திவாகர்

 

 

“டேய்.. இதுல என்னடா பார்த்தே.. நான் என்னத்தைப் பார்த்தேன்னு நீ பார்த்தே?.. சொல்லுடா.. சொல்லு.. என்ன பார்த்தே..”

 

“மாமா இது அநியாயம். ஃபோன்ல பார்த்துண்டு இருந்தது நீங்க.. ஆனா, என்னைப் போய் எப்படி அப்படி கேட்கலாம். அதுவும் அசிங்கமான படங்க.. அதனால கொஞ்சம் ஷாக்காயிட்டேன். ஆனா கீழே போட்டது நீங்கதானே?”

 

சட்டென சமாளித்தார்.  “டேய் சுந்தர்.. அது ஒண்ணுமில்லேடா.. இந்த வாட்ஸப்ல ஏதோ அப்படி இப்படின்னு ஃபோட்டோ இமேஜ் வந்தது.. வாட்ஸ் அப்லே இதெல்லாம் சகஜம்.. அதெல்லாம் அழிச்சிட்டிருந்தேன்.. நீ பார்த்துட்டே போலருக்கு. சரி சரி.. இப்போ ஃபோன் உடைஞ்சு போச்சே.. உனக்குத் தெரிஞ்ச ரிப்பேர்க்காரன் இருக்கானா? ஆனா இது ஆபிள் ஃபோன்.. அவன் ஏஜென்ஸிதான் ரிப்பேர் பண்ணுவான். அவனுக்கு ஃபோனைக் கொடுத்தா அவனும் உன்னை மாதிரி ஏதேனா ஏடாகூடமான படத்தைப் பார்த்துட்டு உங்க மாமா இப்படிபட்டவராடான்னு கேட்டாலும் கேட்பானேடா.. அத்தோட ரொம்ப இம்பார்ட்மென்ட் விஷயம்லாம் வெச்சிருக்கேன். சில காண்டாக்ட் நம்பர்லாம் இருக்கு. இந்த ஃபோன் எங்கிட்ட இருக்கறதே யாருக்கும் தெரியாதுடா. இந்த ஃபோன்லேர்ந்து யாருக்கும் ஃபோன் கூட பண்ணமாட்டேன்.. ”

 

சுந்தர் எதுவும் பேசவில்லை. கன்னத்தைத் தடவியபடி இருந்தான். அவர் சுந்தரின் கன்னத்தின் அருகே வந்து கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.

 

“நான் எப்பவுமே உன்னை அடிச்சதில்லே.. என்ன இருந்தாலும் இன்னொரு தகப்பன் பெத்த பிள்ளை நீ.. என் சொந்த மகனா நினைச்சு அடிச்சுட்டேன்.. தப்புதான்..”

 

“மாமா அப்படி சொல்லாதீங்க.. உங்களுக்கு எல்லா உரிமையும் என் மேல இருக்கு. விவரம் தெரியாம வந்து எட்டிப் பார்த்தது என் தப்புதான். மாமா.. இந்த மாதிரி ஆபிள்மொபைல் எல்லாம் நானே ரிப்பேர் செய்வேன் மாமா..  நான் சரி பண்ணிக் கொடுத்துடறேன்.. ரூம்ல இதுக்கான ஸ்பெஷல் டூல்கிட் இருக்கு. எனக்குக் கொடுங்க.. அலுங்காம நலுங்காம மேல கூட ஒரு புது கவர் போட்டு புதுசாவே கொடுத்துடறேன்.”

 

மாமா யோசித்தார். “சுந்தர்.. இது அப்படியில்லேடா. சில லேவாதேவி கேஷ் கணக்கெல்லாம் அவங்கவங்க பேருல எழுதி ரகசியமா வெச்சுருக்கேன். நாளைக் காலைல ஆடிட்டர் இங்க வருவாரில்லையா.. அவர்கிட்டே இதெல்லாம் காண்பிச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்.” என்றவர் கீழே கிடந்த ஆடிட்டர் பேப்பரையெல்லாம் பொறுக்கி கையில் அடுக்கி வைத்துக் கொண்டு பேசினார்.

 

“இந்த பேப்பர்லாம் அந்தக் கணக்கோடு பார்த்து ஃபைசல் பண்ணனும்டா.. நீ ஒண்ணு பண்ணேன்.. அடையாறுலதான் உன் ரூம் இருக்கு. போய் அந்த டூல்கிட் கொண்டு வந்துடு. நீ இங்கயே நைட் சாப்ட்டுக்கலாம். அப்படியே இங்கேயே ரிப்பேரும் பண்ணிடு. மேல கவர் நாளைக்கு கடைல வாங்கி புதுசா போட்டுக்கலாம். நாளைக்கு வரச்சே நீயா புதுக் கவரை வாங்கிவந்துடேன்..”

 

“சரி மாமா” என்று சொன்னவன் கடகடவென தன் பைக்கில் கிளம்பினான்.

 

மறுபடியும் தற்போதைய நிலைக்கு வந்தான் சுந்தர். அவனையே கல்யாணும் கோம்டியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“நான் என் ரூமுக்குப் போய் ஆப்பிள் ஃபோன் ரிப்பேர் டூல்கிட் எடுத்துட்டு அப்படியே வர வழியிலே ஒரு ஃபோன் சேஃப்டி அப்பர்கவரும் வாங்கிண்டு வீட்டுக்கு வந்தேன். மாமா ரொம்பவே பரபரப்பா வாசல்லியே எனக்காகக் காத்துண்டிருந்தார். இதுக்குப் போய் இவ்வளவு டென்ஷன் ஆகறாரே’ன்னு கூட நினைச்சுண்டேன்.. ஹால்லயே அவர் ஃபோன் எடுத்து ரிப்பேர் பண்ணேன். என் பக்கத்துலேயே இருந்தார்.”

 

மறுபடியும் அவன் நினைவுகள் வலம் வந்தது. மாமா வீட்டில் அவர் நிம்மதியற்று நின்று கொண்டிருக்க சுந்தர் மொபைல் முழுவதையும் அக்கு வேறாக ஆணி வேறாக கழட்டினான். உள்ளே எதையோ கொஞ்ச நேரம் நோண்டினான். சில பாகங்களைத் துணியால் துடைத்து வாயால் ஊதினான். பிறகு பத்திரமாக அதை வைத்துவிட்டு ஃபோனை மறுபடியும் சேர்த்து வைத்து பழைய நிலைக்குக் கொண்டு வந்து சார்ஜிங்க் செய்து ஆன் செய்தான். கருநிறம் சூழ நடுவில் வெள்ளையாய் ஆபிள் படம் வெளி வர ஃபோன்  திறக்க ஆரம்பித்தது.

 

“மாமா இதுக்கு ஓபனிங்க் பாஸ்வேர்ட் வெச்சிருக்கீங்களா?”

 

“எதுக்குடா.. பாஸ்வேர்ட்   நான் அதெல்லாம் வெக்கிறதில்லேடா.. ஓபன் பண்ணா வந்திருமே.. ”

 

“சரி மாமா.”

 

“அவன் மொபைலைத் திறக்க முயற்சிக்கிறான்,, முதலில் ஆபிள் படம் சின்னதாக வந்து முழுவதுமாக முடிந்ததும் அதன் மேல் சேஃப்டி கவரை ஒட்டினான். அப்படி ஒட்டும்போதுதான் சடாரென ஒரு வண்ணப் படமாக அந்த ஃபோனில் வர அப்படி வந்தது என்னவோ ஒரு பெண்ணின் முழு நிர்வாணப்படம். அதை ஆஃப் செய்து புதிதாக வாங்கிவந்த பிளாஸ்டிக்கண்ணாடி கவரை ஒட்டிச் சட்டென அந்த ஃபோனை மாமாவிடம் கொடுத்துவிட்டான்.”

 

“ஆஹா.. ரொம்ப தேங்க்ஸ்டா.. வா வா சாப்பிடலாம்..”

 

 

 

 

 

இருவரும் சாப்பிடும்போது அவன் மெல்லக் கேட்டான். அவன் கை சோற்றைப் பிசைந்து கொண்டே இருந்தது. சாப்பிடாமல் பேசினான்.

“மாமா.. தப்பா நினைச்சுக்காதீங்க.. நான் கேக்கறேன்னு.. இப்போ நான் பார்த்த படத்தோட முகம் கொஞ்ச நாள் முன்னாடி நம்ம பால பாலிகா ஆசிரமத்துலேர்ந்து காணாமப் போன ஒரு சின்னப் பொண்ணு முகம் போல இருக்கு.. மாமா எனக்கென்னவோ சோறு ஏறமாட்டேங்குது மாமா.. அது சின்னக் குழந்தை மாதிரி தெரியுது..”

 

“என்னடா சொல்லறே.. எதுனா கற்பனை பண்ணி மனசுல விபரீதமா நினைக்காதே..”

 

“விபரீதமா அப்படி எதுவும் இல்லேன்னா ஹாப்பிதான் மாமா.. ஆனா அந்த முகம் மட்டும் அப்படியே அந்த சின்னப் பொண்ணோட முகம்தான்.. நான் அப்பர் கவரை ஒட்டறச்ச நல்லா பார்த்தேனே”

 

“எதுவும் உளறாதடா”

 

“உளறல மாமா.. நாலு வருஷமா அந்தப் பொண்ணைப் பார்த்துண்டே வரேனே.. நீங்க திருச்சிலேர்ந்து ஒன்பது வயசுப் பொண்ணா அனுப்பிச்சிங்களே.. சென்னையில நான் இருக்கேன்னு எனக்குதானே சொல்லுவீங்க.. புதுத்துணியெல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கேன்.. எக்ஸிபிஷன் வந்தா அழைச்சுண்டு போவேன்.. குழந்தை மாதிரி வருமே.. நான் கல்யாணம் பண்ணிண்டு குழந்தையைப் பெத்துண்டேன்னா இந்த மாதிரி பொண்பிள்ளையா பிறக்கணும்னு நினைச்சுப்பேன் மாமா..”

 

“இதெல்லாம் ஏண்டா இப்போ சொல்லறே?”

 

“இப்போ அந்தப் பொண்ணை இப்படிப் போட்டோவுல பாக்கறது கஷ்டமா இருக்கு மாமா..”

 

மாமா உறுமினார். “டேய்.. உன்னை நான் இங்க கூப்பிட்டது தப்பா போச்சு.. வெளில போய் எதுனா கன்னா பின்னான்னு இது மாதிரி உளறி வெக்காதே.. எனக்கு நீ பாடம் நடத்துறியா?”

 

“எனக்கு ஏதோ வித்தியாசமா படறது மாமா.  இந்த மாதிரி படம்லாம் இப்படிப் பாக்கறதுக்குன்னே நிறைய பேர் பணம் கொடுத்துப் பாப்பாங்களாம். சமீபத்துல ஒரு கேஸ் பேப்பர்ல நியூஸா வந்தது. அரபு நாடுகளுக்குக் கூட இந்த மாதிரி போட்டோ அனுப்பிச்சு அந்த சாம்பிள் காமிச்சு அந்தப் பொண்ணையே விக்கறதாவும் அவனை அரெஸ்ட் பண்ணி போஸ்கோ சட்டத்துல உள்ளே தள்ளினதாவும் நியூஸ் படிச்சேன்.”

 

“இப்போ எதுக்குடா இதெல்லாம் சொல்லறே?”

 

“இந்த மாதிரி போட்டோ வெச்சிருந்தாலும் அவங்களை அரெஸ்ட் பண்றதுக்கு போலீஸுக்கு உரிமை இருக்கு. அதனால எதுனாச்சும் போட்டோ இருந்தாலும் அதை ரிமூவ் பண்ணிடுங்க மாமா..”

 

“சுந்தர் எனக்குத் தெரியும். எதை எப்படி ஹாண்டில் பண்ணனும்னு. நீ சின்னப் பையன். உனக்கு வேண்டாத விஷயத்துல தலையிடாதே.. புரியறதா?”

 

“மாமா எனக்கு ஏன் வீண் வம்புன்னு என்னால அப்படி விட முடியலே.. ஏன்னா அதுக்குக் காரணம் அந்தப் பொண்ணுதான்.. வேணாம் மாமா.. இப்போ அந்தப் பொண்ணு கூட ஆசிரமத்துல இல்லே. காணாமப் போனவ திரும்ப வரவே இல்லை. அவளுக்கு  ஏதாவது  ஏடாகூடமா ஆகக்கூடாது மாமா”

 

அவன் எழுந்துவிட்டான். சாப்பிடவில்லை. மாமா யோசித்தார். தன் அறைக்குப் போனார். பீரோவைத் திறந்து ஒரு கட்டு பணம் எடுத்து வந்தார்.

 

“இதோ பார்.. இந்த பணம் உனக்கு லஞ்சமா தரலே.. பாசத்தோடு தரேன். உன் மனசு கவலையா இருக்கு. எங்கயாவது கோவா கீவான்னு போயிட்டு வா..  நாம அப்பறமா பேசலாம் இதப் பத்தி.”

 

“வேணாம் மாமா இந்தப் பணமெல்லாம்..”

 

“டேய்.. உன்னை வளர்த்தவன் நான். எனக்குத் தெரியும்.. யாருக்கு என்ன கொடுக்கணும்.. எது கொடுக்கக்கூடாதுன்னு.. போடா.. நாலு நாள் லீவு போடு.. மனசுல எந்த விஷயத்தையும் அப்படியே வெச்சுக்காதே..  போய் வாழ்க்கையை நல்லா எஞ்சாய் பண்ணு..”

 

என்று சொன்னவர் அவன் பாக்கெட்டில் அந்த  நோட்டுக் கட்டைச் செருகினார். அவனைத் தட்டிக் கொடுத்தார்.

 

திரும்பவும் தற்காலத்துக்கு வந்தான் சுந்தர்.

 

கல்யாண் தலையில் கை வைத்துக் கொண்டான். கோம்டி மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். சுந்தர் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

“இப்படித்தான் ஆரம்பிச்சது இந்த விவகாரம். எப்போ மாமா எனக்கு இதெல்லாம் புரிஞ்சு போயிடுச்சுன்னு நினைச்சாரோ என் வாயை மூட அப்பலேர்ந்து எனக்குப் பணமழை பொழிய ஆரம்பிச்சதுடா கல்யாண். முதல்ல நான் மாமாவுக்கு புத்திமதி சொன்னவன். ஆனா மாமா இந்த விஷயத்துல ரொம்ப நல்லா ஊறிப் போனவர்னு தெரிஞ்சவுடனே என்னாலே எதுவும் பண்ணமுடியலே..”

 

“அப்போ நீங்களும் உடந்தையாதான் பிற்பாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சீங்களா? நல்லா பணக்காரரா மாறியிருப்பீங்களே!”

 

“சத்தியமா நான் இந்த மாதிரி வேலையெல்லாம் மனசால கூட நினைச்சுப் பண்ணமாட்டேன் கல்யாண். என் தப்பு என்னன்னா நான் இந்த விஷயத்தை வெளியில சொல்லமுடியாத நிலையில இருந்தேன். ஆனா அதுக்குன்னு அவருக்கு நான் உடந்தையா மட்டும் நிச்சயம் இல்லே. மாமா கூட அதுக்கப்பறம் நான் அவர்கூட இருக்கறவரைக்கும் இந்த மாதிரி வேலை செய்யலேன்னுதான் நான் நினைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சதைத்தான் சொல்றேன்.”

 

“முரளிக்கும் இந்த விஷயம் தெரியுமோ..” கல்யாண் கோபத்தோடு கேட்டான்.

 

“இந்த விஷயம் அவனுக்குத் தெரியாது.. ஆனா முரளிக்கும் மாமாவுக்கும் வேற ஏதோ சின்ன தகராறு இருக்குன்னு தெரியும்.. அதை ரெண்டு பேருமே எங்கிட்ட சொல்லாதனதாலே நானும் கேட்டுக்கலே.. ஆனா சமீப காலமா முரளி அடிக்கடி வர்றது இல்லேங்க்கிறதாலே நான் அப்பப்ப மாமாவுக்குக் கார் டிரைவரா மாறினேன். ஆசிரமத்துக்குப் போவோம். ஆனா மாமா எனக்கு மாசம் பொறந்தா ஒரு லட்ச ரூபாய் கொடுத்திண்டு வந்தாரு. எனக்குக் கொடுத்த ஒரு லட்ச ரூபாயும் நான் ஆசிரமத்துக்கே கொடுத்துட்டேன். வேணுமின்னா நீங்க அங்க போய் செக் பண்ணிக்கலாம்.”

 

‘ஒஹோ..’

 

கல்யாணின் குரல் கொஞ்சம் கேலியாக ஒலித்தது.

 

“இன்னும் அந்த பத்து லட்ச ரூபாய் விஷயம் சொல்லலியே.” கோம்டி ஞாபகமூட்டினாள்.

 

“அதுவும் சொல்லதான் வரேன். கொலை நடந்ததுக்கு மூணு  நாளைக்கு முன்னாடி  நான் அவரை ஆசிரமத்துக்கு அழைச்சிட்டுப் போயிட்டு வீட்டுக்கு வந்தோம்.  இல்லையா.. என்னை உள்ளே கூப்பிட்டார். பத்து லட்ச ரூபாய் பணக்கட்டு கொடுத்து சிதம்பரத்துல ஒரு விலாசத்துல கொடுக்கச் சொன்னார். இதுதான் கடைசின்னு ஏதோ ஒரு வார்த்தை ஒரு காகிதத்துல எழுதினாரு. விலாசம் கூட எழுதினார்.   ரஞ்சிதான்னு ஒரு பொண்ணு பேரு. எனக்கு மகா கோபம் வந்தது. இவ்வளோ சொல்லியும் அவர் மாறலே.. நான் அவர்கிட்டே அந்த பணம் வாங்கினேன். அந்த அட்ரஸ்ஸை தூக்கிக் குப்பைல போட்டேன். அடுத்த நாள் வண்டியை சர்வீஸுக்கு விடறதுக்கு முன்னாடி அந்த பத்து லட்ச ரூபாய் அப்படியே பாலபாலிகா ஆசிரமத்துக்கு டொனேஷனா பாங்க்ல டெபாசிட் பண்ணிட்டேன். நீங்க போய் அங்க செக் பண்ணிக்கலாம்.”

 

சுந்தர் மிகவும் ஆயாசமாகச் சொன்னான்.

 

“அவ்வளவுதான் நடந்தது. நான் கடைசி வரைக்கும் மாமாவைக் காப்பாத்ததான் முயற்சி பண்ணினேன்.. ஆனா முடியலே.. இந்த ஆள் மாறவே மாட்டாருன்னு..”

 

“அதனால அன்னிக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமாவை கொலை பண்ணிட்டீங்களா?”

 

நிதானமாகக் கேட்டாள் கோம்டி. உடனடியாக அவன் அழுதான்..

“இல்லை நான் அவரைக் கொலை செய்யலே.. அவர் எப்படி கொலையானார்னும் எனக்குத் தெரியாது. கொலை நடந்த அன்னிக்கி நான் சென்னைலயே இருந்தேன். பைத்தியக்காரனா பார்க்’லே சுத்திட்டு இருந்தேன்…”

 

“நான் நம்பமுடியாது சுந்தர்.. நான்னு இல்லே.. போலீசும் நம்பாது.?”

 

“இல்ல.. ஆசிரமம் போகலாமான்னு கூட பார்த்தேன். ஆனா எனக்கு அங்க போக அப்போ இஷ்டம் இல்லே.. ஏன்னா நான் சிதம்பரம் போயிருக்கணும்னு நினைச்ச வேளையில ஆசிரமத்துக்கு போயிருந்ததைப் பத்தி மாமா கேள்விப்பட்டாருன்னா இன்னும் திட்டுவாரு. பார்க்’லேர்ந்து பஸ்ல காளிகாம்பா கோயிலுக்குப் போனேன். அதுக்கப்பறம் மகாபலிபுரத்துல ஒரு ரிஸார்ட்க்குப் போய் தண்ணியடிச்சு அங்கே போய் உட்கார்ந்து யோசித்தேன், மனசுல மறுபடி மறுபடி அந்தப் பொண்ணு போட்டோ வந்து மனசைக் குழப்பிக்கிட்டே இருந்தது…”

 

ரவி நிதானமாக கேட்டான். ‘ஸோ.. அப்படிக் குழம்பின மனசோட நேரா வீட்டுக்கு வந்து மாமாவைப் போட்டுத் தள்ளிட்டீங்களா? இப்படித்தான் போலீஸ் முடிவா கேட்டு உங்க மேல குத்தம் சுமத்தி இந்தக் கேஸை முடிச்சுடுவாங்க மிஸ்டர் சுந்தர்.!’

 

‘ஐய்யோ.. நான் சத்தியமா அவரைக் கொலை பண்ணலே.. அந்த நேரத்துல நான் அந்த ரிசார்ட்ல இருந்ததுக்கு என் டெபிட்கார்ட் பேமென்ட் ஏன் அங்க இருக்கற சிசி டிவி கேமரா கூட சாட்சியா இருக்கு.’

 

“ஓ!! அந்தச் சின்னப்பொண்ணுன்னு உங்க மாமா ஃபோன்ல பார்த்தீங்களே.. அந்தப் பொண்ணு இப்போ எங்கே இருக்குது.. சொல்ல முடியுமா?” கோம்டி கேட்டாள்.

 

“அந்தப் பொண்ணை நானும் தேடறேன்.. யாரோ தெரிஞ்சவங்க கிட்டே கொடுத்து வளர்க்கறாரு மாமா.. அப்படிங்கறது என் யூகம்.

 

‘ஆனா ஆசிரமத்து ரிகார்ட்ல அந்தப் பொண்ணு காணாமப் போயிடுச்சுன்னு இருக்கு.” ரவி சொன்னதும் விழித்தான் சுந்தர்.

 

சுந்தர் மௌனமாக இருந்ததால் கோம்டி இன்னொரு கேள்வி கேட்டாள்.

 

“சரி.. நீங்க எந்த தைரியத்துல நீங்களா முடிவு செஞ்சு அந்த பத்து லட்சத்தை ஆசிரமத்துக்குக் கொடுக்கலாம். இந்தக் கொலையே நடக்கலே.. ஒருவேளை உங்க மாமா அந்த ரஞ்சிதாவுக்கு ஃபோன்ல பேசி அந்தப் பணம் வந்துதான்னு கேட்டு அது வரலைன்னு தெரியறச்சே அவர் கோபப்படுவார் இல்லையா.. எந்த நினைப்புல அப்படி செஞ்சீங்க.. ஒருவேளை மாமாவோட இந்தக் கொடூர முடிவை நீங்க முன்கூட்டியே எதிர்பார்த்தீங்களா?”

 

“ஐய்யோ.. அப்படியெல்லாம் இல்லங்க.. இந்த விஷயத்துல அவர் கேள்வி கேட்பாருன்னு நான் எதிர்பார்த்தேன்.. அப்படி கேட்டாருன்னா அந்த ரஞ்சிதா விஷயத்தைக் காமிச்சு அவரைத் திருப்பி நாலு வார்த்தை கேட்டு, நீங்க திருந்தவே மாட்டீங்களான்னு நல்லா திட்டிட்டு அதுக்கப்பறம் பாலபாலிகா ஆசிரமத்துக்கு நான் கொடுத்த பத்து லட்சத்தைக் காமிக்கலாம். அத்தோட இந்த விஷயத்தையெல்லாம் கல்யாண்கிட்டே சொல்லிட்டு அன்னியிலேர்ந்து அவரோட சகவாசத்தையும் உறவையும் ஒரேயடியா அறுத்துக்கலாம்னு மனசுல வெச்சிருந்தேன். ஆனா அவர் கொலையானது எனக்கு அதிர்ச்சிதான்.”

 

“சரி, நீங்க இந்தக் கொலையைச் செய்யலேன்னு வெச்சுக்கலாம். அப்போ யார் செஞ்சிருக்கலாம்?. இவ்வளோ நெருக்கத்துல உங்க மாமாவைப் படிச்சவர் பழகினவர் நீங்க.. உங்களுக்கு என்ன தொணறதோ அதைச் சொல்லுங்க..”

 

“எனக்குத் தோணறது என்னென்னா இவரால கொடுமையா அவதிப்பட்ட எந்தப் பொண்ணோ அல்லது பொண்ணோட சொந்தமோ இவரைக் கொலை பண்ணியிருக்கலாம்னுதான் மனசுல பட்டது..”

 

“நீங்க அப்புறம் மாமாகிட்ட பேசலியா?”

 

“நான் கடைசியா அவருக்கு ஃபோன்ல பேசினப்போ கொலை நடந்த அன்னிக்கு நாலு மணிக்குப் பேசினேன். அவர் கொடுத்த பத்து லட்சம் கொடுத்தாச்சுன்னு சொன்னவுடனே ‘சுந்தர் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ன்னு கொஞ்சம் வருத்தமான குரல்ல சொன்னார். அதுதான் கடைசி.”

 

“அதாவது அவரோட  நோகியா பழைய ஃபோன்ல பேசினீங்க இல்லையா?”

 

“ஆமாம். அது இப்போ போலீஸ் கையிலதான் இருக்கு. செக் பண்ணிக்கலாம்.”

 

“சரி மிஸ்டர் சுந்தர்.. நீங்க இதுவரை சொன்னதை நான் ரிகார்ட் பண்ணியிருக்கேன். அதனால நீங்க புதுசா ஒரு போலீஸ் ஸ்டேட்மென்ட் தயார் பண்ணி அதுல உண்மையை அப்படியே எழுதுங்க..  இன்னும் கொலையாளி யார்னு தெரியலே.. கொலைக்கான மோடிவ் கூட தெரியலே.. பார்ப்போம்.”

 

“கொலைகாரன் யாரா இருந்தா என்ன? அவன் செஞ்சது சரின்னு தெரிஞ்சிடுத்து இப்போ. இப்படிப்பட்டவரெல்லாம் உயிரோடு வாழத்தான் வேணுமா?”

 

“எங்கிட்டே இப்படிச் சொன்னதை போலீஸ்கிட்ட சொல்லாதீங்க மிஸ்டர் சுந்தர்.”

 

தொடரும்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.