Blog

  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-9

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-9

    மீனாட்சி பாலகணேஷ்

    1. பழனி மலையண்ணல் பிள்ளைத்தமிழ்

              இப்பிள்ளைத்தமிழினின்றும் முழுமையாகப் பதிப்பிடப் பெறாத ஒரேயொரு பாடலே கிடைத்துள்ளது. அதுவும் என்ன பருவம் என்றும் உய்த்துணர வழியில்லை. விரைவில் முழு பிள்ளைத்தமிழும் கிடைக்க முருகனையே வேண்டுவோம்.

    1. பள்ளம்புலம் குமரகோட்டம் திருமுருகன் பிள்ளைத்தமிழ்

              இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சரவணையூரில் குடிகொண்டுள்ள குமரப்பெருமான் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழாகும் இது. தீவகம் வே. இராசலிங்கம் என்பவர் இயற்றியது. 2013aஇல் தான் பாரதி பதிப்பகம், கனடா-வினால் வெளியிடப்பட்டுள்ளது.

              வழக்கம்போன்று பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் கொண்டது இப்பிள்ளைத்தமிழ். காப்புப்பருவ முதற்பாடல் திருமால் மீதன்றி விநாயகர் மீது அமைந்துள்ளது.

              சிற்றில் பருவத்துப் பாடலொன்று பிற புலவர்கள் முருகனைப் போற்றிப் பாடிய நயத்தை அழகுறக் கவிதையில் பொருத்திக் காட்டுகின்ற அழகைக் காண்போமா?

              முருகனின் பெருமைகளைப் புகழ்ந்து அருணகிரியார் புகழ்ப்பாடல்களாகத் திருப்புகழ் பாடினார். இதனால் முருகனும் பெருமை (கனம்) பெற்றான். பொய்மை பேசாத வள்ளற்பெருமான் பாடிடும் பேசும் தெய்வமாக முருகன் நின்றான். குமர குருபரரும்  புள்ளிருக்குவேளூர் முருகன்மீது பிள்ளைத்தமிழ், கந்தர் கலிவெண்பா ஆகிய நூல்களைப் பாடினார். இதனைக் ‘கொஞ்சும் முருகுப்பா’ என்றார் நம் புலவர். தமிழுக்கு ஆசான் முருகன் என்கிறார். இது தொடர்பான கதையைப் பற்றிய ஓர் செய்தியையும் தந்துள்ளார்.

              இதுதான் கதை: இறையனார் களவியலுக்குப் பாண்டிய மன்னர் ஆணைப்படி, புலவர்கள் பலர் உரை கண்டனர்.  உப்பூரி குடிகிழார் என்பவரின் மகனான உருத்திர சன்மன் எனும் ஐந்து வயதேயான ஊமைப்பிள்ளையிடம் ஒவ்வொருவராகத் தம் உரையைப் படித்துக் காண்பிக்க, அவன் சலனமின்றி இருந்து, நக்கீரரின் உரையைக் கேட்டபோது மட்டும் மெய்சிலிர்த்து வியந்தானாம். ஆக நக்கீரர் உரையே சிறந்தது எனக் கொள்ளப்பட்டது. (இவ்வுருத்திரசன்மன் முருகப்பிரானின் திருவடிவமே! இவன் ஊமையாகப் பிறந்தது சிவபிரானுடைய சாபத்தால் விளைந்தது; அது வேறொரு கதை).

              இத்தகைய பெருமை வாய்ந்த முருகன் இட்டும் தொட்டும், மணலினாற் சிற்றில் அமைத்தும் விளையாடும் சிறுமியர்கள் மனத்தில் உறைபவன். சிறுவர்கள் மனம் பெருமையில் ஓங்கி விளங்க, நீ சிற்றிலைச் சிதைக்காதே அப்பா என முருகவேளை வேண்டுவதாக இப்பாடல் அமைந்தது.

              புகழ்ப்பா தந்த அருணகிரிப்

                     பொய்கைத் தமிழிற் கனம்பெற்றாய்!

             பொய்யா வள்ளற் பெருமானார்ப்

                     பேசும் தெய்வம் எனநின்றாய்!

             குகப்பா குமரக் குருபரரும்

                     கொஞ்சும் முருகுப் பாதந்தார்!

             குழந்தை நீயே என்பதுவும்

                     கொஞ்சும் தமிழுக் காசானாய்

             அகப்பா கண்ட உன்றனுயர்

                     அழகே குழந்தை வடிவன்றோ! 

             இட்டும் தொட்டும் அழைந்தாடி

                     இல்லம் அமைத்து விளையாடும்

             மகப்பா மடவார் மனத்துறையும்

                     மயிலோய் சிற்றில் சிதையேலே!

             வண்ணச் சிறுவர் மனமோங்க

                     வரையும் சிற்றில் சிதையேலே!

                                            — என்பது பாடல்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. மண்டூர்ப் பிள்ளைத்தமிழ்

              சைவமாமணி விஸ்வலிங்கம் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் 1988ஆம் வருடம் பதிப்பிடப்பட்டுள்ளது.

              கிழக்கிலங்கையில் உள்ள மட்டக்களப்புச் சதுப்பேரியின் மேற்கரையை அடுத்துத் தென்திசையில் அமைந்து விளங்கும் பழந்தமிழ் ஊரே மண்டூர் ஆகும். சிவமணம் கமழும் இவ்வூர், மருதநிலத்தின் பாற்பட்டதாம். ஒரு தில்லை மரத்தினில் பாய்ந்த வேல் வேடவர்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு, பிற்காலத்தில் இதனை மூலத்தானமாகக் கொண்டே ஆலயம் எழுப்பப்பட்டதனால் இவ்வூர் தில்லை மண்டூரென அழைக்கப்படுகிறது.

              காப்புப் பருவத்து முதற்பாடல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்ப, திருமாலை வேண்டிக் குழந்தையைக் காக்க வேண்டுகின்றது.

              செங்கீரைப் பருவத்து முதற்பாடல் புதிய கருத்துகளையும் புதுக் காட்சிகளையும் கண்முன் வைக்கிறது. சிறப்பான கருத்துகளுடன் அமைந்த இப்பாடலைக் காண்போமா?

              உனது மந்தரமலை போன்ற புயத்தின்கண் புனையப்பட்டு மார்பில் தவழும் மாலையில் வண்டுகள் மொய்த்து ஆடுகின்றன; மல்லிகை, முல்லை இவற்றின் நறுமணம் கமழவும் மந்தார மலர்கள் அணியப்பட்டும் உன் அழகான முகத்தில் பட்டும் சுருள்சுருளான தலைமயிர் ஆடுகின்றது. தனது கடைசி நாட்கள் வந்துவிட்டதென சூரபத்மன் சிந்தை தளர்ந்து பயந்து தினமும் வருத்தம் கொள்ளவும், உனது நிலவினை ஒத்த முக மண்டலமனைத்திலும் சிறுமியர் முத்தமிட, செந்தமிழானது ஓங்கி வளரும் வண்ணம் வரம் தந்திடும் செல்வக்குமரா, நீ செங்கீரையாடிடுக! சிவந்த நெற்கதிர்களால் வளம்பெறும் மண்டூரின் தெய்வமே, செங்கீரை ஆடியருளுக.

              மந்தர வரைபுரை யுந்திரு மார்பிடை

                              வண்டார் நின்றாட

                     மல்லிகை முல்லை மணங்கம ழுஞ்செழு

                              மந்தாரஞ் சாரத்

             சுந்தர நிறைவத னம்படு குஞ்சிசு

                              ருண்டுசு ருண்டாடத்

                     தொல்லைவ ரந்தொலை யுங்கடை நாள்வந்

                              துற்றதே னச்சூ ரன்

             சிந்தைத ளர்ந்துப யந்துறு மின்னல்தே

                              ரிந்துநி தம்வா டத்

                     திங்களை நிகர்முக மண்டில மெங்குஞ்

                              சிறுவியர் முத்தா ரச்

             செந்தமி ழோங்கவ ரந்தரு செல்வா

                              செங்கோ செங்கீ ரை

                     செந்நெல்வ ளம்பெறு மண்டூ ரையா

                              செங்கோ செங்கீ ரை.

              இதுபோன்ற இனிய பல பாடல்களைக் கொண்டது இப்பிள்ளைத்தமிழ்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. மாவைப் பிள்ளைத்தமிழ்

              இந்நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பட்டது. 1962இல் இயற்றப்பட்ட இந்நூல், 1967ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.

              மாவை முருகன் கோவிலானது ஈழத்தின் சரித்திரத்துடன் தொடர்புடையது. ‘வையாபாடல்’ எனும் ஈழ வரலாற்றைக் கூறும் நூலினின்றும் பெயர்க்காரணத்தைச் சுட்டி, இக்கோவிலுடன் தொடர்புடைய ஒரு கதையைக் காணலாம்.

             ‘கீரிமா மலையிலாடினள் தீர்த்தம், அம்முகமகன்றது, அன்னதால் மாவிட்டபுரம்’ எனும் வையாபாடல் ஆகிய நூலில் காணப்படும் பாடலின்கண் இக்கதை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

              மாருதப்புரவீகவல்லி என்பவள், சோழ இளவரசி ஆவாள். இவள் பெயரில் குமாரத்தி பள்ளம் எனும் பெயரில் ஒரு இடம் இன்னும் இந்த மாவைக் கோவிலருகே உள்ளது.

              மாருதப்புரவல்லி எனும் பெண் திசை உக்கிரசோழன் மகள். அவளுடைய தாய் ஒரு கின்னரப்பெண் அளித்த சாபத்தால் குதிரைமுகத்துடன் கூடிய ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். எண்ணற்ற நீர்நிலைகளில் நீராடி வழிபட்டும் குணமடையாத அப்பெண் இங்கு வந்து பாதாள கங்கைத் தீர்த்தத்திலாடி குதிரைமுகம் மாறப்பெற்றாள். பின் மாவிட்டபுரக் கோவிலைத் தன் தந்தையின் பொருளுதவியால் அமைத்தாள். கதிரைமலையினின்று அரசாண்ட உக்கிரசிங்கசேனன் என்பவனை மணந்து வாழ்ந்தாள். கோவிலுக்கான சுப்பிரமணியர் விக்கிரகமும் சோழநாட்டிலிருந்து ஒரு குருக்களும் கப்பலில் வந்து சேர்ந்தனர். இக்கப்பல் வந்து சேர்ந்த துறை காங்கேயன் துறை எனப்பட்டது.

              பிள்ளைத்தமிழ் பாடிய புலவனார் இப்பதிவை ஒரு பாடலிலும் வைத்துள்ளார். இலங்கைத்தீவின் வடதிசையில் கீரிமலை எனும் தலம் உள்ளது. அங்கு கீரிமலை என வழங்கும் நகுலேசுவரம் எனும் கோவில் உள்ளது. அதனருகேயுள்ள மலைப்பாறைக்குகையினின்றும் ஊற்றாகப் பாதாள கங்கைத் தீர்த்தம் பாய்கின்றது.

              கீரி மாமலை வாரிதி யாடியே

                     கிரீச னாநகு லேசனை நாடியே

             சேரு மன்பொடு சிந்தனை செய்துமேற்

                     றிசைகோ ளுக்கிர சோழரா சன்மகள்

             மாரு தப்பிர வல்லியென் பேரினாள்

                     வாவு வெம்பரி மாமுக மோடிநோய்

             தீர நீங்கின ளித்தலத் தேயெனிற்

                     செப்பி லங்கையி லொப்பிதற் கில்லையே.

              இக்கருத்தைக் கொண்ட ஒரு வாரானைப் பருவப் பாடலைக் காண்போம். குமரகுருபரனாரின் ‘பெருந்தேனிறைக்கு நறைக்கூந்தற் பிடியே’ என்பதற்கிணையான சொற்களுடன் தொடங்கும் இப்பாடல், அருமையான கருத்துகளைப் பேசுகிறது.

              மிகுதியான தேனைச் சொரிகின்ற கொன்றைமலரைச் சூடிய சிவபிரானின் காதுகளுக்கே பிரணவத்துப் பொருளை உரைத்த குழந்தையான பெருமானே வருக! இங்கு சிவபிரானுக்கே என்றது அனைத்திற்கும் உயர்வான இறைவனான அவனுக்கே முருகன் பிரணவத்துப் பொருளை விளக்கினான் என்னும் வியப்புத் தோன்ற அமைந்த பாடற் கருத்தாகும். பெரும் தவம் இயற்றியவர்கள் அடையும் பெரிய விருந்து எனும் தவப்பயன் முருகன் நீ வருக!

              மேற்கண்ட ஈழத்துச் சரித்திரத் தொடர்பு அடுத்த வரியில் அறியக் கிட்டுகிறது. நகுலமுனிவர் என்பவர் கீரிமலையில் தவம் செய்து,  தீர்த்தத்திலாடி  கீரி முகமாய் விகாரப்பட்டிருந்த விரூபமுகம் நல்லமுகமாக மாறிய முனிவர் ஒருவர்; திசையுக்கிர சோழன் எனும்சோழமன்னனின் மகளான மாருதப்புரவீகவல்லி ஒரு சாபத்தால் குதிரைமுகம் பெற்றாள். அவள் குன்மநோயும் உடையவளாயிருந்தாள். அவள் இந்த கீரிமலைத் தீர்த்தத்திலே வழிபட்டுத் தீர்த்தமாடி குதிரைமுகம் நீங்கி மனிதமுகம் பெற்றாள். அவளுடைய பெருநோயும் குணமாயிற்று.

              மலைமடந்தையான பார்வதி அன்னையின் மனைமாண்புக்குச் சான்றாய், ஒரு நன்மகனாய் உதித்து வையகத்தை வாழவைத்தவொரு பெருவாழ்வே வருக! நன்கு வாழத் தெரியாதவர்களும், திருந்தாத குணமுடையவர்களுமான அசுரர்கள் செருக்கினை அழித்து ஒழித்த தேவனே! வருக, வருகவே!

    சிவமே விளைவாக விளங்கும் திறன்படைத்த மாவைப்பதியின் திருவாக இருப்பவனே! வருவாயாக என விளிக்கும் வாரானைப் பருவப்பாடல்.

              பெருந்தே னிறைக்கு நறுங்கொன்றைப்

                              பிரானார் செவிக்கே பிரணவத்துப்

                     பேசாப் பொருள்பே சியகுழவிப்

                              பெருமான் வருக! பெருந்தவத்தோர்

             விருந்தே வருக! நகுலமுனி

                              விரூப முகமும் மாருதப்ர

                     வீக வல்லி மாமுகமும்

                              விலகாப் பெருநோய் விலக்குமலை

             மருந்தே வருக! மலைமடந்தை

                              மனைமாண் பினுக்கு நன்கலமாய்

                     வையம் வாழ வாழ்ந்தபெரு

                              வாழ்வே வருக! வாழ்வறியாத்

             திருந்தா வசுரர் செருக்கொழித்த

                              தேவே வருக! வருகவே!!

                     சிவமே விளைக்குந் திறன்மாவைத்

                              திருவே வருக! வருகவே!!

              என்பது பாடல்.

                                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    1. விசவத்தனை முருகன் பிள்ளைத்தமிழ்

              பண்டிதர் அ. ஆறுமுகம் என்பவரால் இயற்றப்பட்டுள்ள இந்நூல் 1982ஆம் ஆண்டில் விசவத்தனை முருகன் கோவில் கும்பாபிடேகத்தின்போது முதல் பதிப்புக் கண்டுள்ளது.

              விசவத்தனை முருகன் கோயில், இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குலதெய்வம் இந்த முருகன். 200- 250 ஆண்டுகள் பழமையான கோவில் இது.

              இப்பிள்ளைத்தமிழ் நூல் சொல்நயம், பொருள்நயம், பக்திச்சுவை, கற்பனைவளம், எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்சிறப்பு ஆகியனவற்றைத் தன்பாற் கொண்டது. பருவத்திற்கு ஏழு பாடல்களைக் கொண்டமைந்தது. நக்கீரர், ஔவையார், பொய்யாமொழியார் ஆகிய புலவர்களுக்கு முருகன் அருள்பாலித்த பெருமை பாடல்களில் ஆங்காங்கே சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

              அனைத்துப் பாடல்களுமே மிக அருமையாய் விளங்கிடும் இந்த நூலில் சிறுபறைப் பருவத்துப் பாடல்கள் சில மிகுந்த நகைச்சுவை உணர்வோடு பாடப்பட்டுள்ளன; எனினும் உட்கருத்து ஆழமானது. ஓரு பாடலைக் காண்போம்.

              ‘தந்தையானவர் திருக்கயிலாய மலையில் உறைபவர் (மலையாள தேசத்தவன் எனவும் பொருள்கொள்ளலாம்). பித்தன்- பைத்தியக்காரன் அல்லது மிக்க அன்புடையவன் என இரு பொருள்படும். நள்ளிருளில் சடைவிரித்துக்கொண்டு நடனமாடுபவன் (நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே எனும் வரிகளை நினைவு கூரலாம்). நாற்றம்பிடித்த கபாலத்தை (தான் கொய்த பிரம்ம கபாலத்தை) ஏந்தி, அதில் பிச்சை எடுத்துண்பவன். நரைத்த கிழட்டு எருதின் மீதேறுபவன்.

              ‘தாயானவளோ (உமையம்மை) பெரும் நீலநிற (கறுத்த) மேனியினள்; உனது அண்ணனோ பெருத்த பானைவயிறு உடையவன்; யானைமுகம் கொண்டவன். கும்பமதம், கன்னமதம், கோசமதம் எனும் மூன்று மதங்களையுடையவன். உனது தாய்மாமனான திருமாலோவெனில் மாடு மேய்க்கும் இடையன்; பேய்ச்சியின் முலைப்பாலினை உண்டு அவள் உயிரையும் சேர்த்து உறிஞ்சியவன். உனக்கு வாய்த்த மைத்துனனான பிரம்மனோ (திருமாலின் மகனாகக் கருதப்படுவதனால் அவர் மகளான தெய்வயானையின் சகோதரன்; அதனால் முருகனின் மைத்துனன்) எண்ணெய் விற்பவன் (வெண்மை நிறமான வாணியை, சரசுவதியைக் கொண்டவன்,’ என இவ்வாறு உனது வழி, கோத்திரங்கள் இவற்றையெல்லாம் பலவிதமான கதைகளாகக் கூறி (புகழ்ந்து) உன்னை வணங்கும் அடியார்களின் வினைகள் அனைத்தையும் விலகி ஓடுமாறு துரத்திடும் உயர் சேவகனே! (அடியவர்களுக்காக அனைத்தையும் செய்வதனால் முருகனை ‘சேவகா’ என அன்புமேலிட அழைக்கிறார்) சிறுபறை முழக்கி அருளுவாயாக! விசவத்தனைத் தேவதேவா, சிறுபறை முழக்கியருளுக என வேண்டிடும் பாடல்.

             தந்தையோ மலையாளி பித்தன்நள் ளிருளிலே

                              சடைவிரித் தாடி நாற்றத்

                     தலையோடு கொண்டிரந் துண்ணிநரை யெருதேறி

                              தாயோ பெருத்த நீலி

             முந்தியநின் அண்ணனோ பேழ்வயிறு யானைமுகம்

                              மூன்றுமத வடுவு டையவன்

                     முதியதாய் மாமனோ மாட்டிடையன் பேய்ச்சியின்

                              முலையுண்டு உயிரு முண்டோன்.

             வந்தமைத் துனன்வெள்ளை வாணியன் எனநினது

                              வழிகோத் திரங்க ளெல்லாம்

                     வாயார வண்ணவண் ணக்கதைக ளாற்சொல்லி

                              வந்திக்கும் அன்பர் வினைகள்

             சிந்திட முழங்கித் துரத்துமுயர் சேவகா

                              சிறுபறை முழக்கி யருளே

                     திருமேவு விசவத் தனைத்தேவ தேவனே

                              சிறுபறை முழக்கி யருளே.       

    என்பது பாடல்.

              இதுபோலும் பலப்பல பாடல்கள். படித்து மகிழ வேண்டிய பக்திக் கருவூலங்கள்.

     

     (வளரும்)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

     பார்வை நூல்கள்:

    1. வையா பாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு- 1980

    Share
  • குறளின் கதிர்களாய்…(469)

    குறளின் கதிர்களாய்…(469)

    செண்பக ஜெகதீசன்

    எச்சமென்று என்ணெண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்
    -திருக்குறள் -1004 (நன்றியில் செல்வம்)

    புதுக் கவிதையில்…

    வாழ்வில் பிறர்க்கேதும்
    வழங்கி உதவாத காரணத்தால்
    ஒருவராலும்
    விரும்பப்படாதவன்,
    தன் மரணத்துக்குப்பின்
    தன்னை
    நினைவுபடுத்தி நிற்கப்போவது
    என்று
    எதனை எண்ணுவானோ…!

    குறும்பாவில்…

    பிறர்க்கொன்றும் ஈயாததால் ஒருவராலும்
    விரும்பப்படாதவன், சாவுக்குப்பின் தன்னை நினைவுபடுத்தி
    நிற்பதென எண்ண எதுவுமில்லை…!

    மரபுக் கவிதையில்…

    உதவி வேண்டி வருமெவர்க்கும்
    உதவி யேதும் செயாதவனை
    அதனால் யாரும் விரும்பாரே,
    அவனின் காலம் முடிந்தபின்னே
    எதனா லேனும் இவ்வுலகோர்
    எண்ணி யவனை நினைத்திடவே
    அதற்கே தக்க தானதேதும்
    அவனுக் கில்லை எண்ணிடவே…!

    லிமரைக்கூ…

    ஈயாதவன்மீது கொள்வதில்லை விருப்பம்
    இவ்வுலகில், அவன்காலம் முடிந்ததுமவனை நினைவுகொள்ளத்
    தக்கதேது மிலாததே திருப்பம்…!

    கிராமிய பாணியில்…

    ஒதவணும் ஒதவணும்
    அடுத்தவங்களுக்கு ஒதவணும்,
    ஒதவின்னு கேக்கிறதக்
    குடுத்து ஒதவணும்..
    அடுத்தவங்களுக்குக்
    குடுத்து ஒதவாததால
    ஒருத்தராலயும் விரும்பப்படாதவன்,
    தனக்க மரணத்துக்குப் பெறகு
    தன்ன நெனவுல வச்சிக்கிறதுக்கு
    என்ன இருக்குண்ணு
    நெனச்சிப் பாக்க மாட்டானோ..
    அதால
    ஒதவணும் ஒதவணும்
    அடுத்தவங்களுக்கு ஒதவணும்,
    ஒதவிண்ணு கேக்கிறதக்
    குடுத்து ஒதவணும்…!

    Share
  • கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் – 7

    கவியரசர் கண்ணதாசனும் ஆன்மீக அறிவியலும் – 7

    சக்தி சக்திதாசன்

    கவியரசர் கண்ணதாசன் தமிழ்ப் பெருங்கடல் .

    பள்ளியில் படிக்காதவற்றைத் தன் வாழ்க்கையில் படித்தார். வாழ்க்கை அனுபவங்களை உள்ளத்திலே நூலாக்கினார்.

    தமிழைச் சுவைத்தார். தான் சுவைத்தவற்றைப் பாடல் வரிகளாக்கி நாமெல்லாம் சுவைப்பதற்கு வழி சமைத்தார்.

    வாழ்வின் சூழல்களுக்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளின் வெளிப்பாட்டுக்கு பாடல் வரிகளை அள்ளி வீசினார்.

    காதலாகட்டும், வீரமாகட்டும், சோகமாகட்டும் தனது பாடல் வரிகளிலே ஆங்காங்கு ஆன்மீகத்தைப் புதைத்து வைத்தார்.

    இந்தப் பதிவினிலே நாம் பார்க்கப் போகும் பாடல், கவியரசரின் அருமையான பாடல்.

    “பார்த்தால் பசி தீரும் ” எனும் படம். இதிலே நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடித்துள்ளார்கள்.

    இவர்கள் இருவரும் ஒன்றாக இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கு பெறும் ராணுவ வீரர்களாக நடித்திருப்பார்கள்.

    இடம்பெற்ற பல சிக்கல்களினால் தெரிந்த உண்மையைச் சொல்ல முடியாத ஒரு நிலைக்கு நடிகர் திலகம் தள்ளப்படுகிறார்.

    அவரது இந்த நிலையை விளக்கும் பாடல் ஒன்றினை அவர் பாடுவதான காட்சிக்குப் பாடல் வரிகளை கவியரசர் யாத்திருந்தார்.

    பாடல் ” உள்ளம் என்பது ஆமை ” , டி.எம்.எஸ் ஐயா அவர்கள் அற்புதமாகப் பாடியுள்ளார்.

    உள்ளம் என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் கதாசிரியர்கள், கவிஞர்கள் பலரும் வித்தியாசமான விளக்கங்களை அள்ளி வீசியுள்ளார்.

    மலர் என்றார்கள். ஆனால் அந்த உள்ளம் மலர்வதும் தெரியாது, உதிர்வதும் தெரியாது. வேறு சிலரோ அலையடிக்கும் கடல் என்றார்கள். ஆனால் அந்தக் கடல் எப்போது பொங்கிப் பிரவாகிக்கும் என்று சொல்ல முடியுமா ?

    உள்ளம் குரங்கு போன்றதென்றால் மரத்துக்கு மரம் தாவும் செயல் போல மனமும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.

    ஆனால் நாயகன் தன் சூழலில் மனத்துக்கு ஒரு கட்டளை இடுகிறான். அதாவது அது நினைப்பதை வெளியே சொல்ல முடியாத நிலை.

    இங்கே கவியரசர் உள்ளத்தை ஆமைக்கு ஒப்பிடுகிறார். ஆமை என்ன செய்யும்? ஆபத்தைக் கண்டவுடன் மெதுவாகத் தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு விடும்.

    பாதுகாப்புக்கு மட்டுமல்ல சோர்விலோ இல்லை தளர்விலோ இல்லை அயர்விலோ கூட உள்ளே தான் ஓட்டுக்குள்ளே ஒதுங்கிக்கொள்ளும்.

    உண்மையைப் பேசுவதனால் யாருக்கும் எந்த நன்மையும் ஏற்படாது. பாதிப்புத்தான் அங்கு ஏற்படும் எனும் போது அந்த உண்மையை நெஞ்சிலே தாலாட்டுப் பாடி தூங்கத்தானே வைக்க முடியும்.

    இது எத்தகைய ஆன்மீக அறிவியலின் அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது.

    உள்ளம் என்பது ஆமை – அதில்
    உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது நீதி

    என்கிறார் கவியரசர். கவியரசருக்கு நிகர் கவியரசரே தான்.

    கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது அன்றிலிருந்து இன்றுவரை எமக்குள்ளே விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

    இந்தக் கேள்வியைச் சாதுரியமாக எம்மை.நோக்கியே திருப்பி விடுகிறார் கவியரசர்.

    கருங்கல்லொன்று நாம் போகும் பாதையில் கண்களில் தட்டுப்படுகிறது, ஒரு கல் கிடக்கிறது என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதைக் கடந்து சென்று விடுகிறோம்.

    அதே கல் ஒரு கைதேர்ந்த சிற்பியின் கைகளில் கிடைக்கிறது. ஆன்மீக உணர்வு கொண்ட அவன் அதைச் செதுக்கி அதனுள்ளிருக்கும் ஒரு தெய்வத்தின் உருவத்தை வெளிக்கொணர்கிறான்.

    அந்தச் சிலை ஆலயத்தின் கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    அதைக் கல் என்று கடந்து சென்றவர்கள் இப்போ ஆலயத்தினுள் கருவறையின் முன் நின்று தெய்வமென்று வணங்குகிறார்கள்.

    திருமூலரின் வரிகளில் இதை அழகாக இரு வரிகளுக்குள் அடக்கியிருப்பார் திருமூலர்.

    “மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தில் மறைந்தது மாமத யானை”

    என்பார் திருமூலர்.

    இவை மிக இலகுவாக பாமரனுக்கும் புரியக்கூடிய எளிமையான வரிகளில் பதிப்பதுதானே கவியரசரின் முழு ஆற்றலே! விடுவாரா சும்மா?

    இங்கே சூழலின் தன்மைகளினால் உண்மையைப் பகிர முடியாமல் தவிக்கும் நாயகன் ஆன்மீகப் பின்னணியில் தன் தன்மையை விவரிக்கிறான்

    தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
    சிலை என்றால் வெறும் சிலைதான்
    உண்டென்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை

    இதைவிட அர்த்தம் பொதிந்ததாகவும், எளிமையாகவும் அன்றாட வாழ்வுச் சிக்கல்களையும் ஆன்மீகத்தையும் யாரால் இணைக்க முடியும்?

    இதை எவ்வாறு அவன் தன் நிலையைச் சித்திரிப்பதற்கு உபயோகிக்கிறான் ? என்று வாசகர்கள் எண்ணக்கூடும்.

    இந்தத் திரைப்படத்தின் கதைப் பின்னனியை அறிந்திருந்தால் இலகுவாகப் புரியும்.

    சந்தர்ப்பச் சூழ்நிலையால் தீயவனாக எண்ணப்படும் அவன், உண்மையைச் சொன்னால் பலருடைய வாழ்வு பாதிக்கப்படும்.

    ஆனால் அதே இடத்தில் அவன் நல்லவன் என்பதை அறிந்தோரும் உண்டு.

    அவனை நல்லவன் என்று பார்த்தால் நல்லவனே! தீயவன் என்று பார்த்தால் தீயவனே !

    இதையே அழகாக ஆன்மீக வரிகளில் விளக்கும் கவியரசரின் ஆன்மீக அறிவியலே அற்புதம்தான்.

    அடுத்த சரணத்தில் எதை வைக்கப் போகிறார் ? பார்ப்போம்

    தண்ணீர் தணல் போல் எரியும் – செந்
    தணலும் நீர் போல் குளிரும்
    நண்பனும் பகை போல் தெரியும் – அது
    நாட்பட நாட்படப் புரியும்

    எங்காவது தண்ணீர் சாதாரணச் சூழலில் தணலைப் போலச் சுடுமா?

    இல்லையெனில்

    தணலாகத் தகித்துக் கொண்டிருக்கும் விறகுக் கட்டை குளிர் நீரைப் போலக் குளிருமா ?

    நடக்கும் என்கிறார். அதாவது இக்கதாநாயகன் சூழ்நிலையால் பாதிக்கப்படுவதால் அவனுள் எழும் உணர்வுகளின் தாக்கத்தை அவற்றுக்கு ஒப்பீடு செய்கிறார் எம் கவியரசர்.

    அது ஏன் நடக்கிறது? ஏனென்றால் காலம் அவனின் நண்பனுக்குக் கூட அவனைப் பகையாளியாகக் காட்டுகிறது.

    ஆனால் அந்நாயகன் உண்மையின் மீதும் நல்வினை விதைத்தோர் நல்வினையையே அறுவடை செய்வார் என்பதில் இன்னும் அசையாத நம்பிக்கையோடு பொறுமையாக இருக்கிறான் என்பதை அருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையே ,
    அது
    நாட்பட நாட்படப் புரியும் என்கிறார்.

    இங்கு இதை ஒரு திரைப்படச் சூழலுக்கு எழுதப்பட்ட பாடல் என்று பார்ப்பதோடு அன்றாடம் வாழ்க்கைச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் பலரும் ஆன்மீக அறிவியலின் அடித்தளத்தில்.இதனைப் பார்ப்பதன் மூலம் மனத்தின் சாந்திக்கு வழி வகுக்கலாம்.

    இங்கேதான் கவியரசரின் ஆன்மீக அறிவியல் மேலோங்குவதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

    ஆத்திகம், நாத்திகம் எனும் பேதங்களைக் கடந்த ஓர் ஆன்மீக அறிவியலின் அவசியத்தைப் புரிய வைக்கிறார்.

    மீண்டும் அடுத்த பாகத்தில்
    சக்தி சக்திதாசன்

    Share
  • முற்றுகிறது மோதல் – கனடாவில் இந்தியர் நிலை என்ன?

    முற்றுகிறது மோதல் – கனடாவில் இந்தியர் நிலை என்ன?

    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தியா – கனடா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருக்கிறது எனக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியப் பாராளுமன்றத்தில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இந்தியத் தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் கனடா நாட்டுத் தூதரக அதிகாரியைத் திருப்பி அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக, கனடாவுக்கான விசா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

    இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? கனடாவில் இந்தியவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா? கனடாவுக்கு வர விரும்புவோர், வழக்கம் போல் விண்ணப்பிக்கலாமா? கேனெக்ஸ்ட் குடியேற்ற நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share
  • குறளின் கதிர்களாய்… (468)

    குறளின் கதிர்களாய்… (468)

    செண்பக ஜெகதீசன்

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு.
    -திருக்குறள் -987 (சான்றாண்மை)

    புதுக் கவிதையில்…

    தமக்குத்
    துன்பம் தருவனவற்றைச் செய்தவர்க்கும்
    சான்றாண்மை மிக்கவர்
    தாம் இன்பம் தருவனவற்றைச்
    செய்யாது போவாரானால்,
    அவரது சால்பு
    வேறென்ன பயனைத்
    தர வல்லது…!

    குறும்பாவில்…

    துன்பம் தமக்குத் தந்தவர்க்கும்
    சால்புடையோர் இனியன செய்யாதுபோனால் அவரது
    சால்பினால் எந்தப் பயனுமில்லை…!

    மரபுக் கவிதையில்…

    துன்பம் தமக்குச் செய்தவர்க்கும்
    தூய தான சால்புடையோர்
    இன்பம் தன்னைத் தருகின்ற
    இனிய வற்றைச் செயாதிருந்தால்,
    அன்னார் வசமா யுள்ளதுவாம்
    அரிய பொருளாம் சால்பதுதான்
    என்ன வேறு பயனதைத்தான்
    எடுத்துக் கொடுக்கப் போகிறதோ…!

    லிமரைக்கூ…

    தந்தாலும் பிறர்தமக்குத் துன்பம்,
    சால்புடையோர் சால்பினால் பயனேது மில்லை
    செயாவிடிலவர் பெற்றிட இன்பம்…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும் சான்றாண்ம,
    ஓசந்த கொணமாம் சான்றாண்ம..
    தனக்குத் துன்பம் செஞ்சவனுக்கும்
    அவன் இன்பமடய
    சான்றாண்ம உள்ளவரு
    நல்லது செய்யாம இருந்தா
    அவருகிட்ட இருக்கிற
    சான்றாண்மயால யாருக்கும்
    எந்தப் பயனுமில்ல..
    அதால
    வேணும் வேணும் சான்றாண்ம,
    ஓசந்த கொணமாம் சான்றாண்ம…!

    Share
  • சான்றோர் போற்றும் செல்வம்

    -மேகலா இராமமூர்த்தி

    வாழ்வின் உறுதிப்பொருள்களாகக் கருதப்படுபவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகியன. வீடு என்பது உலக வாழ்வில் பற்றறுத்தவர்கள் அடையும் நிலைத்த இன்பம் நல்கும் இடமாய்க் கருதப்படுவது. ”அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்பார் நம்மாழ்வார். ஆனால், உலகப்பற்றை விட்டுவிட இயலாத சாமானிய மக்களுக்கு வீடுபேற்றுக்கான வழியைவிடவும் உலக வாழ்க்கையைச் செம்மையாக நடாத்துதற்கான வழிகாட்டலே தேவையானது. அவர்கள் கவனம் செலுத்தவேண்டியவை அறம், பொருள், இன்பம் எனும் மூன்றுமே. இம்மூன்றிலும் எது சிறந்தது என்று கேட்டால் ஒவ்வொருவரும் அவரவர்க்கு எது சிறந்தது என்று தோன்றுகின்றதோ அதற்கேற்ப விடை பகர்வர்.

    வாழ்வினைத் தம் அறிவாலும் அனுபவத்தாலும் நன்கறிந்த அறிஞர் பெருமக்கள் இதுகுறித்து என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம்.

    ஈரடியில் வாழ்க்கையின் நீள அகலங்களை அளந்தவரான வான்புகழ் வள்ளுவர்,

    ”அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்”
    (754) என்றும்

    ”ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு”
    (760)

    என்றும் கூறித் தீதில்லா நல்வழியில் ஈட்டிய பொருளாகிய செல்வத்தைக் கொண்டு ஒருவன் அறத்தைச் செய்யலாம்; இன்பத்தையும் அடையலாம் என்று நமக்குத் தெரிவிக்கின்றார்; மனத்தைத் தெளிவிக்கின்றார். ஆக, நாம் அறத்தைச் செய்வதாக இருந்தாலும் இன்பத்தைத் துய்ப்பதாக இருந்தாலும் இரண்டுக்குமே அடிப்படைத்தேவை பொருளே என்பதனை இக்குறட்பாக்கள் வலியுறுத்துகின்றன.

    ஈரடிக் குறட்கருத்தை நாலடியில், சற்று விரிவாய், விளக்கும் நாலடியார் எனும் நன்னூலும், ”குற்றமில்லா இவ்வுலகில் இன்றியமையாத மூன்றாய்த் திகழ்கின்ற அறம் பொருள் இன்பம் என்பவனவற்றுள் நடுவில் நின்றதான பொருளை ஒருவன் அடைவானாகில் அதன் இரு பக்கத்தனவான அறம் இன்பம் இரண்டையும் அவன் அடைவான். அவ்வாறு நடுவணதை எய்தானாகில் கொல்லன் உலையில் இரும்பையிட்டுக் காய்ச்சுவதுபோல் வறுமைத் துன்பத்தில் நலிவான்” என்று வள்ளுவரின் கருத்தையே வழிமொழிந்து பேசுவதனைக் காணலாம்.

    வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
    நடுவணது எய்த இருதலையும் எய்தும்
    நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
    அடுவது போலுந் துயர்.
    (நாலடி – 114)

    பொருட்செல்வமே அறத்துக்கும் இன்பத்துக்கும் ஆதாரம் என்பதனை வள்ளுவமும் நாலடியும் தெளிவுபடுத்தக் கண்டோம்.

    அதன் தொடர்ச்சியாய், ”பொருள் மட்டுந்தான் செல்வம் என்ற பெயருக்கு உரியதா?” என்று வள்ளுவரைக் கேட்டால், ”இல்லை, வேறு செல்வங்களும் உள” என்றுரைத்து ஒரு பட்டியலைத் தருகின்றார். அவை வருமாறு:

    1) பணிவென்னும் அடக்கமுடைமை அனைவர்க்குமே நன்மை பயப்பது; அவருள்ளும் செல்வம் படைத்தவர்க்கு மற்றொரு செல்வமாய்த் திகழ்வது என்கிறார் குறளாசான்.

    எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.
    (125)

    2) பொருளென்னும் செல்வம் இழிந்தோரிடத்திலும் காணக்கிடைப்பது; [அதனால்தான் பொருளல்லவரையும் பொருளாகச் செய்வது இந்தப் பொருட் செல்வம் என்றார் ஆசான் பிறிதோர் இடத்தில்.] ஆனால், அருட்செல்வம் உயர்ந்தோரிடத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் உயரிய செல்வமாகும் என்று அதன் மேன்மையை எடுத்தியம்புகின்றார்.

    அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.
    (241)

    3) மனிதர்க்கு அழிவில்லாத சிறந்த செல்வமாய்த் திகழ்வது கல்வியே; மற்றவையெல்லாம் செல்வங்கள் ஆகாவென்பது கல்வி என்னும் அதிகாரத்தில் பொய்யில் புலவர் பதிவுசெய்திருக்கும் மெய்ம்மொழியாகும்.

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    மாடல்ல மற்றை யவை.
    (400)

    ஈண்டுச் செல்வம் என்பதற்கு மாற்றுச் சொல்லாக ’மாடு’ என்பது பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்க.

    மாடு என்றால் செல்வமா?

    ஆம்! மாடுகளே ஒரு காலத்தில் மக்களின் செல்வமாய்த் திகழ்ந்தன. மாந்தர்களின் நாடோடி வாழ்க்கை முடிவுற்று அவர்கள் தமக்கென வாழிடங்களை உருவாக்கிக்கொண்டு வாழக் கற்றுக்கொண்டபின் ஆடு மாடுகளை வீட்டு விலங்குகளாய்ப் பழக்கினர். பசு, எருமை போன்றவற்றின் பாலிலிருந்து கிடைத்த பால்படு பொருட்களை விற்றுப் பொருளீட்டினர். இவர்களையே நாம் முல்லை நிலத்தவர் என்று திணை அடிப்படையில் அடையாளப்படுத்துகின்றோம். இத்திணை மாந்தர்களை ஆயர், ஆய்ச்சியர் என்று தொழிலடிப்படையில் வகைப்பாடு செய்துள்ளது தமிழிலக்கண நூலான தொல்காப்பியம்.

    ஒரு குடும்பம் எத்துணை மாடுகளைச் சொந்தமாய் வைத்துள்ளது என்பதன் அடிப்படையில் அவர்களின் செல்வ வளம் தீர்மானிக்கப்பட்டது. அதை மனத்தில் வைத்தே தம் குறட்பாவிலும் ’மாடு’ என்ற சொல்லைச் செல்வத்துக்கு மாற்றாய்ப் பயன்படுத்தியுள்ளார் ஐயன் வள்ளுவர்.

    செல்வத்தைக் குறிக்க ’மாடு’ என்ற சொல்லைத் திருமூலரும் திருமந்திரத்தில் பயன்படுத்தியிருக்கக் காணலாம்.

    ”தன்னது சாயை தனக்குத வாதுகண்டு
    என்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
    …” (திரு: செல்வம் நிலையாமை – 214)

    ”வெயிலால் ஏற்படும் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளத் தமது நிழல் உதவாமை கண்டும், அறிவிலார், தமது செல்வம் (மாடு) தம் துன்பத்தைப் போக்கிக்கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர்” என்று மக்களின் அறிவின்மையையும் செல்வப்பற்றையும் இப்பாடலில் ஏளனம் செய்கின்றார் திருமூலர்.

    இனி, வள்ளுவர் பட்டியலிடும் பிற செல்வங்களையும் நோக்குவோம்.

    4) கல்வி எனும் செல்வத்தைப் பெற விரும்பும் அனைவர்க்கும் அதற்கான வாய்ப்பும் வசதியும் அமைந்துவிடுவதில்லை; அப்படிப்பட்டோர் தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுவது (செவியால் கேட்டலாகிய) கேள்விச் செல்வம். அதனால் அதுவே செல்வங்களுள் தலையாய செல்வம் என்பது வள்ளுவரின் கருத்து.

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை.
    (411)

    கேள்வி என்பது காதால் கேட்டலை (hearing by ear) குறிக்கும் சொல்லாகவே அந்நாளில் பயன்பட்டது; இந்நாளில் அது வாயால் கேட்பதற்கும் (oral questioning) உரிய சொல்லாகப் பொருள்விரிவு கண்டிருக்கின்றது. எனினும், வாயால் கேட்பதைக் ’கேள்வி’ என்று சொல்வதைவிட ’வினா’ என்று சொல்வதே பொருத்தம்.

    5) வாழ்வின் வெற்றிக்கு அடிப்படையான செல்வம் ஒன்றுண்டு. அதுதான் தோல்வியிலும் நிலைகுலையாத ஊக்கம். அவ்வூக்கமே ஒருவனுக்கு உண்மையான உடைமையாகும் (சொத்து); பொருட்செல்வமாகிய உடைமை நிலைத்திருக்கும் இயல்புடையது அன்று; (போகூழ் வந்தால்) அது நில்லாது நீங்கிவிடும் தன்மைத்து என்று ஊக்கத்திற்கு உயர்வு தருகின்றார் வள்ளுவர்.

    உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
    (592)

    மேற்கண்டவை எல்லாம் உலகியல் பற்றுடையோர்க்குத் தேவையான செல்வங்கள். இதனினும் மாறுபட்ட செல்வம் ஒன்றுண்டு. அதுதான் அவாவின்மை எனும் அருஞ்செல்வம். எதன்மீதும் பற்றற்ற பெருஞ்செல்வம். அதற்கு இணையான செல்வம் இங்குமில்லை; வேறெங்குமில்லை என்பது வள்ளுவப் பெருந்தகையின் துணிபு.

    வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    யாண்டும் அஃதொப்பது இல்.
    (363)

    அருளாளராகவும், சிறந்த அறிஞராகவும் திகழ்ந்த குமரகுருபரர், தம்முடைய சிதம்பர மும்மணிக் கோவையில், ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே; அல்கா நல்குரவு அவா எனப்படுமே” என்றுரைக்கின்றார்.

    தம் பெயரில் நோபல் பரிசுகளை உருவாக்கிப் பல்துறை அறிஞர்களுக்கும், சமாதான விரும்பிகளுக்கும் அளித்த சுவீடன் நாட்டு அறிவியலாளரும் பெருங்கொடையாளருமான ஆல்பிரட் நோபலும் (Alfred Nobel) இதே கருத்தை, ”Contentment is the only real wealth” என்று மொழிந்திருக்கின்றார்.

    ஆனால், இருப்பதே போதுமென்ற நிறைவும் அவாவின்மையும் இல்லறத்தில் உள்ளோனுக்கு எளிதில் சாத்தியப்படாது; அவன் வாழுங்காலம்வரை தன் ஆசைகளையும் தன்னைச் சார்ந்தோரின் ஆசைகளையும் நிறைவேற்ற ஓடிக்கொண்டேதான் இருந்தாகவேண்டும். அதனால் இல்லறம் கடந்து, மனத்துறவு கொண்டுவிட்டவனுக்கே வேண்டாமை எனும் விழுச்செல்வம் கிட்டும்.

    சங்க அகநூல்களுள் ஒன்றான நற்றிணையும் செல்வம் என்பதற்கு அழகானதொரு விளக்கத்தைத் தருகின்றது. அதனை அடுத்துக் காண்போம்.

    தலைவியோடு இல்லறத்தில் ஈடுபட்டிருந்த தலைவன் சிறிது காலத்திற்குப் பிறகு பரத்தையரை நாடிச் சென்றான்; மீண்டும் மனந்திருந்தித் தலைவியைத் தேடி வருகின்றான். தலைவன்மீது ஊடல் கொண்டிருந்த தலைவி அவனிடம் முகங்கொடுத்துப் பேசவில்லை; அதுகண்ட தலைவன் தோழியிடம் சென்று எப்படியாவது தலைவியை மறுபடியும் தன்னோடு சேர்த்துவைக்க வேண்டும் என்று இரந்து வேண்டுகின்றான். தலைவன் தன்னிடமிருக்கும் செல்வத்தின் செருக்கினால்தானே மனம்போன போக்கில் நடக்கின்றான் என்றெண்ணிய தோழி உண்மையான செல்வமென்பது என்ன என்பதை அந்தச் செல்வனுக்கு உணர்த்த விரும்பியவளாய்,

    ”நெல்லறுத்து முடித்த அழகிய அகலமான வயலில் மறுபடியும் உழுத ஈரமுடைய சேற்றில் விதைப்பதற்காக விதையோடு சென்ற கடகப் பெட்டியானது, பிடித்துப் போடப்பட்ட மீன்களோடு வருகின்ற புதிய வருவாயினை உடைய ஊரைச் சேர்ந்தவனே! அரசனால் விருதளித்துப் பாராட்டப்படுதலும், விரைந்து செல்லக்கூடிய குதிரையிலும் தேரிலும் யானையிலும் பெருமிதத்தோடு செல்வதும் செல்வம் அல்ல. அவையெல்லாம் ஒருவன் முற்பிறவியில் செய்த நல்வினைகளின் பயனால் கிடைப்பன. [வடமொழியில் இதனைப் ”பதவி பூர்வ புண்யானாம் என்பர்.] ஆனால், சான்றோர்கள் செல்வம் என்று சிறப்பித்துக் கூறுவது எதைத் தெரியுமா?” என்று கேட்டாள்.

    தலைவன் திருதிருவென விழித்தான்.

    ”சொல்கிறேன் கேள்!” என்றவள், ”தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு அஞ்சி, அவற்றைப் போக்கி அவர்களைக் கைவிடாமல் இரக்கத்தோடு நடந்துகொள்ளும் பண்பே சான்றோர் போற்றும் செல்வம்” என்றாள்.

    தன்னை நம்பிவந்த தலைவியைக் கைவிட்டுச் சென்ற தன் இழிசெயலைத்தான் தோழி இங்ஙனம் குத்திக்காட்டுகின்றாள் என்றுணர்ந்த தலைவன் தன் செயலுக்காக வெட்கித் தலைகுனிந்தான்.

    இப்பாடல் நமக்குத் தரும் செய்தி, பதவிகளும் பிற ஆடம்பரங்களும் ஒருவனுக்கு நிலையான செல்வங்கள் அல்ல; தன்னைச் சார்ந்தோர் மனவருத்தம் அடையா வண்ணம் அவர்கள்பால் கருணையோடு நடந்துகொள்வதே சான்றோர் போற்றும் உயரிய செல்வம் என்பது.

    இவ்வினிய பொருள்பொதிந்த பாடலை இயற்றியவர் மிளைகிழான் நல்வேட்டனார் எனும் புலவர். இனி, பாடலைக் காண்போம்.

    அரிகால் மாறிய அம்கண் அகல்வயல்
    மறுகால் உழுத ஈரச் செறுவின்
    வித்தொடு சென்ற வட்டி பற்பல
    மீனொடு பெயரும் யாணர் ஊர
    நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
    செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
    சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
    புன்கண் அஞ்சும் பண்பின்
    மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே.
    (நற்: 210)

    செல்வம் குறித்து இதுகாறும் கண்ட விளக்கங்களின் அடிப்படையில் நாம் நம் வாழ்வை கீழ்க்கண்ட வகையில் அமைத்துக் கொள்ளலாம்:

    இளம் பருவத்தில் கல்வியெனும் செல்வத்தையும், அதைத் தொடர்ந்து பொருளென்னும் செல்வத்தையும் மனிதர்களாகிய நாம் தேடவேண்டும்; செல்வத்தினால் செருக்கடையாமல் பணிவோடிருப்பது சிறப்பு; முறையான கல்விபெற இயலாதவர்கள் கேள்விச் செல்வத்தால் தம் அறிவை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். வாழ்வில் துன்பங்கள் தோல்விகள் ஏற்படுங்காலை அவற்றுக்காகச் சோர்ந்துவிடாமல் ஊக்கமெனும் செல்வத்தின் துணையோடு அவற்றை வென்று முன்னேற வேண்டும். எவ்வுயிரையும் தம்முயிர்போல எண்ணியொழுகும் அருளென்னும் செல்வத்தை மனிதர்கள் தொலைக்காது எப்போதும் வைத்திருக்கவேண்டும்.

    இளமை கழிந்து முதுமையின் வாயிலுக்கு வந்துவிட்டவர்கள் மெல்லமெல்லப் பற்றுக்களையும் ஆசைகளையும் விட்டொழித்து அவாவின்மை எனும் தன்னேரிலாத செல்வத்தை அடைந்து தம் வாழ்க்கைப் பயணத்தை நன்முறையில் நிறைவுசெய்ய வேண்டும்.

    சான்றோர் காட்டிய இப்பாதையில் பயணித்தால் பயணம் சுகமாகும்; வாழ்க்கை இனிதாகும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

    2. நற்றிணை மூலமும் பின்னத்தூர் அ. நாராயண சாமி ஐயர் உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

     

    Share
  • ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசனும் – 6

    ஆன்மீக அறிவியலும் கவியரசர் கண்ணதாசனும் – 6

    வாழ்க்கை என்பது நாம் அனைவரும் எண்ணியது போல நடப்பது இல்லை.

    ஏதேதோ இலட்சியங்களை வகுத்துக்கொண்டு எமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினாலும் அது அனைத்தையும் அடைந்துவிடுவது என்பது முடியாத காரியம்.

    ஓட்டப் போட்டியில் ஓடும்போது இருவர் ஒரே கோட்டில் ஆரம்பித்தாலும் ஓட்டத்தில் திறமை மிக்கவர் யாரோ அவர் வென்று விடுகிறார்.

    வென்றவர் திரும்பி, தோற்றுப் போனவரைப் பார்த்து எள்ளி நகையாடுவது ஓட்டப் பந்தயத்தில் வேண்டுமானல் நிகழலாம் ஆனால் வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் ஒருமுறை ஜெயித்தவர் எப்போதும் ஜெயித்துக் கொண்டிருப்பார் என்பதுவோ இல்லையானால் தோற்பவர் எப்போதும் தோற்றுப் போவது என்பதோ விதி அல்ல.

    வாழ்க்கை எனும் பயணத்தில் அனுபவங்களை அள்ளிப் பருகியவர் எமது கவியரசர்.

    வாழ்வின் பாடங்களை ஆன்மீகப் பார்வை கலந்து எமக்கு அள்ளித் தருவதில் கவியரசர் கண்ணதாசனுக்கு நிகர் அவரே தான்.

    ஆன்மீகத்தின் உண்மை வடிவம் இனம், மதம், மொழி எனும் அனைத்துப் பேதங்களுக்கும் அப்பாற்பட்டது.

    வாழ்வின் நிகழ்வுகளின் யதார்த்தமும் அத்தகைய எல்லைக் கோடுகளைக் கடந்த ஒரு ஆன்மீகப் பயணத்தை ஒத்ததே.

    நாமனைவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக இவ்வுலகத்தில் பிறப்பெடுக்கிறோம்.

    பிறப்பின் நோக்கத்தை பிறந்ததும்  மறந்து விடுகிறோம். மறந்ததை நினைவூட்ட மூச்சின் துணை கொண்டு தியானத்தின் துணையோடு ஆன்மாவைத் தொடவேண்டும்.

    இந்தத் தேடலின் வழி செல்லும்போது கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல்களில் ஏதாவது ஒரு வரியிலாவது ஆன்மீகத்தைப் புதைத்து வைத்திருப்பார்.

    அந்த முத்துகளைக் குடைந்து அவர் பாடல்களுக்குள் தேடுவதற்கான தேடல் கூட ஆன்மீகப் பாதையே !

    எதிர்காலம் எனும் 1970ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.

    ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த படம்.

    கவியரசர் வரிகளுக்கு எம்.எஸ்.வி. ஐயா உயிரூட்ட, டி.எம்.எஸ். ஐயா அவர்களின் குரல் வளத்தில் ஒலித்த அற்புதமான பாடலிது.

    ஆன்மீகப் பாதயின் இலக்கின் திசைகாட்டும் பலகை போல எமக்குள் எம்மைப் பயணிக்க வைக்கும் வரிகள்.

    சிந்தனைச் சக்கரத்தைச் சுழற்றி எம்மை நாமே புடம் போட்டுப் பார்க்க வைக்கும் ஆழ்ந்த கருத்துக் கனத்துடன் நெஞ்சத்தை நிறைக்கும் வரிகள்.

    கவியரசருக்கே உரித்தான காட்சிக்கான பாடலிது என எண்ணத் தோன்றும் வகையில் யாத்திருக்கிறார் இவ்வரிகளை

    அள்ளித் தருகிறார் பாருங்கள் அவர்தம் வரிகளை.

    கல்லுக்கு நீதி சொல்ல முடியாது – வெண்
    கானலில் மீன் பிடிக்க முடியாது
    பாறையில் நெல் விதைக்க முடியாது – உன்
    பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது
    உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
    என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல

    ஓட்டப் பந்தயத்தில் ஜெயிப்பது போலல்ல வாழ்வில் இன்று நீ ஜெயித்தது போல் தென்படலாம் ஆனால் பொறுத்திரு மகனே எனக்கும் ஒரு காலம் வரும் என்று கூறுவது மட்டுமல்ல பாவத்தின் மூலம் அடையும் வெற்றி என்பதன் உதாரணமாக என்னவெல்லாவற்றையும் எடுத்து வீசுகிறார் பாருங்கள்.

    வாழ்வின் உச்சத்திலிருக்கும் போது கீழேயிருப்பவர்களை உதாசீனம் செய்யக் கூடாது என்று அழகாகப் புரிய வைக்கிறார்.

    ஆற்றுக்குள் நாணல் இட்டால்
    காட்டுக்குள் ஆட்டை விட்டால்
    என்னவென்று முடிவாகும்
    ஆசையை முன்னே வைத்துத்
    தர்மத்தை பின்னே வைத்தால்
    என்னென்ன விளைவாகும்

    ஆற்றிலே வீசப்பட்ட நாணல் அவ்வாற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படுவது போலத்தான் ஆசை எனும் வெள்ளத்துக்கு முதலிடம் கொடுப்போர் அடித்துச் செல்லப்படுவார்கள் என்பதையும், காட்டுக்குள் தனியே விடப்பட்ட ஆடு எப்படி ஒரு புலிக்கோ அன்றிச் சிங்கத்துக்கோ இரையாவது போல் தர்மத்தை மதிக்காமல் அதர்மம் எனும் காட்டுக்குள் நுழைபவரும் அவ்வாட்டின் நிலையை அடைவார்கள் என்று சொல்கிறாரோ எம் வித்தக வினைஞர்.

    வாழ்வென்பது ஒரு ஆறானால் அதிலே காலத்தின் கோலத்தால் நாணலைப் போல நாம் வீசப்படலாம் அப்போ மனிதாபிமானம் மிக்கவர்களின் கடமையென்ன என்று சிந்திக்க வைக்கும் முயற்சியாக உதிக்கப்பட்ட வரிகளிவை.

    நாடகமேடை ராஜாவானால்
    அங்கென்ன அதிகாரம்
    நாணயமாக வாழ்வதில்தானே
    யாருக்கும் எதிர்காலம்
    உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
    என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல

    நாளுக்கு நாள் மாறிடும் இவ்வுலகம் எனும் நாடகமேடையில் நான் செல்வந்தன் என்று எப்படி இறுமாப்புக் கொள்வது ? அதுகூட ஒரு நாடக மேடையில் ராஜா வேஷம் போடுவது போல ஒரு மாயைதானே ! அகங்காரம் கொண்டவர் தான் இந்த வேசத்தில் கூட அதிகாரத்தைக் காட்டுவார்கள் என்கிறார் எம் கவியரசர். ஒரு மனிதனின் செல்வாக்கும் செல்வந்தத்தனமும் அவன் காட்டும் நாணயமிக்க நடத்தையில் என்கிறார் தமிழன்னையின் தவப்புதல்வன்

    ஓடத்தைப் பார்த்த பின்னும்
    வெள்ளத்தில் நீந்திச் சென்றால்
    சொந்தத்தில் அறிவேது ?
    பட்டுத்தான் தேறுமென்றால்
    கெட்டுத்தான் மாறுமென்றால்
    புத்திக்கு விலையேது

    ஒரு மன்னிதனுக்கு இதுதான் சரியான வழி என்று காட்டலாமே தவிர அவனை அவ்வழியில் தள்ளி விட முடியாது. அதை அழகாக எவ்வளவு எளிமையாக ஓடத்தைக் கண்டும் நீந்தித்தான் போகிறான் என்று எடுத்தியம்புகிறார் கவியரசர். இத்தகைய வரிகள் அவர் எண்ணத்திலிருந்து சுரக்க வேண்டுமானல் எத்தனை குடம் குடமாக அனுபவநீரை அவர் அள்ளிக் குடித்திருக்க வேண்டும் ?

    “ இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்குண்டு ஏனெனில் எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்” என்று சொல்லும் தைரியம் கொண்டவர் எம் கவியரசர். அதனால் தான் என்னவோ அவர் சிந்தையெல்லாம் அனுபவ முத்துகளாய் முதிர்ந்திருக்கின்றன.

    உள்ளத்தில் கோழை
    ஊருக்கு வீரன்
    இது உந்தன் நிகழ்காலம்
    உண்மையைத் தேடி
    ஓர்நாள் வந்தால்
    ஒளிவிடும் எதிர்காலம்
    உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
    என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல

    ஆகா ! எத்தனை யதார்த்தமான ஒரு கருத்தை இத்தனை எளிமையாய்க் கூறுகிறார். வாழ்வில் நான் கண்ட அனுபவங்களில் வீரனைப் போல் ஜனத்துக்கு மத்தியில் கத்துவோர் பலரின் உள்ளக் கோழைத்தனத்தைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தனது உள்ளத்துக்கு உண்மையை மறைத்து பொய்மையாய் வாழ்பவரே முதல் கோழைகள் என்பதை ஆணித்தரமாகச் சொல்லக்கூடியவர் “வனவாசம்” , “மனவாசம்” என்று தன்னை பகிரங்கமாக அலசி எடை போட்ட கவியரசர் ஒருவரே.

    காதல் மன்னன் ஜெமினி கணேசன், பத்மினி அவர்களின் நடிப்பில் வெளிவந்த எதிர்காலம் எனும் திரைப்படத்தில் அமரர்கள்~ டி.எம்.எஸ். இன் குரலிலும், எம்.எஸ்.வியின் இசையிலும் உருவான பாடலுக்கு வரிகளைக் கொடுத்து வண்ண ஓவியத்துக்குக் கண்ணைத் தீட்டுவது போல வடித்துக் கொடுத்தவர் எம் கவியரசர்.

    என் இனிய அன்பு உள்ளங்களே ! கவியரசரின் மற்றொரு முத்துடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    மீண்டும் அடுத்த பாகத்தில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • சூரியனைச் சுற்றி ஆராய, ஆதித்யா-L1 விண்ணுளவியை இந்தியா ஏவியுள்ளது

    சூரியனைச் சுற்றி ஆராய, ஆதித்யா-L1 விண்ணுளவியை இந்தியா ஏவியுள்ளது

    Aditya-L1 Launch Live: Indian Space Research Organisation’s (ISRO) Aditya-L1, India’s maiden solar mission, onboard PSLV-C57 lifts off from the launch pad at Satish Dhawan Space Centre, in Sriharikota, on Saturday, September 2, 2023. (Image: PTI)
     
    image.png
     
    இந்தியா நிலவை நோக்கி சந்திராயன் -3 விண்சிமிழை வெற்றிகரமாக ஏவிய சில நாட்களில், [ஆதித்யா-L1]  விண்ணுளவியை
    PSLV -C57 ராக்கெட்டில் அனுப்பி, சூரியனைச் சுற்றி ஆராய்ந்திட முனைந்துள்ளது. ஆதித்யா- L1  சுமார் 1 மில்லியன் மைல் [1.5 மில்லியன் கி.மீ.] பயணம் செய்து, L1 லகராஞ்சியன் அரங்கில் [LAGRANGIAN POINT] சூரிய தட்டு  ஒளிப் புள்ளிச் சுற்று வீதியில் [HALO ORBIT] பயணிக்கும்.
    image.png
    In celestial mechanics, the Lagrange points also Lagrangian points or libration points) are points of equilibrium for small-mass objects under the gravitational influence of two massive orbiting bodies. Mathematically, this involves the solution of the restricted three-body problem.  Lagrange points in the Sun–Earth system (not to scale). Earth’s orbit here is counterclockwise.
    ஆதித்யா – L1  விண்சிமிழில் 7 சிறப்புக் கருவிப் பளுச்சுமை சூரியக் கதிர்களையும், மேற்தளக் கனல் வீச்சுகளையும், ஒளிப் பிழம்பு காந்தப் பண்பு, சூரியப் புயல்  [Solar Light, Corona, Plasma, Magnetic Fields, Solar Wind] ஆகியவற்றை  ஆராயும்.
    Share
  • நாய் – பிம்பம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    நாய் – பிம்பம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன், உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    அம்மு சிவப்புநிற மஞ்சாடிக்கொட்டைகளைப் பொறுக்கிக்கொண்டிருக்கும்போது வேனலின் முதல் மழை பெய்யத் தொடங்கியது. வரம்பிற்கு அப்புறம் வழியாக கால்நடை வியாபாரியான சங்கரன்  பசுவொன்றை  ஓட்டிக்கொண்டு வந்தான்.

    ”அம்மு மஞ்சாடியா  பொறுக்குற? அவன் சும்மா விசாரித்தான்.

    அவள் கையில் உள்ள செரட்டையை நீட்டிக் காண்பித்தாள்.

    “ இது இரண்டாவது. கொஞ்சம் கூட போட்டா இதுவும் நிறைஞ்சுரும்.” அவன் நடந்து புளிய மரத்துக்கு அடியில் போனான்

    ”அப்பா இல்லையா? வீட்ல அவன் கேட்டான்.”

    “ இல்ல” அம்மு சொன்னா

    “எங்க போனாரு?”

    ”பாலத்துக்கு பக்கத்துல ஒருத்தரு லாரி இடிச்சு செத்தாரில்ல. அது அப்பாவுக்கு உறவுமொறல ஒரு மாமா ஆகுது. செத்துப்போன செய்தி வந்ததும் அப்பா கிளம்பிட்டாரு.”

    ”அம்மாவோ”

    “அம்மாவும் போய் இருக்காங்க”

    பெய்து கொண்டிருந்த மழை அதற்குள் சற்று அதிகமானது.

    அம்மு ரெண்டு செரட்டைகளையும் எடுத்துக்கொண்டு வீட்டைபார்த்து வேகமாக நடந்தா. வீட்டின் முற்றத்தில் தம்பியை உட்கார வைத்துவிட்டுதான் அவள் மஞ்சாடிக்கொட்டைகளைப் பொறுக்க சென்றிருந்தாள். அவன் ஒரு மரத்தாலான பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

    ”நமக்கு இனி மஞ்சாடி வெச்சு விளையாடலாம். நெறைய மஞ்சாடி கிடைச்சிருக்கு” அம்மு அவங்கிட்ட சொன்னா.

    ஒரு சாக்பீஸ் எடுத்துத் தரையில கட்டம் போட்டா. மண்ணில குழிபண்ணி ஒவ்வொரு குழியிலும் மஞ்சாடி போட்டு விளையாடுவது தான் அவளுக்குப் பிடிக்கும். ஆனா அது ரெண்டரை வயசு மட்டுமே ஆன அவனோடு சேர்ந்து விளையாடுற விளையாட்டல்ல. அதுக்கு ஒத்த வயசுள்ள யாராவது வேணும். மழை பெய்றதுனால இனி யாரும் வர மாட்டாங்க.

    ”நான் தொடங்கறேன்.” அம்மு சொன்னாள்.

    தம்பியோட விளையாட்டும் சேர்த்து  அவளே விளையாட வேண்டி இருந்தது. அவனுக்கு விளையாட்டோட விதிமுறை ஒண்ணும் தெரியாதது மட்டுமல்ல சில நேரம் அவனே தெரியாமல் மஞ்சாடி கொட்டைகளைத் தட்டி விடவும் செய்வான்.

    மண்ணிலிருந்து ஈசல்கள் தூரம் தூரமாக பறந்தன. சங்கரன்குட்டி ஈசல்களுக்கிடையில்  வீட்டைப் பார்த்து நடந்தான்.

    ”அம்மு விளையாடுறியா?” அவன் கேட்டான்.

    அவள் முகம் உயர்த்தினாள்

    அவன் தனியாகத்தான் இருந்தான்.

    ”பசு எங்கே?”

    ”அத மேய விட்டுட்டேன். கோயில்கிட்ட நெறைய புல்லு வளர்ந்திருக்கறத பார்த்தப்போ அதுக்கு ஒரு சந்தோஷம் அப்படின்னா அங்கேயே கெடக்கட்டும்னு  வந்துட்டேன்.”

    அவன் வெளியில் திண்ணையில் உட்கார்ந்தான். இடைவழி சூன்யமாயிருந்தது. ஈசல்கள் பறந்துகொண்டிருந்தன.

    அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு பீடியெடுத்தான்.

    ”கொஞ்சம் தீ வேணுமே அம்மு.”

    “அடுப்பில தீ எப்பவோ அணஞ்சாச்சு”

    ”தீப்பெட்டி இல்லையா?.”

    “சங்கரன் குட்டி அண்ணாக்கு பீடி குடிக்காம இருக்கக் கூடாதா?”

    “என்னோட செல்லம் இல்ல. போய் தீப்பெட்டி எடுத்துட்டு வா. மழை தூறும்போ பீடுகுடிக்க  நல்ல சுகமா இருக்கும்.”

    ”அடுக்களைல தீப்பெட்டி ஒருவேள அப்பா எடுத்துட்டு போயிருப்பாரு.”

    ” நீ வீட்டுக்குள்ள போய் பாருமா. எங்காவது இல்லாம இருக்காது.”

    ”இந்த சங்கரன் குட்டி அண்ணன வெச்சிட்டு முடியல.”

    அம்மு மஞ்சாடிக்கொட்டைகள கீழே வைத்துவிட்டு எழுந்தாள். சங்கரன்குட்டி, அவளை கண்களால் ஈர்ப்புடன் மேலிருந்து கீழவர அளந்தான். அத கவனிக்காம அவள் உள்ளே போனா.

    தீப்பெட்டி எங்க வச்சிருக்காங்கன்னு அவளுக்கு சரியா தெரியாது. அடுப்பு திட்டிலும், கரிப்புகைப்படிந்த ஜன்னலிலும் தீப்பெட்டியை காணாமல் அவள் சுவர் அறைகளில் தேடினாள். அதுக்குள்ள நிறைய லொட்டு லொசுக்கு சாமான்கள்.  மஞ்சத்தூளினுடையவும், மிளகாய்த்தூளினுடையவும், மஞ்சளினுடையவும்  நெடி. நாலஞ்சு சின்ன கரப்பான் வகைகள் அதில ஒண்ணு சின்ன சீன பரணிக்கு பக்கத்து வழியாக நகர்ந்தது. வேறொன்று எண்ணெய் பாத்திரத்தில் பற்றி பிடித்திருந்தது.

    சங்கரன்குட்டி இடைவழியில் மீண்டும் பார்வையை செலுத்தி திண்ணையில் மேலே ஏறி வீட்டிற்குள் நுழையத் தொடங்கும் போது எங்கிருந்து என்று அறியாமல் ஒரு நாய் அங்கே பாய்ந்து வந்தது. அது அவனுக்கு நேராக நின்று குரைத்தது. பௌ….பௌ….. வாலை உயர்த்திக்கொண்டு குரைத்துக் கொண்டே இருந்தது.

    ”இது எங்கிருந்து வந்துச்சு. நாசமாப் போன நாய். சங்கரங்குட்டி அத பார்த்து பல்லைக் கடித்தான். அப்படி ஒரு நாயை அம்முவோட வீட்டிலயோ அக்கம் பக்கத்திலயோ இதுக்கு முன்னாடி  பார்த்ததா நெனைவேயில்ல.

    ”போடா இங்கிருந்து……… நல்ல காரியத்துக்குப் போகும்போது குறுக்கே வந்திட்டு.” அவன் கதவுக்கருகில் நெருங்கினான்.

    நாய் கேட்கவில்லை. அது ஒரு குதி குதித்தது. அவன் திரும்பிப்பார்த்தான்.

    ”போய் பீய தின்னுடா.” அவன் நாய்கிட்ட எரிந்து விழுந்தான்.

    இரண்டு அடி கூட எடுத்து வெச்சாப் போதும் வாசப்படி தாண்டி உள்ள இருந்து  கதவை இழுத்து அடைத்து தாழ்போட்டறலாம்னு நெனச்சான். ஆனா அது நடக்கல.  அதுக்குள்ள நாய் முன்னுக்கு குதித்து அவனுடைய காலில் கடித்தது. அவன் கதறினான்.  வலி அந்த அளவுக்கு சகிக்க முடியாததாக இருந்தது.

    அம்மு தீப்பெட்டி எடுத்துகிட்டு முற்றத்திற்கு வரும்போது சங்கரங்குட்டி நொண்டி நொண்டி இடைவழியை லட்சியமிட்டு வேக வேகமாக நடந்து நீங்கினான்.

    “சங்கரங்குட்டி அண்ணா……. தீப்பெட்டி………” அவள் சத்தமாகக் கத்தினாள்.

    அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அம்மு ஆச்சரியத்தோடு நின்றாள். வாசலில் உக்ரபாவத்தில் நிக்கற கருப்பு நிற நாயை இதற்கு முன் பார்த்ததே இல்லை. அதுக்கு பயப்படுத்தற அளவுக்கு உருவமொண்ணும் பெரிசா இல்ல.  ஒரு சாதாரண நாய். ஆனா அதோட முகம் அசாதாரணமான பயமுடையதாக இருந்தது.

    ” நீ எங்கிருந்து வர?” அம்மு பயத்தோடு கேட்டா.

    நாய் இப்போது அதன் உக்ரபாவம் கைவிட்டு  வாலை தாழ்த்தி செல்லமாக ஒரு சத்தமிட்டது.  வாலாட்டிக்கொண்டு அம்முவை உரசிக்கொண்டு அன்பை வெளிப்படுத்தும் விதம் ஒரு சத்தம் எழுப்பிக்கொண்டு   மெதுவாக முற்றத்தில் இறங்கியது.

    இடைவழியாக சங்கரங்குட்டி போன வழியைப் பார்த்து  சத்தமாகக் குரைத்தது.

    பிறகு அது எங்கோ போய்  மறைந்தது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(467)

    குறளின் கதிர்களாய்…(467)

    செண்பக ஜெகதீசன்

    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்.
    -திருக்குறள் 980 (பெருமை)

    புதுக் கவிதையில்…

    மற்றவர் குறைகளை
    மறைத்தே அவர்தம்
    பெருமைகளைப்
    பெரிதாய்ப் பேசுவர்
    பெருமைப் பண்புடையோர்,
    சிறுமைப் பண்பு கொண்டோர்
    பிறர் பெருமையை
    மறைத்துக்
    குறைகளைப் பெரிதாய்க்
    கூறுவர்…!

    குறும்பாவில்…

    பிறர் குறைகளை மறைத்துப்
    பெருமையைப் பேசுவது பெருமைப் பண்பு,
    நிறைமறைத்துக் குறைசொல்வது சிறுமை…!

    மரபுக் கவிதையில்…

    மற்றவர் குறைகளை மறைத்து வைத்தே
    மாசிலாப் பெருமையைப் பேசுவது
    சற்றுமே குறைவிலாப் பெருமையாளர்
    சார்ந்திடும் பெருமையின் பண்பதுவே,
    முற்றிலும் பண்பிலாச் சிறுமையாளர்
    முழுவதும் பெருமையை மறைத்துவிட்டே
    குற்றமே பார்த்தவர் கொண்டுள்ள
    குறைகளை மட்டுமே பேசுவரே…!

    லிமரைக்கூ…

    மறைத்து மற்றவர் குறைகளை
    பெருமையைப் பேசுவர் பெருமையாளர், குறைபேசும்
    சிறுமையாளர் மறைத்திடுவர் நிறைகளை…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    பெரும வேணும்,
    ஒலக வாழ்க்கயில
    பெரும வேணும்..
    அடுத்தவன் கொறய
    மறச்சி அவனோட
    பெருமய மட்டும்
    பெருசாப் பேசுறதுதான்
    பெருமக் கொணம்,
    கொறய மட்டும்
    காட்டிப் பேசுறது
    சிறுமக் கொணம்..
    அதால
    வேணும் வேணும்
    பெரும வேணும்,
    ஒலக வாழ்க்கயில
    பெரும வேணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(466)

    குறளின் கதிர்களாய்…(466)

    செண்பக ஜெகதீசன்

    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டு முயர்வு.

    -திருக்குறள் – 963 (மானம்)

    புதுக் கவிதையில்…

    பொருட் செல்வம்
    பெருகும் காலத்தில்
    புவியில் ஒருவனுக்குப்
    பணிவு என்னும்
    பண்பு வேண்டும்,
    செல்வம் குறைந்து
    சுருங்கும் வறுமையில்
    பணிந்து போகாத
    உயர்வு வேண்டும்…!

    குறும்பாவில்…

    செல்வப் பெருக்கில் ஒருவனுக்கு
    வேண்டிது பணிவு, வறுமை வந்தால்
    வேண்டும் பணிந்திடா உயர்வு…!

    மரபுக் கவிதையில்…

    செல்வம் வந்து வாழ்வினிலே
    சேரும் கால மதுதனிலே
    நல்ல நெறியாம் பணிவதனை
    நன்றா யொருவன் பேணியதில்
    வல்லோ னாக இருந்திடலை
    வழக்க மாகக் கொளவேண்டும்,
    இல்லா வறுமை தனில்பணியா
    இயல்பே கொள்ள வேண்டுமாமே…!

    லிமரைக்கூ…

    செல்வப் பெருக்கில் பணிவு
    சேர வேண்டும் ஒருவனுக்கு, வறுமையில்
    வேண்டும் பணிந்திடாத் துணிவு…!

    கிராமிய பாணியில்…

    காக்கணும் காக்கணும்
    மானம் காக்கணும்,
    ஒலக வாழ்க்கயில
    மானம் காக்கணும்..

    செல்வம் ஒருத்தங்கிட்ட
    சேரும் போதுல
    ஆட்டம் போடாம
    அடங்கியே இருக்கணும்,
    காசில்லாத
    வறும வந்திட்டா
    எதுக்கும் பணிஞ்சிடாத
    துணிவு வேணும்..

    அதால
    காக்கணும் காக்கணும்
    மானம் காக்கணும்,
    ஒலக வாழ்க்கயில
    மானம் காக்கணும்…!

    Share
  • Madras Day and Sixty Years of Kadhalikka Neramillai

    Madras Day and Sixty Years of Kadhalikka Neramillai

    Baskar Seshadri

    As Part of Madras Day Celebrations A Programme was held today evening at GRT Hotel Chennai. The title was Kadhalikka Neramillai – Sixt Years Later.

    Historian V Sriram of Madras Musings gave the ntroudcrto speech and Auditor Mohanram took over the mike and gave a lovely talk on Sridhar’s Movies with Marina Connections. Right From Kalyana Parisu he dealt with the song sequences and the backdrop of bay of Bengal which had its own fascination in the eyes of Sridhar CV. Scenes from The film with the piece of Comedy of Nagesh and Balaiah was the Highlight.

    Mrs Devasena sridhar with all kinds of reservation and shy narrated her version in her small speech.

    Rajasree shared her experience and attributed her success to Sridhar. Chitralaya Gopu Sir in his inimitable style shared all his association with Sridhar right from the school Days and many piece of Informations Though known a bit was afresh when it came as a speech of Gopu Sir.

    It was gladdening to note many youngsters made it to the occasion. This itself show how successful the movie was and the Team Behind it.

    As Sriram Said This film is remarkable in the history of Indian Cinema. For me it was a well spent evening and i could see some known oldie faces who are addicted of Golden Era of Tamil cinema.

    Thanks GRT for hosting such a event. What more, the Light refreshments made the event more memorable. The film was released in Casino and was a super Duper Hit in 1964.

    (Image Courtesy – Mr Sabesan of MMFA)

    Share
  • விமல் சொக்கநாதன் – ஒரு சகாப்தம்

    விமல் சொக்கநாதன் – ஒரு சகாப்தம்

    சக்தி சக்திதாசன்

    இன்று 24.08.2023 ஈழத்திலே தமிழ் ஊடகத்துறையின் அடையாளமாக விளங்கி லண்டனிலே மெளனமித்த ஒரு ஆளுமையின் சகாப்தம் ஒரு சரித்திரமானது.

    இன்று காலை தெற்கு லண்டனில் உள்ள அடிங்டன் எனும் இடத்திலுள்ள அடிங்டன் பலஸ் எனும் பிரபல்யமான மண்டபத்தில் கார்கள் நிறுத்த முடியாத அளவிற்கு மக்கள் நிறைந்திருந்தார்கள்.

    அன்றும், இன்றும் தங்கள் செவிகளில் கணீரென்று ஒலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான அண்ணன் விமல் சொக்கநாதன் அவர்களின் அகால மரணத்தைத் தொடர்ந்து அவரது இறுதிப் பயண வழிய்னுப்புதலுக்காக.

    ஈழத்தின் வடபுலத்தில் கொக்குவில் எனும் இடத்தில் தம்பு சொக்கநாதன் என்பவருக்கும் விமலாதேவி என்பவருக்கும் 1944 யூன் மாதம் 30ம் தேதி பிறந்தார்.

    கலையாற்றல் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவ்ராகையால் இள வயதிலேயே இலங்கை தமிழ் வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சியிலும், மேடை நாடகங்களிலும் நடித்த அனுபவம் உள்ளவர்.

    இளவயதில் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியில் தனது கல்வியை முடித்து இலங்கை சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக பட்டம் பெற்றார்.

    சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற பத்மா என்பவரை காதலித்து மணமுடித்தார்.

    இவரின் அசலான உச்சரிப்புடன் கூடிய வெண்கலக்குரல், சட்டக்கல்லூரியில் மாணவராக இருந்த போதே இலங்கை தமிழ் ஒலிபரப்பு சேவையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியை ஈட்டிக் கொடுத்தது.

    திருமணமாகிய பின்பு 1975ம் ஆண்டு குடும்ப சகிதமாக இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தார்.

    இங்கிலாந்திலே சட்ட வல்லுனராக பணியாற்றிய இவரின் அளப்பரிய ஆற்றல் பி.பி.ஸி தமிழோசை இவரைத்தேடி தன்னோடு இணைத்துக் கொள்ள வைத்தது.

    ஈழத்து தமிழ் வானொலி சேவையின் மூலம் ஈழத்தமிழர்கள் இதயத்தில் மட்டுமின்றி தமிழக நேயர்களின் நெஞ்சத்திலும் இடம் பிடித்தவரின் குரல் பி.பி.ஸி தமிழோசையின் மூலம் உலகெங்கிலுமுள்ள தமிழர்களின் செவிவழி நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.

    இங்கிலாந்தில் ஆரம்பித்த இவரது எழுத்து வன்மை வானோலிக்கலை மட்டுமின்றி இவர் ஒரு பன்முக வித்தகர் என்பதையும் பறைசாற்றி நின்றது.

    மேடை நாடகம் மட்டுமின்றி ஈழத்து தமிழ்த் திரைப்படமான “நான் உங்கள் தோழன்” எனும் படத்தின் மூலம் திரைப்பட நடிப்புலகத்தில் கால் பதித்தார்.

    லண்டனில் அண்ணன் ஈழநாடு புகழ் ராஜகோபால் அண்ணன் அவர்களின் ” புதினம் ” பத்திரிகையில் ” விமலின் பக்கம் ” எனும் தலைப்பில் மாதந்தோறும் ஐனரஞ்சகமான படைப்புகளின் மூலம் வாசகர்களைக் கவர்ந்தார்.

    ஈழத்து முன்னனி தமிழிதழ் வீரகேசரியின் வாரமலரில் ” இங்கிலாந்திலிருந்து விமல் ” எனும் தலைப்பில் வாரந்தோறும் சுவையான செய்திகளுடன் வலம் வந்தார்.

    2023 ஆகஸ்ட் 1ம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்த அண்ணன் விமலின் கடைசிப் பதிவு வீரகேசரி 2023 ஆகஸ்ட் 6ம் தேதி வெளிவந்த வாரமலரில் இடம் பெற்றிருந்தது.

    இது அண்ணன் விமல் கடைசி மூச்சு இருக்கும்வரை ஒரு கலைஞனாக வாழ்ந்தார் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது.

    அண்ணன் விமல் தனது வானொலி அனுபவங்களைத் திரட்டி அக்கலையின் நுணுக்கங்களை வளரும் வானொலிக் கலையில் ஆர்வமுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் ” வானொலிக்கலை ” எனும் நூலை 2007ம் ஆண்டு சென்னையில் காந்தளகம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.

    அதைத்தொடர்ந்து லண்டன் புதினம் பத்திரிகையில் அவர் எழுதிய விமலின் பக்கங்கள் எனும் படைப்பை அதே பெயரில் புதினம் பத்திரிகை வெளியீடாக சென்னையில் வெளியிட்டார்.

    அதைத் தொடர்ந்து வீரகேசரி வாரமலரில் வெளிவந்த அவர் படைப்புகளை ” லண்டனிலிருந்து விமல் ” எனும் பெயரில் நூலாக்கி சமீபத்தில் ஈழம் சென்று யாழ்நகர், மற்றும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்டு வந்திருந்தார்.

    இதே நூலை வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் கனடா, அவுஸ்திரேலியா நகரிலும் டிசம்பர் 10ம் தேதி லண்டன் நகரிலும் வெளியிட தீர்மானித்திருந்தார்.

    அண்ணன் விமல் அவர்களின் இழப்பு தமிழ் ஊடகத்துறையை உலுக்கியுள்ளது.

    அண்ணனுடன் சமகாலத்தில் இலங்கை தமிழ் ஒலிபரப்புச் சேவையில் மற்றொரு உன்னத ஆளுமையாக திகழ்ந்த இன்றும் தமிழ் ஊடகத்துறையில் புகழேந்திக் கொண்டிருக்கும் அண்ணன் அப்துல் ஹமீது அவர்களின் துயர் பகிர்வை இன்றைய நிகழ்வில் அவர் குரலிலேயே கேட்டபோது அவருள்ளத்து வேதனையை உணரக்கூடியதாக இருந்தது.

    அண்ணன் விமல் அவர்களாலும், அண்ணன் அப்துல் ஹமீது அவர்களாலும் செதுக்கப்பட்டு இன்றும் வெண்கலக்குரலோச்சிக் கொண்டிருக்கும் எஸ்.கே.ராஜன் அவர்களின் துயர் பகிர்வு அண்ணன் விமலின் பல பெருமைகளை அள்ளித்தந்தது.

    அண்ணனுடன் பல நிகழ்வுகளிலும், தொலைபேசியிலும் உரையாடிய தருணங்களை மறக்க முடியாது.

    தான் எத்தனை பெரிய கலைஞனாக இருந்தாலும் அடுத்தவர்களை அணைத்துப் பாராட்டும் அண்ணனின் பண்பின் ஆழத்தை நேரடியாக அனுபவித்தவன் நான்.

    எனது எழுத்துகளைச் செதுக்குவதில் அண்ணன் பங்கெடுத்தார்.

    புதினம் பத்திரிகையில் அண்ணனோடு அவர் எழுதும் காலத்தில் எனக்கும் அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைத்தது எனது பாக்கியம்.

    எனது ஆக்கங்களைப் படித்து தட்டிக் கொடுப்பதில் அண்ணனுக்கு நிகர் அவரேதான்.

    எனது முதலாவது நூலான ” தமிழ்ப்பூங்காவில் வண்ண மலர்கள் ” வெளியீட்டு விழாவில் கலந்து அண்ணன் சிறப்பித்தது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

    வேறோர் முக்கியமான நிகழ்வு இருந்தும் எனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அவ்விழாவுக்கு வருகை தந்த அண்ணனின் பெருந்தன்மைக்கு நான் என்றென்றும் நன்றியுடையவன்.

    எனது சிறுகதைத் தொகுப்பைப் படித்த அண்ணன் விமல் அதிலே ஒரு கதை தன்னை மிகவும் பாதித்தாகக் கூறி அக்கதையை சகோதரி யோகா தில்லைநாதன் அவர்களின் வானொலியில் இசையும், கதையுமாக்கி தானே ஒலிபரப்பியது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லுவேன்.

    இதுவரை அண்ணனின் கலை வாழ்க்கையைப் பார்த்தோம்.

    அதற்கு அப்பால் ஒரு திறமையான சட்டத்தரணியாக, கணவனாக, தந்தையாக, சகோதரனாக,உறவினனாக, நண்பனாக, சமுதாயத் தூணாக அண்ணன் வகித்த பாத்திரங்கள் அத்தனையும் வியந்திடப் பண்ணும்.

    தமிழன்னை தன் புகழ்பாட பல மைந்தர்களை ஈவதுண்டு அவர்களுள் சிலரை அவையில் முன்னிருப்பச் செய்வாள். அத்தகையவர்களில் அண்ணன் விமல் சொக்கநாதன் அவர்கள் முன்னனியில் இருந்தார், இனியும் இருப்பார்.

    அண்ணனின் ஆத்மசாந்திக்காய் அவரின் கும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் நாமும் பிரார்த்திப்போம்.

    ஓம் சாந்தி !

    ஒரு ஆளுமை மிக்க குரல்
    அவசரமாய் மெளனித்துக் கொண்டது !

    அன்றெனது வாலிப வனப்பில்
    ஈழத்து வானலைகளில்
    வெண்கலமாய் ஒலித்தது
    விமல் அண்ணனின் சிருங்கார
    உச்சரிப்புக் கலந்த ஓங்கிய குரல்

    இசையும், கதையுமென
    இதயத்தின் ராகங்களை
    இயல்பாகவே தட்டியெழுப்பி
    வாலிப காலத்து உணர்வுகளில்
    வசந்தமாய்க் கலந்தவர் விமலண்ணன்

    ஈழத்தில் தொடங்கிய குரலோசை
    இங்கிலாந்திலும் தொடர்ந்தது
    இனியதோர் தமிழோசையாய்

    தமிழர் நிகழ்வுகள் சிறக்க
    தயக்கமின்றி ஒலித்தது
    தங்கக்குரல் விமலண்ணா வழியாக
    தாயகச் செய்திகளை விமலண்ணன்
    தந்திடும் வகையே ஒரு தனிவகையே !

    உடலை விட்டுங்கள் ஆன்மா
    உயரப் பறந்தோடியிருக்கலாம்
    தமிழ் உலகில் வாழும்வரை
    தமிழர்கள் வாழும் இடமெல்லாம்
    தங்கத்தமிழன் விமல் சொக்கநாதன்
    தங்களின் குரலும் நினைவுகளும்
    தமிழர் இதயங்களில் நிலைத்திருக்கும்

    போய்வாருங்கள் அண்ணா !
    ஓங்கி ஒலித்தவுங்கள் குரலுக்கும்
    ஓயாமல் எழுதிய உங்கள் விரல்களுக்கும்
    ஓய்வு தேவையென்று தானோ
    அனைவர்க்கும் பொதுவான
    அருளீயும் இறையுங்களை
    தன்னோடு அழைத்துக் கொண்டானோ ?

    ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையுடன்
    அன்பர்கள்  இழப்பினை பகிர்ந்து
    கொள்கிறேன்.

    Share
  • இலக்குமி சிரிப்பாள் இல்லம் சிறக்கும் !

    இலக்குமி சிரிப்பாள் இல்லம் சிறக்கும் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண். ஆஸ்திரேலியா.

    வாழ்வினில் விரதம் வரமாகும்
    மனமது ஒடுங்குதல் நலமாகும்
    தேவைகள் மனத்தில் எழும்போது
    தேவியை நினைப்பார் நிலமீது

    தேவியை நினைப்பார் பலவாறு
    தினமுமே துதிப்பார் பலபேரும்
    சிறப்புடன் எடுப்பார் சிலநாளை
    அதனை அகத்தினில் அமர்த்திடுவார்

    அப்படி அமைவது இவ்விரதம்
    அதுவே அலைமகள் தினமாகும்
    மங்களம் கிடைக்க யாவருமே
    அலைமகள் விரதம் அனுட்டிப்பார்

    மங்கள நாயகி வரலட்சுமி
    வளம்தனைக் கொடுப்பாள் வரலட்சுமி
    எங்களின் வாழ்வு விடிவுறவே
    என்றுமே அவளே துணையாவாள்

    தளர்வினைத் தகர்க்கும் தாயாவாள்
    உளமதை உறுதி ஆக்கிடுவாள்
    நிலமதில் நிம்மதி தந்திடுவாள்
    அளவிலாச் சக்தியும் அவளாவாள்

    செல்வம் என்பது சிறப்பாகும்
    தெய்வம் தந்தால் அருளாகும்
    தெய்வமாம் லட்சுமி பூஜையினை
    சிரத்தையாய்ச் செய்குவார் இந்நாளில்

    அலைமகள் கலைமகள் மலைமகளாய்
    அமைந்தவள் ஆதிசக்தி யாவாள்
    அலைமகள் அருளும் அமைந்திட்டால்
    அனைத்துமே வசமாய் ஆகிடுமே

    வீட்டினில் பெண்கள் விளக்கேற்றி
    மெய்யன்புடனே துதி பாடி
    இலக்குமித் தாயை மனமிருத்தி
    ஏற்றிடு வார்கள் விரதமதை

    காப்புக் கட்டி நின்றிடுவார்
    கையால் குங்கும் தொட்டிடுவார்
    மஞ்சள் வைத்துப் பூஜிப்பார்
    மங்கலம் என்றே மகிழ்ந்திடுவார்

    பெண்களே சிறப்பாய்ப் பிடித்திடுவார்
    பீடுகள் பெருக வேண்டிடுவார்
    கொண்டவர் நலத்தை மனமிருத்தி
    பெண்களே விரதம் நோற்றிடுவார்

    மாங்கல்யம் நிலைக்க வேண்டிடுவார்
    மனமது சிறக்க வேண்டிடுவார்
    வாழ்வெலாம் ஒளிர வேண்டிடுவார்
    வரலட்சுமி பாதம் பணிந்திடுவார்

    அம்மன் ஆலயம் அனைத்திலுமே
    அபிசேகம் ஓமம் இடம்பெறுமே
    அனைத்துப் பெண்களும் ஆலயத்தில்
    அம்மனைத் துதிப்பார் காதலுடன்

    பூஜை நிறைவில் பெண்களெலாம்
    புனித நூலைக் காப்பாக
    கைகளில் கட்டிக் காத்திடுவார்
    கணவர் குடும்பம் நலன்காக்க

    வீடுகள் விளக்கால் ஒளியாகும்
    வெற்றிகள் வரவு விரைவாகும்
    இலக்குமித் தேவி சிரித்திடுவாள்
    இல்லம் அனைத்தும் மங்கலமே

    Share
  • இந்திய நிலா தளஆய்வி சந்திராயின் -3 நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்துள்ளது

    இந்திய நிலா தளஆய்வி சந்திராயின் -3 நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்துள்ளது

    சி. ஜெயபாரதன், கனடா

    2023 ஆகஸ்டு 23 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -3 நிலா ஆய்வி நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்து, அதன் நிலா ஊர்தி கீழிறங்கி, விண்வெளித் தேடல் வரலாற்றில் ஒருபெரும் சாதனை புரிந்துள்ளது. இதுவரை நிலவை நோக்கிச் சென்று வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சைனா முப்பரும் வல்லரசுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்று விட்டது. 2019 இல் சந்திராயன் -2 திட்டம் 95% வெற்றி பெற்று, இறுதியில் பழுது ஏற்பட்டு, நில ஆய்வித் தொடர்பு அறுந்து போனது. ஆயினும் இன்றும் இயங்கிவரும் சந்திராயின் -2 விண்சுற்றி உதவியால், சந்திராயின் -3 நில ஆய்வி மெதுவாகத் தடம் வைத்து, அதிலிருந்து நில ஊர்தி இறங்கி இயங்க ஆரம்பித்துள்ளது.

    இதுவரை எந்த நாடும் துணிந்து செய்யாத தென் துருவ தடவைப்பை, திட்டமிட்டு செய்து காட்டி உள்ளது. மேலும் தென்துருவப் பிரதேசத்தில் பல்வேறு தாதுக்கள், பனிக் குன்றுகள் காணப் படலாம் என்ற எதிர் பார்ப்பும் இருந்துள்ளது.

    அடுத்து இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் குறிக்கோள்கள் என்ன ? மனிதர் இயக்கும் விண்வெளிப் புவிச்சுற்று பயணப் பயிற்சி, நிலவில் குடியேற, சர்வ தேச நிலாச் சுற்று நிலையக் கூட்டமைப்பு. மேலும் சூரியனைச் சுற்றி பருவநிலை, சூழ்வெளி நிலை அறிய ஒரு விண்சிமிழ் இஸ்ரோ [ISRO] [INDIAN SPACE RESEARCH ORGANIZATION] ஏவப் போவதாகவும் திட்டங்கள் உள்ளன.

    image.png

    A series of images sent by Chandrayaan-3 show the craters on the lunar surface getting larger and larger as the spacecraft gets closer

    image.png
    Chandn -3 Rover moves out to explore the Moon’s surface near the South Pole area

    image.png

    image.png

    Reference
    1. https://www.livemint.com/news/how-india-pulled-off-its-frugal-moon-landing-11692982290717.html
    2. https://en.wikipedia.org/wiki/Chandrayaan-3#:~:text=Chandrayaan-3%20Integrated%20Module%20in%20a%20cleanroom%20%20,%20%2057320%20%2026%20more%20rows%20
    3.  https://en.wikipedia.org/wiki/File:Chandrayaan-3_Integrated_Module_in_clean-room_02.webp

    Share