ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே (பகுதி 1)
சத்தியமணி
தீமைகள் களைபவனே உமையின் மைந்தனே
ஆனைமுகத்தவனே அருள்முதற் பொருளோனே
நாமையம் அமர்ந்து நவின்றிடுவாய் சிந்து
அன்னையைப் பாடிட அமுதிடுவாய் விரைந்து
அன்னை யென்றுன்னை அழைப்பவரின் முன்னே
விரைந்திடும் தாயுனது புகழ்நிலத்து வாழியவே
முன்னை வினையெல்லாம் கடைவிழியின் கீற்றால்
கரைத்திடும் தாயுனது புகழ்நிலைத்து வாழியவே
தன்னை யுருவாக்கி தயைக்கருணை கொடையாக்கி
அரசியாய் அலங்கரிக்கும் மாசக்தி வாழியவே
ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே
எல்லா நலங்களும் எமக்கருள்வாயே ! 1
மடலை விரிப்பதிலும் மணமதில் நிறைப்பதிலும்
மதுவுடன் மலர்கள்தரு மகிமையே வாழியவே
உடலை படைப்பதிலும் உயிரதில் நிலைப்பதிலும்
மனமதி அமைதிதரு மாதரசி வாழியவே
பயன்படும் பேரறிவும் பகுத்திடும் நுண்திறனும்
கொடுத்திடும் பெருங்கருணை கலைவாணி வாழியவே
ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே
எல்லா நலங்களும் எமக்கருள்வாயே ! 2
ஜனக்புரி சீதா பிறந்த இடமல்ல . ஜனக்புரி யென்னும் பகுதி தில்லியில் தென்னாட்டவர் நிறைந்தப் பகுதி. ஆங்கே பல ஆண்டுகள் முன் அதியங்கள் பிண்ணனியாய் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயில் நிறுவப்பட்டு பிரசித்தம் அடைந்துள்ளது. எண்ணற்ற குடியரசு தலைவர்கள்,மந்திரிகள்,அரசியல் பிரமுகர்கள்,பிரபலங்கள் தரிசிக்க வருவதுண்டு. அவள் ஆன்மீக வசியம் எம்மை பலமுறை வரவழைத்து அருட்பொழிந்திருக்கிறது. அன்னையைப் பாடப் பெருகும் ஆசைக்கும் அளவுண்டோ? இயற்றிய பல பதிகங்களில் இதுவும் ஒன்று. காஞ்சி மகானின் திருகரங்களில் படித்து ஆசி பெற்றது உங்களின் பகிர்வுக்கு. ருத்ரம் சமகம் போல் முதல் பகுதி அன்னையின் புகழ் படிக்கும். பின் பகுதி குழந்தையைப் போல் ஆசைக் கோரிக்கை விடுக்கும். ‘ஐயிகிரி…’ சந்தத்தில் அமையப்பெற்றது. வசந்த நவராத்திரி சமயத்தில் இதை வல்லமையில் பகிர்கிறேன்.
மிக அற்புதமான பகிர்வு. அன்னையின் அருட்பிரவாகம் எங்கள் மீதும் பெருக உதவியதற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.