என்ன வளமில்லை இந்தத் திருநாட்டில்? …
பவள சங்கரி
தலையங்கம்
வாஷிங்டனில் உள்ள உலக உணவு ஆய்வறிக்கை 2017 பட்டியலின்படி, பசியோடு வாழும் 119 நாடுகளில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது என்று வெளியிட்டுள்ளது. 2014 இல் 45வது இடத்தில் இருந்த இந்தியா இன்று 100வது இடத்தில் உள்ளது. என்ன கொடுமை இது ஆண்டவா .. இதில் ஆச்சரியப்படவேண்டிய செய்தி ஈராக் (78வது) பங்களாதேஷ் (88) வட கொரியா (93) போன்ற நாடுகளைவிட மோசமான நிலையில் உள்ளது நம் இந்தியா என்பது மிக வேதனைக்குரிய செய்தி. இந்த 119 நாடுகளில் 50% நாடுகள் அபாயகரமான நிலையில் கொடுமையான பசிப்பிணியால் வாடுகிற நாடாம். இதிலும் இந்தியா மிக மோசமான இடத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 19 கோடி மக்கள் அன்றாடம் பசியால் வாடுகிறார்கள். இதில் நாள் ஒன்றுக்கு 3,000 குழந்தைகள் பட்டினி, சத்துணவு இன்மையால் இறக்கின்றனர். உலகளவில் இறக்கக்கூடிய குழந்தைகளில் 24% குழந்தைகள் இந்தியக் குழந்தைகளாம். இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 275.68 மில்லியன் டன் (2016 – 2017) இந்த அளவிற்கு உணவு தானியங்களின் விளைச்சல் இருந்தும் பசியால் இறக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது மிக வேதனையான விசயம். இந்தியாவில் தனி நபர் வருமானம் ஒரு இலட்சத்து மூவாயிரம் ரூபாயாக இருந்தும், அனைத்து வளங்களும் நிரம்பியிருந்தும் மக்கள் பசியால் வாடிக்கிடப்பதற்கு மூல காரணம் என்ன என்று தீவிரமாக அனைவரும் யோசிக்க வேண்டிய காலகட்டம் இது!