கபீர்தாசரின் கவிதைகள் (3) தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்

0

க.பாலசுப்பிரமணியன்

 

kabir-424x282-1

நானும் நித்தம் பசியின்றி இருக்க

நாடியவர் நித்தம் பசியின்றி இருக்க

நாளும் தருவாய் நிறைவாய் இறைவா !

நானிலத்தில் வேண்டேன் உனையன்றி நிரந்தரமே !

 

காமம் இருக்கும்  இடத்தில் கடவுள் இல்லை

கடவுள் இருக்கும் இடத்தில் காமம் இல்லை

கடவுளும் காமமும் என்றும் இணைவதில்லை

கதிரவனும் மதியும் என்றும் சேர்வதுண்டோ ?

 

வரிசையில் அரிசியைச் சுமந்திடும் எறும்பு

வழியினில் சுமையினை மாற்றிட முடியுமோ?

சிற்றின்பத்தைச் சுமக்கின்ற ஓ! மனிதா !

பேரின்பத்தை வாழ்வில் அடைந்திட முடியுமோ ?

 

ஒளியின் அழகினில் மயங்கிடும் விட்டில்

உறவினைத் தேடி உயிரையும் இழந்திடும்

அழகுடன் உறவிடத்  துடித்திடும் உள்ளம்

அமைதியை இழந்து அழிவினை நாடிடும் !

 

குட்டையில் சேற்றினில் மலர்ந்திடும் தாமரை

குலவிடும் நிலவினைக் கண்டதும் சிரிக்குமே

குறைவில்லா அன்பு கிடைத்திடும் பொழுதினில்

குலவிடும் நெஞ்சங்கள் குறைந்திடும் தூரமே !

 

ஆயிரம் நல்லவை அன்புடன் செய்தாலும்

ஆணவ நெருப்பினால் அனைத்தும் அழிந்திடும்

ஆணவம் தந்த அக்கினி அளவில்லாக் கோபமே

அன்புடைச் செயல்களை அழித்திடும் அவலமே !

 

எழுவது என்றும் வீழ்வது நியதி

மலர்வது என்றும் வாடுதல் உறுதி

அமைவது அனைத்தும் உடைவதும் நியதி

ஆரம்பம் அனைத்துக்கும் உள்ளது இறுதி.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.