Blog

  • ”வேர்களும் விழுதுகளும்”

    -சிறீ சிறீஸ்கந்தராஜா 

    ஞானசேகரன் சிறுகதைகள் –      தி. ஞானசேகரன்

    அணிந்துரை: பேராசிரியர் க. அருணாசலம்
    (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)

    1

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத் தமிழ்இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது பல உண்மைகள் புலப்படும். அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கு நோக்கலாம். காலத்தால் மிக முற்பட்ட சங்க இலக்கியங்கள் வெறுமனே இலக்கியங்களாக மட்டுமன்றி அக்கால மக்களின் வாழ்வியல் அம்சங்களைத் தெளிவாகப் புலப்படுத்தி நிற்கும் மிகச்சிறந்த வரலாற்றுப் பொக்கிஷங்களாகவும் விளங்குகின்றன என்னும் உண்மையைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். ஒருசிலர் அவற்றை ஏற்கத் தயங்கினர். ஆயின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாண்டு காலத் தேடுதல் முயற்சிகள், ஆய்வு முயற்சிகள் முதலியவற்றின் மூலமாக ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள “முந்து தமிழ்க்கல்வெட்டுக்கள்”என்னும் நூல் சங்ககால இலக்கியங்களை அலட்சியம் செய்தவர்களை வாய்மூடச் செய்துள்ளது.

    சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியைக் கொண்டுள்ள சங்ககாலத்தில் இலக்கியங்களைப் படைத்தளித்த இலக்கிய கர்த்தாக்களைக் கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புலப்படும். வறுமையில் வாடிய புலமையாளர்களும் அறிவுடை மன்னர்களும் புலமைமிக்க பெண்களும் கணக்காயர்களும் வணிகர்களும் எனப் பல திறத்தினரும் இலக்கிய கர்த்தாக்களாக விளங்கியுள்ளனர் என்பதை நாம் அறியமுடிகின்றது. இதே நிலைமையை நாம் தொடர்ந்து இற்றைவரை காணலாம். சோதிட வல்லுநர்களும் வைத்தியர்களும் இலக்கியங்களைப் படைத்தளித்தமையை ஈழத்தின் இடைக்காலத் தமிழ் இலக்கிய உலகிற் காணலாம்.

    ஈழத்திலே இருபதாம் நூற்றாண்டிலும் இன்றும்கூட வைத்தியத் துறையைச் சார்ந்த நந்தி, ஜின்னா ஷரிபுத்தீன், தி. ஞானசேகரன், எம். கே. முருகானந்தன், க. சதாசிவம், எஸ். முருகானந்தன் போன்றோர் வைத்தியத் துறையில் மட்டுமல்லாது நவீன இலக்கியத் துறையிலும் தமது தடங்களைப் பதித்துள்ளமை மனங்கொளத்தக்கது.

    2

    நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்துவரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்; ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்டகாலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அனுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.

    ஞானசேகரன் தமது “வாசனை” என்னும் சிறுகதையின் ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது. “……தாத்தா என்மீது அளவுகடந்த அன்பைச் சொரிபவர். பால்யப் பருவத்திலிருந்து இளமைப் பருவம்வரை அவரது அரவணைப்பிலும், நிழலிலும்தான் வளர்ந்தேன். ஒவ்வொரு பருவப் படிமுறை வளர்ச்சியிலும் அந்தந்தப் பருவத்திற்கேற்ப அவர் என்னை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். பாலர் வகுப்பில் படிக்கும் காலத்தில் தாத்தா தனது தோளில் என்னைச் சுமந்து பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றது இன்னும் என் நெஞ்சிலே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு என்னைத் தோளிலே சுமந்தபோது அவரது உடம்பின் வாசனை படிப்படியாக என் ஜீவனுக்குள் புகுந்து ஒன்றிப் போய்விட்டது. அந்த வாசனை என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு சாதாரணமானதல்ல. அந்த வாசனையின் சிறு அதிர்வுகூட என்னைப் பரவசத்தில் ஆழ்த்திவிடும். …தாத்தாவின் கனிவான பேச்சிலும் அவர் சொரியும் அன்பிலும் மயங்கிப் பல மணிநேரங்கள் அவரது மடியில் அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன். அவர் கூறிய கதைகள்தான் பிற்காலத்தில் நான் ஓர் எழுத்தாளனாக உருவாகுவதற்கு உரமாக அமைந்தது. இதனைப் பலமுறை நான் எண்ணியதுண்டு.”

    1960களிலிருந்து இற்றைய வரை எழுதிவரும் ஞானசேகரனது படைப்புகளில் மானுடத்தை இதய சுத்தியோடு நேசிக்கும் உயர் பண்பையும் சிறுமைகண்டு பொங்கியெழும் இயல்பையும் சமுதாயத்தில் நிலவிவரும் ஊழல்களையும் போலித்தனங்களையும் கண்டிக்கும் பாங்கினையும் மாறிவரும் கருத்தோட்டங்களை உள்வாங்கிப் புதியதொரு சமுதாயத்தினை உருவாக்கவேண்டும் என்னும் பேராவலையும் ஒருங்கே தரிசிக்க முடிகின்றது. அவர் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவராயினும் சாதி, மத பேதமற்ற சமுதாயத்தைக் காணவிழையும் முனைப்பினை அவரது சிறுகதைகள் பலவும் நாவல்கள் சிலவும் வெளிப்படுத்தி நிற்பதை அவதானிக்கலாம்.

    1977ஆம் ஆண்டு வெளிவந்த அவரது ‘புதிய சுவடுகள்’ என்னும் நாவல் இவ்வகையில் விதந்தோதத்தக்கது. அவரது ‘குருதிமலை’என்னும் நாவலும் ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக்கொண்ட அவர், வயதான நிலையிலும்கூட இன்றும் இளமைத் துடிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருத்தல் பாராட்டத்தக்க ஒன்றாகும். அவரது சிறுகதைகளும், குறு நாவல்களும், நாவல்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

    தமது புனைகதைகள் மூலம் நீண்டகாலமாகவே ஈழத்து இலக்கிய உலகிலும் தமிழகத்து இலக்கிய உலகிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார். புனைகதைகளைப் படைப்பதுடன் மட்டும் அமையாது கடந்த சில ஆண்டுகளாக ‘ஞானம்’ என்னும் தரமானதோர் இலக்கியச் சஞ்சிகையை மாதாமாதம் வெளியிட்டு வருகிறார். இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்துள்ளன. படிப்படியாக இச்சஞ்சிகையின் தரம் உயர்ந்து செல்வதனையும் பயன்மிக்க நேர்காணல்களும் விவாதங்களும், கட்டுரைகளும், சிறுகதைகளும், கவிதைகளும் இடம்பெற்று வருவதனையும் அவதானிக்கலாம்.

    ஞானம்’சஞ்சிகையின் தரத்தின் காரணமாகக் குறுகிய காலத்துள் இலங்கை, இந்தியா என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளைக் கடந்து, உலகில் தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் இது வலம்வந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இச்சஞ்சிகைமூலம் ஞானசேகரனின் சாதனைகளும் புகழும் உலகெங்கும் பரவிவருகின்றன. எழுத்தாளர் ஞானசேகரனிலும் பார்க்க ‘ஞானம்’சஞ்சிகையின் ஆசிரியரது பெயரே இன்று இலக்கிய உலகில் அதிகம் பிரபலமடைந்து வருவதைக் காணமுடிகின்றது.

    தமிழ் இலக்கிய உலகம் ஆரம்பத்தில் ஞாசேகரனைத் தரமானதொரு படைப்பாளியாகவே இனங்கண்டிருந்தது. ஆயின் ‘ஞானம்’சஞ்சிகை வெளிவரத் தொடங்கியதிலிருந்து இதழ்கள்தோறும் அவர் முன்வைக்கும் கருத்துகள், நேர்காணலின்போது ஆய்வாளர்களையும் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும் பாங்கு, தொடுக்கும் வினாக்கள், மணிவிழா நாயகர்களையும், மறைந்த எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்யும்போதும் நினைவுகூரும்போதும் வெளிப்படுத்தும் கருத்துகள், வாசகர்களின் கேள்விக்கான பதில்கள் முதலியவற்றின் மூலம் அவரது எழுத்தாற்றலை மட்டுமன்றி விசாலித்த அறிவையும் இலக்கியப் புலமையையும் எழுத்தாளர்களையும், ஆய்வாளர்களையும் இனங்காணும் ஆற்றலையும் கண்டு இலக்கிய உலகம் மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டிருக்கிறது.

    3

    இச்சிறுகதைத் தொகுதியிலமைந்துள்ள கதைகள் யாவற்றையும் ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஒரு சில உண்மைகள் புலப்படும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி எனவும் அவ்வக்கால மக்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் வரலாற்று ஆவணங்கள் எனவும் சமுதாயத்தை விமர்சனம் செய்யும் சாதனம் எனவும் சமுதாயத்தை அது இருக்கின்ற நிலையிலும் பார்க்க உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல முனையும் வலிமை வாய்ந்த ஆயுதம் எனவும் பலபடக் கூறுவர். மேற்கண்ட கருத்துகள் யாவும் ஞானசேகரனின் சிறுகதைகளுக்கும் பொருந்தக் கூடியனவே.

    இன்றைய யாழ்ப்பாணத்து இளந்தலைமுறையினர் பலரும் அறிந்திராத செய்திகள் பலவற்றைப் பல சிறுகதைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. சமகாலப் போர்ச்சூழலைச் சில சிறுகதைகள் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. சமுதாயச் சிக்கல்களைப் பல சிறுகதைகள் விமர்சனம் செய்கின்றன. மலையகத்தையும் கொழும்பு மாநகரையும் மையப்படுத்திப் பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இலங்கையையும், அவுஸ்திரேலியாவையும் தொடர்புபடுத்தும் அகலுலகத் தொடர்புகொண்ட சிறுகதையொன்றும் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் சிறுகதைகளாக மலர்ந்துள்ளன. இச்சிறுகதைகளை ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்குப் பிறகு வரும் வாசகர்கள் படிக்கும்போது இவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளத் தவறமாட்டார்கள் என்பதில் ஐயமில்லை.

    இத் தொகுதியிலமைந்துள்ள சிறுகதைகளைத் தெளிவு கருதிப் பின்வருமாறு பகுத்து நோக்கலாம்:

    (அ) யாழ்ப்பாணப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.

    (ஆ) மலையகப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.

    (இ) கொழும்பு மாநகரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகள்.

    (ஈ) போர்காலச் சூழலைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள்.

    (உ) ஆசிரியர் தாம்பெற்ற வைத்திய அநுபவங்களைப் புலப் படுத்தும் சிறுகதைகள்.

    (ஊ) அகலுலகத் தொடர்பு கொண்ட சிறுகதைகள்.

    [தொடரும்]

     

     

    Share
  • சித்ரா – 3

    -மீனாட்சி பாலகணேஷ் 

     (காதலின் புதியதொரு பரிமாணம்)

              மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;

    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

                                  *****************

                            தொடர்ச்சி: காட்சி – 3

              சித்ரா: அது முடியாத செயல். தணியாத Chitrangadha-3ஆர்வத்துடன் என்னை எதிர்கொள்ளும் அவருடைய பார்வை தாபமிகுந்த ஆன்மா தனது கரங்களால் அணைத்துக்கொள்வது போலுள்ளதே! அவருடைய இதயம் தளைகளை உடைத்துக்கொண்டு எல்லையற்ற ஆசையின் ஓலம் உடல் முழுவதும் படர்ந்தோடுவதை உணரும்போது, எவ்வாறு அவரை ஒரு யாசகனைப்போல் திருப்பி அனுப்ப இயலும்? முடியவே முடியாது!

              (மதனனும் வசந்தனும் நுழைகின்றனர்)

    ஆ! காதற்கடவுளே! எத்தகைய பயங்கரமான தீயில் என்னைச் சுட்டெரிக்கிறீர் நீர்? நான் எதனைத் தொட்டாலும் அது சூட்டால் எரிகின்றதே!

              மதனன்: நேற்றிரவு என்ன நடந்ததென அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

              சித்ரா: வசந்தமலர்கள் தூவப்பட்ட புல்படுக்கையில் நான் படுத்துக்கொண்டு அர்ஜுனன் என்னை, என்னழகைப் பற்றிக் கூறிய வர்ணனைகளை திரும்ப எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்டநாள் முழுவதும் சேர்த்துவைத்த நறுந்தேனை துளித்துளியாக சுவைத்து மகிழ்ந்திருந்தேன். எனது முந்தைய பிறவிகளைப்போலவே முந்தைய வாழ்க்கையையும் மறந்துவிட்டேன். என்னை விரைந்து செல்லும் சில பொழுதுகளே உள்ள ஒரு மலர்போல எண்ணிக்கொண்டேன்; அதற்குள்ளாக அது ரீங்காரமிடும் வண்டுகளின் புகழாரங்களைச் சூடிக்கொள்ள வேண்டும்; கானகத்தின் ரகசியங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்; ஆகாயத்தை நோக்காமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டும், தலைகுனிந்து கொண்டும் ஒரு சப்தமுமின்றி, தனது இறுதிமூச்சைப் புழுதிக்கு அளித்திட வேண்டும்; அவ்வாறு கடந்தகாலமும் எதிர்காலமும் அற்ற சிறுகதை போலும் அருமையான பொழுதினை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

              வசந்தன்: முடிவற்ற பெருமை நிறைந்த வாழ்வு மலர்ந்து நிறைவுறுவதும் ஒரேயொரு காலைப்பொழுதுதான்.

           மதனன்: பாடப்படும் ஒரு பாடலின் குறுகியபொழுதில் முடிவற்ற பொருள்பொதிந்துள்ளதனைப் போன்றதே அது!

              சித்ரா: தென்றல் காற்று என்னைத் தாலாட்டிட நான் உறங்கினேன். தலைக்குமேல் பூத்துக்குலுங்கிய மாலதிக்கொடியிலிருந்து எனது மேனி முழுதும் முத்தங்கள் விழுந்தன. எனது தலைமயிர், மார்பகம், பாதங்கள் என ஒவ்வொரு மலரும் ஒரு இடத்தைத் தேர்ந்து விழுந்து இறந்தது! நான் உறங்கினேன். எனது ஆழ்ந்த உறக்கத்தினிடையே தீயின் கூரான விரல்களைப்போல ஒரு ஆழமான ஆர்வமான பார்வை, எனது உறங்கும் மேனியைத் தீண்டியதை உணர்ந்தேன்.

              திடுக்கிட்டு எழுந்த நான் எனதுமுன்பு அந்தத் தவசி நிற்பதனைக் கண்டேன். மேற்குத்திசை நோக்கி நகர்ந்துவிட்ட நிலவு, இந்த மெல்லிய மனித உடலில் புனையப்பட்ட ஆச்சரியமிகுந்த தெய்வீகக்கலையை மரங்களின் இலைகளினூடாக வேவுபார்த்துக் கொண்டிருந்தது. வீசியகாற்று அழுத்தமான நறுமணச் சுகந்தங்களால் நிரம்பியிருந்தது; சில்வண்டுகள் ஓசையிடும் ஆரவாரம் இரவின் நிசப்தத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது; மரங்களின் நிழல்கள் ஏரியின் நீரில் ஓசையின்றிப் பிரதிபலித்தன. தனது கைத்தடியுடன் அவன் அங்கு ஒரு காட்டுமரத்தைப்போல உயரமாக, உறுதியாக, அசைவின்றி நின்றான்.

              கண்களைத் திறந்தபோது, நான் வாழ்வின் நிதர்சனங்களிலிருந்து இறந்துவிட்டது போலவும் ஒரு கனவின் வசப்பட்டு, நிழலுலகில் பிறந்துவிட்டது போன்றும் எனக்குத் தோன்றியது- நழுவும் ஆடைகளைப்போல எனது நாணமும் எனது காலடியில் நழுவி விழுந்தது. அவனுடைய அழைப்பு கேட்டது – ‘ஆருயிரே! எனது உயிரின் உயிரே!’ மறந்துவிட்ட எனது பிறவிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அதற்குப் பதிலளித்தது. நான், “எடுத்துக்கொள்! என்னை முழுமையாக எடுத்துக்கொள்!” என்றேன். எனது கரங்களை அவனை நோக்கி நீட்டினேன். நிலவு மரங்களின் பின்னேசென்று மறைந்தது. ஒரு இருள்திரை அனைத்தையும் மூடிக்கொண்டது. சுவர்க்கமும் பூமியும், காலமும் இடமும், மகிழ்ச்சியும் துன்பமும், இறப்பும் வாழ்வும் ஒன்றோடொன்று பிணைந்து தாங்கவியலாத இன்பவெள்ளத்திலாழ்த்தின. நாளின் முதல் ஒளிக்கீற்றுகளுடனும், பறவைகளின் முதல் ஒலிகளுடனும் நான் எழுந்து எனது இடதுகரத்தின் மீது சாய்ந்து அமர்ந்தேன். காலைநேரத்துப் பிறைநிலாவைப்போல் தனது இதழ்களில் தவழும் பொருளற்ற புன்னகையுடன் அவன் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான். விடியல்பொழுதின் இளஞ்சிவப்பு அவனது உயர்வான நெற்றியில் படர்ந்து அழகு செய்தது. நான் ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்றேன். பெரிய இலைகளை ஒன்றுசேர்த்து அவனுடைய முகத்தினை சூரியவெளிச்சத்தினின்று மறைத்தேன். என்னையே நான் பார்த்துக்கொண்டபோது பழைய மண்ணையே கண்டேன். நான் யாராக இருந்தேன் என நினைவு வந்தபோது, தன் நிழலையே கண்டு அச்சங்கொண்டு ஓட்டமாக ஓடும் மானைப்போல் ஷெபாலி மலர்கள் இறைந்திருந்த கானகப்பாதையில் ஓடினேன். ஒரு தனிமையான இடத்தைக் கண்டுபிடித்து, அங்கு அமர்ந்து எனது முகத்தை இரு கரங்களாலும் மூடிக்கொண்டு அழவும் புலம்பவும் முயன்றேன். ஆனால் கண்களில் நீரே வரவில்லை.

              மதனன்: அந்தோ! மானிட மகளே! நான் தெய்வீகப் பொக்கிஷத்திலிருந்து சுவர்க்கத்தின் இனிய தேறலை எடுத்து, அத்துடன் ஒரு உலகசம்பந்தமான இரவினை விளிம்புவரை நிரப்பி, உனது கையில் அதனை அருந்தி மகிழ அளித்தேன்! இருந்துமா இந்த அவலக்குரல்?

              சித்ரா: (வெறுப்புடன்) யார் அதனைப் பருகினார்கள்? வாழ்வின் மிக அபூர்வமான ஒரு ஆசை, காதலின் முதன்முதல் சங்கமம் எனக்கு அளிக்கப்பட்டது; ஆயினும் வலுக்கட்டாயமாக எனது பிடியிலிருந்து பறித்துக்கொள்ளவும் பட்டதே! இரவல் வாங்கிய இந்த அழகு, என்னைப் போர்த்துள்ள இந்தப் பொய்மை என்னைவிட்டு நழுவும்போது, நன்றாக மலர்ந்து முதிர்ந்த பூவின் இதழ்களைப்போல் அந்த இனிய சங்கமத்தின் ஒரே அத்தாட்சியையும் எடுத்துக்கொண்டு சென்றுவிடுமே! தனது நிர்வாணத்தின் கொடுமையையும் அவமானத்தையும் தாங்காமல் அந்தப்பெண் இரவும் பகலும் அழுதுகொண்டு அமர்வாளே!

              காதல்கடவுளே! இந்த சபிக்கப்பட்ட தோற்றம் ஒரு அரக்கனைப்போல் என்னுடன் இருந்துகொண்டு காதல் தொடர்பான அனைத்துப் பரிசுகளையும் களவாடுகிறது; எனது உள்ளம் விழையும் முத்தங்கள் அனைத்தையும் பறித்துச் செல்கிறதே!

              மதனன்: அந்தோ! உனது அந்த ஓர் இரவு எப்படி வீணாகி விட்டது! உனது மகிழ்ச்சி எனும் படகு கண்ணில் கண்டும், அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு கரையைத் தொட முடியவில்லையே!

              சித்ரா: சுவர்க்கம் எனக்கு மிக அருகில் நெருங்கி வந்தும், அது என்னை இன்னும் வந்தடையவில்லை என்பதனை நான் கணப்பொழுது மறந்துவிட்டேன். ஆனால் காலையில் எனது கனவிலிருந்து கண்விழித்ததும் எனது உடலே எனது எதிரியாக மாறக் கண்டேன். அவளை தினந்தோறும் அலங்கரிப்பதும், அவளுடைய காதலன் தழுவிக்கொள்ள அவனிடம் அனுப்புவதும் எனக்குப் பிடிக்காத வேலை. ஓ கடவுளே! உனது வரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வீராக!

              மதனன்: ஆனால் நான் அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் உன்னால் உன் காதலன் முன்னால் நிற்க இயலுமா? மதுக்கிண்ணத்திலிருந்து முதலில் சிறிது அருந்தியுள்ளவனிடமிருந்து, அவனுடைய மகிழ்ச்சியைத் தட்டிப்பறிப்பது கொடுமையல்லவா? எத்தகையதொரு கழிவிரக்கம் நிரம்பிய கோபத்துடன் அவன் உன்னை எதிர்கொள்வான் தெரியுமா?

              சித்ரா: அது இப்போதைய நிலைமையை விட மேலானது. எனது உண்மை வடிவை அவனுக்குக் காண்பிப்பேன்; இந்த வேடத்தைவிட அது உயர்வானது. அவன் என்னை நிராகரித்தாலும், மறுத்து என் இதயத்தைச் சிதறடித்தாலும், அதையும் அமைதியாகப் பொறுத்துக் கொள்வேன்.

              வசந்தன்: எனது புத்திமதியைக் கேட்டுக்கொள். வசந்தகாலம் முடிந்து இலையுதிர்காலம் துவங்கும்போது பழங்கள் கனியும் வெற்றிப்பெருமிதம் உண்டாகும். காதல் வெப்பத்தால் மலர்ந்த உன் உடலெனும் மலர் வாடியுதிர்ந்து போகும்போது அர்ஜுனன் மகிழ்ச்சியாக உன்னிடம் உள்ள முதிர்ச்சியின் உண்மையைப் புரிந்துகொள்வான். குழந்தாய்! உனது களியாட்டத் திருவிழாவிற்குச் சென்று மகிழ்ந்திருப்பாயாக!

    காட்சி- 4

              சித்ரா: வீரரே! என்னை ஏன் அவ்வாறு பார்க்கிறீர்கள்?

              அர்ஜுனன்: நீ அந்த மலர்மாலையை எவ்வாறு தொடுக்கிறாய் எனப் பார்க்கிறேன். இரட்டை சகோதர-சகோதரி என்னும் தோலும் நளினமும் இணைந்து உன் விரல்நுனிகளில் எவ்வாறு விளையாட்டாக நடனமாடுகின்றன எனக்காண்கிறேன். பார்த்துக்கொண்டே சிந்தித்தவண்ணம் இருக்கிறேன்.

              சித்ரா: என்ன சிந்திக்கிறீர்கள் ஐயா?

              அர்ஜுனன்: உன்னைப் பற்றித்தான், நீ இதே மென்மையான தொடுதலுடனும் இனிமையுடனும் நான் தலைமறைவாயுள்ள எனது இந்த நாட்களை நான் நாடு திரும்பும்போது எனக்குச் சூட்டும் கிரீடமாக வைக்க ஒரு தெய்வீகமான மலர்ச்சரமாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறாய்;

              சித்ரா: வீடா? (நாடா?) ஆனால் இந்தக் காதல் வீட்டிற்கானதல்லவே!

              அர்ஜுனன்: வீட்டிற்கல்லவா?

              சித்ரா: ம்ஹூம்; அதனைப் பற்றியே பேசவேண்டாம்! நிரந்தரமானதையும் உறுதியானதையுமே உமது வீட்டிற்கு எடுத்துச் செல்வீராக. வழியில் பூத்த இந்தச் சிறிய காட்டுமலரை அவ்விடத்திலேயே விட்டுச் செல்லுங்கள்; நாளின் முடிவில் அது மற்ற வாடும் மலர்களுடனும், அழுகும் இலைகளுடனும் அழகாகக் கிடந்து மடிய விட்டுவிடுங்கள். அதனை உங்களுடைய மாளிகையின் கூடத்திற்கு எடுத்துச்சென்று விடாதீர்கள்; அங்கு அதன் மதிப்பையறியாத கல்தரையில் வீசியெறியப்பட்டு, வாடி, மறக்கப்பட்டும் விடும்.

              அர்ஜுனன்: நம்முடையதென்ன அத்தகைய காதலா?

              சித்ரா: ஆம்! வேறொன்றுமல்ல! ஏன் அதற்காகப் பச்சாதாபப்பட வேண்டும்? பொழுதுபோக்குக்கான ஒன்று அதன் காலத்தைக் கடந்து வாழக்கூடாது. அது வெளியேற வேண்டிய வாயில் மூடப்பட்டுவிட்டால், மகிழ்ச்சி துன்பமாக மாறிவிடும் நிலை வந்துவிடும். அது நீடிக்கும்வரை மட்டுமே அதனைக் கொண்டாட வேண்டும். மாலைப்பொழுதின் நிறைவினை உங்கள் காலைப்பொழுதின் தேவைகளுக்குமேல் உரிமை கொண்டாடக்கூடாது. அந்தநாள் முடிவுற்றுவிடும்.

              இந்த மாலையை அணிவீராக! நான் களைப்பாக இருக்கிறேன். என்னை உம் கரங்களில் ஏந்திக் கொள்ளுங்கள் அன்பே!  நமது இதழ்களின் இனிய சந்திப்பில், இந்த வீணான பிதற்றல்கள் நிறைந்த மனக்குறைகள் இறந்து போகட்டும்.

            அர்ஜுனன்: உஷ்! கேள், என் கண்ணே! அந்த அமைதியான மரங்களினூடே மாலைநேரத்துக் காற்றின் மூலம், தூரத்துக் கிராமத்திலிருந்து ஒலிக்கும் கோவில்மணியின் ஓசையைக்கேள்!

    [தொடரும்]

    Share
  • எமது வாழ்வில் கோவில் – பகுதி III

     

          மகாதேவஐயர் ஜெயராமசர்மா

                  B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) SLEAS

                    முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்              

    சமயம் தேவையா தேவையில்லையா என்பதற்கு அப்பால் சமயம் என்றால் என்ன என்பதை நன்கு விளங்கிக் கொள்ளுதலே முக்கியமாகும். சமயம் என்பது நல்லதொரு வாய்ப்பு என்று ஏன் கருதக்கூடாது ? நல்ல வாய்ப்புக்களை நமக்கெல்லாம் நல்லபடி தந்து நம்மையெல்லாம் வையத்தில் வாழ்வாங்கு வாழப் பண்ணுகிறது என்று சமயத்துக்கு விளக்கம் சொன்னால் பொருந்தும் அல்லவா ? நல்ல சமயமாக இருக்கிறது இதை நீ நழுவவிடாதே என்று சாதாரணமாக  நாம் கூறுகிறோம் அல்லவா ? அங்கு ” சமயம் ” என்பது எதைக் குறிக்கிறது தெரியுமா ? நல்வாய்ப்பினையே உணர்த்துகிறது என்பது முக்கியமாகும்.

     ” சைவசமயம் ” என்றுதான் அழைக்கின்றோம். ” சைவமதம் ” என்று அழைப்பதில்லை. காரணம் சமயம் என்னும் நன்னெறியூடாக மனத்திலே ” மதம் ” என்னும் ஆணவம் வந்து சேர்ந்துவிடக் கூடாது என்பதே காரணம் என்பதை  நாமனைவருமே அறிந்து கொள்ளுதல் அவசியமாகும். இவ்வாறு புனிதம் மிக்க நம் சைவசமயம்  நிலைப்பதற்குக் கோவில்களே காரணமாக இருக்கின்றன என்பதே மிகவும் முக்கிய அம்சமெனலாம். சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் நிறைவேற்றக் கோவில்கள் இன்றியமையா திருக்கின்றன. சமயம் காட்டும் ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கக் கோவில்கள் உதவுகின்றது. சமயத்தின் மூலப்பொருளான இறைவனே உறையும் இடமாக  கோவில்களே விளங்குகின்றன என்பதும் இங்கு முக்கியமானதாகும்.

    மண்ணில் நல்ல வண்ணம் வாழவேண்டும் என்பதை விரும்பும் யாவருக்கும் சமயமும் கோவில்களும் இன்றியமையாதன என்பதுதான் நம் சமய குரவர்களின் எண்ணமாகும். இதனால் தான் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் யாவரும் கோவிலைச் சுற்றியே தங்களின் வாழ்வினை அமைத்துக் கொண்டார்கள். அவர்களின் ஆன்மீகத் தொண்டுகள் அனைத்துமே கோவில்களில் தான் ஆரம்பமாகின்றன.சரியை, கிரியை, யோகம், ஞானம், என்னும் வகையில் இவர்களது வாழ்க்கையும் செயற்பாடுகளும் கோவிலை வைத்தே நடைபெற்றன என்பதை வரலாற்றினால் அறிந்து கொள்ளுகின்றோம். ஞானத்தை  இவர்கள் அனைவருக்கும் வழங்கிய இடமாகவும் கோவில்களே அமைகின்றன. மூன்றுவயதில் சம்பந்தர் ஞானப்பால் உண்டதும் முதல் திருப்பதிகமான ” தோடுடைய செவியன் ” பாடியதும்,

    சூலைநோய்நீங்கி ” கூற்றாயின வாறு ” பதிகத்தை அப்பர் பெருமான் பாடியதும்,

     இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு ” பித்தா பிறைசூடி” என சுந்தரப் பெருமான் பாடியதும் கோவிலில் தான் என்பது மிக மிக முக்கியமான விசயம் எனலாம்.

    மக்கள் மனத்தை நல்லமுறையில் மடைமாற்றம் செய்வதற்குக் கோவில்கள் தாம் நிலைக்களம் என்பதை நமது அடியார்கள் நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். அதனால் தாமும் கோவிலில் தொண்டுசெய்து தம் வழியில் மக்களையும் இட்டுச்சென்று அவர்கள் வாழ்வில் கோவிலை முக்கியமானதாக்கி விட்டார்கள். இதனால் ஊர்கள் தோறுமே சிறியதும் பெரியதுமாகக் கோவில்கள் தோற்றம் பெறலாயின. மக்களின் அன்றாட வாழ்வே பக்கத்துக்குக் கோவில்களைத் தொட்டே தொடங்கும் நிலை உருவாக்கம் பெற்றுவிட்டது.

    திருமுறைகளைப் புராணங்களைப் படிக்கும் இடமாகக் கோவில்கள் விளங்கின.கோவில்களை மையமாக வைத்து ஊர்களின் பெயர்களும் பிரசித்த மாயின. ஊரின் பெயரைச் சொன்னால் அது கோவிலைக் குறிப்பதாகவே அமைந்துசிறப்பினையும் பெற்றது. சிதம்பரம் என்றால் அது ஊராக இருப்பினும் ஊர்மறந்து சிதம்பரம் நடராஜப் பெருமான் கோவில்தான் அங்கு வந்து நிற்கும். அதுபோல் பழனி,திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், தஞ்சாவூர்,மயிலாப்பூர், ஸ்ரீரங்கம்,திருப்பதி,பழமுதிர்சோலை,திருவாவினன்குடி,சீர்காழி, திருவண்ணாமலை,திருக்கழுக்குன்றம், இராமேஸ்வரம், கதிர்காமம், நல்லூர்,மண்டூர், வெருகல், சித்தாண்டி, செல்வச்சன்னிதி, நயினாதீவு, மாவிட்டபுரம், தெல்லிப்பளை, ஒட்டிசுட்டான்,திருகோணமலை, திருக்கேதீச்சரம், வற்றாப்பளை, இந்த ஊர்ப்பெயர்களை உச்சரித்தவுடன் அந்த ஊரினை மறந்து அங்குள்ள ஆண்டவனின் கோவில்களே நமக்கு

    மனதில் வந்து நிற்கிறது என்பதை எவராலுமே மறுத்துவிடல்முடியாது அல்லவா? காராணம் – அந்த அளவுக்கு நமது வாழ்விலே கோவில்கள் இணைந்துவிட்டன.

    நம்மோடு இணைந்துவிட்ட கோவில்களின் அமைப்பினை உற்று நோக்கும் பொழுது,  ஒரு மனிதன் படுத்திருந்தால் எப்படி இருக்குமோ அதே அமைப்பினையே காணமுடிகிறது. மனிதனின் தலை கர்ப்பக்கிரக மாகவும் , கழுத்து அந்தராளமாகவும், தோள் முகமண்டலமாகவும், வயிறு மகாமண்டபமாகவும், கால்கள் பிரகாரமாகவும், பாதங்கள் கோபுரமாகவும், அமைந்திருக்கின்றன.

    கோவில் என்பது சாதரண இடமல்ல. அது பல தத்துவங்கள் பொதிந்திருக்கும் இடமாகும். மனித உடலை ஒத்தவிதத்தில் கோவிலின் அமைப்பு உள்ளது என்பதைப் பார்த்தோம். மனித உடலில் ஆன்மா குடி கொண்டுள்ளதைப் போல கோவிலில் ஆண்டவன் குடிகொண்டு இருக்கின்றான். இதனை ” தேஹோ தேவாலய ஹ ப்ரோக்தோ ஜீவோ தேவஹஸனாதனஹ ” என்று ஸ்கந்ததோபனிஷத் சொல்கிறது. இக்கருத்தை வலியுறுத்துவது போலவே திருமூலரும் ” உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் ” என்றார். அப்பர் பெருமானும் ” காயமே கோவிலாக ‘ என்று திருத்தாண்டகம் வாயிலாகக் காட்டுவதும் நோக்கத்தக்கதே.

    கோவில்களில் வழிபடுவதற்கென இறைவனின் திருவுருவங்கள் கல்லினாலும், செம்பினாலும், அமைக்கப்படுகின்றன. பொன்னும் மணியும் , தங்கமும், வைரமும், வெள்ளியும், நிறைந்திருந்தும் அவற்றை யெல்லாம் தேர்ந்தெடுக்காது  கல்லையும் செம்பையும் எடுத்த காரணம்தான் என்ன ? நமது முன்னோர்களின் மதி நுட்பத் தையே இது காட்டுகிறது.

     இறைவன் ஒளி வடிவானவன். இதனால் தான்

      ” சோதியே சுடரே சூழொளி விளக்கே “

    ” மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் “

    ” ஒளிவளர் விளக்கே “

    ” தீபமங்கள ஜோதி நமோநம”

    ” பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு ” என்று அடியவர்கள் பாடினார்கள்.

    கல்லில் நெருப்புத் தங்கி இருக்கிறது என்பதை நமது முன்னோர்கள் கண்டார்கள். இதனால் கல்லையும் கல்லையும் உரசித் தீயை உண்டாக்கினார்கள். கும்பாவிஷேக வேளையில் சிவாக்கினியால் எழும் சிவஞான ஒளியை நிறை குடமாகிய கும்பத்தில் சேமித்து  அக்கும்ப நீரால் நெருப்பு நிறைந்துள்ள கல் விக்கிரகத்தை அபிஷேகம் செய்து கல் விக்கிரகமாகிய கடவுளை நிறுவினார்கள்.

     உற்சவகாலத்தில் எழுந்தருளும் உற்சவ மூர்த்தி செம்பினால் ஆக்கப் பட்டது. செம்புக்கு மின் சக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் இருக்கிறது. மின் பிறப்பாக்கியிலிருந்து மின் சாரத்தைப் பரப்ப செம்பினாலான  கம்பிகள் பயன்படுத்தப் படுவதைக் காண்கின்றோம். அதே போல உள்ளே இருக்கின்ற கற்பக்கிரகக் கல்லால் ஆன மூர்த்தியின் தெய்வ மின்  ஆற்றலை வெளியில் கொண்டுவந்து அடியார்களுக்கு அருளி அவர்கள் ஈடேற உதவுவதற்காகவே செம்பினால் ஆன உற்சவ மூர்த்தியை நமது முன்னோர்கள் அமைத்தார்கள். கல்லும் செம்பும் மனிதனது வாழ்வில் மிகவும் முக்கியமானவை. அப்படி முக்கியமான வற்றையே கோவிலிலும் சேர்த்து அதற்குத் தத்துவ ரீதியாக விளக்கம் கொடுத்த நமது முன்னோர்களின் மதி நுட்பத்தைக் கட்டாயம் போற்றியே ஆக வேண்டும்.

    (தொடரும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    150911 -Van Vihari -lr

    ’’கனைத்திளங் கன்றவர் காலணுகிக் கோத
    வனத்தில் விருந்தா வனத்தோர்: -தினத்துக்கும்(டெய்லி)
    வண்ணமாய் கேசவ் வரைந்திடும் வள்ளலைக்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    பகவான் உவாச….
    ————————

    170911 - Maya -Dialogue with Arjuna -lr

    ”நாணை இழுத்திட மானேநீ நாணாதே,
    ஆனை படுத்தால் அசுவமட்டம் -சேனைக்
    களம்நீங்க செல்லாத காசாவாய், வேந்தருன்
    உளம்நோக வைப்பார் உவந்து”….

    “சரணா கதிசெய்து சும்மா இருப்பாய்,
    கரணா திகள்கருவி கர்த்தா-முரணாகும்(மாயை);
    தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்சொல்கேள்
    நூறை ஒழிக்க நிமிர்”….

     
    “கைவல்யம் கேட்டாய் களத்தில் களைப்புற்று –
    மைவண்ணன் சொன்னான் மறுமொழி -கைவல்யம் –
    கைவில்யம் தானுனக்கு ,பொய்இப் புவிவாழ்வு –
    செய்வனபார்த் தாதிருந்தச் செய் “….கிரேசி மோகன்….

    ”ஞானி, முழுமூடன், நான்நீ எனயிங்கு
    மேனி பலகொண்ட ஆன்மனவன் -தோணி
    உடலாம், துடுப்பு உயிராம், அவனோ
    கடலும் கடப்பவனும் காண்”….!

    ”விரையற்ற பூக்கள் விரயமாதல் போலே
    உரையற்ற சொற்கள் உதிர்ப்பர் -மறையுற்ற
    வாசகத்தில் மேம்போக்காய் மீதுலாவி கற்றோரைப்
    பேசுவார் கேலி புரிந்து”….!

    Share
  • பொருளாதார மாற்றங்களால் இன்றைய நிலை

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு புதிய வரிவிதிப்பு கொள்கை, ஜி.எஸ்.டி. அறிமுகம் தினசரி பெட்ரோலியப்பொருட்களின் விலைவிதிப்பு, வங்கிகளுக்கு வானளாவிய அதிகாரங்கள் என பொருளாதார மாற்றங்களை நடுவண் அரசு பெருமளவில் கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றங்களால் அரசிற்கோ அல்லது பொது மக்களுக்கோ, அல்லது அதைச்சார்ந்த நிறுவனங்களுக்கோ எந்த அளவில் பயன் ஏற்பட்டுள்ளது? இந்த மாற்றங்களால் அரசின் வரி வருமானம் அதிகரித்துள்ளது என்பதில் ஐயமில்லை. கடந்த சூலை மாதத்தில் 70 சதவிகித கணக்குகள் மூலமாகவே உரூ 90,000 கோடி அரசிற்கு வருமானமாகக் கிடைத்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதே 100 சதவிகிதமாக இருந்தால் ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் கோடி உரூபாய் மாத வரி வருமானமாகும். ஆண்டு ஒன்றிற்கு 15 இலட்சத்து 60,000 கோடி உரூபாயாகும்.

    பெட்ரோலியப் பொருட்கள் தினசரி விலை மாற்றத்தால் 65 உரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்று 73 உரூபாயாக உள்ளது. எந்தவிதமான கட்டுப்பாடுகளற்று இந்த இரண்டு மாதங்களில் சுமாராக லிட்டருக்கு 8 உரூபாய் விலை ஏற்றப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான உரூபாயின் மதிப்பானது மூன்று மாதங்களில் இல்லாத வகையில் உச்சபட்ச நிலையை எட்டியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் சந்தை நிலவரப்படி விலையில் பெரும் மாற்றங்கள் இல்லை. ஆக, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 65 உரூபாய்க்கு கீழ் இருக்கவேண்டும். ஆனால் அந்த பெட்ரொல் விலைக்குரிய கணக்கீடுகள் சரிவரச் செய்யப்படவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது. மத்திய நிதி அமைச்சர் அந்தந்த மாநிலங்கள் பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கக்கூடிய வரிவிதிப்பை விலக்கக்கோரியும் இதுவரை எந்த மாநில அரசும் இதைச் செயல்படுத்தவில்லை. ஒரு புறம் எண்ணெய் நிறுவனங்களின் கேள்வி கேட்பாரற்ற விலை நிர்ணயங்களும், மாநில அரசுகளின் வரிவிதிப்புகளும் மக்களை கொள்ளையடிப்பதாகவே உள்ளது வேதனைக்குரியதாகும்.

    உயர் மதிப்பு நோட்டு செல்லாததாக அறிவித்தபோதும், புதிய உயர் மதிப்பு நோட்டுகள் அறிவித்தபோதும் மக்கள் பல்வேறு சிரமங்களை அடைந்துள்ள நிலையிலும் அரசிற்கு உறுதுணையாகவே இருந்துள்ளனர். ஆனால் இதனுடைய பலாபலன் என்று பார்க்கும்போது மிகப்பெரிய சுழியமாகவே தெரிகிறது. வங்கித் துறையினரின் செயல்பாடுகள் மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை விடுத்து தங்களின் வருமானத்தைப் பெருக்குவதைச் சார்ந்ததாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்டண விதிப்புகளும் காரணமற்ற பண வசூல்களும் வங்கித் துறையின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. வங்கிக் காசோலைகள் பரிமாறும் இடங்கள், முன்பெப்போதும் இல்லாத வகையில் காலை ஆறு மணிக்கே செயல்படத்தொடங்கி வங்கிக்கணக்கில் பணம் இல்லையென்று காசோலைகள் திருப்பி அனுப்புதலும் அல்லது அந்தக் கணக்கில் பணம் இருந்தால் 12 மணிக்கு மேல் செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கின்றனர். வங்கி திறந்தவுடன் வங்கிக்கணக்கில் அந்த காசோலைக்கான பணம் செலுத்தப்பட்டு இருந்தாலும் காசோலைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதற்குக் கட்டணமாக 500, 600 உரூபாய்கள் வசூலிக்கப்படுகின்றன. இதே பழைய முறையில், காசோலை திருப்பி அனுப்புவதற்கு முன்பு ஒருமுறை வங்கிக் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு அதன் பின்பே திருப்பி அனுப்பப்படும். ஆனால் வங்கிகள் இன்று தங்கள் வருமானத்தை மட்டும் கணக்கில் கொண்டு செயல்படுவது வருத்தத்திற்குரியதாகும்.

    வங்கிகளிலிருந்து புழக்கத்திற்கு பணம் வெளியிடப்படுகிறது. ரொக்க வியாபாரம் செய்யக்கூடியவர்களிடமும் பெருமளவில் பணப்புழக்கம் இருக்கிறது. ஆனால் வங்கிகளில் இந்தப் பணத்தைச் செலுத்தினால் பணப்பரிவர்த்தனைக் கட்டணமாக பெருந்தொகை வசூல் செய்யப்படுவதால் வங்கிகளில் பணம் செலுத்த தயக்கம் காட்டும் நிலை ஏற்படுகிறது. இதனால் பணப்புழக்கத்திற்குரிய உரூபாய் நோட்டுகள் மிகவும் குறைவாகின்றன என்றாலும் இதுவே கருப்புப் பணத்திற்கான ஆரம்பமாகவும் ஆகலாம் என்பதும் கவனிக்கத்தக்கது. நிதியமைச்சகமும் அரசும் வங்கிகளில் பணத்தைச் செலுத்துவதற்கு உற்சாகப்படுத்தியும், வங்கிகளிலிருந்து பணம் வெளியேறுவதற்கு பழைய கட்டுப்பாடுகளை தொடர்ந்தாலுமே நம் பொருளாதாரம் பெருமளவில் சீர்படும்.

    பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் எடுத்த பிறகும் டாலருக்கு நிகரான நம் உரூபாயின் மதிப்பு பெருமளவில் ஏற்றம் பெறவில்லை என்பதும் வருத்தத்திற்குரிய விசயமாகும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (239)

    செல்வன்
    இவ்வார வல்லமையாளராக அன்பு நண்பர் வேந்தன் அரசு (இயற்பெயர் ராஜு ராஜேந்திரன்) அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
    வேந்தரின் 69ஆம் பிறந்தநாள் இவ்வாரம் வந்ததால் அவர் அனைவராலும் வாழ்த்தப்படுகிறார். அந்த வாழ்த்துகள் வேந்தரின் வலையுலக எழுத்து வன்மைக்கு சான்றுகூறுவதாக அமைந்தன. அவ்வன்மையை 2005ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை முதல்வரிசையில் அமர்ந்து கண்டுகளிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியதை மிகப்பெரும் பேறாக கருதுகிறேன்.
    2005ஆம் ஆண்டு அன்புடன் எனும் குழுவில் முதல்முதலாக நுழைந்தேன். அதுவே தமிழ் வலையுலகில் என் முதல் எழுத்துப்பயணம். அன்புடனில் என்னை ஈர்த்தவர்களில் முதன்மையானவர் வேந்தர். அங்கே நுழைந்ததும் அவர் கோவையை சேர்ந்தவர் என்பதும் நான் படித்த மணிப்பள்ளியில் படித்தவர் என்பதும் இருவரையும் உடனே இணைத்தன. அதன்பின் சுதந்திர பொருளாதாரம் குறித்து அவர் எழுதிய மடல்கள் என்னை மிகக் கவர்ந்தன. அவுட்சோர்ஸிங் மூலம் இந்தியாவுக்கு நன்மை கிடைப்பதை ஒரு மிகக் குறுகிய கதை மூலம் எழுதி என்னை வியப்பில் ஆழ்த்தினார். நான் சிரமப்பட்டு பத்தி, பத்தியாக எழுதும் கட்டுரைகள் தரும் தாக்கத்தை விட ஒரு வரி, ஒரு பத்தியில் அவர் எழுதும் கதைகள், கருத்துக்கள் ஆகியவை சுதந்திர பொருளாதார கோட்பாட்டை எளிதில் விளக்கின.
    1
    வேந்தர் நேசிக்கும் விசயங்கள் என பட்டியல் இட்டால் மூன்றாமிடத்தில் சுதந்திர பொருளாதாரம், இரண்டாமிடத்தில் அவர் வாழ்ந்த கோவை மாநகரம் மற்றும் முதலிடத்தில் ஐயன் திருவள்ளுவர் ஆகியோர் இடம் பிடிப்பார்கள். வள்ளுவர் மேல் கொண்ட தளராத அன்பினால் “வள்ளுவம் என் சமயம்” என வள்ளுவத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றவர் வேந்தர். சும்மா சொல்வதுடன் நின்றுவிடாமல் தமிழை ஆதரித்து கட்டுரைகள், தன்னால் இயன்ற அளவு தமிழறிஞர்களுக்கு நிதியுதவி என செய்துவந்தவர்.
    தமிழ் இணைய வரலாற்றை யாகு குழுக்கள் காலம் 1.0, கூகிள் குழுக்கள் காலம் 2.0, முகநூல் காலம் 3.0 மற்றும் தற்போது விசுவல் மீடியா காலம் 4.0 என பிரித்தால் வேந்தர் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவர். இணையம் 2.0 தலைமுறையில் குழுக்களில் 500, 1000 பேர் இருந்தாலே அது மிக அதிகம். மிக நீள மடல்களை தட்டி அனுப்பி ஓரிரு பேர் நாள்கணக்கில் விவாதம் செய்வோம். அவ்வகையில் இணையம் 2.0 ஒரு மிக கடினமான தளம் என கூறவேண்டும். அந்த தளத்தில் வேந்தர் போன்ற முன்னோடிகளிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
    வேந்தரின் 60வது பிறந்தநாள் விழாவுக்கு நேரில் சென்று அவரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் உரையாடுகையில் அவரது முற்போக்கு கருத்துக்களை அறிந்துகொண்டேன். பெண்ணியம், ஆன்மிகம், திராவிடம், பகுத்தறிவு போன்ற பல விசயங்களில் மிக முற்போக்கு கருத்து கொண்டிருந்தாலும், தன் கருத்தை சுயபரிசீலனை செய்ய அவர் தயங்கியது இல்லை. குறிப்பாக இவ்விசயங்களில் ஆழ்ந்துள்ளவர்கள் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் தொண்டர்களாக, அல்லது தலைவர்களின் அபாலஜிச்டுகளாக மாறிவிடுவது வழக்கம். வேந்தர் விதிவிலக்கு. தன் கருத்தை தன் கருத்தாக எடுத்து வைப்பாரே ஒழிய எந்த அரசியல் தலைவரையோ, தத்துவஞானியையோ மேற்கோள் காட்டமாட்டார். அவ்வளவு ஏன் அவர் நேசிக்கும், ஐயன் வள்ளூவரின் கருத்துக்களை கூட விவாதங்களில் மேற்கோள் காட்டியதில்லை. கடவுள் மறுப்பில் உறுதியாக நின்று திருவள்ளுவரை கூட அவர் இதில் மறுத்துள்ளார்.
    இவரது அக்கரை சீமையிலே எனும் மடல் தொடர் மூலம் சின்சினாட்டி நகர் வாழ் அமெரிக்கர்களை குறித்து அறிந்து கொள்ள இயன்றது. தற்போது நீள் மடல்கள் இடுவதை மிக குறைத்துக்கொண்டு ஒருவரியில் ட்வீட் போல தன் கருத்துக்களை சுருக்கி மடலாடல் குழுக்களில் எழுதி வருகிறார். முகநூலுக்கு பெருமளவு இவரது எழுத்து குடிபெயர்ந்து விட்டது
    இணையம் 4.0வில் வெற்றிக்கொடி நாட்டவிருக்கும் இணையதலைமுறைக்கு வேந்தரின் நற்பண்புகள் அமைய உதவும் என நம்பி அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.
    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • படக்கவிதைப் போட்டி (127)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    21622086_1427486197305575_203494868_n

    கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.09.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • அவள் ஒரு பெண்

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    image (1) 

     

     

     

     

     

     

     

     

     

    எனக்குப் பரிசெதுவும் தருவ தில்லை

    என்னினிய காதலி !

    நாட்டுப் புறத்து நங்கை இல்லையென

    நான் அறிவேன்.

    என்றென்றும் அன்பை அள்ளித்

    தருபவள் அவள்.

    எனக்குப் பரிசு தரமாட்டாள்

    என் காதலி !

    தனிமையில் வாடினால் என்னைத்

    தாலாட்டுவாள் அவள் !

    பாசாங்கு செய்கிறாள் என்பார்

    பக்கத்தில் இருப்பவர்.

    அப்படி அவள் இல்லை என்று

    அறிந்தவன் நான்.

    தன்னை ஓர் ஆடவன் உற்று நோக்க

    இடம் தராதவள் !

    நான் அழுவதைப் பார்த்தால்

    மனம் உடைவாள் !

    பூரித்து போவாள் நானவளை

    ஒருபோதும்

    பிரிய மாட்டேன் என்றால் !

    எனக்குப் பொறாமை உண்டாக்கத்

    துணியாதவள்.

    என்னைப் புரிந்து கொண்டவள்;

    தன் காதலனை மட்டும்

    என்றும் நேசிப்பவள்.

    தன் காதலை, நேரத்தை எல்லாம்

    தருவது எனக்குத் தான்  !

    ஏனென்று கேட்காதே !

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 94

    க. பாலசுப்பிரமணியன்

    இயக்கம் (தசை) சார்ந்த நுண்ணறிவு (Bodily- Kinesthetic Intelligence)

    education

    “உங்க பையன் ஓரிடத்தில் அஞ்சு நிமிடம் உட்கார மாட்டேன் என்கிறான்”

    “அவனை ஓரிடத்தில் கட்டுப்படுத்த முடியாது”

    “அவனுக்கு எப்போதும் எதையாவது நோண்டிக் கொண்டே இருக்கணும்:ஒரு சாமானை உடைத்துப் போடுவது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்”

    “அவனுக்கு படிப்பிலே கவனமே இல்லை, எப்பப்பாருங்க விளையாட்டு, அது அவனுக்கு சோறு போடுமா”

    “ஏண்டா குட்டி போட்ட பூனை மாதிரி இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு…. ஏதாவது ஓரிடத்தில்  உட்கார மாட்டாயா”

    –  என்றெல்லாம் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளைப் பார்த்து விமர்சிப்பது கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.

    இத்தகைய மாணவர்களில் பலரும் இந்த இயக்கம் சார்ந்த நுண்ணறிவில் (Bodily Kinesthetic intelligence) வல்லமையுள்ளவர்களாக இருக்க வாய்ப்புண்டு.  இவர்களை “Body Smart ” என்று அழைப்பார்கள்

    பொதுவாக இந்த நுண்ணறிவில் வல்லமையுள்ள மாணவர்களின் சிறப்பு அம்சங்கள்:

    1. இவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து செய்யும் செயல்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்
    2. அருகில் உள்ளவர்களைத் தொட்டுப் பேசுதல், அதிகமான உடல் அசைவுகளைக் காட்டுதல் இவர்களிடம் வெளிப்படையாகத் தெரியும்.
    3. மற்றவர்களிடம் பேசும் பொழுது மிக அருகில் நிற்கும் பழக்கம் உடையவர்கள்.
    4. ஏதாவது ஒரு பொருளையோ அல்லது செயலையோ செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்
    5. படிப்பதை விட எழுதுவதில் ஈடுபாடு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.
    6. படிக்கும் பொழுது ஒரு இடத்தில அமர்ந்து படிக்காமல் நடந்துகொண்டே படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள்.
    7. விளையாட்டு பரிசோதனை போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்கள்.
    8. கூட்டங்களை ஒழுங்குபடுத்தல், சேவைகள் செய்தல், தன்னிச்சையாக உதவி செய்தல் போன்றவற்றில் முன்னிருப்பார்கள்
    9. தலைமைப் பொறுப்புக்கள் மற்றும் மேலாண்மை ஏற்பதில் தயங்க மாட்டார்கள்,
    10. இவர்கள் துடிப்புடனும் அதிக சக்தியுடனும் இருப்பது மட்டுமின்றி உடற்பயிற்சி, நீச்சல் போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

    விளையாட்டு வீரர்கள், பொறியியல் வல்லுநர்கள், தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள், ஓட்டுனர்கள், விற்பனையாளர்கள், நடிகர்கள், நாட்டிய வல்லுநர்கள் போன்றவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்புண்டு.

    மாணவர்களை பொறுத்த வரையில் இந்த வகுப்பைச் சார்ந்த மாணவர்கலின் சில பொதுவான குறிப்பகள்:

    1. இவர்கள் வேகமாகவும் தாறுமாறாகவும் எழுதும் குணமுடையவர்கள்.
    2. இவர்களின் புத்தகங்கள் நோட்டுக்கள் மிகவும் கசக்கியும் கவனிப்பு இல்லாமலும் இருக்கும்
    3. புத்தகங்கள் நோட்டுக்களிலிருந்து அடிக்கடி காகிதங்களை கிழிக்கும் பழக்கம் இருக்கும்
    4. இவர்கள் தங்களுடைய புத்தகங்கள் நோட்டுக்களை அடிக்கடி புரட்டிப் பார்க்கும் பழக்கும் உள்ளவர்களாக இருப்பார்கள்
    5. வகுப்பறைகளிலிருந்து அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்திற்காக வெளியே செல்ல வாய்ப்புக்களை எதிர்பார்த்த வண்ணம் இருப்பார்கள்
    6. நாற்காலிகள் மேசைகள் ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடி மாற்றும் பழக்கமுயுடையவர்களாக இருப்பார்கள்
    7. பள்ளிகளில் ஓடி விளையாடும் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டுவர்.
    8. .அமர்ந்திருக்கும் நாற்காலிகளில் உட்கார்ந்தவண்ணம் ஆடுதல், அவைகளை நகர்த்துதல், மற்ற மேசைகளுடன் ஒட்டிப்போடுதல் போன்ற பல சில்மிஷங்களில் மனம் கொண்டவர்கள்.
    9. உடைந்த பொருள்களை சரி பார்த்தல், ஒட்டுதல் மற்றும் கைவேலைகள் சம்பந்தப்பட்டவற்றில் ஆர்வம் காட்டுவார்கள்
    10. இயங்கும் பொருள்களை வேகமாக ஓட்டுதல், இடர்களை சந்தித்தல், இடர் மேலாண்மை, தொழில் முனைவு ஆகியவற்றில் ஈடுபாடு காட்டுவார்கள்

    ஆகவே பள்ளிகளில் இந்த வகையைச் சார்ந்த மாணவர்களுக்கு இவர்களுடைய தேவை மற்றும் ஈடுபாடுகளுக்குத் தேவையான பாட முறைகள், பயிற்சிகள், பரிசோதனைகள், கேள்விகள் ஆகியவற்றை அமைத்தல் மிக்க அவசியம். இவர்களை ஆசிரியர்கள் பொதுவாக :ஒழுங்கற்றவர்கள்’ என்றும் “கட்டுப்பாடற்றவர்கள் ” என்றும் ஒதுக்கிவிட வாய்ப்புக்கள் அதிகம். உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல. அவர்களுடைய ஈடுபாடுகளையும் திறன்களையும் வல்லமைகளை சரியாக நாம் அறிந்து அதற்குத் தேவையான உள்ளீடுகளைக் கொடுக்காமலிருப்பதே காரணம்.

    அடுத்து நாம் காட்சிகள் மற்றும் வளி சார்ந்த நுண்ணறிவு பெற்ற மாணவர்களை பற்றி அறிந்திடுவோம்.

    (தொடரும்)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (72)

    நிர்மலா ராகவன்

    எதிர்த்துப் பேசும் சிறுவர்கள்

    நலம்

    “இந்தப் பசங்களே மோசம்,” என்று எல்லா பதின்ம வயதுப் பையன்களையும் ஒட்டுமொத்தமாக வைதாள் அம்மாது. “என்னமோ, `சுதந்திரம், சுதந்திரம்’ என்று அடித்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் செலவுக்கு நாம்தானே பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது!”

    சிறுவர்கள் எல்லா வயதிலும் இப்படி – பெரியவர்களிடம் மரியாதை கொடுக்காது – பேசுவது இயல்பு. அதிலும் பதின்மூன்று வயதுக்குமேல், `நான் இன்னும் குழந்தை இல்லையே!’ என்று சற்று அதிகமாகவே திமிறுவர்.

    அவர்களது எதிர்ப்பு பலவிதமாக வெளிப்படும். சிலர், `ஆரம்பித்துவிட்டீர்களா!’ என்பதுபோல் கண்களைச் சுழற்றுவர், இல்லையேல், பெருமூச்சு வெளிப்படும். வேறு சிலர், `உங்கள் காலமே வேறு! உங்களுக்கு எங்களைப் புரிந்துகொள்ள முடியாது!’ என்று பழியைத் திருப்புவர்.

    கதை: ஆசிரியைகளுடன் மோதல்

    ஒருமுறை, `படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் செலவழிக்கக் கூடாதா!’ என்று நான் என் மாணவிகளிடம் கெஞ்சலாகக் கூறியபோது, “உங்கள் காலத்தில் டி.வி கிடையாது. இப்போது அப்படியா? பொழுதைக் கழிக்க எங்களுக்கு நிறைய வழிகள் இருக்கிறதே” என்றாள்.

    நான் வாயடைத்துப்போனேன்.

    எது முக்கியம், வாழ்க்கையை நல்வழியில் கொண்டு செல்லும் என்று இவர்களுக்குப் புரிவதில்லை. அடிக்கடி வற்புறுத்தினால், வேண்டுமென்றே எதிர்வழியில் நடப்பார்கள்.

    `என் மகள் நான் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. எப்படியோ தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்!’

    இம்மாதிரி கூறும் தாய் மகளைப் புகழவே செய்யாது, ஓயாமல் குற்றம் கண்டுபிடிக்கிறாள். தான் என்ன சொன்னாலும் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். முதலில் சுதந்திரமாக உணரும் மகளோ, போகப்போக, அஞ்ச ஆரம்பித்துவிடுவாள்.

    நான் படித்த காலத்தில், விடுமுறை நாட்களில் பரீட்சைக்கு எந்தந்த பாடங்களை முதலில் படிக்க வேண்டும் என்று ஆசிரியைகள் சொல்லிக்கொடுத்தார்கள். காலையில் மனம் தெளிவாக இருக்கும்போது கணக்கில் ஆரம்பித்து விஞ்ஞானம் (இந்த இரண்டு பாடங்களையும் எழுதிப் பார்க்க வேண்டும்), பிறகு பூகோளம், சரித்திரம் என்று தொடர்ந்து, இறுதியில் மொழிகளில் முடிக்க வேண்டும். அவ்வப்போது இடைவெளி, சிறிது உணவுக்காக. படித்துக்கொண்டிருக்கும்போதே இசையைச் செவிமடுத்தால் நன்றாக மனதில் பதியும். நீண்ட காலம் மறக்காது. ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்கள் படிக்க வேண்டும் என்று ஓரிரு வாரங்களுக்கான அட்டவணையை முதலில் தயாரித்துக்கொள்வது மன இறுக்கத்தைத் தவிர்க்கும் வழி.

    ஆசிரியைகள் வற்புறுத்திக் கூற, `செய்துதான் பார்க்கலாமே!’ என்று நான் இம்முறையைக் கடைப்பிடித்தேன். பரீட்சைக்கு முதல்நாள் பக்கங்களை புரட்டிப் பார்த்ததுடன் சரி. இரவெல்லாம் கண்விழித்துப் படித்தது கிடையாது.

    பதினேழு வயது மாணவர்களிடம் இதை விளக்கிச்சொல்லி, விடுமுறைக்காலம் முடிந்து அவர்கள் திரும்பியதும், “நான் கூறியபடி படித்தீர்களா?” என்று ஆவலுடன் வினவினேன்.

    “டீச்சர் ரொம்ப கண்டிப்பு!” என்று பதில் வந்தது! இது மறைமுகமான எதிர்ப்பு.

    சிறுவர்கள் எதிர்க்கும்போது, நாம் மேலும் எகிறாமல், அமைதியாக இருத்தல் அவசியம்.

    ஒரு பையன், `நான் எப்படிப் போனால் உங்களுக்கென்ன, டீச்சர்? உங்களுக்குத்தான் சம்பளம் கிடைத்துவிடுமே!’ என்றுகூட என்னிடம் கூறியிருக்கிறான்.

    அவனைப்போல், விதண்டாவாதம் செய்வதுதான் வளர்ந்த பிள்ளைகளுக்கு அழகு என்று நினைத்திருப்பவர்களிடம் பேசுவது வீண். `உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். கேட்டால் கேளுங்கள்! எனக்கொன்றும் நஷ்டமில்லை!’ என்று விடவேண்டியதுதான்.

    எதில் காதல்?

    பதின்ம வயதுப் பையன்களுக்கு தங்கள் தலைமுடியின்மேல் அபார பிரேமை, பெருமை. பதினேழு நிமிடம், இருபது நிமிடம் என்று ஏதோ கணக்கு வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் தலைசீவிக் கொள்வார்கள். எவ்வளவு அலங்கோலமாக ஆனாலும், அதை வெட்டிக்கொள்ள மனம் வராது. அவ்வளவு அருமை!

    “வாய் ஓயாமல் இருமறியே! சலூனுக்குப் போகக்கூடாது?” என்று தினமும் வீட்டில் நச்சரிப்பார்கள். பையனின் காது தாற்காலிகமாக செவிடாகிவிடும்..

    அதைவிட்டு, “என்னிக்கு தலைமயிரை வெட்டிக்கிறதா உத்தேசம்?” என்பதுபோல் முடிவை அவர்களிடமே விட்டால், ஏதாவது ஒரு தினத்தைக் குறிப்பிடுவார்கள். ஆனால், அன்று மறந்ததுபோலிருப்பார்கள்!

    “இன்னிக்கு என்னமோ பண்ணப்போறதா சொன்னியே!” என்று மறைமுகமாக நினைவுபடுத்தினால் போதும். தம் வாக்கைக் காப்பாற்றுவார்கள்.

    இந்த மனோதத்துவம் புரியாது, எங்கள் பள்ளியிலிருந்த கட்டொழுங்கு ஆசிரியர், கையில் கத்தரிக்கோலுடன், ஏதாவது வகுப்பிற்குள் நுழைவார். மாணவர்ளை தரதரவென்று வகுப்பிற்கு வெளியே இழுத்துச் சென்று, வேண்டுமென்றே தாறுமாறாக வெட்டுவார், `பள்ளி விதிமுறை தெரியாது? சட்டைக்காலரை இடிக்கிறது உன் முடி!’ என்ற வசவுடன்.

    அன்று பூராவும் அந்த மாணவன் ஆத்திரமாக அமர்ந்திருப்பான். எந்தப் பாடத்திலும் கவனம் போகாது.

    கதை: வீட்டில் குழப்பம்

    புத்திசாலியாக, நல்லொழுக்கத்துடன் இருந்தவன் ரசாலி. பதினான்கு வயதில் பெற்றோர்கள் `தரையில் கட்டிப் புரண்டு’ சண்டை போட (அவனே சொன்னது), அவன் நிம்மதி கெட்டது. படிப்பிலும், உடையிலும் அக்கறை போயிற்று. மரியாதையின்றி ஆசிரியர்களையும் எதிர்க்க ஆரம்பித்திருந்தான்.

    ஒரு நாள், நான் அவனை அழைத்து, “உன் தலைமயிரை வெட்டிக்கொள்ள வேண்டும்போல இருக்கிறதே! ரொம்ப நீளமாக இருக்கிறது. ஆசிரியர் பார்த்தால், கன்னாபின்னா என்று வெட்டிவிடுவாரே!” என்றேன் ரகசியக்குரலில்.

    “எப்போ வெட்டிக்கணும்?”

    “இன்னிக்கு?” சும்மா சொல்லிப்பார்த்தேன்.

    “நாளை சனிக்கிழமை. பள்ளி விடுமுறை. அப்போது வெட்டிக்கொள்ளட்டுமா?” என்று கேட்டுவிட்டு, நான் ஒப்பியதும், அதன்படி செய்தான். (`வெட்டிக்கொள்!’ என்று நான் மிரட்டியிருந்தால், கேட்டிருக்க மாட்டான்).

    எந்த விஷயத்திலும் அவர்களே முடிவு செய்வதுபோல் இருக்கச் செய்வது நாம் சொல்வதற்கேற்ப சிறுவர்களை நடக்க வைக்கும் உபாயம்.

    சொல்லி வைத்தாற்போல், திங்கள் காலை அந்த ஆசிரியர் மேலும் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். சில மாணவர்களை இழுத்துப்போனார். ரசாலி பெருமையுடன் தலையை நிமிர்த்தியபடி உட்கார்ந்திருந்தான்.

    நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து நமட்டுச்சிரிப்புச் சிரித்தோம். “தப்பித்தாய்!” என்று ரகசியக்குரலில் கூறினேன், மலாய் மொழியில்.

    அவனும் புன்சிரிப்புடன், `தப்பித்தேன்!’ என்றான். பக்கத்திலிருந்த நண்பனிடம், “டீச்சர்தான் என்னைக் காப்பாற்றினார்கள்!” என்றது எனக்குக் கேட்டது.

    சில வருடங்களுக்குப்பின், நான் அப்பகுதியில் காரை ஓட்டிப்போகையில், ரசாலியைப் பார்த்தேன். ஹார்னை விடாமல் அடித்தேன்.

    சற்றுப் பொறுத்து, “அந்தப் பையனுக்கு ஒன்னைப் பாத்து என்னம்மா அவ்வளவு சந்தோஷம்? ரோடிலே எதுக்கு அப்படிக் குதிச்சான்?” என்று கேட்டாள் என் மகள்.

    வீட்டில் நிம்மதி இல்லாதவன்மேல் சிறிது அக்கறை காட்டினேன். அவ்வளவுதான். ஆனால், அவனைப் பொறுத்தவரை, அது பெரிய விஷயம். நான் அவன் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறேன்.

    வயதில் இளையவர்களுடன் பழகும்போது, அவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால், அவர்களைப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் நம்மை எதிர்க்கும் சந்தர்ப்பங்களும் குறையும்.

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(183)

    -செண்பக ஜெகதீசன்

    நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணா ரில்.
    (திருக்குறள் -276: கூடாவொழுக்கம்) 

    புதுக் கவிதையில்…

    துறவி என்பவன்
    தூயவனாயிருத்தல் வேண்டும்…
    நெஞ்சினில் பற்றுவைத்து
    நேரில் பற்றற்றவனாய்
    நடிக்கும் துறவியைவிடக்
    கொடியவர் வேறில்லை…! 

    குறும்பாவில்…

    பற்றினை நெஞ்சில்வைத்து பற்றற்றவனாய்ப்
    பாசாங்கு செய்யும் துறவியைவிடக்
    கொடியோர் வேறெவருமிலர்…! 

    மரபுக் கவிதையில்…

    முற்றுந் துறந்த முனிவரென்றே
         -முழுதும் பொய்யாய் நடித்துவிட்டு,
    பற்று மிகுந்த நெஞ்சினராய்
       -பெரிதும் ஆசை கொண்டவராய்
    புற்றில் வாழும் அரவெனவே
    -புரட்டில் திரியும் துறவியைப்போல்
    குற்றம் நிறைந்த கொடியோர்கள்
    -குவலய மீதில் வேறிலையே…! 

    லிமரைக்கூ…

    துறவிக்கு இருக்கக்கூடாது ஆசை,
    பற்றற்றவனாய் நடிப்பது கொண்டுவரும் துறவிக்கு
    கொடியோர்க்கெலாம் கொடியோனெனும் மாசை…! 

    கிராமிய பாணியில்…

    ஒழுக்கம் வேணும் ஒழுக்கம் வேணும்
    மனுசனுக்கு நல்ல ஒழுக்கம் வேணும்,
    எல்லாந்தொறந்த முனிவருண்ணாலும்
    பொல்லாப்பில்லாத ஒழுக்கம் வேணும்…
    மனசுல ஆசய மறச்சிவச்சி
    ஆசயில்லாதவன்போல நடிக்குமந்த
    சாமியாரப் போல
    கேடுகெட்ட கொடியவந்தான்
    யாருமில்ல ஒலகத்தில…
    அதால,

    ஒழுக்கம் வேணும் ஒழுக்கம் வேணும்
    மனுசனுக்கு நல்ல ஒழுக்கம் வேணும்,
    எல்லாந்தொறந்த முனிவருண்ணாலும்
    பொல்லாப்பில்லாத ஒழுக்கம் வேணும்…!

     

     

    Share
  • எமது வாழ்வில் கோவில் – பகுதி II

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா,

    முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

    (எமது வாழ்வில் கோவில் – பகுதி I)

    கோவில்கள் சமூகத்தின் உயிர்நாடியாகும். கோவில்கள் ஆன்மீகத்தின் உறைவிடமாகும். அறமுரைக்கும் இடமாகாவும்,நீதிவழங்கும் இடமாகவும், சாந்தியினை சமாதானத்தினை வழங்கும் இடமாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வின் மையப் பொருளான ஆண்டவனையே காணும் இடமாகவும் விளங்குகின்றது என்பது முக்கியமாக  இருக்கிறதல்லவா?

    மனம் நொந்தாலும் கோவிலுக்குப் போவோம். மனம் மகிழ்ந்தாலும் கோவிலுக்குப் போவோம்.  கோவிலுக்குப் போவதால் எங்கள் குணங்களே மாறுகின்றன அல்லவா?கோவிலைச் சாந்தி நிலையம் என்று கூறுவது பொருத்தமாக  இருப்பது போலத் தெரிகிறதல்லவா ?

    சாந்தி தருவது கோவில்.சக்தி தருவது கோவில். ஏங்கிய பேர்களுக்கு என்றும் இன்பம் அளிப்பதும் கோவில். தூங்கிய மனத்தை நாளும் துடித்து எழச்செய்வதும் கோவில். சுந்தரமாய் இருப்பதும் கோவில். சுகத்தை அளிப்பதும் கோவில். வந்திடும் அடியார்களுக்கு மாற்றத்தைத் தருவதும் கோவில். நொந்துநிற்கும் உள்ளங்களை நொடியாமல் செய்வதும் கோவில். மந்திரமயமாய் இருந்து மருளினைப் போக்குவதும் கோவில்கள் அன்றோ !

    கோரயுத்தங்கள் புரிந்து வெற்றிகளைக் குவித்த சோழமன்னர்கள் தான் வானளாவிய கோவில்களைக் கட்டினார்கள். சோழப் பேரரசு காலம் கோவில்களின் பொற்காலம் என்றும் எங்கள் சமயத்தின் உன்னத காலம் என்றும் சொல்லலாம். எத்தனையோ யுத்தங்கள் புரிந்து வெற்றிகளைக் குவித்தாலும் சோழர்காலம் இன்றளவும் போற்றப் படுவதற்குக் காரணம் கோவில்கள் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள். அந்தளவு சோழர்காலத்தில் கோவில்கள் சமூகத்தின் மையநாடியாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்க விசயமெனலாம். கோவில்கள் நீதிஸ்தலமாகவும்,  வங்கிகளாகவும்,இலக்கியங்களை அரங்கேற்றும் மன்றமாகவும், மொழிப்பற்றிய கருத்துக்களை அரங்கேற்றும் அவையாகவும், பலவித கலைகளை இணைக்கும் மத்தியாகவும் என அரச சபையினைவிட முக்கியத்துவம் மிக்கனவாகக் கோவில்களே விளங்கி இருந்தன என்பதை வரலாற்றால் அறிகின்றோம். சைவத்தின் கண்களாக விளங்குகின்ற திருமுறைகளே கோவிலில் இருந்துதான் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது.திருமுறைகள் கோவில் வழிபாட்டின் முக்கியத்துவத்தை மிகவும் சிறப்பாகச் செப்பி நிற்கின்றன,

    கந்தபுராணம், பெரியபுராணம், யாவுமே கோவிலில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டன. சேக்கிழார் பெருமானின் பெரியபுராண அடியார்கள் வாழ்வே கோவிலினையே மையமாய்க் கொண்டிருந்தது என்பது மனக்கொள்ள தக்கதாகும்.

    கோவில்களை அடிப்படையாகக் கொண்டே இசை, நடனம்,சித்திரம் சிற்பம், கட்டிடக்கலை யாவும் வளர்ச்சி அடைந்தன. சிற்பக்கலையின் பல்வேறுவித பரிணாமங்கள் கோவில் இல்லாவிட்டால் வந்திருக்குமா என்பது ஐயத்துக்கு உரியதே ! அதே போன்றதே கட்டிடக் கலையுமாகும். பல்வேறுவிதமான நுட்பங்கள் கொண்ட கட்டிடக் கலைகளின் இருப்பிடமாய் கோவில்கள் விளங்கி இருக்கின்றன.  இன்றளவும் இக்கலைகள் கோவில்களை அண்டியே வளர்கின்றன என்பதும் முக்கிய அம்சமெனலாம். சமயம் சார்ந்தவையாக  ஓவியம், சிற்பம் இருந்தாலும் கலைகள் என்னும் விதத்தில் என்றும் சிறப்பினையே தந்துகொண்டு இருக்கிறது என்பது உண்மையாகும்.

    சோழர்களைத் தொடர்ந்து பாண்டியர்கள், பல்லவர்கள் கோவில் கட்டுவதில் பெரிதும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் சோழர்காலம் என்பது எங்கள் சமயவரலாற்றிலும் கோவில்கள் வரலாற்றிலும் செல்வாக்கு நிறைந்த காலமாகவே விளங்கியது என்பது வரலாற்று உண்மையெனலாம்.

    சோழர்காலம் மக்களுக்குக் கோவில்கள் எந்தளவுக்கு முக்கியம் வாய்ந்திருந்தது என்பதை வெளிப்படுத்தும் காலமாகவே இருந்தது எனலாம். கலை கலாசாரம் இவைகள் கோயில்களினூடாக  மக்களுக்கு சென்றடையும் என்னும் ஒரு நம்பிக்கை இக்காலத்தில் பிறந்தது என்றே கூறலாம். இதற்கு முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமானும் முக்கிய காரணமாக விளங்குகிறார் எனலாம். அரசர்களை நல்வழிப்படுத்தும் நல் அமைச்சராக சேக்கிழார் அமைந்தமையால் சோழமன்னர்களின் போர்முகம் மாறி அங்கு சமயமும் கோவில்களும் மனத்தில் அமர்ந்து கொண்டுவிட்டது. இதனால் ஆட்சியும் சிறந்தது. அரசர்களும் ஆண்டவன் பக்கம் சென்றார்கள். ஆண்டவனுக்கான கோவில்களும்  எழுச்சி பெற்றன. மன்னர்களின் மனம் கோவிலை நாடவே மக்களும் கோவிலைத் தஞ்சமடைந்தனர். இதனால் ஊர்கள் தோறும் கோவில்கள் எழுச்சி பெற்றன. மக்கள் வாழ்விலே கோவில்கள் தான் முக்கியம் என்னும் ஒரு கருதுகோள் ஊன்றிவிட்டதையே காண்கின்றோம்.

    பெரியபுராணம் உருவானதால் கோவில்களின் முக்கியத்துவமும் அடியார்களின் பெருமையும் யாவருக்கும் தெரிய வந்தது. கோவிலில் செய்யும் தொண்டுகள் எம்மை உய்விக்கும் வல்லமை வாய்ந்தவை என்னும் கரு உருவாவதற்கும் பெரிய புராணம் வழிவகுத்தது எனலாம்.

    ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமமே என்னும் அரிய தத்துவத்தை சமூகத்துக்கு உணர்த்தவும் பெரியபுராணம் வழிவகுத்தது எனலாம். அடியார்களின் வரலாற்றைப் படிக்கின்றவர்கள் நல்ல வழியினை நாடவும் கோவிலைத் தேடவும் கும்பிட்டு மனச்சாந்தி பெறவும் தொடங்கினர் எனலாம்.

    “நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா – நித்தலும் எம்பிரானுடைய கோவில் புக்கு ” என்று அப்பர் சுவாமிகளின் அழைப்பினைப் பார்க்கும்பொழுது கோவிலின் இன்றியமையாமை புலப்படுகிறதல்லவா ? நிலைபெறவே யாவரும் விரும்புகின்றோம்.

    அப்படி விரும்பும் எமக்கு அதற்கான உருவை, கருவை, நல்கும் இடம் கோவில்களே தான் என்பதுதான் அப்பரின் வாக்கின் அர்த்தமாய் அமைகிறது. கோவிலைப் பார்த்தவுடன் மனமதில் நல்ல மாற்றம் வந்து விடுகிறது. அந்தக் கோவிலுக்குள் சென்றுவிட்டால் உள்ளுக்குள் எம்மையறியாமலேயே ஒரு புத்துணர்வும் புகுந்து விடுகிறது. மனதிலுள்ள பாரங்கள் எல்லாம் குறைந்து விட்டது போன்ற ஒரு நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. இவையெல்லம் இந்த  “நிலைபெறுதலில்” அடங்கி இருக்கிறது என்பதை யாவரும் உணர வேண்டும்.

    எதைத் தொடங்குவதாக இருந்தாலும் அதனைக் கோவிலில் வைத்தே தொடங்கும் நிலை உருவானது. திருமணமோ, ஏடு தொடங்கலோ, காது குத்தலோ, புதுத் தொழில் ஆரம்பித்தலோ, புதுமனைப் புகுவிழாவுக்கு உரிய பொருட்களை வைத்து எடுப்பதோ, பிரயாணங்கள் செல்லத் தொடங்கு முன்னர் சென்று வழிபடுதலோ என அனைத்தையுமே கோவில்களில் தான் தொடங்கும் வழக்கம் அன்று தொடங்கி இன்றுவரை நம்மிடம் ஊறிப்போய் இருக்கிறதல்லவா ? இவ்வாறு செய்கின்ற பொழுது இவற்றைப் படித்தவரும் செய்கின்றார். பாமரரும் செய்கின்றார். யாவருடைய மனத்திலும் கோவில் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. என்பதையே இது காட்டுகிறதல்லவா ?

    (தொடரும்)

    Share
  • ”வேர்களும் விழுதுகளும்”

    -சிறீ சிறீஸ்கந்தராஜா

     “ஞானம்” நேர்காணல் ஆளுமைகள் பட்டியல் – 01

    கைலாசபதி

    01 –  கார்த்திகேசு சிவத்தம்பி

    02 –  ச. பொன்னுத்துரை

    03 – டொமினிக் ஜீவா

    04 – எம்.ஏ. நுஹ்மான்

    05 –  செ,யோகநாதன்  

    06 –  வ.அ. இராசரத்தினம்

    07 –  அருண் விஜயராணி

    08 –  கே.எஸ். சிவகுமாரன்

    09 –  பொ. பூலோகசிங்கம்

    10 –  இ. அம்பிகைபாகர்

    11 –  த, கலாமணி

    12 –  லெ. முருகபூபதி

    13 –  தி.ச. வரதராசன்

    14 – எஸ். தில்லைநாதன்

    15 – கே. கணேஷ்

    16 – சிற்பி பாலசுபிரமணியம்

    17 –  நா. சோமகாந்தன்

    18 –  பாலசிங்கம் பிரபாகரன்

    19 –  சித்திரலேகா மெளனகுரு

    20 –  புதுவை இரத்தினதுரை

    21 –  எஸ். பொ.

    22 –  தி.ச. வரதர்

    23 –  வீ. அரசு – தமிழ்நாடு

    24 –  பஞ்சாட்சர சர்மா

    25 –  க. குணராசா (செங்கை ஆழியான்)

    26 –  மா. அனந்தராசன்

    27 –  தெளிவத்தை ஜோசப்

    28 –  எம்.ஏ. நுஹ்மான்

    29 –  சு. குனேஸ்வரன் (துவாரகன்)

    30 –  கே.எஸ். சிவகுமாரன்

    31 –  சபா ஜெயராசா

    32 –  ஷோபாசக்தி அன்ரனிதாசன்

    33 –  மா. சண்முகலிங்கம்

    34 –  தி. ஞானசேகரன்

    35 –  திருமதி கார்த்திகா கணேசர்

    36 –  முல்லை அமுதன்

    37 –  திருமதி கார்த்திகா கணேசர்

    38 –  தி. ஞானசேகரன்

    39 –  செ, கணேசலிங்கன்

    40 –  சோ. பத்மநாதன்

    41 –  செ. யோகராசா

    42 –  மு. பொன்னம்பலம்

    43 –  மு. பொன்னம்பலம்

    44 –  தெணியான்

    45 –  ஜின்னா சரிபுத்தீன்

    46 –  இராஜேஸ்வரி பாலசுபிரமணியம்

    47 –  அகளங்கன்

    49 –  ந. செல்வரராஜா

    50 – அன்னலட்சுமி இராசதுரை

    51 –  இளைய அப்துல்லாஹ் – அனஸ்

    52 –  கே. ஆர். டேவிட்

    53 –  வி. ஜீவகுமாரன்

    54 –  அ. சண்முகதாஸ்

    55 –  இரா. உதயணன்

    56 – துரை மனோகரன்

    57 – ஆசி கந்தராஜா

    58 – ந. உதயணன்  

    59 – சோ. சந்திரசேகரம்

    60 – 

    ************* 

    இது தொடர்பான வேறு பதிவுகள்

    இந்நிகழ்வு என் (என் செல்வராஜா) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வை முடித்துக் கொண்டு இன்றே தி. ஞானசேகரன் தம்பதிகள் இலங்கை பயணமாகினர்.

    ******

    கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை

    [தொடரும்]

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 126-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    manintheforest

    நெடிதோங்கிய மரங்களிடை நின்று நிமிர்ந்துபார்க்கும் உயர்ந்த மனிதன்!!

    ஆகா…! மிக அருமையான கோணத்தில் இரசனையோடு இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், சிந்தைகவர் இப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குக் கச்சிதமாய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் உளங்கனிந்த நன்றியும் பாராட்டும் உரித்தாகுக!

    வானளவு உயர்ந்துநிற்கும் இம்மரங்கள் இயற்கையன்னை தானளித்த வரங்களல்லவா? வீடு கட்டுவதற்காக அவற்றை அருளின்றி அழித்து அவற்றுக்கு வீடுபேறளிப்பது நமக்கு நாமே அளித்துக்கொள்ளும் சாபம் அல்லவா?

    நிவந்தோங்கிய மரங்களையும் அவற்றை உவந்துநோக்கும் மனிதனையும் குறித்துச் சந்தக்கவி சிந்தவருகின்றார்கள் நம் கவிஞர்கள். அவர்களை அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றேன்!

    *****

    ”உயர்ந்து வளர்ந்த மனிதா! மனத்தை வளர்ப்பாய் இனிதாய்! மற்றவர் உயர நீ உழைப்பாய் நன்றாய்” என்று வெயிற்கேற்ற நிழலும் வீசுந் தென்றல் காற்றும் நல்கும் நன்மரத்தை ஞானோபதேசம் செய்ய வைத்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.  

    ஞான மரம்:

    உயர்ந்து நிற்கும் மரங்கள் பாரீர்!
    வானளாவ வளர்ந்த அற்புதம் பாரீர்!
    மரங்கள் வளர்ந்து, மண்ணுயிர்க்கு பயன் தரும்!
    மனிதன் வாழ அழகான வீடு தரும்!
    சுடு வெயில், தான் ஏற்று  மற்றவர்க்கு நிழல் தரும்!
    உண்ணக் கனி தரும்!
    எழுதத் தாள் தரும்!
    தீயில் தான் எரிந்து
    வெளிச்சம் தான் தரும்!
    நச்சுக் காற்றைத் தான் உண்டு
    நல்ல காற்றை நமக்குத் தரும்!
    மரங்கள் பூமியில் இருந்ததற்கு
    நல்ல ஆதாரங்கள் எத்தனை! எத்தனை!
    காற்றாய், கனியாய், ஒளியாய்,
    நிழலாய், வீடாய், மழையாய்!!!
    மரம் சொன்னது, வியந்து நின்ற என்னைப் பார்த்து!
    “உயர்ந்து, வளர்ந்த மனிதா!
    மனதை வளர்ப்பாய் இனிதாய்!
    மற்றவர் உயர, என்றும் உழைப்பாய்”
    புத்தனுக்கு ஞானம் வந்தது
    போதி மரத்தடியில்!
    எனக்கும் தெளிவு வந்தது!
    இந்த மரம் சொன்ன வகையில்!!!!
    மனித மனங்களும், உயர வேண்டும்!
    இந்த மரங்களைப் போல!

    *****

    இலைவளம் மிகுதல் இயற்கைவளத்தின் அடையாளம்; கலைவளம் மிகுதல் மனிதனின் சிந்தனைச் செம்மையின் அடையாளம். மண்ணில்காணும் கண்ணைக்கவரும் காட்சிகளனைத்தும் அந்த மாதவனின் அற்புதத்தின் அடையாளம் என்று அதிசயிக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    சிந்தனை வளம்..!

    மலைவளமுடன் வயல்வெளி காடும்வளம் பெருக..
    ……….மாதமும்மாரி மழைதவறாது பொழிந்திருத்தல் வேணும்.!
    நிலவளம் கொண்டிருப்பின் செடிமரங்கள் செழிப்புடன்..
    ……….நெடிதாக விண்ணைமுட்ட வானுயர்ந்து வளந்திருக்கும்.!
    இலைவளம் மிகுந்தாலது….மண்ணினுள் ஒளிந்திருக்கும்..
    ……….இயற்கைவளம் என்பதின் அடையாளம் போலாகும்..!
    கலைவளம் பெருகவே மாந்தரின் எண்ணமுயெழுத்தும்..
    ……….கடுமழைபோல் சிந்தனையூற்றாக மனதில் பெருகவேணும்.!
    மண்ணெனும் தாயும் வானமெனும் தந்தையுமிணைந்து..
    ……….மனமுடனீயும் ஈகைப் பெருந்தன்மைதான் இயற்கை.!
    மண்ணில்காணும் கண்ணைக் கவரும் காட்சிகளாவும்..
    ……….மாதவன்படைத்த கணக்கற்ற அற்புதங்களில் ஒன்றாகும்.!
    பெண்ணின் இடைபோன்று சிறுத்துயர் வளர்ந்தோங்கிய..
    ……….பெருமரங்களடந்த பெருவெளி இயற்கை நடுநின்று..
    எண்ணில்..? இவையனைத்தும் எழும் சிந்தனையில்..
    ……….ஏற்றிப் பற்றுமிகின்.?…பாவலர்க்கெளிதிலது பாவாகும்.!

    *****

    ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்; அவன் ஏனோ மரம்போல் வளர்ந்துவிட்டான் என்ற ’பனித்திரை’ திரைப்பாடலை அடியொற்றித் தன் பாடலை எழுதியுள்ள திரு. ரா. பார்த்தசாரதி, இப்பாடலில் மரம் தன் பயன்களைத் தானே பட்டியலிட்டு மனிதனுக்கு நல்லறிவு கொளுத்துவதை நயம்பட உரைத்துள்ளார்.

    ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் , மரம்போல் வளர்ந்துவிட்டான்
    எதிலும் ஐயம்,எதிலும் அச்சம் எதற்கெடுத்தாலும் வாதாடுகின்றான்
    மரத்தின் அருமையினை அவன் எண்ணிப் பார்ப்பதில்லை
    இயற்கையில் மரம் அதிகமானால் மழைக்குப் பஞ்சமில்லை
    மரங்கள் வளர்ந்து, மணல் அரிப்பைத் தடுக்கின்றதே
    மரங்கள் வளர்ந்து மனிதனுக்கு நிழலை தருகின்றதே
    மரங்கள் வளர்ந்து மனிதனுக்கு வீடுகட்ட உதவுகின்றதே
    மரங்களின் இலைகள் விலங்கிற்கும்,நிலத்திற்கும் பயன்படுகிறதே!
    இயற்கை அன்னை தந்தது எல்லாம் மனிதனுக்குச் சொந்தமடா
    எனது, உனது என்பது இடையில் மாறும் பந்தமடா
    மரங்களை வெட்டி, சுற்றுச் சூழலை பாழ்படுத்துகிறாய்
    என்னை வெட்டி, நாட்டையும், வீட்டையும் கெடுக்கின்றாய்!
    மனிதனே, நானே உனக்கு எழுதத் தாள் தருகின்றேன்
    உண்ணக் கனிகளையும், என்னை எரித்து வெளிச்சம் தருகின்றேன்
    நான் அசைந்து தென்றல் போல் இதமான காற்றைத் தருகின்றேன்
    என் இலைகள் மருந்தாகவும், எருவாகவும் பயன்படுகின்றதே!
    மனிதனே, நின்ற இடத்தில் என்னை அண்ணார்ந்து பார்க்கின்றாய்
    என்னை நினைத்தாலே உன் மனதில் தெளிவு காண்பாய்
    மனிதனே, வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க ஆர்வம் கொள்வாயா?
    சுற்றுச் சூழலைக் காக்க நானே சிறந்தவன் என எண்ணமாட்டாயா?

    *****

    மரங்களை அழிப்பதால் மனிதர்கள் தமக்குத்தாமே பேரழிவைத் தேடிக்கொள்வதைக் கவிஞர்கள் பலரும் படிப்போர் மனங்கொளத்தக்க வகையில் இடித்துரைத்துள்ளனர் தம் கவிதைகளில். பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுபெற்றிருப்பது நம் பார்வைக்கு…

    வாழுகின்ற தேசம் எண்ணி வருந்துகின்றேன்
    வாராதா வசந்தம் என்றெண்ணி ஏங்குகிறேன்
    ஆளுகின்ற வர்க்கம் கண்டு அஞ்சுகின்றேன்
    கால்பரப்பி நின்றிங்கு கதறுகின்றேன்

    கனவுகொண்ட கண்களிங்கே இருளக் கண்டேன்
    கல்விகூட எமனாக மாறக் கண்டேன்
    முகிழ்க்காத அரும்புகளும் உதிரக் கண்டேன்
    முகம்திருப்பி மனம் வெதும்பி அரற்றுகிறேன்

    ஊழலிங்கு நதியாக ஓடக் கண்டேன்
    ஊருணியும் ஆறுகளும் வாடக் கண்டேன்
    பயிர்வளர்க்கும் விவசாயி மடியக் கண்டேன்
    உயிர் சுமந்த வலியாலே துடிக்கின்றேன்!

    காடான நாடிதனை மாற்றி அமைப்போம்
    கலாமின் வல்லரசைக் கட்டி முடிப்போம்
    உற்ற துயர் அத்தனையும் முடித்து வைப்போம்
    உயரட்டும் நாடென்றே ஓங்கி ஒலிப்போம்!

    ”செந்தமிழ் நாடுதனில் கற்றகல்விகூட எளியோர்க்கு அவர் விரும்பும் படிப்பைப் பெற்றுத்தர உதவவில்லை; சாகுபடி செய்தவனைத் தயவின்றிச் சாகும்படிச் செய்கின்றோம். ஊழலே ஊரெங்கும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுவதால் சூழலிலே இனிமையில்லை” என்று தனிமையில் கானிடைநின்று கதறும் ஆடவனைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியுள்ள திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share