இவள் பாரதி
ஓங்கியடித்துவிடுகிறாள்
அம்மாகுட்டி
அடிப்பதா அழுவதா
என சுதாரிப்பதற்குள்
சிரித்துவிடுகிறாள்
இவள் பாரதி
ஓங்கியடித்துவிடுகிறாள்
அம்மாகுட்டி
அடிப்பதா அழுவதா
என சுதாரிப்பதற்குள்
சிரித்துவிடுகிறாள்
காந்திய தேசத்தில் கணக்கிலா அரக்கர்கள்
கண்ணியம் எல்லாமே காற்றிலே பறக்குது
நீதியை வேண்டியே போவது யாரிடம்
நிம்மதி இன்றியே நிற்குது தாய்க்குலம்
பாரத பூமியை அன்னையாய் பார்த்தவர்
ஊரெலாம் பெண்ணினை தெய்வமாய் கண்டவர்
தோலினை உரித்துமே பெண்மையை குலைப்பதா
யாருளார் பெண்ணினை தாங்கியே காத்திட
கட்டிடம் பெருகுது கல்வியும் வளருது
துட்டரும் வருகிறார் துயரமும் பெருகுது
சட்டமோ இருட்டினில் தானுமே நிற்குது
நட்டமே நாளுமே பெண்களின் வாழ்விலே
வாய்மையின் வடிவமாய் வள்ளுவன் வந்தனன்
தாய்மையின் உருவமாய் சாரதா வாழ்ந்தனள்
ஏழ்மையில் இறைவனை கண்டநம் இந்தியா
எப்படி தொலைத்தது இரக்கத்தைப் பெண்ணிடம்
காணுகின்ற இடமெங்கும் காமுகரின் கூட்டம்
கற்பு பறிபோயிடுமோ பெண்கள் பெருஏக்கம்
ஏனிந்த நிலையென்று ஏக்கமொரு பக்கம்
இவை தடுக்க யாருள்ளார் என்பதேயேக்கம்
பெண்ணினை வதைப்பது பேதமை அல்லவா
கண்ணென பெண்ணினை காத்திடல் வேண்டுமே
எண்ணியே பார்க்காது இருந்துமே விட்டிடில்
மண்ணிலே வாழ்வதில் என்னதான் இருக்குது!
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்களுடன் உங்களோடு உறவாட வந்திருக்கும் எனது இந்த மடல் உங்களுக்கு வரையும் நூறாவது மடல் எனும் நினைப்பே தித்திக்கிறது.
இனிய அன்பான வாசக உள்ளங்களுடன் நூறு வாரங்களாக வாரம் ஒருமுறை என் மனக்கருத்தினைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளம் அமைத்துக் கொடுத்த “வல்லமை” இதழின் வல்லமையாளர்களுக்கும், எனது மடலினை அன்பு கூர்ந்து ஆதரிக்கும் அன்பு வாசக நெஞ்சங்களுக்கும் எனது மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு காலத்தின் எழுத்துக்கள், பதிவுகள் அக்காலத்தின் கண்ணாடியாக அக்காலத்தின் நடப்புகளை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு கருவியாகச் செயற்படுகிறது..
காலம் எனும் காற்றில் அடிபட்டுச் செல்லும் சருகாக புலம் பெயர்ந்து வாழும் என் போன்ற சாதாரணமானவர்களின் மனதில் நாம் வாழும் எம்மை அண்டியுள்ள சமுதாயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் அந்நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்பன எத்தகையதோர் பார்வையைக் கொடுக்கிறதோ அதையே உங்களுடன் இம்மடல் வழியாகப் பகிர்ந்து கொள்கிறேன்.
இது ஒரு கோணப் பார்வையே ! இதே நிகழ்வினை மற்றொரு கோணத்தில் பார்க்கும் பலர் இருப்பார்கள். எது சரி, எது பிழை என்று வாதிடுவதல்ல எனது நோக்கம். நடக்கும் நிகழ்வு என் பார்வையில் எத்தகையதோர் நிலையை எடுத்தது என்பதை எடுத்துக் காட்டுவதே நோக்கமாகும்.
உலகத்தில் என்னை என் அன்னை விழுத்திய 57 வருட காலத்திலே கடந்த சுமார் 40ன் வருடங்களை இங்கிலாந்திலே புலம்பெயர் வாழ்க்கையிலே கழித்து விட்ட எனக்கு வாழ்க்கையின் பல நிகழ்வுகள் கொடுக்கும் அர்த்தங்கள் எனது தாய்நாட்டு குறுகிய கால வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது.
அது மட்டுமின்றி கடந்த பத்து வருடங்களாக ஒவ்வொரு வருடமும் சென்னை வந்து செல்லுவதோடு 35 வருடங்களின் பின்னர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் என் தாய் மண்ணாம் யாழ்நகரின் மண்ணை மிதித்தது என்பது பல நினைவு அசைவுகளுக்கு ஒரு பின்னோட்டத்தைக் கொடுத்தது.
ஒரு சிறு ஊற்றாக யாழ்நகரில் முகிழ்த்த என் வாழ்க்கைப் பாதையை வகுத்துத் தந்த அந்த யாருக்கும் புரியாத மாபெரும் சக்தி இன்னும் அவிழ்க்காத முடிச்சுக்களாய் என்னென்ன அதிசயங்களை வைத்திருக்கிறதோ யானறியேன்.
இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்துத் தமிழ் சமூகத்திலே எனது முகவரியைத் தொலைத்துத் திரிந்த காலம் சில முகவரியைத் தேடி ஓடிய காலங்கள் சில இன்று கண்டெடுத்த முகவரியோடு மோதி நிற்கும் காலம்.
கலாச்சாரம் எமக்குக் கொடுத்த அடையாளங்கள் எம்மைப் பாதுகாக்கும் கவசங்களா இல்லை எமது முன்னேற்றத்திற்குத் தடைபோடும் கால் விலங்குகளா? என்பது இன்றைய எமது புலம்பெயர் சமூகத்தினிடையே நிலவி வரும் மாபெரும் கேள்வியாகி நிற்கிறது..
சந்ததி இடைவெளி அன்றி generation gap எனும் பதத்தின் அர்த்தம் இன்று பலமாக பலரின் காதுகளிலும் ஒலிக்கிறது. எனது சமகால புலம்பெயர்ந்தோர் தமது கலாச்சார அடையாளங்களை வெள்ளத்தோடு அடிபட்டுச்செல்லும் ஒருவன் தனது ஆடைகளைக் காப்பாற்ற போராடுவது போல பலமான போராட்டத்தின் வாயிலாக சிறிது தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஆனால் எமது அடுத்த சந்ததி தமது பெற்றோரின் வற்புறுத்தலுக்கிணங்கி கலாச்சாரத்தைப் பேணுவதற்கு முயற்சிப்பது போலக் காட்டினாலும் பெரும்பான்மையோர் தாம் தமது சொந்தக்காலில் நிற்கும் நிலை வந்ததும் அதனை அப்படியே காற்றில் பறக்க விட்டு விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் இவற்றில் எவை சரி அல்லது எவை பிழை என்று எவரால் வரையறுத்துக் கூறமுடிகிறது ?
அடுத்த சந்ததியினரின் நிலை கையொன்றைப் பின்னால் இழுத்துக் கட்டி விட்டு போருக்கு அனுப்புவதைப் போலவே தென்படுகிறது.
இன்றைய இங்கிலாந்தில் வாழ்க்கைப் போராட்டத்தின் முனைப்பு படுபயங்கரமான தீவிர நிலையை அடைந்து இருக்கிறது. நிறவேற்றுமை எனும் எல்லைகளைக் கடந்து எமது அடுத்த சந்ததி வெள்ளை இனத்தவருடன் சமதளத்தில் தமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டிய தேவையுள்ளது.
இங்கேதான் கலாச்சாரம், பண்பு எனும் இரண்டுக்கிடையிலே உள்ள மெல்லிய எல்லைக்கோடு காணாமல் போவதன் சங்கடம் தெரிகிறது.
நாம் புலம்பெயர் தேசத்தில் அந்நாட்டு மக்களுக்கு இணையாக வாழ்ப்போகிறோம் எனும் போர்வையில் மது, மாது, போதைப்பொருட்கள் பாவனை எனும் சீரழிவிற்குள் தம்மை உட்படுத்திக் கொள்ளும் ஒரு நிலை ஏற்பட்டு விடுமோ எனும் அச்சமும் மேலோங்கத்தான் செய்கிறது.
இருப்பினும் மேற்கூறிய இத்தீவினைப் பழக்கங்களுக்கு கலாச்சார அடையாளங்களுக்கும் தொடர்புகளை ஏற்படுத்துவது உசிதமாகாது.
பண்பான வாழ்க்கையில் தம்மை உட்படுத்திக் கொள்வோர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவர்களாயிருந்தாலும் எவ்வகையான கலாச்சார அடையாளங்களால் தம்மை அடையாளப்படுத்தினாலும் மேற்கூறிய தீயபழக்கங்களுக்கு தம்மை அடிமையாக்க மாட்டார்கள் என்பதை நன் பல இடங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டம் மிகவும் வித்தியாசமானது. நாடுகளுக்கு இடையில் உள்ள தூரம் நவீன போக்குவரத்து முறைகளினால் மிகவும் சிறிதாகியுள்ளது.
உலமயமாக்கல் அதாவது globalization எனும் அதிவேக சர்வதேச முன்னெடுப்புகளால் மக்கள் நாடு விட்டு நாடு பெயர்ந்து வாழ்வது மிகவும் சுலபமாகி விட்டது.
மேலைநாடுகளின் முற்போக்கான வாழ்க்கை முறைகளைத் தவறாக நாகரீகம் எனும் பார்க்கும் மனோபாவம் எமது பின்புல நாடுகளில் நிலவி வந்த காரணத்தினால் எதைக் கலாச்சார சீரழிவு அல்லது பண்பற்ற வாழ்க்கை என்று விபரிக்கின்றோமோ அது எமது பின்புலநாடுகளில் அதாவது கலாச்சாரங்களை வலிமையாக கடைப்பிடித்து வரும் சமுதாயத்தில் வெகுவேகமாக உள்வாங்கப்பட்டு வருவதைப் பார்க்கும் போதுதான் உண்மையிலே கலாச்சாரத்திற்கும், பண்பிற்குமுள்ள வித்தியாசம் விளங்குகிறது..
ஒரு மனிதனுடைய அடையாளம், அவனின் கலாச்சாரச் செறிவு அவன் மற்றவர்களுடன் பழகும் பண்பிலும், அடுத்தவரிடத்தில் காட்டும் அன்பிலும் அவனிடம் குடிகொண்டிருக்கும் மனிதாபிமானத்திலுமே தங்கியுள்ளது.
கலாச்சாரத்தை பாதுகாப்பதில் முன்னனியில் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு அடையாள ஆடைகளை அணிந்து கொண்டு இனவிரோதத்தையும் இனக் குரோதத்தையும் வளர்த்து குழுநிலை மனப்பான்மையில் வாழ்வதென்பது ஒரு பண்பான சமூகத்தின் நாகரீகமாகாது.
அதேபோல அரைகுறை ஆடையணிந்து மனம்போன போக்கிலே வாழ்வதுதான் நாம் வாழும் புலம்பெயர் நாடுகளின் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து வாழ்வதற்கு எடுத்துக்காட்டு என்று எண்ணிக் கொள்வதும் தவறாகும்.
நாம் வாழும் இடங்களில், பணிபுரியும் தளங்களில் மற்றவர்களோடு பழகும் வகையிலும், நாம் பண்பாக நடந்து கொள்ளும் முறையிலும் “: அடடா , இவர்தான் ஒரு தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்” என மற்றவர்கள் கெளரவத்துடன் பார்ப்பது ஒன்றே நாம் பிறந்த மண்ணுக்கும் எமது தொப்புள்கொடி உறவுகளுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்..
என் இனிய அன்பு உள்ளங்களே ! இன்னும் ஒரு நூறுவாரம் உங்களுடன் இம்மடல் வழியாகத் தொடர்பு கொள்ளும் அளவிற்கு என் விரல்களில் வலிமையையும், இச்சிறிய சாதாரணமான ஒரு புலம்பெயர் தமிழனின் மடலைப் பிரசுரிக்கும் அன்பு மனதை வல்லமையினருக்கும் கொடுக்க அந்த எல்லாம் வல்ல என் மனம் வாழும் அண்ணாமலையான் துணை வேண்டி இம்மடலில் விடைபெறுகிறேன்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்பான வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
இன்னம்பூரான்

ஆங்கிலத்தில் ‘the plot thickens’ என்பார்கள். அதாவது மர்மங்கள் கூடுகின்றன. மாஜி அதிகார வர்க்கம் CBI யின் தடாலடி செயலைக் கண்டித்தால் ‘இனம் இனத்தோடு சேர்கிறது என்று சால்ஜாப்பலாம். ஆனால் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் CBI யின் தடாலடி செயலைக் கண்டிக்கிறார். நிதியமைச்சர் ப.சிதம்பரனார் CBI யின் தடாலடி செயல், முழு விவரங்கள் அறியாமையிலே அமைந்து விட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார். என்னடா இது? இவர்கள் சேம்ஸைட் கோல் போடுகிறார்களா அல்லது ‘the plot thickensaa?’ என்ற ஐயம் எழுகிறது. மேற்படி அரசியல்வாதிகள் யாதும் அறிந்த அரசியல் ஞானிகள். சேம்ஸைட் கோல் போடமாட்டார்கள். அது திண்ணம். ஆக மொத்தம், மர்மங்கள் கூடுகின்றன.
கொஞ்சம் புரிந்து கொள்ள SEBIயின் மாஜி தலைவர் பவே அவர்கள் சொல்வதை பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும்.
MCX-SX மேல் வைக்கப்பட்ட வருமானவரி குற்றத்தில் சத்து ஒன்றுமில்லை என்று நிதித்துறையே அறிவித்ததை, CBI ஏன் கண்டு கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது?
அவர்கள் ஏன் மகளுக்கு ஒரு நீதி, மருமகளுக்கு ஒரு நீதி என்று இயங்குகிறார்கள்?
என்னிடம் உள்ள சில மர்மங்களை பொது மன்றத்தில் வைக்கும் காலம் வந்து விட்டது.
சஹாரா நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதிற்கு, இது தண்டனையா என்று கேட்டதற்கு, ‘இருக்கலாம். நான் ஊடகங்களிலிருந்து தான் தெரிந்து கொள்கிறேன்’ என்றார்.
FTIL/MCX-SX உரிமங்கள் முறைகேடாகக் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்களுக்கு ஆதாயம் இல்லை. அரசு கொள்கைக்கு உகந்தவாறு, போட்டி வரவேற்கப்பட்டது என்றார். குற்றச்சாட்டு பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்றார்.
அவருடைய ஐந்தாவது பதிலுக்கு சான்று, அவருடைய கண்காணிப்பும், தரமுயர்ந்த நாணயமான புதுமை உத்திகளே. இதை CBI கூட மறுக்கவில்லை.
ஆட்டுவிப்பது யாரு?
ஒரு பழைய தகவல் நினைவுக்கு வருகிறது. ‘The Craft of Audit’ என்ற என் ஆய்வுக்கட்டுரையை ஒரு பன்னாட்டு ஆடிட் இதழுக்கு கேட்டிருந்தார்கள் அதன் சாராம்சம்:
உன்னால் தணிக்கை செய்யப்படுவர்களில் மூன்று வகை உண்டு. முதல் வகை விதிப்படி இயங்குவர். சின்ன சின்ன விதிவிலக்கு இருக்கலாம். அதை பெரிது படுத்தாமல், இடம், பொருள் , ஏவல் கருதி தணிக்கை செய்யவும். இரண்டாவது வகை எல்லா விதிகளையும், சரியோ தப்போ, கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு, இயக்கி இருப்பான். அவனை இரக்கமில்லாமல் தணிக்கை செய். பெருங்குற்றங்களை மறைக்க விதி வைக்கப்போர் கை கொடுக்கும். அவன் பாயில் புகுபவன் என்றால், நீ கோலத்தில் புகுந்து ஆடிட் செய். மூன்றாவது வகை விதியின் இலக்கணத்தை மீறாவிடினும், இட்ட காரியத்தை முடிப்பதில் கருமமே கண்ணாயிருப்பர். மதி குறைந்த விதியை அவர்கள் மீறிருப்பர். தாரதம்யம் அறிந்து அவர்களை ஆடிட் செய். தொழில் விவரங்கள் அறிந்து இயங்கு.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: http://kccollegegameday.com/
அப்பழைய பெருவீட்டில்
ஆங்காங்கே வர்ணம் இளகிய
சுவர்களில்த் தெரிகிறது
பல உருவங்கள், உற்று நோக்க
கூந்தல் விரித்தப் பெண்ணொருத்தி,
புல்மேயும் பசுக்கள்,
நெடும்பெருந் தடாகம்,
வாள் ஏந்தியப் போர் வீரன்,
முன்னங்கால்கள் தூக்கியக் குதிரை,
இலையுதிர்ந்த மரம்,
மரணப் படுக்கையில் ஒரு முதியவர்..
இன்னும் எத்தனையோ அவ்வப்போது
மனநிலைக்கு ஏற்றவாறு..
உசிந்து பாருங்கள்
வர்ணம் உதிர்ந்த சுவர்களை
அப்பொழுது புரிய வரும்
வர்ணங்களில் மட்டுமல்ல
ஓவியங்கள் என்பது…
http://www.thehindu.com/news/cities/bangalore/gullies-over-the-high-street/article4580921.ece
குன்றக்குடி அடிகள்
52. உழைத்து உண்க!
இந்த உலகு உழைப்பினால் ஆயது. இந்த உலகு உழைப்பினால் இயங்குவது. இந்த உலகை இயக்கும் ஆற்றல் உழைப்பு. உலகின் முதற்பொருளாகிய கடவுள் தமது படைப்பில் உழைப்பில்லாமல் வருவன எவற்றையும் கண்டிலன்; படைத்திலன்.
இயற்கையும் உழைப்புத் தன்மையுடையதே. மலர்களும் காய்களும் கனிகளும் உழைப்பின் விளைவேயாம். உழைப்புக்குரிய பிறப்பு, மானுடப் பிறப்பு. மானுடம் பெற்றுள்ள உடம்பின் அமைப்பு உழைப்பைக் குறிக்கோளாகக் கொண்டதேயாம். உழைப்பு உடம்பின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் இன்றியமையாதது.
துறவு நெறியில் சென்ற புத்தர் பெருமுயற்சியுடன் வாழ்வதை வாழ்வு என்றார். மானுடத்தின் புலன்களில், பொறிகளில் கலந்திருப்பது உழைப்பு. உழைத்தால் பொறிகளின் ஆற்றல் வளரும்; புலன்களின் ஆற்றல் வளரும். உழைப்பு இல்லையேல், உழைப்பில் பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து அழிவதைப்போல உடம்பு அழியும்.
மனித வாழ்வு உணவால் இயங்குகிறது. ‘உண்டி முதற்றே உலகு’ என்பது பெரியோர் வாக்கு. உணவை உழைத்துப் பெறுவதற்கு என்றே கால்களும் கைகளும் கொடுக்கப்பட்டன. உணவு, உழைப்பின்றிக் கிடைக்காது. ஒரோ வழி பிறர் உழைப்பால் உருவாகும் உணவை “உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள்” என்றார் அண்ணல் காந்தியடிகள்.
நெற்றியில் வியர்வைத் துளிகள் காணும் அளவுக்குக் கடுமையாக உழைத்தால் உண்ணும் உணவு சுவையாக இருக்கும். அங்ஙனம் உழைத்து உண்பதே நலம் பொருந்திய வாழ்க்கை.
“A ‘m the sweet of the fere shalt than cat Bread” என்ற அனுபவ வார்த்தை அறிக. உழைப்பில் சிந்தும் வியர்வையே உண்ணும் ரொட்டிக்கு விலை. உழைத்து உண்பதே ஒழுக்கம்; நீதி சார்ந்த வாழ்வியல். சுவையுடைய உணவு வேண்டாம்! உணவுக்குச் சுவையிருப்பினும் வாழ்க்கைக்குப் பயன்படாது. தண்ணீர்போல அமைந்த கூழாயினும் உழைப்பால் வந்ததாயின் அந்தக் கூழே இனியது. ஆதலால் சிலவாம் இனாம் வேண்டாம்.
“Nothing is free” என்ற வாழ்க்கையை நியதியாக்குவோம். உழைப்பு – படைப்பாற்றல் தன்மை வாய்ந்தது. உழைப்பு, உழைப்பு! – நேர்மையான உழைப்பு ஒன்றுதான் மனித சமுதாயத்திற்குச் சிறப்பான மருந்து.
“தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினியது இல்” (திருக்குறள் – 1065)
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
மின்பதிப்பாக்க உதவி: தேமொழி
தேமொழி
வரலாற்றின் அடிப்படையில் ஆராய்ந்தோமானால் இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தடைகளில் ஒன்றாக இருப்பது சரியான ஒரு தேசிய எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லாமல் போவது. இதுநாள் வரை ஆளும்கட்சியின் அபத்தங்களை தட்டிக் கேட்க தகுதி நிறைந்த எதிர்க் கட்சி ஒன்று இல்லை நமது இந்திய அரசியலில். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களும் இந்தியாவிற்குத் தேவை சிறந்த எதிரணி, இந்தியாவின் பற்பல கட்சிகள் மக்களாட்சிக்கு உதவவில்லை என்றுக் குறிப்பிட்டார். இவ்வாறு தேர்தல் காலங்களில் அடித்துப் பிடித்து கூட்டணி சேர்த்து ஆட்சி அமைத்தாலும், யார் பிரதமர் என்றக் குழப்படி கூட்டணியைச் சிதற அடிக்கிறது. பிறகு ஏதோ சாமாதானதில் விட்டுக் கொடுத்து கூட்டணி உதவியுடன் நடக்கும் ஆட்சியும் எத்தனை நாள்தான் நிலைக்க முடியும் என்ற நிலையில்லாமையில் வீழ்கிறது. இந்தியாவில் நாட்டின் நலனிற்காக என்னும் ஒரு பொதுக் கொள்கையைக் கட்டிக் காக்கும் ஒரு எதிரணி தேவை. ஆளும் கட்சி அராஜகம் செய்யவே அச்சமுறும் வகையில் பலம் கொண்ட எதிரணி வேண்டும், செய்யும் தவறுகள் அடுத்த தேர்தலில் தங்களை பதவியிழக்கச் செய்யும் என்ற எண்ணம் ஆளும் கட்சிக்கு என்றும் அடிமனதில் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற பலம் வாய்ந்த எதிர்க்கட்சி தேவை.
தேர்தல் காலங்களில் காங்கிரசிற்கு எதிராக அவசர அவசரமாக உருவாகும் எதிர் அணிகளும் இதுவரை கொண்டிருக்கும் “எதிரணிக் கட்சிக்கொள்கை” காங்கிரசை விரட்டிவிட்டு அங்கு தாங்கள் அமர்ந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே. இன்றுவரை இதுதான் கொள்கை என்ற வகையிலேயே தங்களை முன்னிறுத்தி வந்திருக்கின்றன எதிரணிக்கட்சிகள். எதிரணிக்கட்சிகள் யாவும் பெரும்பாலும் சக்தி வாய்ந்த வட்டாரக் கட்சிகளின் கூட்டணி. இக்கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே சக்தி வாய்ந்த தலைவர் பதிவியில் தங்கள் கட்சியை வழி நடத்திச் செல்லுபவர்கள். இவர்கள் கனவு பிரதமர் பதவி, தனக்கு இருக்கும் திறமைக்கு தான்தான் பிரத மந்திரியாக வேண்டும் என்ற எண்ணம். வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவிக்குப் போட்டி இவர்களிடையே தோன்றும். திருப்தி அடையாதவர்களால் எதிர்க்கட்சி கூட்டணி உடையும். வெற்றி பெற்றாலும் எதிரணியினருக்கு நாட்டிற்குப் பணி செய்வதை விட, தங்கள் கூட்டணியைக் கட்டிக் காப்பாற்றுவதில்தான் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது என்பது வரலாறு காட்டிய பாடம்.
சுதந்தரம் அடைந்த இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே இந்த நிலைதான். சுதந்தரத்திற்குப் பிறகு 1977 இல் ஏர் உழவன் சின்னத்துடன் ஜனதா கட்சி எதிர் அணியாக உருவெடுத்த பொழுதே யாரைப் பிரதமாராக்குவது என்ற உட்கட்சிப் பூசலும் உடன் பிறந்தது. பிரதமர், துணைப்பிரதமருடன் கொஞ்ச காலம் இந்திய அரசு வண்டியும் தள்ளாடித் தள்ளாடி ஓடியது. மக்கள் அவர்கள் அடித்தக் கூத்தைக் கண்டு வெறுத்துப் போய், இந்த ஆட்களுக்கு நெருக்கடிநிலையை அமல்படுத்திய ‘மிசா’ இந்திராவே மேல் என்று எண்ணி, உடனடியாக தாயே வருக, இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிடுக என்று அழைக்க வேண்டிய நிலையில் அடிதடி சண்டைகள் கேவலமாக இருந்தது.
சுதந்தரத்திற்குப் பின்னர் 30 ஆண்டுகள் காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் செய்த தவறான “நெருக்கடி நிலை அமல்படுத்தலே” அக்கட்சியை வீழ்த்தியது. எதிரணி முயன்று காங்கிரசை வீழ்த்தவில்லை. தொடர்ந்து வந்த ஜனதாவால் ஓராண்டு தாக்குப் பிடிப்பதே சிரமமாக இருந்தது. அதன் பிறகும் தொடர்ந்த நாற்பது ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் இல்லை. தலைவர் காணாது போனால் கட்சியும் காணாமல் போகும் என்ற நிலையே இந்தியாவில் பல கட்சிகளில் நிலவுகிறது. இந்நிலைக் காட்டுவது நாட்டு நலத்திற்கான கொள்கையற்ற கட்சிகள் அவை என்பதையே. தலைவர் பதவிக்காக கட்சி ஒன்றை உருவாக்கிக் கொண்டு, தங்கள் ஆதரவாளர்களின் சக்தியால் தலைவராக இருந்த தலைவர் மறைந்ததும் கட்சியும் தானே மறைவது, அல்லது அதற்குப் பிறகு மீண்டும் தலைவர் பதவிக்காகத் தோன்றும் உட்கட்சிப் பூசலில் கட்சி பிளவுபட்டுப் போவது, இதுவே கட்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும், அழிவும் என்ற நிலை. இந்த அவல நிலை நாடு முழுவது தொடர்ந்து நடப்பதால், அவரவர் தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தும் அடிதடி சண்டையில், நாட்டு நலன் காற்றோடு போவதும், இதை ஆதாயமாகக் கொண்டு காங்கிரஸ் தொடர்ந்து பிழைப்பதுமாகவே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
சாதனை என்ற நோக்கில் பார்த்தால் காங்கிரசும் நாட்டிற்காக ஒன்றும்பெரிதாக இதுவரை சாதித்துவிடவில்லை. நாட்டுக்குச் சுதந்தரம் வேண்டும் என்று அன்றைய நாளில் தேசிய நீரோட்டமாக அமைந்துவிட்டிருந்த உணர்சிக் கொள்கையை, இந்தியர் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு கொள்கையை வைத்து தோன்றிய ஒரு தேசிய கட்சியின் பெயரில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது.
காங்கிரசும் தங்கள் கட்சியின் ஒற்றுமைக்காகவும் ஒன்றும் பெரிதாக இதுவரை சாதிக்கவில்லை. சுதந்தரத்திற்காக உழைத்த தலைவரின் குடும்பத்தைத் தந்திரமாக தலைமைப் பொறுப்பில் வைத்து கட்சி ஒற்றுமையைக் காக்கிறது. சுதந்தரம் வேண்டி, சென்ற நூற்றாண்டில் நாட்டு மக்களை இணைத்த ஒரு பொதுக் கொள்கையை இன்றுவரை வைத்து காசாக்கிக் கொண்டிருக்கிறது பற்பல ஊழல்களின் வழியாக…. போபர்ஸ் ஊழல், ஆதர்ச வீட்டுவசதி சங்க ஊழல் போன்ற காங்கிரசின் புகழ் வாய்ந்த ஊழல்கள் என தினமும் ஒரு ஊழல் தினசரி செய்திகளில் ஒன்றாகிப் போனதால், இவற்றையெல்லாம் நினைவும் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை.
இவையாவும் உறுதியான எதிரணி அமையாதததையே உறுதிப் படுத்துகிறது. பற்பல பின்னணிகளின் இருப்பிடமான இந்தியாவில் அனைத்து மக்களையும் இணைக்கும் பொதுவான கொள்கை எது?
சிங்கம் எதிர்த்தால் பிரிந்திருந்த மாடுகள் ஒன்றுகூடி எதிர்த்துத் துரத்தும் கதையில் படித்த ஒற்றுமையின் வலிமையை எப்படி வட்டாரக் கட்சிகளாகவே இருந்துவிடும் எதிரணிகளிடம் கொண்டு வருவது?
நமது நாட்டுக்குத் தேவை நல்ல பலம் வாய்ந்த ஓர் எதிர்க்கட்சி; இந்தியர் அனைவரும் தன்னை அதனுடன் இணைத்துத் தங்களை அடையாளம் காண உதவும் ஓர் எதிர்க்கட்சி.
இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை தேசியக் கட்சி என்று வரையறுக்க வைத்திருக்கும் விதிமுறைகள் சில உள்ளன. அவை:
இத்தகுதிகள் பெற்றாலே ஒரு கட்சி இந்தியாவின் தேசியக் கட்சியாகக் கருதப்படும்.
இதன் அடிப்படையில், காங்கிரசைத் தவிர்த்து இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், பாரதீய ஜனதாக் கட்சி (தோற்றம்1980), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1925), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -மார்க்சிஸ்ட் (1964), தேசியவாத காங்கிரஸ் கட்சி (1999), பகுஜன் சமாஜ் கட்சி (1984) போன்ற கட்சிகள் ஒரு சில காலக் கட்டத்திலாவது தேசியக் கட்சிகள் என அறியப்பட்டுள்ளன. அவ்வாறு அறியப்பட்டாலும் இவை யாவும் இதுவரை சக்தி வாய்ந்த எதிர் கட்சிகளாக இல்லாமலே இருந்து வந்திருக்கிறது.
சுதந்தர இந்தியாவில் 67 ஆண்டுகளில் இன்றுவரை 81% காலம் நாடாளுமன்றத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்தான், ஐந்தில் ஒருபகுதி கூட இல்லாத 19% கால ஆட்சிகாலத்தில் ஆட்சியமைத்த கட்சிகளின் எண்ணிக்கை 5 (ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா கட்சி [கூட்டணி], ஜனதா தளம் [கூட்டணி], சமாஜ்வாதி ஜனதா கட்சி [கூட்டணி], பாரதிய ஜனதா கட்சி [கூட்டணி]). இவையாவும் கூட்டணி இன்றி ஆட்சியமைக்க முடியாத நிலையில் தடுமாறியவை. தொங்கு நாடாளுமன்றம் என்றால் அது எப்படி இருக்கும் என உணர்த்தியவை.
சுதந்தர இந்தியாவின் 67 ஆண்டுகளில் அமைந்த அமைச்சரவைகள் மொத்தம் 20. இதில் எதிர்கட்சிகள் கூட்டணி கொண்டு ஆட்சி நடத்திய ஆட்சிகாலத்தில், 12 ஆண்டுகளில் 9 அமைச்சரவைகள் (7, 8, 11, 12, 14, 15, 16, 17, 18 அமைச்சரவைகள்) மாற்றம் நிகழ்ந்திருகிறது. ஆட்சி அமைத்து தாக்குபிடித்த காலங்கள் இரண்டு வாரங்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் என்பதே அதிக அளவு காலக்கட்டம் என்ற நிலைமையில் இருப்பது இந்தியாவின் எதிரணியின் நிலை. இதில் தாங்களும் ஊழலுக்கு சளைத்தவர்கள் அல்ல என மாட்டுத் தீவன ஊழல் என்று போட்டி போட்டுக் கொண்டு குறுகிய காலத்திலும் ஊழல் அரசையும் நடத்திக் காண்பிக்கப்பட்டது இந்திய மக்கள் எதிர் கொண்ட மற்றொரு அநீதி.
தேர்தல் காலங்களில் ஒரு கட்சியுடன் சேர்ந்து எதிரணியாக உருவாகும் வட்டாரக் கட்சிகள் தங்கள் மாநிலங்களில் அக்கட்சி தங்களுக்கு எதிராகவே உருவாகிவிட இடம் அளிப்பதில்லை என்று கவனத்துடன் செயல்படுவதிலும் தவறில்லை. அவ்வாறு அனுமதிப்பது அவர்களது கட்சியின் நோக்கத்திற்கே எதிரானதுதான். இவ்வாறு பிரிந்து பிரிந்து சேரும் விதம் விதமான எதிரணிகளுடன் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் அடிப்படைத் தகுதி அந்த எதிரணி தோன்றிய முறையின் காரணத்தினாலேயே இல்லாமலும் போய்விடுகிறது.
ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை நட்சத்திரமாக கொள்கை அளவில் இந்தியர் அனைவரையும் இணைக்குமோ என்று தோன்றியது. ஆனால் அதன் கட்சியின் பெயர் வேற்றுமொழியில் அந்நியமாகித் தெரிகிறது. ஆங்கிலத்தில் பெயர்கொண்டு Progressive Movement of India / Progressive party என்று இருந்திருந்தால் அதனுடன் தேசிய அளவில் ஓர் ஒட்டுறவு தோன்றியிருக்கலாமோ என்ற எண்ணமும் வருகிறது. அதுவும் ஒரு வட்டாரக் கட்சியாகவே நின்றுவிடும் போலிருக்கிறது. எவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடன் தேசிய ஆதரவு எதிர் பார்க்க முடியாதோ அது போலவேதான் ஆம் ஆத்மி என்பதும் இந்தியா முழுவதையும் இணைக்க வேண்டிய தேவையின் சாரம் இழந்து நிற்கிறது.
இந்த 16 வது பாராளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு ஒன்பது கட்டங்களாக, ஏப்ரல் 7 முதல் மே 12 வரை நடந்து, வாக்கு எண்ணிக்கை மே 16 இல் நடக்கவிருக்கிறது. பலம் வாய்ந்த தேசியக் கட்சியான காங்கிரஸ் வந்தால் நிலையான ஆட்சி அமையும். நாற்பது இடங்களில் வெற்றி பெற்றாலே கூட்டணியில் இருப்பதால் பிரதமாரகலாம் என்ற கனவுகளும் மலர்கிறது வட்டாரக் கட்சித் தலைவர்களுக்கு. இந்த தேர்தலிலும் துண்டு துண்டுகளாக பூந்திகளாக இருக்கும் கட்சிகள் ஒன்று சேர்ந்து லட்டாக உருமாறுகிறது. பார்க்கவும் கேட்கவும் இனிப்பாக இருக்கிறது. அளவிலும், உறுதியிலும் பௌலிங் பந்து போல பலமாக இருக்கும் காங்கிரஸ் மோதி உடைத்து மீண்டும் அனைத்துக் கட்சிகளும் பூந்திகளாக சிதறிப் போகாமல் இருக்க இக்கட்சிகளை இணைக்கும் நல்லதொரு பொதுக் கொள்கை தேவை.
அந்த பொதுக் கொள்கை நாட்டின் நலன் என்பதாக இருக்க வேண்டுமே ஒழிய, காங்கிரசை ஆட்சியில் இருந்து விரட்டுவது என்பதாக மட்டும் இருந்தால் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினம். நாம் யாவரும் இந்தியர் என்ற பொதுக் கொள்கையும், நாம் செய்ய விரும்புவது நாட்டு மக்களுக்கு நல்லதொரு தொண்டு என்ற பொதுக் கொள்கையும் இல்லாமல், வென்றால் எனக்குப் பிரதமர் பதவி என்று ஒவ்வொரு குட்டிக் குட்டிக் கட்சியின் தலைவர்களும் கொண்டிருக்கும் பொதுக் கொள்கை சரியான எதிர்க் கட்சியை, காங்கிரசை எதிர்த்து நிலைத்து நிற்கும் கட்சியை உருவாக்காது. அவ்வாறு சிறுகட்சிகள் இணைந்து கொண்டுவரும் எதிரணி வெற்றிபெற்றால், வரலாறு மீண்டும் திரும்புகிறதோ மீண்டும் தொங்கு நாடாளுமன்றம் என்ற நிலைதானோ என்ற அச்சமும் வந்துவிடுகிறது இந்தியர்களுக்கு.
கார்கில் போர் நிகழ்ந்த காலத்தில் தேசப்பற்று இந்தியரை ஒருங்கிணைத்தது. ஆங்கிலயர்களை எதிர்த்து வெளியேறச் செய்ய காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைத்து போல, தேர்தல் சதுரங்க விளையாட்டின் செக்பாயிண்ட் செய்யும் வலிமை மிகுந்த எதிர்கட்சியை நாட்டின் முன்னேற்றதிற்காக உருவாக்க அதே ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கிரிக்கெட் விளையாட்டினால் ஒருகால் முடியலாம். ஏனெனில் நாமறிந்த வகையில் போரற்ற அமைதி காலத்தில் தற்கால இந்தியர் அனைவரையும் இணைப்பது கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே. மக்கள் விரும்பும் கிரிக்கெட் வீரர் எவராவது எதிர்காலத்தில் கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் இறங்கினால் இளைஞர்களை தம் பக்கம் இழுத்து ஒருங்கிணைத்து ஒரு சக்தி வாய்ந்த தேசிய எதிர்கட்சியை உருவாக்க இயலக்கூடும்.
கழுத்தில் முதல் முடிச்சு
விழுந்த வேளை
கதறினேன்
கண்ணீர் ஊற்றை பொழிந்தேன்;
குமுறினேன்
காரிருளில் மூழ்கினேன்;
உலகில் பெரும் அநீதம் அடைந்தவனாய்
அடிவயிற்றில் நெருப்புக் கங்கத்தை உணர்ந்தேன்!
இரண்டாவது விழுந்தது
மூன்றாவது விழுந்தது
தொடர்ந்து விழுந்தது;
இந்த வேளைகளில்
இந்த தருணங்களில்
இவ்வளவு சுருக்குதல்களிலும்
அவ்வளவு எளிதாக
அவ்வளவு சகஜமானவனாய்
அவிழ்த்துக் கொண்டே
நாட்கள் தோறும் நடைபோடுகிறேன்!
http://www.dreamstime.com/stock-photos-rope-three-knots-image18991113
கவிஞர் காவிரி மைந்தன்
· கனவுகளே.. ஆயிரம்கனவுகளே..·
நினைவுகளும் கனவுகளும் ஒன்றுக்குள் ஒன்று ஒன்றானவை. நிழல்களும் நிஜங்களும் போல! நினைவுப் பிரதேசங்களின் நீட்சியாக சில நேரம் கனவுப் பிரதேங்கள் அமைவதுண்டு! எண்ணக்கனவுகளில் வண்ணங்களிருந்தால் எழுகின்ற கனவுகள் ஆயிரமோ?
· வரிவரியாய்வாரிவழங்கும்கவிவள்ளல்பரம்பரையில்.. தன் சிந்தனைச் செம்மையால் தலைநிமிர்ந்த புதுக்கவிதைப் பிதாமகன் நா.காமராசன் ஆவார். இவரெழுதித் திரையில் மிதந்த கானங்கள் ஒருசிலதான்! அவற்றுள் ஒன்று இது எனலாம்!
· கற்பனை கொடிகட்டிப் பறக்க காதலின் ராஜ்ஜியம் நடக்கிறது பாருங்கள்! கவித்துவபாணியில் மலர்ந்த கற்பகத்தருவா இந்தப் பாடல்!
· மக்கள்திலகத்துடன் கதாநாயகி லதா இணைய நீதிக்குத்தலைவணங்கு திரைப்படத்தில் டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் மற்றுமொரு மகோன்னதப் படைப்பை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வார்த்திருக்கிறார்.
· மானுடவாழ்வின் ஜீவநதி காதல் என்பதால் அன்பின் சங்கமம்நடைபெறும்! என்னுயிர் நீயென உன்னுயிர் நானென உறவின் தத்துவங்கள் பிறக்கும்!
· வழக்கமான பாணியில் எம்.ஜி.ஆர் பாடல்களில் கனவுக் காட்சிகளுண்டு! வண்ண வண்ண ஆடைமாற்றங்கள் உண்டு! எழுதித்தாருங்களேன் ஒரு கனவுப்பாடலாக ஒரு காதல் பாடலை என்று கேட்டமாத்திரத்தில்..
· பொங்கிவந்த தமிழமுதை பூப்போன்ற வார்த்தைகளால் அங்குலம் அங்குலமாய் அழகியல் ஆராய்ச்சி நடத்தி என்றென்றும் நம் இதயத்தில் நிறைந்த இனியபாடல் பிறந்ததோ?
· கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என்
கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள் கொஞ்சம் வரச் சொல்லுங்கள்
கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் காதலனை
இங்கு வரவிடுங்கள் கொஞ்சம் வர விடுங்கள் (கனவுகளே)
· நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ
· முகம் என்று அதற்கொரு தலைநகரோ விழிகள் மூடிய கோட்டைக் கதவுகளோ இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே கைவளைவிலங்குகள் நொறுங்கட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே (கனவுகளே)
· உடை என்ற திரைமட்டும் விலகட்டுமே இன்ப உடல் எங்கும் நாடகம் நடக்கட்டுமே உறவென்ற தேர் இங்கு ஓடட்டுமே அதில் ஊடலின் கொடி ஒன்று அசையட்டுமே நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே அதில் நித்திரை இரவுகள் எரியாட்டுமே காதலில் கவிதைகள் வளரட்டுமே ஒருகாவியம் தொட்டிலில் தவழட்டுமே ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே…
· காமதேவனின் கோட்டைவரை.. படையெடுப்பு நடத்திய கவிஞரும் ஒரு காம ராசனே!
ஓராயிரம் போராட்டங்கள்…!
காலத்திடம்
வயதினை ஒப்படைத்துக்
பழுத்துச் செல்கின்றன முடிகள் ..!
ஒவ்வொரு வெள்ளை முடிகளுக்குள்ளும் நகர்கின்றது
நிகழ் காலத்தின் ஆயுள்
சொந்தமாக்கிக் கொண்டோம்
வாழ்வு
மின்னலாய் மறைகின்றது ..1
காலத்தின் கோலம் !
அவரவர் வயசு அடிப்படையில்
அவரவர் வாழ்வின் மறைவு ..!
விசாலம்
அப்பா, அம்மாவுக்கு”
குழந்தைகள் பிறக்கும் போது கள்ளங் கபடமில்லாமல்தான் பிறக்கின்றன, ஒரு சூதுவாதும் தெரிவதில்லை அதன்”கலகல வென்ற” சிரிப்பில் தெய்வத்தையே காண்கிறோம். அது வளர வளர பல விதமான புதுச் சொற்கள், கற்றுக்கொள்கிறது. தாயின் ஸ்பர்சத்தை அது உணர்கிறது, தன் தந்தையைப் புரிந்து கொள்கிறது. இந்தச் சமயத்திலிருந்தே அந்த மழலைக்கு ஐம்புலன்களுக்கும் தகுந்த ஆரோக்கியமான விருந்து அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும், சிலர் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சுவதற்குக்கூட சில வேண்டாத அமங்கலச் சொற்களை உபயோகிப்பார்கள். எனக்குத்தெரிந்த ஒரு பாட்டி தன் பேத்தியிடம் முறுக்கைக்காட்டுவாள்.அந்தப்பச்சை குழந்தை. ஏதோ வட்டமாகத்தெரிகிறதே என்று தாவி அதைப்பிடிக்கும்.அப்போது பாட்டி”யமகிராதகிடி நீ என்பாள்.எப்போதாவது பசி தாங்காமல் குழந்தை அழ”சரியான பிசாசு.அதன் அம்மா மாதிரி என்று தன் மாட்டுப்பெண்ணையும் சேர்த்துக்கொள்வாள்..இதே போல பல தாயார்களும் தங்கள் இயலாமையினாலும் பணவசதி இல்லாததினாலும் கணவரது தொந்தரவினாலும் தங்கள் குழந்தைகளை வசைமாரிப்பொழிவாள்.இவைகளெல்லாமே எதிர்மறை அலைகளை உண்டாக்கி அந்தச்சூழ்நிலையை மாசுப்படுத்துகிறது குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.தாய்மார்கள் குழந்தைப்பிறந்தவுடனேயே அதைக்கொஞ்ச மங்கலமான சொற்களையும் மரியாதையுடன் கூடிய சொற்றொடர்களையும் உபயோகிக்க, குழந்தையும் அதைக் கற்றுக்கொள்கிறது. குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை கிரஹிக்கும் சக்தி மிக அதிகம் எனக் குழந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பலர் குழந்தை முன்,”சனியனே, ஏன் இப்படி அழுது தொலைக்கிறே? என்றும்”எதற்கு இந்த ஒப்பாரி?” என்றும்,”மூதேவி, ஏன் இப்படி அழுது என் உயிரை வாங்கறே? என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். இதே போல், மடையா, முட்டாள், அடிப்பாவி போன்ற சொற்கள் பலமுறை கேட்க, குழந்தையின் செவியில் இவை நன்கு ஏற, அவை மனதிலும் படிந்து விடுகின்றன. நாம் பல முறைகள் நம் தவறை உண்ராமல் குழந்தையின் மேல் தவறைத் திணிக்கிறோம். குழந்தைகள் தவறு செய்வதற்க்கு நாம் தான் பொறுப்பு என்று தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அவற்றின் ஐம்புலன்களைத் தொட்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும். கண்ணிற்குப் பல வண்ணங்கள், வண்ணப்படங்கள், இயற்கைக் காட்சிகள் கடவுளின் படங்கள், தேசத்தலைவர்களின் படங்கள் போன்றவைகளை அடிக்கடிக் காட்ட, அவற்றிற்கு நல்ல அஸ்திவாரம் கிடைக்கிறது.சாதாரணமாக படங்களைக்காட்ட குழந்தைகள் அவ்வளவு ஆர்வம் காடடமாட்டார்கள். அதைக்காட்டி ஒரு கதையும் சேர்த்து அதை விளக்க நிச்சியம் மனதில் பதிந்துபோகும்
உம்”கண்ணா இங்கே பார் என் கையில என்ன இருக்கு தெரிமா? கரெக்ட்டா சொல்லு பார்ப்போம்” “தெரியலையே நீங்க சொல்லுங்க”
“இது ஒரு படம். நம் எல்லோருக்கும் இவர் தாத்தா ஆவார்.வட நாட்ல இவரை பாப்பூ என்பார்கள். தெரிஞ்சுதா?” “ஓ தெரிஞ்சுடுத்து காந்தித்தாத்தா சரியா அம்மா ‘
“ரொம்ப கரெக்ட். இவரப்போல் நீ வரைஞ்சு காட்டு.நீதான் நன்னா டிராயிங் வரயறயே வரைஞ்சு அப்பறம் அவரைப்பற்றி ஒரு நாலு வரிகள் எழுதி காட்டு.உனக்கு ஒரு பந்து பரிசாக கிடைக்கும்”
இது போல் பல ஆன்மீக தலைவர்களையும் விளையாட்டு வீரர்களையும் மிக எளிதாக மனதில் பதிய வைக்கலாம் ஒன்று மட்டும் தெரிய வேண்டும் நம் குழந்தைக்கு எதில் அதிக நாட்டம் இருக்கிறது என்பதைக் கண்டுப்பிடிக்க வேண்டும்.அதற்குத்தகுந்தாவாறு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்
காதுகளுக்கு நல்ல கருத்து செரிந்த பாடல்கள், தெய்வபக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள், தாலாட்டு போன்ற பாடலகள் ஆகியவற்றை அடிக்கடி கேட்கும் வாய்ப்புத்தர, குழந்தைகளும் அவற்றைச் சொல்லப் பழக்கப்பட்டுவிடுகின்றன.
அடுத்தது தொடு உணர்ச்சி. இதில் தாய் எல்லா உறவினர்களிடமும் தன் குழந்தையைக் கொடுத்துப் பழக்கப்படுத்தி, குடும்பத்திற்குள் ஒரு பாசப் பிணைப்பு உண்டாக்க முயல வேண்டும். சில தாய் தன் குழந்தையை தன்மாமியாரிடம் கூட தர மாட்டாள். அதற்கு பாலோ கிளாக்ஸோவோ கொடுக்க தானே பால் புட்டியை கொதிக்கும் நீரில் போட்டு கழுவி பின் அதைக்கொடுப்பாள்.என்றாவது ஒரு நாள் தன் மாமியாரிடம் குழந்தையை விட்டுப்போகும் நிலைமை வந்தால் பால் எப்படி கொடுக்க வேண்டும் என்று லெக்சரும் அடிப்பாள் பாவம் அந்த அத்தை.தான் அந்தக்காலத்தில் ஆறு குழந்தைகள் பெற்று மணி மணியாக வளர்த்த விதத்தை எண்ணுவார்.சாதுவான அத்தையானல் வீட்டுச்சூழ்நிலை கெடாது.இதுவே மாறி இருந்தால் அவ்வளவு தான்.பிள்ளையின் பாடு திண்டாட்டம்தான்.சாண்ட விச்சாகி நசுங்கிபோவான்.எல்லாவற்றையும் பச்சைக்குழந்தையும் கவனித்துப்பார்க்கும். .உறவினர்களின் நல்ல குணத்தைப் பல தடவை சொல்லி, அவர்கள் மீது அந்தக் குழந்தைக்கு அன்பைப் பெருக்க வேண்டும். இனிமையான சொற்கள் பழக்க வேண்டும். காலையில் கடவுள் வணக்கம் குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கப்படுத்தி விட்டால் கடைசி வரை அந்த நல்ல பழக்கம் இருக்கும். ஒரு தடவை நல்ல வித்து ஊன்றி விட்டால் கடைசி வரை நல்ல விளைச்சல்தான். சில வீடுகளில் தாயின் காரணமாக வீட்டின் நிம்மதி போகும். பாட்டி அன்புடன் தன் பேத்தியைக் கூப்பிட, பேத்தி,”தத்தித் தத்தி” நடந்து வர, பாட்டி அவளை ஆசையுடன் அணைத்து மடியில் அமர்த்த, ஒரு குரல் வருகிறது,”வாடி, எனக்கு ஆபீசுக்கு நாழி ஆச்சு, உன்னைக் க்ரெச்சில் விட்டு நான் போக வேண்டும், இப்போத்தான் ரொம்பக் கரிசனமாய் உன்னக் கொஞ்சக் கூப்பிடறா உன் பாட்டி. போதாதற்க்கு ‘கொல் கொல்’லுன்னு இருமல் வேறு” மருமகள் போட்ட போடலில் பாட்டி முகம் வாட, சூழ்நிலைக் கம்பீரமாக வாக்குவாதம் கிளம்ப மனஸ்தாபத்தில் முடிகிறது அன்றைய நாள்.
குழந்தைகளுக்கு அன்பு செலுத்தக் கற்றுக்கொடுங்கள்,” அத்தையிடம் போ, கண்ணா, நல்ல அத்தை, உனக்குத் தலை எல்லாம் வாரிவிடுவாள்” என்று சொல்ல அவள் அத்தையிடம் தாவிச் செல்வாள், இதேபோல் மாமா, தாத்தா என்ற உறவுகளைப் புனிதமாக்கி நன்கு பாசப் பிணைப்பை உண்டாக்குவது ஒரு தாயின் கையில் தான் இருக்கிறது. அன்பு செலுத்துவது என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு மகளை அல்லது மகனை வளர்த்து ஆளாக்கி, பல தியாகங்கள் செய்து கடைசியில் அந்த வயதானவர்கள் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்றுதான், அதுவும் பேரக் குழந்தைகளின் பந்தம், அதன் சிறப்பே தனிதான்.
குழந்தைகள் வளர்ப்புக்குப் பெற்றோர் பல தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு எம்.டி. படித்த டாக்டர் பெண்மணி தன் குழந்தை பிறந்தவுடன் தன் கிளினிக்கை வேறு ஒரு நண்பருக்கு ஒரு ஐந்து வருடங்கள் கொடுத்துவிட்டு தான் அந்தக் குழந்தையை நன்கு வளர்த்தாள், குழந்தைக்குத் தாயின் அணைப்பு மிகவும் தேவை. பிறந்ததிலிருந்தே அது தாயின் புடவைத் தலைப்பு, அல்லது தாலிக்கொடி, சங்கிலி என்று ஏதாவது அம்மாவிடம் பிடித்துக் கொள்ளும், அப்போது தாய் சொல்லே வேதவாக்காக எடுத்துக்கொள்ளும். இந்த நல்ல சமயத்தில் உண்மை பேசுதல், பணிவுடன் பேசுதல், பிறர் சொற்களைக் கேட்டல் எதிர்த்துப் பேசாதிருத்தல் என்பது போல் கற்றுக்கொடுக்க வேண்டும் சிலர் வீட்டிலிருந்தபடியே வெளியில் யாராவது வேண்டாதவர் வந்தால்”அப்பா வீட்டில் இல்லைன்னு சொல்லுடா” என்று தன் மகனுக்குப்பொய் பேச கற்றுக்கொடுப்பார்கள் சில சமயம் பள்ளிக்கு போக நாழியாக ஹோம் வொர்க் செய்யாமல் இருக்கும் செல்ல மகன் அல்லது மகளுக்கு” செல்லமே ஏண்டா நேத்திக்கே இதை செய்யலே!சரி சரி அழாதே நான் கணக்கு போட்டுத்தரேன்”என்று குழந்தை எழுத்துப்போலவே காப்பி அடித்து ஹோம் வொர்கை முடிப்பார்கள்.நான் ஆசிரியையாக இருக்கும் போது இது போல் கையும் களவுமாக பல அம்மா அப்பாக்களைப்பிடித்திருகிறேன்
அடுத்தது காமம். குழந்தைகளுக்கு வயது வர, முன்பு அவர்களுக்குக்குளிப்பாட்டி உடை அணிய உதவும் பெற்றோர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைத் தானே தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.தவிர அம்மா அப்பாவும் தங்கள் அந்தரங்க காதலை குழந்தைகள் முன் செய்ய ஒரு தடவைக்கு நாலுதடவையாக யோசிக்க வேண்டும் எனக்குத்தெரிந்த தம்பதிகள் தங்கள் குழந்தைகள் முன்பே ஒருவர்க்கொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக்கொள்வார்கள். குழந்தைகளும் அந்தக்காட்சியைப் பார்க்கலாமா வேண்டாமா என்று திண்டாடும். இது தில்லியில் ஒரு பிறந்த நாள் பார்ட்டியில் பார்த்தேன். அதுவும் இந்தக்கால குழந்தைகள் எல்லாவற்றிலுமே ரொம்ப வேகம்.சில அந்தரங்க விஷயங்கள் இலை மறைவு காய் மறைவாகத்த்தான் இருக்க வேண்டும்.தம்பதிகளுக்கு தனியாக படுக்கை அறை என்று இருப்பதே இதற்காகத்தான்.
அதில் படுத்தபடி விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதோ. தட்டில் சாப்பாடோ அல்லது கொரிக்க பட்சணமோ வைத்துக்கொள்ள படுக்கை அறை இல்லை.
பெற்றோர்கள் இப்படிச்செய்ய குழந்தைகளும் தங்கள் அறைகளை சாப்பாடு,கணினி. படிப்பு. விளையாட்டு என்று எல்லாவற்றுக்கும் உபயோகப்படுத்துக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் அல்லது உறவினர்களுடன் பேசி அளவளாக நேரம் கிடைப்பதில்லை.. தவிர பெற்றோர்களும் இரவு சாப்பிடும் நேரமும் லீவு நாட்களில் காலை மாலை சாப்பிடும் நேரமும் ஒரு குறிப்பிட்ட நேரமாக்கி அதில் அப்போது குழந்தைகளுக்கு சாப்பிடும் முன் அந்த அன்னத்தை நமக்கு வழங்கும் இறைவனை ஒரு நிமிடம் எண்ணி நன்றியைத்தெரிவித்து உண்ண கற்றுக்கொடுக்க வேண்டும்.இதைக்கிருஸ்துவர்கள் செய்வதைக் கண்டிருக்கிறேன். குடும்ப நபர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மிகவும் அனுபவித்து சாப்பிடவேண்டும்.
இதைப்போல் பல சொல்லிக்கொடுக்க குழந்தைகளுக்கு, பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்து விடும். உதரணமாக வீர சிவாஜியின் தாயை எடுத்துக்கொள்ளாலாம்.
அன்பு என்ற தோணியில் குழந்தைகளை வைத்து, தியாகம், பொறுப்புணர்ச்சி ஆகியவற்றுடனான துடுப்பால் ஒட்ட சூறாவளி வந்தாலும் தாண்டி நம் வாழ்க்கையில் அமைதியை அடையலாம், குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்..
காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள.
-திருக்குறள்- 527 (சுற்றந்தழால்)
புதுக் கவிதையில்…
கவளம் சோறு கிடைத்தாலும்,
கரவாதே
கரைந்தழைத்துக் கூட்டமாய்க்
கலந்து உண்ணும் காக்கைபோல்,
சுற்றம்சூழப் பகிர்ந்துண்ணும்
இனியவர்களுக்கு
இன்னும் சேரும்,
என்றும் நிலைக்கும் செல்வமே…!
குறும்பாவில்…
கூட்டத்தோடு சேர்ந்துண்ணும் காக்கையாய்ச்
சுற்றம் பேணுவார்க்குச்
சேருமே செல்வம் எல்லாம்…!
மரபுக் கவிதையில்…
கொஞ்சமாய் உணவு கிடைத்தாலும்
கூட்டம் சேர்த்தே இனத்துடனே
கொஞ்சமாய்ப் பகிர்ந்துதான் உண்டிடுமக்
காக்கை போலச் சுற்றமுடன்
நெஞ்சம் நிறைந்திடும் அன்புடனே
நமக்குக் கிடைப்பதைப் பகிர்ந்துண்டால்,
பஞ்ச மேது மில்லாமல்
பற்பல செல்வம் சேர்ந்திடுமே…!
லிமரைக்கூ…
சுற்றம் அழைத்துச் சேர்ந்துண்ணும் காக்கை,
பெற்றதை மகிழ்வொடு பகிர்ந்துண்ணக்
கற்றவர் பெறுவரே திருமகள்தன் நோக்கை…!
கிராமியப் பாணியில்…
கத்துக்கோ கத்துக்கோ
காக்கா கிட்ட கத்துககோ,
கூட்டங் கூடி எரதிங்கத
காக்கா கிட்ட கத்துக்கோ..
கொஞ்சொம் எரதான் கெடச்சாலும்
கொலத்த யெல்லாங் கூப்புட்டு
கூடச் சேந்து சாப்புடுதே..
கத்துக்கோ கத்துக்கோ
காக்கா கிட்ட கத்துககோ,
கெடச்ச பொருள மறைக்காம
குடும்பத் தோட அனுபவிச்சா
கூட வருமே செல்வமெல்லாம்
கூடி வருமே செல்வமெல்லாம்..
இத
கத்துக்கோ கத்துக்கோ
காக்கா கிட்ட கத்துக்கோ…!
கிரேசி மோகன்
தனன தனதான தனன தனதான
தனன தனதான தனன தனதான -தனதான….
—————————————————————————————-
வயதில் உருவாகும் வளையும் முதுகேறி
விசனம் பிணிரோகம், வளரும் புவிமோகம் -அதுபோக
உழலும் விவகாரம் உணர அவகாசம்
குருவின் உருவாகி பிறகு உபதேசம் -தரநீயும்
தயவு புரிவாச துளசி அணிமார்ப
வனஜ மனையோடு வினதை மகனேறி-வரவேணும்
கயவன் துரியோத னனுடன் குலம்சாய
குதிரை கடிவாளம் கொளும்வி ஜயன்தேரின் -பெருமாளே
———————————————————————————————————————
எஸ் வி வேணுகோபாலன்

தினம் பார்த்துக் கொண்டிருந்த 
பறவைகளுக்காக
ஒரு தினம் கொண்டாடுகிறது சமூகம்
வாழும்போது புறக்கணிப்பவர்களை
மறைந்தபிறகு கும்பிடுவதுபோல
கேட்கத் தவறிய சங்கீதத்தை
எழுத்தில் வாசித்து ஏங்குவது போல
வறண்டு போன ஆற்றின் மணலில்
நதியின் பெயரை எழுதுவது போல
ஆனால், பாவம்
கடைசி தலைமுறை குருவிகள்
அவை அறியாது
இவை எதையும்
இவற்றுக்குப் பின் வருவதையும் !
நம்முடைய வல்லமை இதழின் ஆசிரியர் குழும உறுப்பினர் திரு. தூரிகை சின்னராஜ் அவர்கள் சங்கரதாஸ் ஸ்வாமிகள் இயல், இசை, நாடகசபா வழங்கும் “சேவா பூஷன்” விருது பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . திரு சின்னராஜ் அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
“என் படைப்புகள், மற்றும் குழந்தைகளுக்கான எதிர்காலச் சேவைகளை சமுதாய வளர்ச்சிக்காகப் பயன்படும் வகையில் நகர்த்தவேண்டும் எனும் பொறுப்பும் எனக்கு அதிகரித்து இருப்பதையும் நான் உணர்கிறேன்” என்கிறார் இவர்.
விருது வழங்குவோர்: நடன இயக்குனர். புலியூர் சரோஜா, இயக்குனர் இமயம் எஸ்.பி.முத்துராமன், முனைவர்.கோ.ராதா.
தூரிகை சின்னராஜ் .
T.CHINNARAJ
MA.,MA.,M.L.I.Sc., TTC(Art).,
Librarian & Creative Head.
Learning Resource Centre,
SATCHIDANANDA JOTHI NIKETHAN INTERNATIONAL SCHOOL,
Ooty Main Road, Mettupalayam-641 305.
அன்புடன்
பவள சங்கரி