Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171209 -Goverdhan -icam watercolou -wm -24x32cms

    ”சுண்டு விரல்கொண்டு , சோமழை காத்திட
    ஒண்டுக் குடித்தனமாய் ஓர்பசு, -ரெண்டு
    கரங்களில் கண்ணயர, காப்பினைக் கண்ணன்
    வரம்தரும் கைவழி விஷ்ணு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171208 -Krishna and Rukmani -lr-watercolour -24x32cms

    பாங்கி முதற்கொண்டு பாமாக்கள் ருக்மணிகள்
    தாங்கிய திண்தோள் தாமோதர், -சாங்கிய
    யோகமகள் பாதாதி கேசமதை நீயுரைக்க
    வாகனமாம் புள்ளேறி வா….

    பாமாவின் பாய்ச்சலுக்கு ருக்மணியின் கூச்சலுக்கு
    ஆமாமாம் போட்டசாமி ஐடியாவாய் -காமாய்
    கவுண்ட்செய்து பார்க்க கிடைத்தது கல்கி
    டவுண்-டு-எர்த் மீண்டும் பிறப்பு….கிரேசி மோகன்….!

     

    ருக்மணியின் காதல் கடிதம் கண்ணனுக்கு….!
    ———————————————————————————–

    ‘’கண்ணனுக்கு காதல் கடிதம் எழுதினாள்
    உன்னையே நம்பும் உருப்பிணி(ருக்மணி), –அன்னையவள்
    அம்பாளைச் சுற்றிடுவேன், ஆலயத்துள் காத்திருப்பேன்
    நம்பாள் உனக்காக நான்’’…..கிரேசி மோகன்….!

     

    Share
  • தூது இலக்கியங்களில் அமைந்துள்ள பாவகைகள்

    பவளராணி.ப

    ஆய்வாளர்

    தமிழ்த்துறை

    கேரளப்பல்கலைக்கழகம்

    காரியவட்ட வளாகம்

    திருவனந்தபுரம்

    இலக்கியத்தில் அமைந்துள்ள மொழி நடையை அறிய துணை செய்யும் கருவியே யாப்பு ஆகும். யாப்பு வகைகளில் ஒன்றுதான் பா. இப்பா நான்கு வகைப்படும் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா. பா செய்யுளின் ஓசை இனிமையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.  இப்பாக்களின் அமைப்பு நிலையும், ஓசை நிலையும் யாப்பு நெறிக்கு இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியரும், “பா என்பது சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லுந் தெரியாமற் பாட மோதுங்கால் அவன் செய்யுளை விகற்பத்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை” (தொ:பே:ப:114-115) என்று பாவிற்கு ஓசை இன்றியமையாதது என்பதைத் தெளிவாக விளக்குவதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

    தமிழ் தூது இலக்கியங்களில் யாப்பு

    தமிழ் இலக்கிய வகைகள் காலச்சூழலுக்கும் கருத்து விளக்கத்திற்கும், பாடுபொருளுக்கும் ஏற்ப சில மாற்றங்கள் அடைந்துள்ளன. கலிவெண்பா ஒன்றே தூது இலக்கியங்களில் மிகப் பழங்காலம் தொட்டு கலிவெண்பா புலப்பட்டு வருகின்றது. எனினும் பிற்காலத்தில் நிலைமண்டில ஆசிரியம், ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கட்டளைக்கலித் துறை, கொச்சகக்கலி, போன்ற பிற வகைகளிலும் தூது இலக்கியங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன என்றே கூறலாம். இவை தூது இலக்கியத்தின் வளர்சியைக் காண்பிக்கின்றன. தொல்காப்பியர் 26 நூற்பாக்களில் கலிப்பா பற்றியும் அதன் வகைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் கலிப்பாவை ஒத்தாலிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ் கலி என்று 4 வகைகளாகப் பாகுபாடு செய்துள்ளார்.

     

     

    பாட்டியல் நூல்களில் கலிவெண்பா

         பாட்டியல் என்பது இயல்பைக் கூறும் நூலாகும். பாட்டியல் செய்யுளியலிலிருந்து மாறுபட்டு அமைவதாகும். பொதுவாக எல்லாப் பாட்டியல் நூல்களும் சிற்றிலக்கியம், காப்பியம், தொகைகள் போன்ற இலக்கியங்களுக்கு இலக்கணம் வகுத்துக் கூறுகின்றன. அங்ஙனம் வகுத்துக் கூறப்பட்ட பிரபந்த மரபியலில்

    “இருதிணையுடன் அமை அயலை உரைத்துத்

    தூது செல விடுவது தூது, இவை“கலிவெண்

    பாவினால் விரித்து பகர்வது மரபே”          (பி.ம-15)

    என்றும் அடையாளப் படுத்துகின்றனர்.

    இலக்கண விளக்கம்

    “பயில் தரும் கலிவெண் பாவினாலே

    உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்

    சந்தியின் விடுத்தல் முந்தூது எனப்

    பாட்டியல் புலவர் நாட்டினர் தெளிந்தே” (874)

    முத்து வீரியம்

    “கலிவெண் பாவால் அமைவது தூது” (126)

    போன்ற நூல்களும் இவ்விலக்கணத்தையே கூறுகின்றன.

    கலிவெண்பா

         தூது இலக்கியங்கள் அனைத்தும் கலிவெண்பா என்னும் யாப்பு வகையிலேயே அமைதல் வேண்டும் என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணமாகும். தலைவன் அல்லது தலைவியின் மன உணர்வுகளை முறையாக வெளிப்படுத்துவதற்குப் பிற பாக்களை விடக் கலி வெண்பாவே  ஏற்றது என இலக்கிய ஆசிரியர்கள் கருதியிருக்கலாம். தொல்காப்பியத்தில் கலிப்பா வகைகளுள் ஒன்றாகக் கலி வெண்பாவைச் சுட்டுகிறார். இதை

                “ஒத்தாழிசைக் கலி கலிவெண் பாட்டே

                            கொச்சகம் உறழொடு கலிநால் வகைத்தே (தொல்.பொரு.நூ.435)

     

    என்ற நூற்பா உணத்துகிறது. தொல்காப்பியர் கலிவெண்பாவை வெள்ளடியியலால் திரிபின்றி முடிய வேண்டும் என வரையறைச் செய்கிறார்.

    தூது இலக்கியங்களில் பயின்று வரும் கலிவெண்பாவின் இரண்டாமடியின் இறுதியில் அமையும் சொல், தனிசொல் பெற்று வரும்.

                            “சீரில்நிலை நில்லாது திண்டாடும் பல்கருவி

                வாரில் அகப்பட்டு மயங்கினேன் – தேருங்கால்”  (நெஞ் – 46)

     

     

    “வந்து நெருங்க மணவைநகர் வேங்கடமால்

                சிந்தை மகிழ்ந் தஞ்சாந் திருநாளில் – தந்ததோர்”  (மே – 121)

                “பஞ்சிபடாநூலே பலர் நெருடாப் பாவே கீண்டு

                எஞ்சி அழுக்கு ஏறா இயல் கலையே – விஞ்சுநிறம்”  (தமி – 17)

    மேல் கொடுத்துள்ள மூன்று நூற்பாக்களும் இவ்வமைப்பை பெற்றுவந்துள்ளன. முதலடியின் முதல் சீருக்கு ஏற்பத் தனிசொல்லில் விகற்பம் அமைந்துள்ளது. ஈரடிதோறும் எதுகை ஒத்தமைந்துள்ளது. இம்முறையில் ஈரடிதோறும் எதுகை ஒத்தமைவதால் ஈரடிகளும் “கண்ணி” என்னும் பெயரால் வழங்கப்படுகின்றன. இத்தகைய அமைப்பு முறை தூது இலக்கியங்களில் பயின்று வரும் கலிவெண்பாவிற்கு உரிய அமைப்பாகிறது. தூது இலக்கியங்கள் முழுமையும் இத்தகைய கலிவெண்பா அமைப்புடையனவாகவே உள்ளன. இக்கலி வெண்பாவை பின் தோன்றிய யாப்பருங்கலம், மூன்று வகையாக்கி அவற்றுள் ஒன்றை வெண்கலிப்பா என்ற பெயரால் கலிவெண்பாவைக் கூறுகின்றது.

                “ஒத்தாழிசைக் கலி வெண்கலிப் பாவே

                கொச்சகக் கலியோடு கலிமூன் றாகும்” (யா.க.நூ. 79)

     

    கலிவெண்பாட்டு என்ற பெயரினை நோக்குகையில், இவை கலிப்பாவிற்கும் வெண்பாவிற்கும் உரியவை என்று எண்ணத்தோன்றும். எனினும் தொல்காப்பியர் இதனைக் கலிப்பாவின் ஒருவகையாகவே குறிப்பிட்டுள்ளார். இதன் பாடல் வரி வருமாறு

    “ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலால்

                திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டே”  (தொ.பொ.நூ.147)

    கலிவெண்பாட்டு முடியும் வரை ஒரு பொருள் பற்றியே வருதல் வேண்டும், வெள்ளடி இயலான் வருதல் வேண்டும், திரிபின்றி முடிதல் வேண்டும் என்ற மூன்று கருத்துக்களை வலியுறுத்துகிறது.

             இளம்பூரணர் 147வது நூற்பாவில் கலிவெண்பாட்டினை இருவகையாகப் பாகுபடுத்தியுள்ளார். தளை அமைப்பை ஒட்டியே கலிவெண்பா, வெண்டளையினால் வந்து ஈற்றடி முச்சீரினால் வருவன ஒருவகை, அயல் தளைகளும் விரவி வந்து ஈற்றடி வெண்பாவைப்போல முச்சீரினால் முடிவன மற்றொரு வகை மேற் குறிப்பிட்ட “வெள்ளடி இயலான்” என்ற வரியினால் இவ்வாறு இருவகையாக கலிவெண்பாட்டினை பாகுபடுத்திக் காட்டியுள்ளார். மேலும் கலிவெண்பாட்டு, வெண்கலிப்பாட்டும் ஒன்றாகும் என்று இயம்பியுள்ளார்.

        காரிகை உரையாசிரியர்  ஈற்றடி அமைப்பு முறை மட்டுமின்றி இலக்கண வகையாலும் இப்பாவகைகளிடையே வேறுபாடு உண்டு என்பர். வெண்கலிப்பா என்பது கலித்தளையும் கலியிடையும் தழுவி ஈற்றடி முச்சீராக வருவன என்றும், வெண்டளை பெற்று வெள்ளோசை தழுவி ஈற்றடி முச்சீராக வருவது கலிவெண்பா என்றும் காரிகை உரையாசிரியர் கூறுவார்.

    நூலின் தொடக்கம்

        நூலின் தொடக்கத்தில் முதற் செய்யுளில் அமையும் முதல் மொழி மங்கலச் சொல்லாக இருக்க வேண்டும் என்றும், அத்தகையச் சொற்கள் முப்பத்தொன்பது என்றும் பாட்டியல் நூல்கள் பட்டியல் இடுகின்றன. முதன் முதலில் மங்கலம் பற்றி கூறிய நூல் பன்னிருபாட்டியல் என்று கூறப்படுகிறது.( யாப்பியல் – அன்னி தாமசு). வாழ்க்கையில் மங்களத்தை எதிர்பார்த்த, வரவேற்ற மனிதமனம், பேச்சு வழக்கிலும் கூட மங்களத்தைப் புகுத்தியது. லெக்சிகனில் மங்கலச் சொல் என்பது செய்யுளின் முதலில் வரக்கூடிய நன் மொழி என விளக்கப்படுகின்றது. பாப்பா பாட்டியலில் மங்கலச் சொற்களாக  சீர், எழுத்து, பொன், பூ, திரு, திங்கள், மணி, நீர், சொல், கங்கை, ஆரணம், குஞ்சரம், உலகு, பார், தேர், முந்நீர், கடல், கார், நேமி, ஆழி, வேலை, அணி, சுதை, பூவை, அமுதம், திகிரி, மதி, தரு, பிறை, பங்கசை, பதுமை போன்றவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் அடிப்ப்படையில் தூது இலக்கியங்களில் முதல் இலக்கியமான நெஞ்சுவிடு தூதில் “பூ மேவும்” என்ற மங்கல மொழி அமைந்துள்ளது. மேகம் விடு தூதில் “பொன்” என்ற மங்கல சொல்லும், தமிழ் விடு தூதில் “சீர்” என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளது. பூ மேவும், பொன், சீர் போன்ற சொற்கள் எல்லாம் மங்கலச் சொற்கள் என பாட்டியல் நூல் சுட்டுகின்றது.

    நூலின் இறுதி  

     

        வெள்ளடியினால் திரிபின்றி முடிவது கலிவெண்பாட்டின் இலக்கணம், எனவே நூலின் இறுதி முச்சீராய் நாள், மலர், காசு, பிறப்பு, என்னும் வாய்ப்பாட்டின் அடிப்படையில் முடிதல் வேண்டும் என்பதாகும். கலிவெண்பா யாப்பில் அமைந்த முன்று தூது நூல்களில் இரண்டு தூது நூற்களின் இறுதி “மறவாதே தூது சொல்லி வா” (தமிழ் விடு தூது), “மாலைதர நீவாங்கி வா“ (மேகம்விடு தூது,) என்று நாள் (வா,வா) என்னும் வாய்ப்பாட்டைக் கொண்டு முடிகின்றது. நெஞ்சுவிடு தூது “பிறப்பு” (நினைந்து) என்னும் யாப்பைக் கொண்டு முடிகின்றது.

    கட்டளைக் கலித்துறையில் தோன்றிய நூல்கள்

         கட்டளைக் கலித்துறையில் தோன்றிய முதல் இலக்கணம் யாப்பருங்கலக்காரிகை. பின்னர் தமிழ் இலக்கியத்தில் மிகுதியும் பழக்கம் பெற்ற கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பு வகை தூது இலக்கியம் உருவாக ஒரு கருவியாக அமைந்தது. தொடக்ககால தூது இலக்கியங்கள் அதிகமும் கலிவெண்பாவால் தோன்றியவையாகும். இவை 19-20 ஆம் நூற்றாண்டுகளில் சில மாற்றங்கள் அடைகின்றன. அல்லி மரைக்காயர் எழுதிய வண்டுவிடு தூது, அன்னம் விடு தூது, மாரிவாயில் ஆகியவை கட்டளைக் கலித்துறை  யாப்பில் அமைந்த தூது நூற்களாகும். கட்டளை என்பது எழுத்து எண்ணும் மரபைச் சுட்டுவது. இதனை தொல்காப்பியர் நாற்சீர் கொண்ட செய்யுளடிகளில் பயின்று வரும் என்கிறார். சான்றாக

               சீர்திகழ் மாரி வாயிலாமிதனைச்

                      செந்தமிழ்த் தாய்நுதற் கணிந்தோன்

                நேர்மைசே ருண்மை விழைவழக் கறிஞர்

                      நிறைதமிழ் ஆங்கில முணர்ந்தே

    ………………………………………………………………………….(மாரி)

     இது போன்று பழனியாண்டவர் நெஞ்சுவிடு தூது – கீர்த்தனை என்ற இசைப்பாவாலும், தத்தைவிடு தூது – அம்மானை அமைப்பாலும் அமைந்துள்ளது என ந.வீ. செயராமன் அவர்கள் தூது இலக்கியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    முடிவுரை

          இலக்கணங்கள் இலக்கியங்களை அடிப்படையாக்கி எழுந்தவையாகையால் காலந்தோறுமுள்ள இலக்கிய மாற்றம் இலக்கணங்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் சில தூது இலக்கியங்கள் மாற்றம் அடைந்துள்ளமையை இங்கு அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு காலத்திலும் புதிய புதிய இலக்கியங்கள் தோன்றுகின்றன. அதன் அடிப்படையில் இலக்கணங்களும் வளர்ந்து வருகின்றன. பாட்டியல் நூல்கள் கூற்றுப்படி தூது இலக்கியங்கள் தொடக்கக் காலங்களில் கலிவெண்பாவினால் தோற்றம் பெற்றுள்ளன. இதுவே பிற்காலத்தில்  கட்டளைக் கலித்துறை, அம்மானை முறை, கீர்த்தனப் பாடல் என வேறுபட்ட யாப்பு அமைப்பில் வளர்ந்துள்ளது என்பது இக்கட்டுரை வாயிலாக அறியப்படுகிறது.

    துணைநூற் பட்டியல்

     

    தூது இலக்கியங்கள்   – ந.வீ. செயராமன்

    தமிழ் தூது இலக்கியங்கள் – ஈஸ்வரன்

    தமிழ் தூது இலக்கியத்தின் தோற்றம் – அ. நடராசன்

    நெஞ்சு விடு தூது – உமாபதிசிவாச்சாரியர்

    மணவை திருவேங்கடமுடையான் மேக விடு தூது

    மாரிவாயில்                     – சோமசுந்தர பாரதியார்

    வண்டுவிடு தூது,

    அன்னம் விடு தூது,             – அல்லி மரைக்காயர்

    மதுரை சொக்கநாதர் தமிழ் விடு தூது

    சங்க இலக்கிய யாப்பு            – பிச்சை.அ

    யாப்பியல்                       – அன்னி தோமஸ்

    புறநானூற்றில் யாப்பு             – அ. சதீஷ்

    Share
  • தமிழ் மலையாள ஆக்கப்பெயர்கள்

    முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி.

    உதவிப்பேராசிரியர்

    கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம்

    திருவனந்தபுரம்

     

                    பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப் பெயர்கள் எனப்படும்.  தமிழ் மொழியில் ஏராளமான புதிய சொற்கள் இவ்வாறே ஆக்கிக் கொள்ளப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கண நூல்கள் வெளிப்படையாக ஆக்கப்பெயர்களை உருவாக்கும் முறையைக் கூறவில்லை.  எனினும் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழியம் பெயராக்க விகுதிகளை எடுத்தியம்புகின்றன.  இக்கட்டுரை தமிழ் இலக்கண நூல்கள் கூறும் ஆக்கப்பெயர்களை மலையாள இலக்கண நூலான கேரள பாணினீயத்துடன் ஒப்பிட்டு நோக்குகின்றது.

    ஆக்கப்பெயர் – விளக்கம்

     

                    பொதுவாக பெயர் அல்லது வினைச்சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் ஆக்கப் பெயர்கள் (Derivative) எனப்படும். தொல்காப்பியத்தில் ஆக்கப்பெயர்கள் பற்றிய விளக்கம் காணப்படவில்லை. எனினும் வடமொழிமரபைப் பின்பற்றி இடைக்காலத்தில் தோன்றிய வீரசோழியமும் பிரயோகவிவேகமும் ஆக்கப்பெயர்களை விளக்குகின்றன.  இவ்விலக்கண நூல்கள் இதனைத் தத்திதன் என்று அழைக்கின்றன. தத்திதம் என்ற சொல்லுக்கு மலையாளம் ஆங்கில மொழியகராதி Derivative,  Nominal Derivative ஆகிய பொருள்களைச் சுட்டுகின்றது

    தத்திதன் என்பது வடமொழி வழக்கு. வீரசோழியமும் கேரள பாணினீயமும்  தத்திதாந்த பதத்திற்கு (ஆக்கப்பெயர்களுக்கு) இலக்கணம் கூறவில்லை. பிரயோகவிவேகம் இதற்கு,

    துன்னும் தொடர்மொழி எல்லாம் ஒழித்து முன்சொல்தனைப் போய்

    மன்னும் பிரத்திய்யமே தத்திதாந்தம் – (பிவி.29)”

    என்று இலக்கணம் கூறுகின்றது. அதாவது முன்சொல் தன்னைத் தொடர்ந்து வரும் ஏனைய சொற்களை நீக்கி விகுதிபெற்றுத் அத்தொடர்மொழியின் பொருளை உணர்த்தும் சொல்லே தத்திதாந்தம் அல்லது ஆக்கப்பெயராகும்.

    எ.டு

                    வலையால் முயன்று உண்பவன் -> வலையன்

    இத்தொடரில் ’வலை’ என்னும் சொல் நிற்க ‘ஆல் முயன்று உண்ணும்’ என்ற தொடர்மொழி கெட்டு வலை + அன்  எனச்சேர்ந்து வலையன் என்று ஆகிறது.

    பெயராக்கவிகுதிகள் / ஆக்கப்பெயர் விகுதிகள்

                    வீரசோழியர் ஆக்கப்பெயருக்குரிய பொதுவான விகுதிகளாக அன் முதலான பதினேழு விகுதிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்(வீ.சோ.52). பிரயோக விவேகமும் கேரள பாணினீயமும் ஆக்கப்பெயர்களின் வகைகளைக் கூறி அவற்றின் கீழ் பெயராக்க விகுதிகளைச் சுட்டுகின்றன.

    ஆக்கப்பெயர் – வகைகள்

    ஆக்கப்பெயர்களின்  வகைகளை வீரசோழியம் கூறவில்லை.  ஆனால் விகுதிகளை ஆண்பாற் பெயரில் வரும் விகுதி, பெண்பாற் பெயரில் வரும் விகுதி, பொருளை விளக்கும் விகுதி என மூன்றாகப் பாகுபடுத்தியுள்ளது. பிரயோகவிவேகம் தத்திதனை (ஆக்கப்பெயர்களை) மூன்றாக வகைப்படுத்தியுள்ளது. வீரசோழிய ஆசிரியர் பொதுப்படையாக விளக்கிச் சென்ற  காரிகைகளிலே கேரள பாணினீய ஆசிரியர் விளக்கும் தத்திதன் வகைகள் இடம்பெற்றுள்ளன.  கேரள பாணினீயம் வடமொழியின் அடிப்படையில் பெயர், பண்பு, சுட்டு முதலான சொற்களை அடியாகக் கொண்டு பிறக்கும் சொற்களைத் ’தத்திதம்’ என்றும் வினைச் சொற்களினின்று தோன்றும் பெயர்ச் சொற்களைக் ’கிருத்து ’என்றும் குறிப்பிடுகிறது. (கே.பா பக் 195).

    எ.டு

    தத்திதங்கள்

    புத்தியுள்ளவன்                                                        புத்திமான்

    வ்யாகரணமறியுந்நவன்                  வையாகரணன்

     

    கிருத்துகள்

    தர்சிக்குந்நவன்                      த்ருஷ்டாவு

    தர்சிக்குந்ந க்ரிய                   த்ருஷ்டி

                    வடமொழியிலுள்ள தத்திதன், கிருத்து ஆகியவை மலையாள மொழியில் காணப்படவில்லை. இருப்பினும் மலையாள மொழியில் காணப்படும் இத்தகைய ஆக்கப்பெயர்களை நான்காக வகைப்படுத்தி,  ஆக்கப்பெயர்களின் உருவாக்கத்திற்குப் பெயர், வினை, பண்பு, எண், சுட்டுப்பெயர் முதலானவற்றிற்குச் சேர்க்கப்பட வேண்டிய விகுதிகளை விளக்கிக் கூறுகிறர் ஏ.ஆர். ராஜராஜவர்மா. அடிப்படைத் தமிழிலக்கணம் என்னும் நூலில் எம்.ஏ. நூஃமான் ”பெரும்பாலான ஆக்கப் பெயர்கள் பெயர் அல்லது வினைச்சொற்களில் இருந்தே ஆக்கப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார். எனினும் அவர் தரும் எடுத்துக்காட்டுகளுள் பெரும்பாலானவை பெயர், பண்பு, வினை போன்ற சொற்களில் இருந்து ஆக்கப்படுவதைக் காணலாம். கீழ்க்காணும் அட்டவணை பிரயோகவிவேகமும் கேரளபாணினீயமும் கூறும் பெயராக்க விகுதிகளின் வகைகளைச் சுட்டுகின்றது.

    வரி.எண் பிரயோகவிவேகம் கேரளபாணினீயம்
    1. சாமானிய தத்திதன் நாமநிர்ம்மாயித தத்திதம்
    2. அவ்விய தத்திதன் பூரணிதத்திதம்
    3. பாவ தத்தித்டன் தன்மாத்திரத் தத்திதம்
    4. தத்துவதத்திதம்

     

     

    சாமானிய தத்திதன் / நாமநிர்ம்மாயித தத்திதம்

     

                     பொதுப்பெயரை அடுத்து வரும் விகுதிகளைக் குறிப்பதே இத்தத்திதம். இதனைப் பிரயோகவிவேகம் சாமானிய தத்திதம் என்றும் கேரளபாணினீயம் தன்மாத்திரத் தத்திதம் என்றும் அழைக்கின்றன. வீரசோழியம் இவ்வாறு பெயரிட்டு வகைப்படுத்தவில்லையாயினும் சில பொதுவான விகுதிகளைச் சுட்டுகின்றன.

    எ.டு

    அன் – கெளரவன் – குமரமரபினன்

    இயன் – ஆதித்தியன் – அதிதிமகன்

    ஈனன் -குலீன்ன் – குலத்தினுள் விழுமியோன்

    இகன்–தெளவாரிகன் – துவாரத்தில் நிற்பான்

    ஏயன் – காங்கேயன் – கங்கையின் மகன்

    வான் – குணவான் – குணத்தை நன்றாக உடையவன்

    வதி – குணவதி – குணத்தை நன்றாக உடையவள்

     

     

    அவ்விய தத்திதன் / பூரணிதத்திதம்

                    விகுதி பெற்று வரும் இடைச் சொற்களையே அவ்வியதத்திதன் என்கிறது பிரயோகவிவேகம்.  அதாவது சுட்டுப்பெயருள் பிளந்து நில்லாத இடப்பெயர்களும், எண் முதலியவை ஏழாம் வேற்றுமைப் பொருளோடு நின்றனவும் ஆகிய ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொற்களை அவ்விய தத்திதன் என்கிறது.

    எ.டு

    ஒருவயின், இருவயின் –எண்

    அவ்வயின், எவ்வயின் – சுட்டுப்பெயர் பிளந்து நில்லாத இடப்பெயர்

     வீரசோழியம் எண்ணுப்பெயருடன் வரும் தத்திதனை விளக்கவில்லை.  எண்ணுப்பெயருடன் ’ஆம்’ என்னும் விகுதி இணைந்த வடிவம் தமிழ் மொழியில் சங்கமருவிய காலத்திலிருந்தே காணப்படுகிறது (இரண்டாம் சந்தி  – மணிமே 30 -150) . மேலும்’’ஆவது’ என்ற விகுதி சேர்ந்த எண்ணுப்பெயர் வடிவம் (இரண்டாவது, மூன்றாவது) இன்றைய தமிழில் பயின்று வருகின்றன. கேரள பாணினீய ஆசிரியர் பூரணித் தத்திதத்தை,

                                                    ஸங்க்யா நாமத்தில்ல மென்னு

                                                    வரும் பூரணிதத்திதம் (கே.பா .94)

    என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார்.   அதாவது, எண்ணுப் பெயர்களுடன் ‘ ஆம்’  என்னும் விகுதி சேரும்போது உருவாகும் பெயர்ச் சொற்களே பூரணித் தத்திதம் என்று அழைக்கப்படுகிறது.

    எ.டு

                                    ஒன்னு + ஆம் – ஒன்னாம்,

    ரண்டு + ஆம் – ரண்டாம்,

    நூறு + ஆம் – நூறாம்

     

    பாவ தத்திதன் / தன்மாத்திரத் தத்திதம்

     

    இது பண்புப்பெயர்கள் ஏற்கும் விகுதிகளைப் பற்றியதாகும்.  வலி, நெடு என்னும் குணத்தின் பின் மை, அம், பு, து, வு, கம் வல், அளவு, அதி என்னும் விகுதிகள் வரும் என்று  வீரசோழியம் கூறியுள்ளது (வீ.சோ.55). இக்காரிகைக்கு உரையெழுதும் பெருந்தேவனார் குணமாவது நெடு, முறு, கரு, பசு, வெளு, கெடு, இள, தண், வெம், அரி, எளி, பெரு, செறு, பரு, நேர்.மலி,  என இவை முதலாக வரும் என்று உரையெழுதியுள்ளார். பண்பின் முதல் நிலையோடும் ஆண், பெண் முதலாகிய பெயரோடும் மகர, ஐகாரமும் சிறுபான்மை உகரமும் பொருந்திவருவது பாவதத்திதன் என்று பிரயோகவிவேகம் கூறுகிறது. கேரள பாணினீயம் பல பண்புகளின் இருப்பிடமாகிய ஒரு பொருளின் ஒரு தனிப்பண்பை மட்டும் சிறப்பித்துக் கூறுவது தன்மாத்திரத் தத்திதம் என விளக்குகிறது.

    எ.டு

    செம்மை, சிறுமை, கறுமை,செறும, வெண்ம, புதும

     

    தத்துவத் தத்திதம்

          வீரசோழியம் தத்துவத் தத்திதனைத் தனியாகப் பெயரிட்டு விளக்கவில்லை எனினும்  தத்திதன்கள் பயின்று வரும் பதினாறு இடங்களை 53, 54 அம் காரிகைகளில் விளக்கிக் கூறுகின்றது. அவையாவன,  உண்ணும் இதனால் (வலையன்), உரைக்கும் இதனை (வேதியன் – வேதத்தினை உரைப்பவன்), உடையான் இது ( கொந்தத்தை உடையான் –கொந்தவன்), பண்ணும் இதனை (மருந்தைப் பண்ணுவான் – மருத்துவன்), பயிலும் இதனை (கூத்தன்), பயன் கொள்ளுமிதில் (வில்லி), எண்ணும் இதனை (சோதிடன்), இதனுக்கு நாயகன் (சிலம்பன்) ஈங்கு இருக்கும் (பட்டினவன்), நண்ணும் இதனை (பாண்டியன்), இதை ஒக்கும் (பொன்னன்), இங்குளன் (அகத்தன்), மகன் இவனுக்கு (ஆதித்யன்), மகன் இவளுக்கு (காங்கேயன்) இந்த வர்க்கத்தினன் (செம்பியன்), இவனைத் தெய்வமாகக் கொண்டவன் (பெளத்தன்). இன்னும் இவைபோன்ற பிறபொருளிலும் வரும் என்றும் வீரசோழியம் குறிப்பிடுகின்றது. பிரயோகவிவேகம் சாமானிய தத்திதன் வகைகளுள் இதனை அடக்கிக் கூறுகிறது.  கேரள பாணீனியம்       அது உள்ளது, அதனில் உள்ளது, அங்கிருந்து வருவது, அங்குத்தோன்றியது முதலான பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொற்களைத் தத்துவத் தத்திதம் என்று குறிப்பிடுகின்றது.  இத்தகைய பெயர்ச் சொற்களின்  உருவாக்கத்திற்கு அடிச் சொற்களுடன் ‘அன்’ விகுதியைச் சேர்க்க  வேண்டும் என்றும் விளக்குகிறது (கே.பா. 92). இத் தத்துவத் தத்திதன் வீரசோழியம் கூறும் வகைகள் சிலவற்றை ஒத்ததாகும்.

    எ.டு

     

     

     

    வீ.சோ/பி.வி கே.பா
    அது உள்ளது கள்ளன் கள்ளத்தனத்தை உடையவன் மூப்பன் மூப்பை உடையவன்
    அதனின் உள்ளது பாண்டியன் பாண்டிய நாட்டில் உறைபவன் ஆலங்ஙாடன் சர்க்கர
    அங்கிருந்து வருவது           – கிழக்கன் காற்று

     

    ஆக்கப்பெயர்களை வடமொழியில் தத்திதன் என்பர். வடமொழிமரபைப் பின்பற்றி தமிழில் தோன்றிய வீரசோழியமும் ஆக்கப்பெயர் விகுதிகளைப் பட்டியலிட பிரயோகவிவேகமும் கேரளபாணினீயமும் ஆக்கப்பெயர்களின் வகைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. தமிழில் பிற்காலத்தில் தோன்றிய அடிப்படைத் தமிழிலக்கணம் ஆக்கப்பெயர்களை வகைப்படுத்தவில்லை. எனினும் ஆக்கப்பெயர்கள் உருவாக்கும் முறையை விளக்குகின்றது. பயன்பாட்டியல் நோக்கிலே இவ்வாக்கப்பெயர்கள் இடைக்காலத்தில் தோற்றம் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தமிழில் ஏராளமான புதிய சொற்கள் இவ்வாறே ஆக்கிக் கொள்ளப்படுகின்றன.

    பயன்பட்ட நூல்கள்

    • இளயபெருமாள்.மா –      கேரள பாணினீயம்(மொ.பெ),தமிழ்த்துறை, கேரளப் பல்கலைகழகம்,1977.
    • கோபாலையர். தி.வே – பிரயோகவிவேகம், தஞ்சை சரஸ்வதிமகால், தஞ்சை, 1973.
    • கோபாலையர். தி.வே – வீரசோழியமும் பெருந்தேவனார் இயற்றிய உரையும்,  நாச்சியார் அச்சகம், , திருச்சி,2005.
    • ராஜராஜவர்மா. ஏ. ஆர் – கேரளபாணினீயம், டிசி. புக், திருவனந்தபுரம், 2000.
    • மீனாட்சி சுந்தரம்.தெ.பொ –               Foreign Models in Tamil Grammar, Kerala University Co – operative store press, Trivandrum,1974.
    • வேலுப்பிள்ளை –      தமிழ் வரலாற்று இலக்கணம், குமரன் புத்தக இல்லம் , சென்னை, 2002.
    • ஹெப்சி ரோஸ் மேரி.அ –      வீரசோழியம் நேமிநாதம் ஓர் ஒப்பாய்வு அச்சிடப்படாத ஆய்வேடு, கேரளப்பல்கலைக்கழகம், திருவன்ந்தபுரம் – 2006

     

    Share
  • கல்லா நீள் மொழிக் கதநாய்

                                முனைவர்.முத்துலட்சுமி.சு

                  விரிவுரையாளர்

                             கேரளப் பல்கலைக் கழகம்

                 காரியவட்டம்

       கல்லா நீள் மொழிக் கதநாய்

                  வடுகர்

    முன்னுரை

            வடுகர் எனும் சொல் சங்கப் பாடல்களில் பரவலாக புலவர்களால் கையாளப்பட்டுள்ள சொல் ஆகும். தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும் வடுகர்களை ஒரு வெறுப்புக் கண்ணோட்டத்தோடுதான் எதிர் கொண்டுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வடுகர் என்ற சொல் மொழியில் செல்வாக்குடன் தான் வழக்கில் இருந்துள்ளது. மிகவும் பிற்காலத்திலும் சங்ககாலக் கவிஞர்கள் கொண்டிருந்த வெறுப்பு தொடர்ந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில்  வடுகர் எனும் சொல் வழக்கில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் அரசியல் சூழல் இதற்குக் காரணமாகலாம். எனினும் சங்கப்பாடல்களில் வடுகர் எனும் சொல் பெற்றிருந்த முக்கியத்துவத்தை இக்கட்டுரை மூலம் ஆராயப்  படுகிறது.

    வடுகர்

          வடுகர் எனும் சொல் தமிழரல்லாத  வேற்று மொழியில் பேசும் ஒரு மக்கள் இனத்தைக் குறிக்கிறது. தமிழர்கள் இவர்களையே தங்கள் பகை இனமாகக் கொண்டிருந்தனர் எனக் கொள்ள இடமுள்ளது. ஆனால் தமிழர், வடவர் பகையே மிகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களுக்கும், வடவர்களுக்கும் இடையிலான போர்களைக்குறித்து சங்கப் பாடல்களில் மிகக் குறைவானச் செய்திகளே உள்ளன. அதே சமயம் அகத்தினைப் பாடல்களில்  தமிழர்களுக்கும், வடவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பல போர்க் களங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

      ‘திராவிட அரசியல் சூழலில் எழுந்த சங்க வாசிப்பில் வடுகர்களுடான தமிழர்களின் போர்க்களங்கள் மறைக்கவும்பட்டன.

    [வேதசகாய குமார் ,இன்றைய கேரளமும் அன்றைய சேர நாடும் ஒரு விசாரணை, சித்தூர்  அரசினர் கல்லூரி , ஆய்வரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை, 2015]

          சில ஆய்வாளர்கள் இந்த விடுபடல் அரசியல் காரணமாக நிகழ்த்தப்பட்டது என்கின்றனர். இதை முற்றிலும் மறுக்கவும் முடியாது.

    வடுகர்கள் தமிழ் நாட்டின் வடப்பகுதியில் வாழ்ந்தவர்கள். தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் விளங்கியபோது இப்பகுதியில் சாதவாகன பேரரசு விளங்கியது. சாதவாகன பேரரசின் வட எல்லை கங்கை சமவெளியாக இருந்தது. தற்போது ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைக் குறிப்பிடலாம். தமிழ் நாட்டில் ஆட்சியை நிலை நாட்டிய களப்பிரர்களையும் பல்லவர்களையும் வடுகர்களாகவே குறிப்பிட வேண்டும். சாதவாகன பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்  தோற்றங் கொண்டன. சாளுக்கியர்களும் வடுகர்களே. பிற்கால சோழப் பேரரசு இவர்களோடும் மோதியது. சாளுக்கியப் பேரரசின் வீழ்ச்சியில் இருந்து ‘ஹொய்சாளர்கள்’ அதிகாரத்தைக் கைக் கொண்டிருந்தனர். பிற்கால பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு இவர்கள் காரணமாயினர். விஜய நகர பேரரசையும் வடுகர்களாகவே கருத வேண்டும். இயேசு சபை பாதிரியாரான புனித சவேரியார் கடிதங்களில் விஜயநகர பேரரசுப் பணிகள் கடலோர மக்களைத் தாக்கிய நிகழ்வை வடுகப் படையெடுப்பு எனறே சவேரியார் குறிப்பிட்டுள்ளார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியல் கட்டளைகளில் வடுகர் எனும் சொல் கையாளப்பட்டுள்ளது. திராவிடர் எனும் சொல் வடுகர் தமிழர் இணைந்த கூட்டு சமூகத்தையே குறிக்கின்றது. வடுகர் எனும் வழக்கிலிருந்து விலக இது காரணமாகிறது.

    கதநாய வடுகர்

          அகநானூறு 107  வது பாடல் வடுகரை கல்லா நீள மொழி கதநா வடுகர் என்கிறது. (அகநானூறு 107  காவிரிப் பூம்பட்டினத்து காரிக்கண்ணனார். வரி -11) கதநாய வடுகர் என்பது சினம் மிகுந்து மொழியையும் சினமிக்க நாயையும், உடைய வடுகர் என பொருளுரைக்கப்படுகிறது. ஆனால் சினமிகுந்த மொழியை உடைய சினமிகுந்த நாயைப் போன்ற வடுகர் என்று பொருள் கொள்ளவும் இடமுள்ளது. தமிழ் கவிஞன் வடுகர் மீது கொண்டிருந்த வெறுப்பை இவ்வரிகள் சரியாகவே உணர்த்துகின்றன.

    வடுகரும்,மோரியரும்

            தமிழ் கவிஞர்கள்  வடுகர் மீது கொண்டிருந்த வெறுப்பிற்கான காரணங்களையும், சங்கப்பாடல்களில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகின்றது. அகம் 281 வது பாடல் இதற்கான காரணத்தை விளக்குகின்றது.

             ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி

             வான் போழ் வல் வில் சுற்றி , நோன் சிலை

             அவ்வார் விளிம்பிற்கு   அமைந்த நொவ்வு இயல்

             கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை

             முரண் மிகு வடுகர் முன்னுற , மோரியர்

             தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு

                                            [அகம் 281]

      மாமூலனாரின் இப்பாடல் மோரியபடை எடுப்பைத்தான்  குறிக்கின்றது. ஆனால் பாடல் வரிகள் வடுகர்களின் கருணையற்ற செயலைக் குறிப்பிடுகின்றது. வடுகர்கள் மயிலின் தோகையை அம்பில் வைத்துக் கட்டி வில்லில் பூட்டி ஒலி எழுப்பி விரைந்து செல்லும் கொடிய அம்புகளைத் தொடுத்தனர். இது மக்களை அச்சமடையச் செய்து விரட்டி ஓட்டுவதற்கு கையாளப்பட்ட உத்தி ஆகும். மாமூலனார் முரண்மிகு வடுகர் என்கிறார். பகை உணர்வு மிக்க வடுகர்கள் என்பது இதன் பொருள். தமிழர்கள் மீது வடுகர் கொண்ட பகையையே இது குறிக்கின்றது. இப்பகை உணர்வு காரணமாகவே மோரியருக்கு வழிகாட்டியாக, துணையாக வடுகர்கள் படையெடுத்து வந்துள்ளனர். பிற்காலத்தில் மாலிக்கபூர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்த போது வடுகப்படையே துணையாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மோரியர் படையெடுத்து வந்தாலும் தமிழர்கள் வடுகர்களையே தங்கள் பகைவர்களாகக் கொண்டிருந்தனர்.

    வடுகர் மீதான தமிழரின் வெறுப்பு

             அகம்  375   வது பாடல் மற்றும் ஒரு தமிழர்களுக்கும் வடுகர்களுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு போர்க் களத்தைக் சித்தரிக்கின்றது.

          குடிக்கடன் ஆகலின்,குறைவினை முடிமார்

          செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,

          வம்ப வடுகர் பைந் தலை சவிட்டி

                                                  [அகம் 375]

            சோழன் குடிமக்கள் மீது கொண்டிருந்த கடமையினை நிறைவு செய்ய பாழி போர்க்களத்தில் ‘வம்ப வடுகர் பைந் தலைகளை’ச் சவிட்டிக் கொன்ற யானை … இதில் போர்க்களத்தில் யானை வடுகர்களின் தலையைச் சவிட்டி அவர்களைக் கொன்றுள்ளது. தண்டனை கொடுமையாக இருந்தாலும் வடுகர்களிடமிருந்து தமிழ் நாட்டைக் காப்பது சோழனின் குடிக்கடன் ஆகிறது. இப்பாழி போர்க்களத்தையே அகம் 44 பாடலும் கூறுகின்றது.

     

    முடிவுரை

              சங்கப்பாடல்கள் குறிப்பாக அகத்திணைப் பாடல்கள் தமிழர்களுக்கும் வடுகர்களுக்கும் இடையிலான பகையை விரிவாகவே சித்தரிப்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. ஆனால் இப்பாடல்கள் அரசியல்  காரணங்களால் சமகாலத்தில் மறைக்கப்பட்டுள்ளன என்பதை உணரலாம். ஆனால் இன்று தமிழ் வலைதளத்தை அடைந்துள்ளதன் காரணமாக இவ்வரிகள் இளம் வாசகர்களிடம் சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.

     

    துணை நூற்பட்டியல்

    1.   செயபால். இரா. அகநானுறு , நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் [பி] லிட்          சென்னை,
    2. வேதசகாய குமார். எம். பாலைத் தமிழ் ஆய்விதழ், இதழ் 1, சித்தூர் அரசினர் கல்லூரி, கேரளா
    3. சேவியர் கடிதங்கள், நாட்டார் வழக்காற்றியல் மன்றம்,புனித சவேரியார் தன்னாட்சிக்கல்லூரி, திருநெல்வேலிa
    Share
  • “அவன், அது , ஆத்மா” (59)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    (மீ.விசுவநாதன்)

    அத்யாயம்: 57

    கவிமாமணி இலந்தை சு. இராமசாமி

    “பாசம், பரிவு, பதமான நல்லன்பு
    வாசம் புரியும் மனையெதுவோ – நேசமுடன்
    என்றும் இயங்கும் இதயமே அம்மனையாம்
    அன்னதனைக் காத்தல் அறி.”

    இந்தக் கவிதையை எழுதியவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் கயத்தாறு அருகில் இருக்கும் ஒரு கிராமம் இலந்தைதான் பிறந்த ஊர். அவர் கவிமாமணி இலந்தை சு. இராமசாமி அவர்கள். மிகச் சிறந்த கவிஞர். தமிழறிஞர். பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் மாணாக்கர். பாரதி கலைக்கழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் இவர் ஒரு ரத்தினம். கவியரங்கங்களில் பங்குபெறும் கவிஞர்களைக் அழைக்கும் போதும், கவிதையைப் படித்த பின்பு அதுபற்றிய தனது கருத்துகளை அந்தக் கவிஞர் தன் கவிதையை எந்த சந்தத்தில் படித்தாரோ அதே சந்தத்தில் மிக அழகாக எழுதி வாழ்த்தும் போதும் அவருக்குள்ள திறமையை அவன் எப்பொழுதும் ஒரு பிரமிப்போடுதான் பார்ப்பான்.

    அவரது தலைமையில் பல கவியரங்குகளில் அவன் பங்கு கொண்டு அவரது பாராட்டையும், திருத்தங்களையும் பெற்றிருக்கிறான். அவற்றுள் அவனுக்கு இன்றும் பசுமையாக நினைவிருப்பது 14.12.1980ம் வருடம் சைதாப்பேட்டையில் கவிமாமணி ஐயாரப்பன் அவர்களின் இல்லத்தில் கவிதாயினி சௌந்தரா கைலாசம் அவர்கள் முன்னிலை வகிக்க இலந்தை இராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம். “பாபநாசம்” என்ற தலைப்பில் அவன் படித்த கவிதையை வரிக்கு வரி ரசித்துப் பாராட்டினார்.

    தபால் கார்டில் எழுதி வந்த காலம் சென்று முகநூலில் பகிர்ந்து கொள்ளும் காலமிது. மரபுக் கவிதைகளுக்கு என்று “சந்தவசந்தம்” என்ற குழுமத்தைத் துவக்கியவர் இலந்தை சு. இராமசாமி அவர்கள். அதில் பல அறிஞர்கள், கவிஞர் பெருமக்கள் தங்களது படைப்புகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒருநாள் கவியோகி வேதம் அவர்கள் அவனைத் தொடர்பு கொண்டு, ” நீ….சந்தவசந்தத்தில் எழுது… அதில் பேராசிரியர் கவிஞர் பசுபதி, அனந்த், சிவசிவா, புலவர் இரா. இராமமூர்த்தி, அ.கி.வ., ஹரிகிருஷ்ணன், கோபால்ஜி, வ.வே.சு., நாகோஜி போன்ற அறிஞர்கள் எழுதுகிறார்கள். உனக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விமர்சனங்கள் வரும். பாராட்டும் வரும். அதனால் உன்னை நீ உயர்த்திக் கொள்ள முடியும். உடனேயே இலந்தை அவர்களைத் தொடர்பு கொண்டு உனது படைப்புகளை அனுப்பிவை” என்று அவனை ஊக்கப் படுத்தினார். அதுமுதல் “சந்தவசந்தத்தில்” அவன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறான். சந்தவசந்தத்தில் இணைந்த பிறகுதான் அவனுக்குத் தமிழ் இலக்கணத்தில் கொஞ்சம் உயர முடிந்தது. அதில் தொடர்ந்து எழுதிவரும் புலவர் இராமமூர்த்தி, கவிஞர் சந்தர் சுப்பிரமணியம், ரமணி, விவேக் பாரதி போன்ற வர்களின் நட்பும் அவனுக்குக் கிடைத்தது. “சந்தவசத்தத்தில்” நடைபெறும் கவியரங்கக் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிரமாதமாக இருக்கும். இலக்கியச் சுவையைச் சுமந்து நமது மனச் சுமையை இறக்கி வைக்க வல்ல அருமையான கவிதைகள் அவை. கவிஞர் ரமணி அவர்களின் இலக்கணப் பகிர்வும், தகவல் பகிர்வும் மெச்சத் தக்கது. இந்த நல்ல குழுமத்தை உருவாக்கிய இலந்தையாரை அவன் மனதார வணங்குகிறான்.

    இலந்தை சு.இராமசாமி அவர்களின் கவிதைத் தொகுப்புகள், அறிவியல் கட்டுரைகள், கதைகள் அனைத்தும் படிக்கப் படிக்க மகிழ்ச்சி தருபவைதான். அவரது “பாரதி அறிவியல்” என்ற கட்டுரைத் தொகுப்பை அவன் அடிக்கடி படிக்கும் பழக்கங் கொண்டிருக்கிறான். இலந்தையார் தன் மனைவிக்கு எழுதிய கவிதைக் கடிதங்களைத் தொகுத்து நூலாக்கி சமீபத்தில் வெளியிட்டார்கள். அது ஒரு தரமான கடித இலக்கிய நூல் என்பது அவனது கணிப்பு. இரண்டு வருடங்களுக்கு முன்பு தில்லை கங்கா நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் “சந்தவசந்தக் குழுமத்தின்” ஆண்டு விழாக் கூட்டம் நடைபெற்றது. அதில் இலந்தையாரின் துணைவியார் தாயாரின் கனிவோடு அனைவருக்கும் உணவு பரிமாறியதும். தேர்ந்த ரசிகராகக் கவிதைகளை ரசித்து மகிழ்ந்ததும் அவன் மனக்கண்ணின் இருக்கிறது. இலந்தையாரின் மகள் கவிதாவும், மகன் சுந்தரும் நல்ல இலக்கிய தாகம் கொண்டவர்கள் என்பது ஒரு பேறு.

    ” நினைப்பெல்லாம் நற்கவிதை நித்தமும் பொங்கும்
    வினைப்பயனைப் பெற்ற விளைவே – அனைத்தும்
    அளிக்கின்ற “வாராகி” அள்ளிக் கொடுக்கக்
    களிக்கின்ற வேழக் கவி.. என்று அவன் அவருக்காகப் பிரார்த்திக்கிறான்.

    08.12.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171207 GoDaMa 12 -Gajendra -watercolour - 24x32 cms Canson 200 gsm -lr

    பீதாம் பரமவிழ போட்ட நகைசிதற
    வேதப்புள் வாகனனை தோள்சுமந்து -பாதாதி
    கேசம் குலுங்க களிறுக்கன்(று) ஏகிய
    நேசனக் கேசவனை நம்பு….!

    முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
    முதலைவா வென்றைக்க மூன்றில்(மும் மூர்திகளில்) -முதலாய்
    கருடன் அமர்ந்து கஜேந்திரனைக் காத்த
    புருடனைப் போற்றல் பிழைப்பு….கிரேசி மோகன்….!

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 14

    -மேகலா இராமமூர்த்தி 

    தலைவன் தலைவி சென்ற வழியை விசாரித்து அறிந்துகொண்டு அவர்கள் சென்ற வழியிலேயே தானும்சென்றாள் செவிலி. தொலைவில் ஆணும்பெண்ணுமாய் இணைந்து வருவோரைக் காணுந்தொறும் அவர்கள் தலைவியும் அவள் காதலனுமாக இருப்பரோவென ஐயுற்று நோக்குவாள். அவர்கள் வேற்றாட்களாக இருப்பதைக் கண்டு வாட்டமடைவாள். இவ்வாறு காட்டுவழியிலும், அதனைத்தொடர்ந்து பாலைவழியிலும் நெடுந்தூரம் நடந்து ஓய்ந்துபோனாள் அவள்.

    ”நடந்து நடந்து என் கால்கள் ஓய்ந்தன; ஆணும் பெண்ணுமாய் இணைந்து வருவோரையெல்லாம் (இவர்கள் நம் மகளும் அவள் காதலனுமோ) என்று நோக்கி நோக்கியே கண்களும் ஒளியிழந்தன. நம் மகளும் தலைவனும் அல்லாத பலரும் வானிலுள்ள மீன்போல் கணக்கற்றவராய் இவ்வுலகில் உளர்; ஆனால் கதிரும் மதியுமனைய அவர்களைக் காணேனே” என்று கவன்றாள் அரிநரைக் கூந்தல் செம்முது செவிலி. 

    காலே  பரிதப்  பினவே  கண்ணே
    நோக்கி  நோக்கி  வாளிழந்  தனவே
    அகலிரு  விசும்பின்  மீனினும்
    பலரே  மன்றவிவ்  வுலகத்துப்  பிறரே.  (குறுந்: 44 – வெள்ளிவீதியார்)

    ”நீளிடை  அத்தம்  நோக்கி  வாள்அற்றுக்
    கண்ணுங்  காட்சி  தௌவின….” எனும் நற்றிணை 397ஆம் பாடலிலும் நெடுவழி நோக்கியே ஒளியிழந்த கண்களின் தன்மை பேசப்படுதல் காண்க. 
     

    வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்
    என்று வள்ளுவர் படைத்த தலைவியின் நிலையும் இத்தன்மைத்தே!
     

    சோர்வின் மிகுதியால் அருகிருந்த மரத்தின்மீது சாய்ந்தமர்ந்த செவிலியின் பார்வையில் ஓர் இளைஞனும் இளமகளும் சேர்ந்துசெல்லும் காட்சி பட்டது. ”இவர்களும் காதலர்கள் தாமோ?” என்று அவள் யோசித்திருந்த வேளையில், அவ்வழியே சென்ற இருவர் இந்த இளையோரைச் சுட்டிக்காட்டிப் பேசியமொழிகள் அவள் காதில் விழுந்தன. 

    “இதோ! இந்த ஆடவன் இருக்கிறானே…இவன் சிறுவனாக இருந்தபோது சிறுமியாக இருந்த இவளின் கூந்தலைப் பிடித்திழுப்பான்; இவளும் சளைத்தவளல்லள்…இவன் தலைமயிரைப் பதிலுக்கு வளைத்திழுப்பாள். இவர்கள் இருவரும் போடும் சண்டையை இடைமறித்துத் தடுக்க முயன்றும் தோல்வியையே தழுவுவர் இவர்களின் செவிலித்தாயர். அன்று அப்படி (எலியும் பூனையுமாக) இருந்தவர்கள் இன்று, இரட்டையாய்ச் சேரத்தொடுத்த மலர்மாலைபோல், மனமொத்த காதலராய் இணைந்துசெல்லும் காட்சியைக் காண்கிறோம். இவர்களைக் கூட்டுவித்த விதியே நீ மிகவும் நல்லை” என்று விதியைப் புகழ்ந்துரைத்தபடிச் சென்றதைக் கண்டாள். 

    இவனிவள்  ஐம்பால்  பற்றவும்  இவளிவன்
    புன்தலை  ஓரி  வாங்குநள்  பரியவும்
    காதற்  செவிலியர்  தவிர்ப்பவுந்  தவிராது
    ஏதில்  சிறுசெரு  வுறுப  மன்னோ
    நல்லைமன்  றம்ம  பாலே  மெல்லியல்
    துணைமலர்ப்  பிணையல்  அன்னவிவர்
    மணமகிழ்  இயற்கை  காட்டி  யோயே. (குறுந்: 229 – மோதாசனார்)

    சிறுவயதில் சிண்டுபிடி சண்டையிடுவோர், பின்னாளில் காதலராய் மாறும் காட்சிகளைத் தமிழ்த் திரைப்படங்களில், குறிப்பாக மண்மணம் கமழும் கிராமத்துக் கதைகளை மையமாகக் கொண்ட படங்களில், நாம் அவ்வப்போது காணலாம். அதனையொத்த காட்சியொன்றை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே குறுந்தொகை அழகாய்க் காட்சிப்படுத்தியிருப்பதை நோக்குங்கால், காலமாற்றம் தமிழ்மாந்தரின் உளவியலில் பெரியஅளவில் மனமாற்றம் எதனையும் நிகழ்த்தவில்லை என்பதனையே புலப்படுத்துகின்றது. 

    வழிப்போக்கர்களின் வார்த்தைகள் குறித்துச் சிந்திக்கலானாள் செவிலி…

    ”நம் மகளைப்போலவே உடன்போக்கு மேற்கொள்ளும் பல இளையோரைக் காண்கையில், இஃது இளமையின் இயல்பே என்று அறிகின்றேன். இனியும் நம் மகளைத் தேடிச்செல்வது தேவையற்ற வீண்வேலை. அவள் தன் விருப்பப்படியே மணவாழ்வு கண்டு இன்புறட்டும்!” என்று எண்ணிக்கொண்டு தன்னூரை நோக்கித் திரும்பிப் பயணப்படலானாள். 

    இல்லம் சேர்ந்தவள், உலகியல்பைத் தக்கமுறையில் நற்றாய்க்கு விளக்கி அவளைத் தேற்றினாள்; துயர் ஆற்றினாள்!

    சின்னாட்களில் தோழியின் வாயிலாக நல்லதோர் செய்தி அவர்கட்குச் கிட்டியது. தலைவனும் தலைவியும் கடிமணம் புரிந்துகொண்டு இல்லறம் எனும் நல்லறத்தை வேற்றூரில் தொடங்கிவிட்டனர் என்பதே அது!

    அதனைக்கேட்ட தாயுள்ளங்கள் நனிமகிழ்ந்தன!

    மகள் நடாத்தும் இல்லறத்தைக் கண்ணால் காணவேண்டும் எனும் வேணவா தாயர்க்கு எழுந்தது. நற்றாய், தன் தோழியான செவிலியைத் தலைவியின் ஊருக்கு அனுப்பினாள். செவிலியும் தலைவியின் மனைசென்று அவளைக் கண்டாள். தன் வளர்ப்புத் தாயை நேரில் கண்டதும் நெஞ்சம் நெகிழ்ந்தாள் அந்த நங்கை. அன்னையை ஆரத்தழுவித் தன் அன்பைப் புலப்படுத்தினாள். பெற்ற தாயையும், தந்தையையும், தமையன்மாரையும் அக்கறையாய் விசாரித்தாள்.

    சில நாள்களேனும் தன்னோடு தங்கித்தான் செல்லவேண்டும் எனும் மகளின் அன்புக்கட்டளையை மீறமுடியாத செவிலித்தாய் அங்கே சிலநாள்கள் தங்கி மகள்பேணும் குடித்தனத்தை நேரிற்காணும் பேறுபெற்றாள். பின்பு மகளிடமும் மாப்பிள்ளையிடமும் பிரியாவிடைபெற்று ஊருக்குத் திரும்பினாள்.

    மகளின் மனையறத்தை அறிந்துகொள்ளத் துடித்துக்கொண்டிருந்த நற்றாய்,

    ”மகள் நலமா? மருமகன் நலமா? அவர்கள் இருவரும் அன்போடு வாழ்கிறார்களா? பிரச்சனை ஏதுமில்லையே?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

    ”பொறு தோழி! உனக்கு எல்லாவற்றையும் விவரமாக எடுத்துரைக்கிறேன்!” என்று முறுவலித்த செவிலி, தலைவியின் மனையில் தான்கண்ட காட்சிகளை விரித்துரைக்கத் தொடங்கினாள்…

    ”இங்கே நம்மோடு இருக்கும்போது அடுப்பங்கரைக்குப் போவதென்றாலே நம் மகளுக்கு எட்டியாய்க் கசக்கும்; அங்கேயோ அருமையாய் அட்டிற்தொழில் செய்கிறாள்!”

    ”அப்படியா?!”  – நற்றாய்.

    ”ஆம்!”   – செவிலித்தாய்.

    thalaivi cooking”நன்றாக முற்றிய தயிரைப் பிசைந்த தன்னுடைய காந்தள் மலரன்ன மெல்லியவிரல்களைத் துடைத்துக்கொண்ட ஆடையைத் துவைக்காமல் உடுத்துக் கொண்டு, குவளை மலர்போன்ற மையுண்ட தன் கண்களில் தாளிப்பினது புகை மணக்கத் தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பைத் தன் கணவன் இனிதென்று உண்பதைக் கண்ட நம் மகளின் முகம் நுண்ணிதாய் மகிழக் கண்டேன்.” என்று செவிலி தலைவியின் சமையற்கலையை வருணிக்கக் கேட்ட நற்றாய்,

    ”அடேயப்பா! அவ்வளவு பக்குவமாய்ச் சமைக்கிறாளா என் மகள்? திருமணம் ஆகிவிட்டால், விளையாட்டாய்க் காலங்கழித்த பெண்களுக்குக்கூட எத்துணைப் பொறுப்புணர்ச்சியும், சாமர்த்தியமும் வந்துவிடுகிறது பார்த்தாயா?” என்று மகளைப் பற்றிச் செவிலியிடம்கூறிப் பூரித்தாள் நற்றாய்.

    ”ஆமாம்…ஆமாம்” என்று நற்றாயின் கூற்றை வாயெல்லாம் பல்லாய் வழிமொழிந்தாள் செவிலி.

    முளிதயிர்  பிசைந்த  காந்தள்  மெல்விரல்
    கழுவுறு  கலிங்கம்  கழாஅது  உடீஇக்
    குவளை  யுண்கண்  குய்ப்புகை  கழுமத்
    தான்றுழந்  தட்ட  தீம்புளிப்  பாகர்
    இனிதெனக்  கணவ ன்  உண்டலின்
    நுண்ணிதின்  மகிழ்ந்தன்று  ஒண்ணுதல்  முகனே. (குறுந்: 167 – கூடலூர் கிழார்)
     

    இப்பாடலில் புளிப்பாகர் என்பதைப் புளிக்குழம்பு என்று கொள்ளாது, பாகற்காயில் புளிப்பெய்து அதன் கசப்பை நீக்கித் தலைவி சமைத்த பாகற்கறி என்று புதிய விளக்கம் தருகின்றார் இரா. இராகவையங்கார். அட…அதுகூடச் சுவையாகத்தான் இருக்கிறது!!

    தலைவியின் கரம்பட்ட அடிசிலை இனிதென அவள் கணவன் பாராட்டி உண்பதை,

    ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
    வானோரமுதம் புரையுமால் எமக்கென (தொல். கற்பு.5)  எனும் தொல்காப்பியக் கற்பியல் நூற்பாவோடு நாம் ஒப்பிட்டுக் காணலாம்.

    ”அப்புறம் நீ அங்கே என்ன கண்டாய்?” என்று ஆவலாய்க் கேட்டாள் நற்றாய்!

    தலைவியின் மனையில் தான் கண்டவற்றை மேலும் விவரிக்கலானாள் செவிலி…

    [தொடரும்]

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171206 -GoDaMa- Draupadi -watercolour -24x32 cms -lr

     

    ’’பூர்ண சரணாகதி பாஞ்சாலி ஏற்றனள்
    கார்ணமின்றி(எதிர்பார்ப்பு காரணமின்றி) கைகூப்ப கண்ணனாம் -நார்ணர்(நாரணர்)
    துஷ்டன்(துஸ்சாதனன்) கரம்நோக தங்கைமா னம்காத்தார்:
    விஷ்ணுவந்த வேலை வசு(பசு)’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171205-GoDaMa-Mathura gamanam-Akrura - icam

    ”ஆயிரம் கைகள் அகட்டி அணைக்கின்றாள்,
    மாயிருள் கண்ணனை, மாற்றாந்தாய் -ஆயினும்
    காகம்தன் குஞ்சுபொன் குஞ்சென்ற ஆய்ச்சியால்
    தேகம்அக் ரூரர் தொலைப்பு(தேகான்ம பாவம் தொலைப்பு)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கபீர்தாசரின் கவிதைகள் (3) தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்

    க.பாலசுப்பிரமணியன்

     

    kabir-424x282-1

    நானும் நித்தம் பசியின்றி இருக்க

    நாடியவர் நித்தம் பசியின்றி இருக்க

    நாளும் தருவாய் நிறைவாய் இறைவா !

    நானிலத்தில் வேண்டேன் உனையன்றி நிரந்தரமே !

     

    காமம் இருக்கும்  இடத்தில் கடவுள் இல்லை

    கடவுள் இருக்கும் இடத்தில் காமம் இல்லை

    கடவுளும் காமமும் என்றும் இணைவதில்லை

    கதிரவனும் மதியும் என்றும் சேர்வதுண்டோ ?

     

    வரிசையில் அரிசியைச் சுமந்திடும் எறும்பு

    வழியினில் சுமையினை மாற்றிட முடியுமோ?

    சிற்றின்பத்தைச் சுமக்கின்ற ஓ! மனிதா !

    பேரின்பத்தை வாழ்வில் அடைந்திட முடியுமோ ?

     

    ஒளியின் அழகினில் மயங்கிடும் விட்டில்

    உறவினைத் தேடி உயிரையும் இழந்திடும்

    அழகுடன் உறவிடத்  துடித்திடும் உள்ளம்

    அமைதியை இழந்து அழிவினை நாடிடும் !

     

    குட்டையில் சேற்றினில் மலர்ந்திடும் தாமரை

    குலவிடும் நிலவினைக் கண்டதும் சிரிக்குமே

    குறைவில்லா அன்பு கிடைத்திடும் பொழுதினில்

    குலவிடும் நெஞ்சங்கள் குறைந்திடும் தூரமே !

     

    ஆயிரம் நல்லவை அன்புடன் செய்தாலும்

    ஆணவ நெருப்பினால் அனைத்தும் அழிந்திடும்

    ஆணவம் தந்த அக்கினி அளவில்லாக் கோபமே

    அன்புடைச் செயல்களை அழித்திடும் அவலமே !

     

    எழுவது என்றும் வீழ்வது நியதி

    மலர்வது என்றும் வாடுதல் உறுதி

    அமைவது அனைத்தும் உடைவதும் நியதி

    ஆரம்பம் அனைத்துக்கும் உள்ளது இறுதி.

     

    Share
  • கணந்துள்–ஆள்காட்டி (Lapwing)

    சற்குணா பாக்கியராஜ்

    தமிழ் நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், “ஆள்காட்டிப் பறவை”  என்றால், பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன் வரக்கூடும்.  ஏனென்றால்,  இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக் கொடுக்கும் இயல்புடையது. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்திலே வரும்போது இனம் கண்டு கொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காப்பதற்காக கடுங்குரல் எழுப்புகின்றன. இவைகளின் அபயக் குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகி விடுகின்றன. இதனால், வேட்டையாடுபவர்களும் புகைப்படம் எடுக்க விரும்புவர்களும் இந்தப் பறவைகளை விரும்புவதில்லை.

    சங்க இலக்கியத்தில், கணந்துள் பறவையைப் பற்றிய வர்ணனைகள்,  முக்கியமாகப் பறவையின் கால்கள், குரலின் தன்மைப் பற்றி இரண்டு பாடல்களில் காணலாம். இந்தக் கணந்துள் பறவைதான், “ஆள்காட்டிப் பறவை” என்று P. L. சாமி, எழுதியுள்ள “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (p.147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

    இந்த இரண்டு சங்கப் பாடல்களிலும் கணந்துளின் நீண்ட கால்களை  “நெடுங் காற் கணந்துள்”, என்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர். பறவையியலில் ஆள்காட்டியின் கால்கள் நீண்டவையென்று விளக்கப்பட்டுள்ளது.

    IMG_9415 (2)

    மேலும் “கணந்துள் பறவை எதுவென்று அறியச் செய்யுளிலேயே “அகச்சான்று” (internal evidence) உள்ளதென்று கீழ்கண்டவாறு எடுத்துக்காட்டியுள்ளார்.

    “ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை

    நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,

    ஆறு செல் வம்பலர் படைதலை பெயர்க்கும்”

                                                    குருந்தொகை 350: 4-6, ஆலந்தூர் கிழார்

    விளக்கம்: “வழியின் அருகே செல்லும் வழிப்போக்கர்களுடைய கூட்டத்தை, அழகிய சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய கணந்துள் பறவை, அங்கே செல்லுபவரின் வருகையை அறிவித்து, அந்த இடத்தினின்று நீங்கச் செய்யும்”

    இந்தப் பாடலில், கணந்துள்ளின், ஆள் அறிவித்துக் காட்டும் குரலை,

    ஆள் அறிவுறீஇ” என்று  சங்கப் புலவர் குறிப்பிடுகிறார். “ஆள் இருப்பதை அறிவுறுத்துவதால்” கணந்துள் பறவை ஆள்காட்டிப் பறவைதான் என்பதற்கு, இது செய்யுளிலிலேயே உள்ள “அகச்சான்று” என்று, P. L. சாமி விவரிக்கிறார்.

    “பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
    நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி
    சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்”

                               நற்றிணை 212: 1-3,  குடவாயிற் கீரத்தனார்

    விளக்கம்: “பறவைகளைப் பிடிக்கக் கருதிப், பார்வைப்புள்ளை(decoy) வைத்து, அமைத்த வலையைக் கண்டதும் நெடிய கால்களையுடைய கணந்துள் பறவை அச்சம் கொண்டு, தெளிவான குரலில் புலம்பும் குரல் காட்டின் வழியாகச் செல்லும் இசைக்கருவி முழங்குபவர் தம் வருத்தம் நீங்க இசைக்கும் யாழின் இசை போன்று ஒலிக்கும்”.

    .Redwattled Lapwing-1448 (2)

     இந்தப் பறவையின் குரலை, நற்றிணை 212-இல், புலவர், “புலம்பு கொள்” என்கிறார். பறவையியலாளர்கள் ஆள்காட்டியின் குரலை, ”loud and penetrating” என்று குறிப்பிடுகின்றனர். பறவைகளின் தந்தை என்று போற்றப்படும் முனைவர் சலீம் அலி, இந்தப் பறவைகளின் குரலை வர்ணிக்கும் போது,  “மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, இரட்டை அசையில்,

     “twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்தகுரலில்                                                                                                                                                                             “twit-twit-twit-twit”,  என்று இரக்கமான குரலும் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்” என்கிறார் (The Book of Indian Birds, Salim Ali.  p.139-140).

    1. L. சாமி, “கணந்துள் என்ற பெயர் ஆள்காட்டியின் அபாய அறிவிப்பு ஓசையின் காரணமாக வந்திருக்கலாம், “கணகணத்தல்” என்ற சொல் விட்டு விட்டு ஒலித்தலைக் குறிக்கும், இதனால் ஓசையின் அடிப்படையில், “கணந்துள்” என்ற பெயர் தோன்றியிருக்கலாம் என்றும் இந்தப் பறவை உள்ளானைப் போன்றிருப்பதால், கணந்துள் என்ற பெயரிலுள்ள “உள்” உள்ளானைக் குறிக்கலாம்”. ஆகவே “கணந்துள்” என்று சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ள பறவை, ஆள்காட்டிப் பறவைதான் என்று நம்முன் எடுத்துக்காட்டுகளோடு தன் கருத்தை விளக்குகிறார்.

     உலகத்தில், இருபத்திநான்கு வகை லேப்விங் பறவைகள் உள்ளன.  தமிழகத்தில் மூன்று வகையான லேப்விங் பறவைகள் காணப்படுகின்றன. இவை: சிவப்பு மூக்கு ஆள்காட்டி அல்லது செம்மீசை ஆள்காட்டி(Red Wattled Lapwing-Vanellus indicus), மஞ்சள் மூக்கு ஆள்காட்டி அல்லது மஞ்சள்மீசை ஆள்காட்டி ( Yellow Wattle Lapwing)- Vanellus malabaricus. சாம்பல் தலை ஆள்காட்டி (Grey Headed Lapwing -Vanellus cinerea)

     சிவப்பு மூக்கு ஆள்காட்டியும், மஞ்சள் மூக்கு ஆள்காட்டியும் தமிழகத்தில் எப்போதும் காணப்படும் பறவைகள். சாம்பல் தலை ஆள்காட்டி, குளிர் காலத்தில், தமிழகத்திற்கு வலசை வரும் பறவைகளில் ஒன்று. மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் வருகிறது { Wetland birds of Tamil Nadu. P. 91-92, Grubh, R. 2012).

    ஆள்காட்டிப் பறவைகள், ப்ளோவர் (Plover) குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தப் பறவைகளுக்குக் கால்கள் நீண்டதாய், பொய்க்கால்கள்(stilt) வைத்து நடப்பதுபோல் காணப்படும்.  இவை நீர்க் கரையோரம் காணப்படும் பறவைகள் என்று கருதப்பட்டாலும், மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, நீர் வறண்ட பகுதிகளில்தான் அதிகமாகக் காணப்படுகிறது.  சிவப்பு மூக்கு ஆள்காட்டியை நீர்க்கரையோரங்களில் காணலாம். சிறு புழுப்பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. இந்தப் பறவைகள், தனித்தோ, இணையாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன. இவை வலசை போவதில்லை.

    தோற்றம்:

    ஆண், பெண் ஆள்காட்டிப் பறவைகள், தோற்றத்தில் ஒன்று போல் காணப்படுகின்றன. சிவப்பு மூக்கு ஆள்காட்டியின் தலை, கழுத்து, மார்பகம் கருமையாகவும், முதுகு, சிறகுகள் செம்பழுப்பு நிறத்திலும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் கண் பகுதியிலிருந்து மூக்குவரை சிவப்பு நிற சவ்வு வளர்ச்சி தோன்றி, மீசை போல் தோற்றமளிக்கிறது.

    சிவப்பு மூக்கு ஆள்காட்டி

     

    மஞ்சள் மூக்கு ஆள்காட்டியின் கண்ணிற்கும் மூக்கிற்கும் இடைப்பகுதியில், மஞ்சள் நிறத்தோல் வளர்ச்சி மீசை போல் தொங்கியுள்ளது. இரண்டு பறவைகளின் கால்களும் நீண்டு, மஞ்சள் நிறத்திலிருக்கின்றன.

    மஞ்சள் மூக்கு ஆள்காட்டி

    இந்தப் பறவைகள் இணை பிரியாதவை. இனப்பெருக்கக் காலத்தில், திறந்த வெளியில், ஆழமற்ற சிறு பள்ளம் தோண்டி, இலைகள், சிறு கற்கள், உலர்ந்த சாணத்துண்டுகள் கொண்டு நிரப்பி, மூன்று அல்லது நான்கு முட்டைகள் இடுகின்றன. (சிறு கற்கள், சாணத்துண்டுகள், முட்டைகள் இடம் பெயராமலிருக்க உதவுகின்றன). முட்டை ஓடுகளில் காணப்படும் தவிட்டு நிறப் புள்ளிகள், சுற்றுச் சூழலை ஒத்திருப்பதால் எதிரிகளால் முட்டைகளை எளிதில் கண்டு கொள்வது கடினம்.

    இரண்டு பறவைகளும், மாற்றி மாற்றி அடை காக்கின்றன. முட்டைகளை அடைகாக்கும் சமயத்திலோ அல்லது குஞ்சுகள் பொரித்திருக்கும் சமயத்திலோ, எதிரிகள் அருகில் வர நேர்ந்தால், மிகுந்த ஆரவாரத்தோடு அபயக் குரல் எழுப்பி, வட்டமிட்டுப் பறந்து எதிரிகளின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி அங்கிருந்து அகலச் செய்துவிடுகின்றன. தமிழகத்திலும், இலங்கையிலும், ஆள்காட்டிப் பறவையின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி, மாடு ஓட்டும் சிறுவர் பாடியதாக ஒரு அழகிய நாட்டுப் பாடலை P.L. சாமி சுட்டிக் காட்டுகிறார். இந்தப் பாடலில், மஞசள் மூக்கு ஆள்காட்டிப் பறவையைப்பற்றி சில உண்மைகளும்,  பல கற்பனைகளும் கலந்து காணப்படுகின்றன.

    untitled-9889

    “ஆக்காட்டி, ஆக்காட்டி, ஆவாரம்பூ ஆக்காட்டி

    எங்கே எங்கே முட்டையிட்டாய்

    கல்லு துளைத்து கடலோரம் முட்டையிட்டேன்

    இட்டது நாலு முட்டை பொரித்தது மூன்றுகுஞ்சு

    மூத்த குஞ்சுக் கிரைதேடி மூணுமலை சுற்றி வந்தேன்

    இளைய குஞ்சுக் கிரைதேடி ஏழுமலை சுற்றி வந்தேன்

    பார்த்திருந்த குஞ்சுக்குப் பவளமலை சுற்றி வந்தேன்

    புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகயிலே

    மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்

    காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க

    நானழுத கண்ணீரும் என்குஞ்சழுத கண்ணீரும்

    வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கர் கால்கழுவிக்

    குண்டு நிறைந்து குதிரைக் குளிப்பாட்டி

    இஞ்சிக்குப் பாய்ஞ்சு இலாமிச்சுக்கு வேரூண்டி

    மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்ததாம் கண்ணீரே”

          “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்”, p.153

                                     ஆவாரம் பூ

                            மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, கன்யாகுமரி, 2017

    இந்தப் பாடலில், மஞ்சள்  ஆள்காட்டிப் பறவையின் கண்ணருகில் காணப்படும் மஞ்சள் நிறத் தோல், ஆவாரம் பூவின் இதழ்கள் போலவும், நான்கு முட்டைகள் இடுவதும், கல்லின் இடையில் முட்டை இடுவதால், கல்லைத் துளைத்து முட்டையிடுவதாகவும், முட்டைகள், சுற்றுச் சூழலை ஒத்திருப்பதால் இவைகளைக் கண்டு கொள்ள முடியாத நிலையில், சிறுவர், எங்கே முட்டையிட்டாய்? என்று பறவையைக் கேட்பதாகவும் காணலாம். பாடலிலுள்ள மேற்கண்ட தகவல்கள், பறவையியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், நாட்டு மக்களின் இயற்கையறிவு குறையற்றதாக இருப்பதைக் காணலாம்.

    மேலும், “குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்” என்ற செய்தி,

    நற்றிணை, 212 -இல் காணப்படும் “பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,” என்ற அடியை ஒத்துள்ளது.

    ஆனால் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, வறண்ட நிலத்தில் முட்டையிடுகிறது. அடைகாக்கும் நேரத்திலும், குஞ்சுகள் பொரித்தப் பின்பும் இரை தேட அதிகதூரம் செல்வதில்லை. குஞ்சுகள், பொரித்த உடனேயே தானாக பெற்றோருடன் சேர்ந்து இரை தேடிக் கொள்கின்றன (precocial). ஆள்காட்டிப் பறவை, குஞ்சுகளைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பதைத்தான் அதன் அழுகையும் கண்ணீரும் என்று கற்பனையாகப் பாடலில் கூறப்பட்டுள்ளதென P.L. சாமி கருதுகிறார்.

     

    வட இந்தியாவில், ஆள்காட்டிப் பறவைகளைக் கவனித்து ஆராய்ச்சிகள் செய்து கொடுத்திருக்கும் தகவல்கள் நிறையக் காணலாம். முக்கியமாக, சிவப்பு மூக்கு ஆள்காட்டிகள், மொட்டை மாடிகளில், கான்கீரிட்டில் சிறு பள்ளம் தோண்டி, முட்டையிட்டு அடை காப்பதை பல ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர் (Mundkur, Taej 1985, Muralidhar, A., Barve, S., 2013).

    கி. பி பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியாவில் பிறந்து வளர்ந்து, கல்லூரியில் பட்டம் பெற்ற பின் அரசாங்க ஊழியராகப் பணிபுரிந்த ஆங்கிலேயர் திரு. ஏட்கின்ஸ் (E. H. Atkins), தன்னுடைய The Common Birds of Bombay” (p.160-163) என்ற புத்தகத்தில், சிவப்பு மூக்கு ஆள்காட்டிப் பறவையைப் பற்றி கீழ் கண்டவாறு நகைச்சுவையோடு வர்ணிக்கிறார். “எதற்கு நான் லேப்விங் பறவையைப் பற்றி விவரிக்க வேண்டும்? அதற்கு அறிமுகமோ அல்லது வர்ணனையோ தேவையில்லை, அதுவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும். உங்களை ஈர்த்துக்கொள்ளும். அதன் குரல் உங்கள் மனதிலிருந்து அகலாதபடி திரும்பத் திரும்ப அழுத்தமாகக் குரல் கொடுக்கும். திடீரென, துணை பறவையும்,  எங்கிருந்தோ வந்து, வட்டமடித்து, சுற்றி சுற்றிப்                பறந்து, மேலும் கீழும் பாய்ந்து அருகே வருவது போலவும் தூரமாகப் போவது போலவும் போக்குக் காட்டி, அந்த இடத்தை விட்டு நகராமல், மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இரங்கல் குரலில் குற்றம் கூறுவது போல் “Did you do it? Did you do it?  Pity to do it” என்று குரல் கொடுக்கும். எதற்காக இந்தப் பறவை இப்படி நடந்து கொள்கிறது? நான் ஒரு தவறும் செய்யவில்லையே? என்னுடைய சந்தேகம் என்னவென்றால், இதனுடைய முட்டைகள் இங்கு எங்கேயோ இருக்கின்றன. நான் அதைத் தேடுவதினால் பயனில்லை. ஏனெனில், இந்த லேப்விங், ஒரு திறமைவாய்ந்த பொய்யன். ஒரு ஆங்கிலேயப் புலவர்  சொன்னபடி,

                         The Lapwing lies,

            Says here when it is there’

    மொத்தத்தில் இது ஒரு அதிசயப் பறவை” யென்று வியக்கிறார்.

    இந்த வர்ணனை, எத்தனை உண்மை என்பது  ஆள்காட்டிப் பறவையைப் பார்த்தவர்களின் அனுபவத்தில்தான் தெரியும். அடுத்த முறை, இந்த அழகிய பறவைகளைப் பார்க்கவும், குரலைக் கேட்கவும் நேர்ந்தால், Hope you can say, “ No my friend, l didn’t” if you protect nature.

    வட இந்தியாவில் ஆள்காட்டிப் பறவையைப் பற்றியுள்ள சிலதகவல்கள்:

    ராஜஸ்தானில் ஆள்காட்டிப் பறவைகள் முட்டையிடும் காலம் மழை வருவதைக் குறிக்கிறதென்று நம்புகின்றனர்.

    சில கிராமங்களில், ஆள்காட்டியின் குரல் அபசகுணமாகக் கருதப்படுகிறது..

    “வானத்திலிருந்து ஏதாவது விழுந்து முட்டைகளுக்கோ, குஞ்சுகளுக்கோ ஆபத்து நேரிடாதபடி, பிடித்துக்கொள்ள, இரவில் படுக்கும்போது,  இவைகளின் கால்கள், வானத்தை நோக்கியிருக்கும்”. இந்தி மொழியில், இதை, “Tithiri se Asian thama jayega” (“can the pee-wit support the heavens?”) என்கின்றனர்.

    ஆள் காட்டியின் முட்டைகளுக்கு தூக்கத்தைத் தடுக்கும் சக்தி உண்டு என்று நம்புவதால், இரவு வாகனம் ஓட்டுபவர்களுக்காக முட்டைகள் வேட்டையாடப்படுகின்றன (Chan Kumar, 2015).

    References:

     Aitken, Edward Hamilton, 1851-1909. The common birds of Bombay

    Charn Kumar, (2015). First record of a regularly occupied nesting ground of Yellow-wattled Lapwing, Vanellus malabaricus (Boddaert) in agricultural environs of Punjab with notes on its biology . Journal of entomology and Zoology Studies, JEZS 2015: 3 (1): 129-134

    Grubh, R, (2012).  The wetland Birds of Tamil Naddu

     Mundkur, Taej (1985). “Observations on the roof-nesting habit of the Redwattled Lapwing (Vanellus indicus) in Poona, Maharashtra”. Journal of the Bombay Natural History Society. 82 (1): 194–196.

    Mundkur, Taej (1985). Barve, S., 2013. Peculiar choice of nesting of Red-wattled Lapwing Vanellus indicus in an urban area in Mumbai, Maharashtra. Indian BIRDS 8 (1): 6–9

    Muralidhar, A., Barve, S., 2013. Peculiar choice of nesting of Red-wattled Lapwing Vanellus indicus in an urban area in Mumbai, Maharashtra. Indian BIRDS 8 (1): 6–9

    Naik, RM; George, PV; Dixit, Dhruv B (1961). “Some observations on the behaviour of the incubating Redwattled Lapwing, Vanellus indicus indicus (Bodd.)”Journal of the Bombay Natural History Society58 (1): 223–230.

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (38)

    க. பாலசுப்பிரமணியன்

    அகக்கண்களைத் திறப்பது எப்போது?

    திருமூலர்-1-3-3

    பேரறிவின் வித்தாகவும் சத்தாகவும் இருக்கின்ற பரமனை அறிந்துகொள்ள அவன் அருளைப்பெற அடியார்கள் என்னென்ன முயற்சிகளெல்லாம் செய்கின்றார்கள்? அவனை மட்டும் சிந்தையில் நிறுத்தி இரவும் பகலும் அவனையே உள்ளம் உருகித் துதித்து அவனுடைய கடைக்கண் பார்வையிலிருந்து பொழியும் அருள் மழையில் நனைந்து கிடைக்கின்ற ஆனந்தத்திற்காக என்னென்ன தவங்கள் செய்கின்றார்கள்? ஆனால் உலக நினைப்புகளும் உலக நடைமுறைகளும் ஆசாபாசங்களும் அவர்களை விடுவதாயில்லையே! என்னென்ன துயரங்கள் அனுபவிக்க வேண்டி வருகின்றது என்பதை பட்டினத்தார் விளக்குகின்றார்:

    அன்ன விசாரம் அதுவே விசாரம் அது ஒழிந்தால்

    சொன்ன விசாரம் தொலையா விசாரம் நாள் தோகையரை

    பன்ன விசாரம் பலகால் விசாரம் இப்பாவி நெஞ்சுக்கு

    விசாரம் வைத்தாய் இறைவா ! கச்சி ஏகம்பனே !

    ஐம்புலன்கள் ஏற்படுத்தும் இந்தத் தொல்லைகளிலிருந்தெல்லாம் விடுபடுவது எப்படி? அனைத்து உலகையும் ஆள்கின்ற அந்த ஈசனை எப்படி அடைவது? சிந்தையை ஒரு நிலைப்படுத்தி அழைத்தால் அவன் நிச்சயமாக வருவானா? அவனுடைய விருப்பங்களை நம்மால் கணக்கிடமுடியாதே… இந்தக் கவலை மாணிக்கவாசகருக்கும் ஏற்பட்டது. அதனால்தானோ அவர் இவ்வாறு பாடுகின்றார்?

    அனைத்தும் ஆக சிந்தை செல்லும்

    எல்லை ஏய வாக்கினால்

    தினைத்னையும் ஆவது இல்லை

    சொல்லல் ஆவ கேட்பவே

    அனைத்து உலகும் ஆய நின்னை

    ஐம்புலன்கள் காண்கிலா

    எனைத்து எனைத்து அது எப்புறத்தது

    எந்தை பாதம் எய்தவே.

    இந்த உலக விசாரங்களிலிருந்தும் மாயைகளிலிருந்தும் விடுபடுவது எப்படி? அவ்வளவு சுலபமான செயலா? இதோ .. திருமூலரின் கருத்தைப் பார்ப்போம் …

    கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை

    மன்னிய மாதவம் செய்வோர் ஒரு சிறை

    தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை

    என் இது ஈசன் இயல்பு அறியாரே.

    காம வாசனைகளில் ஈடுபட்டு வீழ்ந்தோர் இருப்பதும் ஒரு எண்ணச் சிறையில்தான். கற்பிக்கப்பட்ட அறிவிலும் நூல்களிலும் ஈடுபட்டு உண்மை அனுபவத்தை அறியாமல் வீழ்ந்தோர் இருப்பதும் ஒரு சிறையில்தான். தவத்தில் ஈடுபட்டுத் தன்னை மறந்தாலும் ஈசனின் உண்மை தத்துவத்தை அறியாதோர் இருப்பதும் ஒரு சிறையில்தான் .இப்படி நம்மை நாமே சிறையில் அடைத்துக்கொண்டு இறைவனைத் தேட முயற்சி செய்தால் அது சரிப்படுமோ?  பலன்தருமோ?

    தாயுமானவர் இறைவனிடம் கேட்கின்றார் ‘இறைவா, இந்த நிலையை மாற்றுதல் உனக்கு என்ன கடினமான செயலோ?”

    பாழான என்மனம் குவியஒரு தந்திரம்

    பண்ணுவ துனக் கருமையோ ?

    பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற

    பரிபூரண ஆனந்தமே.

    இந்த அருளுக்காக அவர் எப்படியெல்லாம் வேண்டுகிறார் தெரியுமா ?

    உடல்குழைய என்பெல்லாம் நெக்குருக

    விழிநீர்கள் ஊற்றென வெதும்பியூற்ற

    ஊசி காந்தத்தினைக்  கண்டணுகல்  போலவே

    ஒருறவு முன்னி யுன்னிப்

    படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப்

    பாடியாடி குதித்து….

    அடியார்கள் இறைவனின் அருளுக்காக உடலாலும் உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தன்னையே மறந்து ஒன்றி இருந்த நிலைகளைக் காணும் பொழுது அவர்கள் பக்தியின் பரவச நிலை நமக்குத் தெளிவாகின்றது.

    இறைவனைக் காண வெறும் புறக்கண்களை திறந்தால் மட்டும் போதாது. அவை பல உணர்வுகளாலும் வெளி உலகின் தாக்கத்தினால் ஊனமடைந்தவை. ஆகவே இறைவனைக் காண்பதற்கு அகக்கண்களைத் திறக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் ஒளிமயமாக நமக்கு புலப்படுவான். திருமூலரின் கீழ்கண்ட பாடல் நமக்கு உண்மை நிலையை உணர்த்துவதாக உள்ளது.

    காணாத கண்ணில் படலமே கண்ணொளி

    காணாதவர்கட்குங் காணாத அவ்வொளி

    காணாதவர்கட்குங் கண்ணாம் பெருங்கண்ணைக்

    காணாது கண்டார் களவொழிந்தாரே.

    நம்மில் எத்தனைபேர் கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாக இருக்கின்றோம் ?

    (தொடருவோம்)

    Share