படக்கதை – 1 ஆரம்பம்
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்
+++++++++++++++++
படக்கதை – 1 ஆரம்பம்
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்
+++++++++++++++++
சு. கோதண்டராமன்
வேத மொழி
பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர். இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம், வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. நிருக்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளிலே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் சுற்ற பின்னரே, ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்ட நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வார் மிக மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் ஸாயணரென்ற வித்யாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருக்தத்தையுமே ஆதாரமாகவுடையது. பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப் பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருக்தத்திலோ என்றால் பெரும்பாலும் வேத பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கிறது. – பாரதி
ஸம்ஹிதைகள் பழைய, மிகப் பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன. ஆனால், இந்த உவமானம் முற்றிலும் பொருந்ததாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே. ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் – அதாவது, ஸம்ஹிதை மாத்திரம் – தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. – பாரதி
ரிஷிகள் உள்ளத்தைத் தெளிவு செய்து கொண்டோர். ஆதலால் அடிவரை எளிதாகப் பாய்ந்து அங்கிருந்து மந்திரம் கொண்டுவந்தனர். – பாரதி.
ரிக் வேத மொழி பாணினியின் ஸம்ஸ்கிருதத்திலிருந்து மிக வேறுபடுகிறது. எனவே ஸம்ஸ்கிருதம் மட்டும் கற்றால் வேதத்தைப் படித்துவிட முடியாது. பிற்கால ஸம்ஸ்கிருத இலக்கிய வழக்கில் இல்லாத சொற்கள் வேதத்தில் பல உண்டு. சில சொற்களுக்கு வேதத்தில் பொருள் வேறு, பிற்கால இலக்கியத்தில் வேறு பொருள். இலக்கண விதிகளும் சில இடங்களில் வேறுபடுகின்றன.
இத்தனைக்கும் மேல் பெரும் இடர்ப்பாடு என்னவென்றால் வேத ரிஷிகள் சில இடங்களில் இலக்கணத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஒரு உதாரணம் பார்ப்போம்.
மிகுந்த வலிமையுடைய இந்திரனுக்கு பிரார்த்தனைகளை அனுப்புங்கள். பசுக்கள். இந்திரனுக்கு நிறைய தோத்திரங்களைச் செய்யுங்கள்.1
இந்த மந்திரத்தில் பசுக்கள் என்பது எந்த வாக்கியத்தோடும் ஒட்டாமல் நிற்கிறது. நம்முடைய பசுக்கள் செழிப்பதற்காக என்று சாயணர் விளக்கம் தருகிறார். பசுக்கள் தரும் பாலைக் கொண்டு என்றோ பசுக்களைப் பலியிட்டு என்றோ கூட விளக்க முடியும். மூன்றுமே ரிக் வேதத்தின் பிற பகுதிகளில் சொல்லப்பட்ட கருத்துடன் ஒத்துப் போகின்றன. ரிஷியின் மனதில் இருந்த கருத்து எது என்பதை அறிய முடியவில்லை.
ரிஷிகள் கவிதை எழுதப் போகிறேன் என்று திட்டமிட்டு உட்கார்ந்து எழுதிய கவிதைகள் அல்ல இவை. அருள் நிலையில் அவர்கள் மனதில் தோன்றியவை. அதனால் அதில் இலக்கணத்தை எதிர்பார்க்க முடியாது.
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா,
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா அந்தக்
கிறுகிறுப்பில் உளறு மொழி பொறுப்பாயடா
என்று கவிஞர் தேசிய விநாயகம் பிள்ளை பாடினார். தெய்வ ஆவேசத்தின் கிறுகிறுப்பில் பாடிய வேத ரிஷிகளின் மொழி, இலக்கணம் பற்றிக் கவலைப்படாத மொழியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
இன்னொரு காரணமும் இருக்கலாம். காலப் போக்கில் மனப்பாடம் செய்தோரின் கவனக்குறைவு காரணமாக ஓரொரு எழுத்து மாறியிருக்கலாம். அது இலக்கணப் பிழையாகக் கருதப்பட்டிருக்கலாம்.
இது ரிஷியின் இலக்கணப் பிழையா, அல்லது ஏடெழுதியவரின் கைப் பிழையா அல்லது மனப்பாடம் செய்தவரின் நினைவுப் பிழையா என்பது பற்றிக் கவலைப் படாமல் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பாடத்தில் முடிந்த வரை பொருள் அறிய முயல்வோம்.
வேதத்தில் சில பாடல்கள் மிகச் சாதாரணமானவை. உதாரணமாக, ரிக் 5.27 என்ற சூக்தம் அக்னியைக் குறித்துப் பாடப்பட்டதாக அனுக்ரமணிகா (அட்டவணை) சொல்கிறது. பொருளைப் பார்த்தால்- த்ரயருணன் என்ற அரசன் எனக்கு ஒரு வண்டியும் இரண்டு காளைகளும் நூறு பொற்காசுகளும் இரண்டு குதிரைகளும் கொடுத்துள்ளான். ஏ அக்னியே, அவனுக்கு மகிழ்ச்சி கொடு என்று இவ்வாறு செல்கிறது.
பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அரசனிடம் பரிசு பெற்றுப் புகழ்ந்து பாடியதாக அறிகிறோம். அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இந்து சமயத்தின் ஆணி வேர் என்று சொல்லக் கூடிய ஆன்மிகக் கருத்து இதில் என்ன இருக்கிறது? புரவலரைப் போற்றும் இந்தப் பாடலுக்கு வேதம் என்ற பெரிய மரியாதை எதற்கு? என்று தோன்றுகிறது.
இலக்கணப் பிரச்சினைகள் இல்லாமல் எல்லாச் சொற்களும் பொருள் தெரிந்த சொற்களாக இருக்கும்போது கூட பல இடங்களில் சொற்களின் பொருளைத் தொகுத்துக் கூறும்போது இடர்ப்பாடுகள் வருகின்றன. பல பாடல்கள் விடுகதை போல உள்ளன. ஒரு உதாரணம் பார்ப்போம்.
காலில்லாதவள் காலுள்ளவர்களுக்கு முன்னதாகப் போகிறாள். தலையை அசைய வைத்து, நாக்கைப் பேச வைத்து முப்பது அடிகள் பயணிக்கிறாள்.2
இதற்கு சாயணர் அளிக்கும் விளக்கம்- சுயமான அசைவு இல்லாமல் சூரியனால் தள்ளப்பட்டு வருவதால் காலில்லாதவள் உஷா (வைகறைப் பொழுது). கால் உள்ள பிராணிகள் எழுந்து சஞ்சரிக்கும் முன்னர் அவள் புறப்பட்டு விடுகிறாள். சத்தமி்ல்லாமல் தூங்கிக் கொண்டிருந்த மக்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிப் பேச வைக்கிறாள்.
இது பொருத்தமாகத் தோன்றுகிறது என்றாலும் இது தான் ரிஷியின் மனதில் இருந்த எண்ணமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள முடியவில்லை.
அசுவினி தேவர்களைக் குறித்துப் பாடப்பட்ட ரிக் இது.
இந்தப் பிரார்த்தனை உசத்யனின் மகனாகிய என்னைக் காப்பாற்றட்டும். இந்த இரண்டு பறவைகளும் என்னைக் கறக்காமல் இருக்கட்டும். பத்துப் பத்தாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த விறகுகள் என்னை எரிக்காமல் இருக்கட்டும். உங்கள் இருவருடனும் கட்டப்பட்ட இது தானாகவே பூமியைத் தின்கிறது.3
அந்தப் பறவைகள் என்பது இரவும் பகலும். அவை ரிஷியின் சக்தியை வலுக்கட்டாயமாக உறிஞ்சிவிடுகின்றன. வயதான காலத்தில் ரிஷியின் குனிந்து நடக்கும் உடல் பூமியைத் தின்பதாக சாயணர் குறிப்பிடுகிறார். சாயணர் உரை இல்லாவிட்டால் விடுகதை போன்ற இத்தகைய பாடல்களைப் புரிந்துகொள்ள முடியாது. இதில் வரும் விறகு எதைக் குறிப்பது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மற்றொரு மந்திரத்தின் மொழிபெயர்ப்பு இது.
இன்றும் இல்லை, நாளையும் இல்லை, யாரறிவார் இந்த அற்புதத்தை? அடுத்தவர் மனமோ அலை பாய்கிறது. கற்றது யாவும் மறந்து போயின.4
இந்திரன் தனக்கு ஹவிர் பாகம் கிடைக்கவில்லை என்று வருந்தும் போது அகஸ்தியரிடம் இதைச் சொல்வதாகச் சாயணர் கூறுகிறார். இதற்கு முன் பின் உள்ள மந்திரங்களின் துணை கொண்டு பார்த்தாலும் இதற்கு என்ன பொருள் என்பது விளங்கவில்லை.
இது போன்ற ஆயிரக் கணக்கான மந்திரங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் பண்ணிக் கொள்ள இடம் அளிக்கின்றன. அதனால் வேதத்தின் உண்மையான கருத்து என்ன என்பதே அறிய முடியாமல் அது மறையாகவே இருக்கிறது.
இத்தகைய விடுகதை போன்ற மந்திரங்களை நீக்கிவிட்டு மற்ற மந்திரங்களைக் கொண்டு ரிக் வேதத்தின் சாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வோம்.
குறிப்புகள்
இரண்டாவது பத்தியில் கொடுக்கப்பட்ட எண்கள் முறையே ரிக் வேதம் மண்டலம், சூக்தம், மந்திரத்தைக் குறிக்கும்.
1 8.96.10. (back)
2 6.59.6 (back)
3 1.158.4 (back)
4 1.170.1 (back)
படத்திற்கு நன்றி :
http://anmeegam.blogspot.in/2012/07/blog-post.html
கவிஞர் காவிரி மைந்தன்
உலக உயிர்களின் ஆதார ஸ்ருதி அன்பு மட்டுமே! அன்புமன வீணைமீட்டி எழும் ஆனந்தராகத்தில்தான் இன்பமயமிருக்கும்! இவ்வுலகம் இயக்கம் பெறும்! ‘நீ’ ‘நான்’ என்பதைவிட ‘நாம்’ என்பதில் சுகமிருக்கும்! பொருளிருக்கும்! இறைவன்மீது கொள்கின்ற பக்தி என்பது என்ன? அன்பின் மிகுதிதானே? எனவேதான் அடியார்க்கு அடியாராக இறைவனே திருவிளையாடல் புரிந்ததாக புராணங்கள் சொல்கின்றன.
‘இன்றுபோல் என்றும் வாழ்க’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். நாகரீக மோகத்தில் நடைபெறும் ஒரு கேளிக்கை வரவேற்பில் பாடுகின்ற பாட்டு! எத்தனையோ பக்கங்களில் எழுதப்படவேண்டிய கருத்தோவியத்தை தன் தூரியைால் கவிதையாக்கி ஒற்றைப்பாடலில் நிலைநிறுத்திக் காட்டியிருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்!
அறவழியில் செல்ல வேண்டிய மனத்தை ஆர்ப்பரிக்கும்் நவநாகரீக மோகம்வந்து அலைக்கழிப்பதை அடையாளம் காட்டுகிறார். ஏழைகள் வாழ்வில் ஒரு பக்கம் இல்லாமையால் வாடுகிற போது, செல்வந்தர்கள் மறுபக்கம் அளவின்றி செலவிடுவதை அழகாக எடுத்துக்காாட்டிய இனிய பல்லவி..
‘அன்புக்கு நான் அடிமை’ என்கிறது!
தமிழக மக்களின் ஏகோபித்த வாழ்த்துக்களோடு அரியணையேறவிருந்த மக்கள் திலகத்தின் திரைவரலாற்றின் கடைசிப் பக்கங்களில் இடம்பெற்ற பாடல்! ‘இன்றுபோல் என்றும் வாழ்க’ – இதிலே கனிந்த நல் மனதில் தோன்றும் கருணையின் வார்த்தைச் சரங்கள் சுகம் சுகமாய் பவனி வரும் சுந்தரத்தமிழைக் கேளுங்கள்! கானக்குரலெடுத்து கவரும் கே.ஜே.யேசுதாஸ் பாடிடும் பாடலாய்.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் நம்மை ஈர்த்திடும் இனிய பாடல்! நல்லவர் உள்ளமெல்லாம் வள்ளலைலப் போற்றியிருக்க.. நற்றமிழில் பாடல் இயற்றி நலமுறத் தந்தாய் வாழி என முத்துலிங்கத்தைப் பாராட்டலாமே!
அன்புக்கு நான் அடிமை …
அன்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
முகங்கள் நான் பார்க்கிறேன்
இதயம் எங்கும் பாலைவனம் போல்
இருக்கும் நிலை பார்க்கிறேன்
அன்பு பணிவு அடக்கம் எங்கே
தேடி பார்த்தேன் தென்படவில்லை
(அன்புக்கு நான் அடிமை )
குடிக்கும் நீரை விலைகள் பேசி
கொடுக்கும் கூட்டம் அங்கே
இருக்கும் காசை தண்ணீர் போலே
இரைக்கும் கூட்டம் இங்கே
ஆடை பாதி ஆளும் பாதி
அறிவும் பாதி ஆனது இங்கே
(அன்புக்கு )
உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று
உறவு கொண்டீர்களே
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை
மறந்து போனீர்களே
நாகரீகம் என்பது எல்லாம்
போதையான பாதை அல்ல
(அன்புக்கு )
குன்றக்குடி அடிகள்
57. “மெய்ப்பொருள் காண்பதறிவு”
இந்த உலகம் பொருள்களால் ஆயது. பொருள்கள் தம்முள் வேறுபட்ட தனித்தன்மைகள் உடையன. சில பொருள்கள் வேறுபட்டு விளங்கினாலும் பிறிதொரு பொருளுடன் ஒன்றும் இயல்புடையன. சில தனித்தன்மை பெற்றே விளங்குவன.
மாந்தர் வாழ்க்கை பொருள்களுடன் தொடர்புடையது வாழ்வின் துறைதோறும் வாழ்வு முழுவதும் பொருள்களுடன் யாதானும் ஒரு உறவு இல்லாமால் வாழ்க்கை அமைவதில்லை; அமையாது; அமைதல் முடியாது. அதனால் தான் திருக்குறள், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றது.
பொருள்களால் ஆயது வாழ்க்கை. இந்தப் பொருள்களை பொருளின் தன்மைகளை உள்ளவாறறிந்து அப்பொருள் தன்மைக்கு ஏற்பவும் வாழ்க்கைக்குரிய வகையிலும் பயன்படுத்த அறிந்து கொள்ள வேண்டும். பொருள்களின் தன்மையறிதலுக்குத் தனித்திறனும் பயிற்சியும், அறிவும் வேண்டும். பல பொருள்கள் தோற்றமான நிலையிலேயே தொடர்ந்து இருப்பதில்லை. மாறும் தன்மை உடையன உண்டு. சில பொருள்கள் நிலையாயின போலத் தோன்றும்; பெயர் பெற்று விளங்கும்.
ஆனால் நிலையில்லாதவனாகிப் போதலும் உண்டு. சில நன்மை தருவது போலக் காட்டி துன்பம் தரும், சில துன்பம் தருவது போலக் காட்டி இன்பம் தரும். சான்றாக நமது உடலுக்கு “மெய்” என்று பெயர். அனால், இது உண்மையல்ல. காலத்தால் கேடுறுதலாம். சர்க்கரை இனிமையானது. சர்க்கரையால் விளைவது பெருந்துன்பம். வெந்தயம் கசப்பான பொருள். ஆனால் வாழ்க்கைக்கு நலம் தருவது; இன்பம் தருவது.
குளிர்ச்சியானவையாக இருப்பவை சூட்டையே தருகின்றன. சூடாக இருப்பவை குளிர்ச்சியையே தருகின்றது. ஆதலால் பொருளின் தோற்றம் பார்க்காமல் பொருளின் தன்மை, அப்பொருளால் விலையும் பயன் ஆகியன தெரிந்து அதற்கேற்பப் பயன்படுத்தல் வேண்டும். இத்தகு அறிவு சராசரி மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. ஞானிகளுக்கே உண்டு.
சாதாரண மக்கள் தோற்றதால் கவர்ச்சிக்கப்படுவர். தற்காலிகமானவையாக இருப்பினும் உடனடியாக பலன்களை எதிர்பார்ப்பர். எப்பொருளையும் ஆழ்ந்து நோக்குவதில்லை. வேளாண்மைக்குப் பயன்படும் இரசாயன உரங்கள் உரமே இல்லை.
இரசாயன உரங்கள் ஒருவகைத் தூண்டு சக்தியேயாகும். ஆனால் நமது மக்கள் இவைகளை உரம் என்று நம்பினார்கள்; இந்த உரத்தையே நம்பி, குப்பை உரம் தயாரிப்பதை மறந்தார்கள். இதனால் நிலத்தின் பூசாரம் குறைந்ததுதான் மிச்சம். அறியாமை அறிவாக ஏற்றுக் கொள்ளப்படுதல் இன்றைய பெரு வழக்கு. இதற்கு அப்பரடிகள் ஒரு கதை கூறி விளக்கினார்.
ஆமை சாப்பிடும் மக்கள், ஆமையை உலைப் பானையில் இட்டு வேக வைத்தார்கள். உலைப் பானையில் தண்ணீர் இளஞ்சூடாக இருக்கும் பொழுது ஆமை இன்ப போதையில் துள்ளி விளையாடும். ஆனால் அந்தச் சூடு இன்பமாக இருக்கும் பொழுது நீடிக்கப் போவதில்லை. விரைவில் கொதி நிலை மாறும்; ஆமை அழியும்.; இதனை உணரும் சக்தி ஆமைக்கு இல்லை. ஆமைக்கு மட்டுந்தானா? மனிதர்களில் பலர் இப்படிதான் வாழ்கின்றனர்.
பெரும்பான்மையான மக்கள் காலப்போக்கில் துன்பம் விளவிப்பனவற்றையே இன்பமெனக் கருதி வாழ்ந்து ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதனைத் திருவள்ளுவர்,
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” (திருக்குறள் – 355) என்றார்.
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
மின்பதிப்பாக்க உதவி: தேமொழி
செண்பக ஜெகதீசன்
நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும்புனலி
னீங்கி னதனைப் பிற.
-திருக்குறள் -495(இடனறிதல்)
புதுக் கவிதையில்…
இருக்கும்
இடத்தை வைத்துத்தான்
இருக்குது எதிலும் வெற்றி..
நீரிலிருக்கும் வரைதான் முதலை
எமனாகும்
எல்லா உயிர்க்கும்..
நீங்கி வெளியே வந்தால்,
அது
இரையாகும்
பிற உயிர்க்கே…!
குறும்பாவில்…
நீரிலிருந்தால் வென்றிடும் முதலை,
நீங்கி வேறிடம் வந்தால்
இடருறுமே பிற உயிர்களால்…!
மரபுக் கவிதையில்…
தண்ணீர் நிறைந்த நீர்நிலையில்
தங்கி வாழும் முதலையது
எண்ணம் போல வெல்லும்பிற
எல்லா உயிரையும் தன்பலத்தால்,
தண்ணீர் நீங்கி வெளிவந்து
தரையில் நின்று போரிட்டால்
கண்டிடும் தோல்வியே பிறவுயிரால்,
கற்றிதை செயல்படு இடனறிந்தே…!
லிமரைக்கூ…
நீரில் இருக்கும்வரைதான் வென்றிடும் முதலை,
தரையிலது தோற்றிடும்..
இடனறியாத செயல்பாட்டால் இழந்திடுவாய் முதலை…!
கிராமிய பாணியில்…
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சிக்கோ
மொதலக்கத தெரிஞ்சுக்கோ..
அது
இருக்கும்வர தண்ணிக்குள்ள
இல்ல அதுக்கு எதிரிதான்,
எல்லா உயிரும் அடக்கந்தான்
எப்பமுமே வெற்றிதான்..
ஆனா,
தண்ணியவுட்டு வெளியவந்தா
தலகீழா மாறிப்போவும்,
எல்லா உயிரும் எதிரிதான்
எதுத்துநின்னா தோல்விதான்..
அதால
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சிக்கோ
கருத்தநல்லாத் தெரிஞ்சக்கோ,
நடந்துக்கோ நடந்துககோ
எடந்தெரிஞ்சி நடந்துக்கோ…!
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பு கலந்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே அடுத்தொரு வார முடிவில் மகிழ்வுடன் வந்திருக்கிறேன்.
ஜனநாயகம் , தேர்தல் , வாக்கெடுப்பு என உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எனக் கருதப்படும் இந்திய மண்ணின் தேர்தல் திருவிழா அரங்கேறும் வேளையிது.
எனது தமிழக உறவுகள் யாரைத் தொடர்பு கொண்டாலும் அனைவரும் வாக்களிப்பதைத் தமது முதற்கடமையாகக் கொண்டுள்ளார்கள் எனும் செய்தி மனதுக்கு மிகவும் மகிழ்வூட்டுவதாக இருக்கிறது.
ஈழத்திருமண்ணை பிறந்த மண்ணாகவும், இங்கிலாந்து நாட்டின் வாழ்விடப் பிரஜையாகவும் இருக்கும் எனக்கு ஏன் இந்தியத் தேர்தலில் இத்தனை அக்கறை எனக் கேள்வி எழுவது சகஜமே !
இந்திய அரசியலின் தாக்கம் எனது தாய்மண்ணின் சகோதரர்களின் வாழ்வுடன் சம்மந்தப்பட்டது என்பது முதற்காரணம்.
இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையில் இன்று முன்னனி வகிக்கும் நாடுகளில் மிகவும் முக்கியமான நாடாக இந்தியத் திருநாடு திகழ்வது அடுத்தொரு காரணமாகிறது.
ஈழத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளின் பின்னர் இன்றைய நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒரு நிம்மதியான, நிரந்தரமான, கெளரவமான, தமது வாழ்வாதரங்களை தாமே நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்.
அதற்கு ஒரு திடமான, நிலையான மக்களின் அனுமதி கொண்ட அதிகாரமிக்க இந்திய அரசு அவசியம்.
நான் அரசியல் பாகுபாடற்றவன்.
இந்திய அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை உண்மையாகவே விரும்புகிறார்கள்.
அவர்களின் அணுகுமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் காணப்படலாம். ஆனால் அனைவரின் இறுதி நோக்கமும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வே.
இதுவே யதார்த்தமாகும்..
தத்தமது அரசியல் காரணங்களுக்காக, தமது கட்சிகளின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் மற்றவர் மீது வீசும் சரமாரியான குற்றச்சாட்டுகளும் ஏனைய கொள்கை வேறுபாடுகளும் அவர்களின் காலத்தின் கட்டாயம்.
வித்தியாசங்களில் விளைவதுதான் மனித வாழ்க்கை. மனதுக்கு மனம், மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது இயற்கை நியதி. ஆனால் சத்திய உண்மைகள் நிரந்தரமானவை அவை காலத்தால் அழியாதவை.
தேர்தல் காலங்களில் தேவைகளின் நிமித்தம் காலக்கட்டாயத்தின் பணிப்பில் வேறுபாடுகள் விளக்கேற்றி வெளிச்சமூட்டப்படுகின்றன.
ஆனால் இந்தியத் தேர்தலின் வெற்றியில் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் ஏன் மொத்த இலங்கையின் எதிர்கால சுபீட்சமுமே தங்கியுள்ளது. எனலாம்.
அடுத்ததாக இன்றைய உலகப்பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கடந்த சில வருடங்களாக உலகின் முன்னனி நாடுகள் கண்ட பொருளாதார வீழ்ச்சியிலும் கூட இந்திய பொருளாதார வளர்ச்சியையே கண்டது.
இன்றைய உலக்ப்பொருளாதாரச் சந்தையில் முன்னனி நாடாக இந்தியப்பெருந்தேசம் விளங்குவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும்..
இந்தியா காணும் பொருளாதார வளர்ச்சி சமுதாயத்தின் அடிமட்ட மக்களைச் சென்றடைகிறதா இல்லையா என்பதைப் பற்றி அலசும் வகையான ஆற்றலும், இத்தகையதோர் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை போட்டியிடும் எந்தக் கட்சிகளிடமும் உள்ளதா என்பதைப் பற்றிக் குறிப்பிடுவதற்கான அரசியல் முதிர்ச்சியும், இந்திய அரசியல் வரலாற்றுப் பின்னனி பற்றிய பூரண அறிவு இல்லாத என்னிடம் இல்லை என்பதுவே உண்மை.
இருப்பினும் மத்தியில் ஒரு உறுதியான அரசாங்கம் அமைந்திருப்பதால் மட்டுமே இந்தியாவின் இந்த முன்னனி நிலை உலகப்பொருளாரச் சந்தையில் நீடித்திருக்கும் என்பதைத் நான் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
இந்திய உபகண்டத்தின் அரசியலும் இவ்வுபகண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் ஜனநாயக அரசியல் கட்டமைப்புகளும் ஒரு சுதந்திரமான , உறுதியான இந்திய அரசாங்கத்தின் துணையுடன் தான் முன்னெடுத்துச் செல்லப்படமுடியும் என்பதும் அரசியல் அவதானிகள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகிறது.
இத்தகைய வலுவான காரணங்களின் அடிப்படையில் இந்தியத் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவனாகிறேன்.
இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல அவர்கள் பெறும் வெற்றி ஜனநாயக வரம்புகளுக்குட்பட்டதாக சுதந்திரமான இந்திய அரசியல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி
பத்மநாபபுரம் அரவிந்தன் –
ஒப்பிடல் என்பதே
மனச் சிதையின் குறியீடு
அவன் போல் இவனில்லை
இவன் போல் அவனில்லை
எவன் போலும் நானில்லை
இந்நிலை முற்றிய
மறுகலின் வெளிப்பாடாய்
குழந்தைகள் மேல் கவியும்
அவன் போல் நீயில்லை என நீ
குழந்தைகளைச் சாடுகையில்
அவற்றின் அடிமனம் சொல்லும்
எவன் போலும் நீயில்லை
எனும் உண்மையை…
ஒருநாள் நீ
உன் போல் நீயின்றி மாறி
எல்லோர் போலும் போய் சேர்வாய்…
படத்திற்கு நன்றி :
http://arefactsoursolid.wordpress.com/2014/03/03/10-hilarious-things-kids-say/
கிரேசி மோகன்
கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
——————————————————-

’’கண்ணனை நெஞ்சே கருது’’
———————————————————
பூமங்கை நாயகனை, பாமங்கை ஆண்டாள்மேல்

காமங்கொள் காதலனைக், கள்வனை – ஜாமங்கொள்
வண்ணனை ஆயிரம் வாரணமாய் வந்தவனை
கண்ணனை நெஞ்சே கருது!
வாதாடி வம்படித்து வாழ்ந்ததெலாம் வையமெனும்
தீதாடி பிம்பத் திருக்கன்றோ – சூதாடி
தன்னனைத்தும் தோற்ற தருமர்க்(கு) உதவிய
கண்ணனை நெஞ்சே கருது!
ஆழியை பூமியை நாழிகை நேரத்தில்
ஊழியில் உண்டுமிழ்ந்த உத்தமனை – தாழியுள்
வெண்ணையை தான்வளர்ந்த மண்ணையும் உண்ணவரும்
கண்ணனை நெஞ்சே கருது!
விடையடக்கி பின்னை இடைபிடித்து கீதை
விடையளித்தான் வாழும் வகைக்கு – விடைகொடுக்க
எண்ணிலா ஆசைக்கும் ஏங்கும் நினைப்புக்கும்
கண்ணனை நெஞ்சே கருது!
உண்ணும் சுவையும், உணவைச் செரித்திடும்
வண்ணம் வயிறும், விழிசொருக – திண்ணையில்
எண்ணமற சாய்ந்திடும் ஏகாந்தம் வேண்டி
கண்ணனை நெஞ்சே கருது!!
————————————————————————————————————–
படங்களுக்கு நன்றி :
http://kamadenu.blogspot.in/2008_07_01_archive.html
கிரேசி மோகன்
’’கண்ணனை நெஞ்சே கருது”….
—————————————————–

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
——————————————————–
சீதக் களபமும் ஸ்ரீவத்ஸ மச்சமும்

போதமர் மங்கையும் பூந்துழாயும் – வாதிடும்
வண்ணம் இடமின்றி வாய்த்தமணி மார்பனை
கண்ணனை நெஞ்சே கருது!
மூவடி மண்கேட்ட சேவடி பொற்சிலம்பு
மாவலி உச்சி மவுலியில் – தீவெடிக்க
திண்ணெனத் தாக்க திருவடி சாத்திய
கண்ணனை நெஞ்சே கருது!
மத்தினால் மாதாவால் மொத்துண்ட மைந்தனை
பத்திலோர் பாகவதப் பிள்ளையை – ஒத்தனாய்
மண்ணினைக் காக்க மகாபா ரதம்செய்த
கண்ணனை நெஞ்சே கருது!
தூணிருந்த பல்லியின் துண்டித்த வாலாக
வீணகந்தை யால்வீழ்ந்து வாடுகின்றாய் – நீநெகிழ்ந்து
அண்ணனாய் தம்பியாய் ஆன பலராமக்
கண்ணனை நெஞ்சே கருது!
திண்தடக்கை நீட்டி தலைகிடத்தி ஆயிரங்
கண்படுக்கை தன்னில் களைப்பாறும் – தென்னிலங்கை
அண்ணனைந்(து) ஈறெடுத்து,தம்பியாள தந்தராம
கண்ணனை நெஞ்சே கருது!!
——————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி :
http://photos1.blogger.com/img/141/4502/1024/Mvc-008f.jpg

எல்லா வேறுபாடுகளையும் கடந்த ஒரு திருநாளாக புத்தக தினம் பிறக்கிறது. உலக வாசகர்களின் பிறந்த நாள் இது. பெரிய பெரிய படங்களைக் கொண்ட பல வண்ண புத்தகத்தை ஒய்யாரமாகக் கொண்டாடிப் படித்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறுமியும், முகத்தருகே புத்தகத்தை வைத்துக் கண்களை இடுக்கியவாறு படித்துப் பெருமிதம் கொள்ளும் மூத்த குடிமகன் ஒருவரும் ஒரு சேர பூரிப்பு கொள்ளும் அற்புத தினம் அல்லவா இந்த நாள்!
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டாலும் என்னைக் கிறங்கடிக்கும் செய்தியாக இருப்பது, ஸ்பெயின் தேசத்தின் கேட்டலோனியா நகரத்தில் இந்த நாளைக் காதலர் தினம் போலக் கொண்டாடும் விதம்! ஆடவர்கள் தமது மனம் கவர்ந்த நங்கையர்க்கு ரோஜா மலர்களைப் பரிசாக அளித்து மகிழ்வார்களாம். பதிலுக்கு, அந்தப் பெண்கள் புத்தகங்களை வழங்குவார்களாம். இந்த நாளில் 4 மில்லியன் மலர்களும், 8 லட்சம் நூல்களும் கை மாறும் என்று தெரிவிக்கிறது இணையதள குறிப்பு ஒன்று. ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் சரிபாதி இந்த ஒரு நாளில் விற்றுவிடுமாம். புத்தகக் காதலர்களும், காதல் அகத்தினரும் நீடூழி வாழ்வார்களாக!
ஒரு பெரிய ஆளைக் கூட மாய மந்திரம் போட்டுக் குறுக்கி ஒரு குடுவையில் அடைத்துவிடுகிற மந்திரவாதி போல, இந்த உலகத்தையே-அதன் வரலாற்றையே-அரிய மனிதர்களையே-அருங்காட்சி அனைத்தையுமே…ஒரு சொடுக்கு போட்டுக் குடுவையில் அடைத்ததுமாதிரி ஒரு புத்தகம் நம் எதிரே இருக்கிறது. எத்தனை எத்தனை குடுவைகளை நம்மால் விடுவித்துப் பார்க்க முடிகிறதோ அத்தனை இன்பங்கள் இந்த வாழ்வில் நமக்கு வசப்படுகிறது. அதன் பார்வையே முதல்கட்ட உற்சாகத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைத்துவிடுகிறது.
நாம் கதவைத் திறந்ததும் நம்மோடு பேசத் தொடங்குகிற சித்தராக இருக்கிறது புத்தகம். அந்தக் குரல் மூடி வைத்த அந்த நூலில் நமக்காக எத்தனையோ காலமாகக் காத்திருக்கிறது. நமக்குப் போதும் என்கிறபோது, கதவை மீண்டும் சாத்தி வைத்தால் சடக் என்று அமைதியாகி அடுத்த திறப்புக்குக் காத்திருக்கிறது அந்தக் குரல். யார் தட்டியபோதும் திறக்கிற அந்தக் கதவு, கரையான்களிடமும் பேதம் பார்க்காமல் தன்னை ஒப்புக் கொடுத்து ஒரு தியாகப் பெருவாழ்வுக்குத் தயாராகிறது.
அவரவர் கற்பனைக்கு ஏற்ப, அவரவர் வேகத்திற்குப் பொருத்தமாக, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் முன்பின்னாகக் கூடக் காட்சிகளை இயக்கும் திரையரங்கமாக இருக்கிறது ஒரு புத்தகம். ஒளியுமிழும் அதன் திரைச்சீலை, படத்தைப் பார்ப்பவர் ஏரிக்கரையில் அமர்ந்தாலும், பயணத்தின் ஊடே வருகை புரிந்தாலும், சமையல் அறை வேலைகளின் இடைவெளியில் எட்டிப் பார்த்தாலும் அதே மதிப்போடும், பொறுப்போடும் தனது திரையிடலை அன்போடு நிகழ்த்துகிறது. பழைய படங்களின் புதிய காப்பிக்காக ஏங்காத வாசகர் உண்டா! எத்தனை எத்தனை கிளர்ச்சியை உருவாக்குகிறது இந்த வாசிப்பு!
பழைய புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி அதன்மீது போதை கொண்டு அலைவோரைக் குறித்து ஒரு கட்டுரையை பதினைந்து ஆண்டுகளுக்குமுன் தினமணிக் கதிரில் வாசித்த நினைவு வருகிறது. ஆக்கபூர்வமான போதை அது! இனி புத்தகமே வாங்கமாட்டேன் என்று சொல்லிச் சென்ற நண்பர் ஒருவரை அடுத்த வருடமே புத்தகக் கண்காட்சியில் பார்த்தேன். மது அருந்தாவிட்டால் என்ன, பழகிய கடைக்குப் போய்வருவதில்லையா, அப்படித்தான் இதுவும் என்றார் அவர்!
வேறு ஒரு நண்பர் எப்போது சந்திக்கும்போதும் ஜோல்னாப் பையைப் பிடுங்கி உள்ளே என்ன புத்தகம் இருக்கிறது என்று ஆராய்வார். இன்னொருவர், கடைசியாக என்ன புத்தகம் வாசித்தீர்கள் என்றுதான் பேச்சையே தொடங்குவார். இப்படியான ஜீவிகள் அடுத்தவர் வாசிப்பைத் தூண்டவும், வாசிப்பின் தூதுவர்களாகவும் அமைந்துவிடுகின்றனர். பகிர்வு மிகப் பெரிய வாசிப்புத் தளம். தாங்களாக வாசிக்க இயலாதவர்கள்கூட இப்படியான கேள்வி ஞானத்தில், ஒரு கட்டத்தில் தேடித் பிடித்து வாசிக்கத் தொடங்குகின்றனர். மறைந்த அற்புதக் கலைஞர் பூர்ணம் விசுவநாதன் அவர்களது குழுவில் நடித்துவந்த ரமேஷ் என்ற வங்கி ஊழியரது பணி நிறைவு விழாவில் பேசிய குருகுலம் நாடகக் குழு இயக்குனர் பூவராக மூர்த்தி, எப்போது பார்க்கும்போதும் இவரைப் படிக்கவில்லையா அவரைப் படிக்கவில்லையா என்று கேட்டுக் கேட்டு எத்தனையோ எழுத்தாளரது படைப்புகளை ரமேஷ் தன்னை வாசிக்க வைத்த உத்தியைக் குறிப்பிட்டார். தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறும் வித்தியாச கோஷ்டிகள் இவர்கள்.
இந்த ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் அன்று , வாசிப்பு குறித்த எனது அனுபவங்களை எல்லாம் புரட்டிப் போட்டாள் ஓர் ஒன்பது வயது சிறுமி. திருவான்மியூர் பனுவல் அமைப்பின் சமூக நீதி மாத நிகழ்வுகளில் அன்று பீமாயணா என்ற படக் கதை வடிவிலான அம்பேத்கர் வரலாறு புத்தகத்தை அறிமுகப் படுத்திப் பேசிய அந்தக் குழந்தையின் பெயர் சைதன்யா. கையில் எந்தக் குறிப்பும் அற்று, ஒரு பிசிறு இல்லாமல், சுமார் இருபது நிமிடங்கள்போல அத்தியாயம் அத்தியாயமாக அவள், அம்பேத்கரின் ஆளுமை குறித்து தான் அடைந்த வியப்பின் பிரதிபலிப்பை எடுத்து உரையாற்றிய விதம் பார்வையாளரை அசத்தியது. வண்டிக்காரர் இளக்காரமாகப் பார்த்தார் என்ற வாக்கியமும், பின்னர் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கையில், அதிலும் அம்பேத்கருக்கு ஒரு நன்மை இருந்தது. தீண்டாமை குறித்துப் புரிந்து கொள்ளவும் போராடவும் அவருக்கு அது உதவியது என்ற சொல்லாடலும் நுட்பமாக இருக்கும் அவரது வாசிப்பை உணர்த்தியது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் நடித்திருக்கும் இந்தச் சுட்டிப் பெண், ஏற்கெனவே எஸ் ராமகிருஷ்ணன் அவர்களது குழந்தைகளுக்கான கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விருது வாங்கி இருப்பவர். வலைப்பூவில், கவிதைகளை எழுதித் தள்ளுபவர். இந்தக் குட்டிப் பெண்தான், இணையதள சாட்டில் பதில் போடத் தவறியபோது என்னை இறந்து விட்டீர்களா என்று கேட்ட தேவதை.
வாசிப்பு இறக்காத வரை மனிதர்கள் பெருவாழ்வு வாழ்வார்கள் என்றே தோன்றுகிறது. வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த இந்த நாள், உண்மையில் வாசகர்களின் பிறந்த நாள்! உலகம் முழுக்க பிறந்த நாள் கொண்டாடும் வாசகர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
**********
நன்றி:தி இந்து நாளிதழ்: ஏப்ரல் 23, 2014
படத்திற்கு நன்றி:
http://www.catchy.ro/author/adina-dinitoiu
இவள் பாரதி
உனக்கு எப்போதெல்லாம்
வெளிப் போந்த தோன்றுகிறதோ
அப்போதெல்லாம்
சிவப்புச் செருப்பை ஏந்தியபடி
அறைகள்தோறும்
ஒவ்வொருவராய்
அழைத்துப்போகச் சொல்லிக்
மூடியிருக்கும் கதவை கைகாட்டுகிறாய்.. (more…)
தி.சுபாஷிணி
சென்ற ஆண்டு (2013) இறுதியில் டிசம்பர் 28 ஆம் நாள் தமிழூரில், பேராசிரியர் ச.வே.சுப்ரமண்யம் அவர்கள் நடத்திய கம்பன் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு மறுநாள் டிசம்பர் 29 ஆம் நாள் திருநெல்வேலி வந்தேன். அங்கு இடையறா இலக்கிய வேளாண்மை செய்து கொண்டிருக்கும், பொருணை இலக்கிய வட்டத்தின் ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். ஆயிரத்து 550 வாரங்களுக்கும் மேலாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முற்பகல் புலவர்கள், பேராசிரியர்கள் கூடி, சங்க மரபு இலக்கியங்கள் பற்றி கலந்துரையாடலும், சிறப்புப் பொழிவுகளும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டின் உறைவிடமான திரு.தளவாய் டி.ராமசாமி அவர்கள் இக்கட்டத்தின் புரவலராய் அவரது வீட்டில் சுப, அசுப நிகழ்வுகள் நடந்தாலும் தளராது நடத்தி வருகின்றார். அவரது அழைப்பின் பெருமிதத்தில் அவ்விழாவில் கலந்துகொண்டு, திரு.தி.க.சி. அவர்களைக் காணச் சென்றேன்.
வழக்கம் போல், தன் வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரவேற்றார் தி.க.சி.
“அடடா! இப்பொழுதுதான் ஓவியர் சீனிவாசனும் வேங்கட சுவாமிநாதனும் என்னை வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள். ஒரு அரைமணி நேரம் முன்பு வந்திருக்கக் கூடாதா?” என்றார் தி.க.சி.
எனக்கு வருத்தமாய் போயிற்று. ஏனெனில் வேங்கட சுவாமிநாதன் அவர்களை நான் இரு வருட காலமாக பார்க்க முயன்று கொண்டிருந்தேன். அதை நான் தி.க.சி. அய்யா அவர்களிடம் கூறினேன். உடனே சீனிவாசனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால் இருவரும் நெல்லையை விட்டு மதுரையை நோக்கிச் சென்று விட்டனர். 31 ஆம் தேதியன்று சென்னையில் சீனிவாசன் வீட்டில் அவரைப் பார்க்கலாம் என்கின்ற தகவலைச் சொன்னார். அதன்படி 31-ந் தேதியன்று சென்னையை வந்தடைந்ததும், சீனிவாசன் வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.
அடையாறிலுள்ள வீட்டைக் கண்டுபிடித்து, மூச்சிறைக்கப்போய் அவர் முன் நின்றேன். வேங்கட சுவாமிநாதன் “ஏனம்மா? இப்படி சிரமப்பட்டு என்னைப் பார்க்கலாமா?” என்று வினவினார். அப்போது அங்கு கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் இருந்தார். அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சகோதரி ஏற்கனவே அறிமுகமானவர்.
“சிரமம் இல்லை சார்! உங்களுடைய அறிவும், திறனாய்வு பற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
திரு.நாஞ்சில் நாடன் உங்களைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார். அன்றிலிருந்து உங்களைப் பார்க்க எண்ணம் கொண்டேன். உங்கள் எழுத்தைப் புரிந்துகொள்ளும் அளவு அறிவில்லாதவள் சார் நான். ஆனால் உங்களைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. நான் அனுபவத்தை இப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்” என என் நூல்களை அவரிடம் கொடுத்தேன். அவர் மிகவும் பிரியமாக என்னிடம் பேசினார். ‘அத்தகைய அறிவாளி’ என்கின்ற ஆணவம் இல்லாது, என்னைப்பற்றி கேட்டுக்கொண்டார். பின் சீனிவாசன் தன் நூலைக் கொடுத்தார். அதுதான் “நம்மோடுதான் பேசுகிறார்கள்”. ஓவியர் எழுத்தாளராய் காட்சியளித்தார். அந்த கணத்திலிருந்து நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம்.
இப்படித்தான் என்னை நூல்கள் வந்தடைகின்றன. சீனிவாசன், பாலசுப்ரமணியன் என்னும் இரு ஓவியர்கள் நம்மோடுதான் எளிய பேச்சுநடையில் நம்முன் உட்கார்ந்து சம்மணம் போட்டுக்கொண்டு பேசுகிறார்கள். திடீரென்று எழுந்து ஜன்னல் அருகே நின்று சீனிவாசன் சீரியஸாகப் பேசுகிறார். அதைத் தூண்டிவிடுவது பாலசுப்ரமணியன். ‘என்னால் முடியலைப்பா? மூச்சு முட்டுது! கொஞ்சம் வெளியில் வாங்கப்பா! காலாற மெரினா வழியாக திருவல்லிக்கேணி செல்லலாம்” என்று அழைத்து செல்கிறார்கள்.
‘சுபாஷிணி’ என்று கூப்பிட்டு சொல்கிற மாதிரி இருக்கிறது. அதாவது “கலைங்கிறது கூடை முடையறது இல்லை. வாழ்க்கை. அனுபவம் வெளிப்பாடு. வாழ்க்கையைக் கத்துக்கவும் முடியாது. காமிக்கவும் முடியாது. கலையும் அப்படித்தான்”.
மேலும் சீனிவாசன் தொடர்கிறார்.
“சமுதாயத்துல மூணு விஷயங்களை வலுப்படுத்த வேண்டி இருக்கு. ஒண்ணு செவ்வியல் கலைகளை மீட்டெடுக்கிறது. பாதுகாக்கிறது. சமகாலக் கலையை வளர்க்கிறது. பிரச்சாரம் பண்றது, கலைபத்தின புரிதலை, நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கிறது. நாகரீகத்தைச் செழுமைப்படுத்துகிறது. இதை ஒரு கலை வெளிப்பாடாக இருக்கிற கட்டிடம் செய்ய முடியும்னா கலைஞனா இருக்கிற நம்மால் செய்ய முடியாதா? வாழ்வியல்தான் கலை, கலைதான் வாழ்வியல்.
பொருளாதாரம் எப்பொழுதுமே கலை வெளிப்பாடுகளுக்கே தடையாக இருந்ததில்லை. மனநிலைதான் தடையாக இருக்கிறது. சிந்தனையும் சிந்தனை சார்ந்த கலை வெளிப்பாடும் பொருளாதாரத் தடையினால் தடைப்பட்டதில்லை. மக்களையும் சமுதாயத்தையும் செழுமைப்படுத்துவது சிந்தனை சார்ந்த கலை வெளிப்பாடுகளே!
நூலின் நடை எளிய பேச்சு மொழியிலேயேதான் செல்கின்றது. ஆனால் அது கூறும் விஷயங்களோ பெரியது. மிகவும் பெரியது. ‘மஹா வாக்கியம்’ என்று கூறுவார்களே அதுபோல் இருக்கின்றது.
சீனிவாசன் கேள்விகளைக் கேட்டு, குழப்புவதுபோல் ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்குகிறார். பின் ஏதோ நம்முடன் பேசித்தான் தெளிவடைவதைப்போல், அவரது சிந்தனையின் தெளிவை, எண்ண ஓட்டங்களின் முறையை நம்மிடம் பகிர்ந்துக் கொள்கின்றார். படிக்கும் நமக்கும் அவருடன் சேர்ந்து பயணிப்பது இன்பமளிக்கின்றது.
சீனிவாசன் முன் வைக்கும் கேள்வி & ஓவியம் என்றால் என்ன? அதையும் தாண்டி படைப்புகள் என்றால் என்ன? அப்படியென்றால் ஓவியன் யார்? படைப்பாளி யார்?
“திருத்தமாகச் செய்யப்பட்ட எந்தவொரு வேலையின் வெளிப்பாடும் அழகுணர்வோடு இருக்குமானால் ஓவியம். அதே திருத்தமாக செய்யப்பட்ட எந்தவொரு வேலையின் வெளிப்பாடும் சிந்தனை சார்ந்து இருக்குமானால் அது படைப்பு. சுருங்கச் சொன்னால், அலங்காரமாகவும் இருந்துகொண்டு, சிந்தனைகளையும் தூண்டுமானால் அது படைப்பு.
ஒரு படைப்பாளனுக்கும் ஒரு ஓவியனுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் பார்வையாளன் மனதில் சந்தோசத்தை மட்டும் தூண்டுபவன் ஓவியன். சந்தோசம் என்பது பார்த்த மாத்திரத்தில் தொற்றிக் கொள்கிற விஷயம். தொற்றிக்கொண்ட பிறகு ஒரு விளக்கத்தைக் கொடுத்து உற்சாகத்தைக் கொடுத்து சிந்தனையைத் தூண்டி, நம்முடைய கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மீறிய அவரவர் சார்ந்த துறைகளில் அவரவர்களுக்கான ஊக்கத்தைக் கொடுப்பது படைப்பு. ஆக பயிற்சி, பயிற்சியின் முதிர்ச்சியில் விளைபவன் ஓவியன். பயிற்சியின் முதிர்ச்சியில் இருந்து விடுபட்டு சிந்தனாவாதியாக மாறி சிந்தித்தவற்றைப் படைப்பின் மூலமாக வெளிப்படுத்திச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படைப்புகள் இருக்குமானால் அவன் படைப்பாளி.”
இப்படி அருமையான சிந்தனை ஓட்டம், விளக்கம் தருகிறார் சீனிவாசன் இந்நூலில். அதுவும் நெல்லுக்குள் அரிசி இருக்கு என்று போகிற போக்கில் சொல்வதுபோல் சொல்கிறார்.
‘கிளிப்பச்சையில் ஒரு காக்கா வந்துச்சுன்னு’ தொடங்கி, ஓவியத்தின், அருபத்தினைப் பற்றி விளக்குகிறார். சீனிவாசனின் அருப ஓவியங்களின் தேர்வைப்பற்றி பாலசுப்ரமணியம் அழகாகப் பகிர்ந்து கொள்கிறார். எல்லாம் ஓவியங்களில் தொழில்நுட்ப பெயர்கள். ஆனால் அதை மிகவும் எளிமையான மொழியில் கூறுகிறார். ஒரு அருப ஓவியத்திலேயும் வடிவம், டெக்சர், கலர், லைன்ஸ், உருவம் எல்லாமே இருக்குன்னு சீனிவாசன் சொல்கிறார். ஆனால் சீனிவாசன் ஓவியத்திலே அது இல்லாமலும் இருக்குன்னு சொல்கிறார் பாலசுப்ரமணியம். இதப்பத்தி சீனிவாசனிடம் மேலும் பேசியதை இங்கு பாலசுப்ரமணியம் குறிப்பிடுகிறார்
என்று நூல் முடிவடைகிறது.
இந்நூலை படித்து முடித்தவுடன், “தி இந்து” தமிழ் நாளிதழில் (22.2.2014) கலை இலக்கியம் பகுதியில் ஓவியர் சந்தானராஜ் பற்றிய கட்டுரையில் எழுதியதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.
“புள்ளிகளை இணைப்பதல்ல கோடு. புள்ளிகளுக்கு இடையே ஒரு வெளி இருக்கிறது. அந்த வெளியையும் உள்ளடக்கியதுதான் கோடு”.
இந்தப் புள்ளிகளுக்கு இடையிலுள்ள வெளியில் உருவாகும் படைப்புத் தெறிப்புகளால்தான், நான் சீனிவாசனின் தேடலை பார்க்கின்றேன்.
நூலின் தலைப்பு – நம்மோடுதான் பேசுகிறார்கள்
ஆசிரியர் & சீனிவாசன் & பாலசுப்ரமணியன்
பக்கம் & 128
விலை & 200 ரூ
வெளியீடு & வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை & 606 601.
படம்: அவளுக்கென்று ஒரு மனம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.ஜானகி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
…
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
…
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.. உன் உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்.. பல்லவியில் உள்ள சுகம் அனுபவிக்க இன்னுமொரு பிறவி வேண்டுமோ? இந்த வரியை வாசிக்கும்போதும், பாடலைக் கேட்கும்போதும் உள்ளத்தில் சுகம் ஆறாகப் பெருகி வருகிறது! இசையின் கோர்வை பாடலை உச்சத்திற்கு இட்டுச் செல்ல.. குரலின் இனிமை நம்மை ஏதோ இன்பத்தீவிற்கு கடத்திச் செல்கிறது.
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
சரணமா? இது சரம் சரமா? வாரத்தைகளில் உள்ள எளிமை.. இசையில் விளையும் இனிமை.. ரசித்துக் கேளுங்கள்.. ஆனந்த பைரவியா அல்லது மோகனமா? நானறியேன்..
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ…. தடுத்தால் கூட தருவேன்
மொத்தத்தில் இங்கே பெண்மை பேசுகிறது! வன்மையைத் தொட்டு ஒரு பெண்மையை பேச வைக்கும் கவிஞரின் திறமெண்ணி வியக்கிறேன்!
இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே
எத்தனை எளிமையான சொற்கள்.. நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே.. கவி ஆட்சி நடத்துகின்றார்! பாடலை உணர்ந்து கேளுங்கள்.. காதலின் பவித்ரம் புரியும்!
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கனகச்சிதமான வார்த்தைகள் நெருக்கமாய் தொடர்ந்துவர.. கவித்துவம் ததும்பி காதலைச் சொல்லி நமக்கு மயக்கம்தர..
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே
கனவா நனவா.. கவிதைச் சுவையா? பாட்டு ஒன்றுக்குள் பல்சுவை தருகின்ற பல்கலைக்கழகம் கண்ணதாசன் எனலாமா?
கவிஞர் எழுதிய திரைப்பாடல்களின் பல்லவிகள் பல நேரங்களில் திரைப்படங்களாய் வெளியாகின என்பதற்கு சான்றுகள் பல உண்டு! இதோ அவ்வகையில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..
[Geffrey Whitney]
[1586]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உயிரினம் தோன்றிய போதே
இயற்கை விதிகள் ஈந்து விட்டன !
காளைக்குக் கொம்புகள்,
குதிரைக்கு ஓடும் கால்கள்,
சிங்கத்துக்குப் பற்கள்,
வலுத்த பாதங்கள்,
முயலுக்கு துரிதப் பாய்ச்சல்,
மீனுக்கு நீச்சல் திறமை,
பறவைகட்கு இறக்கைகள்,
ஆயினும்
பாதித் தொகை யான
பெண் இனத்துக்குப்
பாதுகாப்பு ஆயுத மில்லை !
அவசியத் தேவைக்கு
இயற்கை அளித்தது என்ன ?
உடற் கவர்ச்சி !
ஞானிகள், வீரர், தீரர் மயங்கி
வலுவிழக்கும்
மேனித் தோற்றம் !
அழகு பாவைக்கு ஆயுதமா ?
அல்லது
கழுகுக்கு இரையா ?
சத்திய மணி
(இது வேட்பாளர்களுக்கான தேர்தல் கீதம்)
வெற்றி பெறலாம் தோற்றும் விடலாம்
இருந்த போதும் ஆட்சி பெறலாம்
சீட்டு கிடைக்க நோட்டு தரலாம்
நீட்டி மடக்கி போற்றி விடலாம்
எங்கும் சென்று போட்டியிடலாம்
எதுவும் சொல்லி வாக்குபெறலாம்
வாக்குபெறலாம்()
ஊழல் ஒழிப்போம் உரக்க சொலலாம்
உண்மை ஆட்சி தருவோம் எனலாம்
ஏற்றம் இலவச வார்த்தை விடலாம்
மாற்றம் தேவை அறிவீர் எனலாம்
மயக்கம் தரலாம்()
சேவை எங்கள் கொள்கை யெனலாம்
தேவை யென்று எதுவும் பெறலாம்
ஊழல் அறியா வேடம் இடலாம்
கட்சி பார்த்து தாவி விடலாம்
பதவி பெறலாம்()
குடும்பத்தோடு சுற்றி வரலாம்
பாசத்தோடு பதவி பெறலாம்
கூட்டு ஆட்சி லாபம் எனலாம்
கேட்டு மக்கள் வாக்கு தரலாம்
மீண்டும் வரலாம்()