறிக்கப்பெற்ற ஊசிமுறி என்ற நூல் தற்போது கிடைக்கவில்லை. அது கிடைத்திருந்தால் எழுத்தல்லோசை குறித்த கூடுதல் செய்தி நமக்கு கிடைத்திருக்கும்.

    இனி நிகண்டுகளில் இந்த எழுத்தல்லோசை குறித்து கூறப்பட்டுள்ள தன்மையைக் காண்போம்: 

    சேந்தன் திவாகரம்:

    அகவல்: ஆசிரியம், எழுத்திலாவோசை

    1. அகவலும் தொகையும் ஆசிரியப் பாவே

    1897 பிளிறலும் குளிறலும் பிரற்றலும் சிரற்றலும்
    மருளலும், பயிறலும், குரைத்தலும், கனைத்தலும்
    முளைத்தலும், அகவலும் எழுத்திலா ஓசை (தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008)

    இங்கு  பிளிறல், குளிறல் பிரற்றல், சிரற்றல், மருளல், பயிறல், குரைத்தல், கனைத்தல், முளைத்தல், அகவல் என்பவை எழுத்திலா ஓசையனவாக குறிக்கப்பட்டுள்ளன. இங்கு மாத்திரை என்பது இடம்பெறவில்லை குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கு  எழுத்திலா ஓசைக்கு அகவல் என்ற பொருள் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்க.பிங்கலத்தில், சேந்தன் திவாகரம் குறிப்பிட்டுள்ள எழுத்திலா ஓசை என்பது எடுத்தல் ஓசை என்று பதிவாகியுள்ளது. பிங்கலம்,  சேந்தன் திவாகரம் எழுத்திலா ஓசை என்று குறிப்பிட்டுள்ள ஒலிகளோடு சிலவற்றை விட்டுச் சிலவற்றை கூடுதலாக சேர்த்து,   எடுத்தல் ஓசை என்று கூறுகிறது. இது குறித்த பிங்கல நிகண்டு பகுதியாவது:

    அகவல்- எடுத்தல் ஓசை

    1. முரல்வும், நரல்வும், முக்கலும், பயிறலும்
      தெளிறலும் ஞெளிர்தலும், சிரற்றலும், பிரற்றலும்
      குளிறலும், குமுறலும், குருமித்தலும், நெளிர்தலும்
      அகவலும் எடுத்தல் ஓசைப் பெயரே (தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008)

    அகவல் தொடர்பாக சேந்தன் திவாகரத்தையும், பிங்கலத்தையும் இவ்விடத்தில் ஒப்பிடுவது பயனுடையதாக இருக்கும்:

    எழுத்தில்லோசை

    சேந்தன் திவாகரம் (எழுத்திலா ஓசை)          பிங்கலம் (எடுத்தல் ஓசை)

    பிளிறல்        முரல்வு

    குளிறல்       நால்வு

    பிரற்றல்       முக்கல்

    சிரற்றல்       பயிறல்

    மருளல்        தெளிறல்

    பயிறல்         ஞெளிர்தல்

    குரைத்தல்   சிரற்றல்

    கனைத்தல் பிரற்றல்

    முளைத்தல் குளிறல்

    அகவல் குமுறல்

    குருமித்தல்

    நெளிர்தலும்

    அகவல்

    சூடாமணி நிகண்டிலும் எடுத்தலோசை விளக்கப்பட்டுள்ளது (சூத்.718, தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008). ஆனால் அது தரும்  எடுத்தலோசையில் அகவல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூடாமணி நிகண்டு காட்டும் எடுத்த லோசையைக் கீழ்கண்டவாறு அட்டவணைப் படுத்தலாம்:

    எடுத்தல் ஓசை

    சூடாமணி நிகண்டு

    தெளிறல்

    முரலல்

    முக்கல்

    சிரற்றுதல்

    பயிலல்

    குளிறல்

    நரலல்

    குருமித்தல்

    நெளிர்தல்

    பிளிறல்

    உளை

    பிரற்றல்

    நாம் மேலே கண்ட எழுத்திலா ஓசை என்பதும் எடுத்தல் ஓசை என்பதும் பாடவேறுபாடா? என்பது தெரியவில்லை. பாட வேறுபாடாக இருப்பின்  இவ்விரண்டின் பொருளும் ஒன்றா? வேறு வேறா? என்பது பற்றி ஒன்றும் கூற இயலவில்லை. இனி அடுத்து நாம் விவாதிக்க வேண்டியது, எழுத்திலா ஓசையைக் குறிக்க ஏன் அகவல் என்பது சுட்டப்படுகிறது? இங்கு அகவல் என்பது ஒருவகை ஓசை என்பது புரிகிறது. ஆனால் இது ஆசிரியப்பாவின் ஓசையா? என்ற கேள்வியும் இத்துடன்  எழுகிறது. அகவல் என்பதற்கு என்ன பொருள் நிகண்டுகளில், அகராதிகளில்  கொடுக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும். அழைத்தல் என்பதன் ஒரு பெயரே அகவல் என்று பொருள் தருகின்றது பிங்கல நிகண்டு:

    7: 238. கேதல், உளைத்தல், இகுத்தல், விளித்தல்
    மாஎனல், கூவுதல், வாஎனல், மத்தல்
    கரைதல், ஆகருடணை (இவையே அன்றி)
    அகவல் (என்பதும்) அழைத்தல் (ஆகும்) (சாந்தி சாதனா, சென்னை: 2000)

    அழைத்தல் என்பதன் பெயராகிய  அகவல் என்பதற்கும் யாப்பில் வரும் ஆசிரியப்பாவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?  என்ற கேள்வியை இங்குக் கேட்டுவைத்துக்கொள்வோம். இனி அகவல் என்பதற்கு என்ன பொருள் நிகண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பார்போம்.

    பிங்கல நிகண்டு:

    அகவல் – மயிற்குரல்

    8.8. அகவல், ஆலல், ஏங்கல், மயில்குரல் (சாந்திசாதனா, சென்னை: 2000)

    இங்கு அகவல் என்பதற்கு ஆலல், ஏங்கல், மயிற்குரல் என்ற மூன்று பொருளை பிங்கல நிகண்டு தருகிறது. இங்கு அகவல் என்பதற்கு மயில்குரல் என்ற பொருள் இடம்பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது. இந்த மயிற்குரல் அகவல் யாப்போடு ( ” அழைத்தல் ” என்னும் பொருளில்) தொடர்புடையதாக இருப்பது க.கைலாசபதி அவர்களால் தன் தமிழில்  வீரநிலைக் கவிதை என்ற நூலில் கூறப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் கூறுவதாவது:

    ”அகவுநர், அகவலர் அல்லது அகவர் என்னும் சொற்கள், மயிலைப் போல் ஒலியெழுப்பிப் பாடு, அழை, கூவு எனப்பொருள்படும் ‘ அகவு ‘ என்னும் பொருளடியாகத் தோன்றின” (குமரன் புத்தக இல்லம், பக் 158: 2006).

    இதன் மூலம் அகவல் என்பது அழைத்தல் என்ற பொருளுடையது  என்பதைத்  தெரிந்து கொள்கிறோம். ஏற்கெனவே நாம் கேட்டுவைத்திருந்த கேள்வியாகிய அழைத்தல் என்பதன் பெயராகிய  அகவல் என்பதற்கும் யாப்பில் வரும் ஆசிரியப்பாவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?  என்பது குறித்து இனிப்பார்க்க வேண்டும். அகவல் அல்லது அழைத்தல் என்பதற்கும் யாப்பில் வரும் அகவல்பாவிற்கும் தொடர்பு உண்டு என்பதைக் கைலாசபதியின் கீழ்வரும் கூற்று உறுதிசெய்கின்றது:

    அகவல் என்பதற்கு அழைத்தல் என்பது பொருள். மகள் என்பது பெண்ணைக் குறிக்கும். இப்புலமகள் தன்மீது தோன்றும் தெய்வத்தை அழைப்பதாக இதனைக் கருதலாம். (பக். 95 மேலது).

    அகவுநர், அகவலர் அல்லது அகவர் என்னும் சொற்கள், மயிலைப் போல் ஒலியெழுப்பிப் பாடு, அழை, கூவு எனப் பொருள்படும் அகவு எனும் இச்சொல் அழைப்பவர், கூப்பிடுபவர் என்ற நேர் பொருளை உடையது (பக். 158, மேலது)

    இதனை மனத்தில் இருத்திக்கொண்டு இனி,  அகவுநரோடு; அவர்கள் பாடும் அகவல் பாட்டோடு, மாத்திரை என்பது தொடர்புபட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். அகவலுக்கும் மாத்திரைக்கும் உள்ள தொடர்பு கைலாசபதி தரும் ஒரு குறிப்பு வழியாக நம்மால் ஊகிக்கமுடிகிறது. அவர் அகவுநர்கள் பாடும்போது கையில் மாத்திரைக் கோல் ஒன்று வைத்திருப்பர் என்று கூறுகிறார். இம்மாத்திரைக்கோல் என்பது அகவுநர்கள் அகவல் ஓசையை எழுப்பிப்பாடும்போது அவ்வோசையை குறிப்பிட்ட  கால அளவுக்குள்  உட்படுத்தி அல்லது கட்டுப்படுத்திப் பாடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எனவே இந்த  அகவல் என்பது மாத்திரையோடு தொடர்புபட்டதாக அமைகிறது. ஆனால் அகவுநர்கள் பயன்படுத்தும் இந்தக் காலஅளவு என்பது புலமைநிலை படுத்தப்பட்ட, தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள  மாத்திரைக்கு முன்னோடியாக அமைந்தது எனலாம். அதாவது அகவல் என்பது எப்படிப் புலமைநிலையில் அமைந்த ஆசிரியத்திற்கு முன்னோடியாக அமைந்ததோ அதுபோல இந்த அகவுநர் மாத்திரைக்கோலைக் கொண்டு  அளவிட்ட  கால அளவு அல்லது மாத்திரை தொல்காப்பியம் போன்ற புலமைமரபில் பயன்படுத்தப்பட்ட மாத்திரைக்கு முன்னோடி என்று கொள்ள வேண்டும். இப்போது இவ்விடத்தில் நாம் மேலே குறிப்பிட்ட  கைலாசபதியின்  மாத்திரைக்கோல் குறித்த கூற்றை எடுத்துக்காட்டுவது பயனுடைதாக இருக்கும்:

    முற்குறித்த நோக்கின் தெளிவில், சில பாடல்கள் இப்பாணர்கள் இசைக் கருவிகளுக்குப் பதிலாக ஒரு மாத்திரைக்கோல் அல்லது கைத்தடியினைக் கொண்டிருந்தனர் என்று கூறுவது ஆர்வமாக நோக்குதற்குரிய கருத்தாகும். இதற்குரிய தமிழ்ச்சொல் ‘ கோல்’ என்பதன் பொருள் தடி, குச்சி, கிளை, கைக்கோல் என்பன. நன்கு துண்டிக்கப்பட்ட மெல்லிய கோல் ஒன்றைக் கையில் கொண்டு பாணர்கள் வெற்றி பெற்றோரைப் போர்களங்களில் புகழ்ந்தனர். மற்றொரு செய்யுளில், இக்கோல் நீண்ட மூங்கில்கள் வளருமிடத்திலிருந்து, ஒல்லியான கணுக்களைக் கொண்ட மூங்கில் தேர்ந்தெடுக்கப்பட்டு நன்கு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. ஒல்லியான கோல் எனப்பொருள்படும் ‘ நுண்கோல் ‘ என்ற பெயர் அகவுநர் என்ற பெயரோடு முன்னொட்டாகச் சேர்க்கப்பட்டு ‘ ஒல்லியான கோல் கொண்ட பாணர் ‘ என்ற பொருளைத் தருகிறது. (பக். 160; மேலது)

    இங்கு மாத்திரைக் கோல் என்பது அகவுநரோடு தொடர்புபடுவதைக் காணலாம்.

    மேற்கண்ட கருத்துக்கள் வழி அகவலுக்கும் மாத்திரைக்கும் இடையே உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ளலாம். எழுத்திலா ஓசையும் அகவலாகக் குறிக்க பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.  அகவல் என்பது ஓசையே ஆகும்; அது  எழுத்திலா ஓசையாகவும் எழுத்துள்ள ஓசையாகவும் ( ஆசிரியப்பா) இருந்திருக்க வேண்டும். எழுத்திலா ஓசை எழுத்துள்ள ஓசையை விட காலத்தாற் முந்தியது எனக்கொள்ளலாம். மாத்திரை அல்லது  காலஅளவைப்  பயன்படுத்தியே எழுத்திலா (அகவல்) ஓசை அளக்கப்பட்டிருக்கிறது என்று ஊகிப்பது தவறாகாது. இதன் மூலம் பேராசிரியர் குறிப்பிடும் மாத்திரை என்பது எழுத்திலா ஓசையை குறித்தது என்ற ஒருசாராரின் கருத்து வலுவுடைத்தாக தோன்றுகிறது. இது மேலும் ஆய்விற்குரியது.

    ******

    சான்றாதார நூல்கள்:

    1. வெள்ளை வாரணர். க – தொல்காப்பியம் – பொருளதிகாரம் செய்யுளியல் உரைவளம், மறுபதிப்பு, மாணவர் பதிப்பகம், சென்னை.
    2. இளங்குமரன் இரா – யாப்பருங்கல விருத்தி, கழகம், சென்னை:1976
    3. வே.பால்ராஜ் பதிப்பு- யாப்பருங்கலக் காரிகை, காவ்யா பதிப்பகம், சென்னை: 2007
    4. கோபாலய்யர் தி.வே – தமிழ் இலக்கணப் பேரகராதி, பொருள் யாப்பு -1,தமிழ்மண் பதிப்பகம் சென்னை: 2005.
    5. சுப்பிரமணியன் ச.வே. – தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, மெய்யப்பன் பதிப்பகம்,சிதம்பரம்: 2008.
    6.  திவாகரம்-பிங்கலம்- சூடாமணி, சாந்தி சாதனா, சென்னை: 2000
    7. கைலாசபதி.க – தமிழ் வீரநிலை கவிதை, குமரன் புத்தக இல்லம் : 2006)

    ******

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்,
    EFEO,
    புதுச்சேரி.

     

     

     

     

     

    Share
  • என்ன வளமில்லை இந்தத் திருநாட்டில்? …

    பவள சங்கரி

    தலையங்கம்

    வாஷிங்டனில் உள்ள உலக உணவு ஆய்வறிக்கை 2017 பட்டியலின்படி, பசியோடு வாழும்  119 நாடுகளில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது என்று வெளியிட்டுள்ளது. 2014 இல் 45வது இடத்தில் இருந்த இந்தியா இன்று 100வது இடத்தில் உள்ளது. என்ன கொடுமை இது ஆண்டவா ..  இதில் ஆச்சரியப்படவேண்டிய செய்தி ஈராக் (78வது) பங்களாதேஷ் (88) வட கொரியா (93) போன்ற நாடுகளைவிட மோசமான நிலையில் உள்ளது நம் இந்தியா என்பது மிக வேதனைக்குரிய செய்தி. இந்த 119 நாடுகளில் 50% நாடுகள் அபாயகரமான நிலையில் கொடுமையான பசிப்பிணியால் வாடுகிற நாடாம். இதிலும் இந்தியா மிக மோசமான இடத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில்  19 கோடி மக்கள் அன்றாடம் பசியால் வாடுகிறார்கள். இதில் நாள் ஒன்றுக்கு 3,000 குழந்தைகள் பட்டினி, சத்துணவு இன்மையால் இறக்கின்றனர். உலகளவில் இறக்கக்கூடிய குழந்தைகளில் 24% குழந்தைகள் இந்தியக் குழந்தைகளாம். இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 275.68 மில்லியன் டன் (2016 – 2017) இந்த அளவிற்கு உணவு தானியங்களின் விளைச்சல் இருந்தும் பசியால் இறக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது மிக வேதனையான விசயம். இந்தியாவில் தனி நபர் வருமானம் ஒரு இலட்சத்து மூவாயிரம் ரூபாயாக இருந்தும், அனைத்து வளங்களும் நிரம்பியிருந்தும் மக்கள் பசியால் வாடிக்கிடப்பதற்கு மூல காரணம் என்ன என்று தீவிரமாக அனைவரும் யோசிக்க வேண்டிய காலகட்டம் இது!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171204 - GoDaMa -NAmaraksha -watercolour -24x32cms Canson 200gsm -lr

     

    “கண்ணன் சுமப்பது கோவர்த் தனமல்ல-
    தன்னைத்தான் ஏந்தலே, தாத்பர்யம்: -மண்ணில் –
    இருப்பது யாவுமே இங்கே அவர்தான் –
    மறுப்போர்க்கும் உண்டுமறு மை”….கிரேசி மோகன் ….!

    மறுமை -மோட்சம்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (251)

    தமிழகத்திலேயே முதல்முறையாக `திருநங்கை’ என்ற அடையாளத்துடன் பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர், தற்போது முதல் திருநங்கை சித்த மருத்துவராகவும் ஆகப்போகிறார்.  `திருநங்கை’ என்ற அடையாளத்துடனே கல்லூரியிலும் சேர்ந்துள்ளார்,தாரிகா பானு.

    தூத்துக்குடி மாவட்டத்துல இருக்கும் நிலக்குடிதான் இவரது சொந்த ஊர். அம்மா, அப்பா நாலு அண்ணன்கள், கடைசியாக இவர். திருநங்கையாக தன்னை உணர்ந்த இவர் 2014ல வீட்டைவிட்டு வெளியேறினார். இவர் திருநங்கையாக இருப்பது வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்றும் தன்னால் அடையாளத்தோடு வாழமுடியவில்லை என்பதால் வெளியேறியதாகவும் கூறுகிறார். அதுக்கப்புறம் சென்னைக்கு வந்தபின் தன் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருக்கும் திருநங்கை கிரேஸ் பானுவை சந்தித்தார்.

    கிரேஸ் பானு முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி. திருநங்கைகளின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர். தாரிகா பானுதிருநங்கைகளுக்குத் தனி இடஒதுக்கீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    நமது சமூகச் சூழலில், கிராமப்புறத்தில் பிறந்து மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிப்பதற்கு பல்வேறு போராட்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில், கிராமத்துச் சூழலில் திருநங்கையாக வளர்ந்து, பிறகு குடும்பத்தைவிட்டு வெளியேறி, தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் தனக்கு வந்த இன்னல்களை எல்லாம் மீறி தாரிகா பானு இன்று அடைந்திருக்கும் நிலை வரவேற்கத்தக்கது.

    தாரிகா பானுவை, அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதற்காகக் கேட்டபோது, பள்ளியில் இடம் கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பிறகு, முதன்மைக் கல்வி அலுவலரிடம் சென்று `திருநங்கை’ என்ற மூன்றாம் பாலின அடையாளத்தோடு படிக்க அரசு அனுமதி வழங்கியுள்ள உத்தரவைக் காட்டியிருக்கிறார் கிரேஸ் பானு. அதன்பிறகு அந்தப் பள்ளியிலேயே சேர்ந்து படித்து வெற்றி கண்டார் தாரிகா பானு.

    பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, கல்லூரியில் உடனடியாக சீட் கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரேஸ் பானு வழக்கு தொடர்ந்து நீதி கேட்ட பிறகே சீட் கிடைத்திருக்கிறது. அதன் பிறகு அரசுக் கல்லூரியிலேயே வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு காத்திருப்பு, வழக்கு எனத் தொடர்ந்த போராட்டங்கள். கடைசியாக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடங்கியுள்ளார் தாரிகா பானு.

    எளிமையாக நமக்கு கிடைக்கும் விசயங்கள் பலவற்றுக்கும் போராட்டம், வழக்கு இவற்றை, ஒவ்வொரு முறை கல்விக்காக முன்னேறும்போதும் தாரிகா பானுவும் கிரேஸ் பானுவும் முன்னெடுத்துள்ளனர். அடிப்படையான கல்வியைப் பெறுவதற்கே 2017-ம் ஆண்டிலும் திருநங்கைகள் போராடவேண்டியுள்ளது. பிச்சை எடுப்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும்தான் பொதுப்புத்தியில் திருநங்கைகள் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், `TG’ என்ற முன்றாம் பாலின அடையாளத்தோடு பொறியியல் கல்லூரியில், கலைக் கல்லூரியில் தற்போது பல திருநங்கைகளும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பலர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் பொறுப்பான வேலைகளிலும் உள்ளனர். சிலர் காவல் துறையிலும் பணிபுரிகின்றனர். ஆனால், அப்படி நல்ல நிலைக்குச் செல்வதற்குப் பல இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்கவேண்டியுள்ளது. இதன் காரணமாகத்தான் கிரேஸ் பானு திருநங்கைகளுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    திருநங்கை தாரிகா பானுபடிப்பை முடித்துவிட்டு சென்னைப் போன்ற பெருநகரங்களில் வேலை தேடுவது என்பதே சிரமமான ஒன்று. தன் குடும்பத்தினருடன் எந்தவிதமான தொடர்புமில்லாமல் பொருளாதாரரீதியாகவும் சமூகத்தில் தங்களுக்கான அடையாளத்தைப் பெறுவதற்கும் திருநங்கைகள் படும் துயரத்தின் வலியை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

    திருநங்கைகள் அனைவருக்கும் தாரிகாபானுவின் வெற்றி முன்னுதாரணமாக இருக்கும் என வல்லமை நம்புகிறது

    வல்லமையாளர் தாரிகா பானுவுக்கு நல்வாழ்த்துகள்

    (நன்றி: விகடன்)

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • படக்கவிதைப் போட்டி 137-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    boy on tree branch

    மரத்தின் கிளையில் சாய்ந்துபடுத்து அலைபேசியை ஆராய்ந்துகொண்டிருக்கும் இளைஞனைத் தன் புகைப்படத்தில் பதிவுசெய்து, அதனைப் படக்கவிதைப் போட்டிக்கு நல்கியிருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கு என் நன்றி!

    ”எல்லாப்பொருளும் இதன்பால் உள” என்று திருக்குறளை அன்றைய புலவோர் புகழ்ந்தது இன்றைய அலைபேசிக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்துகின்றது. நம் உள்ளங்கைக்குள் உலகையே விரித்துக்காட்டி, மாயக்காரனாய் நம்மை  மலைக்கவைக்கின்றது இந்த அலைபேசி!

    பயன்பாடுகளைப் பொறுத்து நன்மையொடு தீமையும் இந்த அலைபேசியால் அவனிக்குக் கிடைத்துவருவது கண்கூடு. கத்தியைப் பயன்படுத்துவதுபோல் கவனத்தோடும் புத்தியோடும் இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் தீயவிளைவுகளைத் தடுக்கலாம்.

    அலைபேசியின் நன்மை தீமைகளை அலசிஆராயக் கவிவாணர்கள் வரிசையில் காத்திருப்பதால் அவர்களை வரவேற்று நான் விடைபெறுகிறேன்.

    *****

    படித்துப்பட்டம் பெற்றும் வேலை கிடைக்கும் வேளை இன்னும் வாராததால் மரக்கிளையில் அலைபேசியோடு அளவளாவிக்கொண்டிருக்கும் உழவர்குடித் தோன்றலையும், அவன் தேடிவந்த நகரத்தின் நரகவாழ்வையும், பட்டம்பெற்ற அவனுள்ளம் உண்டிகொடுத்து உயிர்கொடுக்கும் உழவுத்தொழிலையே மீண்டும் நாடிநிற்பதையும் பாடியுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா..!

    அய்யா! அவனங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தால்..
    ……………அன்றாடம் அலைந்து ஓய்ந்தவனெனவும் தெரியும்.!
    அய்யே!இனியிந்த நாய்ப்பிழைப்பு வேண்டாமென..
    ……………அருவருக்குமவன் மனநிலையையும் அறிய முடியும்!
    ஒய்யாரமாய் ஓய்வெடுக்க ஒடிந்துவிழுந்த கிளையின்..
    ……………ஓரத்திலமர்ந்து நீநினைவது என்னவென்பதும் புரியும்!
    வெய்யிலுக்கு மரநிழல்தரும் சுகம்போல இப்போது..
    ……………வீணாகப்போகும் நேரத்தில் வாட்ஸ்அப் இதம்தரும்!

    படித்துப் பட்டம் பெற்றவர்கள் வேலைதேடியிங்கே..
    ……………பல்லாயிரம் பேர்வருவார் மொத்தமாக ஓரிடத்துக்கு!
    அடிக்கொரு அலுவலகம் இருந்தாலுமதன் கதவுகள்..
    ……………அனைத்திலும் வேலை காலியில்லை எனுமறிவிப்பு.!
    கடிமணமாகாத காளையரென்றால் குடியிருக்க வீடு..
    ……………கிடைக்காது இக்கொடுமை போதாதெனில் அங்கே!
    முடியைப் பிய்த்துக்கொண்டு முழுநேரமும் வேலை..
    ……………முடிந்தபின்னும் வீடுதிரும்ப முடியா நிலையிதுவே!

    சொந்த ஊரிலிருந்த சுகமெல்லாமிங்கே இல்லை..
    ……………சந்துபொந்துக்குப் பஞ்சமில்லை சத்துண வில்லை!
    பந்தங்கள் இருந்தும் பெயருக்குத்தான் சொந்தம்..
    ……………பணக்காரத் தனத்தினால் உறவுக்குக் வந்ததுகேடு!
    மந்திரசக்தியால் மாம்பழம் பறிப்பது போலத்தான்..
    ……………எந்திரசக்தி கொண்டுதான் எதுவுமிங்கே இயங்குது!
    சிந்திக்கக் கூடயிங்கே சிறிதளவேனும் நேரமில்லை..
    ……………பந்தியிலுட்கார்ந்து சாப்பிட பக்கத்தில் நிற்கவேணும்!

    உழைக்கும் விவசாயி குடும்பத்தில் பிறந்தவனவன்..
    ……………ஊர்விட்டு ஊர்வந்தான் பிழைப்புதேடி ஒருவனாக.!
    உழவுக்குடி உயரவே உயர்படிப்பு படித்தானவன்..
    ……………உயரும் நாகரீகத்தில் நரகமேமேலென நினைத்தான்!
    அழகுதிமிர்க் காளைபோல கட்டுடல் மேனிகொண்ட..
    ……………அவன்மனது…உழவுத் தொழில்மீதே நிழலாடுகிறது.!
    உழலுமவன் மனதுக்கு ஆறுதலுமிங்கில்லை மீண்டும்..
    ……………இழந்ததைப்பெற கிராமத்துக்கே போக விழைகிறான்!

    *****

    ”நாணயத்தின் இருபக்கங்கள்போல் நன்மையும் தீமையும் கலந்த கலவையாய் உலவும் அலைபேசியை, படிக்கும் வயதில் சிறியோர் தவிர்த்தல் நலம்; பெரியோரும் முறையறிந்து பயன்படுத்துதலே பலம்” எனும் நன்மொழிகளைத் தாங்கி நிற்கின்றது திரு. பழ.செல்வமாணிக்கத்தின் கவிதை.

    தீதும் நன்றும்:

    தூரத்தை குறைக்க வந்தது தான் தொலை பேசி!
    துயரத்தை தர வந்தது ஏனோ இந்த அலை பேசி!
    விஞ்ஞானத்தின் வியத்தகு படைப்பு இந்தக் கைபேசி!
    ஆனால் குடும்பத்தை தீவுகளாய் பிரித்த
    அரக்கன் இந்த அலை பேசி!
    காதலனைப் பிரியாத காதலியாய் கைக்குள்ளே
    எப்போதும் கை பேசி!
    உணவு மறந்தது! காரணம் அலை பேசி!
    உறக்கம் போனது! காரணம் அலை பேசி!
    நேரடிப் பேச்சும் குறைந்தது! காரணம் அலை பேசி!
    சிந்தனை குறைந்தது! காரணம் அலை பேசி!
    வாகனத்தை ஓட்டும் போதும் விலகாத கை பேசி!
    எமனின் பாசக் காயிறாய் உயிரெடுக்கும் கை பேசி!
    சிட்டுக்குருவிகளே இவ்வுலகில் இல்லாமல்!
    அழித்தது இந்த அலை பேசி!
    சின்னஞ் சிறு பிள்ளைகளை சீரழித்தது இந்தக் கை பேசி!
    தீமைகள் மட்டும் தருவதா இந்த அலை பேசி!
    நன்மைகள் பல உண்டு, இதனால், நீ அதை யோசி!
    பயணத்தை குறைத்து,
    நேரத்தை நமக்குத் தரும் இந்தக் கைபேசி!
    பயன் தரும் செய்திகள், பலவற்றை நம்மிடம்
    கொண்டு சேர்ப்பது இந்த அலை பேசி!
    வேலைக்குச் செல்லும் பெண்களின் கூடவே இருக்கும்
    பாதுகாவலன் இந்த அலை பேசி!
    தொழில் செய்ய உதவும் தோழன்!
    இசையைத் தரும் இனிய கலைஞன்!
    குறுஞ்செய்தி கொண்டு செல்லும் அஞ்சல் காரன்!
    அழகுக் காட்சிகளை அள்ளித் தரும் அன்பு நண்பன்!
    நாணயத்திற்கு இரண்டு பக்கம்!
    நல்லது , கெட்டது அனைத்திலும் இருக்கும்!
    படிக்கும் வயதில் வேண்டாமே அலை பேசி!
    நல்ல புத்தகங்கள் நீ வாசி!
    நாளைய உலகம் உயர்வு பெற!
    நான் சொன்னதை நீ யோசி!

    ***** 

    வெட்டப்பட்ட மரத்தின்மேல் சாய்ந்திருக்கும் இளைஞனின் வாழ்க்கைப் பாதையை நமக்கு வெட்டவெளிச்சமாக்கும் திருமிகு. சொல்லின் செல்வி, போதிமரமாய் அந்தப் பாதிமரம் அவ்விளைஞனுக்கு ஞானத்தைத் தானம் செய்வதையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை.

    மரத்தோடு மடி சாய்ந்த நேரம்
    வாராத படிப்பை
    வாதாடி முடித்தேன்
    வாய்தாக்கள் போல் அரியர் வைத்து
    நான்காண்டுகள் ஓடின.

    சொல்லாத என் காதல்
    சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதென்று
    கல்லாத காவியத்தை
    கற்றவனாய் ஒப்பித்துவிட்டு
    விடைக்காக காத்திருக்கிறேன்
    மூன்றாண்டுகள் ஓடின.

    பிடிக்காத வேலையில் சேர்ந்து
    அடுக்கான பொறுப்புகள் வகித்து
    மிடுக்காக வலம் வந்து பார்த்து
    பொறுப்பான ஆண் மகனாய் ஆனேன்
    இராண்டாண்டுகள் ஓடின.

    கடந்து வந்த பள்ளிப்படிப்பையும்
    பட்டப்படிப்பையும்
    பாலைவன கானல்நீரைப்போல
    பாவையவள் காதலையும்
    எதிர்கால முன்னேற்றப்பாதையும்
    எண்ணிப்பார்த்து பார்த்தே
    ஓராண்டும் ஓடின.

    இவையனைத்தும் அழகாய் பதிவானது
    மட்டுமல்ல
    என் கையிலிருக்கும் கைப்பேசியிலும் தான்.

    இந்த
    வெட்டப்பட்ட மரத்தின்
    கிளைப்போல்
    என் எத்தனை ஆசைகளை
    வெட்டியுள்ளது
    தோல்வியெனும் கோடாரி.

    ஆனால்
    நான் தோள் சாயும்
    அன்பு மரமே..
    புனிதமிக்க
    உன் மீது அமரும் முன்
    என்
    காலணிகளை அகற்றிவிட்டு விட்டது போல
    புத்தன் சொன்ன புத்திமதி போல
    ஆசைகளை அகற்றிவிட்டு
    புனிதமான
    இலட்சியங்களை
    எளிதால் அடையலாம் தானே.
    தினம் சாயுங்காலம்
    நான் சாய மடிதரும்
    என் நண்பனே..!
    என் மரமே ! ???

    *****

    வெட்டுண்ட மரம், தான் உயிரோடு இருந்தபோதும் வெட்டப்பட்டு வீழ்ந்தபோதும் பயன்பட்ட விதத்தைப் பாந்தமாய்ச் சொல்வதையும், வெட்டப்படபோகும் மரமோ, ”அழுதாலும் தொழுதாலும் கோடரியால் எனக்கு விளையப்போகும் கேடகற்ற யாருளர்?” என்று அழுதுபுலம்புவதையும் உணர்வுமிகு கவிதையாக்கியுள்ளார் திரு. சி. ஜெயபாரதன்.

    சுட்ட மரமும், சுடாத மரமும்

    சுடாத மரத்தின் கூக்குரல்
    தலைக்கு மேலே கத்தி
    தொங்குது !
    வெட்டப் போகிறார் !
    விலைக்கு வாங்கத்
    தரகர் கையில்
    நிறைய பணக் கத்தை !
    அழுதாலும் பயனில்லை !
    தொழுதாலும் பயனில்லை !
    பரம்பரை வாரிசு இனிமேல்
    பிறந்திடாது !
    விதியை வெல்ல
    நிதியால் தான் முடியுது !
    நாளை எனக்கில்லை !
    நரக வாழ்வில்
    நம்பிக்கை இல்லை !
    நமன் வரும்
    தருணமிது எனக்கு !
    வாசலில் நிற்கிறான்,
    வழிவிடு எனக்கு !
    கோடரிக்குத் தலை கொடுக்கவா ?
    உடல் அளிக்கவா ?
    கடவுளே காப்பாத்து !

    ++++++++++++

    சுட்ட மரத்தின் கூக்குரல் !

    வெட்டப் பட்டுக் கீழே
    வீழ்ந்து கிடக்கிறேன் பார் !
    மட்டப் பலகையாய்
    வீடு கட்ட உதவினேன் !
    மாட்டு வண்டிச் சக்கரம்
    ஆக்க உதவினேன் !
    கப்பல் கட்ட, படகு கட்ட
    உப்புக் கடலில் மீன் பிடிக்க
    உதவினேன் !
    கனிகள் காய்க்கும்
    மரமானேன் ஒரு காலம் !
    இருந்தாலும்
    ஆயிரம் பொன் நான் !
    இறந்தாலும்
    ஆயிரம் பொன் !

    *****

    மரத்தையும், மரத்தில் சாய்ந்திருக்கும் இளைஞனையும், அவன் கையிலிருக்கும் அலைபேசியையும் முன்னிலைப்படுத்தித் தம் சிந்தனைச் சிறகுகளை அகலவிரித்து ஆழ்ந்த கருத்துக்களை அளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுபெற்றிருப்பது அடுத்து…

    இப்படிக்கு…

    அதிர்ஷ்டசாலி நான்..!
    ‘கை வலிக்கிறது’ என ஒரு போதும்

    எனை நீ கீழே இறக்கி விட்டதில்லை

    ‘தூக்க முடியவில்லை நடந்து வா’ என்ற வார்த்தையை
    நான் உன்னிடம் இருந்து கேட்டதில்லை

    ‘வேலை இருக்கிறது; பின்பு கவனிக்கிறேன்’ என
    ஒருநாளும் எனைத் தனியே விட்டுச் சென்றதில்லை

    என் அழுகுரல் கேட்டு ஒரு நொடி கூடத் தாமதித்ததில்லை
    உடனே ஓடிவந்து கையில் ஏந்திக் கொள்வாய்

    நித்தமும் அரவணைப்பு; நீங்காத பந்தம்; நிறைவான பாசம்…

    பொறாமைப் படத்தானே செய்வார்கள்- உன்
    தாயும் தந்தையும்; மகனும் மகளும்; அன்பான மனைவியும்…

    பேசாத எனைப் பேணிக்காக்கிறாய்
    பேதையாய் உன் பின் வருபவரைப் பரிதவிக்க வைக்கிறாய்!!

    அன்பே… நீ எனை நேசிப்பதைப் போல
    அவர்களையும் நேசித்துப் பாரேன்…
    அழகாகும் உன் வாழ்க்கை; வரமாகும்; வசந்தம் வீசும்..!

    இப்படிக்கு
    உன் கைபேசி…

    ”குடும்பத்தை மறந்து, உறவுகளைத் துறந்து அலைபேசியையே ஆருயிர்க்காதலியாய் எப்போதும் அணைத்திருக்கும் இளைஞனே! பேசாத என்னைப் பேணிக்காக்கும் நீ, பேசும் பொற்சித்திரங்களான உன் குழந்தைகளை மறந்ததேன்? என்னிடம் காட்டும் பாசத்தை அவர்களிடமும் காட்டு; குடும்பத்தை நோக்கியும் உன் நேசக்கரத்தை நீட்டு” எனும் இக்கவிதை இன்றைய இளைஞர்களுக்கான எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கக் காண்கிறேன். காலத்தின் தேவையறிந்து கவிதை பாடியிருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • அந்தாதி – தமிழின் இனிமை!

    பவள சங்கரி

    முதல் வரியின் இறுதிச் சொல் அடுத்த வரியின் முதற் சொல்லாக வருவதுதான் அந்தாதி எனப்படும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று கருதியே அந்தாதி இலக்கியம் தோன்றியுள்ளது. தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும்.
    குறிப்பிடத்தக்க அந்தாதிகள் இதோ:

    (1) முதல் திருவந்தாதி – பொய்கை ஆழ்வார்
    (2) இரண்டாம் திருவந்தாதி – பூதத்தாழ்வார்
    (3) மூன்றாம் திருவந்தாதி – பேயாழ்வார்
    (4) சடகோபரந்தாதி – கம்பர்
    (5) திருவரங்கத்தந்தாதி – பிள்ளைப் பெருமாளையங்கார்
    (6) கந்தரந்தாதி – அருணகிரிநாதர்
    (7) திருவருணை அந்தாதி – எல்லப்ப நாவலர்
    (8) அபிராமி அந்தாதி – அபிராமி பட்டர்
    (9) திருக்குறள் அந்தாதி – இராசைக் கவிஞர்

    11-ஆம் திருமுறையில் வரும் அந்தாதிகள்

    (1) அற்புதத் திருவந்தாதி – காரைக்காலம்மையார்
    (2) சிவபெருமான் திருவந்தாதி – கபிலதேவ நாயனார்,
    (3) சிவபெருமான் திருவந்தாதி – பரணதேவ நாயனார்
    (4) கயிலைபாதி காளத்தி
    பாதி அந்தாதி – நக்கீர தேவ நாயனார்
    (5) திருவேகம்பமுடையார்
    திருஅந்தாதி – பட்டினத்தடிகள்
    (6) திருத்தொண்டர் திருஅந்தாதி – நம்பியாண்டார் நம்பிகள்
    (7) ஆளுடைய பிள்ளையார்
    திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பிகள்
    (8) பொன்வண்ணத்தந்தாதி – சேரமான் பெருமாள் நாயனார்
    19ஆம் நூற்றாண்டில் மிகுதியான அந்தாதி நூல்கள் தோன்றியுள்ளன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அதிக எண்ணிக்கையில் அந்தாதி நூல்கள் இயற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

    திருப்பூர் மாவட்டம்

    * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம்., பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது

    தலைமை : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

    ” நாவல் அனுபவம் “ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் ராகவன் தம்பி, கோவை இரா .முருகவேள் ஆகியோர் பேசினர் .

    நாவலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், வழக்கறிஞருமான கோவை இரா.முருகவேள் உரையில்…

    “வனங்களில் அணை கட்டியும், சுரங்கம் அமைத்தும் இயற்கை வளங்களைச் சுரண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். பழங்குடியினர் இருக்கும் இடங்களில்தான் வன விலங்குகள் பாதுகாப்பாக இருக்கின்றன. வன உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு பழங்குடியினருக்குப் பல அநீதிகள் நடந்திருக்கின்றன. ‘ரிசர்வ் ஃபாரஸ்ட்’ என்ற பெயரில் அவர்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டிருக்கின்றனர். காய்ந்த சுள்ளிகளை வனத்துக்குள் செல்லும் பழங்குடியினர்களை வனத்துறையினர் விரட்டி அடிக்கின்றனர். காடுகளைவிட்டுப் பழங்குடியினர் வெளியேற்றம் என்பது, கடந்த 20 ஆண்டுகளாத்தான் அதிகம் நடந்துவருகிறது. கோவை மாவட்டம் பவானி சாகர் அணைக்குப் போகும் வழியில் தெங்குமரஹட்டா என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி 20 கி.மீ சுற்றளவுக்கு காடுகள்தான் இருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சில கிராமங்கள் இருந்தன. ஆனால், ரிசர்வ் ஃபாரஸ்ட் என்ற காரணங்களுக்காக 1980-க்குப் பிறகு அங்கிருந்த பழங்குடியினர் கிராமங்கள் காலி செய்யப்பட்டன. ஒரு கிராமம்கூட அங்கு இல்லை. அதேபோல முதுமலை புலிகள் சரணாலயத்தின் பகுதியில் இருந்த பழங்குடியினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இப்போது வறுமையில் வாடுகின்றனர். கண்ணகி கோயில் அருகே குமுளி வனப்பகுதியில் முதுவர் என்ற பழங்குடியினர் கிராமம் இருந்தது. அந்தக் கிராமம் இப்போது இல்லை. பழங்குடியினர்களை அவ்வப்போது துரத்திவிட்டு மறு குடியமர்வு செய்கின்றனர். ஏராளமான பழங்குடியினர் கடந்த சில ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து பல இடங்களில் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். வன உரிமைச் சட்டத்தில் பழங்குடியினருக்காக ஏராளமான உரிமைகள் உள்ளன. அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

    சுப்ரபாரதிமணியனின் தலைமை உரையில்….

    விவசாயம் புறக்கணிக்கப்பட்டு திருப்பூர் போன்ற நகரங்கள் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன.வெற்று சம்மதங்கள் அபாயகரமானவை.தொழிலுக்கு குந்தகம் வந்து விடக்கூடாது என்ற கூட்டு எண்ணம் வியாபார நியதிகளுக்கும் கூட ஒத்து வராது என்று குற்றம் பேசும் விமர்சனப் பார்வை தொடர்கிறது.

    தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வைத்துச் சமரசமாக இயங்கும் ஊரின் அசலானத் தன்மை தெரிகிறது.. .. ..உலகச் சந்தையை முன் வைத்து பின்னலாடை உற்பத்தி அதன் தொழிலாளிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதைக் காட்டுகிறது. சேரிகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது . பின்னலாடையிலே சுமங்கலித்திட்டக் கொடுமை வந்து விட்டது..இடம் பெயர்ந்து வந்த வேற்று மாநிலத் தொழிலாளர்கள்… பாரீசின் சொகுசுத்தனம், ஆப்ரிக்காவின் வறுமை இரண்டும் இங்கு சேர்ந்திருக்கிறது. வட மாநில பெண்களின் உழைப்புச் சுரண்டல், வார இறுதிகளில் அவர்கள் விபச்சாரத்துக்கு பயன்படுகிற நிலை போன்றவை தொடர்கின்றன “ என்றார்.

    படைப்பு அனுபவம் என்ற தலைப்பில் ஊத்துக்குளி நடேசன் அவர் எழுதிய “ இந்தியா எங்கே செல்கிறது “ என்ற நூல் எழுதியது பற்றி அவரும், காட்டாறு இதழ் பற்றி இராவணன் அவர்களும் உரையாற்றினர்.

    * நூல் அறிமுகம்..: .நூல் – அறிமுகம் பிஆர் நடராஜன் எழுதிய “ சுதந்திரப்ப்போரில் திருப்பூர் தியாகிகள் “ பற்றி ஜி.. இரவி ( திருப்பூர் மாவட்ட இளைஞர் பெருமன்றம் ) செய்து விரிவான உரை நிகழ்த்தினார் *

    பெண் படைப்பு குறித்து கோவை பேரா. செல்வி. பேரா. கலைவாணி ஆகியோர் உரைகள் நிகழ்த்தினர் *: மாற்றுக்கலாச்சாரம் எது உரை நிகழ்த்தினார் துருவன் பாலா., ( அவர் மாற்றுகல்வி, , மாற்று உணவு பற்றி விரிவாய் பேசினார் ) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டம் தலைவர் சண்முகம், பொருளாளர் பழனிசாமி. தமிழ் பண்பாட்டு மையம் யோகி செந்தில், பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி மருத்துவர் முத்துசாமி, , சசிகலா., விபி பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.

    மற்றும் கவிஞர் ஜோதி, துருவன் பாலா, ஆ, அருணாசலம் பாடல்கள், கவிதைகள் வாசிப்பும் நடந்தது. பங்கேற்பாளர்கள் கருத்துரைகள் வழங்கினர். தொழிற்சங்கத்தலைவர்கள், இலக்கிய வாசகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

    பிஆர்நடராஜன்நன்றி கூறினார்…

    Share
  • படக்கவிதைப் போட்டி (138)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    24331290_1497455853641942_1587847331_n

    பார்கவ் கேசவன்  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • குறிஞ்சி நிலத்தில் முருக வழிபாடு

    -சிந்து.மூ

    தமிழரின் இறைநெறி இயற்கை சார்ந்த ஒன்றாகவும், வழிபடும் மக்கள் சார்ந்த ஒன்றாகவும் இருந்ததைப் பண்டைய இலக்கியங்கள் உணர்த்துகின்றன. “முருக வழிபாடு” என்று பிற்காலத்தில் “கௌமார” தத்துவமாக சங்கரர் காலத்தில் உருவெடுத்தமை, தனித்த சமயத் தத்துவமாக உருப்பெறுதற்குரிய சில வித்துக்களைப் பண்டைய இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வகையில் இவ்விலக்கியங்கள் வழி வரலாற்று நிலையில் முருகன் தொடர்பான செய்திகளையும், குறிஞ்சி நிலத்தில் முருக வழிபாட்டின் நிலையினையும்  இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

    குறிஞ்சி நிலத்தின் தன்மை

    குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த பகுதியாகும். இதனைப் பற்றித் தொல்காப்பியர் அகத்திணையில்,

    “சேயோன் மேய மைவரை உலகமும்” 1 (தொல்.அகம்.நூ – 5) என்று  கூறுவதால் முருகன் வாழும் பகுதி மலைப்பகுதி என்பதை அறிய முடிகிறது. குறிஞ்சித் திணைக்குரிய பொழுதுகள்  கூதிர் காலமும், யாமமும் ஆகும்.(கூதிர் – ஐப்பசி, கார்த்திகை, யாமம் – நள்ளிரவு)

    கருப்பொருள்

    தொல்காப்பியர் குறிஞ்சி நிலத்திற்குரிய கருப்பொருள்களாகப் பின்வருவனவற்றைத் தொகுத்துரைக்கின்றார்.

    தெய்வம்        – முருகவேள்

    உணவு             – தினை, ஐவனம், வெதிர் நெல்

    விலங்கு         – யானை, புலி, பன்றி, கரடி

    மரம்                    – வேங்கை, கோங்கு

    பறவை            – மயில், கிளி

    பறை                  – வெறியாட்டு, தொண்டகம்

    தொழில்         – தேனழித்தல்

    யாழ்                   – குறிஞ்சி

    பூ                           – வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ

    நீர்                         – சுனைநீர், அருவிநீர்

    உரிப்பொருள்

    குறிஞ்சித் திணையின் ஒழுக்கமாக உரிப்பொருளாக

    “புணர்தலும் புணர்தல் நிமித்தமும்” 2                 (தொல்.அகம்.நூ -16) சுட்டப்படுகிறது.
    குறிஞ்சி நிலம் மலையும் மலைசார்ந்த பகுதியும் என்பதால் அந்த மலைப்பகுதிக் கடவுளான முருகனை குறிஞ்சிநில மக்கள் வழிபாடு செய்தனர் என்பதனை அந்நிலத்தில் மக்கள் பயன்படுத்திய சொற்கள் வாயிலாக அறியலாம்.

    குலம் நினையல் நம்பிகொழுங் கயற்கண்ணிவள்ளி
    நலம்
    நுகர்ந்தான் அன்றே நறுந்தார் முருகன்” 3   (த.மு.வ ப – 5)

    என சீவக சிந்தாமணியிலும்,

    குறமகள் அவள் எம் குலமகள் அவளொடும்
    அறுமுக
    ஒருவநின் அடியிணை தொழுதேம்” 4  (சிலம்பு வ.பா-17)

    என சிலப்பதிகாரத்தில் வள்ளியுடன் இணைத்துப் பேசப்பட்ட குறிஞ்சிக் கடவுளான பெரும்பெயர் பெற்ற  முருகனின் “வேலனாடல்” அல்லது “வேலன் வெறியாடல்” என்ற தனிப்பண்பு சங்க  இலக்கியத்தில் அகத்திணைக் கூறாகச் சுட்டப்படுகின்றது. கடம்பு, காந்தள் மற்றும் வேங்கை போன்ற மலர்கள் முருகனுடன் மட்டும் தொடர்புபடுத்தப்பட்ட நிலையையும் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது.

    மேலும் குறிஞ்சித் திணையில் வழங்கப்பட்ட கொடிநிலை, கந்தழி, வள்ளி, வெறியாட்டு ஆகியவற்றைப் பற்றித் தொல்காப்பியர்,

    கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
    வடுநீங்கி
    சிறப்பின் முதலான் மூன்றும்
    கடவுள்
    வாழ்த்தொடு கண்ணியே வருமே” 5  (தொல்.புறம்.நூ -85)

    என்று குறிப்பிடுகிறார். கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய மூன்றும் பாட்டுடைத் தலைமகனைச் சார்ந்ததாய் உள்ளன. இவை பின்னர்த் தோன்றிய இலக்கியத்தில் கடவுள் வாழ்த்தோடு பொருத்திப் பார்ப்பதற்கு இடமுண்டு.

    கொடிநிலை

    கொடிநிலையாவது கீழ்த்திசைக் கண்ணே தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம் எப்புறம் நீளுதல் தன்மையுடையதாதலின் கொடிநிலை எனக் கூறுவர். சூரியன், சந்திரன், அக்கினி ஆகிவற்றை வெஞ்சுடர் எனலாம்.

    பூங்கண் நெடுமுடிப் பூவைப்பூமேனியாள்
    பாம்புண்
    பறவைக் கொடிபோல – ஓங்குக
    பல்யானை
    மன்னர் பணியப் பனிமலார்த்தாது
    கொல்யானை
    மன்னன் கொடி” 6  (பு.வெ- பா.திணை.பா-41)

    குளிர்ந்த மலரால் புனைந்த மாலையினையும், கொல்லும் யானையினையும் உடைய தங்கள் மன்னன் கொடி பலவாகிய யானைகளையுடைய மன்னர் வணங்கா நிற்ப, பொலிவுடைய திருக்கண்களையும், நெடிய திருமுடியினையும், காயாம் பூவை ஒத்த திருமேனியினையும் உடைய மாயவனது பாம்பையுண்ணும் இயல்பையுடைய கருடக் கொடியை ஒப்ப, உயர்க என்று கொடிநிலையில் கூறப்படுகிறது. பாட்டுடைத் தலைவன் மன்னரின் சிறப்பினைக் குறிப்பதாகக் கொடிநிலை அமைகிறது.

    கந்தழி

    கந்தழி என்பது மன்னனின் அல்லது வீரனின் உயர்வைச் சுட்டும் தன்மை உடையதால் அவனது இயங்கு ஆற்றலைச் சுட்டக்கூடிய ஒன்றாக இருந்தமையைப் பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.

    அன்றெறிந் தானும் இவனால் அரண்வலித்து
    இன்றிவன்
    மாறாய் எதிர்வார்யார் கன்றும்
    அடையார்
    மணிப்பூண் அடையாதார் மார்பின்
    சுடராழி
    நின்றெரியச் சோ” 7  (பு.வெ- உ.திணை.பா.7)

    எக்காலத்தும்  மூட்டார்ந்த மணி அணிகலன்களையுடைய  பகைவரது மார்பின் கண் தனது ஒளியை உடைய சக்கரப்படை நின்று அழலாநிற்ப அந்த நாளிலே சோ என்னும் அரணத்தை அழித்தவனும் இவ்வேந்தனே. அத்தகைய இவன் மாறா அரண் வலியதாம் என்று தேறி இந்நாள் இவனை எதிர்க்கும் பகைவர் யாரோ உளர்? என்று கந்தழியில் கூறப்படுகிறது.

    வள்ளி

    வள்ளி என்பது ஓர் இலக்கிய உத்தியாக அமைந்துள்ளதை,

    வந்தது கொண்டு வாராத துணர்தல்” 8  (தொல்.மர.நூ -110)

    என்பதனால் அறியலாம். புலவராற்றுப்படை முதலாகிய  மூன்றும் சார்த்தி வருமெனவும் கொள்ளலாம்.முருகாற்றுப்படையுள்,

    மாடமலி மறுகிள் கூடற்
    இருஞ்சேற்று
    அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
    முன்தாள்
    தாமரைத் துஞ்சி”

    என்ற வழி, ஒரு முகத்தாற் பாண்டியனையும் இதனுள் தொடர்புபடுத்தி அறியலாம்.

    பூண் முலையார் மனமுருக
    வேல்முருகற்கு
    வெறியாடின்று” 9   (பு.வெ- பா.திணை.பா-41)

    அணிகலன்களையுடைய மகளிர் தம் நெஞ்சம் நெகிழும்படி வேலேந்திய முருகக் கடவுளுக்கு வெறியென்னும் கூத்தை ஆடிய இனிப்பரவற்குச் சார்ந்து வருவதை கெடலரு மாமுனிவர் நிமிர்ந்துடன் என்னுங் கலிபாட்டினுள்,

    அருதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன்
    தொடுகழற்
    கொடும்பூண் பகட்டெழின் மார்பில்
    கயலொடு
    கலந்த சிலையுடைக் கொடுவரிப்
    புயல்உறழ்
    தடக்கைப் போர்வேல் அச்சுதன்
    ஒன்று
    முதுகடல் உலகம் முழுவதும்
    ஒன்றுபுரி
    திகிரி உருட்டுவோன் எனவே” 10 (யாப்பு.விருத்-மேற்.28)

    என்பதனுள் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தியவாறு காணலாம்.

    கொற்றவள்ளை

    கொற்றவள்ளை என்பது புகழ்தல் கருத்தாகும் என்ற இடத்துப் பாடாண் திணையாகிறது.

    மன்னவன் புகழ்கிளந்
    தொன்னார்
    நாடழி பிரங்கின்று”

    வஞ்சி வேந்தனது புகழை எடுத்தோதி அவ்வேந்தனின் பகைவர் நாட்டின் அழிவிற்கு வருந்தீர்.

    கொற்றை வள்ளை ஓர் இடத்து ஆன” 11  (தொல்.புறம்.நூ -28)

    என்று தொல்காப்பியார் கூறுகிறார்.

    (உ.ம்)வல்லாராயினும் வல்லு
    புகழ்தலுற்
    றோர்க்கு மாயோன
    ஊரைசால்
    சிறப்பின் புகழ்
    நின்ஒன்று
    கூறுவது உடையேன் என்எனின்”12  என்பதாம்.

    (பு.வெ- பா.தி.பா-41)

    குறிஞ்சி வேந்தன்

    நான்கு நிலங்களில் ஒன்றாகிய குறிஞ்சி மலை நிலம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மரங்கள் இருப்பது. இது குறிஞ்சி எனப்பட்டது.

    சேயோன் மேய மைவரை யுலகு”

    என்ற தொல்காப்பியரது வசனப்படி குறிஞ்சி நிலத்துக்கு அரசன் குன்றுதோறும் ஆடுங்குமரன் ஆவான்.

    விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ”

    என்று திருமுருகாற்றுப்படையில் கூறப்படுகிறது.

    வேலன் வெறியாட்டு

    வேலன் வெறியாட்டில் மிகச் சிறந்த தலைமையினையுடைய கோழிக் கொடியோடு பொருந்துமாறு செய்து நெய்யோடு வெண் சிறுகடுகையும் அப்பி, தான் வழிபடுதற்கு உரிய மந்திரத்தை மறைவாக ஓதி வழிபட்டு வளமான மலர்களைத் தூவி, வடிவாலும், நிறத்தாலும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட இரண்டு ஆடைகளை உள்ஒன்றும் புறம் ஒன்றுமாக உடுத்தி சிவந்த நூலைக் கையில் காப்பாகக் கட்டுவர். வள்ளைப் பொறியைத் தூவி வலிமை மிக்கதும் பெரிய காலையுடையதும் ஆகிய கொழுத்த கிடாயினது குருதியோடு பிசைந்த தூய வெள்ளரிசியைச் சிறு பலியாக இட்டுப் பிரப்பரிசி(பூவும்,அரிசியும்) கலந்து கொள்கலங்களில் வைப்பார்கள் மற்றும்  சிறிய மஞ்சளோடு நறுமணங் கமழும் சந்தனம் முதலியவற்றைத் தெளித்துப் பெரிய குளிர்ந்த செவ்வலர் மாலையினையும், பிற நல்ல குளிர்ந்த மாலைகளையும் ஒத்த அளவினதாக அறுத்து, அசையும்படி அவற்றைத் தொங்கவிட்டு மரங்கள் செறிந்த மலைப் பக்கத்தில் உள்ள நல்ல ஊர்களைப் பசியும் பிணியும்  பகையும் நீங்குக என்று வாழ்த்துவார். நறுமணப் புகை கொடுத்துக் குறிஞ்சிப் பண் பாடி முழங்குகின்ற ஓசையையுடைய அருவியுடன் இனிய இசைக் கருவிகளை முழக்குவர். சிவந்த நிறத்தினையுடைய பல பூக்களைத் தூவி அச்சம் வரும்படி குருதி கலந்த திணையையும் பரப்பி, குறமகளிர் முருகனுடைய இசைக் கருவிகளை முழக்கி “இறைவன் இவன்” என்பார் அஞ்சும்படி அம்முருகக் கடவுள் வேலன் மீது ஆவேசித்து வரச் செய்து வழிபடுவர் அம்மக்கள் வாழும் அச்சம் மிகுந்து பொருந்திய நகரின் கண் என்பதனை,

    மாண்தலைக் கொடியோடு மண்ணி அமைவர
    ……………………………………………..
    முருகு ஆற்றுப் படுத்த உருகெழு வியல் நகர்”

    என்ற பாடலால் அறியலாம்.

    முடிவுரை

    மேற்கூறிய சான்றுகளின் வாயிலாகக் குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் விளங்கியதும், குறிஞ்சி நிலத்தில் நடைபெற்ற முருக வழிபாட்டு முறைகளும், புலப்படுகின்றன.

    துணைநின்ற நூல்கள்

    1) மா.காந்திதாசன், தமிழகத்தில் முருக வழிபாடு, என்னெஸ் பப்ளிகேஷன், உடுமலைப்பேட்டை.

    2) பேரா.மு.சண்முகம்பிள்ளை, தொல்காப்பியம், முல்லைநிலையம்,சென்னை.

    3) பொ.வே.சேமசுந்தரனார், புறப்பொருள் வெண்பாமாலை, சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம்,சென்னை.

    4) மாணிக்கவாசகன், சிலப்பதிகாரம் தெளிவுரை, தமிழ்நிலையம், சென்னை.

    5) வேங்கடசாமி நாட்டார், யாப்ப்பருங்கலக்காரிகை, சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.

    ******

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக்கழகம்,
    ஈச்சநாரி,
    கோவை-21.

     

     

     

    Share
  • நாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம்

    -பீ.பெரியசாமி

    முன்னுரை

    நாட்டுப்புற இலக்கியத்தைப் பற்றி தொல்காப்பியா் கூறும் போது,

    naatupuramபொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்
    பொருளோடு
    புணா்ந்த நமைமொழி யானும்“ (தொ.செய்.173) என்று கூறுகின்றார். இவ்விருவகையும் நாடோடிக் கதைகளைப் பற்றியனவே யாகும். குழந்தை இலக்கியம் குறித்த நாட்டார் பாடல்களைப் பற்றிப் பேசும் சா.வளவன் “தாலாட்டுப் பாடல்களைக் கொண்டு நாட்டுப்புறத்தாரின் சமுதாயப் பண்பாட்டினையும் குழந்தைப் பேறு, காதல் வாழ்க்கை, பரத்தமை நெறி, தொழில், கல்வி, ஏழ்மை, சாதி, உறவின் பெருமை என்ற தலைப்புகளில் எடுத்தியம்பும்“ எனக் கூறுகின்றார். இவற்றையெல்லாம் நோக்கும்போது குழந்தை இலக்கியம் அக்காலக்கட்டத்தில் நிலவிய சமூக, பண்பாட்டு மாற்றங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாகவே உள்ளன என்பதை நம்மால் அறிய இயலுகின்றது. அது எவ்வாறு இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    குழந்தைப் பேறு இன்மை

    பெண் என்பவள் தாயாய் மாறிய பிறகே முழுமை அடைகின்றாள் என்பது நம் சமூகக் கட்டமைப்பு ஆகும். இதற்கு மாறாக ஒரு பெண் தாயாகவில்லை என்றால் அவளை இச்சமூகம் ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்துவது இன்று நேற்று இல்லை இது காலகாலமாய் நடைமுறையில் இருப்பதே யாகும். ‘மக்களைப் பெற்றவளே – மகராசி’  அப்படி பெறாதவளை ‘வரடி’, ‘மலடி’  எனத் தூற்றுகிறது சமுதாயம் – (நாட்டார் வழக்காற்றியல் – ப.193) என தே.லூர்து அவா்கள் தம் நூலில் கூறியுள்ளார். இதே கருத்தை இளையதம்பி பாலசுந்தரம் அவர்ள், “குழந்தைப் பேற்றினைப் பற்றி அறியாத மக்கள் குழந்தைப் பேறு பெறுவதற்காக வேண்டிப் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனா். சொத்துரிமையுள்ள சமூகத்தில் குழந்தைப்பேறு இன்றியமையாததும் கூட. குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் சமூகத்தில் மலடி என்று சொல்லி மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து புறக்கணிப்பது ஈழத்திலும் நடைபெறுகிறது“  (ஈழநாட்டார் பாடல்கள் ப.281) என்று கூறுகின்றார். இதனை கீழ்க்கண்ட சொல்லாடலின் மூலம் தெளிலாம்.

    மலடி விளைநிலத்திற்குத் தீங்கானவள்
    மலடி
    விளைநிலத்தைப் பாழ் நிலமாக்கினாள்“ (க.கிருட்டினசாமி (தொ.ஆ) கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள், ப.83)

    மலடியால் ஏற்படும் தீங்குகளைப் பற்றிய மக்களின் நம்பிக்கைகள் பலவற்றைத் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்  பலபடக் கூறுகின்றன. இவற்றால் புத்திரப்பேறு அடையாத பெண்நிலை நன்கு அறிய இயலுகிறது.

    குழந்தை வேண்டிச் செய்யும் நோன்புகள்

    தன்னுடைய வம்சம் தழைக்க வேண்டும் என்பதற்காகவும், தனக்கென்று கொள்ளிவைக்க ஒரு பிள்ளை வேண்டும் என்பதற்காகவும் பெண்கள் குழந்தை வரம் வேண்டி நோன்பிருத்தல் காலகாலமாக நடக்கும் ஒரு வழக்கமாகும். இதனை,

    அரசே உனைவேண்டி
    ஆடாத
    தீர்த்தமில்லை
    பொருளே
    உனைவேண்டி
    போகாத
    கோயிலில்லை“    (தாலாட்டுக்கள், ஐநூறு.ப.149)

    என்று தாய் தன் குழந்தையைப் பார்த்துப்பாடும் பாடலின் கருப்பொருளாக உள்ளது. மேலும்,

    உறையூரு சென்று நீங்கள் ஒரு பன்றி வாங்கி வந்தால்
    பன்றியை
    வளா்ந்திருவே நமக்குப் பாலன் பிறக்குமென்றாள்“ (சக்திக்கனல், க.பெ.பழனிசாமி (ப.ஆ) அண்ணன்மார்  சுவாமி கதை.ப.63)

    என்ற மனைவி தன் கணவனிடம் தான் பிள்ளையைப் பெற வேண்டி பன்றி வளா்க்கலாம் என்கிறாள். மேலும்,

    காசி விசிறி கொண்டு
    கைலங்கிரி
    செம்பு கொண்டு
    போகிறார்
    உங்கள் ஐயா  – உன்னைப் போல்
    ஒரு
    புத்திரன் வேண்டுமென்று“    (தாலாட்டுக்கள் ஐநூறு.ப.172)

    என்று தன் குழந்தையிடம் தாய் கூறும் படியாக இப்பாடல் அமைந்துள்ளது.

    குழந்தைப் பேறு

    குழந்தைப்பேறு குறித்த நம்பிக்கைகள் காலகாலமாக நம் சமூகத்தில் வேரூன்றி உள்ளன. அவற்றுள் ஒன்று,

    தை மாதப் பிறை பார்க்கத்
    தவம்
    பெற்று வந்தவனே“       (தாலாட்டுக்கள் ஐநூறு.ப.51)

    இதில் தை மாதம் குழந்தை பிறப்பது நல்லது என்பது புலப்படுகின்றது.

    தலைச்சன் பிள்ளை பெற்றவருக்குத் தாலாட்டும்
    அகமுடையான்
    செத்தவருக்கு அழுகையும் தானேவரும்“  (க.பஞ்சாங்கம், தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு.ப.79)

    என்பதில் தலைச்சன் பிள்ளை பிறந்தவுடன் தாய்க்கு தானாகவே தாலாட்டு வரும் என்பது தெரிகின்றது.

    பத்து வருஷமா என் கண்ணே –  நீ
    பாலனில்லா
    வாசலிலே
    கை
    விளக்குக் கொண்டு நீ
    கலி
    தீர்க்க வந்தவனோ“     (நா.வானமாமலை (தொ.ஆ) தமிழர் நாட்டுப்பாடல்கள் ப.117)

    என்பதின் மூலம் குழந்தைபேறு எவ்வளவு முக்கியம் என்பது தெளிவு.

    ஏழ்மை

    தாம் ஏழ்மையில் இருக்கும் போது ஒரு பிள்ளை பிறந்தால் அதை வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. தம் ஏழைக் குடிசையில் பிறந்த குழந்தையைத் தாலாட்டும் தாயொருத்தி

    முத்துச் சிரிப்பழகா
    முல்லைப்பூ
    பல்லழகா
    வெத்துக்
    குடிசையிலே
    விளையாட
    வந்தாயோ?“    (தமிழண்ணல், தாலாட்டு.ப.99)

    என்று பாடுகின்றாள்.

    தாலாட்டு

    தாலாட்டு என்பது தாய் தன்  நாவிலிருந்து எழுப்பும் ஓசையினால் வெளிப்படுவதேயாகும். தால் –  நாக்கு,  ஆட்டு  –  அசைத்தல், நாவசைவினால் ஏற்படும் ஓசையே தாலாட்டாகும். “தாலாட்டுப் பாடுகின்றபொழுது முதலில் ராரி ராரி ராராரோ“  (கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள், ப.42) என்றோ “தூரி தூரி ராராரோ“ (மேலது-43) என்றோ ஆரம்பிக்கப்பட்டது என்கின்றார்  க.கிருட்டினசாமி அவா்கள் அப்படிப் பாடப்பட்ட பாட்டொன்று

    ஆராரோ ஆராரோ – கண்ணே நீ
    ஆரிரரோ
    ராரோ
    ஆரடித்தார் 
    நீ அழுக “  கண்ணே உன்னை
    அடித்தவரை
    சொல்லி அழு“  (கி.வ.ஜ, மலையருவி.ப.294)

    மேலும்,

    பாட்டி உன்னை அடித்தாளோ
    பாலலூற்றும்
    கையாலே?
    நீட்டி உன்னை அடித்தானோ
    நெய்யூற்றும்
    கையாலே?“   (மேலது.பா.46)

    எனும் தாலாட்டுக்கள் குழந்தையின் மென்மையையும் தாயின் குணத்தையும் பிரதிபலிப்பனவாக உள்ளன.

    ஏந்தான் அழுவானோ
    ஏலம்பூ
    வா(ய்) திறந்து
    கொஞ்சி
    அழுவானோ
    கோவக்
    கனி வா(ய்) நோவ“     (கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்.ப.46)

    எனும் பாடலில் ஏன் குழந்தை அழுகிறான் என்பதை தெரியாத தாயின் மனத்துடிப்பு இங்கே புலப்படுகிறது.

    விளையாட்டுப் பாடல்கள்

    விளையாட்டு என்பது குழந்தைப் பருவ வரம் ஆகும். ஒரு தாய் தன் குழந்தையை சாய்ந்தாட வேண்டி பாடுகிறாள்.

    சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
    சாயக்
    கிளியே சாய்ந்தாடு
    அன்னக்
    கிளியே சாய்ந்தாடு
    …………  …………  ………….
    ………… …………. …………….
    மாடப் புறர்வே  சாய்ந்தாடு” (கி.வா.ஜ.ப.326 மலை அருவி)

    மேலும், கைவீச பழக்குதல்

    கைவீ சம்மா கைவீசு
    கடைக்குப்
    போகலாம் கைவீசு
    மிட்டாய்
    வாங்கலாம் கைவீசு
    மெதுவாய்த்
    தின்னலாம் கைவீசு
    சொக்காய்
    வாங்கலாம் கைவீசு
    சொகுசாய்ப்
    போடலாம் கைவீசு”    (மேலது)

    கல்லாங்காய் விளையாட்டு

    கொக்குச்சி கொக்கு
    ரெட்டை
    சில்லாக்கு
    மூக்குச்
    சிலந்தி

    ……………… …………… …………..
    …………… ………….. …………….
    பது;துப்பழம் சொட்டு?       (மேலது.ப.500)

    சடங்குகள்

    “மனித நாகரிகத்தின் முன்பிருந்தே சில பழக்கவழக்கங்களை மக்கள் மேற்கொண்டிருந்தனா். தொழில்கள் மாறியதால் சமுதாய மாற்றமும் நிகழ்ந்தது. சமுதாய மாற்றத்தால் பழக்க வழக்கங்களும் காலத்திற்கு ஏற்ப மாறி வந்துள்ளன. உலகில் உள்ள அனைத்து மக்களிடமும் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நாட்டிற்கு நாடு இனத்திற்கு இனம் மாறுபடுகின்றன. மக்களின் வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்பப் பழக்க வழக்கங்கள் அமைகின்றன“ (நாட்டுப்புற இலக்கியம், ப.133) என்கிறார். கிருட்டினசாமி அவா்கள். “பன் மடங்கு பெருகும் என்ற நம்பிக்கையில் செய்யப்படும் ஒருவகை வளமைச் சடங்காரும்“ (The Indian Mother Goddess, P.3)  என்கிறார். வில்லியம் க்ரூக் அவா்கள், ‘தீமை தரும் ஆவிகள் தலை, வாய், காது, மூக்கு ஆகிய உறுப்புகளின் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டு அதில் தீய ஆவிகளை விரட்டும் சக்தி படைத்த ஏதாவது ஒரு உலோகத்தை அணிவித்தால் காது வழியாக தீய ஆவிகள் நுழைவதை தடுக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்’  (Religion and Folklore of Northern India, P.306) என்று கூறுகின்றார்.

    காது குத்துதல்

    “காது குத்துகின்ற பொழுது புத்தாடை உடுத்தித் தட்டாரை அழைத்துக் காதில் துளையிட்டுக் கடுக்கன் (காதோலை) அணிவிக்கின்றனா்“  என்கிறார் சோமலே அவா்கள். (தமிழ்நாடு மக்களின் மரபும், பண்பாடும் ப.99) தாய் மாமன் காதுகுத்த சீர்  கொண்டு வருவான் என்ற செய்தி இப்பாடலில் காணமுடிகின்றது.

    மன்னன் மருமகனோ?
    என் அரசன்காது குத்த“   (நா.வானமாமலை (தொ.ஆ) தமிழ்நாட்டுப்பாடல்கள்.ப.116)

    மூக்குக் குத்துதல்

    தமிழ் பெண்களுக்கு அழகு மூக்குக் குத்துதல் இதனை புகழேந்திப் புலவா், முகத்துக்கழகாக மூக்குத்தி தானணிவித்தான்“  (துரோபதை குறம்.ப.10) என்று கூறுகின்றார்.

    முடிவுரை

    இவ்வாறாகக் குழந்தைப் பாடல்களில் குழந்தைப் பேறின்மையினால் வரும் அவலங்கள், குழந்தை வேண்டி செய்யும் நோன்புகள், குழந்தைப் பேற்றின் அவசியம், ஏழ்மை, தாலாட்டு, விளையாட்டுப் பாடல்கள், சடங்குகள் குறித்தும் சமூகத்தில் நிலவும் பண்பாட்டின் வெளிப்பாடே இவையெல்லாம் என்பதையும் விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைந்தது. குழந்தைப் பாடல்கள் என்பவை சமூத்தின் காலக் கண்ணாடி எனில் மிகையாகா.

    ******

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத் தலைவர்
    டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்

     

     

    Share
  • நீயே சிந்தித்துப்பார்

     

    image (6)

     

     

     

     

     

     

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    ஓரிரு வார்த்தைகள் உள்ளன

    உனக்கு நான்,

    நேரே சொல்லிவிட,

    நீ செய்யும் தகாத வினைகள் பற்றி !

    நம் கண்களை மூடிச் செய்தால்

    கிடைக்கும்,

    நல்ல வெகுமதிகள் என்று நீ

    சொல்லிக் கொண்டிருக்கும் பொய்களைப்

    பற்றித்தான் !

    விரும்புவதைச் செய் நீ !

    போக நினைக்கும் இடத்துக்கு

    ஏகு நீ ! ஆனால்

    நீயே சிந்தித்துப் பார் முதலில் !

     

    ஏனெனில்

    நானிருக்கப் போவ தில்லை

    உன்னோடு ! நீ

    விரும்பும் ஊழல் வாழ்க்கையின்

    பின்னே

    உன்னை விட்டுவிட்டு

    விலகி நான் வந்து விட்டேன் !

    இப்போதும்

    உன்னால் காண முடிய வில்லை

    ஆயினும், மனதில் நீ

    தீர்மானம் செய்து விட்டாய் !

     

    பெருந்துயர் விளையப் போகிறது !

    உன்மனம் கல்லானது !

    ஆயினும்

    மென்மேலும் சிந்தித்துப் பார்,

    உனக்காக வேணும் !

    உன் எதிர்காலம் சீராய்த்

    தெரியுது ! நீ

    புரிந்த துன்பச் செய்கை யாவும்,

    திருத்திக் கொள்ள உனக்குத்

    தருணம் உள்ளது,

    ஒருகணம் சிந்தித்துப் பார் !

     

     

    Share
  • வ.சுப.மாணிக்கனாரின் வள்ளுவம் கூறும் விழுமியங்கள் – 2

    -முனைவர் சு.இரமேஷ்

    பொருட்பயனிலை

    அறிவு அறிவுக்கே, கல்வி கல்விக்கே, பொருள் பொருளுக்கே என்னும் கூற்று நடைமுறைக்கு ஒவ்வாது. கற்றதனால் ஆய பயனென் கொல் (2) என்னும் அறிவினான் ஆகுவது உண்டோ (315) என்னும் கல்வி அறிவுகளுக்கு காட்டுவதுபோல “செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்” (524) ஒன்று உண்டு எனக்காட்டுகிறது. தமிழில் பொருள் பற்றிக் குறிப்பில் கோட்பானது ஈதலும் தூய்த்தலும் ஆகும்.

    உலகத்தில் இன்னும் சிலர் கடன்பட்டு இரவல் பட்டும் குடும்பக் கடன்போல் கொடைக்கடன் செய்வோர் உள்ளனர். தாய்க்குக் கொடுத்தால் அவள் தன் மகளுக்கு கொடுக்குமாப்போல பெற்றதையெல்லாம் பிறர்க்கே ஈயும் அன்பு நிறை நெஞ்சினர் அரிதாக நம்மிடை உள்ளனர் என்பதை,

    இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது
    வல்லாங்கு
    வாழ்தும் என்னாது நீயும்
    எல்லார்க்கும்
    கொடுமதி மனைகிழ வோயே!
    பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
    திருந்துவேற்
    குமணன் நல்கிய வளனே” – (புறம்.163)

    என்ற இப்பாடல் கொடைபற்றிய திறனை அறிவிக்கின்றது.

    “வினை செய்தவன் தானே முழுப்பயனையும் நுகரவேண்டும் என்பதற்கு ஒப்ப, செல்வம் ஈட்டியவன் முழுவதும் தூய்க்க வேண்டும் என்னும் கொள்கையினர் தானுண்டு, தன் வாய்உண்டு, தன் உடல் உண்டு, தன்னையே நினையும் தடிப்பினாராய்ப் பெற்றோர் உறவினர் சுற்றும் அற்றவர் போலத் தூய்க்கும் அவாவினர் இவரைக் கண்ட வள்ளுவர்.

    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே
    தமியர் உணல்” (229)

    என்று கூறும் ஆசானின் கொதி நெஞ்சம். இன்மை இடும்பைக் கிரந்து தீர்வாம் (1063) என்று இரப்பு பற்றிச் சினந்த புலவர், உணவுக் குவியல் இருந்தும் ஈயார் என்று காட்டுவார். கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் (1078) என்று குறிப்பிடுகிறார். (வள்ளுவம், ப.82) கொடா நோன்பிகளுக்குக் கயவர் என்று பெயர் சூட்டினார்.

    தனித்து உண்பது அவா உணர்ச்சிக்கும் அச்ச உணர்ச்சிக்கும் அடிப்படை. “அறத்தான் வருவதே இன்பம்” (39) மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்  (65), ஈத்துவக்கும் இன்பம் (228) போன்றவை ஆசான் காட்டுகின்ற  நல்இன்பங்களாகும்.

    அதே நேரத்தில் துய்க்கும் இன்பத்தை கட்டுப்படுத்துவர் அல்லர் திருவள்ளுவர், “அருள் என்னும் அன்புஈன்குழவி” (757) என இயற்கையை ஆசிரியர் ஒப்புவர் தூய்ப்பின்பம் அறிபவனே பிறர்க்கு ஊட்டின்பம் அறிவான். “தான் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு” (399) என்றபடித் தன்னின்பம் கொண்டு பிறரை நுகர்விக்க வல்லவனாவான். அதே நேரத்தில் அறனொடு பட்ட இன்பத்தூய்ப்பை குறைத்துக் கொள்ளச் சொல்வார் வள்ளுவர் என்பதை குறிப்பிடுகின்றார். (வள்ளுவம், ப.84)

    ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
    போகாறு
    அகலாக் கடை”  – (478)

    என்று வருவாயைக் கடந்து வறுமைக் கோட்டிற்குள் அடி எடுத்துவையாதே என்பது இதன் கருத்தாகும். வரவு முழுவதையும் தூய்த்து இன்ப வாழ்வு நடத்துதலை ஆசிரியர் உடன்படுகிறார் என்பதை மூதறிஞர் குறிப்பிடுகின்றார்.

    மனை முழுதும் நிரம்பிய பொருள் இருந்தும் குறைந்துவிடும் என்று கருதி எடுத்து உண்ண மறுப்பவது கொடுத்து உண்க என்று எப்படிக் கூறுவது தன் வயிற்றை வஞ்சிக்கும் இவன் உலகிடக் கிடப்பதோர் கடமை இல்லை என்ற சினத்தால்,

    வைத்தான் வாய்சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
    செத்தான்  
    செயக்கிடந்தது இல்” – (1001) என்பர்.

    திருக்குறள் கற்கும்போதே ஒழுகும் எண்ணத்தார்க்கு முழுதும் கற்றபின் ஒழுகும் எண்ணம் உண்டாகாது அதுபோல பொருள் வருங்காலை செலவிடான் வந்த பின்னும் செலவிட நினையான். பூதங்காக்கும் பொருள் என்பது மொழி என்கின்றார்.

    ஆற்றின்  அளவறிந்து ஈக  அது பொருள்
    போற்றி  
    வழங்கும்  நெறி” (477)

    அளவறிந்து ஈவதே வள்ளுவம் எனத்துணிக என்று வாழ்நூல் செய்தவர் வள்ளுவர். அனைத்தும் ஈக என்று பொறுப்பின்றிக் கூறாமல் அளவறிந்து ஈக என்று நினைந்து சொல்லறிந்து மொழிந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றார். – (வள்ளுவம், ப.91)

    கொடைக்கடன்

    கொடைக்கடன் ஒப்புரவும் ஈகையும் இருவகைப்படும். பொதுக்கொடை என்பது ஒப்புரவு (தனிக்கொடை) ஈகையாம் ஒப்புரவு என்கின்ற விளக்கு ஒ –பல்லுயிருக்கும் ஒத்த, புரவு –கொடை – அல்லது காப்பு என்பது பொருள்.

    “பேரறிவாளன் திருஊருணி நீர் நிறைந்தற்று” (215)

    “மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு” (211)

    எனப் பரந்த பொதுவுவமைகளை உயர்திணையுள்ளும் அஃறிணையுள்ளும் பல்லுயிர்க்குப் பொருந்திய பெருங்கொடை என்பதுவே ஒப்புரவு அதிகாரத்தின் கருத்து ஆகும். (வள்ளுவம், ப.84)

    இன்மை நிலை

    உலகில் இருப்போரும் உள்ளனர் இல்லாதோடும் உள்ளனர். நம் முன்னோர்கள் காட்டுமிராண்டியாக வாழ்ந்தபோது தாய்வழிச் சமூகமாக வாழ்ந்தனர். அனைத்தும் அனைவருக்கும் என்னும் பொதுவுடைமைக் காலமாக இருந்தது. காலப்போக்கில் உணவைப் பங்கீட்டுப் பிரச்சனையால் தனியுடமையும் ஆணாதிக்கம் உருவாயிற்று. வளர்ந்து தொழிலாளி முதலாளி ஆகிய இருவருக்குமான கொள்கைப் போர் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால் தனியுடைமை என்று வரலாற்றுக் காலந்தொட்டு நீண்டும் கொண்டுதான் இருக்கின்றது. தனிவுடைமை என்பது இல்லாதார்க்கும் இருப்பவருக்குமிடையே சுய நல அரசுகளின் உதவியுடன் இடைவெளியானது நீண்டுகொண்டே இருக்கும் இருப்போர் இல்லாதோரின் பிரிவுகளும்  பிரச்சினைகளும் நீடிக்கும் ஒற்றுமையில்லாது மன்னுயிர்க்கெல்லாம் தீமைதவிர எதுவும் மிஞ்சாது. இதுவே தனிவுடைமையின் கொடுஞ்செயலாகும். இத்தகைய கொள்கைகொண்ட நாடுகளில் அன்றும் ஒருவன் பொருள் ஈட்டுவதற்கு எந்த ஒரு வரையறை இல்லை. “கோடி தொகுத்தார்க்கும்” (377) என்றபடி ஈட்டியவையெல்லாம் தொகுத்துக் கோடற்கு வரையறை இல்லை. பண்டைக் காலத்தில் செல்வர்களுக்கென தனி வரி விதிப்புமில்லை. இறை எல்லார்க்கும் ஒப்பவே வகுக்கப்பட்டது. பெருஞ்செல்வந்தர்பால் நேரடிப் பொருள்கேட்பது கொடுங்கோன்மை என்று அறிஞராலும் எண்ணப்பட்டது.

    வோலொடு நின்றான் இடுவென்றது போலும்
    கோலொடு
    நின்றான் இரவு” (552)

    இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
    மன்னவன்
    கோற் கீழ்ப்படின்” (558)

    போன்ற குறள் தனியுடைமை மக்களின் பற்று மனப்பான்மைக்கு அன்றும் இன்றும் சான்று என்கிறார்.  – (வள்ளுவம், ப. 104)

    சிலரிடம் மறைந்திருக்கும் பொருளைச் சமப்படுத்த வேண்டி பெருங்கொடையான ஒப்புரவு பண்பினை தனியதிகாரமாக வகுத்தனர்.

    ”ஒப்புரவின் நல்லபிற பெறல்” (213)  என்றும் ஈதல் நன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பதைக் குறிப்பிடுகின்றார்.

    ஒப்புரவும் ஈகையும் தனியுடைமை நாட்டிற்குக் காப்புத்தூண்கள் ஆவன. தனியுடைமை நாடுகளில் பொதுவுடைமை வழிகளைச் சிறுகச்சிறுக கையாள்கின்றன. (வள்ளுவம், ப.106) என்று கூறுவதால் பொதுவுடைமை கொள்கைதான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் என்பதை குறிப்பிடுகிறார்.

    வள்ளுவர் வறுமை நிலைமையைத் துய்த்தாரோ அறியேன் ஆயினும் வறியோர் துன்பத்தினை  நன்கு அறிந்தவர் என்பதற்கு, “இன்மையின் இன்மையே இன்னாதது” (1041) இன்மை என ஒரு பாவி (1042), அறம் சாரா நல்குரவு (1047) எனக் துடிப்புள்ளம் கொண்டு வறுமையின் நிலையைப் புலப்படுத்துகின்றார். – (வள்ளுவம், ப. 108)

    வறியோர் வேறு தாம் வேறு எனப் பிரித்து நிற்றார் அல்லர் என்பதற்கு,
    இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
    கொன்றது போதும் நிரப்பு (கு.1048) என்ற குறள்வழி மனத்துடிப்பை எடுத்துரைக்கினர்.

    இன்மை நிலையைத் துடைப்பது உடையார் கடன் பிறர் மேற்றாக வைத்து ஆசான் கூறிய அறநிலையாகும். ஒருவன் பசித்திருந்தால்,

    உறுபசியும் ஓவாப்  பிணியும் செறுபகையும்
    சேராது  
    இயல்வது  நாடு” (734) என்ற குறளின்வழிப் பசியின்மை, பிணியின்மை, பகையின்மை என்னும் முக்கூற்று உடையது. இம்மூன்று உடைய நாடே நம்  முன்னோர்கள் காணவிழைந்த உலகம் என்கிறார். –  (ப.117)

    பசியும் பிணியும் பகையும் நீங்கி
    வசியும்
    வளனும் சுரக்க” – (சிலம்பு) என்று இளங்கோ பசிபணியைப் பற்றி பாடியுள்ளார்.

    அறிவுப் பிறப்பு

    மக்களுள் அறிவுப் பிறப்பும் உண்டு அறிவிலாப் பிறப்பும் உண்டு என்று கூறுவது வள்ளுவ முரண்பாடாகும். ஒரு சாதிக்கே அறிவு, ஆண்மை, பண்பு, நாகரிகம் இருக்கும் என்பது குறுகிய மனம் அறிவில் எழுந்த ஆகாக் கொள்கையாகும்.

    அறிவுப்பிறப்பால் வாய்த்த நாம் பெற்ற உடம்பால் குறையுடை யோமாயினும் அவ்வுடற்குறை நம் வாழ்வில் இடையூறும் இல்லை. ஆனால், வாழ்க்கை இழந்தவர் எனக் கருதுவது மானுடப்பிறப்பை அவமதிப்பதாகும்.

    உள்ளது கொண்டு இல்லது நிரப்பிக் கொள்ளும் நினைப்பரிய வன்மை நம் அறிவின் இயல்பு என்பது வள்ளுவம்,

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின்
    உள்ளக் கெடும்” (421)

    அறிவு அற்றம் காக்கும் கருவி (வள்ளுவம், ப.421)

    என வரும் குறள்களே சான்றாகும் என்கிறார் மூதறிஞர். (வள்ளுவம், ப.132)

    மக்கள் வாழ்விற்கு நிறையுடலை அரிய பெருந்துணை என்றோ குறையுடலைத் தடுப்பரிய இடையூறு என்றோ கூறுவது வள்ளுவம் அன்று. நல்வாழ்விற்கு அறிவாட்சியே அடிப்படை என்பதை,

    அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
    என்னுடையரேனும்
    இலர்” (430) என்னும் இக்குறளே தனிச் சான்றாகும்.

    மக்கட்கு ஒழுக்கம் அறிவு, கல்வி, ஊக்கம், முயற்சி என்னும் பிரிவில்லா இயற்கை நலங்களே பிறழ் வாழ்வு நலங்கள் என்பது வள்ளுவத்தின் கருத்தாகும். எல்லாரும் அறிவுத்தன்மை உடையவர்களே அதனை ஆட்சிப்படுத்தினால் எல்லாரும் நலம் பெறுவர்.

    அரியன கற்று மனக்குற்றம் அற்றவர் என்று நாம் எண்ணிய பெரியோர் மாட்டும் அறிவின்மை காணப்படும் சிறிதும் கற்றறியான் கண்ணும் பெருநலம் பயக்கும் இந்நிலையை அறிந்தவர் வள்ளுவர்,

    செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
    செயற்கரிய
    செய்கலா தார்” (26)

    என்னும் குறளின்வழி பெரியவர் சிறியர் என்பன ஒருவர் சுட்டாது இலக்கண வகையில் தோன்றிய காரணப் பெயர்கள். பெரியவர் என்றோ, சிறியவர் என்றோ பிறப்பில் ஒரு பகுப்பு இல்லை என்பது வள்ளுவம். பெரியாராயினர் இழிந்த செயலைச் செய்தால் சிறியராவார். சிறியவராயினும் அரிய செயலைச் செய்தால் பெரியராகவார் எனக் குறிப்பிடுவதை உணர்த்துகின்றார். (வள்ளுவம், ப.145)

    முடிவுரை

    வள்ளுவரின் நெஞ்சமானது அவரின்  குறளோடு ஒன்றிணைந்தது செயல்வடிவமே. வள்ளுவரின் நெஞ்சமாக அமைந்திருக்கின்றது என்றுரைக்கிறார்.

    திருக்குறட்குப் பொதுமை நிலைக்களம் அல்ல மக்கள் மனமே நிலைக்களமாக அமைகின்றது. நிலைப்பன்மைக்கேற்ப அறப்பன்மை வகுப்பது திருக்குறளின் முறையாகும். அவரவர் வாழ்நிலைக்கேற்ப பொருத்திக் கற்பதே குறட்கல்வி நெறியாக அமைகிறது.

    பொருளை ஈட்டலும் வேண்டும் தூய்த்தலும் வேண்டும். அகத்தூய்மையும் பொருள் ஒழுக்கம் அகங்கை புறங்கை போன்றன என்கிறார்.

    அறத்தான் வருவதே இன்பம் என்றும் பசியை மாற்றும் ஈகையாரும் செய்ய வேண்டுவன என்றுக் குறிப்பிடுகின்றார்.

    முயற்சியே உயிர்நிலை, செயலுக்குவரும் அறங்களைக் கூறுவதே வள்ளுவம் எனவும் யாருக்கும் ஒல்லும் நெறிகாட்டுவதே வள்ளுவம் என்று கூறுகின்றார்.

    பொதுமைப்படுத்துதலாம் வறுமை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு.  மக்களுள் சிறியவர் பெரியவர் என்பதை உணர்த்தினாரில்லை; மாறாக நடத்தையினால் ஒருவரின் தன்மை மாறுகிறது என்பதை வள்ளுவம் உணர்த்துகிறது.

    வள்ளுவனிஸம் என்ற கொள்கை உருவாக்க எவ்வகையில் இவை வழிவகுக்கும் என்பதற்கான மேலாய்வுக்கு எடுத்துச் செல்ல இக்கட்டுரை பரிந்துரைக்கின்றது.

    ******

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி (தன்.)
    மன்னன் பந்தல்,     மயிலாடுதுறை.

     

     

    Share
  • தமிழ் யாப்பு எழுத்துக்களும் வடமொழி யாப்பு எழுத்துக்களும் – 2

    -ம. பிரபாகரன்

    யாப்பருங்கல விருத்தி, ” நாலெழுத்தாதியா…எனத்தொடங்கும் சூத்திரம் முதல் தன்சீர் எழுத்தின் சின்மை மூன்றே ” என்ற, தொல்காப்பியர் எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் அமைந்த சூத்திரங்கள் அனைத்தையும் எடுத்துக்காட்டி என்றார் ஆசிரியர்  தொல்காப்பியனார் ஆகலின்  (இரா.இளங்குமரன் பதிப்பு, யாப்பருங்கல விருத்தி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பக்: 112:1973) என்று தெளிவாகக் கூறுகிறது. இதுவும், இதனைத் தொடர்ந்து வரும், யாப்பருங்கலவிருத்தியின் நேரிசை வெண்பா உரைச்சூத்திரங்களும், தொல்காப்பியம் தொடர்ந்து பயிலப்பட்டு வந்தது என்பதையும், இச்சூத்திரங்கள் எந்த உரையாசிரியரின் கைச்சரக்கும் இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. யாப்பருங்கல விருத்தி காட்டும் நேரிசை வெண்பா உரைச்சூத்திரங்கள் பின்வருமாறு:

    ஈரிரண்டும் ஒரேழும் ஈரைந்தும் மூவைந்தும்
    பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் – ஓரா
    விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந்
    தளவுநெடில் கழிலோ டைந்து ”

    ஐந்தும் அகவற்கு வெள்ளைக் களவடியும்
    சிந்து நெடிலடிக்கண் தொல்லிரண்டும் – வந்த
    தளவிரண்டும் ஆன்ற நெடில்கழியும் ஒண்பாற்
    றளைசிதைவில் தண்டாக் கலிக்கு ”       – யா.வி.95

    ஈரிரண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச்
    சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம் – ஓரும்
    நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக்
    கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து ” – யா.வி. 95 மேற்.

    அளவியற்பா ஆன்றசீர் ஐந்தெழுத்திற் பல்கா
    வளவஞ்சிக் காறுமாற்மாம் மாதோ – வளவஞ்சிச்
    சின்மையொரு மூன்றாகும் என்பர் சிறப்புடைமைத்
    தன்மை தெரிந்துணர்வோர் தாம் ” – யா.வி.95. மேற்.

    குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமும்
    ஒற்றும் எனவொரு நான்கொழித்துக் – கற்றோர்
    உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் எண்ணச்
    செயிரகன்ற செய்யுள் அடிக்கு ” – யா.வி.36. மேற்.

    (25 வது நூற்பா உரை, மேலது பக்.113)

    அதுமட்டுமின்றி தொல்காப்பியரின் சிந்தனைகள் அவர் காலத்தோடு முடிந்து போகாமல் அவர் காலத்திற்குப் பிறகும் ஒரு சிந்தனைப்பள்ளியாக விளங்கியமையையும் யாப்பருங்கலவிருத்தி மூலம் அறிந்துகொள்ள முடிகிறது:

    ஈரிரண்டும் ஏழெழுத்தும் ஈரைந்து மூவைந்தும்
    பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் – ஏர்பாய்
    விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந்
    தளவு நெடில்கலியோ டைந்து ” 

    ………………………………………………. 

    ஐந்தாதி ஐரண் டீறாம் அறுநிலமும்
    வந்தவடி வெள்ளைக் களவு ”

    பண்பாய் ஏழு பதினா றிழிபுயர்வா
    வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் – வெண்பாவின்
    ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும்
    பாற்படுத்தார் நூலோர் பயின்று ”…………………………………………………..

    ” அவற்றுள் ஐந்தடியாலும் ஆசிரியம் வரப்பெறும். சிந்தடியாலும், அளவடியாலும், நெடிலடியின் முதல் இரண்டடியாலும் வெண்பா வரப்பெறும். வெண்பாவின் ஈற்றடி ஐந்தெழுத்து முதலாகப் பத்தெழுத்தின்காறும் உயர்ந்த ஆறுநிலத்தானும் வரப்பெறும்.

    பதின்மூன்றெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த எட்டுநிலத்தானும் இலக்கணக் கலிப்பா வரப்பெறும். இலக்கணக் கலிப்பா அல்லாதன, மிக்கும் குறைந்தும் வரப்பெறும்.

    இருசீரடி வஞ்சிப்பா நான்கெழுத்து முதலாகப் பன்னிரண்டெழுத்தின்காறும் உயர்ந்த ஒன்பது நிலத்தானும் வரப்பெறும். முச்சீரடி வஞ்சிக்கு எழுத்து எண்ணி வகுத்திலரேனும், ஏழெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்ந்த பத்தடியாலும் வரப்பெறும்………..

    நாற்சீரடிப் பாவினங்களின் அடி இருபது எழுத்தின் மிக்கு, இருபதெழுத்தின்காறும் வரப்பெறும் என்பது. (மு.சு.நூ, பக்.495-496 )

    இதில் வெண்பா சிந்தடியாலும், அளவடியாலும், மட்டுமின்றி, நெடிலடியின் முதல் இரண்டடியாலும் வரப்பெறும் என்பதும் வெண்பாவின் ஈற்றடி ஐந்தெழுத்து முதலாகப் பத்தெழுத்தின் காறும் ஆறுநிலத்தானும் வரப்பெறும் என்பதும், முச்சீரடி வஞ்சிக்கு ஏழெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்ந்த பத்தடியாலும் வரப்பெறும் என்பதுவும், தொல்காப்பியத்தில் இல்லாதவை. அதுபோல இலக்கணக்கலிப்பா அல்லாதன என்பதும் நாற்சீரடிப் பாவினங்களின் அடி இருபது எழுத்தின் மிக்கு இருபத்துநான்கு எழுத்தின்காறும் வரப்பெறும் என்பதுவும் தொல்காப்பியத்தில் இல்லாதவை. இக்கருத்துக்கள்  எல்லாம் பிற்கால தொல்காப்பியச் சிந்தனைப்பள்ளியால் வளர்த்தெடுக்கப்பட்டவை எனலாம். இவ்வெழுத்து வகைப்பட்ட அடிகளுக்கு தரப்படும் உதாரணங்கள், அச்சிந்தனைப்பள்ளி தொல்காப்பியக் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் அறிவிப்பனவாய் உள்ளன. உதாரணங்கள் பின்வருமாறு:

    அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

    குறளடி

    4-6               பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து    (4)

    தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து        (5)

    வண்டு சூழ விண்டு வீங்கி             (6)

    சிந்தடி

    7-9              நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம்   (7)

    ஊர்வாய் ஊதைவீச ஊர்வாய்        (8)

    மணியேர் நுண்டோ டொல்கி மாலை (9)

    அளவடி

    10-14          நன்மணம் கமழும் பன்னெல் ஊர  (10)

    அமையோர் மென்றோள் ஆயரி நெடுங்கண் (11)

    இணையீ ரோதி ஏந்திள வனமுலை (12)

    இறும்பர் மலரிடை யெழுந்த மாவின் (13)

    நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல் (14)

    நெடிலடி

    15-17       அணிநடை அசைஇய அரியமை சிலம்பின் (15)

    மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் (16)

    ஒலிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு (17)

    கழிநெடிலடி

    18-20             நளிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநாள் (18)

    இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை (19)

    கலனளவு கலனளவு நலனளவு நலனளவு (20)

    பெருமணம் புணர்ந்தனை என்பவஃ

    தொருநீ மறிப்பின் ஒழிகுவ தன்றே (  மேலது பக். 496)

    பேராசிரியரும் இதே உதாரணங்களையே பயன்படுத்துகிறார். (கணேசையர் .சி, தொல்காப்பியம் பொருளதிகாரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, பக், 298,299:2007)

    எனவே இவ்வுதாரணங்கள் பிற்காலத் தொல்காப்பியச் சிந்தனைப்பள்ளியால் பயன்படுத்தப்பட்டவை என ஊகிப்பது தவறாகாது.

    இதுகாறும் கண்டவற்றால் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு வடமொழி நெறிபற்றியதன்று என்பதையும், எழுத்தெண்ணிக்கை பற்றிய நூற்பாக்கள் இளம்பூரணருக்கு முன் உள்ள உரையாசிரியர்களால் இடைச்செருகப்பட்டதன்று என்பதையும் அறிந்து கொண்டோம். தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு  வடமொழி நெறிபற்றியதன்று என்பதைப் புறநிலைரீதியாக மேலே சுட்டிக்காட்டினோம். எழுத்து அடிப்படையில் அமைந்த தமிழ், வடமொழிப் பாக்களை ஒப்பிடுவதன்மூலம் இரண்டும் வேறு வேறு மரபைச் சார்ந்தவை என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டமுடியும். இதை விளக்கமான  ஒப்பீடு மூலம் கூறவேண்டும். இரண்டையும் ஒப்பிடுவதற்குமுன் தொல்காப்பிய எழுத்தெண்ணிக்கை மரபைப் புரிந்து கொள்ளவேண்டும். முதலில் எழுத்தெண்ணிக்கை பற்றிய தொல்காப்பிய நூற்பாக்களையும், கருத்துக்களையும் தொகுத்துக்கொள்வோம்.

    1. நால் எழுத்து ஆதியாகி ஆறெழுத்து

    ஏறிய நிலத்தே குறளடி என்ப

    பொருள்: நால் எழுத்து முதலாக ஆறுஎழுத்து ஈறாக ஏறி நிலத்தில் வருவது குறளடி.

    1. ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே

    ஈர் எழுத்து ஏற்றம் அல்வழி யான

    பொருள்: சிந்தடிக்கு அளவு ஏழு எழுத்து என்று கூறுவர்; இரண்டு எழுத்து ஏற்றம் இல்லாதவிடத்து.

    1. பத்தெழுத் தென்ப நேரடிக் களவே

    ஒத்த நாலெழுத்து ஒற்றலங் கடையே

    பொருள்: பத்து எழுத்து முதல் பதினான்கு எழுத்து வரை நேரடி என்ற அளவடியாகும்.

     மூவைந் தெழுத்தே நெடிலடிக்கு அளவே

    ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப

    பொருள்: பதினைந்து எழுத்து முதல் பதினேழெழுத்துவரை நெடிலடிக்கு அளவாம் என்று கூறுவர்.

    1. மூவாறு எழுத்தே கழிநெடிலடிற்கு அளவே

    ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப

    பொருள்: பதினெட்டு எழுத்து முதலாக இருபது எழுத்தளவும் கழிநெடிலடியின் இயல்பென கூறுவர்.

    1. சீர்நிலை தானே ஐந்து எழுத்து இறவாது

    பொருள்: ஒருசீரின்கண் நிற்கும் எழுத்துக்கள் ஐந்தினைக் கடவாது.

    1. நேர்நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும் 

    பொருள்: இருசீர் அடிகளான் வரும் வஞ்சியடிக்கண் ஒருசீரில் ஆறெழுத்தும் வரும்.

    1. ஐவகை யடியும் ஆசிரியர்க்கு உரிய

    பொருள்: நாற்சீரடிக்கண் வகுக்கப்பெற்ற ஐவகை அடிகளும் ஆசிரியப்பாவிற்கு உரிய.

    1. அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய

    தளைவகை ஒன்றாத் தன்மை யான 

    பொருள்: அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற்கு உரிய; தளைவகை ஒன்றாத் தன்மைக்கண்.

    1. அளவடி மிகுதி உளப்படத் தோன்றி

    இருநெடில் அடியும் கலியிற் உரிய 

    பொருள்: அளவடி முகுதிஒயாகிய 13 எழுத்து முதலாக நெடிலடியும், கழிநெடிலடியும் ஆகிய 20 எழுத்தின்காறும் வரும் அடி, கலிப்பாவிற்குரிய.

    1. குறளடி முதலா அளவடி காறும்

    உறழ்நிலை இலவே வஞ்சிக்கு என்ப

    பொருள்: குறளடி முதலாக அளவடி வரையும் வஞ்சியுரிச்சீர் வந்து மயங்கும் நிலை இல்லை என்று கூறுவர். இங்கு இயற்சீரும் ஆசிரியவுரிச்சீரும் வரும்.

    இவற்றைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்: 

    அட்டவணை 2

    எழுத்துக்கள்                        பாக்கள்

    அளவு- 10 எழுத்து முதல் 14 எழுத்து வரை

    (10,11,12,13,14)

     

    சிந்து – 7 எழுத்து முதல் 9 எழுத்து வரை

     

    வெண்பா

    குறளடி – 4  எழுத்து முதல் 6 எழுத்துக்கள் வரை

    (4,5,6)

    சிந்தடி – 7 எழுத்து முதல் 9 எழுத்து வரை

    (7,8,9)

    அளவடி – 10 முதல் 14 எழுத்துக்கள்

    (10,11,12,13,14)

    நெடிலடி- 15 முதல் 17 எழுத்துக்கள்

    (15,16,17)

    கழிநெடிலடி – 18 முதல் 20 எழுத்துக்கள்

    (18,19,20)

    ஆசிரியப்பா

    நெடிலடி – 15 முதல் 17 எழுத்துக்கள்

    கழிநெடிலடி – 18 முதல் 19 எழுத்துக்கள்

    6 எழுத்து

    6 முதல் 12 எழுத்துக்கள்                இருசீரடி வஞ்சி

    வஞ்சி

    இதுவரை கண்ட வடமொழி, தமிழ் எழுத்துக்கள் பற்றிய செய்திகளின் அடிப்படையில்

    தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபை வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபோடு கீழ்க்காணும் வகையில் ஒப்பிடலாம்:

    எழுத்துக்கள்

    வடமொழி சந்தஸ்கள்

    தமிழ்ப்பாக்கள்

    1

    2

    3

    4              ப்ரதிஷ்டா              ஆசிரியப்பா

    5              சூப்ரதிஷ்டா           ஆசிரியப்பா

    6              காயத்திரி                ஆசிரியப்பா, இருசீரடி வஞ்சியின் ஒருசீர், வஞ்சி

    7             உஷ்ணிக்               ஆசிரியப்பா

    வெண்பா(சிறப்பு)

    8            அனுஷ்டுப்பு         ஆசிரியம், வெண்பா, வஞ்சி

    9            ப்ரகதி          ஆசிரியம், வெண்பா, வஞ்சி

    10        பங்தி              ஆசிரியம் , வெண்பா(சிறப்பு), வஞ்சி

    11        த்ருஷ்டுப்பு              ஆசிரியம், வெண்பா (சிறப்பு), வஞ்சி,

    12        ஜகதி              ஆசிரியம், வெண்பா (சிறப்பு), வஞ்சி

    13        அதிஜகதி   ஆசிரியம்

    வெண்பா (சிறப்பு)

    14        சக்வரி          ஆசிரியம், வெண்பா

    15        அதிசக்வரி             ஆசிரியம்,

    கலிப்பா

    16        அஷ்டி           ஆசிரியம்,

    கலிப்பா

    17         அதியஷ்டி              ஆசிரியம்

    கலிப்பா

    18        த்ருதி           ஆசிரியம்

    கலிப்பா

    19        அதித்ருதி     ஆசிரியம்

    கலிப்பா

    20        க்ருதி            ஆசிரியம்

    கலிப்பா

    மேலே காட்டிய ஒப்பீடு புறநிலையானதே. பொதுநிலையானதே. இவ்வொப்பீட்டின் மூலம் வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபிற்கும் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபிற்கும் பெரும் வேறுபாடு இருப்பதை நன்றாக உணரமுடியும். வடமொழி எழுத்தெண்ணிக்கைமரபு மிகவும் கட்டுப்பாட்டோடு இருக்க (6 எழுத்து – காயத்திரிதான், வேறு எதுவுமாக இருக்க முடியாது. தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு, நெகிழ்வுடன் தனக்கேயுரிய சுயேச்சைத்தன்மையுடன் இருப்பதை உணரமுடியும். அதாவது 10 எழுத்து பங்திக்கு மட்டும்தான் உரியது என்று கூறும் வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபை விட 10 எழுத்து ஆசிரியப்பா வெண்பாவிற்கும் உரியது என்னும் தமிழ் மரபு இயல்புத்தன்மையோடு அதாவது தனக்கேயுரிய சுயேச்சைத்தன்மையோடு இருப்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளமுடிகிறது.

    தமிழில் எழுத்தெண்ணும் போது வடமொழி சந்தஸ்களைப்போல் எழுத்துக்களை  கட்டுப்பாட்டோடு புலவர்கள் நிறுத்தவில்லை. அப்படி அவர்கள் செய்ய நினைத்தாலும் அது செயற்கைப் பாக்களை உருவாக்குவதாகவே அமையும். தமிழ்ச் செய்யுள்களின் தூக்கு எழுத்துக்களைக் கட்டுபாட்டோடு நிறுத்துவதற்கு வாய்ப்பும் கொடுக்காது. தொல்காப்பியர் 6 ,7,8,9,10 என்று பாக்களுக்கு எழுத்துக்களைக் கூறுகிறாரேயொழிய அவை குறிலா? நெடிலா? என்றெல்லாம் வேறுபடுத்தவில்லை. அதாவது அவர் வடமொழியில் இருப்பதைப் போல மகணம், சகணம் என்பது போல் கட்டுப்பாட்டோடு எழுத்துக்களை எண்ணவில்லை. அதே போல் வடமொழி மாத்ரா விருத்தங்களைப் போல் ஒருஅடியில் வரும் எழுத்துக்கள் இத்தனை மாத்திரை பெற்று வரவேண்டும் என்றும் அவர் கூறவில்லை. இனியும் வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபும், தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபும் வேறு வேறு என்பதற்குச் சான்றுகள் தந்து விளக்க வேண்டியதில்லை. இரண்டு மொழிகளின் எழுத்தெண்ணிக்கை மரபும் வேறு வேறு என்ற நிலையில் இருமொழிகளின் எழுத்தெண்ணிக்கை மரபும் பரஸ்பரம் மற்ற மொழிகளின் எழுத்தெண்ணிக்கை மரபு வளர்ச்சிக்குப் பங்காற்றியிருக்கலாம். இது வேறொருதளத்திலான பரந்துபட்ட ஆய்விற்குரியது.

    ******

    ஆய்விற்குப் பயன்பட்ட கட்டுரை மற்றும்  நூல்கள்:

    1. தொல்காப்பியச் செய்யுளியல் இரு சூத்திர விளக்கம், மணிமேகலை மன்றம், இராஜபாளையம், ஆண்டு தெரியவில்லை.
    2. சி.வை.தாமேதரம்பிள்ளை பதிப்பு, வீரசோழியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2008.

       3.இரா.இளங்குமரன் பதிப்பு, யாப்பருங்கல விருத்தி,     சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை,1973

    1. கணேசையர் .சி, தொல்காப்பியம் பொருளதிகாரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, 2007

    வடமொழி யாப்பு செய்திகளுக்கு  பயன்பட்ட நூல் மற்றும் ஆய்வேடு:

    1. இராஜ இராஜ வர்மா , எ.ஆர்., விருத்தமஞ்சரி, கரன்ட் புக்ஸ், கோட்டயம், 2008. கேரளா.
    2. Ranjith rajan, –  Metres of bhattananarayana (M.Phil Desertaton), Department of Sanskrit,  University of   Kerala, 2009.

    ******

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்,
    EFEO,
    புதுச்சேரி.

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (84)

    நிர்மலா ராகவன்

    நாம் நாமாக இருக்க

    நலம்-1-2

    `தீர்க்காயுசா இரு!’ என்று வாழ்த்துகிறார்கள்.

    நீண்ட ஆயுள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் நமக்கு மட்டுமின்றி, பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கிறதா என்பதுதானே முக்கியம்?

    நமக்காக மட்டும் நாம் செய்வது நம்முடனேயே மறைந்துவிடுகிறது. பல நூறு, ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், அசோகரும், ராஜராஜ சோழனும் செய்திருப்பவை, பிறருக்காக விட்டுச் சென்றவை, இன்றுவரை பேசப்படுகின்றன. ஏனெனில், இவர்கள் பொது நலத்தை மனதில் கொண்டிருந்தவர்கள்.

    மாறுபாடு

    எல்லாரும் யாரோ விதித்த பாதையில் போகையில் ஒருவன் மட்டும் இன்னொரு வழியைத் தேர்ந்தெடுத்தால், `புரட்சிக்காரன்’ என்கிறோம். அவனுக்குப் பல எதிரிகள் வாய்ப்பார்கள். உதாரணம், மகாத்மா காந்தி, ஆப்ரஹாம் லிங்கன். `நமக்கென்ன வந்தது!’ என்று இவ்விருவரும் இருந்திருந்தால்?

    செயல் மட்டுமின்றி, எண்ணங்களில் ஒருவர் மாறுபட்டால்கூட ஏற்பது கடினமாக இருக்கிறது மற்றவருக்கு. இதனாலேயே, நிறைய நல்ல விஷயங்களை யோசித்து வைத்திருப்பவர்கூட அதைச் செயலில் காட்டத் துணிவதில்லை. பழிக்கு அஞ்சி பிறரது கைப்பொம்மையாக மாறினால், இறுதியில் வெறுமைதான் மிஞ்சும்.

    தற்காலத்தில், `இவனால் நமக்கு என்ன நன்மை?’ என்று யோசிப்பவர்கள்தாம் அதிகம். அவர்களுடைய சொந்த நலனுக்காக மற்றவர்களை மாற்ற முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய ஆர்ப்பாட்டமான நடத்தையில் சற்று பலவீனமாக உணர்பவர்களும் மயங்குகிறார்கள்.

    பிறருக்கு அஞ்சியே வாழ்க்கை நடத்தும்போது நம்மை கட்டுப்படுத்தும் உரிமையைப் பிறருக்கு அளித்துவிடுகிறோம். நாளடைவில் வாழ்க்கை இயந்திரத்தனமாக ஆகிவிடுகிறது.

    கதை

    `பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நட. நீ நல்ல பெண்!’ என்ற அறிவுரையைக் கேட்டிருக்கிறோம்.

    இம்மாதிரியாக, `நல்ல பெண்’ என்று பெயர் வாங்கினாள் கமலா.

    வயதில் மூத்தவர்கள் தகாத முறையில் பழகியபோதும், அதைத் தப்பாக எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை அப்பேதைக்கு.

    இருபது வயதில்தான் விவரம் புரிந்தது. சுயவெறுப்பு அவள் மனநிலையைப் பாதித்தது.

    உற்ற நண்பர்கள் என்று கருதுகிறவர்களில் எவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே கடைப்பிடிப்பதுகூட வேண்டாத விளைவில்தான் கொண்டுவிடும்.

    கதை

    முப்பது வயதுக்குள் நிறைய முடி உதிர்கிறதே என்ற கவலை அந்த மனிதருக்கு. நண்பர்கள் ஆளுக்கொரு எண்ணையைப் பரிந்துரைத்தார்கள். எல்லாவற்றையும் வாங்கி, ஒன்று மாற்றி ஒன்றாக அடுத்தடுத்த நாட்களில் உபயோகித்துப் பார்த்தார். நிலைமை இன்னும் மோசமானதுதான் கண்ட பலன்.

    தனித்தன்மை

    மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கைப் பின்னணி, சுபாவம் ஆகியவைகளைப் பொறுத்து சில திறமைகள் அமைகின்றன. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பினும், ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்கும்.

    பல பெற்றோர் இதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில், அவர்களுடைய நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றப் பிறந்தவர்கள் பிள்ளைகள் என்ற எண்ணம் அவர்களுக்கு.

    கதை

    `என் மூன்று குழந்தைகளும் மருத்துவப் படிப்புதான் படிக்க வேண்டும்!’ என்ற கனவுடன், தன் எண்ணத்தில் வெற்றியும் அடைந்தாள் ஒரு தாய். தான் அதிகம் படிக்காத குறை அவளுக்கு.

    மகளுக்கு இசையில் ஆர்வம். மகனுக்கோ சித்திரம் வரைதல்தான் உயிர் மூச்சு.

    `இதனாலெல்லாம் நிறைய சம்பாதிக்க முடியாது!’ என்று தாய் அவர்களது ஆசைக்கனவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டாள். பெற்ற தாயின் ஆசையை நிறைவேற்ற தாம் விரும்பியவற்றை மறக்கத் துணிந்தார்கள் குழந்தைகள்.

    தாய்க்குச் சமூகத்தில் மதிப்பு கிடைத்தது. அவள் பெற்ற பிள்ளைகளுக்கோ முகத்தில் சிரிப்பே மறைந்தது. வாழ்க்கை பாரமாகியது. இழந்ததை பணத்தால் ஈடு செய்ய முடியவில்லை.

    `ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகப் படுகிறது!’ என்கிறாள் மகள்.

    `யாருக்குமே வியாதி வரமாட்டேங்குது! நான் எப்படிப் பிழைக்கிறது!’ என்று அரற்றுகிறான் மகன்.

    என்னைப்போல் நட!

    `நான் திறமைசாலியாக இருக்கிறேன். பிறர் என்னைப் பெரிதும் மதிக்கிறார்கள். எல்லாரும் என்னைப்போல்தான் நடக்க வேண்டும்!’ என்று முழங்குபவர்களும் நம் தனித்தன்மையைப் பறிக்க நினைப்பவர்கள்.

    என்னதான் வாழ்வில் வெற்றி பெற்றவராக இருந்தாலும், அவரைப்போல பிறரையும் மாற்ற நினைப்பது மடமை. நம் எதிர்பார்ப்பு, திறமையில் வித்தியாசம் இருக்காதா!

    நாம் நாமாகத்தான் இருக்க முடியும். நமக்குச் சரியென்று பட்டதை பிறர் `தவறு’ என்று பழித்தாற்போல் அது தவறாகிவிடாது.

    யாரைத்தான் நம்புவது?

    `ஏன் இப்படி இருக்கிறாய்!’

    அலுப்புடனும், ஆச்சரியத்துடனும் பலரும் என்னைக் கேட்டிருகிறார்கள்.

    ஒரு மேற்பயிற்சிக்காக மலைப்பகுதியில் நாட்களைக் கழிக்க நேர்ந்தது. ரம்மியமான இடம். பகல் பூராவும் விரிவுரையாளர்களின் குரல். எனக்கு அமைதி வேண்டியிருந்தது. அங்கு போய், ஓய்வான தருணங்களில் பிறரைப்பற்றிய வேண்டாத வம்பு பேசுவார்களா!

    ஆனால், என்னைத் தவிர வேறு யாரும் அப்படி நினைத்ததாகத் தெரியவில்லை.

    நான் புதர் மறைவில் அமர்ந்து, பசுமைச் சூழலை ரசித்தபடி உரக்கப் பாடிக்கொண்டிருந்தேன்.

    “ஏன் எப்போதும் தனியாகவே இருக்கிறாய்?” என்று ரங்கன் என்ற ஒரு ஆசிரியர் என்னைக் கேட்டார்.

    நான் நானாக இருக்கக் கூடாதா?

    “எனக்குப் பிடிக்கும்!” என்றுதான் பதிலளிக்க முடிந்தது என்னால்.

    குழப்பத்துடன் என்னை நோக்கினார் கேட்டவர். அவரைப் போன்றவர்களுக்கோ, தம்மையொத்த பலருடன் சேர்ந்திருப்பதுதான் பலம்.

    இப்படியே சில நாட்கள் தொடர்ந்தன.

    “எப்போதும் பிறருடனேயே பேசிக்கொண்டு இருந்தால், எப்படி சிந்திக்க முடியுமாம்?” என்று ஒரு சீன நண்பர் என்னிடம் ஆற்றாமையுடன் கேட்டார். அவர் தற்காப்புக் கலையைப் போதிப்பவர்.

    நான் எதுவும் கூறாமலேயே, என்னைப்பற்றிய வம்புப் பேச்சால் மனம் தளர்ந்துவிடுவேனோ என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார்!

    நம்மை நாம் இருப்பதுபோலவே குறை நிறைகளுடன் ஏற்பவர்தான் உண்மையான நண்பர். இப்படிப்பட்டவரிடம் எதை வேண்டுமானாலும் கூறலாம். நமது அடிப்படைக் குணங்களையும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டிருக்க வேண்டாம்.

    `நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே! இவள் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறாள்?’ என்று பிறருடன் எப்போதும் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, போட்டி மனப்பான்மையுடன் இருப்பவருக்கு நிம்மதியோ, மகிழ்ச்சியோ ஏது!

    பிறர் ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று எப்போதும் பயந்து, நமக்கென்று ஒரு மனம் இருப்பதையே மறந்தவர்கள்போல் நடப்பது நாம் நாமாக இருக்க வழி செய்யாது.

    தனித்தன்மையுடன் நடப்பவர்களுக்கு ஏதாவது ஒரு காலத்தில் பிறரது மதிப்பு கிட்டலாம்.

    இல்லாவிட்டாலும், வாழ்க்கை நிறைவாக இருக்கும். சிரிப்பும் தொடர்ந்து வரும்.

    தொடருவோம்

    Share