முனைவர்.முத்துலட்சுமி.சு

              விரிவுரையாளர்

                         கேரளப் பல்கலைக் கழகம்

             காரியவட்டம்

   கல்லா நீள் மொழிக் கதநாய்

              வடுகர்

முன்னுரை

        வடுகர் எனும் சொல் சங்கப் பாடல்களில் பரவலாக புலவர்களால் கையாளப்பட்டுள்ள சொல் ஆகும். தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும் வடுகர்களை ஒரு வெறுப்புக் கண்ணோட்டத்தோடுதான் எதிர் கொண்டுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வடுகர் என்ற சொல் மொழியில் செல்வாக்குடன் தான் வழக்கில் இருந்துள்ளது. மிகவும் பிற்காலத்திலும் சங்ககாலக் கவிஞர்கள் கொண்டிருந்த வெறுப்பு தொடர்ந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில்  வடுகர் எனும் சொல் வழக்கில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் அரசியல் சூழல் இதற்குக் காரணமாகலாம். எனினும் சங்கப்பாடல்களில் வடுகர் எனும் சொல் பெற்றிருந்த முக்கியத்துவத்தை இக்கட்டுரை மூலம் ஆராயப்  படுகிறது.

வடுகர்

      வடுகர் எனும் சொல் தமிழரல்லாத  வேற்று மொழியில் பேசும் ஒரு மக்கள் இனத்தைக் குறிக்கிறது. தமிழர்கள் இவர்களையே தங்கள் பகை இனமாகக் கொண்டிருந்தனர் எனக் கொள்ள இடமுள்ளது. ஆனால் தமிழர், வடவர் பகையே மிகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களுக்கும், வடவர்களுக்கும் இடையிலான போர்களைக்குறித்து சங்கப் பாடல்களில் மிகக் குறைவானச் செய்திகளே உள்ளன. அதே சமயம் அகத்தினைப் பாடல்களில்  தமிழர்களுக்கும், வடவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பல போர்க் களங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

  ‘திராவிட அரசியல் சூழலில் எழுந்த சங்க வாசிப்பில் வடுகர்களுடான தமிழர்களின் போர்க்களங்கள் மறைக்கவும்பட்டன.

[வேதசகாய குமார் ,இன்றைய கேரளமும் அன்றைய சேர நாடும் ஒரு விசாரணை, சித்தூர்  அரசினர் கல்லூரி , ஆய்வரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை, 2015]

      சில ஆய்வாளர்கள் இந்த விடுபடல் அரசியல் காரணமாக நிகழ்த்தப்பட்டது என்கின்றனர். இதை முற்றிலும் மறுக்கவும் முடியாது.

வடுகர்கள் தமிழ் நாட்டின் வடப்பகுதியில் வாழ்ந்தவர்கள். தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் விளங்கியபோது இப்பகுதியில் சாதவாகன பேரரசு விளங்கியது. சாதவாகன பேரரசின் வட எல்லை கங்கை சமவெளியாக இருந்தது. தற்போது ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைக் குறிப்பிடலாம். தமிழ் நாட்டில் ஆட்சியை நிலை நாட்டிய களப்பிரர்களையும் பல்லவர்களையும் வடுகர்களாகவே குறிப்பிட வேண்டும். சாதவாகன பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்  தோற்றங் கொண்டன. சாளுக்கியர்களும் வடுகர்களே. பிற்கால சோழப் பேரரசு இவர்களோடும் மோதியது. சாளுக்கியப் பேரரசின் வீழ்ச்சியில் இருந்து ‘ஹொய்சாளர்கள்’ அதிகாரத்தைக் கைக் கொண்டிருந்தனர். பிற்கால பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு இவர்கள் காரணமாயினர். விஜய நகர பேரரசையும் வடுகர்களாகவே கருத வேண்டும். இயேசு சபை பாதிரியாரான புனித சவேரியார் கடிதங்களில் விஜயநகர பேரரசுப் பணிகள் கடலோர மக்களைத் தாக்கிய நிகழ்வை வடுகப் படையெடுப்பு எனறே சவேரியார் குறிப்பிட்டுள்ளார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசியல் கட்டளைகளில் வடுகர் எனும் சொல் கையாளப்பட்டுள்ளது. திராவிடர் எனும் சொல் வடுகர் தமிழர் இணைந்த கூட்டு சமூகத்தையே குறிக்கின்றது. வடுகர் எனும் வழக்கிலிருந்து விலக இது காரணமாகிறது.

கதநாய வடுகர்

      அகநானூறு 107  வது பாடல் வடுகரை கல்லா நீள மொழி கதநா வடுகர் என்கிறது. (அகநானூறு 107  காவிரிப் பூம்பட்டினத்து காரிக்கண்ணனார். வரி -11) கதநாய வடுகர் என்பது சினம் மிகுந்து மொழியையும் சினமிக்க நாயையும், உடைய வடுகர் என பொருளுரைக்கப்படுகிறது. ஆனால் சினமிகுந்த மொழியை உடைய சினமிகுந்த நாயைப் போன்ற வடுகர் என்று பொருள் கொள்ளவும் இடமுள்ளது. தமிழ் கவிஞன் வடுகர் மீது கொண்டிருந்த வெறுப்பை இவ்வரிகள் சரியாகவே உணர்த்துகின்றன.

வடுகரும்,மோரியரும்

        தமிழ் கவிஞர்கள்  வடுகர் மீது கொண்டிருந்த வெறுப்பிற்கான காரணங்களையும், சங்கப்பாடல்களில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகின்றது. அகம் 281 வது பாடல் இதற்கான காரணத்தை விளக்குகின்றது.

         ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி

         வான் போழ் வல் வில் சுற்றி , நோன் சிலை

         அவ்வார் விளிம்பிற்கு   அமைந்த நொவ்வு இயல்

         கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை

         முரண் மிகு வடுகர் முன்னுற , மோரியர்

         தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு

                                        [அகம் 281]

  மாமூலனாரின் இப்பாடல் மோரியபடை எடுப்பைத்தான்  குறிக்கின்றது. ஆனால் பாடல் வரிகள் வடுகர்களின் கருணையற்ற செயலைக் குறிப்பிடுகின்றது. வடுகர்கள் மயிலின் தோகையை அம்பில் வைத்துக் கட்டி வில்லில் பூட்டி ஒலி எழுப்பி விரைந்து செல்லும் கொடிய அம்புகளைத் தொடுத்தனர். இது மக்களை அச்சமடையச் செய்து விரட்டி ஓட்டுவதற்கு கையாளப்பட்ட உத்தி ஆகும். மாமூலனார் முரண்மிகு வடுகர் என்கிறார். பகை உணர்வு மிக்க வடுகர்கள் என்பது இதன் பொருள். தமிழர்கள் மீது வடுகர் கொண்ட பகையையே இது குறிக்கின்றது. இப்பகை உணர்வு காரணமாகவே மோரியருக்கு வழிகாட்டியாக, துணையாக வடுகர்கள் படையெடுத்து வந்துள்ளனர். பிற்காலத்தில் மாலிக்கபூர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்த போது வடுகப்படையே துணையாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மோரியர் படையெடுத்து வந்தாலும் தமிழர்கள் வடுகர்களையே தங்கள் பகைவர்களாகக் கொண்டிருந்தனர்.

வடுகர் மீதான தமிழரின் வெறுப்பு

         அகம்  375   வது பாடல் மற்றும் ஒரு தமிழர்களுக்கும் வடுகர்களுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு போர்க் களத்தைக் சித்தரிக்கின்றது.

      குடிக்கடன் ஆகலின்,குறைவினை முடிமார்

      செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,

      வம்ப வடுகர் பைந் தலை சவிட்டி

                                              [அகம் 375]

        சோழன் குடிமக்கள் மீது கொண்டிருந்த கடமையினை நிறைவு செய்ய பாழி போர்க்களத்தில் ‘வம்ப வடுகர் பைந் தலைகளை’ச் சவிட்டிக் கொன்ற யானை … இதில் போர்க்களத்தில் யானை வடுகர்களின் தலையைச் சவிட்டி அவர்களைக் கொன்றுள்ளது. தண்டனை கொடுமையாக இருந்தாலும் வடுகர்களிடமிருந்து தமிழ் நாட்டைக் காப்பது சோழனின் குடிக்கடன் ஆகிறது. இப்பாழி போர்க்களத்தையே அகம் 44 பாடலும் கூறுகின்றது.

 

முடிவுரை

          சங்கப்பாடல்கள் குறிப்பாக அகத்திணைப் பாடல்கள் தமிழர்களுக்கும் வடுகர்களுக்கும் இடையிலான பகையை விரிவாகவே சித்தரிப்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. ஆனால் இப்பாடல்கள் அரசியல்  காரணங்களால் சமகாலத்தில் மறைக்கப்பட்டுள்ளன என்பதை உணரலாம். ஆனால் இன்று தமிழ் வலைதளத்தை அடைந்துள்ளதன் காரணமாக இவ்வரிகள் இளம் வாசகர்களிடம் சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.

 

துணை நூற்பட்டியல்

  1.   செயபால். இரா. அகநானுறு , நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் [பி] லிட்          சென்னை,
  2. வேதசகாய குமார். எம். பாலைத் தமிழ் ஆய்விதழ், இதழ் 1, சித்தூர் அரசினர் கல்லூரி, கேரளா
  3. சேவியர் கடிதங்கள், நாட்டார் வழக்காற்றியல் மன்றம்,புனித சவேரியார் தன்னாட்சிக்கல்லூரி, திருநெல்வேலிa

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *