துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்!

மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

இன்பகலா வாழ்க்கை எனக்கருள வேண்டும்
ஈரமொடு வீரம் மனமமர வேண்டும்
துன்பது என்னைத் தொற்றாமல் இருக்கத்
துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்

வாதமிடு குணத்தை வதைத்திடுவாய் அம்மா
மோதவரும் பகையை விலக்கிடுவாய் அம்மா
சோதனைகள் அனைத்தும் சாதனையாய் ஆக்க,
துணையாக இருப்பாய் துர்க்கையம்மா நீயும்

வார்த்தையிலே இனிமை சேர்த்திடுவாய் தாயே
வம்பர்தமை வாழ்வில் அகற்றிவிடுவாய் அம்மா
காப்பாக இருப்பாய் கண்டிப்பாய் இருப்பாய்
கண்ணுக்குள் மணியாக இருக்கின்றாய் நீயும்

வாழ்வாக இருப்பாய் வளமாக இருப்பாய்
தாழ்வாக இருப்பாரைத் தாங்கியே நிற்பாய்
ஆழமாய் இருக்கும் அருட்கடலும் ஆவாய்
அன்னையே துர்க்கையே அரவணைப்பாய் தாயே

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *