Blog

  • Moodar Koodam – press details rgd yesudhas sir’s Neeyum Bommai song remix

     

    ILM TITLE   : MOODAR KOODAM (Fools Gathering)

    COMPANY   : WHITE SHADOWS PRODUCTIONS
     

    TECHNICAL CREW

     

    DIRECTOR   : NAVEEN

    D.O.P.    : TONY CHAN

    MUSIC     : NATARAJAN SANKARAN

    EDITOR   : ATHIYAPPAN SIVA

    ART DIRECTOR  : PREM NAVAS

    LYRICS    : NAVEEN

     

    CAST

     

        RAJAJ
        OVIYA
        JAYAPRAKASH
        ANUPAMA
        SENTRAYAN
        KUBERAN
        FIVESTAR KRISHNA
        MAHESWARAN
        NAVEEN

     

    About The Movie
     

    The movie is a black comedy based on Gautama Buddha’s saying “It’s better to travel well than to arrive”. A thorough entertainer, scripted and filmed in a way to make the audience laugh, have fun and if possible think. Scripted and directed by debutant Naveen who has assisted director Chimbu Deven in ‘Imsai Arasan 23m Pulikecei’, ‘Arai En 305il Kadavul’ and Director Pandiraj in national award winning ‘Pasanga’.

    Director Note

    Every person who thinks he has tasted success in life and understood life successfully, every person who searches outwardly for happiness and satisfaction of life, every person who considers himself superior or inferior than others – everyone of them is a fool. Because whenever we think we are equipped to deal with life’s next challenges, we are given a rude awakening. The experiences that we accumulate over a lifetime still might not be enough to deal with the next puzzle that life will throw at us. Life outfoxes and outwits us all the time. Life’s meaning and perception changes ever day and life teaches us and makes us understand it in a new form every other day till we die. So, all of us who think we are wiser, smart, competitive, better than another being, are fools. And this world is a beautiful stage where all these fools gather. This film deals with a bunch of fools like us. It’s not mandatory they do foolish things and act foolishly, but they are fools in their own way.

     

    K.J.Yesudhas sings his first song after 50 years

     

    ‘Moodar Koodam’ is a black comedy based on Gautama Buddha’s saying “It’s better to travel well than to arrive”, a thorough entertainer, scripted and filmed in a way to make the audience laugh, have fun and if possible think. As the script subtly deals with the meaning and purpose of life, the climax song needed to be more philosophical. According to me the song ‘neeyum bommai naanum bommai’ from the 1963 cult classic movie ‘Bommai’ directed by the legendary director S.Balachander is the best song that explains life in a more philosophical but rather simpler way. So, I thought a remix version of the song with the same lyrics and mesmerizing voice of Yesudhas sir would do more justice to the climax of the film. After finishing the track, we visited S.balachnder sir’s Mylapore house, met his family members and told them about our idea of remixing and using the song in our movie and played the track for them. After hearing the remixed version, srimiti Vasantha Balachander and Mr.S.B.Raman (son of S.Balachander), readily agreed and issued a legal NOC for the usage of the song in our film. But later when we were planning to proceed with the recording, I thought that reaching Yesudhas sir will be a herculean task for an independent filmmaker like me and decided to record the song with Vijay Yesudhas’s voice. Vijay listened to the track and was very impressed. he himself suggested that none other than the legend himself can do justice to the song. He played the track to Yesudhas sir and Yesudhas sir immediately accepted to sing the song. Yesudhas sir has recreated his magic once again after 50 years with this song. He was very pleased with the way the song has been remixed. He appreciated music director Natarajan Sankaran for having preserved the soul of the song while remixing it. He recorded the song in 20 minutes and shared his experience for more than an hour and a half. I would cherish those 2 hours with the legend throughout my life. I consider it a boon. It makes us feel proud to present the classic song ‘Neeyum Bommai Naanum Bommi’ to the present day audience. It’s a pride to have such a song in our movie to have associated with legends like Yesudhas sir and S.Balachander sir’s family. We are grateful to them. This song will sure bring tears out of music lovers and Yesudhas fans. The song with it’s visual will be a treat for the audience to watch. The audio will be released in a month. We are planning to felicitate the two legends, K.J.Yesudhas and late Mr.S.balachander during the audio release.

     

    Share
  • தேவாரத் தலங்கள் சில (பகுதி-3)

    ஊற்றத்தூர்-ஓர் தேவார வைப்புத்தலம்

    நூ.த.லோகசுந்தரம்

    மூவர் முதலிகள், தம் காலமாம் 1350 ஆண்டுகள் தொன்மமுடை, சிவனுறைத் தலங்கள் பலவற்றினை, அவர்கள் நேரடி வழிபட்டு, அவற்றிற்கு எனத் தனிப்பதிகங்கள் இயற்றா விடினும், சேத்திரக் கோவை, அடைவுத் திருத்தாண்டகம், ஊர்த்தொகை என நன்றே தொகுத்துப் பாடின பாங்குடன், நுற்றுக்கணக்கானவற்றைப் பிறப்பதிகங்களில், வைப்புத் தலங்களாக குறிக்கப்பட்டமை, நாம் பெற்ற பேறே. வைணவ மரபில், ‘பாசுரமுள்ளன’, ‘குறிக்கப்பட்டவை’, எனப் பாகுபாடு செய்யாது, யாவும் 108 திவ்யதேசங்களே, எனப் புவி கடந்த மேலுலகத் தலங்களையும், ஒன்றாகக் கொண்ட, நோக்கு சைவத்தில் ஏனோ, காணவில்லை.

    சைவநெறிச் சான்றோர் பலர், சைவத் திருமுறைகளாம் மாகடல் தீரத்தம் ஆடி, ஆயுங்கால், அவ்வைப்புத் தல முத்துக்கள், 300க்கு மேலும் கண்டுள்ளனர். சைவப் பெரியார், சிவஞானமுனிவர், 250 தலங்களை ஆவணப்படுத்தி, ‘வைப்புத்தலக் கோவை‘ பாடினார். பின்வந்தோர், தொடர்ந்து மேலும் பலவற்றினை இனம் கண்டும், அவற்றின் அமைவிடம், வரலாறு, போன்றவற்றையும், ஆய்ந்தனர். 12 திருமுறை, 18000+ பாடல்கள் என ஆழந்து பரந்த கடலாதாலால் மொழியறிவின் வழி முதலில் இது தலப்பெயர், பிறகு அத்தலம் எங்குள்ளதெனும் வரலாறிணைந்த புவியியல் அறிவுடன் ஆய்வு, பல காலும் நடந்த வண்ணமே, உள்ளன.

    இவ்வகைத் தொன்மப் புகழுடைய, சீர்மை மிகு சிவத் தலங்களை, வாய்ப்புகள் கிடைக்கும் காலத்து, பாடல் பெற்ற தலங்களுடனும், தனித்தும், வழிபடுவது, கூடும். அவ்வகையில் காணக்கூடிய தலம் நடுநாட்டு தென் எல்லை கடந்து, சோழநாட்டு வடஎல்லையிலுள்ள, ஊற்றத்தூர் ஆகும். திருச்சி>>சென்னை பெருவழிச் சாலைக்கு மிக அருகேயே, (15கிமீ-சமயபுரம்) கடந்து 35 கிமீ தூரத்தே, பாடாலுர் எனும் சிற்றூரின்கண், கிழக்கே செல்லும் நல்ல சாலை வழியில், 5 கிமீ தொலைவில், மிகச்சிறப்பான கற்றளி ஒன்றில், நகர மக்கள் ஆர்ப்பாட்டரவம் ஒன்றுமின்றி, தூய்மை மிகு தியானச் சூழ்நிலையில், ஊற்றத்தூர் ‘உடையாரை‘ வழிபடலாம்.

    நல்லதோர் தேர், 16கால் வெளிமண்டபம், 5 நிலை 7கலச ராஜகோபுரம், தலப் பெயருக்கேற்ப நந்தியம் பெருமானருகு கோயிலினுள் நடுவண் திருமஞ்சன ஊற்றுக் கிணறு, 63 நாயன்மார் படிமவரிசை, ஐம்பொன் உடன் கருங்கல்லாலும் ஆடல்வல்லான், உருவமெனும் தனிச் சிறப்புகளுடன் அம்மையுடனும் உறைகின்ற

    “பிறையூரும் சடைமுடிஎம் பெருமானைத்
    தொழஇடர்கள் தொலையும் அன்றே”
    எனும் அப்பரடிகள் தாண்டக அருள் வரிகளை நம்பி வழிபடுவோமே.

    இறைவர் >>>>> தூய மாமணீசுவரர்
    இறைவி >>>>> அகிலாண்டேசுவரி
    என் கைபேசிக்கருவி உள்கொண்ட படங்களை கண்டு தேர்க.

    ஊற்றத்தூர் தலத்தினைப் பேசும் தேவாரப் பாடல்கள் இவை :-

    திருநாவுக்கரசர் :
    சேத்திரக்கோவைத் தாண்டகம் – திருமுறை 6.70.10
    நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு
    நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
    துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
    தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
    உறையூர் கடல் ஓற்றியூர் ஊற்றத்தூர்
    ஓமாம்புலியூர் ஏர் ஏடகத்தும்
    கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
    கயிலாய நாதனையே காணலாமே

    திருநாவுக்கரசர் :
    அடைவு திருத் தாண்டகம் – திருமுறை 6.71.3
    பிறையூரும் சடைமுடிஎம் பெருமான் ஊர்
    பெரும்பற்றப் புலியூரும் பேராவூரும்
    நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
    நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
    உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
    அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
    துறையூரும் துவையூரும் தோழுர் தானும்
    துடையூரும் தொழஇடர்கள் தொலையும்அன்றே

    பெயர்வழித் திருமுறை © பாடல்கள்
    சிவபெருமான் ஓர் ஊற்று

    (1)
    வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
    மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
    ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
    ஓவாத சத்தத் தொலியே போற்றி
    ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
    ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
    காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி 1
    அப்பரடிகள் தேவாரம் (6.55)
    போற்றித் திருத்தாண்டகம்

    (2)
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்(து) அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்(கு) உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மாணிக்கவாசகர் திருவாசகம்
    சிவபுராணம் (8.1)

    (3)
    அழிதரும் ஆக்கை ஒழிச்செய்த ஒண்பொருள்
    இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
    அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120
    ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி
    ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
    போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
    மாணிக்கவாசகர் திருவாசகம்
    திரு அண்டப் பகுதி (8.3)

    (4)
    போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை
    ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
    வேற்றுடல் தானென்றும் அதுபெரும் தெய்வமாம்
    காற்றது ஈசன் கலந்து நின்றானே 28
    திருமூலர் திருமந்திரம்
    தோத்திரம் (10.3009)

    மேலும், ஊருக்குள், சிவன்கோயிலுக்கு தென்மேற்கு திசையில், திருமாலுக்கு ஓர் பெரிய கோயில்.உள்ளது. அதான்று, ஓரிரு கிமீ தூரம் மேற்கே, கடத்துப் பாறைகள் மேல், ஓர் முருகன் கோயிலும், காண்கின்றது. மற்றும், பாடலுரிலிருந்து இவ்வூரினுக்கு செல்லும் வழியில், *தெரணி*யிலும் நல்ல பழமையான கோயிலொன்று உள்ளது.

    Share
  • ஐக்கியா டிரஸ்ட் கவிதைப் போட்டி

     

    வையவன்

    காந்தி ஜெயந்தி

    காந்தி என்பது ஒரு தலைவரின் பெயர் மட்டுமல்ல. தேசத் தந்தையின்  பெயர் மட்டுமல்ல. பாரதநாடு என்ற மகத்தான தேசத்தின் , அழியாச் சுடர் போன்று ஒளிவீசி நிற்கும் ஒரு பண்பாட்டின் பெயர். காரிருள் நிலைப்பதில்லை. ஒளி தொடரும் அதற்கும்  ஓர் உதய வேளை உண்டு என்று அறிவித்த நம்பிக்கையின் பெயர் அது. காந்தி என்றாலே ஒளி என்று தான் பொருள்.

    அந்த நம்பிக்கையின் சின்னமாக யாஹூ இணையதளத்தின் தமிழ்ப் பிரிவு ஆசிரியரும் வல்லமை மின்னிதழின் நிறுவன ஆசிரியருமான அண்ணா கண்ணன் அவர்கள் எழுதிய கவிதை இது.  நமது மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய கவிஞர் பெருமக்களையும் வாசக அன்பர்களையும் அக்டோபர் 2 என்ற அளவில்   அக்டோபர் 15 வரை தங்கள் கவிதைகளை காந்தி அஞ்சலியாக நமது இணையவெளிக்கு  அனுப்பி வைக்க வேண்டுகிறோம். தங்கள் பார்வையில் மிகச்சிறந்த கவிஞர் என்று கருதப்படும் ஒருவருக்கு அன்புகூர்ந்து சிரமம் பாராது இந்த மெயில் அனுப்பிவையுங்கள். மெயிலில் படைப்புகளை அனுப்பலாம் .

    vaiyavan.mspm@google.com.
    மற்றும் அஞ்சலிலும் அனுப்பலாம். முகவரி.:-

    Vaiyavan,

    Editor Innaiyaveli.,

    1,First Street, Chandrabagh Avanue,

    Mylapore,

    Chennai-600004,

    phone.9940120341

    பிரசுரமாகும் ஒவ்வொரு படைப்பிற்கும் ,  ஒவ்வொருவருக்கும், ஐக்யா டிரஸ்ட் வழங்கும் புத்தகம் ஒன்று பரிசளிக்கப்படும் . அவசியம் படைப்பாளிகள் தங்களது புகைப்படம் அனுப்பிவைக்க வேண்டும் . சுருக்கம், தெளிவு, எளிமை, புதிய சிந்தனை வீச்சுடன் கூடியதாக அமையும் கவிதைகளைத் தொகுத்து தாரிணி பதிப்பகம் நூலாக வெளியிடும்.அன்புகூர்ந்து தங்கள் புகைப்படம் மற்றும் சுருக்கமான விவரங்கள் இணைத்து அனுப்பவும் -நிர்வாக ஆசிரியர்  இணையவெளி

    Share
  • சமூக சிந்தனைகளின் விளைநிலம் வகுப்பறைகளே.

     

    நல்லாசிரியருக்கான பாராட்டு விழாவில் பேச்சு –


      வந்தவாசி.செப்.29.சமுதாயம் முன்னேறுவதற்கான சிந்தனைகளின் விளைநிலமாக என்றைக்கும் வகுப்பறைகளே விளங்குகின்றன என்று
    நல்லாசிரியருக்கான பாராட்டுவிழாவில் யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.
         இவ்விழாவிற்கு இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மாவட்ட கருத்தாளர் சு.உமாசங்கர் அனைவரையும் வரவேற்றார்.
       தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தென்னாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் இ.முல்லையை, தென்னாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.தினகரசு வாழ்த்திப் பேசினார்.
       நிகழ்வில்,பாராட்டுரை வழங்கிய கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, ஆசிரியர்களைப் பாராட்டும்போது ஒருசமுதாயம் சரியான பாதையில் வழி நடத்தப்படுகிறது என்று அர்த்தம்.ஒவ்வொரு மனிதனின் அறிவு
    வளர்ச்சிக்கும் அடித்தளமிடுபவை ஆரம்பப் பள்ளிகளே.
        ஒரு ஜனாதிபதி நினைத்தால் ஒரு மருத்துவரை உருவாக்க முடியாது. ஒரு பிரதமர் முயன்றாலும் ஒரு பொறியாளரை உருவாக்க முடியாது.ஆனால், ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மருத்துவரை, ஒரு பொறியாளரை, ஏன் ஒரு
    ஜனாதிபதியைக் கூட உருவாக்கலாம்.
       தகுதியான ஆசிரியர்களைப் பாராட்டினால், இன்னும் திறமையான வெற்றியாளர்களை ஆசிரியர்கள் சமுதாயத்துக்கு உருவாக்கித் தருவார்கள்.
    எந்த ஒரு நல்ல சமுதாய முன்னேற்றத்திற்கான சிந்தனைகளும் உருவாகிற விளைநிலமாக இன்றைக்கும் வகுப்பறைகளே விளங்குகின்றனஎன்று குறிப்பிட்டார்.
        நிறைவாக, மாவட்டக் கருத்தாளர் மா.குமரன் நன்றி கூறினார்.

    படக்குறிப்பு ;
       வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் ந்டைபெற்ற தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தென்னாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
    தலைமையாசிரியர் இ.முல்லைக்கு, இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் நினைவு பரிசு வழங்கியபோது எடுத்த படம். அருகில், (இடமிருந்து)
    மாவட்ட கருத்தாளர்கள் மா.குமரன்.சு.உமாசங்கர்,  யுரேகா கல்வி இயக்க மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ், தென்னாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.தினகரசு ஆகியோர் உள்ளனர்.

    Share
  • ஸ்காட்லாந்து ஆப் இந்தியா

    விசாலம்

    “கூர்க்’ எனப்பெயர் கொண்ட குடகு மலைக்கு நான் மூன்று முறைகள் போயிருக்கிறேன். அங்கு இருக்கும் இயற்கைச் சூழ்நிலையும், அருமையான இயற்கைக் காட்சிகளும் என்னை மிகவும் கவர்ந்தன.

    நான் போய் தங்கிய இடத்தில் இருந்த பெண்மணி மிகவும் அன்புடன் எங்களை வரவேற்று நல்ல அறையும் கொடுத்து சாப்பாடும் தந்து கவனித்துக்கொண்டாள். நமக்கு என்ன மாதிரி சாப்பாடு வேண்டும் என்று முதலிலேயே சொல்லி விட்டால் அதை அவளே தன் கணவர் உதவியுடன் செய்து முடிக்கிறாள். அவளுக்கு உதவ ஒரு பணிப்பெண்ணும் இருக்கிறாள். அவள் கணவர் கேரள நாட்டைச் சேர்ந்தவர், காதல் திருமணம். பெரிய எஸ்டேட்டின் தலைவர் ஆனால் ரொம்ப சிம்பிள். அங்கு நான் என் வீடு போலவே ஒரு வித்தியாசமில்லாமல் இருந்தேன். அவள் எனக்கு அவர்கள் கட்டும் விதத்தில் புடவையும் கட்டி விட்டாள். ஆனால் அங்கு எடுத்த பல போட்டோக்கள் என் கணினி கிராஷ் ஆகி அழிந்து விட்டன. நான் ஆசை ஆசையாக எடுத்துக்கொண்ட கூர்க் ட்ரெஸ் போட்டோ போயே போச்சு. இதற்காவது இன்னொரு தடவை கூர்க் செல்ல வேண்டும். சரி இனி நான் பத்து நாட்கள் தங்கி அனுபவித்த குடகு நாட்டைப் பற்றிச் சொல்கிறேன். நேரே கண்டு அனுபவிக்கும் சுகமே தனிதான்

    குடகு நாடு {Scotland of India} ஸ்காட்லேந்த் ஆப் இந்தியா எனப் புகழ் பெற்ற ஒன்று. குடவர்கள் வீரமிக்கவர்கள், சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் நாட்டைக்காக்கும் பணியில் இருப்பவர்கள். முன்னாள் பீல்ட் மார்ஷல் கரியப்பா அவர்கள், ஜெனரல் திம்மய்யா அவர்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர்கள். குடகு மக்கள் மிகவும் தைரியமிக்கவர்கள். உழைப்பாளிகள். கேளிக்கைகளை விரும்பி வாழ்க்கையை ரசிப்பவர்கள் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள். பேச்சில் ஹாஸ்யமும் இருக்கும் வேட்டையாடும் பழக்கமும் முன்பு இருந்தது

    விருந்தோம்பலுக்கு மிகவும் பெயர் போனவர்கள். சிரித்த முகத்துடன் விருந்தாளிகளை உபசரிப்பார்கள். அவர்கள் வீட்டில் முன்னோர்கள் போட்டோ பல இருக்க அவைகளுக்குப் பூஜையும் செய்வார்கள் பல எஸ்டேட் முதலாளிகள். வீட்டின் வாயிலில் சலவைக்கல்லினாலோ அல்லது மரத்தினாலோ அவர்களது முன்னோர்களின் சிலை நம்மை வரவேற்கும். முன்னோர்களின் வழிபாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

    பெரியவர்களின் பாதங்களைத் தொட்டு வழங்கும் கலாசாரம் இங்கு சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்கப்படுகிறது. பெரியவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள்.

    ஒவ்வொரு வீட்டிலும் பெரிய துப்பாக்கியைக்காண முடிகிறது. {Gun] இதை வைத்துக்கொள்ள லைசன்ஸ் தேவையில்லையாம். ராஜ பரம்பரை போல் இது இருப்பதை மிகப்பெருமையாக நினைக்கிறார்கள், குழந்தை பிறந்தால் இந்தத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறர்கள். குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது அந்தக்குழந்தைக்குப் புலி மாமிசத்தினால் ஆன உணவைக் கொடுக்கும் வழக்கம் உண்டாம். புலி போல் மெஜஸ்டிக்காக வீர தீரத்துடன் இருக்கவே இப்படிச் செய்கிறார்கள். இதே போல் யாராவது இறந்தால் இரண்டு தடவை துப்பாக்கியால் ஆகாயம் நோக்கிச் சுடுகிறார்கள். இந்தப்போராயுதங்களுக்குப் பூஜையும் உண்டு. தினமும் அவைகளைக் கும்பிடுகிறார்கள்

    இவர்களது மொழி குடவ மொழி. இதற்கு ஸ்கிரிப்டு இல்லை. இந்த மொழி மலையாளம் சம்ஸ்கிருதம் கன்னடம் கொஞ்சம் தமிழ் என்று நான்கும் கலந்திருக்கிறது.

    இங்கு எல்லா சம்பவங்களுக்கும் நாட்டுப் பாடல் போல் பாடுகிறார்கள். திருமணம் குழந்தைப்பிறப்பு. அறுவடை. மேலும் சில பண்டிகைகள். இறப்பு என்று எல்லாவற்றுக்கும் நாட்டுப்பாடல்கள் போல் பாடல்கள் வந்து விடுகின்றன. வேதாந்தப்பாடல்களும் உண்டு.

    பண்டிகைகள் என்று எடுத்துக் கொண்டால் தசரா, தீபாவளி, காவிரி சங்ரமணா என்ற காவிரிஸ்னானம் மலைவாசிகளின் விசேஷ தினம், அறுவடை தினம் எல்லாமே சிறப்பாக மேள தாள நாட்டியங்களுடன் நடைபெறும். வீடு கட்டிக் கிரஹப்பிரவேசமும் இது போலவே நடைபெறும்.

    இவர்கள் தங்கள் போர் ஆயுதங்களைப் பூஜிக்கும் தினமும் “கைல்போல்டு” என்ற பெயரில் செப்டம்பர் மூன்றாம் தேதி வாக்கில் நடைபெறுகிறது. துப்பாக்கிக்கள், வாள், கத்தி, வில் அம்பு போன்ற ஆயுதங்களுக்குக் குங்குமம் சந்தனம் இட்டு வீட்டின் மூத்தவர் அதை எடுத்து வீட்டுத்தலைவருக்குக் கொடுப்பார். பின் பன்றிக் கறியுடன் ஸ்பெஷல் சாப்பாடு. பின் விளையாட்டில் ஒரு தேங்காயை மிக உயரத்தில் கட்டிச் சுடும் பழக்கமாம். முன்பு வேட்டைக்குப்போவார்களாம், இப்போது அது தடை செய்யப்பட்டுள்ளது.

    காவிரித்தாயின் பூஜையின் போது பெண்கள் விடிகாலை காவிரியில் ஸ்னானம் செய்து பின் எல்லோர் வீட்டிற்கும் காவிரி தீர்த்தம் எடுத்துச்செல்கிறார்கள். பின் ஒரு தேங்காயோ அல்லது வெள்ளரிக்காயோ எடுத்து சிவப்புப் பட்டால் மூடி மஞ்சள் குங்குமம் இட்டு ஆபரணங்களுடன் மங்கள் சூத்ரம் {தாலி}பதக்கம் போட்டு பின் கன்னிபூஜை செய்கிறார்கள்

    இவர்களது குல தெய்வங்கள் காவிரித்தாய், ஐயப்பன், பத்ரகாளி சாஸ்தா. பசுவையும், நாகதேவதா என்று பாம்பையும் பூஜிக்கிறார்கள். பசுவின் வதைக்குத்தடை.

    சாதாரணமாக ஆண்கள் நீளக்கோட்டுடன் காட்சியளிப்பார்கள். இடுப்பில் ஒரு சில்க் துணி பெல்ட் போல் கட்டியிருக்க அதில் சின்னப் பிச்சுவாக் கத்தி சொருகப்பட்டிருக்கும். தலையில் “மண்டே துணி” அதாவது டர்பன் அணிந்திருப்பார்கள்

    பெண்கள் புடவை அணிந்திருப்பார்கள், ஆனால் புடவை தோளில் வராமல் மார்பிலேயே சுற்றப்பட்டுப் பின் தலைப்பின் நுனி பாகம் பின்புறமாக வலது தோளில் வந்து அது விழாமல் நிற்க “பிரோசசால்” குத்தப்பட்டிருக்கும். பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

    ஹிந்துவாக இருந்தாலும் திருமணத்திற்குப் பிராம்மண சாஸ்திரிகள் வருவதில்லை. குடும்பத்தின் தலைவர் வைத்து அவர் முன்னிலையில் திருமணம் நடத்தப்படுகிறது. அக்னிக்கு முக்கியத்துவம் இல்லை. வேறு மந்திரங்களும் திருமணம் போது கிடையாது. ‘டௌரி சிஸ்டம்’ அறவே கிடையாது.

    அம்மா குடவர்கள் என்ற ஒரு பிரிவு உண்டு. இவர்கள் பிராம்மண கலாச்சாரம் கொண்டு பூணலும் அணிந்திருக்கிறார்கள். வேதங்கள் ஓதுகிறார்கள், சுத்த சைவம். தற்காலத்தில் இவரது பிரிவில் காதல் திருமணம் நடக்க “காவிரி பிராம்மணர்கள்’ என்ற தனிப்பிரிவு வந்திருக்கிறதாம்.

    கல்யாண மாப்பிள்ளை வெள்ளைக்கலரில் நீள அங்கி போட்டிருப்பார். தலையில் சரிகைத்தலைப்பாகை அலங்கரிக்கும், கல்யாணப்பெண் சிவப்பு நிறத்தில் உடை உடுத்தியிருப்பாள். அநேகமாக வம்சவம்சமாக உடுத்திய பரம்பரைப் புடவையே மணப்பெண் உடுத்துவாளாம். அது வீணாகாமல் இருக்க வேண்டும். மணமகன் வாழைமரத்தண்டுகளை வெட்டி விட்டு வர வேண்டும், அவனது வீரத்தைக் காட்டுவது போல் அர்த்தம். முன்பெல்லாம் புலியையோ அல்லது காட்டுப்பன்றியையோ வேட்டையாடித் தன் வீரத்தைக்காட்டுவார்கள். திருமணம் போது பல நாட்டுப்பாடல்கள் பாடி பின் நடனமும் ஆடுகிறார்கள்.

    அசைவ உணவு தான் அங்கு பிரதானம் அதுவும் “போர்க்’ என்ற பன்றி இறைச்சிதான் எல்லா விசேஷங்களிலும் முதல் இடம் பெறுகிறது. தவிர கொடம்புட்டு, நூல்புட்டு பெம்ப்ளாஸ்லூட், சிக்கன் {சாதம், நூடுல், மூங்கில் கறி] என்றும் பல இடம் பெறுகின்றன. சாதாரண நாட்களில் சாதம், கஞ்சி, பப்புட்டு, குழால் புட்டு தினமும் பார்க்க முடிகிறது. பழங்களில் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எப்போதுமே உபயோகமாகின்றன நல்ல காபியும் கிடைக்கிறது.

    பெண்களுக்கு மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விதவை மறுமணம் செய்து கொள்ளலாம். விதவை எல்லா மங்கள காரியங்களிலும் முதன்மை வகித்து முன் நிற்கலாம். தாயாருக்கு மிக முக்கிய ஸ்தானம் தரப்படுகிறது. அவள்தான் திருமணம் போது மாப்பிள்ளையை முதலில் வாழ்த்தி ஆசிகள் வழங்குகிறாள்.

    இவர்கள் குடும்பம் அநேகமாக கூட்டுக்குடும்பமாகவே இருக்கிறது. வடநாட்டவர்கள் தங்கள் பெயருடன் குடும்பத்தின் பெயரையும் சேர்த்துக்கொள்வது போல் இவர்களும் சேர்க்கிறார்கள். {கவாஸ்கர் டெண்டுல்கர் என்பது போல்} இப்படி இருக்கும் குடும்பம் சுமார் ஆயிரம் வரை இருக்கிறது. இதை “ஒக்கா’ என்று அழைக்கின்றனர்

    வீட்டின் முக்கிய ஹாலில் அவர்கள் குலத்தை ஆரம்பித்த குருவின் படமும் வைக்கப்பட்டு தினமும் விளக்கும் ஏற்றப்படுகிறது. அந்தக்குலத்தின் மூத்த தலைவரைக் கடவுளாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

    பார்க்க வேண்டிய இடங்கள், மடிக்கேரி நாகரஹோல் நேஷனல்பார்க், அபி நீர்வீழ்ச்சி, தலக்காவேரி, ஓம்காரேஷ்வரர் ஆலயம், பிரும்மகிரி குன்று டுபாரே என்ற யானைகள் பிடிக்கும் இடம், ஆரஞ்சு கேன்டி. குசல் நகர். இன்னும் பல இயற்கைச் சூழல் உள்ள இடங்கள்

    ஓம்காரேஷ்வர ஆலயம் மசூதி ஸ்டைலில் நாலு ஸ்தம்பங்களுடனும் நடுவில் வட்ட வடிவ கும்பத்துடன் இருக்கிறது. ஆனால் உள்ளே இருப்பதோ காசியிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கமாம்,

    காபி செடிகள், மிளகு. ஏலக்காய், கிராம்பு மற்ற மாசாலா பொருட்கள் தேயிலை, பாக்கு தேக்கு எல்லாம் செழிப்பாக வளர்வதால் இங்கு பல எஸ்டேட்டுக்கள் உள்ளன. நல்ல வியாபாரமும் நடக்கிறது, காடுகளில் சில இடங்கள் தேவகாடு என்று புனிதமாகக் கருதி அவைகளைக் காக்கின்றனர். அங்கு மரம் வெட்டுவதோ அல்லது வேட்டையாடுவதோ கிடையாது.

    இளைஞர்களுக்குத்தேவையான மலையேறுதல், யானை மேல் சவாரி, தண்ணீரில் படகுடன் வீர விளையாட்டு, நீச்சல் போன்ற சகலமும் இருப்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் இங்கு விரும்பி வருகின்றனர்.

    இங்கு பல மூலிகைகள் விளைவதால் இவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யவும் பலர் வருகின்றனர். மலைப்பிரதேசம் பக்கம் போக மூலிகை மணத்துடன் தென்றல் வீசி நம்மை மேலும் புத்துணர்ச்சி ஆக்குகின்றன. .

    திபெத்தியர்கள் எல்லோரும் சேர்ந்து மிக அழகான புத்தர் கோயிலையும் இங்கு கட்டியிருக்கிறார்கள். இதுவும் பார்க்க வேண்டிய இடம்.

    குடகு மலை ஒரு அருமையான கோடை வாசஸ்தலம் என்பதில் சந்தேகமே இல்லை.

     

    படங்களுக்கு நன்றி: http://www.yaatrika.com/traveler/2011/02/coorg-the-scotland-of-india/

    http://www.coorgie.com/aboutus.asp

    http://www.homestaykodagu.com/coorg_info.html

    http://www.bestindiatours.com/india-travel/coorg-tour.html

    Share
  • காந்தி ஜெயந்தி சிறப்புக் கவிதை

     

    அண்ணாகண்ணன்

    காந்தியை விரும்புகிறார்கள் மாணவர்கள்
    அவர் பிறந்த நாளில்
    விடுமுறை கிடைப்பதால்.

    காந்தியை விரும்புகிறார்கள் மக்கள்
    அவர்
    ரூபாய் நோட்டில் சிரிப்பதால்.

    காந்தியை விரும்புகின்றன கட்சிகள்
    அவர் படத்தைக் காட்டி
    அரசியம் ஆதாயம் பெற முடிவதால்.

    ————

    பள்ளியில் மாறுவேடப் போட்டி.
    காந்தி வேடம் அணிந்த மாணவனுக்கு
    முதல் பரிசு.
    காந்தி வேடம் அணிபவர்களுக்குத்தான்
    பரிசுகள் கிடைக்கின்றன.

    பாடத் திட்டங்களில் காந்தியின் வாழ்க்கை தவறாமல் இடம்பெறுகிறது.
    அதை மனப்பாடம் செய்து, மதிப்பெண்கள் வாங்குகிறோம்.
    ஆனால்,
    நாம் பாடம் பெறுவது தான் இல்லை.

    நன்னடத்தைக்காகச்
    சத்திய சோதனையைப் படிக்க வேண்டும் என
    நீதிபதி தீர்ப்பளித்தார்.
    சத்திய சோதனையைப் படிக்கிறார்கள்
    நன்னடத்தை தான் வருவதில்லை.

    ————

    கோட்சே காந்தியை நோக்கி மூன்று முறைகள் சுட்டான்
    அத்துடன் அது முடியவில்லை
    அந்தத் துப்பாக்கிச் சத்தம் இன்னும் ஓயவில்லை.
    உலகில் எண்ணற்றோர் அவரைச் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

    அரசே மதுக் கடைகளைத் திறந்தபோது
    காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

    போடாத சாலையைப் போட்டதாய்
    அந்தச் சாலையைப் பழுது பார்த்ததாய்
    விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தபோது
    காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

    நேரில் வாங்கினால்
    லஞ்ச ஒழிப்புத் துறை பொறிவைத்துப் பிடிக்கிறது என்று
    தெரிந்தவர் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தச் சொல்லும்
    புதிய லஞ்சம் புறப்பட்டபோது
    காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

    பாலர் கல்வி முதல் உயர்கல்வி வரை 
    லட்சங்களில் நன்கொடையும் கல்விக் கட்டணங்களும்
    வசூலித்தபோது
    காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

    விளைநிலங்களை விற்றுவிட்டு,
    வெளிநாட்டில் தட்டுக் கழுவும்போது,
    விவசாயி தற்கொலை செய்துகொள்ளும்போது
    காந்தியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

    என் ஆசிரமத்தில்
    உழைக்காமல் யாருக்கும் உணவு கிடையாது
    என உரைத்தீர்கள்.
    இலவசங்களுக்காக எங்கள் மக்கள் விழுந்தடித்து ஓடிவந்து
    நெரிசலில் சிக்கி மாண்டபோது,
    பிதாவே, உமது மார்பில் குண்டு பாய்ந்தது.

    ஒவ்வோர் ஊழலிலும் கையாடலிலும் கையூட்டிலும்
    காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது.

    ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர், நேரத்துக்கு நேரம்
    சட்டம் வளைகிறது.
    செங்கோல் வளைகிறது
    நீதி வளைகிறது.
    காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது.

    ஜாலியன் வாலாபாக்கில் பாய்ந்த குண்டுகளை விட அதிகமான குண்டுகள்
    காந்தியின் ஒற்றை மார்பைத் துளைக்கின்றன.

    இரண்டாம் உலகப் போரில் வீசிய குண்டுகளை விட அதிகமான குண்டுகள்
    காந்தியின் பொன்னுடலை மீண்டும் மீண்டும் சிதைக்கின்றன.

    ————

    ஆனால்,
    காந்தியின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை
    அவரின் தத்துவம் இன்னும் தோற்றுவிடவில்லை.
    என் வாழ்வே நான் விடுக்கும் செய்தி
    என்ற அவரின் வாழ்விலிருந்து
    நாம் பெறும் செய்திகள்
    இன்னும் தொடர்கின்றன.

    உண்மையும் அன்பும்
    எளிமையும்
    எங்கெல்லாம் ஒளி வீசுகின்றனவோ
    அங்கெல்லாம் காந்தி இருக்கிறார்.
    அவர்களுக்குள் இருந்து சிரிக்கிறார்.

    ————

    ஒரு நாய்க்குட்டி என் காலை நக்கி விளையாடுகிறது
    ஒரு மீன்குஞ்சு என்னை மெல்ல கடிக்கிறது
    ஓர் இளங்குருவி என் தோளில் அமர்கிறது
    ஒரு மொட்டு மெல்ல மலர்கிறது.
    பேரமைதியிலிருந்து ஒரு மெல்லிசை பிறக்கிறது.
    ஒரு கனவு மெல்ல விழித்தெழுகிறது.

    ‘எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை
    இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
    இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்
    இந்தியா உலகிற்களிக்கும்

    என்றானே பாரதி.

    அந்த நன்முறைகளில் ஒன்று, காந்தியம்.
    நம்மை நடத்தும் தலைவர் காந்தி.
    அண்ணல் வழிநடப்போம்
    அன்பின் மொழிபடிப்போம்
    அகத்தின் விழிதிறப்போம்.

    (சென்னை, மயிலாப்பூர், ஏவி.எம்.இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அக்.2, 2012 அன்று இராமலிங்கர் பணிமன்றம் நடத்திய காந்தியக் கவியரங்கில் வாசிக்கப்பெற்றது. தலைமை: கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன்)

    படங்களுக்கு நன்றி

    http://life.time.com/icons/gandhi-glimpses-of-a-legend/#14

    http://www.binscorner.com/pages/l/life-in-pictures-mahatma-gandhi.html

    Share
  • சுழல்

    முகில் தினகரன்

    குடிசைக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு ஒருவித ரசிப்புடன் பீடியை உறிஞ்சிக் கொண்டிருந்தான் வீரண்ணன். சற்றுத் தள்ளி அவன் மனைவி சிகப்பி பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டே இவனையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள்.

    ‘த பாருய்யா…மூத்தவ தலைப் பிரசவத்துக்கு வந்து உட்கார்ந்துட்டிருக்கா…எப்படியும் ரெண்டு மூணு நாளுல வலி கண்டிடும்…எனக்கென்னமோ நம்மூரு கவருமெண்டு ஆசுபத்திரி தோதுப்படாதுன்னு தோணுது…பக்கத்தூரு பிரைவேட்டு ஆசுபத்திரிக்குத்தான் இட்டுட்டுப் போவணும்…அதுக்கெல்லாம் காசு பணம் கொஞ்சங் கூடுதலா ஆவும்….அதப் போயி ஏற்பாடு பண்ணுவியா….அத விட்டுட்டு இங்க உக்காந்து பீடி வலிச்சிட்டிருக்கியே…உனக்கு எதுனாச்சும் இருக்கா?’

    ‘அட ஏண்டி சும்மா கெடந்து கூவுற?…வேலை வெட்டி ஒண்ணும் சரியா கெடைக்கலைடி…மழைக்காலமாப் போனதால் டூர் வர்ற ஜனங்க எண்ணிக்கையும் கொறைஞ்சிடுச்சு…இந்தச் சமயத்துல ‘ரெண்டாயிரம் ஆவும்…மூவாயிரம் ஆவும்’ ன்னா எங்கடி போவேன் நான்?’ வீரண்ணனும் பதிலுக்குக் கத்த,

    பாத்திரங்களை அப்படியே போட்டு விட்டு எழுந்து அவனருகே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவன் காதோரமாய் ‘த பாருய்யா…தேவை பெரிய தொகை….அதனால பாவ புண்ணியம் பாக்காம….ஆளிழுக்கற வேலையப் பண்ணிடு…’ என்றாள்.

    ‘என்னடி சொல்றே?’

    ‘காலேஜி பசங்க ஆத்துக்கு குளிக்க வர்றாங்கல்ல?…அதுல எவனாச்சும் ஒருத்தனை உள்ளார கொண்டு போய் பாறையிடுக்குல சொருகிடு…அப்புறம் பேரம் பேசி சவமெடுக்கறதுக்குன்னு பெரிய தொகையா வாங்கிடலாம்’

    ‘சீச்சீ…பாவம்டி அது…’

    ‘ஆமா…இப்படி பாவ புண்ணியம் பார்த்துட்டே இருக்கறதாலதான் இன்னமும் நீ இப்படியே அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிட்டிருக்கே….இதே அந்த ரெங்கனைப் பாரு….எப்படியும் மாசம் ரெண்டு ஆளை இழுத்துடறான்…பெரிய தொகை பாத்துப் போடறான்…’

    நிறைமாத வயிறோடு குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த மூத்த பெண் சுந்தரி ‘அய்யா…கவருமெண்டு ஆசுபத்திரி ஆவாது…பிரைவேட்டு ஆசுபத்திரிலதான் புள்ளப் பெக்கணும்னு எங்க மாமியா சொல்லியே அனுப்பிச்சிருக்கு…’ என்று அவள் பங்குக்கு சொன்னாள்.

    ‘க்கும்…நீயே சொல்லு…நானும் சொல்லிச் சொல்லி ஓய்ஞ்சு போயிட்டேன்..’ சிகப்பி மீண்டும் பாத்திரங்களுக்கு நடுவில் சென்றமர்ந்தாள்.

    ஒரு நீண்ட மனப் போராட்டத்திற்குப் பிறகு எழுந்து ஆற்றங்கரையை நோக்கி நடந்தான் வீரண்ணன்.

    ஆற்றகரையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆங்காங்கே வாலிபப் பசங்க கூட்டம் மட்டும் ‘காச்…மூச்’ சென்று கத்திக் கொண்டு தண்ணீரில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

    சற்றுத் தள்ளி கூட்டம் குறைவான பகுதியில் ஐந்தாறு இளைஞர்கள் நீரில் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை குறி வைத்தான் வீரண்ணன்.

    நீருக்குள் இறங்கி மூச்சடக்கி, ஆழப்பகுதிக்குச் சென்று அந்த இளைஞர்கள் இருக்கும் பகுதியை அடைந்தான். மெல்ல மேல் நோக்கி வந்து, கையில் சிக்கிய ஒரு காலை இழுத்துக் கொண்டு மறுபடியம் ஆழத்திற்குச் சென்றான். பாறைகள் நிறைந்த பகுதி வரை இழுத்துச் சென்றவன் ஒரு பாறை இடுக்கில் அந்தக் காலைச் செருகி விட்டு, நீருக்கடியிலேயே நகர்ந்து நீண்ட தூரம் சென்ற பின் மேலெழும்பி வந்தான். எதுவுமே நடக்காதது போல் நீரிலிருந்து வெளியேறி கரையில் நடந்து சென்ற வீரண்ணனை யாருமே கண்டு கொள்ளவில்லை.

    அங்கிருந்து புறப்பட்டு அரைக் கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஒரு டீக்கடையில் வந்தமர்ந்து அழைப்புக்காகக் காத்திருந்தான்.

    ஒரு டீ…ஒரு பீடி!…ஒரு டீ….ஒரு பீடி!…என மாறி மாறி உறிஞ்சிக் கொண்டிருந்தவனை நோக்கி ஒரு கூட்டம் கத்திக் கொண்டெ ஓடி வர எதுவும் தெரியாதவன் போல் விசாரித்தான். ‘ஏம்பா…என்னாச்சு உங்களுக்கு?…எதுக்கு இப்படி ஓடி வர்றீங்க?’

    ‘அய்யா…அய்யா…எங்களோட வந்த ஒருத்தனைக் காணலை…உள்ளார போயிட்டான் போலிருக்கு….காப்பாத்துங்கய்யா…ப்ளீஸ்…’ கதறியவன் கண்களில் வண்டி வண்டியாய்ப் பீதி.

    ‘அடடே…’ என்றபடி அவசரமாய் எழுந்து வேட்டியை மடித்துக் கொண்டு வேக வேகமாய் ஓடினான் வீரண்ணன். அந்த இளைஞர் கூட்டமும் கூடவே ஓடி வந்தது.

    ‘எந்த எடத்திலப்பா குளிச்சிட்டிருந்தீங்க?’ தெரியாதவன் போல் கேட்டான் வீரண்ணன்.

    ஒரு இளைஞன் காட்டிய இடத்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி ‘அய்யய்ய…அங்க தண்ணிக்குள்ளார நிறைய சுழலு இருக்குதப்பா…அங்க ஏன் போனீங்க?’

    ‘எங்களுக்குத் தெரியாதுங்கய்யா…நாங்க வெளியூரு’

    ‘சரி…சரி…எவ்வளவு நேரமாச்சு…ஆளு காணாமப் போயி?’

    ‘ஒரு….முக்கால் மணி நேரம் இருக்கும்ங்கய்யா’

    ‘ப்ச்…அப்பக் கஷ்டந்தான்….சொழலுல சிக்கி உள்ளார பாறைல போய் மாட்டியிருந்தா இந்நேரத்துக்கு உசுரு போயிருக்கும்…’

    வீரண்ணன் சொன்னதும் அந்த இளைஞர்கள் கோரஸாய் அழ ‘சரி…சரி…இருங்க பாத்துடலாம்…’

    அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் முங்கி சில நிமிடங்களுக்குப் பிறகு மேலே வந்து ‘உள்ளார ஆள் இருப்பதாத் தெரியலையே…’ என்றான் வீரண்ணன்.

    ‘அடிச்சிட்டுப் போயிருக்குமோ என்னவோ?’ கூட்டத்தில் எவனோ ஒருவன் பொத்தாம் பொதுவாய்ச் சொல்ல,

    ‘அப்படி அடிச்சிட்டுப் போயிருந்தா…இன்னேரத்துக்கு அஞ்சாறு கிலோ மீட்டராவது தாண்டிப் போயிருக்கும்…’

    அழுது கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தில் சற்று தைரியமான ஒருவன் முன் வந்து ‘அய்யா….என்ன ஆனாலும் சரி…எவ்வளவு பணம் ஆனாலும் சரி…எங்களுக்கு பாடிய எடுத்துக் குடுத்துடுங்க…இப்பத்தான் அவங்க பேரண்ட்ஸ்க்குப் போன் பண்ணியிருக்கேன்…அவங்க வந்திட்டிருக்காங்க….’

    ‘ஆஹா…அப்ப பெரிய தொகை வந்திட்டிருக்கு…சரி…அந்தப் பையனைப் பெத்தவங்க வர்ற வரைக்கும் தேடுற மாதிரி பாவ்லா பண்ணிட்டு அவங்க வந்தப்புறம் பாடிய எடுத்து காசு வாங்கிடணும்’ மனசுக்குள் கணக்குப் போட்டான் வீரண்ணன்.

    ஆனால் இதையெல்லாம் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டவன் அதே கணக்கை வேறு விதமாய்ப் போட்டுக் கொண்டிருப்பது பாவம் அவனுக்குத் தெரியாது.

    மூன்று மணி நேரத்திற்குப் பிறகே அவர்கள் வந்து சேர்ந்தனர். வந்தவுடன் தாயும் தகப்பனும் கதறிய கதறல் வீரண்ணனை சந்தோஷப்படுத்தியது. ‘பய மேல ரொம்ப பாசம் போலிருக்கு…பாடிய எடுத்துக் குடுக்க எவ்வளவு கேட்டாலும் நிச்சயம் தருவாங்க’

    சிறிது நேரத்திற்குப் பிறகு, பாவ்லா போதுமென முடிவு செய்த வீரண்ணன் தண்ணீருக்குள் முங்கி தான் செருகி வைத்த இடத்திலிருந்து அந்த உடலை இழுத்துக் கொண்டு மேலே வந்தான்.

    கரையில் தூக்கி வந்து போட்ட அந்த சடலத்தைப் பார்த்த வீரண்ணன் அதிர்;ந்து போனான். அந்த இளைஞனுக்கு வலது கை சிறிய வெள்ளரிப் பிஞ்சு போல் சூம்பிப் போய் தோளிலிருந்து அரையடியெ இருந்தது. முன் பகுதியில் பேருக்கு இரண்டு குட்டி விரல்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

    முதன் முறையாக வீரண்ணனுக்கு மனசு வலித்தது.

    ‘ஏம்பா! இப்படி இருக்கற பையன் ஏனப்பா தண்ணில எறங்கணும்?’ தன் அங்கலாய்ப்பை வீரண்ணன் கேட்டே விட,

    ‘இந்த எடத்துல ஆழமில்லைன்னு சொன்னாங்கய்யா…அத நம்பித்தான் நாங்க இவனை எறங்க அனுமதிச்சோம்…’

    சடலத்தைச் சுற்றி அமர்ந்து நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தவர்களிடம் ‘நான் கௌம்பனும்…என்னை கவனிங்க’ வீரண்ணன் சொன்னான.

    மூவாயிரம் ருபாய் கைமாறியதும் புறப்பட்டான்.

    ‘ச்சே….கை சூம்பிப் போன பையனை இழுத்திட்டுப் போய்ச் சொருகிட்டோமே…’ வீடு வந்து சேரும் வரைக்கும் அந்த உறுத்தல் வீரண்ணனை கொல்லாமல் கொன்றது.

    குடிசையில் யாரும் இல்லாதிருக்க தெருவுக்கு வந்து தலையில் துணி மூட்டையோடு சென்று கொண்டிருந்த வண்ணாத்தியிடம் கேட்டான்.

    ‘அடக் கெரகமே….தெரியாதா உனக்கு?…உன்ர மவளுக்கு பிரசவ வலி வந்து…பிரைவேட்டு ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க…பணங் கட்டுறதுக்கு உன்னையக் காணோம்னு வலை போட்டுத் தேடிட்டிருந்தாங்க…சீக்கிரமா ஓடு’

    ஓடினான்.

    இன்னும் பிரசவம் ஆகவில்லை. பணம் கட்டி விட்டுக் காத்திருந்தனர்.

    நொடிகள் நிமிடங்களாக….நிமிடங்கள் மணியாக கரைந்து கொண்டிருக்க…

    ‘ஆம்பளக் கொழந்த பொறந்திருக்கு’ நர்ஸ் ஒருத்தி வந்து சொன்னாள்.

    ‘அப்பாடா….’ நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அறைக்குள் சென்று தொட்டிலில் கிடந்த அந்த ஆண் குழந்தையைப் பார்த்த வீரண்ணனின் தலை ‘கிர்’ரென்று சுழன்றது.

    ஒரு கை சூம்பிப் போய் பாதியே இருக்க, முன்பகுதியில் பேருக்கு இரண்டே இரண்டு குட்டி விரல்கள் ஒட்டியிருந்தன.

    (முற்றும்)

    பின்குறிப்பு: எங்கள் கோயமுத்தூரில், நகரத்தை விட்டுத் தள்ளி இருக்கும் ஒன்றிரண்டு நீர் நிலைகளில் சில கும்பல்கள் செய்து கொண்டிருக்கும் இந்த கொடூரச் செயல் பற்றி கிட்டத்தட்ட பல பேர் அறிந்திருந்த போதும், மாதம் ஒன்றிரண்டு இளைஞர்கள் பலியாகிக் கொண்டுதானிருக்கின்றனர்.

    இக்கதையைப் படித்த பிறகு கொஞ்சமேனும் விழிப்புணர்வு ஏற்பட்டால் அது போதும் எனக்கு.

     

    Share
  • மாற்றான் தோட்டம்

    தமிழ்த்தேனீ

    யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள்.

    அப்பப்பா  என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய்  சோகை படிந்த  தேவதையின் ஓவியம் கருமேகத்தின்  இடைவெளியில்  மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது  தோன்றி மறைவது போல்  அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில்  ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின்  சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

    அரசல் புரசலாக அவள்  வாழ்க்கை அம்பலத்துக்கு வந்தது. பார்யா ரூபவதி சத்ரு என்னும் பழமொழி நினைவுக்கு வந்தது. ஆனால் அந்தப் பழமொழி உண்மையானால் அவள் கணவன் கண்களில் அல்லவோ சோகம் தெரியவேண்டும், இங்கே மாறாக இருக்கிறதே?

    மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் ரமேஷ்.

    அவள் குழந்தையிலேயே அழகாக இருந்ததால் அவளுக்கு ரூபா என்றே பெயரிட்டிருந்தனர் அவளுடைய பெற்றோர்.

    காலைத் தொடும் நீண்ட கருகருவென்ற  கேசம், தாமரைத் தடாகத்திலே நீந்தும் மீனைப் போன்ற அகலமான கரிய விழிகள், தீர்மையான நாசி, சற்றே இதழ் விரிந்திருக்கும் ரோஜா மொட்டுப் போன்ற உதடுகள், அசாத்தியமான, அலங்காரமான வளைவுகளுடன் மோவாய், அதற்கும் கீழே சங்குக் கழுத்து, இதற்கு மேலும் வர்ணிப்பது பாவம் என்று தோன்றியது ரமேஷுக்கு. என்ன இருந்தாலும் அவள் மாற்றான் தோட்டத்து மலர்.

    அந்த மலரை வாடாமல்  மெல்லிய கைகளின் அழுத்தமும் இல்லாமல் இடைவெளிவிட்டு  பொத்தி வைத்துக்கொண்டு,  காலம் முழுவதும்   வைத்துக்கொண்டு காப்பாற்றி, அவள் முகத்தில் ஆனந்த மயமான புன்னகையை வரவழைத்து, அவள் முகத்தில் சிரிப்பைத் தவிர சோகத்தின் நிழலே விழாதவாறு,   ஒரு தேவதையை உபாசனை செய்வது போல், அவளை உபாசித்தால்தான் தன் ஜென்மம் கடைத்தேறும்  என்று உணர்ந்தான் ரமேஷ். 

    எப்படி இது சாத்தியமாகும்? எப்படி அவளை அந்தச் சிறையிலிருந்து விடுவிப்பது என்பதே சிந்தனையாய் மூளைக்குள் சுழன்று சுழன்று அவனை அசத்திக்கொண்டிருந்தது. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்னும் யோசனையில் இருந்த அவனுக்கு பலவிதமான சந்தேகங்கள். அவள் இவனை நம்புவாளா? ஏற்கெனவே ஒரு ஆண்மகனால் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்னின் மனநிலையில் இன்னொரு ஆண்மகனை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைப்பாளா? அவள் நம்பிக்கையை எப்படிப் பெறுவது என்றெல்லாம் எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக மூளைக்குள் வலம் வரத் தொடங்கின.

    ஒரு மனிதனுக்கு அழகான மனைவி அமைவது வரம். அப்படி வரம்போல் அமைந்த அழகான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு வாழாமல், எப்படி ப்ரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு தானும் நிம்மதியில்லாமல் அந்த தேவதையையும் நிம்மதியாக இருக்க விடாமல் இப்படி இருக்கிறார்கள் மனிதர்கள் என்று  நினைத்தால் ஆத்திரம் வந்தது ரமேஷுக்கு.

    எப்போதுமே மனிதன் கிடைக்காதவரையில் அது கிடைக்க ஏங்குகிறான், ஆனால் அது கிடைத்ததும் அதன் மதிப்பு தெரியாமலே வாழ்கிறான். எப்போதுதான் இவர்கள் திருந்துவார்களோ.

    சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும்.  இவன் திருந்தினால் என்ன, திருந்தாவிட்டால் நமக்கென்ன, கண்ணுக்கெதிரே துன்பப்படும்  இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது.

    அவன் எதிர் பார்த்த வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக அவனைத் தேடி வந்தது.

    ஆமாம் வாசலில் யாரோ அழைப்பு மணியை அடிப்பது கேட்கவே, ஜன்னல் வழியே பார்த்தவன் அதிர்ந்தான். அந்த அழகுத் தேவதை அவன் வீட்டு வாசலில் நின்றிருந்தாள். ஓடிப்போய்க் கதவைத் திறந்து, “என்ன வேண்டும் வாருங்கள் உள்ளே” என்றான். 

    “அதற்கெல்லாம் நேரமில்லை என் புருஷனுக்கு திடீரென்று நெஞ்சு வலி எனக்கு பதட்டமாக இருக்கிறது” என்று பதறினாள் அவள். இதோ ஒரு நொடியில் வருகிறேன் என்று கூறிவிட்டு, கதவைப் பூட்டிக்கொண்டு, அவனுடைய காரை எடுத்து ஓட்டிக்கொண்டு வந்து  அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு,  கைத்தாங்கலாய் அவள் புருஷனைக் கூட்டிவந்து காரில் உட்காரவைத்துவிட்டு, அவளையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று,  அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு….

    அவள் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். “நீங்கள் கவலைப்படாதீர்கள், ஒன்றும் ஆகாது”  என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.

    “நீங்கள் அவர்மேல் இவ்வளவு பாசத்துடன் இருக்கிறீர்களே அவர் ஏன் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்” என்றான்.

    “என்னை நீங்கள் நீ என்றே அழையுங்கள்”, என்றாள் அவள்.

    “என் தலைவிதி அப்படி இருக்கிறது, நான் அழகாகப் பிறந்ததுலே என்னோட தப்பு என்ன இருக்குன்னே புரியலை. எப்போ பாத்தாலும் என்னை சந்தேகப் பட்டுக்கொண்டே இருக்காரு. நான் எப்பிடி நிரூபிக்கிறதுன்னே புரியலை” என்று கேவினாள் அவள்.

    “நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனைக்க மாட்டீங்களே, உங்களோட அருமை அவருக்கு புரியலை. எனக்கு மட்டும் உங்களை மாதிடி ஒரு பொண்ணு கிடைச்சிருந்தா அப்பிடியே தங்கத் தாம்பாளத்திலே வெச்சுத் தாங்குவேன்” என்று கூறிவிட்டு  அவளையே பார்த்தான் ரமேஷ்.

    அவள் அவனை நோக்கி ஒரு விரக்திப் புன்னகையை வீசிவிட்டு “எப்படி உங்களால் இவரிடமிருந்து என்னைப் பிரித்து அழைத்துப் போகமுடியும், இதெல்லாம் நடக்கிற காரியமா” என்றாள்.

    “நீ மட்டும்  சரின்னு சொல்லு ரூபா, நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல். இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணிர்தான் வரணும், அதுக்கு நான் பொறுப்பு” என்றான் தீர்மானமாக.

    “இவரைப் பத்திக் கவலைப்படாம, இவர் கண்ணிலேயே அகப்படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இது சத்தியம்” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

    அவள் இவன் மேல் சாய்ந்து அழத்தொடங்கினாள், அவளை தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்து, “இனிமேல் உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீரமட்டும்தான் வரணும்.  நான் பாத்துக்கறேன்” என்றான் ரமேஷ்.

    சொன்ன வாக்கைக் காப்பாற்ற, தகுந்த இடமாகப் பார்த்து அவளை  பெங்களூருக்கு அழைத்துப் போய் ஒரு பெரிய வீட்டில் வாழத் தொடங்கினர் இருவரும். வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது.

    இவர்கள் இருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருந்தான் கமலேஷ், யதேச்சையாக கண்ணில் பட்டாள் அவள், அப்பப்பா  என்ன அழகு, ஆனால் பல நூறு ஆண்டுகளாய்  சோகை படிந்த  தேவதையின் ஓவியம் கருமேகத்தின்  இடைவெளியில்  மின்னல் கீற்று பளீரென்று தெரியும் போது  தோன்றி மறைவது போல்  அவள் அழகைத் தாண்டி அவள் கண்ணில்  ஒரு சோகம். தெளிவாகத் தெரிந்தது. அவள் கண்களின் கீழே கருவளையம் அவள் முகத்தின்  சோகத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

    அவன் மனதில் ஒரு வைராக்கியம் தோன்றியது. சரி இந்த தேவதையை நாம் எப்படியாவது நல்லபடியாக வாழவைக்கவேண்டும். நாம் இவளை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்தாவது இவரைப் போன்ற மனிதர்கள் திருந்தட்டும், கண்ணுக்கெதிரே துன்பப் படும்  இவளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது துடித்தது. மனதில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள அவளைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான் கமலேஷ்.

    ஒரு நாள் அவள் மட்டும் தனியாக இருக்கும்போது “உன் புருஷன் ரமேஷைப்  பத்திக் கவலைப்படாம நீ மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல் ரூபா, இந்த ஆளு  கண்ணிலேயே படாத இடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு போய் நான் காலமெல்லாம் சந்தோஷமா வெச்சிக்கறேன், இனிமே உன் கண்ணுலேருந்து ஆனந்தக் கண்ணீர்தான் வரணும் அதுக்கு நான் பொறுப்பு. இது சத்தியம்” என்றான் தீர்மானமாக உணர்ச்சி வசப்பட்டு  கமலேஷ் . 

    Share
  • கொள்ளி எறும்பு

    சு.கோதண்டராமன்

     

    காலையில் காப்பி குடித்து விட்டு செய்தித் தாள் பார்த்துக் கொண்டிருந்த ராஜாராமின் முகம் சட்டென்று இறுகியது. “கமலா …. ”. அவரது குரலில் இருந்த வழக்கத்துக்கு மாறான கடுமையால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஓடி வந்தாள்.

    “சோதனைச் சாலையின் சாவி உன்னிடம் தானே இருக்கிறது, வேறு யாரிடமும் கொடுக்கவில்லையே? ” கோபத்துடன் அவர் கேட்டார்.

    “இல்லையே. என்னைத் தவிர வேறு யாரும் அதில் நுழையவில்லையே. என்ன ஆயிற்று? ” பதற்றத்துடன் கேட்டாள் கமலா.

    “சரி, சோதனைச் சாலையைத் திற, பார்ப்போம்” என்று எழுந்த அவர், மனைவியைத் தொடர்ந்து அதில் நுழைந்தார். பூட்டப்பட்டிருந்த கம்பி வலைப் பெட்டியைத் திறந்து அதனுள்ளிருந்த இன்னொரு கம்பி வலைப் பெட்டி, அதனுள் இன்னொன்று என்று மூன்று பூட்டுகளைத் திறந்து ஒரு சிறு அலுமினியப் பெட்டியை எடுத்தார். அதை அப்படியே வாளித் தண்ணீரில் முக்கி எடுத்து விட்டுத் திறந்தார்.

    உள்ளே பெரிய எறும்புகள் நிறைய இருந்தன. அவை தூங்கிக் கொண்டிருந்தன. ராஜாராம் அவற்றைத் தட்டில் கொட்டி எண்ணினார். மொத்தம் 30 எறும்புகள் இருந்தன.

    “சரியாகத் தான் இருக்கிறது. பின் அது எப்படி நடந்தது? ” எனத் தனக்குள்ளேயே பேசிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

    தந்தையின் கோபக் குரலைக் கேட்டு விழித்துக் கொண்ட சுரேஷ் அப்படிக் கோபமூட்டிய விஷயம் என்னவாக இருக்கும் என்று அவர் பார்த்துக் கொண்டிருந்த செய்தித் தாளை நோட்டம் விட்டான். மூன்றாவது பக்கத்தின் அடி மூலையில் இருந்த ஒரு செய்தி அவன் கவனத்தைக் கவர்ந்தது.

    “பர்னிச்சர் கடையில் திருடர்கள் கைவரிசை. நூற்றுக் கணக்கான பிளாஸ்டிக் நாற்காலி மேஜைகள் அபேஸ். பூட்டை உடைக்காமல் கொள்ளை அடித்த மர்மம்” என்று தலைப்பிட்ட திருநெல்வேலிச் செய்தி ஒன்று இருந்தது.

    “ரொக்கம், மரச் சாமான்கள் இரும்புச் சாமான்கள் அப்படியே இருக்க பிளாஸ்டிக் சாமான்களை மட்டும் திருடர்கள் சூறையாடிச் சென்றிருந்தனர். இந்தத் திருட்டு தினம் தோறும் நடைபெறுகிறது. போலீசார் இது பற்றிப் புலன் விசாரித்து வருகின்றனர். ”

    அப்பாவின் பதற்றத்துக்கு இந்தச் செய்தி தான் காரணம் என்று அவனுக்குப் புரிந்தது.

    யோசனையில் ஆழ்ந்திருந்த ராஜாராம் திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவர் போல் எழுந்தார். உள்ளூர் காவல் நிலையத்துக்குப் போன் செய்து திருநெல்வேலி காவல்துறைக் கண்காணிப்பாளரின் எண்ணைத் தெரிந்துகொண்டு அவருடன் பேசத் தொடங்கினார்.

    “ஹலோ, நான் கோயம்புத்தூரிலிருந்து விஞ்ஞானி டாக்டர் ராஜாராம் பேசுகிறேன். உங்கள் ஊரில் பிளாஸ்டிக் சாமான் திருட்டு என்று ஒரு செய்தி பார்த்தேன். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இது போன்ற நிகழ்ச்சி வேறு ஏதேனும் நடந்ததா ? ”

    “வேறு எங்கும் நடக்கவில்லை. ஒரு கடையில் மட்டும் தினம் தோறும் 10, 15 பிளாஸ்டிக் சாமான்கள் காணாமல் போகின்றன. ”

    “என்னால் உங்களுக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். நாளை பகல் 12 மணிக்குள் 10 கிலோ உடைந்த பிளாஸ்டிக் வேண்டும். பாலிதீன் பைகளாகவும் இருக்கலாம். பழைய சாமான் கடைகளில் சொல்லி இதற்கு ஏற்பாடு செய்து விட்டு எனக்கு போன் செய்யவும். விபரம் நேரில் சொல்கிறேன். நான் உடனே புறப்பட்டு வருகிறேன். ”

    மறு நாள் காலை 9 மணிக்கு ராஜாராம் திருநெல்வேலி காவல் துறைக் கண்காணிப்பாளரின் முன் இருந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின், “பிளாஸ்டிக் சாமான்கள் மட்டும் காணாமல் போயிருந்தால் அது திருட்டு அல்ல. அது ஒரு வகை எறும்புகளின் வேலை. நான் 15 வருடமாக ஆராய்ச்சி செய்து ஒரு வகை எறும்பு – அதற்கு கொள்ளி எறும்பு என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள் – உருவாக்கி இருக்கிறேன். இதற்கு ஆகாரமே பிளாஸ்டிக் தான். ஒரு எறும்பு ஒரு நாளைக்கு அரை கிலோ பிளாஸ்டிக் வரை சாப்பிடும். இதோ பாருங்கள். இந்தப் பெட்டியில் 30 எறும்புகள் உள்ளன. இதற்குத் தான் நான் பிளாஸ்டிக் குப்பை கேட்டேன். இது போன்ற எறும்புகள் தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும். ”

    அவர் கூறியதை நம்ப முடியாமல் கண்காணிப்பாளர் அவரை உற்றுப் பார்த்தார். ராஜாராம், “குப்பை இருக்கும் இடத்துக்கு நாம் போவோம். அவை சாப்பிடும் வேகத்தைப் பார்த்தால் தான் நீங்கள் நம்புவீர்கள். ”

    அவரது திட்டப்படி பத்தடிக்குப் பத்தடி ஒரு திட்டு அமைக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டது. அதைச் சுற்றிலும் ஒரு அடி அகலத்திற்கு தண்ணீரால் நனைக்கப்பட்டது.

    ராஜாராம் தன் சூட்கேசில் இருந்து ஒரு சிறு அலுமினியப் பெட்டியை எடுத்தார். அதைத் தண்ணீரில் முக்கி விட்டுத் திறந்தார். மிகக் கவனமாகச் சிந்தாமல் சிதறாமல் எறும்புகளைத் திட்டில் கொட்டினார். சிறிது நேரம் மயக்க நிலையில் இருந்த எறும்புகள் பின்னர் அசைய ஆரம்பித்தன. திட்டில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களைத் தின்னத் தொடங்கின. என்ன வேகம்! ஒரு மணி நேரத்துக்குள் அத்தனை குப்பையும் காலி. எல்லோரும் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ராஜாராம் ஒரு வாளித் தண்ணீரைத் திட்டில் தெளித்தார். உடனே எறும்புகள் மயக்க நிலையை அடைந்தன. அவர் அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிப் பெட்டியில் போட்டார். எண்ணிக்கையை உறுதி செய்துகொண்டபின் பெட்டியைச் சூட்கேசில் பத்திரப்படுத்திவிட்டு நிமிர்ந்தார்.

    கண்காணிப்பாளர் ஆச்சரியம் தாங்காமல், “இது என்ன வகை எறும்பு ? எங்கிருந்து வந்தது ? உங்களிடம் மட்டும் தான் இருக்கிறதா ? ” என்று கேட்டார்.

    ராஜாராம் பேசத் தொடங்கினார். “நான் பூச்சி இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஆப்பிரிக்கா சென்றிருந்தேன். காங்கோ காட்டில் ஒரு இடத்தில் மரங்கள் பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே ஒரு எறும்புக் கூட்டம் இருநதது. அவை ஒவ்வொன்றின் வாயிலும் ஒரு கரையான். பல நாள் தொடர்ந்து கவனித்ததில் ஒரு உண்மை புலப்பட்டது. அந்த எறும்புகள் பயங்கரப் பசி கொண்டவை. ஒரு கூட்டம் ஒரு நாளில் ஒரு மரத்தைத் தின்று விடும். ஆனால் அவற்றுக்கு ஒரு விசித்திரமான குறைபாடு. ஈரம் அவற்றுக்குப் பகை. ஈர மரத்தை அவை நெருங்க முடியாது. அதற்காக அவை ஒரு தந்திரம் செய்கின்றன. ஒவ்வொரு எறும்பும் ஒரு கரையான் பூச்சியை வாயில் கவ்விக் கொண்டு மரத்தின் அடி வரை செல்கின்றன. கரையான்கள் எறும்புகளின் கட்டளைக்கு இணங்க மரத்தின் அடிப்பகுதியில் குடைந்து மரம் பட்டுப் போகச் செய்கின்றன. மரம் காய்ந்தபின் எறும்புகள் அதை உண்கின்றன.

    “நான் அந்த எறும்புகள் சிலவற்றைப் பிடித்து ஊருக்குக் கொண்டு வந்தேன். என்னுடைய ஆராய்ச்சிச் சாலையில் வைத்து மரபணு மாற்றம் மூலம் ஒரு புதிய வகை எறும்பை உருவாக்கினேன். நீங்கள் பார்த்த இது தான் அது. பிளாஸ்டிக் மட்டும் தான் சாப்பிடும். தண்ணீர் பட்டால் மயங்கிவிடும். என்னிடம் உள்ள எறும்புகளை எப்போதும் ஈரத்திலேயே வைத்திருக்கிறேன். பகல் 12 மணிக்கு எழுப்பி பிளாஸ்டிக் குப்பைகளை உணவாகக் கொடுத்துவிட்டு மறுபடியும் மயங்க வைத்து விடுவேன். அவை விழித்திருந்தால் நாள் பூராவும் உணவு உண்டு கொண்டே இருக்கும். என்னுடைய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை. என்னுடைய கவலை என்னவென்றால் என் கட்டுப் பாட்டை மீறி திருநெல்வேலியில் ஒரு எறும்புக் கூட்டம் உருவாகி இருக்கிறது. இதை இப்படியே விட்டால் ஒரு வருடத்திற்குள் உலகம் முழுவதும் பரவி பிளாஸ்டிக் பொருட்களே இல்லாமல் செய்து விடும். ”

    “ஆம். இனிமேலும் இது பரவாமல் தடுக்க நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும். ”

    “உடனடியாக இந்தச் சம்பவம் நடந்த தெருவைச் சுற்றி அகழி போல்  தண்ணீரால் இடைவிடாது நனைத்துக் கொண்டிருக்க வேண்டும். அங்கு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் அகற்ற வேண்டும். இப்படி மூன்று நாள் அவைகளுக்கு ஆகாரம் கிடைக்காமல் பார்த்துக் கொண்டால் அவை ஒன்றை ஒன்று தாக்கிக் கொன்றுவிடும். அப்பொழுது தான் நாம் பிழைக்கலாம்.

    அரசாங்கத்திற்குச் செய்தி பறந்தது. அனுமதி பெறப்பட்டது. பத்திரிகை, தொக்கா நிருபர்கள் அழைக்கப்பட்டனர். ராஜாராம் சொன்னபடி போர்க்கால முனைப்புடன் வேலைகள் நடந்தன. நகரம் முழுவதும் இதே பேச்சாக இருந்தது. 

    மறுநாள் வேறு எங்கும் இந்த மர்மத் திருட்டு நடக்கவில்லை. இப்படி 5 நாள் கழிந்தபின் தெரு மக்கள் தத்தம் பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவந்தனர்.

     திருநெல்வேலி நகரம் மட்டுமல்ல. உலகமே ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் டாக்டர் ராஜாராம் மட்டும் கவலையுடனேயே இருந்தார். தன்னுடைய ஆராய்ச்சி ரகசியம் யாராலோ திருடப் பட்டிருக்க வேண்டும் எனச் சந்தேகித்தார். குற்றவாளி சிக்காத வரை ஆபத்து நீங்கவில்லை என்பதைக் காவல் துறைக்குத் தெரிவித்தார்.

    காவல் துறையினர் டாக்டர் ராஜாராம் வீட்டுக்கு வந்து உள்ளும் புறமும் சுற்றிப் பார்த்தனர். அவரது உறவினர்களையும் அயலார்களையும் அவரது வீட்டுக்கு வரும் பால்காரர் முதலானவர்களையும் துருவித் துருவி விசாரித்தனர். சாவி ராஜாராமின் மனைவியிடம் இருந்ததால் அவளைத் திரும்பத் திரும்பக் கேள்விகளால் துளைத்தனர்.

    “நன்றாக யோசனை செய்து பாருங்கள். கடந்த 15 வருடத்தில் ஒரு நாள் கூட சாவியை நீங்கள் வேறு யாரிடமும் கொடுத்தது கிடையாதா ? ”

    கமலா ஆழ்ந்து யோசனை செய்தாள். “ஆம். ஒரே ஒரு நாள், சென்ற வருடம், உடல் நலமில்லாமல் படுத்திருந்த போது வேலைக்காரியை விட்டு அந்த அறையைச் சுத்தம் செய்யச் சொன்னேன். அவள் என் கண் எதிரிலேயே கூட்டிக் குப்பையை வாசலில் கொட்டி விட்டு வந்து பூட்டி என்னிடம் சாவியைக் கொடுத்து விட்டாள். ”

    காவலர்கள் வேலைக்காரியை விசாரித்ததில் விஷயம் வெளிவந்தது. ஒரு தாடிக்காரர் அடிக்கடி அவளிடம் வந்து ராஜாராமின் சோதனைச் சாலையில் எழுதப்பட்ட நோட்டுகள் ஏதேனும் இருந்தால் எடுத்துத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். 5000 ரூபாய் தருவதாக ஆசை காட்டினார். நீண்ட நாட்களாகக் காத்திருந்த அவளுக்கு அன்று ஒரு வாய்ப்புக் கிடைத்தது. குப்பையை வாசலில் கொட்டப் போகும்போது அறையிலிருந்த டயரியையும் எடுத்துச் சென்றாள். அதன் பக்கங்களை பிரதி எடுத்துக் கொண்டு எடுத்தது தெரியாமல் வைத்து விட்டுப் பூட்டிச் சாவியைக் கொடுத்து விட்டாள்.

    அவள் கொடுத்த தகவலின் பேரில் காவலர்கள் அந்தத் தாடிக்காரரை வலை வீசிப் பிடித்து விட்டனர். திருநெல்வேலி வாசியான அவர் ராஜாராமுடன் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்தவர் என்றும் தேர்வில் காப்பி அடித்ததற்காக தடை செய்யப்பட்டவர் என்றும் தெரிய வந்தது. எப்படியாவது வி்ஞ்ஞானி என்று பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் ராஜாராமின் சோதனை ரகசியங்களைத் தெரிந்து கொள்ளப் பாடு பட்டதாகச் சொன்னார்.

    “டயரியில் இருந்தபடி பிளாஸ்டிக் தின்னும் எறும்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றேன். ஆனால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் முறை அந்த டயரியில் இல்லை. எனவே அவை என் கையை மீறிச் சென்றுவிட்டன. ”

    டாக்டர் ராஜாராம் மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடர்கிறார். அவரது முயற்சி விரைவில் வெற்றி பெற வாழ்த்துவோம். 

    Share
  • தனியொருவனுக்கு உணவில்லையெனில்!

     

    பாரதி

    11 மணி வெயிலின் சூடு காலைத்தாக்க, ‘உச்‘ என்ற சப்தத்துடன் அலுத்துக்கொண்டார் காமராஜ்.

     “தாத்தா! 17டி பஸ் போயிடுச்சா?“

    “சாதா பஸ் போச்சுன்னு சொன்னாங்க! நானும் அதுக்குத்தான் நிக்கறேன்!“

     “என்ன! கொடியைத் தலைகீழாகப் பின் பண்ணியிருக்கே?“

    “அதுவா! ப்ச்! அப்பா பின் பண்ணச் சொன்னாரு. சரியா நான் பின் பண்ணலையா? நல்லவேளை! சொன்னீங்க! இல்லைன்னா என் ஃப்ரெண்ட்ஸ் சிரிச்சுருப்பாங்க!“

    “ஸ்கூல்ல கொடி ஏத்திட்டு திரும்பறியா!“

    “இல்ல தாத்தா! எங்க ஸ்கூல்ல எல்லாரையும் கூப்பிட மாட்டாங்க! “………………………..“

    “என் ஃப்ரெண்ட் இருக்கற தெருல இன்னைக்கு இண்டிபென்டன்ஸ் டே செலிப்ரேஷன். அங்க இருக்கற ஒரு அஸோஸியேஷன் மூலமா ஒரு ப்ரோக்ராம்“.

    காமராஜிக்கு தன் பையிலிருக்கும் ஸ்வீட்டை எடுத்து அந்தச் சிறுவனிடம் கொடுக்கும் ஆவல் மனசுக்குள் எழுந்தது. இருந்தாலும், பஸ் ஸ்டாப்பில் நின்று சிறுவனிடம் கொடுப்பதும் பேசுவதும் சரியாயிருக்காது என்றெண்ணி பஸ் வருகிறதா? எனப் பார்த்தார் காமராஜ். பழ வண்டிக்காரனிடம் வாங்கிய பழங்களும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைத்த மில்க் ஸ்வீட் பையும் கையைக் கனக்கச் செய்தன.

    பிளாட்ஃபார்ம் நிறைய முளைத்த தள்ளுவண்டிக்கடைகள் மனிதர்களை நடுரோட்டில் நடக்கச் செய்ததைக் கவனித்தபடி நின்றிருந்தார்.

    சரேலென இடிக்கும்படி தன் பக்கத்தில் வந்து நின்ற காரை எரிச்சலுடன் பார்த்தார் காமராஜ்.

    “என்ன பஸ்ஸுக்கா காமராஜ்! பாத்து ரொம்ப நாளாச்சே! நெறைய சேஞ்சஸ் உங்கிட்ட எனக்குத் தெரியுதே!“ குளிர்பதன வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசுக் கார் கண்ணாடியை இறக்கியபடி, கதவைத் திறந்தபடி வந்த நேருவை உற்றுப் பார்த்தார் காமராஜ்.

    “நீ சக்கரைப் பொங்கல் எடுத்துட்டுப் போறியா?“

    “எதுக்கு?“ கையை ஆதுரத்துடன் தடவியபடி, மறந்துடு.

    “மறக்கக்கூடியதா நேரு! அந்தக்கால இன்டிபெண்டன்ஸ்டே செலிப்ரேஷன்“

    “சரி! அதெல்லாம் அந்தக்காலம்! இன்னைக்கு என்ன இந்தப்பக்கம்? வீடு இங்க வாங்கிட்டு வந்துட்டாலும் காளி கோயிலுக்குப் பழமும், ஸ்வீட்டும் அப்பப்ப பண்டிகைன்னா எடுத்துண்டு போவேன். இன்னைக்குன்னு பாத்து டிரைவர் வரலை. பேரன் டிவில ஏதோ சினிமான்னு டிரைவ் பண்ண வர மாட்டேன்னு சொல்லிட்டான். ஒண்டிக்கட்டை! அவ போனதுக்கப்புறம் நான் டிரைவ் பண்றதில்லை!“

    “அதான் பஸ்ல போயிடலாம்னு வந்தேன். செருப்பு போட மறந்துட்டேன்.“

    “உன் போலீஸ் டூயூட்டிக்கு இன்னைக்கு லீவா?“

    “வேலை எங்க என்னை விடும்? நானா தான் லீவு போட்டிருக்கேன். பேத்தி பிறந்திருக்கா எனக்கு! நாலு நாளா பாக்கப் போகலை! அவ்வளவு பிசி! இன்னைக்கும் போகலைன்னா அவ்வளவு நல்லாயிருக்காதுன்னு கிளம்பினேன். வழியில பழவண்டிக்காரனைப் பார்த்தேன். இவர் அப்பா அந்தக்காலத்து சுதந்திரப் போராட்ட வீரர். ரொம்ப நாளா இவருக்கு நான் ஒரு ரெகுலர் கஸ்டமர். எனக்குன்னா ரெண்டு பழம் கூடப் போட்டுத் தருவார்.

     எங்கோ ‘ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!‘ பாட்டின் ஒலியை ரசித்தபடி இருந்த பையனை வினோதமாகப் பார்த்தார் காமராஜ்.

    “என்ன தாத்தா பாக்கறீங்க! பஸ் வர்ற வழியாத் தெரியல?“ “இந்த சாங் எங்க தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்குக்கூட ரொம்பப் பிடிக்கும்“.

    “மொபைல்ல ஃபோன் பண்ணி அப்பாவை வரச்சொல்லி வண்டில போலாம்ல. என்கூட கார்ல வேணும்னா வர்றியா?“

    என்னிடம் மொபைல் கிடையாது. நாட் அலவ்ட் ஃபார் சில்ட்ரன்னு அப்பா சொல்லிட்டார்.

    “நோ தாங்ஸ் போலீஸ் தாத்தா!. தகுதிக்கு மீறி ஆசைப்படறது தப்புன்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார்“.

    “இன்னைக்குக் கார்ல போனா நாளைக்கும் அதே சுகம் கேட்கும்னு நினைக்கறியா“ நேரு கேட்டது சிறுவன் காதுக்குச் சென்றதோ இல்லையோ! அதையும் மீறிய பலத்த அடி விழும் ஓசை கேட்டது.

    “விடு! விடு! ஏம்பா அடிக்கற?“ எனக் கேட்டார் காமராஜ்.

    “பின்ன என்ன சார்! நானும் எம் பொஞ்சாதியும் கஷ்டப்பட்டு பழத்தை அடுக்கி வைச்சுட்டு உக்காந்துருக்கோம். நைசா லபக்குன்னு ஒரு ஆப்பிள் பழத்தை எடுக்குறான்“.

    “பசிக்குதுன்னு எடுத்தேன். திருடலை! நாளைக்குக் காசு கொடுத்துடுடலாம்னு நினைச்சேன். சின்ன பழந்தானே, அண்ணே! அதுக்குள்ள….“

    “ஒறவு மொறை சொல்ற லட்சணத்தைப் பாருங்க பிச்சைக்காரப்பய!“ என்னவோ கூடப்பிறந்த பொறப்பு மாதிரி!“

    “கிழிஞ்ச சட்டை போட்டிருக்கேன்னு தானே பிச்சைக்காரப்பயன்னு சொல்ற!“

    “ஐ யம் பி.எஸ்.ஸி  மேத்ஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிராஜீவேட் தெரியுமா?“

    “எல்லாந் தெரியுண்டா?“ இங்க வளந்தவந் தானே!

    17டி பஸ் வந்து நின்றும் யாரும் ஏறவில்லை.

    “நீ கிராஜீவேட்டாயிருந்தாலும் திருடித் திங்கறது தப்பில்லையா?“

    “போலீஸ்ல பிடிச்சிக் குடுக்கணும் இவனை! பத்து ரூபாய் கொடுத்து ஒத்த பழம் வாங்க வக்கில்லை“.எனக் கூறிய காதில் மாட்டலுடன் கூடிய ஜிமிக்கி அணிந்த பழவண்டிக்காரனின் மனைவியை வெறிக்கப் பார்த்தார் நேரு.

    ரோட்டைத் தாண்டிய எதிர்ப்புறம் சாக்கடையை ஒட்டிய இடத்தில் கிழிசல் சட்டையைப் பார்த்தபடி 30 வயதுக்குரிய உடல் வளர்ச்சி எதுவுமின்றி சக்கர நாற்காலியில் துணியால் இறுகக்கட்டி வாயில் எச்சில் ஒழுகிய மனித ஜந்துவின் கண்ணில் கண்ணீர்.

     “காமராஜ்! நீ வண்டில ஏறிக்க! தம்பி நீயும் வா! “உன் பேரென்ன?“

    “கல்கி! தாத்தா“.

    இன்னைக்கு ஒரு நாளைக்கு உன் அப்பா கொள்கைய விட்டு வர்றதாலே ஒண்ணும் ஆயிடாது. காமராஜின் பழப்பை அவருக்கு இப்போது முன்னைவிடக் கனமாகத் தெரிந்தது.

    “தாத்தா! இந்தப்பழங்கள் யாருக்கு?“ என்றான் கல்கி.

    ஏதோ புரிந்தது போல்… கடவுளுக்குப்பா! என்றார் காமராஜ்.

    “நான் ஒண்ணு எடுத்துக்கட்டுமா?“

    “நான் இந்தப்பழ வண்டில வாங்கலைப்பா. நீ தாராளமா எடுத்துக்க!“

    ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, கிழிந்த சட்டை மாட்டியவனைக் கண்களால் தேடினான். அசோக் பில்லர் தூணை வெறித்தபடி அம்மன் கோயில் சுவரில் ஒண்டிக்கிடந்தவனிடம், “இந்தாண்ணா! வாங்கிக்கோ!“ எனப் பெரியவரிடம் வாங்கிய பழத்தைக் கொடுத்தான் கல்கி.

    “நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க! இது எங்க அப்பாவோட விசிட்டிங் கார்டு. இதுல எங்க வீட்டு அட்ரஸ் இருக்கு. எனக்கு மேக்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா? நான் மேக்ஸ்ல ரொம்ப வீக்!“ என்ற கல்கியை உணர்ச்சி மேலீட்டால் கட்டித் தழுவிக் கொண்டான் கிழிசல் சட்டைக்காரன்.

    “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்“ என்ற வரிகள் ஏனோ நேருவுக்கு அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது. “காமராஜ்! அந்தக் கல்கியைக் கூப்பிடு! போலாம். அந்தப் பையனுக்கு யார் அந்தப் பேர் வைச்சான்னு கேட்கணும்.

    “நீ எங்கே பழம் வாங்கினே? சொல்! அங்கேயே காரை நிறுத்தி வாங்கிடலாம்“.

    “ஆமாம்! ஆமாம்! என்பது போல் காரின் முன்பக்க பளிங்குப் பொம்மை காந்தி பொக்கை வாயைத் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

    Share
  • இரும்பு மனுஷி!

    பாகம்பிரியாள்

    இன்றைக்கும் அலுப்பு, சலிப்பு ஏதுமில்லாமல்
    அம்மாதான் உணவு போடுகிறாள் எல்லோருக்கும்.
    ஆனால் உணவுக் கவளத்தை விடவும் நாங்கள்
     அதிகம்  உண்டு மென்றது  மௌனம் தான் .
    ஏதோ ஒரு கவலை அவளை வாட்டுகிறது.  
    ஆனால் அருகில் செல்ல யாருக்கும் பயம்.
    எப்போதாவது என் சின்னப்பெண்ணை பார்த்து
    அபூர்வமாய் மலரும் ஓர் சின்ன சிரிப்பு.
    இரும்பு மனுஷியை தேற்றும் வழி தெரியாது
    துவண்டு போன என்னை விட்டு தூக்கம் விலகியது.
    இரவில் நீர் குடிக்க சென்ற என் கண்ணில் பட்டது
    எதிர்பாராமல் நடந்த ஓர்  நிகழ்வு.  .
     

    பாட்டியிடம் அவளுக்குத் தெரிந்த மொழியில்
    பேத்தி கேள்விகளைத் தொடுக்கிறாள்.
    நீண் ட அமைதிக்குப்பிறகு அருவியாய் வீழ்ந்தது,
    நெஞ்சில்  அடைபட்டுக்கிடந்த நினைவுகள் யாவும்.
    பிஞ்சு விரல்களின் வருடலைத் தாங்க இயலாது
    பழுப்பேறிய தலை சாய்ந்து கொள்ள இடம் தேடியதில்,
    மடி தன்னை மழலை மெல்லவே காட்ட,
    குலுங்கியதில் வெடித்தது ஓர் அழுகை. 
    இரும்பு மனுஷியை கரும்பு மனுஷியாய்
    மாற்றிய  என் மகள்  ஏதும் அறியாது   
    பொம்மையுடன் உறங்கிக் கொண்டிருக்கிறாள்
    பூஞ்சிரிப்பு  ஒன்று உதட்டில் உறைந்திருக்க!
     
    படத்திற்கு நன்றி

    http://www.rgbstock.com/photo/mgF5K92/Old+Woman

    Share
  • தாய்மை

    திருவாரூர் ரேவதி
     
    முல்லை மலர் போன்ற
    முத்து பல் விரித்து
    சின்ன கருவிழியில்
    மின்னும் ஆனந்தம்
     
    நடராஜரை நினைவூட்டி
    நர்த்தனமாடும் கருங்குடுமி
    வட்ட முகத்தின் வடிவழகை
    கூட்டும் சின்ன கன்னங்கள்
     
    குப்புற வைத்த 
    குடைமிளகாயின்
    கீழ் ஒட்ட வைத்த உதடுகள்
     
    வெள்ளி அரைஞனுடன்
    தாயிடம் கற்ற தமிழின்
    முற்று பெறாத 
    வார்த்தையுமாய்
     
    விளையாட முடியாமல்
    அடைப்பட்டு கிடக்கும்
    அரண்மனைக் கிளியும்
     
    அரையாடையும் அணியாத
    சின்ன குயிலின் சிரிப்பும்
    தாலாட்டும் தாய்க்கு ஒன்றுதான்

    படத்திற்கு நன்றி
     
    Share
  • நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-15)

    ஸ்ரீஜா வெங்கடேஷ்

    சுந்தரத்தின் ஆபீசில் பரபரப்பாகப் பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. சுந்தரத்தைச் சந்தேகப்பட்டு அவனிடம் பேசிய பிறகு மேனேஜருக்கு விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ஆசாமி ஒருவரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர் சொன்ன செய்தியைக் கேட்டு மேனேஜருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் தேவையில்லாமல் சுந்தரத்தைச் சந்தேகித்தோமே என்று தோன்றியது. விஷயம் இது தான்.

    சுந்தரம் பெயருக்குக் கெட்ட பெயர் உண்டு பண்ணும் நோக்கத்தோடு வந்த மொட்டை லெட்டர்களைப் பற்றி மேனேஜரிடம் விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட்காரர்கள் சொன்ன போதே அவர் சுந்தரத்தின் மேல் தப்பு இருக்க முடியாதே என்று யோசித்தார். அதனால் அவர்”எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு! இந்த எல்லா லெட்டரையுமே ஒரே நபர்கள் தான் எழுதியிருக்கணும். சுந்தரத்தைப் பிடிக்காத யாரோ தான் இதைச் செஞ்சிருக்கணும். அதனால நீங்க எதுக்கும் இந்த லெட்டர்சை ஒரு கையெழுத்து ஸ்பெஷலிஸ்ட் கிட்ட அனுப்பி ஒரு ஒப்பினியன் வாங்கிக்குங்க” என்று கூறியிருந்தார்.

    அவர் சொன்னதைக் கேட்டு விஜிலன்ஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த சுப்பிரமணியமும், போலீசில் இருந்த தன் நண்பரின் உதவியோடு ஒரு கையெழுத்து நிபுணரிடம் கொடுத்தார். அவரும் அதைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு,”மொத்தம் 10 லெட்டர்கள் இருக்கு, ஆனா இதை எதோ ரெண்டு பேர் தான் எழுதியிருக்காங்க!” என்று கூறியியிருந்தார். அந்த விஷயத்தைச் சுப்பிரமணியம் மேனேஜரிடம் தெரிவித்தார். அதைக் கேட்டதும் மேனேஜருக்குப் பொறி தட்டியது.

    வேலுமணி, கணேசன் இவர்கள் இரண்டு பெயருடைய கையெழுத்தும் அடங்கிய ஃபைலை சுப்பிரமணியத்திடம் கொடுத்து அவற்றைப் பரிசோதிக்கும்படி சொன்னார். அதன் ரிசல்டைத்தான் இப்போது சுப்பிரமணியம் மேனேஜரிடம் ஃபோனில் தெரிவித்தார். சுப்பிரமணியம் கூறியது மேனேஜர் நினைத்ததைப் போலவே இருந்தது. அந்த மொட்டை லெட்டர்களை எல்லாம் எழுதியவர்கள் வேலுமணியும்,கணேசனும் தான் என்று கையெழுத்து நிபுணர் தெரிவித்து விட்டதாகச் சுப்பிரமணியம் கூறினார்.

    அதை வைத்து வேலுமணியிடமும், கணேசனிடமும் துருவித்துருவிக் கேட்ட போது அவர்களே ஒரு கட்டத்தில் சுந்தரத்தின் மேல் உள்ள பகையால் தாங்கள் சுந்தரத்தைப் பழி வாங்க அவ்வாறு செய்தோம் என்று ஒப்புக் கொண்டார்கள். ஆனால் வெளி நாட்டுக்குப் பணம் அனுப்பிய விவரம் சம்பந்தமாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.

    அதைக் கேட்டதிலிருந்து மேனேஜருக்கு சுந்தரத்தின் மேல் மரியாதை ஓங்கியது.

    “சே! நான் அவசரப்பட்டிருக்கக் கூடாது. இந்த ரிசல்ட் வந்தப்புறம் சுந்தரத்துக் கிட்ட பேசியிருக்கணும். ஏன் அவசரப் பட்டேன்னு தெரியல. இப்போ அவருக்குத் தேவையில்லாத மனசு கஷ்டம். ஆனா வெளி நாட்டுக்குப் பணம் அனுப்புன வெவகாரம்? அதுக்கு என்ன பதில்” என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சுந்தரம் வந்து விட்டான்.

    “சார்! நான் என்னை நிரபராதின்னு நிரூபிக்க வேண்டிய ஆதாரங்களோடு வந்துருக்கேன் சார்!”

    “சுந்தரம் உங்க ஆதாரங்களை எல்லாம் நான் கண்டிப்பாப் பாக்குறேன்! ஆனா உங்க மிஸஸ் ஏன் வெளி நாட்டுக்குப் பணம் அனுப்புனாங்கன்னு தெரிஞ்சுதா?”

    “தெரிஞ்சுது சார்! அவங்க ஒரு இ-மெயிலை நம்பி ஏதோ ஒரு அட்ரசுக்கு பரிசு விழும்னு நம்பி சவுத் ஆப்பிரிக்காவுக்கு பணம் அனுப்பியிருக்காங்க! தன்னோட சொந்த சேமிப்புலர்ந்தும், ஒரு நகையை அடமானம் வெச்சும் தான் அந்தப் பணத்தை அனுப்பியிருக்காங்க! அதுக்குண்டான ஆதாரங்கள் எல்லாம் நான் கைவசம் வெச்சுருக்கேன் சார்” என்றான் பரபரப்போடு.

    “கவலைப் படாதீங்க சுந்தரம்! கடவுள் உங்க பக்கம் இருக்கார். அந்த பேப்பர்சை எல்லாம் குடுங்க!” என்று அவற்றை வாங்கி ஒவ்வொன்றாகப் பார்த்தார். அவற்றைப் பார்த்து விட்டு நிமிரும்போது அவர் முகம் தெளிவடைந்திருந்தது. நேரே சுப்பிரமணியத்துக்கு ஃபோனைச் சுற்றி ஸ்பீக்கரில் போட்டார்.

    “மிஸ்டர். சுப்பிரமணியம், சுந்தரம் வீட்டுக்கு ரெய்டு போகணும்ங்கற அவசியம் இல்ல. அவரு அந்தப் பணம் சம்பந்தமான எல்லா டாக்குமெண்ட்சையும் நீட்டாக் கொண்டு வந்திட்டாரு. அது மட்டுமில்ல தன்னோட ரெண்டு வருஷ பேங்க் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்டையும் கொண்டு வந்திருக்காரு அதுல அப்டி ஒண்ணும் நெறயப் பணம் போடப் படல. அதனால வீடு ரெய்டு செய்யப்படத் தேவையில்ல”

    “அப்டியா சார்? ரொம்ப சந்தோஷம். நீங்க சொன்னா மாதிரியே அவரு நிரபராதின்னு ப்ரூவ் ஆய்டிச்சே! ரொம்ப சந்தோஷம் சார்!”

    “ஆமா மிஸ்டர். சுப்பிரமணியம். எனக்கே கூட ரொம்பக் கஷ்டமா இருந்தது. எனக்கு சுந்தரத்தை ரொம்ப வருஷமாத் தெரியும். அவரு இப்டி ஒரு காரியத்தைச் செஞ்சிருப்பாருன்னு என்னால கற்பனை கூடப் பண்ணிப்பாக்க முடியல. ஆனா என்ன பண்ண? சூழ்நிலை அவருக்கெதிரா இருந்ததே? அதான் உங்க கிட்ட சொல்ல வேண்டியதாயிடுச்சு”

    “போனது போகட்டும் சார். இப்போ மிஸ்டர். சுந்தரம் எங்கே? அவர் கிட்ட சொல்லிட்டீங்களா? அவர் நிரபராதின்னு?

    “இல்ல! இன்னும் சொல்லல்ல! இப்போ அவரு இதையெல்லாம் கேட்டுக்கிட்டு என் எதுத்தாபோலத்தான் உக்காந்துருக்காரு. நான் இப்பவே அவருக்கு வெளக்கமாச் சொல்லிடறேன்” என்று கூறி ஃபோனை வைத்தார்.

    எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்துக்கு ஆகாயத்தில் பறப்பது மாதிரி இருந்தது.

    “என் மேல இருந்த களங்கம் போயிடுச்சா? எங்க வீட்டுக்கு ரெய்டு வராதா? எப்படி இந்த திடீர் மாத்தம்? கடவுளே உனக்கு நன்றி! முருகா! நீ என்னைக் காப்பத்திட்டப்பா” என்று அவன் மனம் கனிந்து கசிந்து உருகியது.

    “என்ன சுந்தரம் அப்டியே பிரமிச்சுப் போயி உக்காந்துட்டீங்க?”

    மேனேஜர் குரலைக் கேட்டதும் கனவிலிருந்து மீண்டவன் மாதிரி திடுக்கிட்டவன் அவரை நோக்கி,

    “சார்! நீங்க இப்போ ஃபோன்ல பேசினது எல்லாம் நிஜமா? நான் நிரபராதின்னு ப்ரூவ் ஆயிடிச்சா? எப்டி? இப்போ ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி கூட என்னைச் சந்தேகப் பட்டீங்களே? நான் வீட்டுக்குப் போயிட்டு டாக்குமெண்ட்சையெல்லாம் கொண்டு வரதுக்குள்ள எப்டி சார் நான் நிரபராதின்னு ப்ரூவ் ஆச்சு? என்னால நம்பவே முடியல சார்!”

    “பதறாதீங்க சுந்தரம். உக்காருங்க! முதல்ல இந்தத் தண்ணியக் குடிங்க!” என்றவர் தண்ணீரை நீட்டினார். அதை வாங்கிப் பருகியவனை நோக்கி

    “எல்லாம் விவரமா மொதல்லருந்து சொல்றேன் கேளுங்க! நீங்க வீட்டுக்கு டாக்குமெண்ட்சை எடுக்கப் போனதும் எனக்கு விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் சுப்பிரமணியத்துக்கிட்டருந்து ஃபோன் வந்துது. மொட்டை லெட்டர்கள்ள இருக்குற கையெழுத்தும், கணேசன், வேலுமணி கையெழுத்தும் ஒண்ணுதான்னு கையெழுத்து எக்ஸ்பெர்ட் ரிப்போர்ட் குடுத்துட்டாரு. அதை வெச்சிக்கிட்டு இவங்க அந்த ரெண்டு பேரையும் கொடஞ்சிருக்காங்க! ஒரு ஸ்டேஜில அவங்களே கொடச்சல் தாங்க முடியாம மொட்டை லெட்டர் போட்டது தாங்கதான்ன்னு ஒப்புக்கிட்டாங்க!. அதனால் உங்க மேல இருந்த சந்தேகம் 80% குறஞ்சிடுச்சு. இப்போ நீங்க வெளி நாட்டுக்குப் பணம் அனுப்புன ரெக்கார்ட்சையும், உங்க பேங்க் ஸ்டேட்மெண்டையும் கொண்டு வந்தீங்க அப்போ உங்க மேல இருந்த மீதி 20% சந்தேகமும் தீந்து போச்சு.”

    “சார்! உண்மையாவா சொல்றீங்க? கணேசனும்,வேலுமணியுமா அந்த மொட்டை லெட்டர்களைப் போட்டது?”

    “ஆமா சுந்தரம்! அவங்க திட்டம் போட்டு வேலை செஞ்சிருக்காங்க! மத்தவங்க பாக்கும் போது வேணும்னே உங்க கிட்ட நெருங்கிப் பேசறா மாதிரி நடிச்சிருக்காங்க! அப்பத்தான் மத்தவங்களளுக்கும் உங்க மேல சந்தேகம் வரும்னு. என்ன ஒரு வில்லத்தனம் பாத்தீங்களா?”

    ” ஏயப்பா! இவ்ளோ வேலை செய்துருக்காங்களா அவங்க? அவங்க கேட்டு நான் அந்த ஃபைலைத் தர மாட்டேன்னு சொல்லிட்டேன். அந்தக் கோவத்துல என்னை இப்டிப் பழி வாங்கியிருக்காங்க!”

    “ஆமா சுந்தரம்! கொஞ்ச நேரத்துக்கு நான் கூட உங்களைத் தப்பா நெனச்சேன். ஐ ஆம் சாரி! உங்களுக்குப் புரமோஷன் கெடைக்க சிபாரிசு பண்றேன். நான் பண்ண தப்புக்கு அது பரிகாரமா இருக்கட்டும்”

    “ரொம்ப தேங்க்ஸ் சார்! ஆமா! இப்போ அவங்க ரெண்டு பேர் நெலம என்னாகும்?”

    “யாரு வேலுமணி, கணேசனா? அவங்க மேல ஏகப்பட்ட புகார் இருக்கு. இப்போ நீங்க அவங்க மேல உங்க புகார் குடுத்தீங்கன்னா கண்டிப்பா வேலை போயிடும். ஊழல் செஞ்சதாச் சொல்லப் படற அமௌண்டையும் கட்ட வேண்டி வரும்.”

    “ஏன் சார் நான் புகார் குடுத்தாலும், குடுக்காட்டாலும் அவங்களுக்கு வேலை போறது உறுதியா சார்?”

    “ஆமா! அப்டித்தான் சுப்பிரமணியம் சொன்னார்”

    “அப்டீன்னா நான் அவங்க மேல எந்தப் புகாரும் குடுக்கல்ல சார்!”

    “வாட்? நீங்க அவங்களுக்கு எதிரா கம்பிளெயிண்ட் குடுக்கப் போறதில்லியா? ஏன் சுந்தரம்? அவங்களால உங்களுக்கு எவ்ளோ மனசுக் கஷ்டம் வந்துச்சு? அதையெல்லாம் மறந்துட்டீங்களா?”

    “மறக்கல சார்! ஆனா நான் கம்பிளெயிண்ட் குடுத்ததால தான் அவங்களுக்கு வேலை போச்சுன்னு நெனச்சுக்கிட்டு என் மேல மேலும் பகை வரும் சார். பாவம் சார் அவங்களும். பிள்ளைக்குட்டிக்காரங்க! பொழச்சுப் போகட்டும்! என் விஷயத்துல தலையிடாம இருந்தா அதுவே போதும்.”

    “சுந்தரம் யூ ஆர் கிரேட்! இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்னு குறளுக்கு நீங்க தான் எக்சாம்பிள். வெல் டன்! எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு”

    “தேங்க்ஸ் சார்! நான் அப்போ வீட்டுக்குப் போயி நான் நிரபராதின்னு ப்ரூவ் ஆயிடிச்சுன்னு என் மகன் கிட்ட சொல்லலாமா சார்?”

    “கண்டிப்பா! இப்பவே கிளம்புங்க! உங்க மனைவி கிட்ட மொதல்ல சொல்லுங்க அவங்க பாவம் எவ்ளோ டென்ஷனோட இருக்காங்களோ?”

    மனைவி என்ற சொல்லைக் கேட்டதும் சுந்தரத்தின் முகம் இறுகியது. மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் மேனேஜரிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்.

    கதவைத்திறந்தவன் நிகில் தான். அப்பாவின் புன்னகை பூத்த முகத்தைப் பார்த்ததுமே வந்த ஆபத்து நீங்கி விட்டது என்று உணர்ந்து கொண்டான் அவன். கதவைத் திறந்தவனை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டான் சுந்தரம்.

    “நிகில்! கண்ணா! என் மேல இருந்த பழி நீங்கிடுச்சுடா கண்ணா! உங்கப்பா நிரபராதின்னு எல்லாரும் சொல்லிட்டாங்க! நாக்கு மேல பல்லைப் போட்டு என்னைக் குத்தம் சொன்னவங்க எல்லாம் எங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிட்டாங்கடா நிகில்!” சொல்ல சொல்லவே கண்களில் நீர் பெருகியது கல்யாணிக்கு.

    “அப்பா! வடபழனி ஆண்டவா! என் மனக்குறையைத் தீர்த்தியே! வேண்டிக்கிட்டபடியே உனக்கு பாலாபிஷேகம் பண்றேம்ப்பா!” என்றவள் ஓடிப் போய் திருநீறை எடுத்துப் பூசிக் கொண்டாள். ஆவலோடு சுந்தரத்தின் அருகே வந்து

    “என்னங்க? எப்டி நீங்க தப்பு செய்யல்லன்னு கண்டு பிடிச்சாங்க?”

    அவள் இருப்பதையே லட்சியம் செய்யாமல் நிகிலையே பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான் சுந்தரம்.

    “அப்பா! அம்மா கேக்குறாங்க ஏன் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க?”

    முகம் கடுமையானது. அதைப் பார்த்து நிகிலுக்கே பயம் வந்தது. கல்யாணி நொந்து போனாள்.

    “டேய் நிகில்! இனிமே உங்கம்மாவோட பேச்சை எங்கிட்ட எடுக்காதே! அவ என் எதிரி. என் நேர்மையையே கேள்விக்குறி ஆக்கின ராட்சசி.”

    “என்னப்பா இப்டிச் சொல்றீங்க? இப்போதான் எல்லாம் சரியாயிடுச்சே? அப்புறம் என்ன?”

    “என்ன இருந்தாலும் கொஞ்ச நாள் எல்லாரும் என்னை ஆபீசுல சந்தேகமாப் பாத்தாங்க இல்லியா? அதுக்குக் காரணம் யாரு? இவ தானே?”

    “என்னங்க பிளீஸ் நாந்தான் தெரியாமப் பண்ணிட்டேன்னு சொல்றேனே! உங்க கால்ல விழுந்துனாலும் மன்னிப்புக் கேட்டுக்கறேன்”

    “நிகில்! உங்கம்மாவைப் பேசாம இருக்கச் சொல்லு, நான் இப்போ ரொம்ப சந்தோஷமான மூட்ல இருக்கேன். அதைக் கெடுக்கச் சொல்லாதே”

    “சரி சரி! இதை அப்புறமாப் பாத்துக்குவோம். நீங்க முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க? எனக்கு எதுவுமே தெரியாது” என்றான் நிகில்.

    எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான் சுந்தரம். வேலுமணியும்,கணேசனும் ஊழல் செய்தது, திட்டம் போட்டு சுந்தரத்தை மாட்டி வைத்தது, மொட்டை லெட்டர் போட்டது எல்லாம் சொன்னான்.

    “இதெல்லாம் போதாதுன்னு உங்கம்மா வெளி நாட்டுக்கு பணத்தை அனுப்பி என்னைத் தலையே தூக்க முடியாதபடி செஞ்சா! ஆனாலும் தெய்வம் என் பக்கம். என்ன இருந்தாலும் நியாயம் ஒரு நாள் ஜெயிக்கத்தானே செய்யும்? நான் கொண்டு போன டாக்குமெண்ட்சையெல்லாம் பாத்துட்டு எங்க மேனேஜர் தன் தப்பை உணர்ந்துட்டார். அதோட லெட்டர் போட்டது அவங்க தன்னு ரெண்டு பேரும் ஒத்துக்கவே நான் தப்பிச்சேன்”

    கல்யாணியின் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் நிற்கவேயில்லை. தான் செய்த காரியத்தின் தீவிரம் அப்போதுதான் அவளுக்கு உறைத்தது.

    “என்ன காரியம் செஞ்சிட்டோம்? நான் அந்த ரசீதுகளை மட்டும் பத்திரமா வெச்சுருக்கல்லன்னா என்ன ஆகியிருக்கும்? அவரு பேருக்குத் தீராத களங்கம் இல்ல உண்டாயிருக்கும்? அப்போ இந்தக் குடும்ப நிலைமை என்ன? நல்ல வேளை கெட்ட நேரத்துலயும் ஒரு நல்ல நேரம் நான் இந்த ரசீதுகளைப் பத்திரமா வெச்சேன். முருகா நன்றி!” என்று முருகனுக்கு மனத்துள் நன்றி சொன்னாள்.

    நிகில் மீண்டும் ஆரம்பித்தான்.

    “அப்பா உங்களுக்குக் கெட்ட பேர் வரணும்னு வேலை செஞ்ச அந்த ரெண்டு பேர் மேலயும் கம்பிளெயிண்ட் குடுத்தீட்டீங்க இல்ல? மான நஷ்ட கேஸ் போட்டு நல்லா உள்ள தள்ளணும் அப்பத்தான் இவங்களுக்கு எல்லாம் புத்தி வரும்”

    “இல்ல நிகில். நான் அவங்க மேல கம்பிளெயிண்ட் குடுக்கல்ல! ஏற்கனவே கஷ்டத்துல இருக்காங்க பாவம்! ஏதோ தெரியாம தப்பு செஞ்சிட்டாங்க! நானும் கூடச் சேர்ந்து சொன்னா அவங்களுக்கு பாவம் எதிர்காலமே இல்லாமப் போயிடும். எப்படி இருந்தாலும் அவங்களுக்கு வேலை போகப் போகுதுன்னு உறுதியாயிடுச்சு, இந்நேரத்துல போய், மான நஷ்ட வழக்கு அது இதுன்னிக்கிட்டு, அவங்களும் குடும்பஸ்தங்க தானே! போறாங்க விடு”

    நிகிலுக்கு தன் தந்தையை நினைத்துப் பெருமையாக இருந்தது.

    “அப்பா!, உங்களை அம்மா கூப்புடுறாங்க!” என்றான் வேண்டுமேன்றே.

    “நிகில்! நான் சொன்னா சொன்னது தான். உங்கம்மாவோட நான் இனிமேப் பேசறதாயில்ல. அவ செஞ்ச காரியம் அப்டிடா! உனக்கு பைக் வாங்க வெச்சிருந்த பணத்தைத் தூக்கி விட்டுருக்கா! அம்பதாயிரம் சாதாரணத் தொகையா? நான் எதை வேணா மன்னிப்பேன் ஆனா உன் பைக் பணத்தை எடுத்து என் நேர்மைக்கு களங்கம் உண்டாக்க முயற்சி பண்ணாளே அதை என்னால மன்னிக்கவே முடியாது.”

    “அம்மா தெரியாம தானே செஞ்சாங்க!”

    “தெரிஞ்சோ தெரியாமலோ! எனக்குப் பிடிக்கல்ல!”

    “அப்பா, நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைக்க மாட்டீங்களே?”

    “சொல்லுடா”

    “உங்களை வேணும்னே பிளான் பண்ணி மாட்டி விட்ட அவங்களை ரெண்டு பேரையும் மன்னிச்சு சும்மா விட்டுட்டீங்க ஏதோ அம்மா நம்ம வீட்டுக்கு நிறையப் பணம் வரணும் நம்மள்ளாம் சந்தோஷமா இருக்கனும்கறதுக்காக தெரியாமக் கொண்டு போயி பணத்தைக் கட்டி ஏமாந்துருக்காங்க! அவங்களை மன்னிக்க மாட்டீங்க ஏன்ப்பா அப்பிடி?”

    கல்யாணிக்கு நிகிலா இவ்வளவு பெரிய மனிதத்தனமாகப் பேசுகிறான் என்று இருந்தது.

    “அப்பா! ஒரு வேளை அம்மா பணம் கட்டி எதிர் பார்த்தபடி அந்த அஞ்சு கோடி ரூவா வந்திருந்துதுனா நாம எல்லாரும் தானே அதை எஞ்சாய் பண்ணியிருப்போம்? அதுக்கு மட்டும் அம்மா வேணும் , இப்போ மட்டும் மன்னிக்க மாட்டோம்னா எப்டிப்பா?”

    “டேய்! நிகில் அவ பணம் கட்னதால எனக்கு ஏற்பட்ட அவமானத்தையே நான் மறந்துட்டேன்னே வெச்சிக்கோ! ஆனா பணம்? உன் பைக்குக்குன்னு ஆசப்பட்டு சேத்ததுடா! என்னால இப்போ உடனடியாப் பணம் குடுத்து உனக்கொரு பைக் வாங்கித் தர முடியாது! நீ அதை மறந்துடாதே”

    “பைக்! பைக்! அது போனாப் போகட்டும்ப்பா! நம்ம வீடு எப்பவும் போல கலகலப்பா இருந்தாப் போதும் எனக்கு! அம்மா வேலை செய்ய ஆரம்பிச்சதுலருந்து வீடு வீடாவே இல்ல! அப்போ என் மனசுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? இப்போ எல்லாம் சரியானப்புறமும் நீங்க அம்மாவோட பேச மாட்டேன்னு சொன்னா அப்புறம் நம்ம வீடு நரகமாத்தான் ஆகும். இன்னும் ஒரு வருஷத்துல நான் யூ.எஸ் போயிடுவேன். அப்போ ரெண்டு பேரும் மோட்டு வளையைப் பாத்துக்கிட்டு உக்காந்துருப்பீங்களா இல்ல என் கிளாஸ் மேட் சுப்ரியாவோட அம்மா அப்பா மாதிரி டைவர்ஸ் பண்ணிடுவீங்களா?”

    “டேய் நிகில்!”

    “பின்ன என்னப்பா? அம்மா தான் தெரியாம செஞ்சுட்டேன் உங்க கால்ல கூட விழறேன்னு சொல்றாங்க அப்புறமும் நீங்க இப்டிப் பேசினா?”

    சுந்தரத்தின் மனம் இளகியது. “பாவம் கல்யாணி! ஏதோ எங்கள் மேல் இருக்கும் அன்பினால் தான் இதையெல்லாம் செய்திருக்கிறாள். எனக்கு மானக்கேடு வருமென்று தெரிந்திருந்தால் ஒரு நாளும் அந்த வேலையைச் செய்யவே மாட்டாள். நானும் தான் ரொம்பக் கடுமையாப் பேசிட்டேன். என் கிட்ட சொல்லப் பயந்துக்கிட்டு தான் அவ சொல்லல்ல! இத்தனை நாளா அவ மனசு என்ன பாடு பட்டிருக்கும்?” என்று எண்ணமிட்டான்.

    கல்யாணியை அவன் பார்த்த பார்வையில் இப்போது அன்பும் காதலும் இருந்தது. அதைப் புரிந்து கொண்டவள் ஓடோடி வந்து சுந்தரத்தின் அருகில் நின்றாள்.

    “என்னங்க? என்னை மன்னிச்சிடுங்க! எனக்கு இனிமே இந்தக் கம்ப்யூட்டரே வேணாம். போதும் போதும் நான் சம்பாதிச்சது. எல்லாத்தையும் தான் தொலச்சுட்டேனே”

    “அப்டிச் சொல்லாதே கல்யாணி! இதை ஒரு நல்ல எக்ஸ்பீரியன்சா எடுத்துக்கோ! இனிமே உனக்கு இந்த மாதிரி இ-மெயில் வந்தா அதைக் கண்டுக்கவே கண்டுக்காதே. இக்னோர் பண்ணிடு! உன்னோட இந்த எக்ஸ்பீரியன்சை நாலு பேருக்கு எடுத்துச் சொல்லு. அவங்களாவது ஏமாறாம இருப்பாங்க இல்ல? ஆனா சுஜாதாவோட ஆபீஸ்ல செய்யற பார்ட் டைம் வேலையை விடாதே!”

    “சரிங்க”

    “அதுக்குன்னு முன்ன மாதிரி வீட்டை விட வேலை முக்கியம்னு இருக்காதே! நீ ஓய்வா இருக்கற நேரத்துல மட்டும் வேலை செய். அதனால எவ்ளோ குறையப் பணம் வந்தாலும் பரவாயில்ல, பணம் முக்கியம்தான் வாழ்க்கைக்கு. ஆனா அதை விட நிம்மதி முக்கியம் அதை மறந்துடாதே!”

    “சரிங்க! நான் எப்டி பைத்தியமா இருந்திருக்கேன்னு இப்போ நெனச்சுப் பாக்கும்போது தாங்க தெரியுது”

    “அம்மா! அதுக்குன்னு என் ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு வந்தா அவங்க கூட உக்காந்து டேட்டிங், சேட்டிங்ன்னு பேச ஆரம்பிச்சுடாதீங்க! நீங்க நீங்களாவே இருங்க. அப்டி இருந்தாத்தான் நல்லாயிருக்கு”

    அம்மா, அப்பா, மகன் மூவரின் சிரிப்பையும் அந்த வீடு எதிரொலித்தது.

    (தொடரும்) 

    படத்திற்கு நன்றி: http://www.srikaliyammansecurityserviceanddetectivebureau.com/contactus.aspx#

    Share
  • ரோசாப்பூ துரை

     

     

    நாகராசன்

    தாழ்த்தப்பட்டவர்கள் அடக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுத்த அறிஞர், மற்றும் வழக்கறிஞர்

    1970 1980களில் பாமரர் வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய தேசிய இயக்கங்களும் மார்க்சிய ஆங்கில ஆதிக்க வரலாறும் பாமரர் பற்றி அறியத் தடைக்கல்லாக இருந்தது என்ற மாபெரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  ஆனால் தேசிய நீரோட்டத்திலும் பாமரர் பற்றிய உரிமைக்குரல் எழுப்பிய தீவுகளும் உண்டு என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் ரோசாப்பூத் துரை

    பாமரர்களுக்காகக் குரல்கொடுத்த ரோசாப்பூத் துரையே மதச்சார்பு காரணமாகத் தேசியவாதிகளால் ஓரங்கட்டப்பட்டார் என்பது வியப்புக்குரிய உண்மை.  தேசிய அளவில் அண்ணல் காந்தியார் ராஜாஜி மோதிலால் நேரு ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்களுடன் தோளோடு தோளாக நின்ற ரோசாப்பூத் துரை தமிழகத்தில் யாரென்று அதிகம் அறிபப்படாமல் இருந்து மறைந்தார்

    கேரளாவில் பிறந்து சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1903 -ல் பட்டப்படிப்பும், எடின்பர்கில்   எம்.ஏ தத்துவமும் பயின்று 1908-ல் பார் அட் லா வாகப் பதிவு பெற்று 1909-ல் இந்தியா திரும்பினார்.  இங்கிலாந்தில் இந்திய சுதந்திரப் போராளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரோசாப்பூத் துரை சூசன்னா என்ற மங்கையை மணந்த கையுடன் சென்னை வந்து சேர்ந்தார்.
     
    சென்னையில் சில மாதங்களே தங்கியிருந்து சவுத் இன்டியன் மெயில் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர் கோபால மேனன் என்பவரின் அறிவுரைப்படி மதுரைக்குச் சென்று குற்றவியல் வழக்கறிஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார்.  வக்கீல் தொழிலில் கொடி கட்டிப் பறந்த அவர் எண்ணம் ஆங்கில அடக்குமுறைக்கு ஆட்பட்டு அல்லலுறும் கள்ளர்கள் பக்கம் திரும்பியது.  சட்ட ரிதியாகக் குற்றப் பரம்பரை என்று குற்றம் சாட்டப்பட்டு இரவு முழுதும் காவல் நிலையத் தாழ்வாரத்திலும் வெட்ட வெளியிலும் இரவு 11 மணி முதல் விடிகாலை 4 மணி வரை இருக்கவேண்டும் என்ற சட்டத்தை எதிர்க்க முனைந்தார்

    1919-1929 களில் 14000 கள்ளர்கள் தங்கள் கைரேகையைப் பதிவு செய்து வேறு இடங்களுக்குச் செல்லாமல் இரவு காவல் நிலையத்தில் தங்க வேண்டும் என்ற கடுமையான சட்டத்தால் கள்ளர் குடும்பப் பெண்டிர் கடும் மன உளைச்சல்படுவதை எடுத்துக் கூறி ஆங்கில ஏகாதிபத்தியம் ஓரளவுக்குக் கடுமையைக் குறைத்துக்கொள்ள முயன்று வெற்றியும் கண்டார்

    1918-ல் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த ராமனாதனுடன் இணைந்து மதுரைத் தொழிற் சங்கத்தை உருவாக்கினார். மார்ச் 22 ஆம் நாள் ராஜாஜியால் ரோசப்பூத் துரை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.  உடனே அண்ணலின் தளபதியாகச் சூளுரை எடுத்துக்கொண்ட ரோசாப்பூத் துரை அவர்கள் இல்லத்தில்தான் மதுரை வந்த காந்தியார் மார்ச் 26 முதல் 28 1919-ல் (அறிமுகமான நான்கு நாட்களுக்குள்) தங்கியிருந்தார்.  1919-ல் காந்தியார் தமிழகம் வந்ததன் நோக்கம் ரெளலட் சட்டத்துக்கான நாடு தழுவிய போராட்டத்தில் தமிழகம் பங்குபெற ஆதரவு திரட்டவே.  ஏப்ரால் 6 ஆம் நாள் மதுரையில் வேலை நிறுத்தம் முழு வெற்றியடையக் காரணமாக இருந்த ரோசாப்பூத் துரை காந்தியாரின் நம்பிக்கையைப் பெற்று தேசிய நீரோட்டத்திலும் போராட்டத்திலும் முழு ஆர்வத்துடன் பங்குபெற்றார்

    1920 ல் மோதிலால் நேருவின் இன்டிபென்டன்ட் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பின்னர் ராஜாஜியைத் தொடர்ந்து யங் இந்தியாவின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.  ராஜ துவேஷ குற்றத்திற்காக நேரு குடும்பத்தாருடன் சிறை சென்றார்

    மீண்டும் தம்ழகம் வந்த ரோசாப்பூ துரை மார்ச் 24-ல் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார்.  காந்தியார் ரோசாப்பூத் துறை வேறு சமயத்தைச் சார்ந்தவர் இந்து சமயப் பிரச்சினையில் தலை நுழைத்துப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று வற்புறுத்தியும் அதை ஏற்காமல் ஈ.வெ.ரா வுடன் இணந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்.  ஈ வெ ராவுடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஸ்வராஜ்யக் கட்சிக்காரர்களை எதிர்க்கும் கொள்கையை தளர்த்திக் கொள்ளாமலும் தேவைப்பட்டால் தனித்து நின்று போராடும் பாங்கும் அவரை மிகவும் கவர்ந்தது

    ரோசாப்பூத் துரை அண்ணல் அம்பேத்காருடன் தொடர்பில் இருந்தவர் அவருக்கு மிகவும் பிடித்த தமிழ்நாட்டு இளைஞர் காமராசர்.  விருது நகர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட காமராசருக்கு ஆதரவாக வழக்காடி சதி வழக்கிலிருந்து காமராசரை வெளியே கொண்டு வந்தவர் ரோசாப்பூத் துரை

    தனக்குச் சரியென்று பட்டதால் பின்னாளில் காந்தியாரின் ஒத்துழையாமை உப்பு சத்யாக்கிரகம் மதுவிலக்குக் கொள்கையை ஆதரிக்க மறுத்தார் 1938-ல் தன் 50 வயதில் இறந்தார் ரோசாப்பூத் துரை. மதுரையைச் சுற்றியுள்ள கள்ளர்களும் மற்ற தாழ்த்தப்பட்டவர்கள் அவர் மரணச் செய்தி அறிந்து கதறி அழுதனர்.

    அவரின் பிறந்த நாளைக் கள்ளர் சமுதாயம் நினைவில் நிறுத்தி ஆண்டு தோறும்  கொண்டாடியது.  தங்கள் குழந்தைகளுக்குப் பெண் என்றால் ரோசாப்பூ என்றும் ஆணாக இருந்தால் ரோசப்பூத் துரை என்றும் பெயரிட்டு அவர் நினைவைப் போற்றியது.

    ரோசாப்பூ என்ற பெயர் எதனால் வந்தது?

    நேரு போல் தன் உடையில் ரோசாப்பூ அணிந்ததாலா? மதுரைத் தமிழில் ஜோசப் என்பதை ரோசாப்பூ என்று சொன்னார்களா?என்பது இன்றுவரை விளங்கவில்லை

    Share
  • 11000 மாணவர்கள் பங்குபெற்ற சேவாலயா நடத்திய மாநில அலவிலான காந்திய தேர்வு

     

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road,Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    Phone: 0442441009, 9444620289, 9444620286, 044-64611488, 044-26344243.

    E-mail:   Sevalayamurali@gmail.comSevalayapro@gmail.com,   Visit us at: www.Sevalaya.org.

     

     

     

                                                                     செய்திக் குறிப்பு                                                       02.10.2012

     

    11000 மாணவர்கள் பங்குபெற்ற  சேவாலயா நடத்திய மாநில அலவிலான காந்திய தேர்வு

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர்  அருகே உள்ள கசுவா கிராமத்தில்  செயல்பட்டு வரும் சேவாலயா  சேவை மையத்தில் இன்று (02.10.2012) மாநில அளவில் நடைபெற்ற காந்தியத் தேர்வுகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரு. ராஜசேகரன் (நிறுவனர்,   உரத்த சிந்தனை) மற்றும் குழுவினர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

                      விழாவில் அவர் பேசுகையில், காந்திஜி பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன்.  பாரதி, காந்தி, விவேகானந்தர் ஆகிய மூவரின் கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்திலுள்ள சுமார் 100 பள்ளிகளில் இருந்து 11,000 மாணவர்கள் கலந்துகொள்ளும் இத்தேர்வுகளை இலவசமாக நடத்துவதன் மூலம் மாணவர்களிடையே இளம் வயதிலேயே நல்லொழுக்கமும், நற்பண்பும் வளரும் என்பதில் நான் நம்பிக்கைக் கொள்கிறேன்.  காந்திஜி பற்றி இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.  சரித்திரத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கையை நோக்குகையில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி மட்டுமே சாதனையாக இருக்கும்.  ஆனால் மகாத்மாவின் வாழ்க்கை முழுவதுமே சரித்திரமாக உள்ளதில் நாம் பெருமைக் கொள்ளலாம்.

     Puthia Thalaimurai Tamizhan ‘Promising star award’ to Sevalaya Muralidharan.VOB

     

    Share