Blog

  • கண்ணன் வாழி!வாழி!

    சத்தியமணி

     

    குழலூதக் கலைகற்று கொடுப்பான் – கோதை
    குழலாடும் பின்னேகி ஊதிக் கெடுப்பான்
    பழகாத வித்தையோ காதல் – மாயன்
    அழகாக விளையாடி போதைக் குடிப்பான்
    தேமொழி தமிழ்பாடக் கேட்பான் – பாவைத்
    தேனாழி அலையாட நீச்சல் அடிப்பான்
    தூரிகை வண்ணம் எடுப்பான் – அதைப்
    பேரிகை முழங்க‌ ஓவியம் களிப்பான்
    வெல்லமை யீட்டிடும் வித்தன் – எடுத்து
    சொல்லமைத் தாடிடும் சித்தன்
    வல்லமைத் தருகின்ற வரதன் – விசயன்
    வில்லமைக் கும் கண்ணன் வாழி!வாழி!

    (குறிப்பு- தேமொழியின் வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 வர்ணிக்கும் கண்ணனின் பாட்டு)

    Share
  • நாதனைக் கண்டேனடி!

     

    மேகலா இராமமூர்த்தி

     

    இடது பதம்தூக்கி ஆடியே என்னுளத்தில்

    இன்பகீதம் இசைத்தா னடி!

    விடமுண்ட கண்டனாம் விண்ணுலக வேந்தனாம்

    விந்தையென்ன சொல்வே னடி!

     

    நடராசன் என்றபெயர் கேட்டிட்ட நாள்முதலாய்

    நங்கைஎன்பேர் மறந்தே னடி!

    கடலளவு ஆசைதான் அவன்மீது பெருகுதே

    கன்னியென்னைக் காண்பா னோடி!

     

    உண்ணவும் மறந்தேனே உன்மத்தம் கொண்டேனே

    உறக்கத்தைத் தொலைத்திட் டேனே

    கண்காட்டும் பொருளெல்லாம் பரம்பொருளாய்த் தோன்றுதே

    கண்கட்டு வித்தை என்பதோ?

     

    தில்லையிலே கோயில்கொண்டு திருநடம் புரிபவன்என்

    உள்ளமதில் உறைந்தா னடி!

    வல்லிஎந்தன் நெஞ்சிலே நேற்றுவந்த கனவினில்என்

    நாதனைக் கண்டே னடி!

     

    புலியாடை தரித்தவனோ புன்னகைதான் சிந்திட்டான்

    பேரின்பம் கொண்டே னடி!

    சிலசொற்கள் அவனும்தான் செந்தமிழில் செப்பிட்டான்

    செவியினிலே தேன்பாய்ந் ததே!

     

    எத்தனை பிறவிகள்நான் எடுத்தாலும் பிறையணிந்த

    மன்னனை மறவே னடி!

    நித்தமும் ஐந்தெழுத்தை ஓதியே மகிழ்ந்திடுவேன்

    சித்தம்களி கொள்ளு மடி!

    Share
  • பெண் எனும் சக்தி!

    பவள சங்கரி

    தலையங்கம்

    சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தோழிகளே! பெண் என்றாலே முதலில் தோன்றுவது, இறைவன் பெண்களுக்கென்றே தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ள தாய்மை வரம். இதனை அவரவர்கள் தத்தம் சூழலுக்கேற்ப, வயதிற்கேற்ப, மன  ஓட்டத்திற்கேற்ப, ஒரு பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ, தோழியாகவோ, காதலியாகவோ, பணிப்பெண்ணாகவோ, மனைவியாகவோ ஏதோ ஒரு கோணத்தில் நேசிக்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் அவள் தம் வாழ்நாளில் கடந்து கொண்டுதானிருந்தாலும், தாய்மை என்ற அந்த உணர்வு மட்டும் ஒரு பெண்ணின் அனைத்துச் செயல்களின் அடிநாதமாக ஒரு மெல்லிய இழையாக ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதன் வழி நடப்போரின் வாழ்க்கை அமைதியாகச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த இயற்கை குணத்தை மீறும்போது அதற்கான சில எதிர் விளைவுகளைச் சந்திக்கவும் நேருகிறது. நேற்று ஈரோட்டின் அருகில் ஒரு பெண் பிறந்த தன் ஆண் குழந்தையை துணியில் சுற்றி தெருவில் எறிந்து விட்டுச் சென்றிருக்கிறாள். அங்கு அருகில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பார்த்துவிட்டு, எறும்பு கடித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள்.   குழந்தைக்கு இப்போது மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படியும் ஒரு தாய்.  நினைக்கவே மனம் பதறுகிறது.

    தாய்மை என்றால் தாலாட்டு என்பதுதான் நினைவிற்கு வரும். குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகி மெல்ல மெல்ல உயிரோட்டம் பெறும்போதே அன்னையின் உணர்வுகளை பிரதிபலிக்க ஆரம்பித்துவிடுகிறது. அந்த வகையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் அந்தத் தாய்க்கான பொறுப்பு ஆரம்பிக்கும் தருணமாகிவிடுகிறது. தொப்புள் கொடி உறவு பிரிந்து, தனி மனிதனாக அக்குழந்தை உருவாகும் நேரமும் சிலகாலங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் முழுமையாக இருக்கையில் நல்ல உணர்வுகளை விதைக்கக்கூடிய வாய்ப்பாக அமைகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் போன்றே, இந்தப்பருவத்தில் நல்ல உணர்வுகளை குழந்தைக்கு ஊட்டி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது. இப்பருவத்தில் மனதில் பதியும் நல்ல எண்ணங்கள், வாழ்நாள் முழுவதும் உடன் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அந்த வகையில் முழுமையாக பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கக்கூடிய அந்தப் பருவம் அக்குழந்தையின் எதிர்காலத்தை பெரும்பாலும் நிர்ணயிக்க வல்லது என்பதும் கண்கூடு. இந்தப் பொறுப்பை பெற்றோர் உணர்ந்து நடந்து கொண்டாலே குழந்தை ஆணோ அல்லது பெண்ணோ அதனை சரியான பாதையில் வழி நடத்த முடியும்.

    பெண் குழந்தையாய் பிறந்து விட்டதே என்று வெதும்பிய காலம் மாறிவிட்டது இன்று. பெண்ணிற்கு வரதட்சணை கொடுத்த காலம் போய் இன்று வரதட்சணை வாங்கும் காலம் வந்திருக்கிறது. பெண்களின் பல்துறை சாதனைகள் அதற்கு அச்சாரம் போட்டுள்ளது. மாபெரும் சக்தியாக இன்று மகளிர் சக்தி உருவாகிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க இயலாது. அந்தச் சக்தி்யை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகவும் உள்ளது. பருவத்தில் நல்ல விதைகளைப் பயிர் செய்யப் பழக வேண்டும். பழம்பெரும் நாடான நம் பாரத நாடு, கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீக நெறி, என அனைத்திலும் மிகச் சிறந்து விளங்கி இன்று உலகளவில் அனைத்து நாட்டவரையும் தலை நிமிர்ந்து பார்க்கச் செய்துள்ளது.

    இந்த நவீன யுகத்தில் பெண்களுக்கான பல வாயில்கள் திறக்கப்பட்டுள்ளனவாயினும், எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாத அன்றைய காலகட்டங்களிலும் சாதித்த பெண்மணிகளையும் அவர்தம் ஆர்வமும், ஈடுபாடும், கடின உழைப்பும் கண்டு உள்ளம் பூரிக்கத்தான் செய்கிறது.  நம் வருங்காலச் சந்ததியினர், இளம் பிராயத்தினர் இதனை உணர வேண்டும். இன்றைய மகளிர் வந்துள்ள இந்த உன்னத நிலைக்கு அன்றைய மங்கையர் எத்துனை போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். பல்வகையில் ஆண்களுடன் இணைந்து தோள் கொடுத்து அவர்தம் சாதனைகளுக்குத் துணை நின்றோர் பலர். இன்று மகளிர்தம் உரிமையை நிலைநாட்ட எத்துனையோ சட்டங்களும், திட்டங்களும் இருந்தாலும், அதற்கான விழிப்புணர்வும் வேண்டும். சமூக ஆர்வலர்கள் இதற்கான பெரு முயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும். அந்த வகையில் இன்றைய நம் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களும் பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதும் வரவேற்கத்தக்கது. அவைகள் அனைத்தும் நல்ல வகையில் மக்களைச் சென்று அடைய வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..

    பெண் குழந்தைகளுக்கு கல்வி தேவையில்லை என்ற பெரும்பாவச் செயலை செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தானில் ஒரு மலாலா தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடி பல ஆயிரம் மலாலாக்களை உருவாக்கிவிட்டாள். அவருக்கும் நம் வீர வணக்கத்தை இன்று தெரிவிப்போம்.

    இன்று மகளிர் இல்லாத துறைகளே இல்லை எனலாம். ஆணுக்கு நிகராக ஆட்டோ முதல் விமானம் வரை  ஓட்டுவதிலிருந்து, அணு விஞ்ஞானியாகவும் மின்னிக் கொண்டிருக்கிறார்கள் என்று பெருமை கொள்ளும் அதே வேளையில் பெண்கள் சுய கட்டுப்பாடும், நம் பாரதக் கலாச்சாரமும், பண்பாடும் காக்கும் தீவிர எண்ணமும் கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பதே இன்று சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    Share
  • வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !

     

    சக்தி சக்திதாசன்

     

    சிந்தனை செய்யுங்கள் தோழர்களே


    சித்தத்தில் உண்மையைக் காணுங்கள்
    மாதர் தம் பெருமைகளை உணர்ந்து
    மகளிர்க்கோர் தினத்தைக் கொடுத்து

    அன்னையாய் ஒரு வடிவம் கொண்டு
    அன்பை எமக்கு பாலோடு ஊட்டியவள்
    சகோதரியராய் உடன்பிறந்து அணைத்து
    சாத்திரங்கள் பலவும் ஓதியவள்

    காதலியாய் கண்களிலே புகுந்து எமைக்
    கைப்பிடித்து மனையாளாய் மகிழ்விப்பாள்
    எத்தனை வடிவங்கள் எடுத்திடும் மாதர்களை
    ஏற்றி நாமும் போற்றுவதற்கு ஒருநாள்

    அன்றொருநாள் எம் பாட்டன் பாரதியும்
    அநீதி கண்டு ஆர்ப்பரித்து எழுந்திட்டான்
    கொழுந்து விட்டெறியும் கவிதைகளால்
    கொளுத்தினான் பெண்ணடிமைக் கருத்துக்களை

    இன்றொரு புது யுகமாய் பிறந்திட்டு
    இகத்தினிலே மகளிர் பலர் உயர்ந்திட்டார்
    இருப்பினும் இன்னும் சில மனங்களில்
    இருள் சூழ்ந்த எண்ணங்கள் உறையுது

    ஆணுக்குப் பெண் என்றும் சளைத்தவளல்ல
    அவனியிலே நாமெல்லாம் சமனென்றே
    அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுத்து
    அர்ப்பணிப்போம் இந்நாளை மகளிருக்காய்

    புதுமைப் பெண்களாய் மிளிர்ந்திடும் தோழியரே
    புதுமைகள் படைத்து நீரும் சிறந்திடவே
    பூரிப்புடன் வாழ்த்துகிறேன் உமையெல்லாம்
    புரட்சி மலர்களாய் பூமியிலே பூத்திடுவீர்

    இந்நாளில் என்னெஞ்சக் கருத்தொன்றை
    இயல்பாக உம்முடனே பகிர்ந்திடுவேன்
    பாரதி கண்ட புதுமைப் பெண்கள் உலகில்
    பண்போடு உயர்ந்திட்ட புரட்சிக் கண்கள்

    புரியாத சிலபேர்கள் வாழும் வகை
    புண்ணாகும் நெஞ்சம் அதைக் கண்டு கண்டு
    அரைகுறை ஆடையல்ல அடையாளம்
    அதுவல்ல புது உலக நாகரீகம்

    நிலையான உள்ளம் கொண்டு உலகில்
    நீவீர் சமதளத்தில் ஆண்களோடு பணிபுரிந்து
    மடந்தையர் என்பது அழகேயன்றி வெறும்
    மடமையல்ல என்பதனை உணர்த்திடுவீர்

    சர்வதேச மகளிர் தினத்திலின்று நானும்
    சந்தோஷம் பொங்க நண்பனாக அண்ணனாக
    தம்பியாக , தோழியரை, சகோதரியரை
    தங்கமான வாழ்த்துகள் பொழிந்து வாழ்த்துகிறேன்

    வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    படத்திற்கு நன்றி:

    http://www.lankasripoems.com/?conp=poem&pidp=208788

    Share
  • பாவையர் முன்னேற்றத்தில் பாவேந்தரின் பங்கு!

    மேகலா இராமமூர்த்தி

    சங்க காலத்தில் மதிப்பும், மரியாதையும், கல்வியறிவும் நிரம்பப் பெற்றவர்களாய்ப் பெண்கள் விளங்கினர் என்பது சங்கப் புலவர்களாய் அவ்வையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார், காமக்கண்ணியார் போன்ற பல பெண்பாற் புலவர்கள் இருந்ததன் வாயிலாய்த் தெள்ளிதின் புலப்படுகின்றது. ஆனால், இடைக் காலத்தில் பரவிய வைதீக நெறியானது பெண்களின் மதிப்பைக் குறைத்ததோடல்லாமல், அவர்தம் உரிமைகளையும் பறித்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாய் ஆக்கிவிட்டது என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து.

    இப்படிச் சிறிது சிறிதாய்ப் பெண்கள் தங்கள் உரிமைகளை இழந்து ஆடவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்; ஏன்…சிறைப்படுத்தப்பட்டனர் என்று சொல்வதில் கூடத் தவறில்லை. அடுப்பூதுவதும், அடுக்களை துடைப்பதும், பிள்ளைகளைப் பெறுவதுமே அவர்களின் தலையாயக் கடமைகள் என்றாயின.

    பெண்களுக்கும் உரிமைகள் வேண்டும்; அவர்களும் சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராய் மதிக்கப்பட வேண்டும் என்பன போன்ற சமதர்மச் சிந்தனைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுப்பெறத் தொடங்கின. பெண்களுக்கெதிரான ‘தேவதாசி’ முறைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழித்த பெருமை மருத்துவப் பணிசெய்த ’முத்துலட்சுமி ரெட்டியார்’ என்னும் அம்மையாரையே சாரும். பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியாரோடு இணைந்து மூவலூர் இராமாமிர்தத்தம்மையார்’ என்ற பெண்மணி பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், உரிமைக்காகவும் மிகவும் போராடினார்.

    களப்பணியாற்றிப் பெண்ணுரிமைக்கு உழைத்தோர் சிலர்; கவிப்பணியாற்றி பெண்டிர்தம் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டோர் வேறுசிலர். அவர்களில் குறிப்பிடத்தக்க இருவர், இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற கவிஞர்களான மகாகவி பாரதியும், அவர்தம் சீடரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் ஆவர். தீப்பொறி பறக்கும் தங்கள் கவிதைகள் வாயிலாகப் பெண்ணுரிமைக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுத்தனர் இவ்விருவரும். அதிலும் பாரதிக்குப் பின்னும் நெடுநாள் வாழக்கூடிய பேறுபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்டிர்தம் நல்வாழ்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைப் பெண்களின் மறுவாழ்வு, மணமுறிவு பெற்றவர்களின் மறுவாழ்வு என்று பல தளங்களில் தன் விரிந்த சிந்தனையைச் செலுத்தி இவையனைத்திற்கும் தம் புரட்சிப்பாக்கள் வாயிலாகத் தீர்வு கண்டுள்ளார். அகண்ட, விசாலப் பார்வையும், சமூகச் சீர்திருத்த எண்ணங்களும் இயல்பிலேயே அமையப்பெற்ற பாவேந்தர், சமுதாயத்தின் கண்களாய் விளங்கிடும் பெண்களின் அவலநிலை துடைத்திட ஆற்றிய கவிதைப் பங்களிப்பை இக்கட்டுரை வழியாகச் சற்று ஆய்வோம்.

    இந்தியத் திருநாட்டில் மண்ணடிமை ஒழிய வேண்டுமானால் முதலில் நம் வீடுகளில் பெண்ணடிமை ஒழியவேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பாரதிதாசன், அதனை ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற தன் காவியத்தில் அக்காவிய நாயகியின் வாய்மொழிகளாய் அமைத்துள்ள பாங்கு நம் நெஞ்சைக் கவர்கின்றது.

    பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு

    மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

    ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்

    ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு”

    என்று ஆண்குலத்திற்கு ஓர் பெண் மூலமாக எச்சரிக்கை விடுக்கின்றார் புரட்சிக் கவிஞர்.

    பெண்கல்வியின் அவசியத்தை மிகவும் வலியுறுத்திச் சொல்கின்ற கவிவேந்தர், ஒரு பெண் பெறுகின்ற கல்வியே அவள் சார்ந்த குடும்பத்தையும், அந்தச் சமுதாயத்தையும் மேம்படுத்தும், முன்னேற்றும் என்பதில் ஆழமான, அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவராய்த் திகழ்கின்றார்.

    ”பெண்கட்குக் கல்வி வேண்டும்

    குடித்தனம் பேணு தற்கே! 
    பெண்கட்குக் கல்வி வேண்டும்

    மக்களைப் பேணுதற்கே! 
    பெண்கட்குக் கல்வி வேண்டும்

    உலகினைப் பேணுதற்கே! 
    பெண்கட்குக் கல்வி வேண்டும்

    கல்வியைப் பேணுதற்கே! 
     
    கல்வியில் லாத பெண்கள்

    களர்நிலம்; அந் நிலத்தில் 
    புல்விளைந் திடலாம்; நல்ல

    புதல்வர்கள் விளைதல் இல்லை! 
    கல்வியை உடைய பெண்கள்

    திருந்திய கழனி; அங்கே 
    நல்லறி வுடைய மக்கள்

         விளைவது நவில வோநான்?” 

    என்று பெண்கல்வியின் அவசியத்தைத் தன் ’குடும்ப விளக்கு’ என்ற நூலில் தெளிவாக விளக்குகின்றார்.

    புரட்சிச் சிந்தனைகளையும், முற்போக்குக் கொள்கைகளையும் பாவேந்தரின் பாடல்கள்தோறும் காணமுடிவது ஓர் சிறப்பாகும். அதற்குப் ’பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரோடு பாவேந்தர் கொண்டிருந்த நட்பும் ஓர் முக்கியக் காரணம் என்று கூறலாம்.

    பெண்கள் தங்கள் மணாளனைத் தாங்களே முடிவு செய்தல் வேண்டும் என்றும் பெற்றோரின், மற்றோரின் கட்டாயத்திற்காக மணத்தல் தவறு எனவும் அறிவுரை கூறுகின்றார் இந்தப் புதுவைக் கவிஞர். இக்கருத்து எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதே. இதோ அவ்வரிகள்……….

    ’கல்யாணம் ஆகாத பெண்ணே! – உன்

    கதிதன்னை நீநிச்ச யம்செய்க கண்ணே!

    வல்லமை பேசியுன் வீட்டில் – பெண்

    வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;

    நல்ல விலை பேசுவார் – உன்னை

    நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்,

    கல்லென உன்னை மதிப்பார் – கண்ணில்

    கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்;

    வல்லி உனக்கொரு நீதி – இந்த

    வஞ்சத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்

    …………………………………………………………………………………………………………..

    கற்றவளே ஒன்று சொல்வேன் – உன்

    கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!’

    பெண்ணை விலைபேசும் இத்தகைய வழக்கம் ’வரதட்சணை’ என்னும் பெயரில் இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.

    கைம்பெண்களின் (கணவனையிழந்தோர்) நல்வாழ்விற்கும் அதிகம் குரல்கொடுத்தவர் புரட்சிக் கவிஞரே என உறுதியாகக் கூறலாம். சான்றுகள் சில….

    ”கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு

    வேரிற் பழுத்த பலா – மிகக்

    கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்

    வடிக்கின்ற வட்ட நிலா!”

    என்று கைம்பெண்களை இச்சமூகம் ஒதுக்கிவைத்தும், அழவைத்தும் வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டு உள்ளம் வெதும்பிப் பாடுகின்றார்.

    இக்கைம்மைக் கொடுமைக்கு ஓர் முடிவு கட்டவேண்டும், முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்னும் ஆவேசம் கொண்டவராய்,

    ”ஆடவரின் காதலுக்கும், பெண்கள் கூட்டம்

    அடைகின்ற காதலுக்கும், மாற்ற முண்டோ?

    பேடகன்ற அன்றிலைப்போல், மனைவி செத்தால்

    பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்!

    வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்

    மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ? என்று சீறுகின்றார்.

    காதல் என்ற உணர்வு ஆண், பெண் இருவருக்குமே பொதுவான ஒன்றுதானே….அதிலென்ன பேதம்? ஆண்மகன் வயதுசென்ற கிழவனாக இருந்தாலும் தன் மனைவி செத்தால் மறுநாளே புதுமாப்பிள்ளை ஆகிவிடுகின்றான். அஃது சரியே என்று ஒத்துக் கொள்ளும் இச்சமூகம் ’வாடாத பூப்போன்ற ஓர் மங்கை நல்லாள்’ கைம்மை அடைந்துவிட்டால் அவளின் நல்வாழ்வு குறித்தோ, எதிர்காலப் பாதுகாப்பு குறித்தோ சற்றும் சிந்திக்காமல் அவள் மறுமணம் புரிவது தவறு என்றும் தீது என்றும் சொல்வது எவ்விதத்தில் நியாயம்? என்று வினவுகின்றார். அதனை விளக்குவதற்கு அவர் எடுத்தாண்டுள்ள உவமைகள் சிறப்பானவை; சிந்தனையைத் தூண்டுபவை.

    ”பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்

    பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”

    என்று பெண்ணிற்குத் தீங்கிழைக்கும் இச்சமூகத்தை நோக்கிக் காட்டமாக வினா எழுப்புகின்றார். இவ்வாறெல்லாம் பாவேந்தர் ஒருவரால் மட்டுமே சிந்திக்க முடியும் எனத் தோன்றுகின்றது.

    அடுத்து, ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானமாக நடத்தப்படும் நாள் தமிழ்நாட்டில் என்று வருமோ? என்ற தன் ஏக்கத்தை அழகாய்ப் பதிவுசெய்துள்ளார் பாரதிதாசன். இதோ அப்பாடல்….

    ”கண்களும் ஒளியும் போலக்

    கவின்மலர் வாசம் போலப்

    பெண்களும் ஆண்கள் தாமும்

    பெருந்தமிழ் நாடு தன்னில்

    தண்கடல் நிகர்த்த அன்பால்

    சமானத்தர் ஆனார் என்ற

    பண்வந்து காதிற் பாயப்

    பருகுநாள் எந்த நாளோ ?” 

     

     

    அதுமட்டுமன்று, திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஒன்றாய் இணைந்து வாழ்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது, தகுந்த காரணங்களின் அடிப்படையில் அந்த ஆணோ அல்லது பெண்ணோ விலகி வாழ விரும்பினால் அஃது அனுமதிக்கப்படவேண்டும்; மேலும் (மணமுறிவு பெற்ற) அவர்கள் வேறு ஆடவனையோ, பெண்ணையோ மணந்து கொள்வதிலும் தவறில்லை என்ற கருத்துடைய பாவேந்தர், புரட்சிக் கவிஞராக மட்டுமின்றிப் புரட்சிச் சிந்தனையாளராகவும் நம் கண்முன் தோன்றுகின்றார்.

    ”—————————––காதல் 
    உடையார்தம் வாழ்வில்

    உளம்வேறு பட்டால் 
    மடவார் பிறனை

    மணக்க-விடவேண்டும் 
    ஆடவனும் வேறோர்

    அணங்கை மணக்கலாம்.” என்பது பாவேந்தரின் சித்தாந்தம்.

    பெண்ணுரிமைக்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து குரல் எழுப்பிய பாவேந்தர் பெண் கல்வியறிவு படைத்தவளாக, தன் குடும்பத்தினைச் சீரோடும், சிறப்போடும் நிர்வகிக்கும் திறன் பெற்றவளாக இருக்கவேண்டும் என்பதனைத் தன் பாடல்களில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றார். அத்தகைய திறனற்றவளாகப் பெண் இருந்துவிட்டால் அவளைத் தலைவியாகக் கொண்ட குடும்பம் எவ்வாறு சீரழியும் என்பதனைத் தன் ‘இருண்ட வீடு’ என்ற காவியத்தின் வாயிலாக நகைச்சுவை ததும்பச் சொல்லியிருப்பார். படித்து மகிழவேண்டிய ஓர் இனிய காவியம் அது.

    இவற்றோடு நில்லாமல், குழந்தைகள் திருமணத்தைத் தடை செய்யவேண்டும், குழந்தைகளை அளவோடு பெற்று வளமோடு வாழக் கருத்தடை முறையினைப் பின்பற்றவேண்டும் என்பன போன்ற சமூக நலத்திற்கானச் சீரிய கோட்பாடுகள் பலவற்றையும் தன் கவிதைகள் மூலம் பதிவுசெய்துள்ளார்.

    ”பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!

    பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!

    என்று வீரமுழக்கம் எழுப்பிய தன் கவியாசான் மகாகவி பாரதி போட்ட பாதையிலே தன் கவிதைத் தேரை அழகாகவும், அற்புதமாகவும் செலுத்திப் பெண்டிர்தம் வாழ்வில் ஒளியேற்ற உழைத்த பாரதிதாசனைத் தமிழகப் பெண்கள் என்றும் மறவாது போற்ற வேண்டும்.

    இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் துன்புறுத்தல்களும், அவர்தம் உடலுக்கும், உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் அசம்பாவிதச் செயல்களும் தொடர்ந்துகொண்டிருப்பது வேதனை தருவதாகவே உள்ளது. எனினும், சென்ற நூற்றாண்டின் தொடக்கம் வரையில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்த பெண்ணினம் தலைநிமிர்ந்து நடக்கவும், பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும், ஆணுக்கு நிகராகவும், அவர்களினும் மேம்பட்டும் பல சாதனைகள் படைக்கவும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த முன்னோடிகள் வரிசையில் பாவேந்தர் பாரதிதாசனுக்கும் ஓர் முக்கிய இடமுண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    Share
  • மரபுவழி அறிதலில் தாய்க்குலத்தின் பங்கு

    தேமொழி

    உலக வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு; அவர்கள் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கு ஆற்றும் பணிகள் சரியான முறையில் மதிக்கப்படுவதில்லை என்றும், அவர்களது திறமைகள் அங்கீகரிக்கப் படுவதில்லை என்ற குறைபாடும் காலம் காலமாகப் பெண்களாலும், அவர்கள் நலம் விரும்பும் ஆண்கள் சிலராலும் எடுத்துரைக்கப்படுகிறது. எனினும் பெண்களின் பங்களிப்பு எந்த அளவு இன்றியமையாததாக இருக்கிறது என்பதினை மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்கள் உண்டு. புவியில் தோன்றி, அதனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பதன் காரணமாக மற்ற உயிரினங்களை விட மேம்பாடு அடைந்த வாழ்வினை வாழ்வது மனித இனம். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கை முறையை மாற்றி வாழும் பிற உயிரினங்கள் போல அல்லாது, சூழ்நிலையை ஒரளவுக்கு தங்கள் வாழ்விற்கு ஏற்றவாறு மாற்றும் திறன் கொண்டது மனித இனம்.

    இந்த மனித இனம் தங்கள் வரலாற்றை, பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராய விரும்பும் பொழுதோ பெரிதும் உதவுவது பெண்கள்தான். பெண்களின் மரபணுவின் அடிப்படையிலான பரம்பரை ஆராய்ச்சியே மனித குலத்தின் ஆரம்பக் கால வாழ்க்கையையும், உலகம் முழுவதும் அவர்கள் பரவிய வரலாற்றையும் அறிய விரும்பும் பொழுது உபயோகப் படுத்தப் படுகிறது. ஆண்களின் மரபணு வழி ஆராய்ச்சியைவிட, ‘ஆணித்தரமான அறுதியிட்டுக் கூற உதவுவது’ பெண்களின் மரபணு வழி ஆராய்ச்சி முடிவுகளே. இதற்கு உதவுவது பெண்களின் உடல் செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ (mtDNA) ஆகும். மைட்டோகாண்ட்ரியாவினை ஆண் பெண் இருபாலரும் கொண்டிருகிறார்கள். இருந்தாலும் ஏன் பெண்களின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ மட்டுமே பரம்பரை வழி ஆராய்சிகளில் அதிகம் பயன் படுத்தப் படுகிறது என்பதனையும், செல்லில் உள்ள நியூகிலியஸின் டி.என்.ஏ வைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ எந்த அடிப்படையில் பரம்பரை வழி ஆராய்ச்சிக்கு உதவுகிறது என்பதையும் விளக்க முற்படுகிறது இக்கட்டுரை.
    [மைட்டோகாண்ட்ரியா (mitochondria) தமிழில் “இழைமணி” அல்லது “இழைத்தணுக்கு” என குறிப்பிடப்பட்டாலும், பரவலாக மைட்டோகாண்ட்ரியா என்றே அறியப்பட்டுள்ளதால் இக்கட்டுரையில் மைட்டோகாண்ட்ரியா என்றே குறிப்பிடப்படுகிறது. அவ்வாறே தமிழில் ‘ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்’ என வழங்கப்படும் (Deoxyribonucleic acid – DNA) டி.என்.ஏ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காரணத்தின் அடிப்படையில் மற்றும் சில அறிவியல் பதங்களும் தமிழ்ப் பதங்களாகக்  கொடுக்கப்படுவது தவிர்க்கப் பட்டுள்ளது, எனவே வாசகர்கள் மன்னிக்கவும்.]

    மனித குல வரலாறு:
    பரிணாம வளர்ச்சி (evolution) ஆராய்ச்சிகளும், படிம (fossil) ஆராய்ச்சிகளும் உலகின் முதல் நாகரீக வளர்ச்சி அடைந்த ‘ஹோமோ சாப்பியன்ஸ்’ (Homo sapiens) என்னும் மனித இனம் தோன்றியது ஆஃப்ரிக்காவின் ‘எதியோப்பியா’ (Ethiopia) பகுதியில் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பு எனத் தெரிவிக்கிறது. பிறகு, அங்கேயே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மனித இனம், சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி உலகம் முழுவதும் பரவ எத்தனித்தது. இந்த வெளியேற்றத்திற்குக் காரணம் சுற்றுப் புறச் சூழலில் ஏற்பட்ட வாழ முடியாத சில மாறுதல்களாக இருக்கலாம் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். அக்காலத்தில் மக்கட் தொகை 10,000 ஆகவும் குறைத்திருக்கலாம் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது. உலகில் ஏற்பட்டக் கடுங் குளிர் காலமும், உறைபனி காலமும் (ice age) மனித குலத்தின் இந்தப் பரவலுக்குக் காரணமாகக் கருதப்பட்டு, இந்தப் பரவல் ‘ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியற்றம்’ (‘Out-of-Africa’ theory) என்ற கோட்பாடாக விளக்கப் படுகிறது. இது நிகழ்ந்தது ‘ப்ளிஸ்டோஸின்’ காலத்தின் இறுதியில் (Late Pleistocene Era). இந்த மனிதகுலப் பரவலை மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. (mtDNA)வின் உதவியுடன், மனிதர்களின் தாய்வழிப் பாரம்பரியத்தை (Maternal Ancestry) ஆராய்வதன் வழியாக அறியப்பட்டுள்ளது.

    மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. (mtDNA) என்பது என்ன?
    செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவின் பங்கு, வளர்சிதை மாற்றத்தில் (metabolism) உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுப்பதாகும். ஆண், பெண் இருவர் உடலில் உள்ள செல்களிலும் மரபுவழிக் கட்டளைகளைக் கொண்ட மரபணு மூலக்கூறு டி.என்.ஏ. உள்ளது. பெரும்பான்மையான டி.என்.ஏ. செல்லில் உள்ள ‘நியூகிலியஸ்’ (nucleus) இல் இருந்தாலும், செல்லின் உட்காருவான நியூகிலியசைச் சூழ்ந்துள்ள சைட்டோபிளாசத்தில் (cytoplasm) உள்ள நுண்மமான மைட்டோகாண்ட்ரியாவிலும் அவை உள்ளது. இது ‘மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.’ (mtDNA) என அழைக்கப் படுகிறது.

    ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரியாவிலும் பல மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. நகல்கள் உள்ளன. அத்துடன், ஒவ்வொரு செல்லிலும் பல மைட்டோகாண்ட்ரியாக்கள் உள்ளன. எனவே செல்லின் நியூகிலியஸில் உள்ள ஒரே ஒரு இழையான டி.என்.ஏ. அளவைவிட, மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் அளவு செல்லில்அதிகம். அளவில் அதிகமாக இருப்பதாலும், அத்துடன் அது நியூகிலியஸின் டி.என்.ஏ. போல எளிதில் சேதமடையாப் பண்பினைப் பெற்றிருப்பதாலும் பெரும்பான்மையான அகழ்வாராய்ச்சிகள் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

    ஆண், பெண் இருவர் உடலிலும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது அவர்களது தாயிடம் இருந்து பெறப்பட்டது. அத்தாய்க்கு கிடைத்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. அவளது தாயிடம் இருந்து வந்தது. இவ்வாறு தாய் வழியாகாவேப் பெறப்படுவதன் காரணம் இனப்பெருக்க நிகழ்வு அமைந்துள்ள முறையினால் ஆகும்.

    இனப்பெருக்கத்தின் பொழுது, ஆண்விந்துவும் (sperm), பெண் முட்டையும் (egg), இணைந்து கருமுட்டை (zygote) உருவாகிறது. தலைப்பிரட்டை (tadpole) வடிவில் உள்ள ஆண் விந்து முட்டையை நோக்கி நீந்துவதற்கு அதன் வால் உதவுகிறது. விந்துவின் இந்த வால் பகுதி, நீந்த சக்தியைக் கொடுக்கும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது. முட்டையை அடைந்து விந்துவின் நியூகிலியசைக் கொண்ட தலைப்பாகம் உள் நுழைகிறது. காரியம் முடிந்தவுடன் தேவையட்ற விந்துவின் வால் பகுதி கழற்றி விடப் படுகிறது. அத்துடன் வால் பகுதியில் இருந்த (தந்தை வழியாகப் பெறப் பட வேண்டிய) மைட்டோகாண்ட்ரியாவும், அதிலுள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வும் கரு முட்டையில் இடம் பெறாமல் போய் விடுகிறது. இதனால் ஆணின் சைடோப்லாஸத்தில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாவின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது சந்ததியின் செல்களில் இடம் பெறுவதில்லை. சந்ததிகளில் செல்களில் தாயின் வழி வந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மட்டுமே இருக்கும்.



    நியூகிலியஸின் டி.என்.ஏ. போல அல்லாது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. தாய்வழி மரபு மட்டும் என மாறுபட்டிருப்பதன் காரணம் இதுதான். மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. தாயிடம் இருந்து சந்ததிகளுக்குச் செல்கிறது, ஆண் பெறுவது தாயின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ., ஆனால் இதனை ஆணால் தனது சந்ததிகளுக்குத் தர இயலாது. மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. பெண்களின் வழியாகவே ஒவ்வொரு சந்ததியையும் சென்றடைகிறது.

    தாய்வழிப் பாரம்பரியத்தை அறிதலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.” வின் பங்கு:
    பொதுவாக இனப்பெருக்கத்தின் பொழுது தாயின் பாதி மரபணுக்களும், தந்தையின் பாதி மரபணுக்களும் ஒன்றாகக் கலப்படையும். ‘ஜான் கிரிகர் மெண்டல்’ (Johann Gregor Mendel) இதனை விளக்கியதால் இந்தக் கலப்பு முறை ‘மெண்டலியன் கலப்பு’ என விளக்கப் படுகிறது. ஆனால் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. இது போன்ற எந்த ஒரு மாற்றமும் இன்றி பரம்பரைப் பரம்பரையாக அப்படியே தாயிடமிருந்து சந்ததிகளின் வழி தொடரும். அதனால் நம் உடலில் இருக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வானது, நம் கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டிக்கும், கொள்ளுப்பாட்டியான பெண்ணிடமிருந்த மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் நகலே ஆகும். இவ்வாறு பல 100 அல்லது பல 1000 தலைமுறைகளுக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. மாறாமலே இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நமது மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வை நாம் அறிந்து கொண்டால், அது பல ஆயிரம் தலைமுறைகளுக்கு முன்பிருந்த நமது பாட்டி ஒருவரின் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வினை அறிந்து கொள்வதற்கு ஒப்பாகும். இவ்வாறு மரபு வழியை அறிந்துணர்வது ‘மனித மைட்டோகாண்ட்ரிய மரபியல்’ (human mitochondrial genetics) என மரபியல் துறையில் வகைப் படுத்தப் படுகிறது.

    காலப்போக்கில் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வில் ஏற்படும் ‘மரபணு திடீர்மாற்றங்கள்’ (genetic mutation) சந்ததிகளுக்குத் தொடரும் பொழுது, அந்த மனிதக் கூட்டம் வேறு ஒரு இனமாக அல்லது குழுவாகப் பிரியத் தொடங்குகிறது. ஒரு மனித குழுவுக்கும் மற்றொரு மனித குழுவுக்கும் உள்ள மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் வேறுபாடுகளின் தொகுப்பு, மனித மரபியலில் “மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்”(mitochondrial DNA haplogroup) என வரையறுக்கப் படுகிறது. இவ்வாறு மனித இனப் பரிமாண வளர்ச்சியில் கிளைகளாகப் பிரிவது ‘இனவரலாறு /இனவளர்ச்சி’ (phylogeny) என அறியப்படுகிறது. இவ்வாறு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. வின் உதவியுடன் தாய்வழி மரபின் பாரம்பரியத்தை (matrilineal inheritance) அறிந்து கொள்வதால், மனித இனம் ஃ ஆப்ரிக்காவில் தோன்றி எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது என்பது தெரிய வருகிறது.

    மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள தாய்வழி மரபு முறை ஆராய்ச்சி மிகவும் உதவியுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்ட முதுதாய் ‘மைட்டோகாண்ட்ரியல் ஏவாள்’ (Mitochondrial Eve) எனப் பெயரிடப்பட்டுள்ளாள். இந்த ஏவாள் இப்பொழுது வாழும் மனிதர்களுக்கான தாயாகக் கண்டறியப்பட்டவள் (most recent common ancestor – MRCA). இது போலவே ஆணின் Y- குரோமோசோம் (chromosome) டி.என்.ஏ. வழியாகக் கண்டறியப்படுவது ‘தந்தை வழி மரபு’ (patrilineal line studied by Y – DNA) என அறியப்படுபிறது. அவ்வாறு கண்டறியப்பட்ட முது தந்தை ‘ஒய் குரோமொசோமல் ஆதாம்’ ( Y-chromosomal Adam) எனவும் குறிப்பிடப்படுகிறான். இவர்கள் முன்னொரு காலத்தில் ஃஆப்ரிக்காவில் வாழ்ந்த நமது பொது மூதாதையர்கள் (common ancestor) ஆவார்கள்.

    இந்த மரபியல் துறை ஆராய்ச்சியில், ஆங்கில எழுத்துக்களான A முதல் Z வரையான எழுத்துக்கள், ஒவ்வொரு மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. ஹாப்லோக்ரூப்பிற்கும் அடையாளமாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பெயரிடப் பட்டதற்கு உயர்வு தாழ்வோ, தரவரிசை முறையோ, குழுக்களுக்கிடையே ஆன மரபணுத் தொடர்போ அடிப்படை அல்ல. எந்த வரிசைமுறையில் ஹாப்லோக்ரூப்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அந்த வரிசைமுறையிலேயே A – Z எனப் பெயரிடப் பட்டுள்ளது. நமது முது பெற்றோர்களின் ஹாப்லோக்ரூப் L. இந்த ஆதிகால மனிதர்களில் இருந்து மாறுபாடுகள் ஏற்பட்டு L0, L1, L2, L3, M, N, R எனப் பல குலங்கள் தோன்றி உலகம் முழுவதும் மனித இனத்தினர் பரவினர். இந்தக் குலப் பிரிவுகளையும் அவர்கள் பரவிய விதத்தையும் கொடுக்கப் பட்டுள்ள படங்களின் மூலம் அறியலாம். பெரிய ஹாப்லோக்ரூப் (macro-haplogroup) என இப்பிரிவுகள் அழைக்கப் பகுகின்ற. இப்ரிவுகளில் ஏற்படும் உப பிரிவுகள் ‘உப ஹாப்லோக்ரூப்’ (sub haplogroup) என அழைக்கப் படுகின்றன.

    இந்தியாவின் மனித குலப்பிரிவுகள்:

    இந்தியாவில் அல்லது தெற்காசியப் பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும், அதாவது 60% த்தினர் M ஹாப்லோக்ரூப் வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் “ஏவாள்” > L1/L0 > L2 > L3 > M என்ற முறையில் வழித் தோன்றல்களாக உதித்தவர்கள். L3 ஹாப்லோக்ரூப் பிரிவிலிருந்து தோன்றியவர்கள் ஹாப்லோக்ரூப் M மற்றும் N குழுக்கள். M ஹாப்லோக்ரூப் பிரிவினத்தவரைத் தவிர N ஹாப்லோக்ரூப், மற்றும் அந்த N ஹாப்லோக்ரூப் வழித் தோன்றல்களாகிய R ஹாப்லோக்ரூப் பிரிவினரும் இந்தியப் பகுதியில் உள்ளனர். M ஹாப்லோக்ரூப் குலத்தினர் முதன் முதலில் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி யவர்கள். கடலோரப் பகுதி வழியாக பயணம் செய்து இன்றைய இந்தியாவை அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

    ஆங்கிலேய மன்னன் மூன்றாம் ரிச்சர்ட் (English king Richard III) உடலின் எலும்புகளை மரபணு பரிசோதனையின் மூலம் அடையாளம் கண்டு தகுந்த முறையில் அடக்கம் செய்யவும், மறைந்த ரஷ்ய அரசப் பரம்பரையினரை  (Russian royal family) அவர்களது எலும்புகளின் மூலம் அவர்கள்தான் என உறுதிப் படுத்தவும் தாய்வழி மரபு மரபணுச் சோதனையே பயன்படுத்தப் பட்டது.

    இந்த அறிவியல் தகவல்கள் உறுதிப் படுத்துவது யாதெனில், வரலாற்றினைத் திரும்பிப் பார்க்கும் பொழுது, மனித குலத்தின் வரலாற்றையே உணர பெண்ணகளின் பங்குதான் பெரிதும் உதவி புரிந்துள்ளது என்பதும், வரலாற்றில் அவர்களுக்கு அசைக்க முடியாத இடமும் முக்கியத்துவமும் உள்ளது என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.


    உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
    உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
    உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
    ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.
    -பெண்மை, பாரதியார்

    பெண்ணின் பெருமையை உணர்ந்து கொள்வோம்….
    மகளிர் தின வாழ்த்துக்கள்……

    தங்களது தாய்வழி மரபினை அறிய விரும்புவோருக்கானத் திட்டம்:
    TO PARTICIPATE IN A GENOGRAPHIC PROJECT:
    Geno 2.0 – Genographic Project
    https://genographic.nationalgeographic.com/
    Geno 2.0 – Genographic Project Participation and DNA Ancestry Kit
    http://shop.nationalgeographic.com/ngs/browse/productDetail.jsp?productId=2001246&gsk&code=MR20944

    ______________________________________________

    தகவல் ஆதாரங்கள்:
    CONTENT SOURCES:
    Human mitochondrial genetics –
    http://en.wikipedia.org/wiki/Human_mitochondrial_genetics

    Human mitochondrial DNA haplogroup –
    http://en.wikipedia.org/wiki/Human_mitochondrial_DNA_haplogroups

    mtDNA and its role in ancestry –
    http://www.genebase.com/learning/article/17

    Haplogroup M –
    http://www.openthemagazine.com/article/living/haplogroup-m

    More than a hunch: identifying Richard III with DNA –
    http://theconversation.edu.au/more-than-a-hunch-identifying-richard-iii-with-dna-11999

    மேலதிகத் தகவலுக்காக பரிந்துரை செய்யப்படும் ஆய்வு அறிக்கைகள்:
    RESEARCH ARTICLES:
    Deep Rooting In-Situ Expansion of mtDNA Haplogroup R8 in South Asia.
    Thangaraj et al; PLoS ONE;2009, Vol. 4 Issue 8, p1
    http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0006545

    Phylogeography of mtDNA haplogroup R7 in the Indian peninsula.
    Chaubey et al; BMC Evolutionary Biology 2008
    http://www.biomedcentral.com/1471-2148/8/227

    Phylogeny of Mitochondrial DNA Macrohaplogroup N in India, Based on Complete Sequencing: Implications for the Peopling of South Asia
    Palanichamy et al; Am J Hum Genet. 2004 December; 75(6): 966–978.
    http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1182158/

    Mother’s curse: the effect of mtDNA on individual fitness and population viability.
    Gemmell NJ, Metcalf VJ, Allendorf FW. Trends Ecol Evol. 2004 May;19(5):238-44
    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16701262

    பட உதவி:
    http://3.bp.blogspot.com/-kQRXiQhc_J0/ToN6yifvb_I/AAAAAAAABWI/UFJYPXs-P70/s1600/mDNA+migration+map+-+small.jpg
    https://genographic.nationalgeographic.com/wp-content/uploads/2012/09/human-journey_940.jpg
    http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1MDI=.jpg?download=1
    http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1MTA=.jpg?download=1
    http://leavingbio.net/HUMAN%20REPRODUCTION-WEB_files/image004.gif
    http://katiephd.com/wp-content/uploads/2011/02/humanlifecyc.jpg
    http://www.starchildproject.com/images/dna2011mtdnadiagram1.jpg
    http://64.40.115.138/file/lu/6/52235/NTIyMzV9K3szNDA1Mzc=.jpg?download=1
    http://jonciwolff.com/wp-content/uploads/2012/12/mitochondrialdna22.gif
    http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c4/Peopling_of_eurasia.jpg
    http://www.openthemagazine.com/sites/default/files/imagecache/435by290/article_images/8308.haima.jpg

     

    Share
  • பெண்மை !!!

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    மகளிர் தினம் அன்னையர் தினம் என்று

    சொற்ப நாட்கள் மட்டும்

    கொண்டாடப் படவேண்டியதல்ல

    பெண்மை !!!

    என்றென்றும் மனதில்

    மரியாதைக்குரிய ஒன்றாய்

    ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே

    பெண்மை !!!

    அன்னையாய் சகோதரியாய்

    மனைவியாய் தோழியாய்

    எத்துனையோ பரிணாமங்களில்

    பெண்மை !!!

    நாம் வாழும் வாழ்வு

    பெண்மையன்றி முழுமையடைந்திடுமோ ??

    நம்மை உலகிற்கு அறிமுகப் படுத்தியவள்

    பெண்ணன்றோ ??

    பெண்மையை போற்றி

    வணங்க வேண்டாம் ……

    அவர்தம் உள்ளம் தனை

    புரிந்து கொண்டாலே போதும் !!!

    அதிகாரம் செலுத்துவதாய்

    எண்ண வேண்டாம் ……

    அவர்தம் ஆதரவை

    உணர்ந்தாலே போதும் !!!

    பெண்மையின் அழகில்

    உலகமே விளங்கிடும்

    என்றென்றும்

    புதுப் பொலிவுடன் !!!

     

    Share
  • பெண்ணுக்கு ஒரு கடிதம்!

    பாகம்பிரியாள்
    அன்பே,
    நீ , அவசரமாய் நான் அலுவலகத்திற்கு செல்லும்
    நாட்கள் பல எனக்கு சாரதியாய் இருந்திருக்கிறாய்.
    பணப்பிரச்னை என்னை பிய்க்கும் போதெல்லாம்
    கை கொடுத்து உதவியிருக்கிறாய்.
    கவலை என்னும் மேகம் சூழந்த போதெல்லாம்,
    இன்முகம் காட்டி என்னை கரையேற்றிருக்கிறாய்.
    வேலையில்,  இற்ங்குமுகம் வந்த போதெல்லாம்
    என்னை உன் நெஞ்சில் சுமந்திருக்கிறாய்.
    இவ்வளவு எல்லாம் செய்த உனக்கு
    என்ன கைம்மாறு செய்ய முடியும்?

    பெண்கள் தினமான  இன்றைக்காவது
    நீ அலுவலத்திலிருந்து வரும் போது,
    சில ஆச்சரியங்களை பரப்பி வைத்து
    கண்ணான உன்னை சீராட்டவும்,
    பாராட்டவும் நான் நெடுநேரமாய் என்
    காதை,  கதவுக்கருகில் வைத்து
    காத்திருக்கிறேன் பொறுமையாய் .
    எப்போது உன் மெல்லிய .
    காலடி ஓசை கேட்குமென்று!
    அன்புடன்,
    உன் ………..

    படம் தந்த இணைய தளத்திற்கு நன்றி 

    Share
  • வல்லமைப் பெண்மணி!

    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    பாரதி கண்ட புதுமைகளை 
    கனவுகளாய்  மறையாது
    நிழலாய் கண்ட மாதருக்குள்
    நிஜமாகக் நிமிர்ந்திடத் தானோ
    அழகாய் எழுந்தவள் நீ..!
    நமக்கேன் வம்பென பேசாமல்
    ‘சரவணன் மீனாட்சி’யில் மனம் மகிழ
    புரட்டு சீரியலுள் புதைந்து போகாமல்
    அகத்து பெண்மணிகளின் வல்லமையை
    கோபுரத்திலேற்றிக்   காட்டிய
    சாபமெனும் பெயரில் கல்லெனக்
    கிடந்திடாத வல்லமைத் தடம்
    பட்ட இன்னுமோர் அகலிகை நீ..!
    உறங்கிக் கிடக்கும் உயிர்களுக்குள்
    உரத்தைத் தூவி உயிர்ப்பை இருத்தி
    கடலுக்கடியில் பாறையாய் பதுங்காது
    வெட்ட வெளியிலே ஊர்வலமாக்கி
    உன்னதத்தின் மேன்மைகளை
    உழைப்பவளின் உன்னதத்தை
    பேனா முனையில் எழுத்தாண்டவள் நீ..!
    புத்தாண்டுப் பரிசுகளாய்
    விடியலின் வேர்களை  வெளிச்சத்துக்கு
    அழைத்து வந்து – பெண்மை வாழ்க..!
    எனக் கூத்திட்டு  – சக்திதனை
    நிர்கதியென நிறுத்தாது..!
    வானம்பாடியாக்கி  திக்கெட்டும்
    பறை சாற்றிய இலக்கிய தேவி நீ..!
    ஓயாத உழைப்பில்
    தன்னலமற்ற தியாக தீபமேற்றி
    சாதனைப் பெண்களின் அணிவரிசையில்
    தீபம் ஏந்தும் புதுமைப்பெண் நீ ..!
    வல்லமைக்கே ஒளி கொடுக்கும்
    இன்றைய உலக மகளிர் தினத்தில்
    உந்தனை சிந்தனை செய்வதில்
    செருக்கடைகிறது எந்தன் மனம்..!
    உயரட்டும் உந்தன் கொடி புரட்சிப்பெண்ணே!
    =======================================
    Share
  • முன்னேறு பெண்ணே!

     

    ஷைலஜா

    அழுதுபுலம்பித்தேய்வதனால்
    ஆகும் பயனிங்கேதுமில்லை
    ஆற்றல் கொண்டே எழுந்திடுவாய்
    அவனியும் உந்தன் வசமாகும்

    தவித்துத் தனியே நிற்பதனால்
    தடைகள் குறையப்போவதில்லை
    புவியை அசைக்கப் போராடிடுவாய்
    புதுமை செய்யப் புறப்படுவாய்!

    அரண்டு அதிர்ந்து நிற்பதனால்
    ஆளுமை செய்ய வழியுமில்லை
    புரட்சி செய்யப் புறப்படுவாய்
    புவனம் உனக்கு வசமாகும்

    வெட்டிப்பேச்சு பேசுவதனால்
    விளையும் பயன்பெற இயல்வதில்லை
    வெற்றிச்சிகரம் அடைந்திடுவாய்
    விரைந்து முன்னேறு பெண்ணே!

    ***************************************************

    Share
  • மகளிர்தின வாழ்த்து…

     

     

    செண்பக ஜெகதீசன்…

     

    மாதவம் செய்து பிறந்தவரே

    மாதா வாகும் பெண்ணினமே,

    பாதகம் நிறைந்த பாரினிலே

    பண்பை வளர்க்கும் தாய்க்குலமே,

    சோதனை பலவாய் வந்தாலும்

    சொந்தம் காப்பது உன்செயலே,

    சாதனை பலவும் புரிந்திடவே

    ஜெகமே வாழ்த்திடும் இத்தினமே…!

     

    Share
  • புதுயுகம் படைக்கும் மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..

    இராஜராஜேஸ்வரி

    ஏட்டையும் பெண்கள் தொடுவது தீது என்று

    எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்;

     

    வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற

    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

     

    வீ‌ட்டையு‌ம், நா‌ட்டையு‌ம் ஒரு சேர ஆள முடியு‌ம் எ‌ன்று

    பெண்கள்  ‌நிரூ‌பி‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

    பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்

    பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;

    எட்டு மநிவினில் ஆணுக்கிங்கே பெண்

    இளைப்பில்லை காணென்று பலதுறைகளிலும்

    இணையற்று சாதனைகள் நிகழ்த்திவருகிறார்கள் பெண்கள்..

    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

    வேண்டிவந் தோமென்று வேதனைகள் தீர்க்கின்றனர் பெண்கள்..

    சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்

    சாதி படைக்கவும் செய்திடுவோம்

    என பலதுறைகளிலும் முனைப்புடன் சாதனை படைத்துவருகிறாள் புதுயுக நவ யுவதியாக வலம் வரும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறோம் நாம்…

    வீறு கொண்டு எழுந்து வெற்றிச் சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது.

    புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் மலர்ந்து மணம் வீசும் மகளிர் தினம் மகிழ்ச்சிக்குரியது ..

    மனிதப் பிறவியில் ஏறத்தாழ சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளிலும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள்!

    இந்தத் துறைதான் பெண்களின் சொந்தத் துறை என்ற நிலை மாறி, எந்தத் துறையும் பெண்களின் சொந்தத் துறைதான் என்ற உண்மை உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.

    புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும்.

    தையலை உயர்வு செய்! என்னும் மகாகவி பாரதியின் கவிதைக் கட்டளை மானுடத்தின் பொதுச் சட்டமாக ஆகட்டும்

    இந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் –

    நிச்சயமாக நம்புங்கள் – அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.

     1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம்

    கொண்டாடப்பட்டு வருகிறது.

    1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.

     அனைத்து துறைகளிலும் பெண்கள் முழுமையாகவும் சமத்துவமாகவும் பங்குபற்றுவதன் மூலமே ஸ்திரமான சமாதானத்தையும் ஐ.நா. சாசனத்தின் கீழான சமூகத்தையும் நாம் எதிர்பார்க்க முடியும்’ என வலியுறுத்தும் வகையில் சிறப்பாக மகளிர் தினம் கவனத்தில் கொள்ளப்படுகிறது ..

    தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

    மகளிர் தினத்தையொட்டி சில ஆண்டுகளாக ஆண்கள் துணையின்றி பெண் விமானிகளே பங்கு பெறும் விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருவது  மகிழ்ச்சி அளிக்கிறது.

    விமானத்தை பெண்களே இயக்குவது ஒரு புதுவிதமான அனுபவம். . நவீன யுகத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் பெண்களுக்கு வழங்குவது ஊக்குவிப்பதாக உள்ளது.

    Share
  • பெண்தான்! பெண்மை வாழியவே!!

     

    சத்தியமணி

    மாமியாரை அன்னையென  அணைப்பதுவும் பெண்தான்

    மாமியாரை இல்லம்விட்டு  விலக்குவதும்  பெண்தான்

    மருமகளை தன்மகளாய்      மதிப்பதுவும் பெண்தான்

    மருமகளை மாடெனவே      மாற்றுவதும் பெண்தான்

    தமக்கையின் தங்கையென  வாழ்வதுவும் பெண்தான்

    தமக்கையின்  உழைப்பினிலே தள்ளுவதும் பெண்தான்

    மகளென்ற போதும்மகன்  கடமைதரும் பெண்தான்

    மகளென்று  சொத்துரிமை நாடுவதும் பெண்தான்

    மனைவியென துணைபுரிய மின்னுவதும் பெண்தான்

    மனைவியென மற்றொருத்தி வாழ்க்கையிலும் பெண்தான்

    அழகான  அணிகளோடு   அணிவகுப்பும் பெண்தான்

    அரைகுறை ஆடைகளில் விளம்பரமும் பெண்தான்

    ஆண்களினம் பெற்றோனாய் ஆக்குவதும் பெண்தான்

    ஆண்களினக் கொடுமையிலே அழிவதுவும் பெண்தான்

    முன்வரியில் சக்தியென பெண்பெருமை பேணட்டும்
    பின்வரிசை பாவமெலாம் திருந்தநிலை மாறட்டும்
    பெண்களினம் பெண்மைதனைப் புரிந்துநடை போடட்டும் !
    பெண்களினம் பொன்மயமாய் புவியினிலே வாழ‌ட்டும் !!

    இனிய மகளிதர் தின வாழ்த்துக்கள்

    படத்திற்கு  நன்றி :

    http://www.igirlsgames.com/gphotos/indian-traditional-girl/1.html

    Share
  • அறுமுகநூறு (4)

     

    -சச்சிதானந்தம்

     

    சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து,

    உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து,

    எதிலும் நிலையா மனதை மறந்து,

    கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம்!                                                                 16

     

    தா ளிரெண்டும்  தீ யாக,

    தோ ளிரெண்டும் பூ வாக,

    மே  னிஎங்கும்  நீ ரோட,

    வா என்றாய் தா விவந்தேன்!                                                                                           17

     

    பிடியோடு உறவாடும் உன்னண் ணனை,

    பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை,

    விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை,

    படியேறி வருகையில் பாடுகின் றேன்!                                                                             18

     

    கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும்,

    படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம்?

    நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம்,

    மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம்!                                                                         19

     

    அரகரா! அரகரா! அதரங்கள் சொல்லும்,

    சரவணா! சரவணா! சிகரங்கள் சொல்லும்,

    முருகனே! முருகனே! என்றுமனம் சொல்லும்,

    பரமனின் குமரனைப் பாடிடச் செய்யும்!                                                                          20

     

    படத்துக்கு நன்றி: http://muruganarul.blogspot.com/2009/11/blog-post.html

     

    Share
  • என்னைப் போலவே

    -வருணன்

     

    விசித்திரமானதென் வீடு
    வாசல்களற்றது
    மேற்கூரையில் சன்னல்கள்

    பகலில் இருளும் இரவில் ஒளிரும்
    அதன் அறைகள்
    தமக்குள்ளே உரையாடும்
    மௌனத்தில்

    வழிந்து கொண்டேயிருக்கும்
    இசையில்லாத பாடலொன்றும்
    வார்த்தைகளில்லா கவிதையொன்றும்

    முன்னோக்கி மட்டுமே
    நகர வேண்டிய நிர்ப்பந்தம் துறந்த
    நாட்காட்டி

    வீட்டிற்கு வெளியே
    இருந்து கொண்டேயிருக்கிறது
    எல்லையில்லா வேலியொன்று
    இன்னமும்

    விசித்திரமானதென் வீடு
    என்னைப் போலவே
    என் அகத்தைப் போலவே.

     

    படத்துக்கு நன்றி: http://blog.michaelmartinho.com/architecture/upside-down-house-in-szymbark-poland/

     

    Share