குறளின் கதிர்களாய்…(466)

செண்பக ஜெகதீசன்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டு முயர்வு.
-திருக்குறள் – 963 (மானம்)
புதுக் கவிதையில்…
பொருட் செல்வம்
பெருகும் காலத்தில்
புவியில் ஒருவனுக்குப்
பணிவு என்னும்
பண்பு வேண்டும்,
செல்வம் குறைந்து
சுருங்கும் வறுமையில்
பணிந்து போகாத
உயர்வு வேண்டும்…!
குறும்பாவில்…
செல்வப் பெருக்கில் ஒருவனுக்கு
வேண்டிது பணிவு, வறுமை வந்தால்
வேண்டும் பணிந்திடா உயர்வு…!
மரபுக் கவிதையில்…
செல்வம் வந்து வாழ்வினிலே
சேரும் கால மதுதனிலே
நல்ல நெறியாம் பணிவதனை
நன்றா யொருவன் பேணியதில்
வல்லோ னாக இருந்திடலை
வழக்க மாகக் கொளவேண்டும்,
இல்லா வறுமை தனில்பணியா
இயல்பே கொள்ள வேண்டுமாமே…!
லிமரைக்கூ…
செல்வப் பெருக்கில் பணிவு
சேர வேண்டும் ஒருவனுக்கு, வறுமையில்
வேண்டும் பணிந்திடாத் துணிவு…!
கிராமிய பாணியில்…
காக்கணும் காக்கணும்
மானம் காக்கணும்,
ஒலக வாழ்க்கயில
மானம் காக்கணும்..
செல்வம் ஒருத்தங்கிட்ட
சேரும் போதுல
ஆட்டம் போடாம
அடங்கியே இருக்கணும்,
காசில்லாத
வறும வந்திட்டா
எதுக்கும் பணிஞ்சிடாத
துணிவு வேணும்..
அதால
காக்கணும் காக்கணும்
மானம் காக்கணும்,
ஒலக வாழ்க்கயில
மானம் காக்கணும்…!