வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !
சக்தி சக்திதாசன்
சிந்தனை செய்யுங்கள் தோழர்களே
சித்தத்தில் உண்மையைக் காணுங்கள்
மாதர் தம் பெருமைகளை உணர்ந்து
மகளிர்க்கோர் தினத்தைக் கொடுத்து
அன்னையாய் ஒரு வடிவம் கொண்டு
அன்பை எமக்கு பாலோடு ஊட்டியவள்
சகோதரியராய் உடன்பிறந்து அணைத்து
சாத்திரங்கள் பலவும் ஓதியவள்
காதலியாய் கண்களிலே புகுந்து எமைக்
கைப்பிடித்து மனையாளாய் மகிழ்விப்பாள்
எத்தனை வடிவங்கள் எடுத்திடும் மாதர்களை
ஏற்றி நாமும் போற்றுவதற்கு ஒருநாள்
அன்றொருநாள் எம் பாட்டன் பாரதியும்
அநீதி கண்டு ஆர்ப்பரித்து எழுந்திட்டான்
கொழுந்து விட்டெறியும் கவிதைகளால்
கொளுத்தினான் பெண்ணடிமைக் கருத்துக்களை
இன்றொரு புது யுகமாய் பிறந்திட்டு
இகத்தினிலே மகளிர் பலர் உயர்ந்திட்டார்
இருப்பினும் இன்னும் சில மனங்களில்
இருள் சூழ்ந்த எண்ணங்கள் உறையுது
ஆணுக்குப் பெண் என்றும் சளைத்தவளல்ல
அவனியிலே நாமெல்லாம் சமனென்றே
அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுத்து
அர்ப்பணிப்போம் இந்நாளை மகளிருக்காய்
புதுமைப் பெண்களாய் மிளிர்ந்திடும் தோழியரே
புதுமைகள் படைத்து நீரும் சிறந்திடவே
பூரிப்புடன் வாழ்த்துகிறேன் உமையெல்லாம்
புரட்சி மலர்களாய் பூமியிலே பூத்திடுவீர்
இந்நாளில் என்னெஞ்சக் கருத்தொன்றை
இயல்பாக உம்முடனே பகிர்ந்திடுவேன்
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் உலகில்
பண்போடு உயர்ந்திட்ட புரட்சிக் கண்கள்
புரியாத சிலபேர்கள் வாழும் வகை
புண்ணாகும் நெஞ்சம் அதைக் கண்டு கண்டு
அரைகுறை ஆடையல்ல அடையாளம்
அதுவல்ல புது உலக நாகரீகம்
நிலையான உள்ளம் கொண்டு உலகில்
நீவீர் சமதளத்தில் ஆண்களோடு பணிபுரிந்து
மடந்தையர் என்பது அழகேயன்றி வெறும்
மடமையல்ல என்பதனை உணர்த்திடுவீர்
சர்வதேச மகளிர் தினத்திலின்று நானும்
சந்தோஷம் பொங்க நண்பனாக அண்ணனாக
தம்பியாக , தோழியரை, சகோதரியரை
தங்கமான வாழ்த்துகள் பொழிந்து வாழ்த்துகிறேன்
வாழிய ! வாழிய ! புகழுடன் வாழிய !
அன்புடன்
சக்தி சக்திதாசன்
படத்திற்கு நன்றி:
http://www.lankasripoems.com/?conp=poem&pidp=208788