Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!..95

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள்!

    அடுத்தொரு வாரம், அடுத்தொரு மடல், அடுத்தொரு அலசல்.

    ஆங்கிலத்தில் அழகாக “Generation gap” என்பார்கள். ஆமாம், அதற்குச் சரியான தமிழாக்கம் தலைமுறைகளுக்கிடையான இடைவெளி ஆகும்.

    ஆனால் அனைத்துக்குமே இதைக் காரணம் காட்டி தப்பிச் சென்று விடும் வழமைதான் அநேகமாக இயங்கி வருகிறது.

    ஒரு தந்தை மகனுக்கோ அன்றி மகளுக்கோ ஏதாவது பழகும் முறையைப் பற்றியோ அன்றிக் கலாச்சார அவசியங்கள் பற்றியோ விளக்க்க்க்க்க முற்படும் போது இலகுவாக தந்தையிடம் இது உங்கள் காலத்திற்கு உகந்ததாக இருந்திருக்கலாம் ஆனால் இன்றைய எமது தலைமுறைக்கு ஒத்து வராது என்று கூறித் தம்மை விடுவித்துக் கொள்ளும் பல நிகழ்வுகளைக் காண்கிறோம்.

    அன்றிலிருந்து இன்றுவரை அகிலம் ஒரே அகிலம் தான், ம்ஃஅனித்ஹ்ஹ்ஹ்ஹர்களும் உருவ உடலமைப்பும் ஒன்றேதான் பின் எங்கிருந்து இந்த தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளி உருவாகிறது,

    அப்படி மனித வாழ்வில் மாறிக் கொண்டிருப்பதுதான் என்ன? எனது தந்தை தனது தந்தையை அப்பா என்றுதான் அழைத்தார் இன்று எனது மகனுக்கும் நான் அப்பாதான் ஆனால் அதைச் சிலவேளைகளில் அவர்கள் மாற்றி “டாடி” என்றழைக்கலாமே தவிர உறவுமுறை தந்தை மகன் தான்.

    மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்னே இருந்த உறவுமுறை மாற்றம் காணாது அப்படியே தான் இருக்கிறது அப்படியாயின் எதுதான் மாற்றம் கண்டுள்ளது? இந்தத் “தலைமுறை இடைவெளி” என்பதுதான் என்ன?

    ஓடிக்கொண்டிருக்கும் எமது வாழ்க்கையில் உறவு முறைகள் அப்படியே இருந்தாலும் எம்மைச்சுற்றிய சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது.

    அப்பா, டாடியாகவும் அம்மா, அமமொயாகவும் மாறும் ஒரு கலாச்சார மார்றம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

    மேடான நிலத்தில் விழும் தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓடுவது போல மேஏஏலைநாடுகளின் காலாச்சார மாற்றங்கள் கீழத்தேசங்களான எங்கள் பிபுல நாட்டு மக்களைக் கவர்ந்திழுப்பது தவிர்க்க முடியாததே!

    பாள்ளத்தை நோக்கி ஓடும் நீர் அப்பள்:ளத்தை நிரப்பியது அங்கு தேங்கி விடுகிறது பின்னால் அந்தத் தேங்கிய நீர் விஷக்கிருமிகளின் உற்பத்திக்குத்தான் இதவுவுமே ஒழிய மனிதர் அருந்துவதற்கு அல்ல.

    அதே போலத்தன்ன் இந்தக் கலாச்சாரக் கவர்ச்சியும் ஒரு சிலகாலத்தின் பின்னால் அதுவும் தேங்கி விடுகிறது.

    அப்படியான ஒரு தேக்கத்தின் விளைவாகத்தான் இன்ன்ன்ன்றைய மேலைத்தேசங்களின் மக்களின் அடிப்படி வாழ்க்கைமுறைகளே மாறி வருகின்றன.

    உதாரணமாக ஓரினத் திருமணங்கள் போன்ற சிலகாலத்திற்கு முன்னால் திரைமறைவில் நிகழ்ந்தவைகள் இன்று சமுதாய நிகழ்வுகளின் ஒரு அங்கமாக அம்க்கீகரிக்கப்பட்டு வருகிறது.

    இதைப்பற்றிய முரணான கருத்துக்கள் கொண்ட அனுஒஅவ முதிர்ச்சியடைந்தவர்களை நோக்கி தமது அபிப்பிராயங்களை நியாயப் படுத்த முனையும் இளைய தலைமுறையினர் உபயோகிக்கும் பதமே “தலைமுறை இடைவெளி”.

    காலத்தின் மார்றத்தை உள்வாங்கிக் கொண்டு நடைபோட வேண்டியதே மனிதனின் கடமையாகிறத்ஹ்ஹ்ஹு. க;ஆச்சார தர்மங்களின் அடிப்படையில் பகுத்தறிய முற்படுவோர் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் தமக்கு முரண்[அட்ட கருத்துக்களையே எதிர் நோக்க வேண்டியுள்ளது.

    இதுவே யதார்த்த உண்மை.

    ஒவ்வொரு தலைமுறையும் தமது அடுத்த தலைமுறையின் வாழ்க்கையை மேலும் வசதியாக்கவே பிரயத்தனப்படுகிறது.

    ஆனால் பல சமய்ங்களில் நேர்மரையான வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகளின் பக்க விளைவுகளாக எதிர்மறையா நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதற்குத் துணையாக “தலைமுறை இடைவெளி” எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள்.

    என் இனிய அன்பு உள்ளங்களே! தலைமுறைகளுக்கிடையில் எத்தனை இடைவெளிகள் ஏற்பட்டாலும் அப்பா, அப்பாதான் அம்மா, அம்மாதான் இந்த உறவுமுறைகள் மாற முடியாது.

    இதேபோன்ற சில அடிப்படையான ஆனால் மூட நம்பிக்கைகள் இல்லாத கலாச்சார அடிப்படைகள் எவர் எங்கு வாழ்ந்தாலும் மாற முடியாத்வை.

    ஆனால் இவற்றின் மகத்துவத்தைப் பேணிக்காப்பது?,  சிந்திக்க வேண்டிய விடயம் இல்லையா?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வாழ்க்கை நலம் – 47

    குன்றக்குடி அடிகள்

    47. காத்துக் கொள்ளும் வழி

    வாழும் மனிதர்களில் யாருக்குத்தான் தற்காப்பு உணர்வு இல்லை! நூற்றுக்கு நூறு பாதுகாப்பையும் அமைதியையும் விரும்புபவர்கள் தாம்! ஆனால் வாழ்வியலறிவு பெறாததால் பலர் பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாப்பின்மையையே பெறுகிறார்கள்.

    பலர் எவற்றைப் பாதுகாப்பு என்று கருதுகிறார்களோ அவையே அவர்களுக்குப் பாதுகாப்பின்மையைத் தோற்றுவித்து விடுவதை வாழ்க்கைப் போக்கில் காணலாம்.  சொத்து, பெருமை, புகழ் ஆகியன பாதுகாப்பு என்று தேடினாலும் அவைகளுக்கு ஆபத்து ஏற்படும்போது அவை பாதுகாப்பு தருவதில்லை.

    தான் நினைத்தவாறு நடக்காதபோது மனிதனுக்குக் கோபம் வருகிறது. கோபம் வெகுளி என்றும் கூறப்படும். கோபம் வந்தால் இதயத் துடிப்புக் கூடுகிறது; இரத்த ஓட்டம் கூடுகிறது. அது மட்டுமின்றி இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.  இதனால் இதயப் பாதிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது; உடல் நலம் கெடுகிறது. உடல் நலக் கேட்டின் வழி மன நலம் கெடுகிறது.

    உடலும் மனமும் கெட்டால் அறிவு வேலை செய்யுமா? ஒரு போதும் செய்யாது, ஆதலால் கோபம் எதையோ காப்பாற்றிக் கொண்டு பாதுகாத்துக் கொள்ளத் தோன்றுவது போலத் தெரிகிறது. ஆனால் அது உண்மையன்று. கோபத்தினால் இழப்பே ஏற்படுகிறது.

    கோபப்படுவதற்கு மாறாகத் திகைப்பும் படபடப்பும் அச்சமும் இல்லாமலிருந்தால் ஒன்றும் கெட்டுவிடாது. எல்லாம் நன்றாக நடக்கும்; பாதுகாப்பும் இருக்கும். அடக்கப்பட்ட கோபம் ஆற்றலாக மாறும்! பொறுப்புணர்ச்சியைக்  கூட்டும்! வேலைகள் அதிகம் செய்யலாம். ஏமாற்றங்களும் ஏற்படா, உடலுக்கும் பாதுகாப்பு, பணிக்கும் பாதுகாப்பு! அதைவிட நம்மைச் சார்ந்தவர்களிடத்தில் மனக்கசப்பு ஏற்படாததால் அவர்களிடமிருந்தும் பாதுகாப்பு!

    சில நிமிடக் கோபம் பல நாசங்களைச் செய்கின்றன. பொறுத்தாற்றும் பண்பு, எண்ணற்ற நலன்களைச் செய்கின்றன. பல ஆண்டுகள் வாழலாம். நலத்துடன் வாழலாம்! வாழ்வாங்கு வாழலாம்!

    இனிமேலாவது கோபப்படாமல் வாழக் கற்றுக் கொள்வோம். ஆனால் கோபத்தை அடக்குதல் எளிதன்று? கடுமையான பயிற்சி தேவை. கோபம் வரும் பொழுதெல்லாம் கவனித்தல் வேண்டும். எதைக் கவனிக்க வேண்டும்? கோபத்தின் காரணங்கள் மாறக் காத்திருக்க வேண்டும்.

    கோபத்தினை மடைமாற்றம் செய்யப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது அண்ணல் காந்தியடிகள் காட்டிய வழி! ஏன் காலதாமதம்? கோபத்தை விட்டுவிட வேண்டியதுதான்! பிளேட்டோவைப் போல் கோபம் வரும் பொழுது பேசாமல் மௌனமாக இருக்கக் கற்றுக் கொள்வோம்! கோபத்தை வென்றுவிடலாம்.

    “தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லும் சினம்”
    (திருக்குறள் –  305)

    தன்னைக் காத்துக் கொள்ளும் விருப்பம் உண்டா? தன்னையே கொல்லும் சினத்திலிருந்து காத்துக் கொள்க. அப்படிச் சினத்திலிருந்து தன்னைத் தானே காத்துக் கொள்ளத் தவறினால் அந்தச் சினமே கொன்று விடும் என்பது திருக்குறள் கருத்து! மரணம் அல்லது சாவு வேண்டாம் என்றால் சினத்தைத் தவிர்த்திடுக!

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • தங்கமும் தங்கமாக மின்னும் விளம்பரங்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒரு நகைக்கடை தங்களுடைய விளம்பரம் மூலமாக மக்களைப் பெரிதும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்று கிராமுக்கு 2014 ரூபாய் கட்டினால் ஐந்தாண்டு கழித்து எத்தனை கிராமுக்கு நாம் பணம் கட்டியிருக்கிறோமோ அத்தனை கிராம் தங்கத்தை அவர்கள் கொடுத்து விடுவார்களாம். 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2810. அந்த விளம்பரத்தில் நடிக்கக்கூடிய பெண்மணி நான்கு நாட்கள் தான் இருக்கிறது. இந்த வைப்பத் திட்டம் முடிவடையப் போகிறது. அதனால் விரைந்து சென்று பணத்தைக் கட்டுங்கள் என்று கூறுகிறார். இன்றைக்கு தங்கத்தின் விலை இருப்பது போன்று ஐந்தாண்டுகள் கழித்தும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்பொழுது நம்முடைய ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சியடையாமல் அப்படியே இருப்பதாக வைத்துக்கொண்டாலும் இன்றைக்கு இருக்கக்கூடிய சந்தை விலைக்கு இவர்களால் தர முடியுமா என்பது சந்தேகம்தான். இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து. தங்கத்தின் விலை ஏறினாலும், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அதிகமானாலும் நட்டத்தின் மடங்கு அதிகமாகவே அல்லவா ஆகும். இந்த கவர்ச்சிகரமான விளம்பரத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றிருந்தால் அதற்கான அரசாணையும் தேதியும் அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதையும் அவர்கள் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இதற்காக அரசாங்கத்தின் கருவூலத்தில் வைப்புநிதியாக எத்தனை கோடி வைத்திருக்கிறார்கள் என்பதையும் வெளியிட்டிருக்க வேண்டும் அதையும் செய்யவில்லை. இதனால் நாளை மக்களுக்கு இழப்பு ஏற்படாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

    சென்ற வருடம் இதுபோல் ஈமு கோழி வளர்ப்புத் திட்டம் என்று கவர்ச்சிகரமான திட்டங்களையெல்லாம் விளம்பரம் செய்து மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி வசூல் செய்ததால் மக்கள் அவதிப்பட்டதோடு அந்த கோழிகளும் இன்றுவரை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் தேக்கு மரத் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து மிக அருமையாக விளம்பரம் செய்து அதன் மூலம் மக்கள் பல ஆயிரம் கோடிகளை இழந்ததும் நினைவிருக்கலாம். இப்படி ஒரு தனி நிறுவனம் வெட்ட வெளிச்சமாக விளம்பரம் செய்து மக்களைக் கவர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் போல இதிலும் கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா? நாம்தான் விழித்துக்கொள்ள வேண்டும்! கடின உழைப்பால் சம்பாதித்த நம் செல்வத்தை இது போன்ற விளம்பரங்களை நம்பி மோசம் போகாமல் நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

    Share
  • புத்தக மதிப்புரைப் போட்டி முடிவுகள்!

    அன்பு நண்பர்களே,

    நாம் பல நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘புத்தக மதிப்புரைப்’ போட்டிக்கான முடிவுகளை இதோ நம் உயர்திரு. வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்கள், தம் தேர்ந்த ஞானமும், நிறைந்த அனுபவமும் கொண்டு மிக ஆழ்ந்த பார்வையுடன், பாரபட்சமற்ற முறையில் மிகத் தெளிவாக அளித்துள்ளார்கள். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி. போட்டியில் மிக ஆர்வமாகக் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெ.சா. ஐயா கூறியது போன்று அத்துனை இடுகைகளும் தரம் வாய்ந்தவைகள். போட்டி என்பதால் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் வெற்றி வாய்ப்பு சிலருக்கு மட்டும் கிடைத்திருக்கிறது என்பதே உண்மை. இதோ வெற்றியாளர்கள் குறித்த அவருடைய மதிப்பீடுகள் :

    வெங்கட் சாமிநாதன்

    என் மனதுக்குப் பட்டதைச் சொல்கிறேன்.

    எந்த எழுத்தையும் முதலாவது, இரண்டாவது என்று தேர்வு செய்வது மிகவும் கஷ்டமானது. அது மிகவும் சிக்கலான விஷயம். ஏனெனில் எழுத்தே, சிறுகதையோ, நாவலோ, கவிதையோ சிருஷ்டிப்பூர்வமானது. அது எழுதுபவனின் தனி உலகம். அதை இன்னொருவன் எதிர்கொள்வது அவனின் தனி உலகம். அது அப்படித்தான் இருக்கும். ஷேக்ஸ்பியரை டால்ஸ்டாய் ஒப்புக்கொண்டவரில்லை. இரண்டு பேரும் இரண்டு சிகரங்கள். ஐம்பது அறுபதுகளில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு எழுத்தாளர், மாயாவி, கலைமகளில் அக்காலத்தில் நிறைய எழுதியவர், பம்பாய் வாசி, தில்லி வாசியானார். “எங்கே வேணாலும் எந்த கோவில்லேவேணாலும் சத்தியம் செய்யத் தயார். க.நா.சு. எழுதறதெல்லாம் எழுத்தே இல்லை. அவருக்கு இலக்கியமே என்னன்னு தெரியாது” என்று அவர் சொன்னபோது அவர் முகம் சிவந்து கிடந்தது. ”க.நா.சு எழுதுவது அத்தனையும் உடன் கட்டை” என்று கோ.வி.மணிசேகரன் பல பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றவர் எழுதினார். தி.ஜானகி ராமன் எழுதுவதையோ, லா.ச.ராமாமிர்தம் எழுதுவதையோ ஒப்புக்கொண்டவர் இல்லை மௌனி. புதுமைப்பித்தனிடம் தான் ஏதோ இருக்கற மாதிரி படறது” என்பார் அவர். பாரதி அதி முட்டாள் என்று அவர் காலத்திய புலவர்கள் சொன்னதுண்டு. திராவிடக் கழக மேடைகளில் பாரதி பாப்பான் என்று வசை பாடப்பட்ட போது, “ஐயரை ஒன்னும் சொல்லாதீங்கடா, அவரை விட்டுவிடுங்கப்பா” என்று தான் பாரதி தாசன் சொல்ல முடிந்தது. கோபால கிருஷ்ண பாரதிக்கு ஒழுங்கா தமிழ் எழுதவே தெரியலை” என்று அக்காலத்திய கம்பன் எனப் புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னார். இதெல்லாம் அவரவருக்கு ஈடுபாடு இருந்த, தெரிந்த துறையில் இன்னொருவர் எழுத்தைப் பற்றி விமர்சித்தது. இந்த விமர்சனங்கள் அத்தனையும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இன்னும் இது போன்று தொடர்பவை எல்லாம் நிராகரிக்கப்பட்டு விடும். இப்போதைய விஷயத்துக்கு வரலாம்.

    எனக்கு முன்னர் போன வருடம் தரப்பட்டது ஒரு வருஷ காலத்துக்கு பலர் எழுதிய சிறுகதைகள். எல்லாம் சிறுகதைகள். அந்த சிறுகதைகளோடு நான் தந்திருந்த தேர்வும் எல்லோருக்கும் முன் பார்வையில் வைக்கப்பட்டவை.

    இம்முறை என் முன் வைக்கப்பட்டவை 20 மதிப்புரைகள். பலரால் வித விதமான வேறுபட்ட ரசனை கொண்டவர்களால் தரப்பட்ட மதிப்புரைகள். மதிப்புரைகளும் ஒரே வகைப்பட்ட எழுத்துக்கள் பற்றி அல்ல. பல கவிதைகள் பற்றியவை. கவிதைகள் அல்ல. அவை பற்றிய மதிப்புரைகள். நாவல்கள் சிலவற்றைப் பற்றிய மதிப்புரைகள். சில நடந்த, பலர் அறியாத நடந்த வரலாறு சார்ந்த புனைவுகள். சில இலக்கியம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு பற்றிய மதிப்புரை இப்படி பல ரகங்கள். எல்லாமே யாரோ எழுதியதற்கு இன்னொருவர் எழுதிய மதிப்புரைகள். அந்த மதிப்புரைகளை மதிப்பிடுவது எப்படி?

    நமக்குத் தெரியாத ஏதேதோ நாட்டு, மக்களின் உணவு பற்றி, வேறு யார் யாரோ நாட்டவர் எழுதும் ரசனையை மாத்திரம் வைத்துக் கொண்டு யார் ரசனை எழுத்து சிறந்தது என்று எப்படிச் சொல்வது? ஏதும் ஒரு வகைப்பட்டதாக இருக்கவேண்டுமே.

    இது மிக சிக்கலான விஷயம். மலையாளத்து எரி சேரியைச் சாப்பிட்டு ஒரு இங்கிலீஷ்காரன் எப்படி இருந்தது என்று சொல்வான். ரஷ்யன் வோட்காவை ஒரு பர்மாக்காரன் சாப்பிட்டு எப்படி இருந்தது என்று சொல்வான். பாங்காக் தெருக்களில் கரப்பான் பூச்சியை வறுத்து வைத்திருந்ததைச் சாப்பிட்டு ஒரு சைனாக்காரன் அவன் ரசனையைச் சொல்வான். இப்படி 20 பேர் எழுத்தைப் பற்றி இன்னொரு இருபது பேர் எழுதுவதை எப்படி ஒரு சீராக மதிப்பிடுவது? எது முதல் பரிசுக்கு ஏற்றது, எது இரண்டாவது பரிசுக்கு என்று சொல்வது?

    ஆக, இந்தக் காரியத்துக்கு ஏதாவது ஜகஜ்ஜாலம் செய்து தான் ஆகவேண்டும். ரொம்பவும் subjective ஆன நாவல், கவிதை, சிறுகதை இவற்றை நான் ஒதுக்கி விட்டேன். ஒதுக்கியதற்கு இன்னொரு காரணம், அந்த subjective ஆன எழுத்துக்கு இன்னொரு வேறுபட்ட ரசனையும் பார்வையும் கொண்ட இன்னொரு subjective அபிப்ராயத்தைப் பற்றி நான் என்ன சொல்லமுடியும்? ஒன்று மிகப் பரவச உணர்வோடு எழுதப்பட்டதும், இது என்னால் ஆகாது, மேரு மலையைப் பற்றி நான் ஒரு சிறு கரடு, நான் என்ன சொல்ல, என்ற தன்னடக்கம் கொண்டதுமாக இருந்தால். அதை மாத்திரம் வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய. இதையெல்லாம் ஒதுக்கி விட்டேன். பிட்ஸாவையும் நெத்திலி வறுவலையும் ஒப்பிடும் காரியம் என்னால் ஆகாது.

    ஆனால் இன்றைய தமிழுக்கு, அது தெரியாத, அது அறியாத வளங்களைக் கொண்டு சேர்க்கும் எழுத்துக்கள், எனக்கு மிக முக்கியமானவையாகப்பட்டன. இந்த மாதிரி எழுத்துக்கள் தமிழில் வருவது இல்லையென்றும் சொல்லலாம். அல்லது, மிக மிகக் குறைவு என்றும் சொல்லலாம். அப்படிப்ப்ட்ட எழுத்துக்களின் மீது நம் கவனம் செல்ல வேண்டிய அவசியம் உண்டு. இவை முக்கியமாக, வரலாறு ஆனதால் subjective அல்ல. புற நோக்கில் மதிக்கத் தக்கவை. எனக்கு இவை எழுதப்பட்டுள்ளதும், அவை பற்றி நம் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதும். எனக்கு மிக சந்தோஷம் தந்தவை. எந்த தரத்தில் எழுதப்பட்டவை என்று தீர்மானிக்கமுடியாத நாவல், கவிதை, சிறு கதை பற்றிய, பக்தி பாவத்தில் புகழ்ந்து எழுதப்பட்டவையும் அல்லது இதைப் பற்றி எழுதும் தகுதி எனக்கில்லை என்று எழுதப்பட்டவையும் ஒதுக்கி விட்டால், ஒதுக்கத் தான் வேண்டும். மிஞ்சுவது இன்றைய தமிழ் வரவேற்க வேண்டிய சேர்க்கைகள், வளம் ஊட்டுபவை என்று கருதி அவற்றின் மீது நம் கவனத்தை ஈர்க்க எழுதப்பட்ட மதிப்புரைகள் என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவை.

    இது நான் – என் பார்வை.

    VGopalanஇந்தப் பார்வையில் எனக்கு நம்மவர் எல்லாம் மிகவும் ஏதோ பேர் சொல்லி ஒதுக்கி விடும் நாகரத்தினம் அம்மாளை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி ஒரு புத்தகமே வெங்கட கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுத, அதை தமிழுக்கு மொழிபெயர்த்த பத்மா நாராயணன், பின் இதைத் தன் மதிப்புரைக்கு எடுத்துக்கொண்டு இந்த அரிய ஜீவனைப் பற்றிய அரிய புத்தகத்தை நம் கவனத்திற்குக் கொண்டு வந்த தஞ்சை வெ.கோபாலன் எல்லோரும் நம் மரியாதைக்குரியவர்கள். முதல் பரிசுக்கு என் தேர்வு தஞ்சை வெ.கோபாலனின் மதிப்புரைதான். இன்றைய தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய விஷயம். அது பெற்ற மகத்தான வரப் பிரசாதங்களைப் பற்றித் தெரியாது. பாமரத்தனமான பிரபலங்களைப் போற்றும், சிலை எழுப்பி வணங்கும் குணம் கொண்டது அது.

    அடுத்து இரண்டாவதாக வரும் எனது தேர்வு மா.ராசமாணிக்கனாரின் தமிழ் வரலாற்று, இலக்கிய ஆய்வுகளைப் பற்றி இன்றைய தமிழ் பண்டித உலகம், இலக்கிய உலகம் அறியுமா அறியாதா தெரியாது. அவரது வரலாற்று ஆய்வுகளை அவரது மகனார், இரா. கலைக்கோவனே எழுதிய வரலாற்றின் வரலாறு என்னும் இன்னொரு அரிய புத்தகத்தின் மீது நம் கவனத்தை ஈர்க்கும் தேமொழியின் மதிப்புரை. வரலாறும், இலக்கிய ஆய்வும் இன்றைய தமிழ்ச் சூழலில் படும் பாடு நமக்குத் தெரியும். கலைக்கோவனும் அந்தப் புத்தகத்தை நம் பார்வைக்குக் கொண்டு வந்துள்ள தேமொழியும் நம் மரியாதைக்குரியவர்கள். இரண்டாம் பரிசு தேமொழிக்குரியது என் நோக்கில்.

    மூன்றாவதாக, எத்தனை கோடி டாலர் சம்பாதிக்கிறது இந்தத் திருப்பூர் நகரம் என்று நம்மிடம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதிகார வர்க்கமும், முதலாளி வர்க்கமும் ஒரு நகரத்தையும் அதன் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் என்ன நாசம் செய்து வைத்திருக்கின்றனர் என்று நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகத்தின் மீது நம் கவனத்தை ஈர்த்துள்ள ரஞ்சனி நம் மரியாதைக்குரியவர். அவரது மதிப்புரை ரஞ்சனியை மூன்றாம் பரிசுக்கு உரியவராக்குகிறது என்று நான் நினைக்கிறேன்.

    இவை போக இன்னும் மூன்று சிறப்புப் பரிசுகளும் உண்டு என்று வல்லமை ஆசிரியர் குழு அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த மன சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. இல்லையெனில் இன்னும் பாராட்டத் தகுந்த மதிப்புரைகள் அநியாயமாக ஒதுக்கப்பட்டிருக்கும். கீழ்க்கண்ட மூன்று மதிப்புரைகள் தான் அத்தகைய சிறப்பு கவனம் பெறுபவை:

    எத்தனை பேர் Bridge on the River kwai என்னும் ஒரு மகத்தான திரைப்படத்தை இன்றைய தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்கிறார்களோ, பார்த்து அதன் முக்கியத்துவத்தை அறிவார்களோ தெரியாது. அந்த நினைவுதான் எனக்கு வந்தது ஷண்முகம் எழுதிய சயாம் மரண ரயில் என்னும் வரலாறு சார்ந்த புனைவு. அது பற்றி நமக்குத் தெரியத் தரும் ரிஷான் ஷெரீஃபின் மதிப்புரை.

    இரண்டாவது சிங்கப்பூர் மலேசியத் தந்தை தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் பற்றி ஜே.எம்.சாலி எழுதிய புத்தகத்தின் மதிப்புரை தந்துள்ள பாண்டியன். ஜி. இதெல்லாம் நமக்குப் புதிய விஷயங்கள். தெரியாத விஷயங்கள். நாம் அறிய வேண்டியவை.

    மூன்றாவது ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த காரைக்காலில் பிறந்து ஃப்ரெஞ்ச் கற்று அதன் இலக்கிய வரலாற்றை ஃப்ரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் மொழிகள் அறிந்த சொ.ஞான சம்பந்தன் எழுத, அவர் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதி நம் கவனத்துக்கு அதைக் கொண்டு வந்த கலையரசி அவர்களின் மதிப்புரைக்கு மூன்றாவது சிறப்புப்பரிசு தரவேண்டும்.

    முன் சொன்னவாறு இவை எனதேயான பார்வையில் பட்டவை. ஏதும் objective ஆன நிலுவை, அளவைக் கருவிகள் என்னிடம் இல்லை. என் ரசனை மாத்திரமே என்னிடம் இருப்பது.

    வெங்கட் சாமிநாதன்/2.2.2014

    ஆகச் சிறந்த நூலத் தேர்ந்தெடுத்து, தெளிந்த நீரோடை போன்ற தம்முடைய எழுத்துக்கள் மூலம் நம் அனைவரின் உள்ளம் கவர்ந்ததோடு, ‘அடடா, நூல் உடனே கிடைத்தால் தேவலாம் போல் உள்ளதே’ என்று ஏக்கம் கொள்ளச் செய்து கொக்கி போட்டு இழுக்குமளவிற்கு தம் வல்லமையை வெளிப்படுத்தி, முதல் பரிசை தட்டிச் சென்றுள்ள திரு தஞ்சை கோபாலன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்!

    வலிந்துத் திணிக்காமல் தெளிந்துச் செம்மையாக, தம் எளிமையான நடையில், சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் வல்லமையுடன், அருமையானதொரு வரலாற்று நூலை அறிமுகப்படுத்தி, இரண்டாம் பரிசை வென்றுள்ள திருமதி. தேமொழி அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

    சீரான நடையில் தித்திக்கும் மொழியில் மூச்சு விடாமல் படிக்கச் செய்ததோடு, திரு ஜோதிஜி அவர்களின் இந்த ஆகச் சிறந்த நூல் எங்கு கிடைக்கும் என்று சிந்திக்கவும் வைத்து, மூன்றாம் பரிசை தட்டிச் சென்றுள்ள திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.

    நச்சென்ற வார்த்தைகளால் சுருக்கென்று நம் உள்ளம் தைக்கும் அளவிற்கு பளிச்சென்று தம் கருத்துக்களை முன் வைக்கும் வல்லமையாளர் திரு ரிஷான் ஷெரீப் அவர்கள் சிறப்புப் பரிசு பெற்றமைக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

    மிகச் சரளமான நடையில், பிரெஞ்சிலக்கிய வரலாறு என்னும் நூலை படித்தே ஆக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுமளவிற்கு தம் எழுத்துக்களால் நம்மைக் கவர்ந்துள்ள திருமதி.கலையரசி  சிறப்புப்     பரிசை வென்றுள்ளமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.

    ‘சாரங்கபாணி’ என்பார் யார், இவரைப் பற்றி இன்னும் மேலதிக தகவல்களை அறிய வேண்டுமே, அதுவும் இப்பொழுதே’, என்று நம்மை, அந்த நூல் கிடைக்குமிடம் தேடித் திரிய வைக்கும் ஆற்றலுடன், தம் கருத்துக்களை மிகச் சுவையுடன் அனைவரையும் கவரும் வகையிலான அற்புதமான நடையுடன், போட்டிக்கு முதன் முதலாகத் தம் மதிப்புரையை வழங்கி, சிறப்புப் பரிசை வென்றுள்ள திரு பாண்டியன். ஜீ அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்.

    அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே. தொடர்ந்து தங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

    புத்தக மதிப்புரை போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் விவரம் ;

    1.சயாம் மரண ரயில் 

    2.டாலர் நகரம் 

    3.தேவதாசியும் மகானும்

    
    

    4.வரலாற்றின் வரலாறு 

    
    

    5.மணிக்கொடி 

    
    

    6.கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்

    
    

    7.மழைவில் மனிதர்கள் – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

    9.சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ

    .சாரங்கபாணி

    10 பிரெஞ்சிலக்கிய வரலாறு’ 

    12. கொய்த நன்மலர்கள் 

     

    13. தன்னாட்சி 

    14. சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் 

    ​15. ​இந்தியப் பெண்மணிகள்

     

    ​16. ​சாலப்பரிந்து – நாஞ்சில் நாடன்

    17. ‘டார்வின் படிக்காத குருவி’ 

    ​18. ​மாதொரு பாகன் – பெருமாள் முருகன் 

    ​19. ​இவனுக்கு அப்போது மனு என்று பெயர்

     

    20. பட்டியும் விக்ரமாதித்தனும் ஜெயமோகனும்!

     

    போட்டி நடத்துவதற்கான மூல காரணமாக இருக்கும் திருமதி மதுமிதா அவர்களின் பதிவை இதோ இங்கே காணலாம். மனமார்ந்த பாராட்டுகள் அன்புத்தோழி மதுமிதா.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் – கவியரசு கண்ணதாசன்!

    கவிஞர் காவிரி மைந்தன்

    மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

     

    தென்றல் என்கிற சொல்கூட மென்மையானதுதான். தென்கோடி தென்றல் தரும் ராகங்களே என்று கிருஷ்ணகானத்தில் கண்ணதாசன் அழைக்கிறார்! திசைகள் எட்டு இருந்தாலும் தெற்கிற்கென பெருமைகள் அதிகம்தான்! வாடைக்காற்று என்று வடக்குப் பக்கமிருந்து வரும் காற்றை அழைப்பதுண்டு! ஆனால் வர வேண்டும் என நினைப்பது தெற்கிலிருந்து வருகின்ற தென்றல் ஒன்றைத்தான்! வருடவரும் அந்தக் காற்று வரவேண்டும் என நெஞ்சம் வரவேற்புக் கொடுப்பது தென்றலுக்கு மட்டும்தான்!!

    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன் என்று கூட ஒரு பல்லவி தந்தார் கண்ணதாசன்!

    காலகாலமாகக் கவிஞர்களின் பாடுபொருளாய்.. நிலா, தென்றல் என விட்டுவிட இயலாத சொல்லாய், காற்றாய் தவழ்ந்து கொண்டிருக்கிறது! காற்றினிலே அவள் தென்றல் என்று இன்னும் காலங்களில் அவள் வசந்தம் பாடலில் அணி சேர்க்கிறார்! நீக்கமற நிறைந்திருக்கம் இத் தென்றலைப்பற்றி – பிரத்யேகமாக ஒரு காதல் பாடலில்.. அதுவும் தலைவியுடன் தலைவன் தனிமையிலிருக்கும் அந்தப்புரத்திற்கு வந்த தென்றல் பற்றி.. லாவகமான கவிதை யுக்தி ..கண்ணதாசனுக்கே கைவந்த கலை

    !

    விழிகள் தழுவிக்கொள்ளும் வேளையில், இருவருக்கும் இடையில் விளையாட வருகிறதாம் இந்த சாசகசத் தென்றல்! கற்பனையால் இப்படி கவிதை படைக்க முடியும் எனும்போது – அதைத் திரையிசையமைத்து இன்னும் கெளரவப்படுத்த தன்னால் முடியும் என்று நிருபித்திருக்கிறார் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்.. குரல் தந்திருக்கிறார்கள் பி.பி.சீனிவாஸ் மற்றும் பி.சுசீலா.

    தென்றல்வரும் வீதியெல்லாம் செந்தமிழர் மாண்பையெல்லாம் காட்டுகின்றார் கவியரசர். நாதஸ்வர ஓசையுடன் இணைந்த இசையில் தொடங்கும் பாடலிது! மங்கல நாதம் பொங்கிடும்போது.. இன்பத்திற்கு இங்கு எல்லைகள் ஏது? இழைந்தோடும் குரல்களில் இந்தத் தென்றல் பிறந்த இடம் முதல் புகுந்த இடம் என.. தன் வரலாறு சொல்கிறது கேளுங்கள்

    !

    பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் – எஸ். ஜானகி
    இயற்றியவர்: கண்ணதாசன்
    இசை: கே.வி. மகாதேவன்
    திரைப்படம்: திருவிளையாடல்

    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
    பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
    பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

    பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
    பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல் இந்தப்
    பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

    கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
    கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
    தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல் – வண்ண
    தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
    தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
    வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
    வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
    தான் பறந்து ஆட்சி செய்து தளிர்மணித் தென்றல் – அது
    வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
    வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
    பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

    http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ

    http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ
    Podhigai Malai Uchiyile – Thiruvilayadal – Muthuraman & Devika

    Share
  • குறளின் கதிர்களாய்… (20)

    செண்பக ஜெகதீசன்images

    சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

    கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

    -திருக்குறள்- 660 (வினைத் தூய்மை)

     

    புதுக் கவிதையில்…

     

    அறநெறி யல்லது

    பிற நெறியில்

    சேர்த்த செல்வம்

    நிற்பதில்லை நிலைத்து..

     

    அதை

    வைத்துப் பாதுகாப்பது,

    பச்சை மண்குடத்தில்

    பருகும் நீரைவைத்து

    போகாமல் காப்பது போலத்தான்…!

     

    குறும்பாவில்…

     

    பச்சைமண் குடத்து நீரும்

    புறவழியில் சேர்த்த பணமும்,

    பாதுகாப்பில் நிற்காது…!

     

     மரபுக் கவிதையில்…

     

    பாத்திரம் பச்சை மண்ணாலெனில்

    பருகிட வைத்தத் தண்ணீரும்

    ஆத்திர அவசரத் தேவைக்கும்

    அங்கே கொஞ்சமும் தங்காதே,

    சாத்திரம் காட்டும் நல்வழியே

    சம்பா திக்காச் செல்வமெல்லாம்

    மாத்திரை யளவும் நிற்பதில்லை

    மண்கலம் வைத்த நீர்போலே…!

     

    லிமரைக்கூ…

     

    பச்சைமண்குடத்தில் நீரைப் பேணுதலென்பது வீண்,

    புறவழிவந்த செல்வத்தை

    பாதுகாத்தாலும் கையில் நிலைப்பதில்லை காண்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    தங்காதய்யா தங்காது,

    தாங்காதய்யா தாங்காது..

     

    பச்சமண்ணு கொடத்தில தண்ணிவச்சா

    தவுச்சவாக்கிக் குடிக்கத்தண்ணி

    தங்காதய்யா தங்காது- கொடத்துல

    தங்காதய்யா தங்காது..

     

    இப்புடித்தான் வீணாவும்

    எதுமில்லாமப் பாழாவும்

    தப்பாத்தான் சேத்தபணம்..

     

    எப்பவுமே இதுதாங்கத,

    தங்காதய்யா தங்காது- கையில

    தங்காதய்யா தங்காது…!

     

            http://fiverr.com/osztijudit/create-an-easy-to-follow-family-budget-plan

    Share
  • பேரறிஞர் அண்ணா

    காவிரி மைந்தன்images

    கனிந்த நல் இதழ்களில் தவழ்ந்திடும் புன்னகை 

     

    கவிதையில் சொன்னால் அண்ணா ஒரு  பாற்கடல்!

     

    பொதிகையும் புதுவையும் கலந்துவந்த கலவையவர்!

     

    தமிழ்க் கதிரவன் உதயமாகக் காரணம் ஆம்  அவர்!!

     

    கடற்கரையில் நிரந்தரமாய் காட்சிதரும் பொருளானார்!

     

    காலங்கள் உள்ளவரை காவியமாய் அவரானார்!!

     

    எளிமையில் இவரிருந்தும் ஏழ்மையை அகற்ற வந்தார் 

     

    எண்ணத்தால் உயர்ந்துநின்று இவ்வுலகைத்தான் அளந்தார்!

     

    சமுதாய அவலங்களைக் களைப்பின்றி சாடிநின்றார்!

     

    சாதிப் பேயொழிய பெரியாரின் வழி நடந்தார்!!

     

    முதல்வர் பதவியிது முள் வைத்த கிரீடமென்றார்!!

     

    முழுமூச்சாய் நாட்டிற்கே தன்னையே அர்ப்பணித்தார்!

     

    ஆங்கிலத்தில் புலமையுண்டு.. அனைவரையும் திகைக்க வைத்தார்.

     

    அண்ணாவின் பேச்சாற்றல் அனைத்துலகும் அறிந்த ஒன்று!

     

    கலைஞர் முதல் தலைவர்களை உருவாக்கிய களமவர்!

     

    கண்ணதாசன் முதலான கவிஞர்களை நேசித்தப் பேரறிஞர்

     

    புடம்போட்டு வைத்த தங்கம்!  புன்னகையால் நமை இழுக்கும்!

     

    பொடிபோடும் பழக்கமுண்டு!  புரட்சிக்கு அது நெருக்கம்!!

     

    ஒய்வுறக்கம் ஏதுமின்றி ஒர்தலைவர் யாரென்றால் – அது 

     

    காஞ்சியிலே தோன்றிய நம் தலைவர் அண்ணாவே!! 

     

    படத்துக்கு நன்றி

    http://www.mysixer.com/?p=13237

    Share
  • பொறுப்பை உணரும் நாள் எதுவோ ?

    விசாலம்

    ஒருவன் தான் செய்யும் பணியே தெய்வமாக மதித்துசெயல்படவேண்டும் அதில் தான் அவனது சிறப்பு அடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் “வொர்க் ஈஸ் வொர்ஷிப் “என்று சொல்வது உண்டு . செய்யும் தொழிலே தெய்வம் என்பதே தான் அது .இன்று பலர் பெரிய மனிதராகி புகழுடன் சிறந்து விளங்குகிறார்கள் என்றால் இந்த சூத்திரம் கடைப்பிடித்ததால் தான், அது சாத்தியம்.

    என் பத்து வயதில் பம்பாயில் இருந்த போது திரு நல்லி சின்னஸ்வாமி செட்டியார் அவர்களும் அவர் சகோதரரும் முதுகில் மூட்டைச்சுமந்தபடி மாதுங்கா தாதரில் வெய்யில் மழை, பாராமல் நடை நடையாக தங்கள் சேலைகளை விற்க வருவார்கள். எங்கள் வீட்டிற்கு அவர் தான் வாடிக்கை . பாவாடை, துண்டு ,புடவைகள் என்று பல எங்கள் வீட்டில் நிரம்பும் . பணமும் அடுத்த மாதம் வந்து வாங்கிக்கொள்வதால் பலர் அவரிடம் வாங்குவார்கள்.இப்போது அவர் தனது உழைப்பினால் பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் தன் உழைப்பை தெய்வமாக மதித்ததால் மேலே உயர முடிந்தது. இதே போல் பலர் ஏழையாக இருந்து மாவாட்டி ,பேப்பர் போட்டு பல சிரமங்களுக்கு நடுவில் தங்கள் இலக்கை அடைந்திருக்கிறார்கள் .உதாரணமாக சக்தி மசாலா, ஆரோக்கியா பால் . உடுப்பி ஹோட்டல், ஸ்ரீகிருஷ்ணா, போன்றவைகளைக் குறிப்பிடலாம்

    பொறுப்பில்லாமல் நடந்துக்கொள்ளும் பல சம்பவங்கள் எனக்கு எரிச்சலை கொடுத்திருக்கிறது .அதுவும் அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக இந்த ரகத்தில் வருகிறார்கள் தலைநகரமான தில்லியில் பார்லிமென்ட் ஹவுஸில் வேலைசெய்பவர்கள், குளிர்காலத்தில் ஆபீசிற்கு வந்து சேருவதே தாமதம் தான் . சிலர் நிதானமாக 10 மணிக்கு மேல் வருவார்கள் . பின் ஒரு மணிநேரம் ஏதோ
    வேலை செய்வது போல் பாவனை செய்து பின் சாய் பியேங்கே என்று சொல்லியபடி கேன்டீனுக்கு வந்து விடுவார்கள். பாவம் ரொம்ப குளிர் ஆயிற்றே ! பின் உள் வந்து 1 மணி நேரம் வேலை செய்துப்பின் எதிரில் இருக்கும் பார்க்கில் வெய்யில் காய வந்துவிடுவார்கள். அத்துடன் நிலக்கடலை கொரிப்பது வேறு நடக்கும் .பின் அந்தப் பார்க்கில் அத்தனை தோலிகளும் பரிதாபமாக கிடக்கும். பின் ஒரு மணி நேரம் வேலை முடிந்தவுடன் ‘லஞ்ச் டைம்” மிஞ்சி இருப்பது மூன்று மணி நேரம் . அந்த நேரத்தில் முடிக்க பல பைல்கள் கிடக்க ஏதோ கொஞ்சம் வேலை முடியும் . பின் ‘சமோசா’ டீ என்று வெளியே வந்து அவ்வளவுதான் , அன்றைய தினம் முடிந்துவிடும் . இது நான் நேரில் பார்த்து அனுபவித்த ஒரு காட்சி . சென்னையில் இப்படி இருக்காது என் நினைக்கிறேன் . ஏனென்றால் சென்னையில் மூன்று சீசன் தான் . வெப்பம் , அதி வெப்பம் , அதி அதி வெப்பம் [ hot, hotter hottest } அதனால் அதிகமாக வெளியே வர வாய்ப்பில்லை என நினக்கிறேன்

    ஆனால் சென்னையில் ஒரு பெயர் போன வங்கிக்குச் சென்றிருந்தேன் அங்கு பார்த்தது என்ன ? அங்கு , வாடிக்கையாளர்கள் செக் புத்தகத்துடன் நிற்க ஊழியர்களில் ஒருவள் தன் செல்லில் சிரித்து. பேசிக்கொண்டிருக்கிறாள் காதல் என நினைக்கிறேன் சரியென்று அடுத்த இடத்தில் போனால் அங்கு மற்றொருவன் தான் குடிக்கும் டீயை ரசித்துக்கொண்டிருக்கிருந்து தன் அருகில் இருக்கும் ஒருவனிடன் போகும்படி கையைக்காட்டுகிறான் . அங்குச் சென்றால் அது தன் வேலை இல்லை அதைக்கவனிக்க வேறு ஒருவர் வரவேண்டும் என்று கூறி தான் வேலையில்லாமல் அமர்ந்திருக்கிறான் ,வேறு சிலர் தான் பார்த்த சினிமாவை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது வேலை மத்தியஅரசு அல்லது மாநில அரசு . சமபந்தப்படிருப்பதால் மிகவும் பாதுகாப்பானது ஆகையால் ஒருவரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்தி இருக்கிறது தவிர அப்படி யாரையாவது விலக்க நேர்ந்தால்
    யூனியன் சேர்ந்து வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்து விடுகிறார்கள்
    ,சிலர் சாதாரண மனிதனானாலும் தன்னைப் பிறர் முன்னால் ஒரு பெரிய மனிதனாகக் காட்டிக்கொள்வார்கள் அவர்கள் நம்மை முட்டாள் ஆக்கியும் விடுவார்கள்; சிலர் ஒழுங்காக வேலைச் செய்பவனையும் மாற்றி ” நாளை பார்த்துக்கொள்ளலாம் இப்போது கிளம்பு பார்டிக்கு ” என்று வலுக்கட்டாயமாக இழுத்தும் போய் விடுகிறார்கள் ,

    மாதா அம்ருதானந்தமயி மா ஒரு சொற்பொழிவில் சொன்ன கதை ஞாபகம் வருகிறது. சேனையில் ஒருவனுக்கு கர்னல் பதவி கிடைத்தது வேலை உயர்வு தான் புதிய பொறுப்பு எடுத்துக்கொண்ட அவனுக்குத் தலைகால் தெரியவில்லை அன்றே அந்தக் கர்னலைப் பார்க்க ஒருவன் வந்தான் அவன் உள்ளே நுழைந்ததும் கர்னல் போனை எடுத்து “ஹலோ யார் பேசுவது? ஜனாதிபதி கிளிண்டனா? குட் மார்னிங்? எதாவது விசேஷம் உண்டா ? நான் இன்றுதான் சார்ஜ் எடுத்துள்ளேன் நிறைய பைல்கள் குவிந்து இருக்கின்றன நான் பின்னர் பேசுகிறேன் ” இப்படிப்பேசி அந்தப்போனை வைத்தார் வந்தவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான் .

    “ஏனப்பா என்ன வேண்டும்? இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? கர்வமான குரலில் கேட்டார் வந்தவன் ” மன்னிக்க வேண்டும் நான் தொலை பேசி நிலையத்திலிருந்து வருகிறேன் உங்கள் போனுக்கு உடனே கனெக்சன் கொடுக்கும்படி உத்தரவு கிடைத்தது நேற்று வைத்த போன் இது, அதற்கு இன்னும் கனெக்சன் கொடுக்கவில்லை அதில் தான் நீங்கள் பேசினீர்கள் “

    இந்த இடத்தில் முட்டாள் ஆனது யார் ?

    இதுபோல் தினமும் பலமுறைகள் நாம் முட்டாள் ஆகிறோம். தற்பெருமை நம்மை எங்கு இழுத்துச்செல்கிறது ?

    முன்பு காபி ஆற்றிக் கொடுத்து இட்லி விற்ற ஒருவர் தனது உழைப்பினாலும் அந்தப் பணியைத் தெய்வத்திற்கு சம்ர்ப்பித்துவிட்டு முயற்சியையே மூலதமாகக் கொண்டார் இன்று அவரது ஹோட்டல் பல வெளிநாடுகளிலும் வியாபித்து இருக்கிறது . குடும்பத்திலிருந்து ஆரம்பித்து அவரவர் தங்கள் பொறுப்பை உணர்ந்து வேலை செய்தால் நமது பாரதம் எங்கேயோ எட்டிவிடும் இதில் சந்தேகமில்லை.

    Share
  • உலக புற்று நோய் தினம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ”புற்று நோய் என்பது வெறும் ஒரு வார்த்தைதான். வாழ்க்கையின் முற்றுப் புள்ளி அல்ல” – ஜான் டைமண்ட்

    இன்று உலக புற்று நோய் தினம். புற்று நோய்களில், இரத்தப்புற்று நோய் (லுக்கிமியா) சிறுநீரகப் புற்று நோய், மார்பகப் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கருப்பை புற்று நோய், தோல் புற்று நோய் போன்ற பல வகைப்பட்ட புற்று நோய்கள் உள்ளன. உடலின் செயல்பாடுகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் செல்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியே புற்று நோயாகும்.

    உலக அளவில் முதல் இடத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்று நோயாக இருப்பது மார்பகப் புற்றுநோய். அடுத்து புகையிலைப் பொருட்களால் ஏற்பட்க்கூடிய புற்று நோய் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பது, பான் மசாலா, புகையிலை மெல்லுவது போன்ற காரணங்களால் 10ல் நான்கு பேருக்கு வாய்ப்புற்று நோய் ஏற்படுவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதனால் 42 சதவிகித ஆண்களும், பெண்களும் உயிரிழக்க நேரிடுகிறது. மனித வாழ்விற்கு பெரும் சவாலாக இருந்துவரும் நோய்களில் புற்று நோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் ஏழு இலட்சம் பேருக்கும் மேலாக புற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். உலகளவில் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.முறையான சிகிச்சையும், சரியான விழிப்புணர்வும் இல்லாத காரணத்தினால் நாளொன்றுக்கு 3,50,000 பேருக்கு மேல் இறப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது. மேலும், சமீபத்திய ஆய்வுப்படி இந்தியாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோய்க்கும், ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் இறப்பதாகவும் தெரிகிறது. இன்று பிப்ரவரி 4ந்தேதி உலக கேன்சர் தினம். புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை உணரவேண்டிய நாள். இந்த நோய்க்கான காரணங்களை அறிந்து அதனைக் கட்டுப்படுத்தும் வகைகளை அறிந்து கொண்டு நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

    புற்று நோயாளிகளிடம் அவர்களுடைய வியாதி பற்றி நேரடியாகக் கூறாமல் மறைத்து வைப்பதைக் காட்டிலும், அவரிடம், இருக்கும் நிலையை விளக்கி பிரச்சனையை அவர்கள் தைரியமாக எதிர்கொள்ள நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதே முக்கியம். இல்லாவிட்டால் தாம் சீக்கிரமே சாகப் போகிறோம், அதனால்தான் தம்மிடம் எதுவும் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதனால் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதிலும் சிரமப்படுவார்கள்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  முதல் சிகிச்சை நோயாளிகளுக்கு மனஉறுதி அளிப்பது தான். புற்றுநோய் சிகிச்சைகளை, ஏற்றுக்கொள்ளும் வகையில் பாதிக்கப்பட்டவர் உடலளவிலும், மனதளவிலும் தயாராக அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையும் தரும் வகையில் மிக இயல்பாக இருத்தல் அவசியம்.

    ஆன்கோ பிளாஸ்டிக் மார்பக அறுவை சிகிச்சை நிபுணரான, மருத்துவர் திருமதி செல்வி ராதாகிருஷ்ணா, FRCS., அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “இன்றைய மருத்துவக் கல்வித்துறையில் பட்டப்படிப்பிலும், டிப்ளமோவிலும் மேமோகிராமிற்கான கதிர்வீச்சுப் பயிற்சிகள் போதிய அளவிற்கு இல்லை எனவே பெரும்பாலான பரிசோதனை மையங்களில் செய்ய்ப்படும் பரிசோதனைகளின் தரம் இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இந்த விஷயத்தை ஒரு அர்ப்பண உணர்வுடன் கவனிக்க வேண்டியது மிக அவசியம். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் குறைந்த செலவில், தரமான சிகிச்சைகள்  கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறியது பெரிதும் சிந்திக்கச் செய்கிறது. வெறும் இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கவர நினைக்கும் அரசாங்கம், இது போன்ற நற்காரியங்களுக்காகவது கொஞ்சம் பணத்தை செலவு செய்தால் புண்ணியமாவது கிட்டும் அல்லவா?

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    எண்ணங்களும் வார்த்தைகளும்தான் நம் மனத் திண்மையை அதிகரிப்பதோடு விளைவுகளுக்கு வித்தாகவும் இருக்கின்றன. எண்ணங்களைப் பற்றி கீதையில் கூட செய்தி உண்டு. கடைசிகால கட்டத்தில் என்ன எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறதோ அதுவாகவே மறுபிறவியில் மாறிவிட சாத்தியங்களைப் பற்றியும் கீதை பேசுகிறது. வார்த்தைகள் கூட அப்படித்தான்.

    1069274_10200403582107947_1677963781_nரிஷிகளின் சாபங்கள் பற்றி ஏகப்பட்ட கதைகளைப் படித்திருக்கிறோம். வார்த்தைகள் சாபங்களாக மாறும்போது அதன் பலன் என்ன என்பதையும் அகலிகை முதலானதாக நிறையவே படித்திருக்கிறோம். பொதுவாகவே வார்த்தைகளை நாம் அளந்துதான் பேசவேண்டும் என்பதைப் பெரியவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எதிர்மறை வார்த்தைகள் பேசும்போது உடனடியாக அது பலிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதே போல நெஞ்சார நாம் வாழ்த்தி வார்த்தைகளாய்ப் பேசும்போது வார்த்தைகளை வெளியே விடும் நமக்கே ஒரு நல்ல திருப்தியைக்கூட தரும். இதைப் பற்றிய கட்டுரை ஒன்றை சமீபத்தில் படித்தேன். திரு சதீஷ்குமார் டோக்ரா அவர்கள் எழுதியது. இதோ அவர் எழுத்தில்.

    ஒரு வார்த்தை வெறும் ஓர் ஒலி அல்ல. இதற்கு அர்த்தமும் உண்டு — தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்று கூறியது போல.

    அர்த்தம் என்றால் என்ன?

    ஒருவர் “நேர்மை” என்ற வார்த்தையைச் சொன்னால் உங்கள் மனதில் என்னென்ன நடக்கிறது?

    உங்களுக்குத் தெரிந்த சில நேர்மையானவர்களின் படிமங்கள் உங்கள் மனதில் தோன்றுகின்றன. அந்த படிமங்களுடன் இணைந்த இனிமையான உணர்வுகளும், அனுபவங்களும் மனதில் எங்கோ ஆழத்தில் தோன்றி அங்கு நேர்மறை உள்ளுணர்வுகளைத் (positive feelings) தோற்றுவிக்கின்றன . அதே போல எதிர்மறையான ஒரு வார்த்தையைக் கேட்கும்போது எதிர்மறையான உள்ளுணர்வுகள் மனதில் தோன்றுகின்றன.

    “நாளை காலையில் சீக்கிரமாக எழுந்து உடற்பயிற்சி செய்வேன்” என்று சொல்வதற்கும், “நாளைக்கு தாமதமாக எழுந்திருக்க மாட்டேன்” என்று சொல்வதற்கும் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கிறது அல்லவா?

    இரண்டாவது வாக்கியத்தின் அர்த்தத்தில் ஒரு சிறிய எதிர்மறை சாயல் இருக்கிறது. முதலாவது வாக்கியம் ‘சீக்கிரமாக எழுந்திருக்கும்’ நேர்மறை பிம்பத்தை நம் மனத்திரையின் மீது வீசுகிறது. ஆனால், இரண்டாவது வாக்கியமோ ‘தாமதமாக எழுந்திருக்கும்’ எதிர்மறை சாயலைக் கொண்டுள்ளது. நாம் அந்த வித்தியாசத்தை தெளிவாக உணரவில்லையானாலும் அது ஆழ்மனதைப் பாதிக்கும்.

    வார்த்தைகள் வெறும் ஒலி அல்ல. அவை மின்னூட்ட அணுக்களைப் போல (charged particles). நமது மனதை எப்படிப்பட்ட வார்த்தைகளுடன் நிரப்புகிறோமோ அவ்வாறே மாறுகிறோம். தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளாலா? சோகமும் தளர்ச்சியும் விளைவிக்கும் வார்த்தைகளாலா?

    உண்மைதான். நல்ல வார்த்தைகளால் ஊக்கமும் தன்னம்பிக்கையையும் நம்மால் அனைவருக்கும் வழங்கமுடியும்தானே.. இப்படிப்பட்ட ஊக்க மாதிரிகள் இந்தச் சமுதாயத்திற்கு நிறைய தேவை என்பதை மனதிற்கொண்டு, நல்லதொரு கட்டுரையைத் தந்த திரு சதீஷ்குமார் டோக்ரா அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம். திரு டோக்ரா அவர்களுக்கு நம் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    http://dhiaanam.wordpress.com/

    கடைசி பாரா: குறவன் பாட்டு – கடைசிப் பகுதியிலிருந்து நகர வாழ்க்கையை நன்றாகக் காண்பிக்கிறார் திரு சச்சிதானந்தம்.

    அண்டை அயலாரைக் காண்பதற்கும் தயக்கம்,

    அன்பைப் பரிமாறிப் பேசிடவும் நடுக்கம்,

    அல்லல் கொண்டாலும் தனக்குள்ளே மறைக்கும்,

    அனாதை வாழ்க்கைக்குப் பெயர்தானோ நகரம்!

    Share
  • அம்மா

     

    எம். ரிஷான் ஷெரீப்

     

     

    (கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது – செய்தி)

     

    இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மாhand-Cuff

    விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்

    இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்

    அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்

     

    அம்மா

    பகல் இரவுகளில் இனிய கதைகள் சொன்னவள்

    சோறு கஞ்சி சமைத்து

    என் நாவில் ஊட்டியவள்

     

    நிலவு உதித்திருக்கிறது

    இரவுத் தங்கத் தட்டின் மீது

    இருக்கக் கூடும் நீ ஊட்டும் பால்

    பசித்தாலும் கூட நான்

    கையேந்த மாட்டேன் அம்மா

     

    வந்துவிடு அம்மா என்னருகே

    என் பாற்பற்களால் கடித்துன்

    கை விலங்கை உடைக்கட்டுமா அம்மா

     

    – ஷஸிகா அமாலி முணசிங்க

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • அந்த முடிவு

     நிர்மலா ராகவன்

    “இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?”

    தொலைகாட்சிப் பெட்டியிலிருந்து தன் கவனத்தைக் கஷ்டப்பட்டு மனைவியிடம் திருப்பினார் அம்பலம். முப்பது வருட தாம்பத்தியத்தில் அவர் கற்றுக்கொண்ட ஒரு பாடம், மனைவி பேச்சுக்கு எதிர்பேச்சு பேசாதிருந்தால் வாழ்வில் அமைதி நிலவும் என்பதுதான்.

    ஆறு மாதத்திற்குமுன் மணமாகிப் போன கடைக்குட்டி பார்வதி அன்று சாயங்காலம் திடுதிப்பென்று வந்திருந்தாள். அதுவும் தனியாக. ஏதோ புருஷன் பெண்டாட்டி சண்டையாக இருக்கும் என்று இவரும் எதுவும் கேட்கவில்லை.

    இப்போது, எல்லாரும் சாப்பிட்டு முடிந்து, தூங்கப்போகும் சமயத்தில் அவள் வரவின் காரணத்தை மனைவி ஒன்றுக்குப் பத்தாகக் கூற வந்திருப்பாள் என அசுவாரசியமாகப் பார்த்தார்.

    “ஏங்க? எதுக்காக கல்யாணம் பண்ணிக்கறது? இல்ல, எதுக்காகன்னு கேக்கறேன்!”

    நான்கு பிள்ளைகளைப் பெற்றபின் அவளுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் எழுந்தது? அம்பலத்திற்குச் சிரிப்பு வந்தது. மனைவியின் கோபத்தை உத்தேசித்து அடக்கிக் கொண்டார்.

    “அட, கேக்கறேன், இல்லே?” என்று முடுக்கினாள்.

    வாயில் வந்தது எதையாவது சொல்லித் தொலைத்தாலே ஒழிய இவள் அப்பால் நகர மாட்டாள் என்று, “ஏதோ.. பிள்ளை குட்டி பெத்து, கடைசி காலத்தை அவங்க நிழல்லே..,” என்ற் மென்று முழுங்கினார். இந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாகப் பேசுவார்களா யாரேனும்!

    “இவரு கடைசி காலத்துக்குப் போயிட்டாரு! இங்க மொதலுக்கே மோசமா இருக்காம்!” நொடித்தபடி அவள் சொல்லாமல் சொன்னது லேசாகப் புரிய, அதை நம்ப முடியாது, திகைப்புடன் அவளைப் பார்த்தார்.

    அவர் கண்ணில் தேங்கியிருந்த கேள்விக்கு அதே ரீதியில் பதிலளித்தாள் மனைவி.

    “ஏதுடா, தங்கமானவங்களா இருக்காங்களே சம்பந்தி வீட்டுக்காரங்க; `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. நீங்க செய்யறதைச் செய்யுங்க’ன்னு அவங்க தேனாப் பேசினதில நான்கூட இல்ல ஏமாந்துட்டேன்!” ஆண்மை இல்லாத ஒருவனைத் தங்கள் பெண் தலையில் கட்டிவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் குமுறினாள் பொன்னம்மா.

    “இனிமே என்ன செய்ய முடியும்?”

    “என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? இனிமேதான் செய்யணும். `இந்த மாதிரி இருக்கு. எனக்கு அவரோட சேர்ந்து வாழ விருப்பமில்லே!’ அப்படின்னு பார்வதி கோர்ட்டில அடிச்சுச் சொன்னா, விவாகரத்து வாங்கிடலாம். ஜீவனாம்சம்கூட கிடைக்கும்!”.

    அம்பலத்துக்கு குழப்பம் அதிகரித்தது. “எதுக்கு அவசரம், பொன்னம்மா? மாப்பிள்ளை அம்மாவுக்கு ஒரே பிள்ளை! இன்னும் சின்னக் குழந்தைன்னே நினைச்சு, அருமையா நடத்தி இருப்பாங்க! அதான் இப்படி..! கொஞ்சம் விட்டுப் பிடிச்சா..!” மனைவியை எதிர்த்து, ஒரே மூச்சில் அவர் இவ்வளவு பேசியதே அதிகம்.

    அப்போது அவரே எதிர்பாராதவண்ணம் மகள் புயலென சீறியபடி உள்ளேயிருந்து வந்தாள்.

    “நான் இனிமே அந்த வீட்டுக்குப் போக மாட்டேம்பா. எங்க வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடக்கூட விடறதில்ல அவங்கம்மா. அவரும், `ஒரே களைப்பா இருக்கு. என்னைத் தொந்தரவு செய்யாதே’ன்னு தினமும் கட்டிலைவிட்டுக் கீழே படுத்துக்கிறாரு!” தன் இளமையும், பெண்மையும் கட்டியவருக்குக்கூட ஒரு பொருட்டாகப் படவில்லையே என்ற அவமான உணர்வில் அழுகை பொங்கியது அவளுக்கு.

    மகளுடைய துயரம் தாயையும் பாதிக்க, “இன்னும் என்ன கதை கேக்கறீங்க? பேசாம, நான் சொலறபடி செய்யுங்க!” என்று ஆணை பிறப்பித்துவிட்டு, “நீ வாடா, கண்ணு! யாரோ செய்யற தப்புக்கு நாம்ப எதுக்கு அழணும்?” என்று மகளை அணைத்தபடி உள்ளே அழைத்துப் போனாள்.

    நீதிமன்றத்தில் பேசவும் வாயெழாது, அவமானத்துடன் தலைகுனிந்த வண்ணம் பிறர் தன்னை விமர்சிப்பதைக் கேட்டு, அங்கமெல்லாம் சுருங்கியவனாக நின்றிருந்த மாப்பிள்ளை கிருஷ்ணனின் நிலை பொன்னம்மாவைப் பாதிக்கவில்லை. `இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்ததற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்!’ என்று நினைத்துக் கொண்டாள்.

    அப்போது அவள் எதிர்பார்க்கவில்லை, தான் பெற்ற பிள்ளைகளே தன் முடிவை வன்மையாக எதிர்ப்பார்கள் என்று.

    “எங்களையும் ஒரு வார்த்தை கேக்கணும்னு ஒங்களுக்குத் தோணலியா? ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் ஆவறதே பெரும் பாடு. ஜாதி, ஜாதகம், சீருன்னு ஆயிரம் பிடுங்கல்! நம்ப மாப்பிள்ளைக்கோ நல்ல வேலை! பாக்கவும் லட்சணமா இருக்காரு!” என்று மூத்த மகன் இன்னொரு ஆண்மகனுக்குப் பரிந்து பேசியபோது, பொன்னம்மாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தன்னை ஒருவன், அதிலும் தன் வயிற்றில் பிறந்த மகன், தட்டிக் கேட்பதாவது!

    “அழகும், பணமும் இருந்தா மட்டும் ஒருத்தன் ஆம்பளையாகிட முடியுமா?” என்று விரசமாகக் கத்தினாள். தங்கள் குடும்பத்துடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு பெற்ற பிள்ளைகளே போனபோதும் கலங்கவில்லை.`என் மகளுக்கு படிப்பிருக்கு. சுயமா நிக்கற தெம்பிருக்கு!’ என்று திமிராகச் சொல்லிவந்தாள்.

    பார்வதியும் அதை நம்பினாள். ஆனால், இடையில் எதுவும் நடக்காததுபோல, பழையபடியே வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, தான் எதையோ இழந்துவிட்டது போன்றதொரு வெறுமை ஏற்பட்டது அவளுக்கு.

    தன்னையொத்த பெண்கள் கணவன்மாரோடு உரசியபடி நடப்பதைப் பார்க்கும்போதும், தாம் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சுவதைப் பார்க்கும்போதும் அவளுக்குத் தன்மேலேயே பரிதாபம் மிகும். எல்லாருக்கும் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் இன்பங்கள் தனக்கு மட்டும் ஏன் அரிதாகப் போய்விட்டன?

    உலகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டிருக்காத வயதில் அம்மா சொற்படி கேட்டு நடந்தது தவறோ?

    இந்த அப்பாதான் ஆகட்டும், குடும்பத் தலைவராய் லட்சணமாய், யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கக் கூடாதா!

    `என்ன முடிவு?’ என்று உடனே விரக்தி எழும்.

    கணவருடன் சேர்ந்து இருந்திருந்தால், உலகை வேண்டுமானால் ஏமாற்றி இருக்கலாம். ஆனால், தனக்குள் பொங்கிப் பொங்கி எழுந்த அவமான உணர்ச்சியையும், விரக தாபத்தையும் எப்படி சகித்து இருக்க முடியும்!

    ஆரம்பத்தில் அனுசரணையாக இருந்த அம்மாகூட, தெரிந்தவர்களும், உறவினர்களும் காட்டிய பராமுகத்தால் மாறிப்போனாள். `துக்கிரி! எந்த வேளையில் பிறந்திச்சோ! இதுக்கு ஒரு நல்லது செய்யப்போய், எனக்கு யாருமே இல்லாம போயிட்டாங்க!’ என்று மகளைக் கரிக்க ஆரம்பித்தாள்.

    இப்படி ஒரு அம்மாவுடன் காலமெல்லாம் எப்படித் தள்ளப் போகிறோம் என்ற மலைப்பு எழுந்தது பார்வதிக்கு.

    ஆயிற்று, இப்போதே முப்பத்தி இரண்டு வயதாகிவிட்டது. இன்னும் இப்படியே இருபது இல்லை, முப்பது வருடங்கள் தள்ளிவிட்டு.. நினைக்கும்போதே அயர்ச்சியாக இருந்தது.

    வயிற்றுப்பாடு ஒரு பிரச்னையாக இல்லைதான். ஆனால், தனிமை?

    படைத்தவன் மனிதர்களுக்குத் துன்பத்தைத் தருவதே அவர்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளத்தானாம். பார்வதி அடிக்கடி கோயிலுக்குப் போக ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கோயில்.

    அங்கெல்லாம் அம்மாவின் ஓயாத புலம்பலைக் கேட்காமல் இருப்பதே நிம்மதியாக இருந்தது.

    அன்று கோலாலும்பூர், ஈப்போ ரோடிலிருந்த தண்டாயுதபாணி கோயிலுக்கு வந்திருந்தாள். சிறுவயதில் அண்ணன்மார்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிய மகிழமரம் ஒரு சிறு நெகிழ்ச்சியை உண்டடுபண்ணியது. ஆலமரத்தடியில் அக்கடா என்று இருந்த பிள்ளையார் இப்போது ஒரு சிறு கோயிலுக்குள். கலை, இந்து மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடக்கும் பெரிய `செட்டியார் ஹால்’.

    அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த முருகனைப் பிரார்த்தித்துவிட்டு, பிரதட்சணம் செய்யப்போனாள். நீண்ட உட்பிராகாரம், வெளிப் பிராகாரம் இரண்டின் தரையிலும் சலவைக்கல் பதிக்கப்பட்டு இருந்தது.

    “பாப்பா! ஓடாதே!”

    எங்கோ கேட்ட குரலாக இருக்கவே, திரும்பினாள்.

    அவளைப் பார்த்துச் சற்றே துணுக்குற்றவன், “நல்லா இருக்கீங்களா?” என்று விசாரித்தான், உபசாரமாக.

    இனியும் தன் மனைவியாக இல்லாதவளை ஒருமையில் விளிப்பது மரியாதை இல்லை என்ற அவனது பண்பு பார்வதியை என்னவோ செய்தது.

    “ம்!” என்றாள் முனகலாக. அவள் பார்வை எல்லாம் கிருஷ்ணனின் பிடியிலிருந்து திமிற முயற்சித்துக் கொண்டிருந்த குழந்தையிடமே பதிந்து இருந்தது.

    “என் பெண்!” அவன் குரலில் எக்காளம் இல்லை. சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால், அது அவளுடைய கன்னத்தில் அறைந்ததுபோல் இருந்தது.

    `தீர யோசியாது, விளக்கம் தர எனக்கொரு சந்தர்ப்பமே அளிக்காது, பலபேர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினாயே!’ என்று கூறாமல் கூறுகிறாரோ?

    “அத்தை..ம்.. ஒங்கம்மா நல்லா இருக்காங்களா?” பேச்சை மாற்றினாள்.

    “கேசில தீர்ப்புச் சொன்னதுமே அம்மா இருதய நோயாளியா ஆகிட்டாங்க. அவங்க போய் பத்து வருஷமாயிடுச்சு!”

    எதையோ சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கியவனாய், முன்னாள் மனைவியையே பார்த்தான் கிருஷ்ணன்.  பின், ஒரு முடிவுக்கு வந்தவனாக, வேகமாகப் பேசினான்: “இப்ப நினைச்சா, அதிசயமா இருக்கு — இருபத்து நாலு வயசிலே நான்தான் எவ்வளவு ஜடமா இருந்திருக்கேன்! அப்பாவைத்தான் தெரியுமே! சினிமாப் பாட்டே வீட்டிலே கேக்கக்கூடாது, ஆண்-பெண் விவகாரம் எல்லாம் வாய்விட்டுப் பேசற விஷயம் இல்லே, அப்படி, இப்படின்னு ஏகக் கண்டிப்பு! பதினஞ்சு வயசில, நான் ஒரு பொம்பளை படம் வரைஞ்சதுக்காக கையை மடக்கச் சொல்லி, இரும்புத் தடியால போட்டிருக்காரு பாரு, ஸாரி, பாருங்க!”

    `உரிமையுடன், ஒருமையில் பேசுங்களேன்!’ என்று கதறவேண்டும்போல இருந்தது பார்வதிக்கு.

    “அம்மாதான் ரொம்ப அழுதாங்க. `எனக்கு இப்படி ஒரு கொறைன்னு நீ சொல்லவே இல்லியேடா! வீணாலும் ஒரு கல்யாணத்தைச் செஞ்சுவெச்சு, அந்தப் பொண்ணோட பாவத்தைக் கொட்டிக்கிட்டோமே!’ன்னு!

    தாயின் நினைவில் சற்று நேரம் மௌனித்திருந்தவன், தொடர்ந்து பேசினான். “ரொம்ப ஒருஷம் சிகிச்சை குடுத்தாங்க எனக்கு. ஒடம்பு, மனசு எல்லாத்துக்கும்தான். நான் ஆம்பளைதான்னு உறுதியானதும், உன்கிட்ட ஓடி வந்து அதைச் சொல்லணும்போல இருந்திச்சு. நீதான் அந்த சந்தோஷத்தை என்கூட பங்கிட்டுக் கொள்ளணும்னு ஒரு வெறி. ஆனா, அதே சமயத்திலே தயக்கமாவும் இருந்திச்சு!”

    எப்பேற்பட்ட இழப்பு அவளுடையது! எங்கே அவனெதிரே அழுதுவிடப் போகிறோமோ என்று பயந்தவளாக, “இருட்டப் போகுது. போகணும்,” என்று முணுமுணுத்தாள் பார்வதி.

    “வா பாப்பா!” என்றபடி, கிருஷ்ணன் நடக்க, அடக்க முடியாது கேட்டாள் பார்வதி. “இவங்கம்மா வரலியா?”

    திரும்பியவன், ஒரு வரட்சியான சிரிப்பை உதிர்த்தான். “எனக்குப் பொண்டாட்டி ராசி இல்ல போலிருக்கு. இந்தக் குழந்தையைப் பெத்துப் போட்டுட்டு, இவங்கம்மாவும் போயிட்டாங்க. அதாவது, செத்துப் போயிட்டாங்க!”

    `உன்னை மாதிரி, உயிரோடேயே கொண்டவனை நிர்க்கதியாக விடவில்லை!’ என்று அவன் மறைமுகமாக பழிப்பதாக எடுத்துக்கொண்டு, குன்றிப்போனாள் பார்வதி.

    `வீட்டுக்கு வாங்க,’ என்று அவனை அழைக்க ஆசையாக இருந்தது. ஆனால், எந்த முகத்துடன் அழைப்பது?

    “யாருப்பா இது?” என்ற குழந்தையின் கேள்விக்கு, “ரொம்ப வருஷத்துக்கு முந்தி எனக்குத் தெரிஞ்சவங்கம்மா,” என்று மாஜி கணவன் அளித்த விடையிலேயே அவன் அவளைவிட்டுத் தொலைதூரம் சென்றுவிட்டது தெரிந்தது.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (13)

    ராமஸ்வாமி ஸம்பத்

    ராமன் அனுமனிடம், “ஸீதைக்கு ராவணனின் முடிவு பற்றிய செய்தியைச் சொல்வாயாக” என்றான். அன்னையிடம் இம்மகிழ்ச்சியான சம்பவத்தைக் கூறியதும் அவள் அனுமனை நோக்கி பரிவோடு “உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்?” என்றாள், “அன்னையே, எனக்கு அனுமதி கொடுங்கள். தங்களைக் கொடுமைப் படுத்திய இந்த அரக்கிகளை துவம்சம்  செய்கிறேன்” என்றான். அவ்வாறு செய்யவேண்டாம் என அறிவுரை செயது, ஸீதை சொல்வாள்: ”இவ்வுலகில் யார்தான் தவறு செய்யவில்லை? மேலும் இவர்கள் தங்கள் யஜமானனின் ஆணைப்படிதானே நடந்தார்கள். எய்தவன் செய்த தவறுக்காக அம்பை நோகலாமா?”

    ராவணனின் இறுதிச் சடங்கு முடிந்ததும் விபீஷணனுக்கு லக்ஷ்மணன் பொன்முடி சூட்டினான். பின்னர் ராமன் விபீஷணனை ஸீதா பிராட்டியை அழைத்து வருமாறு பணித்தான்.

    ஸீதை வந்து சீற்றம் பொங்கும் முகத்தைக் கொண்ட ராமனைப் பணிந்தாள். “ஸீதே! உன்னைச் சிறை மீட்டதோடு எனது க்ஷத்திரியக் கடமை முடிந்து விட்டது. ஏறக்குறைய ஓர் ஆண்டு இன்னொருவனால் சிறைப்படுத்தப்பட்ட உன்னோடு என்னால் இனி வாழமுடியாது. நீ எவரோடு வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்” என்று அனல் கக்கும் சொற்களை மொழிந்தான்.

    “ஆரியபுத்திரரே! உயர்ந்த குலத்தோன்றலான தங்களிடமிருந்து இத்தகைய வார்த்தைகள் வரலாமா? என் கற்புநெறி தாங்கள் அறியாததா? தங்கள் நோக்கம் புரிகிறது. இதற்குப்பின் எனக்கு என்ன இருக்கிறது?” என்றாள் ஸீதை. கண்ணீர் அருவிபோல் பொங்கி எழ, “லக்ஷ்மணா, நீ உடனே உலர்ந்த கட்டைகளைக் கொண்டு வந்து தீ மூட்டு” என்று தன் கொழுந்தனுக்கு ஆணையிட்டாள்.

    லக்ஷ்மணனுக்கும் அங்கு உள்ள அனைவருக்கும்  ஒன்றுமே புரியவில்லை. ‘இது என்ன விபரீதம்?’ என்று நினைத்து அண்ணனை நோக்கினான். ராமன் மெளனமாக இருந்தான். தீ மூட்டப்பட்டது. ஸீதை அக்கினிக்குள் பிரவேசித்தாள்.

    அடுத்த கணம் அக்கினி தேவன் தோன்றி அன்னை ஸீதையை பவ்யமாக அழைத்துவந்து ராமனிடம் ஒப்படைத்தான். “ராமா, நெருப்பை நெருப்பு என்ன செய்யமுடியும்? இது உனக்குத் தெரியாமல் போய்விட்ட்தே! என் அன்னை புனிதத்தையே மேலும் மெருகேற்றக் கூடியவள்” என்றான்.

    மலர்ந்த வதனத்தோடு ராமன் ஸீதையை மெல்ல அணைத்தவாறு, “என் ஆருயிரே! உன் கற்புநெறியை உலகுக்குப் பறைசாற்றவே இந்த நாடகத்தை ஆடினேன். என்னை புரிந்துகொள்” என்றான்.

    பிரமன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களெல்லாம் வானில் கூடி ராமனையும் ஸீதையையும் வாழ்த்தி வணங்கினர். தசரதனும் அங்கு தோன்றி ராமனை தன் மடியில் அமர்த்தி உச்சிமுகர்ந்து, ஸீதையைப் பார்த்து ”என் மகனுக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்” என்றான்.

    ”தந்தையே! அன்னை கைகேயியையும் தம்பி பரதனையும் தாங்கள் அவர்கள்மீது கொண்ட கோபத்தை நீக்கி ஏற்றுக் கொள்ளவேண்டும்“ என்று ராமன் கேட்க தசரதனும் “அப்படியே” என்றான்.

    பிரமதேவன் ராமனை நோக்கி, ஐயனே! தாங்கள் திருமால் என்பதை தாங்களே அறியவில்லை. அதனால்தான் இந்த குழப்பம்” என்றார்.

    அவரை வணங்கி ராமன் “நான் என்னை மனிதனாகவும் தசரதன் புத்திரனாகவும் மட்டுமே அறிவேன். மற்றவற்றை நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றான்.

    இந்திரன் ராமனுக்கு ஒரு வரம் அளிப்பதாகச் சொன்னான். “அப்படியானால் இந்த போரில் எனக்காக உயிர்த்தியாகம் செய்த வானரர்களுக்கு புத்துயிர் அளிக்கவேண்டும்” என்றான் ராமன். உடனே மாண்ட வானரர் அனைவரும் உயிர் பெற்றனர்.

    ராமனுக்கு திடீரென்று பரதன் வைத்த கெடு நினைவுக்கு வந்த்து. ”எப்படி அக்கெடு தீர்வதற்குள் அயோத்தி சேர்வது?” என அனுமானத்தோடு கேட்ட ராமனிடம் விபீஷணன், “கவலை வேண்டாம். புஷ்பக விமானத்தின் மூலம் நாம் அனைவரும் நாளையே அயோத்தி சேர்வோம்” என்றான்.

    அனைவரும் விமானத்தில் ஏறினர். போகும் வழியில் ராமன் ஸீதைக்கு நளனால் கட்டப்பட்ட சேது அணை, வானரர்களின் கிஷ்கிந்தை முதலியவற்றை சுட்டிக்காட்டினான்.

    வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தைக் கண்டு அவர் ஆசிகளைப் பெறுவதற்காக விமானம் அங்கு இறங்கியது. முனிவர் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்தார். ராமன் அனுமனை அழைத்து உடனே அயோத்தி சென்று பரதனிடம் தான் திரும்புவதை முன்னறிவிக்குமாறு பணித்தான்.

    பதினான்கு ஆண்டுகள் மனவருத்தத்தோடு ராமன் வரும் வரை காத்திருந்த பரதன்,  ‘அண்ணன் வருவதற்கான அறிகுறிகளே காணப்படவில்லையே’ என நினைந்து, பிராணத் தியாகம் செய்ய முயல்கையில் அனுமன் அங்கு தோன்றி “பரதா! அவசரப்படாதே. நம் அண்ணல் இன்னும் சில நொடிகளில் இங்கு அன்னையோடும் இளவலோடும் வந்து சேருவார்” என்ற மகிழ்ச்சிகரமான தகவலைச் சொன்னான். அரை நாழிகை கடந்தபின் புஷ்பக விமானம் நந்திகிராமத்தில் இறங்கியது. அண்ணனைக் கண்ட பரதனின் ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பல ஆண்டுகளுக்குப்பின் தன் மகனின் முகத்தில் புன்முறுவலைக் கண்ட கைகேயி மனம் மகிழ்ந்தாள்.

    பரதனைப் போலவே ராமன் வரும் வரை காத்திருந்த அசேதனப் பொருள்களான ராம பாதுகைகள் ”எம் ஐயன் காட்டிலும் மேட்டிலும் கற்கள்மீதும் முட்கள்மீதும் காப்பில்லா கால்களுடன் நடக்கையில் நாம் மட்டும் பதினான்கு ஆண்டுகள் பரதாழ்வாரின் பூஜாபீடத்தில் அமர்ந்திருக்கிறோமே! என்னே நம் தலைவிதி!” என்று வருந்தியவாறு இருந்தவை “ஆஹா, மீண்டும் அண்ணல் பாதங்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் நமக்கு விரைவில் கிடைக்கப் போகிறது”  என நினைந்து பொலிவு பெற்றன. இவ்வடிநிலை போல அயோத்தி அரியணையும் அரசாங்கக் கருவூலத்திலிருந்த ரகு வம்சத்தின் மணிமுடியும் “பதினான்கு ஆண்டுகள் ராமன் வரும் வரை காத்திருந்து தவமிருந்தோம். நமக்கும் ஒரு விடிவு காலம் வந்துவிட்டது” என மகிழ்ந்தன. சோகத்தின் உருவாக இருந்த அயோத்தி நகரமே இன்பக்கடலில் திளைத்தது.

    நாடு திரும்பிய ராமனைப் பரதன் கண்ணீர் ததும்பும் கண்களோடு ஆலிங்கனம் செய்து கொண்டான். பின்னர் அவருடைய பாதுகைகளை பூஜா விதானத்திலிருந்து எடுத்து பக்தி பரவசத்தோடு அவருக்கு அணிவித்தான். அன்னைமார்களில் ராமன் முதலில் கைகேயியை வணங்கினான். “ராமா, என் மீது கொண்ட கோபம் தீர்ந்துவிட்டதா?” என்று கேட்ட சிற்றன்னையிடம் ராமன், “அன்னையே தாங்கள் எதுசெய்தாலும் என் நன்மையை மனத்தில் கொண்டுதான் செயல்படுவீர் எனபது எனக்குத் தெரியாததா?”  என்றான்.

    ஒரு நல்ல நாள் பார்த்து ராமனுக்கு முடிசூட்ட குலகுரு வசிஷ்டர் ஏற்பாடு செய்தார். ஸ்ரீ ஸீதாராம பட்டாபிஷேக வைபவத்தை கம்பர் வர்ணனையில் காண்போமே!.

    அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த

    பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற

    விரை செறி கமலத்தாள்சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்

    மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான்  மெளலி.

    [அரியணையை அனுமன் தாங்கவும், அங்கதன் உடைவாளைக் கையில் கொண்டு நிற்கவும், பரதன் வெண்மையான கொற்றைக் குடை பிடிக்கவும், மற்ற இரண்டு தம்பியரான லக்ஷ்மணனும் சத்திருக்கனனும் வெண்சாமரை வீசவும், மணம் மிக்க செந்தாமரை மலரில் வீற்றிருப்பவளான திருமகள் பொருந்தப் பெற்றுள்ள திருவெண்ணெய்நல்லூர் தலைவனான சடையப்ப வள்ளலின் முன்னோராக உள்ளவர் எடுத்துக் கொடுக்க, ராமனுக்கு வசிஷ்டன் முடி சூட்டினான்]

    ஸ்ரீ  ஸீதாராமன் திருவடிகளே சரணம்!

    (முற்றும்)

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 18

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -18

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

     
     jey
    jey 1
    தகவல் :

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    கவிஞருடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்த கே.ஆர்.பாலன் எங்களில் ஒருவரானார்.  அனுபவரீதியாக பழுத்த பழம்போல் காட்சியளித்த அவர். திரையில் பல படங்களைத் தயாரித்த பெருமைக்குரியவர்.  எளிமையானவர். இனிமையாகப் பழகக்கூடியவர். இவரிடமிருந்து திரைத்துறைபற்றிய பல்வேறு செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.   அப்படி பெறப்பட்ட செய்திதான் கவிஞர் வாலி அவர்களின் பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்கிற  பாடலின் உருவாக்கம் பற்றி நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலில் இடம்பெற்ற பகுதியாகும். 

     

    ஏ.வி.எம். நிறுவனத்தார் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ஒரே படம்.. எம்.ஜி.ஆர். நடிப்பில் சண்டைக்காட்சிகளே இல்லாத படம் என்று பல தனித்துவங்களை உள்ளடக்கிய படம் அன்பே வா..  கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல்கள் முழுவதுமாக இடம்பெற்ற இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சி பதிவான பின்னணி சுவையானது.  

     

    ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களது இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் கைவண்ணத்தில் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி!!

     

    முழுக்க முழுக்க காதலர்கள் இடையே உருவாகும் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்! கண்ணுக்கு குளிர்ச்சியாக சிம்லாவில் அன்றைய நாளில் படப்பிடிப்பு!  நாகேஷ் – மனோரமா நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்!  இத்திரைப்படத்தின் பாட்டுப்புத்தகம் கூட ஆர்.பி.எம். ரெக்கார்டு போன்று வட்டவடிவில் வந்தது இன்றும் நினைவில் உண்டு.  

     

    எம்.ஜி.ஆர். ரசிகர்களால் எண்ணிக்கை பாராமல் பார்க்கப்பட்ட பட வரிசையில் அன்பே வாவிற்கு தனி இடம் உண்டு!  புதிய வானம் புதிய பூமிலவ் பேர்ட்ஸ்நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்.. ஏ.. நாடோடி.. போக வேண்டும் ஓடோடி.. அன்பே வா.. அன்பே வா.. என்னும் பாடல்களுடன்.. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!!

     

    இந்தத் திரைப்பாடலுக்கு கவிஞர் வாலி எடுத்துக்கொண்ட நேரம்  சற்றே வித்தியாசமானது.  இசையமைப்பு (Tune)கொடுக்கப்பட்டு எழுத முயன்றும் ஏனோ வார்த்தைகள் சரியாக பிடிபடாமல்நேரம் கடந்து கொண்டே சென்றது. பாடல் கிடைத்துவிட்டால்,பதிவு செய்யப்பட்டு பாடல்காட்சியை படம்பிடித்துவிடாலாம் என்று படக்குழுவினர் காத்திருக்க.. அமைக்கப்பட்ட இசையோ.. அருமை என அனைவராலும் ஏற்கப்பட்.. அந்த முழுநாளும் பாடல் பிறக்காமல் முடிந்துவிடுகிறது.  வீட்டிற்குச்சென்ற கவிஞர் சற்றே வருத்தமுடன் காணப்பட்டார்.  இரவு உணவு கூட வேண்டாம்.  பால் மட்டும் போதும் என்று கூற அவரின் மனைவி.. அவ்வாறே பால் எடுத்துச்செல்கிறார் அந்த அறைக்குள்.. கவிஞரின் கற்பனையில் வரி ஒன்று  தோன்றுகிறது..

     

    பாவலன் மறந்த பாடலில் ஒன்று

    பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று..

    தலைவனை அழைத்தேன்.. தழுவிட துடித்தேன்..

    பாடலின் பல்லவி பின் வருகிறது.. தான் எழுத மறந்த பாடலிது என்பதையே வரியாக்கி அந்த இசைக்கட்டுக்குள் கெட்டிக்காரத்தனமாக வைத்த வாலியைப் பாராட்டலாமே!

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. கண்மூடுதே சொர்க்கம்.. கை மூடுதே வெட்கம்.. 

    எம்.ஜி,ஆர். சரோஜாதேவி.. இணைந்து குதிரை சாளர வண்டியிலே அந்தக் குளம்படிச்சத்தமே பின்னணி இசையாய் தொடரசெந்தூர வண்ணங்கள் வானம் முழுவதும் சிதறிவிழ.. மனக்கண்களில் இன்றும் தெரியும் இனிய பாடலாய்..

     

    http://www.youtube.com/watch?v=UMgp2hO5l_8

     

     

    ராஜாவின் பார்வை ராணியின் – Rajavin paarvai
    Share