மதிப்பு​ரை: ரஞ்சனி நாராயணன்

தன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க

ஆங்கில மூலம்: ஸ்வராஜ் எழுதியவர்: அர்விந்த் கெஜ்ரிவால்

தமிழில் மொழிபெயர்ப்பு : கே.ஜி. ஜவர்லால்

பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்

விலை: ரூ. 80

பக்கங்கள் : 120

வெளியான ஆண்டு: 2012

001 

ஆசிரியர் குறிப்பு:

தற்போது டெல்லியில் முதலமைச்சர் ஆக இருக்கும் திரு. அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய ஸ்வராஜ் என்ற ஆங்கிலப்புத்தகத்தின் தமிழாக்கம் இந்த புத்தகம். தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் ‘இதயம் பேத்துகிறது’ என்கிற வலைத்தளத்தின் ஆசிரியர் திரு கே.ஜி. ஜவர்லால்.

2011 ஆம் ஆண்டு அண்ணா ஹசாரேயின் தலைமையில் ஊழலை எதிர்த்து திரண்ட அணியில் முக்கியப்பங்கு திரு அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு உண்டு. அதற்குப்பின் ஆம் ஆத்மி என்றொரு கட்சியை ஆரம்பித்து மிகக்குறைந்த காலத்தில் டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். தகவல் அறியும் சட்டத்தை அமல்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2006 இல் இவருக்கு ராமோன் மாக்ஸேஸே விருது வழங்கப்பட்டது.

‘நம் நாட்டில் குறை சொல்பவர்கள் அதிகம். குறைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல்பவர்கள் குறைவு. இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலம் என் சமூகக் கடமை ஒன்றை நிறைவேற்றியிருப்பதாக உணருகிறேன்’ என்கிறார் மொழிபெயர்ப்பாளர் திரு ஜவர்லால்

‘நாளைய இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான திட்டம் இந்தப் புத்தகம். வேலையில்லா திண்டாட்டம், வன்முறை, ஊழல், பணவீக்கம், தீவிரவாதம், தீண்டாமை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண விழைபவர்களுக்கு இந்தப் புத்தகம் தூண்டுகோலாக அமையும்’ என்கிறார் இந்த புத்தகத்திற்கு முகவுரை எழுதியிருக்கும் திரு அண்ணா ஹசாரே.

சரி, புத்தகத்திற்குள் செல்லலாமா?

ஏன் இந்தப் புத்தகம்? என்று முதல் அத்தியாயத்தை  தொடங்கும் ஆசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல கேள்விகள் கேட்கிறார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய சமயங்களில்  எம்பி- க்களுக்கு பணத்தை கொடுத்து (horse riding) தங்களுக்கு சாதகமாக வோட்டுப் போடவைக்க முயலுகிறது. எம்பிக்கள் இப்படி விலைபோக ஆரம்பித்தால் நம்முடைய வாக்குகளுக்கு என்ன மரியாதை?

 

வருமான வரி ஏய்ப்பு செய்துவந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் பிடிபட்டபோது அதன் முக்கிய அதிகாரி கூறினார்: ‘இந்தியா ஏழை நாடு. உங்களுக்கு உதவவே நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்கு இப்படி தொந்திரவு கொடுத்தால், எங்களுடைய பலத்தை காட்டி உங்கள் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுவோம்!’ வெளிநாட்டு சக்திகள் நம் நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனவா?

 

போபால் விஷவாயு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிப்போக அரசியல்வாதிகளும், மூத்த தலைவர்களும் எவ்விதம் உதவினார்கள் என்று செய்திகளில் படித்தபோது, ஆசிரியரின் மனதில் எழுந்த கேள்விகள்: இந்தியா நம்பகமானவர்களின் கைகளில்தான் இருக்கிறதா? பத்திரமான வாழ்க்கையையும், நம்பிக்கையான எதிர்காலத்தையும் இதுபோன்ற அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கலாமா?

நம் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்விகள் தாம் இவை.

இரும்பு கனிமச் சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள் டன் ஒன்றுக்கு ரூ 27 மட்டுமே ராயல்டி செலுத்துகின்றன. வெட்டி எடுத்த இரும்புக் கனிமத்தை டன் ஒன்றுக்கு ரூ 6000 விலைக்கு விற்கின்றன. வெட்டி எடுக்கவும் சுத்திகரிக்கவும் டன் ஒன்றுக்கு ரூ 300 ஆகிறது. நாட்டின் வளங்களை நேரடியாகக் கொள்ளை அடிப்பது அல்லவா இது?

இப்படிக் கேள்விகள் கேட்பதுடன் நிற்கவில்லை ஆசிரியர். பலமைல்கள் நெடுந்தூரம் பயணம் செய்து பலரிடமும் பேசி, ஆழ்ந்து ஆய்வு செய்திருப்பதுடன், இவற்றுக்கான விடைகளையும் தருகிறார் இந்தப் புத்தகத்தில்.

‘பிரச்னையின் ஆணிவேர் என்னவென்றால், ஜனநாயகம் என்று நாம் சொல்லும் அமைப்பில் மக்களுக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை! 120 கோடி மக்களை வாட்டி வதைக்கும் பிரச்னைகள் என்ன? அவர்களது தேவைகள் என்ன? இதையெல்லாம் தில்லியிலும், இதரத் தலைநகரங்களிலும் உட்கார்ந்து கொண்டு தீர்மானிக்கிறார்கள்.

இன்னொரு அநியாயமும் நம்நாட்டில் நடக்கிறது. அதாவது நமக்கு என்ன மாதிரியான சட்டங்கள் வேண்டும் என்று அரசு நம்மைக்கேட்பதில்லை. ஆனால் நீர், நிலம், காடுகள், கனிமவளங்கள் இவையெல்லாம் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன! சில சட்டங்கள் இயற்றப்படுவதற்குமுன் வெளிநாட்டு நிறுவனங்களுடனும், வெளிநாட்டு அரசுகளுடனும் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன! நமது நாட்டின் நீர்வளங்கள், கனிமவளங்கள் எல்லாம் எப்படி பறிபோகின்றன என்று உதாரணங்களுடன் சொல்லுகிறார் ஆசிரியர். விவசாயம் மட்டுமே தெரிந்த ஒருவரின் நிலம் பறிமுதல் செய்யப்படுவதால், வேறு தொழில் தெரியாத அவரது குடும்பமே அழிந்துபோகிறது.

இப்போதிருக்கும் பஞ்சாயத்து ராஜின் குறைபாடுகள் என்னென்ன என்று சொல்லும் அர்விந்த் அவற்றிற்கான தீர்வுகளையும் சொல்லுகிறார். மற்ற நாடுகளில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்று உதாரணங்களுடன் விளக்குகிறார். அமெரிக்காவில் மிடில் டௌன் என்ற இடத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாலை ஐந்து மணிக்கு மக்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அவர்களது கருத்துகளுக்கு ஏற்றவாறு அந்த ஊரின் நிர்வாகம் நடந்து கொள்ளுகிறது. அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது மையத்தை நிறுவ முயன்றபோது, அங்குள்ள சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்கிற காரணத்தை மக்கள் முன்வைத்ததால்  அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில்?

நம்நாட்டில் இருக்கும் நூறு கோடிப்பேர் எப்படி ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்க முடியும், சாத்தியமா? சாத்தியம் என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒட்டுமொத்த கிராமத்தின் ஒருங்கிணைந்த பிரதிநிதிகளைக் கொண்ட கிராம சபை அமைக்கப்பட வேண்டும். அந்த கிராமத்தின் முன்னேற்றத்துக்கு வேண்டிய திட்டங்களை கிராம மக்களைக் கலந்தாலோசித்து நிறைவேற்ற வேண்டும். இதுபோல ஒரு அமைப்பை (தன்னாட்சி) ஏற்படுத்தி ராலேகான் சித்தியில் ஏற்படுத்தி அந்த கிராமத்தின் அடையாளத்தையே மாற்றி இருக்கிறார் அண்ணா ஹசாரே. போபட்ராவ் பவார், ஹிவ்ரே பஸார் என்கிற கிராமத்தையும், தமிழ் நாட்டில் குத்தம்பாக்கம் என்கிற கிராமத்தை இளங்கோ என்கிற இளைஞரும் மாற்றி இருக்கிறார்கள்.

கிராமங்களில் கிராம சபை போல நகரங்களில் சமுதாய அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் சாதாரண ‘எப்படி இருக்கீங்க?’வில் தொடங்கவேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் பி.டி. ஷர்மா. தங்கது சொந்த விஷயங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு ஒவ்வொருகிடையிலும் நெருக்கம் வரவேண்டும். இது மெல்ல மெல்ல சமூக விஷயங்களுக்கும் இயற்கையாக திசை திரும்ப வேண்டும். மக்கள் ஒன்று கூட வேண்டும். ஒருவரோடு ஒருவர் பேச வேண்டும். ஒரு உறவு/நட்பு ஏற்பட்ட்விட்டாலே பேச்சின் திசை தானாக உள்ளூர் பிரச்னைகளையும், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளையும் நோக்கித் திரும்பும்.  வேற்றுமைகள் மறையும்.

‘நாட்டின் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால் நாம் இணைந்து செயல்பட வேண்டும்’ என்கிற வேண்டுகோளுடன் புத்தகத்தை முடிக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

தற்போது திரு கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பலத்த விவாதங்களுக்கு ஆளாகியிருக்கின்றன. அவற்றையெல்லாம் சற்று நேரம் மறந்துவிட்டு, எந்தவிதமான முன்கூட்டிய எண்ணங்களுக்கும் இல்லாமல் இந்தப் புத்தகத்தை படித்துப் பாருங்கள். இந்தியாவின் வளம் நமது ஒருங்கிணைந்த கைகளில் என்று சொல்லும் இந்தப் புத்தகம் உங்களையும் கவரும். இவர் சொல்லும் தன்னாட்சிக்கு நீங்களும் வோட்டுப் போடுவீர்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *