Blog

  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 1)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 1)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மனிதவாழ்வுக்கும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனிதன் தன்னுடைய ஆரம்பத்தை ஆரம் பித்ததே மரங்களுக்கு மத்தியிலேதான். அப்படி ஆரம்பித்த மனிதன் நாளடைவில் மரங்களின் இணைப்பிலிருந்து விடுபட்டு  மரங்களை ஒருபக்கமாக ஒதுக்கி விட்டுமரமற்ற இடங்களை வாழ்வாக்கி வாழத் தலைப்பட்டு விட்டான். மனிதன் ஒதுக்கினாலும் மரங்களின்றி மனித வாழ்வு திருப்தி அடைவதாக இல்லை என்றே சொல்லலாம். மரங்களும் மனிதனை விட்டு விடுவதாகவும் இல்லை. காட்டு மரங்கள் என்னும் நிலை மாறி நாட்டு மரங்களிடையே மனிதன் வாழும் ஒரு நிலை உருவாகி இருப்பதை இன்று கண்டு கொள்ளமுடிகிறது எனலாம்.

    இந்திலையில் கற்பகதரு என்று போற்றப்படும் பனையையும்அதன் வரலாற்றையும்அதன் பயன்பாட்டையும்அதன் முக்கிய த்துவத்தையும் அறிந்து கொள்ளுவது பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகிறேன்.

    பனை என்பது உலகில் பல இடங்களையும் தொட்டே வருகிறது எனலாம். உலக அளவில் நோக்குகையில் பனையின் தொகையானது ஏறத்தாள நூற்று ஐம்பது மில்லியன்கள் வரை இருக்கலாம் என்று புள்ளிபிபரங்கள் மூலம் அறியக்கிடக்கின்றது.

    கற்பகதருவான பனையின் தொடக்கம் எப்போது எனும் வினாவுக்கு – சரியான விடையினை பனைபற்றி ஆராய்ந்த தாவரவியலாளர்களே கூறமுடியாத நிலையில் மிகவும் தொன்மை மிக்கதாய் விளங்குகிறது என்பது  முக்கிய கருத்தெனலாம். ஆபிரிக்காவில்த்தான் இம்மரம் முதலில் தோன்றி இருக்கலாம். அதன் பின்னரே  தான் மற்றைய இடங்களுக்கும் பனையானது வந்து சேர்ந்திருக்கலாம் என்னும் கருத்தும் காணப்படுகிறது.

    இந்தியாஇலங்கைஇந்தோனேஷியாமடகஸ்கார்கம்பூச்சியாதாய்லாந்துமியன்மார்என்று பல இடங்களில் பனை காணப்படுகிறது. இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் பெருமளவு பனைகள் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்திலும் கணிசமாக பனை காணப்படுகிறது. கிழக்கில் பனை இருந்தாலும் பனையின் எழுச்சி என்பது இலங்கையில் வடபகுதியிலேயே இருக்கிறது என்றே கொள்ளலாம். ஏனென்றால் அங்கு காணப்படும் வரட்சிதான் முக்கிய காரணமாய் அமைகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    பனை மரத்தைப் பற்றி எங்கள் இலக்கியங்களும் கூறி நிற்கின்றன. இலக்கியங்களில் கையாளப்படும் அளவுக்கு எங்கள் கற்பதரு இருக்கிறது என்றால் அதன் பெருமையினை நாங்கள் கருத்திருத்துவதும் அவசியம் அல்லவா !

    பனையினைத் தமிழர் தங்கள் மரம் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளுவார்கள். நினைப்பதைக் கொடுக்கும் நிலையில் இருப்பதால் இதனை கற்பகதரு என்று போற்றிவருதும் வழமையாய் இருந்துவருகிறது.

    குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை பனையோடு நெருக்கமாய் உறவாடியே வந்திருக்கிறோம்! பனை முறத்தால் எங்கள் மறத் தமிழ் பெண் புலியையே விரட்டினாள் என்பதையும் எங்கள் இலக்கியங்கள் காட்டுவதையும் நாம் கருத்திருத்த வேண்டும் !

    சங்க இலக்கியம் தொடக்கம் எங்கள் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் வரை கற்பகதருவாம் பனையினை வியந்தே நிற்பது கருத்திருத்த வேண்டிய விஷயம் அல்லவா !

      ” ……………………….. ஏந்துபுகழ்
    போந்தை வேம்பே ஆரென வரூஉம்
    மாபெருந்தானை மலைத்த பூவும் “

    என்று தொல்காப்பியம் காட்டி நிற்கிறது. இங்கு பனையினைக் காணவில்லையே என்று எண்ணுகிறீர்களா? “போந்தை” என்னும் சொல் பனையின் பூவினைக் குறிக்க சங்ககாலம் பயன்படுத்திய தாகும். அதனையே தொல்காப்பியம் காட்டி நிற்கிறது. “ஏந்துபுகழ் போந்தை” என்றால்  – உயர்வான புகழினை உடைய பனம் பூ – என்பது அர்த்தமாகும். பனையானது பழந்தமிழர் வாழ்வில் எந்தளவுக்குச் சிறப்பினைப் பெற்றிருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய விஷயம்தானே !

    புறநானூறிற்றிலும் பனையின் பெருமை சுட்டிக் காட்டப்படுகிறது.

      ” கையது வேலே காலது புனைகழல்
    மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
      வட்கர் போகிய வளரிளம் போந்தை “

    கையிலே வேல்காலிலே வீரக்கழல்உடலிலிலே வேர்ப்புகழுத்திலே பசும்புண்இவற்றுடன் பனம்பூம் மாலையும் – உடைய வனாய் அதியமான் என்னும் அரசன் காணப்பட்டான் என்று புற நானூறு புகன்று நிற்கிறது. இங்கும்போந்தை” என்னும் சொல்லானது பனம்பூவினாலான மாலையைக் குறிக்க வந்திருகிறது. அரசனின் போர்க்கோலத்தில் பனையின் பூவினால் ஆகிய மாலை அக்காலத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கி இருக்கிறது என்பது பனைக்குக் கிடைத்த முக்கியத்துவத்தை தெரிவிக்கிறது அல்லவா!

    இரும்பனையின் குரும்பை நீரும்” – (பனை நுங்கின் நீர்), “இரும் பனை வெண்தோடு மலைந்தேன் அல்லன்” (பனம்பூச் சூடிய சேரன் அல்லன்)

    என்றும் புறநானூறு காட்டி நிற்கிறது. பனைபற்றிய எடுத்துக் காட்டுகள் புறநானூற்றில் இன்னும் பல இடங்களில் சுட்டப்படுவதும் கருத்திருத்த வேண்டியதே. மடல் இலக்கியத்திலும் பனையினைக் காணுகிறோம்.

    கலித்தொகைநற்றிணைகுறுந்தொகைஅகநானூறு ஆகிய சங்கத் தமிழும் பனையினைத் தொட்டுக் காட்டுகின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    சிலம்பும்வள்ளுவமும் பனையினை விட்டுவிடவில்லை. சிலம்பில் மூவேந்தர்களுடைய மாலைகள் பற்றி வரும்வேளை பனையும் வந்து நிற்கிறது.

        ” தோள் நலம் உணீய கம்பைப் போந்தையொடு “

        ” பலர் தொழ வந்து மலாவிழ் மாலை
    போந்தைக் கண்ணிப் பொலம்பூ தெரியல் “

    என்னும் சிலம்பின் பாடல்கள் பனையின்பூ மாலைகள் பற்றிக் காட்டி நிற்கிறது.

      “தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன் தெரிவார்”

    என்று வள்ளுவம் பனையினைப் பக்குவமாய் காட்டி இருக்கிறது.

    கடையார் நட்பிற் கமுகனையர் ஏனை
    இடையாயார் தெங்கின் அனையர் – தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்றிட்டதே
    தொன்மை யுடையார் தொடர்பு “

    என்று நாலடியார் என்னும் அறநூல் பனையின் பெருமையையைப் பறைசாற்றி நிற்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். நால டியார் பனையினைப் போற்றுவதைக் காண்பதிலிருந்து பனையென் னும் கற்பகதரு அக்காலத்தும் பெருமைமிக்கதாய் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது அல்லவா !

      ” நடுவூருள் வேதிகை கற்றுக்கோட் புக்க
    படுபனை யன்ன பலர்நச்ச வாழ்வார்
    குடிகொழுத்தக்க கண்ணுங் கொடுத்துண்ணா மக்கள்
    இடுகாட்டுள் ஏற்றைப் பனை “

    நாலடியார் இங்கும் பனைபற்றி சொல்கிறது. பெண்பனையினை யாவரும் – நல்லவர்களை அதாவது வள்ளல்களை விரும்புவது போல் ஊர் நடுவே விரும்பிபுவர் என்று காட்டுவது நோக்கத்தக்கது. ஆண்பனை அப்படி அல்ல என்று காட்டினாலும் பனைபற்றிய நிலை காட்டப்படுவது கருத்திருத்த வேண்டியதே !

    (வளரும்)

    Share
  • மணியோசை

    மணியோசை

    பாஸ்கர் சேஷாத்ரி

    ஆராய்ச்சி மணியொன்றை அங்க மன்னன் கட்டினான்
    யார் ஆட்சி பாரென்று ஊர் முழுதும் கொட்டினான்
    ஏதோவொரு அலங்காரம் எனக் கண்டவர்கள் கருதினர்
    விளையாட்டுப் பொம்மையெனக் குழந்தைகள் சிரித்தனர் .
    மணியடிக்க ஆளில்லை என மன்னவன் மயங்கினான்
    குறைகளே இல்லையெனக் குதூகலித்தான் கோமகன்
    மாடு மேய்க்கும் சிறுவனுக்கோ அந்த மணியடிக்க ஆசை
    அவன் உரு பார்த்து கரு பார்த்து, காவலர்கள் விரட்டினர்
    குறைசொல்ல ஒன்றுள்ளதெனக் குயவன் மகன் கூறினான்
    என்னவெனக் கேள் என மன்னவனும் அதட்டினான்
    கயிறு கட்ட மறந்தீரே கடமை சார்ந்த காவலரே
    மாடுபிடி கயிறு இது மணியில் நீர் கட்டுவீர் என்றான்
    மன்னவனும் தலையசைத்தான் அதுவும் சரியென்று
    ஆசை கொண்ட அழகா போய் மணியடித்துப் பாரென்றான்
    ஆசை வேறு குறை வேறு எனச் சொல்லியே மறைந்தான்

    Share
  • குறளின் கதிர்களாய்…(473)

    குறளின் கதிர்களாய்…(473)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(473)

    கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர்
    சொல்லாடப் போஒ முயிர்.

    – திருக்குறள்-1070 (இரவச்சம்)

    புதுக் கவிதையில்…

    இரப்பவர்க்கு
    ஈயாது ஒளிப்பவர்
    இல்லையெனச் சொன்னதுமே
    இரப்பவரின் உயிர் போய்விடுகிறது..

    இருப்பதை
    இல்லை யென்று
    சொல்பவருக்கு மட்டும்
    உயிர் போகாமல்
    எங்கேபோய்
    ஒளிந்துகொள்கிறதோ…!

    குறும்பாவில்…

    ஈயார் இல்லையெனச் சொன்னதுமே
    இரப்பாருயிர் போகையில், இல்லை என்பாருயிர்
    எங்குதான் போய் ஒளிந்திருக்கும்…!

    மரபுக் கவிதையில்…

    இருக்கும் பொருளை மறைத்துவைப்போர்
    இல்லை யென்றே சொன்னதுமே
    வருந்தி இரப்போர் உயிரதுவும்
    வாழும் உடலைப் பிரிந்திடுமே,
    இருந்தும் கொடுக்க மனமின்றி
    இல்லை எனவே சொல்வோரின்
    இருக்கும் உயிரும் போகாமல்
    எங்கே போய்த்தான் ஒளிந்திடுமோ…!

    லிமரைக்கூ…

    இலையென ஈயார் சொன்னால்
    இரப்பாருயிர் போய்விடும், இல்லை என்பாருயிர்
    எங்கே ஒளித்திடும் பின்னால்…!

    கிராமிய பாணியில்…

    இருக்கதக் குடுக்கணும்
    எரக்கவங்களுக்குக் குடுக்கணும்,
    எதயும் மறைக்காமக் குடுக்கணும்
    இல்லண்ணு சொல்லாமக் குடுக்கணும்..

    இருக்கிறத மறச்சிவச்சி
    இல்லண்ணு சொன்னதுமே
    எரப்பவன் உசிரு போயிடுமே,
    இருக்கதக் குடுக்காம
    இல்லண்ணு சொன்னவன் உசிரு
    எங்கதான் போயி ஒளிச்சிடுமோ
    தெரியல்லியே..

    அதால தெரிஞ்சிக்கோ,
    இருக்கதக் குடுக்கணும்
    எரக்கவங்களுக்குக் குடுக்கணும்,
    எதயும் மறைக்காமக் குடுக்கணும்
    இல்லண்ணு சொல்லாமக் குடுக்கணும்…!

    Share
  • மம்மர் அறுக்கும் மருந்து

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்த வாழ்வு வசதி படைத்ததாய், இவ்வுலக இன்பங்களை நுகரக்கூடியதாய் அமையப் பொருள்வளம் அவசியமான ஒன்று. அதனால்தான் ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று வள்ளுவப் பேராசானும் அக்கருத்தை ஆமோதித்தார். ஆயினும், பொருள் என்றும் நம்மைவிட்டு நீங்காமலிருக்கும் தன்மைத்தா என்றால் இல்லை என்றே பதிலிறுக்க வேண்டிவரும்.

    நிலையாத இயல்புடையவை எவை என ஆராய்ந்த நம் முன்னோர் செல்வம், இளமை, யாக்கை ஆகியவை நிலையாத்தன்மை கொண்டவை என்று தம் பட்டறிவின் வாயிலாய் உணர்ந்து அவற்றை உலகுக்கு உரைத்தனர்.

    பொருளின் சிறப்பைப் போற்றிய வள்ளுவரும் அதன் இயல்பை வரையறுத்தபோதில், ’அற்கா இயல்பிற்றுச் செல்வம்’ என்றும், ’கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்’ என்றும் உரைத்து அதன் நிலையாத்தன்மையை அழுத்தமாய் அவனிக்கு அறியத்தந்தார்.

    செல்வத்தின் இயல்பை வள்ளுவர் கூத்தாட்டு அவையில் சேரும் கூட்டத்துக்கு ஒப்பிட, நாலடியாரோ வண்டியின் சகடக்காலுக்கு ஒப்பிடுகின்றது.

    துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
    பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
    சகடக்கால் போல வரும்.
    (நாலடி – செல்வம் நிலையாமை – 2)

    ”மக்களே! குற்றமற்ற செல்வம் உண்டானால், அது தொடங்கி வயலில் ஏறு நடந்ததால் கிடைத்த உணவை அனைவரோடும் பகிர்ந்து உண்க; ஏனெனில், செல்வம் என்றும் ஒருவர்மாட்டு நிலைத்திருப்பதில்லை. அதன் இயல்பு வண்டியின் சக்கரம்போல் மேலும் கீழும் புரள்வது; இன்று ஒருவரிடம் இருக்கும் செல்வமானது நாளை வேறொருவரிடம் சென்றுவிடும்” என்கின்றது.

    எளிதில் அழியக்கூடிய பொருட்செல்வத்தின் இயல்புக்கு நேரெதிரான அழியாச்செல்வம் ஒன்றுண்டு; அதுதான் கல்வி.

    செல்வத்தின் நிலையாத்தன்மையை விளம்பிய அதே நாலடியார் கல்விகுறித்துப் பேசும்போது, ”இப்பிறவிக்கு நன்மை பயப்பதாய், பிறருக்கு ஈவதால் குறைவுபடாததாய், கற்போர் தம்மை அறிவாலும் புகழாலும் விளங்கச்செய்வதாய், தாம் உள்ளபோது அழியாது விளங்கி, அறியாமை எனும் மயக்கத்தை (மம்மர்) நீக்கும் கல்வியெனும் மருந்தினையொத்த பிறிதொன்றை யாம் எவ்வுலகத்திலும் காணவில்லை என்று உறுதிபடத் தெரிவிக்கின்றது.

    இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
    தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
    எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
    மம்மர் அறுக்கும் மருந்து.
    (நாலடி: கல்வி – 132)

    நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கண நூல்களில் காலத்தால் மூத்ததான தொல்காப்பியம், கல்வி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் நேரடியாகப் பேசாவிடினும், தலைவன் தலைவியைப் பிரிந்துசெல்வதற்கான காரணங்களுள் முதலாவதாக ஓதலைக் குறிக்கின்றது. ஓதல் என்பதனை வேதம் ஓதுதல், கல்வி கற்றல் ஆகிய இரண்டுக்கும் பொதுவான சொல்லாக நாம் கருதலாம்.

    ஓதல் பகையே தூதிவை பிரிவே. (தொல்: அகத்திணையியல் – 2)

    கல்விக்கான தலைவனின் பிரிவு மூன்றாண்டுகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்ற வரையறையையும் தொல்காப்பியர் தருவதைக் காண்கையில் நிச்சயம் இது உயர்கல்வியையே குறிப்பதாகக் கொள்ளலாம்.

    மனிதனுக்குப் பெருமிதம் ஏற்படுவதற்கான நான்கு காரணங்களைப் பட்டியலிடுகின்றார் தொல்காப்பியர். அவை, கல்வி, வீரம், புகழ், கொடை ஆகியவை. இந்நான்கிலும் கல்வியை முதலாவதாக வைத்திருப்பது கல்வியால் கிடைக்கும் பெருமிதம் மற்றவற்றினும் உயர்ந்தது எனும் குறிப்புப் பொருளைத் தருகின்றது.

    கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
    சொல்லப் பட்ட பெருமிதம்
     நான்கே. (தொல்: மெய்ப்பாட்டியல் – 253)

    வாழ்வியல் அறிஞரான வள்ளுவப் பெருந்தகை, ’கல்வி’ என்றோர் அதிகாரம் வகுத்து அதில், அழியாது நிலைத்திருக்கும் விழுச்செல்வம் கல்வியே என்றும், கற்றோரே முகத்தில் கண்பெற்றோர் என்றும் அழுத்தந்திருத்தமாய்ப் பதிவுசெய்திருப்பது கல்வி குறித்த அவரின் உயரிய பார்வையை உலகுக்கு உணர்த்துகின்றது.

    பிற்கால ஔவையார் தம்முடைய கொன்றை வேந்தன் எனும் அறநூலில், கையிலிருக்கும் பொருளைவிட மெய்ப்பொருளாய்ப் போற்றத்தக்கது கல்வியே என்கின்றார்.

    ”கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.”

    அம்மட்டோ? மன்னனைவிடவும் கல்வியாளன் பெருமைக்குரியவன்; மன்னனுக்கு அவனுடைய நாட்டில் மட்டுமே பெருமையும் சிறப்பும்; ஆனால், கல்வியாளனுக்கோ சென்றவிடமெல்லாம் சிறப்பு என்று கற்றோனின் சிறப்பைக் கடலளவு உயர்த்துகின்றார் இம்மாதரசி தம்முடைய மூதுரையில்.

    ”மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
    மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
    தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
    சென்றஇட மெல்லாம் சிறப்பு.”
    (மூதுரை – 26)

    புலவர்களும் அறிஞர்பெருமக்களும் கல்வியைப் போற்றுவதில் பொருளிருக்கின்றது. ஏனென்றால் அரசர்களிடத்தும் வள்ளல்களிடத்தும் தம் புலமைச் சிறப்பை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு பொருள் கிடைக்கும்; அழியாப் புகழ் கிடைக்கும். ஆனால், செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களாக அக்காலத்தில் விளங்கிய அரசர்களுங்கூடப் பொருட்செல்வத்தைப் போற்றாது கல்வியைப் போற்றியிருப்பதும் கற்கும் முறைகளைச் சாற்றியிருப்பதும் கருதத்தக்கது.

    வடவாரியப் படையை வென்றதனால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று பெயர்பெற்ற பாண்டிய மன்னனொருவன், கல்வியின் சிறப்பை விரிவாய்ப் பதிவுசெய்திருக்கும் பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

    அப்பாடல், ”மாணவன் ஒருவன் தனக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவைப்படும் காலத்தில் உதவியும், மிகுதியான பொருளை குருதட்சணையாகக் கொடுத்தும், வெறுப்பின்றிக் கல்விகற்றல் நல்லது. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள் கல்வியில் சிறந்திருக்கும் பிள்ளைபால் அந்தத் தாய்க்குச் சற்றுக் கூடுதல் அன்பிருக்கும். ஒரே குடியில் பிறந்த பலருள் வயதில் மூத்தவனை வருக என்றழைக்காது அறிவில் பெரியவனையே அரசனும் வருக என்றழைத்துத் தனக்கு உற்றதுணையாக்கிக் கொள்வான். வேறுபட்ட நான்கு குலங்களுள் கீழ்க்குலத்தோன் என்று கருதப்படும் ஒருவன் கல்வியில் மேம்பட்டால் மேற்குலத்தோன் எனப்படும் ஒருவனும் அவனிடம் கல்விகற்கச் செல்வான்” என்கின்றது.

    ”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
    பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
    சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்
    ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
    மூத்தோன் வருக என்னாது அவருள்
    அறிவுடை யோனாறு அரசும் செல்லும்
    வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.”
    (புறம்: 183)

    நெடுஞ்செழியனின் கருத்துக்களை அப்படியே அடியொற்றி 16/17ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னனான அதிவீரராம பாண்டியன் என்பவனும் கல்வியின் சிறப்பை நறுந்தொகை (வெற்றிவேற்கை என்ற பெயருமுண்டு) எனும் தன்னுடைய நூலில் வடித்துத் தந்திருக்கின்றான்.

    ”கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சை புகினும் கற்கை நன்றே
    நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
    கற்றில னாயின் கீழிரு ப்பவனே
    எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
    அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்
    அறிவுடை ஒருவனை அரசும் விரும்பும்”
    என்கிறான்.

    வள்ளுவம்,

    மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்திலர் பாடு.
    (குறள்: 409) என்றுரைப்பதும்,

    நாலடியார்,

    …கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந் தோரைத்
    தலைநிலத்து வைக்கப் படும்.
    (நாலடி – கல்வி: 133) என்றுரைப்பதும் பாண்டிய மன்னர்கள் இருவரின் கருத்தையும் அரண்செய்வதாய் அமைந்திருக்கின்றன.

    இப்பாடல்களின் வாயிலாக நாமறிகின்ற மற்றொரு செய்தி, தொழிலின் அடிப்படையிலான குல வேறுபாடுகள் சங்க காலத்திலேயே தோற்றம் கொண்டுவிட்ட போதினும் அவை மாந்தரின் கற்றலுக்குத் தடையாக இல்லை என்பதே.

    இடைக்காலத்தில் தமிழகத்தில் நுழைந்த பிற சமயங்கள் தமிழ்ச்சமூகத்தில் நிகழ்த்திய வாழ்வியல் மாற்றங்களால், அனைவர்க்கும் பொதுவாயிருந்த கல்வியானது ஒருசிலர்க்கு மட்டுமே உரித்தானதாகவும், பெண்கல்வி தடைசெய்யப்பட்ட ஒன்றாகவும் ஆகியிருக்க வேண்டும். அதன்பிறகு ஆண் பெண் இருபாலர்க்குமான கல்வி என்பது ஆங்கிலேயர் காலத்திலேயே இங்கே சாத்தியப்பட்டிருக்கின்றது. அப்போதும்கூடப் பெண்கள் கல்விபெறுவதை நம் சமூகம் ஆதரிக்கவோ வரவேற்கவோ இல்லை என்பது கண்கூடு.

    இருபதாம் நூற்றாண்டுக் கவிஞரான மகாகவி பாரதி பெண்கல்விக்கு ஆதரவாக முதலில் உரிமைக் குரலெழுப்பினார்; விடுதலைக் கும்மி கொட்டினார்.

    ”ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற
    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
    பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்
    எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்
    இளைப்பில்லை காணென்று கும்மியடி”

    பாரதியின் சிந்தனைகள்மீது கொண்ட விருப்பத்தால் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்ட புரட்சிக்கவியான கனகசுப்புரத்தினமும்,

    ”பெண்கட்குக் கல்வி வேண்டும்
    குடித்தனம் பேணு தற்கே
    பெண்கட்குக் கல்வி வேண்டும்
    மக்களைப் பேணுதற்கே
    பெண்கட்குக் கல்வி வேண்டும்
    உலகினைப் பேணுதற்கே
    பெண்கட்குக் கல்வி வேண்டும்
    கல்வியைப் பேணுதற்கே

    கல்வியில் லாத பெண்கள்
    களர்நிலம் அந் நிலத்தில்
    புல்விளைந் திடலாம் நல்ல
    புதல்வர்கள் விளைதல் இல்லை

    …வானூர்தி செலுத்தல் வைய
    மாக்கடல் முழுத ளத்தல்
    ஆனஎச் செயலும் ஆண்பெண்
    அனைவர்க்கும் பொதுவே…”

    என்று பெண்கல்வியின் அவசியத்தையும், ஆணும் பெண்ணும் நிகராய் நின்று பணிகள் அனைத்தையும் பால்வேறுபாடின்றிச் செய்யவேண்டியதன் தேவையையும் சுட்டிக்காட்டினார்.

    சாதி, மத வேற்றுமையின்றி ஆண், பெண் பேதமின்றி அனைவர்க்கும் கல்வி கிட்டவேண்டும் எனும் விழிப்புணர்வைக் கவிஞர்களும் சீர்திருத்தவாதிகளும் தொடர்ந்து வலியுறுத்திய பின்னரும், சாதி அடிப்படையில் மாணவர்களின் கல்விக்குத் தீ மூட்டும் வழக்கம் இன்றும் நம் சமூகத்தில் தொடர்வது வேதனையின் உச்சம். ஆதிக்க மனோபாவத்தில் ஒடுக்கப்பட்ட சாதியாரின் கல்வியையும் நல்வாழ்வையும் ஒழித்துக்கட்ட நினைக்கும் புல்லறிவினர்க்குக் கடுமையான தண்டனையைக் காவல்துறையும் நீதிமன்றங்களும் வழங்கவேண்டும் என்பதே சமூக நல்வாழ்வில் அக்கறை கொண்டோரின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

    மாந்தர்களே! மம்மர் அறுத்து இம்மை வாழ்வைச் செம்மையாக்கும் கல்வியைப் போற்றுவோம்; வாழ்வில் உயர்வோம்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை
    1. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    2. தொல்காப்பிய மூலமும் இளம்பூரணர் உரையும்.
    3. நாலடியார் மூலமும் மகாதேவ முதலியார் அரும்பொருள் விளக்கமும்.
    4. புறநானூறு மூலமும் உ.வே.சாமிநாதையர் உரையும்.
    5. நறுந்தொகை மூலமும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரையும்.
    6. பாரதியார் கவிதைகள் – வானவில் பிரசுரம்.
    7. பாரதிதாசன் கவிதைகள் – அருள்சுடர் பதிப்பகம்.

     

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-10

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள்-10

    மீனாட்சி பாலகணேஷ்

              ஈழத்தில் எழுதப்பட்ட மற்ற சில பிள்ளைத்தமிழ் நூல்களும் பார்வைக்குக் கிட்டியுள்ளன. அவற்றுள் ஒன்று திருமால் மீதானது. மற்றவை நாவலர் பிள்ளைத்தமிழ், பாரதி பிள்ளைத்தமிழ், சுந்தரர் பிள்ளைத்தமிழ் முதலியனவாம். இவற்றின் பெருமைகளைக் காண்போம்.

                                            “””””””””””””””””””””””””””””””””””””””

    1. வல்லிபுர மாயவன் பிள்ளைத்தமிழ்

              இதனை இயற்றியவர் மு. கந்தையா என்னும் புலவர். 1989ஆம் வருடம் முதல் பதிப்பு கண்டுள்ளது. இப்புலவர் பெருமான் பிள்ளைத்தமிழ் பாடுவதில் வல்லவர். மாவை பிள்ளைத்தமிழ், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் பிள்ளைத்தமிழ் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார் என முன்பே கண்டோம்.

              முதலில் வல்லிபுரத்தைப் பற்றிய சில விவரங்களைக் காண்போம். வல்லிபுரத் திருக்கோவில் ஈழத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. சிங்கை மன்னர்களால் ஆளப்பட்டு சிங்கைநகர் எனப் பெயர் பெற்ற இடம்தான் வல்லிபுரம். புராதனமான க்ஷேத்ரம் எனவும் பெருமை பெற்றது. வள்ளிபுரம் எனவும் சில குறிப்புகளில் காணப்படுகின்றது. வல்லிபுரத்துடன் தொடர்புடைய சில வரலாற்றுக் குறிப்புகள், புராணக்கதைகள், மக்களது வாழ்வியல் குறிப்புகள் ஆகியன இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

              பிள்ளைத்தமிழிலக்கணப்படி காப்புப்பருவத்தில் பிள்ளையைக் காக்க முதலில் திருமாலை வேண்டித் துவங்கியுள்ளார் ஆசிரியர். இந்நூல் பத்துப்பருவங்களில் பருவத்திற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டமைந்தது.

              அனைத்துப் பருவப் பாடல்களும் யாப்பும், சந்தமும், பொருளும் நயமும் இனிதமைந்து விளங்குகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு வருகைப் பருவப் பாடலைக் காண்போம்.

              முதலையின் வாயிலகப்பட்டு ஆதிமூலமே எனவழைத்த யானைக்கும் வல்லிபுரத்தில் வாழ்ந்த பக்தை ஒருத்திக்கும் (இவர் வரலாறு அறியக் கிட்டவில்லை) மோட்சத்தை அருளிய அமலப் பிரான் வருக! அன்றொருநாள் காத்திருந்த சிசுபாலனை வென்று ருக்மிணியை அணைத்த (மணம் கொண்ட) கண்ணாளனே, வருக! பக்திச்செங்கனி ரசம் எனும் தேனைப் பொழியும் தமிழ்ப் பாகாய்க் கனிந்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனும் பாடல்களை (ஆழ்வார்கள் எனும் உன் அடியார்கள்) இயற்ற அருள்பாலித்த பரமனே வருக!

              வல்லிபுரம் வனமும் புனங்களும் மலிந்தது; அங்கு தலையைக் கொத்திச் சிதறச் செய்யும் மயிலும் அதன் பகையான அரவும் குலவி விளையாடும் புதர்கள் உண்டு; கொல்லைப்புறங்களில் மான் புல்லினை மேயும். அவ்வல்லிபுரத்தின் நாதனே வருக. வேதத்தின் மூலம் அறியவொண்ணாதது; ஆதலால் அது வித்தில் விளையாதது எனப் போற்றப்பட்டது. அந்த வேதத்தின் மூலம் அவ்விறைவனே. அவனே வித்து, முளை, விளைவு, அதன் பயன் என யாவுமாகப் பரிணமிப்பவன். அவனே முதல் விகிர்த வேதகன். அவனை வருகவே என விளிக்கிறார்.

             அத்திக்கும் வல்லிபுர பக்தைக்கும் முத்தியருள்

                              அமலப்பிரான் வருகஅன்

                     றண்ணாந் திருந்தவன் அயிர்க்கருக் மிணியையணை

                              கண்ணாளன் வருகவருக

             பத்திச்செங் கனிரசத் தேன்பிலிற் றித்தமிழ்ப்

                              பாகாய்க் கனிந்தஞ்சானப்

                     பரவசத் தீஞ்சுவைப் பாடல்நா லாயிரம்

                              பாலித்த பரமவருக

             கொத்திச்சி ரங்குதறு மயிலயல் கோளராக்

                              குலவியா டும்புதர்கொள்

                     கொல்லையம் புறவுமான் புல்லுமேய் புனமுமலி

                              வல்லிபுர நாதவருக

             வித்தில்விளை யாததோர் வேதமூ லம்வருக

                              விமலப் பிரான்வருகவே

                     வித்துமுளை விளைவுபயன் யாவுமாய் மெத்துமுதல்

                              விகிர்தவே தகவருகவே.

              மேலும் பலப்பல பாடல்கள். வாசகர்கள் படித்து மகிழ வேண்டும்.

                                  “””””””””””””””””””””””””””””””””””””””

    1. நாவலர் பிள்ளைத்தமிழ்

              இந்த பிள்ளைத்தமிழ் நூலானது மு. கந்தையா அவர்களால் இயற்றப்பெற்று காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரால் 1979ம் ஆண்டு முதற்பதிப்புக் கண்டுள்ளது,

              ஆறுமுக நாவலரின் தமிழ்ப்பணியை அறியாத தமிழ் மக்கள் இல்லை எனலாம். இவர் ஒரு இலங்கைத் தமிழர். யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழுக்கும் சைவத்துக்கும் இவர் செய்த பணிகள் அளப்பரியன. முதல்முறையாகத் தமிழ் நூல்களை நல்ல முறையில் பதிப்பித்தவர். இவற்றுள் திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூல் காண்டிகையுரை, திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் இவற்றைச் சிறப்பாகக் கூறலாம்.

              நாவலர் தமிழ் மட்டுமன்றி வடமொழியாகிய சமஸ்கிருதம், ஆங்கிலம் இவற்றிலும் கூட நன்கு தேர்ச்சி பெற்றவர். இவரது தமிழ், சைவப்பணி இலங்கையில் மட்டுமின்றித் தமிழகத்திலும் பரவியிருந்தது.  சென்னையில் தங்கசாலை எனுமிடத்தில் வித்தியானுபாலன இயந்திரசாலை எனும் அச்சகம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். இவர் நினைவாக இவரைப் போற்றும் வகையில் இலங்கை அரசு தபால்தலை ஒன்றினை வெளியிட்டது.

              இவர்மீது பெருமதிப்புக் கொண்டிருக்கும் பெரியோர்களும் அறிஞர்களும் பலர். அவர்களுள் ஒருவரே இப்பிள்ளைத்தமிழினையும் இயற்றியுள்ளார். இந்நூலில் அன்னார் தமிழுக்குச் செய்த தொண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

              பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்குட்பட்டு காப்பு முதல் சிறுதேர்ப்பருவம்வரை பத்துப்பருவங்களும் பாடப்பட்டுள்ளன. நாவலரின் கம்பீரமான தோற்றமானது பலராலும் போற்றப்பட்டது. இதனைப் பிள்ளைத்தமிழ்ப் புலவர் பொருளாலும் செய்யுளின் சந்தத்தாலும் ஒரு செங்கீரைப்ப்ருவப் பாடலில் அழகுற விவரிக்கிறார்.

              பொங்கியெழும் சிவப்பொலிவு எங்கும் விரிந்து பரவி நிற்கின்ற தன்மையுள்ளவனே செங்கீரையாடுக; இந்தப் பூமியில் மலிந்துள்ள தீதுகளைனின்றும் நம்மைக் காக்கும் பொருளானவனே செங்கீரையாடுக; கங்கையைச் சடையிலணிந்த சிவபெருமான் தந்தருளிய மதலைக் கனியானவனே செங்கீரை; கனிரசம் நிரம்பிய கரும்பே, கரும்பினின்றும் கிட்டும் கற்கண்டே செங்கீரையாடுக; சிவநெறியினை இகழ்பவர்களையும் பழந்தமிழ்ப் பண்பாட்டை இகழ்பவர்களையும் அவர்கள் படாடோபங்கள் ஒடுங்கும்படிக்கு குற்றங்கள் களைந்து அவர்களெதிரே சென்று சிங்கமெனத் திகழும் நாவலனே செங்கீரையாடுக! தெய்வ நலம் பெருக விளங்கும் சைவ குலாதிபனே செங்கீரையாடுக!

                       பொங்கு சிவப்பொலி வெங்கு மெழுந்தொளிர்

                                      பொற்பே செங்கீரை

                              பூதல மிசைமலி தீதற நமையருள்

                                      பொருளே செங்கீரை

                     கங்கை புனைந்த சிவன்தரு மதலைக்

                                      கனியே செங்கீரை

                              கனிரச மல்கு கரும்பே கரும்பமர்

                                      கண்டே செங்கீரை

                     பங்க மறச்சிவ நெறியிகழ் பரிசினர்

                                      பழந்தமிழ்ப் பண்பிகழ்வார்

                              படாடோ பங்க ளொடுங்க எதிர்செல்

                                      பயங்கர கெம்பீர

                     சிங்க மெனத்திகழ் துங்கநன் னாவல

                                      செங்கோ செங்கீரை

                              தெய்வ நலங்கிளர் சைவ குலாதிப

                                      செங்கோ செங்கீரை.

    எனும் இப்பாடல் வரிகள் நாவலருக்குரிய மிடுக்குடன் தாமும் நடந்து செல்வதாக அணிந்துரை எழுதியுள்ள யாழ் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த திரு. வித்தியானந்தன் கூறுகின்றார்.

              இது போலும் பல இனிய பாடல்களைக் கொண்டு திகழ்வது இந்நூல். அனைவரும் படித்து இன்புற வேண்டும்.

                                  “””””””””””””””””””””””””””””””””””””””””””

    1. பாரதி பிள்ளைத்தமிழ்

              இந்த பிள்ளைத்தமிழ் நூல் அரச பொற்கிழிப் புலவர் க. த. ஞானப்பிரகாசம் அவர்களால் இயற்றப்பட்டு 1983ம் ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

              பாரதியார்மீது சில பிள்ளைத்தமிழ் நூல்கள் தமிழ்நாட்டுப் புலவர்களாலும் எழுதப்பட்டுள்ளது.

              இந்த நூலில் வாழ்த்துரையாக ஒரு பாடலில்,

                        ஞானப் பிரகாசம் நலிந்ததமிழ் தானுயர

                     வானப் புகழ்தந்த வல்லவனைத்- தானப்பேர்

                     பிள்ளைத் தமிழ்பாடிப் பெட்பாம் அறம்பாடி

                     வள்ளல் அமிழ்தீந்தான் வாழ்த்து, எனக் காணலாம்.

              செவிக்கு மிகவும் இனிமையான பாடல்களாலமைந்த பிள்ளைத்தமிழ் நூலிது.

              எடுத்துக்காட்டாக முத்தப்பருவத்துப் பாடலொன்று:

              வெண் தாமரைமலரில் வீற்றிருக்கும் கலைமகளின் வீணையிசை காதினை அள்ளுகிறது; (தமிழை வளர்த்த) மூவேந்தர்களாகியோரின் சபை தனிலே சாமரை வீசும் (தமிழினை வளர்க்கும் அரசர்களை தமிழ்ப் புலவர்கள் மரியாதை செய்வர் எனக் கொள்ளல் வேண்டும்) கொள்ளவே குறையாத தெள்ளுதமிழ்ப் புலவர்களின் கூட்டம் அனைத்தும் வாழ்த்துகின்றனர். அரச சிம்மாசனத்தினில் தமிழ் இவ்வாறு அழகாக கொலு வீற்றிருக்கின்றது. அந்தத் தமிழை பாரதி எனும் குழந்தை கவர்ந்து வந்து விட்டது; பின் என்ன செய்கின்றது? உள்ளமெனும் தாமரையில் வைத்து வீரம் முதலான சுவைகளையும் நயங்களையும் அதில் ஏற்றி, மென்மையான பட்டுத்துகிலைச் சாற்றி, அணிகளால் அலங்காரங்கள் செய்து (இலக்கிய நயங்களான அணிகள் முதலியவற்றால் அலங்கரித்து) வீதியில் வருவோர்கள் அனைவரும் தங்கி இளைப்பாறும் அரசமரத்தின் கீழே வைத்துக் காப்பாற்றியது. இது எத்தகைய உயர்வான செயல்! அதனுடைய பொன்வாயின் முத்தத்தைப் புலவர் வேண்டுகிறார். புதுமையான இலக்கியங்கள் எனும் கடலில் புகுந்து முத்தான பாடல்களைக் கொடுத்தவனே! உன் பொன்வாயால் ஒரு முத்தம்தர வேண்டும் எனக் கேட்கிறார்.

             வெள்ளைமலர்க் கஞ்சமிசை வீற்றிருந் திடுதெய்வ

                              வீணையிசை காதை யள்ள

                     வேல்வேந்தர் மூவர்செங் கோலேந்து வேத்தவையில்

                              வீசுசா மரை யிரட்ட

             கொள்ளவே குறையாத தெள்ளுதமிழ்ப் புலவோர்தங்

                              கூட்டமெலாம் வாழ்த் தெடுப்பக்

                     கொற்றமுறு சிம்மாச னந்தனிலே கோலமொடு

                              கொலுவீற் றிருந்த தமிழை

             மெள்ளவே கவர்ந்துவந் துள்ளமெனுங் கமலத்தில்

                              வீரசுவை நயங்க ளேற்றி

                     மென்பட்டுச் சாத்தியணி யலங்காரச் சரமிட்டு

                              வீதிவரு வோர்கள் தங்கும்

             புள்ளுலவும் அரசமரத் தடிவைத்துப் புரந்தவா!

                              பொன்வாயின் முத்த மருளே:

                     புத்திலக்கி யக்கடற் புகுந்துமுத் தெடுத்தவா!

                              பொன்வாயின் முத்த மருளே.

              புதுமையான கருத்தமைந்த பாடல்! இதுபோலும் பற்பல. நூலைப் படித்துச் சுவைக்க வேண்டும்.

                                  “”””””””””””””””””””””””””””””””””””””

    1. சுந்தரர் பிள்ளைத்தமிழ்

              இப்பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர்  சோ. தியாகராச பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்றது. 1982ம் ஆண்டில் முதற்பதிப்பைக் கண்டுள்ளது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, யாழ்ப்பாணத்தின் வெளியீடாகும் இது.

              சைவக் குரவர்கள் நால்வரில் சுந்தரரை மட்டுமே ஏன் பாடினார் என நாம் வியக்கலாம். அதற்கான காரணத்தை அவரே முன்னுரையில் கூறியுள்ளார். சுந்தரர் தேவாரத்தில் முப்பது ஆண்டுகளாக ஈடுபட்டவர் அதனால் எழுந்த ஆவலால் சுந்தரர் பிள்ளைத்தமிழைப் பாடினார். சுந்தரரின் வாழ்க்கை வரலாறு தனக்கு மிகவும் இனிப்பானது எனக் கூறுகிறார். கயிலையிலிருந்தவர் இறைவன் திருவுள்ளத்தால் பூவுலகில் பிறந்து, வாழ்ந்து பின் கயிலைக்கே திரும்பியது அவர் சரிதம்.

              திருவாரூர்ப் பதிகத்தில்,

                        ‘கயிலையில் மாயங்காட்டினார்

                     திருநாவலூரில் பிறவி காட்டினார்;

                     திருவெண்ணெய் நல்லூரில் மறவா மனங்காட்டினார்

                     ஆரூரில் கண்ணீர் கொண்டார்,’ எனத் தமது வரலாற்றை சுந்தரரே கூறியுள்ளார்.

              இதனால் புலவர் சுந்தரர்மீது ஒரு பிள்ளைத்தமிழை ஆவலாக இயற்றியுள்ளார் எனக் காண்கிறோம்.

              பிள்ளைத்தமிழின் அமைப்பு சிறிது வேறுபட்டுள்ளது. ஆக்கியவர் கூற்றில் ‘காப்புப்பருவத்தை வேறுவிதமாகப் பாடப்பட்டுள்ளது. இறைவர் தந்த நம்பிக்கு வேறு காப்பு மிகையாதலின் அவ்வத்தலத்து ஈசரையே காக்க என வேண்டிக் கொள்ளப்பட்டது,’ என்கிறார். அருமையான கருத்து.

              அவ்வண்ணமே திருவெண்ணெய்நல்லூர்ப் பெருமான், அதிகைப்பரமன், த்ில்லையீசர், பிரமபுரத்தீசர், ஆரூர்ப்பிரான், திருமுதுகுன்றத்தீசர், ஆதிபுரி நாதர், கச்சியேகம்பத்தீசர், அவிநாசிப்பிரான், அஞ்சைக்களத்தீசர் அனைவரையும் வேண்டியே காப்புப் பருவம் பாடப்பட்டுள்ளது.

              அம்புலிப்பருவம் கடினம் விடப்பட்டது என்கிறார். அதாவது ‘பிள்ளைக்கவிக்கு அம்புலி புலியாம்’ என்பது வழக்கு.    அம்புலிப்பருவத்தை சாம தான, பேத, தண்ட உபாயங்களுடன் அம்புலியை அழைத்துப்பாட வேண்டும். இதில் அவ்வாரு கடினத்தன்மை இல்லை என்கிறர் போலும். ஒரு பாடலைக் காண்போமே!

              ‘இந்த நம்பி ஓரிடத்தில் இட்டபொன் வேறோர் இடத்தில் ஆற்றில் எடுக்கக் கிட்டியது; ஓரிடத்தில் இவன் கூறிய ஓர் சொல்லினால் நெல் மலையாகக் குவிந்தது. மற்றோரிடத்தே ஒரு பொய்கையில் ஒரு முதலை தன் வாயில் இட்ட பிள்ளையைக் கரையினில் இவனுடைய ஒரு சொல்லால் உயிருடன் கொண்டுவந்து தந்தது. இவர் வேண்டிக் கொண்டதனால் ஈசனும் திருவாரூர் வீதிகளில் அலைந்து திரிந்தான் (பரவையிடம் சுந்தரருக்காகத் தூது சென்றலைந்தான் சிவபிரான்) இதெல்லாம் நீ அறியாத செய்திகளோ? ஒரு சொல்லைக் கூறியதனால் நீ படும் பாடும் கொஞ்சம் தானோ? அதனை உரைக்கவும் இயலாது. ‘வா’ எனும் ஓர் சொல்லால் இவன் உன்னை மகிழ்ச்சியாக அழைக்கின்றான். விளையாட வாராய். உலகம் புகழ்ந்தேத்தும் திருநாவலூர் நம்பியுடன் நீ விளையாட வாராய்,’ என்பது பாடலின் பொருள்.

             ஓர்சொலால் நதியொன்று உலவவழி விட்டது

                              ஒருநதி பொன் சுமந்தே

                     ஒருபொய்கை தன்னிலே கொடுவந்து தந்தது

                              உயர்ந்தகோ ளிலி தன்னிலே

             ஓர்சொலால் நென்மலை உவந்தே சொரிந்தது

                              உலகமும் காண நின்றே

                     ஒருபொய்கை முதலைவாய்ப் பிள்ளையைக் கரைதனில்

                              உய்ந்திடக் கொடுவந் ததால்

             ஓர்சொலால் இறைவனும் ஆரூ ரலைந்தனன்

                              உண்மைநீ அறியா ததோ

                     ஓர்சொலால் நீபடும் பாடுதான் கொஞ்சமோ

                              உரைக்கவும் முடியாது காண்

             ஓர்சொலால் உன்னையே உவந்தழைக் கின்றனன்

                              உவப்புடன் ஆட வாவே

                     ஒருநாவ லூர்வளரு முலகுபுகழ் நம்பியுடன்

                              உவப்புடன் ஆட வாவே.

                                  “”””””””””””””””””””””””””””””””

              ஆக, அத்துணை நூல்களிலும் பலவிதமான நயங்களைக் கண்டு மகிழ்ந்தோம். காலத்திற்கேற்ப சில ஆசிரியர்கள் எளிய இன் தமிழிலும் இந்நூல்களை இயற்றியுள்ளனர். நாம் அவற்றைப் படித்து ரசித்து மகிழலாம்.

              இத்துடன் இத்தொடரை நிறைவு செய்கிறேன். லண்டனில் வசிக்கும் திரு. பத்மனாபன் ஐயர் மூலமாக ‘நூலகம்’ இணையதள’ நூற்தொகுப்பினின்றும் எனக்குக் கிட்டிய பிள்ளைத்தமிழ் நூல்களைக் கொண்டே இக்கட்டுரைத்தொடர் எழுதப்பட்டது. அன்னாருக்கு எனது உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

                                                      (நிறைந்தது)

    Share
  • கவியரசர் பாடல்களும் ஆன்மீக அறிவியலும் – 8

    கவியரசர் பாடல்களும் ஆன்மீக அறிவியலும் – 8

    சக்தி சக்திதாசன்

    கண்ணதாசன் எனும் கவிதைப் பெருங்கடலின் உள்ளே நீச்சலடிக்கும் ஒரு தருணமிது .

    ஆயிரமாய்ப் பாடல்கள்கவிதைகள்கட்டுரைகள் எனப் படைப்புகளின் அத்தனை அங்கங்களினுள்ளும் தனது முத்திரையைப் பதித்தவர் எம் கவியரசர்.

    ஆண்டுகள் பல பத்து கடந்து போயிடினும் தமிழர் மனங்களில் அழியாது நிலைத்திருக்கும் வகையான படைப்புகளைத் தந்தவர் கவியரசர்.

    அன்றாட வாழ்க்கையிலே ஆண் பெண் இருபாலருக்கும் இடையில் ஏற்படும் விரக தாபங்கள் விரக்தி இந்த உணர்வுகளை அதற்குரிய அழுத்தங்களோடு எமக்கு எளிமையான வரிகளில் தந்தவர் கண்ணதாசன்.

    இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகும் பாடல் இல்லறம்துறவறம் என இரண்டுக்கும் இடையிலான ஒரு விவாதக் களம் போன்று அமைத்திருக்கிறார் கவியரசர்.

    அன்றைய தலைமுறையில் இருந்து இன்றைய தலைமுறை வரை அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும் அருமையான பாடல்.

    குணச்சித்திர வேடங்களைத் தனக்கேயுரிய தனித்தன்மையுடன் மிளிர வைத்த ஏ.வி.எம் ராஜன் அவர்களின் பாத்திரம் பங்கு பற்றும் ஒரு பாடல் காட்சி.

    தரிசனம் எனும் படம். .வி.எம் ராஜன் அவர்கள் இரட்டை வேடமேற்று நடித்த ஒரே ஒரு திரைப்படம்.

    இத்திரைப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இதன் இசையமைப்பாளர் சிறந்த பாடகியான சூலமங்கலம் ராஜேஸ்வரி என்பதே !

    அற்புதப் பாடகர் அமரர் ஐயா டி.எம்.எஸ் அவர்களும் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்களும் இணைந்து குரல் கொடுத்த பாடலிது.

    இல்லறத்துக்குள் துறவறத்தைப் புகுத்த முடியுமாஎனும் கேள்விக்கு முடியும் என ஆன்மீக அறிவியலின் மூலம் பதிலளித்திருக்கிறார் கவியரசர்.

    எங்கே பாடலைப் பார்ப்போமா ?

    விரக தாபத்தில் துடிக்கும் ஒரு பெண்ணின் நிலையைஇல்லற சுகத்தின் அனுபவத்திற்கு ஏங்கும் ஒரு பெண்ணின் நிலையை விரசமின்றி வழங்குகிறார் கவியரசர்.

    மாலை நேரத்தை ஒரு பெண்ணின் காதல் மயக்கத்திற்கான காலம் என்று கூறுவதன் மூலம் ஒரு பெண் தன் மனநிலையைகாதல் தாபத்தை ஆணிடம் கூறுவதாகக் கவியரசர் வடித்திருக்கும் வரிகள்.

    பெண்இது மாலை நேரத்து மயக்கம்
    பூமாலை போல் உடல் மணக்கும்
    +
    இதழ் மேலே இதழ் மோதும்
    அந்த இன்பம் தோன்றுது எனக்கும்
    இது மாலை நேரத்து மயக்கம்

    அதைக் கேட்டதும் அதற்கான ஆணின் பதில் எவ்வாறு இருக்கும்?

    சாதாரண மனநிலையைப் பார்த்தால் நெருப்பிடம் பஞ்சு என்னை அணைத்துக்கொள் என்று கேட்பது போலத் தென்படும்.

    இங்கேதான் கவியரசரின் ஆன்மீக அறிவின் தாக்கம் வெளிப்படுகிறது.

    வாழ்க்கையைத் தத்துவ ரீதியில் பார்க்கும் அந்த ஆணின் பதில் எப்படியிருக்கிறது ?

    ஆண்:இது காலதேவனின் கலக்கம்
    இதை காதல் என்பது பழக்கம்
    ஒரு ஆணும் ஒரு பெண்னும்
    பெறப் போகும் துன்பத்தின் துவக்கம்
    இது காலதேவனின் கலக்கம்

    ஆனால் அவள்தான் விரக தாபத்தில் தவிக்கிறாளேஅவனுடைய தத்துவ வார்த்தைகளில் ஆற்றுப்படுத்தக்கூடியதா அவளுடைய காதல் தாபம்.

    பனியும் நிலவும் பொழிகிறதாம் அந்தப் பொழுது எப்படி இருக்கும் ?

    காதல் செய்வதற்கு மிகவும் ஏதுவான ஒரு மென்மையான பொழுது என்பதை அக்காதல் வயப்பட்ட பெண் கூறுவதாகக் கவியரசர் யாத்த வரிகளைப் பார்ப்போம்.

    பனியும் நிலவும் பொழியும் நேரம்
    மடியில் சாய்ந்தாலென்ன

    பசும் பாலை போல மேனி எங்கும்
    பழகிப் பார்த்தாலென்ன?

    ஏக்கத்தோடு கேட்கிறாளாம் அந்தப் பெண்.

    அதற்கு அந்த ஆணின் ஆன்மீகம் சார்ந்த பதிலை எத்தனை அழகாக எடுத்து இயம்பியிருக்கிறார் கவியரசர் பாருங்கள்.

    உடலும் உடலும் சேரும் வாழ்வை
    உலகம் மறந்தாலென்ன
    தினம் ஓடியாடி ஒயுமுன்னே
    உன்மை உணர்ந்தாலென்ன

    வெறும் உடல் மயக்கத்தால் சேர்வதுதான் காதல் என்று வாழ்க்கை கூறியதா என்னஇதுவெல்லாம் வெறும் மாயை தானென்று எப்போது உணரப் போகிறோம் என்று கேட்கிறான் போலும்.

    காதலுக்கும் ஆன்மீகத்துக்கும் நடக்கும் விவாதமல்லவாஅவளைப் பொறுத்தவரையில் அவளுக்கு அவளுடைய அந்தப் பருவத்தில் தேவையானது காதல் தானே விட்டுவிடமாட்டாளே சும்மா.

    உறவுக்கு மேலே சுகம் கிடையாது
    அணைக்கவெ தயக்கமென்ன

    என்று விடுகிறாள் .

    அவனும் தனது நிலையிலிருந்து இறங்கி வருவதாயில்லை அவனது பதிலைப் பார்ப்போம்.

    இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
    இதற்குள்ளே ஆசையென்ன

    போட்டானே ஒரு போடுவெறும் ஒன்பது ஓட்டைகளைக் கொண்ட ஒரு கூடுதானே எமது உடம்புஇந்த மூச்சுக்காற்று அந்த ஒன்பது ஓட்டைகளில் ஒன்றால் வெளியேறிவிட்டால் பின்பு விழுந்துவிடப் போகிறோம். இதற்குள்ளே ஏன் வீணாக ஆசை கொள்கிறாய் என்கிறான்.

    அவளோ இலேசுப்பட்டவள் இல்லைதன்னுடைய வாதத்துக்குத் தேவையான ஆதாரங்களை வைத்துக்கொண்டுதான் தான் விரக தாபத்தின் வீரியத்தைத் தர்க்கம் செய்கிறாள்.

    ஆனானப்பட்ட முனிவன் அவன் கூட ஒரு அழகு மோகினியின் வடிவில் மயங்கிய பூமி ஐயா இதுஇதன் முன்னே நீ எல்லாம் என்ன சும்மா ஆன்மீகப் பிதற்றல் செய்கிறாய் என்கிறாள்.

    முனிவன் மனமும் மயங்கும் பூமி
    மோக வாசல் தானே
    தினம் மூடி மூடி ஓடினாலும்
    தேடும் வாசல்தானே

    ஆகா ஆன்மீக வழியாக வந்து என்னைத் தாக்குகிறாளே என்ற அங்கலாய்ப்போடு அவனின் பதில் வெளிப்படுகிறது.

    பாயில் படுத்து நோயில் விழுந்தால்
    காதல் கானல் நீரே
    இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
    போகும் ஞானத் தேரே

    ஏதோ மரணம் எனும் கதவு எமக்குத் திறக்காது என்பது போலல்லவா பேசுகிறாய் பெண்ணே நோய் எனும் ஒரு வலை எம்மைப் பிடித்துப் பிணைத்துவிட்டால் பாயில் விழுவது காதல் செய்வதற்காக அல்ல அதை மறந்துவிடாதே என்கிறான்

    என்னையே தருவதற்குச் சித்தமாக இருக்கிறேன் என்று என் காதலை வெளிப்படுத்தியும் பணிய மாட்டேன் என்கிறானே சரி நானாவது பணிந்து போய் விடுவோம் என்று எண்ணுகிறாள் போலும்

    இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்
    இதயமே மாறி விடு

    நான் காதலைக் கேட்கிறேன். நீயோ ஆன்மீக வாசலைக் காட்டுகிறாய். உனது இதயத்தை எனக்காக மாற்றிக்கொள்ள மாட்டாயாஎன்று தனது கடைசி ஆயுதமான கெஞ்சலை எடுத்து விடுகிறாள்.

    ஆன்மீகத்தின் அறிவியலின் உச்சத்தில் இருக்கும் அவன் இதையெல்லாம் கடந்தவனாயிற்றே. அவனது இதயம் இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன ?

    இது ஆடி ஓடிச் சாய்ந்த தென்னை
    உன்னை நீ மாற்றி விடு

    நான் உலகத்தின் அனைத்துப் பாதைகளிலும் பயணித்து அனுபவங்களைச் சேகரித்தவன்ஆன்மீகமே எனது வேதம் நான் மாறப் போவதில்லை. நீ உன்னை மாற்றிக்கொள் என்கிறான் அவன்.

    கவியரசர் கண்ணதாசனுக்கு இத்திரைப்படத்தில் காட்சியைக் கொடுத்து, அதற்குக் கேட்ட பாடலுக்கான வரிகளை யாத்துக் கொடுத்துள்ளார்.

    இங்கே நான் சொன்ன விளக்கங்களும் அந்தத் திரைப்படத்துக்கான காட்சியின் விளக்கமும் மாறுபடலாம்கவியரசரின் ஆன்மீக அறிவியலின் ஆழத்தைத் தொட்டுக் காட்டுவதற்காகவே நான் எனது விளக்கங்களை குறிப்பிட்டேன்.

    மீண்டும் சந்திப்பேன்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • Narayana Murthy Sir , We are at it already

    Narayana Murthy Sir , We are at it already

    Baskar Seshadri
    I was in Hotel Sangeetha Mylapore few days back on a bit cloudy evening . I ordered for a small coffee and was waiting. An old lady with all her tiredness came and sat in front of me . She used her saree and cleaned her face . I just asked her age . She said she was Eighty . She expressed her pain that she has to work even at this age and said she was living in Palavakkam . She told with pain that she gets no support from the family and has no other means except to work to earn a little.
    I was shocked to see her and her fragility. How can she work and what work she can do? How people can take work from her at this ripened age ? When she was about to leave she did a Namaskaram and I did the same back to her. I was so in pain to see this woman in such a plight. What an individual can do this on this situation ? Will my feeling ever solve her problems and if it happens will it sustain forever ?
    Going by what she is saying she has been working for long hours everyday and its endless as usual . Unfortunately in a shell shocked mood I forgot to give her money which I will do sometime when I see her Next . I am sure I will . That’s the Best I could do. She has a hope that one day will be good to her . Her belief and strength has no match to anything in this world . There are more such people among us . Let’s support them if we can.
    Share
  • கல்வெட்டில் வரலாற்றின் சுவடுகள்

    கல்வெட்டில் வரலாற்றின் சுவடுகள்

    தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி XIX & XXII ஆகியவற்றில் இருந்து சில கல்வெட்டுகள்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்  ஊத்தங்கரை சாலையில் உள்ள கொரட்டி கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள 7 வரிக் கற்பலகைக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ வலியடக்கியார்க் கேழாவது. 
    2. வலியடக்கியார் போவூர் நாடைந்நூறு பூமி 
    3. யுமாள காடு வெட்டிப்படை ஆறு[கு]ழுகூர் மேல் 
    4. வந்தெறிந்த ஞான்று வலியடக்கியார் கோ 
    5. [யி]ற்றமன் வாணிக வாணிளவரையன் இரண்டு 
    6. குதிரையும் மேலாரையும் குத்திப்பட்டான் நெ
    7. த்தோர்பட்டி   

    ஞான்று  – பொழுது; எறிந்த – அழித்த; கோயிற்றமன் – அரண்மனைப் பணியாள், சேவகன்; மேலார் – இராகுத்தான். குதிரை வீரர்.

    விளக்கம்: மன்னர் வலியடக்கியார் போவூர்நாடு ஐந்நூறு நிலப்பரப்பை ஆண்டு கொண்டிருந்த போது அவனது 7ஆம் ஆட்சி ஆண்டில் காடுவெட்டி மன்னனின் படை ஆறுகுழுமூர் ஊர் மீது வந்து அழித்த போது வலியடக்கியாரின் அரண்மனைப் பணியாள் வாணிக வாணிளவரையன் இரண்டு குதிரையைக் குத்திக் கொன்று அவற்றின் இராகுத்தன்களையும் கொன்று தானும் வீரச் சாவடைந்தான். அதற்காக அவன் குடும்பத்தாருக்கு குருதி சிந்தி உயிர் விடுவோருக்குத்  தரப்படும் நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வழங்கப்பட்டது.

    வாணிக என்ற சொல் இவன் வணிகர் குடியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுகிறது. அதே நேரம் வாணிளவரையன் என்பது இவன் வாணர் அரசர் குலத்தைச் சேர்ந்தவன் என்பதையும் குறிக்கிறது. இதாவது, பண்டு ஆறலைக் கள்வர் தம் பண்டங்களையும் உடைமைகளையும் கொள்ளையிடாமல் காத்தற் பொருட்டு வணிகர் தமக்கென தனியே ஒரு பாதுகாப்புப் படையைப் பேணினர். அப்படை சில வேளைகளில் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, எதிரிப் படையோடு போரிட்டு விரட்டியதால் மன்னன் வணிகரை சிறப்பித்து “எட்டி” என்ற பட்டம் வழங்கினான். இதுவே பின்னாளில் சகர முன் மெய் பெற்று ‘செட்டி’ ஆனது. அப்படிப்பட்ட  நிகழ்வுகளில் மன்னன் வணிகருக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதும் வணிகரிடம் பெண் எடுப்பதும் நிகழ்ந்தது. அப்படியான ஒரு உறவில் தோன்றியவன் தான் இந்த வாணிக  வாணிளவரையன் என்று புரிந்து கொள்ளலாம். இதாவது, வாண அரசன் வணிகனுக்கு மணம் முடித்த தன் மகள் வயிற்றுப் பேரனைத் தத்தெடுத்து இளவரசனாக ஆக்கி இருக்கிறான் என்பதே. மனுதர்மம் வணிகர்நெறி பொருள் விற்பது தான் என்று குறித்துள்ளது. ஆனால் இப்படி படை பேணுவதும் போரிடுவதும் சத்திரியர் நெறி என்று மனுஸ்மிருதி குறித்ததை வணிகர் செய்யலாமோ?  இது விதி மீறல் அல்லவோ? இந்த மேற்கண்ட செயல் மனுதர்மம் தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? ஆனால் அரசியல் மேடையிலும்  எழுத்திலும் மக்களை முட்டாள் ஆக்கும் விதமாக அல்லவா பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஆறு என்றால் ஓய்வு; குழுமூர் என்றால் கூடும் ஊர். இதாவது, படையினர் ஓய்விற்காக கூடும் ஊர் என்பது இதன் பொருள்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX & ஆவணம் 12, 2001 பக்கம் 5.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேவர் முக்குளம் கிராமம் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் கூரையில் இருந்த 44 வரி வணிகக் கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ  ராஜேந்திர / சோழ தேவற்கியாண்டு பதி / நெட்டாவதிற் / ஸ்வஸ்திஸ்ரீ  தேவதேவந் த்ரி / _ _ வாணி அமரகன்யாச்சி தந் / வந்த தந்மோத புஜ / _ _ _   / ண் நாதந் ஸ்பஷ்ட நிர்ம்மித மஹாராசாதி / மர்த்தந ஸகல பராஸர / _ _ ரிய சாமுண்டேஸ்வரி / _ _ _ / வீரஸாஸன  மஹா / புவந வீரர்க _ மஹா / வீர  ஸ்ரீவி _ புத _ _ தி / ஐநூற்றுவரும் இ / வர் மக்களாந ஸ்ரீநா _ / வீரபுத்ரரோம் மாப்பந் புளியுமநை / க் கொன்ற பணிய் மக்கள்  மண்டலங் / காக்கும் கண்டழியும் மண்டலங்கா / க்கும் கவறை செட்டியையும் ஐஞ் / ஞூற்றுவந்  _ _ /  (பின்பக்கம்) ல்கிந்ற பணிசை ம / கந்  திடாவூரிருக்கும் ப்ரா / ஹ்மணந் அஞ்ஞூற்றுவாண்டா / நும்  அருமொழிதேவ முநிவர் சி / ங்கமும் எதிராந சிங்கமும் சிறு / திடாவூரிருக்கும்  கலியுக கண்டழி / யும் துறகலூர் எறியும் விடங்க / ச்செட்டியும்  சத்துருகண்ட மாயி / லெட்டியும்  பாதாளதூசியும் நாட்டுப் / பெருவாரியந்  நாட்டுச்செட்டியும் / மேற்பாடி மூத்தநும்  பாண்டி ஞாட்டைஞ் ஞூற்றுவாண்டாநும் வா / ளையூரைஞ் ஞூற்றுவாண்டாநு / ம்  இவர்களோடும் வந்த பல்வ / கை வீரரும் ஸமையமும் இருக்க ந / ம்  மகந், வீரகள் புத்திரனைக் கொற்ற / குலைப்பகையந் மாளனைக் குத்தி / க் கைதறித்து சமையத்துக் கிட / சோமையந் மகந் சாமுண்டந் பணி /கண்டு நாநாதேசிய  வீர திருவடியாயிரு / ந்து இவனுக்கு வீர பட்டணஞ் செய்து / குடுத்து _ _ ணிக்கச் செட்டுங் கட்டி / _ யம்ப _ _ _                        

    மக்களான – படைவீரரான; பணிசை – பணிசெய்; கண்டழி – துணை நிற்கும் படை; எறி – தங்கும்  அல்லது காக்கும்; மாயிலெட்டி – எண்ணெய் வணிகன்; பெரு ஆரியன் – பெருந் தலைவன்; ஸமயம் –  படையின் ஒரு பிரிவுப் பெயர்; கொற்ற – அச்சுறுத்திய; தறித்து – வெட்டி; கிட – ஆயுத சாலை;  வீரபட்டணம் – வீரர் ஓய்வு கொள்ளும் மனைகள், rest house; கட்டி – அகமகிழ்ந்து; இயம்ப – சொல்ல

    விளக்கம்: இந்த வணிகப் படைக் கல்வெட்டு முதலாம் இராசேந்திரனின் 18 ஆம்  ஆட்சி ஆண்டு 1030 இல் வெட்டப்பட்டது. 3 ஆம் வரி முதல் 14 ஆம் வரி வரை வணிகர் தம் மெய்க்கீர்த்தியே இடம் பெற்றுள்ளது. 15 ஆம் வரியில் தான் செய்தி தொடங்குகிறது. திசை ஐந்நூற்றுவரும்  இவருடைய படை வீரர்களான ஸ்ரீ நா _ _ வீரமக்களும் மாப்பன் புளியுமனை கொன்ற பணிமக்களும், இம்மண்டலம் காக்கும் துணை நிற்கும் படையும் இம்மண்டலம் காக்கும் கவறை செட்டியும், ஐந்நூற்றுவன் _ _ _ நில்கின்ற பணிசெய் மகனும், திடாவூரில்  வாழும் பிராமணன் ஐந்நூற்றுவாண்டானும், அருமொழித்தேவ முனிவர் சிங்கமும் எதிரான (தம்பி) சிங்கமும், சிறுத்திடாவூரில் இருக்கும் கலியுகத் துணை நிற்கும் படையும், துறகலூரில் இருக்கும் விடங்கச் செட்டியும், சத்துருகண்ட மாயிலெட்டியும், பாதாளத்தூசியும், நாட்டுப்  படையின் பெரு ஆரியனான நாட்டுச் செட்டியும், மேல்பாடி மூத்தனும், பாண்டி நாட்டு ஐந்நூற்றுவாண்டானும், வாளையூர் ஐந்நூற்றுவாண்டானும், இவர்களோடு வந்த இவர்தம் பல்வகை வீரரும், சமையப் படையும் சூழ்ந்து இருக்க, “நம் மகனையும் வீரர்கள் மகனையும் அச்சுறுத்திய குலப்பகைவன்  மாளனைக் கத்தியால் குத்திக் கையை வெட்டிய சமையப் படையின் ஆயுதக் கிடங்கு சோமையன் மகன் சாமுண்டனின் செயல்திறன் கண்டு சாமுண்டனை நாநாதேசிய வணிகரின் வீரத்திருவடியாய் இருக்கவும் இவனுடைய படை ஆள்கள் ஓய்வுகொள்ள, தங்கில் (வீரபட்டணம்) செய்து குடுத்து வசதி செய்யவும்” மாணிக்கச்செட்டி அகமகிழ்ந்து ஆணை இட்டார். குலப் பகைவன் எனக் குறிக்கப்படும் மாளனும் வணிகனாகவே இருக்க வேண்டும்.

    பாலக்காடு அட்டப்பாடி வணிகக் கல்வெட்டும் இதே போல வீரபட்டணம் செய்து கொடுத்ததைத் தெரிவிக்கிறது. ஐகுந்தம் வணிகக் கல்வெட்டும் இதே போல வணிகர்கள் மாபெரும் படையைப் பேணியதைக் குறிக்கிறது.

    பார்வை நூல்: ஒன்றியத் தொல்லியல்  துறையால் 1926இல் முன்பக்கம்  மட்டும்  பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பக்கக் கல்வெட்டு அண்மையில் தான் அறியப்பட்டு நாளேட்டில் வெளியானது. முழுமையாக இன்னும் எந்த நூலிலும் அச்சேறவில்லை.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நத்தம் கிராமம் திருப்பழனமுடைய நாயனார் கோவில் தெற்குச் சுவரில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ  திருபுவனச்  சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க _ _ 
    2. [ழ] தேவற்கு யாண்டு 30 [ஆ]வது நிகரிலி சோழமண்டலத்து 
    3. _ _ ட்டு தகடூர் நா[ட்டு எ]யில்னாட்டுக்  கலி[ஞ்சி]றைப் பற்றுக் [கா] _ 
    4. கெயின்கறையில் வீடுடையார் திருபழனமுடைய  நாய[னா] _
    5. [ர்]த் திருக்கோவலூர் உடையார் திருவீரட்டானமுடையார் கோ[யி]
    6. ல் தேவரடியாரில் ககையாழ்வி மகள் ஆளுடையனாச்சியார்  
    7. _ _ _ க்குத்  திருப்பள்ளியறை நாச்
    8. சியாரை  எழுந்தருளிவித்து இன்னாச்சியார் 
    9. திருவத்தசாமத்துக்கு அமுதூட்டுக் குடுத்துவிட்ட
    10. குட்டையூர் திருத்தி விட்ட நிலம் நாற்     

    பழனம் – வயல், பொய்கை ;  நாயனார் – இறைவன்; 

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 1208இல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 30ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது. நிகரிலி சோழ மண்டலத்தில் அடங்கிய தகடூர் நாட்டின் எயில் நாட்டு கலிஞ்சிறைப் பற்றில் காகைகறையில் கோவில் கொண்ட திருப்பழனமுடைய  நாயனார்க்குத் திருக்கோவிலூரில் கோவில் கொண்ட திருவீரட்டானம் ஈசுவரர் கோவில் தேவரடியாரில் ககையாழ்வியின் மகள் ஆளுடைய நாச்சியார் இங்கத்து திருபள்ளியறை இறைவியை எழுந்தருளச் செய்து  இத்தேவிக்குத் திருஅர்த்த சாம பூசைக்கு அமுதூட்ட, குட்டையூரில் காடு திருத்தி, சாகுபடிக்குக் கொண்டு வந்த நிலத்தில் நாற்பது அளவு நிலத்தைக் கொடையாகக் கொடுத்தனர். கல்வெட்டு அதற்கு மேல் சிதைந்துவிட்டது. ஆளுடையநாச்சியாரின் தாய்ப் பெயர் ககையாழ்வி என்பதும் காகைகறை என்பதும் ஒலித் தொடர்பு கொண்டுள்ளதால் இவள் தன் தாய் ஊர் இது என்று  வந்தனளோ?  ககை, காகை இரண்டில்  ஒன்றில் ஏதோ எழுத்துப் பிழை உள்ளது?

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX, பக்கம் 238

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் கிராமம் அகத்தீசுவரர் கோயில் கருவறை தென்புற ஜகதி மற்றும் பட்டிகையில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கடல் சூழ்ந்த பார்  மாதருங் கலை மாதருங் சீர்மாதருங் போர்மாதரும்  வந்து வாழ  நாற்கடல் சூழ் புவி ஏழும் பாற்கடல் சூழ் புகழ் பரப்பச் சோதிமணிமுடி  புனைந்தருளி அறு சமயமு மைம்பூதமு  நெறியில் வந்து பாரிப்பத்  தென்னவருஞ் சேரலருந்  சிங்களரு முதலாய 
    2. மன்னவர்  வந்திறை சூழ்த்து சேவிப்ப  ஊழி  ஊழி ஒரு செங்கோலேழு  பாருமினி  தளிப்பச் செம்பொன் வீரஸிம்மாஸனத்து உலகுடை முக்கோக் கீழாநடிகளோடும்  வீற்றிருந்தருளிய கோ ராஜகேசரிபந்மரான  திரிபுவனச்சக்ரவத்திகள்  ஸ்ரீ இராஜாதிராஜா தேவர்க்கு யாண்டு  நாலாவது  ஐயங்கொண்
    3. ட சோழ மண்டலத்து  ஒய்மா நாடான   விஜையராஜேந்த்ர வளநாட்டு எயில் நெடுங்கல் நாட்டு நெடியத்துக் குடிப்பள்ளி  அப்பன் சாத்தநும் வெண்குன்றக் கோட்டத்து உரத்தி நாட்டு உரத்தி ஒரளி உதையன் பெருமாளும் பரிவேட்டை போன இடத்தில் ஒரளி உதையன்  பெருமாள் புல்வாயை எய்த அம்பு பிழைத்து இவ்
    4. வப்பன் சாத்தனை அம்புபட்டு பட்டமையில் இதுக்குப் பெருமக்களும் பெரிய நாட்டாரும் பன்னாட்டாரும் கூடி இருந்து பிராயச்சித்தம் விதித்தபடி  இம்மண்டலத்து  உலக்கை ஊராந ராஜேந்த்ர நல்லூர்த் திருவகத்தீஸ்வர முடைய மஹாதேவர் கோயிலில் வாதாபி விடங்கர்க்கு இ(வ்)வப்பன் சாத்
    5. தனுக்காகப் பகைநீங்க இவ்வொ(ர)ளி உதையன் பெருமாளேன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு இக்கோயில் திருவுண்ணாழிகை ஸபையோம் உபையமாகக் கைக்கொண்ட  பசு முப்பத்திரண்டும் இஷபம் ஒன்றுங் கைக்கொண்டு  இத்திரு நுந்தா விளக்கு ஒன்றுஞ் சந்திராதித்த வரை எரிக்கக் கடவோம் ஆகச் சம்ம
    6. தித்தோம்  திருவு(ள்)ணாழிகைச் ஸபையோம்.            

    பரிவேட்டை – வேட்டைச் சுற்று; புல்வாய் – கலைமான்; பெருமக்கள் – பிரமாண ஊர் மன்ற உறுப்பினர்; பெரிய நாட்டார் – நாட்டாண்மை தலைவர்; பிழைத்து – தவறுதலாக;  பன்னாட்டார் – பல்குழு வணிகராக இருக்குமோ?;  வாதாபி விடங்கர் – உளியால் செதுக்கப்படாத லிங்கம்; உண்ணாழிகை – கருவறை 

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு இரண்டாம் இராசாதிராசன் மெய்க் கீர்த்தியுடன் தொடங்குகிறது. இது அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டு 1170இல் வெட்டப்பட்டது. தொண்டைநாடு என்னும்  செயங்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய ஓய்மா நாடெனும் விசய ராசேந்திர வளநாட்டு எயில்நெடுங்கல் நாட்டில் உள்ள நெடியம் கிராமத்தில் வாழும் பள்ளியான அப்பன் சாத்தனும் வெண்குன்றக் கோட்டத்தில் அடங்கிய உரத்தி நாட்டு உரத்தி ஒரளி உதையன் பெருமாளும் சுற்று வேட்டைக்குப் போன இடத்தில் ஒரளி உதையன் பெருமாள் கலைமானை நோக்கி விட்ட அம்பு தவறுதலாக அப்பன் சாத்தனைத் தைத்து அவன் இறந்து போகிறான். இதன் காரணமாகப் பிராமண ஊர் மன்றத்தாரும், பெரிய நாட்டரும், பன்னாட்டு வணிகரும் ஒன்று கூடி, கொன்ற பாவத்திற்குக் கழுவாய் விதித்து இம்மண்டலத்தில் உள்ள உலக்கை ஊரான இராசேந்திர நல்லூர் என்னும் இன்றைய ஒலக்கூரில் உள்ள அகத்தீசுவரர் கோவிலில் உள்ள வாதாபி விடங்கர் சிவலிங்கத்திற்கு, இறந்த அப்பன் சாத்தன் கொலைப் பழிநீங்க இந்த ஒரளி உதையன் பெருமாள் ஏற்படுத்திய நந்தா விளக்கு எரிப்பு ஒன்றுக்கு இக்கோயில் கருவறை பிராமணர் நன்கொடையாக முப்பத்திரண்டு பசுவும் ஒரு காளையும் பெற்றுக்கொண்டு இத்திரு நந்தா விளக்கை ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் காலம் வரை எரிப்போம் என்று உறுதி கூறி, கல்வெட்டினர் கருவறைப் பணி செய்யும் பிராமணர்கள்.

    இங்கு நியாயத்தாரின் நீதிமன்றம் தவிர்க்கப்பட்டதோ? எல்லாம் மிரட்டல் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. உதையன் பெருமாள் நந்தா விளக்கு எரிக்கும் அளவிற்குச் செல்வ செழிப்புள்ள குடியில் பிறந்தவன் என்பதை அவன் சுற்று வேட்டையால் விளங்கிக்கொள்ள முடிகிறது. உரத்தி ஓர் ஊர் பெயர். ஒரளி ஊராளி என்பதன் கொச்சைத் திரிபா எனத் தெரியவில்லை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXII, பக்கம் 8

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் உப்புவேலூர் கிராமம் திருவிருத்தப் பெருமாள் கோயில் வாசலில் உள்ள 2 வரிக் கல்வெட்டு

    1. இக்கோயில் திருவாசல்
    2.  பறயன் திருவாசல்

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 14 ஆம் நூற்றாண்டினது எனக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலின் தெய்வீக வாசல் ஒரு பறையனால் செய்விக்கப்பட்டதனால் அவன் பெயரில் பறையன் திருவாசல் எனக் குறிக்கப்பட்டது.

    பறையர்கள் கோவிலுக்குச் சந்தி விளக்கு ஏற்றிய கல்வெட்டுகள் பல உள. ஆனால் இது சந்தி விளக்கை விட அதிகச் செலவாகும் திருப்பணி என்பது இப்பறையன் செல்வச் செழுமையும் பதவியும் பெற்று வாழ்ந்திருக்க வேண்டும் என்று காட்டுகிறது. உண்மை இப்படி இருக்க, தலித்தியர் தம்மை இச்சமூகம் 2,000 ஆண்டுகளாக ஊரில் வரவிடாமல் ஒடுக்கியதாக பொய்யை  நம்பிப் பழிக்கின்றனர். எல்லாக் கோயிலும் ஊர் நடுவே தான் அமைந்துள்ளன. ஒருவர் கோவிலுக்குச் செல்ல வேண்டுமெனில் பிராமணர் வாழும் தெருவைக் கடந்து தான் கோவிலுக்குச் செல்ல முடியும். இத்திருவாசல் அமைத்த பறையன் ஊருக்குள் வந்து தானே இதைச் செய்திருக்க முடியும்? திருவாசல் செய்தவன் கோவிலில் சாமி கும்பிடாமலா இத்திருப்பணியைச் செய்திருப்பான்? எனவே பறையர் ஒடுக்குமுறை என்பது 16-17 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் நிகழ்ந்த நிர்வாக ஒடுக்கு முறை ஆகும். நிர்வாக ஒடுக்குமுறைக்கும் மதத்திற்கும் மனுதர்மத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. விசயநகர ஆட்சிக்கு முன் பறையர் ஒடுக்கு முறை இருந்ததில்லை என்பதே உண்மை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXII, பக்கம் 153.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரிய கோளாப்பாடியில் உள்ள 8 வரி நடுகல் கல்வெட்டு.

    1. கோவிசைய மயேந்திர பருமற்கு 
    2. யாண்டு பதினொன்றாவது கீழ் வேணாட்
    3. டுத் துடரி மேல் விலக்குமிறை
    4. யார் வந்த ஞான்று பெரும்பா
    5. ண்ணரையர் மருமக்கள் அம்கோ
    6. ட்டையர் சேவகன் சாக்கை ப
    7. றையனார் இளமகன் ஏறன்
    8. எறிந்து பட்டான். 

    ஞான்று – போது; மருமக்கள் – பெண் கொடுத்த உறவால் வந்த உறவினர்; சேவகன் – படைத்தலைவன்; இளமகன் – பயிற்சி பெறும் கன்னி வீரன்; எறிந்து – வென்று; பட்டான் – வீரச் சாவடைந்தான்.   

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு பல்லவன் முதலாம் மகேந்திர வர்மனின் 11ஆம் ஆட்சி ஆண்டு 601இல் வெட்டப்பட்டது. கிழக்கு வேணாட்டு துடரி மீது விலக்குமிரையார் படையெடுத்து வந்த போது பெரும்பாண அரசர் மருமக்களான அம்கோட்டையர்க்குப் படைத்தலைவன் சாக்கைப் பறையனிடம் பயிற்சி பெரும் கன்னி வீரன் ஏறன் என்பவன் எதிரிப் படையை வென்று வீரச் சாவடைந்தான்.

    துடரி இன்றைய பெரிய கோளப்பாடியாக இருக்கலாம். பறையர்கள் போர்வீரர்களாக, தொன்முது காலம் முதல் இருந்து வந்துள்ளனர். அவர்கள் தம் இன மக்களைத் திரட்டிப் பயிற்சி தந்து போரிட்டதால் அப்படைக்குத் தளபதிகளாகவும் இருந்துள்ளனர். சாக்கைப் பறையன் ஆடவும் தெரிந்தவனோ? ஏறு என்றால் காளை ஏறன் என்றால் காளையன். இப்படித்தான் அக்கால மக்கள்  தமிழில் பெயர் வைத்தனர்.

    பார்வை நூல்: செங்கம் நடுகற்கள் க.எண் 1971/96

       

    திண்டுக்கல் மாவட்டம் உடும்பகுடி வேட்டைக்காரசாமி கோவில் 13 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்ரீ 
    2. இரணசிங்க 
    3. த் துவராவதி வெள்ளார்
    4. பளி 
    5. நாயகன் கா
    6. ரி சாத்தன்   
    7. உடும்பகு
    8. டி நிரை கொள்ள 
    9. பின்பு சென்று 
    10. எறிந்து பட்டான் 
    11. பள்ளி வே
    12. ளா(ந்) சாரிகன் சி
    13. ய்    

    வெள்ளார் / வெள்ளாளர் – வெள்ளைத் தோல் ஆரியர்; பள்ளி – வன்னியர்; நிரை – கால்நடை கூட்டம்; கொள்ள – கொள்ளையிட; எறிந்து – வென்று; வேளாண் – அரசகுடி உறவினன், அரசகுடி ஆள்; சிய் – சேய், மகன்.

          

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 9ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. இதில் வேந்தர் பெயர் ஏதும் குறிக்காமல் அங்கத்துக் குறுநில அரசன் பெயர் குறிக்கப்படுவது பல்லவர் ஆட்சிக் குலைவின் காரணமாக இருக்கலாம். இரணசிங்க துவராபதி வெள்ளாளர்க்குப் படைத் தலைவனான சேவகன், பள்ளிசாதித் தலைவன் காரி சாத்தன் என்பவன் உடும்பகுடி கால்நடைகளைக் கொள்ளையிட்ட போது அதைத் தடுக்கப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று போரில் வென்று வீரச் சாவடைந்தான் பள்ளி வேளாண் சாரிகன் என்ற அரசகுடி உறவினன். அவன் மகன் இந்நினைவுக்கல் எடுப்பித்தான். இன்று இது வேட்டைக்காரச் சாமியாக வணங்கப்படுகிறது.

    வெள்ளாளர் என்பவர் வெள்ளைத்தோல் ஆரியர் என்பதால் தான் வெள்ளாளர் என்று குறிக்கப்பட்டனர். தொண்டை மண்டலத்தில் இருந்து கைக்கோளர், பறையர் ஆகியோர் படைவீரர்களாகத் தெற்கே சென்று தனியே படைப்பற்று குடியிருப்பு அமைத்தது போலவே பள்ளி என்னும் வன்னியரும் தெற்கே சென்று திண்டுக்கல்லில் படைப்பற்று அமைத்து வாழ்ந்ததற்குச் சில நடுகற்கள் சான்றாக உள்ளன. இது அதில் ஒன்று.

    பார்வை நூல்: இது வரலாற்றுத் தேடல் குழுவால் புதிதாக அறியப்பட்ட நடுகல் கல்வெட்டு. இன்னும் நூலில் அச்சேறவில்லை.

    மதுரை பழங்காநத்தம் மேற்கே உள்ள மாடக்குளம் ஊர் குளத்தின் வடக்கு மடைத்தூண் 12 விரிக்க கல்வெட்டு.

    1. விறோதி வருஷம் 
    2. ஆவணி மாத
    3.  ம் 29 தேதி திருவா
    4. லைவாயன் ம
    5. டைக் கல்லு 
    6. எடுத்து நாட்டி 
    7. வித்தான் திரு
    8. வாலை வாச்சி 
    9. அதிகாரி மகன் 
    10. ஆரியர் புத்திர
    11. கணக்கு நாய
    12. ன் பிள்ளை.   

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு விரோதி ஆண்டு 1709 அல்லது 1769இல் ஆவணி மாதம் 29ஆம் தேதி வெட்டப்பட்டது எனக் கணிக்கப்பட்டுள்ளது. மதுரை மாடக்குளம் ஊர்க்குளத்தின் திருவாலைவாயன் எனும் மடைக்கல் சாய்ந்து சரிந்து கிடந்ததைத் தூக்கி அதே இடத்தில் நிறுத்தினான் திருவாலை மன்ற அதிகாரி மகன் ஆரியர் புத்திரக் கணக்கு நாயன் பிள்ளை என்பவன். 18ஆம் நூற்றாண்டு வரை ஆரியர், இதாவது உயர்ந்தோன் என்ற பட்டத்தைத் தாங்கியவர் வெள்ளாளர் ஆவர். ஆனால் அடுத்த 19 ஆம்  நூற்றண்டில் அதைப் பிராமணர் பக்கம் திரும்பிவிட்டனர் அதே வெள்ளாளர்.

    பார்வை நூல்: ஆவணம் 15, 2004, பக்கம் 120

    Share
  • குறளின் கதிர்களாய்… (472)

    குறளின் கதிர்களாய்… (472)

    செண்பக ஜெகதீசன்

    கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
    எல்லாம் ஒருங்கு கெடும்.
    – திருக்குறள் -1056 (இரவு)

    புதுக் கவிதையில்…

    இருப்பதை
    இல்லையென மறைக்கும்
    துன்பநிலை
    இல்லாதவரைக் கண்டால்,
    இல்லாமை என்னும்
    வறுமைத் துன்பம்
    எல்லாம் ஒருசேர
    இல்லாமல் அழிந்துபோகும்…!

    குறும்பாவில்…

    உள்ளதை ஒளிக்கும் துன்பம்
    இல்லாரைக் கண்டால் இரப்பவரின் வறுமைநோய்
    இல்லாமல் மொத்தமாய் அழிந்துபோகும்…!

    மரபுக் கவிதையில்…

    இருப்பாய்க் கையில் உள்ளதையே
    இல்லை என்றே மறைத்திருக்கும்
    பெருத்த துன்பம் அதுதன்னைப்
    பெறாதோர் தம்மைப் பார்த்தாலே,
    வருந்தி இரப்போர் தாம்கொண்ட
    வறுமை என்னும் நோயதுவும்
    இருந்த இடமே தெரியாமல்
    எல்லாம் சேர்ந்தே அழிந்திடுமே…!

    லிமரைக்கூ…

    இல்லையெனும் துன்ப நிலையே
    இல்லாரைப பார்த்தாலே இரப்போர் கொண்ட
    வறுமைத் துன்பமேதும் இலையே…!

    கிராமிய பாணியில்…

    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்
    எரக்கிறவங்களுக்குக் குடுத்து வாழணும்,
    இருக்கிறத இல்லங்காமக்
    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்..
    தனக்கிட்ட இருக்கிறத
    இல்லண்ணு மறைக்கிற
    துன்பநெல இல்லாதவங்களப் பாத்தா,
    எரப்பவங்ககிட்ட இருக்கிற
    வறுமத் துன்பம்
    இருந்த எடந்தெரியாம
    எல்லாம் ஒண்ணாப் போயிடுமே..
    அதால
    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்
    எரக்கிறவங்களுக்குக் குடுத்து வாழணும்,
    இருக்கிறத இல்லங்காமக்
    குடுத்து வாழணும் குடுத்து வாழணும்…!

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! –  27

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 27

    மாதவரத்தார் நனைத்த மழை!

    முனைவர் ச.சுப்பிரமணியன்

     

    முன்னுரை

    வாழ்வியலின் மொழிபெயர்ப்பாக இருந்த கவிதை, கைதட்டலுக்காகவும் வெற்றுப் பாராட்டுகளுக்காகவும் வீரியமில்லா விருதுகளுக்காகவும் ஏங்கிச் சாகின்ற இரங்கத்தக்க நிலைக்கு ஆளாகிப் போனது கவலைப்பட வேண்டிய ஒன்றே. தமிழர்களின் வாழ்வியல்  பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே அமைந்தது. முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் பாலை என்னும் திணைப்பகுப்பும் முதற்பொருளும் இயற்கையைச் சார்ந்தே வகுக்கப்பட்டன. இயற்கையின் மந்தணத்தைப் புரிந்துணராத ஒரு சமுதாயம் இத்தகைய பகுப்புக்குள் தனது வாழ்வியலை அடைகாத்திருக்க முடியாது. இயற்கையின் மூலம் மழை. தெய்வப்புலவன் இறைவனுக்கு அடுத்தபடியாக மழையைப் பாடியிருப்பதன் மந்தணம் இதுதான். இத்தகைய தரவுகளால் மழையின் அருமைப்பாட்டை உணர்ந்துகொண்ட தமிழர்கள் அதன் அழகியலையும் அனுபவித்துச் சுவைத்திருக்கிறார்கள்.  அத்தகைய நீண்ட நெடிய மரபில் வந்து தற்போது மாதவரத்தில் குடிகொண்டிருக்கும் தம்பி பண்ணைக் கவிக்கோ துரை வசந்தராசன் அனுபவித்து எழுதியுள்ள மழை பற்றிய கவிதை எனக்குள் செய்த சில மாயவித்தைகளையும் மலரும் நினைவுகளையும் மற்றவரும் அறிய வல்லமையில் பந்திவைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தமிழிலக்கணத்தில் மழை

    நானறிந்தவரையில் பழந்தமிழிலக்கணப் பனுவலாகிய தொல்காப்பியத்தில் மழை என்பது எழுத்ததிகார உயிர் மயங்கியலில் ‘மழை என் கிளவி வளியியல் நிலையும் (287) என்ற இடத்தில் ஆளப்பட்டுள்ளது.  கற்பித்தல் முறையில் காப்பியரின் முறை தனித்துவம் மிக்கது. அவர் உயிர் மயங்கியலில் மூன்று சொற்களுக்கு ஒரே மாதிரியான புணர்ச்சியிலக்கணத்தைக் கூறுகிறார். அவை பனி, வளி, மழை என்பனவாம். இவற்றுள் முந்தைய இரண்டிற்கான புணர்ச்சியிலக்கணத்தை அடுத்தடுத்தும் மழை என்பதற்கான புணர்ச்சியிலக்கணத்தை நாற்பத்தைந்து நூற்பாக்கள் கடந்தும் எடுத்துரைக்கிறார்.

    1. ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று வரும். “பனியென வரூஉம் கால வேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை ஆகும்” (241). “பனியத்துச் சென்றான், பனியிற் கொண்டான்”

     

    1. ‘வளி’ என்னும் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றினைக் குறிக்கும் சொல் மேலே பனி என்னும் காலத்தைக் குறிக்கும் சொல்லுக்கு ஓதப்பட்ட புணர்ச்சியிலக்கணத்தைப் பெற்றுவரும். “வளி என வரூஉம் பூதக் கிளவியும் அவ்வியல் நிலையல் செவ்விது என்ப” (242)

    இவ்விரண்டு நூற்பாக்களோடு ஒத்து முடியும் ‘மழை’ என்னும் சொல்லின் வேற்றுமைப் புணர்ச்சியை மாட்டேற்றாக 287ஆவது நூற்பாவில் எடுத்துரைக்கிறார். ஒரு இலக்கியம் சார்ந்த திறனாய்வுக் கட்டுரையில் இத்தகைய இலக்கண விளக்கம் தேவையா என நேயர்கள் உள்ளத்தில் ஐயம் தோன்றுவதை அறிவேன். வாயப்புக் கிட்டும்பொழுதெல்லாம் மரபின் மாண்புணர்வதும் உணர்த்துவதும் நம் கடமையல்லவா? ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல், ‘வளி’ என்பது பூதத்தைக் குறிக்கும் சொல், என்பது தெளிவு தமிழனுக்கு இருந்திருக்கிறது. அன்றியும் தொல்காப்பியம் இலக்கணத்திற்கு இலக்கணம் இலக்கியத்திற்கு இலக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் என்க.

    பத்துப்பாட்டில் மழை

    அறிவியல் சிந்தனையும் கலையிலக்கிய உணர்வும் இணைந்து கைகோத்த காலம் சங்கக்காலம்.  சங்கச் சான்றோர்கள் நீரியியல் சுழற்சி
    குறித்துத்  தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தனர். பத்துப்பாட்டு என்னும் தொகைக்கண் ஒன்பதாவது பாடலாகிய பட்டினப்பாலை  கி.பி. இரணடாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இரண்டாம்  கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் பாடியது.

    “வான்முகந்த நீர் மழை பொழியவும்
    மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
    மாரி பெய்யும் பருவம் போல்
    நீரின்றும் நிலத்து ஏற்றவும்
    நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
    அளந்து அறியாப் பல பண்டம்.” என்கிறார். (ப.பாலை, 126-131)

    கவிதைச் சுவைஞர்களுக்குத் தெரியும் உவமம் பொருளினும் உயர்ந்தது. புகார்த்துறையில் அன்றைக்கு நடந்த ஏற்றுமதி இறக்குமதி நிகழ்வைக் கண்ணனார் பாடுகிறார். மழையாகிய நீர்ச் சுழற்சியை உவமமாக்கிப் பாடுகிறார்.

    அதாவது ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது.
    மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடிக் கடலில் கலக்கிறது. அதுபோன்று
    புகார்த்துறையில் ஒருபக்கம் கப்பல்களில் இருந்து பல பண்டங்கள் வரிசையாக
    நிலத்துக்கு இறக்கப்படுகின்றன. மறுபக்கம் நிலத்திலிருந்து பல பண்டங்கள்
    வரிசையாகக் கப்பலுக்கு ஏற்றப்படுகின்றனவாம். இப்பாடலில்
    கண்ணனார் நீரியல் சுழற்சியைப் புகார்த் துறையின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு
    ஒப்பிடுகிறார். நீரியல் சுழற்சி பற்றிய தெளிந்த சிந்தனை பழந்தமிழர்களிடம்
    இருந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இந்த உவமம்; திருக்குறள் வான்சிறப்பு (17) அதிகாரத்தின் தாக்கம் என்பது உண்மையேயாயினும். மழையின் தோற்றத்தைக் கவிதையில் உவமமாக்கி வைத்து ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

    எட்டுத் தொகையில் மழை

    எட்டுத்தொகையின் இரண்டாவது தொகுப்பு குறுந்தொகை.  நல்ல குறுந்தொகை என்பதற்கேற்ப நல்ல நல்ல பாக்களைக் கொண்ட நூல் அது. அதில் தோழி. தலைவியை ஆற்றுவிப்பதாக ஒரு பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

     

    முந்நான்கு திங்கள் நிறைபொறுத்து அசைஇ

    ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

    “கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
    விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
    செழும்பல் குன்றம் நோக்கிப்
    பெருங்கலி வான மேர்தரும் பொழுதே” (குறுந் 287)
    “பன்னிரண்டு திங்கள் நிறைந்து பசிய புளிச்சுவையில் கொண்ட ஒதுக்கப்படாத வேட்கையினைக் கொண்ட கர்ப்பிணி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கிச் செல்கின்ற பொழுது” என்பது பொருள். மழையைப் பற்றி வண்ணனை செய்யும் இந்தப் பாட்டில் மகளிரின் நிறைகரு பன்னிரண்டு திங்கள் தங்கும் என்னும் குறிப்பு நோக்கத்தக்கது.

    பன்னிரண்டு திங்கள் வயிற்றிற் சுமந்த அப்பாங்கினால்

    என்னிளங் கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்

    பொன்னடி போலப் புலரியே கானிற் கன்றின் பின்

    என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே!

    என்னும் பெரியாழ்வார் பாசுரத்திலும் தலைசிறந்த கரு பன்னிரு திங்கள் தங்கும் என்பது குறிப்பிடப்படுவது காண்க. கட்டுரைத் தலைப்பிற்குப் பொருந்தாதெனினும் தகவலுக்காக இசசெய்தி இங்குப் பதிவு செய்யப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை தலைவனைப் பிரிந்த தலைவியைப் பருவம் காட்டி ஆற்றாமை குறைக்கும் பணியைச் செய்யும் தோழிக்குத் துணையாகத்தான் மழை தன் கடமையைச் செய்திருக்கின்றது.  கடற்கரையிலிருந்தே கடலைப் பாடிய நெய்தலைப் போலவே வாசற்படியிலிருந்தே மழையைப் பாடிய பாடல்களே அதிகமாக இருக்கிறது. கடலுக்குள் சென்றோ மழையில் நனைந்தோ பாடிய பாடல்கள் அருகிலேயே காணப்படுகின்றன. ஐந்திணைகளில் ஏனைய திணைகளின் முதற்பொருள் சிறப்பதைப் போல நெய்தல் அவ்வளவு சிறக்கவில்லை என்பதும் இக்கட்டுரையாசிரியர் கருத்தாகும்.

     

    சிலப்பதிகாரத்தில் மழை

    ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்து இடம் பெறாததும் திங்கள் ஞாயிறு மழை, மற்றும் பூம்புகார் ஆகியவை தொடக்கநிலை வாழ்த்துக்குரியனவாக  அமைநதிருப்பதும் நோக்கத்தக்கது.

    “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

    நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

    மேல் நின்று தான் சுரத்தலான்!”

     

    என்னும் மங்கல வாழ்த்துப் பாடற்பகுதியில் மழை, மாமழை என அடைபுணர்த்துப் பாடப்படுகிறது. திருக்குறளின் வான்சிறப்பு அதிகாரக் கருத்துகளைச் செறித்துக்கொண்டு சிலப்பதிகாரத்தில் ‘உலகிற்குச் சுரத்தல்’ என்னும் இரண்டு சொற்கள் திகழ்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் மழை பற்றிய குறிப்புக்கள் உண்டு. ஆனால் அவை கவிதை நயம் கொண்டு விளங்குகின்றனவா என்பது ஆராயத்தக்கது.

    பாவை இலக்கியங்களில் மழை

    மணிவாசகர் பாடிய திருவெம்பாவையில் மழை பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும் ஆண்டாள் பாடிய திருப்பாவையில் மழை பற்றிய குறிப்பு வேண்டுதலாக வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.

    “ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்!
    ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
    பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
    ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
    வாழ உலகினில் பெய்திடாய்”

    எனப் பெருமாளிடம் வைத்த திருப்பாவையின் வேண்டுதல் “ஆழி மழைக்கண்ணா!” என்றே தொடங்குகிறது. கார்மேகத்திற்குக் கண்ணனின் கார்மேனியும், மின்னலுக்கு அவன் சக்கரமும் இடியொலிக்கு அவன் சங்கொலியும் மழைத்துளிகளுக்கு அம்புகளும் உவமங்களாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு பொருளை உவம வழியாகக் காட்சிப்படுத்த முனைவது மரபுசார்ந்த பழந்தமிழ் இலக்கியங்களின் படைப்புக் கொள்கையாகும். இந்தப் பாடல் கூட மழையைப் பற்றிப் பாடப்பட்டதாக இருக்கிறதே தவிர மழையில் நனைந்த அனுவத்தைப் பாடியதாக அமையவில்லை.

    மகாகவியும் மழையும்

    தேசியக் கவியான பாரதி தெய்வீகத்தையும் பாடியிருக்கிறார். இயற்கையையும் பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை மழையைச் சரியான கோணத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கும் கவியாகவே பாரதியை நான் பார்க்கிறேன். பாரதியின் செவிப்புலனின் கூர்மையும் இயற்கையோடு அந்தக் கவிஞன் வாழ்ந்த வாழ்க்கையும் மழைபற்றிய இந்தப் பாடலில் முற்றுமாக வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்

    “திக்குகள் எட்டும் சிதறி தக்கத்

    தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட

    பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

    பாயுது பாயுது பாயுது –தாம் திரிகிட

    தத்தத் தகிங்கிடத் தத்தோம் –அண்டம்

    சாயுது சாயுது சாயுது பேய் கொண்டு

    தக்கையடிக்குது காற்று – தாம் திரிகிட

    தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட

    வெட்டியடிக்குது மின்னல் – கடல்

    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது

    கொட்டியிடுக்குது மேகம் – கூ

    கூவென்று விண்ணைக் குடையுது காற்று

    சட்டச்சட சட்டச்சட டட்டா என்று

    தாளங்கொட்டிக் கனைத்தது வானம்

    எட்டுத் திசையும் இடிய மழை

    எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா?”

     

    அடுக்குத் தொடர்களைப் போர்முழக்கப் பாடல் வரிகளாக மாற்றிக் காட்டும் கவியாளுமை பாரதியிடம் உண்டு என்பதற்கு இந்த வரிகள் சான்றாகின்றன. கட்டடம் இடிந்தது, மரங்கள் சாய்ந்தன, கப்பல்கள் கவிழ்ந்தன என்றெல்லாம் பாடுவோர் இடையே பாரதிதான் ‘எட்டுத் திசையும் இடிய’ என்று பாடினான்.  ‘திசைகள் இடிய’ என்னும் கற்பனை அதீதமானது! எவருக்கும் அவ்வளவு எளிதில் பிடிபடாதது. பாரதிக்கு எளிமையாகப் பிடிபடக்கூடியது. காரணம் அவன் கவிஞன்.  சிலர் கையொப்பம் இடுகிறபோது கூட ‘கவிஞன் கந்தசாமி’ என்று போட்டுப் பூரித்துப் போய்விடுகிறார்கள். கவிஞன் என்பதைக் கையெழுத்துக்குள் சுருக்காமல் பெருமிதத்தின் அடையாளமாகக் கொண்டவன் அவன். அவன் எழுதிய சீட்டுக்கவியில் இதனைக் காணலாம்.

    புதுக்கவிதைகளில் மழை

    மேலே காட்டப்பட்ட சில எடுத்துக்காட்டுகள் மழை பற்றிய மரபுக்கவிதைக் கூறுகள் என்றால் புதுக்கவிதைக்காரர்கள் பாடிய மழைப்பாடல்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

    நீ இல்லாத இடத்தில்
    கருகி போயின விவசாயம்..
    நீ வந்த இடத்தில் மூழ்கி போயின
    விவசாயம்!
    நீ என்ன மழையா? அல்ல்து பிழையா? .”

    என்று வினவுகிறது ஒரு கவிதை. அந்த வினாவில் ஒரு ‘கவிதை நியாயம்’ இருப்பதை உணர முடிகிறது. அறுவடைக் காலத்தில் பெய்யும் மழை விவசாயிக்கு மட்டுமன்று பயிர்களுக்கே வேதனையாம் ! எடுப்பதற்கும் கெடுப்பதற்குமான புதுக்கவிதை வடிவம் இது. இப்படியொரு கற்பனையைப் புதுக்கவிதைக்காரன் செய்திருக்கிறான்! இந்தக் கவிதையின் ஒரு பகுதியை இன்னும் மெருகேற்றியிருக்கிறான் இன்னொரு கவிஞன்.

    “அடைமழையைக் கண்டு

    ஆனந்தம் கொள்ளாமல்

    தவிக்கிறது

    அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்கள்!”

     

    கவிதை சொல்லப்படும் பொருளில் அல்ல சொல்லப்படும் வகையில் அமைந்திருக்கிறது என்பதற்கு இந்தச் சில வரிகள் எடுத்துக்காட்டு. பாவலர்கள் மழைக்குப் பரவசமாகிறார்கள். பயிர்களோ மனம் வாடுகின்றன. இந்த முரண் இந்தச் சீர்களைக் கவிதையாக்குகிறது!

    “கண்ணாடிப் பூக்களாய்

    மண்மீது உடைகின்றாய்!

    கண்மூடித் திறக்குமுன்னே

    காணாமல் மறைகின்றாய்!”

     

    என்ற புதுக்கவிதை மழைத்துளியைக் கண்ணாடிப் பூக்கள் என்னும் தொடரால் அழகு பெறுகிறது. மழையை அனுபவித்துப் பாடிய கவிதை இது. ஒரு விவசாயக் கவிஞனின் பார்வை வேறு வகையாக அமைந்திருக்கிறது.

    “இப்போதெலலாம்

    எப்போதாவது பெய்யும் மழையால்

    காளான்கள் கூட முளைப்பதில்லை

     

    விளைச்சலுக்குப் பயன்படாமல்

    வீணே கொட்டித் தீர்க்கும்

    மழையில்

    ஏராளமாய் விளைந்து கிடக்கின்றன

    கவிதைகள்!

     

    அருங்காட்சியகத்தில் வைத்துப் பார்க்கும்

    பொருள் போல

    மழை எங்களுக்கு ஏனோ வெறும் பாடுபொருளானது

     

    பாடுபட்டு உழைத்தும் பயனில்லாது போனது

    மழையின் பயணத்திட்டத்தில்

    அடிக்கடி ஏற்படும் குளறுபடியினால்!”

     

    திருக்குறள் வான்சிறப்பு என்னும் அதிகார்த்தில் வரும் கெடுப்பதும் எடுப்பதும் என்னும் சொற்களுக்கான பொருளை “மழையின் பயணத்திட்டக் குளறுபடி” என்று புரிந்து  கொள்ளலாம். அருமை!

    மருதகாசி நனைந்த மழை

    மூன்றே நிமிடங்கள் வரக்கூடிய ஒரு திரையிசைப்பாடலில் மூன்று உவமங்களைக் கூறிப் பெய்யும் மழையைக் காட்சிப்படுத்துவதில் வெற்றிபெற்றவர் மருதகாசி.

    1. “முட்டாப் பயலே மூளையிருக்கா என்று ஏழை மேலே

    துட்டுப்படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற் வார்த்தைபோலே”

    1. “கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே”
    2. “அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே”

    மழை பெய்கிறதாம். பரபரப்பில்லாத தமிழில் அழகியல் மற்றும் வாழ்வியல் கருத்துகளைத் திரையிசையில் தந்து சென்ற கவிஞருள் ஒருவர் மருதகாசி. ஒரு திரையிசைப் பாடலிலும் சமுதாய அவலங்களை உவமங்களாகப் படம்பிடிக்க மழையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.

    அப்துல் ரகுமான் கண்ட புகையும் மேகமும்

    அடக்கமுடைமையைப் பத்து உடைமைகளில் ஒன்றாக்குவார் திருவள்ளுவர். அந்த அதிகாரத்தில் ஆமையைக் காட்டி அடக்கத்தை வலியுறுத்தும் திருவள்ளுவர் அடக்கத்தையும் பணிவையும் ஒன்றாக்குவார். . கவிக்கோ அப்துல் ரகுமான்  பணிவின்மையைப் புகையாலும் பணிவைக் கார்மேகத்தாலும் விளக்குகிறார்.

    “காற்றுக்குக் கண்ணில்லை! அது

    புகையையும் மேலே கொண்டு போய் வந்துவிட்டது!

     

    மேலே வந்தவுடன்

    புகைக்குத் தலைகால் புரியவில்லை!

    அது சூரியனையும் சந்திரனையும்

    கர்வத்தோடு பார்த்தது!

     

    நானும் உங்களைப் போன்றவன்!

    இனிமேல் உங்கள் ராஜவீதியில்

    நானும் பவனி வருவேன் என்றது

     

    அது  மேகத்தைப் பாரத்துச் சொன்னது!

     

    “உன்னைப் போலவே உயரம்!

    உன்னைப் போலவே நிறம்!

    உன்னைப் போலவே உருவம்!”

    இனிமேல் நானும் மேகந்தான் என்றது

     

    புகையை மேகம் என்று நம்பிய

    சில முட்டாள் மயில்கள்

    தோகை விரித்தாடின!

     

    மேகம் கடகடவெனச் சிரித்துவிட்டு

    மழையாய் இறங்கியது!

     

    நனைந்து சிலிர்த்த பூமி  சொன்னது!

    பெருமை மேலே ஏறுவுதிலே இல்லை!

    கீழே இறங்குவதிலே இருக்கிறது!

     

    மழையை ரசித்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வான்வீதியையும் ரசித்துக் கவிதையெழுதிய ரகுமான் ஒரு ஆழமான வாழ்வியல் ;சிந்தனையைப் பதிவிடுவதற்கு மழையைப் பயன்படுத்திக் கொள்கிறார்.  இயற்கையை இப்படிப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு கவிமரபாக இருப்பினும் இயற்கையொடு இயைந்து அனுபவித்த இன்பத்தைத் தம்பி வசந்தராசன் அழகியல் மீதூரப் பதிவிட்டிருக்கிறார் என்பதையே இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

     

     

     

    வசந்தராசன் கவிதைகளில் இயற்கை

    கவிஞர் வசந்தராசனின் கவிதை பற்றி நான் எழுதிய முதல் கட்டுரையில் கண்டெடுக்க முடியாத (படாத) காட்டுமூலிகை’ என்று குறிப்பிட்டிருந்தேன்.! நீரும் காற்றும் வெப்பமும் இல்லாத விதை சாம்பிவிடுவதைப் போல அவருடைய கவிதைகள் இன்றைக்கும் இருக்கின்றன என்பது என் கருத்து. முகநூலில் அவர் பதிவிடும் கவிதைகளில் எழுபத்தைந்து விழுக்காட்டுக் கவிதைகள் உலகத்தரம் வாய்ந்தன. கற்பனைத் திருமணங்களைச் சீர்களின் மந்திரத்தால் சிறக்கச் செய்கிறார்.  எனக்குத் தெரிந்தவரை இவரளவுக்குக் கற்பனை செய்யும் கவிஞர் இருக்கிறார்களா? அல்லது இவர் கவிதைகளில் காணப்படும் கற்பனை வளத்தோடு ஒப்பிடும் பிற கவிதைகளைக் காணமுடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. எண்சீர் விருத்தங்களில் முருகுசுந்தரம், பொன்னிவளவன் முதலியோரோடு எண்ணத்தகுந்த இவர் கற்பனையில் ஈரோடு சிற்பி, தமிழன்பன், அப்துல் ரகுமான், வைரமுத்து ஆகியோரோடு ஒப்பு வைத்து எண்ணத்தக்கவராக எனக்குப் படுகிறார். அவருள்ளும் இயற்கையைத் தனித்துவத்தோடு இவர் துய்ப்பதை இவருடைய கவிதைகள் காட்டுகின்றன.

    வானத்தைச் சுருட்டி

    முற்றத்தில் விரித்தேன்

    வாயிலில் ஆயிரம் மீன் குளங்கள்!

     

    என்றெழுதுகிறார். பூமியைப் பாயாய்ச் சுருட்டிய கற்பனை மிகுந்த தமிழ்க்கவிதை உலகில், வானைச் சுருட்டி முற்றத்தில் வைத்த புதுமைக்குச் சொந்தக்காரர். வானத்தோடு கூடிய விண்மீன்கள் இவர் வீட்டு முற்றத்தில்! என்ன அழகிய கற்பனை!

    வான்தோட்ட முதற்காய்ப்பா கதிரோன் பிஞ்சு?

    வளரிருளைப் பறித்திடவா நிலவுக் கொக்கி?

    மீன்தொட்டி வயல்தானா இரவு வானம்?

    மின்னலென்ன இடிசொடுக்குச் சாட்டைதானா?

    வான்பிடிக்கும் வலைவிரிப்பா மேக தாகம்?

    பால்வீதி தான்விண்மீன் குடியி ருப்பா? “

     

    என்று இன்னோர் இடத்தில் எழுதுகிறார். கதிரவன் நிலவுக்கு ஒளிக்கடன் தருகிறது என்பதும் ஒரு கற்பனைதான். ஆனால் வசந்தராசன் கதிரோனின் பிஞ்சாக நிலவைக் காண்கிறார். பிறைநிலவைக் கொக்கியாகப் பார்க்கும் பார்வை அற்புதமானதல்லவா? வானத்து மீன்கள் இயற்கை. அந்த இயற்கையை இவர் செயற்கையாக்குகிறார். மீன்தொட்டி என்கிறார்.

    மூக்கொழுகிக் கொண்டிருக்கும்!மோதும் காற்றால்

    முசுக்கென்று தும்மலிடும்! தாளின் ஈரத்

    தாக்குதலால் நடுக்கமுறும்! நீர்ச்சீப் பாலே

    தலைவாரித் தழைமுடியைத் தானு திர்க்கும்!

    சீக்குவந்த கோழியைப்போல் சுருங்கிக் கொள்ளும்!

    சூரியனின் வரவென்றால் தோகை அள்ளும்!

    நாக்குழற மழலைமொழி சிரிப்பில் ஆடும்

    நனைந்துவிட்ட மழைமரங்கள்! இன்று கண்டேன்!”

     

    என்று மற்றொரு பதிவில் மழையில் நனைந்த மரங்களைப் பாடுகிறார் வசந்தராசன். இலைசிந்தும் துளியழகு என்றார் வைரமுத்து.  இவரோ மரத்துக்கு மூக்கொழுகுகிறது என்கிறார். மழைத்தூறலாகிய சீப்பால் தலைவாரிக்கொள்ளும் மரம், அதன் வேகத்தால் பழுத்த இலைகளாகிய முடியை உதிர்க்கும் என்னும் கற்பனை அழகியலின் உச்சந் தொடும் முயற்சி!. இத்தகைய சில எடுத்துக்காட்டுகள் இயற்கையைப் பாடுகிற கவிஞராக வசந்தராசன் இல்லாமல் எப்போதும் அவர் மனம் இயற்கையோடு தோய்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் முகநூல் பதிவான  ‘மழை நனைத்தேன்’ என்னும் கவிதை இங்கே திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    காம்பணிந்த வெளவால்கள்

    ஒன்றைப் பிறர் நோக்காத கோணத்தில் நோக்குவதுதான் கவித்துவப் பார்வை. நமக்கெல்லாம் குடை தெரியும்கறுப்புத் துணி அல்லது வண்ணத்துணிகள் தெரியும்நடுக்கம்பியைச் சுற்றியுள்ள கம்பிகள் தெரியும்  மழையில் நனையும் குடைக்கு இருட்டில் வாழும் வெளவாலிடம் என்ன வேலைவசந்தராசனுக்கு கைப்பிடி கொண்ட கறுப்புக் குடை காம்பணிந்த வௌவலாகத் தெரிகிறது

    காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்

    கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்க

     

    மழைபற்றி மற்றவர்கள் நனையாமல் பாட வசந்தராசன் மழையில் நனைந்து கொண்டே (நனைத்துக் கொண்டே) பாடுகிறார். இது அவர் குடைபிடித்துக் கொண்டு வீதியில் நடந்து போனது கொண்டு பெறப்படுகிறது. உவமம் பொருளைப் பிரித்துக் காட்டும். படிமம் பொருளை மற்றொன்றாகக் காட்டும். வௌவால்கள் கண்டிருப்போம்.  கருங்குடைகளைக் கையில் பிடித்து மழையில் நனைந்திருபோம்! ஆனால் நம்மில் எத்தனைப்பேர் அந்தக் கருங்குடையை வௌவால்களாகக் கற்பனை செய்திருப்போம்? அது மட்டுமன்று. குடையின் கைப்பிடியை வௌவால்களின் காம்பாகக் காண்கிற கவித்துவம் நம்மில் எததனைப் பேருக்கு வரும்? நம்மில் என்பது இருக்கட்டும்? எததனைக் கவிஞர்களுக்கு வரும்? அதனால்தான் வசந்தராசன் கவிதைகளால் கவிஞரானவர என்கிறேன் நான்.

     

    ‘காம்பணிந்த வௌவால்கள் வானெதிர்க்க’

     

    குடை மழையை எதிர்க்கிறது என்றால் என்ன பொருள்? காற்றுச் சுழனறடிக்க மழையும் சுழன்றடிக்கும். அந்தச் சுழலுக்குத் தக்கவாறு மழையை எதிர்த்து குடையாளியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு குடைக்கு உண்டு. அதனால்தான் மழைபெய்யும் திசையெல்லாம் குடையெதிர்ப்பதாகக் கற்பனை செய்கிறார். கொட்டுகின்ற மழையைக் குடை வென்றதாக வரலாறு இல்லை. குடை என்பது ஒரு தற்காலிகத் தற்காப்பு. அவ்வளவுதான் சரமழையின் வேகததிற்குக் கள்ளிக்கோட்டை மான் மார்க் குடை ஈடுகொடுக்க இயலாது,

     

    “கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்”

     

    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை” என்றாரே ஆண்டாள் அந்த மரபின் தாக்கம் இந்த வரிகளில்!.

    முகம் திருத்தும் செடிகொடிகள்

     

    புதுமையைப் பற்றிச் சொல்ல வந்த பாரதி, அப்புதுமை கவிதையின் அனைத்துக் கூறுகளிலும் படிந்திருக்க வேண்டுமென்பான், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது “ என்பான்.  ஒரு கவிதை எந்நாளும் அழியாத மா கவிதையாக இருக்க வேண்டுமென்றால் இந்த நான்கு கூறுகளிலும் புதுமை மிளிர வேண்டும் என்பது பாரதியின் கவிதைக் கொள்கையாகக் கருத முடியும்.  செல்போன் புதியதாக வாங்கிவிட்டால் கவிதையும் புதியது என்று பலரும் எண்ணிவிடுவதுதான் கவிதையின் இன்றைய அலங்கோலத்திற்குக் காரணம்.   

     

    தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்

    தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த

     

     

    என்னும் வரிகளில் கற்பனை புதியதாக அமைந்திருப்பதைக் காணலாம். மழை பெய்கிறது, தாவரங்களில் விழுகிறது, செடிகொடிகளில் விழுகின்ற மழைநீர் அவை தேம்பி அழுவதுபோல் தோற்றம் தருகிறது. அவ்வாறு அழுது வழிகின்ற நீர் அடிரம் நிற்கும் மண்ணில் தேங்கி நிற்க அந்த நீர்க்கண்ணாடியில் முகம் திருத்துகிறதாம் செடிகொடிகள்!  எவ்வளவு அழகிய கற்பனை? கண்ணீர் சிந்தியவுடன் முகம் திருத்த முடியுமா என்றால் இரண்டும் தனிததனி வினைகள். முன்னது மழை பெய்கிறபோது. பின்னது மழையடித்து ஓய்ந்துவிட்ட பின்பு.

     

    தசைப்பிடிப்பும் மின்னலும்

     

     

    இடி, மழை, மின்னல் பற்றிக் கவிக்கோ அப்துல் பாடியுள்ள ஒரு கவிதையில் மின்னலை இப்படிப் பாடியிருப்பார். “வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு. நீலச் சகதியில் நெளியும் வெண்புழு”. தம்பி வசந்தராசன்

     

    பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்

    பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க

     

    மின்னல் நேர்க்கோட்டில் மின்னாது. இதுதான் காட்சி. இந்தக் காட்சியை கவிஞர் பரும் அவரவர் ரசனைக்கும் பார்வைக்கும் ஏற்பக் கற்பனை செய்து பாடுகிறார்கள். சமுதாய அவலங்களைப் பாடும் இயல்பு கொண்ட வசந்தராசன், நெளிந்த மின்னலை பசியால் உண்டான ஏழையின் தசைப்பிடிப்ப்பாய்க் காணுகிறார். மின்னுவதற்குப் பாம்பின் படததையும் அதன் சுருளுக்குத் தசைப்பிடிப்பையும் உவமமாகக் காட்டிய கற்பனைத் திறன் சிறப்புக்குரியதல்லவா?.

     

    மண் செய்த மாதவம்

     

    விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பரிதுஎன்பார் திருவள்ளுவர். மழைத்துளி விழாதா என்னும் உழவனின் எதிர்பார்ப்பு வாழ்வியல். என் வறண்ட மேனியில் மழைத்துளி விழாதா பூமி எதிர்பார்ப்பது கவிதையியல்.

     

    நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து

    நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!”

     

    மழையை மண் எதிர்பார்ப்பது நமக்குத் தெரியும். ஆனால் அது வானத்தை நோக்கித் தவம் செய்வது நமக்குத் தெரியுமா? தெரியாது, காரணம் நாம் கவிஞர்கள் அல்லர். மழைக்காகத் தவம் இருந்த பூமி, அந்த மழையை உள்வாங்கித் தாவரங்களுக்கு ஊட்டி விடுகிறதாம். வறுமை நோயைத் தீர்க்கும் விருந்தாக விழுகிறதாம் மழை!.

     

    மழை நனைந்த மண்மகள் கோலம்

     

    மகளிர் நாணத்தால் தரையைக் கீறுவது ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. மண்ணைப் பெண்ணாக உருவகம் செய்வது தமிழ்க்கவிதை நெடுமரபு.  மழை பெய்கிறது. அந்த வேக மழைக்கோடு தரையைக் கீறுகிறதாம். காய்ந்து கிடக்கும் தன் மகளான மண்ணுக்குத் தாயான வானம் கருணை காட்டுகிறதாம். வறட்சியில் புழுங்கிச் செத்த பூமி மழை நீர் பட்டுப் பெருகி உள்ளிருந்த வேர்வை கொப்புளம்போல் வெளிநடக்கிறதாம். காய்நது விட்ட மரத் தளிர்கள் மழைநீரில் மிதந்து செல்வது மண்ணின் தாகங்கள் படகுகளாய்ச் செல்வதுபோல் காட்சி தருகிறதாம்.

     

    நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற

    நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற

    குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து

    கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்

    தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்

    தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்! “

     

    என்றெழுதிக் கவிதை காட்சிப்படுத்தும். இறுதி வரிகளில்

     

    வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!

    வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!

     

    என்றெழுதி மழையின் மாண்பை உச்சாணிக் கொம்புக்கேற்றுகிறது.  மேலே கண்ட காட்சிகளெல்லாம் மழை பெய்கிற அந்தப் பொழுதில் மட்டுமே!. மழை நின்றவுடன் வானம் வெளுத்துவிடுகிறது. அப்போது உலகம் வெளிர் வாங்குகிறது. இதனைச் “சாயம் போகும்” என்னும் வழக்குச்சொல்லால் உயிர்பிக்கிறார் கவிஞர்.  “சாயம் வெளுத்துப் போச்சு” என்பது வழக்கு. ஒருவனுடைய உள்ளீடு போலியானால் அதாவது அந்த உள்ளீடு அவனுக்கு உரியது இல்லையென்றால் அது வெளிவந்தவுடன் அவன் போலியாகிறான். கற்றவன்போல வேடமிடுகிறவன் கல்லாதவர் அவையில். வெளுத்துவிடுவதிலலையா அது போல! பைந்தமிழ்க் கவிதைகளில் பழகுதமிழைக் கையாள்வதும் பாமர வழக்கைக் கையாள்வதும் அக்கவிதையின் உயிர்ப்புத்தன்மையை உயர்த்தும். “மண்வெட்டி கூலி தின்னலாச்சே!” என்பார் பாரதியார். “காப்பார் கடவுள் உமை கட்டையில் நீர் போகுமட்டும்” என்பார் பாவேநதர்!, “கட்டையில் போவது என்றால் மரணம். ‘வீடு முச்சூடும்’ அழும் என்பார் ஜீவா! முச்சூடும் என்றால் முழுமையும் என்பது பொருள். சாயம் போகும் என்னும் வழக்குச் சொலலுக்கு இலக்கிய மகுடம் சூட்டியிருக்கும் வசந்தராசன் ஒரு மரபுக்கவிஞராக மலர்வது இங்கேதான்!

     

    கற்பனைக் களஞ்சியம்

    பாட்டு முழுமையும் கற்பனையைக் கலவையாக்குவது இடைக்காலத் தமிழ்க்கவிதை மரபு. இடைக்காலத்திற்குப் பிறகு வந்த  நூற்றாண்டுகளில் கற்பனைக் களஞ்சியம் என்னும் பெருமைக்கு உரியவர் சிவப்பிரகாச சுவாமிகள். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இந்தப் பெருமைக்கு உகந்தவனே! தம்பி வசந்தராசன் மழை பற்றி எழுதியிருக்கும் இந்த உருவக விருத்தத்தின் இறுதிப்பாடல் கற்பனைக் களஞ்சியமாகவே மிளீர்கிறது. முதல் வரியில் சொல்கிறார்.

     

    விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட

     

    மொக்குளாக விழுகின்ற நீர்த்துளிகளுக்குத் திவலை என்று பெயர். நீர்நிலைகளில் நீராடிவிட்டு வருவோர் வெற்றுடம்பில் இதனைக் காணலாம். வானின்று விழும் நீர்த்திவலைகள் துளித்துளிகளாக நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுவது சிறு தவளை தாவிக்குதிப்பதுபோல இருக்கிறதாம்!

     

    வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க

     

    மழைத்துளி இலைகளில் விழுகிறபோது அவற்றுக்கு வேர்ப்பதுபோல் இருக்கிறது.  காற்றின் அசைவில் இலைகள் ஆட, அவற்றின் மீது விழுந்த நீர் வேர்வைத்துளிகளாகச் சிதறுகிறது. “வேரின் மீது விழுந்த மழை” என்றும் ‘விறகின் மீது விழுந்த மழை’ என்றும் கருத்தியல் விளக்கத்துக்கு மழையைப் பாடும் வைரமுத்தின் பார்வையிலிருந்து “இலைகளில் விழுந்த மழை” என்னும் வசந்தராசனின் அழகியல் பார்வை இப்படி அமைந்திருக்கிறது.

    தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க

     

    தொழுகை என்பது இஸ்லாமியர்களுக்கு உரியது. அவர்கள் பள்ளிவாசலில் தரையில் தலைவணங்கித் தொழுவது சமயச்சடங்கு. மழையினால் மரங்கள் சோர்ந்து அப்படியே சாய்ந்து எழுவது மழைக்காட்சி. இந்த மழைக்காட்சியைக் காணுகிற கவிஞர் மனத்துள் பள்ளிவாசல் காட்சி நினைவுக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மரங்கள் தலைசாய்வதை நூற்றுக்கணக்கானவர்கள் தொழுவதாகக் காண்கிறார். தொழுகையாய் என்பதை தொடு கையாய் என்ப்பிரிததுச் சில மரக்கிளைகள் தொழுகின்ற கையைப் போலக் காட்சியளித்ததாகவும் கற்பனை செய்து கொள்ளலாம்.

     

    தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க

     

    அடிக்கிளைகளில் இலைகளற்று நுனிக்கிளைகளில் மட்டும் இலைநிறைந்து குடையைப் போல நிற்கின்ற மரங்கள் உண்டு, பெரிய வீடுகளிலும் சாலைகளிலும் பார்த்திருக்கலாம். அந்த மரங்களின் தாய் பூமியாம். பூமி தவமிருக்கிறது என்று கற்பனை செய்த கவிஞன், இந்த வரியில் அந்த பூமித்தாய் நனைந்துவிடக்கூடாதே என்பதற்காக மரங்கள் அதாவது தொப்பையான மரங்கள் கிளைக்குடையாகிய இலைக்குடை பிடித்ததாகக் கற்பனை செய்கிறார். முன்வரியில் காட்டியது இயல்பான மரம். இங்கே காட்டுவது தொப்பை மரம். உண்மைக் கவிஞர்களுக்குக் கற்பனைக்குப் பஞ்சமா என்ன?

     

    அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்

    அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த

     

    மழை பற்றிய கற்பனையில் இறுதியாக ஆனால் முத்தாய்ப்பாகப் பதிவு செய்கிறார். “வானம் அழுகிறது” என்பது பொதுவான கற்பனை மரபு. “வானம் அழுவது மழையெனும் போது” என்பார் கண்ணதாசன். மழைப்பொழுதில் வானவில் வண்ணவில்லாகத் தோன்றுவதும் இயல்பு. ஆனால் அந்த வானவில்லை அழுகின்ற வானின் கண்ணீரைத் துடைக்கும் முந்தானையாகக் கற்பனை செய்தது புதுமையிலும் புதுமை. “செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால்  சிங்காரச் சிலையை இங்கிருந்தே தொடுவேன்” என்பார் சுரதா!. பொதுவாகச் சேலையின் தலைப்புத்தான் முந்தானையாக அமையும். இங்கே எழுவண்ண வானவில் முந்தானையாதலின் “அழகொளிர் முந்தானை” என்கிறார்.

    முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு

    முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.! “

     

    ‘நனைந்தேன்’ என்னும் தன்வினையை ‘நனைத்தேன்’ எனப் பிறவினையாக்கிச் சொல்வதன் மூலம் தன் மனத்தின் விசுவரூப தரிசனததை வசந்தராசன் காட்சிப்படுத்துகிறார். மழை பெரியது! விரிந்தது! அகண்டது! உயரத்திலிருந்து கொட்டுவது! மனம் சிறியது! சுருங்கியது! குறுகியது! நம் உயரம் கூட இல்லாதது! எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாதது!. பெரியது சிறியதை நனைக்கலாம். சிறியது பெரியதை எப்படி நனைக்க முடியும்? “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!” என்றானே புரட்சிக்கவிஞன் அதன் மற்றொரு படிமக் காட்சி இது. ‘நனைத்தேன்’ என்பது நுண்ணிய சொல்லாட்சி. இப்போது அந்தப் பாடல்களைப் படித்துப் பாருங்கள்!

    காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்

    கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்

    தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்

    தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த

    பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்

    பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க

    நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து

    நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!

     

    நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற

    நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற

    குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து

    கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்

    தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்

    தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்!

    வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!

    வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!

     

    விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட

    வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க

    தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க

    தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க

    அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்

    அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த

    முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு

    முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.!

     

    நிறைவுரை

     

    மழை நனைந்தேன் என்றுதான் பிறரெல்லாம் பாடினார்கள். இவர்தான் மழை நனைத்தேன் என்று பாடியிருக்கிறார். ‘மழையை இவர் நனைத்தாரா’ என்பது நமக்குத் தெரியாது. நாம் காணவில்லை. ஆனால் இவருடைய கவிதை மழை முழுமையையும் ஈரமாக்கியிருக்கிறது. கவிஞர்களின் முகவரிகளையே தங்கள் முகவரிகளாகக் கொண்டு   கவிதை பெருகும் ஒரு பேரிடர் காலத்தில்  தமது கவிதைகளால் தன்னை அறிமுகம செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் வசந்தராசன் வளிமண்டலம், என்பது போல் கவிதா மண்டலமும் ஒன்றுண்டு. பாரதி தனது தாசனை அறிமுகம் செய்கிறபோது சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலததைச் சேர்ந்த சுப்புரத்தினம்” என்றுதான் குறிப்பிடுகிறார். கவிதா மண்டலம் என்பது இயற்கை அழகியல் மற்றும் சமுதாய அழுகியல் ஆகிய இரண்டினை உள்ளடக்கியது. அவ்விரண்டிலும் தன் உள்ளத்தை இறக்கிவைத்துக் கொண்டிருக்கிறார் வசந்தராசன். காட்டு மூலிகைபோல் கண்டெடுக்காது மாதவரக் காட்டுக்குள் மறைநது கிடக்கும் இந்த மழை நனைத்த மரபுக்கவிஞனுக்கு விண்வெளி தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை!

    (தொடரும்)

    Share
  • அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா!

    அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சங்கநிதி பதுமநிதி தந்திடு தாயே
    சஞ்சலம் அணுகாமல் காத்திடுவாய் நீயே
    பஞ்சமெனும் இருள்சூழா பார்த்திடுவாய் தாயே
    பாதமலர் சரணடைந்தோம் பராபரமே உன்னை

    உணவோடுஉடையுறைள் உவந்தளிப்பாய் தாயே
    உலகோர்கள் இகழாமல் வாழ்வளிப்பாய் தாயே
    அளவோடு செல்வமதை அளித்திடுவாய் தாயே
    ஆசையது பெருகாமல் பார்த்துவிடு அம்மா

    பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லையாம் அம்மா
    பொருளீந்து எந்தனைக் காத்திடுவாய் அம்மா
    பொருளோடு ஈகையையும் மனமமரச் செய்வாய்
    அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா

    இருப்பாரும் இல்லாரும் தேடுகிறார் தாயே
    எவரெவர்க்கு எதுவேண்டும் என்பதை நீயறிவாய்
    கொடுக்கின்ற தருணமதில் கொடுத்துமே உயர்வாய்
    கோணாத குணமதனைத் தந்திடுவாய் அம்மா

    பொருளும் அருளும் ஒன்றாய் இணைய
    கருணை புரிவாய் இலக்குமித் தாயே
    தருமம் உலகில் தழைக்க அருள்வாய்
    தனமாய் ஒளிரும் இலக்குமித் தாயே

    Share
  • துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்!

    துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    இன்பகலா வாழ்க்கை எனக்கருள வேண்டும்
    ஈரமொடு வீரம் மனமமர வேண்டும்
    துன்பது என்னைத் தொற்றாமல் இருக்கத்
    துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்

    வாதமிடு குணத்தை வதைத்திடுவாய் அம்மா
    மோதவரும் பகையை விலக்கிடுவாய் அம்மா
    சோதனைகள் அனைத்தும் சாதனையாய் ஆக்க,
    துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்

    வார்த்தையிலே இனிமை சேர்த்திடுவாய் தாயே
    வம்பர்தமை வாழ்வில் அகற்றிவிடுவாய் அம்மா
    காப்பாக இருப்பாய் கண்டிப்பாய் இருப்பாய்
    கண்ணுக்குள் மணியாக இருக்கின்றாய் நீயும்

    வாழ்வாக இருப்பாய் வளமாக இருப்பாய்
    தாழ்வாக இருப்பாரைத் தாங்கியே நிற்பாய்
    ஆழமாய் இருக்கும் அருட்கடலும் ஆவாய்
    அன்னையே துர்க்கையே அரவணைப்பாய் தாயே

    Share
  • குறளின் கதிர்களாய்… (471)

    குறளின் கதிர்களாய்… (471)

    செண்பக ஜெகதீசன்

    இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இம்மையும் இன்றி வரும்.
    -திருக்குறள் -1042 (நல்குரவு)

    புதுக் கவிதையில்…

    வறுமை என்னும் பாவி
    ஒருவனிடம்
    வந்து சேர்ந்தால்
    அவன்
    வருபவர்க்கு ஈவதால் பெறும்
    மறுமை இன்பமும்,
    மண்ணில் தாமே அனுபவிக்க
    ஏதுமின்மையால்
    ஏற்படும்
    இம்மை இன்பமும்
    இல்லாமல் போகுமே…!

    குறும்பாவில்…

    வறுமையாம் பாவியொருவனிடம் வந்தால்
    ஈகையால் பெறும் மறுமை இன்பமும், இல்லாமையால்
    இம்மையின்பமும் இல்லாமல் போய்விடும்…!

    மரபுக் கவிதையில்…

    வறுமை என்னும் பாவியது
    வந்து விட்டால் ஒருவனிடம்,
    மறுமை இன்பம் பெறும்வழியாம்
    மற்றோர்க்கு ஈய ஏதுமிலா
    வெறுமை நிலையே வருவதுடன்
    வேண்டு மட்டும் அனுபவிக்கும்
    உறுதி குலையப் பொருளில்லா
    உண்மை நிலைதான் இம்மையிலே…!

    லிமரைக்கூ…

    இன்பம் தந்திடும் மறுமை
    இலாதுபோகும் ஈயாததால், இன்பமில்லை இம்மையிலும்
    ஒருவனிடம் வந்தால் வறுமை…!

    கிராமிய பாணியில்…

    கொடியது கொடியது
    வறும கொடியது,
    மனுச வாழ்க்கயில
    வறும கொடியது..
    வறுமங்கிற பாவி
    வந்திட்டா ஒருத்தங்கிட்ட
    அடுத்தவங்களுக்குக் குடுக்கிறதுக்கு
    ஒண்ணுமில்லாததால அவனுக்கு
    மேல் ஒலக இன்பம் இல்ல,
    ஓலகத்தில ஆண்டு அனுபவிக்க
    எதுவும் இல்லாததால
    இந்த
    ஓலக இன்பமும்
    இல்லாமப் போவுமே..
    அதால
    கொடியது கொடியது
    வறும கொடியது,
    மனுச வாழ்க்கயில
    வறும கொடியது…!

    Share
  • ஒரிசா பாலு மறைந்தார்

    ஒரிசா பாலு மறைந்தார்

    அண்ணாகண்ணன்

    வங்காள விரிகுடாவில் சுமார் இரண்டரை மணி நேரம் வலம் வரும் வாய்ப்பு, 2010 ஜூ்லை 16 அன்று கிட்டியது. இதுவே கடலில் நான் மேற்கொண்ட முதல் பயணம். தமிழ்ப் பெருங்கடல் ஆய்வு மையத்தின் சார்பில் கடலியல் வல்லுனரான ஒரிசா பாலு (உறையூர் சிவஞானம் பாலசுப்பிரமணி) (பாலசுப்பிரமணியம் B+), இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். ‘நெய்தலோடு ஒரு பொழுது’ என்பது, இந்தப் பயணத்திற்கு அவர் சூட்டிய பெயர்.

    தமிழர் வரலாற்றைக் கடலுக்கடியில் தேட வேண்டும் என்ற அவர் குரல், தனித்த ஒற்றைக் குரல். வேறு எவருக்கும் இதைச் சொல்லும் துணிவும் வரலாற்றுப் பார்வையும் அனுபவமும் இருந்ததில்லை. கடலுக்கடியில் நீந்துவோருக்கு வழிகாட்டியாக, பாலு இருந்திருக்கிறார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், மறைந்த குமரிக் கண்டத்தைக் கடலுக்கடியில் தேட வேண்டும் என அவர் துணிவுடன் கூறினார்.

    ஆமையைப் பின்தொடர்ந்து தமிழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டான் என்ற கருத்துருவை அவர் தொடர்ந்து முன்வைத்து வந்தார். இது குறித்து நான் விமரிசித்து எழுதியிருக்கிறேன். எனினும் என் கருத்துகளை அவர் ஆக்கப்பூர்வமாகவே எடுத்துக்கொண்டார்.

    உலகம் முழுதும் தமிழில் அமைந்துள்ள ஊர்ப் பெயர் விவரங்களைத் தேடித் திரட்டினார். இங்கெல்லாம் தமிழர்கள் சென்று வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் தான் இவ்வாறு பெயர்கள் அமைந்துள்ளன என்ற கருத்தை முன்வைத்தார். இதற்காகக் கடுமையாக உழைத்தார். தமிழர் வரலாற்றைக் கற்பனைக் கதையாக இல்லாமல், தக்க சான்றுகளுடன் நிறுவ வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்தது.

    பாலசுப்பிரமணியம் B+ என்றே அவர் பெயரை எப்போதும் எழுதி வந்தார். ஏன் இப்படி எழுதுகிறீர்கள் எனக் கேட்டேன். B+ என்பது என் குருதி வகை. யாருக்கேனும் இந்தக் குருதி தேவையெனில் என்னை அணுகலாம். அவர்களுக்கு இது உடனே ஞாபகம் வர வேண்டும். அதற்காகவே என் பெயருடன் இதைச் சேர்த்து எழுதுகிறேன் என்றார். முதலெழுத்துகளை நாம் அத்தனைப் பேரும் எழுதும்போது, குருதி வகையை எழுதி, சிறந்த முன்மாதிரியாக விளங்கினார். மேலும், இது குருதிக் கொடை விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

    நேற்று மாலை, அவருடன் பேஸ்புக் மெசெஞ்சரில் உரையாடினேன். எப்போது வந்து பார்க்கலாம் என்று கேட்டேன். மாலை 4 – 6 வரலாம் என்றார். இன்று மாலை அவரைப் பார்க்கக் கிளம்பினேன். இடைவழியில் அவரை அழைத்தேன். 4.15க்கு அவர் மறைந்துவிட்டதாக அவர் மகன் தெரிவித்தார்.

    ஒரிசா பாலுவுடன் அவரது அலைபுரளும் மனக்கடலும் ஓய்ந்தது. அவரது உந்திச் செலுத்தும் ஊக்கமும் அயராத உழைப்பும் பரபரக்கும் ஆர்வமும் துடிப்பும் கூடவே ஓய்ந்தன. அவரது ஏராளமான திட்டங்களுள் சிலவற்றைத் தக்கவர்கள் யாரேனும் எடுத்துச் செய்யலாம். அவர் அரூபமாகக் கூடவே நின்று உதவுவார்.

    நற்பணிகள் பல புரிந்த நண்பர் ஒரிசா பாலுவின் ஆன்மா, அமைதி பெறுக.

    Share
  • குறளின் கதிர்களாய்… (470)

    குறளின் கதிர்களாய்… (470)

    செண்பக ஜெகதீசன்

    இரவார் இரப்பார்க்கு ஒன்றீவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்.
    -திருக்குறள் -1035 (உழவு)

    புதுக் கவிதையில்…

    தம் கைகளால்
    உழவுத் தொழில் செய்து
    உணவு உண்ணும்
    இயல்புடையோர்
    இரவார் பிறரிடம் சென்று,
    இரக்கத் தம்மிடம் வருவோர்க்கு
    இல்லையெனச் சொல்லாமல்
    ஈந்திடும் குணமுள்ளோர் அவரே…!

    குறும்பாவில்…

    தம்கையால் உழுதுண்டு வாழ்வோர்
    பிறரிடம் சென்றே இரவார், தம்மிடம்
    இரப்போர்க்கு இல்லையெனாது ஈவர்…!

    மரபுக் கவிதையில்…

    தமது கையால் உழுதுண்ணும்
    தன்மை கொண்டோர் வாழ்வினிலே
    தமக்கே வறுமை வந்தாலும்
    தடுக்க இரவார் பிறரிடமே,
    நமராய் எண்ணி இரந்திடவே
    நாடி வருவோர்க்கு இலையெனாதே
    சுமக்கும் அளவில் கொடுத்தனுப்பும்
    சொந்தக் குணமாம் அவருக்கே…!

    லிமரைக்கூ…

    தம்கையால் உழுதே உண்பார்
    தாழ்விலும் பிறரிடம் இரவார், இரப்போர்க்கு
    இலையெனாது ஈந்திடும் பண்பார்…!

    கிராமிய பாணியில்…

    ஒசந்தது ஒசந்தது
    தொழிலுல ஒசந்தது,
    ஒலகத்துக்கு ஒணவுதருற
    ஒழவுத்தொழிலே ஒசந்தது..
    சொந்தக் கையால வயலுல
    ஒழச்சிச் சாப்புடுற
    கொணம் உள்ளவுங்க
    ஒருநாளும் அடுதவங்ககிட்ட
    எரந்து சாப்புடமாட்டாங்க,
    அவுங்ககிட்ட வந்து
    எரக்கிறவங்களுக்கு
    இல்லண்ணு சொல்லாமக்
    குடுத்தனுப்புற
    கொணந்தான் அவுங்களுக்கு..
    அதால
    ஒசந்தது ஒசந்தது
    தொழிலுல ஒசந்தது,
    ஒலகத்துக்கு ஒணவுதருற
    ஒழவுத்தொழிலே ஒசந்தது…!

    Share