Blog

  • மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நீண்டநாள் வாழ நெஞ்சம் நினைக்கிறது
    வேண்டாத வினைகள் வில்லங்கம் தொடர்கிறது
    தூண்டா மணிவிளக்காய் துலங்கிடும் தூமணியே
    நீண்டநாள் நிலைக்கவே நீயருள் புரிந்திடுவாய்

    கொடியவர் கொன்றிடுவார் கொள்ளையும் அடிப்பார்
    கடுகளவும் கருணை காருண்யம் காட்டார்
    நினைவெல்லாம் நிட்டூரம் நிறைத்துமே வைப்பார்
    நீண்டநாள் வாழுவது நியாயமா சொல்நிமலா

    அறமற்றார் அரசியலை ஆட்டிப் படைக்கின்றார்
    அறங்கூறும் இடமெல்லாம் அரக்கரே நிறைகின்றார்
    உயிர்காக்கும் மருத்துவர்கள் உணர்விழந்து நிற்கின்றார்
    உயர்பொரு ளாயிருப்பவனே உனக்கொன்றும் தெரியாதா

    சன்மார்க்கம் மறக்கின்றார் சமத்துவம் தகர்க்கின்றார்
    எஞ்ஞான்றும் பொய்யுரைத்து ஏற்றமிலா செய்கின்றார்
    வஞ்சனையை நெஞ்சிருத்தி வாழ்வாரை வதைக்கின்றார்
    இவரெல்லாம் இவ்வுலகில் எப்படிநீ இருக்கவிட்டாய்

    துட்டரைத் துரத்தவேணும் கெட்டாரைத் திருத்தவேணும்
    மட்டில்லா மதுகுடிப்பார் மனம்மாற வைக்கவேணும்
    அட்டகாசம் செய்வாரை அடக்கியே வைப்பதற்கு
    ஆயுளை நீடித்து அளித்திடுவாய் ஆண்டவனே

    அன்னதானம் செய்யவேணும் அறப்பணிக ளாற்றவேணும்
    ஆதரவற்றோரை அரவணைத்துப் பார்க்க வேணும்
    மெலியாரை வருத்தும் வலியராரை திருத்தவேணும்
    நிலமீது எனக்கிறைவா நீண்டநாள் தந்திடுவாய்

    தளராத மனம்வேணும் அன்பகலா நிலைவேணும்
    உளமுழுதும் பழுதில்லா உயர்குணமே வேணும்
    வழுவில்லா நாளெல்லாம் வாழவே வேணும்
    மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 28

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

     

    திருஞானசம்பந்தர் வரலாறு

    `வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

    மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத

    எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்`

    என்று சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில், இவர் வரலாற்றை முதன்முதலில் குறிப்பிட்டு அருளியதோடு, திருஞானசம்பந்தர் பெருமைகளைத் தாம் அருளிய தேவாரத் திருப்பதிகங்களிலும் போற்றிப் பாடியுள்ளார். நம்பியாண்டார் நம்பிகள், இரண்டு பாடல்களில் இவர் வரலாற்றை அந்நூலில் விளக்கியதோடு பதினொராம் திருமுறையில் இலங்கும் ஆறு பிரபந்தங்களில் திருஞானசம்பந்தர் வரலாற்றையும், அவர் தம் அருள் நலங்களையும், அவர் அருளிய தேவாரத் திருமுறைகளின் பெருமைகளையும் தெளிவுற விளக்கியுள்ளார். பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவரான திருஞானசம்பந்தர் பெருமானின் அருள் வரலாற்றைப் பெரியபுராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விரித்துரைத்துள்ளார்.

    சிவநெறி செழித்தோங்கிய சீர்மிகு திருப்பதியாம் சீர்காழி எனும் அருள் நகரில் அவதரித்தவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சுவாமிகள். ஊழிக்காலத்தே உலகெலாம் அழிந்தாலும், பன்னிரண்டு ஊழியிலும் அழியாது அடியாருக்கு அருள் சுரக்கும் அருட்பதியாகி நின்றமையால், பிரமபுரம், புகலி, வேணுபுரம், தோணிபுரம், சீரபுரம், சீர்காழி, வெங்குரு, பூந்தராய், புறவம், சண்பை, கொச்சைவயம், கழுமலம் எனும் பன்னிரண்டு திருப்பெயர்களைக் கொண்டது இவ்வூர்!

     

    வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

    பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

    சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

    பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

    அந்தணர் குலத்தில் சிவபாத இருதயர் என்னும் வேதியர், அவர்தம் அருமைத் துணைவியார் பகவதியார் எனும் இல்லறத்தை நல்லறமாகக் கருதி, இறைவழிபாடு, அடியார் வழிபாடு, குருவழிபாடு ஆகிய முத்திற வழிபாட்டிலும் சிறந்து விளங்கும் அருட்பேராற்றல் பெற்ற இணையருக்குத் தவப்புதல்வனாய் அவதரித்தவர், திருஞானசம்பந்தர். வேத நெறி வளர்ச்சி குன்றியிருந்த தமிழகத்தில் அப்போது சமண புத்த சமயங்கள் தலைதூக்கி நின்றன. இதனைக் கண்டு மனம் நொந்த சிவபாத இருதயர் இந்த மன்பதை வாழ, சிவநெறி உலகெலாம் பரவி தமிழ்ச் சமுதாயத்தை தழைத்தோங்கச் செய்யவும், தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் காக்க நல்லதொரு ஞானக்குழந்தை ஒருவரைத் தங்களுக்குத் தந்தருளுமாறு திருத்தோணிபுரத்து இறைவனை வேண்டித் தவம் புரிந்தனர். இறைவனின் இன்னருளால் பகவதியாரும் கருக்கொண்டு, சைவமே அவ்வம்மையார் மணி வயிற்றில் உருக்கொண்டது!

    வேத நெறி தழைத்து ஓங்க

      மிகு சைவத் துறை விளங்கப்

    பூத பரம்பரை பொலியப் புனித

      வாய் மலர்ந்து அழுத

    சீத வள வயல்

      புகலித் திருஞான சம்பந்தர்

    பாத மலர் தலைக் கொண்டு

      திருத் தொண்டு பரவுவாம்

    ஒரு திருவாதிரைத் திருநாளில், சிவநெறி சிறந்து விளங்கவும், தமிழ் மக்கள் செய்த தவம் நிரம்பவும், தவநெறி தழைக்கவும் ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்தருளினார். அனைத்துயிர்களும் மகிழ்வுற்றன. திருப்பெயரிடுதல், தொட்டிலிற் கிடத்தல் போன்று அனைத்துச் சடங்குகளும் உரிய காலங்களில் நிகழ்ந்தன. பகவதி அம்மையார் அத்தெய்வக் குழந்தைக்கு  இறையன்பைத் தம் திருமுலைப்பாலுடன் கூட்டி ஊட்டி வளர்த்து வந்தார். குழந்தையின் அழுகையை சேக்கிழார் பெருமான் புனிதவாய் மலர்ந்தருளினார் என்று அழகாகக் குறிப்பிடுகிறார். ஆளுடையப் பிள்ளையாருக்கு வயது இரண்டாண்டுகள் நிரம்பின. மூன்றாவது வயதின் தளர் நடைப்பருவத்தில் பிள்ளையார் ஏனைய குழந்தைகளோடு வீதியில் விளையாடும் நிலையை எய்தினார். நீடுதுயில் கொண்டுள்ள சைவத்தைச் சிவநெறியைத் தட்டி எழுப்பித் தரணிக்கெல்லாம் பரப்ப வந்த செந்தமிழ்ச் செல்வனுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தால் சிவநெறி தழைக்க, சைவம் சிறக்கக் கால தாமதமாகும் எனக் கருதியதால் சேக்கிழார் பெருமான் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கவில்லை போலும்!

    ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வழக்கம்போல் தம் வழிபாட்டு நெறியினைச் செய்வதற்கு, வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயிலின் உள்ளிருக்கும் பிரம்மதீர்த்தத்திற்குப் புறப்பட்டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கட்டிக் கொண்டு அழுதார்.

    கண் மலர்கள் நீர் ததும்பக்

      கைம் மலர்களால் பிசைந்து

    வண்ண மலர்ச் செங்கனிவாய்

      மணி அதரம் புடை துடிப்ப

    எண்ணில் மறை ஒலி பெருக

      எவ் உயிரும் குதூகலிப்ப

    புண்ணியக் கன்று அனையவர்

      தாம் பொருமி அழுதருளினார்

    தந்தையாரும் தம் மைந்தனை உடனழைத்துக் கொண்டு சென்று பிரம்ம தீர்த்தக்கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தையைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத்தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப `அம்மே அப்பா` என அழைத்து அழுதருளினார். அருளுடையப் பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளிய வேளையில் எம்பெருமான் உமையம்மையிடம் `அழுகின்ற பிள்ளைக்குத் தன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டப் பணித்தார். அம்மையாரும் அவ்வாறே சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார்.

    குளித்து முடித்து வந்த தந்தை குளக்கரையில் தங்கள் தவச்செல்வன் கையில் பொற்கிண்ணத்துடன், எச்சிற்பால் உண்ட வாயும், இன்ப நடம் புரியும் பாங்கைக் கண்டு சினந்தவர், அருகிருந்த சிறுகோல் எடுத்து யார் கொடுத்த எச்சில் பால் இது என்று வெகுண்டு கையை ஓங்கினார்.

    போதையார் பொற்கிண்ணத்து

    அடிசில் பொல்லாதென

    தாதையார் முனிவுறத்

    தான் எனை ஆண்டவன்

    காதையார் குழையினன்

    கழுமல வளநகர்ப்

    பேதையாள் அவளொடும்

    பெருந்தகை இருந்ததே

     

    எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி

    உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்

    கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)

    அண்ணலை அங்கு அழுகைதீர்த்து

    அங்கணனார் அருள்புரிந்தார்.

     

     

    சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்

    பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்

    உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்

    தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

    எனச் சேக்கிழார் பெருமான் போற்றி உரைத்தலைக் காணலாம்.

    தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்

            காடுடை யசுடலைப் பொடி பூசியென் னுள்ளங்கவர்கள்வ

            னேடுடை யமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த

            பீடுடை யபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே”

    சிவஞானச்சம்பந்தப் பெருந்தகையார், தலைக்குமேல் கையைத் தூக்கி வேண்டியபடி தம் சிறு விரல்களால் எதனாலும் கட்ட முடியாத பரம்பொருளைச் சுட்டிக்காட்டி தம்மெதிரேத் தோன்றிய தோணிபுரத்து இறையை தம் தந்தையாருக்கு அடையாளம் காட்டினார். ஞானக்குழந்தை தாம் பாடிய முதல் பதிகத்தின் முதல் அடியிலேயே தமிழ் மொழியைத் தலைக்கேற்றி மந்திரங்களுக்கெல்லாம் மூலக்கூறாகிய, ‘ஓம்’ எனும் ஓங்காரத்தினைத் தமிழ் என்றும் பெயரின் முதல் எழுத்தாம், ‘த’ மெய்யுடன் இசைத்துத் ‘தோ’ எனத் தொடங்கிப் பாடினார். தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தனக்கு ஞானப் பாலளித்த உமை அம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் `தோடுடைய செவியன்` என்ற முதற்பெரும் பாடலால் கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அதனைக் கேட்ட தந்தையார் சிவபாத இருதயர் தாம் அடிப்பதற்காக ஓங்கிய கோல் நெகிழ்ந்து வீழும் வண்ணம் வியப்பும் வெருட்சியும் மேலிட்டவராய் நின்றார். ஞானசம்பந்தப் பெருமானை அழைத்துக்கொண்டு ஆலயம் சென்று  எம்பெருமானை வணங்கிப் போற்றி மீண்டார். இச்செய்தி நகர் முழுவதும் பரவிய நிலையில் அன்பர்கள் ஞானசம்பந்தரைப் போற்றி வரவேற்க, சிவபாத இருதயர் பிள்ளையாரைத் தம் தோள்மேல் அமர்த்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் தம் இல்லம் சென்றடைந்தார்.

    உமையம்மையார் அளித்த ஞானப்பாலை உண்ட திருஞானச்சம்பந்தர் திருநெறியத் தமிழ் பாடி தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்தவர் மறுநாட் காலையில் துயிலெழுந்து நீராடி ஈசனை வணங்கிப் போற்றி, தன் தாய்வழிப் பாட்டனார் ஊரான நனிபள்ளி முதலிய ஊர்களை வணங்கி பின்பு சீர்காழி சேர்ந்தார். `காரைகள் கூகைமுல்லை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து வணங்கிப் போற்றி அவ்வூரின் அருகிலுள்ள தலைச்சங்காடு, சாய்க்காடு, வெண்காடு முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு மீண்டும் சீர்காழிப் பதிக்குத் திரும்பினார். வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி, ஞானசம்பந்தர் வரவால் நெய்தலாய்ப் பின் மருதமாயிற்று. இது ஞானசம்பந்தர் வரலாற்றில் அமைந்த இரண்டாவது தல யாத்திரையாகும்.

     

    சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை எழ அத்தலத்தை தம் தந்தையாரின் தோளில் மீதேறி அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று `மடையில் வாளை` எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தை அழகுற தம் பிஞ்சுக் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். அதனால் பிள்ளையார் தம் பிஞ்சுக்கரங்கள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம்பந்தப் பெருமானார்க்கு அளித்தருளினார். அவரும் அத்தாளத்தைத் தலைமேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிய அத்திருத்தலமே திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தல யாத்திரையாகும். அவ்வாறு திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீர்காழி திரும்பிய ஞானசம்பந்தப் பெருமான் நேரே ஆலயம் சென்று `பூவார் கொன்றை` எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் பரவியவர் பின்னர் தம் மாளிகையைச் சென்றடைந்தார். நம் தமிழ்ச் சமுதாயத்திற்குச் சிவனடி பரவும் ஒரு நெறியே தம் திருநெறி எனப் போர்முரசு கொட்டி வழிப்படுத்தினார்.

     

    திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புதத்தைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீர்காழிப் பதியை அடைந்தனர். ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீலகண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து மகிழ்ந்தார். பின்னர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றடைந்தார். தென் திசைவாயில் வழியே ஆலயத்திற்குள் சென்றவர் பேரம்பலத்தைக் கண்டு வணங்கியவர், `கற்றாங்கு எரியோம்பி` `ஆடினாய் நறுநெய்` என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார். திருவேட்களத்தில் தங்கியிருந்து நாள்தோறும் தில்லைக் கூத்தனை வழிபட்டார். அங்குத் தங்கியிருக்கும் நாட்களில் திருக்கழிப்பாலை, திருநெல்வாயில் முதலிய தலங்களை வழிபட்டார்.

    செல்லும் வழியில் திருஎருக்கத்தம்புலியூர் எனும் தலத்தை அடைந்தபோது திருநீலகண்ட யாழ்ப்பாணர் அப்பதி அவருடைய பதி எனக் கூறக் கேட்ட சம்பந்தப் பெருமான் மாதவம் செய்த பதி அது என்று கூறி மகிழ்ந்தார்.

    ஞானசம்பந்தர் எருக்கத்தம்புலியூரிலிருந்து திருமுதுகுன்றம் திருபெண்ணாகடம் ஆகிய தலங்களை வணங்கிக்கொண்டு திருநெல்வாயில் அரத்துறை செல்லப் புறப்பட்டார். தந்தையார் தோள்மேல் அமர்ந்து செல்ல மனம் இன்றித் திருவடி நோக நடந்தே வருவதைக் கண்ட தந்தையாரும் அடியவர்களும் மிகவும் பரிவுற்றனர். திருநெல்வாயில் அரத்துறை அணுகியபோது மாலை நேரம் நெருங்க, வழி நடந்த களைப்பு ஏற்பட்டதால் ஞானசம்பந்தர் அடியவர்களோடு மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார்.

    அரத்துறை இறைவன் ஞானசம்பந்தரின் களைப்பை அறிந்து அரத்துறை அந்தணர்கள் கனவில் தோன்றி `ஞானசம்பந்தன் தம்மைக் காண வருகிறான் என்றும், அவனுக்கென ஆலயத்துள் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன வைத்துள்ளதாகவும், அவற்றை எடுத்துச் சென்று கொடுத்து பாலகனை அழைத்து வரப் பணித்தார். எம்பெருமான் ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி தாம் அளிக்கும் பொருள்களை ஏற்றுக்கொண்டு வருக` எனக் கூறியருளினான். அரத்துறை அந்தணர்கள் வியந்து எழுந்து இறைவனளித்த அப்பொருட்களைக் கொண்டு சென்று ஞானசம்பந்தரிடம் நடந்ததைக் கூறிச் சிவிகையில் ஆரோகணித்து அரத்துறை வரவேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து “எந்தை ஈசன் எம்பெருமான்` என்ற திருப்பதிகத்தால், இறையருளை வியந்து அரத்துறை ஈசனை வணங்கிப் போற்றினார். திருநெல்வாயில் அரத்துறையில் சில நாள் தங்கியிருந்து புறப்பட்டுச் சிவிகையில் விசையமங்கை, திருவைகா, புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம் புலியூர், வாழ்கொளிப்புத்தூர், கடம்பூர், நாரையூர், கருப்பறியலூர், முதலிய தலங்களைப் பணிந்து திருப்பிரமபுரம் மீண்டருளினார்.

     

    தொடரும்

     

     

    Share
  • பல்லழகன் – பகுதி 23

     

    திவாகர்

     

    “அதுதான் கல்யாண்.. முரளி ஒரு வெகுளிங்கறது எனக்கு முதல்லயே புரிஞ்சு போயிடுச்சு. அதனால அவர் கொலை பண்ணியிருக்க வாய்ப்பும் இல்லை.  சுந்தருக்குக் கொலை செய்ய காரணம் இருந்தாலும் அது அப்படி ஒண்ணும் ஸ்ட்ராங்க் இல்லே.. அதே போல சுமதிக்கும் தன் அப்பாவைக் கொலை செய்யணும்கிற ஐடியாவும் இல்லே.. தன்னை விட்டு தூரம் போனா போதும்னு நினைக்கிறவ.. அப்பறம் கந்தசாமிக்கு உறவுன்னு நீங்க ஒருத்தர்தான்.. ஆனா நீங்களோ சம்பவம் நடந்த அன்னிக்கு ஹவுரா மெயில்ல என்னோட பிரயாணம் பண்ணறிங்கன்னு ஒரு அலிபியை உருவாக்கி இருக்கீங்க.. இப்படி ஒரு அலிபியை நீங்க எதுக்காக உண்டாக்கணும். நீங்க உங்க வாயாலே நடந்ததை சொல்லி நான் கேட்கணும். ஏன் தெரியுமா? நான் ஒருவாரமா பார்த்துண்ட வர்ற என் க்ளையண்ட் கல்யாண், இன்னும் ஒருபடி மேலச் சொல்லச் சொன்னா, என்னைக் கவர்ந்த ஒரு ஜெண்டில்மேன் கல்யாண், இந்தக் கொலையில இன்வால்வ் ஆகியிருக்கார்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும். நான் லா படிக்கலே.. வாதிக்கவும் தெரியாது.. என்னோட ஊகத்தை சாட்சியோடு சொல்ல முடியுமான்னும் எனக்குத் தெரியலே.. ஆனாலும் என்னாலே சொல்லமுடியும்.. கல்யாண் இந்தக் கொலையில மிகப் பெரிய அளவுல இன்வால்வ் ஆகியிருக்கார்.. அதனாலே நீங்களே சொல்லுங்க.. இந்தக் கொலை எப்படிப் பண்ணீங்க கல்யாண்?”

     

    கல்யாண் எழுந்தான். தன் படத்தருகே போய் நின்றான்.. படத்தைத் துடைத்தான்.. அந்த ஃப்ரேமில் உள்ள கல்யாணைக் காட்டினான். “யெஸ்.. இவன் ஒரு குற்றவாளி.. ஆனால் இவன் இந்தக் கொலையைச் செய்யவில்லைங்கிற விஷயத்தை நீங்க நம்பணும்..”

     

    “புரியலே..”

     

    அவன் மறுபடியும் வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

    “கோம்டி! உங்களைக் கல்யாணம் பண்ணப் போறவர் யாராயிருந்தாலும் அவர் மிகப் பெரிய அதிருஷ்டக்காரர்.. ரியல்லி  நீங்க ஒரு மிகப் பெரிய புத்திசாலிதான்.. ஆனா இந்த குற்றவாளிகளின் நல்லகாலம்.. உங்களை மாதிரி புத்திசாலிகள் இந்த மாதிரி டெண்டல் பிராக்டிஸ், இல்லைனா சாஃப்ட்வேர் இஞ்சினீர்’னு போகறதுதான். ஏன்னு கேட்டா நீங்கள்லாம் போலீஸ் டிபார்ட்மென்ட்ல வேலை செஞ்சா ஒரு குற்றவாளி வெளில சுத்தமுடியாது. நானும் குற்றவாளிதான்.. குற்றம் செய்யத்தான் வந்தேன்.. ஆனா விதின்னு ஒண்ணு இருக்கு இல்லையா.. அது நல்லவங்க வாழக்கூடாது.. கெட்டவங்க சாகக்கூடாதுன்னு சொல்லிடுத்து போல.. நான் சுட்ட குண்டு அவரைச் சாகடிக்கலே.. ஆனா அவர் சுட்டுகிட்ட குண்டு அவரை சாகடிச்சுடுத்து.. கடைசில எனக்கு வீரன்கிற பட்டம் போய் அவருக்கு கோழைங்கிற பட்டம் கிடைச்சுடுச்சு. அவ்வளவுதான்.”

     

    “கல்யாண்..” என்றவளைத் தடுத்தான் அவன்.

     

    “ரன்னிங்க் ரேஸ்ல கடைசிவரைக்கும் வேகம் வேகமா ஓடி முன்னால ஃபர்ஸ்ட்டா வந்தாலும் வரையப் பட்டிருந்த கோட்டைத் தொடலைன்னா அவன் சேம்பியன் இல்லே. நானும் அப்படித்தான் வேகம் வேகமா ஓடிவந்து கடைசியில கோட்டைத் தொடாமலே திரும்ப வந்துட்டேன்.”

     

    “புரியுது!”

     

    “இந்த கேஸுல நீங்க தெரிஞ்சுகிட்டது கொஞ்சம்தான் கோம்டி.. நீங்க கிட்டத்தட்ட எங்க குடும்பத்தையே அலசியாச்சுன்னு நினைக்கிறீங்க இல்லையா.. அது உண்மைதான்.. ஆனா இந்த ஒரு வாரத்துல நீங்க தெரிஞ்சுண்டதை விட நிறைய இருக்கு. கொஞ்சம் சுருக்கமா சொல்லறேன்.. நல்லகாலம் இங்கே யாருமில்லேன்னு சொன்னீங்க,, அதே போல நான் சொல்லப் போகறது கூட உங்க ஒருத்தருக்கு மட்டும்தான். ரவிக்கு எல்லாமே தெரியும்! இப்போ உங்கள்ட்ட ரிகார்டர்லாம் இல்லேன்னு நினைக்கிறேன்.. இருந்தாலும் வேஸ்ட்..”

     

    “என்ன கல்யாண்.. இந்த ஒரு வாரப் பழக்கத்துல என்னை இவ்வளவுதான் புரிஞ்சிண்டிங்களா.. இல்லே.. நான் ரிகார்ட் பண்றதா இல்லே. நீங்க சொல்லுங்க”

     

    “இல்லே கோம்டி.. ஏன் அப்படிச் சொல்லறேன்னா இது என்னோட சொந்த குடும்ப விஷயம்.. இது யாருக்கும் தெரியக்கூடாதுன்னுதான் நான் நினைக்கிறேன்.. சுமதியை நீங்க பார்த்தீங்க இல்லையா.. இதுவரைக்கும் நீங்க யாருமே என்னை ‘கல்யாண்! நீ எப்போ என்னிக்கு சுமதியை முதன் முதலா பார்த்தாய்’ன்னு கேட்கலை.. கேட்டால் நான் என்ன அப்போ பதில் சொல்லுவேன்னு தெரியாது.. ஆனா இப்போ சொல்லறேன்.. எல்லோருக்கும் நடந்தமாதிரிதான் நான் சொல்றதும் நாலு மாசம் முன்னாடிலேர்ந்து நடந்ததைத்தான் முதல்ல சொல்றேன்.. கேட்டுக்குங்க..”

     

    கொஞ்சம் நிதானித்தான் கல்யாண்.. பின்னர் அதே நிதானம் அவன் குரலில் தெரிய பேசினான்.

     

    “கோம்டி.. நான் வைசாக்’ல இருக்கறச்சே நாலு மாசம் முன்னாடி எனக்கு புதுசா ஒரு பொண்ணு கால் பண்ணினா.. ‘என் பேரு சுமதி.. உங்க வாட்ஸாப்’ல சில தகவல் அனுப்பறேன்.. அதைப் படிச்சுட்டு நீங்க எங்கிட்டே பேசணும்னு நினைச்சா பேசுங்க.. இல்லைன்னா கூட வருத்தப்படமாட்டேன்னு அந்தப் பொண்ணு சொன்னா’. சரின்னு சொல்லி அந்தக் கால் வெச்சுட்டு மெஸேஜ் மாத்திரம் பார்த்தேன்.. இருங்க.. நீங்களும் அந்த மெசேஜ்லாம் பாருங்க..”

     

    அவன் தன் மொபைலை எடுத்து சுமதி அனுப்பிய வாட்ஸாப் மெஸ்ஸேஜ் எல்லாவற்றையும் காண்பித்தான்.

     

    அவள் தமிழில்தான் அனுப்பியிருந்தாள்.. கொஞ்சம் சத்தமாகப் படித்தாள் கோம்டி.

     

    “அண்ணா, என் பேர் சுமதி.. என் வாழ்க்கை கவலைகளைப் பற்றி எதுவும் இங்கே எழுதப் போறதில்லே.. ஆனா உங்களுக்கு உங்க பெரியப்பா பத்தி நிஜம் தெரியணும்.. அவர் ஒரு ராட்சஸ காமாந்தகர். அவரால ஒரு சின்னப் பொண்ணு, 13 வயசுக் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கு. எனக்கு உங்க உதவி வேணும்.. என்னாலே தனியா போராட முடியலே.. நீங்க இங்க வந்தா பல உண்மைகளைச் சொல்லறேன்.. என் விலாசம்.”

     

    கோம்டி படித்தாள். அந்த செய்தியின் மேல் உள்ள தேதி டைம் பார்த்தால் நான்கு மாதம் முந்தையதுதான். அந்த ஃபோன் நம்பரும் சுமதிதான் என்று அவளுக்குப் புரிந்தது.

     

    “கல்யாண்.. இந்த தேதி எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அன்னிக்குதான் நான் சுமதியைப் போய் அவங்க வீட்டுல பார்த்தேன்.. அன்னிக்கு முந்தைய தினம்தான் கந்தசாமி இந்த கிலினிக்குல கலாட்டா பண்ணி சுமதியைப் பிடிச்சு இழுத்துண்டு போன சங்கதி நடந்த தினம்..”

     

    கல்யாண் தலையசைத்தான்.

     

    “ஆமாம். ரவிக்கும் அதைக் காண்பிச்சேன். உடனே ரவியும் தானும் என்னோட புறப்பட்டு வரேன்னு சொன்னான். செய்தி வந்த அடுத்த நாள் நாங்க சென்னை வந்தோம். ரவியை அவன் வீட்டுக்கு அனுப்பிச்சுட்டு நான் இங்கே வந்தேன். பெரியப்பாவைப் பார்த்தேன். அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். என்ன கல்யாண் திடீரென வந்திருக்கே’ன்னாரு.. ஆஃபீஸ் வேலையா வந்தேன்னேன். அவர்கிட்டே ரொம்ப பேசலே. ஏன்னா.. அவரைப் பத்தி புகார் வந்திருக்கே தவிர இந்தப் பொண்ணு எதுக்கு என்னை அவசரமா கூப்பிடுதுன்னு தெரிஞ்சுக்கணுங்கிறதுதான் முக்கியம்னு பட்டுது. ஆஃபீஸ் வேலையா போகறதா சொல்லிட்டு நான் ரவிக்குச் சொல்லி, நானும் அவனும் கிளம்பி சுமதி வீட்டுக்குப் போனா எனக்கு எல்லா விவரமும் அதான் உங்களுக்குச் சொன்ன அத்தனை விவரமும் கிடைச்சுது. கோபம்.. என் மேலேயே எனக்குக் கோபம்.. அதுவும் ஒரு சின்னப் பொண்ணு.. பதிமூணு வயசுப் பொண்ணுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை.. அதைவிடக் கொடுமையா அவளைப் படம் பிடிச்சு வெச்சது.. சுமதி என்னோட தங்கச்சிங்கற விவரம் தெரிஞ்சதும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே.

     

    கல்யாண் சுமதியின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்குப் போகிறான். கல்யாண் அதிர்ச்சிக் குரலில் கத்துகிறான்.

     

    “சுமதி.. சுமதி.. திருச்சில இருக்கறச்சயே இதையெல்லாம் எனக்கு ஏன் சொல்லலே? பெரியம்மாவுக்கு பெரியப்பா பெரிய தொல்லையா இருந்தாலும் நானும் அப்படிப்பட்டவன்னு ஒரு எண்ணம் ஏன் வரணும்.. ஏன் எங்கிட்டே சொல்லலே?”

     

    சுமதியும் பெரியம்மாவும் அழுகிறார்கள். அந்த சின்னப் பெண்ணை அருகே கூப்பிடுகிறான். அது பயந்து வர மறுத்தது.. கல்யாணுக்குக் கண்ணில் நீர் வந்தது. துடைத்துக் கொண்டே பேசினான்.

     

    “பெரியம்மா.. நான் உங்களை அப்படிக் கூப்பிடலாமா?”

     

    “ஐயய்யோ.. ஏன்பா அப்படிச் சொல்லறே..”

     

    “இல்ல பெரியம்மா.. எனக்கும் பொறந்ததிலேர்ந்தே இப்படி அம்மான்னு கூப்பிடணும்னுல்லாம் ஆசை.. எனக்குப் பெரியம்மானு ஒருத்தி இருந்தும் எனக்குத் தெரியாமப் போயிடுச்சே..”

     

    “இல்லப்பா.. நீ சின்ன பையன்.. உன்னாலே என்ன பண்ணமுடியும்? சுமதிக்கு ஒரு நல்ல அண்ணா கிடைச்சாச்சுன்னு இப்பதாம்பா நிம்மதி.. அது போதும்பா.. எனக்கு வயசாயிடுச்சு.. இந்த வயசுலயாவது நிம்மதி கொடுக்க வந்திருக்கியேன்னு ஒரு நிம்மதி.. உங்க அம்மா குடும்பம் எனக்குத் தெரிஞ்சவங்கதாம்பா.. ரொம்ப நல்ல தங்கமான பொம்பிளை அவங்க..” என்று சொல்ல ஆரம்பித்தவள் திடீரென அழுதாள். விக்கி விக்கி அழுது அழுது கொஞ்சம் மயக்க நிலைக்கு வந்துவிட்டாள். அவளை ஆசுவாசப்படுத்தினான் கல்யாண்.

     

    “சுமதி.. நீ கவலைப்படாதே.. இதை எப்படி டீல் பண்றதுன்னு யோசிக்கணும்.. எனக்கு மூளையே கலங்கிடும் போல இருக்கு.. சரி, இந்த விஜயாவுக்கு எவ்வளவு ஆபரேஷனுக்குச் செலவாகும்னு நினைக்கிறே..”

     

    “அண்ணா.. நீங்க எதுவும் அங்கயிருந்து கொண்டு வர வேணாம் அண்ணா.. அந்தாளோட ஒவ்வொரு காசும் பாவப்பட்ட பணம்..”

     

    “ஆனா எங்க.. சாரி, நம்ம தாத்தா பாட்டி சொத்துதானம்மா நிறைய வெச்சிருக்காரு.. அவருக்குன்னு தனியா ஒரு அக்கௌண்ட் வெச்சிருக்காருன்னு அவரே எனக்கு சொல்லியிருக்காரு.. அவரோட பணமெல்லாம் அந்த அக்கௌண்ட்ல போட்டுருக்கேண்டா.. தாத்தா சொத்துப் பணமெல்லாம் வழக்கமா எஸ் பி ஐ ல பழைய அக்கௌண்ட்லதான் இருக்குன்னார். போகட்டும். ஆனா நான் கொடுக்கப் போகிற பணம் நானும் ரவியுமா சுயமா  சேர்ந்து கஷ்டப்பட்டு சம்பாதிச்சது.. எவ்வளோ செலவாகும்னு நீ நினைக்கிறே.?”.

     

    சுமதி தயங்கினாள். “ஒரு இருபத்தஞ்சு லட்சம் மினிமம் ஆகும்னாங்கண்ணா. ஏன்னா முக்கால்வாசி மெடிசின் அமெரிக்காலேர்ந்து இம்போர்ட் பண்ணினதாம்.”

     

    “சரி, எனக்கு ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுப்பியா…”

     

    “ஐய்யோ.. எடுத்துக்குங்க அண்ணா.. நாலு மாசமானாலும் பரவாயில்லே..”

     

    “சரி, அப்ப ஒண்ணு பண்ணலாம்.. விசாகப்பட்டினத்துல நானும் ரவியும் நடத்தற ஷிப்பிங்க் பிஸினஸ்ல இருந்து ஏற்பாடு பண்றோம். கலக்ஷனுக்குதான் ரெண்டு மாசம் ஆகும். நான் அர்ரேஞ்ச் பண்ணிடறேன்.. நீ தைரியமா இரு.”

     

    ஆமாங்க.. எவ்வளவு முடியுமோ அதை கலெக்ட் பண்ணமுடியும்! ரவியும் கூடவே சொன்னான்.

     

    “அண்ணா.. எதுக்குண்ணா பிஸினெஸ் பணத்தை செலவு பண்ணிட்டு..”

     

    “இல்லம்மா.. அங்க நான் பண்றது கப்பலுக்கு சாண்ட் ப்ளாஸ்டிங்க் காண்ட்ராக்ட்.. ரெண்டு கப்பல் வேலை பாக்கி இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து நான் இங்க வந்து கூட கண்டின்யூ பண்ணிக்கலாம். அத்தோட என் குடும்பம்னு நீங்க வந்தப்போ உங்களையும் நான் பாத்துக்கணும் இல்லையா.. ரெண்டு மாசம் டைம் கொடும்மா.. அதுவரைக்கும் மருந்து மாத்திரை எல்லாம் சரியா கொடு..”

     

    தன் கையிலிருந்த பேங்க் டெபிட் கார்ட் ஒன்றைத் தருகிறான்..

     

    “இந்த கார்டை இனிமே யூஸ் பண்ணிக்கோ.. மருந்து மாத்திரை மட்டுமில்லே.. இந்த வீட்டுச் செலவுக்குக் கூட இதுதான். அம்மாவையும் பார்த்துக்கோ.. நான் இனிமே வாரா வாரம் வருவேன். நான் இல்லேனா ரவியை அப்பப்ப அனுப்பறேன். இவன் என்னோட க்லோஸ் ஃப்ரெண்ட்மா..  நாங்க வரதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணிட்டுதான் வருவோம்.. நீ எதுக்கும் கவலைப்படாதே.”

     

    பெரியம்மா மிகவும் மெதுவான குரலில் பேசுகிறாள்.. “அடிக்கடி வாப்பா.. உங்கிட்டே நிறைய விஷயம் பேசணும்..”

     

    கோமதியின் கிலினிக், தற்கால நிலைக்கு வருகிறான் கல்யாண்.

     

    “கோம்டி.. எனக்கு முரளியையோ சுந்தரையோ கவனிக்க நேரமே இல்லே.. வாரம் ஒரு முறை நானோ அல்லது ரவியோ மார்னிங்க் ஃப்ளைட் வந்துட்டு சுமதியையும் அம்மாவையும் பார்த்துட்டு ராத்திரி ஃப்ளைட்டுக்கு வைசாக் திரும்பிடுவோம். அப்படி வந்து பார்த்துட்டு போன எனக்கு ஒரு நாள் இடியை விட கொடுமையான நியூஸ் கொடுத்தாங்க பெரியம்மா. அப்போதான் எங்கம்மா விஷயம் பேசறச்சே எதுக்காக இவங்க மயங்கி விழுந்தாங்கன்னும் தெரிஞ்சது. பெரியப்பாவோட இறப்பு சம்பவம் நடப்பதற்கு பத்து நாள் முன்னாடிதான் நான் சுமதி வீட்டுக்கு வந்தேன். சுமதி ஃபோன்லயே சொல்லியிருந்தா. விஜயாவை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போகறதாகவும் மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடறதாகவும் சொல்லிட்டுதான் போனா. நான் காலை விமானத்துக்கே வந்து பெரியம்மாவோட டிபன் சாப்பிட்டுட்டிருந்தேன்.”

     

    சுமதி வீட்டுக்கு அவன் நினைவு திரும்புகிறது. வீட்டில் கல்யாணுக்கு பெரியம்மா டிபன் வைக்கிறாள்.

     

    “பெரியம்மா.. நீங்களும் சாப்பிடலாமே.. என்னோடு சாப்பிடுங்கம்மா.. ஆமா.. அம்மான்னே உங்களைக் கூப்பிடறேனே.. அம்மா’ன்னு கூப்பிடட்டா?”

     

    அம்மா மகிழ்ச்சியோடு தலையாட்டினாள். “இதைவிட எனக்கு என்ன பேறு வேணும்பா.. ஒண்ணு சொல்லட்டா.. உங்கம்மா இருக்கற வரைக்கும் நானும் அவளும் ரொம்ப நெருங்கிய தோழிங்கப்பா.. என்னோட உயிர்த் தோழின்னு கூட சொல்லுவேன். ஆனா அவ தூக்குல அதுவும் உங்கப்பாவோட சேர்ந்து தொங்குவான்னு எதிர்பார்க்கலே கல்யாண்.”

     

    “ஆமாம்மா.. நான் நினைச்சு அழுது ஓய்ஞ்சு போயாச்சு. விடுங்க.. என்னைப் பெத்த அம்மாவின் உயிர்த்தோழியே எனக்கு அம்மாவா கிடைச்சுருக்கான்னா அது நான் செஞ்ச பாக்கியம்தான். அம்மா.. எங்கம்மா எப்படி இருப்பாங்க.. எங்கிட்ட போட்டோ இருக்கு. ஆனா நேருல எப்படி இருப்பாங்க?”

     

    “ரொம்ப அழகுப்பா.. அந்த அழகுதான் ஆபத்தாச்சு. சரி விடுப்பா.. அந்தக் கதையெல்லாம் எதுக்கு இப்போ. காலம் ஓடிப்போச்சு, அத்தோட அவ காலமும் ஓடிப்போச்சு.”

     

    “இல்லம்மா.. எதையோ சொல்ல வந்து எதையோ மறைக்கறீங்க..”

     

    “என்னத்தை சொல்லறதுப்பா.. உங்கம்மாவோட தோழியா நான் உங்க வீட்டுக்குப் போகறச்சேதான் நான் இந்த மகாபாவி கண்ணுல பட்டேன். என் மேலேயும் தப்பு இருக்குப்பா.. எதுக்கு உண்மையை மறைக்கணும்.. தானா வந்து வலைல விழுந்த மீனை அவன் விடுவானா.. உங்கம்மாவோட மூத்த மச்சினர்ங்கிற முறைல நானும் கொஞ்சம் கந்தசாமி கூட நெருங்கிப் பழகினேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னான். தோழியோடயே இந்த வீட்டுல நிரந்தரமா இருக்கலாம்ன்னான்..’

     

    அழுதாள் அந்தம்மாள். கல்யாண் ஆறுதலாகப் பார்த்தான். அவளே கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

     

    தொடரும்

    Share
  • காவல் துறை அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது

    காவல் துறை அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது

    அண்ணாகண்ணன்

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரண்டு பேரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெல்சன் என்ற இளைஞர், காவல் துறையின் காவலில் இருக்கும்போது இறந்துள்ளார்.

    முன்னதாக இவர் அளித்த வாக்குமூலத்தில், காவல் துறையினரே தன்னை அடித்தனர் எனக் கூறியுள்ளார்.

    “வெள்ளைத் துணியால் என்னுடைய கண்களைக் கட்டினர். என் கெண்டைக்காலுக்கும் இரண்டு முட்டிக்கும் இடையில் இரண்டு கற்களை வைத்தனர். ஈரமான சாக்கை வைத்துச் சுற்றினர். பின்னர் இரும்புக் கம்பியால் காலில் பலமாக ஒரு முறை அடித்தனர். இதில் என்னுடைய வலது கால் எலும்பு முறிந்து ரத்தம் வழிந்தது. நான் வலியால் துடித்தேன். யார் என்னுடைய காலில் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை. பின்னர் என்னை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் காலில் காயம் ஏற்பட்டது என்று தான் கூற வேண்டும் என போலீசார் மிரட்டினர்” என ஆகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்குப் பிறகு அவர் இறந்தும் போயுள்ளார்.

    இது முதல் நிகழ்வு இல்லை. விசாரணை என்ற பெயரில் இப்படியான கொடிய தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், 2025 ஜூன் மாதம் நிகிதா என்ற பெண் அளித்த போலி நகை திருட்டுப் புகாரின் பேரில், தனிப்படைக் காவலர்களால் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தார்.

    பற்பல வழக்குளில் கைது செய்யப்பட்டவர்கள் வழுக்கி விழுந்ததாகக் கூறி, மாவுக்கட்டுப் போட்டு அனுப்பப்படுகிறார்கள்.

    காவல் துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு தாங்களே தண்டனையும் வழங்குவது மிகத் தவறானது. இது, சட்டத்தின் ஆட்சியையும் நீதித் துறையின் தேவையையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மேலும், காவல் துறையினர் தங்கள் தவறுகளை உணர்வதே இல்லை. இது சரிதான் என்ற மனப்போக்குடன் உள்ளனர்.

    அண்மையில் ஏராளமான பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைச் சம்வங்கள் நடந்துள்ளன. இதைக் கண்டித்த அனைவரும் காவல் துறையின் மீது குற்றவாளிகளுக்குப் பயம் போய்விட்டது. காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    இந்தக் கடும் நடவடிக்கை என்பதைக் காவல் துறையினர் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத் தாமதமின்றி, சமரசமின்றி, பாரபட்சம் இன்றிச் செய்ய வேண்டும். மாறாக, குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தாங்களே தாக்குவது, தண்டிப்பது கண்டிப்பாகக் கூடாது. இது, மனித உரிமைகளை மீறும் செயல். சட்ட – நீதி நெறிமுறைகளை மீறும் செயல்.

    குற்றம் நடக்காமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். ஒருவேளை குற்றம் நடந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும். நீதிமன்றத்தின் முன் சான்றுகளை அளித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களை அடித்து, அச்சுறுத்தி, சம்பவங்களைத் திரித்து, சித்திரித்து, குறுக்குவழியில் தண்டனை அளிப்பது, மிகப் பெரிய குற்றம். காவல் துறையினர் தங்கள் கடமையையும் அதன் எல்லையையும் உணர வேண்டும். தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.

    குற்றத்தை யார் செய்தாலும் அது குற்றமே. தங்கள் செயலுக்கான விளைவுகளிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், தெய்வம் நின்று கொல்லும் என்ற கூற்றுகள், பல முறைகள் நிறுவப்பட்டுள்ளன.

    காவல் துறை, மக்களின் நண்பனாகவே இருக்க வேண்டும்.

    Share
  • பல்லழகன் – பகுதி – 22

    திவாகர்

     

    மறுபடியும் கந்தசாமியின் வீடு.

     

    “இதுதான் சார் நடந்தது. இதுதான் உண்மை.. நான் அப்படித்தான் பேசினேன்.. ஆனா துப்பாக்கில சுடப்பட்டு இறந்தார்னவுடனே எனக்கு ஒண்ணும் தோணலே.. ஒருபக்கம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்ததுன்னு நினைச்சு சந்தோஷப்படறதா இல்லே இப்படி எல்லாம் நம்ம வாழ்க்கைல நடந்ததுன்னு வருத்தப்படறதான்னு தெரியலே. ஆனா எங்கம்மா மேல சத்தியமா இதுதான் நடந்தது.”

     

    இன்ஸ்பெக்டர் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

     

    “சரி, இப்போ அந்த மொபைலை நீங்க வெச்சிருக்கீங்களா?”

     

    “ஸார்.. அது ஆசிரமத்துல வெச்சிருக்கேன். என்னோட அக்கவுண்ட் டேபிள் ஒண்ணு இருக்கு.. அங்கதான் வெச்சேன்.”

     

    சட்டென கோம்டி தன் கைப்பையிலிருந்து ஒரு மொபைல் ஃபோனை மேலே வைத்தாள். இன்ஸ்பெக்டர் அதை எடுத்துக் கொண்டார். சுந்தர் கத்தினான்.

     

    “இதுதான்,, ஓ! இது எப்படி உங்க கைக்கு?.. ஆசிரமத்தை சோதனை போட்டீங்களா?”

     

    “அது இருக்கட்டும். இப்போ இந்த கேஸை எப்படி முடிக்கலாம் கோம்டி?”

     

    “ஸார்.. சம்பவம் நடந்த நேரம் சரியா நாலேமுக்காலேர்ந்து அஞ்சு மணிக்குள்ளே.. சுந்தர் ஃபோனை வெச்சவுடனே கந்தசாமி கவலைக்குள்ளாயிருக்கணும்தான். அடுத்த நாள் பொழுதுவிடிஞ்சா கல்யாண் வந்துடுவார்.. இந்த முரளி வெறி பிடிச்சு எல்லா விஷயத்தையும் அவருக்கு சொல்லிடலாம். கல்யாணுக்கு விஷயம் தெரிஞ்சா ரொம்ப அசிங்கமாகும்.. அதுவும் இவங்க எல்லாரும் சேர்ந்து போலீஸ்னு போனா அதை விட அவமானம் இருக்கவே இருக்காதுன்னு கந்தசாமி நினைச்சிருக்கலாம்தான்.”

     

    கோம்டியை இடை மறித்தார் இன்ஸ்பெக்டர் மோகன்.

     

    “நினைச்சிருக்கலாம் என்ன? அதுதான்னு நான் தீர்மானமா சொல்லமுடியும். கல்யாண், இந்த மூணு பேர் விஷயத்திலேயும் சம்பந்தப்படலேங்கிற விஷயம் ஒண்ணு. கல்யாண் தன்னோட பெரியப்பாவை ஏதோ மிகப் பெரிய இடத்துல மரியாதையா வெச்சதெல்லாம் ஒரேயடியா இழந்துடுவோமேன்ற பயம். இன்னொண்ணு. இதோ நீங்க கொடுத்த சுமதிக்கான நாமினேஷன் டாக்குமெண்ட்.. பேங்க்குக்கும் அதை ஏற்கனவே கொடுத்திருக்கார்னும் சொல்லறீங்க.. அப்போ அவரோட தற்கொலைக்கான முடிவை அப்பவே எடுத்திட்டாருன்னுதான் சொல்ல முடியும். அந்தக் கடைசி நேரத்துல சுந்தர் அவர்கிட்டே பயமுறுத்தி தற்கொலை வேண்டுமானாலும் பண்ணிக்கோ.. கல்யாண்கிட்ட எல்லா விஷயமும் சொல்லிடப் போறேன்னு சொன்னவுடனே அந்த தற்கொலைதான் ஒரே வழின்னு அவருக்குத் தெரிஞ்சுடுச்சு.. அவர் தற்கொலைதான் பண்ணியிருக்கவேணும்..”

     

    “ஸார்.. அந்த முடிவை உங்ககிட்டே விடறேன் சார்.. நான் விசாரிக்கறவரைக்கும் விசாரிச்சாச்சு.. எனக்கு மிஸ்டர் கல்யாண் கொடுத்த வேலையை நான் பண்ணியாச்சு. போலீஸ் என்ன பண்ணனுமோ அதை தாராளமா பண்ணலாம்.”

     

    “இதுல போலீஸ் என்ன பண்ணமுடியும்? எங்ககிட்ட இருக்கற டாக்குமெண்ட்ஸ், பிரேதப் பரிசோதனை ரிபோர்ட், இப்போ ரிகார்ட் பண்ணியிருக்கற ஒப்புதல் எல்லாமே ஒரே முடிவுக்குதானே போகறது.. ஒருமுறை துப்பாக்கியை சாய்வா வெச்சு மார்புல சுட்டுருக்கார்.. மார்புல அதுவும் வலது மார்புல பட்டும் படாம ஓரமா சுட்டதாலே கீழே விழுந்திருக்கார். மயக்கம் கூட வந்திருக்கணும்.. கொஞ்ச நேரத்துல நினைவு வந்து அது சரியா சுடலேன்னு தெரிஞ்சு அடுத்த அரை மணிக்குள்ளே தன் நெத்திப் பொட்டுல சுட்டுண்டு இருக்கார். அவ்வளவுதான்.. ஏன் முதல்லயே நெத்திப் பொட்டுல சுட்டுக்கலேன்னா என்ன பதில் சொல்லமுடியும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பிரகாரம் இது ரெண்டாவது தடவையில அதுவும் அரை மணி நேரம் கேப் வெச்சு சுட்டுருக்கார்.. அவர் என்ன ப்ரொஃபெஷனலா சுடர்றவரா என்ன? முதல்தடவை சுடறவங்க நிறைய தடவை இப்படித்தான் தப்பும் ஒப்புமா சுட்டுப்பாங்க.. எங்கிட்டே நிறைய ரிகார்ட்ஸ் இருக்கு. இப்படி முதல் தடவை தப்பா சுட்டுண்டு தப்பிச்சவங்க ரிகார்ட்ஸ் கூட நிறைய இருக்கு.”

     

    கோம்டி குறுக்கிட்டாள்

    “சார்! அப்போ அந்த பீரோ ஹேண்டில்ல அப்பறம் தரையிலே தெரிந்த ரத்தக்கறை இது எப்படி வந்தது?”

     

    “அதுல என்னம்மா.. ஒரு பொருளை பீரோவிலேர்ந்து எடுத்தவுடனே நம்ம கைன்னு இல்லே யாரோட கையுமே பீரோவை மூடத்தான் செய்யும். நம்மளை அப்படியே நம்மைப் பழக்கிண்டோம். கந்தசாமி கூட துப்பாக்கியை பீரோவிலேர்ந்து துப்பாக்கி எடுத்தவர் தன்னை முதல்ல மார்புல சுட்டுண்ட உடன் ரத்தம் குபுகுபுன்னு வந்திருக்கலாம். ரத்தம் பட்ட கையோட பீரோ ஹாண்டிலைப் பிடிச்சு  மூடியிருக்கணூம். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், டாக்டர் ரிப்போர்ட் ரெண்டும் கூட இடது கைரேகை பீரோ ஹேண்டில்ல பதிஞ்சிருக்குன்னு சொல்லுது. வலது கையில துப்பாக்கி இருந்துதுல அந்தக் கையில ரத்தக் கறை இல்லே. அவரு சுட்ட உடனே பீரோவை மூடினாலும் அதுக்கும் மேலே தாங்கமுடியாம தள்ளாடி கொஞ்ச ஸ்டெப் நடந்து விழுந்து மயக்கமாயிருக்கணும். அப்படி நடக்கறச்சே ரத்தக் கறை தரைல பறதும் சகஜம். ரத்தக்கறை கூட ஸ்டெப் ஸ்டெப்பா அஞ்சாறு இடத்துல விழுந்திருக்கு.  முதல் குண்டு மார்புல தெளிவா பாயலேங்கிறது அவருக்கு மயக்கம் தெளிஞ்சு புரிஞ்சிருக்கு. அதனாலே இந்த முறை நெத்தி பொட்டுல சரியா வெச்சு சுட்டுண்டிருக்கார். அது பட்டவுடனே மரணம் சம்பவிச்சிருக்கு. விரல்ல துப்பாக்கி டிரிக்கர் மாட்டினது கூட அப்படியே பதிஞ்சிருக்கு. இதை பி.எம் ரிப்போர்ட் கூட உறுதி செய்யுதும்மா. ஸோ.. இது தற்கொலைதான்னு எனக்கு ரிப்போர்ட் வந்த அன்னிக்கே கல்யாண்கிட்டே சொன்னேன். சில தற்கொலை கேசுங்க இந்த மாதிரி ஏற்கனவே ரிகார்ட் ஆகியிருக்கு. அதனால எனக்கு ஒண்ணும் பெர்சா தோணலே.”

     

    இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு சுந்தரைப் பார்த்தார்.

     

    மிஸ்டர் சுந்தர்.. உங்க ஃபைனல் ஸ்டேட்மென்ட் இதுல ரிகார்ட் ஆனாலும் உங்க பேச்சு அவரது தற்கொலைக்குத் தூண்டுதலா இருக்கு. இதுவும் பெரிய குற்றம்தான். ஆனா நீங்க கல்யாண்க்காக வெயிட் பண்ணறீங்க.. அவர் வந்தவுடனே அவரும் நீங்களும் சேர்ந்து போலீஸ்கிட்ட போகப் போறிங்கன்னு நீங்க சொன்னது எப்படியும் கந்தசாமியைப் போலீசுல ஒப்படைக்கவேண்டும்னுதான் உங்க எண்ணம் போனதாலே உங்களை நான் இப்போ விடறேன். ஆனா இந்த கேஸ்ல அவரோட மரண சம்பவத்துல இன்னும் கண்ணால நேரா பார்த்துச் சொல்லறவங்க யாரும் இல்லேங்கிறதும் கந்தசாமி தற்கொலை முடிவுக்கு ஒரு சாட்சியா இருக்கு… மிஸ் கோம.. சாரி, கோம்டி நீங்க இதுதான் ஃபைனல்னு சொல்ல வர்ரீங்களா?”

     

    “ஸார்.. முடிவு எப்பவுமே உங்க கையிலதான்.. நான் பிராபரா விசாரிச்சுக் கொடுக்கதான் முடியும்.. ஐ திங்க்.. நான் சரியாதான் விசாரிச்சுருக்கேன்னு நினைக்கிறேன்…”

     

    இன்ஸ்பெக்டர் புன்னகைத்தார்.

     

    “அதுல என்னம்மா சந்தேகம். கல்யாண் உங்களை இந்தக் கேஸுல இன்வெஸ்டிகேஷன் பண்ணச் சொன்ன முடிவு ரொம்ப சரியான முடிவு. இத்தனை கோர்வையா எங்க டிபார்ட்மெண்ட்ல யாரும் பண்ணியிருக்க மாட்டாங்க. ஹேட்ஸ் ஆஃப் டு யூ. கோம்டி!”

     

    “தாங்க்யூ சார்.  மிஸ்டர் கல்யாண்.. என் வேலை முடிஞ்சுது.. எனக்குக் கொடுக்கவேண்டிய ஃபீஸ் ரெடியா வையுங்க.. இல்லேன்னாலும் எதிர்வீட்லதானே என் க்லினிக்.. அங்க வந்து கொடுத்துடுங்க. நான் கிளம்பறேன்.. சுமதி.. ஆல் தி பெஸ்ட்.. உன் வாழ்க்கையிலே இனிமே துன்பம்ங்க்கிற வார்த்தையே வரக் கூடாது.. ரவி உன்னை ஜாக்கிரதையா அப்படி பார்த்துப்பான்.

     

    ரவி நெளிந்தான். “இதெல்லாம் வெளியெ சொல்லத்தான் வேணுமா கோம்டி!.. எனக்கும் சுமதின்னா ரொம்பப் பிடிக்கும்னு ஏற்கனவே அவளோட அண்ணன் கல்யாணுக்கும் தெரியும்.. ஸோ டோண்ட் வொர்ரி.

     

    கோம்டி முரளியைப் பார்த்தாள்.  “மிஸ்டர் முரளி உங்க வாழ்க்கையில பிரியா கூட இனிமே சந்தோஷத்தை மட்டுமே பாருங்க.. கடந்த காலத்தையெல்லாம் பார்க்காதீங்க.. மிஸ்டர் சுந்தர்.. உங்களுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலே.. அனாதை ஆசிரமத்தை நல்லபடியா கவனிக்கறீங்க..  உங்களுக்கு இரக்ககுணம் இருக்குன்னு தெரியுது.. ஆனா நீங்க அதைப் ப்ரூவ் பண்ணிக் காமிக்கணும்னா விஜயாவை உங்க சொந்த தங்கச்சியா வளர்த்து நல்லா படிக்க வெச்சு அவளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குங்க.. அப்போதான் என்னால் உங்களைப் பாராட்டமுடியும். இன்ஸ்பெக்டர்.. நீங்க என்னை நம்பி என்னை சுதந்திரமா விட்டு இந்த கேஸு எங்கிட்டே கொடுத்ததுக்கு தேங்க்ஸ். நான் வரட்டுமா?”

     

    இன்ஸ்பெக்டர் சிரிக்கிறார். “இந்த கேஸ் ஒரு முடிவுக்கு வந்துடுச்சு. ஆனா இது இங்கே ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாடமா எடுத்துண்டு வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கிறது எப்படின்னு கத்துக்குங்க.

     

    இரவு நேரம், கிலினிக்கில் உட்கார்ந்துகொண்டு கோம்டி ஃபோனில் சாந்தியிடம் பேசுகிறாள்.

     

    “சாந்தி இந்தக் கேஸைப் பத்தி இனிமே எதுவும் கேட்காதே.. எல்லாம்  முடிஞ்சுடுத்துதான்.. ஆனா ஒரு மனுஷன் என்னவெல்லாம் குரூரமா செய்யமுடியும்னு கந்தசாமி ப்ரூவ் பண்ணியிருக்கான். என்ன.. நம்ம சுமதிக்குதான் ஒரு நல்ல வாழ்வு வந்துதுன்னு சொல்லலாம்.”

     

    “யூ எஸ் டிக்கெட் புக் பண்ணனும்டி.. அங்க கிலினிக் இடம்லாம் பார்த்தாச்சு.. நாம ஓகேன்னா அவங்களும் அங்கே ஓகேதான்..”

     

    “சரிடி,, நான் இன்னும் அம்மாகிட்டே பேசலேடி.. ராத்திரியே பேசறேன்..”

     

    “இருந்தாலும் இந்த ‘ஆபரேஷன் கந்தசாமி’ல ஒரு விஷயத்துல மாத்திரம் நாம ரெண்டு பேருமே ஃபெயில்தாண்டி..”

     

    “என்னடி சொல்லறே.. ஆபரேஷன் கந்தசாமி’ல நாம எங்கே ஃபெயிலானோம்?”..

     

    “நீ உன் இன்வெஸ்டிகேஷன் கேஸுக்காக ஒரு க்ளையண்ட் பிடிச்ச.. ஆனா உன் க்லினிக்ல அந்த பல்லழகனோட எத்துப் பல்லை மட்டும் நம்மளாலே ஒண்ணும் தொடமுடியலையேடி..”

     

    அவள் சிரிக்கிறாள். “ஏண்டி.. நாம ரெண்டு பேருமே அவன் தெத்துப்பல்லைத்தான் நம்ம காலேஜ்ல,  க்ளாஸ்லயே தொட்டுப் பார்த்தோமேடி,, மறந்துட்டியா?”

     

    கதவு தட்டப்படும் சப்தம் கேட்கிறது. மெதுவான குரலில் கோம்டி பேசுகிறாள். “ஏய்.. எப்ப நீ அவன் பேரை எடுத்தியோ அவன் வர்றான் போல.. பணம் கொண்டு வர்றான் போல..”

     

    சாந்தி உடனே ஃபோனில் கத்துகிறாள்.

    “எதுக்கும் அவனையே அந்த விஷயமும் கேட்டுடுடி”

     

    “கேட்கிறேன்.. கேட்கிறேன்.. அவ்வளோ சீக்கிரம் அவனை விட்டுடுவேனா.. கேட்டுட்டு உனக்கும் நாளைக்குச் சொல்லறேன்.”.

     

    அவள் எதிர்ப்பார்த்தபடியே கல்யாண் வருகிறான். கூடவே ரவி.. அவள் எதிரே உட்காருகிறார்கள். அவன் கையில் அவள் எதிர்ப்பார்த்த செக் இருக்கிறது.. அவளிடம் கொடுக்கவும் செய்கிறான்.

     

    கோம்டி அந்தச் செக்கைக் கையில் வைத்தபடி அவனைப் பார்க்கிறாள். அவள் அவனையே பார்க்கும் பார்வை அவனை ஒரு மாதிரி நெளிய வைத்தது.

     

    “எதுக்குங்க என்னையே பாக்கறீங்க?”

     

    கையில் உள்ள செக்கைக் காண்பித்துப் பேசுகிறாள்.

     

    “இல்லே.. இந்த செக்கைப் பார்த்தேன்,, அதான் உங்களைப் பார்த்தேன்..”

     

    “ஏங்க.. அமௌண்ட் குறைச்சலா இருக்கா?”

     

    “சேச்சே.. நான் என்னிக்குமே காசுக்காக இந்த உத்யோகம் பண்றதில்லே.. எனக்கு இன்வெஸ்டிகேடிவ் ஒரு ரொம்ப ரொம்ப விருப்பமான வேலை.. ஹாபி.. எனக்கு மெயின் ப்ரொஃபெஷன் இந்த பல் கிலினிக்.. பல்லைப் பிடுங்கிப் பணத்தைப் பிடுங்குற வேலைதான். அதுக்குதான் என்னைப் படிக்க வெச்சாங்க.. அவங்க ஆசைப்படி நல்லா படிச்சேன். காலேஜ்லயே ஃபர்ஸ்ட்டா வந்தேன்”.

     

    மறுபடியும் அவனையே உற்றுப் பார்த்தாள். அவன் தலை தாழ்ந்து கொண்டான்,

     

    “கல்யாண்.. நீங்க இங்கே வர்றப்போ இந்தக் கதவை உள்பக்கம் சாத்தினீங்களா.. ரவி! இல்லேன்னா கொஞ்சம் சாத்திட்டு வாயேன்.”

     

    “சாத்தினேங்க..” கல்யாண் சொன்னான்.

     

    “அப்போ இங்கே நாம மூவரையும் தவிர யாருமில்லன்னு நம்பறீங்களா?”

     

    “ஏன் கேக்கறீங்க?”

     

    “எங்கம்மா அப்பாவும் கூட உள் ரூம்ல அதாவது உள்ளே இருக்கற பெட்ரூம்லதான் டிவி சீரியல் பாத்துண்டுருக்காங்க.. ரெண்டு பேருமே கொஞ்சம் சௌண்ட் பார்ட்டிங்க.. காது கேக்காது அதாவது அவங்க ஒத்தருக்கு ஒத்தர் ரகசியம் பேசணும்னா கூட பக்கத்து வீட்டுக்கும் கேக்கறா மாதிரி கொஞ்சம் சப்தம் போட்டுதான் பேசுவாங்க.”

     

    “எனக்கு எதுக்குங்க இதெல்லாம் சொல்லறீங்க..?”

     

    “ஸோ நாம் இங்கே இருக்கறதோ.. பேசறதோ எதுவும் அவங்களுக்குக் கேட்காது.. அதனால”

     

    “அதனால?”

     

    “சொல்லுங்க..”

     

    “எதைச் சொல்லணும்?”

     

    “கல்யாண்..” என்றபடியே அவனை மறுபடியும் உற்றுப் பார்த்தாள்

     

    “என்னங்க அப்படிப் பாக்கறிங்க? .. எதைச் சொல்லணும்? ஓ.. இந்த சுமதியை ரவி எப்போலேர்ந்து லவ் பண்றான்னுதானே கேக்கறீங்க… அது ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடி வைசாக்ல..’

     

    ‘ரவி இருக்கட்டும் கல்யாண்.. அவன் நம்ம ரெண்டு பேருக்குமே நெருங்கினவன்.. அவன் சுமதியைக் கல்யாணம் பண்ணினா நாம போய் நல்லா சாப்ட்டுட்டு வாழ்த்தும் சொல்லிட்டு வரலாம். ஆனா’

     

    ரவி சிரித்தான்..’கோம்டி! நீ என்ன சொல்லவர்றே!’

     

    ‘நான் எதுவுமே சொல்லப் போறதில்லே.. கல்யாண்தான் சொல்லணும்..’

     

    ரவி முறைத்தான்.. ‘என்ன சொல்லணும்?’

     

    மறுபடியும் நிதானித்தாள் அவள். பிறகு அதே நிதானத்துடன் பேசினாள்.

     

    “அவர் பெரியப்பாவை அவர் கொலை செய்த விவரங்களை..”

     

    அதிர்ச்சியாகிப் போனான் கல்யாண்.. “அது அது..” என்று தடுமாறினான். ரவி ஏதோ சொல்ல வந்தான். கோம்டி அனனைத் தடுத்து நிறுத்தி கல்யாணைப் பார்த்துப் பேசினாள்.

     

    தொடரும்

     

    Share
  • மாசி மகத்தை மனதில் நினைப்போம் !

    மாசி மகத்தை மனதில் நினைப்போம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நதி நீராடுதல் நலனே நல்கும்
    அதனை முன்னோர் அவசிய மாக்கினார்
    ஒவ்வொரு தினமும் உன்னத மென்று
    உள்ள மெண்ணி இணைத்தார் வாழ்வில்

    உள்ளத் தூய்மை உடலில் தூய்மை
    தெள்ளத் தெளிவுடன் தேர்ந்தார் முன்னோர்
    நீரால் உடலில் தூய்மை நிறையும்
    நேர்மையால் உளத்தில் தூய்மை நிலைக்கும்

    உடலில் தூய்மை உளத்தில் தூய்மை
    தருவதே சமயத்தின் நோக்கே ஆகும்
    இரண்டும் தூய்மை எய்திடும் நிலையில்
    இறையின் நினைப்பு இதயத்தில் அமரும்

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும்
    ஒவ்வொரு பொழுதும் உன்னதம் ஆகும்
    உன்னதக் கருவை உட்கரு வாக்கி
    உயர்பரம் பொருளை உணர்ந்திடச் செய்தார்

    இறையினைத் தேடி ஓடவே வேண்டாம்
    இயற்கையை இறையாய் இருப்பதே தத்துவம்
    நீரும் இயற்கை நெருப்பும் இயற்கை
    இரண்டு மாகி இருக்கிறான் இறைவன்

    இருளிலும் இருப்பான் ஒளியிலும் இருப்பான்
    இறுதியும் தொடக்கமும் இல்லான் இறைவன்
    இறைவனைக் கண்டிட ஏங்கியே நிற்கிறோம்
    ஏக்கத்தைப் போக்கிட வழிகளைத் தேர்கிறோம்

    திருநாள் பெருநாள் தேடிடும் மார்க்கமாய்
    பக்குவம் பேணிக் கைக்கொண்டு வருகிறோம்
    மாசியில் மகமாய் வருகின்ற திருநாள்
    மாண்புடை மகத்துவம் கொண்ட நன்னாளே

    சைவம் வைணவம் இணையும் வகையில்
    மாசி மகமும் ஆகியே இருக்கு
    சிவனும் இருப்பார் முருகனும் இருப்பார்
    திருமால் இருப்பார் சிவசக்தியும் இருப்பார்

    இட்ட  பெயர்கள் பற்பல வாகினும்
    எல்லாம் இறையே எல்லாம் உயர்வே
    உயர்வாம் இறையை மனமதில் எண்ணி
    நதிநீராடல் மாசி மகத்தின் மகத்துவமாகும்

    மகத்துடன் இணையும் மாசிப் பெளர்ணமி
    மகத்துவம் மிக்கது என்பது தத்துவம்
    புனித நீராடுதல் மகத்துவம் என்பதால்
    மாசி மகத்துடன் இணைத்ததை வியப்போம் !

    Share
  • பதவி மோகம்

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “மனிதனை ஆட்டிப் படைக்கும்
    அமைதியான ஆயுதம் ‘பதவி’
    நிரந்தரமில்லா மனித வாழ்வில்
    நாற்காலி மட்டும் நிரந்தரமா?
    பதவிமோகத்தில் பேசும் மனிதன்,
    பகைக்கு மட்டுமே சொந்தக்காரன்!
    எத்தனையோ தலைவர்கள் உலகிலே;
    வந்தார்கள், சென்றார்கள், பெயர்பெற்றார்கள்!
    ஆணவத்தில் அதிகாரத்தில் தத்தளித்த
    மனிதர்கள் போனார்கள், பெயர்தொியாமல்…!
    சகமனிதனை மனிதனாகப் பார்!
    பதவிவெறியில் மாக்களாக நடத்தாதே;
    காலமாற்றத்தில் எதுவும் நிரந்தரமில்லை!”

    Share
  • பெண்மை போற்றுக

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “அந்நியருக்கு அடிமைப்பட்ட தேசத்துக்கு விடுதலை
    ஆணுக்கு அடிமைப்பட்ட பெண்ணுக்கும் விடுதலை!
    மாதவம் புரிந்து மங்கையராகப் பிறப்பு
    ஆணுக்குப்பெண் சரிநிகர் சமமென வாழ்வு
    கணவனுடன் உடன்கட்டை ஏறிடாத இறப்பு!

    தந்தையை கணவரை மகனையென – ஆணினத்தைச்
    சார்ந்தே வாழும் சார்புவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.
    வெளிநாட்டில் படிப்பு வேலையென தனித்தியங்கும்
    சொந்தக்காலில் நிற்கும் வாழ்க்கைக்குத் தொடக்கப்புள்ளி…
    எட்டாக்கனியான பட்டங்களும் பதவிகளும் எட்டின
    பேச்சுரிமைமுதல் சொத்துரிமைவரை அனைத்தும் வசப்பட்டன.

    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்பது அக்காலம்
    நாட்டுக்குள்ளே பெண்ணை ஏற்றிவைப்பது இக்காலம்!
    அரியணையில் வீற்றிருக்கும் அதியன்போன்ற மன்னனுக்கு
    அறிவுரைநல்கும் ஔவையெனும் அமைச்சராக ஒருகாலம்,
    அறிவார்ந்த கருத்துக்களுடன் அரியணையில் வீற்றிருந்து,
    சிங்கப்பெண்ணாக வலம்வரும் பெண்ணினமே தற்காலம்!
    மண்ணில் மட்டுமல்ல, விண்ணிலும் பெண்ணென…
    மகத்தான சாதனைகளின் கொள்கலனான சக்தியை
    மாபெரும் பெண்மையை வணங்கிப் போற்றுவோம்!”

    Share
  • கவியரசர்…. சங்க இலக்கியம்….. காதல்…

    கவியரசர்…. சங்க இலக்கியம்….. காதல்…

    சக்தி சக்திதாசன்

    ​கவியரசர் கண்ணதாசன் எனும் இலக்கிய ஊற்று சிறுகூடல் எனும் மலையிலே உருவாகி தமிழர் வாழும் நன்னிலமெங்கும் வற்றாது பாய்ந்து தமிழ் மனங்களெல்லாம் செழிப்புற வைத்திருக்கிறது.

    ​கவியரசர் ஒரு இலக்கியப் பித்தர்.

    சங்க இலக்கியங்களையெல்லாம் ரசித்துப் படித்தார்.

    படித்து தன்னால் புரிந்து கொள்ளப்பட்டவை எல்லாம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என அவாக் கொண்டார்.

    ​வகுப்பறையிலே ஒரு வாத்தியார் எமக்குப் பாடமாகப் புகட்டும் போது கசந்த சங்க இலக்கியங்களைத் தனது எளிமையான தமிழ் எனும் தேன் தடவி திரைப்படப் பாடல்களின் வரிகளாக்கினார்.

    ​சங்க கால இலக்கியங்களில் கூறப்பட்ட விடயங்கள் என்று தெரியாமலே நாங்கள் தான் ஆக்கிய வரிகளை முணுமுணுப்பதைக் கண்டு அளவிலா ஆனந்தம் கொண்டார்.

    சங்ககாலப் புலவர்களுக்கு தான் செய்யும் மிகப் பெரிய தொண்டு, தமிழன்னைக்கு தானாற்றும் சேவை என்றே அவர் இதை எடுத்துக் கொண்டார்.

    ​இப்போது நாம் இதைக் கேட்கும் போது படிக்கும் போது இது ஏதோ இலகுவாகச் செய்து முடிக்கக்கூடிய விடயம் என்று கூட எண்ணுவோம்.

    ஆனால் ஒரு விடயத்தைப் படித்துக் கிரகித்துக் கொள்வது சரி, ஆனால் அதை ஞாபகத்தில் வைத்து தேவையான இடத்தில் தேவையான காட்சிகளுக்கு அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வரிகளை அமைப்பது என்பது கவியரசர் ஒருவராலேயே சாத்தியப்பட்டது.

    ​அவரது இந்த அசாத்திய திறமையைப் படித்து ரசித்த போது அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது.

    அதன் விளைவாக,

    காதல் இருக்கிறதே அது ஒரு விசித்திரமான உணர்வு.

    அது யாருக்கு எப்போது எப்படி ஏற்படுகிறது என்பதை வரையறுத்து வைத்தவர் யாருமிலர்.

    ​ஆனால் இவ்வுணர்வு எம் சங்க காலத்திலேயே மிகவும் பறந்து பட்ட உணர்வாக இருந்ததால் தான் இவ்வுணர்வுக்கு முதன்மை கொடுத்து பல சங்ககால இலக்கியங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன.

    இவ்வுணர்வுகளிலே காதலி காதலை நினைந்து அன்றி அதைப் பிரியும் போது ஏற்படும் சோகக்கணங்களை விவரிக்கும் வகையே தனிதான்.

    ​சில உவமைகள், சில உதாரணங்கள் நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவைகளாக இருக்காது.

    இருப்பினும் காதலை விவரிக்கும் புலவர்கள் இதனை கையாளும் போது அது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவைகளே என்று பழமையான தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்கிறது.

    ​”உண்டா குரிய வல்லாப் பொருளை
    உண்டன போலக் கூறலும் மரபே”

    (தொல்: 1156)

    ​கனியை உண்கிறோம் ஆனால் கல்லை உண்ண முடியுமா?

    ஆனால் காதல் உணர்வை விளக்கும் புலவர்கள் கல்லை உண்ணலாம் எனும் வகையில் அவ்வுணர்வை விளக்க எழுதும் கவிதைகளைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் என்கிறது தொல்காப்பியம்.

    இதன் அடிப்படையிலே தான் கவியரசர் இவ்வரிகளை எழுதினாரோ?

    ​”தென்றலிலே எனதுடல் தேய்ந்தது பாதி – அது
    தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி”

    தென்றலின் தன்மையே என்ன இனிமையாக உடலைப் ஸ்பரிப்பது தானே !

    ​அப்படி அத்தென்றல் ஸ்பரிக்கும் உணர்வு அவளுக்கு அவள் காதலன் தனைப் ஸ்பரிசிக்கும் உணர்வைக் கொடுப்பதால் அவ்வுணர்வின் தாக்கம் அவளின் உடலை பாதியாக இளைக்கப் பண்ணி விட்டதாம் ….

    ​அப்படியானால் அவள் உடலின் பாதியைத் தென்றல் தின்றதாகத் தானே அர்த்தம் .

    ​அப்படி அத்தென்றல் தின்ற பாதி போக மீதியாக இருப்பதுதான் அவள் இப்போது கொண்ட இளைத்த தோற்றம் என்கிறாள்.

    அக்காதலினால் வாழும் பெண் .

    ​இரு வரிகளுக்குள் எத்தனை பெரிய விளக்கத்தை விதைத்து விட்டார் நம் கவியரசர் பாருங்கள் .

    ​காதல் கண்களைக் குருடாக்கி விடும் என்பார்கள் .

    ​நாம் கண்முன்னாலேயே பார்க்கும் நிகழ்வுகள் எத்தனையோ .

    ​மிகவும் பிரயத்தனப்பட்டு ஒரு பெண்ணின் மனதைக் கவரும் ஆடவர் பலர் மிகவும் இலகுவாக அப்பெண்ணை ஏமாற்றிவிடும் சந்தர்ப்பங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறோம் .

    ​அதே சமயம் ஆண்களை ஏமாற்றும் பெண்கள் இல்லை என்பது என் வாதமல்ல .

    ​காதல் கண்களைக் குருடாக்கிவிடும் என்பார்கள்.

    ​தீர விசாரிக்காமல் , அவ்வாடவனைப் பற்றிச் சரிவர அறியாமல் காதலிலே விழுந்து விடும் பெண்களில் சிலர் ஏமாற்றப்பட்டு விடுகிறார்கள் .

    ​இதோ அகநானூறில் இதைப் பிரதிபலிப்பதாக வரும் பாடல் ஒன்று ,

    ​நெஞ்சுநெகிழ் பருவரல் செய்த அன்பி லாளன் அறிவுநயந் தேனே (அகம் :260)

    ​தன்னைக் காதலித்து கைவிட்டு , ஏமாற்றித் துன்பத்தைத் தனக்குப் புரிந்த அந்த அன்பற்றவனுடைய அறியாமையை அறியாது அவனை நம்பி ஏமாந்து போனேனே என்று புலம்பும் ஒரு பேதையின் நிலையைக் குறிக்கும் பாடலிது,

    ​இதைத் தனது பாணியில் கவியரசர் எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போமா?

    ​இறைவன் என்பவன் பரம்பொருள். அவனை நம்பியவர்களை அவன் எப்போதும் கைவிடுவதில்லை என்பது ஒரு பொதுவான நம்பிக்கை.

    ​ஆனால் தன் காதலனை நம்பிய அப்பேதையின் நிலை?

    அழகாய்ச் சொல்கிறார் கவியரசர்,

    ​உன்னை நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
    உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே

    ​என்கிறாள் அப்பேதை.

    ​அது மட்டுமா?

    ​ஒரு மரத்தில் விளையும் கனியின் தரத்தையும், அக்கனியின் சுவையையும் அம்மரம் அறியும் என்பதும், உண்மையான காதலை அக்காதலைத் தனதாக்கிக் கொண்ட மனம் அறியும் என்பதும் உண்மையே.

    ஆனால் காதல் வயப்பட்ட ஆண்களின் மனதில் கனிவான தன்மை இருந்தால் தானே தம்மை விரும்பித் தவிக்கும் ஒரு மடந்தையின் மனதைப் புரிந்து கொள்ளும் வகை அவர்களுக்குத் தெரியும் .

    ​இதோ மீண்டும் கவியரசர்,

    ​கனியை மரமறியும் காதலை மனமறியும்
    கனிவிருந்தால் அல்லவோ கன்னியர் நிலை தெரியும்

    ​என்று தனக்கேயுரிய பாணியில் ஒரு பேதையின் புலம்பலை அழகாய்க் கூறுகிறார்.

    ​அன்பினிய வாசகர்களே!

    ​என் மனதில் வாசம் செய்யும் கவியரசரின் தேன் துளிகளில் இரண்டை உங்களுடன் சேர்ந்து சுவைத்தேன் .

    இந்தத் தேன்கூட்டில் இன்னமும் பலதுளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன.

    அவற்றில் சிலவற்றோடு மீண்டும் வருவேன்.

    Share
  • உவேசா உயிர் மூச்சு தமிழே !

    உவேசா உயிர் மூச்சு தமிழே !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உத்தம தானபுரம் ஈன்றிட்ட முத்து
    உவேசா என்றுமே தமிழுக்குச் சொத்து
    தமிழ் அன்னை தவமைந்தன் அவரே
    தமிழ் உலகில் வாழுகிறார் தமிழாய்

    ஆங்கிலத்தை வட  மொழியைப்  பாரா
    அன்னைத் தமிழ் அகமேந்தி நின்றார்
    தூங்காமல் தமிழ் படித்துச் சுவைத்தார்
    சுவைத் தனைத்தும் சொர்க்கமாய் கண்டார்

    நல்ல தமிழ் ஆசானைக் கண்டார்
    எல்லை இல்லா இன்பத்தை அடைந்தார்
    கற்பவைகள் தேர்ந் தெடுத்துக் கற்றார்
    கற்றபடி நடந்து அவரும் உயர்ந்தார்

    நாம் படிக்கும் அத்தனையும் ஏடாய்
    வீடெல்லாம் இருந்ததை நாம் அறியோம்
    ஏடு தேடி ஊரெல்லாம் ஓடி
    வீடிருக்கும் ஏடு கண்டு வியந்தார்

    எங்கள் தமிழ் அத்தனையும் ஏட்டில்
    தங்கியே இருந்ததை நாம் உணர்ந்தால்
    உவேசா செய்த பணி உணர்வோம்
    உயிர் கொடுத்து மீட்டார் தமிழனைத்தும்

    கட்டை வண்டி கைகொடுக்க அவரும்
    காடு மேடு சென்றலைந்து திரிந்தார்
    எத்தனையே தமிழ் ஏட்டைக் கண்டார்
    எடுத் தெடுத்து கையெடுத்து அணைத்தார்

    ஏடு தேடி சென்றபோது எரித்தார்
    ஓடு கின்ற ஆற்றினிலே விட்டார்
    பாடு பட்டு அத்தனையும் தடுத்தார்
    நாம் படிப்பதற்கு நூலாக்கித் தந்தார்

    சங்கத் தமிழ் தமிழனது சொத்து
    எங்கள் சுவாமிநாதன் மீட்டாரே நினைப்போம்
    உவேசா என்று சொன்னால் உழைப்போ
    உவேசா உயிர் மூச்சு தமிழே !

    Share
  • விவசாயி

    விவசாயி

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “விடியுமுன் குளியல்
    குளக்கரை குளிர்நீரில்;
    மானம் மரியாதைக்கு
    வேட்டியும் துண்டுமே!
    நெற்றிநிறை திருநீறு
    அதிகாலை சூரியவழிபாடு!
    தேவாமிர்தமாக வயிறுகுளிர
    பழையசோற்றுத் தண்ணீர்!

    உச்சிவெயிலையும் பொருட்படுத்தாத
    உன்னதமான உழைப்பு!
    கால்வயிற்றுக் கஞ்சிக்காக
    அயராது உழைத்தும்
    வயிற்றிலே சுருக்கங்கள்,
    கண்ணிலே ஏக்கங்கள்!
    பண்டிகை நாட்களிலும்
    பட்டாடை உடுத்தியதில்லை,
    விடுமுறை நாட்களிலும்
    ஏர்பிடிக்க மறந்ததில்லை!

    பெற்றபிள்ளையின் கல்விக்காக
    காய்த்துப்போன கரங்கள்!
    கண்ணாடி பார்க்காத அழகு,
    கள்ளங்கபடமற்ற புன்னகை!
    நெற்றிவியர்வை நிலத்தில்சிந்தி,
    விதைவிதைத்து, பயிர்காத்து,
    அறுவடைசெய்யும் விவசாயிக்கு
    அரிசிச்சோறு கிடைப்பதில்லை!
    உழைப்பிற்கேற்ற ஊதியமில்லை,
    உழும்நிலம் சொந்தமில்லை!
    தனக்கென வாழ்ந்ததில்லை,
    பஞ்சுமெத்தையில் உறங்கியதில்லை!

    வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி
    வளர்த்தபிள்ளைக்குத் தெரிவதில்லை
    விவசாயத்தின் அருமை!
    விதவிதமான பலகாரங்கள்
    பேரன்பேத்தியின் வாய்ருசிக்கு
    கடன்வாங்கியும் செய்ததுண்டு!

    ஊரார்உண்ண நெல்விளைவித்த
    விவசாயியின் விவசாயக்கடனை
    அடைத்திடயாரும் முன்வரவில்லை,
    அரசாங்கமும் தள்ளுபடிசெய்யவில்லை!
    மனம்உடைந்த கடைசிவிவசாயியின்
    பரிதாபநிலையோ தற்கொலை!”

    Share
  • தேடுவார் தேடினால் தெரிவான் இறைவன் !

    தேடுவார் தேடினால் தெரிவான் இறைவன் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியு மில்லா அந்தமு மில்லா
    சோதியாய் சுடராய் இருப்பது இறையே
    வாதிட முடியா வண்ணமா யிருப்பது
    ஆதியா யிருக்கும் அரும் பொருளாகும்

    ஆணவ மிருப்பார் காணவு மாட்டா
    அஞ்ஞான மில்லா மெஞ்ஞானப் பொருளே
    வாய்மையும் தூய்மையும் வாய்த்த நற்பொருளே
    விண்ணாய் மண்ணாய் வியாபிக்கும் பொருளே

    அப்பொருள் சிவனே அதுவே முதலே
    எப்பொரு ளுள்ளும் இருப்பது மதுவே
    நிற்பதும் நடப்பதும் நினைத்திடு மனைத்தும்
    நிறைந்திடு பொருளாய் இருப்பது சிவமே

    சிவனை நினைவார் சிந்தை சிறக்கும்
    சிந்தை சிறந்தால் சிவனே தெரிவார்
    சிவனை நினைக்கச் சிவ ராத்திரியே
    சிறப்புடை நாளாய் அமைந்துமே இருக்கு

    புராணக் கதைகளைத் புறந்தள்ள வேண்டாம்
    புத்தியைப் புகட்டும் அத்தனை கருக்கள்
    விளங்கா உண்மையை விளக்கிட வந்த
    விளக்கே அவையென விளங்கினால் நலனே

    அறிவியல் அனைத்தும் அமைந்தது சமயம்
    அஞ்ஞான நிலையில் விளங்குதல் அரிது
    இறையின் தத்துவம் இயற்பியல் தத்துவம்
    எல்லாம் சிவ ராத்திரி மகத்துவம்

    மனத்தை ஒடுக்கினால் மர்மம் விலகும்
    மர்மம் விலக வைப்பதே நோன்பு
    பரம் பொருளாகிய சிவனைப் பரவி
    பக்தியால் நோற்றால் பக்குவம் கிடைக்கும்

    மாலொடு அயனும் அடிமுடி தேடிய
    கதையைக் கருத்தில் இருத்திட வேண்டும்
    அடிமுடி காணா அலைந்ததன் காரணம்
    அகத்தை என்பதே அடிப்படை அன்றோ

    தேடுவார் தேடினால் தெரிவான் இறைவன்
    தெளிவுடன் இருந்தால் தரிசனம் தருவான்
    இதுவே  சிவனின் ராத்திரி தத்துவம்
    தனித்து விழித்து பசியுடன் இருப்போம்

    நம்பிக் கைவைத்தால் நல்லதே கிடைக்கும்
    நம்பிக்கை யென்பதே நல்லதோர் மந்திரம்
    நமச்சிவாய நமைக் காக்கும் மந்திரம்
    சொல்லுவோம் மந்திரம் வெல்லுவோம் பகையினை !

    Share
  • ஊர் உவக்கும் பண்பு!

    ஊர் உவக்கும் பண்பு!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கடல் அலைகள் ஆர்ப்பரித்துக்
    கரை தொட்டு மீளும்
    மனதி லெழும் நினைவுகளும்
    மறு படியும் மீளும்

    வான் பறக்கும் பறவைகளும்
    மண் தொட்டு நிற்கும்
    மனம் இருக்கும் சுமையெல்லாம்
    மண் ஏற்று நிற்கும்

    தேன் எடுக்கும் வண்டெல்லாம்
    திசை எங்கும் திரியும்
    தெளிவு பெறா நிலையினிலே
    தேடுகிறார் பல பேர்

    ஊர் நடுவே பழுத்தமரம்
    ஒரு பேதம் காட்டா
    பேர் பெற்றார் என்பார்கள்
    பின் பற்றார் பண்பை

    நீர் கொடுக்கும் மழையே
    பார் பெற்ற வரமே
    ஊர் உவக்கும் பண்பே
    உயர் மனிதப் பிறப்பே

    Share
  • சுருக்கெழுத்துகளால் சிதையும் தமிழ்

    சுருக்கெழுத்துகளால் சிதையும் தமிழ்

    அண்ணாகண்ணன்

    இன்றைய நாளிதழில் எஸ்.பி.கோயில் என்ற பெயரைக் கண்டேன். சிங்கப்பெருமாள் கோவில் என்ற அழகிய பெயரைத்தான் இப்படி எழுதியிருக்கிறார்கள். தியாகராய நகர் என்ற பெயர் தி.நகராகி, பலர் நாவில் டி.நகர் ஆகிவிட்டது. கலைஞர் கருணாநிதி நகர், எப்போதோ கே.கே.நகர் ஆகிவிட்டது. வியாசர்பாடியில் மகாகவி பாரதி நகர், எம்.கே.பி. நகர் ஆகிவிட்டது.

    அரியலூரில் தாதம்பேட்டை பழூர் என்ற ஊர், தா.பழூர் ஆகி, டி.பழூர் ஆனது. கோவையில் பாப்பநாயக்கன் பாளையம், பி.என்.பாளையம் ஆனது. குப்பைக் கோனான் புதூர், கே.கே. புதூர் ஆனது. மதுரை மாவட்டத்தில் தேவன்குறிச்சி கல்லுப்பட்டி என்ற ஊர், தே.கல்லுப்பட்டி ஆகி, பிறகு டி.கல்லுப்பட்டி ஆனது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான ஊர்களும் சாலைகளும் சுருக்கெழுத்துகளால் அடையாளம் இழந்துள்ளன.

    பல ஊர்களில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற முன்னொட்டுகளுடன் ஊர்ப்பகுதிகளும் வீதிகளும் உள்ளன. இவை அனைத்தும் இன்று ஈஸ்ட், வெஸ்ட், நார்த், சவுத் என வாய்க்கு வாய் பேசப்படுகின்றன.

    இடங்கள் மட்டுமில்லாமல், மனிதர்களின் பெயர்களும் இன்று சுருக்கப் பெயர்களாகி வருகின்றன. முதலெழுத்து மட்டுமின்றி, முழுப் பெயருமே ஆங்கிலச் சுருக்கெழுத்துகளால் அழைக்கப்படுகின்றன. பதவிப் பெயர்களும் பட்டப் பெயர்களும் கூட இதே போல் சுருங்கிவிட்டன. கட்சிப் பெயர்களும் தலைவர்களின் பெயர்களும் கூட ஆங்கிலச் சுருக்கெழுத்துகளால் அழைக்கப்படுகின்றன.

    இணைய உரையாடல்களின் சுருக்கெழுத்துகள், பெரும்பாலும் ஆங்கிலத்தில் கோலோச்சுகின்றன. அன்றாடம், புதுப் புதுச் சுருக்கெழுத்துகள் தீயாய்ப் பரவுகின்றன. திரைப்படங்களின் பெயர்களும் கூட இவ்வாறே சுருங்குகின்றன. பொன்னியின் செல்வன் பி.எஸ். ஆகிறது.

    உலகம் நம் உள்ளங்கைக்குள் சுருங்கி வருவதில் நமக்கு மகிழ்ச்சியே. ஆனால், நம் மொழியும் அவ்வாறு சுருங்கிவிடக் கூடாது. இடத்தின், பொருளின், தொழில்நுட்பத்தின், உயிர்களின், நபர்களின் முழுப் பெயரையும் வாயார அழைப்போம். ஒருவேளை சுருக்கினாலும் தமிழில் சுருக்குவோம்.

    உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்.

    Share
  • பல்லழகன் – பகுதி 21

    திவாகர்

     

    கோம்டி சமாதானப்படுத்தினாள்.

    “போலீஸ் எதையுமே சந்தேகக் கண்ணோடதான் பார்ப்பாங்க முரளி.

    உங்களுக்கு நிறைய விஷயங்க தெரியாதுங்கறது எனக்கும் போலீஸுக்கும் கூடத் தெரியும். சுமதி முதல்ல யாருன்னு நீங்க தெரிஞ்சுக்கணும் இல்லையா.. நான் சொல்லறேன். உங்க மாமா கந்தசாமியோட சொந்த மகள்தான் சுமதி.”

     

    “என்ன நிஜமாகவா.. அப்போ இதை எங்களுக்கு மறைச்சு வெச்சார் மாமா? என்னாலே நம்பமுடியலியே..”

     

    கல்யாண் குறுக்கிட்டான். “பெரியப்பா நிறைய விஷயங்களை மறைச்சு வெச்சிருக்கார் முரளி.. உன் விஷயமே நீ சொன்னப்பறம்தான் எனக்குத் தெரியும்.. இன்னும் சுந்தர் சொல்லப் போகற விஷயமும் நீ கேட்கணும்.. அதுக்கு முன்னாடி இந்த சுமதிதான் பெரியப்பாவோட ஒரே மகள்.. பெரியம்மாவையும் அழைச்சுண்டுதான் வந்திருக்கேன்.. ஆனா இதையெல்லாம் அவர் ஏன் மறைச்சார்னு தெரிஞ்சுக்கணும்னா அப்பறமா நிதானமா பேசலாம்.. பெரியப்பாவுக்கு நான் நேரடி உறவு.. நானே சொல்லறேன்.. இந்த சுமதி பெரியப்பாவின் உண்மையான வாரிசு. அதுக்கான ஆதாரம்னு நீங்கள்லாம் கேட்பீங்கன்னுதான் கோம்டி எப்படியும் ஒரு ஆதாரம் வேணுங்கறச்சே பெரியப்பாவே சமீபத்துல எழுதிக்கொடுத்த வாரிசு பத்திரத்தைக் கேட்டு வாங்கியிருக்காங்க. அதையும் கொண்டு வந்திருக்கேன். அதாவது தன் பேங்க்ல தன் பணத்தைத் தனக்குப் பிறகு தன் பெண் சுமதிக்குப் போய்ச் சேரணும்னு அவரே சுயமா கையெழுத்துப் போட்டு பேங்க்குக்கு ஒரு காபியும் சுமதியோட அம்மாகிட்டே ஒரு காபியும் கொடுத்திட்டுதான் போயிருக்கார் பெரியப்பா.”

     

    முரளி திகைத்துப் போயிருந்தது அவன் குரலில் தெரிந்தது கல்யாண் கோம்டியைப் பார்க்க அவள் தன் கையிலிருந்த பேங்க் பத்திரத்தை இன்ஸ்பெக்டர் மோகனிடம் கொடுத்தாள்.

     

    “பெரியப்பா சமீபத்துல எப்ப கொடுத்தார்?.. நான் இல்லாம பேங்க் கூட போகமாட்டாரே கல்யாண்? எப்ப சுமதி வீட்டுக்கு மறுபடி போனார்.. நான் மட்டுமே அவரை அழைச்சுண்டு போவேன்,, அப்ப சமீபத்துல எப்போ போனார்.?”

     

    “முரளி! மறுபடியும் உன் அப்பாவித்தனத்தைக் காமிக்கறே.. உன் அப்பாவித்தனம்தான் பெரியப்பாவை நல்லா அவர் சுய நலத்துக்காக யூஸ் பண்ண வெச்சது. பெரியப்பாவை நீ நாலு மாசத்துக்கு முன்னாடி ஒருதரம்தான் கார்ல அழைச்சுட்டுப் போனே.. ஆனா அதுக்கப்பறம் பத்துப் பன்னெண்டு தரம் சுமதி வீட்டுக்கு ஆட்டோவுல போயிட்டு வந்திருக்கார் பெரியப்பா. இதெல்லாம் உனக்குத் தெரியாது. இன்னொரு விஷயம்.. பிரியா விஷயத்துனாலே உனக்கும் பெரியப்பாவுக்கும் மனஸ்தாபம் வந்துதனாலே உன்னை அவர் தள்ளியே வெச்சிருக்கார் அவரு.”

     

    இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்.

    “நீ எங்கிட்டே உண்மையைச் சொல்லியிருக்கலாமே சுமதி.. நான் வந்து உன்னைக் கேள்வி கேட்டப்போ அப்ப ஒருமுறைதான் கார்ல உன் தங்கை மெடிகல் விஷயமா வந்தார்ன்னு சொன்னே.. அதுக்கப்பறம் பாக்கலேன்னு எதுக்குப் பொய் சொன்னே?”

     

    சுமதி நிமிர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்தாள்.

    “நான் பொய் சொல்லலே சார். அவரு ஒவ்வொருமுறை வந்ததுமே அந்தப் பொண்ணு  விஷயமாதானே.. அத்தோட என்னோட நிலைமை வேற சார். நான் இப்போ வரைக்கும் அந்த ஆள் என்னோட அப்பான்னு சொல்லிக்கறதுக்கே வெட்கமா இல்லே அசிங்கமா ஃபீல் பண்றேன்.. அதுவும் விஜயா விஷயத்துல அவர் நடந்துகிட்ட விதம் வெறி பிடிச்ச வீதி நாயைப் பாக்கற மாதிரித்தான் அவரைப் பார்த்தோம். அந்த பயங்கரமான அருவறுப்பைச் சொன்னா புரியாது சார். அந்த ஆளை யாரோ அன்னிக்கு கொலை பண்ணிட்டாங்கன்னு சொன்னப்ப வீட்ல ஸ்வீட் வெச்சு நானும் எங்கம்மாவும் சாப்பிட்டோம். அப்படிப்பட்ட ஆளைப் பத்தி எதுக்கு சார் பேசணும்னுதான் பேசலை. இப்போ கூட இந்த வீட்டுக்கு வர்றதுக்கு எனக்கு விருப்பமில்ல சார்.. கல்யாண் அண்ணாவும் டாக்டர் கோம்டியும் கம்பெல் பண்ணினதாலே நாங்க வந்தோம்.’

     

    முரளியைப் பார்த்தாள். ‘முரளி அண்ணா.. உங்களை உறவு முறையில அண்ணான்னு நான் கூப்பிடலே.. வயசுல என்னை விடப் பெரியவருங்கற முறையில கூப்பிடறேன்.. இப்பவும் சொல்லறேன். அந்தாளோட வீடோ பணமோ எதுவும் எங்களுக்குத் தேவையில்ல.. எங்களைப் பொறுத்தவரைக்கும் நான் பொறந்தவுடனேயே அந்தாளு செத்துட்டதா இப்பவும் மனசார நினைக்கிறோம்..”

     

    முரளி வருத்தப்பட்டுச் சொன்னான்.. “இல்லைம்மா சுமதி.. என் பெண்டாட்டிக்கு ஏற்பட்ட கதி உனக்கும் ஏற்பட்டதோன்னு கொஞ்சம் பயந்துதான் சொன்னேன்மா. தப்பா நினைக்காதே”

     

    “கல்யாண்.. உங்களுக்கு சுமதிதான் பெரியப்பாவோட பொண்ணுன்னு தெரியுமா?”

     

    “தெரியும் சார்.. நான் எதுக்காக வெளியில சொல்லலேன்னா சுமதி எங்கிட்டே வாங்கின சத்தியம்தான். பெரியப்பாவோட பொண்ணுன்னு அவ வீட்டுக்கு வர்ற வேலையை வெச்சுக்க வேணாம்னு என்னை அன்னிக்கே சொல்லிட்டா.. ஆனா எனக்கு அப்பாவும் இல்லே அம்மாவும் இல்லே.. ஒரு தங்கச்சி இருக்குங்கிற முறைல வரலாமான்னு கேட்டப்ப அவ அழுதுட்டா சார். பாவம் சார்.. பாசம்ன்னா என்னன்னு தெரியாம வளர்ந்திருக்கற பொண்ணு சார். அதனாலதான் நீங்க கோம்டிகிட்ட சுமதியைப் பத்திக் குறையா பேசறச்சே  பெரியப்பா முறைல உறவு பாக்காம ஒரு அண்ணங்கிற முறையில அவளுக்கு ஆதரவாப் பேசினேன். சுமதியைப் பத்திய விஷயம் கோம்டிக்கு கூடச் சொல்லலே. சுமதியை விட என் பெரியம்மாவைச் சொல்லணும். பொறந்த குழந்தைக்குத் தகப்பன் பேரு தெரியாதுன்னு தைரியமா ஊருல சொல்லி நாலு வீட்டுல வெட்கப்படாம பத்துப் பாத்திரம் தேய்ச்சி அந்தப் பொண்ணை வளர்த்தாங்களாம். சுமதி  அவ பெரியப்பா பொண்ணுங்கறது ஒரு பக்கம் உண்மைதான்னாலும் பிறந்ததிலேர்ந்தே கஷ்டத்தைப் பார்த்தவ. இனிமேயும் எங்களுக்கு பெரியப்பா உறவு தேவையில்லே.. அதுக்குப் பதிலா விஷத்தைச் சாப்பிட்டுச் செத்துப் போறோம்னு எங்கிட்ட சொல்லறச்சே அதையும் மீறி என்னாலே எதுவும் செய்ய முடியல.. அவர் விஜயாவுக்கு செஞ்ச பாவத்துக்கு அந்த விஜயா நல்ல முறைல குணமாகணும்னு நானும் என்னால் ஆன உதவியைப் பண்ண வந்தேன் அவ்வளவுதான்..”

     

    “விஜயா சுமதிகிட்டே இருக்காளா?.. அவளுக்காக நானும் பணம் சேர்த்துவர்றேன் கோம்டி மேடம்!” சுந்தர் மிகக் கவலையுடன் குறுக்கிட்டான்.. கோம்டி அழுத்தமாகக் கேட்டாள்.

     

    “எல்லாம் உங்க மாமாகிட்டேயிருந்து வாங்கின பணம்தானே? எனக்குத் தெரியுமே.. ஆசிரமத்து பேங்க் அக்கௌண்டும் ரசீது புக்கும் எல்லா உண்மையையும் சொல்லிடுச்சே சுந்தர்.  இவ்வளோ பேசறவரு உங்க மேல தப்பு இல்லேன்னா ஏன் இன்னிக்குக் காலைலேர்ந்து வீட்டை விட்டு ஓடிப் போக முயற்சிக்கணும்?”

     

    “நான் தப்பிக்க முயற்சிக்கலே.. இன்னிக்கு இங்க வர்றதை அவாய்ட் பண்ண விரும்பினேன்..  போலிஸ் ஸ்டேட்மென்ட் கூட தயார் பண்ணி ரெடியா வெச்சிருந்து அதை இன்னிக்கு போலீஸ் கேட்டப்ப கொடுத்திருக்கேன்.. ஏன் இன்னிக்கு வரவேண்டாம்னு நினைச்சேன்னா எனக்கு கோம்டி இந்த கேஸ்ல எப்படியாவது என்னை ஃப்ரேம் பண்றா மாதிரி மனசுக்குத் தோணிச்சு.. அதனாலதான் அவங்க விசாரணைக்கு இனிமே ஒத்துழைப்பு கொடுக்கவேணாம்னு வரல்லே.. இதையும் போலீஸ்கிட்ட சொல்லியிருக்கேன்..”

     

    கோம்டி முறைத்தாள்.

    “ஆனா மிஸ்டர் சுந்தர் இதுவரைக்கும் எல்லாமே மாத்தி மாத்தி சொன்னீங்க.. அதையும் நீங்க ஞாபகம் வெச்சுக்குங்க. இப்போ அதை எல்லாம் கூட விடுங்க.. சம்பவம் நடந்த அன்னிக்கு சாயங்காலம் நாலு மணிக்கு நீங்க கந்தசாமிகிட்டே ஃபோன்ல பேசினதையும் மாத்திதான் கொடுத்தீங்க.. அது ஏன்.. அன்னிக்கு நீங்க கரெக்டா என்ன பேசினீங்கங்கறத நல்ல ஞாபகப்படுத்தி நிதானமா எல்லோருக்கும் சொல்லலாமே. இதோ பாருங்க இப்பவாவது உண்மையைச் சொல்லணும். ஏன்னா உங்க ஃபோன் பேச்சு எல்லாம் என்கிரிப்ட் ஆக கந்தசாமி மொபைல்ல இருக்கு.”

     

    இன்ஸ்பெக்டர் சுந்தரைப் பற்றி விவரித்தார். சுந்தருக்கும் கந்தசாமிக்கும் அன்று முதன்முதலாக கம்ப்யூட்டரில் பிரிண்ட் எடுக்கும்போது நடந்த சண்டையை கோம்டியை வைத்துப் பேசச் சொன்னார். கோம்டி விவரித்தாள். தன்னிடம் ஒப்புக்கொண்டதையும் கந்தசாமியின் மன்மத லீலையையும் விவரித்தாள். ஆசிரமத்து விஜயாவுக்கு நேர்ந்த கோரமான நிகழ்வையும் விவரித்தாள்.

     

    விஜயாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க வந்தபோதுதான் கந்தசாமியைப் பற்றி முதன்முதலாக சுமதி தெரிந்துகொண்டதையும் அதன்பின் சிரமம் எடுத்துக்கொண்டு விஜயாவை ஆதரித்த விதம் பற்றியும் நெகிழ்ச்சியுடன் சொன்னாள் கோம்டி.

     

    சுமதி இப்போது வரை அந்த விஜயா மேல் பாசத்தோடு அந்தப் பெண்ணைக் காப்பாற்றி வருவதைப் பாராட்டிச் சொன்னாள்.

     

    “ஆனால் சுந்தர் உங்களுக்கும் அந்த விஜயா மேல் பாசம் இருந்திச்சு.. அந்தப் பாசத்தை வெச்சு கந்தசாமிகிட்டே பணம் பறிச்சீங்க இல்லையா.. என்னதான் இந்தப் பணமெல்லாம் விஜயாவோட ஆஸ்பத்திரி செலவுக்குன்னு நீங்க இப்போ சொன்னாலும் நீங்க அதைக் கொடுக்காதவரை எங்களாலே நம்பமுடியாது. இப்போதாவது சொல்லுங்க அன்னிக்கு சாயந்திரம் என்ன நடந்ததுன்னு.. விஜயா மேல உங்க பாசம் உண்மையான பாசம்னா அன்னிக்கு ஃபோன்ல என்ன பேசினீங்கன்னு அதுக்கப்பறம் என்ன நடந்ததுன்னு அப்படியே சொல்லணும். உங்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ் கூட”

     

    கோம்டி இதைச் சொன்னதும் தலை கவிழ்ந்தான் சுந்தர்.

    “அன்னிக்கு நாலரை மணிக்கு நான் ஃபோன் செஞ்சது வாஸ்தவம்தான்.” கந்தசாமியுடன் தான் பேசின விவரத்தையும் அதற்குப் பிறகு நடந்ததையும் விவரித்தான்.

     

    மாலை 4.30 மணியளவில் கந்தசாமிக்கு சுந்தர் ஃபோன் செய்கிறான், ஃபோனில் கந்தசாமியின் குரல் கேட்கிறது..

     

    “என்னடா சுந்தர் இந்த நேரத்துல நீ பேசறே? நீ நேரே இங்கே வரலாம் இல்லே.. உங்கிட்டே ஒரு விஷயம் கேட்கணுமே..”

     

    “நீங்க என்ன கேட்கப் போறிங்கன்னு தெரியும் மாமா.. குறிப்பிட்ட வஸ்துவைப் பத்திக் கேக்கப் போறீங்க.. வேண்டாம் இனிமே இந்த வேலை.. அதனாலதான் நான் எடுத்து ஒளிச்சு வெச்சுட்டேன். நான் உங்க நல்லதுக்குதான் பேசறேன் மாமா.. இன்னொரு விஷயம்.. அந்த விஜயாவோட நியூஸ் கிடைச்சுதான்னு சொல்லவே இல்லே.”

     

    “டேய் சுந்தர்.. நீ இப்படியெல்லாம் சொல்லலாமா? எனக்கு விஜயா விஷயமே தெரியாதுடா.. அன்னிக்கு பீச்சுல காணாம போனது காணாமப் போனதுதான்.. அந்தப் பொண்ணை விடு.. எனக்கு நீ எடுத்துண்டு போனது கட்டாயம் திருப்பித் தரணும்.. உன்னை வளர்த்து ஆளாக்கியது நான்.. எனக்கே இப்படி நீ துரோகம் செய்யலாமா.. சொல்லுடா?”

     

    “இதுல துரோகமெல்லாம் எங்கே வந்தது? நீங்க செய்துகிட்டுருக்கற விஷயம் வெளியிலே தெரிஞ்சா உங்களோட எப்பவுமே உதவியா இருக்கற நானும் முரளியும்தான் முதல்ல தூக்குல தொங்கணும்.. ஒருவேளை போலீஸ் உங்களைப் பிடிச்சுதுன்னாக் கூட எங்க ரெண்டு பேரையும் கூட விசாரிக்காம ஜெயில்லே போடலாம். நீங்க வளர்த்தீங்கன்ற ஒரு விஷயத்துக்காக நாங்க ரெண்டு பேரு ஜெயிலுக்குப் போகணுமா.. யோசிச்சுப் பாருங்க மாமா.”.

     

    “டேய் மடப்பயலே.. அதுக்குதான் பிராயச்சித்தம் பண்றேன்னு சொல்லி பத்து லட்சம் கொடுத்தேண்டா. அதைக் கூட நீ இன்னும் நான் கொடுத்த அட்ரஸுக்கு கொடுக்கலே.. சரி, விடு.. அந்த பத்து லட்சத்தை நீயே எடுத்துக்கோ, அடேய்.. என் வஸ்துவைக் கொடுத்துடுடா.. என்னை பிளாக்மெயில் பண்ணாதே..”.

     

    “முடியாது மாமா.. நான் கொடுக்க மாட்டேன். நான் இதைப் பத்தி கல்யாண்கிட்ட பேசணும்..”

     

    “டேய் டேய்  கல்யாண்கிட்ட எதுக்குடா. எங்கிட்டே பேசுடா. உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லுடா..?”

     

    “பணம் என்ன மாமா.. அம்பது லட்சம் ஒரு கோடியானாலும் நீங்க கொடுப்பீங்கன்னு தெரியும்.. ஆனா உங்க மன்மத லீலையை கண்டிப்பா கைவிட மாட்டிங்க. விஜயா மாதிரி இன்னும் எத்தனை பெண்களை முன்னமே சீரழிச்சீங்களோ இனிமேயும் எத்தனை சின்னப் பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிக்கப் போறீங்களோ.. யாருக்குத் தெரியும்? அந்த ஆசிரமத்துல இருக்கற சின்னப் பொண்ணுங்களை நினைச்சாலே கதி கலங்குது.. பாவம் அந்த மேனேஜர் பெரியவர். அவருக்குத் தெரியாம நீங்க செஞ்ச அயோக்கியத்தனம் ரொம்ப குரூரமானது. நான் முதல்ல போலீஸ்கிட்டதான் போகலாம்னு இருந்தேன். ஆனா கல்யாணுக்கும் தெரியணும்.. நாங்க ரெண்டு பேரும் சேர்த்து இந்த விஷயத்தைப் போலீஸ்கிட்ட எடுத்துப் போவோம். . கல்யாண் வந்ததும்தான் இது முடிவுக்கு வரும். நான் அவன்கிட்டே சாட்சிக்காக இந்த வஸ்துவை ஒப்படைச்சுட்டு  எல்லா விஷயமும் நானே சொல்லப் போறேன்.”.

     

    கத்தினார் கந்தசாமி  “உனக்கு என்னடா தெரியும் என்னைப் பத்தி.. நான் இப்போ எந்த லீலையிலும் ஈடுபடலேன்னு சொன்னா நம்புவியா.. என் வஸ்துவைக் கொடுத்துடு.. சரி, அம்பது லட்சம் கொடுக்கறேன்.. இங்கே வா.. அந்த வஸ்துவையும் கொண்டு வா.. பேசலாம்..”

     

    “நான் அங்கே வரமாட்டேன். என்னை நேரப் பார்த்தீங்கன்னா என் மேல் இருக்கற ஆத்திரத்துல நீங்க என்னைக் கொன்னுப் போட்டாலும் போடுவீங்க.. அதான் ஒரு சைலன்ஸர் துப்பாக்கி உங்க பீரோவுக்குள்ள மறைச்சு வெச்சுண்டிருந்ததைப் பார்த்தேனே.. நாளைக்கு காலைல கல்யாணை நான் ஸ்டேஷன்லியே பார்த்து எல்லாவிஷயத்தையும் சொல்லிட்டுதான் அழைச்சுண்டு வரப் போறேன்.. அதுக்கப்பறம் அவனாச்சு.. நீங்களாச்சு..”

     

    “டேய்.. டேய்.. அப்படில்லாம் சொல்லாதேடா.. நான் செத்துடுவேண்டா.. என் பொணத்தைத்தான் நீ பாக்கப் போறே.. இதோ பார்.. நேருல வாடா.. பேசலாம்..”

     

    “நான் வரல்லே மாமா.. என் முடிவு இதான். நீங்க எடுத்த படத்தையெல்லாம் பார்க்கறப்போ எனக்கு ரத்தக் கண்ணீர் வந்துச்சு, அதுவும் விஜயாவைப் போயி.. .. அப்படின்னு நினைக்கறச்சயே உங்க மேல ஆத்திரம் ஆத்திரமா வருது.. உங்க அழுகை ஒரு நாடகம், அதுவும் ஆசிரமத்துலேயே பொய் சொல்லி எதுவுமே தெரியாதுமாதிரி அழுதீங்களே.. போதும் மாமா.. உங்க சகவாசம்.. உறவு எல்லாமே போதும்.. இதுக்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா.. அதுதான் நான் கல்யாண் வர்றதுக்காக காத்திருக்கேன்.. உங்களை என் உறவுக்காரர்ன்னு சொல்லறதுக்கே வெட்கமா இருக்கு.. அதுதான் உங்க கையில பணம் வாங்கி உங்க கூட சாப்பிட்டு நான் வளர்ந்தேனே.. ச்சே.. தற்கொலை பண்ணிக்கலாமான்னு இருக்கு.. அது சரி, நான் என்ன தப்பு பண்ணினேன் தற்கொலை பண்ணிக்கறதுக்கு.. நீங்க சொல்லறா மாதிரியே நீங்களே பண்ணிக்குஙக மாமா.. நீங்க தப்பறதுக்கு நீங்க தற்கொலை பண்ணிக்குங்க.. அதுதான் ஒரே வழி.”

     

    ஃபோன் வைக்கப்பட்டுவிட்டது..

     

    தொடரும்

    Share