Blog

  • விலை கொடுத்து வாங்கும் கவலை !!!

     

     பி.தமிழ் முகில்

    பெருமையாய் தான்
    எண்ணிக் கொள்ளும் மனம்  !
    கையில் புதிதாய்  பகட்டாய் – ஆறாவதாக
    ஒரு விரல்  முளைத்து விட்டது
    போன்றொரு பிரமை !!!
    அது அழகாய் கவர்ச்சிகரமாய்
    காட்சியளிப்பதாய் மனதிற்குள்
    ஓர்   பேய்   எண்ணம் !!
    புகையிலையை சுருட்டி
    பற்ற வைத்து – புகையை உள்ளிழுத்து
    நெஞ்சில்  நிறுத்தி – இருமாது
    புகையை வெளியேற்றுதல்
    உலக மகா  திறமையென்று
    அறிவிலிகளின்  அறிவுரை வேறு !!
    ஆனால் உண்மையில் ???
    நெருப்பில் சூடு பட்டு
    எரிந்து கருகிய நிலையில்
    புற்று நோயால் – செயலிழந்த
    நுரையீரல் !! – புற்றும் மெல்ல
    உடலெங்கும்  பரவ –
    உயிருக்கே வந்தது  உலை !!!
    தேவையா ?? – விலை கொடுத்து
    வாங்கும் இக்கவலை ??

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 68 (22.04.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (39)

    புலால் நாற்றம்
    தன் மீது பொருந்தியிருக்க
    அதற்கென வருந்தி
    அந்நாற்றம் நீக்க எண்ணி
    பொழிற்சோலையது புகுந்து
    ஆங்கே உதிர்ந்து நின்ற
    பூந்தாதுகளின் கலவையை
    மணம் கமழவெனத்
    தன் மேல் பூசிக்கொண்டு நிற்கின்ற
    அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
    நெய்தல் நிலத் தலைவனே!

    பலவிதமான துன்பங்கள் உற்று வருந்துவதால்
    இது இன்ன நோய் என்று அறியாமல்
    எம் தலைவிதானும் தனித்துத் துன்புறுகிறாள்.
    இவள் மெலிவதும் இரங்குவதும்
    பிறர்க்குப் புலப்படவில்லை என்பதால்
    எவரும் உண்மை அறிந்திலர்.
    இதனைத் தாய் அவள் அறிந்திட்டால்
    என்னதான் நான் செய்வேன்?!

    “பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தல்”

    (40)

    மெல்லிய இருள் படர்ந்ததுவே;
    பகல் பொழுது தரும்
    கதிரவன் அவனும் மறைந்தனனே;
    நீக்கிட முடியாத தனிமைத் துன்பத்தால்
    என் கண்கள்தானும் நீரைச் சொரிகின்றனவே;

    மொட்டவிழ்ந்த மலர்கள் அணிந்த
    கூந்தலை உடையவளே!
    வளையல் கழன்று விழும்படி
    காமம் எனும் தீ கொண்டுவந்த
    இம்மாலைப் பொழுது
    நம்மைப் பிரிந்து சென்ற
    தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமோ?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

    படத்துக்கு நன்றி:
    http://arulalantamizh.blogspot.com/2012/07/4-971.html

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(1)

              செண்பக ஜெகதீசன்

     

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

    உள்ளத் தனையது உயர்வு…!

                  -திருக்குறள்(ஊக்கமுடைமை)

     

    புதுக்கவிதையில் (என் பாணி)…

     

    தண்ணீருக்குத் தகுந்தபடி

    தாமரை உயரும், தாழும்..

     

    மனிதா உன்

    எண்ணம்போல தான்

    ஏற்றம் வரும் வாழ்வில்…!

     

    குறும்பாவாய்…

     

    தாமரை வளர்ச்சி தண்ணீரளவில்,

    மனிதனுக்கு அவன்

    மனம்போல்தான்…!

     

    புதுப்பாவில்…

     

    கதிரவனின் வெம்மைக்கரத்

    தீண்டுதலில் பதறித் தாழ்ந்து

    கண்விழிக்கிறது

    தண்ணீர்க்காதலனின் முயக்கத்தில் உயர்ந்து

    தன்னை மறந்திருந்த தாமரை..

     

    உயர்வு வானில் பறக்க

    ஏற்றதாய் இருக்கவேண்டும் மனிதனின்

    எண்ணச் சிறகுகள்…!

     படத்துக்கு நன்றி   

    http://centurystudios.blogspot.in/2011/08/30-lotus-blossom-chandelier.html

    Share
  • வார ராசி பலன்: 22.04.2013 – 28.04.2013

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: நினைத்த இலக்கை அடைய அதிக தன்னம்பிக்கையும், உற்சாகமும் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவி இடையே அன்னியோன்யம் இருக்கும். பண விஷயங்களில் மட்டும் யாருக்கும் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். முதியவர்களின் உடல் நலனில் கவனமாக இருந்தால், மருத்துவச் செலவுகளை குறைத்து விடலாம். உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். 

    ரிஷபம்: நீண்ட நாட்களாக முடிவுக்கு வராத பிரச்னைகள் முடிவுக்கு வருவதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நலம். பொறாமை இல்லாமல் ஈடுபடும் போட்டிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். விருந்தினர் வருகையும், சுபச் செலவுகளும் கூடும். அலுவலகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி, உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வீடு, மனை வாங்கி விற்பவர்கள் அகலக் கால் வைக்க வேண்டாம்.
    மிதுனம்: “என் வாழ்க்கை என் கையில்” என்று செயல்படுங்கள். பிரச்னைகள் பிசுபிசுத்து விடும். சண்டை சச்சரவுகளை விலக்கினால், குடும்பம் அமைதிப் பூங்காவாய் திகழ்வது உறுதி. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் வீண் விரயம் ஏற்படாமல் செயல்பட, இரட்டிப்பு லாபம் வந்து சேரும். ஒரு சிலர் ஆன்மீக யாத்திரை சென்று வருவார்கள். கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு புதிய திருப்பம் உண்டாகும். பத்திரிகைத் துறையில் உள்ளவர்களின் தகுதி உயரும் தருணமிது.
    கடகம்: மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இடமளிக்க வேண்டாம். கணவன் வழி உறவினர்களுடன் இருந்த சிறு மோதல்கள் விலகும். வேலையில் உள்ளவர்கள் மன உளைச்சலை தீர்க்கப் புதிய வழிகளைக் கண்டு பிடிப்பார்கள். வீடு, வாசல் அமையவில்லையே என்று சிரமப் பட்டவர்கள், கிரகப் பிரவேசம் செய்து மகிழும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். எதையும் தீர ஆலோசித்துச் செய்தால் குடும்பத்தில், வீண் குழப்பங்களும், விவாதங்களும் தலை தூக்காமலிருக்கும்.
    சிம்மம்: பணியில் இருப்பவர்கள், தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். பொறுப்பாக நடந்து கொள்ளும் பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையாட்களின் போக்கை உணர்ந்து வேலை வாங்க, புதிய ஒப்பந்தங்கள் பல உங்கள் கை வசமே! வீட்டை விரிவுபடுத்துவதில் பணம் செலவழியும். போட்டிகள் கடுமையாய் இருந்தாலும், ஈடு கொடுத்து வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் தன் அபரிமிதமான ஆற்றல் கொண்டு உயர்வடைவார்கள். புதியவர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. ஒரு சில மாணவர்கள் மேற்படிப்பிற்காக வேறு ஊர்களுக்குச் செல்வர்.
    கன்னி: வியாபாரத்தில் உயரும் வருமானத்தைக் கொண்டு புதிய கிளைகள் திறக்கும் வாய்ப்புக் கிட்டும். உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூர்விகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் சுமூகமாக முடிவதால், பிரிந்திருந்த உறவுகளுடன் மீண்டும் இணைந்து, சுற்றுலா, விழா என்று மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் உரசல்களைப் பெரிது படுத்த வேண்டாம். சக கலைஞர்களுடன் கவனமாகப் பழகி வந்தால், உளைச்சலையும், அலைச்சலையும் தவிர்த்து விடலாம்.
    துலாம்: கை மாற்றாய் வாங்கியிருந்த கடனைத் தீர்த்து விடுவீர்கள். தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி வர, சுப காரியங்கள் விரைவில் முடிவாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் குறைவிலா லாபம் கிட்டும். தற்காலிக வேலையில் இருப்பவர்களின் பணி நிரந்திரமாகும். பிள்ளைகளின் உயர்வுக்கு என்று பட்ட பாட்டுக்கு நல்ல பன் கிடைக்கும். வெளியூர் செல்பவர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
    விருச்சிகம்:கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருந்து இலக்கை எட்டுவார்கள். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவதால், பழைய கசப்புகள் மறைந்து விடும். மாணவர்கள் கடுமையாய் உழைத்து, தவறிய பாடங்களில் தேர்ச்சி பெற்று மகிழ்வர். திடீர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், பெண்கள் அதனைத் திறம்பட சமாளித்து விடுவர். வேலையில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகளும், உயர்வும் கிடைக்கும். மருத்துவச் செலவுகளைக் குறைக்க, படபடப்பையும், தூக்கமின்மையும் தவிருங்கள்.
    தனுசு:தேடி வரும் ஒப்பந்தங்களை, திறம்பட முடிக்கும் கலைஞர்களுக்குப் பாராட்டோடு, பரிசும் வந்து சேரும். பங்குச் சந்தையில், நிலவரத்திற்கேற்றவாறு சமயோசிதமாகச் செயல்பட்டால், போட்ட பணத்தை எடுத்து விடலாம். பணத் தட்டுப்பாடு நீங்க சிக்கன நடவடிக்கை கை கொடுக்கும். விமர்சனங்களைத் தாண்டி, வேலைகளை முடிப்பதில் கவனம் காட்டினால், உயர் பதவிக்கான வாய்ப்புக்கள் உறுதிப் படும். நிதானமான போக்கை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு, நெருக்கடிகள் தானே குறைந்து விடும்.
    மகரம்: தேவையற்ற கோபத்தைத் தவிர்த்தால், குடும்ப உறவுகளின் நெருக்கம் கூடும். குழந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒரு வரைமுறை வைப்பது அவசியம். வெளிவட்டாரப் பழக்கத்தில், இதமான அணுகுமுறை விரும்பிய பலனைத் தரும். தொழில், வியாபார முன்னேற்றத்தில், கூடுதல் உழைப்போடு, சீரான திட்டங்களையும், சேர்த்துக் கொள்வது அவசியம். பணியில் இருப்பவர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.
    கும்பம்: புதிய தொடர்புகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிட்டும். கடன் நிலவரத்தில் கூடுதல் கவனமிருந்தால், வரவுக்குள் செலவை முடித்துக் கொள்ளலாம். பொது விஷயங்களில் ஒத்த கருத்தை அடைய, அதிக முயற்சியும், பொறுமையும் தேவை. உறவினர் கேட்ட உதவிகளை சிரமப்பட்டு செய்து முடிக்கும் நிலை நிலவும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலைகளில் தொய்வில்லாமல் இருக்க, வேகத்தோடு விவேகத்தையும் சேர்த்துக் கொண்டாலே நல்ல பலன் கிட்டும்.
    மீனம்: குடும்பத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுச் செயல்படும் காலமிது. வியாபர வரவை அதிகரிக்கப் புதிய யுக்திகள் கை கொடுக்கும். ஞாபக மறதிக்கு இடமளிக்காமலிருந்தால், மாணவர்களின் கைப்பணம் கரையாது. அலுவலக வட்டத்தில், வீண் வம்புகளில் ஈடுபடுவதைத் ததவிர்த்து, வேலையில் விழிப்பாய் இருப்பார்க்கு, சிறப்பு சலுகைகளை வந்து சேரும். தொடர்ந்து மேற்கொள்ளும் பயணங்களால், சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தலை காட்டுவதைத் தவிர்க்க சத்தான உணவைச் சாப்பிடவும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ஆமாம்.. இந்த விஷயம் இப்போதெல்லாம் தனி மனிதன் வாழ்வில் மிகவும் உள்ளூற ஊறிவிட்டதுதான். நாம் நம் ஞாபகசக்தியை நன்றாக கூர் தீட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.. இது உண்மையில் நமக்குக் கிடைத்த சாதகமா அல்லது சாபமா என பல சமயங்களில் முழித்துள்ளேன். இனி வரப் போகும் காலங்களில் இது மிக மிக அத்தியவாசியமாகிப் போய்விடும் என்று இப்போதே கண்கூடாகத் தெரிகிறது.

    ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. இனி இது இல்லையென்றால் உங்களையே உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டி அடுத்தவரை நாட வேண்டிய நிலைக்கு நம்மைத் தள்ளி விடும் என்று மட்டும் சொல்லிக் கொண்டு கீழே பெரியவர் கல்பட்டு நடராஜன் அவர்கள் ‘இதை’ப் பற்றி எழுதிய கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.

    கணினி திறந்தேன்

    மடல்கள் படித்திட

    கேட்டதது கடவுச் சொல்


    கணினி வழியே

    கட்டிட நினைத்தால்

    மின் கட்டணம்

    கேட்கிறதது கடவுச் சொல்

    தானியங்கி வங்கி சென்றேன்

    வாங்கி வரப் பணம்

    அட்டை உள்ளே செலுத்திடக்

    கேட்டதது கடவுச் சொல்

    தெருவிலே சிறார்

    ஆடுகின்றார் ஓர் விளையாட்டு

    நின்றபடி இருவர்

    நீட்டிய அவர் கைகளைக் கோர்த்தபடி

    இணைந்திருந்த கைகளின்

    அடி வழியே நுழைந்திட

    முயல்கிறான் மூன்றாம் சிறுவன்

    பாம்பன் பாலமென மேலெழும்பு கின்றன

    கோர்த்திருக்கும் கைகள் ஒரு கணம்

    மறு கணம் திரும்பிட அக் கைகள்

    சிறையிலே சிறுவன் இப்போது

    விட்டிட வெளியே அவனைக்

    கேட்டிடுறார் கடவுச் சொல்

    கோர்த்த கைகள் கொண்டோர்

    கடவுச் சொல் கடவுச் சொல்

    கடந்திட எதையும்

    தேவையாம் கடவுச் சொல்

    வாழ்க்கையை வெறுத்தேன்

    உயிரை விட்டேன்

    சென்றடைந்தேன் எமலோகம்

    நின்றிருந்த காவலாளி சொன்னார்

    தேவையில்லை கடவுச் சொல்லேது மிங்கு

    சென்றிடலாம் தாராளமாய்

    உள்ளே நீ யென்று.

    எட்டிப் பார்த்தேன் உள்ளே

    திறந்திருந்த கதவின் வழியே

    பெரியதொரு எண்ணெய்க் கொப்பரை

    அதனடியே எரிகின்ற நெருப்பு

    நின்றிருந்தார் கிங்கரர் இருவ ரங்கு

    தலை கீழாய் ஆளொருவரை

    முக்கி முக்கி எடுத்தபடி

    கொதித்திடும் எண்யெய்க் கொப்பரையி லவரை.

    பறந்தேன் அங்கிருந்து சுவர்க்க லோகம்

    நின்றிருந்த காவலாளி கேட்டிட

    கடவுச் சொல் என்ன வென்று

    திரு திருவென விழித்தேன்

    திருடனைப் போல நான்.

    மறந்தனையா கடவுச் சொல்

    கடவுச் சொல் லென்பதன்

    முதல் மூன் றெழுத்துடனே

    சேர்த்திட ஓரெழுத்து

    கிடைத்திடுமே உன் கடவுச் சொல்

    மறவாதிருந்தால் உன் கடவுச் சொல்லதை

    வருத்த மேதுமின்றி வாழ்ந்திருக்கலாமே நீ

    புவியிலே பல காலம் என்றார் காவலாளி

    வருந்தினேன் திருந்தினேன்

    கடவுச் சொல்லதை

    மறந்த நான்

    ஒரு ஆன்மீகப் பெரியவர் சென்றவாரம் இந்தக் கடவுச் சொல்லைப் பற்றிக் குறிப்பிடுகையில் வைகுண்டம் போவதற்கு கடவுச்சொல் நாராயணா என்றும், கைலாயம் போவதற்கு கடவுச்சொல் நமசிவாய என்றும் இதைக் கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருப்பாயானால் இந்தக் கடவுச் சொல் நிச்சயம் கைகொடுக்கும் என்று தொலைக்காட்சி அருளுரையில் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆனாலும் ஆனானப்பட்ட ஆழ்வார் பெருமக்களே இப்படி கடைசி கால கடவுச்சொற்களைப் பற்றிப் பேசும்போது ‘அப்போதெல்லாம் அந்தக் கடைசிக் கணங்களில் நான் மறந்துவிட்டாலும் மறந்துவிடுவேன், அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன், அரங்கமாநகரருளானே’ என்று ஆண்டவனிடம் பெர்மிஷன் வாங்கி வைத்துக்கொண்டனர். அவர்கள் பகவானின் தூதர்கள். அவர்களுக்குப் பர்மிஷன், நடைமுறை ரிலாக்சேஷன் அனைத்தும் உண்டுதான். ஆனால் சாதாரண மானிடராகிய நாம் என்ன செய்யப் போகிறோம்.. வேறு வழியில்லை.. முடிந்தவரை கடவுச்சொல்லை நினைவில் வைத்துக்கொண்டு முணுமுணுத்துக் கொண்டே இருக்கவேண்டியதுதான்..

    பெரியவர் கல்பட்டு நடராஜன் அவர்களை இந்த வார வல்லமையாளராக ஒருமனதாக தேர்ந்தெடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி எங்களுக்கு. இந்த வல்லமையாளர் என்பதைப் பார்க்க எந்தவிதக் கடவுச் சொல்லுமில்லாமல் நேரடியாக வல்லமையைத் திறந்து பார்க்கலாம்தான். ஆனால் இந்தப் பதிவைப் பற்றி யாராவது எழுத வேண்டுமென்றால் இந்தக் கடவுச்சொல் தொல்லை இருக்கத்தான் செய்யும் என்பதை முன்கூட்டியே தெரிவித்து, கடவுச்சொல்லைப் பற்றிய அழகிய கவிதையை அளித்த கல்பட்டாருக்கு நம் வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

    கடைசி பாரா: திரு சு. ரவியின் ஊடலும் சமாதானமும் :

    சுர நதிப் பெண்ணாள் கங்கை

    சுந்தரா நின்னைத் தேடி

    சரசரத் திறங்கிப் பாய்ந்த

    சரசத்தில் மயங்கினாயோ!

    வருவது வரட்டும் என்று

    வார்சடை ஏற்றாய்! வெள்ளிப்

    பருவதன் மகளின் ஊடல்

    பரமனே, பார்த்தாய் அன்றோ?

     

    ஆடகப் பொன்னால் வேய்ந்த

    அம்பலம் ஆடும் தேவா!

    ஊடலும், ஊடலின் பின்

    ஒன்றி நீர் கூடலும் உம்

    நாடகக் காட்சி…………………….

    ========================

    படத்திற்கு நன்றி: தமிழமுதம்

     

    Share
  • Inauguration of the “International year of water cooperation – 2013”

     

    RAJIV GANDHI COLLEGE OF ENGINEERING

          Nemili, Sriperumbudur – 602 105

     

     

     

    The Management, Principal, Staff and Students cordially invite for

     

    Inauguration of the “International year of water cooperation – 20 on 22nd April 2013

     

    CHIEF GUEST

    Dr. Sultan Ismail

     

    Managing Director

    Ecoscience Research Foundation, Chennai.

     

    Have kindly consented to facilitate the function at 9.00 am at Seminar hall.

     

    Mr.Jacob George      Mr.George Jacob

    General Secretary            CEO

     

     

    Dr.H.Ranganathan        Mrs. G.Anne Josephine

    Principal           Joint Director

    Program Schedule

     

     

    Venue – Seminar hall

     

     

    Time    Event

     

     

    10.30 to 10.35 a.m  Tamil Thai vazthu

    10.35 to 10.40 a.m  Welcome Address

    10.40 to 10.50 a.m  Theme of Celebration by Joint Director    10.50 to 10.55 a.m  Release of Calendar of Events by Chief Guest

    10.55 to 11.05 a.m  Felicitation by Principal

    11.05 to 11.25 a.m  Address by the Chief Guest

    11.25 to 11.35 a.m  Annual report of Communication club

    11.35 to 11.40 a.m  Prize Distribution by Chief Guest

    11.40 to 12.00 p.m  Awareness program on Water Conservation

    12.00 to 12.05 p.m  Vote of Thanks

      12.05 to 12.10 p.m  National Anthem

    12.10 to 12.30 p.m  Workshop on  Save Water save Life

     

     

     

    Share
  • ஊடலும், சமாதானமும்…

     

    -சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

    இப்போது போலவே அது ஒரு வேனிற்காலம்!

    நந்திதேவருக்கு தாகம் நாவை வரட்டுகிறது.

    நந்திதேவரின் நிலைகண்டு அவரின் தாகம் தீர்க்க அன்னை வேண்ட, ஐயன் கங்காதரன் தன்

    திருமுடியிலிருந்து கங்கை நீர்த்தாரையை வெளிப்படுத்துகிறான்.

    தமக்குத் தெரியாமல் மற்றோர் பெண்ணைத் தலைமேல் மறைத்தார் என்று அன்னை ஊடல் செய்ய,

    அன்னையின் முகவாய் பற்றி சிவன் சமாதானம் செய்யும் திருக்கோலம்…

    சிதம்பரம் கோயிலின் கீழ்க்கோபுர வாயிலுக்கருகில் அமைந்துள்ள இக்காட்சியின் கோடோவியமும்,

    பஞ்சகமும்…

     

    ஊடலும், சமாதானமும்…

     

    விடைஉறும் வெம்மை கண்டு

    விடாயினைத் தீர்க்க வேண்டி

    சடையிலே கரந்த கங்கை

    சற்றுநீ வார்க்கப் போந்தாய்!

    உடனுறை உமையாள் ஆங்கே

    ஊடலால் பிணங்கிச் செல்ல,

    தடநெடுங் கையால் கன்னம்

    தாங்கிநீ தணிக்கப் பார்த்தாய்!

     

    ஆடலுக் கரசே! உந்தன்

    அழகிய சடை முடிக்குள்

    மூடியோர் பெண்ணை வைக்கும்

    முன்புநீ யோசித் தாயா?

    ஊடலால் பிணங்கும் அன்னை

    உமையவள் முகவாய் பற்றி

    நாடிநீ கெஞ்சும் கோலம்

    நாதனே தேவை தானா?

     

    என்னதான் உடலில் பாதி

    ஈந்தனை எனினும் மற்றோர்

    பெண்ணை நீ ஏற்றுக் கொண்டால்

    பெண்மனம் பொறுக்குமோ,சொல்!

    என்னதான் துணிவோ, வாழ்வில்

    இன்னொரு பெண்ணை ஏற்க!

    அன்னையின் ஊடல் பற்றி

    ஐயநீ அறிகி லாயோ?

     

    சுர நதிப் பெண்ணாள் கங்கை

    சுந்தரா நின்னைத் தேடி

    சரசரத் திறங்கிப் பாய்ந்த

    சரசத்தில் மயங்கினாயோ!

    வருவது வரட்டும் என்று

    வார்சடை ஏற்றாய்! வெள்ளிப்

    பருவதன் மகளின் ஊடல்

    பரமனே, பார்த்தாய் அன்றோ?

     

    ஆடகப் பொன்னால் வேய்ந்த

    அம்பலம் ஆடும் தேவா!

    ஊடலும், ஊடலின் பின்

    ஒன்றி நீர் கூடலும் உம்

    நாடகக் காட்சி அஃதை

    நயம்படச் சித்திரத்தில்

    பாடலில் வடித்து வைத்தேன்

    பார்ப்பவர் ரசிக்கத்தானே!

     

    Share
  • “அங்கயற்கண்ணி ஆனந்தம் கொண்டாளே”

     

    –கவிநயா

    ஒரு அனுபவம்

    திருமதி. காயத்ரி பாலகுருநாதன். பரத நாட்டிய உலகில் இவரை அறியாதவர்கள் அரிதாகத்தான் இருப்பார்கள். கலாக்ஷேத்ராவின் தலைவியாக இருந்த, காலம் சென்ற திருமதி.கிருஷ்ணவேணி லக்ஷ்மணன் அவர்களின் புதல்வி. தாயையே குருவாகக் கொண்டு பரதக் கலையைக் கற்றுத் தேர்ந்தவர். இவருடைய அன்புக் கணவர் திரு.பாலகுருநாதனும் சிறந்த பரதக் கலைஞராக அமைந்திருப்பது இன்னும் சிறப்பு.  இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பலவித நடன நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகங்கள், நடனப் பயிற்சி முகாம்கள் என்று நடத்தி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். திருமதி.காயத்ரி, சென்னையில் ‘கிருஷ்ணாஞ்சலி’ என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். உலகெங்கும் இவருக்கு மாணவியர் இருக்கிறார்கள்.

    “பாலசரஸ்வதி”, “யுவ கலா பாரதி”, “நிருத்ய சிந்தாமணி”, போன்ற பல விருதுகளைப் பெற்ற திருமதி.காயத்ரி, அண்மையில் அமெரிக்காவிற்கு வந்த போது, எங்கள் ஊருக்கும் (ரிச்மண்ட், விர்ஜீனியா) வந்திருந்தார். திருமதி.உமா செட்டி நடத்தி வரும் அப்ஸராஸ் நடனப் பள்ளி மாணவியருக்காக ஒரு நடனப் பயிற்சி முகாம் நடத்தினார். அவரவர் திறனுக்கேற்ப மூன்று வகுப்புகளாகப் பிரிந்து, வகுப்பிற்கு ஒரு நடனம் என, 4 நாட்களில் கற்றுக் கொண்டோம். ஐந்தாவது நாள் நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில், பயிற்சி முகாமில் கற்றுக் கொண்ட நடனங்களை மாணவ மாணவியர் ஆடினர்.

    முதல் வகுப்பினர் “கிருஷ்ண கவுத்துவம்” என்ற நாட்டியத்தையும், இரண்டாம் வகுப்பினர், “ஸ்வாகதம் கிருஷ்ணா” என்ற நாட்டியத்தையும், மூன்றாவது வகுப்பினர் (இதில் அப்ஸராஸ் நடனக் குழுவின் ஆசிரியைகளும் அடக்கம்), “அங்கயற் கண்ணி ஆனந்தம் கொண்டாளே” என்று தொடங்கும் வர்ணமும் கற்றுக் கொண்டார்கள்.

    திருமதி.காயத்ரி பல விருதுகளைப் பெற்றவராக இருந்த போதிலும், மிகச் சிறந்த, பிரபலமான கலைஞராக இருந்த போதிலும், அனைவருடனும் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பழகுகிறார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் உற்சாகம் பொங்கித் ததும்புகிறது. நடனத்தின் மீது அவருக்கு உள்ள காதல் அவர் ஆடலில் தெரிகிறது. பாதங்கள் மிகச் சொந்தமுடன் பூமியின் மேல் பாவ, உடலசைவுகள் மிக இலாவகமாகவும், நளினமாகவும் இருக்க, விழிகள் நவரசங்களையும் இலகுவாகப் படம் பிடித்துக் காட்ட, இவர் நாட்டியமாடும் போதே அப்படியே யோக நிலைக்குச்சென்று விடுவதைப் போல் தோன்றுகிறது.

    இந்த முகாமில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருத்தி. ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருக்குமே இப்படிப்பட்ட அனுபவம் புதிது. எனக்கும்.

    எங்கள் குருவான திருமதி.உமாவும், திருமதி.காயத்ரியும் சேர்ந்து எங்களுக்காகத் தேர்ந்தெடுத்திருந்த “அங்கயற்கண்ணி ஆனந்தம் கொண்டாளே” என்று தொடங்கும் பாடல் உயர்திரு டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் அமைத்ததாம். மிக அற்புதமான வர்ணம். அன்னை மீதான வர்ணம் என்றவுடனேயே மனம் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டது… அதுவும், பல புராணக் கதைச் செய்திகளை வைத்து, நவரசங்களையும் காட்டுவதாக அமைந்த பாடல் என்றதும் மகிழ்ச்சி பல மடங்காகி விட்டது. நடனம் அமைத்தவர் திருமதி.கிருஷ்ணவேணி லக்ஷ்மணன் அவர்கள். அவரே ஜதிகளெல்லாம் சொல்லியிருக்கிறார்.

    திருமதி.காயத்ரி முதலிலேயே சொல்லி விட்டார், “நாம் எதையும் யாருக்கும் நிரூபிக்க இங்கு வரவில்லை. நாட்டியத்தின் ஆனந்தத்தை அனுபவிப்பதைத் தவிர வேறு நோக்கமில்லை”, என்று. அதுவும் எங்களுக்கு 27 நிமிட வர்ணம் 4 நாட்களில் முடிக்க வேண்டும் என்றவுடன் அசந்தே விட்டோம். மலைப்பாக இருந்தது. கலந்து கொண்ட அனைவருமே அலுவலகத்துக்கோ பள்ளிக்கோ செல்பவர்களாக இருந்ததால், ஒவ்வொரு நாளும் மாலையில் மட்டும் ஒன்றரை மணி நேர வகுப்பு இருந்தது. 4-ம் நாள் மட்டும் இரண்டு மணி நேரம்.

    நடன அமைப்பு அருமையாக இருந்தது. சில அடவுகளை மாற்றி ஜதிக்கேற்ப அமைத்திருந்த விதம் புதுமையாக இருந்தது. மேடை முழுவதையும் பயன்படுத்துகிறாற் போல அமைக்கப்பட்ட நடனமும், நவரச அபிநயங்களும் அற்புதமாக இருந்தன.

    இதெல்லாம் ஒரு புறம் இருக்க, முதல் நாள் த்ரிகால ஜதியிலேயே திணறல் ஆரம்பித்து விட்டது. கிரகித்துக் கொள்வது ஓரளவு பரவாயில்லை, ஆனால் அடுத்தடுத்து என்ன என்று நினைவு வைத்துச் செய்வதுதான் பெரிய சவாலாக இருந்தது. அடுத்து என்ன என்று மூளைக்குத் தெரிந்தாலும், உடம்பு உடனடியாக ஒத்துழைக்காது. “இரு, வர்றேன்…, என்ன அவசரம்” என்று சொல்லும்… நிதானமாகத்தான் வேலை செய்யும்… அவ்வளவு வேகமாக இதுவரை கற்றுக் கொண்டதில்லை. முதல் நாள் கற்றுக் கொண்டது ஓரளவு நினைவில் நின்று விட்டது, எதிர்பார்த்ததை விட. ஆனால் இரண்டாம் நாளே மூளை overload ஆகி விட்டது. கை கால்கள் எல்லாம் கெஞ்சத் தொடங்கி விட்டன. இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றனவே… எப்படி 27 நிமிட நடனத்தையும் முடிக்கப் போகிறோம், முடித்தாலும், 5-ம் நாள் நிகழ்ச்சியில் இத்தனையும் நினைவு வைத்து எப்படி ஆடப் போகிறோம் என்பதே பெரிய கவலையாக ஆகி விட்டது.

    திருமதி.உமா,திருமதி.காயத்ரியுடன்…

    எதிர்பாராத விதமாக மூன்றாம் நாள் உடல் நலம் வேறு சரியில்லை, தோள்பட்டையில் சுளுக்கு, ஜலதோஷம், தலைவலி, சுரம், என்று வகுப்புக்கே போகவில்லை! மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கு தூங்கு என்று தூங்கிய பின் அடுத்த நாள் கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும், அடுத்த நாள் போவதற்கே யோசனையாக இருந்தது, ஆனால் ஆசை யாரை விட்டது? அந்த ஒரு நாள் பாடத்தைத் தவிர மற்றதை எப்படியோ சமாளித்தேன்.

    நல்ல வேளையாக, முழு நடனமும் எல்லோரும் ஆடத் தேவையில்லை என்று திருமதி.காயத்ரி சொல்லி விட்டது பெரிய நிம்மதியைத் தந்தது. சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்துக் கொண்டோம். திருமதி.காயத்ரி எங்களுடன் ஆடுவது என்றும், நாங்கள் அந்ததந்தப் பகுதியின் போது வந்து சேர்ந்து கொள்வதென்றும் தீர்மானமாகியது. (ப்ளீஸ், எங்களைத் தனியா விட்டுடாதீங்க என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்). ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சிக்குக் சனிக்கிழமை அன்று கிட்டத்தட்ட தூங்கவே இல்லை. அப்படி ஒரு டென்ஷன். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த சிறிய பகுதிகளை நினைவு வைத்து பாவத்துடன் ஆட வேண்டும் என்பதே மலையைப் புரட்டும் காரியம் போலத் தெரிந்தது.

    பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்

    ஞாயிறு அன்று நிகழ்ச்சியின் போது திருமதி.காயத்ரி முதலில் ஒரு புஷ்பாஞ்சலி ஆடினார். பிறகு பிள்ளைகள் ஸ்வாகதம் கிருஷ்ணா ஆடினார்கள். பிறகு மறுபடி திருமதி.காயத்ரி, ராமர் பஜன் ஒன்று ஆடினார். ஆகா, அவர் பாவங்களை என்னவென்று சொல்வது. குட்டி ராமரோடு விளையாடுவதையும், கொஞ்சுவதையும், பின்னலை அவன் பின்னிருந்து இழுப்பதையும், சோறு ஊட்டுவதையும், முதுகில் உப்பு மூட்டை சுமந்து கொண்டு சுற்றி வருவதையும், உறங்க வைப்பதையும், தத்ரூபமாகக் கண் முன் கொண்டு வந்தார். அதன் பின் மறுபடியும் பிள்ளைகள், “கிருஷ்ண கவுத்துவம்” ஆடினார்கள். “ஆங்கிகம் புவனம்” என்று தொடங்கும் நடராஜர் மீதான ஸ்லோகத்திற்கு நடனம் அமைத்திருந்தார், பிள்ளைகள் அனைவருக்கும் அந்த ஸ்லோகம் தெரியும் என்பதால், அந்த நடனைத்தையும் ஆடினார். அதன் பிறகுதான் வர்ணம்.

    இந்த வர்ணத்தில் மீனாக்ஷியும், பார்வதியும், காளியும், ராஜராஜேஸ்வரியும், இப்படி எல்லாத் தேவியருமே வந்து விடுகிறார்கள். சாந்தஸ்வரூபிணியாக அன்னையை விவரித்து, உலக க்ஷேமத்திற்காக வேண்டிக் கொள்ளுகின்ற மிக அற்புதமான ஸ்லோகம் ஒன்றுடன் வர்ணம் முடிகிறது. வர்ணத்தை மிகவும் உணர்வு பூர்வமாக ஆடிய திருமதி.காயத்ரியின் விழிகள், வர்ணத்தின் முடிவில் நிறைந்து வழிந்தன. அந்த அளவிற்கு அவர் அதில் ஒன்றி விட்டிருந்தார். இறுதியில் எங்கள் 9 பேருடன் நடுவில் அவர் ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த கோலத்துடன் நடனமும், நிகழ்ச்சியும் நிறைவு பெற்றன.

    கட்டுரையும் இங்கே நிறைவு பெறுகிறது!

    இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பை, அனுபவத்தை, எங்களுக்கு அளித்த திருமதி.காயத்ரிக்கும், ஏற்பாடு செய்த திருமதி.உமா செட்டிக்கும் அப்ஸராஸ் நடனப் பள்ளி மாணவ மணிகள் மிகவும் நன்றி பாராட்டுகிறார்கள்.

     

    அன்புடன்
    கவிநயா

     

    Share
  • அறுமுகநூறு (10)

     

    -சச்சிதானந்தம்

    குதித் தோடும் மயிலினைக் கொண்டாடுவான்,

    குக் குடத்துக் கொண்டையில் நின்றாடுவான்,

    துதித் தாடும் பக்தனும் பன்பாடுவான்,

    கதித்த மலை நாதனைக் கண்டாடுவான்!                                                             46

     

     

    மிதித்தோடி மான்போல தீ தாண்டுவான்,

    மதித்தோடித் தீ மிதித்து மனமாறுவான்!

    உதித்தோடும் கதிர்காய வாடுமன்பன், மனதில்

    உதித்தாடும் கந்தனால் தீ ஏறுவான்!                                                                      47

     

    மிக்கக் கொண்ட முருகன் நினைவால்,

    சொக்கிக் கண்கள் சுழலு கிறேன்,

    முக்கண் கொண்ட ஈசனிடம், குளிர்

    நெற்றிக்கண்ணைக் கோருகிறேன் அவனைக் காண!                                            48

     

    சந்தனக் காப்பிட்ட சரவணன் முகத்தில்,

    சிந்திடும் நறுமணப் புன்னகை தவழ்ந்து,

    செந்தணல் காப்பிட்டு வடுவான நெஞ்சினுள்,

    வந்திடும் தென்றலாய், வருடிடும் மென்மையாய்!                                                   49

     

    ஆதவன் ஒளிபெற்று மலர்ந்திடும் நிலவாய்நடம்,

    ஆடிடும் ஈசனின் விழியொளியில் மலர்ந்தவனே,

    ஆனை முகனடுத்து, ஆறுமுக வடிவெடுத்து,

    ஆம்பலின் நிறமெடுத்த அழகான வடிவேலனே!                                                     50

     

    Share
  • ஸ்ரீராமனும் நம்மாழ்வாரும்

    திவாகர்

    ராமாயணத்தை செந்தமிழில் எழுதிய பேரரறிஞர் ராஜாஜி, அந்த ராமாயணத்தை முடிக்கும் தருவாயில், ராமர் கதை முடிந்து போகிறதே, இப்போது அவனை விட்டுப் பிரிய வேண்டுமே என மிகவும் வருந்தியதாக எழுதி முடித்திருப்பார். ராமாயணம் ஒரு சாதாரணமான காவியமா.. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என வலியுறுத்திச் சொன்ன காவியம் அல்லவா அது!. தர்மத்தின் உச்சகட்டம்தாம் ஸ்ரீராமன். அவன் பிறந்ததிலிருந்து மானிடருக்கான தர்மத்தை எப்படியெல்லாம் கடைபிடித்தான் என்றுதான் இக் காவியத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

    பெற்றோரை மதித்தவன் ராமன்.. சீதையை மணமுடிக்க, வில்லை முறித்தவுடன் விசுவமுனி அவனை மணம் புரியுமாறு வேண்ட, தந்தை ஒப்புதல் பெற்றால் மட்டுமே மணம் புரிவேன் என்றவன்.

    தந்தையின் வரம் காக்க, அவர் தம் வாயால் கேட்குமுன்னே கானகம் புகுந்தவன் அல்லவா..

    இனிக்கும் ராஜசுகத்தையும் கடும் காட்டு வாழ்க்கையும் ஒன்றாக நினைத்து வாழ்ந்தவன் ராமன்

    மனித தர்மம் என்பது சக மனிதரிடம், ஏற்ற தாழ்வு பாராமல் பண்புடன் வாழ்வதுதான் என்பதை குகனின் நட்பு மூலம் எடுத்துக் காட்டியவன் ராமன்.

    நட்புக்கும் உதாரணம் அவனே, குகனோடு, சுக்கிரீவனையும், அனுமனையும், அசுரனான விபீஷணனையும் நண்பனாகவே பாவித்தவன் ராமன்.

    சகோதரத்துவத்தின் மகிமைக்கு உதாரணம் கூட ராமனே, உறவுக்கு கை கொடுப்பவனும் ராமனே!

    பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தவன். தாடகை கடும் அரக்கியாக இருந்தாலும், அவளை அழிப்பதற்கு முன், பெண் என்பதை மறக்காமல் அவளுக்காக முனிவரிடம் பரிந்து பேசியவன்

    மனைவியின் கௌரவம் காத்தவன் ராமன், மனைவியின் கௌரவப் போராட்டம்தானே சீதாராமனின் கதை!

    பறவையாக இருந்தாலும், அணிலாக இருந்தாலும் எல்லா உயிரினத்திடமும் பரிவு காட்டியவன் ராமன்

    தன் மீது அன்புள்ளவர்களை அவன் கைவிட்டதாக சரித்திரம் இல்லை, உதாரணம்: ஹனுமன், விபீடணன், சுக்கிரீவன், சபரி  என இன்னும் எத்தனையோ பேர்

    எதிரிக்கும் இரங்கியவன் ராமன், அதனாலல்லவோ இன்று போய் நாளை வா, என ராவணனை மன்னித்து அனுப்பியவன்!

    பெரியவர்களுக்கு கௌரவம் கொடுத்து வளர்ந்தவன் ராமன், விசுவமுனியிலிருந்து அகத்தியர் வரை ராமனின் இந்த குணத்தில் மயங்காத பெரியவர் யார்? பாலகனாயிற்றே என்று தசரதன் தயங்கியபோதும், விசுவமுனியோடு தனியே சென்று அசுரர்களை அழிப்பேன் என்றவன் அல்லவா..

    தவறுகளை மன்னிக்கும் பெருங்குணம் கொண்டவன் ராமன், தன் மனைவியை சீண்டிய காகாசுரனும் தவறுக்கு வருந்தியபோது மன்னித்தவன்

    கோபத்தை அடக்கிக் காட்டியவனும் ராமனே. பரதன் தங்களைத் தேடி அழிக்க வருகிறான் என்ற கற்பனையில் தம்பி இலக்குவன் பொங்கியபோது, கோபத்தை வென்றதோடு, இலக்குவனுக்கும் பொறுமையை போதித்தவன் ராம்ன்.

    பொறுமைக்கும் ராமன் தான் உதாரணம். யுத்தத்தின் கடைசி நாள் வரை ராவணனுக்கு சந்தர்ப்பம் கொடுத்தவனாயிற்றே!

    பாருங்கள் ராமபிரானுக்கு எத்தனை நற்குணங்கள்..

    இவையெல்லாம் ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை என்பதை குணசீலனான ராமன் கதை சொல்கிறதல்லவா…. சாதாரண மனிதனுக்கான எல்லாவித சற்குணங்களையும் கைக் கொண்டால் ஒரு மனிதன் தெய்வமாக முடியும்.. அந்தத் தெய்வத்தின் தன்மையையும் தானாகவே பெறுகிறான்.. அதனால்தானோ நம்மாழ்வார் ராமர் சரிதையை கற்றுத் தெளியச் சொல்கிறாரோ ராமபிரான் சரிதை சரியாகத் தெரிந்தாலே போதும்.. வேறெதுவும் தேவையில்லை.. முக்திக்கு அவனே மார்க்கம் என்கிறார்..

    “கற்பார் இராமபிரானை யல்லால் மற்றுங் கற்பரோ?
    புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன்றின்றியே
    நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
    நற்பாலுக் குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே”

    கற்பவர்கள் உயர்ந்த ராமபிரானின் கதையையன்றி வேறொன்றும் கற்பரோ? தாவரங்களானாலும் புல்லும் பூண்டும், ஊர்வனவான எறும்பு முதலியன அண்ட சராசரங்களில் தோன்றும் அனைத்து உயிரினங்களுக்கும், ராமபிரான் பிறந்த பிரம்மன் படைத்த தேசமான ஒரு அயோத்தி நகரத்தில் பிறந்த பேறுக்காக,  மோட்சத்திற்கான நற்கதி கொடுத்தருளியவன் அல்லவா..- நம்மாழ்வார்.

    படங்களுக்கு நன்றி:

    http://www.mythicmaps.net/Festival_calendar/April/Rama_Navami.htm

    http://library.thinkquest.org/11719/vasishtfiles/ramanavami.html

    Share
  • ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே (பகுதி 1)

     

    சத்தியமணி

     

    தீமைகள் களைபவனே உமையின் மைந்தனே

    ஆனைமுகத்தவனே அருள்முதற் பொருளோனே

    நாமையம் அமர்ந்து நவின்றிடுவாய் சிந்து

    அன்னையைப் பாடிட அமுதிடுவாய் விரைந்து

     

    அன்னை யென்றுன்னை அழைப்பவரின் முன்னே

    விரைந்திடும் தாயுனது புகழ்நிலத்து வாழியவே

    முன்னை வினையெல்லாம் கடைவிழியின் கீற்றால்

    கரைத்திடும் தாயுனது புகழ்நிலைத்து வாழியவே

    தன்னை யுருவாக்கி தயைக்கருணை கொடையாக்கி

    அரசியாய் அலங்கரிக்கும் மாசக்தி வாழியவே

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !    1

     

    மடலை விரிப்பதிலும் மணமதில் நிறைப்பதிலும்

    மதுவுடன் மலர்கள்தரு மகிமையே வாழியவே

    உடலை படைப்பதிலும் உயிரதில் நிலைப்பதிலும்

    மனமதி அமைதிதரு மாதரசி வாழியவே

    பயன்படும் பேரறிவும் பகுத்திடும் நுண்திறனும்

    கொடுத்திடும் பெருங்கருணை கலைவாணி வாழியவே

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !   2

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- 4

    சாகர் பொன்னியின்செல்வன்

    ஸ்பின்க்ஸ்

    காலத்தை கடந்த கல் அதிசயங்களை தூரத்திலிருந்து பார்த்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்று மஹ்மூத் எங்களை வண்டிக்கு அழைத்தார்.மணல் சாலையில் பத்து நிமிடம் பாலைவனத்தில் பயணம் செய்ததும் ஒரு சிறிய சந்தை போன்ற ஒரு இடத்தை அடைந்தோம்.

    சந்தை என்று சொல்லுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் ஒட்டகங்கள். பக்கத்தில் கலாபியா என்ற எகிப்திய உடையை அணிந்த பலரும் மீண்டும் கரீனா கபூர் ஷாருக்கான் என்று அழைத்த ஓலங்கள் எங்களை எதிர்கொண்டன!  அனைவருக்கும் சுக்றான் சுக்றான் (நன்றி) கூறியவாறு மஹ்மூதை பின் தொடர்ந்தோம்.அதில் ஒரு இளைஞன், ‘‘நீ ஏன் சுக்றான் என்று அராபிய மொழியில் சொல்கிறாய் உன்னால் அரபிக் பேசமுடியாது அல்லவா தாங்க்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லு’’ என்ற அறிவுரை வேறு.

    ஒரு வழியாக ஒரு ஓரத்தில் சில ஓட்டங்கங்களுடன் நின்ற ஒரு முதியவரிடம் வந்து எங்களை சேர்த்தார் மஹ்மூத். “நீங்கள் இவரது ஒட்டகங்களில் பயணித்து சிறிது தூரம் பாலைவனத்துக்குள் சென்றால் பிரமிடுகளை மிகவும் நன்றாக பார்க்கமுடியும்” என்றார்.

    ஒட்டகங்கள் என்றதும் பிள்ளைகள் மிகவும் ஆர்வமாக போகலாம் போகலாம் என்றார்கள். சரியென்று இரண்டு ஒட்டகங்களை ஏற்பாடு செய்துகொண்டு, செல்ல ஆயுத்தமானோம். வருணும் ஆனந்தியும் ஒரு ஒட்டகத்திலும் நானும் சக்தியும் இன்னொரு ஒட்டகத்திலும் ஏறினோம்.

    ஒட்டகம் ஒரு விசித்திரமான மிருகம், இறுகியமுகம், உயிரற்ற கண்கள் வாடையுள்ள உடம்பு குறுகிய கால்கள், குதிரைக்கு உள்ள வாளிப்பும் அழகும் இதற்கு கிடையாது. என்றாலும் பாலைவனத்தின் நாயகன் ஒட்டகம் தான்.

    ஒட்டகத்தின் மேல் ஏறுவது மிகவும் சுலபம் ஆனால் உட்கார்ந்திருக்கும் ஒட்டகம் நாம் ஏறியதும் எழும்பும் போது முதலில் பின்னங்கால்களை முதலில் நேர்செய்து எழும்போது நாம் கீழே விழுவது போன்று தோன்றும். பின்னர் மெல்ல அது முன் கால்களை நேர்செய்து நம்மை உயரே தூக்கி நடக்கும். மணலில் அது மெல்ல அடிமேல் அடி வைத்து நடப்பது ஒரு வித அழகு தான்.

    ஒரு கால்மணிநேரம் இரண்டு ஒட்டகங்களையும் மெல்ல நடத்திக்கொண்டு எங்களை பாலைவனதிற்குள் அழைத்து சென்றனர். எங்கு பார்த்தாலும் மணல் வெளி, சிறுது நேரத்திற்கு முன் இருந்த வாகனங்கள்,மனிதர்கள், சந்தை எல்லாம் மறைந்துவிட்டன.

    நாற்புறமும் மணல், தூரத்தில் மூன்று பிரமிடுகள். அந்த நிமிடம் நாங்கள் இருந்த சூழ்நிலை இன்றோ மூவாயிரம் ஆண்டுகள் முன்னரோ என்று சொல்லுவதற்கு சாட்சி எதுவும் இல்லை. அன்றிருந்த மேனிக்கு இன்றும் கம்பீரமாக மணலில் காட்சியளித்தன பிரமிடுகள்! நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டுதான் இருக்க தோன்றியது, என்றாலும் மேலும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் பிரியாவிடை கொடுத்து மீண்டும் சந்தை கடையை வந்தடைந்தோம். “ஒரு ஒட்டகத்திற்கு இருபது டாலர் வாடகை”, என்றார் முதியவர். சரி என்று ஐம்பது டாலர் நோட்டை கொடுத்தேன். “இரண்டு ஒட்டகத்திற்கும் நாற்பது எனக்கு டிப் பத்து டாலர்” என்றார். எகிப்தில் டிப் என்பது நாம் தருவது அல்ல அவர்களே எடுத்துகொள்வது என்பது அப்போது தான் புரிந்தது. சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் எவ்வளோவோ மேல் என்று தோன்றியது.

    எங்கள் வண்டியில் ஏறிக்கொண்டு மீண்டும் பிரமிடுகளை கடந்து ஒரு மைல் தொலைவில் இருந்த ஸ்பிங்க்ஸ் வந்து சேர்ந்தோம். சிவாஜி நடித்த சிவந்தமண் படத்தில் வரும் பட்டத்து ராணி பாடலில் கண்களை கவரும் வண்ணம் பின்னால் நிற்கும் சிலை தான் ஸ்பிங்க்ஸ்.எகிப்திய மன்னர்கள் தங்கள் வல்லமையை பறைசாற்ற தங்கள் உருவங்களை சிங்க உடலின் மேல் வைத்து படைத்த உருவங்கள் தான் இந்த ஸ்பிங்க்ஸ்.

    கீஸாவில் உள்ள இந்த சுண்ணாம்புப் பாறை ஸ்பிங்க்ஸ் சிலை உலகத்தில் உள்ள சிலைகளில் எல்லாம் மிகவும் பெரியது. 241 அடி நீளம் 63 அடி அகலமும் 66.34 அடி உயரம் கொண்டது இந்த கம்பீரமான மனிதமுகம் கொண்ட சிங்கம்.

    ஸ்பிங்க்ஸ் என்பது பண்டை கிரேக்க மற்றும் எகிப்திய கலாச்சரம் மற்றும் இதிகாசங்களில் உள்ள ஒரு ஜீவன்.

    கிரேக்க ஸ்பிங்க்ஸ் உருவமானது சிங்க உடல், பெண் முகம் கொண்டதுடன் பறவைகளின் இறகுகளும் கொண்டது.கிரேக்க ஸ்பிங்க்ஸ் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாத பயணிகளை கொடிய மிருகங்களுக்கு இரையாக கொடுக்கும் கொடுமையானது கிரேக்க  ஸ்பிங்க்ஸ், அனால் எகிப்திய ஸ்பிங்க்ஸ் அரசர்களின் அம்சம் மற்றும் ஆதரவின் அம்சம். எல்லா கோவில் வாசல்களிலும் துவாரபாலகர்கள் போல் பல ஸ்பிங்க்ஸ் சிலைகள் அணிவகுத்திருக்கும்.

    மிக கம்பீரமாக நிற்கும் இந்த ஸ்பிங்க்ஸ் குப்று மன்னனின் தலையை கொண்டது. மூக்கறுந்த நிலையில் உள்ள இந்த  ஸ்பிங்க்சை பற்றி பல கதைகள் உள்ளன. மிகவும் பொதுவாக சொல்லப்படும் சோக கதை ஐரோப்பிய படைவீரர்கள் இந்த சிலையின் மூக்கை குறிபார்க்கும் மையமாக வைத்து சுட்டதின் விளைவுதான்  இந்த மகத்தான சிலை மூக்கை இழந்து நிற்கும் அவலநிலை அடைந்தது.

    ஸ்பிங்க்ஸ் சிலையை ஒட்டி ஒரு கோவிலும் உள்ளது. சிதைந்த நிலையில் உள்ள இந்த கோவிலில் இன்று நிற்பது வெறும் தூண்களும் சில சுவர்களும் தான்.

    ஸ்பிங்க்ஸ் தூரத்திலிருந்து பார்க்கும்போது சிறிய சிலைபோல் தோன்றினாலும் கிட்டே வந்ததும் எவ்வளவு பிரமாண்டமாக உள்ளது என்பது வியக்கவைக்கும்  காட்சி. பண்டை நாட்களில் இந்த சிலை வண்ண பூச்சுகளுடன் இருந்தது என்பதற்கு அத்தாட்சியாக இன்றும் சில இடங்களில் அதன் காதுகளில் ஊதா வண்ணம் துகள்கள் துகள்களாக தெரிகிறது.

    ஸ்பிங்க்ஸுடன்  பல்வேறு விதமாக புகைப்படங்கள் எடுக்கும் சுற்றுல்லா பயணிகள் நடுவே நாங்களும் ஒரு வழியாக சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். தூரத்தில் தெரியும் மூன்று பிரமிடுகள் அழகிய முக்கோணங்களாக ஒளிர்ந்தன!

    ஒருவழியாக அலுப்பு தீரும்வரை ஸ்பிங்க்ஸுடன் தங்கிவிட்டு எங்கள் வண்டிக்கு வந்து மதிய உணவருந்த சென்றோம்.வண்டியில் ஏறும் முன் எங்கள் வழிகாட்டி மஹ்மூத் ஆளுக்கொரு தண்ணீர் புட்டி கொண்டுவந்து கொடுத்தார்.தினமும் ஒரு புட்டி தண்ணீர் இலவசம்! பத்து நிமிட பயணத்துக்குள் கிளியோபாட்ரா என்ற ஒரு உணவு விடுதியை வந்தடைந்தோம்.

    உணவு மெம்பிஸ் டூர்ஸ் ஏற்பாடு செய்து பணம் செலுத்தியுள்ளது உங்களுக்கு வேண்டியதை புபே உணவுதொகுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் மஹ்மூத்.நிறைய சாலட் மற்றும் பலவித எகிப்திய உணவு படைப்புகள் அணிவகுத்திருந்தன. என்ன ஒரே பிரச்னை எல்லாம் அசைவ உணவுகள். சாலட், புலவு மற்றும் மேடிதேறேனியன் மொச்சை மசியல் தவிர எல்லாம் மீன் மற்றும் கறி உள்ள உணவுவகைகள். என் மனைவியோ சைவம்!

    நான் அங்குள்ள பணியாளரிடம்,“வேறு சைவ உணவு எதுவும் இல்லையா?” என்று கேட்டதற்கு “மீன் எடுத்துவிட்டு சாப்பிட்டால் அது

    காய்குழம்புதானே” என்றார். சைவம் பற்றிய ஒரு உணர்வே இல்லாத ஊர் இது என்பது அப்போது தான் புரிந்தது.

    பிட்டா ரொட்டியும் ஹுமுஸ் மற்றும் இருந்த சைவ உணவுகளை ஆனந்தி மெல்ல சாப்பிட, பசங்களும் நானும் மீன்குழம்பும் கோழி பிரியாணியும் கெபாபும் ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.நைல் நதி மீன்களுக்கு ஒரு தனி ருசிதான்.

    உண்ட உணவைவிட எங்கள் கிளியோபாட்ரா ஹோட்டலில் இருந்து பிரமிடுகள் மிக துல்லியமாக தெரிந்த காட்சி மகிழ வைத்தது. ஹோட்டல் இருந்த உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஊரில் இருந்த கட்டிடங்களுக்கு மேல் ஸ்பிங்க்ஸுடம் பிரமிட் கோபுரங்களும் மிக அழகாக அணிவகுத்து நின்றன.

    கண்ணுக்கு  விருந்தான பிரமிடுகளையும் வயிற்றிருக்கு விருந்தான உணவையும் முடித்துக்கொண்டு கைரோ நகரை நோக்கி பயணப்பட்டோம்.

    Share