வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (12)

0

பவள சங்கரி

அந்த அனுபவத்திற்கு உங்களால் நன்றி சொல்ல முடியும்போது மட்டுமே அது உண்மையான மன்னிப்பு என்பதாகிறது.
– ஓப்ரா வின்ஃப்ரே

‘நன்றி’ என்ற மந்திரச் சொல்!

அன்றாடம் நாம் படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து, மீண்டும் இரவு தூங்கப்போகும் வரை நம் பொழுது சரியாக கழிவதற்கு எத்தனையோ பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நம்மைப் படைத்த இயற்கை அன்னையிலிருந்து, நம் வீட்டுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் கடைநிலை சுகாதார ஊழியர் வரை எத்தனையோ பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அந்த நன்றியை மனதார வாய்விட்டு சொல்லும்போது ஏற்படுகிற நிம்மதியே அலாதிதான். ‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார் கம்பர். கடன்பட்ட நெஞ்சத்தின் வேதனைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. நன்றிக் கடனும் ஒரு வகையில் இதையேச் சாரும். அந்த நன்றியை பாரபட்சம் இன்றி, முழு மனதுடன், முகமலர்ச்சியுடன் அளித்துப் பார்த்தால் அதன் சுகமே தனிதான். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அடுத்த மேசையில் ஒரு கணவனும் மனைவியும் தங்கள் ஐந்து வயது குழந்தையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து பில் வந்தவுடன் கணவர் அதற்குரிய பணமும், அந்த பரிமாறுபவருக்கு உரிய சிறிய ஊக்கத் தொகையும் சேர்த்து வைத்துவிட்டுக் கிளம்புகிறார். ஆனால் அந்தக் குழந்தை பெற்றோருடன் கிளம்பாமல் காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் எவ்வளவு கூப்பிட்டும் தங்களுக்குப் பரிமாறிய அந்த ஊழியர் அடுத்த மேசையில் இருப்பவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு வரும்வரை காத்திருந்து, ‘தேங்க்ஸ் அங்கிள், பை’ என்று மிக யதார்த்தமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியபோது அந்த ஊழியரின் முகத்தில் 1000 வாட்ஸ் விளக்கு எரிந்தது என்னவோ உண்மைதான். ஊக்கத் தொகையாக தந்தை வைத்த அந்தப் பணத்தைக் காட்டிலும், குழந்தை மனதார நன்றி என்று சொன்ன அந்த வார்த்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியைக் கண்டபோது அத்தனை நாட்கள் நாங்கள் செய்யத் தவறிய விசயத்தை உணர்ந்தோம். இப்பொழுதெல்லாம் அப்படி நன்றி சொல்லும்போது மனதிற்குள் ஒரு நிம்மதி வருவதை உணர முடிகிறது. நாம் எத்தனையோ பெரிய அறிஞராகவோ அல்லது உயர் பதவி வகிப்பவராகவோ இருக்கலாம். நமக்காக ஒரு துரும்பை எடுத்துப் போட்ட மிகச் சாதாரண மனிதராக இருந்தாலும் அவருக்கு நன்றி சொல்லும் கடமையை சரிவர செய்வதால் நம்முடைய கௌரவம் ஒருபடி உயருமே தவிர அதனால் எந்த பாதிப்பும் வந்துவிடாது. மனித மனம் தம்முடைய சின்னச் சின்ன செயல்களுக்குக்கூட அங்கீகாரம் தேடும் இயல்புடையது. அந்த வகையில் ‘நன்றி’ என்ற இந்த சிறிய வார்த்தை பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என்பது அன்றாட வாழ்வில் நாம் காணும் யதார்த்தம்.

மன பாரத்தைக் குறைக்கும் ‘மன்னிப்பு’

பழைய சுமைகளில்
திணறிக் கொண்டிருக்கிற மனம்
புதிதாய் ஒன்றைக் காண்பது
சாத்தியமல்ல.
ஜே. கிருஷ்ணமூர்த்தி

வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர் என்று இதுவரை ஒருவர் பிறந்திருக்க முடியாது. தவறு செய்வது இயற்கை. ஆனால் அந்தத் தவறுக்காக வருத்தம் கொள்ளாமல் இருப்பது மேலும் தவறு செய்ய தூண்டக்கூடியது. இயந்திரமாக வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கும்போது நாம் செய்த சிறு தவறுகளோ அல்லது அதன் பின் விளைவுகளோ நம் கண்ணில் படுவதில்லை. ஆனால் ஓய்ந்து உட்காரும்போது என்றோ செய்த அந்த சிறிய தவறின் பாதிப்பு ஏதோ ஒரு உருவில் வந்து உறுத்தலாம். அன்று அதனைச் சரிக்கட்ட நினைத்தாலும் அது முடியாமல் போகலாம்….. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி செய்த தவறை எண்ணி வருந்தி ‘மன்னிப்பு’ என்ற ஒரு சொல்லை சம்பந்தப்பட்டவரிடம் உடனே உதிர்ப்பதுதான். அதன் பிறகு காட்சிகள் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம். ஆனாலும் நம் அகம் குற்ற உணர்வால் வேகாமலாவது இருக்கக்கூடும். அகம் குளிர ஆரம்பித்தால் புறப்பணிகள் தொய்வில்லாமல் போகும் அல்லவா. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதால் சுய கௌரவம் ஒரு நாளும் பாதிக்காது. மாறாக அது நல்ல பண்பின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். எதிராளியின் கோபம் பஞ்சாய்ப் பறக்கும் வாய்ப்புகளும் அதிகம். நம்மைவிட உயர்ந்தவர்களோ அல்லது தாழ்ந்தவர்களோ எவராக இருப்பினும் நாம் ஒரே விதமாக நடந்து கொள்வதிலேயே நம் சுதந்திரமும் அடங்கியிருக்கிறது.

நாம் நம் அக வாழ்க்கையில் சில நல்ல தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், புற வாழ்க்கையில் விரும்பத்தக்க மாற்றங்கள் தானே வந்தமையும் அல்லவா?

படத்திற்கு நன்றி:

http://inspirational-images.tumblr.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.