Blog

  • நகைச்சுவைத் திருவிழா

     

    பழமைபேசி

     

    நான் பெரிய யோகியாகி விட்டேன். இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். சிரிப்பவர்களுள் எத்தனை பேருக்கு கண்ணை மூடியபடி பத்மாசனத்தில் தொடர்ந்து அரைமணி நேரம் இருக்கும் வல்லமை இருக்கப் போகிறது? அளவுக்கு மீறிய பொறுமையும் நிலைத்தன்மையும் அதற்குத் தேவை என்பது சிரிப்பவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் அவர்கள் சிரிக்கிறார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும்.

    வீட்டில் உள்ள சாளரங்கள், அறைக்கதவுகள், நிலைப்படித் திரைகள் என எல்லாவற்றையும் மூடிய கையோடு முன்னறைக்கு வந்து ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தையும் அணைத்தாயிற்று. பக்கவாட்டில் இருக்கும் சமையலறை நுண்ணலைப் பெட்டியின் எண்ணிம மணிகாட்டி மட்டும் அறையைக் கப்பியிருந்த இருளின் அடர்த்தியைத் தனது இளம்பச்சை நிறத்தால் சற்றே குறைத்துக் கொண்டிருக்கிறது.

    ஊரிலிருந்து தருவிக்கப்பட்ட ஈச்சம்பாயினை முன்னறையின் மையப்பகுதியில் விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டேன். காற்கழல் ஒவ்வொன்றும் மறுதொடையின் மேல் இருக்கும்படியாகவும் முதுகுத்தண்டு செங்குத்திட்டும், நெஞ்சம் விரிந்து நிமிர்ந்துமிருக்க நேர்கொண்ட தலையோடு அமர்ந்திருந்தேன்.

    எல்லாமும் சரியான நிலையிலேயே இருக்கிறது என்று மனத்துக்கு மனமே சொல்லிக் கொள்ள ஓரிரு மணித்துளிகள் தேவைப்பட்டிருந்தன. மனம் சமிக்கை கொடுத்தானவுடன் கண்கள் தானாகவே மூடிக்கொண்டன. சமையலறையில் இருந்த குளிர்மி அடிக்கொருதரம் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. தலையின் பின்னால் இருக்கும் சுவர்க்கடிகாரமோ வினாடிக்கொருதரம் ’லொக்’கென்று இருமும். அந்த சத்தத்தின் அதிர்வில் உட்காதுச் சவ்வுகள் கிழிந்து விடும்போல இருந்தது.

    அனுமானத்தின் பேரில் சொல்கிறேன். கிட்டத்தட்ட பத்து மணித்துளிகளுக்கும் மேலாயிற்று. ஆனாலும் அந்த இருமல்ச் சத்தத்தின் இடையூறு தணிவதாக இல்லை. எழுந்து விடலாமா என்று யோசித்தேன். பத்மாசனக் கூறுகள் அதனதன்பாட்டுக்கு அதனதன் சீரைச் செம்மையாய்த் தரித்துக் கொண்டுதானிருந்தன.

    புண்பட்ட மனத்தை புக விட்டு ஆத்து என ஊரில் சொல்வது நினைவுக்கு வர, “ஓம்” சொல்வதில் மனத்தைப் புகட்டினேன். இருமல்சத்தம் துப்புரவாக நின்று போயிருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் மகள்களைப் பற்றிய எண்ண அலையில் ’ஓம்’ சொல்வதும் தொடர்ந்தது. அதற்குப் பிறகு என்னை நானே எப்போது தொலைத்து விட்டிருந்தேன் என்பது எனக்குத் தெரியாது. இப்படியாக நேரிடும் என்பதை மனத்திற்கொண்டுதான், மாலை நான்கு மணிக்கு ஒலிக்கும்படியாக முன்கூட்டியே எனது ஐபோனில் அலறியைக் கட்டமைத்திருந்தேன்.

    ஐபோனின் ஒலி கேட்டுக் கண் விழித்தேன். அலறிக்கு மாறாக, யாரோ அழைப்பது போல உணர்ந்தேன். ஆமாம். நண்பர் கல்யாண் குமார்தான் அழைத்துக் கொண்டிருக்கிறார். அழைப்போசைதான் தொடர்ந்து ஒலிக்கிறது.

    ”சொல்லுங்க கல்யாண்!”

    “விஜய், என்ன செய்றீங்க? ரொம்ப நேரமாக் கதவு தட்டிட்டு இருக்கேன். வீட்டிலதான இருக்கீங்க?”

    “ஓ, அப்படீங்களா? இதா, வந்துட்னுங்க!”

    ஓடிப் போய் கதவைத் திறந்து விட்டேன். நண்பர் கல்யாண் குமார் தமிழ்ச்சங்க நிறுவனர்களுள் ஒருவர். சமூகத்தொண்டு புரிவதில் அவருக்கு நிகர் அவர்தான். அக்கம்பக்கத்தில் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், அழைப்பது கல்யாண் அவர்களைத்தானாக இருக்கும்.

    “குளிச்சிட்டு ரெடியா இருங்கன்னு சொல்லி இருந்தனே? மறந்துட்டீங்களா??”

    “இதென்ன, இப்ப ஆச்சுங்க கல்யாண்!”, சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் ஓடிப் போய் துரிதகதியில் புறப்பட்டு வந்தேன்.

    இன்றைக்கு எங்கள் ஊர் தமிழ்ச்சங்கத்தினுடைய நகைச்சுவைத் திருவிழா. திருவிழாவில், உள்ளூர்க் கலைஞர்களின் ’காதலிக்க நேரமுண்டு’ நாடகமும், ஒய்.ஜி.மகேந்திரன் குழுவினருடைய ‘வெங்கட்டா3” நாடகமும் இடம் பெறுகிறது. முன்கூட்டியே விழா அரங்கிற்கு அழைத்துச் செல்லத்தான் கல்யாண் வந்திருக்கிறார்.

    அவர் அவரது சிற்றுந்தில் பயணிக்க, நான் எனது சிற்றுந்தில் அவரைப் பின்தொடர்ந்து கொண்டே காலியர்வில் காரல் அரங்கத்திற்குச் சென்று சேர்ந்தேன்.

    தமிழ்ச்சங்க விழாக்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நண்பர்களைச் சந்திக்கலாம். ஆசை தீர மொக்கை போடலாம். பயனுள்ள தகவல்களை அறிந்து வரலாம். மிக முக்கியமாக, சுவையுள்ள சாப்பாடு உண்ணக் கொடுப்பார்கள். அதுவும் மனைவி மக்கள் ஊருக்குப் போயிருக்கும் இத்தருணத்தில் சோறு முக்கியமல்லவா? ஓடியாடி வேலை செய்தால், வீட்டிற்கு எடுத்துச் செல்ல ”டு-கோ” கூடக் கொடுப்பார்கள்.

    முதன்முதலில் அவன்தான் எதிர்ப்பட்டான். விழாவிற்கு ஏனடா வந்தோம் என்றிருந்தது. எல்லாம் இந்த கல்யாண் குமாரால் வந்தது வினை. உனக்கு எவ்வளவு சம்பளம்? எவ்வளவு மிச்சமாகுது? வகைதொகையில்லாமல் கேள்வியாய்க் கேட்டுத் தொலைப்பானே இந்த முருகவேல்??

    நான் அவனைப் பார்க்காதது போல மறுவாசலில் வைத்திருந்த எதோவொரு பெட்டியை எடுப்பதாகப் பாவனை செய்து கொண்டு போனேன்.

    “ஏனுங் விஜய்? எப்பிடி இருக்கீங்க? போன் பண்ணாக்கூட எடுக்க மாட்டீங்றீங்க?? எங்க ஊட்டுல நங்கையாளையும் பாப்பாக்களையுங் காணம்??”, அவ்வளவு எளிதில் விட்டுவிடுவானா இந்த இருகூர்க்காரன்.

    முருகவேலின் மனைவியினுடைய அண்ணன் கரையாம்பாளையம் சண்முக சுந்தரமும் நானும், கோயம்பத்தூர்க் கல்லூரியில் ஒரே வகுப்பு. அதன் நீட்சியாகத்தான் எங்கள் இருவருக்கும் இடையே கூடுதலான பழக்க வழக்கம். அதை வைத்துக் கொண்டுதான் என்னைப் படுத்துகிறான் என்று சொல்வதும் சரியாக இருக்கும். ஆனால் கள்ளங்கபடமில்லாதவன். கோயமுத்தூர் ஊரக நாகரிகம் அமெரிக்கா வந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறது அவனிடம்.

    ”வாங்க சித்த நேரம் இருந்து பேசீட்டுப் போகுலாம்!”, அருகிலேயே வந்துவிட்டான் முருகவேல்.

    “நான் நல்லா இருக்கணுங்க? நீங்க??”

    ”எதோ பொழப்பு ஓடுதுங்க? ஏனுங், ஊட்ல ஆரையுங் காணமுங்க??”

    “எல்லாரும் ஊருக்குப் போயிருக்குறாங்க முருகு!”

    “அப்படீங்களா? செல்வி சொல்லவே இல்லை. அவளுக்குத் தெரியாதாட்ட இருக்குது? ஆமா, நீங்க போகலைங்களா??”

    “போகணும். லீவு எசவாக் கெடைக்க மாட்டீங்குதுங்க முருகு, அதான்! உங்க வீட்டுல?”

    “எங்கீங்க, உங்களுக்குத்தான் தெரீமே எல்லாம்? இன்னும் அட்வான்சு பரோல்லதான் இருக்கறோம். இன்னும் கிரீன் கார்டுக்கு பிரியாரிட்டி வர்ல? ஆறு வருசம் ஆச்சுங்க அப்பன் அம்மாளைப் பார்த்து! படுத்தா நிம்மதியாத் தூக்கம் வரமாட்டீங்குதுங்க! எங்கம்மாவுக்கு வேற நாளுக்கு நாள் ஒடம்புக்கு ஆகாமப் போய்ட்டு இருக்குது!”

    “அதெல்லாம் கவலைப்படாதீங்க முருகு. இப்ப ஊர் முன்ன மாதர இல்ல பாருங்க. தடுக்கி உழுந்தா ஆசுபத்திரிங்க!”

    “ஆமா, நீங்க ஊருக்குப் போயிட்டி வந்து எத்தினி நாளாச்சுங்க?”

    “ஒன்ரை வருசம் ஆச்சுங்க முருகு!”

    “நீங்கதான் அமுச்சி செத்த எழவுக்கே போக முடியலைன்னு சொல்லிச் சொன்னீங்களே? ஞாவகத்துக்கு வருதுங்க. வெளிநாட்டுக்கு ஏண்டா வேலைக்கு வந்தம்னு இருக்குதுங்க இப்பெல்லாம். அப்பனாத்தாளைக,  கூடாமாடா இருந்து பாக்க முடியாட்டிப் போகுதுங்க. செத்ததுக்கும் பொறகு எழவுக்குக் கூட போக முடியாதாட்ட இருக்குது பொழப்பு? போன வாரம் நடந்த விசியந் தெரீந்தான உங்களுக்கு??”

    “ஏனுங்? என்னாச்சுங்க??”

    “நம்ம, பரஞ்சோதி இருக்காரல்லங்க? பெட்எக்ஸ் விசுவநாதம் பிரண்டு??”

    “ஆமா, தெரியுஞ்சொல்லுங்க!”

    “அவரோட தங்கச்சி ஊட்டுக்கார்ரு, எளவயசுதானாமா, நாப்பத்தஞ்சு நாப்பதாறு இருக்கும்னு சொல்லிச் சொன்னாங்க. திடீல்னு ஆர்ட் அட்டேக்ல போயிட்டாருங்லாமா. இங்கிருந்து இவிங்க பத்தாயரம் டாலர் செலவு வண்ணிப் போயிருக்குறாங்க. போய்ச்சேர்றதுக்குள்ளயே பாடி எடுத்துப் போட்டாங்களாமா. என்ன பொழப்புங்க இது? ஆமா, உங்கூட்டுல நீங்க எத்தினி பேருங்கொ?”

    “நாங்க மூனு பேரு. நாந்தான் கடைசிங்க முருகு”

    “அல்லாருமே வெளிநாடுதானுங்களா?”

    “அக்கா, அம்மா அப்பாகோட ஊர்ல இருக்காங்க!”

    ”உங்க மச்சானுக்கு என்ன வயசாச்சுங்க?“, கேட்டு முடிக்கவும் ஒய்.ஜி மகேந்திரன் அவர்கள் அந்தப் பக்கம் வரவும் சரியாக இருந்தது. இந்த அளவில் முருகவேலுவிடம் இருந்து தப்பித்தோம் என்கிற நினைப்பில் நழுவி வந்து விட்டேன்.

    சற்று நேரம் ஒய்.ஜி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். உள்ளூரில் இருக்கும் நாடக எழுத்தாளரும் இயக்குநருமான தஞ்சை நடராஜன் அவர்களும் வர, அவருடனும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பங்குச்சந்தையில் ஆப்பிளின் விலை, அமேசானின் விலை, கூகுளின் விலை எனச் சகல விலைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த போதுதான், ஆட்டோசோன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவரும் தமிழ்ச்சங்க செயலருமான திவாகர் வந்தார்.

    “என்னங் விஜய், போஸ்ட் பேச்சுலர் லைஃப் எஞ்சாய் பண்ணுறீங்க போலிருக்கு?”

    “ஆமாங்க திவாகர். நீங்க எப்படி இருக்கீங்க?”

    “ப்ச். நாளுக்கு நாள் ஒன்னும் செரியில்லைங்க. ஊருக்கே போயிடலாம்னா, வீட்டுல சங்கீதா ஒத்துக்க மாட்டீங்றா”

    ”இதென்னடா இழவுக்கு மேல இழவா இருக்கு? சொள்ளைக்குத் தப்பிச்சு வந்த கன்னுகுட்டி தினாசுகிட்ட மாட்டிகிட்ட மாதர ஆயிப் போச்சே நம்ம நிலைமை?!” என்று நினைத்துக் கொண்டே எசப்பாட்டு பாடினேன், “ஓ அப்படீங்களா?”

    “என்ன அப்படீங்களா, ஒன்னுந்தெரியாத மாதரி? ஊர்ல இருந்து போன் வந்தாலே போதுங்க, அம்மாவுக்கு என்னாச்சோ, தம்பிக்கு என்ன ஆச்சோன்னு செத்து செத்துப் பொழைக்க வேண்டியதா இருக்குங்க விஜய்!”

    “ஆமாங்க, இது சொன்னீங்களே, நெம்பச் சரி!”

    ”பொசுக்கு பொசுக்குன்னு ராத்திரி ரெண்டு மணி, மூனு மணிக்கெல்லாங்கூட போன் வருதுங்க. மொதல்ல எல்லாம் நாம கூப்ட்டாத்தான் உண்டு!”

    “ஆமாங்க திவா! போன் ரேட் நெம்பக் கம்மி போல இருக்கு?”

    “பெர் மினிட்டுக்கு ஐம்பது பைசாதானுங்களாம்!”

    “தயவு தாட்சண்யம் இல்லாம நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் ஆக்கிவிடணும். அப்பதான் இந்தக் கொடுமை கொறையுமுங்க!”

    “ஆமாங்க விஜய். ஊர்ல அம்மா தனியா இருக்காங்க. தம்பிக்கு நொய்டால ப்ராஜக்டு. சிஸ்டர் சென்னையில இருக்கா. அதான் நானும் ஊருக்கே போயிடலாம்னு யோசிக்கிறேன். அப்பாவத்தான் கடைசில கூட இருந்து கூடப் பாக்க முடியல!”

    “புரியுதுங்க திவா!”

    “அம்மாவையாவது மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு யோசிக்கிறேன். நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்க விஜய்! ஆமா, உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சுதா? நீங்க என்ன ப்ளான்ல இருக்கீங்க??”

    “இப்போதைக்கு அதப்பத்தி பெருசா எதும் யோசிக்கலைங்க திவா!”

    பேச்சுக் கச்சேரிக்குள் அடுத்த ஆடொன்று அதன் போக்கில் வந்து புகுந்தது.

    “வாடா மச்சான். இவர் பேரு விஜய்; பார்ட்லட் பேங்க்ல வேலை பாக்குறாரு!””

    “விஜய் சார், எனக்கு நல்லாத் தெரீமே! நம்ம கல்யாண் குமார் கூட வருவாரே? பார்த்திருக்கேன்!! அலோ சார், நல்லா இருக்கீங்களா? உங்க பாட்டியோ யாரோ தவறிப் போனப்ப, நீங்க ஊருக்கே போய் செட்டில் ஆயிட்டதாச் சொன்னாங்களே? இன்னும் நீங்க இங்கதான் இருக்கீங்களா சார்??”

    எனக்கு இந்த நகைச்சுவைத் திருவிழா மிகவும் அவசியமா? உடுத்திருக்கும் உடைகளை அந்த இடத்திலேயே களைந்தெறிந்து போட்டுவிட்டு, அப்படியே ஓடிப் போய் எர்னாண்டோ டெ சோட்டோ மெம்ஃபிசு பாலத்தின் மீதேறி மிசிசிப்பி ஆற்றில் குதித்து விடலாம் போல இருந்தது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    அனைத்துக்கும் பெண்ணே ஆதாரம் என்பதை எத்தனையோ முறை எத்தனையோ புராணங்கள் எத்தனையோ காவியங்கள், எத்தனையோ சம்பவங்கள் எத்தனையோ பெரியோர்கள் நமக்கு எல்லாக் காலங்களிலும் ஏராளமாக எடுத்துக்காட்டிக்கொண்டே இருந்தாலும், எப்போதுமே இந்தப் பெண்மையின் பெருமையை நாம் போற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இறைவன் விருப்பமோ என்னவோ..

    ஸ்கந்த புராணத்தில் மன்மதன் சாம்பலாகிப் போனதின் தத்துவத்தை விரிவாகக் கேட்டு அதன் தத்துவத்தின் மகிமையில் வியந்து போனவன் நான். தேவர்களின் தலைவன் இந்திரன் ஆணையை ஏற்று உலகத்தையே ஆக்கி காத்து அழிக்கும் அந்த ஆதி பகவனுக்கே காமத்தை ஏற்படுத்த அம்பு எய்கிறான் மன்மதன். எவரை நோக்கி எய்தானோ அந்தக் காமேசனுக்காக எய்யப்பட்ட அந்த அம்பு உடனடியாக வேலை செய்யாவிடாலும் அம்பை எய்தவனை சாம்பலாக்கிவிட்டது எத்தனை கொடியதோ.. தன் காதலன் அழிந்துவிட்டான் என்றறிந்த அவன் மனைவி கதறுகிறாள். எய்தவன் தன் கணவனே என்றாலும் எய்யப்படும் ஏவல் அவனுடையதல்ல என்று நியாயம் கேட்கிறாள். அவள் கதறலுக்கு இறுதியில் பராசக்தி மூலமாக வெற்றியும் கிடைக்கிறது என்று ஸ்கந்த புராணம் விரிவாக உரைக்கிறது. ஆக இந்திரன் ஆணையை ஏற்று மன்மதன் செய்த தவறு, அதனால் மன்மதனுக்கு ஏற்பட்ட மரணம், மன்மதன் பிரிவால் ரதிக்கு ஏற்பட்ட துயரம், அந்தத் துயரத்தால் எழுந்த ரதியின் போராட்ட நிலை இவையெல்லாம் சற்று நிதானமாக நாம் சிந்தித்தால் அந்த ரதி தேவியானவள் மன்மதனை மட்டுமல்லாமல் இந்த உலகத்தையும் காப்பாற்றி இருப்பது தெரியும்.

    காமன் இல்லாவிட்டால் உலகில் காரியம் இல்லை. காரியம் இல்லாவிட்டால் இந்த உலகின் இயக்கமே கேள்விக்குறியதாகிறது காமன் மறுபடி வந்ததற்கு மூலகாரணம் ரதிதேவிதான். இத்தகைய ரதிதேவியின் சிற்பத்தை குடுமியான் மலையில் கண்டு அற்புதமாக வரைந்திருக்கிறார் திரு சு. ரவி அவர்கள். வல்லமை இதழில் இந்த வாரம் வெளிவந்த அந்த அழகான ரதியின் படமும் அதற்கான விளக்கமும் திரு ரவியின் கைவண்ணத்தில் தந்துள்ளேன்.
    வணக்கம், வாழியநலம்,

    உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை.

     

    காதலுக்கு அதிபதியான தேவனையே காதலில் வீழ்த்தும் நாயகி.
    பரமனின் விழிவெப்பத்தால் ” புறாவின் கழுத்துத் தூவிகள்” போல ( நன்றி:உவமைக் கவிஞன் காளிதாஸன்)
    சாம்பலாகிப் பறந்த மன்மதனை அனங்கனாகவேனும் உயிர்ப்பித்த உத்தமி.
    அன்னவாகனத்தில் வீற்றிருக்கும் அழகுத் தெய்வம்.
    குடுமியான்மலைக்கோயிலில் காட்சி தரும் ரதிதேவியின் ஒயில் வடிவம்.

    அழகுக்கு இலக்கணம் ரதிதேவிதான் ஆக்கத்துக்கும் அவள்தான் ஆதாரமாகத் திகழ்கிறாள். அப்படிப்பட்ட ஒரு உயிரோவியத்தை நமக்குத் தந்த திரு சு.ரவி அவர்கள் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திரு ரவிக்கு நம் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    கடைசி பாரா: மகாகவியை நினைவுபடுத்திய கவிதை வரிகள் என்பதை மறுக்கமுடியாதுதான். கவியின் காதல் எழுதிய புவனேஸ்வரின் கவிதை வரிகள்

    வண்டு லாவுசோ லையில்நாம் இனிக்

    கண்டுமனம் கலந்தே யிணைவோ மணம்

    கொண்டு மறைவழி நின்றே புகழ்

    மண்டு மனையறம் செய்வோம்!

     

    Share
  • ஜினா என்றொரு க்ருயெல்லா

    தேமொழி

    அடர்ந்து பெரிய மரங்களாக வளர்ந்து, நல்ல நிழல் தரும் சாலையில் தனது வண்டியைத் திருப்பினாள் ஜினா. மரங்களின் வளர்ச்சியும் வீடுகளின் கட்டிட அமைப்பும் அப்பகுதி உருவாகி ஒரு ஐம்பதாண்டுகள் ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. நகரை விட்டு அமைதியான வாழ்க்கையை வேண்டி புறநகர்ப் பகுதியில் அமைக்கப் பட்டிருந்த குடியிருப்புகளில் ஒன்று அது. அப்பகுதியின் மரங்கள் தரும் நிழலும் காற்றும் அந்த வெயில் கொளுத்தும் கோடையின் கசகசப்பில் மிகவும் இதமாக இருந்தது. ஜினா போக வேண்டிய வீட்டினை அடையாளம் காண்பதில் அவளுக்குச் சிரமமாக இல்லை. அவளுக்கு முன்பே அவளது காவல் துறையின் பரிவாரங்கள் அங்கு வந்து சேர்ந்து வேலையைத் தொடங்கி விட்டிருந்தனர். வீட்டின் முன் “நுழையத் தடை” என்ற வாக்கியம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நாடா சுற்றி கட்டப் பட்டிருந்தது. அக்கம் பக்கம் வீடுகளின் வாசலில் ஒரு சிலர் வந்து நின்று வேடிக்கைப் பார்த்தனர்.ஜினாவின் கண்கள் மார்ட்டினைத் தேடித் துழாவியது, அவனைக் காணவில்லை.

    ஸ்டியரிங் வீலில் இருந்து எக்கி ரேடியோவை தட்டி, “மார்ட்டின், எங்கே போனாய், போக்குவரத்து அதிகமா? வழியில் மாட்டிக்கொண்டாயா?” என்றாள்.

    “ஆமாம், மாட்டிக்கொண்டேன் சீஃப், ஆனால் போக்குவரத்தில் அல்ல, எஃப்.பி.ஐயிடம் இருந்து ஒரு அவசர வேண்டுகோளை கவனிக்க வேண்டிய சூழ்நிலை. எனக்குப் பதில் உங்களுக்கு உதவ வேறு ஆளை அனுப்பியிருக்கிறேன்.”

    “ஏன் அதனை உடனே எனக்குச் சொல்ல என்னக் கேடு? உனக்குப் பதில் யாரை அனுப்பினாய்?” என சிடு சிடுத்தாள் ஜினா. ஜினாவின் சள்ளென்று விழும் முன்கோபம் நகரக் காவல் துறை பணியாளர்களிடம் பிரசித்தி பெற்றது.

    “இது போல உங்களுக்கு கோபம் வரும் என்றுதான் சொல்லவில்லை சீஃப். அதைவிட பதிலுக்கு வந்திருக்கும் ஆளின் பெயர் உங்களுக்கு மேலும் எரிச்சலூட்டும், அதனால் தவிர்த்தேன், தேவையானத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு ரெக்ஸ் ஏற்கனவே அங்கிருக்கிறான் .”

    “யார்? அந்த டி-ரெக்ஸ் கோமாளியா? அர்த்தமில்லாமல் நகைச்சுவை சொல்லிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் அபத்தமாகச் சிரித்துக் கொண்டு…ச்சே…ச்சே… உனக்கு வேறு ஆளே கிடைக்கவில்லை,உன்னை வந்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன். அதோ வருகிறான் அறுவைத் திலகம், அப்புறம் பேசுகிறேன் உன்னுடன்,” என்று ஜினா ஒலிவாங்கியை நிறுத்தும் முன் ரேடியோவின் கர..கர..ஒலியின் பின்னணியில் மார்ட்டின் சிரித்துக் கொண்டே “கூல் டவுன், சீஃப்” என்று சொல்வது கேட்டது.

    வண்டியிலிருந்து இறங்கித் தொப்பியை மாட்டிக்கொண்ட ஜினா, தன்னை நோக்கி விரைந்து வந்து “ஹை சீஃப், மார்ட்டினுக்குப் பதில் நான் வந்திருக்கிறேன்,” என்ற ரெக்ஸை தன்னையும் அறியாமல் முறைப்பதைத் தவிர்த்தாள்.

    “சரி ரெக்ஸ், சுருக்கமாகச் சொல்லு”.

     

     

    “அதோ அந்த கிறிஸ்துவ மதம் பரப்பும் போதகர்கள்தான் முதலில் பார்த்து 911ஐ கைபேசியில் அழைத்திருக்கிறார்கள். கூப்பிட்டுப் பார்த்துவிட்டு யாரும் வராததால் முன்கதவில் பிரசுரங்களை செருக முயன்றவுடன் கதவு திறந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியின் சப்தம் அதிகமாயிருந்திருக்கிறது. அதன் முன் மிஸ்டரும் மிஸ்ஸஸ் ஸ்மித்தும் ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூங்குவது போல இருப்பதைப் பார்த்து திரும்ப எண்ணினார்களாம். ஆனால் துர்நாற்றம் வரவும் சந்தேகம் வந்து, உள்ளே சென்று அவர்கள் தோளைத் தொட்டு உலுக்கவும் உடல்கள் சரிந்து விட்டிருக்கிறது. உடனே ஆம்புலன்ஸை அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்,” என்று சொல்லிய ரெக்ஸ் நடைபாதையில் மரத்தடியில் நின்றுகொண்டிருந்த, கருப்பு கோட் சூட் அணிந்து, பிரசாரப் பத்திரிக்கைகள் தாங்கிய தோள் பையுடன் நிற்கும் இளைஞர்களைக் காட்டினான்.

    “சரி, நீ அவர்களின் முகவரி போன்றத் தகவல்களை வாங்கிக் கொண்டு, மேலும் விசாரணையை முடித்துக் கொண்டு, அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வா”

    கதவைத் தள்ளிக் கொண்டு ஜினா உள்ளே நுழைந்த பொழுது வீடு அளவுக்கு மீறி குளிரூட்டப் பட்டிருப்பது தெரிந்தது. அறுபத்தி ஐந்து அல்லது அதற்கு மேல் வுயதுள்ள, தளர்ந்த, வெளிறிய, வயோதிக ஸ்மித் தம்பதியினர் இன்னமும் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் போல சரிந்து அமர்ந்திருக்க, தொலைக்கட்சியில் ஒரு சோப் ஒப்பரா நிகழ்ச்சியில் இரு பெண்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

    காவல் துறை பணியாளர்கள் வீட்டையும், ஸ்மித் தம்பதியினரையும் பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். கைரேகைத் தடயங்களுக்காக பொடி தூவி, தூரிகையால் பல இடங்களை வருடிக்கொண்டு இருந்தார்கள். அனைத்தையும் சிறு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவர், கையுறை பெட்டியிலிருந்து உறைகளை உருவி ஜினாவிடம் கொடுத்துக் கொண்டே, “எதையும் மாற்றவில்லை, அசைக்கவில்லை சீஃப் என்றார்.”

    கையுறையை மாட்டிக் கொண்டே, “ஏதும் செக்யூரிட்டி கேமரா, சிஸ்டம் வைத்திருகிறார்களா?” என்றாள் ஜினா.

    “ஊஹூம், இல்லை. இன்னமும் பழைய லாண்ட் லைன் தொலை பேசியை மட்டுமே விரும்பும் வயோதிகர்கள். ஒரு கை பேசியோ, கணினியோ கூட வீட்டில் இல்லை. அவசர அழைப்பிற்கு என்று குளிர்பதனப் பெட்டி மேலே ஒட்டியிருந்த தாளில் கண்டு, அதில் சில தொலை பேசி எண்களைத் துரத்திப் பிடித்தத்தில் இவர்களுக்கு ஒரே மகள், கணவனை இழந்த அவள் பதின்ம வயது மகளுடன் சாக்ரமெண்ட்டோவில் இருக்கிறாள் எனத் தெரிந்தது. தகவல் சொல்லியிருக்கிறோம். இனிமேல் கிளம்பினாலும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார்கள்.”

    ஸ்மித் தம்பதியினருக்கு எதிரே ஆளுக்கொரு கோக் டின் இருந்தது, துப்பாக்கிக் காயம் போல எதுவும் இல்லை, இரத்தம் சிந்தியிருக்கவில்லை. சோடாவில் நஞ்சு கலந்து குடித்து உயிரை விட்டார்களோ என எண்ணியவாறு வீட்டை அங்குலம் அங்குலமாக நோட்டம் விட்டாள் ஜினா. கோக் அருகே கவிழ்த்த ஒரு டிவி நிகழ்ச்சி நிரல் புத்தகமும், தபாலில் சேர்க்க வேண்டிய கடிதங்கள் மற்றொரு பக்கம் இருந்தது. அவை அனைத்தும் தொலைபேசி, தண்ணீர், மின்சாரம், பத்திரிக்கை சந்தா, கேசோலின் எனக் கட்ட வேண்டிய தொகைகளுக்காக அனுப்பவேண்டியவை.

    கணப்புக்கு மேலிருந்த திட்டில் இருந்த புகைப் படங்களில் சில குடும்பப் படங்கள், வாழ்த்து அட்டைகள் இருந்தது. மிஸ்டர் ஸ்மித் இராணுவத்தில் பணி புரிந்ததைச் சொல்லும் படங்கள், அவர் பிடித்த பெரிய மீனுடன் ஒரு படம், அக்கால ஹாலிவுட் நடிகை போன்ற தோற்றத்துடன் இளவயதில் மிஸஸ் ஸ்மித், பல் விழுந்த சிரிப்பைக் காட்டும் சிறு வயது மகளைக் கட்டிக் கொண்டு கடற் கரையில், பட்டம் வாங்கிய மகளுடன், பேத்தியுடன் போன்ற வழக்கமான படங்கள். சற்றுத் தள்ளி தொலைகாட்சி பார்த்துக் கொண்டே உடற் பயிற்சி செய்ய ஒரு அசையா மிதிவண்டி இயந்திரம்.

    சமையலறைக் குளிர்ப் பதனப் பெட்டியில் பழங்கள், காய்கள், கோழி என நிறைந்திருந்தது. அதன் கதவில் பேத்தியின் கிறுக்கலான ஓவியம் “ஐ லவ் யு கிரான்மா” என்றது. அத்துடன் அதன் கதவின் மேல் வாங்க வேண்டிய மளிகைப் பட்டியல் ஒன்று. அதில் சோயாப் பால், சர்கரையற்ற, கொழுப்பு குறைந்த பண்டங்களின் பெயர்கள். அதனருகில் தொலைபேசி எண்கள் பட்டியல். டிஷ் வாஷரில் பாத்திரங்கள் காய்ந்து எடுத்து அடுக்கத் தயாராக காத்திருக்க, மிகவும் சுத்தமான சமையலறையாக இருந்தது.

    அருகில் இருந்த சிறிய லாண்டரி அறையில் வாஷிங் மெஷின் காலியாக இருக்க, உலர்த்தும் பெட்டியில் துணிகள் உலர்ந்து மடிக்கக் காத்திருந்தது. சிறிதும் கலையாத படுக்கை அறை. எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு மீண்டும் முன் அறைக்கு ஜினா வந்த பொழுது ரெக்ஸ் மற்றவர்களிடம் தகவல் சேகரித்துக் கொண்டிருந்தான்.

    “மரணத்திற்கு என்ன காரணம் என்று உனக்கு தோன்றுகிறது ரெக்ஸ்?” என்றால் ஜினா.

    “தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள், சீஃப். அவர்களை அந்த அளவுக்கு அவர்கள் பார்த்த நிகழ்ச்சி பாதித்துள்ளது. என்ன நிகழ்ச்சி என்று தெரிந்தால் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்த நிறுவனத்தை ஷியூ பண்ணலாம். துர்நாற்றம் வருவதால் இறந்து மூன்று நாட்களுக்கு மேலிருக்கலாம், சரியான நேரம் தெரிந்தால் என்ன நிகழ்ச்சி என்று கண்டு பிடித்து விடலாம். யாராவது இந்த உயிரிழப்புக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்,” என்றான் மோவாயைத் தடவிக் கொண்டு.

    “இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது, ரெக்ஸ். அநேகமாக சென்ற வியாழன் இதே நேரம் இறந்திருக்கிறார்கள்.”

    ரெக்ஸ் ஆச்சரியத்துடன், “அது எப்படி உங்களுக்குத் தெரியும் சீஃப்?” என்றான்.

    “நான் நினைப்பதை போஸ்ட் மார்ட்டம் அறிக்கை உறுதிப் படுத்த வேண்டும். டிவி நிகழ்ச்சி நிரல் புத்தகம் அந்தப் பக்கத்தில் கவிழ்த்து வைக்கப் பட்டிருகிறது, வீட்டில் அனைத்தும் அடுத்த வேலைக்கு… அடுத்த நாளைக்கு எனப் பல வேலைகள் காத்து இருக்கிறது. உடல் நலம் பேணும் உணவாகப் பார்த்துப் பார்த்து வாங்குவதாகவும் தெரிகிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்கள்.”

    “பிறகு ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், சீஃப்?”

    “அவர்களுக்கும் அந்த நிமிடம் வரை உயிர் விட எண்ணம் இருந்ததாக இந்த வீட்டின் சூழல் காட்டவில்லை.”

    “ஆமாம், திடீரென உயிரை விட எடுத்த முடிவாகத்தான் இருக்கும் சீஃப். மிஸ்டர் ஸ்மித் வெளியில் காரைக் கழுவிக் கொண்டிருந்தவரும் பாதியில் வந்ததாகத்தான் தெரிகிறது. வெளியில் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு வந்திருக்கிறார். அப்படியானால் வேலை செய்த களைப்புடன் சிறிது ஓய்வெடுக்க, குளிர் பானம் குடிக்க உள்ளே வந்திருக்கிறார். மனைவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சி நிரல் பார்த்து விட்டு வேறு ஏதோ ஒரு நிகழ்ச்சி மாற்றச் சொல்லியிருக்கிறார். இருவருக்கும் வாக்கு வாதம் ஆரம்பித்து, சண்டை முற்றிப் போய், இதென்ன வாழ்க்கை என வெறுப்பேறி, விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் இருவரும்.”

    “ஆமாம் நாற்பது ஆண்டுகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தவர்கள்தான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வாக்குவாதம் செய்து உயிரை விட முடிவெடுத்தர்களா?” என்ற ஜினாவின் குரலில் எரிச்சல் கலந்த சலிப்பு தெரிந்தது.

    “நாற்பது ஆண்டுகளா, அது உங்களுக்கு எப்படித் தெரியும், சீஃப்?”

    ஜினா கணப்பின் திட்டின் மேலிருந்த வாழ்த்து அட்டையைக் காட்டினாள்.

    “ஸ்மித் காரைக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது யாரோ தெரிந்தவர்கள் வந்திருக்க வேண்டும். வரவேற்று எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். கெட்ட எண்ணம் உள்ள விருந்தாளி அவர்களைத் திசை திருப்பிவிட்டு, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களது பானத்தில் நஞ்சு கலந்துவிட்டிருக்கலாம். பிறகு சந்தடி இன்றி தனது பானத்துடன் வெளியேறி இருக்க வேண்டும். கதவினைப் பூட்டாத காரணமும் அதுதான். வீடு அதிகக் குளிராக இருப்பதன் காரணமும் மரணம் நடந்ததது உடனே அனைவருக்கும் தெரியவராமல், உடல் அழிவதை தாமதப் படுத்தும் நோக்கமாக இருக்க வேண்டும். எனவே திட்டமிட்ட கொலை, பர்ஸ்ட் டிகிரி மர்டர் என்றால் கொலை செய்த நபர் கைரேகைத் தடயம் எதையும் விட்டுச் செல்ல வழியில்லை.”

    “வாவ், என்ன ஒரு சிறந்த போலீஸ் மூளை”

    “எனக்கு வாவ் சொல்வது இருக்கட்டும் ரெக்ஸ், நான் சொன்ன கோணத்தில் ஏதேனும் லாஜிக் இடிக்கிறதா என்று பார்? மரண அறிக்கை இறந்த நேரம் என்ன வென்று சொல்கிறது என்று பார்ப்போம், பானத்தில் நஞ்சுதான் கலந்திருந்தது என உறுதியாகத் தெரிந்தால், அண்டை வீட்டுக் கார்களிடம் அவர்கள் யாரையாவது பார்த்தார்களா? அவர்கள் வீட்டில் செக்யூரிட்டி கேமெரா ஏதும் உண்டா? அதில் ஏதும் பதிவாகி இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடரலாம். ஸ்மித் மகள் வந்து இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு அவளையும் விசாரிக்க வேண்டும். சொத்து அவளுக்குப் போகும் என்றால் அவள் கொலை செய்யத் தேவை இராது. உயிலையும் படிக்க வேண்டும். சரி, நீ மற்ற வேலைகளை முடித்து விட்டு வா. இது தற்கொலை அல்ல கொலை என்று நிரூபிக்க சரியான காரணம் வேண்டும்,” என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள் ஜினா.

    ***

    தொடர்ந்து வந்த அடுத்த வாரம் உள்ளூர் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு கொடுப்பது, ஒன்றிரண்டு நீதிமன்ற விசாரணைக்கு சாட்சி சொல்ல வேண்டியக் கடமை என ஜினாவிற்கு காலம் ஓடி விட்டது.

    ஸ்மித் கேஸ்ஸின் மரண அறிக்கை பானத்திலும், இறந்தவர்கள் குடலிலும் ஒரே நஞ்சு என்றும், மரண நேரம் குத்துமதிப்பாக ஜினா ஊகித்த நேரம்தான் என்றும் ஆதாரம் கொடுத்தது. இறந்த தம்பதியினர் மகளுக்குப் பெரும்பான்மையான சொத்தையும், அவர்கள் படித்த பல்கலைக் கழகங்களுக்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாகவும் எழுதி வைத்திருந்தனர். ஸ்மித் தம்பதிகளுக்கு உடல் உபாதைகள் எதுவும் இருந்திருக்கக் கூடும் எனவும் மரணஆய்வு அறிக்கை கூறவில்லை.

    கடன் சுமை போன்ற எந்த ஒரு பிச்சுப் பிடுங்கலுமின்றி, நல்ல உடல் நலமுடன் ஓய்வு காலத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு காரணமும் இல்லாமல் உயிரை விட முடிவெடுப்பர்களா? இந்த மரணத்தை ஓர் ஓப்பன் அண்ட் ஷட் கேஸாக முடிவு செய்ய ஜினாவின் மனம் ஒத்துக் கொள்ள மறுத்தது. ரெக்ஸின் விசாரணையின் மூலம் அக்கம் பக்கம் வசித்த குடும்பங்கள் எந்த வித விபரீத நடவடிக்கையையோ, வேற்று மனிதர்களையோ பார்த்ததாகத் தகவல் கிடைக்கவில்லை. ஒரு வேளை அந்தக் கிறுக்கன் ரெக்ஸ் சொன்னது போல திடீர் வாக்குவாதம் தற்கொலையில் முடிந்ததா?

    நினைக்கவே அபத்தமாக இருந்தது ஜினாவிற்கு. தொலை பேசியில் பேசிய பொழுது ஸ்மித் தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு அவர்கள் மகள் அந்த வீட்டில் சிலகாலம் இருக்கப் போவதாகத் தெரிந்தது. எதற்கும் ஒரு நடை போய் அவளுடன் பேசினால் ஏதேனும் தெரியும் என்று ஜினா முடிவெடுத்தாள்.

    ***

    ஜினாவும் ரெக்ஸ்ஸும் வண்டியை ஸ்மித் இல்லத்தின் முன் நிறுத்திய பொழுது, நடைபாதையில் ஸ்கேட் போர்ட்டில் பயணித்த பதின்ம வயது சிறுவனொருவன் அவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, லாவகமாக எம்பி, ஸ்கேட் பலகை காலிலிருந்து நழுவாமல் சாலையில் குதித்து, சாலையின் குறுக்கே கடந்தான். மீண்டும் எதிர்சாரி நடைபாதையில் எம்பிக் குதித்து இரு வீடுகளுக்கு இடையே மின்சார, எரிவாயு, தண்ணீர் சேவைகளின் பயன்பாடுகளுக்காக இருந்த வெற்றிட சந்தில் ஸ்கேட் செய்து குறுக்கு வழியில் பக்கத்து தெருவிற்குள் சென்று மறைந்தான்.

    ஜினா அழைப்பு மணியை அழுத்தியதும் கதவைத் திறந்த வாட்ட சாட்டமான வழுக்கைத் தலை ஆள் வாருங்கள் என வரவேற்று, “என் பெயர் ஜோ, நான் ஸ்மித் மகள் டெய்ஸியின் வருங்காலக் கணவன்,” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு கை குலுக்கினான்.

    “அப்படியா, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. டெய்ஸியைப் பார்த்து வருத்தம் தெரிவித்துவிட்டு சிறிது தகவலும் சேகரிக்கலாம் என்று வந்தோம். என் பெயர் ஜினா, இந்த ஆஃபிசரின் பெயர் ரெக்ஸ். நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்து இந்தக் கேஸின் விசாரணையை செய்து வருகிறோம்.”

    “டெய்ஸியும் மகளும் கடைக்குப் போயிருக்கிறார்கள், எந்நேரமும் வந்து விடலாம். நான் எந்த வகையிலாவது உதவ முடியுமா?”

    “நீங்கள் எந்த ஊரிலிருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? எவ்வளவு காலமாக டெய்ஸியுடன் பழக்கம்? உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன். சாதாரணமாக அனைவரும் கேட்பது போன்ற கேள்விகள் இவை. போலீஸ் விசாரணை அல்ல.”

    “புரிகிறது”, என சிரித்தான். நானும் சாக்ரமெண்ட்டோவில்தான் இருக்கிறேன். அங்கு டெய்ஸி வீட்டிற்கு சிறிது அருகில் எனது வீடு. நாங்கள், அதாவது நான், டெய்ஸி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்த டெய்ஸியின் கணவன்… நாங்கள் யாவரும் சிறு வயதில் இருந்து ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள். நல்ல நண்பர்கள். என் மனைவியும் இறந்து விட்டாள். எனவே நானும் டெய்ஸியும் திருமணம் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் துணையாக இருக்கலாம் என்று சென்ற மாதம்தான் முடிவு செய்தோம்.”

    “நல்லது, வாழ்த்துக்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லவில்லையே”.

    “ஒ, மன்னிக்கவும், நான் ப்ளம்பிங் பிசினஸ் செய்கிறேன், தேசிய அளவில் பிரான்ச்சைஸ் உள்ள நிறுவனத்தின் சாக்ரமெண்ட்டோ கிளை என்னுடையது. என் நிறுவனத்தில் என்னையும் சேர்த்து பதினோரு பேர் இருக்கிறோம்.”

    ரெக்ஸ் இடை மறித்து, “ஓஹோ, நீங்கள்தான் அந்த “ஜோ தி ப்ளம்பரா”? ஏன் சென்ற தேர்தலில் மிட் ரோம்னிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை?” என்று கேட்டு தனது நகைச்சுவைக்குத் தானே ஹெஹ்..ஹெஹ்..ஹே..என்று சிரித்தான்.

    ஜோவிற்கு இந்த நகைச்சுவை பிடிக்கவில்லை என்பதை அவன் முக பாவம் காட்டியது. ஜினா இடைமறித்து, “ரெக்ஸ், விளையாடாதே, பீ சீரியஸ். மன்னிக்கவும் மிஸ்டர் ஜோ, ரெக்ஸிற்கு சிறிது விளையாட்டுப் புத்தி. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்,” என்று கூறி ரெக்ஸ்ஸை முறைத்தாள்.

    அவன் அதைக் கவனிக்காதது போல முகத்தை திருப்பிக் கொண்டான். அப்பொழுது வாசல் கதவு திறந்து ஷாப்பிங் செய்த பைகளுடன் டெய்ஸி தனது மகளுடன் வந்தாள். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

    டெய்ஸி மகளை வாங்கிய சாமான்களை உள்ளே அடுக்கி வைக்க சொன்னாள். ஜோ, சிறுமியிடம் “கொஞ்சம் பொறும்மா நானும் வந்து உதவுகிறேன், முதலில் ஒரு தம்மடித்துவிட்டு வருகிறேன்” என்று அவளை ஆதரவுடன் தடவிக் கொடுத்துவிட்டு வெளியே சென்றான்.

    “மற்றவர்களுக்கு செஹண்ட் ஹாண்ட் ஸ்மோக்கிங்கினால் விளையும் தீமையைச் செய்ய ஜோவால் முடியாது. எப்பொழுதும் புகைப்பது வெளியே சென்றுதான்,” என்று சொன்ன டெய்ஸியின் குரலில் பெருமை பொங்கி வழிந்தது.

    மேற்கொண்டு நடந்த உரையாடலில் பெரிதாக ஒன்றும் தகவல்கள் கிடைக்கவில்லை. டெய்ஸி ஜோவை திருமணம் செய்து கொள்வதில் அவளது பெற்றோருக்குச் சிறிதும் விருப்பம் இல்லாததது தெரிந்தது. ஜோவின் சிறு வயது முதலே ஜோவை ஸ்மித் தம்பதியினர் விரும்பியதில்லையாம். அவர்களை சமாதனப் படுத்த டெய்ஸி முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே அவர்கள் இறந்தும் விட்டார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன வருத்தம் என்பது டெய்ஸிக்கு சிறிதும் புரியவில்லை என்றாள்.

    ஜினாவும் ரெக்ஸ்ஸும் ஸ்மித்தின் வீட்டை விட்டு வெளியேறிய பொழுது, ஸ்கேட் போர்டு சிறுவன் ஒரு கைபேசியில் அவர்களது போலீஸ் வண்டியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

    “ஏய், என்ன செய்கிறாய் நீ? யூட்யூபில் படம் போடுவதற்காக போலீஸ் வண்டியையே படம் எடுக்கிறாயா?” என்று ஜினா அதட்டினாள்.

    “கோபிக்காதீர்கள் சீஃப். பொடியன்தானே, இவன் போலத்தான் நானும் போலீஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் சிறு வயதில் பார்க்கும் போலீஸ்காரர்களுடன் எல்லாம் படம் எடுத்துக் கொள்வேன்.”

    அதற்குள் ஜினாவிற்கு அழைப்பு வர, அவள் அவர்களை விட்டு விலகிச் சென்று கைபேசியில் பேச ஆரம்பித்தாள். சிறுவன் போலீஸ் வண்டியில் சாய்ந்து கொண்டு, ரெக்ஸின் தொப்பியை தலையில் மாட்டிக் கொண்டு போஸ் கொடுக்க, ரெக்ஸ் அவனைப் படம் பிடித்தான். பிறகு இருவரும் சேர்ந்து காமெராவை உயரே தூக்கி வைத்து சேர்ந்து படம் பிடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு இருவரது கைபேசிகளையும் உற்று உற்றுப் பார்த்து விவாதித்துக் கொண்டார்கள்.

    இவற்றை கவனித்துக் கொண்டே ஜினா பேசி முடித்துவிட்டு வண்டியில் ஏறியதும், கார் ஹாரனை எரிச்சலுடன் அழுத்தினாள். ரெக்ஸ் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டான்.

    வண்டியை ஓட்டிக் கொண்டே “அது என்ன பைண்ட் சைஸ் பசங்களோடத் தோழமை, என்ன செய்கிறீர்கள் இருவரும்?” என்றாள்.

    “இருவரும் படம் எடுத்துக் கொண்டோம்,சீஃப். அவனுடைய யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய விருப்பம் தெரிவித்து என் கைபேசிக்கு செய்தி வழியே ஒரு சுட்டி அனுப்பச் சொன்னேன்.”

    “ஆமாம், ரொம்ப முக்கியம்,” என்ற ஜினாவின் குரலில் கிண்டல் தொனித்தது.

    அதைப் பொருட்படுத்தாது, “இந்த கேஸில் இப்பொழுது உங்கள் முடிவு என்ன, சீஃப்?” என்றான் ரெக்ஸ்.

    “அந்த ஆள் சரியில்லை.”

    “யார்?”

    “அதுதான் அந்த ஜோ. என்னவோ ஒரு போலித்தன்மை அவனிடம் இருக்கிறது. அவன் அந்தச் சிறுமியிடம் பழகுவதில் எனக்கு விருப்பம் இல்லை, அவன் பார்வையோ, தொடுதலோ ஏதோ ஒன்று சரியில்லை.”

    “இது அந்த மகளின் அம்மாவிற்குத் தெரியாதா? டெய்ஸிக்கு இல்லாத அக்கறையா உங்களுக்கு?”

    “அவளுக்குக் காதல் கண்ணை மறைக்கிறது, அவனைப் பற்றி மேலும் தகவல் சேகரி, ரெக்ஸ். ஏதேனும் குற்றப் பின்னணி இருக்கிறதா? சிறார்களுடன் பழகுவதில் தவறு செய்தவனா? அவன் மனைவி எப்படி இறந்தாள்? நிறையப் பணம் இன்ஷூர் செய்திருந்தானா அவள் மீது? அவனிடம் ஏதோ தப்பு. காரணம் இல்லாமல் ஸ்மித் பெற்றோர் இந்தத் திருமண ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஜோவிற்கு இந்தச் சிறுமி மேல் ஒரு கண் இருந்திருக்க வேண்டும். அது அந்த தாத்தா பாட்டிக்கும் புரிந்திருக்க வேண்டும். பேத்தியைக் காப்பாற்றும் எண்ணத்தில் ஜோவை எதிர்த்திருக்கலாம்.”

    “வாவ், இது போலீஸ் மூளையா? இல்லை விமன்ஸ் இன்டியூஷனா?”

    “பெரும்பாலும் நீ இரண்டாவதாகச் சொல்வது.”

    ***

    அடுத்த நாள் ஜினா கதவைத் தள்ளித் திறந்து கொண்டு அலவலகத்தில் நுழைந்த பொழுது மார்ட்டின் எதிர்பட்டான்.

    “என்ன சீஃப், சிட்டி ஹாலில் சந்திப்பு எப்படி? நகராட்சித் தலைவர் என்ன சொல்கிறார்?”

    “தி பெஸ்ட் லுக்கிங் அட்டர்னி ஜெனெரல் இன் தி கன்ட்ரி, கமலா ஹாரிஸ் நகரக் காவல் துறையினரின் ஒத்துழைப்பு வேண்டி நகர மேயர்களிடம் பேசலாம் என எதிர்பார்கிறார். அதற்காக நம் துறை பற்றி சிறிது தகவல் சேகரித்தார்”, என்று சொல்லிக் கண்ணடித்தாள்.

    மார்ட்டின் கவலையுடன், “சொன்னால் கோவிக்காதீங்க சீஃப், கொஞ்ச நாள் பழக்கத்திலேயே ரெக்ஸின் தாக்கம் உங்கள் பேச்சில் தெரிகிறது. அட்டர்னி ஜெனெரல் ஹாரிஸ் பற்றி நீங்களும் இது போல பேசி வெள்ளை மாளிகை போல வம்பில் மாட்டிக் கொள்வீர்கள் போலிருக்கிறது.”

    “ஆமாம், உண்மைதான், ரெக்ஸின் தாக்கம் பற்றி நீ சொல்வது கவலையைத் தருகிறது. உன் அக்கறைக்கு நன்றி. நம் துறையின் சென்ற மீட்டிங் மினிட்ஸ் கோப்பை ஒரு பிரதி எடுத்துக் கொண்டு என் அறைக்கு வா. நகரத் தலைவருக்கு நம் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு ‘டாக்கிங் பாய்ண்ட்ஸ் மெமோ’ கொடுத்தனுப்பினால் அவருக்கு உதவியாக இருக்கும்.”

    “அதை அவர் எடிட் செய்தால் என்ன செய்வது?” என்று மார்ட்டின் சிரித்தான்.

    “ஏதேது, நீயும் பேசியே வம்பை விலைக்கு வாங்குவாய் போல இருக்கிறது. முதலில் இந்த ரெக்ஸை இங்கிருந்து துரத்திவிட வேண்டும், இல்லாவிட்டால் எல்லோருமே அவனைப் போல மாறிவிடுவோம்.”

    ஜினா தனது அறையை அடையும் முன் ரெக்ஸின் மேஜையில் எட்டிப் பார்த்தாள். அவன் யூடியூப் காணொளியில் மூழ்கி இருந்தான். அவனது அரை டிக்கட் நண்பன் ஸ்கேட் வித்தை காண்பிக்கும் படத்தினில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்தான்.

    “ஹேய், ரெக்ஸ் வேலை நேரத்தில் காணொளியா பார்க்கிறாய்? இரு உன் பெர்ஃபார்மன்ஸ் ரீவ்வியூவில் தீட்டி விடுகிறேன் உன்னை.”

    “வாங்க சீஃப், அது நடக்கப் போவதில்லை, பதவி உயர்வுக்குத்தான் பரிந்துரை செய்வீர்கள் நான் கண்டுபிடித்ததைச் சொன்னால். இங்கே வந்து பாருங்கள், என்ன தெரிகிறது? படத்தில் பையனைப் பார்க்காதீர்கள் அவன் பின்னால் என்ன நடக்கிறது பாருங்கள்.”

    காணொளியை ரெக்ஸ் ஓடவிட்டான். அதில் அவனது பைண்ட் சைஸ் நண்பன், மரணமடைந்த ஸ்மித் வீட்டருகே வசிப்பவன், ஸ்கேட் போர்டில் வித்தைக் காண்பித்தான், அவனுடன் மேலும் சில சிறுவர்கள் இருந்தார்கள். பின்புறம் உள்ள வீடுகளுக்கிடையே இருந்த ஒரு சந்தில் இருந்து ஒரு மனிதன் வந்தான். கையில் இருந்த சோடாக் கேனில் இருந்து கொஞ்சம் குடித்தான். பிறகு கால்சராயின் பையைத் துழாவி சாவியை எடுத்து ஒரு வேனின் கதவை திறந்து அதனை ஓட்ட ஆரம்பித்தான். அந்த வண்டி ஸ்கேட் செய்யும் சிறுவர்களை நோக்கி அவர்கள் இருக்கும் திசையில் வந்தது. விளையாடும் சிறுவர்களுக்காக மிக மெதுவாக ஓட்டியதில் வேனின் பதிவு எண்ணும், அது சாக்ரமெண்ட்டோவைச் சேர்ந்த ஒரு ப்ளம்பிங் நிறுவனத்தின் வேன் என்பது அதன் ஒரு பக்கத்தில் எழுதியிருந்த விளம்பர வாக்கியங்களில் இருந்தும், ஓட்டுவது ஜோ எனவும் தெளிவாகத் தெரிந்தது.

    ஜினாவின் கண்களில் ஓடிய மின்னல் போன்ற மகிழ்ச்சியைப் பார்த்து சிரித்த ரெக்ஸ், “ஆமாம் சீஃப், நீங்கள் நினைப்பது சரி, என் பைண்ட் சைஸ் பார்ட்னரின் நண்பன் எடுத்த காணொளி இது. அவர்களுடன் பேசி தேதியைச் சரி பார்த்து உறுதி செய்துவிட்டேன். ஸ்மித் மரணநாளில் எடுத்திருகிறார்கள். அந்தப் பாவி ஸ்மித் தெருவில் வண்டியை நிறுத்தி யார் கவனத்தையும் கவருவதைத் தவிர்த்திருக்கிறான். இந்தப் பையனின் தெருவில் நிறுத்திவிட்டு இடைப்பட்ட சந்தில் நுழைந்து காரைக் கழுவிக் கொண்டிருந்த ஸ்மித்துடன் அவர் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். கணவன் மனைவி இருவருக்கும் சந்தேகம் வராமல் அவர்களை வேலை தீர்திருக்கிறான். பிறகு வீட்டை அதிக குளிரூட்டிவிட்டு, கதவை சார்த்திவிட்டு மீண்டும் சந்து வழியாகவே வந்து தனது நிறுவன வேனில் ஏறி சாக்ரமெண்ட்டோவிற்குப் பறந்துவிட்டிருக்கிறான். காணொளி எடுத்த நேரம் துல்லியமாக அதில் பதிவாகிவிட்டது. அவனது கைபேசி நிறுவனத்திடம் பேசி அவனது ஃபோனின் ஜிபிஎஸ் ரெகார்ட் வாங்கி ஒத்துப் பார்த்துவிட்டேன். இரண்டும் கச்சிதமாகப் பொருந்துகிறது. மச்சி வசமாக மாட்டிக்கொண்டான்.”

    “குட் பாய், சூப்பர் வர்க். என் அறைக்கு வா, நீதிபதியிடம் பேசி அரெஸ்ட் வாரண்ட் வாங்குவதைப் பற்றிய அடுத்த நடவடிக்கையினை விவாதிப்போம். கைது செய்து, தனி அறையில் போட்டு விசாரணை என்ற பெயரில் நெருக்கடி கொடுத்தால் கக்கிவிடுவான் உண்மையை. லை டிடெக்டர் வழியாகவும் உறுதி செய்து விடலாம்.”

    தனது அறையில் நுழைந்த ஜினாவிற்கு பசித்தது. உணவு நேரம் கடந்துவிட்டது நினைவு வந்தது. வயிற்றைத் தடவிக் கொண்டே தனது உணவுப் பையைக் கவிழ்த்து மேஜை மேல் கொட்டி அதிலிருந்த ஒரு வாழைப் பழத்தை எடுத்துக் கொண்டாள். தனது நீல கால்சராயை முட்டிக்கு மேல் சிறிது இழுத்துவிட்டு மேஜை நுனியில் தொத்தியவாறு உட்கார்ந்தாள். அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த ரெக்ஸ், தகவல்கள் சேகரித்து அந்தத் தாள்களை ஒரு கோப்பில் அடுக்கி அவளது பார்வைக்குக் காண்பித்தான்.

    அவைகளைப் புரட்டிப் பார்த்தவாறே, “இது போதும் என நினைக்கிறேன் ரெக்ஸ். உன் திறமையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மேற்கொண்டு நீயே இந்தக் கேஸை முன்நடத்திச் செல், உனக்கு பதவி உயர்வு நிச்சயம்” என்றாள் ஜினா புன்னகையுடன்.

    “நன்றி சீஃப்,” என்று கதவை நோக்கி நடந்த ரெக்ஸ், “பார்ட்னர் மார்ட்டின் உங்களைப் பற்றி சொல்வது சரிதான்” என்றான்.

    அப்பொழுது கதவைத் திறந்து ஒரு கோப்புடன் உள்ளே நுழைந்த மார்ட்டின், “நான் என்ன சொன்னேன் சீஃப்பைப் பற்றி?” என்றான்.

    வாழைப் பழத்தை சாப்பிட்டுக் கொண்டே ஜினாவும், “வாஷ் ஷி ஷஷ் அபௌஷ் மீ?” என்றாள்.

    “பழகுவதற்குதான் நீங்கள் வெளித்தோற்றத்தில் க்ருயெல்லா போல இருப்பீர்கள், ஆனால் உங்கள் மனம் அத்தனையும் தங்கமானது என்றான்.”

    இதை எதிர்பார்க்காத மார்ட்டினின் முகத்திலும் ஜினாவின் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. ஜினா மெள்ளுவதை மறந்தாள். ஆனால் மார்ட்டின் உடனே சுதாரித்துக் கொண்டு “சீஃப், இதோ நீங்கள் கேட்ட கோப்பு” என்று ஜினாவின் மேஜையில் கோப்பை போட்டுவிட்டு, “அடேய் பாவி, நாசமாப் போறவனே, உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று திட்டியவாறு வெளியேறும் ரெக்ஸை நோக்கி ஓடினான்.

    கோபத்துடன் சுற்றும் முற்றும் பார்த்த ஜினா கைக்கு வாகாக எதுவும் கிடைக்காததால் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாழைப் பழத்தையே அவர்களை நோக்கி விட்டெறிந்தாள். அதற்குள் அவர்கள் இருவரும் வெளியேறி விட, பழம் கதவில் பட்டுத் தரையில் விழுந்தது.

     

    படம் உதவி: http://a57.foxnews.com/global.fncstatic.com/static/managed/img/fn2/feeds/Associated%20Press/
    2013/01/07/660/371/ffdbdd65d9b7e600250f6a706700ac16.jpg?ve=1

    Share
  • குறளின் கதிர்களாய்…(2)

        செண்பக ஜெகதீசன்

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

    சால மிகுத்துப் பெயின்…!

                     -திருக்குறள்-475(வலியறிதல்)

    படத்துக்கு நன்றி

    http://www.wallpaperdev.com/wallpaper/1920×1200/peacock-feathers-texture-pattern-backgrounds-9392.html

     

    புதுக்கவிதையில்…

     

    மலரினும் மெல்லிதென்று

    மயிலிறகைச் சேர்த்து

    வண்டியில்

    மனம்போல ஏற்றிவைத்தால்,

    முறிந்துவிடும் அச்சாணி..

     

    மிஞ்சாது எதுவும்

    அளவை

    மீறினால் எதிலும்…!

     

    குறும்பாவாய்…

     

    குடைசாய்க்கும் வண்டியை, பாரம்

    கூடினால் மயிலிறகும்..

    கதையிதுதான் வாழ்க்கை…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வண்டியில் ஏற்றும் பாரமது

    வலிமை யில்லா மென்பொருளாம்

    கொண்டல் கண்டால் ஆடிநிற்கும்

    கோல மயிலின் இறகெனிலும்,

    உண்டே யதற்கும் அளவதுவும்,

    உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே,

    கண்டிடு வாழ்வில் கதையிதுவே

    கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…!

     

    புதுப்பாவில்…

     

    மெல்லிய பொருள்தான்

    மயிலிறகு,

    மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில்,

    அதுவும் உடைந்து

    மிஞ்சுவதில்லை எதுவுமே..

     

    நல்லதுக்கு

    எதிர்மறைப் பலன்தான்

    எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…!

     

    கிராமிய பாணியில்…

     

    ஏலேலோ ஐலசா

    ஏத்து பாரம் ஐலசா..

    அளவாப் பாரம் ஐலசா

    அளந்து ஏத்து ஐலசா..

    மயிலுப் பீலி ஆனாலும்

    மிஞ்சா வண்டி ஒடையுமே..

    மனுசங் கதயும் இதுதானே

    மனசில கொள்ளு இதத்தானே..

    ஏலேலோ ஐலசா

    ஏத்து பாரம் ஐலசா…!

     

    Share
  • குடுமியான் மலை மன்மதன்

     

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    குடுமியான்மலைக் கோயிலில் கம்பீரமாகக் கிளிவாகனத்தில்
    காட்சி தரும் மன்மதன் ஓவியம்,
    பார்க்க,படிக்க, ரசிக்க

    காதல் என்ற கற்கண்டு மதத்தை
    மதித்துண ராது மமதை மிகுந்து
    நாத்திக னாக நான்திரிந் திருந்தேன்!
    ஓவியம் என்ற ஒருநுண் கலைதான்
    ஓசைக ளின்றி உள்ளே நுழைந்தது;
    புதராய்ப் பதராய்க் கிடந்த மனமோ
    கவிதைக ளாலே மலர்வனம் ஆச்சு!.
    கவிதைப் பூக்கள் கனவுகள் தந்தன.
    வசந்த காலம் வாழ்வில் மலர்ந்தது
    எனைமறந் திருந்த ஏதோ ஒருநாள்
    இசையென் இதயக் கதவம் திறந்தது.
    இசையும், கவியும், கலையும் சேர்ந்தெனைக்
    காதல் மதத்தைத் தழுவச் செய்தன.
    கரும்பு வில்லைக் கைகளில் ஏந்திக்
    கருவண்டுகளே நாணாய் இலங்க,
    ஐவகை மலர்களை அம்புகளாக்கித்
    தென்றல் என்றொரு தேரினில் இவர்ந்து
    கிளிவாகனத்தில் ஒளியுறத் தோன்றி,
    அன்னவா கனத்தாள் அழகிய ரதியொடு
    உலகம் எங்கும் உலவிடும் தேவன்
    காமன், அனங்கன், காதற் கடவுள்,
    மன்மதன் என்னை மதம் மாற்றினனே!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 72 (20.05.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி
    (49)

    இன்று எமைப் பிரிந்து சென்ற காதலர்
    அன்று அன்புடன் சொல்லிச் சென்றார்
    ‘உனைப் பிரியேன்’ என்று;
    அந்தச் சொற்கள் தருகின்ற நிழலதனில்
    தங்கியே ஏங்கியே நானும் வாழ்கிறேன்.

    மாலைப்பொழுதே!
    நீயோ தனித்திருந்து வருந்தி வாழும்
    என்னுயிரைக் கவர்ந்திட
    எனைச் சூழ்ந்து கொள்கிறாய்!
    இங்ஙனம் எமைத் துன்புறுத்தும் நீதானும்,
    கோட்டையதன் உள்ளே
    வலிமையற்றிருக்கும் வேந்தனவன்
    மதிலின் புறத்தே சூழ்ந்து நிற்கும்
    பகை வேந்தனுக்கு
    என்னதான் உறவு உடையாயோ!

    (50)

    பகல் செய்யும் கதிரவன் மேற்குக் கடல்புரத்தில்
    மறைந்து விட
    பலருக்கும் துன்பம் தரும்
    காமநோய் அதிகரிக்கச் செய்கிறாய் நீ
    மயக்கத்தயுடைய மாலைப்பொழுதே!

    நின் கொடுமைதான் காணச் சகியாமல்
    நிலமகளும் கண் மூடிக்கொண்டனள்;

    நீ மட்டும் வந்திடுவாய் ஆயின்,
    எம் தலைவர் வாராதிருப்பார் ஆயின்,
    யாம் மட்டுமின்றி இவ்வையமே
    இங்ஙனம் துன்புறுமன்றோ..
    மாலையே! நீ வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/d011/d0111/html/d0111111.htm

    Share
  • விடைவாகனன் பதமே கதி என நாடுக மனமே!

     

    -சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

     

    விடைவாகனன் எண்ணெய் வண்ண ஒவியமும்( இணைப்பில்), விடைவாகனன் பஞ்சகமும்..

     

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    சடைவார்குழல்   நதியோடொரு   மதிசூடிய     பெருமான்

    கொடியாமிடை   உடையாள்உமை ஒருபோதிலும்பிரியான்   

    தடையாவையும்  பொடியாய்விழ   உடனேஅருள் புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    பனிவார்சடை    அரவோடொரு  பிறைசூடிய    பெருமான்

    கனிவாய்மொழி   கருணாகரி     கணமேயினும்  பிரியான்

    இனியோரிடர்     தொடராவணம் இனிதேயருள்   புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    முகிலோடிய      சடைமீதினில்   நிலவோடிய   பெருமான்

    துகில்மூடிய       நகிலாள்உமை  துணையோர்கணம்பிரியான்

    புகல்நாடிய        அடியாரிடர்     கெடவேஅருள்   புரிவான்

    விடைவாகனன்    பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    புகைபோல்படர்    சடைமீதினில்    புனல்சூடிய   பெருமான்

    முகைபோலிரு    முலையாள்உமை முகமோர்கணம்பிரியான்

    பகை, நோய்,பிணி அணுகாவணம்    பதமாயருள் புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

     

    மலர்சூடிய     சடைமீதினில்     மதிசூடிய    பெருமான்

    லலிதாம்பிகை  உமையாள்இடம்  ஒருவேளையும் பிரியான்

    கலியாம்விதி   தொடராவணம்    கடிதேயருள்  புரிவான்

    விடைவாகனன்   பதமேகதி        எனநாடுக    மனமே!

    Share
  • மனாலியில் ஒரு கோயில்!…

    விசாலம்

    இந்த வேனில் காலத்தில் பலர் ‘மனாலி’ என்ற  ஊரை சுற்றுலாவுக்காகத்தேர்ந்தெடுப்பார்கள்.

    அத்துடன் ஆன்மீகப்பிரியர்களும் இந்த இடத்திற்கு வருவார்கள். நல்ல குளுமையான இடமாகவும்   இயற்கை  அழகை அள்ளி வீசிக்கொண்டிருப்பதாலும்   அமைதியான இடமாகவும் உள்ளதால் பலரும்   இங்கு வருகின்றனர் .பனியில்  சறுக்கும்  விளையாட்டும் இருப்பதால் இளைஞர்களும்  இங்கு விரும்பி வருகின்றனர்  இந்த இடத்தில்  தான் “ஹிடிம்பா” என்னும் கோயில்  இருக்கிறது.

    நாம் “இடும்பி “என்று அழைக்கும் அரக்கித்தான் இந்த ஹிடிம்பா.   இவள் தான் ஹிடம்ப் என்ற அரசனின்  சகோதரி . இந்த “ஹிடம்ப்’என்பவன் தான் நாம் சொல்லும் இடும்பன், வடநாட்டில் ‘ஹிடம்ப்” ஹிடிம்பா என அழைக்கிறார்கள்.

    இதன் புராணக்கதையைப் பார்க்கலாம்

    அரக்கு மாளிகையில் தங்கிய பாண்டவர்கள் தாங்கள் கௌரவர்கள் சூழ்ச்சியால் எரிக்கப்போகும் சதி தெரிந்தவுடன்   அங்கிருந்து தப்பி  இமயமலைப்பக்கம்  போனார்கள்  ஆனால் அவர்கள் போன இடமோ  இடும்பன் என்ற அரக்கன்  அரசாளும் இடம் .  இடும்பனுக்கு நர வாசனை மூக்கில் தெரிய   தன் சகோதரியை வந்திருக்கும் நரர்களைப்பிடித்து வர உத்தரவிட்டான்

    இடும்பியும் அங்குச்செல்ல பீமன்  அவள் கண்ணிற்பட்டான் . பீமனை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது காதலிக்கவும் தொடங்கினாள் ஆகையால் அழகிய பெண் போல் தோற்றம் கொண்டு  அவனிடம் அணுகி தன் காதலை வெளிப்படுத்தினாள். பீமனும் அவள் விருப்பத்திற்குச்சம்மதித்தான் அரண்மணையில் இடும்பன் பொறுமையிழந்தான். வெகுநேரமாகியும்  இடும்பி வராததால் அவளைத்தேடியபடியே போனான், பீமன் அவனைப்பார்த்தான், இடும்பனுக்கும்  பீமனுக்கும்  போர் மூண்டது .

    அரக்கனைக்கொன்ற பீமன்  இடும்பியை  மணந்தான் .அவர்களுக்கு அழகான மகன் பிறந்தான்.     அவனே கடோத்கஜன்.

    அக்ஞாதவாசம் இருந்ததால் பீமன் அந்த நாட்டைவிட்டுப்போக நேர்ந்தது .அந்த நாட்டிற்கு இடும்பி அரசியானாள் கடோத்கஜன்  வளர்ந்து  ராஜ்யத்தை ஆளும் திறமைப்பெறும் வரை  அவனை நன்கு வளர்த்தாள்.

    பின் நாட்டை தன் மகன் கடோத்கஜனிடம் ஒப்படைத்துவிட்டு காட்டிற்குத்தவம் செய்யப்போனாள்.

    கண்ணன் மகாபாரதப்போரின் போது கடோத்கஜனைப் பாரதப்போரில் இணைக்க நினைத்தார் ஆகையால்  இடும்பியிடம்  சென்றார்.

    இடும்பனின் சகோதரியே பீமனின் மனைவியே நான் தக்கத்தருணத்தில் உன் மகன் கடோத்கஜனை ப்பாரதபோருக்கு அழைத்துச்செல்வேன். நீ அவனை அனுப்பி வைக்க வேண்டும்.

    “கிருஷ்ணா . தாங்கள் கேட்டு நான் மறுப்பதா? அவசியம் அனுப்பிவைக்கிறேன்”

    “இடும்பி நீ இனிமேல் அரக்கியாக இல்லாமல் தெய்வமாக ஆகி விடுவாய். எல்லோரும் உன்னை பூஜிப்பார்கள்”  என்று சொல்லியபடியே அவளை வாழ்த்தினார் .கண்ணன்.

    போரில்  தன் உயிரைக்கொடுத்து  அர்சுனனைக்காத்த  கடோத்கஜன்  மிக உயர்ந்த ஸ்தானத்தில்  நின்றான்  நீங்காத புகழும் பெற்றான்

    இடும்பியும்  பல காலங்கள் தவம் செய்து தெய்வநிலை அடைந்தாள், பின்  அவளுக்காக கோயிலும்  எழுந்தது.

    அங்கிருந்த குலு அரசர்கள் அவளுக்கென்று கோயிலும் கட்டினார்கள். அவர்களது குலதெய்வமாக இடும்பி விளங்குகிறாள்

    எந்த முக்கிய விஷயமானாலும் இடும்பியுடம் உத்தரவு பெற்றபின்னேதான் அங்கிருக்கும்  மக்கள் காரியத்தை ஆரம்பிக்கிறார்கள் . முன்பு மன்னன் முடிசூடும் முன்  இடும்பியின்  உத்தரவைப் பெற்றே பட்டாபிஷேகம்  நடைப்பெறமுடியும்  .

    இந்தகோயிலுக்கு மனாலி அடைந்து  பின் மலைப்பாறையில் இரண்டு கிமீ ஏறி நடக்க   இடும்பியின் கோயில் வந்து விடும்  .

    சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் இந்த மனாலி.

    Share
  • ஒரு வீடும் அதைத்தேடும் கூடும்

     

    -தனுசு
    எனக்கொரு ஆசை
    இந்த நாட்டுக்கு ராஜாவாவது அல்ல!
    ஒரு வீட்டுக்கு
    சொந்தமாவது!
    அது
    சொந்த வீட்டின் ஆசையில் அல்ல
    வாடகை வீட்டின் இம்சையில்!

    இங்கு
    மின்சாரத்துக்கு ஒரு கட்டுப்பாடு
    நீருக்கும் அதே கூப்பாடு
    வாடகையில் மட்டும் குறி
    தாமதிக்கும் பொழுதெல்லாம்
    வீட்டுக்காரர் கண்ணில் தீப்பொறி!

    கூடி கும்மிபேச முடியாது
    பாடி பிள்ளையாட முடியாது
    சொந்தம் வந்தால்
    சொல்ல முடியாது
    பந்தமென்று தங்க முடியாது
    சத்தம் போட்டு சிரிக்க முடியாது
    சாவு விழுந்தால் அழவும் முடியாது.
    இத்தனை
    பற்றுதலை தவிர்க்க வேண்டும்
    அந்த
    பத்து தலை மனிதரால்!

    இந்த வீட்டுக்காரருக்கு சமம்
    பல சிங்கம் புலி கரடி!
    அவரின் கல்மனம்
    வள்ளுவனும் எழுத மறந்த ஈரடி!

    வீடு மாறி குடிபோனால்
    அடுத்த வீடும்
    அதே மாதிரி
    ஆண்டுக்கொரு வீடு பிடித்தும்
    அந்த மனிதரும் எதிரி!

    வீடு மாறும் வைபவம்
    நான் வாங்கி வந்த வரமோ?
    காடு மாறும் காலம் வரை
    எனக்கு நடக்கும் சாபமோ?

    ஓலை குடிசை ஒன்று
    சொந்தமாக்க
    கால் ஒத்ததடம் பதிக்க
    முடியாமல் போச்சு!
    அந்த
    வேதனைக்கு
    ஒத்தடம் கேட்டு தவிக்குது
    என் மூச்சு!

    Share
  • வார ராசி பலன்!…20-05-13 – 26-05-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: பிறரிடம் உள்ள குறைகளை விடுத்து, நிறைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். நேசம் பாராட்டி உதவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது சிந்தனையை சிதற விடாமலிருப்பது நல்லது. வரும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பவரிடம் கலைஞர்கள் உஷாராக இருந்தால், உங்கள் திறமைகளை பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியும். அலுவலக அளவில் பொதுப் பிரச்னைகளுக்காக, நண்பர்கள் சிலரின் நட்பை முறித்துக் கொள்ள நேரிடும். முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை சற்று அதிகரிக்கலாம். எனவே கவனமாக செயல்படுவது அவசியம்.

    ரிஷபம்: வியாபார வாய்ப்புக்களில், சில சந்தர்ப்பங்களில், கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலை நேரிடும். எனினும் விடாமுயற்சியால் விரும்பியதை அடைந்து விடுவீர்கள். பெண்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதை போல, ஆரோக் கியத்திற்கும் நேரம் ஒதுக்கினால், மருத்துவச்செலவுகள் கணிசமாக குறையும். வரவும் செலவும் சமமாக இருப்பதால், சேமிப்பு என்பது பெயரளவில்தான் இருக்கும். தம்பதிகள் மன வேற்றுமைகள் நீங்க மனம் விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலர்ந்து விடும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், அதிக ஆசை யினால் அதிக பணம் முடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஞாபக மறதியால் வரும் சிக்கல் களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது நல்லது.

    மிதுனம்: பொருட்களை வாங்கி விற்பவர்கள் தேடி வரும் வாய்ப்புகளை வியாபாரமாக, உங்கள் வாய்ச் சொல்லால் மாற்றி விடுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பான பிரச்னைகளை வளர விடாமல் உடனுக்குடன் சுமூகமான முறையில் முடித்துக் கொண்டால், தேக்க நிலை உருவாகாமலிருக்கும். மாணவர்கள் எந்த சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருங்கள்! வாழ்க்கை வசந்தமாகும். பண விவகாரங்களில் பிறர்க்கு சிபாரிசு செய்யும் முன் அவர்களின் பின்புலம் பற்றி அறிந்து செயல்பட்டால், சட்டச்சிக்கல்களுக்கு இடமிராது. நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டால், நட்பின் இழை விலகாமலிருக்கும்.

    கடகம்: பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமி ப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதி பர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல் பட்டால், லாப த்தின் வரவில் குறைவிராது. பணி புரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களு டன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைக ளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!

    சிம்மம்: பெண்கள் எந்த நல்ல விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். கிடைக்கும் பலனும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். நண்பர்களின் சந்தோஷத்திற்காக அதிக பணம் செலவழித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வியாபார விரிவாக்க விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் மீண்டும் குடும்பத்தில் இணைவதால், மகிழ்ச்சிப் பூ மீண்டும் மலர்ந்து விடும். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராகத் திகழும்.

    கன்னி: பொது வாழ்வில் இருப்போர்கள், வீண் வதந்திகளை நம்பி செயலில் இறங்காமலிருந்தால், உங்களின் உயர்வு சீராக இருக்கும். கலைஞர்களுக்கு உங்கள் திறமைகளை மிளிரச் செய்யும் வாய்ப்புக்கள் பல தேடி வரும். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது! மாணவர்கள் புதிய இடங்களில் பழக்கமில்லாதவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பெண்கள் குடும்ப விஷ யங்களில் கோப தாபத்தை கட்டுக்குள் வைத்தால், எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்! சிறிய சச்சரவுகளை பெரிதாக்காதவாறு சமாதானமாக நடந்துகொள்ளுங்கள். அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கமும் தானே விலகி விடும். வியாபாரிகள் எதிலும் நேர்மைக்கு இடம் கொடுக்க, வெற்றியோடு நல்மதிப்பும் உங்களுக்கே!

    துலாம்: வியாபாரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக் கைகளில் தென்படும் மாறுதல்களை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்களை புரிந்து கொள்வார்கள்.

    விருச்சிகம்: இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் பெண்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். போட்டிகள் மூலம் உங்கள் திறமை வெளி படும் வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் ஆரோக் யமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்புடன் திகழலாம். சொத்து விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் தேவை.

    தனுசு: புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்னைகள் தீரும். பொருளாதார சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். இல்லத்தில்,கோபத்தைக் குறையுங்கள். பிரச்னைகளின் தாக்கமும் தானே குறைந்து விடும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு , உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொண்டால், கல்வி தொடர்பான வேலைகள் கடகடவென்று முடிந்து விடும். கடும் பணியில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது நல்லது. இது நாள் வரை எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கலைஞர்களை நாடி வரும்.

    மகரம்: வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருக்கும் தம்பதிகளுக்கு வாழ்வு இனிக்கும். மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள்.சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல் படுவர். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்ததைவிட நல்ல பலன் நிறையவே கிடைக்கும். வியாபாரிகள் நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம்.சிறு உடல் உபாதைகளால், பெண்கள் அவதிப்பட நேரிடும்.

    கும்பம்: பெண்கள் பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களை கட்டுக்குள் வைத்துவிடலாம். பங்குச் சந்தை வியாபாரத்தில் இருக்கும் ஏற்றமும், இறக்கத்திற்கேற்ப வியாபாரிகள் செயல்படுவது அவசியம். வேலையில் இருப்போர்கள், பல சமயம் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் .சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் சில இழப்புக்கள் சில லாபங்கள் இரண்டையும் பெறுவர். அன்புக் கட்டளையால், நண்பர்களுக்கு சில உதவிகளை மகிழ்வுடன் செய்து கொடுப்பீர்கள்.

    மீனம்: நிலுவையில் உள்ள பாக்கியெல்லாம் வசூலாகி விடுவதால், புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் இறங்குவீர்கள். பொதுவாழ்வில் இயங்கி கொண்டிருப்பவர்கள் தம்மு டைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், உங்கள் பணிகளில் எவரும் பழுது சொல்ல முடியாது. மாணவர்கள் புதிய சூழலில் வீண் வம்பு தும்புக்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரி மைஎடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகிவருவது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெற, சில நெருக்கடிகளை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் .எனவே நிதானமாக செயல்படுவது அவசியம்.

    Share
  • அவ்யயாநந்தர்

                                                         உன்னை விட…..உன்னை விட…

                         ——————————

                           ராமஸ்வாமி ஸம்பத்      

    மோன நிலை நீங்கி கண் விழித்த அவ்யயாநந்த அடிகள் தன் முன் கிடத்தப்பட்டிருந்த வாலிபனை பாதாதிகேசம் நோக்கினார்.

    அவன் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டு, அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவனான விஜயாநந்தனை அழைத்து அவன் செவியில் ஏதோ பணித்தார். அவன் உடனே பக்கத்தில் உள்ள அறைக்குச் சென்று ஒரு மூலிகையை எடுத்து வந்து குரு ஆணைப்படி அம்மூலிகையை சற்று நேரம் அந்த வாலிபனின் நாசியில்.வைத்து அவனை நுகரச்செய்தான்.

    தெளிவுபெற்ற அவ்வாலிபன் தான்கிடக்கும் இடத்தை கண்களால் ஒருமுறை சுழற்றிப் பார்த்தான். பின் மெல்ல எழுந்து, “நான் எப்படி இங்கு வந்து சேர்ந்தேன்? ஆற்றில் விழுந்த என்னை யார் மீட்டது?” என வியப்புடனும் சற்று கோபத்துடனும் வினவினான்.

    “குழந்தாய்! உன் பெயர் என்ன? எதற்கு ஆற்றில் விழுந்தாய்”?” வாழ்க்கைமீது அப்படி என்ன வெறுப்பு?” என்று கேட்டார் அவ்யயாநந்தர்.

    “தாங்கள் யாரோ எனக்குத் தெரியாது. என் பெயர் சந்திரன். உலகில் என்னை விட அபாக்கியசாலி இருக்க முடியாது. வாழ்க்கையின் முடிவு நோக்கிச் சென்று கொண்டிருந்த என்னை நீங்கள் ஏன் தடுக்கவேண்டும்?” என்றான் அவ்விளைஞன் உஷ்ணமாக.

    “ஒவ்வொரு ஜீவனும் வாழ்க்கையின் முடிவை நோக்கித்தான் செல்கிறது. பிறந்த உடனே இறைவன் நம் கையில் இறப்புக்கான ஒபன் டிக்கட்டை கொடுத்து விட்டிருக்கிறார்.  எந்த நாளில் நம் பயணம் என்பது அவரால் தான் நிர்ணயிக்கப் படவேண்டும். அதை மாற்ற நம்மால் இயலாது. அப்படி செய்யவும் கூடாது. ஏனெனில் அது ஒரு பாபமான செயல்.”

    “என்னுடைய வாழ்க்கை என்னுடைய உரிமை. அதனை நடத்துவதும் முடிப்பதும் என் கையில்தானே இருக்கவேண்டும்?”

    “சந்திரா, உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் நடத்துவதும் உன் கையில்தான் உள்ளது. ஆனால் அதன் முடிவு உன் கையில் இல்லை. இதுதான் இயற்கையின் நியதி.”

    ”அடிகளே! அப்படியென்றால் ஏமாற்றங்களோடும் என்மீது திணிக்கப்ப்ட்ட தாழ்வு மனப்பான்மையோடும் நான் ஒரு நடைப்பிணமாக வாழத்தான் வேண்டுமா? இப்படிப்பட்ட ஜீவனம் எனக்குத் தேவையா?”

    “குழந்தாய்! கண்ணன் கீதையில் கூறியபடி நாம் எந்த பலனையும் எதிர்பார்க்கக் கூடாது. வருவதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். தாழ்வு மனப்பான்மை என்றாய். உயர்வு தாழ்வு என்று இனம் பிரிப்பது கூட ஒருவிதத்தில் மனத்தின் கோளாறே. நீ எதற்கு உன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் யாரோ உன்னை இளப்பமாக பேசினார் என்பதற்காக?”

    அடிகளின் தத்துவம் கலந்த பேச்சு சந்திரனை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் மெளனத்தைப் பயன் படுத்திக்கொண்டு அவர் விஜயநந்தனை நோக்கி ஒரு சமிக்ஞை செய்தார். சில நொடிகள் கழித்து அவன் ஒரு குவளைப் பாலுடன் அங்கு வந்தான்.

    “நீ மிகவும் சோர்வுற்றிருக்கிறாய். இப்போது உணர்ச்சிப்படுவது உனக்கு நல்லதல்ல. இதோ இந்தப் பாலைப் பருகிவிட்டு சற்று ஓய்வு எடுத்துக்கொள். மதிய உணவுக்குப் பின் நாம் பேசலாம்,” என்றார் அவ்யயாநந்தர்.

    விஜயாநந்தன் சந்திரனை தோளில் சாய்த்தவாறு தன் அறைக்கு அழைத்துச் சென்றான். சற்று நேர ஓய்வுக்குப் பின் சந்திரனுக்கு மதிய உணவு பரிமாறப் பட்டது. அதன்பின் அவன் அடிகளைக் காண விரும்பினான். ஆனால் அவர் மீண்டும் மோன நிலைக்குச் சென்றுவிட்டதால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

    “தங்களுக்கு இன்னும் ஓய்வு தேவை போலும். குருநாதரிடமிருந்து அழைப்பு வரும்வரை தயவு செய்து இந்த கட்டிலிலேயே ஓய்வு எடுங்கள்” என்றான் விஜயாநந்தன்.

    உடற்களைப்பும் மன உளைச்சலும் குறையாத நிலையில் சந்திரன் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். பிற்பகல் நான்கு மணி அளவில், களைப்பு நீங்கி கண் விழித்தான். எழுந்து முகத்தை அலம்பிக்கொண்டு கட்டிலில் அமர்ந்த அவன் முன் ஒரு குவளைப் பாலுடன் நின்றான் விஜயாநந்தன். “இப்பாலைப் பருகியவுடன் என்னுடன் வாருங்கள். குருநாதர் உங்களை அழைத்துவரச் சொன்னார்” என்றான். பின்னர் இருவரும் அடிகளின் அருகே சென்றார்கள்.

    இளநகை ததும்பும் அவ்யயாநந்தரின் வதனத்தைப் பார்த்த்தும் சந்திரனுக்கு ஒரு இனம்புரியாத உணர்வு மேலிட்டது. பாதங்களில் வீழ்ந்து வணங்கிய அவன் தலையை அவர் பரிவோடு கோதிவிட்டு, “இப்பொழுது சொல் உன் விருத்தாந்தத்தை.” என்றார்.

    “அடிகளே! பேரின்ப அனுபவத்தின் உச்சநிலையில் நிற்கும்  தங்களுக்கு இந்த உதவாக்கரை இளைஞனின் கதை தேவையில்லை என நினைக்கிறேன். என்னை என் வழியில் செல்ல விடுங்கள்.”

    “இந்த ஆசிரமத்தை நிருவியதன் நோக்கமே உன் போன்ற நொந்த உள்ளங்களுக்கு ஆறுதல் சொல்லத்தான். அம்முயற்சியில்தான் உன் கதையைக் கேட்க விரும்புகிறேன். உனக்கு விருப்பம் இல்லையென்றால் உன்னை நான் கட்டாயப்படுத்தப் போவதில்லை. ஆனால் உன் வழியில் மட்டும் உன்னை செல்ல விடமாட்டேன். ஏனென்றால் அது ஆபத்தான பாதை” என்றார் அவ்யயாநந்தர்.

    “ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். தாங்கள் என்மீது காட்டும் பரிவு என்னை மனம் நெகிழச் செய்கிறது. வாழ்க்கையின் எல்லையையே தொட்டுவிட்ட எனக்கும் யாரிடமாவது என் அவலங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற அவா உள்ளது. தங்களைத் தவிர வேறு யார் இதற்குத் தயாராக இருக்கமுடியும்” என்ற சந்திரன் அவ்யயாந்ந்தரின் பாதங்களில் மீண்டும் பணிந்து பேசலுற்றான்.

    ”அடிகளே! தங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒருவனை உயர்த்த வேண்டுமென்றால் இன்னொருவனைத் தாழ்த்தித்தான் ஆகவேண்டுமா? இருவரை ஒப்பிடும்போது இப்படிப்பட்ட செயல் உலகில் சர்வசாதாரணமாகி விட்டதே. இது எந்த வகையில் நியாயம்?”

    ”சந்திரா, ஒப்பிட்டுப் பார்ப்பதென்பது மனிதனின் இயல்பு. ஏனெனில் உலகில் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. அறை வெப்பத்தோடுதான் உன் உடல் வெப்பம் சார்ந்திருக்கிறது. இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடே உனக்கு காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதனைத் தெளிவு படுத்துகிறது. ஆகவே ஒப்பிடுதல் நியாயமே.”

    ”அடிகளே! நான் கூறமுயல்வது, ஒப்பிடும்போது ஒன்றைத் உயர்த்தி மற்றொன்றினை மட்டம்தட்டுவது அவசியம் தானா?”

    “ஓருவனை உயர்த்தும்போது மற்றொருவன் மட்டம்தட்டப்படுகிறான் என நினைப்பது உன் பிரமையே. ஒப்பிட்டு பேசுவோரின் மனப்பாங்குகூட அத்தகைய பிரமையை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர் சொல்வதெல்லாம் உண்மையாகாது. அது போகட்டும். விளக்கங்களை பின்னர் பார்ப்போம். முதலில் உன் விஷயத்தைச் சொல்” என்றார் அவ்யயாந்ந்தர்.

    “எவ்விதமான காரணமும் இல்லாமல் என் மீது இரக்கம் காட்டும் அடிகளே! தாங்கள்தான் என் வாழ்க்கையில் எனக்கு முதல் முதல் உற்சாகமூட்டும் நபர். ஒருவன் நடுவனாக மட்டும் பிறக்கக்கூடாது. ஏனெனில் தந்தைக்கு மூத்தவன்மீது பரிவு. தாய்க்கோ கடைக்குட்டிமீது ஆசை. ஆக, மத்தியமன் அக்குடும்பத்தில் ஏனோதானோ என்றுதான் இருக்க வேண்டிய நிலை. எனக்குத் தாய்ப்பாசம் பூரணமாகக் கிடைக்கவில்லை. நாளடைவில் என் அன்னை எதற்கெடுத்தாலும் என்னைக் குறைகூற ஆரம்பித்தார்.

    “என் தந்தையாரின் வருமான முடக்கத்திற்கும், என் பிறப்புக்கும் என்ன சம்பந்தம்? ‘தரித்திரமே, நீ பிறந்த வேளை வீட்டையே வறுமையில் ஆழ்த்திவிட்ட்து’ என்று என்னை அடிக்கடி என் அன்னை சாடுவார். இந்நிலை வீட்டில் உள்ள அனைவரின் ஜாதகக் கோளாறினால் இருக்கக்கூடாதா? எதற்கு என்னை மட்டும் குறை சொல்வானேன்?”

    அவ்யயாநந்தர் வதனத்தில் ஒரு இளநகை மின்னலென இழையோடியது. ”இது கூட மனித சுபாவமே. தன் அங்கலாய்ப்பை யார்மீதாவது காட்டுவது எவர்க்கும் இயல்பே. உண்மையில் உன்மீது உள்ள அபரிமிதமான ஈடுபாட்டினால் இத்தகைய பழியை மிக்க எளிதாக உன் மேல் போட்டிருக்கலாம் அல்லவா?” என்றார் அவர்.

    “அடிகளே, வீட்டில் நிலவும் வறுமைக்கு என்னைப் பொறுப்பாக்கிய அன்னை, நாளடைவில் சீர்திருந்திய தந்தையின் வருமானத்திற்குப் பின்னும் அந்த பழைய மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். என் பிஞ்சு மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்பதனை தங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

    “அது தவிர நான் எது செய்தாலும் அதில் குற்றம் பார்க்கும் பாங்கினை நன்றாக வளர்த்துக் கொண்டார்கள் என் அன்னை. என் செய்கையால் ஏதேனும் நல்லது நடந்துவிட்டால், ‘இதில் என்ன இருக்கிறது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது என்று சொல்வது போல்தான்’ என்பார்கள். சிலசமயம் என்னைப் பாராட்டாமல் ‘இதே உன் தமையனாக இருந்தால் உன்னை விட சிறப்பாகச் செய்திருப்பான்’ என்பார்கள்.

    ” ஒரு சமயம், நான் பள்ளி இறுதித் தேர்வில் 90 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று, மகிழ்ச்சி த்தும்பும் முகத்தோடு அன்னையிடம் அந்த மதிப்பெண் அட்டையைக் காட்டினேன். நியாயமாக என்னைப் சிலாகிக்க வேண்டிய அன்னையார், ‘பார்த்துக்கொண்டே இரு. உன் தம்பி நூற்றுக்கு.நூறு மார்க்குகள் வாங்குவான்’ என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டார். இவ்வாறு சொல்வதைவிட ’போடா நாயே, ரொம்பத்தான் பீற்றிக் கொள்கிறாயோ’ என்று சொல்லி இருக்கலாம். அடிகளே எனக்கு ஒரு விளக்கம் தேவை. வருங்காலத்தில் என் இளையவன் என்னை விட சிறப்பாக மதிப்பெண்கள் வாங்குவான் என்ற நம்பிக்கையால் என் தற்போதைய சாதனையைக் குறைவாக எடை போட வேண்டுமா?”

    கண்ணீர் பெருகி ஓடும் கன்னத்தோடும் தழதழக்கும் குரலோடும் சந்திரன் கூறியது, அவ்யயாநந்தரையும் கலங்க வைத்தது. பதிலேதும் சொல்லாமல், அவனை தொடர்ந்து பேசுமாறு சமிக்ஞை செய்தார்.

    “வீட்டில் தான் இந்த நிலை என்றால் வெளி உலகமும் என்னை ஏளனமாகத் தான் நோக்கியது. நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடும்போது நான் ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகிவிட்டால் குழுவின் காப்டன் முதல் இதர ஆட்டக்காரர்களும் பரிகசிப்ப்பார்கள். ‘இவனை டீமில் சேர்க்கவேண்டாம் என்று அப்போதே சொன்னேன்’ என்பார் ஒருவர். இன்னொருவர் ஆட்ட்த்திற்கு நான் லாயக்கில்லை என்பார். ஒருமுறை நான் சதம் அடித்தேன். என்னைப் பாராட்டுவதற்கு பதிலாக இது ஃப்ளூக்’ என்று கேலி செய்வார் காப்டன்.  ஓருமுறை மற்றொரு பக்கத்து ஆட்டக்காரரின் அசிரத்தையால் நான் ரன் அவுட் ஆகிவிட்டேன். ‘அவசர குடுக்கை, கவனம் வேண்டாம்? அந்த ஆட்டக்காரர் தயார் நிலையில் இருக்கிறாரா என்று நிச்சயிக்காமல் ரன் எடுக்கலாமா?’ என்று என்னைக் கடிந்து கொண்டார் காப்டன். அடுத்த இன்னிங்க்சில் என்னுடைய பார்ட்னர் ரன் அவுட் ஆனபோது மீண்டும் என்னையே குறை கூறினார்கள். இது எந்த வகையில் நியாயம் அடிகளே!” என்றான் சந்திரன்.

    அவ்யயாநந்தர், மீண்டும் அதே இளநகையோடு, அவனைத் தொடருமாறு பணித்தார்.

    ”இப்படியாக நான் வளர்ந்த கதையைக் கேட்டால், ஒவ்வொரு நிலையிலும் நான் மற்றவருடன் ஒப்பிடப்பட்டு ’ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ போல் தாழ்ந்த மதிப்பீட்டிற்கு பலியாகி வந்திருக்கிறேன். கல்வி முடிந்து அலுவலகம் சேர்ந்த்தும் இதே அவல நிலை தொடர்ந்தது. நான் பணிபுரிந்த பிரிவின் தலைவர் என்மீது காரணமில்லாமல் வெறுப்பினைக் கக்குவார். ‘கண்டகண்ட உதவாக்கரைகளை என் தலையில் கட்டி மேய்க்கச் சொல்கிறார்கள்’ என்று அடிக்கடி என்னைக்காட்டி கத்துவார். ‘அய்யாசாமியைப் பார், எப்படி உன்னை விட சிறப்பாக பணி புரிகிறான். இங்குள்ள எல்லாரும் உன்னை விட வேலையில் சூரர்கள்’ என்று சொல்லி என்னை மட்டம் தட்ட வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். ஒருமுறை அலுவலகத்தில் உட்தணிக்கை நடந்தது. தணிக்கையாளர் ஒருவர் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட தவற்றினை அனைவர் முன்னிலையில் பாராட்டியபோது, என் பிரிவுத் தலைவர், ’ஹும். இவனுக்கு என்ன தெரியும். எல்லாம் நான் கொடுத்த ட்ரெயினிங்க்’ என்று பறை சாற்றிக்கொண்டார். மனதார அவ்ருக்கு நான் எந்த வகையிலும் தீங்கு நினைத்ததில்லை. பின் ஏன் என்மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி?

    “என்னால் இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகளை சொல்ல முடியும். அந்த எல்லாவற்றிலும் ‘உன்னை விட’ எனும் சொற்றொடர் அத்தகைய ஒப்பிடும் வாக்கியங்களில் அழுத்தம் திருத்தமாக இடம்பெறும். அவ்வப்போது நான் யோசிப்பதுண்டு: இந்த ‘உன்னை விட’ என்ற் சொற்றொடரை தமிழ் மொழியிலிருந்தே நீக்கிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”

    சந்திரனின் வதனத்தில் கண்ணீர் பெருகிய வண்ணம் இருந்த்து.

    “அடிகளே! இதை எல்லாவற்றையும் விட என் உள்ளத்தை சுக்கல் சுக்கலாக உடைத்த சம்பவத்தையும் கூறித்தான் ஆக்வேண்டும். நான் ஒரு பெண்ணை உளமாரக் காதலித்தேன். அவளும் என்னை மணம்புரிய விரும்பினாள். தன் தந்தையிடம் இது விஷயமாக பேசுமாறு பணித்தாள். அவள் தந்தையிடம் பேசினேன். அவர் என் தாய்தந்தையரின் அனுமதியைப் பெற்று வருமாறு கூறினார். எனக்குத் தயக்கம். வீட்டில் எப்படி அனுமதி பெறுவது? ’உன்னை விட் வயதில் மூத்தவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. உனக்கென்ன அவசரம்?’ என்பார்கள் அல்லவா? காலம் கடத்தினேன். அவள் என்னை வற்புறுத்த முனைந்தாள். ’கொஞ்சம் பொறு. என் தமையனுக்கு மணமான அடுத்த் முகூர்த்தத்தில் உன் கழுத்தில் தாலி கட்டுகிறேன்’ என்று அவளிடம் கெஞ்சினேன்.

    “அவள் பொறுக்கவில்லை. ஒருநாள் என்னிடம் ஒரு அழைப்பிதழை நீட்டினாள். அது அவளது திருமண அழைப்பிதழ். பேரிடி தாக்கியதுபோல் ஓர் அதிர்ச்சி. கண்களில் நீர்மல்க, ‘நம் காதலை மறந்து விட்டாயா?” என்று கேட்டேன். அதற்கு அவள் ‘புரோகிதர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா? நீ கால தாமதம் செய்வது என் தந்தையாருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே இந்த ஏற்பாட்டினை அவர் செய்துவிட்டார்’ என்றாள். ‘உனக்கு இதில் உடன்பாடு உண்டா?’ என்றேன். ‘தந்தையின் சொல்லை என்னால் தட்ட முடியவில்லை’ என்றாள் அவள் சுருக்கமாக.

    “மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அவளை வாழ்த்தினேன். ‘உன் வருங்கால கணவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?’ என வினவினேன். ’தாராளமாக.. அவர் உன்னை விட அழகானவர்; உன்னை விட உயரமானவர். உன்னை விட உயர்ந்த பதவி வகிப்பவர்; உன்னை விட செல்வச் செழிப்பு படைத்தவர்; உன்னை விட……………………………..’ என்று அடுக்கிக் கொண்டே போனாள்.

    “அடிகளே! ’உன்னை விட…உன்னை விட…’ என்னும் சவுக்கடிகள் மேலும் மேலும் என் மீது விழ, நான் நிலை குலைந்தேன். காதல் தோல்வி ஒரு புறம் இருக்க, என்னை விட எல்லாரும் உயர்வாக விளங்கும்போது நான் மட்டும் ஏன் பூமிக்கு பாரமாகத் திகழவேண்டும் என்று என்னையே நொந்து கொண்டு ஆற்றில் விழுந்தேன். என்னை ஏன் காப்பாற்றினீர்கள?” என்று கொட்டித்தீர்த்தான் சந்திரன்.

    அவ்வறையில் சற்று ம்வுனம் நிலவியது. அவ்யயாநந்தர் பரிவுடன் அவன் முதுகைத் தடவியவாறு, “சந்திரா, உன் வாழ்க்கை அனுபவங்கள் உண்மையிலேயே வினோதமானவை. அதற்காக உயிரைத் துறப்பது என்பது கோழைத்தனம். சவால்கள் இல்லாத வாழ்க்கை உலகத்தில் எங்கேனும் உள்ளதா? அவற்றோடு போரடுவதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும்…….”

    “ஆனால் என் வாழ்க்கை அவலங்கள்….” என்று இடைமறித்த சந்திரனை, அடிகள், “சற்று பொறுமையாக நான் சொல்வதைக் கேள். நீ சொன்னவற்றை நான் கேட்டேன் அல்லவா?” என்றார். சந்திரன் மவுனமானான்.

    “ஆரம்பத்தில் ’என்னை விட அபாக்கியசாலி உலகில் இருக்க முடியாது’ என்றாய். உண்மையிலேயே நீதான் பாக்கியசாலி. எல்லோருக்கும் உன் திறமையைப் பற்றித் தெரியும். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்ல அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் பொறாமையாக இருக்கலாம் அல்லது நீ செருக்கடையக் கூடாது என்ற மனோபாவமாகவும் இருக்கலாம். ‘உன்னை விட இன்னொருவன் புத்திசாலி, வேலையில் கெட்டிக்காரன், அழகானவன்’ என்றெல்லாம் சொல்லும்போது நீ புத்திசாலி, கெட்டிக்காரன், அழகானவன் என்பதை அவர்கள் சொல்லவில்லையே தவிர மறுக்கவில்லை. அவர்களுடைய் ஓப்பீடு உன்னைவைத்து இன்னொருவனை மதிப்பீடு செய்யும் செய்கை என்றே கொள்ளவேண்டும். அவர்களுக்கு நீ ஒரு அளவுகோல் ஆகிவிட்டாய். நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை இவையெல்லாம் எவ்வளவு முக்கியமான அவசியமான சாதனங்கள். அவற்றை ஒதுக்கிவிட முடியுமா?

    “நீ கம்ப ராமாயணம் படித்திருப்பாய் என நினைக்கிறேன். அதில் அயோத்யா காண்டத்தில், படகோட்டிகளின் தலைவனான குகன், அரண்யத்திற்கு ஏகிவிட்ட அண்ணன் ராமபிரானைக் காண வரும் தம்பி பரதனைக் காண்கிறான். முதலில் அவனுக்கு பரதன் மேல் சந்தேஹம்: ‘இவன் எதற்கு இங்கு வருகிறான்? ஒருவேளை எதேனும் தீயநோக்கு இருக்குமோ?’ பரதன் அருகில் நெருங்ககியதும் அவன் ஐயம் நீங்குகிறது. பரதனின் படியிற்குணத்தை மெச்சி குகன் சொல்வான்:

                  ’தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை

                  தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி

                  போயினை என்றபோழ்து புகழினோய் தன்மை கண்டால்

                  ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா’

    “ராமபிரானைப் முதல்முதலாகப் பார்த்தபோது தந்தை சொல் காக்கவேண்டும் என்ற ஒரே நோக்கோடு மகுடத்தைத் தியாகம் செய்த பண்பு குகனை வெகுவாகக் கவர்ந்தது. ஆயினும் ராமனாவது தன் உரிமையைத்தான் தியாகம் செய்தான். ஆனால் பரதனோ தனக்கு எள்ளளவும் உரிமையில்லாத எவ்வகையிலோ கிடைத்த பேற்றினைத் தீவினை என்று திரஸ்கரித்தான். ஆகவே ஆயிரம் ராமர்கள் பரதனுக்கு ஒப்பாக மாட்டார்கள் என்று குகன் உணர்ந்தான். அங்கு குகனுக்கு ராமன் ஒரு அளவுகோலாகத்தான் பயன்பட்டான். குகன் ராமனை மட்டம் தட்டியதாகப் பொருள் கொண்டால் எவ்வளவு தவறோ அதேபோல் உன்னை ஒரு அளவையாக உபயோகித்ததை  உன்னை சிறுமைப் படுத்தியதாக நினைப்பதும் அவ்வளவு தவறு. ஆகவே சந்திரா, நீ மட்டம் தட்டப் படவில்லை என்பதை உணர்ந்து கொள்” என்றார் அவ்யயாநந்தர்.

    அடிகளின்  ஆணித்தரமான விளக்கம் சந்திரனை சிந்தையில் ஆழ்த்தியது. ’அவசரப்பட்டு என்ன தவறு செய்து விட்டோம். தேவைப்பட்டபோது போற்றுவதும் மற்ற சமயங்களில் தூற்றுவதும் மனித இயல்பே அல்லவா. இதை உணராது நிந்தனையையே நினைத்து வருந்துவது எவ்வளவு கேவலமான செயல்’ என அவன் எண்ண அலைகள் ஓடின.

    “என்னை மன்னித்து விடுங்கள் அடிகளே! தாங்கள் என் கண்களைத் திறந்து விட்டீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை உணத்திவிட்டீர்கள். இனி ஒருநாளும் இத்தகைய கோழையாக இருக்கமாட்டேன்” என்று கூறி அவ்யயாநந்தர் அடிபணிந்தான் சந்திரன்.

    அடிகள் விஜயாநந்தனை விளித்து, “இன்று காலை நம் குடிலுக்கு வந்த மூதாட்டியை அழைத்து வா” என்றார். விஜயாநந்தன் திரும்பி வருவதற்குள் ”சந்திரா, இப்போது உன் அன்னையே வரப்போகிறாள்” என்றார். அவன் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டான்.

    சந்திரனின் அன்னை வந்ததும அவ்யயாநந்தர் அவரை நோக்கி, “பார்த்தீர்களா அம்மா உங்களுடைய பாரபட்சம் எப்பேற்பட்ட நிலைக்குத் தங்கள் மகனைத் தள்ளிவிட்டிருக்கிறது. ஒரு தாய் தன் சேயை எப்போதும் இன்னாச் சொற்களால் சாடக்கூடாது. கண்டிப்பாக இருக்கலாம் ஆனால் தலை குனியச் செய்யக்கூடாது.

    “சந்திரா, உன் அன்னை உன்னை இரண்டு நாட்களாகக் காணாமல் மனம் நொந்து இன்று காலை என்னிடம் வந்து முறையிட்டார்.  இறை அருளால் தாயையும் சேயையும் சேர்த்து வைக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது” என்றார்.

    இருவரும் அடிகள் அடி பணிந்து அவரிடம் ஆசி பெற்றனர். ”வாழ்க வளமுடன்” என்று கூறி அவ்யயாநந்தர் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தனுப்பினார்.*

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (12)

    பவள சங்கரி

    அந்த அனுபவத்திற்கு உங்களால் நன்றி சொல்ல முடியும்போது மட்டுமே அது உண்மையான மன்னிப்பு என்பதாகிறது.
    – ஓப்ரா வின்ஃப்ரே

    ‘நன்றி’ என்ற மந்திரச் சொல்!

    அன்றாடம் நாம் படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து, மீண்டும் இரவு தூங்கப்போகும் வரை நம் பொழுது சரியாக கழிவதற்கு எத்தனையோ பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நம்மைப் படைத்த இயற்கை அன்னையிலிருந்து, நம் வீட்டுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் கடைநிலை சுகாதார ஊழியர் வரை எத்தனையோ பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அந்த நன்றியை மனதார வாய்விட்டு சொல்லும்போது ஏற்படுகிற நிம்மதியே அலாதிதான். ‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார் கம்பர். கடன்பட்ட நெஞ்சத்தின் வேதனைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. நன்றிக் கடனும் ஒரு வகையில் இதையேச் சாரும். அந்த நன்றியை பாரபட்சம் இன்றி, முழு மனதுடன், முகமலர்ச்சியுடன் அளித்துப் பார்த்தால் அதன் சுகமே தனிதான். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அடுத்த மேசையில் ஒரு கணவனும் மனைவியும் தங்கள் ஐந்து வயது குழந்தையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து பில் வந்தவுடன் கணவர் அதற்குரிய பணமும், அந்த பரிமாறுபவருக்கு உரிய சிறிய ஊக்கத் தொகையும் சேர்த்து வைத்துவிட்டுக் கிளம்புகிறார். ஆனால் அந்தக் குழந்தை பெற்றோருடன் கிளம்பாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் எவ்வளவு கூப்பிட்டும் தங்களுக்குப் பரிமாறிய அந்த ஊழியர் அடுத்த மேசையில் இருப்பவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வரும்வரை காத்திருந்து, ‘தேங்க்ஸ் அங்கிள், பை’ என்று மிக யதார்த்தமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியபோது அந்த ஊழியரின் முகத்தில் 1000 வாட்ஸ் விளக்கு எரிந்தது என்னவோ உண்மைதான். ஊக்கத் தொகையாக தந்தை வைத்த அந்தப் பணத்தைக் காட்டிலும், குழந்தை மனதார நன்றி என்று சொன்ன அந்த வார்த்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியைக் கண்டபோது அத்தனை நாட்கள் நாங்கள் செய்யத் தவறிய விசயத்தை உணர்ந்தோம். இப்பொழுதெல்லாம் அப்படி நன்றி சொல்லும்போது மனதிற்குள் ஒரு நிம்மதி வருவதை உணர முடிகிறது. நாம் எத்தனையோ பெரிய அறிஞராகவோ அல்லது உயர் பதவி வகிப்பவராகவோ இருக்கலாம். நமக்காக ஒரு துரும்பை எடுத்துப் போட்ட மிகச் சாதாரண மனிதராக இருந்தாலும் அவருக்கு நன்றி சொல்லும் கடமையை சரிவர செய்வதால் நம்முடைய கௌரவம் ஒருபடி உயருமே தவிர அதனால் எந்த பாதிப்பும் வந்துவிடாது. மனித மனம் தம்முடைய சின்னச் சின்ன செயல்களுக்குக்கூட அங்கீகாரம் தேடும் இயல்புடையது. அந்த வகையில் ‘நன்றி’ என்ற இந்த சிறிய வார்த்தை பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என்பது அன்றாட வாழ்வில் நாம் காணும் யதார்த்தம்.

    மன பாரத்தைக் குறைக்கும் ‘மன்னிப்பு’

    பழைய சுமைகளில்
    திணறிக் கொண்டிருக்கிற மனம்
    புதிதாய் ஒன்றைக் காண்பது
    சாத்தியமல்ல.
    ஜே. கிருஷ்ணமூர்த்தி

    வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர் என்று இதுவரை ஒருவர் பிறந்திருக்க முடியாது. தவறு செய்வது இயற்கை. ஆனால் அந்தத் தவறுக்காக வருத்தம் கொள்ளாமல் இருப்பது மேலும் தவறு செய்ய தூண்டக்கூடியது. இயந்திரமாக வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கும்போது நாம் செய்த சிறு தவறுகளோ அல்லது அதன் பின் விளைவுகளோ நம் கண்ணில் படுவதில்லை. ஆனால் ஓய்ந்து உட்காரும்போது என்றோ செய்த அந்த சிறிய தவறின் பாதிப்பு ஏதோ ஒரு உருவில் வந்து உறுத்தலாம். அன்று அதனைச் சரிக்கட்ட நினைத்தாலும் அது முடியாமல் போகலாம்….. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி செய்த தவறை எண்ணி வருந்தி ‘மன்னிப்பு’ என்ற ஒரு சொல்லை சம்பந்தப்பட்டவரிடம் உடனே உதிர்ப்பதுதான். அதன் பிறகு காட்சிகள் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம். ஆனாலும் நம் அகம் குற்ற உணர்வால் வேகாமலாவது இருக்கக்கூடும். அகம் குளிர ஆரம்பித்தால் புறப்பணிகள் தொய்வில்லாமல் போகும் அல்லவா. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதால் சுய கௌரவம் ஒரு நாளும் பாதிக்காது. மாறாக அது நல்ல பண்பின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். எதிராளியின் கோபம் பஞ்சாய்ப் பறக்கும் வாய்ப்புகளும் அதிகம். நம்மைவிட உயர்ந்தவர்களோ அல்லது தாழ்ந்தவர்களோ எவராக இருப்பினும் நாம் ஒரே விதமாக நடந்து கொள்வதிலேயே நம் சுதந்திரமும் அடங்கியிருக்கிறது.

    நாம் நம் அக வாழ்க்கையில் சில நல்ல தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், புற வாழ்க்கையில் விரும்பத்தக்க மாற்றங்கள் தானே வந்தமையும் அல்லவா?

    படத்திற்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • எரிதழல் கொண்டு வா.. கையினை சுட்டிடுவோம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    இன்றைய காலகட்டங்களில் ஊடகம் என்றாலே அது பெரும்பாலும் நடிகர்கள் சம்பந்தப்பட்ட விசயமாகவே இருக்கிறது. தேசியத் தலைவர்கள் பிறந்த நாளோ, தேசிய விழாக்களோ அல்லது பாரம்பரிய விழாக்களோ எதுவாக இருந்தாலும் திரைப்படங்களையோ அல்லது திரைப்பட நடிகர்களையோ முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சி நடத்துவதே வழமையாக உள்ளது. நாட்டிற்காக உழைத்த விஞ்ஞானிகளையோ அல்லது பெருந்தலைவர்களையோ உற்சாகப்படுத்தி நன்றி பாராட்டுவதை விட்டு, தங்கள் வருமானத்தை மட்டும் குறியாகக் கொண்டு, ‘செல்லுலாய்ட் உலகம்’ என்று சொல்லக்கூடிய திரைப்படத்துறையினரை மட்டும் முன்னிலைப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கக்கூடிய சூழலே உள்ளது. சுதந்திரப் போராட்டங்களில் நேரடியாக பங்கு பெற்றவர்களை மறைத்து அந்த கதாப்பாத்திரமாக நடித்தவர்களை விளம்பரப்படுத்துகிற உலகத்தில், விளையாட்டுத் துறை சிறிதளவேனும் ஈர்க்கப்படுகிறது என்பது பாராட்டுதலுக்குரியது. ஆனாலும் 130 கோடி மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் ஒலிம்பிக்கில் எத்தனை தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்றுவிட்டோம் நாம். மிகக் குறைந்த மக்கள் தொகை உள்ள அமெரிக்கா, உருசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் கூட பல தங்க மெடல்களைத் தட்டிச் செல்வதைப் பார்க்க முடிகிறது. இங்கிலாந்திற்குப் பிறகு தென் கொரியா, சப்பான் போன்ற நாடுகளோடு போட்டிப் போட்டு வியாபாரத் துறையில் முன்னேறி வருகிறது இந்தியா என்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், இன்று விளையாட்டின் ஒரு பிரிவான கிரிக்கெட்டையும், அதை நிர்வகிக்கக் கூடியவர்கள் தன்னுடைய வியாபாரத்தன்மையைப் புகுத்தி பல ஆயிரம் கோடி சம்பாதிக்கின்றனர் என்பது அதிர்ச்சியான விசயம். திரை மறைவாக நடைபெறக்கூடிய இது போன்ற நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் நடக்கக்கூடிய இந்த கிரிக்கெட் திருவிழாவை மையமாக்கி, மற்ற நாடுகளின் பின்னணியில் இருந்தும் சூதாட்ட நிகழ்வுகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமிகவும் கவலைக்குரிய விசயம். கிரிக்கெட்டிற்கு தனிப்பட்ட மதிப்பை அளிப்பதைத் தவிர்த்து கால்பந்து, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், போன்ற அனைத்து விளையாட்டுகளுக்கும், அனைத்து வீரர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளித்தால் தனிப்பட்ட இது போன்ற சூதாட்டம் குறைந்து அனைத்து விளையாட்டுகளும் முக்கியத்துவம் பெற்று சமமாக வளர்ந்து தங்க பதக்கங்கள் நோக்கி முன்னேற முடியும். இன்று சூதாட்டத்தில் மட்டுமே தங்கப் பதக்கம் வாங்குவதை எண்ணி வேதனை மட்டுமே மேலோங்குகிறது. இளைய சமுதாயம் தடுமாறக்கூடாது. மன உறுதியுடன், தெளிவான சிந்தையுடன், புத்தி பேதலிக்காமல் நாட்டின் பேரும் புகழும் மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று நம் பாரதத் தாய் கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கிறாள். அன்னையின் கண்ணீரைத் துடைப்பதற்காக மட்டுமே கையை நீட்ட வேண்டுமே தவிர மாற்றானிடம் கை நீட்டும் அவலத்தை விட்டு நேர்மையாக வெற்றியை நாடி நெஞ்சு நிமிர்ந்து செல்ல வேண்டும். அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்போது பெற்ற தாயும், உற்ற சொந்தங்களும் கூட வெறுத்து ஒதுக்கும் நிலைமைக்கு ஆளாக வேண்டிவரும். நாட்டிற்காக நேர்மையாக உழைத்த தலைவர்கள், இன்னுயிர் ஈந்த தியாகிகள், நாட்டின் மேன்மைக்காக உழைக்கும் விஞ்ஞானிகள், உயிர் காக்கும் சிறந்த மருத்துவர்கள் இப்படி எத்தனையோ பேர் பாராட்டப்பட வேண்டியவர்கள் இருக்க, கதாநாயகர்கள், கதாநாயகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என தனிமனித துதி பாடுவதினாலேயே இது போன்ற சூதாட்டங்கள் பெருகுகின்றன. விளையாட்டை முன்னிலைப்படுத்துவதை விட்டு விளையாட்டு வீரர்களுக்குத் துதி பாடுவதால்தான் இத்தகைய ஜனநாயகக் கொலை நடக்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கக்கூடிய இத்தகையத் தவறுகள் முற்றிலும் களையப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Share
  • குடுமியான்மலைக் கோயில்- ரதி

     

    சு. ரவி

    வணக்கம், வாழியநலம்,

    உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை.

    காதலுக்கு அதிபதியான தேவனையே காதலில் வீழ்த்தும் நாயகி.
    பரமனின் விழிவெப்பத்தால் ” புறாவின் கழுத்துத் தூவிகள்” போல ( நன்றி:உவமைக் கவிஞன் காளிதாஸன்)
    சாம்பலாகிப் பறந்த மன்மதனை அனங்கனாகவேனும் உயிர்ப்பித்த உத்தமி.
    அன்னவாகனத்தில் வீற்றிருக்கும் அழகுத் தெய்வம்.
    குடுமியான்மலைக்கோயிலில் காட்சி தரும் ரதிதேவியின் ஒயில் வடிவம்.

    Share
  • அன்றும்…இன்றும்!

    மேகலா இராமமூர்த்தி

    இடும்பைக் கஞ்சாது இன்னலில் துவளாது
    நாட்டுக் குழைத்தனர் அன்று! – (தம்)
    குடும்பம் செழிப்பதே கொள்கையென் றானபின்
    மற்றோரை மறந்தனர் இன்று!

    அரசியல் பிழைத்தோரை அறமே கூற்றமாய்
    அழித்து ஒழித்தது அன்று!
    அரசியல் என்றேநல் லறத்தைக் கொன்றிட்டுப்
    பிழைப்புச் செய்கின்றார் இன்று!

    விலங்கொன்று கேட்டதற் கேநீதி நல்கினான்
    மனுநீதி மன்னனும் அன்று!
    கலங்கிநின் றழுதிடும் மக்களே கேட்பினும்
    எட்டாக் கனியது இன்று!

    வெல்லமாய் இனித்திடும் நம்தமிழ் சிறந்திடக்
    காவியம் பலகண்டார் அன்று!
    கல்வியில் தமிழினிக் கூடாதென் றெண்ணியே
    ’சிலையினில் தமிழ்கண்டோம்’ இன்று!!!

    உற்றாரும் பெற்றோரும் கூடியே யிருந்ததனால்
    பிள்ளைகள் சிறந்தனரே அன்று!
    சுற்றமும் நட்பும் கணினியென் றானபின் – (நற்)
    பண்புகள் பறந்தனவே இன்று!

    நாகரி கம்தனை உலகுக் குணர்த்தினர்
    தமிழச் சாதியார் அன்று!
    போகங்கள் மீதிலே மோகமென் றானபின்
    ஒழுக்கத்தை மறக்கின்றார் இன்று!

    அன்றும் இன்றுமே நாட்டின் நிலைதனைப்
    பாட்டில் எழுதிட நீளும்….
    நன்னெறி நின்றுநம் ’மொழியினைக் காத்தால்’
    நாளைய வரலாறு போற்றும்!

    தமிழன்னை படத்திற்கு நன்றி: http://www.thehindu.com/news/cities/Madurai/mother-tamil-statue-to-be-erected-in-madurai/article4715161.ece.

    Share