Blog

  • திருமால் திருப்புகழ் (148)

     

     கிரேசி மோகன்

    Bhagavatha: Akrura Darshanam Keshav
    Bhagavatha: Akrura Darshanam Keshav

    “கரமொடு களவாய் பிடிபட உனதாய்
    உரலிட இழுதா மோதரனே
    மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர்
    மறுவுல கேத்திடும் ஆதரவே
    புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை
    வெளியுற வைத்திடும் யவ்வனனே
    சரியென தப்பென அறியும்ம னத்தினை
    அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    Bhagavatha - Krishna steals the garments of the gopis Keshav
    Bhagavatha – Krishna steals the garments of the gopis Keshav

    “மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை
    பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
    துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை
    துருபதைக் எட்டிட பட்டதனை
    புகுவிட பூதனை விடவுடல் வேதனை
    முலையுறி மாமது சூதனனே
    புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட
    வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    படங்களுக்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

     

    Share
  • திருமால் திருப்புகழ் (147)

     

    கிரேசி மோகன்

    Bhagavatha -- Sudama - Keshav
    Bhagavatha — Sudama – Keshav

    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவரிஷி கேசனை வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    Bhagavatha: The asura Keshi is killed.  Keshav
    Bhagavatha: The asura Keshi is killed. Keshav

    “கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை
    தசமுக பூஷனை இம்சைதரும்
    இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன்
    துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
    குறைசிசு பாலனை மதுகைட பாணனை
    வதம்புரி மாலனை நம்பிடுவாய்
    பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை
    பதுமம்கொள் நாபனை கும்பிடுவாய்”….(10)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (146)

     

    கிரேசி மோகன்

    68 Bhagavatha - Santhanagopalam part II
    “சிறைவசு தேவகி கருவச மாகிட
    இரவினில் ஏகினன் கோகுலமே
    கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன்
    தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
    மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும்
    குடுமியின் உச்சமும் பூமணமாய்
    குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற
    களபலி சேய்வளர் வாமனனே ….(7)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    “இலைமரு தாணியின் மணமுறை மேனியள்
    திருமகள் பூணிடும் சீதரனே
    அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி
    மலைசிவ சங்கரி சோதரனே
    அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும்
    சிலைபரு தண்டமும் கண்டவுடன்
    விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும்
    விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

     

     

    Share
  • வாலி நீ போட்ட வேலி

     

    எம்.ஜெயராமசர்மா ….. மெல்பேண் 

    vaali1_1521227g

    கண்ணதாசன் பாடல் கேட்டு
    கையைக்கட்டி நின்ற வாலி
    கட்டவிழ்த்து வந்து நின்று
    கவிதைமழை பொழிந்து நின்றார்

    வாலி பாடி நின்றபோது
    போலிஅல்ல என்று சொல்லி
    தோழ் கொடுத்து நின்றவரே
    தோழமையில் கண்ண தாசன்

    கண்ண தாசன் பாடலோடு
    கைகுலுக்கி வாலி பாடல்
    வண்ணமாக வந்த போதும்
    வைரமாக நின்ற தங்கே

    பக்தியோடு பாடி நின்றார்
    பருவத்தார்க்கும் பாடி நின்றார்
    நித்தமே நினிவில் நிற்க
    தத்துவமும் பாடி வைத்தார்

    வெற்றிலை போட்ட வாலி
    வெற்றிகள் பலதைப் பெற்றார்
    நெற்றியில் பொட்டு இன்றி
    நின்றதே இல்லை நாளும்

    மெட்டுக்காய் எழுதி நின்றார்
    துட்டுக்காய் எழுதி நின்றார்
    பொட்டுவைத்த நெற்றி ஓடு
    பொறிபறக்க எழுதி நின்றார்

    முருகன் பாடல் பாடிநின்று
    முயன்றுவந்த வாலி நாளும்
    அருமையான பாடல் தந்து
    அமர்ந்துகொண்டார் உள்ளம் எல்லாம்

    தெருவெலாம் வாலி பாடல்
    தித்திப்பாய் ஒலிக்கும் போது
    பெரு மனதோடு மக்கள்
    பேணியே ஏற்று நின்றார்

    வாலிநீ போட்ட வேலி
    வரலாற்றில் நிற்கும் ஐயா
    போலிநீ இல்லை ஐயா
    பொங்கிடும் தமிழின் ஊற்று
    ஊழியுன் பாட்டு நிற்கும்
    உலகுளோர் மனதில் நிற்பாய்
    வாலிபக் கவிஞ்ஞரே நீ
    வையத்தில் என்றும் வாழ்வாய் !

     

    Share
  • அழகுவேலன் விருத்தம்

    சு.ரவி
    Dear all,

    https://archive.org/details/SuraviMurugarSongs

    Click on the above link to listen to 2 songs on Lord Murugan written by me & sung by Sri SPB Musi Direction: Sri. Ramesh Vinayagam

    Scroll below for a line drawings n an acrylic on paper by me.
    கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை அவர்களின் அழகம்மை ஆசிரியவிருத்தம் ஏற்படுத்திய தாக்கத்தில் என்னைப் பள்ளிநாட்களில் பெரிதும் ஆட்கொண்ட திருமயிலைத் தலத்துக் கபாலீஸ்வரர் கோயிலில் குடிகொண்ட சிங்காரவேலவன் மீது இயற்றிய அஷ்டகம்.

    கவிமணி அவர்கள்

    “மார்த்தாண்ட வேழம் வழுவேதும் வாராமல்
    காத்தாண்டு கொள்ளக் கடன்”
    என்று காப்பு வெண்பா எழுதியதுபோல்

    இக்கவிதைக்குக் காப்பாக மயிலை கபாலீஸ்வரத்தில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானைக்

    “கூத்தாடும் பிள்ளையே குற்றம் குறையின்றிக்
    காத்தாண்டு கொள்ளக் கடன்.

    என்று அழைத்தேன்.
    கேட்க, படிக்க,பார்க்க,ரசிக்க.

    3D50DF05-1CBA-4315-BEC7-63A6564987AC

    அழகுவேலன் விருத்தம்

    மங்காப் புகழுடையோன் மன்னுமயில் ஏறிடுவான்

    சிங்கார வேலவனின் சீருரைக்க- எங்கோவாம்

    கூத்தாடும் பிள்ளையே குற்றம் குறையின்றிக்

    காத்தாண்டு கொள்ளக் கடன்.

     

    பார்தன்னில் சீர்தங்கும் ஊரெங்கள் ஊர்தன்னில்

    பாலனாய்த் திகழ்ந்திருப்போய்!

    பால்சிந்தும் முகமோடு வேல்கொண்ட கரமோடு

    பக்தரைக் காத்து நிற்போய்!

    தார்சூடும் மறலியைத் தன் தொண்டனுக்காகத்

    தாளெற்று தேவனவனும்

    தாழ்சடை தான்புரள ஆழ்கங்கையும் அசைய

    தன் தலை தாழ்த்திநிற்க

    கார்வண்ணன் உந்தியிற் றானின்ற நான்முகன்

    கைகட்டிச் சிறையிருக்க

    வேதங்கள் நான்குக்கும் ஆதாரஒலியினை

    விளக்கிடும் தேவதேவா!

    நீர்வளம், நிலவளம், சோர்விலா மனவளம்

    நிறைந்திடும் தேவபுரியாம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (1)
    எந்தனுளம் தன்னிலே சொந்தமும் பந்தமும்

    எந்நாளும் எண்ணிவிட்டேன்

    சிற்றின்ப உலகிலே மற்றின்பம் ஒன்றையே

    சிந்தையிற் கொண்டுவிட்டேன்

    உந்தனடி பற்றிவரும் சந்தமிகு வாழ்வினை

    உணரா திருந்துவிட்டேன்

    உழலுமாம் மனதிலே அழுகையை அன்றிவே

    றொன்றையும் இன்றுகாணேன்

    கந்தனே வள்ளிக்கு கந்திடும் காந்தனே

    கதறினேன், காத்தருள்வாய்!

    கடைசியில் காட்டினை அடைகின்ற போதிலே

    கண்விழித் தேனருள்வாய்!

    செந்தமிழ் தன்னிலே விந்தைபல செய்திடும்

    பாவலர் நிறைந்தபுரியாம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (2)

    முக்திக்கு வழிதரும் பக்திக்கு வித்திட்டு

    வாழுமோர் வாழ்வுமறியேன்

    முன்வினைப் பயனிங்கு என்வினை மோதிடும்

    பின்வினை தன்னையறியேன்!

    சக்தியை முத்திட்டு சரவணப் பொய்கையில்

    சதிராடு கந்தவேளே

    சற்றேனும் என்மனதை வற்றாத கருணையால்

    சரவணப் பொய்கையாக்கு

    மெத்தக்க றுத்தவள்கு றத்திக்கு மாலையிடும்

    மேலானச் வேலவா என்

    சித்தத்தி னில்என்றும் சித்திரம் போல்நின்ற

    சிறுவனே, கார்த்திகேயா

    தித்திக்கும் முத்தமிழும் எத்திக்கும் தான்பரவ

    வைத்த்சீர் கொண்டபுரியாம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (3)

    பொறியியல் தன்னிலே அறிவினைப் பெற்றுநான்

    பட்டமும் சூடுவேனோ

    பொருந்தாத வாழ்விலே வருந்தியே வாழ்வினைப்

    பயனின்றி வாழுவேனோ

    புரியாத தாகவே தெரியாது நின்றிடும்

    புத்தியும்; கற்றகல்வி

    ‘புவனத்தி லே சற்று கவனம் இருந்திடிற்

    புரியாத தேதுமில்லை

    அறிவாய்’ எனப் புகலும்; எரிவாயில் வீழுமோர்

    அன்றிலின் நிலையில் நானும்

    இவ்வுலக வாழ்வுக்கும் அவ்வுலக அருளுக்கும்

    இடையிலே ஆடுகின்றேன்

    மறி,சூலம் கொண்டகா பாலியைக் கற்பகம்

    மயிலுருக் கொண்டன்புசெய்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (4)

    தான்பெற்ற செல்வனைத் தாயுமொரு நாளுமே

    ஏன்பெற்றோம் என்பதில்லை

    தண்ணீரும் தன்மீது நின்றாடும் தாமரைப்

    பூவினைத் தவிர்ப்பதில்லை

    வானுற்ற மதியமும் மறுவுற்ற போதிலும்

    வாஞ்சையாய் ஏற்றுவிட்டான்

    வணங்காத சூரனும் அணங்கோடு நீயேற

    வண்ணமயில் ஆகிவிட்டான்

    கானுற்ற முனிவனாய்க் காவியும் சடையுமாய்த்

    தத்துவம் கண்டதில்லை

    நான்செய்த குற்றமும் தேனொத்த சொல்லினாய்

    நீயெண்ணலாகுமோ சொல்

    மீனொத்த கண்ணினாள் மானேந்தும் ஐயனை

    மயிலுருக் கொண்டன்புசெய்

    பொன்மவிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (5)

    10ADC334-6BFD-4129-8EDA-98BA93A22C4F

    வில்லுக் கருச்சுனன் மல்லுக்கு நிற்கையில்

    வீசிடும் சாட்டைகொண்டு

    பாதையைக் காட்டவே கீதையைச் சொல்லிடும்

    பரமனின் செல்வமருகா!

    சொல்லுக் ககத்தியன் கேட்கமுத் தமிழினைத்

    தந்திடும் வெற்றிவேலா

    குன்றத்தி லேநின்று குன்றாத அருள்பொழியும்

    குமரனே கார்த்திகேயா!

    பல்லுக்கு ஆலுண்டு சொல்லுக்கு நாலுண்டு

    பக்தர்க்கு வேலுண்டுகாண்!

    அஞ்சற்க! என்றுந்தன் கஞ்சக் கரங்கொண்டு

    நெஞ்சுக்கு நீயருள்தா

    முல்லைப் பூ நாணிட முறுவலைக் காட்டிடும்

    முழுமுதற் கடவுளே,இப்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (6)

    முருகனே உன்னிடம் நெருங்கியே ஓரடி

    உன்னன்பர் வந்துவிட்டால்

    முன்னின்று வந்துநீ இன்னருள் தந்திடும்

    தன்மையோன் என்றுரைப்பார்

    உருகிடும் உள்ளமும், பெருகியே வெள்ளமாய்

    ஓடுமென் விழியின் நீரும்

    உந்தன் உளத்திலே கந்தனே உண்மையாய்

    உறைக்கவே இல்லையோ சொல்!

    இரும்பினால் ஆனதோ, இறுகிடும் பாறையால்

    ஆனதோ உந்தனுள்ளம்?

    இங்குநான் பட்டிடும் இன்னலும் அங்குனக்(கு)

    இன்பமாய் ஆகுமோசொல்!

    வருமலை மோதிடும் கரையினில் விளையாடும்

    வலைஞர்கள் வாழுமூராம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (7)

    004A2242-B27F-4816-BD13-146D13E1E34D

    பன்னிருகை வேலனே, பரமனவன் பாலனே,

    பழகுதமிழ்ச் சீலனே என்

    பழவினைகள் யாவையும் அழகொழுகு தேவனே

    பார்த்துநீ தீர்த்தருள்வாய்

    என்னிருகை கூப்பியே உன்னருளை வேண்டினேன்

    எழிலரச னேயருள்வாய்!

    எப்பொருளும் எண்ணாது மெய்ப்பொருள் உன்னையே

    ஏத்துகின் றேனிறைவா!

    சின்னக் குழந்தையாய் சீரான நடையிட்டு

    சிரித்துநீ ஓடிவாராய்

    மங்கிடும் மாலையில் எங்குமிருள் சூழ்கையில்

    மயக்கியே அன்புதாராய்!

    சென்னையாம் நகரிலே அன்னையும், பின்னையும்

    சேர்ந்தருள் செய்தபுரியாம்

    பொன்மயிலை யின்வாழும் என்னரிய செல்வமே

    பொலியு சிங்காரவேலே! (8)

     

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில் ? –15

    –சு.கோதண்டராமன்

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 14

    அக்னியின் சிறப்புகள்

    agni

    விண்ணில் உள்ள சூரியனும் அக்னியே. மண்ணில் உண்டாகும் தீயும் அக்னி தான். அக்னி தூய்மையானவர், பிறரையும் தூய்மைப்படுத்துபவர், புற இருளையும் அக இருளையும் விரட்டுபவர். புத்தியைத் தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துபவர். வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறார். உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்னி அணுகுவதற்கு எளியவர். வஞ்சனை இல்லாதவர், பகைக்கும் நட்புக்கும் அப்பாற்பட்டவர், பக்குவம் இல்லாதவர்களிடத்தும் பரிவு காட்டுபவர், அனைத்து தேவர்களுக்கும் அவரே அவி உணவைச் சுமந்து செல்கிறார். மர்த்யனை ரிஷியாக ஆக்குபவர் என்ற பெயர் அக்னிக்கு அளிக்கப்படுகிறது.

    அக்னியின் தோற்றம்
    அக்னி எப்பொழுது தோன்றியவர்? யாருக்குத் தெரியும்? அவர் மிகப் பழமையானவர் என்பது மட்டும் தான் ரிஷிகளுக்குத் தெரிகிறது. அவர் எவ்வாறு தோன்றினார் என்பதை ஊகித்து உணர்த்துகிறார்கள். இது பல வகை அக்னிக்கும் பொருத்தமாக அமைகிறது.

    “முதலில் அக்னி விண்ணிலிருந்தும், இரண்டாவதாக நம்மிடமிருந்தும், மூன்றாவதாக நீரிலிருந்தும் அக்னி தோன்றினார்”[1] எனப் பேசுகின்றனர்.

    விண்ணில் உள்ள சூரியனும் அக்னியே. மண்ணில் உண்டாகும் தீயும் அக்னி தான். எனவே விண்ணும் மண்ணும் அவருடைய பெற்றோர்கள் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, விண்ணைத் தந்தையாகவும் மண்ணைத் தாயாகவும் சொல்வது வேத வழக்கம். இதற்கு மாறாக, இரண்டையும் சேர்த்து ரோதஸீ என்ற பெயரில் சொல்லும்போது இரு பெண்கள் என்று சொல்வதும் வேதத்தில் உண்டு. எனவே அக்னி இரண்டு தாய்களின் மகன் என்று சொல்லப்படுகிறார்.

    இன்னொரு வகையிலும் அவருக்கு இந்தப் பெயர் பொருந்துகிறது. இரண்டு அரணிக் குச்சிகளால் அவர் உருவாக்கப்படுவதாலும் இரு தாய்மார்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

    மேலும், பகல் இரவு இரண்டும் அவருக்குத் தாய்கள் போல இருப்பதாலும் அவர் இரு தாய்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

    பண்புச் சிறப்புகள்
    அக்னி தூய்மையானவர், பிறரையும் தூய்மைப்படுத்துபவர், கட்டுப்பாடானவர், புனிதமானவர். நம் வாழ்வின் ஊற்று. தவறே செய்யாதவர்.

    மாயா எனப்படும் அதிசய சக்தி, ஆச்சரியமான செயல் திறன், துணிச்சல், வேகம், வலிமை கொண்டவர். வ்ருஷபர் (காளை) என்றும் வலிமையின் மகன் எனப் பொருள் தரும் ஸஹஸஸ் ஸூனு, ஊர்ஜோ நபாத் ஆகிய அடைமொழிகளாலும் போற்றப்படுகிறார். போர்க்களங்களில் முதலில் நிற்பவர், விருத்திரனையும் 99 நகரங்களையும் அழித்தவர். ராட்சசர்களையும் பகைவர்களையும் அழிப்பவர், போட்டி இல்லாதவர்.

    குழப்பமில்லாத தெளிந்த அறிவைச் செல்வமாகக் கொண்டவர், பிறக்கும்போதே எல்லாம் அறிந்தவர், உலகில் பிறந்துள்ள அனைத்தையும் அறிந்தவர் (ஜாதவேதஸ்), வருங்காலம் உணர்ந்தவர் (கவி), வித்வான், விப்ர (ரிஷி), கவிக்ரது, க்ரதுவித் (உலகைத் தூண்டுபவர்), அறிவைத் தூண்டுபவர் என்று போற்றப்படுகிறார். புற இருளையும் அக இருளையும் விரட்டுபவர். புத்தியைத் தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துபவர். இவருடைய திறமையால் கவிகள் பெருஞ் செயல்களைத் தனித்து நின்று செய்ய முடிகிறது.

    மக்களின் தொண்டர்
    பொதுவாக எல்லா வீடுகளுக்கும் அவரே தலைவர். குறிப்பாக, தேவர்களைப் போற்றும் இல்லங்களின் தலைவர். மக்களை ஒளியுள்ளவர்களாகவும் நல்ல வாழ்க்கை வாழ்பவர்களாகவும் ஆக்குகிறார்.

    மக்கள் இனத்துக்கு விளக்காக மனு அவரை நிலைநாட்டினார், மனிதர்க்கு ஏற்படும் துன்பங்களை, அது தேவர்களால் கொடுக்கப்பட்டதாக இருந்தாலும், மனிதரால் ஏற்பட்டதாக இருந்தாலும், போக்க வல்லவர். வணங்கினோரைக்  காப்பவர். தாமதமின்றி வரம் அருள்பவர். சுபங்களின் நாயகர். நிகழ் காலத்துக்கும் வருங்காலத்துக்கும் நாயகர்.

    வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறார். உணவு, ஆரோக்யம், புஷ்டி, வெல்ல முடியாத வலிமை, மகிழ்ச்சி, புத்திரர்கள், புகழ், அமரத்தன்மை, வருணன் தரும் தண்டனையிலிருந்து பாதுகாப்பு, போரில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை அவர் தரும் கொடைகள். வீட்டின் செல்வத்தைக் காக்கிறார்.

    தலைமை
    ரயி, வஸு ஆகிய உயர் செல்வத்திற்கும் அவரே அதிபதி. மானிடர் வாழும் நாட்டின் அரசர். மலைகளுக்கும் நீர் நிலைகளுக்கும், செடி கொடிகளுக்கும் அரசர். ஸம்ராட் (பேரரசன்) என்றும் அழைக்கப்படுகிறார். பல வீரர்களைப் பெற்றிருப்பவர். தேவர்களும் மனிதரும் அவர் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றனர். அவரே விதிப்பவர்.

    எளிமை
    இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்னி அணுகுவதற்கு எளியவர். வஞ்சனை இல்லாதவர், பகைக்கும் நட்புக்கும் அப்பாற்பட்டவர், பக்குவம் இல்லாதவர்களிடத்தும் பரிவு காட்டுபவர், காட்சிக்கு இனியர், மகிழ்ச்சியுடன் இருப்பவர், எல்லோராலும் விரும்பப்படுபவர். ரிஷி அக்னியிடம் உரிமையோடு கொஞ்சுகிறார், பாருங்கள்.

    நான் உன் இடத்தில்- அக்னியாக- இருந்தால் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன். செல்வத்தில் திளைக்கிறாயே, உன் அருளில் நாங்களும் பங்கு கொள்கிறோமே[2].

    பிதிரரும் தீயும்
    உயிர் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல. இறந்தவர்களுக்கும் உதவுபவர் அக்னி. பிரேதங்களை அவரிடம் ஒப்படைக்கிறோம். பெற்ற தாய் தந்தையரை அக்னியில் இடும்போது ரிஷியின் மனம் கஷ்டப்படுகிறது. “அக்னியே, இந்த உடலை எரிக்காதே, பக்குவப்படுத்தி பித்ருக்களுடன் சேர்த்து விடு. உன் பங்குக்கான ஆட்டை எரித்து உண்க”[3] என்று வேண்டுகிறார். அவர் நமது பித்ருக்களைக் காப்பாற்றுவதாகவும், பித்ருக்களின் உதவிக்கு வருவதாகவும் போற்றுகிறார்.

    அக்னியும் யக்ஞமும்
    இவரே யாகத்தின் தலைவர். ஹோதா, அத்வர்யு முதலான 8 வகை யக்ஞ வேலைகளையும் செய்கிறார். குறிப்பாக, தேவர்களை அழைக்கும் ஹோதா என்ற பணியை மிகுதியாகச் செய்கிறார். ஹவிஸ்ஸாலும் ஸ்தோத்திரங்களாலும் செய்யப்படும் யக்ஞத்தால் வளர்பவர் அக்னி. மேதஸ் (கொழுப்பு), நெய் இவற்றால் மகிழ்கிறார். தேவர்களையும் மனிதர்களையும் தூண்டி புத்தியினால் யக்ஞத்தை நடத்தச் செய்கிறார். புரோகிதர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரே யக்ஞத்தின் கேது (அடையாளம்), யக்ஞஸ்ய வித்வான் (வேள்வியை நன்கு அறிந்தவர்).

    அக்னியும் தேவர்களும்    
    அக்னி இயற்கையிலேயே தேவன், அதாவது ஒளியுடன் கூடியவர். தேவர்களுக்குப் போரில் ஆறுதல் கூறுகிறார். தேவர்களின் எதிரியான சம்பரனைக் கிழித்து, அவனது அரண்களை உடைத்தவர். வருணன், மித்ரன், அர்யமான் ஆகியோர் இவரால் வலிமையூட்டப்படுகின்றனர். தேவர்களின் நண்பன், தேவர்களின் தந்தை, தேவர்களின் மகன், தேவர்களின் கொடி.

    அனைத்து தேவர்களுக்கும் அவரே அவி உணவைச் சுமந்து செல்கிறார். முப்பத்து மூன்று தேவர்களையும் வேள்விக்கு அழைத்து வருகிறார். தேவர்களோடு தர்ப்பையில் அமர்கிறார். வாயில் நெய்க் கரண்டி கொண்டவர் என்றும் தேவர்களின் நாக்கு என்றும் போற்றப்படுகிறார். நெய்யும் தேனும் உண்பதால் இனிய நாக்கு உடையவர். தேவர்கள் அமரத்வம் அடைந்தது அக்னியால் தான்[4].

    மக்களுக்காக, தேவர்களைப் பூஜிக்கிறார். தேவர்களிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார். மூரதேவர் எனப்பட்ட போலிக் கடவுளரின் பக்தர்களை அழிக்கிறார். தன் பக்தரைக் காக்கிறார். தேவரை வணங்காதாரைத் தன் கொம்புகளால் கிழிக்கிறார்.

    அக்னி ஸ்வர்த்ருச (ஸ்வர்க்கத்தைப் பார்ப்பவர்), திவ: கேது (ஸ்வர்க்கத்தின் அடையாளம்) என்று போற்றப்படுகிறார். விண்ணின் தலையில் இருப்பவர் (திவ: மூர்தா). உலகம் முழுமையும் பார்ப்பவர் விச்வசர்ஷணி. மர்த்யனாகப் பிறக்கும் மனிதன் நரன், ரிஷி, மகோனன் என்று படிப்படியாக உயர்ந்து சூரி ஆவதை முன்பு பார்த்தோம். மர்த்யனை ரிஷியாக ஆக்குபவர் என்ற பெயர் அக்னிக்கு அளிக்கப்படுகிறது.

    சூரி நிலையிலிருந்து தேவ நிலைக்கு அழைத்துச் செல்வது அக்னி தான். இரண்டாவது (தேவப்) பிறப்புக்கு ஆசைப்படும் சூரிக்கு மகிழ்ச்சி அளிக்கிறாய் என்கிறது ஒரு மந்திரம்[5].

    ருதத்தின் நாயகன்
    ஒவ்வொரு இயற்கைச் சக்திக்கும் உள்ள ஒரு தனி நியதி ருதம் என்றும் விரதம் என்றும் வேதத்தில் கூறப்படுகிறது. அக்னி இந்த ருதத்தை மீறாமல் தன் தனித் தன்மையோடு விளங்குவதை, ருதத்தில் தோன்றியவர், ருதத்தின் மடியில் கிடப்பவர், அதிலிருந்து என்றும் தவறாதவர் என்று போற்றுகிறார்கள் ரிஷிகள். “ருதத்தின் காந்தர்வப் பாதையில் நெய்யில் நிலை பெற்றிருப்பது அக்னியின் மேய்ச்சல் நிலம்” என்கிறது ஒரு மந்திரம். அக்னியின் குதிரைகள் ருதத்தின் கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறது மற்றொன்று.

    ருதத்தின் கண்ணாகவும் காப்பானாகவும் விளங்குகிறார் அக்னி. தனது தீர்க்க திருஷ்டியால் ருதம் மீறப்படாமல் காக்கிறார். ருதப்படி (நியதிப்படி) ருதுக்களைக் (பருவகாலங்களை) காப்பார். ருதத்தைக் காக்க வரும்போது அவரே வருணனாகிறார். இயற்கை நியதியை அழிக்கும் அரக்கனை அக்னி அழிக்கிறார். அவர் ஸ்வதாவான், அதாவது இயற்கை நியதியின் சமநிலைப்படுத்தும் தன்மை.

    நற்பண்புகள் பல கொண்டு, மக்களுக்குப் பல வகையிலும் உதவி புரிவதால் வழிபடத் தகுந்தவர். வழிபாட்டின் போது கூறப்படும் தோத்திரங்களை அக்னி விரும்பி ரசிக்கிறார். புகழுரைகள் அவரை வளர்க்கின்றன.

    குறிப்புகள்:
    1     10.45.1.
    2    8.44.23, 8.44.24
    3    10.16.1,4
    4     5.3.4.
    5     1.31.7.

    படம் உதவிக்கு நன்றி: http://thishollowearth.wordpress.com/2010/11/15/god-of-the-week-agni/

    Share
  • தலைவனாய் உயர்வாய் நீயும்!

    – எம் ஜெயராமசர்மா

    உறவினைப் பேண வேண்டும்                          leader
    உள்ளத்தில் துறவு வேண்டும்
    அறவழி பேண வேண்டும்
    அகமெலாம் அமைதி  வேண்டும்
    சினமதை ஒழிக்க வேண்டும்
    சிந்தையை ஒடுக்க வேண்டும்
    வருவதை ஏற்க வேண்டும்
    வாழ்க்கையே இனிக்கும் அப்போ!

    ஆசைகள் எழவே வேண்டும்
    அவைநன்மை பயக்க வேண்டும்
    மோசடி தவிர்க்க வேண்டும்
    முதுமொழி ஏற்க வேண்டும்
    தெருதனில் நடக்கும் போதும்
    தீயதை ஒதுக்க வேண்டும்
    அருகிலே எந்த நாளும்
    அன்பையே இருத்த வேண்டும்

    உருஎலாம் இறைவனாகக்
    கருதிநீ வாழ வேண்டும்
    பெருமைகள் உன்னைச் சேரும்
    பெரும்பகை ஓடிப் போகும்
    ஊரெலாம் உறவாய்ப் பாரு
    உவப்புடன் உதவி நில்லு
    பாரெலாம் உள்ளார் உந்தன்
    பக்கமே வந்து நிற்பார்

    மனதினை மாற்றிப் பாரு
    மன்னிப்பை நல்கிப் பாரு
    தனிமையில் உணர்ந்து பாரு
    தலைவனாய் உயர்வாய் நீயும்!

    Share
  • அப்பரும் நானும்.

    மாதவ. பூவராக மூர்த்தி

    நான் பகுத்தறிவாளனும் இல்லை நாத்திக வாதியும் இல்லை. கடவுள் நம்பிக்கை கொண்டவன். சைவ வைணவ சமயங்களின் பால் ஈடுபாடு கொண்டவன். அப்பர் ஸ்வாமிகளின் பாடல் களைப் பாடியும் படித்தும் பரவசமானவன் தான். ஆனால் இந்த தலைப்பில் என்னுடன் இருக்கும் அப்பர் அவரல்லர். அஃறிணைப் பொருள். ரயில் பயணத்தின் போது நம்மை மிகவும் சிரமத்தில் ஆழ்த்தும் படுக்கை வசதி.அப்பர் பெர்த் .

    29train13

    இரவுப் பயணத்தில் இரயிலில் தூங்கும் வசதி பெட்டிகள் குளிர் பதனப் பெட்டிகளில் படுக்கை வசதியும் முன் பதிவும் வந்துவிட்டது. அதிலும் “தட்கல்” என்ற இரண்டு நாட்களுக்கு முன் கூட பயணப்பதிவு செய்யக் கூடிய வசதியும் வந்து விட்டது.

    ஆனால் படுக்கை வசதி என்று பெயரே தவிர அதில் வசதி என்பது மிகக் குறைவுதான். மூன்று அடுக்கு வசதி உள்ள பெட்டிகளில் நம் கஷ்டங்கள் மிக அதிகம். அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கும். நான் இப்போது சீனியர் சிட்டிசன். ரயில் பயணங்களில் எனக்கு அரசாங்கம்

    சலுகை கட்டணத்திலும் கொடுக்கிறது. படுக்கை வசதியிலும் தனியாக லோயர் பெர்த் கோட்டா என்று கொடுக்கப் படுகிறது.

    இதையும் மீறி இந்த இணைய தள கணினிப் பதிவில் என் பயணம் தீர்மானிக்கும் போது தட்கலில், ஊருக்குப் போக டிக்கட் கிடைத்தால் போதுமென்ற நிலையில் வேகமாக முயன்று இருக்கை வாங்கி விடுவான் என் மகன். அது கடைசியில் அப்பர் பெர்த்தாக இருக்கும். பயண நாளில் நம் உடன் வரும் பயணிகளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற அசட்டு நம்பிக்கையில் புறப்பட்டு விடுவேன்.

    பொதுவாக ரயில் நிலையங்களில் நடைமேடையில் வண்டி வந்ததும் நம் பதிவு செய்த இருக்கை இருக்கும் பெட்டியில் பயணிகள் பட்டியல் ஒட்டிய பிறகு அதைப் பார்த்து நம் பெயர் இருக்கிறதா என்று ஊர்ஜிதம் செய்து கொண்ட பின் , இந்த மாதிரி அப்பர் நாட்களில் என்னுடன் பயணிப்போர் முழு விபரமும் தெரிந்து கொள்ள எனக்கு ஆசை வந்து விடும். காரணம் நம்முடன் பயணிப்பவர்களில் யாரிடம் வேண்டுகோள் விடுத்து அவரை அந்த உயர்ந்த பதவிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்ய வேண்டுமல்லவா. அந்த பட்டியலிலேயே நம் தலைவிதி சில சமயம் நமக்கு அப்பர் பெர்த் தான் என்று நிர்ணயிக்கப்பட்டுவிடும். நம்மோடு பயணம் செய்வோர் நம்மை சேர்த்து ஆறு பேர் என்றால் அதில் இன்னொரு அப்பர் பெர்த் இளங்கோவன் ஆண் வயது 25 என்று இருக்கும்

    மற்ற நாலு பேரில் ஒரு பெண்மணி 45 வயதிலும் ஒரு குழந்தை 8 வயதிலும் இன்னொரு தம்பதி ரங்கன் 72 அலமேலு 65 லோயர் பெர்த் என்றும் இருக்கும் . இதில் யாரையும் மேலே அனுப்ப முடியாது. அந்த ஆண்டவன் மனசு வைத்தால் தான் முடியும்.

    மனதை கல்லாக்கிக் கொண்டு அப்பர் பெர்த்துடனான நம் உறவை இந்த இரவு சுமுகமாக கழிக்க தேவாரம் ஒன்று பாட வேண்டியது தான். காலச் சக்கரத்தின் பின்னோக்கிப் போனால் என் வாலிப வயதில் எனக்கு பயணங்களில் எனக்கு வாய்த்த லோயர் மிடில் பெர்த்துகளை நான் அவர்கள் கேட்டும் பல சமயங்களில் அவர் கேட்காமலும் மனமுவந்து அவர்களுக்கு ஈந்திருக்கிறேன்.

    ரயில் விதிகளில் இரவு ஓன்பது மணி முதல் காலை 6 மணி வரை படுக்கை வசதி உபயோகப் படுத்த வழி வகை இருக்கிறது. முதல் நாள் காலை புறப்பட்டு மறுநாள் காலை அல்லது மதியம் சென்றடையும் வண்டிகளில் இது பொருந்தும்.

    இப்போதெல்லாம் வண்டிகளின் வேகம் அதிகரித்து பயணநேரம் வெகுவாக குறைந்து விட்டது..முன்பு பாம்பே மெயிலில் சென்னையில் முதல் நாள் இரவு பத்து மணிக்கு புறப்பட்டாள் அன்றிரவும் அடுத்த நாள் இரவும் ரயிலில் தான் ஒரு நாள் விட்டு மறு நாள் காலை தான் தாதர் போகும்.

    இப்போது பெங்களூர் மெயில் இங்கு இரவு. 11.15 புறப்பட்டு காலை 5.20க்கு பெங்களூர் சிட்டி நிலையத்திற்குள் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. இம்மாதிரி பயணங்களில் படுக்கை வசதி எங்கிருந்து வரும். முன்னால் வந்தவர்கள்  லக்கேஜ் செட்டில் பண்ணி விடுவார்கள் நாம் தாமதமாக வந்தால் நம் பெட்டிக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

    அதன்பிறகு நாம் உட்கார்ந்து கொள்ள பிரயத்தனப் படுவோம். உங்களுக்கு என்ன சீட் என்று கேட்டு சொன்னவுடன் கொஞ்சம் நகர்ந்து இடம் விடுவதுபோல் ஒரு பாவனை செய்வார்கள். நாம் கஷ்டப்பட்டு இருக்கும் இடத்தில் உட்கார்ந்தவுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் பேச்சு வார்த்தை தொடரும். இடையில் கீழே இருக்கும் பெட்டியில் முக்கியமான சாமான் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருவர் கேட்க அதைப் பார்ப்பதற்காக நம் காலைபிடிப்பார் பிறகுதான் தெரியும் அவர் நம் காலுக்குப் பின்னால் இருக்கும் பெட்டியின் கைப்பிடியைப் பிடிக்கிறார் என்று. நாம் அவசரமாக காலை நகர்த்திக் கொள்ளவேண்டும் பெட்டியை நகர்த்தியவர் பெரிய பெட்டியை நம் காலுக்கு முன் வைத்து திறந்து தேட ஆரம்பிப்பார். நாம் நம் கால் பத்திரமாக இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்போம்.

        அவர் தேடிய பொருள் நம் துரதிருஷ்டம் அந்த பெட்டியில் இருக்காது. அதற்குள் ஒருவர் நினைவு வந்தவராக அம்மா பெட்டியில இருக்கும்னு நினைக்கிறேன். என்பார். தேடும் நபர் இந்த பெட்டியை அப்படியே விட்டு விட்டு அவர் காலுக்கு கீழ் இருக்கும் அம்மா பெட்டியையும் வெளியே எடுத்து அந்த குறுகிய இடைவெளியில் பரப்பி திறந்து ஒரு வழியாக அவர் தேடிய பொருள் கிடைத்தவுடன் அந்த பெட்டியை முதலில் உள்ளே தள்ளி தான் வசதியாக கால் வைத்துக் கொள்வதில் அவரை அறியாமலேயே முனைப்பாக இருப்பார்.

    ஆனால் இந்த ரயில்வே விதியே இதுதான். நம் வண்டி முதலில் வந்து ஒரு நிலையத்தில் எதிரில் வரும் வண்டிக்கு கிராஸிங்கிற்காக நிற்கும். அதன் பிறகு எதிர் திசையில் நாம் வந்து சில நிமிடங்களுக்கு பிறகு வண்டி வரும். ஆனால் புறப்படும்போது முதலில் அந்த வண்டிதான் புறப்படும். நம் வண்டி பின்னால் தான் புறப்படும். அதே போல் பின்னால் எடுத்த பெட்டியை வைத்த பிறகே நம் கால் முன்னால் இருக்கும் பெட்டி உள்ளே தள்ளப்படும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலோ படித்துக் கொண்டிருந்தாலோ நம் காலுக்கு சேதாரம் ஆகிவிடும். பேசிக்கொண்டே தள்ளுவார்கள் நாம் வலிதாங்காமல் கத்தும்போதுதான் நினைவுக்கு வந்து ஞாபகமாக ஸாரி சொல்வார்கள்.

    பல சமயம் அவர்கள் தள்ளும் வேகத்தில் நாம் கழற்றிவிட்ட செருப்பு உள்ளே போய்விடும். பிறகு தான் நம் செருப்பு இல்லை என்பதை உணருவோம். அப்பர் பெர்த்தில் ஒரு சௌகர்யம் நாம் பாட்டுக்குப் போய் படுத்து விடலாம். இந்த மிடில் லோயர் பெர்த் காரர்கள் ஒருவரை ஒருவர் அனுமதி கேட்டுத்தான் போட முடியும். மிடில் பெர்த் போடும்போது ஒரு கலவரம் ஏற்படும் பாருங்கள். லோயர் பெர்த் காரர்கள் கையோடு வைத்திருக்கும் சாமான்களை நகர்த்தி முதுகுப் பக்கத்தில் இருக்கும் பலகைப் பிடுங்குவார்கள். மேலே உள்ள கொக்கியை யார் எடுப்பது என்பது ஒரு மௌன யுத்தம் நடக்கும். பிறகு எடுத்து அதில் இந்த பலகையை மாட்டி அந்த திரிசங்கு சொர்க்க படுக்கை வசதியை தயார் செய்வார்கள்.

    தூக்கம் வராத மிடில் பெர்த் கார்ர் அடிமைப் பெண் எம்.ஜி.யார் மாதிரி முதுகை வளைத்து கழுத்து மிடில் பெர்த்தில் இடிக்க அபத்திரமாக உட்கார்ந்திருப்பார். லோயர் பெர்த்  கார்ர் சீக்கிரம் தூங்குபவராக இருந்தால் அவர் படுக்க அவர் காலடியில் பாரதப் போருக்கு உதவ வேண்டும் என்று கேட்டு கிருஷணர்  காலடியில் உட்கார்ந்த அர்ஜுனன் மாதிரி உட்கார வேண்டியதுதான்.

    நான் டென்சிங் நார்கே உதவியில்லாமல் அப்பர் பர்த் பிடிக்க புறப்பட்டேன். ரயில் நிலையங்களில் நிற்கும் போது கழிவறையை உபயோகப் படுத்தாதீர்கள் என்ற ரயில்வேயின் வேண்டுகோளை மதித்து நான் ரயில் புறப்படும் வரை காத்திருப்பேன். புறப்பட்டவுடன் என்னைப் போலவே காத்திருந்தவர்கள் முன்னால் சென்றுவிட அவர்கள் வரும் வரை காத்திருப்பேன்.

    அதன் பிறகு டிக்கெட் பரிசோதகர் வரும் வரை அப்பர் பெரித்தில் ஏற முடியாது. முதல் காரணம் அவர் வந்து அவரிடம் ஆவணங்களைக் காட்ட வேண்டும். இரண்டாவது கடைசி முயற்சியாக அந்த பெட்டியில் வேறு எங்காவது மிடில் லோயர் பெர்த் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று வேண்டுகோள் விடுக்கவும். என் பரிதாபமான முகத்தையும் நெஞ்சை உருக்கும் குரலும் சிலரின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தி எனக்கு கீழ்தள வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

    சில சமயம் இல்லை ஸார் சான்ஸ் இல்லை எல்லாம் வந்துட்டாங்க என்பார். நான் என் முடிவை மாற்றிக் கொண்டு கம்பியைப் பிடித்து ஏற ஆரம்பிப்பேன். இதில் ஏறி நம் உடலை வளைத்து அதில் நம்மை பொருத்திக் கொள்வது ஒரு கலை. சென்றடையும் முன் நம் தேவைகளெல்லாம் எடுத்துக் கொண்டுவிட்டோமா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் கேட்க முடியாது. அதிலும் குளிர் பதன பெட்டியில் வரும் பயணிகள் குளிரால் விறைத்துப் போனவர்கள் போல மனதாலும் விறைத்துவிடுவார்கள். சக பயணிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவர்களுக்கு பெரிய இடர்பாடாக இருப்பதை உணர்த்துவதாக அவர்கள் முகபாவம் இருக்கும்.

    அண்மையில் தொலைக்காட்சியில்  ஒரு துணி சோப் விளம்பரத்தில் காட்டுவதுபோல் “முத தடவை ஓட்டலுக்கு வந்துஇருக்காங்க போலிருக்கு” என்று அம்மாவுடன் போர்வை போர்த்திக் கொண்டு வரும் பெண்ணைப் பார்த்து சொல்வது போல நம்மை பார்ப்பார்கள், நம்மிடம் நடந்து கொள்வார்கள்.

    போன வாரம் நான் பெங்களூரில் இருந்து சென்னை காவேரி துரித வண்டியில் குளிர்பதன வகுப்பில் ஒரு அப்பர் பெர்த். நடுங்கிக் கொண்டே(பெங்களூர் குளிர் மட்டுமல்ல வண்டியில் அப்பர் பெர்த் மாற்ற முடியுமா என்றா கவலையில்) பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்தேன்.. ரயில் வரும் நேரம் காட்டும் ஒளித்திரையில் 11.30 என்று வண்டி வரும் நேரம் ஒளிர்ந்து மறைந்து கொண்டிருந்த்து. அறிவிப்பு 12.45 வருவதாக தெரிவித்தது. வண்டி இரண்டுமில்லாமல் 1.35 வந்தது. உள்ளே போனால். லோயர் பெர்த்தில் ஒரு வயதான மூதாட்டி, எதிரில் மாற்றுத்திறனாளியான மகன். இந்த மிடில் பெர்த்துக்கான இளைஞன் உடல் மிகப் பருத்து என்னிடம் லோயர் பெர்த் இருந்தால் நானே அவனுக்கு கொடுத்துவிடும் வகையில் இருந்தான். எதிர் மிடில் மற்றும் அப்பரில் இரண்டு இளைஞர்கள் யாரிடமும் பேச்சு கொடுக்காமல் படுத்து விட்டார்கள்.

    கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணிக்கு பரிசோதகர் வந்தார். எல்லோரிடமும் டிக்கட் கேட்டார். நான் என் அடையாளக் கார்டை நீட்டினேன். உங்க பெர்த் நம்பர் என்றார். 3 என்றேன். டிக்கட் என்றார் . என் புது மோட்டோ ஜியை தடவி பதிவு விபரங்களை காட்டினேன். என் துரதிருஷடம் அவர் பட்டியலில் என் பெயர் இல்லை. பயணம் செய்யும் நாள், வண்டி, பெட்டி  எல்லாம் சரியாக இருக்கிறது. சரி படுங்க பாக்கலாம் என்றார். எனக்கு குழப்பம் இருந்தாலும் படுக்க பிரயத்தனப்பட்டு ஏறி ஒருமாதிரி படுத்தேன் மணி 2.20 . வண்டி போய்க்கொண்டிருந்த்து. சரியாக 2.45 நான் எழுப்ப்ப் பட்டேன். ஒரு இளைஞர் அசந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி ஸார் இறங்குங்க இது என் பெர்த் என்றார். நான் விளக்கினேன். அவர் ஒத்து கொள்வதாக இல்லை வாங்க டி.டி. ஆரைப் பார்க்கலாம் என்றார்.

    ஒரு மூன்று பெட்டி கடந்து அவரை கண்டுபிடித்தோம் நல்ல வேளை அவர் தூங்க வில்லை. நிலைமையை சொன்னோம். பிறகு அவர் என்ன சார் பண்ணலாம். எங்க லிஸ்ட் படி அவர் பேர் இருக்கு நீங்க போங்க வரேன் என்று வந்தார். பிறகு லிஸ்டை இன்னொருதரம் பார்த்து உங்க பேர் எம்.பி. மூர்த்தி வயது 60 உங்களுக்கு அப் கிரடேஷன்ல டூ டயர் 36 அதுவும் அப்பர் பெர்த்தான் போறீங்களா என்றார். நான் இங்க செட்டில் ஆயிட்டேன். அவரை போகச்சொல்லுங்கள் என்று சொல்லி என் அபிமான அப்பர் பெர்த்தில் நான் இரண்டாவது முறையாக ஏறும்போது மணி 2.45.

    எத்தனை நேரம் தாமதமாக படுத்தாலும் 5.30 மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் என்னை எழுப்பி விட்ட்து. இறங்கி வந்து கழிவறைக்குப் போய் உட்கார இடமில்லாமல் ஏ.சிக்கு வெளியே நின்று போனைத்திறந்தால் இரவு எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது. படித்தேன்.

    Your ticket upgrated your seat A2/36 chart prepared.

    யாரும் பார்ப்பதற்கு முன் செல்போனை மூடினேன்.  ஜன்னல் வழியாகப் பார்த்தால் வண்டி திருவள்ளூர் வந்திருக்கிறது. பத்து மணிக்கு வீட்டிற்கு வந்து என் வீட்டு கட்டிலில் படுத்து தூங்கினேன். அடுத்த முறையாவது எனக்கு லோயர் பெர்த் கிடைக்க வேண்டும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(116)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.
    இன்னொரு வாரம், இன்னொரு மடல், இன்னொரு சந்திப்பு.

    ஐக்கிய இராச்சியம் நான் அறிந்த நாள் முதல் வட அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் எனும் நான்கு பகுதிகளின் சேர்க்கை ஆகும்.

    இந்த ஒன்றிணைப்பான ஐக்கிய இராச்சியம் தான் ஒரு காலத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியமாக தனது காலனித்துவ நாடுகளின் மீது கோலோச்சியது.

    இங்கிலாந்து அரசர் முறையே வேல்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளை வெற்றி கொண்டு பிளவு பட்ட அயர்லாந்தின் வடபகுதியையும், வேல்ஸ்சையும் ஒன்றாக இணத்தார்.

    அதன் பின்பு இரண்டு அரசுகள் அதாவது இங்கிலாந்துடன் இணைக்கப்பட்ட வேல்ஸ், வடஅயர்லாந்து உள்ளடங்கிய ஒரு அரசும், ஸ்கொட்லாந்து அரசும்  தனியே இயங்கி வந்தது.

    பின்பு 1503ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் அரசரான ஐந்தாவது ஜேம்ஸ் இங்கிலாந்தின் அரசரான 7வது ஹென்றியின் மூத்த புதல்வி மார்கிரெட் டியூடோர் என்பவரை மணந்ததும் தான் ஸ்காட்லாந்து அரசரின் கனவான இங்கிலாந்து அரசும் ஸ்காட்லாந்து அரசும் இணையும் படலங்கள் ஆரம்பமாகின.

    englandஇப்படியாக மலர்ந்ததுதான் ஐக்கிய இராச்சியம். இந்த ஐக்கிய இராச்சியம் ஒன்றான  யூனியன் ஆக அமைந்திருந்தாலும் கடந்த லேபர் கட்சியின் அரசு டோனி பிளேயரின் தலைமையின் கீழ் ஐக்கிய இராச்சியத்தின் அங்கங்களான ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் என்பனவற்றிற்கு சட்டசபை முறையிலான அதிகாரங்களை வழங்கியது.

    இன்று அப்பகுதிகளுக்கு இந்திய முறையப் போன்று முதலமைச்சரும் சட்டசபைகளும் உண்டு.

    ஆனால் பிரச்சனை அத்தோடு நின்று விடவில்லை. ஸ்காட்லாந்து அரசியல் கட்சியில் ஒன்றான ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி தாம் தனிநாடாகத் திரும்பப் பிரிந்து போக வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்து பல தேர்தல்களில் ஜயித்தது.

    அத்தோடு ஸ்காட்லாந்து உள்நாட்டுத் தேர்தலில் அக்கட்சியே ஜெயித்து சட்டசபையை அமைத்தது.

    அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அரசாங்கம் ஸ்காட்லாந்து நாடு தனியே பிரிந்து போவதை அந்நாட்டு மக்கள் விரும்புகிறார்களா இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காக ஒரு பொதுஜன வாக்கெடுப்பை ஸ்காகொட்லாந்தில் நடத்தப் போவதாக அறிவித்து அதற்கான திகதி இவ்வருடம் செப்டெம்பர் மாதம் என அறிவித்தது.

    இதோ ஜூன் வந்து விட்டது, ஸ்காட்லாந்து பிரிவதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி தேசியக் கட்சியும், அதனால் ஸ்காட்லாந்து அடையப்போகும் தீமைகளைப் பற்றி இங்கிலாந்தின் மற்றைய பிரதானக் கட்சிகளும் கடுகதிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றன.

    ஆனால் இங்கிலாந்து மக்களை ஸ்காட்லாந்து தாம் பிரிந்த பின்பு எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் சில விடயங்கள் மிகவும் எரிச்சலூட்ட வைக்கின்றன.

    குறிப்பாக ஸ்காட்லாந்து பிரிவினையை வேண்டுவோர் பிரிவின் பின்னரும் தமது நாட்டின் கரன்சியாக பிரிட்டிஷ் பவுண்ஸ்சையே வைத்திருக்கப் போகிறோம் என்பது பல இங்கிலாந்து மக்களுக்கு மிகவும் ஆத்திரத்தையும் ஆச்சரியத்தையும் உண்டு பண்ணுகிறது..

    இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இது மிகவும் சிக்கலான சந்தியாகிறது முடிவு எதுவாயினும் அது இரு பகுதிகளையும் பாதிக்கத்தான் போகிறது.

    சரி செப்டெம்பர் மாதத்தின் பின்னால் இதைப்பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமே !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • சரித்திரம்தன்னில் வாழுகின்ற மக்கள் தலைவன்..

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    சரித்திரம்தன்னில் வாழுகின்ற மக்கள் தலைவன்..

    கர்மவீரர் காமராசர்!

     

    kamarasar
    சுதந்திரதாகம் தன்னில் தேசம் சுழன்றுகொண்டிருந்தநேரம்.
    இளைஞர்கள்தாமே அந்த விடுதலைப் போருக்கு வந்தார்!
    சத்தியமூர்த்தி போன்ற தியாகிகள் தலைமைதாங்க..
    இந்தியா முழுவதுமே அண்ணல்காந்தியின்வழியே நின்றார்!

    சுயநலம்துளியும் இல்லா மனிதர்கள் மண்ணிலுண்டு..
    அவர்களில்ஒருவராக அடையாளம் காணப்பட்டார்!
    எளிமையும்இவரும் ஒன்று இரண்டிற்கும் பேதமில்லை..
    தமிழக காங்கிரஸ் இயக்கம் கண்டிட்ட மாபெரும்தலைவர்!

    பொதுநலம் ஒன்றே தனது கொள்கையாய் மூச்சாய்கொண்டு
    திகழ்ந்தவர் இவரே என்று மாற்றாரும் போற்றுகின்றார்!
    இல்லறவாழ்வும்கூட இடைமறிக்கக்கூடாதென்று..
    தன்னந் தனியாகவே வாழ்ந்தவர் காமராசர்!!

    மக்களுக்காக வாழ்ந்த மகோன்னதத் தலைவரிவர்போல்
    மண்ணிலே காண்பதரிது என்பதை மறுக்கவே முடியாது!
    கல்விக் கண்ணைத் திறந்துவைத்த கர்மவீரரை.. காலம்
    என்றுமே நினைந்திடும்! போற்றிடும்!  புகழ்ச்சியில்லை!!

    படிப்பிற்காக இவர்ஒதுக்கிய அரசுநிலங்கள்.. அவைதான்
    பல்கலைக்கழகங்களாக இன்றும்கூட விளங்குகின்றன!
    தொழில்புரட்சியைக்கூட அமைதியாய் நடத்தி ஆண்டவரிவர்
    அம்பத்தூர்முதல் கிண்டிவரையிலும் தொழிற்கூடங்கள்!!

    கடமையைப்புரிவதில் கண்ணும்கருத்துமாய் இவரிருந்தார்! – கல்வி
    கற்றவரில்லை.. எனினும் கற்றவர்க்கெல்லாம் காரணமாயிருந்தார்!
    ஏழ்மைநிலையில் இருந்தாலும் படிக்க வாருங்கள் என்றே
    ஆயிரமாயிரம் பள்ளிகள் திறந்தார்! மதிய உணவும்தந்தார்!!

    சரித்திரம்தன்னில் வாழுகின்ற மக்கள் தலைவன்.. என்னும்
    நித்திலப்புகழுடன் வாழுகின்றார் சிவகாமியின் புதல்வன்!
    இந்தப்பிறவியில் இவரின்சாதனை இமயத்தைக்காட்டிலும்..
    இவரைப்பற்றி எண்ணவும்பேசவும் என்றும்பெருமைகொள்வோம்!
    kamarasar1

     

     

     

     

     

     

    காவிரிமைந்தன்

    Share
  • வாயுள் உலகம்!

    -சேஷாத்ரி பாஸ்கர்

    ஒரு சின்னப் பந்து
    கருஞ்சிவப்பில்
    சுற்றி வெள்ளை முகப்பூச்சு
    பெண் பார்க்க செல்லும் பையன் போல்!

    குவியலாகக் கிடக்கும்
    நாம் நினைத்த இடத்தில்
    பார்த்தோர் செல்வார் பத்து வருடம் பின்பு
    சூரியன் போல் அனைவருக்கு பொது!

    அது உள் இருக்கையில் வராது பேச்சு
    சுரக்கும் அளவில்லாமல்
    சுழற்றியபடி பந்தாடும், வாய்
    உடைக்கத் துடிக்கும் மனம்!

    தடுக்க நினைக்கும் மறு கணம்
    மென்மை ஆக்கி நா உறிஞ்சும்
    பொறுக்க மாட்டா(து) பல் கடிக்கும்
    உடைந்திறங்கும் தேன் மிட்டாய்!

     

    Share
  • அந்த சிவகாமி மகனிடம்…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    ‘இருக்கும் பிடிசோறு தனக்கென எண்ணாது கொடுக்கின்ற கோயிலது’ என்னும் தாய்மையைப் போற்றும் பாடல்வரிகளைக் கொண்ட படம் – பட்டிணத்தில் பூதம்.. கவியரசர் அடிக்கடி அரசியலில் கட்சி மாறுவதேன் என்று கேட்கப்பட்டபோது.. இல்லையே… நான் அப்படியே இருக்கிறேன்.. கட்சிகள் தான் என்னைவிட்டு மாறிக்கொண்டே இருக்கின்றன என்றாராம்.  இப்படி திரைத் துறையிலும் அரசியல் துறையிலும் இலக்கியத்துறையிலும் முத்திரை பதித்த கண்ணதாசனிடம் முத்தாய்ப்பானது.. அவரது கவியாற்றலே என்பது காலம் கண்டறிந்த உண்மை!

    அதுவும் தனது தனி மனித உணர்வுகளைக் கூட, அனுபவங்களை அப்படியே வரிகளில் வடித்திடும் பேராற்றல் கண்ணதாசனிடம் கண்டதுபோல் காணக்கிடைப்பது அரிது.
    kk kk
    ஆம்.. அரசியல் களத்திலே ஏற்பட்ட ரணங்களாய் தடம் மாறி நின்றபோதும் கல்விக்கண்தந்த கர்மவீரர் காமராசரிடம் கொண்ட பற்று.. பாசம்.. அற்றுப்போகாமல்.. தன் ரத்த நாளங்களிலும் காமராசரை மெச்சிப் புகழ்ந்து வைத்திருந்தார்.  மேலும் அவரைக் காணவேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.

    sivakamiகாதலன் காதலிக்கு தூது அனுப்பவதற்கு ஆயிரமாயிரம் வழிகள்.  ஆனால், இங்கே கண்ணதாசன் காமராசரைக் காண துடித்தபோது.. கை கொடுத்தது எது தெரியுமா?  திரைப்பாடல் மட்டுமே!  அதுவும் இத்திரைப்படத்தில் இக்காட்சி அமைப்பு இதற்காகவே இணைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    பெண் பார்க்கும் படலத்தில் இடம் பெறும் பாடலாய்.. எத்தனை எளிமையாய்.. எத்தனை லாவகமாய்.. தூதுவிடுகின்றார் பாருங்கள்.. அருமையான பாடலிது என்று கொண்டாடலாம்.  அப்படி இசை அமைத்திருக்கும் அதிசய மனிதர் திரு.கோவர்த்தனம் ஆவார்.  ஆயிரம் பாடல்களை இசையமைத்துப் பெற வேண்டிய புகழை ஒரே பாடலில் பெற்றுவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

    புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அவர்களின் நளினங்கள் நாட்டியமாடும் திருமுகத்தை யார்தான் மறக்க முடியும்?

    காமராசரின் தாயார் பெயர் சிவகாமி.. அட.. பாடல் பிறந்து விட்டது!!!!

    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச்
    சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
    வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – வேலன்
    இல்லாமல் தோகை ஏதடி…

    வேலை வணங்காமல் வேறென்ன வேலை – என்னும் சிலேடை விளையாட்டுக்களோடு..

    எத்தனைப் பாடல்கள் இப்போது வந்தாலும் அந்தக் காலப் பாடல்கள் போல் ஆகுமா என்று ஏன் ஏங்குகிறோம்.. அர்த்தம் புரிகிறதல்லவா?
    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

    http://www.youtube.com/watch?v=rm0jGFq1z3Y

    காணொளி: http://www.youtube.com/watch?v=rm0jGFq1z3Y

     

    படம் : பட்டணத்தில் பூதம்
    பாடலாசிரியர் : கண்ணதாசன்
    இசை : திரு.கோவர்த்தனம்
    குரல் : T.M.S., P. சுசீலா
    நடிகர்கள் : ஜெய்சங்கர்+கே.ஆர்.விஜயா

    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச்
    சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
    வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – வேலன்
    இல்லாமல் தோகை ஏதடி

    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…

    கண்கள் சரவணன் சூடிடும் மாலை
    கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
    பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
    வேலை வணங்காமல் வேறென்ன வேலை

    நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
    நிழலாடும் விழியோடும் ஆடினானே – அன்று
    நிழலாடும் விழியோடும் ஆடினானே – என்றும்
    கண்ணில் நின்றாடச் சொல்லடி

    மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
    மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
    நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
    நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
    காலம் மாறினால் காதலும் மாறுமோ
    மாறாது மாறாது இறைவன் ஆணை – என்றும்
    மாறாது மாறாது இறைவன் ஆணை

    இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி – இன்னும்
    சேரும் நாள் பார்ப்பதென்னடி
    வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – தோகை
    இல்லாமல் வேலன் ஏதடி…

    ஆ……ஆ……ஆ..ஆ..ஆ.ஆ

    அந்த சிவகாமி மகனிடம்…
    அந்த சிவகாமி மகனிடம்…
    அந்த சிவகாமி மகனிடம்…
    சேதி சொல்லடி… என்னைச்
    சேரும் நாள் பார்க்கச் சொல்லடி….

    Share
  • வேதவியாசர் கோயில்

    –விசாலம்

    வடக்கில் கங்கை கங்கோத்திரியிலிருந்து  ஒரு வெள்ளிக்கம்பி போல ஆரம்பித்து  சில இடங்களில் அமைதியாகவும் சில இடங்களில் ஆக்ரோஷமாகவும்  பாய்ந்து ஓடுகிறது. புனித கங்கை ரிஷிகேசத்திலிருந்து ஏழு கிளைகளாகப் பிரிந்து  மிக வேகமாக சீற்றத்துடன்  பிரவாகமாக ஓடி வருகின்றது. இந்த  கங்கை கரையில்  இருப்பது ஹரிதுவார் என்ற  ஒரு க்ஷேத்திரம். ஹரியின் வாசல் என்று தமிழில் பொருள் வருகிறத. இந்த ஹரிதுவாரிலிருந்து சுமார் எட்டு கிமீ சென்றால் ஸ்ரீ வேதவியாசர் கோயில் வந்துவிடும். இந்த இடத்தின் பெயர் சப்தசரோவர் .. அதாவது, ஏழு ஏரி என்ற பொருள். இந்த இடத்திற்கு நான் பள்ளி மாணவர்களுடன் வந்திருக்கிறேன். ஸ்ரீ சுதீந்திர தீர்த்த மகாசுவாமிகள் இந்தக்கோயிலை சுமார் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிக அழகாகக் கட்டியிருக்கிறார்.

    யார் இந்த வேதவியாசர்? அவருக்கு ஏன் கோயில் கட்ட வேண்டும் ?

    ஒரு சமயம் பராசர முனிவர் சிவனை நோக்கி தவம் இருநதார்.  சிவனும் அவர் முன் தோன்றி “உன் சிவபக்திக்கு மெச்சினேன் உன்னுடைய குமாரன்  வேதங்களில் நன்கு தேர்ச்சி பெற்று உலகமக்களின் நன்மைக்காக வேதங்களைத் தொகுத்து அளிப்பார்”  என்று கூறி மறைந்தார்.

    பராசர முனிவருக்கும்  சத்யவதிக்கும்  ஒரு மகன் பிறந்தான். பெற்றோர்   அவருக்கு கிருஷ்ண துவைபாயனர்  என்று பெயரிட்டனர். அந்த  பரமேஸ்வரன் கூறியபடி  அவர் தன் தகப்பனார் மகரிஷி பராசரரிடத்தில் வேதம் பயின்றார். பின்னர் பதஞ்சலியிடமிருந்தும் ஆழமாக சென்று சிறந்த பாண்டித்யம் பெற்றார்.  பின் தேசயாத்திரை தொடங்கி பல இடங்களிலிருந்தும் வேதங்களைச் சேகரித்தார். பின்னர் அதை நான்காகப்பிரித்தார். அவையே ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம். பின்னர் தன்னுடைய நான்கு சீடர்களுக்கு அளித்தார்.

    ரிக்வேதத்தை  பைல முனிவருக்கும், யஜூர் வேதம் வைசம்பாயனருக்கும்,  சாம வேதத்தை  ஜைமினி முனிவருக்கும், சுமந்து முனிவருக்கு  அதர்வணவேதத்தையும் கற்றுக்கொடுத்தார். இப்படி வேதத்தைப்பிரித்துக்கொடுத்ததால்  இவருக்கு வேத வியாசர் என்ற பெயர் வந்து  சேர்ந்தது.

    பின் இவர் பிரும்ம சூத்திரம் என்ற அரிய நூலை எழுதி நமக்கெல்லாம் ஒரு பொக்கிஷமாக அருளியிருக்கிறார். மேலும் நமக்கு வேதம், உபநிஷதம், புராணங்கள் போன்று பல பொக்கிஷங்கள்  அவர் மூலம் கிடைத்திருக்கின்றன.

    மகாபாரதத்தில் போர் கடுமையாக நடந்து அதில் பலர் மடிந்தனர். மகாபரதப்போரை கண் தெரியாமல் இருந்த திருதாஷ்டிரர் பார்க்க விரும்பினார். யுத்தபூமியில் நடக்கும் எல்லா காட்சிகளையும் அரண்மணையில் இருந்தபடியே வர்ணிக்கும் சக்தியை சஞ்சயனுக்கு அளித்து திருதாஷ்டிரரது ஆசையைப்பூர்த்தி செய்தவர் ஸ்ரீ வேதவியாசர் தான். அவரிடம் அத்தனை சக்தி  இருந்தது. போர் முடிந்த பின் குந்தி தேவியுடனும் மன்னர் திருதிராஷ்டிரனுடனும் சில நாட்கள் வியாசமுனிவர் தங்கினார். அப்போது மன்னர் போரினால் தனது செல்வங்கள் அனைவரும் அழிந்து  அத்துடன் பல உறவினர்ளையும் இழந்து விட்டேனே என்று வருந்தி, மறுபடியும்  அவர்களைப்பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது என்று வியாசமுனிவரிடம் தன் ஏக்கத்தைத் தெரிவித்தார் , வியாசமுனிவரும் அவரை கங்கைக்கரைக்கு  அழைத்துபோனார்  மகா பாரதப்போரில் இறந்தவர்களை வரச்சொன்னார். இறந்தவர்களும் அரச உடைகளுடன், அலங்காரமாக தங்களது தேரில்  வந்து காட்சியளித்தார்கள். இதனால் திருதாஷ்டிரரின் ஏக்கம் தீர்ந்ததாம்.  இந்தச்சம்பவம் ஒரு கதாகாலட்சேபத்தில் கேட்டது.

    தவிர  மஹாபாரதத்தை ஸ்ரீ வியாசர் சொல்லிக்கொண்டு வர ஸ்ரீ மகாகணபதியே  அதை எழுதினார் என்பதை நாம் புராணங்கள் வாயிலாக தெரிந்துக்கொள்கிறோம். இத்தனைச்சிறப்பு பெற்ற ஸ்ரீவியாசபகவானுக்கு ஒரு கோயில் இல்லையே என்ற ஏக்கம் ஸ்ரீ சர்தார்வல்லப பாய் பட்டேலுக்கு இருந்தது இதற்காக அவர்  ஸ்ரீ வியாசபகவானுக்கு ஒரு ஆறடி சிலை  தயார் செய்து அதை யமுனை நதிக்கரையில் “குல்பீ” என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார்.ஆனால் அங்கு நித்தியப்படி பூஜை . புனஸ்காரம் நடத்தப்படவில்லை .

    ஒரு நாள்  காசியில்  காசிமட சமஸ்தானத்தின் முதல் ஆச்சாரியார் ஸ்ரீ யாதவேந்திர தீர்த்த சுவாமிகள் கங்கையில் ஸ்னானம் செய்ய இறங்கினார். அவர் காலில் ஏதோ ஒன்று பளுவாக தட்டுப்பட்டது. முதலையாக இருக்குமோ என்று எண்ணினார். ஆனால் அது கற்போல் காலில் தட்டுப்பட்டதால் குனிந்து அதை எடுத்தார். அது ஒரு அழகான விக்கிரகம். அதுவும் ஶ்ரீ வேத வியாசரின் விக்கிரகம். அதை தன் மடத்தில் எடுத்துக்கொண்டு  போய் தினமும் பூஜை செய்யலானார். வரிசை வரிசையாக அது பலரால் பூஜிக்கப்பட்டது, பின்னர் காசி மடத்து  சமஸ்தான இருபதாவது பட்டத்தில் அருளப்பட்ட ஸ்ரீ சுதீந்திர தீர்த்த மகா சுவாமிகள் இவருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று கடும் முயற்சியில் இறங்கி  வெற்றியும் கண்டார்.

    Veda Vyas templeஇனி கோயிலைப் பார்ப்போம். கோயிலின் முகப்பில் அஷ்டதிக்கு பாலகர்கள் இல்லை. அதற்கு பதிலாக இரண்டு முனி குமாரர்கள் நின்றபடி இருக்கின்றனர். பிரகார சுவர்களில் பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இதில் ஸ்ரீராமர், சீதாதேவி, ஸ்ரீ நரசிம்மர்,  ஸ்ரீ பாலாஜி,  கீதாநாயகன் கண்ணன், ஸ்ரீ வியாசபகவானின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக்  காணமுடிகிறது. கர்ப்பகிரகத்தில் ஸ்ரீ வியாசபகவான் எழந்தருளியுள்ளார். அவரின் நான்கு பக்கங்களிலும் நான்கு சீடர்களான பைலமுனிவர், வைசம்பாயனர், ஜைமினி முனிவர், சுமந்து முனிவர்  ஆகியோர் தனித்தனி சன்னிதியில் அருள் புரிகின்றனர்.

    தவிர சப்தரிஷிகள் ஸ்ரீ காச்யபர், கௌதமர் , ஜமதக்னி , அத்ரி ,பரத்வாஜர், விஸ்வாமித்ரர் ,வசிஷ்டர் இவர்களின் உருவங்கள்  நான்கு பக்கச்சுவர்களிலும் பெரிய அளவில் மிக அருமையாக  வரையப்பட்டுள்ளன.

    கோயிலின் கோபுரம் சுமார் அறுபது அடியாகும் கோயிலில் தங்க விடுதிகளும் சமையல் செய்யும் கூடங்களும் உள்ளன. தவிர ஆயுர்வேத மருத்துவம், பெரிய நூலகம், வேதபாடசாலை  என்று பல பாகங்களைப் பார்க்கமுடிகிறது . உத்திரபிரதேசத்திற்கு இந்தக்கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது என்றால் மிகையாகாது.

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://arundathiga.blogspot.com/2008/08/badrinath-to-bangalore-may-2008.html

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 22

    கே.ரவி

    1980-ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை, தொலைக்காட்சியில் (அப்பொழுதெல்லாம் ஒரே சேனல் ‘தூர்தர்ஷன்’ மட்டுமே) ஒரு கவியரங்கம். கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கல்லூரி மாணவர்கள் கவிதை படித்தனர். கவிதை படித்த எல்லாக் கவிஞர்களுமே பாரதியைக் குறிப்பிடத் தவறவில்லை. கவிஞர் கண்ணதாசனும் பாரதி பற்றிய உணர்வை அவருக்கே உரிய பாணியில் பகிர்ந்து கொண்டார்.

    பாரதி பற்றி நிறைய கவிதைகள் கேட்டிருக்கிறேன். அதிலும் உணர்ச்சி பூர்வமான அற்புதக் கவிதைகள் நிறையவே கேட்டிருக்கிறேன். அன்று அந்தக் கவியரங்கில் படிக்கப் பட்ட கவிதைகள் மிகச்சிறப்பாக இருந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும், அக்கவியரங்கம் முழுதும் பாரதியின் உணர்ச்சிப் பெருக்கு, நீறு பூத்த நெருப்புப் போல இழையோடியிருந்தது. அன்று படிக்கப்பட்ட கவிதை வரிகளைக் காட்டிலும், அவை நினைவு படுத்திய பாரதியின் வரிகளிலும், அவன் வாழ்க்கையில் சந்தித்த சோதனைக் களங்களிலும் என் மனம் தோய்ந்து விட்டது. என்னை அறியாமல் அந்தக் கவிதைகளின் நடுவிலிருந்து முண்டாசுக் கவிஞன் முளைத்தெழுந்து என் மனத்திரையை ஆக்கிரமித்துக் கொண்டான். ஓர் உத்வேகத்தோடு என் உள்ளத்திலிருந்து சில கவிதை வரிகள் ஊற்றெடுத்து வந்தன. வந்த வரிகளை எழுதி வைத்துவிட்டுப் படித்துக் கூடப் பார்க்காமல் காத்திருந்தேன்.

    shobaஷோபனா செய்தி படித்து முடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்ததும், பரபரப்பாக அவளிடம் அந்தக் கவிதையைப் படித்துக் காட்ட முயன்று, படிக்க முடியாமல் குரல் தழுதழுக்க, நான் அழ, ஷோபனாவும் அழச் சற்று நேரம் ஒரே உணர்ச்சி மயமாகக் கழிந்தது. அதை அழுகை என்று சொல்வதா, உள்ளத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டெழுந்து வந்த உணர்ச்சிப் பிரவாகம் என்று சொல்வதா?

    இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு பாரதி கலைக்கழகத்தில், ஹா.கி.வாலம் அம்மையார் நினைவுக் கவியரங்கத்தில் அந்தக் கவிதையைப் படிக்கத் துணிந்தேன். படித்து முடிக்கும் போது மீண்டும் தொண்டையடைக்கக் கண்ணீர் பெருக்கினேன்.

    அந்தக் கவிதை:

    அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

    புதைமண லில்சில விதைகள் தூவப் புறப்பட்டானே

    போகும் வழியில் எல்லாம் நெஞ்சு மிதிபட்டானே

    அதையும் மீறிச் சென்றே கனவுப் பயிர் வைத்தானே

    அதற்குத் தன்னை ஆகுதி யாக்கி உயிர்விட் டானே

    அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

     

    கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே

    காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே

    தேடிச் சென்ற திசையெல் லாம்பெருந் தீ வளர்த்தானே

    தேகம் எடுத்தத னாலே அவனும் தேய்ந்து விட்டானே

    அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

     

    கனவுக் கொடிகள் காற்றில் ஆடும் காட்சி தெரிகிறது

    காட்டு வெளியில் எல்லாம் பாடல் காவல் இருக்கிறது

    தினமும் இங்கே தெய்வ நெருப்பு நெஞ்சில் உதிக்கிறது

    தேய்ந்து போகும் தேகங் களுக்குத் தெம்பு கொடுக்கிறது

    நட்சத்திரங்கள் மண்ணில் விழக்கூடாதா

    இந்தக் கவிதையைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் நண்பன் சுகி சிவம் சொன்ன போது, பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களெல்லாம் அதை மிகவும் ரசித்ததாக அவனே சொல்லக் கேட்டு நெகிழ்ந்தேன்.

    இந்தக் கவிதையில் அப்படி என்ன இருக்கிறது என்று இதுவரை சிகாமணி செய்த ஆராய்ச்சியில் அவனுக்கு எதுவுமே அகப்படவில்லை. ஆனால், மனோன்மணிக்குத் தெரியும், பின்னணி உணர்ச்சியாக, கனமாக, அதில் பொதிந்திருக்கும் சுமை என்ன என்று. கவிதைச் சுவையா, கவிதைச் சுமையா? பட்டிமன்றம் போல் சிகாமணி கேலியாகக் கேட்ட கேள்விகளை அவள் பொருட்படுத்தவே இல்லை. அது சுவையின் சுமை, சுமையின் சுவை.

    sardarஒருநாள் தொலைபேசியில் சர்தார் சிங் என்ற கவிஞர் என்னைக் கேட்டார்: யாரும் அழுவதை பாரதி விரும்ப மாட்டான். அவனை நினைத்தாலே வீரம்தான் பொங்கியெழும், அழுகை வராது. பின் ஏன் நீங்கள் அவனுக்காக அழச்சொல்கிறீர்கள்?”

    நான் அவரை மறுத்து எதுவும் பேசவில்லை. அவர் சொன்னது முற்றிலும் சரியென்றே தோன்றியது. அறிவு பூர்வமாக நிறுவவே முடியாத இரண்டு விஷயங்கள், கடவுளும், கவிதையும். அந்த முயற்சியில் ஈடுபடுவது வியர்த்தம்தம்தான்.

    சென்ற பகுதியில், பாரதியின் பாடல் ஒன்றை அமரர் தேவநாராயணன் பாடக் கேட்டு, “என் கண்கள் கலுழ்ந்தன” என்று நான் எழுதியிருந்ததைப் படித்து விட்டுக் ‘கலுழ்ந்தன’ என்ற சொல் கடினமான புலமைச் சொல்லாக இருக்கிறதே, அதை எளிய சொல்லாக மாற்றக் கூடாதா என்று ஷோபனா கேட்டாள்.

    அவள் கேட்டு நான் எதைச் செய்யாமல் இருந்திருக்கிறேன்? உடனே, ‘கலங்கின’ என்று திருத்தி எழுதினேன். ஆனால், மறுநாளே நண்பன் சு.ரவி ‘வல்லமை’ மின்னிதழில் எழுதிய ஒரு கட்டுரை மீண்டும் அந்தச் சொல்லைக் ‘கலுழ்ந்தன’ என்று பழையபடித் திருத்தம் செய்ய என்னைத் தூண்டியது. சு.ரவியின் கட்டுரை மிகவும் சூடாகவே இருந்தது:

    நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை. பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை. கண்ணீர்மன அழுத்தத்தைக் கரைக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை.

    அது உன் திறமையையும் தன்னம்பிக்கையையும் தகர்த்து விடுகிறது. அழுகை ஆன்மாவைப்புனிதமாக்குகிறது என்பது வேலையற்றவரின் வெட்டி வேதாந்தம்.

    அழுவது வேறு; கண்கள் கலுழ்வது வேறு. உருகிக் கரைவதைக் கூடப் பெரிய புலவர்கள் ‘அழுகை’ என்றே குறிப்பிட்டிருந்தாலும், அந்தச் சொல், சு.ரவி சொல்வது போல் இயலாமையையும், துயர் மிகுதியையும் குறிக்கக் கூடும் என்பதால், ‘கலுழ்தல்’ என்ற சொல்லே பொருத்தம் என்று முடிவு செய்தேன்.

    நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகச் செய்யும் சரணாகதி நிலைதானே ஆன்மிகப் பாதையில் அடிப்படை உந்து சக்தி! அதுதானே “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற துணிவோடு, கடவுளாகிய “கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்மலர்ச் சேவடியே” குறுகி நிற்கும் பணிவையும் அப்பரடிகளுக்குத் தந்தது! அதுதானே, “பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்” என்று முழங்கிய பாரதியை, “பரிபூரணர்க்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று நெகிழ்ந்துருகச் செய்தது!

    இமைகள் நனைந்தேன் இதய புரீஸ்வரா

    என்று நெக்குநெக்குருகி சபரிகிரீசனைப் பாடிய நண்பன் சு.ரவி, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் பரமானந்த நிலையை மறுக்கவோ, வெறுக்கவோ முடியுமா?

    தொலைக்காட்சியில் கண்ணதாசன் தலைமையில் ஒளிபரப்பாகிய கவியரங்கம் எனக்குள் ஏற்படுத்திய அனுபவத்தை நான் மறுப்பதற்கோ, மறப்பதற்கோ இல்லை.

    கவிதைக்குத் தெரியுமா எது சரி, எது தவறென்று? ஆனால் கவிதையில், அதன் த்வனியில் மூழ்கினால், மூழ்கினால் . . . !

    ‘மூழ்கினால் மூச்சிழந்து மரணமடைய நேரிடும்’ என்று சிரித்தான் சிகாமணி. மூச்சிழந்தபின் முத்து மண்டபம் காத்திருக்கும் என்று சொன்னால் அவனுக்குப் புரியாது. கவிதையாகவே சொன்னேனே, 1979-ல்:

    தடம் புரண்டன சொற்கள்

    தவிக்க வைத்தது தாகம் – இருட்டில்

    தடவிக் கொண்டே நடந்து செல்லும்

    குருட்டு மனத்தின் குமுறல்

    நடுங்க வைக்கும் நள்ளிர வைப்போல்

    நகர மறுக்கும் தனிமை

    ஓவென் றலறி உதவக் கூட

    நாவின்றி நின்ற வேளை

    உருவற்ற மேகத்தில் ஒருகோடி மின்னல்

    உருவான தோகவிதை ஓசைப் பிரவாகம்

    உடைகின்ற மெளனத்தை அடைகாத்த நெஞ்சம்

    உயிர்க்கின்ற பயிர்க்கென்(று) உதிர்க்கின்ற முத்தெல்லாம்

    சரித்திரக் கடலில் சங்கம மாகும்

    சான்று தேவை யென்றால்

    மூழ்க வேண்டும்

    மூச்சிழந்த பின்னே

    முத்து மண்டபம் காத்தி ருக்குமே

    baba1கவிதை ஒரு வாசல், அனுபவ வாசல். அதைத் திறந்து கொண்டு உள்ளே நுழையத் துணிந்தால், அது உதித்த அதே அனுபவக் களத்துக்கு, அதற்குள் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் அதே அனுபவக் களத்துக்குச் செல்ல முடியும் என்று நான் சொல்வதை விட என்றாவது ஒருநாள் கவிஞர் சர்தார் சிங் சொல்வார் என்று காத்திருக்கிறேன்.

    ஷீர்டி சாய்பாபாவை நினைந்துருகி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் பாடிய பாடலொன்றை மெல்லிய குரலில் மனோன்மணி இப்போது பாடுகிறாளே!

    அழுதழுது வரண்ட கண்கள் – உன்னைbaba

    அழைத்தழைத்து வாடும் நெஞ்சம்

    தொழுவதற்கும் வலுவிழந்த கைகள் – நீ

    தோன்றிவிடு என்னெதிரில் கொஞ்சம்

    நிழல்கொடுக்கும் தூயவொளி நீயே

    நேரில்வரும் தெய்வமிங்கு நீயே

    உழல்கின்ற மனமாயை தீர – வந்(து)

    உதிக்கின்ற தழலேயென் தாயே

    ஶ்ரீ சாயிராம் ஜெய் சாயிராம்

    சீரடிக் கமல க்ருபா சாயிராம்

    . . . . . . .

    சிந்தனைக் கோட்டத்தின் “கூட்டுவழி பாடு” என்ற வாராந்திரப் பிரார்த்தனைக் கூட்டங்கள் ஒரு சிறிய நண்பர் குழுவைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பொற்காலம் என் நெஞ்சத் திரையில் நிழலாடுகிறது.

    ஓ அந்த இனிய நாட்கள் . . . .!

    (தொடரும்)

    Share
  • சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 2

    –செம்பூர் நீலு.

    10,000 புத்தர் உருவச்சிலைகள் உள்ள நகரம்

    நாப்பா வாலியை சுற்றிப்பார்த்துவிட்டு இரவில் ஒரு நல்ல லாட்ஜில்  தங்கிவிட்டு மறு நாள் காலையில் உக்கியா நகரிலிருந்து 2 மைல் தொலைவிலுள்ள 10,000 உருவச் சிலைகள் கொண்ட புகழ் வாய்ந்த புத்தர் கோவிலுக்குச்  சென்றோம்.

    நுழை வாயில் வளைவு மண்டபம்
    picture 1நகரின் நுழை வாசலில் உள்ள மண்டபம் அழகாக சைனா ஜென் கோவில் கட்டிடக் கலையை பிரதிபலிக்கிறது. இருமருங்கிலும் பச்சைப்  பசேலென்று அமைந்திருக்கும் செடிகள் பார்ப்பதற்குக்  கண்ணிற்குக்  குளுமையாக இருந்தது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்தக்  கோவில் வளாகம், அதைச்  சுற்றி  புல்வெளிகள், எக்சிபிஷன் அறை, பெரிய தியான மண்டபம், புத்தா பல்கலைக்கழகத்தின் தர்ம பரிபாலனம், கல்விக்கூடங்கள்,  வெஜிடேரியன் உணவகம் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன. நுழை வாயிலில் காலெடுத்து வைத்தவுடன் அங்கிருக்கும் அமைதியான சூழ்நிலை நம்மை மௌனமாக்கிவிடுகிறது. வழியில் தென்படும் யாத்திரிகர்கள் / புத்த பிக்குக்கள் கை கூப்பி சிரம் தாழ்த்தி  வணக்கம் தெரிவிக்கின்றனர்.

    இந்த கோவில் வளாகம் சர்வ தேச புத்த சமூக ஜென் அமைப்பை, குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் முக்கிய அமைப்பை சேர்ந்த திரு ஹுசுவான் ஹுஆ என்பவரால் 1974 ம் வருடம் நிர்மாணிக்கப்பட்டது. உலகத்திலேயே முதல் சைனா ஜென் கோவிலாகவும் மேற்கத்திய நாடுகளின்  5 புத்த சமூகத்தினரின் கோவிலாகவும் கருதப்படுகிறது. மேற்கத்திய உலகில் வாழும் மக்களுக்கு புத்தரின் போதனைகளை கற்றுத்  தருவதற்காக வேண்டி இந்த வளாகத்தை நிர்மாணம் செய்தார்.

    பிரதான அலுவலகத்தின் அதிகாரி கைகூப்பி வணங்கி வரவேற்கிறார். அங்கிருக்கும் பதிவேட்டில் பெயரையும் முகவரியையும் பதிவு செய்தபின் அருகிலிருக்கும் எக்ஸிபிஷன் அறைக்குள்  அடியெடுத்துவைக்கிறோம். அழகான கம்பீரமான சிங்க உருவச்சிலையும் பளிங்கு நிறமுள்ள நிற்கும் நிலையில் புத்தர் சிலையும் நம்மை வரவேற்கிறது.

    picture 2   picture 3   picture 6

    picture 4    picture 5

    அருகில் உள்ள புல் வெளிகளில் மயில்கள் கூவிக்  கூவி யாத்ரிகர்களை வரவேற்கிறது.
    ஒரு மரநிழலில் மயில் தோகை விரித்தாடும் காட்சியை காண கண் கோடி வேண்டும். ஒரு மயில் மரத்தின் மேல் நின்றுகொண்டிருந்த்து. இன்னொன்று மரநிழலில் ஆடி அசைந்து நடந்து கொண்டிருந்தது.

    picture 7   picture 8

    அருகில் ஒரு சிறிய வாய்க்கால் ஒடிக்கொண்டிருந்தது. அதில் பல நிறங்களில் மீன்கள் நீந்தி விளயாடிக்கொண்டிருந்தன.
    picture 9   picture 10

    பின்னர் பிரதான கோவிலும் தியான ஹாலிருக்கும் இடத்திற்குச்  சென்றோம். முன்னால் கொடிமரம் போன்றொரு விளக்கு. இரண்டு சிங்கங்களின் உருவச்சிலைகள் மேல் மாடத்தில் புத்தரின் உட்கார்ந்த நிலையில் அமைந்திருக்கும் உருவச்சிலை. படியேறிச் சென்றவுடன் நம்மை வரவேற்பது ஒரு சிறிய கோவில் போன்ற அமைப்பு.
    picture 11   picture 12

    புத்த பெருமானை வணங்கிவிட்டு தியான ஹாலில் நுழைகிறோம். ஒரு அமைதியான சூழ்நிலை. திரியிட்டு எரியும் நில விளக்குகள் மாதிரி மின்சார வட்ட வடிவமான உயர்ந்த விளக்குகள்

    ஒவ்வொரு விளக்கிலும் புத்தரின் உருவம். எங்கிலும் எதிலும் புத்தர். எல்லாமே புத்தர் மயம்.

    பெரிய தியான மண்டபத்திற்குள் நுழைகிறோம். நான்கு சுவர்களிலும் புத்தர் பெருமானின் உருவச்சிலைகள் வரிசையாக ஷெல்ஃபுகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஹாலின் இரண்டு பக்கத்திலும் வரிசையாக சிறிய சதுர வடிவ மெத்தைகள்.  பக்தர்கள் சிவப்பு க்ம்பளம் விரிக்கப்பட்ட தறையில்  சிறிய சதுர வடிவ மெத்தைகளின் முன்னால் அமர்ந்துகொண்டு கைகூப்பி சிரம் தாழ்த்தி அமைதியாக வழிபடுகின்றன்ர். முன்னால் மேடையில் புத்தர் பெருமானின் பெரிய உருவச்சிலை.
    picture 13   picture 14
    அருகில் சென்று பார்த்தால் அந்த பிரும்மாண்டமான உருவம் பரந்தாமன் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு காட்சிகொடுத்து பகவத் கீதையை உபதேசித்த காட்சி நினவுக்கு வருகின்றது. புத்த பகவானும் மஹாவிஷ்ணுவின் அவதாரம்தானே. அமைதியான சூழ்நிலையில் 30 நிமிடம் தியானம் செய்துவிட்டு வெளியில் வருவதற்கு மனது கேட்கவில்லை. அதிகம் வெளிச்சமில்லாத வெளிர் மஞ்சள் நிறமுள்ள விளக்கு ஒளியில் புத்த பெருமானின் தஙக நிறமுள்ள பெரிய உருவச்சிலை. நல்ல இனிமையான மணியோசை. எல்லா பக்தர்களும் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். புத்த பிக்குகள் (ஆண்களும் பெண்களும்) தனித் தனியாக இரண்டு பக்கத்திலும் அமர்ந்து தியானம் செய்கின்றனர். வெளியில் வரும்போது அங்கிருக்கும் அதிகாரி பக்தர்களை உணவத்திற்கு செல்லுமாறு விண்ணப்பிக்கின்றார்.

    பக்தர்கள் அனைவருக்கும் வெஜிடேரியன் உணவு இலவசமாக உணவகத்தில் பகல் 11 மணி முதல் 3 ம்ணி வரை அளிக்கப்படுகிறது.
    picture 15   picture 16

    உணவகத்திற்குச்  சென்று சோயா பாலாடைக்கட்டிகளுடன் காய்கறி சாலட், நூடுல்ஸ் மற்றும் சில சைனீஸ் உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு புல்வெளியில் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறினோம். இந்த மாதிரி ஒரு அமைதியான புத்தர் கோவில் வளாகத்தை பார்க்க கிடைத்த வாய்ப்பை அளித்த அந்த புத்த பெருமானுக்கு வணக்கம் கலந்த நன்றியை தெரிவித்துவிட்டு அடுத்த சுற்றுலா மையத்திற்குப்  புறப்பட்டோம்.

    செம்பூர் நீலு ( நீலகண்டன் )
    ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
    13-07-2014

    Share