திவாகர்

 

கோம்டி கோபமாகச் சொன்னாள். சுந்தர் எழுந்தான்.

“நான் கல்யாண் என் அண்ணங்கிற ஒரு உரிமைல சொன்னேன். எனக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாம என் மனசுல இருக்கறதை அப்படியே சொல்லிட்டேன். நிஜமாவே என் மன பாரம் இறங்கிடுச்சு இப்போ. நான் ஸ்டேட்மென்ட் இன்னிக்கு ராத்திரிக்குள்ள எழுதறேன். இனிமே என்னால நடந்ததை மறைக்கமுடியாதுதானே.. இப்போ நான் சொன்ன உண்மையை அப்படியே எங்க வேணும்னாலும் சொல்லமுடியும். நான் வரேண்டா கல்யாண்.. நாளைக்கு என் ஸ்டேட்மெண்டோட வரேன். பார்ப்போம் மேடம் கோமதி!”

 

“நான் கோம்டி!”   என்றாள் அவள் சற்று கோபத்துடன். “இன்னும் ஒரே ஒரு கேள்வி மிஸ்டர் சுந்தர்.. இப்போ மாமாவோட அந்த ஆபிள் மொபைல் யார்கிட்டே இருக்கு.?”

 

“அது ரொம்ப குழப்பமா இருக்கு மேடம். அதை நான் அப்பறமா மாமா கையிலே பார்க்கவே இல்ல.. நானும் அவரை எத்தனையோ தடவை அதப் பத்தி கேட்கலாம்னு பார்த்தேன். ஆனா மாமா சந்தர்ப்பம் கொடுக்கவே இல்லை.”

 

“ஓ! ஆச்சரியமா இருக்கே.. அந்த ஃபோனைப் பத்தித் தெரிஞ்சவர் ரெண்டு பேர். ஒருத்தர் உங்க மாமா.. இன்னொண்ணு நீங்க.. ஆனா நீங்க சொன்ன அத்தனை விஷயங்களுக்கு ஆதாரம் அந்த ஃபோன்.. அது வேணுமே. இந்த ப்ரூஃப் இல்லேன்னா மாமா பேருல நீங்க இட்டுக்கட்டின கதையா போயிடும் மிஸ்டர் சுந்தர்.. அந்த ஆபிள் மொபைல் எங்க போச்சுங்கறதைக் கண்டுபிடிக்கணும்.”

 

அவன் தலையாட்டிக்கொண்டே சென்றுவிட்டான்.

 

கல்யாண் வெறுப்புடன் சொன்னான்.

“பாருங்க.. அவனோட மனசு பாரம் இறக்கிட்டானாம். எனக்குத் தலையே வெடிச்சுடும் போல இருக்கு. ”

 

“முரளியும் சரி, சுந்தரும் சரி, எல்லா விஷயமும் சொன்னாங்க.. ஆனா கொலையைப் பத்தியே சரியாப் பேசலை.. ரெண்டு பேர் மேலயும் தனித்தனியாவே கேஸ் போட்டாக் கூட அவங்க ரெண்டு பேருமே தனித்தனியாவே கொலை பண்ணாங்கன்னு போலீஸால் ப்ரூவ் பண்ணமுடியும். ஆனா இறந்தது ஒத்தர்தானே.. ரொம்ப கன்ஃபூஷன்ல போயிண்டுருக்கே மிஸ்டர் கல்யாண்.”

 

‘சரிதான்’ எனச் சொல்லி சிரித்தான் ரவி. “கோம்டி.. நீ ஒண்ணு பண்ணலாம்.. இவங்க ரெண்டுபேருக்குமா டாஸ் போட்டுப் பார்த்துட்டு தலை விழுந்தா அவனே குற்றவாளின்னு சொல்லி ஈஸியா ப்ரூவ் பண்ணிடலாம். இந்த கேஸும் முடிஞ்சாமாதிரிதான்.”

 

கல்யாண் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருந்தான். அதே சமயம் கோம்டி மொபைலில் நிறைய மெஸேஜ் வரும் சப்தங்கள் கேட்டதால் தன் மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தாள். வந்த மெஸேஜ்களைப் படித்து விட்டு கல்யாணைப் பார்த்தாள்.

 

“கல்யாண்! இன்னிக்கி லஞ்ச்சுக்கு முன்னாடி நான் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க இன்ஸ்பெக்டர் மோகனோட பேசினேன்..”

 

போலீஸ் ஸ்டேஷன்.

 

“சீக்கிரம் இந்தக் கேஸ் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரணும். நீங்க என்னென்ன கண்டுபிடிச்சிங்க? அந்த சுமதியைப் பாத்தீங்களா? கந்தசாமியோட ஃபோன் ரொம்ப ஓல்ட். அதுல இருக்கற நம்பர்லாம்  நமக்குத் தெரிஞ்சவங்க நம்பர்தான்.. இந்த ஸ்மார்ட் ஃபோன் காலத்துல இப்படியும் ஒரு ஓல்ட் ஃபேஷன் மனுஷனான்னு ஆச்சரியப்பட்டேன். அவர் உலகம் ரொம்ப சிறிசு போல இருக்கு. இந்த ஃபோன் நம்பர்லாம் நமக்கு உபயோகப்படாது. இந்தாங்க சிதம்பரம் ஃபோன் நம்பர். நாங்க இன்னும் பேசல. நாங்க பேசினாலும் சரியா சமாதானம் கிடைக்காது. அந்தம்மா பேரு சூடாமணி. அங்க ரஞ்சிதான்னு யாரும் இல்லே.  நீங்க வேணா பேசிப் பாருங்க..”

 

“தேங்க்ஸ் சார். நான் பேசறேன். இந்த விவகாரத்துல இன்னும் ரெண்டு நாள்ல நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும்னு நான் நம்பறேன். பார்ப்போம்.”

 

“உங்களுக்கு இதுவரை கிடைச்ச தகவல்ல ஏதேனா லீட் கிடைச்சுதா? இவனாதான் கொலைகாரனா இருக்கலாம்னு சந்தேகப்பட்டா கூட சொல்லுங்க.. நான் அவனை எஸ்கேப் ஆகாம இருக்கறதுக்கு ஒரு போலீஸை அனுப்பிச்சு கண்காணிக்கச் சொல்லிடறேன்..”

 

“இன்னும் ரெண்டு நாள் போகட்டும் சார்.. நானே கேட்கிறேன். இந்த சூடாமணியும் சரி, வேற யாராக இருந்தாலும் அவங்களை விசாரிக்கறச்சே ஒருவார்த்தை ‘இன்ஸ்பெக்டர் மோகன்’ இந்தக் கேஸ்ல ரொம்ப கவனமா இருக்கார்னு நான் சொல்லலாமா சார்.. போலீஸ்ங்கற ஒரு வார்த்தை அவங்களை பொய்யைக் கம்மியா பேச வைக்கும்.. பொய்யை கம்மியா பேசறச்சே உண்மைங்க கொஞ்சம் ஜாஸ்தி வரும்.. அதனாலதான் கேட்கறேன்”.

 

“கோமதி..” இன்ஸ்பெக்டர் பேசுமுன் ஞாபகப்படுத்துகிறாள்.

 

“இல்ல சார்! கோம்டி..”

 

“கோம்டி! உங்க மேல நம்பிக்கை ஜாஸ்தியா இருக்கு. நீங்க தாராளமா போலீஸ்ங்கிற வார்த்தையையும் இன்ஸ்பெக்டர் மோகன் விசாரிக்கச் சொல்றார்ங்கிற வார்த்தையையும் யூஸ் பண்ணிக்கலாம். ஆனா எனக்கு எல்லாத் தகவல்களையும் அப்படியே சொல்லணும்..”

 

“நிச்சயமா சார்.. எப்படியானாலும் ஃபைனல் அதாரிடியே நீங்கதானே..?”

 

“எஸ்.. தேங்க் யூ.!”

 

மறுபடியும் நிகழ்காலத்துக்கு வருகிறாள் கோம்டி. கல்யாண் வீடு

 

கல்யாண்! நான் இங்க வரும்போதே சூடாமணிகிட்டே பேசிட்டுதான் வந்தேன். அப்பதான் தெரிஞ்சது.. சுந்தர் அந்தப் பணத்தை அவளுக்குத் தரலேங்கறது.. ஆனா இந்த சூடாமணி திருச்சில குழந்தைங்க ஆசிரமத்தை சூபர்வைசரா பார்த்துட்டு வரச்சே இந்த கந்தசாமி, ஸாரி, உங்க பெரியப்பா அவளோட சினேகிதம் வெச்சிருக்கார். ஆசிரமத்துக்கு நிறைய ஹெல்ப் பண்றவர் போல. சூடாமணியோட பொண்ணு பிரியாவை அவள் இஷ்டத்துக்கு விரோதமா பணிய வெச்சிருக்கார், முரளி சொன்னாப்பல அதே கதையைத்தான் சூடாமணியும் சொன்னாள். ஆனா பிரியா விஷயத்தை விட இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்த சூடாமணியை கன்வின்ஸ் பண்ணி குழந்தைங்க சில பேரை சென்னைல படிக்கவெக்கறேன்னு இங்க பாலபாலிகா ஆசிரமத்துக்கு அனுப்பி வெச்சு படிக்க வெச்சிருக்கார். ஆனா இங்கயும் அந்த ஆசிரமத்துக்கு இவர் டொனேஷங்கிற பேருல கொடுத்து இவரோட காம லீலையை செஞ்சிருக்க வாய்ப்புண்டு.”

 

“ஆனா சுந்தர்தானே இவர் இங்க வர்றதுக்கு முன்னாடிலேர்ந்து அந்த ஆசிரமத்து விஷயம் இவர் சார்பா பார்த்ததா சொன்னான். இவனுக்கு எவ்வளோ தூரம் சம்பந்தம்னு தெரியலியே கோம்டி!”

 

ரவி குறுக்கிட்டான். பாலபாலிகா ஆசிரமத்தில் சமீபத்தில் ஒரு பெண் காணாமல் போய்விட்டதாக அந்த மேனேஜர் என்னிடம் சொன்னார். அதன்பின் நான் யார் யார் எப்படி எப்படி அங்கே வருகிறார்கள் யார் உதவி செய்யறாங்க எல்லாம் கேட்கறச்சேதான் இந்த சிதம்பரம் சூடாமணி விஷயம் கிடைச்சுது. இப்போ இந்தம்மா இந்த ஆசிரமத்தோட சம்பந்தம் இல்லேன்னாலும் காணாமப் போன விஜயாவை திருச்சிலேர்ந்து சென்னைக்கு கந்தசாமி, சாரி, கல்யாண் பெரியப்பா வற்புறுத்தி அனுப்பிவெச்சாராம். சூடாமணி இதுக்கு முன்ன திருச்சில ஆசிரமத்துல வேலை பண்றச்சே அங்கிருந்து மேல படிக்க வைக்கிறதுக்காக இந்த பாலபாலிகா ஆசிரமத்திலே ஒரு ஒப்பந்தம் வெச்சிருக்காங்க, அதனால கந்தசாமியும் இங்க நிறைய உதவி பண்ணுவாராம். அப்பப்ப வருவாராம். சுந்தரையும் அழைச்சுண்டுதான் வருவாராம். இதெல்லாம் இந்த பாலபாலிகா ஆசிரமம் மூலமா செரிஞ்சதைத்தான் கோம்டிகிட்டே சொன்னேன்.’

 

“சுந்தரோட வேலை ஒண்ணும் பெரிசா இங்க இல்லேன்னு நினைக்கிறேன். மனசாட்சிக்குப் பயப்படறவன்னு தெரியுது. ஆனாலும் கொலை நடந்த அன்னிக்கு இவன் சொல்லற விஷயம் கன்வின்ஸிங்கா இல்லே. முரளியைப் போல் இவன் அவராலே ஏதும் பாதிக்கப்படலே என்றாலும் தன்னோட மாமா இப்படிப்பட்டவரான்னு அவனுக்கு அதிர்ச்சி. அதுலயும் திருச்சிலேர்ந்து வந்த ஒரு சிறுமியை ரொம்ப பாசமாப் பார்த்துருக்கான். அவளுக்கு எல்லா உதவியும் செய்திருக்கான். அந்தச் சிறுமியை இவனோட மாமாவே காமலீலைக்கு உபயோகப்படுத்தியது இவனுக்குப் பிடிக்காம போய் இவன் கொலை பண்ணியிருக்க வாய்ப்புண்டு.. சந்தேகம்தான் படலாம். நிரூபிக்க முடியாது.. இப்போ முரளி மேல உள்ள சந்தேகம் இன்னும் அப்படியே இருக்கு. போலீஸ் முரளியையும் ஈஸியா ஃப்ரேம் பண்ணி அரெஸ்ட் பண்ணலாம்.”

“என் பெரியப்பா கொலைன்னு பார்க்காம, சாதாரண மூணாவது ஆளாப் பார்த்தேன்னா உங்களோட அறிவு பிரமாதமான அறிவு கோம்டி. ஆனா இந்த கொலைச் சம்பவத்தை அப்போது சாயங்காலம்  நடந்த சம்பவத்தை எப்படி இந்த ரெண்டு பேரோடு இணைக்கமுடியும்? எப்படிக் கொலை பண்ணி இருக்காங்கன்னு போலீஸால சொல்லமுடியும்.? இணைப்பு வரல்லியே..”

 

“நல்ல கேள்வி! இவ்வளோ தூரம் வந்திருக்கோம்.. இன்னும் கொஞ்சதூரம் வந்தோம்னா விடை கிடைக்காம போகாது. ஆனா ஒண்ணு சொல்லலாம் மிஸ்டர் கல்யாண்! எத்தனைதான் உங்க சொந்த பெரியப்பா கொலையாச்சேன்னு நினைச்சாலும் உங்க பரிதாபத்துக்கோ இல்லை பாசத்துக்கோ கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒரு கொடூர ஆத்மா அவர். அதனால உங்க துக்கத்தை விடுங்க.. இந்தக் கேஸுல இன்னும் ரெண்டு மூணு பேரை விசாரிக்கணும். (அப்போது அவள் மொபைலில் ஃபோன் வர எடுக்கிறாள்). அவளே பேசுகிறாள்.

 

“ஹேய் சாந்தி.. எதிர்வீட்லதான் இருக்கேன்..  நீ எப்போ வரே? ஓ.. வந்துட்டியா.. இரு வரேன்..” என்று சொல்லியவள் கல்யாணிடம் சொல்லிக் கொண்டு கிளம்புகிறாள்.

 

ரவியோட தங்கை சாந்தி இப்போ வீட்டுக்குதான் வந்திருக்கா.. நான் கிளம்பறேன்..

 

வீட்டில் காத்திருந்த சாந்தியுடன் அவள் வண்டியில் இருவரும் வெளியே கிளம்புகிறார்கள். உட்கார்ந்துகொண்டே கோம்டி அவளிடம் சொல்கிறாள்.

 

“சைதாப்பேட்டைல பாலபாலிகா ஆசிரமம் போகணும்.. இதோ இந்த அட்ரஸ்’டி..”

 

பாலபாலிகா ஆசிரமத்தில் வண்டியை நிறுத்த இருவரும் உள்ளே நுழைகிறார்கள். அங்கு ஒரு வயதானவர் இருக்கிறார். அவரிடம் பேசுகிறார்கள்.

 

“நாங்க போலீஸ் டிபார்ட்மென்ட்லேர்ந்து வரோம். உங்கள்ட்ட சில கேள்விகள் கேட்கணும், அதுவும் கந்தசாமி விஷயமாதான் பேச வந்தோம். நீங்க பெரியவர். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பீங்கன்னு தெரியும். இந்த மாதிரி பாலபாலிகா ஆசிரமம் இலவசமா நடத்தறதே  இந்த காலத்துல ரொம்ப கஷ்டம்தான். ஆனா நீங்க சக்ஸஸ்ஃபுல்லா நடத்தறது ரொம்ப சந்தோஷம்.”

 

“உட்காருங்கம்மா.. நேத்து கூட ஒருத்தர் இப்படித்தான் வந்தார்.. ஆனா கடைசிவரைக்கும் போலீஸ்னு ஒரு வார்த்தை சொல்லலே.. நீங்க வந்திருக்கீங்க..எங்க ஆசிரமத்துக்கு ரொம்ப உதவி பண்ணினவர் கந்தசாமி.. ரொம்ப வருஷமா அவர் உதவி பண்ணிண்டு வரார். அவரோட ஏஜண்ட் மூலமா முதல்ல உதவி பண்ணார். இப்ப மூணு வருஷமா அவரே சென்னை வந்துட்டார்.. அப்பப்ப வருவார். பணம் கொடுப்பார்.. நல்ல மனுஷனை யாரோ சுட்டுட்டாங்க.. அதுதான் வருத்தமா இருக்கு.”

 

“ஏஜண்ட்ன்னு சொன்னீங்களே.. அவர் பேரு சுந்தர் இல்லையா?”

 

“ஆமாங்க.. அவரு ஆறேழு வருஷமா இங்க ஆசிரமத்துக்கு அக்கௌண்ட் ஃப்ரீயா எழுதித் தருவார். அவரே ஃபைனான்ஸ்லாம் பார்த்துக்குவார். அப்பப்ப டொனேஷன் வாங்கித் தருவார். ஆடிட்டிங்க் செய்து தருவார். இங்க இருக்கற இன்மேட்ஸ் எல்லாருக்கும் ஏதாவது புதுசா அவர் செலவுல ஏதாவது வாங்கித் தருவாரு.! எங்களுக்கும் நம்பிக்கையான ஆளு தேவை இல்லையா.. கந்தசாமியோட உறவு வேற.. காசு வாங்காம செய்யறாரு”

 

“அது சரி, உங்க ஆசிரமத்து லேடஸ்ட் ரசீது புக் கொஞ்சம் காமிக்க முடியுமா?”

 

“இருக்குங்க.. ஆனா அந்த மேஜை டிராயர் சாவி சுந்தர்கிட்ட இருக்கு. அவர் வந்துதான் எடுக்கமுடியும்மா.. எல்லாம் பக்காவா வெச்சிருப்பார்மா..”

 

“சரி, சுந்தர் எப்ப வருவாரு?”

 

“அவர் ஒரு வாரமா வரல்லேம்மா.. கடைசியா அவங்க மாமா கந்தசாமியை அழைச்சுண்டு வந்தார். அதுக்கப்பறம் வரல்லே.. மாமா போயிட்டாரு இல்லையா.. ரொம்ப பிஸியா இருப்பார்.”

 

“ஓ! அப்போ கடைசி தடவையா கந்தசாமி வந்தாரு இல்லையா.. அப்ப அவர் கூடவே சுந்தரும் இங்க இருந்தாரு இல்லையா?

 

“ஆமாம்மா கூடவே இருந்தாரு.”

 

“அப்போ மாமா எதுக்காக வந்தார் அன்னிக்கு.. பணம் கொடுக்க வந்தாரா? இல்லே வேற விஷயம் பேசினாரா?”

 

அந்தப் பெரியவர் தயங்கினார். பின்னர் மெதுவாகப் பேசினார்.

 

“ஒரு நாலு மாசம் முந்தி ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்து போச்சும்மா. விஜயான்னு ஒரு பதிமூணு வயசுப் பொண்ணு. காணாமப் போயிடுச்சு. எப்படிக் காணாமப் போயிடுச்சுன்னா அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் மூளைல ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணினா தெளிவாகிற வியாதி வந்திருக்கு. ஆனா ஆபரேஷனுக்கு அதிகப் பணம் தேவைப்படுது. அன்னிக்கு கந்தசாமி இந்தப் பொண்ணையும் இன்னும்  ஒரு மூணு பொண்ணுங்களை பீச்சுக்குக் கூப்பிட்டுண்டு போனார்மா. அப்பப்ப பண்றதுதான். சுந்தருக்கு இந்தப் பொண்ணு மேலே ரொம்பப் பாசம். அவரும் நிறைய இப்படி செய்வாரு. ஆனா ராத்திரி திரும்ப வரச்சே அந்த விஜயா வரல்லே.. மீதி மூணு பொண்ணுங்களையும் கொண்டு வந்து அழுதாரு. மெரீனா பீச்சுல இந்த நாலு பேரும் விளையாடிக்கிட்டிருந்தாங்க.. கந்தசாமி கடற்கரைல உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்திண்டிருந்தார். நைட் வந்ததனாலே விளையாடற பொண்ணுங்களையெல்லாம் கூப்பிட்டு போதும் வாங்க போகலாம்’னு சொல்லியிருக்கார். மூணு பொண்ணுங்க வந்தாங்க.. நாலாவது விஜயாவை ஆளைக் காணோம். உடனே எல்லாரும் தேடினாங்க.. கிடைக்கலே.. கந்தசாமி ரொம்ப வருத்தப்பட்டாரு.. எங்க போயிடுச்சோ அந்த பொண்ணு.. ஒண்ணுமே தெரியாத பொண்ணாச்சேன்னு அழுதாரு, பாவமா இருந்தது.. நான் அவரை சமாதானப்படுத்தி எங்க போயிடுங்க.. அதுவே வருதான்னு பார்க்கலாம். இல்லைன்னா என்ன பண்ண முடியும்? ஏற்கனவே இப்படி மூணு பேரு இந்த ஆசிரமத்துல காணாமப் போயிட்டாங்க. அத்தோட நாலாவதா சேர்த்துக்க வேண்டியதுதான்னு சொல்லிட்டேன்..”

 

“ஓ! அப்போ அந்த விஜயாப் பொண்ணு நாலு மாசம் முன்னாடி காணாமப் போயிடுச்சு. மீதி வந்த பொண்ணுங்க அந்தப் பொண்ணைப் பத்தி எதுவும் சொல்லலியா..?”

 

“அவங்களும் தேடியிருக்காங்கம்மா.. கிடைக்கலே தாத்தான்னு சொன்னாங்க.. பாவம் அந்தப் பொண்ணு..”

 

தன் மொபைல் ஃபோனைத் திறந்து ஒரு போட்டோவைக் காண்பித்தாள்.

“பாருங்க.. இந்தப் பொண்ணுதானே விஜயா?”

 

“ஆமாம்மா.. இந்தப் பொண்ணுதான்.. கந்தசாமி கம்ப்ளெயின் உங்கள்ட்ட கொடுத்தாராம்மா.. அந்தப் பொண்ணுக்கு ஒரு வியாதி.. மூளை சம்பந்தப்பட்டது.. சுந்தர் அந்தப் பொண்ணுக்கு மெடிகல் டொனேஷன் வாங்கணும்னு ரொம்ப முயற்சி பண்றாரு.. அதுக்காக எடுத்த போட்டோ இது.”

 

“அது இருக்கட்டும். போனவாரம் சுந்தரும் கந்தசாமியும் சேர்ந்து வரச்சே என்னவோ நடந்ததுன்னு ஆரம்பிச்சிங்க இல்லையா.. என்ன நடந்தது?”

 

“இந்த விஜயா பேருதான்மா அவங்க பேசிக்கிட்டாங்க.. பெரியவர் கோபப்பட்டாரு, அடிக்கடி அந்தப் பொண்ணு பேரைச் சொல்லி எதுக்குடா என்னை மிரட்டறேன்னு சுந்தர்கிட்ட கோபமா கேட்டாரு.. சுந்தர் ஏதோ திருப்பிச் சொன்னாரு. என்ன சொன்னாருன்னு ஞாபகம் இல்லே.. ஆனா நான் சுந்தர்கிட்டே ‘விடுங்க தம்பி.. அவருதான் எல்லா இடத்துலயும் தேடினேன்னு சொன்னாரு இல்லையா அப்படின்னு சொன்னேன். கந்தசாமி உடனே அழ ஆரம்பிச்சுட்டாரு.. போதும்டா எனக்கு இந்த தண்டனை.. எத்தனை பேரைன்னு சமாளிப்பேன் நான்? எல்லாத்துக்கும் நான் பிராயச்சித்தம் பண்ணிடறேண்டா.. நீ அதுக்கு மாத்திரம் ஹெல்ப் பண்ணுடா’ன்னு கெஞ்சினாரு..”

 

‘உங்களுக்கு தனிப்பட்ட முறைல கந்தசாமி மேல இந்த விஜயா விஷயமா ஒரு சந்தேகமும் வரலியா?’

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.