Blog

  • தென்றல் வந்து வீசாதோ!

    தென்றல் வந்து வீசாதோ!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    தென்றல் வந்து வீசாதோ
    சிந்தை மகிழ்ந் தாடாதோ
    நொந்த மனம் மாறாதோ
    நோய் நொடிகள் ஓடாதோ

    கந்த னருள் சேராதோ
    கர்ம வினை போகாதோ
    சந்ததும் நம் வாழ்வில்
    தென்றல் வந்து வீசாதோ

    சொந்த மெலாம் சேராரோ
    சுமை யகன்று போகாதோ
    வெந்த மனம் மாறாதோ
    வினை யகன்று போகாதோ

    பந்த பாசம் பெருகாதோ
    பழைய நிலை மாறாதோ
    செந் தணலும் தணியாதோ
    தென்றல் வந்து வீசாதோ

    ஆறா வடு மாறாதோ
    அகங் குளிர மாட்டாதோ
    கோணா முகம் இருக்காதோ
    கொள் முதலும் பெருகாதோ

    தேனாய் சொல்லும் பெருகாதோ
    சிந்தை யன்பு நிறையாதோ
    தானாய் மனந் தெளியாதோ
    தயாள குணம் அமையாதோ

    தென்றல் வந்து வீசாதோ
    சிந்தை சிந்து பாடாதோ
    சந்ததும் கந்தன் புகழ்
    எண்ணி மனம் பாடாதோ!

    Share
  • கடவுளை நம்பினால் கைவிட மாட்டார்!

    கடவுளை நம்பினால் கைவிட மாட்டார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
    காணும் இடமெல்லாம்  கடவுள் இருப்பார்
    ஆணவும் உள்ளார் காணவும் மாட்டா
    அரும் பொருளாகி  இருக்கிறார் ஆண்டவன்

    இருளிலும் இருப்பார் ஒளியிலும் இருப்பார்
    இல்லம் இருக்கும் விளக்கிலும் இருப்பார்
    இரும்பிலும் இருப்பார் செம்பிலும் இருப்பார்
    கரும்பினில் சுவையாய் யாகியும் இருப்பார்

    அருமறை அனைத்திலும் ஆண்டவன் இருப்பார்
    ஆதியும் அந்தமும் இல்லார் ஆண்டவன்
    ஓசையின் உள்ளே  ஆண்டவன் இருப்பார்
    ஓவியம் காவியம் அனைத்திலும் இருப்பார்

    நோயாய் வருவார் வைத்தியம் செய்வார்
    மருந்தாய் அமைந்து சுகத்தைக் கொடுப்பார்
    விருந்தாய் இருப்பார் வேற்றுமை காட்டார்
    விண்ணும் மண்ணும் நிறைவார் இறைவன்

    காயாய் இருப்பார் கனியாய் இருப்பார்
    கற்கண்டுக் குள்ளே இனிப்பாய் இருப்பார்
    தேனாய் இருப்பார் பாலாய் இருப்பார்
    தேடுவார் தேடினால் தெரிவார் ஆண்டவன்

    கருவில் உயிராய் இருப்பார் கடவுள்
    உருவாய் அருவாய் ஒளிர்வார் கடவுள்
    அருளின் உருவாய் ஆகியே இருக்கிறார்
    அன்புடை அகத்தில் அமருவார் கடவுள்

    ஆண்டவன் வடிவம் ஆருமே அறியார்
    அவரவர் கற்பனை ஆண்டவன் வடிவம்
    அன்பின் வடிவே ஆண்டவன் என்பது
    ஆணவம் அகற்றிய ஆன்றோர் வாக்கே

    அன்பு கருணை அடைக்கலம் அணைப்பு
    துன்பம் துடைத்தல் துயரம் களைதல்
    தாங்கிப் பிடித்தல் சமயத்தில் வருதல்
    அனைத்தும் ஆண்டவன் என்பதே நம்பிக்கை

    விஞ்ஞானம் அறியா வியப்பே கடவுள்
    மேலான ஞானமே கடவுளை காணும்
    அஞ்ஞான நிலையில் ஆண்டவன் தெரியார்
    அஞ்ஞானம் அகன்றால் ஆண்டவன் தெரிவார்

    காணாப் பொருளைக் கண்டவர் சிலரே
    கற்பனைக் கெட்டா அதுவே கடவுள்
    கற்பனைக் கடந்த ஜோதியே கடவுள்
    கடவுளை நம்பினால் கைவிட மாட்டார் !

    Share
  • பராசக்தி – திரை விமர்சனம்

    பராசக்தி – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    பராசக்தியின் அடிப்படைத் தோல்வி, அதன் கதையிலிருந்து தொடங்குகிறது. மொழிப் போராட்டத்தில் 70 பேர் துடிதுடித்து மாண்டுள்ளனர். தங்கள் உடலுக்குத் தீவைத்துக்கொண்டு பலர் கருகிச் சாய்ந்துள்ளனர். இத்தனை உணர்ச்சிமிகு வரலாற்றுப் பின்புலத்தை எடுத்துக்கொண்டு, சப்பையான இறுதிக் காட்சியை வைத்தது, இயக்குநரின் திறமையின்மையைக் காட்டுகிறது.

    இந்தித் திணிப்பு என்பதற்கு உரிய காட்சிகள் குறைவாகவே உள்ளன. அதிலும் சமூகத்தில் அனைத்து நிலையினரையும் பாதிக்கும் வகையில் அது இருந்தது என முன்வைக்கவில்லை. அஞ்சல் நிலையத்தில் படிவங்கள் இந்தியில் மட்டுமே இருந்தன எனக் காட்டப்படுகிறது. பணம் அனுப்ப வந்த பெண்கள், தங்களுக்கு அதை நிரப்பத் தெரியாது என்று கூறுகின்றனர். சரி இதை நீங்களே நிரப்புங்கள் என அஞ்சல் அலுவலர்களிடம் கூறுகின்றனர். அவர்கள், எங்களுக்கும் இந்தி தெரியாது என்று கூறுகின்றனர். அஞ்சல் அலுவலர்களுக்கே இந்தி தெரியாத போது, அவர்களால் எப்படி இந்திப் படிவங்களைக் கையாள முடியும்? படத்தில் இது மிகப் பெரிய ஓட்டை. நடைமுறையில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

    புறனானூற்றுப் படையினர், தமிழின் ஆதி வடிவமான பிராமி மொழியில் செய்திகள் பரிமாறுவதாகக் காட்டுகிறார்கள். இதை நாயகன் தன் நெஞ்சில் பச்சை குத்தியும் இருக்கிறார். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழியினர் பிராமி மொழியை எவ்வாறு கற்றுக்கொண்டனர், இதைக் கற்பித்தவர் யார் எனப் படத்தில் காட்டவில்லை. இது அவ்வளவு எளிதான செயல் இல்லை. புதிதாக இந்தி மொழியைக் கற்க முடியாது என்று எதிர்க்கின்றனர். ஆனால், பிராமி மொழியில் கற்றுச் சங்கேத மொழியில் எழுதவும் பச்சை குத்தவும் கற்கின்றனர். இதிலும் இந்தி மொழியைக் கற்க அமைப்புகள் இருக்கின்றன. ஆசிரியர்களும் இருக்கின்றனர். ஆனால், பிராமி மொழியைக் கற்க உரியவர்கள் இல்லை. எப்படிப்பட்ட முரண் இது?

    நாயகன் இந்தி மொழியைக் கற்க முடிவு செய்கிறார். ஆனால், அந்த ஊரில் நாயகியைத் தவிர, இந்தி ஆசிரியர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவரும் நான் யாத்திரை செல்கிறேன் எனக் கிளம்புகிறார். இந்தித் திணிப்பு எனக் காட்டப்படும் படத்தில் தான் இந்த நிலை. பிறகு எங்கிருந்து திணிப்பு வருகிறது எனில், அரசின் கொள்கை அறிவிப்பு அளவில்தான் அது உள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் நம் வாழ்க்கை அவ்வளவுதான், நம் மொழி அவ்வளவுதான் என்ற கற்பனை அச்சமே மாணவர்களைப் போராடத் தூண்டுகிறது. அதாவது, திணிப்புக்கு முன்னதாகவே அதை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்கள்.

    ரெயில்வே துறை நேர்காணல், தில்லியில் நடக்கிறது. ரெயில்வே பயணச் சீட்டுப் பரிசோதகர் வேலைக்கு உனக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்தி மாநிலங்களில் பணியமர்த்தப்பட்டால் அது தேவைதான். ஆனால், இதே போல் தென் மாநிலங்களில் பணியமர்த்தப்படும் வடமாநிலப் பயணச் சீட்டுப் பரிசோதகர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்தித் திணிப்பு என்ற அளவில் இந்தக் காட்சி முடிந்துவிடுகிறது.

    தமிழக முதலமைச்சராகக் காட்டப்படும் பக்தவத்சலம், மதுரையில் இந்தி மொழி வாரத்தைத் தொடங்கி வைக்கிறார். ஆனால், அவரோ, தமிழக அமைச்சர்களோ இந்தியில் ஒரு வார்த்தையும் பேசவில்லை. படத்தில் காட்டப்படும் கள யதார்த்தத்தின்படி சமூகத்தில் எந்தப் பெரிய தாக்கத்தையும் இந்தி செலுத்தவில்லை. இந்தித் திரைப்படங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடியதைக் கூட இந்தத் திரைப்படத்தில் தெளிவாகக் காட்டவில்லை.

    இந்தித் திணிப்பு என வாய் ஓயாமல் பேசினாலும் அவற்றைத் தெளிவாகத் திரையில் காட்டவில்லை. தில்லியில் எல்லாப் பேருந்துகளிலும் தமிழில் எழுதியது போன்ற நடக்காத போராட்டங்களைக் காட்டியிருக்கிறார்கள். இறுதிக் காட்சி, மிக மிக மொக்கையாக அமைந்திருக்கிறது. எழுச்சி ஊட்டியிருக்க வேண்டிய ஒரு திரைப்படம், இயக்குநரின் அலட்சியத்தால் பிசுபிசுத்துவிட்டது. இதைப் படக்குழுவினரும் தயாரிப்பாளரும் கூடச் சரியாகக் கவனிக்கவில்லை.

    ஆனால், கற்பனை அச்சத்தைக் காட்டியே காலத்தை ஓட்டலாம், வாக்குகளை அறுவடை செய்யலாம் என்ற அரசியல் சாதுர்யத்தைப் படம் எடுத்துக் காட்டுகிறது.

    மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குச் சார்பாக இயக்குநர் வளைத்துள்ளார். இந்தப் போராட்டம் குறித்து, அண்ணாவின் கருத்துகள் மட்டும் ஆங்காங்கே காட்டப்படுகின்றன. இதர கட்சியினர், தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் குரல் காட்டப்படவில்லை. இது, திட்டமிட்டு மாணவர்களைத் திமுக சார்பாளர்களாகக் காட்டுகின்றது.

    படத்தின் ஒரே நல்ல கூறு, இந்தித் திணிப்புப் போரை ஒடுக்கும் அதிகாரியாகத் தமிழர் ஒருவரைக் காட்டியதே. இவரை வட இந்தியராகக் காட்டியிருந்தால், வட இந்தியருக்கு எதிரான உணர்வு இங்கே பெருகியிருக்கும்.

    படம் என்பது வெறும் தொழில்நுட்பம், ஒப்பனை, அரங்கப் பொருள்கள் மட்டுமில்லை. அதற்கு வலுவான கதையும் பாத்திரங்களும் தேவை. எல்லாப் படங்களையும் எல்லோரும் எடுத்துவிட முடியாது என்பதைச் சுதா கொங்கரா உணர வேண்டும்.

    Share
  • பல்லழகன் – பகுதி 17

     

    திவாகர்

     

    இல்லம்மா.. காரணம் என்னன்னா திருச்சிலேர்ந்து இந்தப் பொண்ணை அனுப்பி வெச்சது கந்தசாமிதான். அவங்களை அடிக்கடி வந்த் பார்க்கறதும் அவர்தான். சுந்தரை அறிமுகம் பண்ணி வெச்சு இங்க வேலை பண்ண வெச்சதும் அவர்தான். சுந்தருக்கு நாங்க எதும் பணம் தர்றது இல்லே.. ஆனா சுந்தர் வந்து எல்லா வேலையும் செஞ்சு கொடுப்பார். அதனால் எனக்கு அவங்க பேசினதுல ஒரு சந்தேகமும் வரல்லைம்மா. அன்னிக்கு அவர் சுந்தர்கிட்ட கெஞ்சினது கூட சந்தேகமா படலே..

     

    “அவ்வளவுதானா நடந்தது?”

     

    “பிராயச்சித்தம்னு சொன்னீங்களே.. அதை இங்கேயே ஆரம்பிக்கலாமேன்னு சொன்னார் சுந்தர். உடனே எங்கிட்டே சொன்னாரு.. அவரோட பிள்ளை கல்யாண் வந்தவுடனே அவரோடு பேசி பத்துலட்சம் ரூபா இந்த ஆசிரமத்துக்கு தரேன்னு எனக்குச் சொன்னார். நான் அதுக்கு, ரொம்ப சந்தோஷம்.. நீங்க சுந்தர் கையில கொடுத்தீங்கன்னா அவர் பேங்க்ல அக்கௌண்ட்ல போட்டுடுவார். ரசீதும் கொடுப்பார்’னு சொன்னேன். அவர் கையைப் பிடிச்சு மெதுவா கார்ல அழைச்சுட்டு சுந்தர் போயிட்டாரு.”

     

    “ஓ! அது சரி, உங்க ஆசிரமத்துக்கு யார் ஓனர்? அதாவது யாராவது முக்கியமானவங்க இதைக் கவனிப்பாங்க இல்லையா.. அவங்க யாரு?”

     

    “பாலபாலிகா’ங்கிறதே தெலுங்குப் பேருதாம்மா..  சிறுவர் சிறுமியர்னு தமிழ்ல சொல்லுவாங்க.  பேருதான் பால பாலிகா.. பசங்க யாரும் சேர்க்கறதில்லே. நெல்லூர்லேர்ந்து சென்னைக்கு வந்த ஒரு ரெட்டிகாரு ஆரம்பிச்சாரு. அவரோட பில்டிங்க்தான். அவரு இப்போ இல்லை. அவரு பசங்க எப்போதாவது வருவாங்க. கொஞ்சம் பேங்க்ல பணம் போடுவாங்க. இங்க இருக்கறவங்க அத்தனை பேருக்கும் விருந்து கொடுப்பாங்க, எனக்கு மாச சம்பளம் கரெக்டா அனுப்பி வெப்பாங்க்க.. இங்க வந்தா சந்தோஷமா எல்லாரும் இருக்கறதைப் பார்த்துத் திருப்தியா போயிடுவாங்க. வருஷா வருஷம் ஆடிட்டர் இவங்களுக்கு பேப்பர் அனுப்பி கையெழுத்துக் கேட்பாரு. அவங்களும் போட்டு அனுப்புவாரு. எல்லாம் சுந்தர் சரியா பார்த்துக்குவாருங்க..”

     

    “ரொம்ப சந்தோஷம் பெரியவரே.. அந்த ரசீது புக் கிடைச்சுதுன்னா நல்லது.. சுந்தர் எப்போ வந்து எப்போ தருவாரோ.. நாங்களே அந்த மேஜை டிராயரை ஓபன் பண்ண டிரை பண்ணலாமா.. ஒரு ஸ்க்ரூ டிரைவர் இருந்தா கொடுங்க..”

     

    “தாராளமா டிரை பண்ணுங்கம்மா.. அதுல அக்கௌண்ட் புக்குங்க,  ரசீது புக் இருக்கும். ஸ்க்ரூ டிரைவர் இருக்கும்மா.. முயற்சி பண்ணிப் பாருங்க..!

     

    என்ற பெரியவர் ஸ்க்ரூடிரைவரைக் கொடுத்தார். அந்த மேஜையின் சாவித் துவாரத்தில் ஸ்க்ரூடிரைவரை வைத்துப் பார்த்துத் திருகினாள். முதலில் முடியவில்லை. சாந்தியும் உதவி செய்தாள். இரு பெண்களும் முயற்சி செய்வதைப் பார்த்து அந்தப் பெரியவர்

     

    “இன்னொரு ஸ்க்ரூடிரைவர் கொஞ்சம் பெரிசா இருக்கா பாக்கறேன்மா..” என்று சொல்லி விட்டு உள்ளே போனார். அவர் உள்ளே போனதும் இன்னொரு முயற்சியை சாந்தி செய்யும்போது மேஜை திறந்து கொண்டது. மேஜைக்குள் துழாவினால் டக்கென்று ஒரு மொபைல் கையில் பட அதை உடனடியாக எடுத்தாள். சாந்தியின் கையிலிருந்து சடக்கென பிடுங்கி தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள் கோம்டி. அதற்குள் இன்னொரு ஸ்க்ரூ டிரைவருடன் வந்தவர் மேஜை டிராயர் திறக்கப்பட்டதைக் கண்டவர், அவர்களை நகரச் சொல்லிவிட்டு ரசீது புத்தகத்தை எடுத்து அவர்களிடம் தந்தார். கோம்டி அவர் கொடுத்த புத்தகத்தைப் புரட்டி கடைசி  நான்கு மாதங்களில் வரவு வைக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்தாள். சில ரசீது காப்பிகளை தன் மொபைல் ஃபோனில் படம் பிடித்துக் கொண்டாள். புத்தகத்தை அவரிடம் கொடுத்து மேஜையை பழையபடி மூடச் சொன்னார். உள்ளே மூடப்பட்டதும் அது மறுபடியும் பழையபடி லாக்காகி விட்டதைச் சொன்னார்.

     

    “நல்லதுதான். எங்களுக்கு சுந்தர் மேல சில சந்தேகம் இருக்கு.. அதனால நீங்க நான் வந்து உங்களை விசாரித்தது பற்றி சுந்தர்கிட்டே சொல்லவேண்டாம். மீறிச் சொன்னீங்கன்னா இந்த வயசுல உங்களை சாட்சிக்காக போலீஸ் ஸ்டேஷன் வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துவாங்க.. உங்க மேல எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லே.. இந்த ரசீதுகளைப் பாக்கறச்சே சுந்தரைத்தான் சந்தேகப்படணும்.. எதுக்கும் உங்க பேங்கர் யாரு? ஸ்டேட் பேங்க்தானே.. அங்க அக்கௌண்ட் நம்பர் மாத்திரம் கொடுங்க.. நான் செக் பண்ணிக்கிறேன்.”

     

    அக்கௌண்ட் நம்பரை வாங்கிக் கொண்டு அவரிடம் ஒரு நன்றியையும் சொல்லிவிட்டு வெளியே வந்தனர். வண்டியில் ஏறுவதற்கு முன் இன்னொரு சிநேகிதிக்கு ஃபோன் செய்தாள்.

     

    “வித்யா.. பேங்க்ல இருக்கியா? ரொம்ப நல்லதா போச்சு. ஒரு கேஸுக்காக ஒரு அக்கௌண்ட் நம்பரைச் செக் பண்ணனும். நான் அக்கௌண்ட் நம்பர் மெஸேஜ் பண்ணறேன். எனக்கு ஒரு நாலு மாச ஸ்டேட்மெண்ட் வேணும்.. இல்லே.. பெரிசால்லாம் இருக்காது, எனக்குத் தெரிஞ்சு ஒரு பக்கம்தான் வரும். என் வாட்ஸாப் நம்பருக்கு அனுப்பேன்.. ரொம்ப தேங்க்ஸ் வித்யா.”

     

    ஃபோனில் மெஸேஜ் செய்தவள் கொஞ்சம் திருப்தியுடன் வண்டியில் ஏறினாள்.

    “சாந்தி, இப்போ பேசினது என் கஸின் வித்யாகிட்டே.. அவ மௌண்ட் ரோடு பிராஞ்ச் எஸ் பி ஐலதான் வேலை பண்றா. சில கேஸுங்கள்ல இந்த பண பரிமாற்றம்னு சொல்லுவாங்க.. அது ஒண்ணே சாட்சியா வேலை பெரிசா உதவும்.. பார்க்கலாம்.”

     

     

    கோம்டி வீட்டின் கிலினிக் (பின் மாலை நேரம்)

     

    சாந்தியும் கோம்டியும் கிலினிக் இல் சாய்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாந்தி கிலினிக்கில் இருந்த கல்யாணின் ஃபோட்டோவைக் காட்டி சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.

     

    “இப்போதாண்டி உன் கிலினிக்குக்கு ஒரு களையே வந்திருக்குடி.. எத்துப்பல்லன் இதைப் பார்த்தா என்ன சொல்வானோ?”

     

    “என்ன சொல்வான்? என் போட்டோவைப் போட்டா தனக்கு மாடலிங்க் ஃபீஸா பத்தாயிரம் கொடுன்னு கேட்பான்..”

     

    “சரியா அவனை எடை போட்டுருக்கே.. பல்லழகன் கேட்டாலும் கேட்பான். சரி, எவ்வளோ தூரம் வந்திருக்குடி இப்போ அவனோட கேஸ்..? இந்த ஆசிரமத்து விசிட்ல ரொம்ப உபயோகமா இருந்தது அந்த ஆப்பிள் ஃபோன் கிடைச்சதுதான் நம்ம லக். சுந்தர் நல்ல சாமர்த்தியக்காரன்தான்.  அவன் வீட்ல ஒருவேளை போலீஸ் சோதனை போட்டா கிடைக்குமேன்னு பயந்து அதை ஆசிரமத்துல ஒளிச்சு வெச்சிருக்கான். ஆனா அந்த ஃபோனை இன்னொரு தடவை எனக்குக் காமிக்காதேடி.. ரொம்ப அருவருப்பா இருக்கு. பாவம் அந்த சின்னப் பிள்ளைங்கல்லாம்.”

     

    “எஸ்.. ஆனா உலகம் இப்படித்தாண்டி இருக்கு. போகப் போக இன்னும் குரூரமா கூட ஆகலாம். பெண்கள்ங்கிறது ஆண்களுக்கு என்னிக்குமே போகப் பொருள்தான்.. ஆண்களோட வக்கிரபுத்திக்கு எப்பவுமே பெண்கள்தான் பலி. இதுக்கெல்லாம் முடிவு கிடைக்குமாங்கிறதெல்லாம் சொல்லவே முடியாது.. சுந்தர் மேல வலுவா இப்போ சாட்சிகள் திரும்பியிருக்கு.. ஆனா அவன் இந்தக் கொலையை ஏன் பண்ணனும்? அவனைப் பொறுத்தவரை மொராலிடி பாக்கறான்னு சொன்னாலும் நாலு மாசமா அவங்க பெரியப்பாகிட்டே காசு வாங்கறான். இப்போ பத்து லட்சம் வாங்கிருக்கான்.. ஆனா ரசீது புக்ல எல்லாமே சரியா இருந்தாலும் ஆசிரம அக்கௌண்ட்லதான் அந்தளவு அமௌண்ட் இல்லே.. ஸோ அவங்க மாமா கொடுத்த பணமெல்லாம் அவன் எடுத்துக்கறான்.. ஆசிரம அக்கௌண்டையும் அவனே பாக்கறதினாலே அதை அட்ஜஸ்ட் பண்ணிடறான்.  இங்க அவன் நிச்சயமா மாட்டுவான். மாமா கொடுமையையையும் குரூர புத்தியையும் இவனுக்கு வரவு, அதாவது வருமானம்தானே? அப்போ இவன் ஏன் கொலை பண்ணனும்.. ஆனா இது சீக்கிரம் முடிவுக்கு வந்துடும். சீக்கிரமே இன்ஸ்பெக்டரை முன் வெச்சே நாம சேகரிச்ச விவரம்லாம் கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் போலீஸ் என்னவேணா ஆக்ஷன் எடுக்கட்டும்.  ஆனா எனக்கு இதுல ஒரு திருப்தி என்னன்னா இந்த கல்யாணுக்கு இப்போ அவன் பெரியப்பாவைப் பத்தியெல்லாம் உண்மை தெரியத் தெரிய வெறுப்பு ஜாஸ்தியாயிருக்கு. டிரெயின்ல வரச்சே என்னவெல்லாம் புகழ்ந்தான் தெரியுமா..”

     

    “அது சரி! அவனுக்குச் சொல்லிட்டியா?”

     

    “எதை?”

     

    “அதாண்டி.. அவங்க பெரியப்பனோட இங்க நடந்த கதையை..”

     

    “சொல்லலே.. இன்னும் அதுக்கு வேளை வரல்லேடி..”

     

    கதவைத் தட்டும் சப்தம் கேட்கிறது. நர்ஸ் வந்து நிற்கிறாள்.

     

    “அம்மா.. நான் கிளம்பட்டுமா.. வெளியே ஒரு ஆள் உட்கார்ந்திருக்கிறார். நீங்க வரதுக்கு முன்னாடி ஒரு தடவை வந்து கூட கேட்டுட்டுப் போனார். அவர் பல் தெத்துப்பல்லுனு பேசினாலே தெரியுது.. பெரிய கேஸ்..” என்று சொல்லியவள் சட்டென அந்த ஃப்ரேம் போட்டோவைப் பார்க்கிறாள்..

     

    “அம்மா.. இந்தாள்தான் வெளியே உட்கார்ந்திருக்காரு. ஒரு ஆள்தான்.. ஆமாம்.. இந்த ஆளுக்கு இன்னிக்கு அப்பாயிண்ட்மென்ட் ஃபோன்ல கொடுத்தீங்களா? மயக்க மருந்து காலி ஆயிடுச்சும்மா.. நாளைக்கு வரச்சே வாங்கிவரேன். நாளைக்கு வரச் சொல்லட்டுமா.. டாக்டர் இன்னிக்கு பிஸின்னு சொல்லிடறேன்..”

     

    “இரு இரு.. அந்தாளை உள்ள அனுப்பு.. அவரு ஆபரேஷனுக்காக வரலே..”

     

    சாந்தி குறுக்கிடுகிறாள். “ஆமா! அதுக்கும் வேளை வரணுமில்லே” என்று சொல்லி விட்டு சிரிக்கிறாள்.

     

    உள்ளே கல்யாண் வருகிறான். நர்ஸ் பெண் மறுபடி உள்ளே வந்து வீட்டுக்குப் போக அனுமதி கேட்கிறாள்.

     

    “சரி, போயிட்டு வா..” என்று கோம்டி சொல்ல அவள் கிளம்புகிறாள். கல்யாண் தன் போட்டோவை அங்கே பார்த்து சிரிக்கிறான். சாந்தி அலறுகிறாள். கோம்டி அவனைப் பார்க்கிறாள்.

     

    “கல்யாண், சிரிச்சீங்களா.. சாந்திக்குக் குழந்தை மனசு.. குழந்தையைப் போலவே பயப்படறா பாருங்க.. தயவு செய்து சிரிக்காம பேசுங்க..”

     

    “அது எப்படி? அன்னிக்கு என்னமோ வாயை மூடிப் பேசு’ன்னீங்க.. இன்னிக்கு என்னவோ சிரிக்காம பேசு’ன்னு சொல்லறீங்க.. இதெல்லாம் முடியுமா? அடச்சே ஒரு மனுஷனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைச்சுதுன்னா ஜனங்களுக்குப் பொறுக்காது..”

     

    “ஸார்.. டைரக்டாவே சொல்லுங்க! மறைமுகமா பேசாதீங்க! என்ன பொறுக்காது எங்களுக்கு? நாங்க ரெண்டு பேருமே டெண்டல் சர்ஜன்ஸ்.. அதுவும் டெண்டல் சர்ஜரில டாப் ஸ்டூடென்ட்ஸ்னு பேரு வாங்கினவங்க.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க.. சாந்தி அடுத்த மாசம் யூ எஸ்’க்குப் போறா.. அவளுக்கும் ஒரு நல்ல சர்ஜரி பண்ண எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்.. என்னடி சாந்தி சொல்லறே?”

     

    “நான் இப்பவே ரெடி.. சாருக்கு வசதி எப்படி?”

     

    “ஐய்யய்யோ.. என்னங்க . நான் உங்க க்ளயண்ட்தான்.. அது இன்வெஸ்டிகேஷன் விஷயத்துலதான்.. டெண்டல் க்ளையண்டோ பேஷண்டோ இல்லே. உங்களுக்கு டெண்டல் கேஸ் கிடைக்கலேன்னா நானா கிடைச்சேன்.. அதுவும் என் அதிர்ஷ்டத்தை இழக்கறதுக்கு சம்மதம் தருவேனா.. (தன் ஃப்ரேம் செய்யப்பட்ட படத்தைக் காண்பித்து) பாருங்க என் பல்லாலே உங்க கிலினிக்கோட களையே எங்கயோ போயிடுத்து. சாயங்காலம் இங்க ஒருதடவை வந்தப்போ கூட பார்த்தேன்.. உள்ளாற ஒரு பேஷண்ட்.. வெளியே மூணு பேஷண்ட் வெயிட்டிங்க்.. எல்லாம் என் படத்தாலே அதுவும் என் பல்லாலே வந்த அதிர்ஷ்டம்.  அந்த அதிர்ஷ்டத்தை நீங்க அடைஞ்சிருக்கீங்க.. நார்மலா இந்தப் படம் கொடுத்ததுக்கு நான் ஃபீஸ் வாங்கணும்.. நீங்க ஃப்ரெண்டாயிட்டிங்க.. ஃப்ரீயா வெச்சுக்குங்க.. ஆமா.. இந்தப்படம் அன்னிக்கு ஸெல்ஃபீ எடுத்ததுதானே.. எங்கூட நீங்களும் இருந்தீங்களே.. உங்களைக் கட் பண்ணி எடுத்துட்டு என்னை மாத்திரம் தனியா என் அதிர்ஷ்டப்பல்லுக்காகப் போட்டிருக்கீங்க.. ஊம்ஹூம்.. இன்னும் நல்லா அழகா பெரிசா சிரிச்சபடி எடுத்துருக்கலாம்.  ஏங்க.. ‘எனக்கு விளம்பரம் வேணும், உங்க போட்டோ சிரிச்சபடி போஸ் கொடுங்க’ன்னா இன்னும் இதை விட சூபரா கொடுத்திருப்பேனே,, இன்வெஸ்டிகேஷன்ல சூபரா இருக்கற உங்க அறிவு இந்த டெண்டல் பிராக்டீஸ்ல போறல.. ம்..”

     

    கோபமாகப் பார்த்தாள் கோம்டி. “போதுமே உங்க பல் புராணம். எங்களுக்கும் இந்த போஸ் போதும்.. இன்னும் நல்லா சிரிச்சீங்கன்னா அதை ஃப்ரேம் பண்ணிப் போட்டோ போட்டோம்னா க்லினிக்குக்கு குழந்தைங்க வந்தா பயப்படுவாங்க.. பெரியவங்க வந்தா எதுக்குங்க இந்த திருஷ்டிப் பரிகார போட்டோ’ன்னுவாங்க.. நாங்க சொல்லறதைக் கேட்டு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்து அந்த எத்துப் பல்லுங்களை ரிமூவ் பண்ணுங்க..”

     

    “முடியாத விஷயத்தை மறுபடி மறுபடி பேசி எதுக்குங்க நமக்குள்ள இந்த விளையாட்டு?  ஆமாம் சாந்தி யூ எஸ் போறாங்களா? எனக்குக்கூட யூஎஸ் பி1 விஸா இருக்குங்க.. நானும் உங்க கூட வரட்டா?”

     

    “கூட வரலாம்.. ஆனா முதல்ல உங்க கேஸ் முடிங்க.. அப்பறம் யூ எஸ் பத்திப் பேசலாம். பாருங்க நான் இவளுக்குக் கூட விஸா போட்டு வாங்கியிருக்கேன்.. ஆனா அவ என்ன சொல்லறா? அவ முதல் பிரெஃபெரன்ஸ் உங்க பெரியப்பா கேஸாம்.. ஆக்சுவலா அது உங்க கேஸ்.. நீங்க நடுவுல விட்டுட்டு என்னோட வரேன்னு சொல்லறீங்க.. ஆனா இவளைப் பாருங்க.. ஒரு டெடிகேடிவ் டிடக்டிவா எப்படி சூபரா வேலை செய்யறா தெரியுமா?”

     

    அதே சமயம் கிலினிக்கில் தான் உட்கார்ந்திருக்கும் இடத்தின் பின்னால் ஒரு மூலையில் இன்னொரு படம் ஃப்ரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். கோம்டியின் கிலினிக்கில் ஒரு நர்ஸ் ஒரு நோயாளியின் பல்லை சுளுவாக எடுப்பதைத் தத்ரூபமாக படம் எடுத்து மாட்டியிருந்தாள் கோம்டி. அந்தப் படத்தைப் பார்த்து முகம் சுளித்தான்.

     

    “என்ன சார் அந்தப் படத்தைப் பார்த்தவுடன் பயம் வந்திடுச்சா? பல் எடுக்கறது ரொம்ப ஈஸின்னு காமிக்கற படம்.. நீங்க பயப்பட வேணாம்.”

     

    சாந்தியை இடைமறித்தான் கல்யாண்.

    “இல்ல..  படத்துல அந்த நர்ஸ்.. அதான் சுமதி.. எப்படி இங்கே?”

     

    கோம்டி புன்னகைத்தாள். “ஸோ. இந்த சுமதியும்  உங்க கேஸ்ல வர சுமதியும் ஒண்ணுதான் இல்லையா?”

     

    “ஆமா..” அவன் தலையசைத்தான். “ஆனா அவள்.. இங்கே.. எப்படி?”

     

    கோம்டி தன் நாற்காலியில் சாய்ந்துகொண்டு விவரித்தாள்.

    “யெஸ்.. சுமதி எங்கிட்டேதான் முதன்முதலா நர்ஸா ஜாயின் ஆயி வேலை செஞ்சா.. ஒரு வருஷம் வரைக்கும் தான் உண்டு தன் வேலை உண்டுன்னு அவ இருந்தா.. சாயங்காலம் நாலு மணிக்கு உள்ள வந்தாள்ன்னா ராத்திரி எட்டு ஒன்பது மணி வரைக்கும் அவளுக்கு இங்கே ட்யூடி. இங்கயேதான் இருப்பா.. வாரத்துக்கு ரெண்டு நாள் லீவு வேணும்னு முதல்லயே சொல்லி வீக் எண்ட்ல லீவுல போயிடுவா.. எல்லாம் நல்லபடியா போயிண்டுதான் இருந்தது.. உங்க பெரியப்பா கண்ல படறவரை.”

     

    கல்யாண் சோகமான முகத்துடன் பார்த்தான். கோம்டி அவனைப் பார்த்துக் கொண்டே பேசினாள். “உங்க பெரியப்பா ஒரு நாள் சாயங்காலம் என்னோட கிலினிக் வாசல்ல எதேச்சையா நிக்கற சுமதியைப் பார்த்துட்டு இங்கே வந்தார். உடனே அவர் வர்றதைப் பார்த்த சுமதி என் ரூமுக்கு இங்கதான் வந்தா. அப்போ இதோ சாந்தியும் கூடவே இருந்தா..  மிஸ்டர் கல்யாண் நீங்க அவ கதையையும் அடுத்து நடந்த நிகழ்ச்சியையும் தெரிஞ்சுக்கணுமே.”

     

    நிகழ்ச்சி நான்கு மாதம் முன்பு நடந்ததற்கு மாறுகிறது. அதே இடம்..கோம்டியின் கிலினிக்.

     

    உள்ளே சாந்தியும்  கோம்டியும் உட்கார்ந்தபோது சுமதி பரபரப்பாக வருகிறாள். அவள் கையில் கைப்பை இருக்கிறது. வார்த்தையில் வேகம் தெரிந்தது. கண்களும் அவள் குரலோடு சேர்ந்து கெஞ்சின.

    “அம்மா.. என்னைப் பார்த்துட்டு உங்க எதிர்வீட்டுக்காரன் வரான்மா.. நான் கிளம்பறேன்மா.. ஆனா அவன் போகணும்.. நான் உங்க வீட்டுக்குள்ளே பின் வழியா போயிடறேன்.. என்னைப் பத்தித் தெரியாதுன்னு சொல்லிடுங்கம்மா.. ப்ளீஸ்..” என்று கை கூப்பிக் கெஞ்சியவள் கடகடவென அந்த அறையின் பின் வாசல் வழியே கோம்டியின் வீட்டுக்குள் ஓடி விடுகிறாள்.

     

    கோம்டிக்கு எதுவும் புரியவில்லை.. அதற்குள் அங்கே கந்தசாமி வருகிறார்.. க்லினிக்கை சுற்று முற்றும் பார்க்கிறார். கோம்டியின் அறைக்குள் வருகிறார்.  அங்கும் சுற்றுமுற்றும் பார்க்கிறார். கோம்டியைப் பார்க்கிறார்.

     

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 24

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 22 காரைக்கால் அம்மையார்

     

    நம்பியாரூரர் தம் திருத்தொண்டத்தொகையில், ‘பெருமிழலைக் குறும்பர்க்கும், பேயார்க்கும் அடியேன்’ என்று குறிப்பிடுகிறார். நம்பியாரூரர் காரைக்கால் அம்மையாரை பேயார்க்கும் அடியேன் என்று சொல்வதன் காரணம் என்ன என்று அறிய வேண்டுமானால் அம்மையாரின் வரலாற்றை முழுமையாக அறிய வேண்டும். நம்பியாரூரருக்குப் பின் வந்த சேக்கிழார் பெருமான் காரைக்கால் அம்மையாரின் சுவையான வரலாற்றை சொற்சுவை, பொருட்சுவை, கவிதை நயம் என அனைத்து வகையிலும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் விரித்து விருந்து படைத்துள்ளார். காரைக்காலில் தோன்றிய அம்மையார் மகப்பேறு பெற்று தாய்மை அடையாமலே அனைவராலும் அம்மையே என்று அழைக்கப் பெற்றவர்.

    நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு

    மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ்

    செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன்

    கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே.

    இறைவன் திருவருளை தமிழகமெங்கும் பரப்புவதற்கு காரைக்கால் அம்மையார் முன்னோடியாக விளங்கியவர். தற்போது புதுவை மாநிலத்தில் இருக்கும் சோழ மண்டலத்தின் துறைமுகப்பட்டினமான காரைக்கால் எனும் ஊரில், மிகச்சிறந்த வணிகர் குடியில், வணிகர் குலத்தலைவரான தனதத்தன் என்பவரின் அருமை மகளாகப் பிறந்தவர் இவர். புனிதவதி என்பது இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்.

    தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க

        தனதத்தன் றரும்புனித வதியார் மாவின்

    செங்கனிக டிருவருளா லழைப்பக் கண்டு

        திகழ்கணவ னதிசயித்துத் தேச நீங்க

    வங்கவுட லிழந்துமுடி நடையா லேறி

        யம்மையே யெனநாத னப்பா வென்று

    பொங்குவட கயிலைபணிந் தாலங் காட்டிற்

        புனிதனட மனவரதம் போற்றி னாரே.

    புனிதவதியார் சிறுமணல் வீடு கட்டி விளையாடும் குழந்தைப் பருவத்திலேயே இறைவன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டும், அடியவரை அடிபணிந்து வணங்கியும் இருப்பாராம். அம்மையார் தமது ‘அற்புதத் திருவந்தாதி’ எனும் அரிய நூலில்,

    பிறந்த மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்

    சிறந்த நின் சேவடியே சேர்ந்தேன்நிறந்திகழும்

    மைஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

    எஞ்ஞான்று தீர்ப்பது இடர்

    என்று குறிப்பிடுகிறார். மங்கைப் பருவம் அடையும்போது பேரழகுப் பெட்டகமாகத் திகழ்ந்த புனிதவதியார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாகப்பட்டினத்தில் வணிகர் குடியில் வாழ்ந்த நிதிபதி என்பவருக்கு பரமதத்தன் என்ற மகன் இருந்தான். இவனுக்கு புனிதவதியாரை பெண் கேட்டு வந்தனர். தனதத்தரும் இதற்கு இசைவளிக்க திருமணமும் உறுதியானது. செல்வச் செழிப்பு மிக்க தனதத்தனுக்கு ஒரே பெண் குழந்தை. வாழப்போகும் ஊர் மிக அருகில் இருந்தும், அருமை மகளைப் பிரிய மனமில்லை தந்தையாருக்கு. ஆனாலும் மகளை வீட்டோடு வைத்திருப்பது மரபன்று என்பதால் தனதத்தர் தம் வீட்டின் அருகிலேயே ஒரு தனி வீடு அமைத்தார்.  திருமணம் முடிந்த பின்பு பரமதத்தன் நாகப்பட்டினத்தினை விட்டு காரைக்காலுக்கே வந்து அந்த வீட்டில் புனிதவதியுடன் சேர்ந்து வாழ்ந்தான். புனிதவதியாரும், பரமதத்தனும் இல்லறத்தை இனிது நடத்தினர். அம்மையார் வாழ்ந்த அந்த வீடே தற்போது காரைக்காலில் உள்ள அம்மையார் திருக்கோயிலாகும். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்கு வரும் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன்னும், மணியும் புத்தாடையும் அளித்து வந்தார்.

    இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனைக் காண வந்த வணிகர் ஒருவர் அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார். பரமதத்தன் அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான். மனைவியார் அவைகளை வாங்கி வைத்த பின்பு, சிவனடியார் ஒருவர் அந்த மாங்கனிக்காகவே வந்தவர்போல் பசியினால் வருந்திய நிலையில் அவர் வீட்டிற்குச் சென்றார். புனிதவதியார் அவரை வரவேற்று அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்தார். ஆனால் அந்நேரத்தில் கறியமுது குழம்பு தயாராகவில்லை. சிவனும் சிவனடியாரும் வேறு அல்ல என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் தயிர் சோறுடன் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, மகிழ்ந்து புனிதவதியாரை வாழ்த்திச் சென்றார். அங்குதான் இறைவனின் திருவிளையாடல் ஆரம்பித்துவிட்டது.

    மதிய உணவிற்காக கடையிலிருந்து வீட்டிற்கு வந்த கணவருக்காக புனிதவதியார் உணவு படைத்து, காய்கறிகளுடன் கணவன் கொடுத்தனுப்பிய மாங்கனியையும் வைத்துப் பரிமாறினார். உணவோடு மாம்பழத்தை உண்ட பரமதத்தன் அதன் சுவையில் மயங்கியவன் தான் அனுப்பிய மற்றொரு மாங்கனியையும் எடுத்து வரும்படி கேட்கிறான். அம்மையார் பிரிதொரு கனியை அடியவருக்கு அளித்துவிட்ட நிலையில் கணவன் ஆசையோடு கேட்கும்போது தர இயலாத நிலை அவருடைய தாய்மை உணர்வு வேதனை கொள்ளச் செய்தது. இல்லை என்று சொன்னால் அவன் மனம் ஏமாற்றம் அடையுமே, என்ன செய்யலாம் என்ற தடுமாற்றத்துடன் அறைக்குள் சென்றவர், இறைவனை நோக்கி மனம் உருகி கண்ணீர் விட்டு அழுகிறார். அம்மையின் கண்ணீரைக் கண்ட எம்பெருமான் அம்மையாரின் கரத்தில் ஒரு அதிமதுரக் கனியை அருட்கனியாக அருளினார். அவரும் அக்கனியை எடுத்துச் சென்று மகிழ்வுடன் கணவனுக்குக் கொடுத்தார். அதனை வாங்கிச் சுவைத்த கணவனோ அதன் தேவாமிர்தச் சுவையில் மயங்கி, மூவுலகிலும் கிடைத்தற்கரிய இத்தகைய அற்புதக் கனி எப்படிக் கிடைத்தது, இது நான் அனுப்பிய கனியாக இருக்க வாய்ப்பே இல்லை. அமுதத்தை விட சுவை மிகுந்த இக்கனி உனக்கு எப்படி கிடைத்தது என்று அழுத்தமாகக் கேட்டான். கணவனிடம் உண்மையை மறைப்பது பெரும் பாவம் என்ற கொள்கையுடைய புனிதவதியார் இறையருளால் பெற்ற கனியே அது என்ற உண்மையைச் சொன்னால் கணவன் நம்புவானோ, மாட்டானோ என்ற தயக்கம் ஏற்பட்டாலும் ஈசனருளால் கிடைத்த கனி என்று கூறினார். ஆனால் அம்மையாரின் பெருமையை சற்றும் உணராத பரமதத்தனோ, ஈசனருளால் கிடைத்த கனி என்றால் இதே போன்று மற்றுமொரு கனியை வரவழைத்துக் கொடு பார்க்கலாம் என்றான்.

    புனிதவதியார் கணவனிடம் தான் உரைத்தது பொய்யாகி விடுமோ என்று வருந்தி எம்பெருமானிடம் கண்ணீர் மல்க மீண்டும் ஒரு கனி அருளும்படி வேண்டி நின்றார். அப்போது அம்மையாரின் கரங்களில் மீண்டுமொரு கனி வந்து விழுந்தது. ஆனால் ஐயத்தின் பிடியில் சிக்கிக் கிடந்த கணவனின் கரங்களுக்குச் சென்ற அந்த மாங்கனி அடுத்த சில நொடிகளில் மாயமாய் மறைந்தது. அதிர்ச்சியடைந்த பரமதத்தனோ இப்புனிதவதி சாதாரண பெண் அல்ல. தெய்வப் பெண்ணான இவருடன் வாழ்வது தகாத காரியம் என முடிவு செய்தான்.

    அதற்கேற்ப சில நாட்கள் சென்றபின் பொருள் ஈட்டுவதற்காக வெளிநாடு செல்லப்போவதாகக் கூறிச் செல்கிறான். ஆனால் பெரும் பொருள் ஈட்டித் திரும்பியவன் மனைவி இருக்கும் இடத்திற்கு வராமல் பாண்டி நாட்டின் துறைமுகப் பட்டினமான தூத்துக்குடி சென்று அங்கு வேறு ஒரு பெண்ணை மணமுடித்து மகவு ஒன்றையும் பெற்றிருந்தான். தனதத்தன் உறவினர் மூலம் பரமதத்தன் தூத்துக்குடியில் இருப்பதை அறிந்து புனிதவதியாரை அவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். உறவினர்களுடன் சென்ற புனிதவதியாரும் ஒரு பொது இடத்தில் இருந்துகொண்டு பரமதத்தனுக்கு செய்தி அனுப்பினர். ஆனால் பரமதத்தனோ புது மனைவி, குழந்தையோடு வந்து நின்றான். வந்தவன் புதிய குடும்பத்துடன் புனிதவதியாரின் காலில் விழுந்து வணங்கினான். இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில், இதென்ன கூற்று, கட்டிய மனைவியின் காலில் விழுவதா, எங்களுக்கே அவமானமாக இருக்கிறது என்றனர். அதற்கு பரமதத்தனோ  புனிதவதியாரைப் பார்த்து, இவர் பெண் அல்லள், பெருந்தெய்வம் என்பதாலேயே வணங்குகிறேன். அதுமட்டுமல்ல என் குழந்தைக்கும் அம்மையாரின் பெயரான புனிதவதி என்றே சூட்டியிருக்கிறேன் என்றான். அனைவரும் வணங்க வேண்டியவர் இவர் என்றும் உறுதியாகக் கூறினான். இதனைக் கேட்ட புனிதவதியாரும்,

    ஈங்கு இவன் குறித்த கொள்கை

      இது இனி இவனுக்காகத்

    தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி

      கழித்து இங்கு உன் பால்

    ஆங்கு நின் தாள்கள் போற்றும்

      பேய் வடிவு அடியேனுக்குப்

    பாங்குற வேண்டும் என்று பரமர்

      தாள் பரவி நின்றார்.

    அதுநாள் வரை தன் கணவனை தெய்வமாகப் போற்றி வந்த புனிதவதியார் அப்போது கணவன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, அடுத்த நொடியே புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, “சுவாமி! இவனுடைய கொள்கை இதுவாயின், இனி இவன் பொருட்டுத் தாங்கிய இந்த அழகு தசைப் பொதியை நீக்கிச் சொல்லும் மனமும் கடந்து திகழும் ஐயன் திருவடிகளைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தார். அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினால், மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். தன் பேய் வடிவு பற்றி அம்மையாரே தம் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்ற நூலில்,

    கொங்கை திரங்கி நரம்பெழுந்து

      குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்

    பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர்

      நீள்கணைக் காலோர்பெண்பேய்

    தங்கி அலறி உலறுகாட்டில்

      தாழ்சடை எட்டுத் திசையும்வீசி

    அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்

      அப்பன் இடந்திரு ஆலங்காடே. 

    என்று பாடுகின்றார்.

    எம்பெருமான் “தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு” என்று அருளிச்செய்தார். பேய்வடிவு பெற்ற அம்மையார் கயிலை சென்று கயிலைநாதனை வழிபட தலையினாலே நடந்து சென்றார். இறைவன் புனிதவதியாரை அம்மையே என்று அழைக்க அம்மையாரும் அப்பா என்று அவர் அடியில் வீழ்ந்து கயிலைநாதனிடம் வேண்டினார்.

    இறவாத இன்ப அன்பு வேண்டிப்

      பின் வேண்டு கின்றார்

    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு

      உண்டேல் உன்னை என்றும்

    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்

      நான் மகிழ்ந்து பாடி

    அறவா நீ ஆடும் போது உன்

      அடியின் கீழ் இருக்க என்றார். 

    காரைக்கால் அம்மையார் அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடினார்.

    இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
    படரும் நெறி பணியாரேனும் சுடர் உருவில்
    என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
    அன்பறா தென்நெஞ் சவர்க்கு    

    என்று தம் நெஞ்சத்தில் சோதிவடிவாய் நீங்காதிருக்கும் அவர்பால் என் அன்பு ஒருபோதும் குறையாது, மாறவும் மாறாது என்ற நெஞ்சுறுதியுடன் நின்றார் காரைக்கால் அம்மையார்.

    காரைக்காலம்மையார் புராணம் சொல்லும் கருத்து

    சமயம் என்பது அறிவைச் சார்ந்தது அல்ல, இதயத்தோடு தொடர்புடையது என்பதை முதன் முதலில் உலகுக்கு எடுத்துக் கூறியவர் அம்மையார். வேள்விகள், விரதங்கள், கடுமையான தத்துவ விசாரணைகள் போன்ற எதுவும் தேவை இல்லை. பெருமானிடம் உண்மையான அன்பு செலுத்துவது மட்டும் போதும், வேண்டுவது அனைத்தையும் தருவான் என்ற கருத்தை உரக்கச் சொன்னவர் அம்மையார்.

    ஓர் அருட்கனி புனிதவதியாரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாயம் மகப்பேறே பெறாத அவரை காரைக்கால் அம்மையாராக மாற்றிவிட்டது. ஆம். அம்மையின் கரத்தில் கிடைத்த அருட்கனியால் பேய் ஆனார். பின் தெய்வமானவர் எம்பெருமான் நடம் பயில அவன் திருவடிக்கீழ் இருந்து பாடும் பேறு பெற்றார். சிவபெருமான் “அம்மையே” என்று அழைத்தருளினமையானும், இவர் திருத்தலையாலே நடந்தருளிய திருவாலங்காட்டை மிதித்தற்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அஞ்சி யருளினமையானும் அறிய முடிகின்றது. காரைக்கால் அம்மையாரைத் தம் குருநாதர் என்கிறார் இவர். அம்மையார் தோன்றிய முந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னே தோன்றியவரான ஞானசம்பந்தப் பெருமான் இறைவன் திருவருள் தாங்கி அந்தணர் குலத்திலே அவதரித்தவர். மூவாண்டிலே உமையம்பிகையின் சிவஞான இன்னமுது உண்ணடிசில் என ஊட்டப்பெற்றவர்.

    வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
    மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
    மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
    ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே       

    என்று குலசேகர ஆழ்வார் வித்துவக் கோட்டுப் பெருமானிடம் கூறுவதும் ஈண்டு நோக்கத்தக்கது.

    இறைவன் உமையவளிடம், எல்லா உலகங்களையும், உயிர்களையும் பேணிக் காக்கின்ற தம்மைப் பேணுவது தம் தாயாகிய இவ்வம்மையே என்கிறார். எம்பெருமான் அம்மையே என உய்ய அழைத்ததால்தான் இன்றும் சைவ உலகிலும், புதுவை மாநிலத்திலும் அம்மையார் என்றால் அது காரைக்கால் அம்மையாரையேக் குறிக்கும். உலகில் அனைவரும் தம்மிடம் அழகைக் கேட்க இவ்வம்மையார் மட்டும் பேய் வடிவை வேண்டிப் பெற்றாள் என்றார். இறைவனுக்கோ அவன் அடியாருக்கோ நாம் ஒன்று செய்தால் அது பன்மடங்காகத் திரும்பி நம்மை வந்தடையும் என்ற தத்துவத்தை சேக்கிழார் பெருமான் அருமையாக எடுத்துரைக்கின்றார். சமயக்குரவர்களான சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் ஆகியோருக்கு முன் பதிகம் என்ற வகையில் முதலில் அம்மையார் பாடியதால் அது மூத்த திருப்பதிகம் எனப்படுகிறது. ஆலயங்களில் இருபுறமும் மற்ற நாயன்மார்கள் நின்று கொண்டிருக்க, காரைக்கால் அம்மையார் மட்டும் அமரும் உரிமை பெற்றுத் தனிச் சிறப்புக்கு உரியவராகக் கருதப்படுகிறார். காரணம் இவர் தோன்றியிராவிடில் சைவம் இல்லை, மற்ற சிவனடியார்களும் இல்லை என்பதனால் தான். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப்பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார் என்றால் அது மிகையில்லை. அப்பர் முதலான சமயக்குரவர்கள் அம்மையார் வகுத்துக் கொடுத்த பாதையில்தான் சென்றுள்ளார்கள். தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் அம்மையார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறைவனை வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும், வெவ்வேறு வகையில் வணங்கினாலும் முழுமுதற் பொருள் ஒன்றே என்ற கருத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் தெரிவித்தவர் அம்மையார் என்பதே சிறப்பு. அம்மையார் வணிகர் குலத்தில் பிறந்திருந்தாலும் வேதத்தின் மெய்ப்பொருளை முழுமையாக உணர்ந்து, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவிலிகளை நோக்கி, எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் என்று கூறி, தெய்வங்களுக்குள்ளே வேறுபாடுகள் இல்லை, வழிபடு முறைகளிலும் உயர்வு தாழ்வு இல்லை, முழுமுதற் கடவுள் ஒன்றே என்ற வேத சாரத்தைத் தன் எளிய தமிழில் அறிவுறுத்தியவர் அம்மையார். சைவர்கள் திருமாலையும் வணங்குகிறார்கள். தொல் பழம் தெய்வங்களையும் வணங்குகிறார்கள் என்றால் இந்தப் பரந்த மனப்பான்மை வருவதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார் என்பதையும் மறுக்க இயலாது. சைவம் இன்று உலகளாவப் பரவி நிற்பதற்கு முதல் காரணமாக இருப்பவர் அம்மையார் என்பதும் மறுக்கவியலாது!

     

    திருச்சிற்றம்பலம்

    Share
  • அச்சகத்திலிருந்து ஆட்சிமன்றம்வரை உயர்ந்தவர்!

    அச்சகத்திலிருந்து ஆட்சிமன்றம்வரை உயர்ந்தவர்!

    -மேகலா இராமமூர்த்தி

    எழுத்தாளர், சிந்தனையாளர், அறிவியலாளர், அரசியலறிஞர், சுதந்திர அமெரிக்காவை வடிமைத்த தந்தையருள் ஒருவர் எனப் பன்முகத் திறனாளராக (polymath) திகழ்ந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin).

    1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்திலுள்ள பாஸ்டனில் (Boston, Massachusetts), 17 பிள்ளைகள் கொண்ட எளிய குடும்பத்தில் 15ஆவதாகப் பிறந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின். பள்ளிக்கு அனுப்பும் வசதியற்ற குடும்பச்சூழல் காரணமாக அவருக்குக் கிடைத்த முறையான கல்வி என்பது பத்து வயதுவரை மட்டுமே.

    பெஞ்சமின் பிராங்க்ளினின் அண்ணன்களுள் ஒருவரான ஜேம்ஸ் பிராங்க்ளின் (James Franklin) அச்சகம் வைத்து ’தி நியூ இங்கிலாந்து கூரண்ட்’ (The New-England Courant) எனும் நாளிதழை வெளியிட்டுவந்தார். அங்கே தமது 12ஆவது வயதில் வேலைக்குச் சேர்ந்து அச்சுக்கோத்தல், பிழைதிருத்தல், பத்திகள், கட்டுரைகள் எழுதுதல் முதலியவற்றைக் கற்றுக்கொண்டார் பெஞ்சமின் பிராங்க்ளின். அவரைப் பொறுத்தவரை அந்த அச்சகமே அவருக்குத் தொடக்க காலத்தில் கல்வி கற்பித்த பல்கலைக்கழகமாயிருந்தது.

    கட்டுரைகள் எழுதக் கற்றுக்கொண்ட பெஞ்சமின் பிராங்க்ளின், அத்தோடு நிற்கவில்லை. ’சைலன்ஸ் டோகுட்’ (Silence Dogood) எனும் புனைபெயரில் தாமே இரகசியமாகக் கட்டுரைகள் எழுதி அண்ணனின் நாளிதழில் வெளியிட்டுவந்தார். அவரின் கட்டுரைகள் பரவலாக வாசகர்களின் பாராட்டுக்களைப் பெறலாயின. தம்பி புனைபெயரில் ஆக்கங்கள் வெளியிடுவதை ஒருநாள் அறிந்துகொண்டுவிட்டார் அண்ணன் ஜேம்ஸ் பிராங்க்ளின்.

    தம்பியைப் பாராட்டி, எழுத ஊக்குவித்தாரா என்றால் இல்லை! ”தம்மிடம் அச்சுக்கோக்கக் கற்றுக்கொண்ட சிறுவன் எழுத்தாளராகிப் பொதுமக்களின் பாராட்டைப் பெறுவதா?” எனும் அழுக்காறு அவருள் பொங்கியெழுந்தது. கட்டுரைகள் எழுதி வெளியிடக்கூடாது என்று பெஞ்சமின் பிராங்க்ளினுக்குத் தடைவிதித்தார். அதனால் வருத்தமுற்ற பெஞ்சமின், தம்முடைய 17ஆவது வயதில் பாஸ்டன் நகரத்தைவிட்டே வெளியேறினார். பதின்ம வயதில் அவரெடுத்த மிகத் துணிச்சலான முடிவு அது என்றே கூறவேண்டும். சுதந்திரமாகத் தாம் விரும்பியதைச் செய்வதற்கு அவருக்கு அப்போது வேறு வழியேதும் இருக்கவில்லை. எனவே தம்மிடமிருந்த சொற்பப் பணத்துடன் பாஸ்டனிலிருந்து வெளியேறி இலண்டனுக்குச் சென்று அங்குக் கிட்டத்தட்ட இரண்டாண்டுக் காலம் தங்கி அச்சகங்களில் பணியாற்றியும், அப்பணிசார்ந்த திறன்களை மேம்படுத்திக்கொண்டும் பென்சில்வேனியா மாகாணத்திலிருந்த பிலடெல்பியாவுக்குத் திரும்பினார்.

    அச்சுத்துறையில் தமக்கிருந்த அனுபவம் காரணமாக விரைவிலேயே ஓர் அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். முதலாளியிடம் நல்ல பெயர் வாங்குவதே அப்போது அவரின் முதன்மையான நோக்கமாக இருந்தமையால் தம் எழுத்தாற்றலை வெளிப்படுத்த அவர் முனையவில்லை; கடுமையாய் உழைத்தார்; கையில் ஓரளவுக்குக் காசு சேர்ந்தபின் 1728இல் ஓர் அச்சகத்தை விலைக்கு வாங்கினார். விற்பனையில் தடுமாறிக்கொண்டிருந்த ’பென்சில்வேனியா கெஜட்’ (Pennsylvania Gazette) எனும் நாளிதழையும் 1729இல் வாங்கினார். அதில் தாமே பல கட்டுரைகளை, பத்திகளைப் பல்வேறு புனைபெயர்களில் எழுதி வெளியிடவே அந்நாளிதழின் விற்பனை சூடுபிடித்தது.

    ’ரிச்சர்டு சாண்டர்ஸ்’ (Richard Saunders) எனும் புனைபெயரில் பெஞ்சமின் பிராங்க்ளின் ஆண்டு வெளியீடாகக் கொண்டுவந்த ’Poor Richard’s Almanack’ எனும் வானியல் குறிப்புகள், பொன்மொழிகள், அறிவுரைகள் அடங்கிய பதிப்பு அக்காலத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று மிக அதிக அளவில் விற்றுத் தீர்ந்தது. இவ்வாறு 26 வெளியீடுகள் (1732–1758) வந்தன. இப்பதிப்புகளால் பெஞ்சமினின் பொருளாதார நிலை உயர்ந்தது. தமக்குக் கிடைத்த வருவாயைப் புதிய அச்சு எந்திரங்கள் வாங்குவது, அறிவியல் ஆய்வுகளுக்கான கருவிகள் வாங்குவது போன்ற பணிகளுக்குச் செலவிட்டார் அவர்.

    அறிவியல் ஆய்வுகளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

    குழந்தைப் பருவம் முதலே சுற்றுச்சூழலைக் கூர்மையாக அவதானித்தல், இயற்கைத் தத்துவம், மின்சாரம், எந்திரவியல் சார்ந்த நூல்களை ஆர்வத்துடன் கற்றல் போன்றவை பெஞ்சமின் பிராங்க்ளினின் இயல்புகளாக இருந்தன. இவற்றால் அவரின் அறிவியல் ஆய்வு மனநிலை தூண்டப்பட்டாலும் அப்போதைய வாழ்க்கைச் சூழலும், பொருளாதார நெருக்கடிகளும் அவரை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட அனுமதிக்கவில்லை. ஆதலால் தேர்ந்த எழுத்தாளராகித் தம் படைப்புகள் நன்கு விற்பனையாகவே அவ்வருமானத்தைக் கொண்டு அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டார்.

    வீட்டை வெப்பமாக்குவதற்கு உதவும் பிராங்க்ளின் அடுப்பு (The Franklin Stove – 1740s), இடிதாங்கி (Lightning Rod-1752), இரட்டைக் குவியக் கண்ணாடி (Bifocal Glasses – 1784) போன்றவை அவரின் அறிவியல் கண்டுபிடிப்புகளுள் சில. இவ்வாறு அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி உலகப் புகழ்பெற்றார் பெஞ்சமின் பிராங்க்ளின். தம் அறிவுசார் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் பயனளிக்கவேண்டும் எனும் உயர்ந்த நோக்கில் அவை எவற்றுக்குமே அவர் காப்புரிமை (patent) பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா, இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த காலமது. 1730களில் மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்தார் பெஞ்சமின் பிராங்க்ளின். 1751இல் பென்சில்வேனியா சட்டமன்றத்தின் உறுப்பினராக அவர் தெரிவுசெய்யப்பட்டார். தற்சார்புள்ள காலனிய ஆட்சியை உருவாக்குதல், இங்கிலாந்து அமெரிக்காவை நியாயமான வகையில் நடத்துவதற்கான செயல்களில் ஈடுபடுதல், காலனித்துவ நலன்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் வகையில், காலனித்துவ முகவராக (a colonial agent) 1757 முதல் 1775 வரை, அவர் இலண்டனில் வசித்தார்.

    ஆனால் இங்கிலாந்து தொடர்ந்து அமெரிக்கக் காலனிகள்மீது கடுமையாக வரி விதிப்பது, காலனிகளில் வசித்த மக்களின் குறைகளைப் புறக்கணிப்பது, கடுமையான தண்டனைகளை வழங்குவது போன்ற முறையற்ற அடக்குமுறைகளில் ஈடுபடவே, காலனிகள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அவை இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெறவேண்டும் எனும் முடிவுக்கு வந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

    1775இல் இங்கிலாந்துக்கும் இங்கிலாந்தின் செயற்பாடுகளால் அதிருப்தியுற்ற அமெரிக்கக் காலனிகளுக்குமிடையே அமெரிக்கப் புரட்சிப் போர் (American Revolutionary War) தொடங்கியது.

    1775இல் பெஞ்சமின் பிராங்க்ளினும் அமெரிக்கா திரும்பிவிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான சுதந்திரப் பிரகடனத்தை (Declaration of Independence) ஜூன், 1776இல் அமெரிக்கா உருவாக்கத் தொடங்கியது. அந்தப் பிரகடனத்தை உருவாக்க நியமிக்கப்பட்டிருந்த தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson), ஜான் ஆடம்ஸ் (John Adams), ரோஜர் ஷெர்மன் (Roger Sherman), இராபர்ட் லிவிங்ஸ்டன் (Robert R. Livingston) ஆகிய நால்வரோடு இணைந்து பெஞ்சமின் பிராங்க்ளினும் (Benjamin Franklin) பணியாற்றினார். இவர்களை ஐவர் குழு (the Committee of Five) என்பர். சுதந்திரப் பிரகடனத்தின் பெரும்பான்மையான பகுதிகளை தாமஸ் ஜெபர்சன் எழுத, அவற்றில் திருத்தங்கள் செய்வது, தெளிவுக்காகச் சிலவற்றைச் சேர்ப்பது போன்றவற்றை பிராங்க்ளின் மேற்கொண்டார்.

    1776, ஜூலை 4இல் அமெரிக்கச் சுதந்திரத்திற்கான பிரகடனம் முறையாக காண்டினெண்டல் காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெஞ்சமின் பிராங்க்ளின் பிரான்சுக்கான அமெரிக்கத் தூதராக அதே ஆண்டு திசம்பரில் நியமிக்கப்பட்டார். பிரான்சுடன் நல்லுறவைப் பேணி அந்நாட்டிடமிருந்து அமெரிக்கப் புரட்சிப் போருக்கான ஆதரவையும், படையுதவி, பொருளாதார உதவி, போர்த்தளவாடங்கள் முதலியவற்றையும் பெற்றார். பிப்ரவரி 6, 1778இல் அமெரிக்கா பிரான்சுடனான கூட்டணி ஒப்பந்தமும் (The Treaty of Alliance with France) செய்துகொண்டது.

    அமெரிக்காவுடன் பிரான்சும் கைகோத்து இங்கிலாந்துக்கு எதிரான போரில் இறங்கியதால் அமெரிக்கா இங்கிலாந்தை வீழ்த்துவது எளிதானது. 1783இல் அமெரிக்காவைச் சுதந்திர நாடாக இங்கிலாந்து ஏற்றுக்கொண்டது.

    இவ்வாறு அமெரிக்கா சுதந்திர நாடாவதற்கு பெஞ்சமின் பிராங்க்ளின் இராஜதந்திரத்தோடு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அதனைத் தொடர்ந்து 1787இல் அமெரிக்காவுக்கான அரசியலமைப்பு (constitution), ஜேம்ஸ் மேடிசனின் (James Madison) முதன்மையான பங்களிப்பில் வடிவமைக்கப்பட்டது. ஜேம்ஸ் மேடிசனை ’அமெரிக்க அரசியலமைப்பின் தந்தை’ என்பர்.

    பிராங்க்ளின் உள்ளிட்ட 39 பிரதிநிதிகள் செப்டம்பர் 17, 1787 அன்று அதில் கையெழுத்திட்டுப் புதிய தேசத்தின் அடித்தளத்தை முறையாக நிறுவினர்.

    அமெரிக்கா இங்கிலாந்துக்கு எதிரான புரட்சிப்போரில் வெற்றிபெற்றுச் சுதந்திர நாடாவதற்கும், அதன் அரசியலமைப்பு உருவாக்கத்திற்கும் பெரும் பங்களிப்புச் செய்தமையால் அமெரிக்க உருவாக்கத் தந்தையருள் ஒருவராக (One of the Founding Fathers of America) போற்றப்படுகின்றார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

    1749இல் அவர் உருவாக்கிய பிலடெல்பியா கலைக்கழகம் (Academy of Philadelphia) என்று பென்சில்வேனியாப் பல்கலைக்கழகமாக (University of Pennsylvania) உயர்ந்து நிற்கின்றது. அமெரிக்காவின் முதல் பொதுநூலகத்தை, சிறுதொகையைச் சந்தாவாகக் கட்டி மக்கள் பயன்பெறும் வகையில், 1731இல் பிலடெல்பியாவில் அவர் நிறுவினார் (America’s first subscription library).

    கடின உழைப்பு, விடாமுயற்சி, தடைகளுக்கு அஞ்சாத் துணிவு, தொடர் கற்றலில் ஆர்வம், எழுத்தாற்றல், சமூக முன்னேற்றத்தில் நாட்டம், நாட்டுப்பற்று போன்ற திறன்கள் ஒருவரை எத்தகு மாமனிதராக உயர்த்தும் என்பதற்கு பெஞ்சமின் பிராங்க்ளினின் வாழ்க்கை வரலாறு தெளிவான சான்றாகும்.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. britannica.com/biography/Benjamin‑Franklin

    2. https://www.bbc.co.uk/history/historic_figures/franklin_benjamin.shtml

    3. https://en.wikipedia.org/wiki/Benjamin_Franklin

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 23

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 21. பெருமிழலைக் குறும்ப நாயனார்

    கொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக்

        கோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார்சீ

    ரண்டர்பிரா னடியவருக் கடியா ராகு

        மாதரவா லணுக்கவன் றொண்டர்க் காளாய்

    மண்டொழுமெண் டருசித்தி வாய்த்து ளார்தாம்

        வன்றொண்டர் வடகயிலை மருவு நாண்மு

    னெண்டிகழு மறைமூல நெறியூ டேகி

        யிலங்கொளிசேர் வடகயிலை யெய்தி னாரே.

    இயற்கை அழகு களிக்கூத்தாடும் திருநகரில் தோன்றிய நாயனார் பெருமான் இவர். தற்போது புதுக்கோட்டை என்று அழைக்கப்படும் நகரின் அண்மையில் அமைந்துள்ள தொன்மையான நாடு மிழலை நாடு. பெருமிழலை என்பது இந்நாட்டின் தலைநகரம். மா, பலா, வாழை, தென்னை, பாக்கு போன்ற வளமான சோலைகள் சூழ்ந்த அழகிய நகரம். இத்தகைய சிறப்பு மிக்க பெருமிழலையில் வாழ்ந்த பெரியவர் மிழலைக் குரும்பனார். குரும்பர் என்ற மரபின் குறுநில மன்னர்கள் அக்காலத்தில் வாழ்ந்திருந்தனர். இவர்கள் வழி வந்தவரே மிழலைக் குரும்பனார். ஊர்ப்பெயரும், நாட்டின் பெயரும் இணைந்து பெருமிழலைக் குரும்பர் என்று இவர் பெயர் வழங்கலாயிற்று.

    சூதம்நெருங்கு குலைத் தெங்கு

     பலவும் பூகஞ்சூழ் புடைத்தாய்

    வீதிதோறும் நீற்றின் ஒளிவிரிய

      மேவி விளங்கு பதி

    நீதிவழுவா நெறியினராய் நிலவும்

      குடியால் நெடு நிலத்து

    மீதுவிளங்கும் தொன்மையது மிழலை

      நாட்டுப் பெரு மிழலை

    சிவனடியார்களுக்குத் தேவையான தொண்டினை அவர்கள் கேட்காமலேயே அவர்தம் குறிப்பறிந்து தொண்டாற்றும் குணம் படைத்தவர் பெருமிழலைக் குரும்ப நாயனார். நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அச்சேவையின் இன்பத்தை தனது முதன்மையான கடமையாகக் கருதி நாடினார்.  நம்பியாரூரர் எனும் பெருமகனாரைத் தம் குருநாதராக ஏற்றிப் போற்றியவர். அவரை கையாற்தொழுது, வாயாற் புகழ்ந்து, கருத்தால் எண்ணி நெகிழ்ந்து வழிபடுபவர். நம்பியாரூரரின் திருநாமத்தை உச்சரித்தவாரே மணிகண்ட சேவடியைச் சேர்ந்து உய்யும் உயரிய நெறியைக் கண்டறிந்தவர். இதன் காரணங்கொண்டே அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டமாசித்திகளும் கைவரப் பெற்றார். சிவபெருமானின் திருநாமம் ஐந்தெழுத்தால் ஆனது போல் நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் ஐந்தெழுத்தால் ஆனது. குருபஞ்சாச்சரம் என்ற திருநாமத்தால் குறிப்பிடுவர். இவ்வரிய அட்டமாசித்திகளை, அப்பூதியடிகள் திருநாவுக்கரசு என்ற குருநாமத்தை எழுதியும், சொல்லியும், இடையறாது தியானித்தும் திருவருளைப் பெற்றார்.

    நாளும் நம்பி ஆரூரர்

      நாமம் நவின்ற நலத்தாலே

    ஆளும் படியால் அணிமாதி

      சித்தியான அணைந்த அதற்பின்

    மூளும் காதலுடன் பெருக

      முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்

    கேளும் பொருளும் உணர்வுமாம்

      பரிசு வாய்ப்பக் கெழுமினார்.

    இவ்வாறு அளவற்ற பக்தியுடன் குரும்ப நாயனார் அடியவர்களுக்குத் தொண்டு செய்தும், குருநாதர் திருவடிகளைத் தொழுதும் நிறைவாக வாழ்ந்துவந்தார். வன்தொண்டர் நம்பியாரூரர் சேரர் தலைநகரான, சேரமான் பெருமாள் நாயனாரால் ஆளப்பட்ட கொடுங்கோளூரை அடைந்தார். திருவஞ்சைக்களத்திலுள்ள இறைவனைத் தொழுது பதிகம் பாடினார். அப்பதிகம் பாடும்வரை தனக்கு நடக்கப்போகும் அற்புத நிகழ்வான திருக்கயிலை வாசம் கிடைக்குமென அறியார் ஆரூரர்.

    அஞ்சைக் களத்து நஞ்சுண்ட

      அமுதைப் பரவி அணைவுறுவார்

    செஞ்சொல் தமிழ் மாலைகள்

      மொழியத்தேவர் பெருமான் அருளாலே

    மஞ்சில் திகழும் வடகயிலைப்

      பொருப்பில் எய்தவரும் வாழ்வு

    நெஞ்சில் தெளியஇங்கு உணர்ந்தார்

      நீடு மிழலைக் குறும்பனார்.

    தம் பதிகத்தின் எட்டாவது பாடலாக,

    வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் 

    விளங்கும் குழைக் காதுடை வேதியனே

    இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத் 

    தலை பத்தொடு தோள் பல இற்று விழக்

    கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் 

    கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று 

    அறுத்தாய் கடலங்கரை மேல்மகோதை 

    அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

    என்ற பாடலைப் பாடியபோது எம்பெருமான் கயிலைமால் வரையிலிருந்து வெள்ளானையை அனுப்பி வைத்தார். அந்த வெள்ளானையின் மீதேறி நம்பியாரூரர் கயிலைமால் வரைக்குச் சென்றார். பெருமிழலைக் குரும்பர் தம் யோகநெறியால் சுந்தரர் மறுநாள் கயிலை செல்வார் என்பதையும் உணர்ந்தார். தம் சீடர் அறிந்த இந்த அரிய செய்தி, சுந்தரர் பெருமானுக்கே தாம் மறுநாள் கயிலை செல்லப் போகிறோம் என்று அறியார். ஆனால் இதையறிந்த பெருமிழலைக் குரும்ப நாயனார் தமது குருவான நம்பிஆரூரர் இல்லாத ஊரில் தமக்கென்ன வேலை, கண்ணின் மணியிழந்து ஒளியின்றி வாழும் சில குருடர்களைப்போல தன்னால் வாழ முடியாது என்று உறுதி பூண்டார். தம் அகக்கண்களை இழந்து இருண்ட உலகில் வாழ முடியாது என்று எண்ணினார்.

    மண்ணில் திகழும் திருநாவலூரில்

      வந்த வன் தொண்டர்

    நண்ணற்கு அரிய திருக்கயிலை

      நாளை எய்தநான் பிரிந்து

    கண்ணில் கரிய மணிகழிய

      வாழ்வார் போலவாழேன் என்று

    எண்ணிச் சிவன்தாள் இன்றேசென்று

      அடைவன் யோகத்தால் என்பார்

    இன்றே சிவன்தாள் சென்றடைவேன் என்று உறுதியாக நின்றார். தம் யோகப்பயிற்சியினால் பிரமநாடி வழி பிராணவாயுவைச் செலுத்தி நல்லறிவு மேற்கொண்டு மதிமண்டலத்தில் செலுத்திப் பிரவணத்தார் திறக்கப்பட கபால நடுவாயிலின் மூலம் முதல்வர் திருப்பாதங்களை அடைந்தார். சிவயோக நெறி நின்ற பெருமிழலைக் குரும்ப நாயனார் கருவி காரணங்களை ஒருமுகப்படுத்தி சுழுமுனை நாடி வழியே பிராணவாயுவைச் செலுத்திப் பிரம்மாந்திரம் வழியே சென்று மேலைப் பெருவழிச் சார்ந்து கபாலத்தினைத் திறந்து ஒளி வடிவாகத் திருக்கயிலையைச் சென்று அடைந்தார்.

    நாலு கரணங்களும் ஒன்றாய்

      நல்ல அறிவுமேல் கொண்டு

    காலும் பிரமநாடி வழிக்கருத்துச்

      செலுத்தக் கபால நடு

    ஏலவே முன்பயின்ற நெறிஎடுத்த

      மறை மூலம் திறப்ப

    மூல முதல்வர் திருப்பாதம்

      அணைவார் கயிலைமுன் அடைந்தார்

     

    பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    குருவே சிவம்!

     

    சிவனே சிவஞானி யாதலாற் சுத்த 

    சிவனே யெனவடி சேரவல் லார்க்கு 

    நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் 

    பவமான தின்றிப் பரலோக மாமே

    தெளிவு குருவின் றிருமேனி காண்ட

    றெளிவு குருவின்றிருவார்த்தை கேட்ட 

    றெளிவு குருவின் றிருநாமஞ் செப்ப

    றெளிவு குருரூபஞ் சிந்தித்த றானே

    எனத் திருமந்திரத்திற் கூறுமாற்றால் அறிகிறோம். பிரபஞ்சப் பேராற்றலின் திருவருளை எளிமையாகப் பெறக்கூடிய சிறப்பான சாதனம் குருவருள். குருவின் திருவருளால் வேண்டும் அனைத்தும் பெறலாம். குரு நேரடியாகத் தோன்றாவிட்டாலும், குருவை மனத்தால் நினைந்து வழிபட்டு பெறவேண்டியவற்றைப் பெறலாம். துரோணரை மானசீகமாகக் குருவாகக் கொண்ட ஏகலைவன் வித்தையில் அர்ச்சுணனைவிட ஆற்றல் மிக்கவனாக விளங்கினான்.

    மின்சார விளக்கு எரிவதற்கும், எரியாமல் இருப்பதற்கும் அமுத்தான் (சுவிட்ச்) அவசியத் தேவையாக உள்ளது. நம் ஆன்மா எனும் விளக்கு இறையருள் எனும் ஒளியைப் பெற குருவருள் எனும் அமுத்தான் அவசியமாகிறது!

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • பல்லழகன் – பகுதி 16

    திவாகர்

     

    கோம்டி கோபமாகச் சொன்னாள். சுந்தர் எழுந்தான்.

    “நான் கல்யாண் என் அண்ணங்கிற ஒரு உரிமைல சொன்னேன். எனக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாம என் மனசுல இருக்கறதை அப்படியே சொல்லிட்டேன். நிஜமாவே என் மன பாரம் இறங்கிடுச்சு இப்போ. நான் ஸ்டேட்மென்ட் இன்னிக்கு ராத்திரிக்குள்ள எழுதறேன். இனிமே என்னால நடந்ததை மறைக்கமுடியாதுதானே.. இப்போ நான் சொன்ன உண்மையை அப்படியே எங்க வேணும்னாலும் சொல்லமுடியும். நான் வரேண்டா கல்யாண்.. நாளைக்கு என் ஸ்டேட்மெண்டோட வரேன். பார்ப்போம் மேடம் கோமதி!”

     

    “நான் கோம்டி!”   என்றாள் அவள் சற்று கோபத்துடன். “இன்னும் ஒரே ஒரு கேள்வி மிஸ்டர் சுந்தர்.. இப்போ மாமாவோட அந்த ஆபிள் மொபைல் யார்கிட்டே இருக்கு.?”

     

    “அது ரொம்ப குழப்பமா இருக்கு மேடம். அதை நான் அப்பறமா மாமா கையிலே பார்க்கவே இல்ல.. நானும் அவரை எத்தனையோ தடவை அதப் பத்தி கேட்கலாம்னு பார்த்தேன். ஆனா மாமா சந்தர்ப்பம் கொடுக்கவே இல்லை.”

     

    “ஓ! ஆச்சரியமா இருக்கே.. அந்த ஃபோனைப் பத்தித் தெரிஞ்சவர் ரெண்டு பேர். ஒருத்தர் உங்க மாமா.. இன்னொண்ணு நீங்க.. ஆனா நீங்க சொன்ன அத்தனை விஷயங்களுக்கு ஆதாரம் அந்த ஃபோன்.. அது வேணுமே. இந்த ப்ரூஃப் இல்லேன்னா மாமா பேருல நீங்க இட்டுக்கட்டின கதையா போயிடும் மிஸ்டர் சுந்தர்.. அந்த ஆபிள் மொபைல் எங்க போச்சுங்கறதைக் கண்டுபிடிக்கணும்.”

     

    அவன் தலையாட்டிக்கொண்டே சென்றுவிட்டான்.

     

    கல்யாண் வெறுப்புடன் சொன்னான்.

    “பாருங்க.. அவனோட மனசு பாரம் இறக்கிட்டானாம். எனக்குத் தலையே வெடிச்சுடும் போல இருக்கு. ”

     

    “முரளியும் சரி, சுந்தரும் சரி, எல்லா விஷயமும் சொன்னாங்க.. ஆனா கொலையைப் பத்தியே சரியாப் பேசலை.. ரெண்டு பேர் மேலயும் தனித்தனியாவே கேஸ் போட்டாக் கூட அவங்க ரெண்டு பேருமே தனித்தனியாவே கொலை பண்ணாங்கன்னு போலீஸால் ப்ரூவ் பண்ணமுடியும். ஆனா இறந்தது ஒத்தர்தானே.. ரொம்ப கன்ஃபூஷன்ல போயிண்டுருக்கே மிஸ்டர் கல்யாண்.”

     

    ‘சரிதான்’ எனச் சொல்லி சிரித்தான் ரவி. “கோம்டி.. நீ ஒண்ணு பண்ணலாம்.. இவங்க ரெண்டுபேருக்குமா டாஸ் போட்டுப் பார்த்துட்டு தலை விழுந்தா அவனே குற்றவாளின்னு சொல்லி ஈஸியா ப்ரூவ் பண்ணிடலாம். இந்த கேஸும் முடிஞ்சாமாதிரிதான்.”

     

    கல்யாண் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தான். அதே சமயம் கோம்டி மொபைலில் நிறைய மெஸேஜ் வரும் சப்தங்கள் கேட்டதால் தன் மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தாள். வந்த மெஸேஜ்களைப் படித்து விட்டு கல்யாணைப் பார்த்தாள்.

     

    “கல்யாண்! இன்னிக்கி லஞ்ச்சுக்கு முன்னாடி நான் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க இன்ஸ்பெக்டர் மோகனோட பேசினேன்..”

     

    போலீஸ் ஸ்டேஷன்.

     

    “சீக்கிரம் இந்தக் கேஸ் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும். நீங்க என்னென்ன கண்டுபிடிச்சிங்க? அந்த சுமதியைப் பாத்தீங்களா? கந்தசாமியோட ஃபோன் ரொம்ப ஓல்ட். அதுல இருக்கற நம்பர்லாம்  நமக்குத் தெரிஞ்சவங்க நம்பர்தான்.. இந்த ஸ்மார்ட் ஃபோன் காலத்துல இப்படியும் ஒரு ஓல்ட் ஃபேஷன் மனுஷனான்னு ஆச்சரியப்பட்டேன். அவர் உலகம் ரொம்ப சிறிசு போல இருக்கு. இந்த ஃபோன் நம்பர்லாம் நமக்கு உபயோகப்படாது. இந்தாங்க சிதம்பரம் ஃபோன் நம்பர். நாங்க இன்னும் பேசல. நாங்க பேசினாலும் சரியா சமாதானம் கிடைக்காது. அந்தம்மா பேரு சூடாமணி. அங்க ரஞ்சிதான்னு யாரும் இல்லே.  நீங்க வேணா பேசிப் பாருங்க..”

     

    “தேங்க்ஸ் சார். நான் பேசறேன். இந்த விவகாரத்துல இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும்னு நான் நம்பறேன். பார்ப்போம்.”

     

    “உங்களுக்கு இதுவரை கிடைச்ச தகவல்ல ஏதேனா லீட் கிடைச்சுதா? இவனாதான் கொலைகாரனா இருக்கலாம்னு சந்தேகப்பட்டா கூட சொல்லுங்க.. நான் அவனை எஸ்கேப் ஆகாம இருக்கறதுக்கு ஒரு போலீஸை அனுப்பிச்சு கண்காணிக்கச் சொல்லிடறேன்..”

     

    “இன்னும் ரெண்டு நாள் போகட்டும் சார்.. நானே கேட்கிறேன். இந்த சூடாமணியும் சரி, வேற யாராக இருந்தாலும் அவங்களை விசாரிக்கறச்சே ஒருவார்த்தை ‘இன்ஸ்பெக்டர் மோகன்’ இந்தக் கேஸ்ல ரொம்ப கவனமா இருக்கார்னு நான் சொல்லலாமா சார்.. போலீஸ்ங்கற ஒரு வார்த்தை அவங்களை பொய்யைக் கம்மியா பேச வைக்கும்.. பொய்யை கம்மியா பேசறச்சே உண்மைங்க கொஞ்சம் ஜாஸ்தி வரும்.. அதனாலதான் கேட்கறேன்”.

     

    “கோமதி..” இன்ஸ்பெக்டர் பேசுமுன் ஞாபகப்படுத்துகிறாள்.

     

    “இல்ல சார்! கோம்டி..”

     

    “கோம்டி! உங்க மேல நம்பிக்கை ஜாஸ்தியா இருக்கு. நீங்க தாராளமா போலீஸ்ங்கிற வார்த்தையையும் இன்ஸ்பெக்டர் மோகன் விசாரிக்கச் சொல்றார்ங்கிற வார்த்தையையும் யூஸ் பண்ணிக்கலாம். ஆனா எனக்கு எல்லாத் தகவல்களையும் அப்படியே சொல்லணும்..”

     

    “நிச்சயமா சார்.. எப்படியானாலும் ஃபைனல் அதாரிடியே நீங்கதானே..?”

     

    “எஸ்.. தேங்க் யூ.!”

     

    மறுபடியும் நிகழ்காலத்துக்கு வருகிறாள் கோம்டி. கல்யாண் வீடு

     

    கல்யாண்! நான் இங்க வரும்போதே சூடாமணிகிட்டே பேசிட்டுதான் வந்தேன். அப்பதான் தெரிஞ்சது.. சுந்தர் அந்தப் பணத்தை அவளுக்குத் தரலேங்கறது.. ஆனா இந்த சூடாமணி திருச்சில குழந்தைங்க ஆசிரமத்தை சூபர்வைசரா பார்த்துட்டு வரச்சே இந்த கந்தசாமி, ஸாரி, உங்க பெரியப்பா அவளோட சினேகிதம் வெச்சிருக்கார். ஆசிரமத்துக்கு நிறைய ஹெல்ப் பண்றவர் போல. சூடாமணியோட பொண்ணு பிரியாவை அவள் இஷ்டத்துக்கு விரோதமா பணிய வெச்சிருக்கார், முரளி சொன்னாப்பல அதே கதையைத்தான் சூடாமணியும் சொன்னாள். ஆனா பிரியா விஷயத்தை விட இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்த சூடாமணியை கன்வின்ஸ் பண்ணி குழந்தைங்க சில பேரை சென்னைல படிக்கவெக்கறேன்னு இங்க பாலபாலிகா ஆசிரமத்துக்கு அனுப்பி வெச்சு படிக்க வெச்சிருக்கார். ஆனா இங்கயும் அந்த ஆசிரமத்துக்கு இவர் டொனேஷங்கிற பேருல கொடுத்து இவரோட காம லீலையை செஞ்சிருக்க வாய்ப்புண்டு.”

     

    “ஆனா சுந்தர்தானே இவர் இங்க வர்றதுக்கு முன்னாடிலேர்ந்து அந்த ஆசிரமத்து விஷயம் இவர் சார்பா பார்த்ததா சொன்னான். இவனுக்கு எவ்வளோ தூரம் சம்பந்தம்னு தெரியலியே கோம்டி!”

     

    ரவி குறுக்கிட்டான். பாலபாலிகா ஆசிரமத்தில் சமீபத்தில் ஒரு பெண் காணாமல் போய்விட்டதாக அந்த மேனேஜர் என்னிடம் சொன்னார். அதன்பின் நான் யார் யார் எப்படி எப்படி அங்கே வருகிறார்கள் யார் உதவி செய்யறாங்க எல்லாம் கேட்கறச்சேதான் இந்த சிதம்பரம் சூடாமணி விஷயம் கிடைச்சுது. இப்போ இந்தம்மா இந்த ஆசிரமத்தோட சம்பந்தம் இல்லேன்னாலும் காணாமப் போன விஜயாவை திருச்சிலேர்ந்து சென்னைக்கு கந்தசாமி, சாரி, கல்யாண் பெரியப்பா வற்புறுத்தி அனுப்பிவெச்சாராம். சூடாமணி இதுக்கு முன்ன திருச்சில ஆசிரமத்துல வேலை பண்றச்சே அங்கிருந்து மேல படிக்க வைக்கிறதுக்காக இந்த பாலபாலிகா ஆசிரமத்திலே ஒரு ஒப்பந்தம் வெச்சிருக்காங்க, அதனால கந்தசாமியும் இங்க நிறைய உதவி பண்ணுவாராம். அப்பப்ப வருவாராம். சுந்தரையும் அழைச்சுண்டுதான் வருவாராம். இதெல்லாம் இந்த பாலபாலிகா ஆசிரமம் மூலமா செரிஞ்சதைத்தான் கோம்டிகிட்டே சொன்னேன்.’

     

    “சுந்தரோட வேலை ஒண்ணும் பெரிசா இங்க இல்லேன்னு நினைக்கிறேன். மனசாட்சிக்குப் பயப்படறவன்னு தெரியுது. ஆனாலும் கொலை நடந்த அன்னிக்கு இவன் சொல்லற விஷயம் கன்வின்ஸிங்கா இல்லே. முரளியைப் போல் இவன் அவராலே ஏதும் பாதிக்கப்படலே என்றாலும் தன்னோட மாமா இப்படிப்பட்டவரான்னு அவனுக்கு அதிர்ச்சி. அதுலயும் திருச்சிலேர்ந்து வந்த ஒரு சிறுமியை ரொம்ப பாசமாப் பார்த்துருக்கான். அவளுக்கு எல்லா உதவியும் செய்திருக்கான். அந்தச் சிறுமியை இவனோட மாமாவே காமலீலைக்கு உபயோகப்படுத்தியது இவனுக்குப் பிடிக்காம போய் இவன் கொலை பண்ணியிருக்க வாய்ப்புண்டு.. சந்தேகம்தான் படலாம். நிரூபிக்க முடியாது.. இப்போ முரளி மேல உள்ள சந்தேகம் இன்னும் அப்படியே இருக்கு. போலீஸ் முரளியையும் ஈஸியா ஃப்ரேம் பண்ணி அரெஸ்ட் பண்ணலாம்.”

    “என் பெரியப்பா கொலைன்னு பார்க்காம, சாதாரண மூணாவது ஆளாப் பார்த்தேன்னா உங்களோட அறிவு பிரமாதமான அறிவு கோம்டி. ஆனா இந்த கொலைச் சம்பவத்தை அப்போது சாயங்காலம்  நடந்த சம்பவத்தை எப்படி இந்த ரெண்டு பேரோடு இணைக்கமுடியும்? எப்படிக் கொலை பண்ணி இருக்காங்கன்னு போலீஸால சொல்லமுடியும்.? இணைப்பு வரல்லியே..”

     

    “நல்ல கேள்வி! இவ்வளோ தூரம் வந்திருக்கோம்.. இன்னும் கொஞ்சதூரம் வந்தோம்னா விடை கிடைக்காம போகாது. ஆனா ஒண்ணு சொல்லலாம் மிஸ்டர் கல்யாண்! எத்தனைதான் உங்க சொந்த பெரியப்பா கொலையாச்சேன்னு நினைச்சாலும் உங்க பரிதாபத்துக்கோ இல்லை பாசத்துக்கோ கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒரு கொடூர ஆத்மா அவர். அதனால உங்க துக்கத்தை விடுங்க.. இந்தக் கேஸுல இன்னும் ரெண்டு மூணு பேரை விசாரிக்கணும். (அப்போது அவள் மொபைலில் ஃபோன் வர எடுக்கிறாள்). அவளே பேசுகிறாள்.

     

    “ஹேய் சாந்தி.. எதிர்வீட்லதான் இருக்கேன்..  நீ எப்போ வரே? ஓ.. வந்துட்டியா.. இரு வரேன்..” என்று சொல்லியவள் கல்யாணிடம் சொல்லிக் கொண்டு கிளம்புகிறாள்.

     

    ரவியோட தங்கை சாந்தி இப்போ வீட்டுக்குதான் வந்திருக்கா.. நான் கிளம்பறேன்..

     

    வீட்டில் காத்திருந்த சாந்தியுடன் அவள் வண்டியில் இருவரும் வெளியே கிளம்புகிறார்கள். உட்கார்ந்துகொண்டே கோம்டி அவளிடம் சொல்கிறாள்.

     

    “சைதாப்பேட்டைல பாலபாலிகா ஆசிரமம் போகணும்.. இதோ இந்த அட்ரஸ்’டி..”

     

    பாலபாலிகா ஆசிரமத்தில் வண்டியை நிறுத்த இருவரும் உள்ளே நுழைகிறார்கள். அங்கு ஒரு வயதானவர் இருக்கிறார். அவரிடம் பேசுகிறார்கள்.

     

    “நாங்க போலீஸ் டிபார்ட்மென்ட்லேர்ந்து வரோம். உங்கள்ட்ட சில கேள்விகள் கேட்கணும், அதுவும் கந்தசாமி விஷயமாதான் பேச வந்தோம். நீங்க பெரியவர். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பீங்கன்னு தெரியும். இந்த மாதிரி பாலபாலிகா ஆசிரமம் இலவசமா நடத்தறதே  இந்த காலத்துல ரொம்ப கஷ்டம்தான். ஆனா நீங்க சக்ஸஸ்ஃபுல்லா நடத்தறது ரொம்ப சந்தோஷம்.”

     

    “உட்காருங்கம்மா.. நேத்து கூட ஒருத்தர் இப்படித்தான் வந்தார்.. ஆனா கடைசிவரைக்கும் போலீஸ்னு ஒரு வார்த்தை சொல்லலே.. நீங்க வந்திருக்கீங்க..எங்க ஆசிரமத்துக்கு ரொம்ப உதவி பண்ணினவர் கந்தசாமி.. ரொம்ப வருஷமா அவர் உதவி பண்ணிண்டு வரார். அவரோட ஏஜண்ட் மூலமா முதல்ல உதவி பண்ணார். இப்ப மூணு வருஷமா அவரே சென்னை வந்துட்டார்.. அப்பப்ப வருவார். பணம் கொடுப்பார்.. நல்ல மனுஷனை யாரோ சுட்டுட்டாங்க.. அதுதான் வருத்தமா இருக்கு.”

     

    “ஏஜண்ட்ன்னு சொன்னீங்களே.. அவர் பேரு சுந்தர் இல்லையா?”

     

    “ஆமாங்க.. அவரு ஆறேழு வருஷமா இங்க ஆசிரமத்துக்கு அக்கௌண்ட் ஃப்ரீயா எழுதித் தருவார். அவரே ஃபைனான்ஸ்லாம் பார்த்துக்குவார். அப்பப்ப டொனேஷன் வாங்கித் தருவார். ஆடிட்டிங்க் செய்து தருவார். இங்க இருக்கற இன்மேட்ஸ் எல்லாருக்கும் ஏதாவது புதுசா அவர் செலவுல ஏதாவது வாங்கித் தருவாரு.! எங்களுக்கும் நம்பிக்கையான ஆளு தேவை இல்லையா.. கந்தசாமியோட உறவு வேற.. காசு வாங்காம செய்யறாரு”

     

    “அது சரி, உங்க ஆசிரமத்து லேடஸ்ட் ரசீது புக் கொஞ்சம் காமிக்க முடியுமா?”

     

    “இருக்குங்க.. ஆனா அந்த மேஜை டிராயர் சாவி சுந்தர்கிட்ட இருக்கு. அவர் வந்துதான் எடுக்கமுடியும்மா.. எல்லாம் பக்காவா வெச்சிருப்பார்மா..”

     

    “சரி, சுந்தர் எப்ப வருவாரு?”

     

    “அவர் ஒரு வாரமா வரல்லேம்மா.. கடைசியா அவங்க மாமா கந்தசாமியை அழைச்சுண்டு வந்தார். அதுக்கப்பறம் வரல்லே.. மாமா போயிட்டாரு இல்லையா.. ரொம்ப பிஸியா இருப்பார்.”

     

    “ஓ! அப்போ கடைசி தடவையா கந்தசாமி வந்தாரு இல்லையா.. அப்ப அவர் கூடவே சுந்தரும் இங்க இருந்தாரு இல்லையா?

     

    “ஆமாம்மா கூடவே இருந்தாரு.”

     

    “அப்போ மாமா எதுக்காக வந்தார் அன்னிக்கு.. பணம் கொடுக்க வந்தாரா? இல்லே வேற விஷயம் பேசினாரா?”

     

    அந்தப் பெரியவர் தயங்கினார். பின்னர் மெதுவாகப் பேசினார்.

     

    “ஒரு நாலு மாசம் முந்தி ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்து போச்சும்மா. விஜயான்னு ஒரு பதிமூணு வயசுப் பொண்ணு. காணாமப் போயிடுச்சு. எப்படிக் காணாமப் போயிடுச்சுன்னா அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் மூளைல ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணினா தெளிவாகிற வியாதி வந்திருக்கு. ஆனா ஆபரேஷனுக்கு அதிகப் பணம் தேவைப்படுது. அன்னிக்கு கந்தசாமி இந்தப் பொண்ணையும் இன்னும்  ஒரு மூணு பொண்ணுங்களை பீச்சுக்குக் கூப்பிட்டுண்டு போனார்மா. அப்பப்ப பண்றதுதான். சுந்தருக்கு இந்தப் பொண்ணு மேலே ரொம்பப் பாசம். அவரும் நிறைய இப்படி செய்வாரு. ஆனா ராத்திரி திரும்ப வரச்சே அந்த விஜயா வரல்லே.. மீதி மூணு பொண்ணுங்களையும் கொண்டு வந்து அழுதாரு. மெரீனா பீச்சுல இந்த நாலு பேரும் விளையாடிக்கிட்டிருந்தாங்க.. கந்தசாமி கடற்கரைல உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்திண்டிருந்தார். நைட் வந்ததனாலே விளையாடற பொண்ணுங்களையெல்லாம் கூப்பிட்டு போதும் வாங்க போகலாம்’னு சொல்லியிருக்கார். மூணு பொண்ணுங்க வந்தாங்க.. நாலாவது விஜயாவை ஆளைக் காணோம். உடனே எல்லாரும் தேடினாங்க.. கிடைக்கலே.. கந்தசாமி ரொம்ப வருத்தப்பட்டாரு.. எங்க போயிடுச்சோ அந்த பொண்ணு.. ஒண்ணுமே தெரியாத பொண்ணாச்சேன்னு அழுதாரு, பாவமா இருந்தது.. நான் அவரை சமாதானப்படுத்தி எங்க போயிடுங்க.. அதுவே வருதான்னு பார்க்கலாம். இல்லைன்னா என்ன பண்ண முடியும்? ஏற்கனவே இப்படி மூணு பேரு இந்த ஆசிரமத்துல காணாமப் போயிட்டாங்க. அத்தோட நாலாவதா சேர்த்துக்க வேண்டியதுதான்னு சொல்லிட்டேன்..”

     

    “ஓ! அப்போ அந்த விஜயாப் பொண்ணு நாலு மாசம் முன்னாடி காணாமப் போயிடுச்சு. மீதி வந்த பொண்ணுங்க அந்தப் பொண்ணைப் பத்தி எதுவும் சொல்லலியா..?”

     

    “அவங்களும் தேடியிருக்காங்கம்மா.. கிடைக்கலே தாத்தான்னு சொன்னாங்க.. பாவம் அந்தப் பொண்ணு..”

     

    தன் மொபைல் ஃபோனைத் திறந்து ஒரு போட்டோவைக் காண்பித்தாள்.

    “பாருங்க.. இந்தப் பொண்ணுதானே விஜயா?”

     

    “ஆமாம்மா.. இந்தப் பொண்ணுதான்.. கந்தசாமி கம்ப்ளெயின் உங்கள்ட்ட கொடுத்தாராம்மா.. அந்தப் பொண்ணுக்கு ஒரு வியாதி.. மூளை சம்பந்தப்பட்டது.. சுந்தர் அந்தப் பொண்ணுக்கு மெடிகல் டொனேஷன் வாங்கணும்னு ரொம்ப முயற்சி பண்றாரு.. அதுக்காக எடுத்த போட்டோ இது.”

     

    “அது இருக்கட்டும். போனவாரம் சுந்தரும் கந்தசாமியும் சேர்ந்து வரச்சே என்னவோ நடந்ததுன்னு ஆரம்பிச்சிங்க இல்லையா.. என்ன நடந்தது?”

     

    “இந்த விஜயா பேருதான்மா அவங்க பேசிக்கிட்டாங்க.. பெரியவர் கோபப்பட்டாரு, அடிக்கடி அந்தப் பொண்ணு பேரைச் சொல்லி எதுக்குடா என்னை மிரட்டறேன்னு சுந்தர்கிட்ட கோபமா கேட்டாரு.. சுந்தர் ஏதோ திருப்பிச் சொன்னாரு. என்ன சொன்னாருன்னு ஞாபகம் இல்லே.. ஆனா நான் சுந்தர்கிட்டே ‘விடுங்க தம்பி.. அவருதான் எல்லா இடத்துலயும் தேடினேன்னு சொன்னாரு இல்லையா அப்படின்னு சொன்னேன். கந்தசாமி உடனே அழ ஆரம்பிச்சுட்டாரு.. போதும்டா எனக்கு இந்த தண்டனை.. எத்தனை பேரைன்னு சமாளிப்பேன் நான்? எல்லாத்துக்கும் நான் பிராயச்சித்தம் பண்ணிடறேண்டா.. நீ அதுக்கு மாத்திரம் ஹெல்ப் பண்ணுடா’ன்னு கெஞ்சினாரு..”

     

    ‘உங்களுக்கு தனிப்பட்ட முறைல கந்தசாமி மேல இந்த விஜயா விஷயமா ஒரு சந்தேகமும் வரலியா?’

    தொடரும்

    Share
  • கவிதைகள்

    மு. பிரபு
    191/2, புதிய தெரு
    ரூசா வழி
    மேல்காவனூர் கிராமம் & அஞ்சல்
    கே.வி. குப்பம் தாலுக்கா
    வேலூர் மாவட்டம். 632 209. 

    1. ஈரத்துணி

    தொடர் மழை
    தொடரமுடியாத
    தொழிலாளர்கள் பணி,

    ஈரத்துணி
    அவர்கள்
    தலையில் மட்டுமில்லை
    வயிற்றிலும் கூட..

    2. தொடர் மழை 

    தேங்கி நிற்கும்
    தண்ணிர்
    வடியவில்லை,

    வாழ்க்கைக்கு பாதையின்றி
    கண்ணீர் வடிக்கும்
    நடைப்பாதை வியாபாரி.

    3. மழைக்காலம்

    அடுப்பு பற்றவைக்க
    முடியாமல்
    செங்கல்
    சூளைக்காரர்.

    வயிற்று பசியை
    அணைக்க முடியாமல்
    தவிக்கும்
    செங்கல் சூளை
    தொழிலாளி.

    4. விவசாயமுமில்லை

    விலைகளும்
    குறையவில்லை
    நிரந்தர வேலையுமில்லை
    வேலைக்கு ஏற்ற
    ஊதியமுமில்லை
    ஆனாலும்
    மறைமுக வரிகளால்
    சுமைதாங்கிகளாய்
    ஏழைகள்.

    5. செயலிகளில் 

    வாசிக்கப்படும் புத்தகங்கள்
    பாசிக்கு உணவாகும்
    நூலக புத்தகங்கள்.

    Share
  • சமிக்கை

    த. ஆதித்தன்

    இரைச்சல்களுக்குள்
    பொதிந்து கிடக்கின்றன
    சமிக்கைகள்.

    தேர்ந்தெடுக்கும் திறன்
    அபரித ஆற்றலாய்
    மறுபடிகட்டிற்கு
    தேர்ந்தெடுத்தல்
    இங்கு
    உரிமையாய்…

    தேர்ந்தெடுப்பின் விளைவு
    சிலவற்றிற்கு, ம்…
    பலவற்றிற்குக் கூட
    மறுதலிப்பு பதிலாய்…
    தம் திறன்
    தேர்ந்தெடுப்பில்
    தொலைகையில்
    இயலாமையின் பிடியில்…

    கொண்டாடுங்கள்
    புறக்கணிப்பை
    ம்… அங்கு
    தேர்ந்தெடுப்பின்
    பூரணத்துவம்

    பிரம்மமாய்!
    பெரும் ஏகாந்தம்
    பரந்துபட்ட வெளியாய்
    தேர்ந்தெடுப்பின் களம்.

    இலக்கு வெளிப்பட
    தப்பிச் சென்றிடு
    சலசலப்பில்….

    ஒதுங்கி நிற்பது
    நாம்
    தொலைந்திட, தொலைத்திட அன்று…
    கண்டறிதலின்
    சூட்சமம் அது.
    சமிக்கைகளைக் கண்டறியும்
    வாய்ப்பாடு.
    ஆய்ந்தறிந்து புலப்படுத்தும்
    வித்தையல்ல,
    இயந்திர ஓட்டத்தில்…
    ஒதுங்கி நிற்றல்
    சமிக்கை அறிதலின்
    அத்தியாவசிய தந்திரமாய்…

    Share
  • மனதைத் திறந்து காட்டிட வேண்டும்!

    மனதைத் திறந்து காட்டிட வேண்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக்  கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    மன்னிக்க நினைத்தால் மன்னிக்க வேண்டும்
    வாழ்த்திட  விரும்பினால் வாழ்த்திட வேண்டும்
    மனத்தினில் தேக்கி வைத்திடல் வேண்டாம்
    மனதைத் திறந்து காட்டிட வேண்டும்

    ஆத்திரம் வந்தால் அடக்கிட வேண்டாம்
    கொட்டியே தீர்த்தால் குளிர்ந்திடும் அனைத்தும்
    அழுகை பெருகினால் அழுதிடல் அவசியம்
    அடக்கினால் அனைத்தும் அணுவாய் மாறும்

    கற்றவர் யாவரும் பெரியவர் அல்லர்
    கற்றதைக் கருத்தில் எடுப்பவர் பெரியவர்
    நிற்பதும் நடப்பதும் நெறியாய் இருப்பதே
    கற்றவர் இலக்கணம் என்பதே உண்மை

    உறவு என்பது உபசாரம் அன்று
    உறவு என்பது உயர் நிலையாகும்
    அன்பால் மலர்வதே ஆனந்த உறவு
    ஆசை வார்த்தைகள் நல்லுற வன்று

    நடிக்கும் உறவு கலைந்திடும் நிச்சயம்
    நம்பகத் தன்மை குலைந்தால் துன்பமே
    துடிக்கும் உணர்வுடன் உறவுகள் இருந்தால்
    தொடரும் உறவாய் தொடரும் தொடரும்

    Share
  • பல்லழகன் – பகுதி 15

    திவாகர்

     

     

    “டேய்.. இதுல என்னடா பார்த்தே.. நான் என்னத்தைப் பார்த்தேன்னு நீ பார்த்தே?.. சொல்லுடா.. சொல்லு.. என்ன பார்த்தே..”

     

    “மாமா இது அநியாயம். ஃபோன்ல பார்த்துண்டு இருந்தது நீங்க.. ஆனா, என்னைப் போய் எப்படி அப்படி கேட்கலாம். அதுவும் அசிங்கமான படங்க.. அதனால கொஞ்சம் ஷாக்காயிட்டேன். ஆனா கீழே போட்டது நீங்கதானே?”

     

    சட்டென சமாளித்தார்.  “டேய் சுந்தர்.. அது ஒண்ணுமில்லேடா.. இந்த வாட்ஸப்ல ஏதோ அப்படி இப்படின்னு ஃபோட்டோ இமேஜ் வந்தது.. வாட்ஸ் அப்லே இதெல்லாம் சகஜம்.. அதெல்லாம் அழிச்சிட்டிருந்தேன்.. நீ பார்த்துட்டே போலருக்கு. சரி சரி.. இப்போ ஃபோன் உடைஞ்சு போச்சே.. உனக்குத் தெரிஞ்ச ரிப்பேர்க்காரன் இருக்கானா? ஆனா இது ஆபிள் ஃபோன்.. அவன் ஏஜென்ஸிதான் ரிப்பேர் பண்ணுவான். அவனுக்கு ஃபோனைக் கொடுத்தா அவனும் உன்னை மாதிரி ஏதேனா ஏடாகூடமான படத்தைப் பார்த்துட்டு உங்க மாமா இப்படிபட்டவராடான்னு கேட்டாலும் கேட்பானேடா.. அத்தோட ரொம்ப இம்பார்ட்மென்ட் விஷயம்லாம் வெச்சிருக்கேன். சில காண்டாக்ட் நம்பர்லாம் இருக்கு. இந்த ஃபோன் எங்கிட்ட இருக்கறதே யாருக்கும் தெரியாதுடா. இந்த ஃபோன்லேர்ந்து யாருக்கும் ஃபோன் கூட பண்ணமாட்டேன்.. ”

     

    சுந்தர் எதுவும் பேசவில்லை. கன்னத்தைத் தடவியபடி இருந்தான். அவர் சுந்தரின் கன்னத்தின் அருகே வந்து கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.

     

    “நான் எப்பவுமே உன்னை அடிச்சதில்லே.. என்ன இருந்தாலும் இன்னொரு தகப்பன் பெத்த பிள்ளை நீ.. என் சொந்த மகனா நினைச்சு அடிச்சுட்டேன்.. தப்புதான்..”

     

    “மாமா அப்படி சொல்லாதீங்க.. உங்களுக்கு எல்லா உரிமையும் என் மேல இருக்கு. விவரம் தெரியாம வந்து எட்டிப் பார்த்தது என் தப்புதான். மாமா.. இந்த மாதிரி ஆபிள்மொபைல் எல்லாம் நானே ரிப்பேர் செய்வேன் மாமா..  நான் சரி பண்ணிக் கொடுத்துடறேன்.. ரூம்ல இதுக்கான ஸ்பெஷல் டூல்கிட் இருக்கு. எனக்குக் கொடுங்க.. அலுங்காம நலுங்காம மேல கூட ஒரு புது கவர் போட்டு புதுசாவே கொடுத்துடறேன்.”

     

    மாமா யோசித்தார். “சுந்தர்.. இது அப்படியில்லேடா. சில லேவாதேவி கேஷ் கணக்கெல்லாம் அவங்கவங்க பேருல எழுதி ரகசியமா வெச்சுருக்கேன். நாளைக் காலைல ஆடிட்டர் இங்க வருவாரில்லையா.. அவர்கிட்டே இதெல்லாம் காண்பிச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்.” என்றவர் கீழே கிடந்த ஆடிட்டர் பேப்பரையெல்லாம் பொறுக்கி கையில் அடுக்கி வைத்துக் கொண்டு பேசினார்.

     

    “இந்த பேப்பர்லாம் அந்தக் கணக்கோடு பார்த்து ஃபைசல் பண்ணனும்டா.. நீ ஒண்ணு பண்ணேன்.. அடையாறுலதான் உன் ரூம் இருக்கு. போய் அந்த டூல்கிட் கொண்டு வந்துடு. நீ இங்கயே நைட் சாப்ட்டுக்கலாம். அப்படியே இங்கேயே ரிப்பேரும் பண்ணிடு. மேல கவர் நாளைக்கு கடைல வாங்கி புதுசா போட்டுக்கலாம். நாளைக்கு வரச்சே நீயா புதுக் கவரை வாங்கிவந்துடேன்..”

     

    “சரி மாமா” என்று சொன்னவன் கடகடவென தன் பைக்கில் கிளம்பினான்.

     

    மறுபடியும் தற்போதைய நிலைக்கு வந்தான் சுந்தர். அவனையே கல்யாணும் கோம்டியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     

    “நான் என் ரூமுக்குப் போய் ஆப்பிள் ஃபோன் ரிப்பேர் டூல்கிட் எடுத்துட்டு அப்படியே வர வழியிலே ஒரு ஃபோன் சேஃப்டி அப்பர்கவரும் வாங்கிண்டு வீட்டுக்கு வந்தேன். மாமா ரொம்பவே பரபரப்பா வாசல்லியே எனக்காகக் காத்துண்டிருந்தார். இதுக்குப் போய் இவ்வளவு டென்ஷன் ஆகறாரே’ன்னு கூட நினைச்சுண்டேன்.. ஹால்லயே அவர் ஃபோன் எடுத்து ரிப்பேர் பண்ணேன். என் பக்கத்துலேயே இருந்தார்.”

     

    மறுபடியும் அவன் நினைவுகள் வலம் வந்தது. மாமா வீட்டில் அவர் நிம்மதியற்று நின்று கொண்டிருக்க சுந்தர் மொபைல் முழுவதையும் அக்கு வேறாக ஆணி வேறாக கழட்டினான். உள்ளே எதையோ கொஞ்ச நேரம் நோண்டினான். சில பாகங்களைத் துணியால் துடைத்து வாயால் ஊதினான். பிறகு பத்திரமாக அதை வைத்துவிட்டு ஃபோனை மறுபடியும் சேர்த்து வைத்து பழைய நிலைக்குக் கொண்டு வந்து சார்ஜிங்க் செய்து ஆன் செய்தான். கருநிறம் சூழ நடுவில் வெள்ளையாய் ஆபிள் படம் வெளி வர ஃபோன்  திறக்க ஆரம்பித்தது.

     

    “மாமா இதுக்கு ஓபனிங்க் பாஸ்வேர்ட் வெச்சிருக்கீங்களா?”

     

    “எதுக்குடா.. பாஸ்வேர்ட்   நான் அதெல்லாம் வெக்கிறதில்லேடா.. ஓபன் பண்ணா வந்திருமே.. ”

     

    “சரி மாமா.”

     

    “அவன் மொபைலைத் திறக்க முயற்சிக்கிறான்,, முதலில் ஆபிள் படம் சின்னதாக வந்து முழுவதுமாக முடிந்ததும் அதன் மேல் சேஃப்டி கவரை ஒட்டினான். அப்படி ஒட்டும்போதுதான் சடாரென ஒரு வண்ணப் படமாக அந்த ஃபோனில் வர அப்படி வந்தது என்னவோ ஒரு பெண்ணின் முழு நிர்வாணப்படம். அதை ஆஃப் செய்து புதிதாக வாங்கிவந்த பிளாஸ்டிக்கண்ணாடி கவரை ஒட்டிச் சட்டென அந்த ஃபோனை மாமாவிடம் கொடுத்துவிட்டான்.”

     

    “ஆஹா.. ரொம்ப தேங்க்ஸ்டா.. வா வா சாப்பிடலாம்..”

     

     

     

     

     

    இருவரும் சாப்பிடும்போது அவன் மெல்லக் கேட்டான். அவன் கை சோற்றைப் பிசைந்து கொண்டே இருந்தது. சாப்பிடாமல் பேசினான்.

    “மாமா.. தப்பா நினைச்சுக்காதீங்க.. நான் கேக்கறேன்னு.. இப்போ நான் பார்த்த படத்தோட முகம் கொஞ்ச நாள் முன்னாடி நம்ம பால பாலிகா ஆசிரமத்துலேர்ந்து காணாமப் போன ஒரு சின்னப் பொண்ணு முகம் போல இருக்கு.. மாமா எனக்கென்னவோ சோறு ஏறமாட்டேங்குது மாமா.. அது சின்னக் குழந்தை மாதிரி தெரியுது..”

     

    “என்னடா சொல்லறே.. எதுனா கற்பனை பண்ணி மனசுல விபரீதமா நினைக்காதே..”

     

    “விபரீதமா அப்படி எதுவும் இல்லேன்னா ஹாப்பிதான் மாமா.. ஆனா அந்த முகம் மட்டும் அப்படியே அந்த சின்னப் பொண்ணோட முகம்தான்.. நான் அப்பர் கவரை ஒட்டறச்ச நல்லா பார்த்தேனே”

     

    “எதுவும் உளறாதடா”

     

    “உளறல மாமா.. நாலு வருஷமா அந்தப் பொண்ணைப் பார்த்துண்டே வரேனே.. நீங்க திருச்சிலேர்ந்து ஒன்பது வயசுப் பொண்ணா அனுப்பிச்சிங்களே.. சென்னையில நான் இருக்கேன்னு எனக்குதானே சொல்லுவீங்க.. புதுத்துணியெல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கேன்.. எக்ஸிபிஷன் வந்தா அழைச்சுண்டு போவேன்.. குழந்தை மாதிரி வருமே.. நான் கல்யாணம் பண்ணிண்டு குழந்தையைப் பெத்துண்டேன்னா இந்த மாதிரி பொண்பிள்ளையா பிறக்கணும்னு நினைச்சுப்பேன் மாமா..”

     

    “இதெல்லாம் ஏண்டா இப்போ சொல்லறே?”

     

    “இப்போ அந்தப் பொண்ணை இப்படிப் போட்டோவுல பாக்கறது கஷ்டமா இருக்கு மாமா..”

     

    மாமா உறுமினார். “டேய்.. உன்னை நான் இங்க கூப்பிட்டது தப்பா போச்சு.. வெளில போய் எதுனா கன்னா பின்னான்னு இது மாதிரி உளறி வெக்காதே.. எனக்கு நீ பாடம் நடத்துறியா?”

     

    “எனக்கு ஏதோ வித்தியாசமா படறது மாமா.  இந்த மாதிரி படம்லாம் இப்படிப் பாக்கறதுக்குன்னே நிறைய பேர் பணம் கொடுத்துப் பாப்பாங்களாம். சமீபத்துல ஒரு கேஸ் பேப்பர்ல நியூஸா வந்தது. அரபு நாடுகளுக்குக் கூட இந்த மாதிரி போட்டோ அனுப்பிச்சு அந்த சாம்பிள் காமிச்சு அந்தப் பொண்ணையே விக்கறதாவும் அவனை அரெஸ்ட் பண்ணி போஸ்கோ சட்டத்துல உள்ளே தள்ளினதாவும் நியூஸ் படிச்சேன்.”

     

    “இப்போ எதுக்குடா இதெல்லாம் சொல்லறே?”

     

    “இந்த மாதிரி போட்டோ வெச்சிருந்தாலும் அவங்களை அரெஸ்ட் பண்றதுக்கு போலீஸுக்கு உரிமை இருக்கு. அதனால எதுனாச்சும் போட்டோ இருந்தாலும் அதை ரிமூவ் பண்ணிடுங்க மாமா..”

     

    “சுந்தர் எனக்குத் தெரியும். எதை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு. நீ சின்னப் பையன். உனக்கு வேண்டாத விஷயத்துல தலையிடாதே.. புரியறதா?”

     

    “மாமா எனக்கு ஏன் வீண் வம்புன்னு என்னால அப்படி விட முடியலே.. ஏன்னா அதுக்குக் காரணம் அந்தப் பொண்ணுதான்.. வேணாம் மாமா.. இப்போ அந்தப் பொண்ணு கூட ஆசிரமத்துல இல்லே. காணாமப் போனவ திரும்ப வரவே இல்லை. அவளுக்கு  ஏதாவது  ஏடாகூடமா ஆகக்கூடாது மாமா”

     

    அவன் எழுந்துவிட்டான். சாப்பிடவில்லை. மாமா யோசித்தார். தன் அறைக்குப் போனார். பீரோவைத் திறந்து ஒரு கட்டு பணம் எடுத்து வந்தார்.

     

    “இதோ பார்.. இந்த பணம் உனக்கு லஞ்சமா தரலே.. பாசத்தோடு தரேன். உன் மனசு கவலையா இருக்கு. எங்கயாவது கோவா கீவான்னு போயிட்டு வா..  நாம அப்பறமா பேசலாம் இதப் பத்தி.”

     

    “வேணாம் மாமா இந்தப் பணமெல்லாம்..”

     

    “டேய்.. உன்னை வளர்த்தவன் நான். எனக்குத் தெரியும்.. யாருக்கு என்ன கொடுக்கணும்.. எது கொடுக்கக்கூடாதுன்னு.. போடா.. நாலு நாள் லீவு போடு.. மனசுல எந்த விஷயத்தையும் அப்படியே வெச்சுக்காதே..  போய் வாழ்க்கையை நல்லா எஞ்சாய் பண்ணு..”

     

    என்று சொன்னவர் அவன் பாக்கெட்டில் அந்த  நோட்டுக் கட்டைச் செருகினார். அவனைத் தட்டிக் கொடுத்தார்.

     

    திரும்பவும் தற்காலத்துக்கு வந்தான் சுந்தர்.

     

    கல்யாண் தலையில் கை வைத்துக் கொண்டான். கோம்டி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். சுந்தர் சொல்லிக் கொண்டிருந்தான்.

     

    “இப்படித்தான் ஆரம்பிச்சது இந்த விவகாரம். எப்போ மாமா எனக்கு இதெல்லாம் புரிஞ்சு போயிடுச்சுன்னு நினைச்சாரோ என் வாயை மூட அப்பலேர்ந்து எனக்குப் பணமழை பொழிய ஆரம்பிச்சதுடா கல்யாண். முதல்ல நான் மாமாவுக்கு புத்திமதி சொன்னவன். ஆனா மாமா இந்த விஷயத்துல ரொம்ப நல்லா ஊறிப் போனவர்னு தெரிஞ்சவுடனே என்னாலே எதுவும் பண்ணமுடியலே..”

     

    “அப்போ நீங்களும் உடந்தையாதான் பிற்பாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சீங்களா? நல்லா பணக்காரரா மாறியிருப்பீங்களே!”

     

    “சத்தியமா நான் இந்த மாதிரி வேலையெல்லாம் மனசால கூட நினைச்சுப் பண்ணமாட்டேன் கல்யாண். என் தப்பு என்னன்னா நான் இந்த விஷயத்தை வெளியில சொல்லமுடியாத நிலையில இருந்தேன். ஆனா அதுக்குன்னு அவருக்கு நான் உடந்தையா மட்டும் நிச்சயம் இல்லே. மாமா கூட அதுக்கப்பறம் நான் அவர்கூட இருக்கறவரைக்கும் இந்த மாதிரி வேலை செய்யலேன்னுதான் நான் நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சதைத்தான் சொல்றேன்.”

     

    “முரளிக்கும் இந்த விஷயம் தெரியுமோ..” கல்யாண் கோபத்தோடு கேட்டான்.

     

    “இந்த விஷயம் அவனுக்குத் தெரியாது.. ஆனா முரளிக்கும் மாமாவுக்கும் வேற ஏதோ சின்ன தகராறு இருக்குன்னு தெரியும்.. அதை ரெண்டு பேருமே எங்கிட்ட சொல்லாதனதாலே நானும் கேட்டுக்கலே.. ஆனா சமீப காலமா முரளி அடிக்கடி வர்றது இல்லேங்க்கிறதாலே நான் அப்பப்ப மாமாவுக்குக் கார் டிரைவரா மாறினேன். ஆசிரமத்துக்குப் போவோம். ஆனா மாமா எனக்கு மாசம் பொறந்தா ஒரு லட்ச ரூபாய் கொடுத்திண்டு வந்தாரு. எனக்குக் கொடுத்த ஒரு லட்ச ரூபாயும் நான் ஆசிரமத்துக்கே கொடுத்துட்டேன். வேணுமின்னா நீங்க அங்க போய் செக் பண்ணிக்கலாம்.”

     

    ‘ஒஹோ..’

     

    கல்யாணின் குரல் கொஞ்சம் கேலியாக ஒலித்தது.

     

    “இன்னும் அந்த பத்து லட்ச ரூபாய் விஷயம் சொல்லலியே.” கோம்டி ஞாபகமூட்டினாள்.

     

    “அதுவும் சொல்லதான் வரேன். கொலை நடந்ததுக்கு மூணு  நாளைக்கு முன்னாடி  நான் அவரை ஆசிரமத்துக்கு அழைச்சிட்டுப் போயிட்டு வீட்டுக்கு வந்தோம்.  இல்லையா.. என்னை உள்ளே கூப்பிட்டார். பத்து லட்ச ரூபாய் பணக்கட்டு கொடுத்து சிதம்பரத்துல ஒரு விலாசத்துல கொடுக்கச் சொன்னார். இதுதான் கடைசின்னு ஏதோ ஒரு வார்த்தை ஒரு காகிதத்துல எழுதினாரு. விலாசம் கூட எழுதினார்.   ரஞ்சிதான்னு ஒரு பொண்ணு பேரு. எனக்கு மகா கோபம் வந்தது. இவ்வளோ சொல்லியும் அவர் மாறலே.. நான் அவர்கிட்டே அந்த பணம் வாங்கினேன். அந்த அட்ரஸ்ஸை தூக்கிக் குப்பைல போட்டேன். அடுத்த நாள் வண்டியை சர்வீஸுக்கு விடறதுக்கு முன்னாடி அந்த பத்து லட்ச ரூபாய் அப்படியே பாலபாலிகா ஆசிரமத்துக்கு டொனேஷனா பாங்க்ல டெபாசிட் பண்ணிட்டேன். நீங்க போய் அங்க செக் பண்ணிக்கலாம்.”

     

    சுந்தர் மிகவும் ஆயாசமாகச் சொன்னான்.

     

    “அவ்வளவுதான் நடந்தது. நான் கடைசி வரைக்கும் மாமாவைக் காப்பாத்ததான் முயற்சி பண்ணினேன்.. ஆனா முடியலே.. இந்த ஆள் மாறவே மாட்டாருன்னு..”

     

    “அதனால அன்னிக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமாவை கொலை பண்ணிட்டீங்களா?”

     

    நிதானமாகக் கேட்டாள் கோம்டி. உடனடியாக அவன் அழுதான்..

    “இல்லை நான் அவரைக் கொலை செய்யலே.. அவர் எப்படி கொலையானார்னும் எனக்குத் தெரியாது. கொலை நடந்த அன்னிக்கி நான் சென்னைலயே இருந்தேன். பைத்தியக்காரனா பார்க்’லே சுத்திட்டு இருந்தேன்…”

     

    “நான் நம்பமுடியாது சுந்தர்.. நான்னு இல்லே.. போலீசும் நம்பாது.?”

     

    “இல்ல.. ஆசிரமம் போகலாமான்னு கூட பார்த்தேன். ஆனா எனக்கு அங்க போக அப்போ இஷ்டம் இல்லே.. ஏன்னா நான் சிதம்பரம் போயிருக்கணும்னு நினைச்ச வேளையில ஆசிரமத்துக்கு போயிருந்ததைப் பத்தி மாமா கேள்விப்பட்டாருன்னா இன்னும் திட்டுவாரு. பார்க்’லேர்ந்து பஸ்ல காளிகாம்பா கோயிலுக்குப் போனேன். அதுக்கப்பறம் மகாபலிபுரத்துல ஒரு ரிஸார்ட்க்குப் போய் தண்ணியடிச்சு அங்கே போய் உட்கார்ந்து யோசித்தேன், மனசுல மறுபடி மறுபடி அந்தப் பொண்ணு போட்டோ வந்து மனசைக் குழப்பிக்கிட்டே இருந்தது…”

     

    ரவி நிதானமாக கேட்டான். ‘ஸோ.. அப்படிக் குழம்பின மனசோட நேரா வீட்டுக்கு வந்து மாமாவைப் போட்டுத் தள்ளிட்டீங்களா? இப்படித்தான் போலீஸ் முடிவா கேட்டு உங்க மேல குத்தம் சுமத்தி இந்தக் கேஸை முடிச்சுடுவாங்க மிஸ்டர் சுந்தர்.!’

     

    ‘ஐய்யோ.. நான் சத்தியமா அவரைக் கொலை பண்ணலே.. அந்த நேரத்துல நான் அந்த ரிசார்ட்ல இருந்ததுக்கு என் டெபிட்கார்ட் பேமென்ட் ஏன் அங்க இருக்கற சிசி டிவி கேமரா கூட சாட்சியா இருக்கு.’

     

    “ஓ!! அந்தச் சின்னப்பொண்ணுன்னு உங்க மாமா ஃபோன்ல பார்த்தீங்களே.. அந்தப் பொண்ணு இப்போ எங்கே இருக்குது.. சொல்ல முடியுமா?” கோம்டி கேட்டாள்.

     

    “அந்தப் பொண்ணை நானும் தேடறேன்.. யாரோ தெரிஞ்சவங்க கிட்டே கொடுத்து வளர்க்கறாரு மாமா.. அப்படிங்கறது என் யூகம்.

     

    ‘ஆனா ஆசிரமத்து ரிகார்ட்ல அந்தப் பொண்ணு காணாமப் போயிடுச்சுன்னு இருக்கு.” ரவி சொன்னதும் விழித்தான் சுந்தர்.

     

    சுந்தர் மௌனமாக இருந்ததால் கோம்டி இன்னொரு கேள்வி கேட்டாள்.

     

    “சரி.. நீங்க எந்த தைரியத்துல நீங்களா முடிவு செஞ்சு அந்த பத்து லட்சத்தை ஆசிரமத்துக்குக் கொடுக்கலாம். இந்தக் கொலையே நடக்கலே.. ஒருவேளை உங்க மாமா அந்த ரஞ்சிதாவுக்கு ஃபோன்ல பேசி அந்தப் பணம் வந்துதான்னு கேட்டு அது வரலைன்னு தெரியறச்சே அவர் கோபப்படுவார் இல்லையா.. எந்த நினைப்புல அப்படி செஞ்சீங்க.. ஒருவேளை மாமாவோட இந்தக் கொடூர முடிவை நீங்க முன்கூட்டியே எதிர்பார்த்தீங்களா?”

     

    “ஐய்யோ.. அப்படியெல்லாம் இல்லங்க.. இந்த விஷயத்துல அவர் கேள்வி கேட்பாருன்னு நான் எதிர்பார்த்தேன்.. அப்படி கேட்டாருன்னா அந்த ரஞ்சிதா விஷயத்தைக் காமிச்சு அவரைத் திருப்பி நாலு வார்த்தை கேட்டு, நீங்க திருந்தவே மாட்டீங்களான்னு நல்லா திட்டிட்டு அதுக்கப்பறம் பாலபாலிகா ஆசிரமத்துக்கு நான் கொடுத்த பத்து லட்சத்தைக் காமிக்கலாம். அத்தோட இந்த விஷயத்தையெல்லாம் கல்யாண்கிட்டே சொல்லிட்டு அன்னியிலேர்ந்து அவரோட சகவாசத்தையும் உறவையும் ஒரேயடியா அறுத்துக்கலாம்னு மனசுல வெச்சிருந்தேன். ஆனா அவர் கொலையானது எனக்கு அதிர்ச்சிதான்.”

     

    “சரி, நீங்க இந்தக் கொலையைச் செய்யலேன்னு வெச்சுக்கலாம். அப்போ யார் செஞ்சிருக்கலாம்?. இவ்வளோ நெருக்கத்துல உங்க மாமாவைப் படிச்சவர் பழகினவர் நீங்க.. உங்களுக்கு என்ன தொணறதோ அதைச் சொல்லுங்க..”

     

    “எனக்குத் தோணறது என்னென்னா இவரால கொடுமையா அவதிப்பட்ட எந்தப் பொண்ணோ அல்லது பொண்ணோட சொந்தமோ இவரைக் கொலை பண்ணியிருக்கலாம்னுதான் மனசுல பட்டது..”

     

    “நீங்க அப்புறம் மாமாகிட்ட பேசலியா?”

     

    “நான் கடைசியா அவருக்கு ஃபோன்ல பேசினப்போ கொலை நடந்த அன்னிக்கு நாலு மணிக்குப் பேசினேன். அவர் கொடுத்த பத்து லட்சம் கொடுத்தாச்சுன்னு சொன்னவுடனே ‘சுந்தர் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ன்னு கொஞ்சம் வருத்தமான குரல்ல சொன்னார். அதுதான் கடைசி.”

     

    “அதாவது அவரோட  நோகியா பழைய ஃபோன்ல பேசினீங்க இல்லையா?”

     

    “ஆமாம். அது இப்போ போலீஸ் கையிலதான் இருக்கு. செக் பண்ணிக்கலாம்.”

     

    “சரி மிஸ்டர் சுந்தர்.. நீங்க இதுவரை சொன்னதை நான் ரிகார்ட் பண்ணியிருக்கேன். அதனால நீங்க புதுசா ஒரு போலீஸ் ஸ்டேட்மென்ட் தயார் பண்ணி அதுல உண்மையை அப்படியே எழுதுங்க..  இன்னும் கொலையாளி யார்னு தெரியலே.. கொலைக்கான மோடிவ் கூட தெரியலே.. பார்ப்போம்.”

     

    “கொலைகாரன் யாரா இருந்தா என்ன? அவன் செஞ்சது சரின்னு தெரிஞ்சிடுத்து இப்போ. இப்படிப்பட்டவரெல்லாம் உயிரோடு வாழத்தான் வேணுமா?”

     

    “எங்கிட்டே இப்படிச் சொன்னதை போலீஸ்கிட்ட சொல்லாதீங்க மிஸ்டர் சுந்தர்.”

     

    தொடரும்

     

     

    Share
  • பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 22

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 20. குலச்சிறை நாயனார்

    வன்றொண்டன் எனும் சுந்தரமூர்த்தி நாயனாரால் திருத்தொண்டத்தொகையிலே “பெரு நம்பி” என்று வியந்துரைக்கப்பட்ட பெருந்தகை குலச்சிறையார். தம் மனத்திருக்கும் திண்மையால் அடியவர்களுக்குத் திருத்தொண்டு புரியும் திறத்தினின்றும் சற்றும் வழுவாத சைவ சமய நெறியாளர் இவர்.

    கோதில்புகழ் தருமணமேற் குடியார் கோவண்

        குலச்சிறையார் தென்னர்குல வமைச்சர் குன்றா

    மாதவர்க ளடிபரவு மரபார் பாண்டி

        மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி

    காதன்மிகு கவுணியர்கோன் வாதிற் றோற்ற

        கையரைவை கைக்கரைசேர் கழுவி லேற்று

    நீதியினா ராலவாய் நிமலர்ச் சேர்ந்த

        நின்மலனா ரென்மலங்க ணீக்கி னாரே.

    சிவனடியார்களை சிவமாக எண்ணி வழிபடும் நெறியில் நின்றவர் குலச்சிறையார் எனும் பெருமகனார். பாண்டி நாட்டின் முதலமைச்சராக விளங்கியவர் என்றாலும் இவர் அடியார் பக்தியில் சிறந்து விளங்கியவர். பழம்பெருமை மிக்க பாண்டிய நாட்டில், புதுக்கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள மணமேற்குடி என்ற ஊரில் அவதரித்தவர். செந்நெல் நிரம்பிய வயல்களும் இனிய கரும்புகளும், அருகே  செறிந்து நிற்கும் பாக்கு மரங்களும் என பசுமையான வயல்வெளிகளால் குளிர்ந்துள்ள இடங்களும் சூழ உள்ளதொரு அழகிய நகரம் மணமேற்குடி. பாண்டி நாட்டில் மங்கையர்கரசியார் சைவப் பயிர் வளர்க்கத் துணை நிற்கும் பேறுபெற்றவர் குலச்சிறையார். ஞானசம்பந்தப் பெருமானுடன் தன் சொந்த ஊர் சென்று சிவாலயத்தில் வழிபாடு செய்த பேறும் பெற்றவர் இவர். மதுரை சொக்கலிங்கப் பெருமானை அன்றாடம் வழிபாடு செய்யத் தவறாத சிவனடியார் இவர். அனைத்திற்கும் மேலாக கூன் பாண்டியனாக இருந்த பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக மாறத் துணைபுரிந்தவர்.

    கார ணங்கண் ணுதற்கன்பர் என்னவே
    வார மாகி மகிழ்ந்தவர் தாள்மிசை
    ஆரும் அன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த்
    தீர நன்மொழி எய்த இசைத்துளார்.

     

    சிவனடியாருக்குச் செய்யும் பணி சிவனுக்குரியது என்பதால் எம்பெருமானின் இன்னருள் பெறுதற்கு சிவனடியார்களே காரணமானவர் என்பதை உணர்ந்து, அடியவர்களிடத்து அன்பு கொண்டு அவர்களுடைய திருவடிகளில் மிகுந்த அன்பொடும் வணங்கி கைகள் கூப்பித் தொழுது, நன்மொழிகளைப் பொருந்தச் சொல்லி வாழ்பவர்.

     

    குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
    நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
    அறிவு சங்கரற் கன்பர் எனப்பெறில்
    செறிவு றப்பணிந் தேத்திய செய்கையார்

     

    வினைவழிப்பட்ட நிலையில் தோன்றிய நான்கு குலத்தவர்களாக இருப்பினும், அவர்தம் ஒழுக்க நெறியினின்றும் நீங்கியவர்களாக இருப்பினும் சிவபெருமானிடத்தில்  நிலைபெற்ற அறிவுடையவர்கள் என அறியப்பெறின், அவர்களை மனம் பொருந்தப் பணிந்து வணங்கும் செய்கையினை உடையவர் குலச்சிறையார். உலகினர் தாம் சிறந்தனவெனக் கொள்ளும் நலங்களை உடையவராயினும், அந்நலங்களின்றி அளவற்ற தீமைகளை உடையராயினும், அவர் சிவபெருமானின் அடியவர்களாய் இருப்பின், அன்னோரை நிலம் உற வீழ்ந்து வணங்கும் தன்மையினை உடையவர் குலச்சிறையார்.

     

    குலச்சிறை நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    குணத்தில் மிக்கவர்கள் உணவு வேண்டி பெருங்கூட்டத்தாராய் வந்தாலும், அல்லது ஒருவராய் வந்தாலும், எண்ணுதற்கரிய அன்பினால் எதிர் கொண்டு அழைத்து, நட்பு மிகுதியுடன் திருவமுது ஊட்டும் நலத்தினை உடையவர் குலச்சிறையார். அடியவர்கள், திருநீறு, உருத்திராக்கம், ஆகிய சிவவேடத்தால் பொலிவு பெற்று, யாவர்க்கும் மூல காரணமாய் நிற்கும் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை நா வணங்கி, ஓதி உரைப்பவராயின், அவர் திருவடிகளை நாளும் போற்றிவரும் பண்பினை உடையவர். இத்தகைய அரிய பண்பினரை,

     

    வெற்றவே யடியார் அடிமிசை வீழும்

      விருப்பினன் வெள்ளைநீ றணியுங்

    கொற்றவன் றனக்கு மந்திரி யாய

      குலச்சிறை குலாவி நின்றேத்தும்

    ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்

     

    என்றும்

     

    கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்

      அடியவர் தங்களைக் கண்டால்

    குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்

      கோபுரஞ் சூழ்மணிக் கோயில்

    என்றும் ஞானசம்பந்தப் பெருமான் தம் பதிகத்தில் மகிழ்ந்து குறிப்பிடுகின்றார்.

     

    தாம் பெருஞ் செல்வரும் பாண்டிய மன்னனுக்கு முதன்மந்திரியாய் இருந்தும், சிறிதும் செருக்கு உறாது, இச்சிவபுண்ணியத்தைச் செய்தமையால், சிவனிடத்தே மெய்யன்புடையர் என்பது தெள்ளிதிற் உணரப்படும்.

    நம் முன்னோர்கள் சிவனடியாரை சிவமாக எண்ணி வழிபடும் முறையை ஏற்றிப் போற்றி வந்தனர். ஆன்றோர் பெருமக்கள் இறைவனைச் சென்றடைய வழிபாட்டினை முத்திறமாக வகுத்தனர். அவை, சிவலிங்கத் திருமேனியையே சிவமாக எண்ணி வழிபடுதல், குருவையே சிவமாக எண்ணி வழிபடுதல், அடியார்களையே சிவமாகக் கருதி வழிபடுவது போன்றவை. இதனை குருலிங்க சங்கம வழிபாடு என்பர். இவ்வழிபாட்டில் சிவனடியார்களைச் சிவமாக எண்ணி வழிபடும் நெறியில் நின்றவர் குலச்சிறையார்.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறேவா!

    எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறேவா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
    பள்ளத்தில் வீழ்ந்தோரை எண்ணியே வா
    உள்ளத்தால் உடைந்தோர்க்கு உயர் மருந்தாய்வா
    எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தி யாறேவா

    மண்ணுக்குள் புதையுண்டு மாண்டோரை நினைக்கும்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா
    மழையாலே அள்ளுண்டு வீடிழந்து நிற்பாரின்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா

    கும்பிட்ட கோவிலெங்கும் குளமாகி நிற்கையிலே
    நம்பிக்கை இழக்காமல் நாடினார் இறையிடமே
    இறைதூதர் வடிவிலே எங்கிருந்தோ வந்து
    உதவினார் குணம்போற்ற ஓடிவா புத்தாண்டே

    விளம்பரம் தோடாமல் விரைந்தோடி வந்து
    வீழ்ந்திருப்பார் இடம்பார்த்து தேவையினை அறிந்து
    உளமுவக்க உவந்திட்டார் உச்சிதொட்டு வாழ்த்துதற்கு
    புத்தாண்டே நீயும் புறப்பட்டு வந்துவிடு

    போரிடும் எண்ணம் புதைந்து விட வேண்டும்
    யாரிடமும் பகைமை கொள்ளாமை வேண்டும்
    சமத்துவமும் நீதியும் நிறைந்திடவே செய்யும்
    சாதுர்யம் மிக்க புத்தாண்டாய் மலர்க

    இருபத்து ஆறு எல்லோர்க்கும் நல்லதை
    ஈய்கின்ற ஆண்டாக இருந்திடவே வேண்டும்
    இன்னல் அகன்று எல்லோரும் நலமாய்
    இருக்கின்ற ஆண்டாக இறைவாநீ ஆக்கிடுவாய்

    நலமோங்க வேண்டும் வளமோங்க வேண்டும்
    நிலமீது யாவருக்கும் நிம்மதியே வேண்டும்
    அளவில்லா அருளுடைய ஆண்டவனே நீயும்
    அனைவர்க்கும் அருந்துணையாய் அமைந்துவிடு நாளும் !

    Share
  • சங்க இலக்கியத்தில் அணிகலன்கள்

    முனைவர் மூ. சிந்து
    இணைப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி)
    காளப்பட்டி ரோடு
    கோயம்புத்தூர் – 641048

    முன்னுரை

    மனிதர்கள் தன்னை அடையாளம் காட்ட விழைவது இயற்கையாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பொருளாதாரம் மற்றும் சூழலுக்கேற்ப உணவு, உடை, அணிகலன், ஆகியவற்றில் ஒப்பனைகளை ஏற்படுத்திக் கொள்வதை அவசியமாகக் கருதுகின்றனர்

    ”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” “ஆள் பாதி ஆடை பாதி” என்பது நம் தமிழர் வழக்கு. ஆடைகளில் தன்னிறைவைக் கண்ட மனிதர்கள், அணிகலன்களை பூட்டி தங்களை அழகுபடுத்திக் கொள்கின்ற நிலைப்பாட்டினை இன்று ஆண், பெண் இருபாலர்களிடையேயும் காணமுடிகிறது.

    இன்றைய மகளிரைப் போன்றே சங்ககாலத்துப் பெண்களும் ஆடை அலங்காரங்கள், அணிகலன்கள், ஒப்பனைகள் முதலியவற்றில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாகவும், விரும்பி அதனை அணிந்துகொள்ளும் குணம்  உடையவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    அணிகலன்கள்

    அணி என்பது அழகு எனப் பொருள்படும். மகளிர் தன்னை அழகுப்படுத்தவும், அழகுக்கு மேலும் அழகு சேர்க்கவும் அணிகலன்களைப் பயன்படுத்தினர். நூலுக்கு அணி செய்வது போல ஒரு பெண்ணுக்கு  அணி செய்ய அணிகலன்கள் இன்றியமையாதாகும்.

    மலர்அணிகலன்கள்
    ‘ஆம்பல் வன்னித் தொடிக்கை மகளிர்’       (புறம். 63:12)

    பவளவளை செறிந்தாட் கண்பணித்தான் பச்சைக்
    குவளைப் பசுந்தண்டு கொண்டு’                   (பரி. 11:101-102)

    ஆம்பல், குவளை முதலியவற்றின் தண்டுகளால் மகளிர் வளையல் செய்து அணிந்ததை அறியமுடிகிறது.

    ‘கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி’                   (குறுந். 80:1)

    என்றும்

    “பரூஉப்பகை ஆம்பல் குருஉத்தொடை நீவிச்
    சுரும்பிமீர் ஆய்மலர் வேய்ந்த”                      (அகம். 136:27-28)

    எனும் பாடல் வரிகளில் ஆம்பல் மலர்களால் ஆன மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டதையும், கூந்தலில் சூடியதையும் தெரிவிக்கிறது. மேலும் தாவரங்களினின்று உருவாக்கிய அணிகளைத் தவிர உலோகங்களால் செய்யப்பட்ட அணிகலன்களையும் சங்கப் பெண்டிர் அணிந்திருந்தமையை அறியமுடிகிறது.

    செயற்கை அணிகலன்கள்

    வணிகத் தொடர்புகளாலும், உலோகக் கண்டுபிடிப்புகளாலும்,  செயற்கை அணிகலன்கள் புழக்கத்தில்  வந்தன.

    “அணி, பூண், பணி, இழை, கலன், நகை, குழை, தொடி, வளை முதலிய சொற்கள் அணிகலன்களைக் குறித்து வழங்கப்படுவனவாக அமைந்துள்ளன” என்று வெ.வரதாராசன் அவர்கள் தமிழரின் ஒப்பனைக் கலைத்திறன் என்ற நூலில் கையாண்டுள்ளார்.

    சங்ககால மகளிர் தலையணி, நுதலணி, காதணி, கபத்தணி, தோளணி, மார்பணி, கையணி, விரலணி, இடையணி, காலணி எனும் பலவகை அணிகலன்களை உடலுறுப்புகளில் அணிந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.

    மகளிர் தன்னை அழகுபடுத்த அணிகளையும், அணிகளை அழகுப்படுத்த அதில் விதவிதமான இரத்தினங்களையும், கற்களையும், முத்து பவளங்களையும் பதித்து அணிந்து கொண்ட செய்திகளையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.

    “கைவல் வினைவன் தையுரு சொரிந்த
    சுரிதக உருவு”                                                        (நற். 86: 5-6)

    கைத்தொழிலில் வல்லவன் இரத்தினக் கற்கள் பதியப்பெற்று செய்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணியை அணிந்த பெண்டிரைப்  பற்றி பூதன்தேவனார் மருதத்திணைப் பாடலில் எடுத்துரைத்துள்ளார்.

    “எறிமகர வலயம் அணிதிகழ் நுதலியர்”  (பரி.10-77)

    மகரலயம் எனும் நுதலணியைப் பற்றிப் (நெற்றியணி) பரிபாடல் கூறுகிறது.

    காதணிகள்

    புராணக் காலத்தில் ஒலைகளான அணிகளன்களும், சங்க காலத்தில் பூக்களால் ஆகிய அணிகலன்களும், உலோக அணிகளும் அணியப்பெற்றமையை அறியமுடிகிறது. பொன்குழை ஒண்குழை, கனங்குழை, சிறுகுழை, மகரக்குழை, கொடுங்குழை, தோடு ஆகியவற்றை காதணிகளாக சங்கப் பெண்டிர் அணிந்திருந்தனர்.

    “ஞாயலியர் மென்காதிற் புல்லிகைச் சாமனா”   (கலி. 96.11)

    புல்லிகை எனும் அணியும் காதணியையே குறிக்கும் என்பதை அறிய முடிகிறது.

    “கோழி பொறிந்த கொடுங்காற் கனங்குழை
     பொற்கார் புதல்வர் புரவியின் றுருட்டு
     முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்”                (ப.பாலை. 23-25)

    காவிரிப் பூம்பட்டினத்துத் தாய்மார்கள் கோழிகளை விரட்ட காதில் அணிந்த குழையைத் தூக்கி எறிந்ததைப் பட்டினப்பாலை பாடல் வழி அறியலாகிறது.

    கழுத்து அணிகலன்கள்

    கழுத்து அணிகலன்கள் என்பது கழுத்தில் அணியப்படுவது. இது தாலி, மாலை, அல்லது மதாணி (தொங்கல்) போன்ற பல்வேறு வடிவங்களில், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் அமைந்ததாகும்.

    பொன்னாலாகிய காசுகளைக் கோர்த்து இழைக்கப்பெற்ற காசு மாலையைக் கழுத்தில் அணிந்ததையும்

    புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
    பொலங்கல ஒருகா சேய்க்கும்                                              (குறு. 67:4)

    பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி             (அகம். 7:17-18)

    பொன்னொடு புலிப்பல் கோக்கப் பெற்ற தாலி அணிந்ததையும் அறிய முடிகிறது.

    கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
    பந்தர்ப் பெயர்க்கும் பன்மாண் ஏந்தெழில்                         (பதி. 67:1-2)

    அரசர்கள் ஏகவடம் என்னும் முத்து மாலைகளை அணிந்தார்கள். செல்வர் வீட்டுப் பெண்களும் அரசகுமாரிகளும், இராணிகளும் முத்துமாலைகளை அணிந்தார்கள். உரோம தேசத்து மகளிர் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெரிதும் மதித்தனர் என்ற செய்தியை மயிலை சீனி வேங்கடசாமியின் பழங்காலத் தமிழர் வாணிகம் என்ற நூலின் மூலம் அறியமுடிகிறது.

    தோள் அணிகலன்கள்

    ‘தொடி’ என்பது பழந்தமிழில் பெண்கள் அணியும் கைவளை அல்லது தோள்வளையைக் குறிக்கும் ஒரு அணிகலன் சொல் ஆகும். இது சங்கு, பொன் அல்லது பிற உலோகங்களால் செய்யப்படலாம். இலக்கியங்களில் இது பெரும்பாலும் ‘ஒள் தொடி’ (ஒளிமிக்க வளையல்) எனப் பெண்களின் அழகுக்கும் மென்மைக்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    “ஒண்தொடி நெகிழ” (அகம். 265:9)

    “தொடிதோள் இலர்க”  (அகம். 269:1)

    எனும் ‘தொடி’ என்னும் அணிகலன் அணியப் பெற்றமையை அறியமுடிகிறது.

    மார்பணிகலன்கள்

    மார்பணி என்பது பொதுவாக மார்பில் அணியும் அணிகலன் (மதாணி, பூண்) அல்லது கவசத்தைக் குறிக்கும். இது ஒருவகை மார்புப் புண், தண்டனையாக மார்பில் தைக்கப்படுவதாகும்.

    வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,
    எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,                  (ப.ப 16:16,)

    பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,
    மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின்,                    (ப.ப 65:6)

    என்ற வரிகள் அரசியர்  மார்பணி அணிந்தைமையை எடுத்துரைக்கிறது.

    பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை              (அகம். 16:9)

    மன்னர்கள் மார்பணி அணிந்ததும், பரத்தையர்களாலும் அணியப் பெற்றதையும்  அகநானூறு  பாடல் வழி அறியமுடிகிறது.

    கை அணிகலன்கள்

    தமிழர் பண்பாட்டில் கை அணிகலன்கள் பாரம்பரியம் மற்றும் அழகைக் குறிக்கின்றன. வளையல், காப்பு, கைகளில் அணியப்படும் ஆபரணங்கள். இவை தங்கம், வெள்ளி, மற்றும் சங்கு போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன.

    கைகளில் வளையல்கள் அணிவது சங்ககாலந் தொட்டே மங்கலமாகக் கருதப்பட்டது.

    “வல்லோன் வாளரம் ரு கோனோர் எல்வளை”              (நற்.78:8-9)

    வளையல்கள், கொடிகள், பூக்கள், வரிகள் ஆகிய தொழில்நுட்பத்தோடு செய்யப் பெற்றதைக் காணமுடிகிறது.

    “அணிவளை முன்கை ஆயிழை மடந்தெ                          (அகம் 361:4)
    “சின்னிரை வால்வளைக் குறுமகள்”                                               (குறுந் 189.6)

    “வளைக்கை விறலி
    வல்லோள் வானரம் பொருத
    கோணேர் எல்வளை அகன்தொடி செறித்த முன்கை”              (நற்.77:8-10)

    ஆகிய வரிகளின்றும் மகளிர் அனைவரும் (கணவனை இழந்தோர் தவிர வளையல்கள் அணிந்திருந்ததை அறியமுடிகிறது.

    பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி பாண்டிமா தேவி வலம்புரிச்சங்கு வளையல்களோடு பொன் வளையல்களையும் அணிந்திருந்ததை நெடுநல்வாடை கூறுகிறது.

    “பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
    வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து”                   (நெடுநல். 141-142)

    திருமணத்தின் போது கொடுக்கப்படும் பரிசப் பொருட்களில் ஒன்றாக தமிழகத்தில் சங்கு வளையல்கள் இருந்துள்ளதை அறியமுடிகிறது.

    இடுப்பு அணிகலன்கள்

    “மேகலை” என்பது பெண்கள் தங்கள் இடுப்பில் அணியும் ஒரு வகை அணிகலன் அல்லது ஒட்டியாணம் ஆகும். இது இடையணி என்றும் அழைக்கப்படுகிறது,

    வகையமை மேகலை”                                                  (பரி.22:30)

    என்ற பரிபாடலும்

    “நேர்மணி நேர்முக்காழப் பல்பல கண்டிகைத்
    தார்மணி பூண்ட தமனிய மேகலை”                                    (கலி.96:10-15)

    என்ற கலித்தொகையும்

    “பொலம்பசும் பாண்டிய காசுநிரை அல்குல்”                   (ஐங்.310.1)

     என்று ஐங்குநூறும் இடுப்பில் அணியும் அணிகலன்களைக் கூறுகின்றன.

    “…. தெண்நீர்
    முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்தூற்று”             (நற்.110.45)

    தெளிந்த ஒளியுடைய முத்துக்களை உள்ளே பரலாக இட்டுச் செய்த பொற்சிலம்பை அணிந்த சிறு பெண்ணைப் பற்றி அறியமுடிகிறது.

    சிலம்பில் அணிகலன்கள்

    சிலம்பு பற்றிக் கூறும் சிலப்பதிகாரத்தில் மாதவி  அணிந்த அணிகலன்களாக விரலணி (கான்மோதிரம்), பரியகம் (கார்சவடி) நூபுரம் (சிலம்பு) பாடகம், சதங்கை. அரியகம் (பாதசாலம்) குறங்குசெறி (கவான்செறி. விரிசிகை, கண்டிகை (மாணிக்கவளை), கே தோள்வளை, சூடகம், கைவளை (பொன்வணா) பரியகம், (பாசித்தாமணி, கைச்சரி), வால்வளை (சங்கவளை, வெள்ளிவளை), பவழவளை, வாளைப் பகுவாய் மோதிரம், மணி மோதிரம், மரகத் தாள் செறி(மரகதக் கடைசெறி) சங்கிலி மறத்தொடரி. நுண்ஞாண் ஆரம், கயிற்கடை, யொகுழுகிய கோவை (பின்றாலி), இந்திர நீலக் கடிப்பிணை (நீலக்குதம்பை) தெய்வ வுத்தி (திருத்தேவி), வலம்புரி, தொய்யகம் (தலைப்பானை, பூரப்பாளை), புல்லகம் (தென்பல்லியும் வடபல்லியும்) என 27 வகை அணிகள் அணிந்திருந்ததாகச் சிலப்பதிகாரக் கடலாடுகாதை கூறுகின்றது. இவற்றுள் அடங்காத வேறு சில அணிகளும்  அக்காலத்திருந்தன. அவற்றுள் ஒன்று ஆடை அல்லது சூடாமணி, பெண்டிர் அரைப்பட்டிகை மட்டும் மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என ஐந்து வகையாக இருந்தமையையும் சிலப்பதிகாரம் வழி அறியமுடிகிறது.

    முடிவுரை

    • சங்ககாலப் பெண்டிர் இயற்கையானப் பொருட்களைக் கொண்டு அணிகலன்களாக அணிந்தனர்.
    • காலம் செல்லச் செல்ல வாணிகமும், தொழில் நுட்பமும் வளர்ச்சியடைந்த நிலையில் முத்து, பவளம், மாணிக்கம், மணி போன்ற பொருட்களைக் கொண்டு அழகுபடுத்தி அணிகலன்களை உருவாக்கினர்.
    • சிறந்த வகை அணிகலன்களை சங்ககால மக்கள் அணிந்திருந்தனர் என்பதை உணர முடிகிறது.
    • அணிகலன்கள் சங்ககால மக்களின் வாழ்க்கையோடு எல்லா நிலைகளிலும் இருந்தமையை தெளிவுற அறியமுடிகிறது.

    துணை நின்ற நூல்கள்

    1. சங்க இலக்கியத் தொகுப்பு – வர்த்தமானன் பதிப்பகம்.

    Share