Blog

  • பேனா

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

    பாவலரின் கற்பனை எனும்
    கருவினில் உதித்த
    கவிதைக் கிள்ளைக்கு 
    உயிர் கொடுத்து
    உரு கொடுத்து
    பத்திரமாய் ஈன்றெடுக்கும்
    அன்பு அன்னை !!!

    உடலில் மை எனும்
    உதிரம் கொண்டு
    உழைத்து ஓடாய் தேய்ந்து
    உதிரமனைத்தும் சுண்டி
    சோகையான உடன்
    உதாசீனமாய் புறந்தள்ளுகிறோம்
    சற்றும் கவலையே இல்லாமல் !!!


    பாராட்டு சிம்மாசனம் எட்ட
    படிக்கட்டுகளாய் விளங்கி
    எழுத்துக்கு உயிர் தந்து
    எழுத்தாளரின் வெற்றிக்கு காரணியான
    பண்பான உழைப்பளிகளின்
    பாடு ஒரு நாளும்
    பாராட்டப்படுவதில்லை !!!


    மாற்றம் ஒன்றிற்கு வித்திட்டு
    உருவான திர்மானத்தில்
    வேள்வித்தீ என
    மக்கள் உள்ளங்களில் 
    கோலோச்சும் சிந்தனைகள்
    எழுதுகோல் துணைகொண்டு
    உருவாக்கப்பட்டவை அன்றோ ???

     

    Share
  • தன்மையணி. இசையும் கோயிலும் 1,2,3…

    இன்னம்பூரான்

    “எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்

    சொன்முறை தொடுப்பது நன்மையாகும்.” (தண்டியலங்காரம்: 2)

    தண்டியலங்காரத்தின் முதன்மை ஸ்தானம் தன்மையணிக்கே. உள்ளது உள்ளபடி. அவ்வாறு அமைந்துள்ள திருமதி. விசாலம் ராமனின் மூன்று தொடர்கட்டுரைகளை படித்த போது பல எண்ணங்கள் மனதில் வந்து போயின. எங்கள் புதுக்கோட்டை சமஸ்தானம், விராலிமலையும், சித்தன்ன வாசலும், குடுமியான் மலையும், ஆதிரங்கன் கோயிலும், திருகோகர்ணமும், பேரையூரும் ஆக ஒரு சிற்ப சாம்ராஜ்யமே. பேரையூரில் ஒரு பெரிய ஜலதரங்கம், நாகநாதசுவாமி கோயில் புஷ்கரணி. தவழும் வாயு தேவன் அபூர்வமாக அங்கு இசைப்பதுண்டு. அது ஒரு நினைவு. வல்லமை இதழின் வாசகர்களை பற்றி யான் அறியேன். கபிலரும், பரணரும் வந்து எழுதினால் கூட, படித்ததைக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். அத்தனை பரவசம், மவுனத்தின் மீது! அந்த மரபை மீறத் துணியாதே என்று மனம் அடித்துக்கொண்டது. (மனத்தின் ஈசான்ய மூலை,‘இதைப் படித்தாலும் சொல்லமாட்டார்கள்.’ என்று சவால் விட்டது.) இது நிற்க.

    திருமதி. விசாலம் ராமனின் கோர்வையான கட்டுரைத் தொடர், அரிய செய்திகளின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது. அவர் சொல்வது போல இசை பாடும் சிற்பங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றன என்பதை நாம் கண்டறிய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு குதிரை சிற்பம் சிதைந்து கிடப்பதாக, படித்ததும் நினைவில் வந்தது. ‘…அங்கிருக்கும் தெய்வத்தைக் குஷிப்படுத்த தகுந்த சமயத்தில் இசை, நடனம், நாடகம் என்ற கலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன…’ என்று அவர் சொல்வதை மனதார ஆமோதிக்கிறேன். முதலிடம் இசைக்கு. ‘ஓம்’ என்று ஒலித்தது உடுக்கு. அந்த ஓசையை அசைத்து இசையாக்கியது மனிதனின் ரசனை. அது இறைவனின் வரம். பாறைக்கும் நாபி உண்டு; ஆத்மா உண்டு; இறையருள் உண்டு. டில்லிவாசியாக இருந்த விசாலத்துக்குத் தெரிந்து இருக்கும், உத்தர சுவாமி மலை மூலவர் சிற்பத்திற்கு உரிய கல்லை தேட காஞ்சி பெரியவர் அளித்த ஆலோசனை பற்றி. விசாலத்தின் கட்டுரையின் நேர்த்தியே, அவர் கூறும் செய்திக்களஞ்சியம். வட இந்தியகோயில்களில் நாமே அபிஷேகம் செய்யலாம் என்பதிலிருந்து ஆகம சாத்திரங்கள் வரை.

    ஒரு கற்பனை: வெள்ளைத்தாமரையில் அமர்ந்தவள் கையில் மாசிலா வீணை: சங்கராபரணம். மூங்கில் குழலோதும் மாயக்கூத்தன்: கதனகுதூகலம். உடுக்கொலி: தேவகாந்தாரம். மத்தளத்தில்லானா. பரமாத்வாவும் ஜீவாத்மாவும் சுயநினைவிழந்த ராகமாலிகை நேரம் இது. அற்ப மாந்தர்களாகிய நாம் தள்ளி நிற்கவேண்டும். திருமதி விசாலம் ஓவியங்களை பற்றி மிக குறைவாக எழுதியிருக்கிறார். அவர் நிறைய எழுதவேண்டும், அது பற்றி. அக்காலத்தில் சுவரோவியங்கள் வீடுகளிலும் உண்டு. புதுக்கோட்டையில் நாங்கள் இருந்த வீட்டில் ஒரு மாபெரும் ஶ்ரீராமபட்டாபிஷேக வர்ண ஓவியம். என்ன ஆச்சோ? தஞ்சை பெரியகோவிலில் அம்பாள் சன்னதி விமானத்தில் இருக்கு அதியற்புத ஓவியங்கள் மீது புகை மண்டலம். இதுவா பக்தி?

    ‘ஸ்வரித்தா, உதத்தா, அனுதத்தா’ எல்லாம் நமக்கு புதிய செய்திகள். நன்றி, விசாலம்.

    ‘… வேதங்கள் எல்லாமே ஒரு நியதியுடன் ஸ்வரஸ்தானங்கள் பிசகாமல் சொல்ல வேண்டும். அதனால் எழும்பும் ஒவ்வொரு ஒலிக்கும் மந்திர சக்தி உண்டு. அவை காற்றுடன் கலந்து நல்ல அதிர்வலைகளை உண்டு செய்யும்…’ என்கிறார், அவர். அதனால் பேரையூர் ஜலதரங்கம் நினைவுக்கு வந்தது. தமிழ் செய்யுள் இலக்கணத்தில் கலிப்பாவின் துணை உறுப்புகளில் ‘அம்போதரங்கம்’ ஒன்று. நாற்சீரடி இரண்டு அடியால் இரண்டு, நாற்சீரடி ஓரடியால் நான்கு, முச்சீர் ஓரடியால் எட்டு, இரு சீர் ஓரடியாக பதினாறு என்று சொல்லும்போதே, அலை அலையாக என்ற எண்னம் உமக்கு எழுகிறதல்லவா! அந்த நீர்த்தரங்கம் (கடல் அலை) எம்மனதை விட்டு அகலவில்லையே.

    பஜனை: பாபநாசம் சிவன் அவர்களின் விடியற்காலை பஜனையைப் பற்றி என்றோ ஒரு நாள் எழுதினேன். அதை சமீபத்தில் தான் என வலைப்பூவில் பதிவு செய்தேன். ரஷ்யா, ஈரான், பெரு ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் வாசகர்கள். விசாலத்தின் இந்தத் தொடரும் அவ்வாறு விரவி வரவேண்டும். எனக்குப் பிடித்த பஜனை புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் பந்ததி.

    நாதசுரம் என்றவுடன் ஞாபகம் வருவது: புதுக்கோட்டை கீழராஜவீதி, வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நடு ராத்திரி ஒரு மணிக்கு வெள்ளப்பெருக்கு எடுத்தோடிய டி.என்.ராஜரத்னம் பிள்ளையவர்கள் வாசிப்பும், ஐம்பது வருடங்கள் கடந்து பாகவதமேளாவுக்காக, நிலவொளி வெள்ளத்தில் நடந்து போகும் போது, காற்றில் வந்த கீதம்: கம்பீர நாட்டை. ‘ஆன்மீக நற்றலை’ விசாலம் சொல்லில்.

    மணியோசை மண்டைக்கு லாஹிரி. மாதாகோயில்களில் மாபெரும் மணி. ஒவ்வொரு மணிக்கும் தனியொரு நாதம். பக்கம் பக்கமாக வரலாறு, இங்கிலாந்தில். அவற்றை தொகுத்து வைத்த சீ.டி. அகப்படவில்லை. போகட்டும். விசாலம் தான் பக்க வாத்தியங்களின் வரலாறு படைத்து விட்டாரே.

    இசை பாடும் தூண்களைப் பற்றி அவர் எழுதிய மூன்றாவது கட்டுரையின் நிறைவை மெச்சத்தான் வேண்டும். அவர் பெருமையுடன் கூறுவது சாலத்தகும்.

    ‘…இசை கடவுளிடம் செல்ல ஒரு பாலமாக அமைகிறது. பழங்குடி மக்கள் தங்கள் திருவிழாவில் பலவிதமான வாத்தியங்களை உபயோகித்து வந்திருக்கின்றனர். ஆன்மீக வழிபாட்டின் போது தாரை தப்பட்டை ,மேளம் என உபயோகித்து இயற்கையைப் பூசித்திருக்கின்றனர் தேவாலயங்களிலும் பியானோ வாசிக்கப்பட்டு கரோல் என்ற இசை பாடப்படுகிறது. ஆன்மாவை உயர்ந்த நிலைக்கு அழைத்துப்போகும் சக்தி இசைக்கு உண்டு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட உண்மை…’

    என்கிறார் திருமதி.விசாலம். ஒவ்வொரு சொல்லும் இறையாண்மையின் பிரதிபலிப்பு. பல புது தகவல்களை இவருக்கு கொடுத்து உதவிய,இசை மேதையும் சங்கீத வித்துவானும் ஆன அவரது சகோதரர் திரு வெங்கட் அவர்களுக்கும் வல்லமை வாசகர்கள் சார்பில் (!) நன்றி தெரிவிக்கும்,

    இன்னம்பூரான்

    11 06 2013

    சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/ta/2/2c/Tanjai1000.jpg

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    வேலைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு பெண்மணி தான் புகுந்த இல்லத்துக்காக உழைக்கிறாள் என்று சொல்லவே கூடாது. மனைவி வேலைக்குச் செல்வதால் குடும்பம் பொருளாதார சிக்கல் இல்லாமல் சுகமான வசதிகளைப் பெருக்க உதவுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாமோ என்னவோ.. ஏனெனில் மனைவி என்பவள் சதா உழைத்துக்கொண்டேதான் இருக்கிறாள். கணவனின் சகல பொறுப்புகளையும் தானே சுமந்து குடும்பத்தின் மேன்மைக்குக் காரணமாகிறாள்.

    சமீப காலங்களில்தான் இந்தக் குடும்பப் பெண்களின் வேலைப் பளுவைப் பலர் உணர்ந்து வருகிறார்களோ என்ற சம்சயம் எனக்கு உண்டு. வேலைக்குச் செல்லாமல் குடும்ப பாரத்தைச் சுமந்து அதைப் பொறுப்பாகக் கொண்டு போகும் பெண்களை ஹவுஸ் வைஃப் அல்லது ஹோம் மேக்கர் என்ற நயமான பதத்தால் பலர் விளிக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.. காரணம் பொறுப்பான முறையில் குடும்ப பாரம் சுமப்பது என்பது நிச்சயமாகக் கடினமானது. மாறிவிட்ட இந்த மாயமான நவீன வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் குழந்தைகளைப் பெற்று, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பித்து அவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஏற்படுத்தித் தருவதில் அந்தப் பெண்மணியின் பங்கு மிக மிக அதிகம்.

    குடும்பப் பொறுப்பாளர் என்ற பதவியை அடைந்த பின்னர் அந்தப் பெண்ணின் அன்றாட அலுவல்களை நாம் சற்றே அலசினால்தான் தெரியும் அவர்கள் படும் பாடு. சமீபத்தில் திரு. அப்பாதுரை அவர்களின் மூன்றாம் சுழி வலைப் பூவில் நமக்காக, அந்த குடும்பப் பொறுப்பாளரின் பணிகளை சற்றுப் பட்டியலிட்டிருக்கிறார்.

    இவர்கள்

    அதிகாலையில் எழுந்துவிடுகிறார்கள்.

    அவர்களுக்குப் பற்பசை

    குளியல் துணிமணி புத்தகப்பை

    ஷூ சாப்பாடு கையில் டிபன்..

    அவருக்கு காலையுதவி

    காப்பி

    அலுவல் புறப்பாட்டுச் சேவை

    சாப்பாடு கையில் டிபன்..

    எல்லோருக்கும் வாசலில் நின்று

    சிரித்துச் சிரித்து

    முகமனும் விடையும் தருகிறார்கள்.

    ஓடியாடி நின்று நடந்து

    எல்லோரும் உட்கார்ந்த பின்னரே உட்காருகிறார்கள்.

    வீட்டுவேலை வெளிவேலை என்று சுழல்கிறார்கள்

    வழியில் காய்கறி

    பால்பழம் மளிகை

    சட்டைப் பித்தான்

    கிழிந்த உடைக்கு ஊசி நூல்

    வாங்கி வருகிறார்கள்

    மொழி பாட்டு நடனம் ட்யூஷன்

    கோவில் மருந்துக்கடை

    என்று தினம் போகிறார்கள்.

    ஓரங்கட்டிய தூசுபடிந்த வயலினைப் பார்த்தும்

    எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும்

    பெருமூச்சு விடுகிறார்கள்.

    வாக்கு தவறாமல் நடக்கிறார்கள்

    தவறான வாக்கெனினும்.

    அடுத்தவர் சோகத்தில் பங்கெடுத்து

    ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று

    புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.

    எல்லோரும் திருப்தியானதும்

    எல்லாம் அடங்கியதும்

    விளக்கணைத்த நள்ளிரவில்

    அமைதி கலைக்காத ஓசையுடன்

    தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்.

    தாரியா தொமித்ரொவிச் எழுதிய ‘sad women’ எனும்  கவிதையைப் பதிவாக்கியுள்ள திரு. அப்பாதுரை அந்தக் கடைசி வரிகளில் அவர்களின் உழைப்பு பற்றி கண்ணீர் வரிகளில் கவிதையாய் விவரித்திருக்கிறார். பிறருக்காக, (அவர்கள் தம் கணவர், ,குழந்தைகள் என்றே இருந்தாலும்) உழைக்கும் குடும்பப் பொறுப்பாளர்களுக்கு எமது வந்தனங்கள். உங்கள் உழைப்பு மேலும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்குத் தணியாத ஆசை. கவிதையாய் அழகாகச் சொன்ன திரு. அப்பாதுரை அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு எம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: சரியாக மூடப் படாத குழாயைப் பார்த்தால், பொது இடமாக இருந்தாலும் நமக்கென்ன என்று போகாமல் சரியாக மூடலாம்.

    தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்! – கவிநயா

    Share
  • திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

    திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

    திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

    தலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்)

    பரிசளிப்பவர்: சுதாமா கோபாலகிருஷ்ணன்

    உரை : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி.

    நாள் : 15-06-2013, மாலை 5 மணி

    இடம் : மத்திய அரிமா சங்கம்,ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர்.

    விருது பெறுவோர்:

    * அஜயன் பாலா – திரைப்படக்கலைஞர்

    ( சிறந்த திரைப்பட நூல் ‘உலக சினிமா வரலாறு’)

    * சக்தி விருது 2013

    ஈழவாணி ( சென்னை), கோவை சரளா (கோவை)

    பவள சங்கரி (ஈரோடு), நீலவேணி ராதாகிருஷ்ணன்(அவிநாசி)

    அமுதினி ஏ,வி (திருப்பூர்)

    * குறும்பட விருது 2013

    வினாயக மூர்த்தி, இரா.செல்வி, வியாகுல மேரி,முத்து

    தி.சிவகுமார்,ஜி.திருநாவுக்கரசு,நவயுகன் ஏ.ஏ,எஸ்.சுபாஷ்

    வருக.. செய்தி: சுபமுகி ( சி.ரவி 9994079600 )

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10

    தேமொழி

     

    மாலைகொடு வீரைய்யா!

     

    வண்டி ஒட்டும் வீரைய்யா!
    சண்டிதனம் ஏனைய்யா?
    ஒண்டிக்கட்டை நானையா -என்னை
    கட்டிக் கொண்டு போய்யா!

    முருக்கு மீசை மாமனே!
    திறுக்கை மீன் நானாவேன்
    திருக்கிக் கொண்டு போவானேன்?
    செருக்கு வேண்டாம் கோமானே.

     

    கவிஞர் தனுசு அவர்களின் கவிதைக்கு வரைந்த ஓவியம்.
    முழுக்கவிதையினையும் படிக்க இங்கு செல்லவும்
    வாய்ப்பளித்த கவிஞர் தனுசுவிற்கு நன்றிகள் உரித்தாகுக.

     

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11                                                   வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9 >>

    Share
  • மாலைகொடு வீரைய்யா!

    –  தனுசு

    வண்டி ஒட்டும் வீரைய்யா!
    சண்டிதனம் ஏனைய்யா?
    ஒண்டிக்கட்டை நானையா -என்னை
    கட்டிக் கொண்டு போய்யா!

    முருக்கு மீசை மாமனே!
    திறுக்கை மீன் நானாவேன்
    திருக்கிக் கொண்டு போவானேன்?
    செருக்கு வேண்டாம் கோமானே.

    எட்டு பத்து சிங்கக்குட்டி
    பெத்துத்தாறேன் புள்ளக்குட்டி -இந்த
    வெல்லக்கட்டி சொல்லுறதைக் கேளைய்யா-என்
    மயிலக்காளை பொன்னையா! .

    விடலைக்கோழி விரட்ட
    வேட்டைக்காரன் ஓடாதே!
    வெட்கப்பட்டு தப்பாதே
    வச்சக்குறி மீளாதே!

    கடைசி மாமன் பெண்குட்டி
    என்னைவிட சிறுகுட்டி-அவள்
    மூனுமாசம் முன்னாடி
    முடிஞ்சிதய்யா வளைகாப்பு!

    ஓலமிதை கேட்பாய்யா-மனக்
    கோலம் கான வருவாய்யா -எங்கள்
    வாத்தியார் பெயர் சுப்பையா
    அவரிடம் சொல்வேன் உஷாரைய்யா!

    தப்புத்தாளம் இல்லையா!-இது
    தப்புத்தாண்டா இல்லையா!
    ஊரைக்கூட்டி சொல்லையா!
    ஊமத்துரை பேசய்யா!

    நான் பூத்திருக்கும் ரோஜாப்பூ தோட்டம்-நல்ல
    கனியிருக்கும் மாம்பழதோப்பு!-இங்கு
    காவக்காரன் இல்லாட்டி -நரி
    ஊளையிடும் வாலாட்டி.

    காடுகரை காக்கும் வேலய்யா!
    அக்கா பொண்ணு முகம் பாரைய்யா!-அதில்
    ஏக்கம் ஒரு நூறைய்யா-நல்ல
    சாங்கி செய்தி சீக்கிரம் சொல்லைய்யா!

     

    -தனுசு

     

     

    நன்றி: வகுப்பறை

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 75 (10.06.13)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை

    தாழை மடலவிழ்க்கும் கானற்சோலையில்
    கடல் விளையாட்டு கண்டு களித்தபோது
    ஊடி நின்ற கோவலன் பிரிந்து சென்றிட
    தான் மட்டும் தனியளாய் இல்லம் புகுந்தனள்
    கரிய மலர் போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி.
    பின் குயிலோன் அறிவித்த செய்தியை விரும்பியவளாய்
    வானுயர்ந்த மேல் நிலை மாடத்தின் ஒரு புறமிருந்த
    இளவேனில் காலத்துக்குரிய பள்ளியறையில்
    மன்மதனை எதிர்கொள்ளச் சென்றனள்.

    பெருமையும் சிறப்பும் பொருந்திய அணிகலன்களும்
    தென்கடல் முத்தும் பொதிகை மலைச் சந்தனமும்
    மன்மதனுக்கு எப்போதும் செலுத்தப்படும் காணிக்கைகள்.
    மன்மதன் வீற்றிருக்கும் அரண்மனையாகிய
    தனது முலை முற்றத்தில்
    அக்குங்குமக் கோலமிடப்பட்ட பரப்பினில்
    குற்றமற்ற சிறப்புடைய பொருட்களைக்
    காணிக்கையெனச் செலுத்தினள்.

    ஒன்பது வகைப்பட்ட நிலையினுள் முதன்மையான
    பத்மாசன நிலையில் அமர்ந்து
    சுரங்கள் குலைந்திடாத மரபினை உடைய
    தனது யாழது தொழுது வாங்கித்
    தன் வாயால் இனிய பண் பாடினள்.
    பண் அது மயங்கவே
    யாழினை மட்டும் மீட்டினள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 26
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:

    http://kalaalog.com/2007/04/22/raja-ravi-varma/

    Share
  • சுற்றுச்சூழல் காப்போம்…

    செண்பக ஜெகதீசன்

     

    நட்டு வைத்தால் மரமாகி

    நன்மை தருமொரு தோப்பாகும்,

    வெட்டி வெட்டி எடுத்துவிட்டால்

    வளரும் தோப்பொரு மரமாகும்,

    கொட்டும் மழையும் குளிர்காற்றும்

    கூடவே தந்திடும் மரமழித்துக்

    கெட்டிட வேண்டாம், மரம்வளர்த்து

    காப்போம் சுற்றுச் சூழலையே…!

    படத்துக்கு நன்றி

     http://topendsp.ipower.com/image/clipart/non-sporting/more/a-green-tree.gif.php

    Share
  • காவிரி

    குடகில் பிறந்து குன்றுகள் கடந்து,

    குதித்துத் துள்ளிச் சமவெளி அடைந்து,

    கயல்கள் சுமந்து கனிவுடன் தொடர்ந்து,

    கதிர்தரு நெல்லுடை வயல்களில் நடந்து,

    கடைமடை வரையிலும் கருத்துடன் புகுந்து,

    கரையிரு மருங்கிலும் வாழும் மக்களைக்,

    கடவுள் போலக் காத்தநற் காவிரி,

    கருணை வறண்டு கவினை இழந்து,

    கடலைக் காணா நிலையை அடைந்து,

    கலியுக அரசியல் சூழ்ச்சியில் வீழ்ந்ததோ?

    Share
  • பனிப்போர்வை

     

    மாதவன் இளங்கோ

     

    சென்னை மாநகரில் அன்று கடும் பனிப்பொழிவு.

    நான் சென்னைக்குச் சென்ற ஒரு வாரத்திற்கு முன்பு ஹாலந்தில் இருந்தபோது மட்டும் இந்தச் செய்தி என்னை வந்தடைந்திருந்தால், எள்ளி நகையாடியிருப்பேன். “சென்னையில் பனிப்பொழிவா? இதென்ன ‘காதை கிழிக்கும் அமைதி’, ‘ஊரறிந்த ரகசியம்’, ‘தெளிவான குழப்பம்’ போன்றதொரு முரண்தொடையாக இருக்கிறதே?” என்று வினவி விட்டு வந்த செய்தியை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருப்பேன்.

    நான் பிறந்தது என்னவோ வேலூர் மாவட்டம் ஏலகிரிமலைக்கு அருகே உள்ள ஒரு கிராமமாக இருந்தாலும், ஐரோப்பாவிற்குக் குடியேறி பன்னிரண்டு வருடங்களும், ஹாலந்து நாட்டில் குடியுரிமை பெற்று நான்கு வருடங்களும் ஆகிவிட்டது. ஐரோப்பாவுக்கு வந்த இந்தப் பன்னிரண்டு வருடங்களில் எத்தனை பனிப்பொழிவுகளைச் சந்தித்திருப்பேன்! இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சென்னையில் நிகழ்ந்த பனிப்பொழிவை என்னால் நான் மரிக்கும் வரை மறக்கவே இயலாது. நான் மட்டும் அல்ல; உங்களாலும் அதை மறக்க முடியாது என்பதை நான் அறிவேன். இதுபோன்ற அதிசயங்கள் எல்லாம் மீண்டும் நம்மூரில் நிகழுமா என்று தெரியவில்லை. எனவேதான் அதை உடனே எழுதிப்  பதிவு செய்ய வேண்டுமென்று தோன்றியது.

    இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில், இங்கே ஆம்ஸ்டர்டாமில் பனி பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும், முதன்முறையாக பனிப்பொழிவை எதிர்கொண்ட சென்னையில் நான் கண்ட குழப்பங்கள், ஆர்பாட்டங்கள், பாதிப்புகள், இழப்புகள், துயரங்கள் இவை எதுவுமின்றி சலனமில்லாமல் பொழிந்து கொண்டிருக்கிறது.

    என் மகள்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தான் இங்கு கோடை விடுமுறை என்றாலும் நாங்கள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விடுமுறை எடுத்து இந்தியாவிற்கு செல்வதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

    இதற்குப் பல காரணங்கள்.

    சென்னையில் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கோடைகாலமே நிலவுகிறது. ஜூலை மாதம் வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மேலும், ஐரோப்பாவில் கடுங்குளிர் மாதங்களான டிசம்பர் மற்றும் ஜனவரியில், அங்கு வாழ்வது என்பதே ஒரு பெரிய சாபம்.

    அது என்ன சாபம் என்றுதானே கேட்கிறீர்கள்?

    குளிர்காலம் வந்துவிட்டால் காலை பத்து அல்லது பதினொரு மணிக்கு உதித்து மாலை மூன்று மணிக்கே ஓய்ந்து, தினமும் சராசரியாக நான்கு அல்லது ஐந்து மணிநேரம் தான் ‘டைம் ரெஜிஸ்டர்‘ செய்கிறான் இந்தக் கதிரவன் என்கிற ஆசாமி. அவன் நிச்சயம் என் மேலதிகாரி காரல் டில்கினை சந்தித்தே ஆக வேண்டும். இடைப்பட்ட நேரத்திலும் மங்கலாக ஒளி வீசுவதோடு நிறுத்திக்கொண்டு, தனக்கு வெப்பம் எனும் குணாதிசயம் இருப்பதையே மறந்து போய்விடுகிறான். என் மனைவி இந்த நாட்டு சூரியனுக்கு வைத்திருக்கும் பெயர் ‘சரியான ட்யூப்லைட்!’. பொருத்தமான ஒன்றுதான்! வடக்கு பிராந்தியங்களில் இன்னமும் மோசம் – தலையே காட்ட மாட்டான். இதற்காகவே வைட்டமின் ‘டி’ பெறுவதற்காக சூரியப் படுக்கைகளை நாடிச்சென்று ஐம்பது, அறுபது ஈரோக்களை வீச வேண்டி இருக்கிறது. சென்னையின் வெயிலையும், ஆம்ஸ்டர்டாமின் குளிரையும் பண்டமாற்றுமுறை செய்ய முடிந்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலமுறை நான் நினைத்ததுண்டு.

    இதில் அவ்வப்போது பனிபொழிவு வேறு. நாடு முழுவதும் சுற்றினாலும் இங்கெல்லாம்  சேறு என்பதை பார்ப்பது அரிது. மண்ணே தெரியாமல் நாடு நகரம் முழுதும் ரப்பர் கலந்த தார் பூசி மொழுகி இருக்கிறார்களே! எங்கிருந்து சேறு உண்டாகும்? ஆனால் இந்தப் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டால் மட்டும் நடைபாதைகளில் உண்டாகும் பனிச்சகதியை பார்க்கவேண்டுமே! சில நேரங்களில் அது மிகவும் ஆபத்தானதும் கூட. பனிக்காலங்களில் மருத்துவமனைகளின் எலும்புமுறிவு பிரிவில் மட்டும் கூட்டம் நிரம்பி வழியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். வேடிக்கை என்னவென்றால் விழுபவர்களில் பெரும்பாலும் ‘ஸ்னோபூட்’ அணிந்தவர்களாக இருப்பார்கள். சாதாரண காலணிகள் அணிந்தவர்கள் சாவகாசமாக நடந்து செல்வார்கள். நானும் என் மகள்களும் ‘வழுக்கி விழுந்து விடாமல் கவனமாக எப்படி நடக்கவேண்டும்?’ என்பதை அவர்கள் அடிக்கடிப் பார்க்கும் ‘பிங்கு’ சிறுவர் நிகழ்ச்சியின் பென்குவின்-களிடமிருந்து கற்றுத் தேர்ந்திருக்கிறோம். பனிக்காலங்களில் கிட்டத்தட்ட சாலைகளில் பென்குவின்-களைப் போலத்தான் நடந்து செல்வோம். இயற்கையோடு தன் தொடர்பையே அறுத்துக்கொண்டுவிட்ட மனிதர்களிடமிருந்து இனி எனக்கு கற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை; விலங்குகளிடம் நிறைய இருக்கிறது.

    இன்னொரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன். குளிர்காலத்தில் ஹீட்டிங்கிற்கு ஆகும் செலவிற்கு இரண்டு முறை இந்தியா சென்று திரும்பலாம். இதுபோன்ற பல பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு வருவோம். மாறாக, தமிழகத்தில் அவ்விரு மாதங்களிலும் ஐரோப்பிய கோடைகாலத்தை போன்று அருமையான தட்பவெப்பம் நிலவும். என் குழந்தைகளுக்கு நிறைய இடங்களைச் சுற்றிக் காண்பிக்கலாம். பொங்கல் பண்டிகை வேறு ஜனவரியில் வருவதால் அவர்களை என் கிராமத்துக்கு அழைத்துச் சென்று நம் உறவினர்களிடம் பழக வைக்கலாம், நமது கலாச்சாரத்தையும் (அப்படியொன்று இன்னமும் உயிரோடு இருந்தால்) அறிந்து கொள்வார்கள். இவையெல்லாவற்றிற்கும் மேலாக நமது அடையாளத்தை அவர்கள் தொலைக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    ஆனால் என்னதான் ஆயிற்று இந்தமுறை தமிழகத்திற்கு?

    நாங்கள் ஆம்ஸ்டர்டாமிலிருந்து சென்னை வந்திறங்கிய  நாளிலிருந்தே பருவநிலை மாற்றத்தை என்னால் நன்றாக உணர முடிந்தது. வழக்கமாக நான் விமானத்திலிருந்து வெளியே வந்த அடுத்தகணம் வெப்பநிலை மாற்றம் காரணமாக என் முகக்கண்ணாடியில் நீராவி படியும். அன்று அவ்வாறு நடக்கவே இல்லை. அதுமட்டுமல்லாமல் வேறு ஏதோவொரு இனம்புரியாத மாற்றத்தையும் என்னால் உணர முடிந்தது.

    என் மனைவி ஆனந்தியிடம் அதைப்பற்றி கூறியபோது, “அதெல்லாம் ஒண்ணுமில்ல சந்தோஷ். லாஸ்ட் இயர் கூட கொஞ்சம் கோல்டா தான் இருந்தது.” என்றாள்.  ‘எனக்குத் தெரியாதா என் தாயகத்தைப் பற்றி?’ என்று நினைத்துக் கொண்டேன்.

    தாயின் கருவறையிலிருந்து வெளியேறிப் பிறக்கும் குழந்தை, இந்தப் பிரபஞ்சம் என்கிற  தாயின் மாபெரும் கருவறையின் வேரிடங்களுக்கு நீந்திச் செல்வதற்கான சுதந்திரத்தைப் பெறுகிறது என்பதை நம்புபவன்; உணர்ந்தவன் நான்.

    பிறக்கும் குழந்தையின் உணர்வை, ஒவ்வொருமுறையும் சென்னையில் தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளியே வரும்போதும் பெறுபவன் நான். விமானத்தை ‘பேய்ப்பறவை’ என்று தன் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் என்னுடைய அபிமான எழுத்தாளர் ஒருவர். அது பேய்ப்பறவை மட்டும் அல்ல; தாய்ப்பறவையும் கூட. மம்மாலியா இனத்தை சேர்ந்த ஒரே பறவை என்றும் வைத்துக்கொள்ளலாம். பத்து மணிநேர பயணத்தில் தன் வயிற்றில் பயணிகள் அனைவரையும் சுமந்து, இறுதியில் பிரசவித்துவிட்டு போவாள். வெளியே வந்து தாயக மண்ணில் கால்வைக்கும் போது, நான் ஏற்கனவே கூறியது போன்றே இன்னொரு தாயின் கருவறைக்குள் நுழைவதாய் உணர்வேன். ‘எனக்குத் தெரியாதா அதன் வெம்மை?’

    இதற்கு முன்பு சென்னையில் சுனாமி வருவதற்கு முந்தைய தினம்  இதுபோன்றதொரு மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன். அது நடந்ததுகூட  ஒரு டிசம்பர் மாதம்தான் என்று நினைக்கிறேன். திடீரென்று சுனாமி பற்றிய எண்ணங்களும், மனிதர்களின் அவலக்குரல்களும் கேட்பது போலத் தோன்றியது. உடனே என் தங்கையிடமும், சித்தியிடமும் அதுபற்றி கூறி, ‘சுனாமி என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?’ என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் காலை தொலைக்காட்சியில் வந்த சுனாமி பற்றிய செய்தியைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள் என் தங்கையும், சித்தியும்.

    இதுபோன்று நமக்கு அவ்வப்போது தோன்றுவதையும், உணர்வதையும் கூறினாலே நம்மை  கேலிசெய்து கும்மியடித்துவிட்டுப்  போகிறார்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள். எல்லாவற்றிற்கும் அறிவியல் விளக்கம் கேட்கிறார்கள். பிறந்த குழந்தை அறிவியல் விளக்கம் கேட்டுவிட்டா தாயின் மார்பில் பால் குடிக்கிறது? இதற்காகவே நான் உணர்வதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை நிறுத்திவிட்டேன். இத்தகைய ‘பேரறிவுவாதிகளிடம்’ (இதற்கு அவர்களே வைத்திருக்கும் பதத்தை உபயோகித்தால் வீண் விமர்சனங்களுக்கு ஆளாகி, சிலபல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் இந்தப் பதம்).  நாம் உணர்வதை எடுத்துச் சொல்லி நாமும் முட்டாள் என்று பெயர் எடுத்து, அவர்களையும் அறிவாளிகளாக ஆக்குவதைவிட, எனக்குள்ளே அமைதியாக அவற்றை ஆய்ந்து, எனக்காகவே அறிவாளியாக இருப்பது என்று நான் முடிவு செய்து நீண்ட நாட்களாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாது; சிலவற்றை உணர்ந்து கொள்ள வேண்டும்; உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும் என்பதை முழுமையாக நம்புபவன் நான். இங்கு ‘முழுமையாக’ என்று எழுதியிருந்ததை அழித்துவிட்டேன். அதென்ன முழுமையாக நம்புவது? நம்புகிறேன்!

    சென்னை வந்திறங்கிய முதல் நாள், “வானம் மேகமூட்டமாக இருக்கிறது, மழை பொழிய வாய்ப்பிருக்கிறது.” என்றார் ரமணன்.

    இரண்டாம் நாள், “பருவநிலை மாற்றம் நம்ப முடியாததாக உள்ளது. வடமாநிலங்களில் நிலவும் கடுங்குளிர் தமிழகத்திலும் நிலவ வாய்ப்பிருக்கிறது.” என்றார். அன்று இரவு, பதினொரு டிகிரி செல்சியசை தொட்டிருந்தது சென்னை.

    விருகம்பாக்கம் ‘ஷ்யாமளா கார்டன்ஸ்‘ குடியிருப்பிலுள்ள என் தங்கை வீட்டில் தங்கியிருந்த நான், “எல்லோரிடமும் தெர்மல் வேர் இருக்கிறதா?” என்றேன்.

    என் மனைவி சிரித்துவிட்டு, “அதெல்லாம் ஹாலன்ட்லையே நாம யூஸ் பண்ண மாட்டோம். இங்க எதுக்கு?” என்றாள்.

    என் தங்கை என்னை சிறிது நேரம் வெறித்துப் பார்த்துவிட்டு, “தெர்மல் வேர் இல்லை அண்ணா. வாங்கலாமா?” என்று கேட்டாள். சுனாமி தினத்தன்று என்னோடு இருந்தவள் அன்றோ? என்னை உணர்ந்தவள், எனக்கு மதிப்பளித்தாள்.

    “வாங்குவது நலம்” என்றேன்.

    பாரிஸ் கார்னர் பூக்கடை அருகேயுள்ள யூனுஸ் சேத் கடைதான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் நாடும் கடை. அங்கு சென்று காரை நிரப்பிக் கொண்டு வந்தோம்.

    அடுத்த இரு தினங்களில் சுழிநிலையை நெருங்கிக்கொண்டிருந்தது சென்னை. “வீட்டில் ஹீட்டர் இருக்கிறதா?” என்று எதேச்சையாகக் கேட்டேன். உடனே என் மைத்துனரை கடைக்கு விரட்டினாள் என் தங்கை.

    வெள்ளைச் சலவைக்கல்லாலான தரையில் யாராலும் வெறும் கால்களால் நடக்க முடியவில்லை. புத்தம்புது செருப்புகளை  வாங்கி வந்து, எல்லோரும் காலுறையும், செருப்பும் அணிந்துகொண்டு நடப்பதைப்  பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.

    பரணுக்கு என்றோ புலம்பெயர்ந்திருந்த பழைய போர்வைகள், கம்பளிகள் எல்லாம் எடுத்துவந்து தரையில் விரித்துப் போட்டாள் என் தங்கை.

    சென்னை மாநகரமே வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தது.

    “தமிழகத்தில் கடுங்குளிர் நிலவுவதால் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை.” என்கிற செய்தி எல்லா தொலைக்காட்சிச் சேனல்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது.

    “கடுங்குளிர் வானிலை நிலவும் போது என்ன மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும், என்னென்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்?” என்பது போன்ற கேள்விகளுடன் பல பேட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள் நிருபர்கள்.

    அதனூடே சமையற்கட்டு உரையாடல்களும் என் காதில் விழுந்து கொண்டிருந்தன.

    “பால் கெடவே இல்லையே?” என்றார் என் சித்தி.

    “பழங்கள் கூட அழுகவே இல்லை. இன்னும் ப்ரெஷ்ஷாகவே இருக்கிறது” – இது என் தங்கை.

    “ஹாலந்தில் இப்படித்தான். குளிர்காலங்களில் பிரிட்ஜை உபயோகிக்கவே மாட்டோம். ஒரே ஒரு அறையின் ஜன்னலை மட்டும் லேசாக திறந்து வைத்து எல்லா பொருட்களையும் அங்கே வைத்துவிடுவோம். நேச்சுரல் பிரிட்ஜ்!” என்று பெருமையாக அயல்நாட்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தாள் என் மனையாள்.

    அலைந்து திரிந்து இரண்டு வெவ்வேறு வகையான சூடேற்றும் சாதனங்களை எப்படியோ வாங்கி வந்துவிட்டார் எனது மைத்துனர்.

    அன்றிரவே சுழிநிலைக்கும் கீழே சென்றது சென்னை.

    இரவு யாருக்கும் தூக்கம் வரவில்லை.

    மறுநாள் காலை டிரைவர் வேலுவுடன் காரை எடுத்துக்கொண்டு குளிர்காலச் சென்னை எப்படி இருக்கிறது என்பதைக் காண நகர்வலம் சென்றேன். ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் இப்படிச் சுற்றுவது வழக்கம். அன்றைக்கு இருந்த குளிர் காரணமாக நகர்வல நாட்டம் மும்மடங்கு அதிகரித்திருந்தது.

    யூனுஸ் சேத் ஒரே இரவிலேயே சென்னையில் பல கிளைகளை தொடங்கிவிட்டாரா என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு ஆங்காகே கம்பளிச்சட்டைகள், பாய்கள், பலவித வெப்ப ஆடைகளை குளிரில் நடுங்கியபடி கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தனர் புத்தம்புது நடமாடும் ‘யூனுஸ் சேத்’ கடை முதலாளிகள்.

    அந்தக் குளிரிலும் பாண்டிபஜார் துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குச் சென்று குங்குமம் வைக்கும் வரை அல்லது அடுத்த பொங்கல், தீபாவளி வரும்வரை விட்டுவைக்குமா குளிர்?  பாவம். புத்தம்புது கம்பளிச்சட்டைகளையும், மேலாடைகளையும், தொப்பிகளையும்,  கையுறைகளையும், காலணிகளையும் வாங்கிய அடுத்தகணமே அணிந்து கொண்டும்; இன்னும் வாங்காதவர்கள் குளிர் தாங்கமுடியாமல், நீர்மத்தில் ஒழுங்கற்று இங்குமங்கும் ஓடும் துகள்களாய் மாறி இருந்தார்கள்.

    மேற்குறிப்பிட்ட அத்தனை சமாச்சாரங்களையும் அணிந்தவாறு, வாயிலும் மூக்கிலும் புகைவிட்டுக்கொண்டு, பற்கள் தட்டச்சு அடித்தபடி, ஆளுயர மேலுறைக்குள் புதைந்தபடி செல்லும் மனிதர்களை அன்றாடம் ஐரோப்பாவில் கண்டு பழகிய எனக்கு, நம் சென்னையில் இப்படிப்பட்ட காட்சிகளைக் காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. கையுறைகளை கழற்றிவிட்டு, என்னையும் மறந்து எனது கைபேசியைக் கொண்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.

    அப்போது திடீரென குளிர்காற்று முகத்தில் அறைந்து முகத்தின் மேலடுக்கு உறைந்தது. சுழிநிலைக்கு கீழே செல்வது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. முறையான உடையணிந்து இருந்தால் ஓரளவு தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பத்து-பதினைந்து  டிகிரி இருந்தாலும் கூட, காற்று அடித்தால் அவ்வளவுதான். அன்று அதுவும் நடந்துகொண்டிருந்தது. வெப்பத்தை மட்டுமே காலங்காலமாகத் தாங்கிக் கொண்டிருந்த அந்த சென்னைக் காற்று ஒரு மாறுதலுக்காக குளிரைத் தாங்கும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அனைவர் மீதும் மோதி மோதி உறையவைத்து விளையாடிக்கொண்டிருந்தது.

    பாண்டிபஜார் பூக்கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த மாலைகளில் உறைந்து போயிருந்த துளிகளை படம்பிடித்துக்கொண்டிருந்த என் காதில் அந்த ஆட்டோ பேர உரையாடல் காதில் விழுந்து என் கவனத்தை திசை திருப்பியது.

    “ரொம்ப குளிருப்பா. சீக்கிரம் போகணும். உன்கிட்ட பேரம் பேச நேரமில்லை. முடிவா எவ்ளோ சொல்லு.”

    “சார். குளிர்லையே ஆட்டோ ஓட்டுறோம். பாத்து குடு சார்.”

    சாக்கு போக்கு சொல்வதற்கு இந்த ஆட்டோக்காரர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். விலை உயர்வு செய்வதில் மத்திய அரசின் பெட்ரோலியத் துறையையே விஞ்சி விடுவார்கள் இவர்கள். அவர்களாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாகத்தான் பெட்ரோல் விலையை உயர்த்துவார்கள். இவர்கள் கூறும் காரணமெல்லாமே வித்தியாசமாக இருக்கும். மழைபெய்தால், வெயிலடித்தால், புயலடித்தால், பொங்கல் வந்தால், தீபாவளி வந்தால், ஆடி மாதம் என்பதால் – இப்படி எல்லாவற்றிற்கும். இந்தப் பட்டியலில் இப்போது குளிரும் சேர்ந்துவிட்டது. சில சமயங்களில் டீசல் வண்டி வைத்திருப்பவர்கள் கூட பெட்ரோல் விலை உயர்ந்தால் சவாரி விலையை உயர்த்துவார்கள்.

    இப்படித்தான் ஒருமுறை ஒரு ஆட்டோக்காரரிடம், “ராமசாமி சாலை செல்லவேண்டும். நூறு ரூபாய் தருகிறேன்.” என்று கூறினேன். அதுவே அங்கு செல்வதற்கு அதிகம்.

    “அதெல்லாம் ஒன் வே பண்ணிட்டாங்க சார். சுத்திட்டு போனும். அம்பது ரூபா போட்டுக் குடு சார் போலாம்.” என்றார்.

    கடைசியில் 125 ரூபாய்க்கு பேசிச் சென்றேன். சுற்றிக்கொண்டு செல்லவேண்டும் என்றவர் அந்த ஒருவழிச் சாலையிலேயே போக ஆரம்பித்தார்.

    “என்னப்பா? சுத்திட்டு போகணும்னு அதிகமா வாங்கிட்டு, ஒன்வேலயே போறியே?” என்று கோபமாகக் கேட்டேன்.

    “சார். மாட்டினா மாமாக்கு தர்றதுக்குத்தான் சார் காசு” என்று அவர் கூறியதைக் கேட்டு விக்கித்துப் போனேன். இப்படிப்பட்டவர்கள் குளிருக்குக் காசு கேட்காமல் இருப்பார்களா? ஆட்டோவில் செல்லும் போது இலவச குளிரூட்டப்பட்ட காற்றுக்கு பணம் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ஆட்டோக்காரர்களை விடுங்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லோருமே வியாபாரிகளாகத்தான்    பிறக்கிறார்கள்; சென்ற வருடம் பிறந்து ஆண்டு நிறைவைக் கண்டிராத குழந்தைகூட வியாபாரம் பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று நினைத்துக்கொண்டே காரையும் வேலுவையும் தேடியவாறு நடக்கும்போது, என் எதிரே திடீரென வந்து குதித்துக் கத்திய அந்த மனிதரைக் கண்டவுடன் மிரண்டு போய்விட்டேன். அழுக்குப் படிந்த முகத்துடனும், நீண்ட தாடியுடனும், தீர்க்கமான கண்களுடனும்,  அந்தக் குளிரிலும் சட்டைகூட போடாமல், “மாயன் சரியாத்தான் சொன்னான். மாயன் சரியாத்தான் சொன்னான்!” என்று கத்தும் இந்த மனிதர் யார்?

    இதுபோன்ற மனிதர்களை திருவண்ணாமலையில் அதிகம் பார்த்திருக்கிறேன். சென்னையில் இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? இவர் சாமியாரா? பித்துப் பிடித்தவரா? இல்லை பிச்சைக்காரரா? என்று யோசித்துக்கொண்டே ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன்.

    “ஹா ஹா ஹா!” என்று சிரித்துவிட்டு, “என்னை என்ன பிச்சைகாரன்னு நெனச்சியா? நான் ராசன் டா! மகராசன்! நீங்கல்லாம் தாண்டா பிச்சைக்காரனுங்க. சொல்றேன் கேட்டுக்கோ! மாயனுங்க கணக்கு தான் சரி! உங்க கணக்குதான்டா தப்பு! மக்கு பசங்களா! ரெண்டாயிரத்து பன்னெண்டு இல்லைடா! ரெண்டாயிரத்து பதினாறுல இருக்குடா உங்களுக்கு கச்சேரி! இன்னும் ஒரு வருஷம் தான். ஒரே ஒரு வருஷந்தான்! அப்புறம் இருக்கு உங்களுக்கு பிரச்சினை. அது என்ன பிரச்சனைன்னு நீ கேக்க வருவ. ஆனா, தப்ப வழியே கிடையாது! மாயனுங்க கணக்குதான் சரி! ஹா ஹா!” என்று உரக்கச் சிரித்துக்கொண்டே ஓடினார்.

    அவரைப் பார்த்துக்கொண்டே குழம்பிய மனதுடன் நின்றுகொண்டிருந்த என்னைத் தேடிவந்த வேலு, “என்ன ஆச்சி சார்? அந்த பைத்தியக்காரன் எதனா பிரச்சின பண்ணானா?” என்று பதைபதைத்தபடி கேட்டார்.

    “அதெல்லாம் இல்ல வேலு. காசு கொடுத்தாலும் வாங்கிக்கல. இந்தக் குளிருல துணிகூட போடாமே இருக்கறத பாக்க கஷ்டமா இருக்கு!”.

    காரை திருப்பி வீட்டிற்கு விரட்டிக்கொண்டு சென்றோம். எல்லா பண்பலைகளிலும் சென்னையின் குளிர் பற்றிய செய்திதான். இடையிடையே புத்தம் புதியதாய்க் கிளம்பியிருந்த சூடேற்றும் சாதனங்களைப் பற்றிய விளம்பரங்கள் வேறு.

    “அமெரிக்கா குளிரையே தாங்கும் சார் இந்த சொட்டரு!” என்று ரங்கநாதன் தெருவில் கூவிக்கொண்டிருந்த சிறுவனுக்கும், “ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட சாதனம்!” என்று பிளிரிக்கொண்டிருந்த இவர்களின் வியாபார உத்திக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.

    வீட்டிற்குள் நுழைந்தால், சுடச்சுட போண்டாவுடனும், தேநீருடனும் தொலைகாட்சியில் செய்திகளில் பார்வைகளை பதித்துக் கிடந்தது ஒட்டுமொத்த குடும்பமும்.

    “இன்னும் டூ டேஸ்ல சென்னைல ஸ்னோஃபாலாம்!!” என்று கைகளை உயர்த்தியபடி என்னைப் பார்த்து கத்தினார்கள் என் குழந்தைகளும், தங்கையும்.

    “இது என்ன விந்தையான செய்தி?” என்று அதிசயத்துப்போய் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பினால், பருவநிலை மாற்றங்களை பற்றி அவருக்கே உரித்தான பாணியில் விரிவுரை ஆற்றிக்கொண்டிருந்தார் ரமணன் அவர்கள். ஆங்கிலத் தொலைக்காட்சிகள் இது பற்றி அனிமேஷன் வித்தைகளோடு விளக்கிக் கொண்டிருந்தன.

    “இந்தியால எப்படிம்மா ஸ்னோஃபால் வருது” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் என் மகள்.

    “குளோபல் வார்மிங்தான் ரீசன்.” என்றாள் என் மனையாள்.

    “குளோபல் வார்மிங்னா ஹாட்டா இல்ல ஆகணும். ஏன் கோல்ட் ஆகுது” என்கிற நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டாள் என் இளைய மகள். அது நிச்சயம் என் மனைவிக்கு அவுட்ஆஃப்சிலபஸ் ஆயிற்றே என்று நான் நினைத்த அடுத்தகணமே,

    “சும்மா கேள்வி கேட்டு டைம் வேஸ்ட் பண்ணாம போயி டேபிலட்ல கேம்ஸ் விளையாடு போடி!” என்று குழந்தையை துரத்தினாள்.

    வழக்கமாக மடிக்கணினியில் இணையத்தில் மூழ்கி இருக்கும் சமயங்களில் குடும்ப விவகாரங்களில் தலையிடும் கெட்ட பழக்கம் எனக்கு இருந்ததில்லை. அதனால் அமைதியாக என் வேலையை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி என்ன முக்கிய வேலை?

    வேறென்ன? பாழாய்ப்போன இந்த ஃபேஸ்புக் தான்! இந்த ஃபேஸ்புக் சுவரை பார்க்கும் போதெல்லாம், நான் பிறந்த நிலாவூர் கிராமத்தில் இருக்கும் என் தாத்தா வீட்டு எடுபிடி மங்குண்டு தான் எனக்கு நினைவுக்கு வருவார். எனக்கு விளையாட்டு காட்ட, வட்டம், முக்கோணம், நட்சத்திரம் மற்றும் விதவிதமான வடிவங்களில் மாட்டுச் சாணத்தை தட்டி அதை சுவரில் அறைவார். அவை காய்ந்த பிறகு அடுப்பில் தூக்கிப்போட்டு எரிப்பது எனக்கு பிடித்தமானதொரு விளையாட்டு. என் ஃபேஸ்புக் சுவரிலும் அப்படி அன்றாடம் நிறைய நண்பர்களும், நண்பர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும், நான் வேண்டாவெறுப்போடு தொடர்ந்து வரும் சில பிரபலங்களும் என்று எல்லோரும் வகைவகையாக நிலைத்தகவல்கள், அவர்களின் சாதனைகள், சோதனைகள், அறிவுரைகள் என்று தட்டி ஒட்டி இருப்பார்கள்.

    நம் தரப்புக்கு அன்று நாம் எடுத்திருந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று முகநூலின் உள்ளே நுழைந்தால் அதுபோன்ற பல புகைப்படங்களை ஏற்கனவே பகிர்ந்து முடித்திருந்தார்கள். ‘இதற்கென்றே ஒரு கூட்டம் அலையும் போல் உள்ளதே’ என்று நினைத்துக்கொண்டே சுட்டியை மேலும் கீழும் உருட்டினேன். சுவர் முழுதும் சென்னை வானிலை அறிக்கை வாசித்திருந்தார்கள் நண்பர்கள்.

    இடையே ஹாலந்து நண்பன் ஒருவன் ஆம்ஸ்டர்டாம் நகரில் நிகழ்ந்த பனிப்பொழிவு புகைப்படத்தை தரவேற்றியிருந்தான். “விரைவில் சென்னையிலும்…” என்கிற வாசகத்துடன் அந்தப் படத்தையும் பகிர்ந்துவிட்டு வெளியே வந்தேன். சில மணித்துளிகள் கழித்து எத்தனை விருப்பங்களும், பின்னூட்டங்களும் விழுந்திருக்கின்றன என்று பார்க்கவேண்டும்.

    அந்த காலத்தில் எல்லாம் திருமணத்திற்கு வந்து மொய் போடுபவர்களின் கணக்கை எழுதி வைப்பார்கள். அதுபோன்றதுதான் இந்த முகநூல் லைக்குகளின்; கமெண்டுகளின் கணக்கும். நமக்கு லைக் போடுபவர்களுக்கு தவறாமல் நாமும் போட்டுவிடவேண்டும். இல்லையெனில் கோபித்துக் கொள்வார்கள். ஆனால், களைப்பு மிகுதியால் கணக்கெழுதாமல் கைபேசியோடு கண்ணயர்ந்து உறங்கிவிட்டேன்.

    நள்ளிரவில் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன். என் சாரதி.

    “சார், உங்க வீட்டுக்கு கீழதான் சார் நிக்கறேன். ரொம்ப குளிரு சார். பசங்களால தாங்க முடியல.”

    “ஒரு நிமிஷம் வேலு. நான் கீழ வரேன்.” என்று கூறிவிட்டு ஹாலந்தில் அன்றாடம் அலுவலகத்திற்கு செல்வதற்குமுன் போருக்கு போவதுபோல் தயாராகுவேனே, அதேபோன்று மேலுறை, கையுறை, காலுறை சகிதமாய் வெளியே சென்றால் அங்கே வேலு காலில் வெறும் செருப்பு மட்டுமே அணிந்து, சால்வை போத்தியபடி நின்றுகொண்டிருந்தார்.

    அப்போதுதான் எனக்கு உறைத்தது. “அடடா, இவருக்கும் ஷூ, ஸ்வெட்டர் வாங்கி இருக்கலாமே! சில சமயங்களில் எவ்வளவு சுயநலத்தோடு நடந்துகொள்கிறோம்?” என்று தோன்றியது.

    உடனே மேலே சென்று பூனை போல் லாவகமாய் எனது கம்பளிச்சட்டைகள் சிலவற்றையும், அடர்த்தியான போர்வைகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

    “இந்தாங்க வேலு. வீட்டுக்கு போலாம் வாங்க.”

    என் தங்கையுடைய அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து அழைக்கும் தூரத்தில் இருந்தது அவரது வீடு. வேலுவை எனக்கு நீண்ட நாட்களாக தெரியுமென்றாலும் அவர் வீட்டுக்குச் சென்றதில்லை. அவர் அழைத்துச் சென்ற இடத்தில் சமையற்கட்டு அளவிலான சிறு வீடுகள் நிறைய இருந்தன.

    அவர் வீட்டிற்குள் குளிரில் நடுங்கிக்கொண்டு ஸ்டவ்வைச் சுற்றி அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும், அவரது வயதான தாயாருக்கும் கொண்டுவந்த போர்வைகளைக் கொடுத்தபோது மனம் முப்பது வருடங்கள் பின்னோக்கி பாய்ந்து பயணித்தது.

    நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அரையாண்டுத் தேர்வில் பெரும்பாலும் எங்கள் தாத்தா வீட்டிற்குச் செல்வோம். மஞ்சம்பில் வீடுதான். இரவில் வாட்டும் கடுங்குளிரிலிருந்து தப்பிக்க சமையற்கட்டிலேயே படுத்துக்கொள்வோம். அதிகாலை நான்கு மணிக்கே விழித்து எங்கள் அனைவருக்கு தேநீர் தயார் செய்து கொடுப்பார் என் தாத்தா. அதைக் குடித்துவிட்டு அடுப்பிற்கு அருகே அமர்ந்து ஒவ்வொரு சுள்ளியாக பொறுக்கி அடுப்பில் போட்டு குளிர் காய்வோம்.

    வேலுவை இரும்புத்தொட்டி ஏதேனுமிருந்தால் எடுத்துவரச் சொன்னேன். அந்தத் தெருவில் கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த வீட்டிற்கெதிரே இருந்து சிறிது மணலை அள்ளிவந்து வீட்டில் கொட்டிவிட்டு, அதன்மீது வேலு கொண்டுவந்த சிறு இரும்புத் தொட்டியை வைத்து, விறகுகளை போட்டுக் கொளுத்தி அவர்களோடு சேர்ந்து நானும் சிறிது நேரம் அங்கு அமர்ந்து குளிர் காய்ந்து, வேலுவின் மனைவி போட்டுக்கொடுத்த அருமையான தேநீரைப் பருகிவிட்டு வீட்டுக்கு வந்த படுத்தபோது மணி நான்கு. மனதில் ஒரு வேள்வி நடத்தி முடித்த திருப்தி!

    கடைசியில் அந்த நாள் வந்தே விட்டது. சென்னை மாநகரில் அன்று கடும் பனிப்பொழிவு.

    சென்னை வெயில் வாட்டியபோதெல்லாம் வான் பார்த்து கண்களை மூடி, “ஐரோப்பாவைப் போன்று இப்போது இங்கே பனிபெய்து என் முகத்தில் பனித்துகள்கள் பளிச்சென்று விழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன். அன்று உண்மையாகவே விழுந்தது. அந்தக் குடியிருப்பிலிருந்த அனைவரும் – சிறுவர் முதல் பெரியவர் வரை –  அத்தனை பேரும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆச்சர்யத்துடனும், குதூகலத்துடனும் வானிலிருந்து கொட்டிக்கொண்டிருக்கும் அந்தத் துகள்களை வரவேற்றுக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

    அன்று மாலைக்குள்ளாகவே வானம் துகள்துகளாகக் கொட்டித் தீர்த்துவிட்டது. எல்லோரும் வெளியே பனிப்பந்துகள் செய்து வீசியெறிந்து விளையாடிக்கொண்டிருக்க, நாம் எப்போதும்போல் முகநூலுக்குள் நுழைந்தோம். மெரினா கடற்கரைப் புகைப்படங்கள் சிலவற்றை சுடச்சுட பகிர்ந்திருந்தது ‘உலக தமிழ் மக்கள் இயக்கம்’ பக்கமும் மற்ற சில பக்கங்களும்.

    ஒயிட் கிறிஸ்துமஸை‘ எதிர்நோக்கியிருந்த சாந்தோம் தேவாலயம் அழகாயிருந்தது.

    காந்தி சிலை – சாகும் வரை கோவணத்துடன் வாழ்ந்தவருக்கு சால்வை போர்த்தியிருந்தாள் இயற்கை அன்னை. ஆயினும், சிலம்பை தூக்கிக்கொண்டு நிற்கும் கைம்பெண் கண்ணகிக்கு திராவிடக் கட்சிகள் வழங்கியிருந்த கறுப்புச் சேலையை களைந்துவிட்டு, வெள்ளைச் சேலை வழங்கியிருந்தாள். இயற்கைக்கும் சிறிது மூடநம்பிக்கை உண்டு போலும்.

    மாநகராட்சியின் கருந்தார் பூச்சுக்காக  நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக வழிமேல் விழிவைத்து, ஏங்கிக் காத்திருந்த வேளச்சேரி தரமணி சாலைக்கு கிடைத்திருந்த வெண்பனிப் பூச்சு யோகம், உறைந்துபோன கூவம், வீட்டு வாசலுக்கு முன்பு பால்காரர் போட்டிருந்த ஒரு வெண்பனிக்கட்டிப் பொட்டலம், வீட்டு உப்பரிகையில் தாங்கள் அழகாய் செய்திருந்த ‘ஸ்னோமேன்‘, ஒரு நாளிதழின் முதல்பக்கத்தில் முதன்முறையாக இடம்பிடித்திருந்த வானிலை ஆய்வு மைய இயக்குநரின் புகைப்படம் என பலவிதமாய் சென்னையின் அன்றைய தின அதிசயங்களை க்ளிக்கித் தள்ளி புகைப்படங்களை சுவர்தட்டியிருந்தார்கள் நண்பர்கள்.

    முகநூலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தொலைக்காட்சி நியூஸ் சேனல் ஒன்றினுள் மூழ்கிக்கிடந்த மைத்துனருடன் இணைந்துகொண்டேன்.

    இப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையென்றாலும், குறைந்தபட்சம் ஒரு சமூக ஆர்வலர், ஒரு நடிகர், ஒரு வியாபாரி, ஒரு எழுத்தாளர், இரண்டு அரசியல்வாதிகள், தொலைபேசி மூலம் சில பொதுமக்கள் என்று எல்லா தொலைகாட்சிகளிலும் வந்து விவாதித்து சித்ரவதை செய்வது வாடிக்கையாகி விட்டது.

    அப்படியொரு அவஸ்தையான, காரசாரமான விவாதம் ‘இன்றைய முழக்கம்’ தொலைக்காட்சியில், “நெஞ்சில மஞ்சா..” நிகழ்ச்சியில் அன்று நடந்து கொண்டிருந்தது.

    “குளிர் தாங்க முடியலைங்க. கவர்மெண்டு ஒண்ணுமே செய்யமாட்டேங்குது. விறகு வாங்கினாலும் பச்சையா கெடக்கு. என்ன பன்றதுனே தெரியல. மொதலாளி வீட்டுல ஹீட்டர் இருக்குனு போனா, கரண்டு பன்னெண்டு மணிநேரம் கட் பண்றானுங்க. சென்னைல இருக்கறவங்க மட்டும் உயிரோட இருந்தா போதும்னு கவர்மெண்ட் நெனைக்குது. என்ன பண்றதுனே தெரியலைங்க! குளிருலையே செத்துடுவோம் போல இருக்குங்க.” என்று தொலைபேசி மூலம் ஒரு சாதாரணர் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருந்த போது என் மைத்துனர் சுடச்சுட போண்டா ஒன்றை எடுத்து வாயில் விட்டார்.

    தொழிலதிபர் ரெங்கமணி ஆவுடையப்பன் “தற்போது கூட ஜப்பானில் ஒரு வுட் ட்ரையர் கண்டுபிடித்துள்ளார்கள். பச்சை மரத்தை உள்ளே அனுப்பினால், காய்ந்த விறகாக வெளியே வந்துவிடும். அரசாங்கம் அத்தகைய இயந்திரங்களை உடனே இறக்குமதி செய்தால் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். எங்களுடைய  நிறுவனம் அதற்கான உதவிகள் செய்யத் தயாராயிருக்கிறது.” என்று ஆலோசனை வழங்கிய அதே வேளையில், அவரது IIM அகமதாபாத் மூளை அந்த வணிக திட்டம் எப்போது சமபாட்டுப் புள்ளியைத் தொடும் என்பதை கணித்து முடித்திருந்தது.

    சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான கட்டுத்தறி திடீரென கத்தத் தொடங்கினார், “குளிருக்காக மரங்களை வெட்டுவதென்பது அபாயகரமானது. நாளைய சந்ததியினருக்கு மரங்களை விட்டு வைக்கவேண்டும். என்னமாதிரியான ஒரு சமூகத்தில் நாம்…. ”

    தொலைபேசி மூலம் யாரோ ஒரு சாதாரணர் குறுக்கே புகுந்து, “யோவ், கட்டுத்தறி! நீ என்ன பெரிய அறிவாளின்னு காமிக்கிறையா? இன்னைக்கு சாகரவங்கள காப்பாத்த சொன்னா நாளைக்கி நாளானன்னைக்கு பெனாத்தற…” என்று சூடாகப் பேசிய போது அவரை இடைமறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கருணாகர மூர்த்தி, “நண்பரே உங்கள் வார்த்தை பிரயோகம் சரியில்லை.” என்று கூறியபோதே இணைப்பு துண்டிக்கப்பட்டு, “டூன்..டூன்..டூன்..” என்று சத்தம் வந்தது.

    ஒருங்கிணைப்பாளர் கருணாகர மூர்த்தி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-விடம் திரும்பி, “திரு.பச்சைமாமலை, அமைச்சர் திரு.பொய்கைவீரன் அவர்கள் பல நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் இதுகுறித்து உங்கள் பார்வை என்ன?”. அவர் இந்தக் கேள்வியை கேட்டுக்  கொண்டிருந்தபோது, பச்சைமாமலை அவர்கள் தனது புத்தம் புதிய வெள்ளை சட்டைக்குள் உடலை நுழைத்து தலையை காண்பித்து சிரித்தபடி அமர்ந்து, எனது தங்கையின் 41 அங்குல தொலைகாட்சிப் பெட்டித்திரை முழுவதையும் நிரப்பியிருக்க, கீழே அவரை பற்றிய ‘ஹைக்கூவை’ காண்பித்துக் கொண்டிருந்தது ‘இன்றைய முழக்கம்’.

    திரு. பச்சைமாமலை

    எம் எல்

    தமிழர் முன்னேற்ற கட்சி 

    “சில எழுத்தாளர்களுக்கும்,  சமூக ஆர்வலர்களுக்கும்  இதுவே வேலையாகிவிட்டது. இவர்களாக ஒரு தீர்வையும் வழங்க மாட்டார்கள். அரசாங்கமோ அல்லது வேறு எவரேனும் ஒருவர் கொடுக்கின்ற தீர்வில் குறை கண்டுபிடித்தே வாழ்க்கையை ஓட்டும் ஒட்டுண்ணிகள்!” என்று வார்த்தைஜாலம் காட்டி அடுத்த தேர்தலுக்கு தொலைபேசியில் பேசியவரின் ஓட்டை தக்க வைத்துக்கொண்டு, தன் பேச்சை தொடர்ந்தார் பச்சைமாமலை, “என்னைப் பொருத்தமட்டிலும் நடக்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கு காரணம் ம.மு.க-வினர் (மறத்தமிழர் முன்னேற்றக்  கட்சி) தான். நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர்கள் முன்பே இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். மின்சார பிரச்சினைக்கும் அவர்களே காரணம். மின்சாரம் இருந்திருந்தால் இத்தனை பேர் குளிரில் வாடியிருக்கமாட்டார்கள். ஆனால் எங்கள் மாண்புமிகு ஐயா அவர்கள் தொலைநோக்கோடு, அடுத்த தலைமுறையினரும் பாராட்டும் வண்ணம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.”

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த ம.மு.க கட்சி அரசியல்வாதியும், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சருமான L.A.P.D கோதண்டம், சிறிது ஆவேசமாகவே பேச ஆரம்பித்தார், “இந்த மாண்புமிகு என்பது அவரோட ஐயாவோட பதவிக்கா? இல்லை அவரோட ஐயாவுக்கேவா? மாண்புமிகு முதல்வர் ஐயா என்று கூற பழகிக் கொள்ளவேண்டும், சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள். நான் கேட்கிறேன்… ம.மு.க பற்றி பேச த.மு.க.வினருக்கு என்ன தகுதி இருக்கிறது? மின்சாரம் தான் பிரச்சினை என்கிறார்களே, எத்தனை பேர் வீட்டில் இன்று ஹீட்டர் இருக்கிறது? அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், அனைவருக்கும் ஹீட்டர் இலவசமாக வழங்கப்படும் என்று எங்கள் தலைவர் நேற்று மாலையே அறிக்கை விடுத்து தனது தாயுள்ளத்தை காண்பித்துள்ளார். அதைச் செய்வார்களா இவர்கள்?”

    இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போது இவர்களுக்கிடையே, ‘ஊர் ரெண்டு பட்டால்..” எனும் விதமாகவும், ‘முட்டாள்களுக்கிடையே அமர்ந்திருக்கும் தான் மட்டுமே இங்கு அறிவுஜீவி’ எனும் விதமாகவும் அமர்ந்திருந்த எழுத்தாளர் முகத்தில் ஒரே புன்னகை!

    இன்னொரு தொலைக்கட்சியில் தனது விநோதமான யோசனையைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் பொய்கை வீரன், “சாலைகளிலும், நடைபாதைகளிலும் படர்ந்து கிடக்கும் பனியை மாநகராட்சி குடிநீர் வண்டிகளில் கடல்நீர் கொண்டு வந்து சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்கும்.”

    “பரவாயில்லை. கடல் நீரில் உப்பு கலந்திருக்கிறது என்கிற அளவிற்காவது அமைச்சருக்கு அறிவிருக்கிறதே!” என்றாள் என் தங்கை.

    “யோசனையாம் யோசனை. மண்ணாங்கட்டி.” என்று நொந்துகொண்டார் என் மைத்துனர்.

    இதற்கிடையே இன்றைய முழக்கத்தில் சற்றுமுன் வந்த செய்தி ஒன்று மின்னிக் கொண்டிருந்தது :

    போரூர் ஏரி உறைந்து போனதால் அதில் பனிச்சறுக்கு விளையாட்டை நடத்த சென்னை மாநகராட்சி ஸ்னோ ஒயிட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது

    இன்னொரு தொலைக்காட்சியில்:

    சாலையோரத்தில் பனிப்போர்த்தி மறைத்திருந்த குழிக்குள் விழுந்த கிழவி பலி.

    குளிரினாலும், பனியால் ஏற்பட்ட விபத்துகளாலும் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 20 என்று காண்பித்தது த.மு.க சேனல்; 200 என்று காண்பித்தது  ம.மு.க சேனல். அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் இல்லை – கடைசியில் ஒரு பூஜ்ஜியம். அவ்வளவுதானே? மேலும், இந்தியாவில் அன்றாடம் 62000 பேர் இறக்கிறார்கள். அது 62020 -ஆக இருந்தால் என்ன? இல்லை 62200 -ஆக இருந்தால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? மனிதர்களை விடுங்கள்; எண்ணற்ற கால்நடைகள் மரித்துப் போயிருக்கும். அவற்றை பற்றி பச்சைமாமலையும், கட்டுத்தறியும் விவாதம் புரிந்ததாய் தெரியவில்லை. பேசினாலும் அவைகளுக்குப் புரியப்போவதில்லை.

    நாட்டை உலுக்கும் அதிபயங்கரமான விஷயங்களை நாம் கையாளும் விதத்தையும், ‘நெஞ்சில மஞ்சா!’ போன்ற நிகழ்ச்சிகளில் வாதிடும் அறிஞர்களையும், அவர்களின் விஷய ஞானம், சமூகப் பார்வை இவற்றையெல்லாம் பார்க்கும் போது, நாம் என்னமாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற நிதர்சனம் மனதுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. இவர்கள் தான் நம்மை ‘அறிவார்ந்த’ சமூகமாக மாற்ற இளைஞர்களை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பரிதாபகரமான உண்மை.

    இரவு தூக்கமே வரவில்லை. இருட்டில் அமர்ந்து நுண்ணறி பேசியை எடுத்து வருடிக்கொண்டிருந்த போது திடீரென கூகிள் காலண்டர் கண்ணில் பட்டது. காலண்டரைக் கண்ட அடுத்தகணம், பாண்டிபஜாரில் பார்த்த கிழவர் நினைவுக்கு வந்தார்.

    “சட்டைகூட போடாமல் திரிந்து கொண்டிருந்த அந்த மகராசன் இந்நேரம் எங்கிருப்பார்? போய் பார்க்கலாமா? அவருக்கு ஒரு கம்பளிச்சட்டையும், கம்பளிப் போர்வையையும் கொடுத்திருக்கலாமே? பலியாகிற அனைத்து உயிர்களையும் நம்மால் காப்பாற்ற இயலாது. ஆனால், பணத்திற்காக முட்டாள்களை அறிவாளிகளாக்கிப் பார்க்கும் விந்தையான மனிதர்களுக்கிடையே, கொடுத்த பணத்தையும் மதிக்காமல், கொடுத்தவனையும் முட்டாள் என்றுரைத்த அந்த மனிதரின் உயிர் மகத்தானதல்லவா?” என்று தோன்றிய அடுத்தகணம் பனிப்போருக்கு தயாராகி, ஒன்றிரண்டு கம்பளிப் போர்வைகளை எடுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து காரை எடுத்தேன். பனிப்பொழிவின்பொது கார் ஓட்டுவது நமக்கு ஒன்றும் புதிதில்லையே? என்ன இங்கெல்லாம் விண்டர் டயர் கிடையாது. சமாளித்து ஓட்ட வேண்டும். இருந்தாலும் அந்த மகராசனுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ளலாம் என்று தோன்றியது.

    பனிப்பொழிவு சற்று குறைந்திருந்தது.

    காரில் ஏறி அமர்ந்தாலே நடு இரவிலும் கூட இந்த ரேடியோக்களின் தொல்லை தாங்க முடிவதில்லை; அதில் வரும் ஆர்.ஜேக்கள் பேசும் தமிழ் – சொல்வதற்கில்லை. டோனி க்ரைகும், ஜெப்ரி பாய்காட்டும் ஆங்கிலம் பேசுவது போலவே தமிழ் பேசவேண்டும் என்று யாரோ பாடம் நடத்தியிருப்பார்கள் போலிருக்கிறது. அன்றைய விவாத மேடையில் இரண்டு அரசியல்வாதிகளையும் வெளுத்து வாங்கிய சமூக ஆர்வலரின் ஜகதலப் பிரதாபங்களை மூச்சு விடாமல் டோனி பாணியில் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் ரேடியோ பீட்-ரூட் ஆர்.ஜே ‘காதல் கிங்’ கார்த்தி. இவற்றிற்கிடையே காதலர்களுக்கு அறிவுரையும், அதன் பிறகு ஒரு டூயட் பாடலும்.

    “நம் நாட்டில் ஆளாளுக்கு கருத்து பேசுகிறார்களே? பேச்சுக்கும் செயல்களுக்கும் தொடர்பே இல்லாத இதுபோன்ற போலிகளால் நிரம்பி வழிகிறது இந்த உலகம்.” என்று எரிச்சல்பட்டுகொண்டே, தியாகராயர் சாலையின் இரு புறங்களையும் பார்த்தபடி காரோட்டிச் சென்றபோது சாலையோரத்தில் ஒரு மரத்தருகே என் கண்கள் கண்ட அந்தக் காட்சி, உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி, என்னை உடனே ப்ரேக் அடிக்க வைத்தது. திடீரென ப்ரேக் அடித்ததால் பனிபடர்ந்த சாலையில் என் கார் சறுக்கி, க்றீச்சிக்கொண்டே சென்று, ஒரு சுற்று சுற்றி, இன்னொரு மரத்தின் மீது மோதி நின்றது. கிட்டத்தட்ட கார் கண்ணாடியை முத்தமிட்டுத் திரும்பினேன். பழக்க தோஷம் காரணமாக அணிந்திருந்த சீட் பெல்ட்டினால் தலைதப்பியது. பின்னர் சுதாரித்துக்கொண்டு கார் கதவைத் திறந்து வலதுகாலைக் கீழே வைத்ததும், முழங்கால் வரை பனியில் புதையுண்டது. அடுத்த அடிக்கு தரையில்  இருப்போமா அல்லது ஏதேனும் ஒரு குழிக்குள் புதைந்து விடுவோமா என்கிற அளவில்தான் எனக்கு சென்னை மாநகராட்சியின் மேல் ‘நம்பிக்கை’ இருந்தது. குளிரில் உதறியபடி அச்சத்துடனும், வெகுகவனமாகவும் அடிமேல் அடிவைத்து மெதுவாக நடந்து சென்றேன். அங்கு பென்குவின் உத்தி மட்டும் போதுமானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

    மரத்தருகே நெருங்க நெருங்க, நான் கண்ட அந்தக் காட்சி இன்னும் தெளிவாகத் தெரிந்து இறுதியில் என் ஊகத்தை உறுதிப்படுத்தியது.

    நான் யாரைத் தேடிச் சென்றேனோ அந்த மனிதர், அங்கே ஒரு சிறு நாய்க்குட்டியை இறுக அணைத்தபடி அமர்ந்திருக்க, அந்த ஜீவன்கள் குளிரில் நடுங்காமல் இருப்பதற்காக, இயற்கை அன்னை என்னை முந்திக்கொண்டுச் சென்று, அடர்த்தியானதொரு வெண்பனிப் போர்வையை அவர்கள் மீது போர்த்தி இருந்தாள்.

    பனிப்போர்வைக்குள் சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தன – அந்த இரு உயிர்களும்.

    Share
  • மிஸ்ட் கால்

    எஸ் வி வேணுகோபாலன்

    தினமும் காலையில் முக்கியமாகத் தேவைப்படும் வேளையிலோ, இரவிலோ தமது கைப்பேசியை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் அதைத் தேடுவது பலருக்கும் தவிர்க்க முடியாத வாழ்க்கை விதியாகிவிட்டது. உடனே, பக்கத்தில் கிடைக்கும் ஒரு தொலைபேசி அல்லது அலைபேசியில் தமது எண்ணைத் தட்டி ஒரு மிஸ்ட் கால் கொடுத்து ரீங்காரம் எந்தத் திசையில் இருந்து கேட்கிறதோ அங்கே காதையும் கண்ணையும் வைத்துத் தேடி எடுப்பது அடுத்த கட்டம். சில வேளைகளில் அந்த ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருக்கும், சம்பந்தப் பட்ட கைப்பேசி கண்ணில் சிக்காது…சோஃபாவில், டீப்பாயில், மேசையில் செய்தித் தாள்களின் அடியிலோ, சிறு தலையணைகளுக்குக் கீழோ, மடித்து வைத்திருக்கும் துணிமணிகளுக்கு இடையிலோ மாட்டிக் கொண்டு என்னைக் கையில் எடேன், கையில் எடேன் என்று கதறிக் கொண்டிருக்கும். சட்டென்று சிக்காது.

    வாழ்க்கையில் நாம் எத்தனையோ முக்கியமான பொருள்களைத் தவற விடுகிறோம். இந்தக் கைப்பேசிகள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் எவ்வளவோ நெருக்கமான விஷயங்களை இப்படி தடயம் தெரியாமல் இழந்து தவிக்கவே செய்திருக்கின்றனர். சாவி கையில் இருக்கும், கண்ணருகே இருந்தாலும் பூட்டு டக்கென்று கண்ணில் படாது. வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படுமுன் வீட்டு மனிதர்களைக் கூறு போட்டு ஊறுகாய் போட்டு முடிந்திருக்கும். ரேஷன் கார்டு, படிப்புச் சான்றிதழ், ஐ டி அட்டை, ஊருக்கான பயணச் சீட்டு, வங்கி பாஸ்புக், நேற்று வரை வீடு முழுக்க எங்கே நடந்தாலும் தட்டுப் பட்டிருந்த செய்தித் தாள், முக்கியமாக, கைக்குட்டை………எத்தனை எத்தனை பொருள்கள் கண்ணா மூச்சி காட்டிக் கொண்டே இருக்கின்றன, அன்றாட வாழ்வில்.

    சமையல் அறையில் எந்த டப்பாவைத் திறந்தாலும் சிக்காத மிளகு சீரகப் பொடி, எங்கோ ஒளிந்து கொண்டு தோசை தீயும் வரை கையில் வந்து சேராத – தோசைக்கென்று வைத்திருக்கும் இரண்டு கரண்டிகளில் வாகான ஒன்று, குழந்தையின் டிபன் பாக்ஸ் மூடி, தண்ணீர் பாட்டில்….எத்தனை எத்தனை தேடல்கள் நகர வாழ்வின் சோதனையான காலை நேரங்களில்..

    இதற்கெல்லாம் மிஸ்ட் கால் மாதிரி ஒரு ஏற்பாடு இருக்கக் கூடாதா என்று கேட்டார் ஒரு நண்பர். ஆனந்த விகடனில் ஓவியர் மதன் ஒரு முறை, இயற்கையில் இப்படி ஏற்பாடுகள் இருந்தால் வசதியாக இருக்குமே என்ற பொது தலைப்பில், உரிக்க வாகாக ஜிப் வைத்த வாழைப்பழம், தூக்கிச் செல்ல பிடி வைத்தே விளைந்திருக்கும் பெரிய பூசணிக் காய் என்று கலக்கி இருந்தார். அப்படி காணாமல் போகும் பொருள்களுக்கு தலையில் மினுக் மினுக் என்று மின்னும் சிறு விளக்கு ஏற்பாடு இருக்கலாம் தான்.

    ஆனால், அப்புறம் தேடலின் சுவாரசியமும், சண்டையும், தவிப்பும், பரிதவிப்பும் அற்ற வாழ்க்கை எவ்வளவு போரடித்துவிடும்?

    இருந்த இடத்தில் இருந்தபடி வீட்டில் காணாமல் போன பொருள்களின் இருப்பிடம் குறித்த வரைபடத்தை ஏதோ கையில் வைத்திருப்பது போல அம்மாக்கள் சொல்வது வழக்கம். எங்கே எனது ஸ்கூல் பேக் என்று கத்திக் கொண்டிருக்கும் யூ கே ஜி வாண்டின் காதைத் திருகி கட்டிலுக்குக் கீழே உதைத்துத் தள்ளிய இடத்தில் தான் இருக்கும், போய்ப் பாரு, அதற்கென்ன காலா முளைத்திருக்கு, வேறெங்கேயும் ஓட என்று கேட்பார்கள் அம்மா. அதற்குக் காரணம் பொருள்களின் அருமை அவர்களுக்குத் தெரிந்திருப்பதன் சூட்சுமம் தான். உன்னிப்பான கவனிப்பு தான் உள் மனத்தில் பதிந்திருக்கும். இதம் பதமாக வருடிக் கேட்டால் எடுத்துக் கொடுக்கும். பதறிக் கொண்டே தேடினால் தாவு வாங்கி விடும்.

    பள்ளி நாட்களில் ஆண்டு தவறாமல் இசைப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கிய பெண் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி மணம் முடித்தபின் சுவடே தெரியாமல் தொலைத்திருக்கும் தங்கள் இசையை எந்த மிஸ்ட் கால் போட்டுக் கண்டெடுக்க? கவிஞர் நா முத்துக்குமாரின் தூர் என்ற அற்புதமான கவிதையில் (கணையாழி, 1995) கிணற்றில் தூர் எடுத்துக் கொண்டிருக்கும்போது கிடைக்கும் பொருள்களின் பட்டியலில் வேலைக்காரி திருடியதாக சந்தேகப்பட்ட வெள்ளி தம்ளர் என்று ஒரு அதிர்ச்சி வரி வைத்திருப்பார். அவளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அவள் மீது கட்டப்பட்ட திருட்டுப்பட்டத்தை எந்த சூத்திரத்தாலும் திரும்பப் பெறவே முடியாது. அந்தக் கவிதையின் கடைசி வரி, இதையும் விட பேரதிர்ச்சி கொடுத்து

    இன்றுவரை அம்மா
    கதவுகளின் பின்னிருந்துதான்
    அப்பாவோடு பேசுகிறாள்
    கடைசிவரை அப்பாவும்
    மறந்தே போனார்
    மனசுக்குள் தூரெடுக்க

    என்று முடியும்.

    மவுனத்திற்கு என்ன மிஸ்ட் கால்? பேசப்படாத செய்திகளுக்கு எந்த மிஸ்ட் காலும் இல்லையே. அப்படியானால் எத்தனை எத்தனையோ ஒருதலை காதல்கள் வாழ்வில் தொலைத்தவற்றை இலக்கியங்களில் போய் ஒளிந்து கொண்டு வாழ வைத்துக் கொண்டிருக்குமா? அவசரப்பட்டு இழக்கும் நட்புறவுகள், கணவன்-மனைவி உறவில் விரிசல்கள், தந்தைக்கும் மகனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் இடையில் விரிவடைந்து போய்க் கொண்டிருக்கும் இடைவெளிகள் இவை எவற்றின் இடையேயும் மிஸ்ட் கால் ஏற்பாடு இருந்தால் எத்தனை கோடி புன்னகைகளைப் பூக்க வைத்து சமாதானக் கொடியைக் காற்றில் பறக்க விட முடியும்?

    ஆனால் யோசித்துப் பார்க்கையில் மனிதகுலத்தின் அரிய தவமாகக் கிடைத்திருக்கும் நேயம் தான் மிஸ்ட் கால் என்று தோன்றுகிறது. அன்பின் வழியே உருகி உருகிப் பாயும் தன்னலமற்ற பேராற்றுப் பூம்புனலில் எல்லா அழுக்குகளையும் கழுவி மனத்தைச் சீராக்கித் துடைத்து பளபளப்பாக்கி அறவே அறாத சங்கிலித் தொடராக மக்களை இணைத்துவிட முடியும் என்றுதான் படுகிறது.

    அன்பு என்பது நீர் மட்டுமல்ல, நெருப்பும் தான் என்றும் இன்னொரு பார்வையில் படுகிறது. மார்கழி மாதத்தில் இசைக்கப் படும் ஆண்டாளின் அற்புத திருப்பாவைப் பாசுரங்களில் ஐந்தாவதாக வரும் “மாயனை மன்னு” என்று தொடங்கும் அழகுக் கவிதையில், நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு என்று நிறைவாக வரும் இடத்தில் மாசுகளைச் சுடும் நெருப்பு தேவைப்படுவதும் உணர்த்தப்படுகிறது. கரைக்கவோ, சுட்டெரிக்கவோ அன்பு தான் நம்மைச் சூழ வேண்டியிருப்பது.

    மூப்பின் களைப்பில் மூளையின் இயக்கங்களின் தளர்வில் தவறவிடும் நினைவோட்டங்களோடு போராடிக் கொண்டே அடுத்தடுத்த தலைமுறைகளின் அவமதிப்பையும், வசைமொழிகளையும், நிராகரிப்பையும் வேளை தவறாது புசித்துக் கொண்டிருக்கும் வயதான மூதாட்டிகளோ, பெரியவர்களோ ஏதோ தாங்களாக முணுமுணுத்துக் கொண்டிருப்பது ஒரு வேளை ஏக்கத்தின் பெருமூச்சில் எழும் மிஸ்ட் கால்களாக இருக்கக் கூடும். வண்ணதாசனின் ஓர் அற்புதமான சிறுகதையில் வரும் தாத்தா ஒருவரின் பேச்சு மொழி வீட்டில் இருக்கும் யாருக்கும் அர்த்தமாவதில்லை. அவரை யாரும் லட்சியம் செய்வதுமில்லை. ஆனால் வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு நுழையும் நாவிதர், ஒரு நாற்காலியில் அவரை உட்கார வைத்து முகத்தில் சோப்பு நுரையைக் குழைத்துப் பூசிக் கொண்டே கத்தியைத் தீட்டிக் கொண்டு தமது வேலைக்குத் தயாராகும் ஒரு கணத்தில் தாத்தா அந்த சவரத் தொழிலாளியோடு சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தார் என்று கதை முடியும், தாத்தாவின் மிஸ்ட் கால் அந்த எளிய மனிதரின் காதில் இலகுவாகப் போய் விழுகிறது.

    பிரச்சனை மிஸ்ட் கால் ஏற்பாடு இல்லாதது அல்ல, எத்தனையோ உன்னத விஷயங்கள் என்னைப் பார், பார் என்று குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவை மனிதர்களுக்கு சித்திக்காமல் போவதற்கு ஒரு காரணம் உண்டு. தாராளமய உலகில், தன்னலத்தின் கொடூர வேடத்தில் தங்களைப் பொருத்திக் கொண்டு எல்லாவற்றையும் வென்றெடுப்பதான வெறியில் தம்மையும் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு காதுகள் அற்றுப் போய்க் கொண்டிருப்பதுதான் அது.

    *********

    நன்றி : வண்ணக்கதிர்

    Share
  • நீயும், நானும், விஞ்ஞானமும் -2

    இன்னம்பூரான்

    (‘… ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை…’)…

    ‘வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்.அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம். சிங்களத் தீவினிக்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம். வங்கத்திலே ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருட்களும் குடைந்தெடுப்போம்’

    என்ற மஹாகவியின் சொப்பனங்களுடன் தொடர்புடைய விஞ்ஞான சாதனைகளை இன்று காண்கிறோம். ஆலய நிர்மாணத்துக்கான பொறியியல் சூத்திரங்கள் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் உதயம். அதையும் சுட்டி நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை இராமானுஜம் மையம் வெளியிட்டது தான் இத்தொடருக்கு ஊக்கம் அளித்த நிகழ்வு. கணக்கு சாத்திரம் கிருஷ்ண பகவான் மாதிரி. எல்லா துறைகளும் அதற்கு கோபிகைகள். அது ஒருபுறமிருக்க, மற்றொரு சிந்தனை.

    மாயை (mysticism) மயக்கியது ஆதிமனிதனை; நம்மையும் தான். அதனுடைய ஈர்ப்பு/ஆகர்ஷணம் ஆழமானது. சிந்தனையின் முதல் பரிமாணம்,‘அதுவோ அல்ல இதுவோ?’ (speculation) என்ற அலைச்சல். விஞ்ஞானத்தின் முதல் படி,‘சோதனை/பரிசோதனை (experimentation). அதனுடைய குறிக்கோள், நிரூபணம் (validation). என்னுடைய இந்த குறும்சிந்தனையை பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு, தேடுபொறிகளில் ‘விஞ்ஞானம்/அறிவியல்’ என்ற சொற்களுக்குப் பதிவுகள் தேடினேன். பல்லாயிரம் கிடைத்தாலும், பெரும்பாலும் திசை மாறியவை. விஞ்ஞான அணுகுமுறையை (scientific temper) அறவே தவிர்த்தவை. ஆம். திருமதி சுபாஷிணி ட்ரம்மெல் கூறியது போல் தமிழில் விஞ்ஞானத்தை பற்றிய விரிவுரைகள் சொற்பம். அவற்றில் விஞ்ஞான அணுகுமுறையை பற்றி ஒன்று கூட தென்படாததால், அதை பற்றிய ஒரு பழங்கதையை கூற துணிவு பூண்டேன்.

    ஐம்பது வருடங்கள் முன்னால், நான் அடிக்கடி செல்லும் சைண்ட் லூயிஸ் நகரத்திற்கு ஆஷ்பி பிரபு (Lord Ashby FRS: Vice Chancellor of Belfast and Cambridge Universities) வந்திருந்தார். அங்குள்ள புகழ்வாய்ந்த வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தில் ( அதன் ஜன்ம சரித்திரம் ஒரு நன்முத்து.) பெளதிக பேராசிரியர் ஆர்தர் க்ராம்டன் (1927 நோபெல்: electromagnetic radiation) அவர்களின் பாமரகீர்த்தி பாட. அடக்கம், பொறுமை, தன்னிச்சை விலக்கல், திறந்த மனம், விஞ்ஞானத்தின் தார்மீகத்தின் மீது அசையா உறுதி, சாதி மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு இயங்குவது ஆகியவை தான் பேராசிரியர் ஆர்தர் க்ராம்டனின் வாழ்நெறி; அது தான் விஞ்ஞான அணுகுமுறையின் அடித்தளம் என்று அவரை பாராட்டி பேசினார். அந்த பிரசங்கத்தை இருபது வருடங்களுக்கு பிறகு நினைவு கூர்ந்த பேராசிரியர் மைக்கேலிஸ் (Anthony R. Michaelis) மேற்கூறிய வாழ்நெறியின் மற்றொரு உறைவிடம் ஆஷ்பி பிரபு என்று எழுதி, அவருடைய ‘தன்னுடைய அதிகாரம், ஆளுமை, தலைமை ஆகியவற்றை திணிக்காமல், மற்றவர்களை தன்வசம் படுத்தும் திறன்’ பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தூண் என்றார்.

    ஆம். இன்று விஞ்ஞானம், புலமை, ஆய்வு, கல்வி ஆகிய துறைகளிலும் நிர்வாகம் ( தமிழ்த்தாத்தா வாக்கின் படி ‘கார்வார்’) இன்றியமையாதது. ஆஷ்பி பிரபு தன்னுடைய அபார அனுபவத்தின் பயனாக, சொல்வதை கேட்போம். ஆர்வமிருந்தால் மீண்டும் சந்திப்போம்.

    ‘தற்காலம் பல்கலைகழகங்கள் கோடிக்கணக்காக வரவு செலவு செய்கின்றன. நல்ல நிர்வாகமிருந்தால் தான் அவற்றின் பயன் சமுதாயத்திற்கு கிட்டும். அரசு/தனியார் துறை/ராணுவம் போல் அல்லாமல், இங்கு கொள்கை தீர்மானங்களின் பிறப்பு, விஞ்ஞான பரிசோதனை பலகைகளில், நூலகத்தில், விருந்துண்ணும் வேளைகளில்…‘

    ~ஆஷ்பி பிரபு

    அவற்றுடன் கவனம் ( ஆப்பிள் விழுந்த கதை), கனவு (மரபணு சூத்திரத்தின் சித்திரம்), மாயை (புஷ்பக விமானம்), இதரவிதரம் (மின்விளக்கு) ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    சித்திரத்துக்கு நன்றி:http://www.tribuneindia.com/2004/specials/lead4.jpg

     

    உசாத்துணை: http://garfield.library.upenn.edu/michaelis/title328.pdf

    Share
  • பாரதியின் வேத முகம் – 13

     

    -சு.கோதண்டராமன்

     

    கவிவாணர்க்கு நல்லமுது

    அரவிந்த கோஷ் சொல்கிறார், “அக்னியைப் பற்றிய வேத மந்திரங்களில் கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கிறது. பாட்டின் பொருளாகிய அக்னி தேவனின் தழலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”

    அரவிந்தரின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டி விட்டு பாரதி பேசுகிறார், ஆம். உயர்ந்த கவிதையின் நெறி அது. கவியின் இஷ்டதேவதையின் காந்தி அவனுடைய உள்ளத்தில் வீசும். அந்த ஒளி பாட்டிலே தெரியும்.

    இந்த முன்னுரையுடன் பாரதி வேத மந்திரங்களில் அக்னியின் புகழ் கூறுவனவற்றை மொழி பெயர்த்துத் தருகிறார். அவரது மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. அடைப்புக்குள் உள்ள விளக்கமும் பாரதியினுடையதே.

    அக்னிமீளே என்று தொடங்கும் ரிக் வேதம் முதல் மண்டலம் முதல் சூக்தம்.

    1 தீ வேள்வியின் முன் நிற்பவன். அதன் பருவங்களை வகுக்கும் தேவன். அங்கு வானவரை அழைப்பவன். செல்வங்களை மிகுதியுறக் காட்டுவோன். அவனை வேண்டுகிறேன். (அமிர்தத்தின் பிறப்பிடமாகிய சூர்யன் என்ற ஒளியில் நான் என்னையே ஹோமம் செய்து கொள்கிறேன் என்று வேத ரிஷிகள் கூறினர். இன்றைக்கும் காலையில் ஒவ்வொரு வேதியனும் சூர்யச்ச மாமன்யுச்ச என்ற இந்த மந்திரத்தைச் சொல்கிறான். இவ்விதமான வேள்வி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தீயின் துணை வேண்டும். தீயை எழும்படி செய்தால் போதும். பிறகு இந்த வாழ்க்கை வேள்வியின் பொறுப்பு. அவனே வேள்வியை அதன் பருவங்களுக்குத் தக்கவாறு மேலே ஏற்றிக் கொண்டு போகிறான். எல்லா விதமான தெய்வ சக்திகளையும் அங்கு அழைத்து வருகிறான்.)

    2 தீயை முன்னைப் புலவர் போற்றினர். புதியோரும் அவனையே போற்றுக. அவன் இங்கு அமரரைக் கொண்டு தருக.

    3 நாளுக்கு நாள் வளரும் செல்வமும் வீரமிக்க புகழும் தீயாலே பெறுக. (தீக் கடவுள் எல்லா மனிதரிடத்தும் உள்ளத் திண்மையாக நிற்கிறான். அவனை வளர்த்தால் எண்ணிய பொருள் எதுவும் எவ்வுலகத்திலும் கை கூடும்.)

    4 தீயே, நெறியில் ஓங்கும் வேள்வியதனை நீ எப்புறத்தும் சூழ்ந்து காக்கிறாய். அஃதே வானவரிடம் சேரும்வழி. (மனித நிலையிலிருந்து அமர நிலை நோக்கிச் செல்லும் வழி தான் வேள்வி போகும் வழி.)

    5 தீ வானவரை அழைப்போன். புலமையுள்ள செய்கைத் திறமை ஆவோன். ஞானக் கேள்வி தருவதில் சிறந்தோன். அவ்வானவன் வானவருடன் வருக.

    6 அன்ப, வேள்வி தருவோனுக்கு நீ சீர் தருவாய். அதுதான் தீயே உனது உண்மை.

    7 தீயே, நின்பால் நாள் தோறும் இரவும் பகலும் நாம் பணிவு ஏந்தி வருகிறோம். (அகங்காரத்தை விட்டு முழுவதும் பணிவு கொள்வதே தேவரை அழைக்கும் வழி)

    8 நெறியில் ஓங்கும் வேள்விகளின் அரசே, நேர்மை காப்பாய். சுடர் வீசுவாய். எனது மனையிலே வளர்வாய். தீயே நின்னை அடைகிறோம். (சொல்லிலும் நடையிலும் உள்ளத்திலும் முழு நேர்மை காணும்போது அங்கே அக்னி சக்தி பிறந்திருப்பதாக அறிந்து கொள்ளலாம்.)

    9 அருகே போவதற்கு எளியனாய் மகனுக்குத் தந்தை போல் நீ எமக்கு ஆகுக. நல்வாழ்வு பெறும்படி எம்மைச் சார்ந்திடுக.

    இந்த வேதக் கருத்துகளை உள்ளடக்கி எளிய தமிழில் பாரதி பாடிய பாடலின் ஒரு பகுதியைக் கீழே காண்போம்.

    நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்

    நீக்கிக் கொடுப்பவனை – உயிர்

    நீளத் தருபவனை – ஒளிர்

    நேர்மைப் பெருங் கனலை – நித்தம்

    அஞ்சேல் அஞ்சேல் என்று கூறி – எமக்கு நல்

    ஆண்மை சமைப்பவனைப் – பல் வெற்றிகள்

    ஆக்கிக் கொடுப்பவனைப் – பெருந் திரள்

    ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.

    வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று

    மண்டி எழும் தழலைக் – கவி

    வாணர்க்கு நல் அமுதைத் – தொழில்

    வண்ணம் தெரிந்தவனை – நல்ல

    தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்

    தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு

    தேக்கிக் களிப்பவனைப் பெருந் திரள்

    ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.

     

     

    Share
  • ஒரு கண்ணு வெச்சுக்கணும்

    நடராஜன் கல்பட்டு

    “இதெப் பாருங்கோ.  இருபத்து நாலு மணி நேரமும் அந்தக் கம்ப்யூடரெக் கட்டிண்டு அழாதீங்கோ.”

     

    “கம்ப்யூடரெக் கட்டிண்டு எங்கேடீ அழறேன் நான்?  ஒன்னெக் கட்.”

     

    “கட் கட்.  என்ன சொல்ல வந்தேள்?  என்னெக் கட்டிண்டூ….. அழறேளா?  இந்த நிமிஷத்துலேந்து காப்பி, டிபன், சாப்பாடு கட்.  எம் பாட்டெ நான் பாத்துக்கறேன்.  ஒங்க பாட்டெ நீங்க பாத்துக் கோங்கோ.”

     

    “அய்யையோ நான் அப்பிடி சொல்ல வரலேடீ.  இன்னிக்கி ஒத்தர் சனி தசையோட தாக்கம் இப்போ கன்னி ராசிக்காராளுக்கு இருக்குன்னு எழுதி இருந்தார்.  ஒருக்கால் அந்த சனிதான் என் நாக்குலே வந்து ஒக்காந்து இருக்கணும்.  அதுனாலெ தான் என்னெ அறியாமெ அந்த வார்த்தெ என் வாய்லெ வந்துடுத்துடீ.  நான் இப்போ என்ன பண்ணணுங்கறே?  அதெத் தெளிவா சொல்லு.  நான் பண்ணறேனா இல்லியா பாரு.”

     

    “எனக்கு ஒத்தாசைக்கு புதுசா ஒரு பொண்ணெ வேலைக்கு வெச்சிருக்கேன்.  நம்பிக்கெ வரமுட்டும் நீங்க அவ மேலெ ஒரு கண்ணு வெச்சுக்கோங்கோ.”

     

    “ஒரு கண்ணு வெச்சுக்கணும்னா?”

     

    “ஒரு கண்ணு வெச்சுக்கணும்னா, அவொ வீட்டெப் பெறுக்கித் தொடைக்க ஒவ்வொரு உள்ளெயும் போற போது அவொ பின்னாடி எதோ சாமான் எடுக்கப் போறாப்புளெ போங்கோ.  ஸ்டீல் அலமாரிலே என் சங்கிலி, வளெ எல்லாம் வெச்சிருக்கேன்.  அதோட சாவியெ எத்தெனெ தடவெ சொன்னாலும் அது மேலெயே வெச்சூடறேள் நீங்க.  எப்பொவும் ஒங்க சட்டெலெயே காசெ வெச்சு அப்பிடியே தொறெந்த அலமாரிலே தொங்க விடறேள்.  காலம் கெட்டுக் கெடெக்க்குன்னா.  நம்ம சாமானெ நாம தான்னா ஜாக்கிறதையாப் பாத்துக்கணும்.”

    “கரெக்டுடீ.  அப்பிடியே பண்ணறேன் நாளேலேந்து.  இப்பொ நான் ஒக்காரலாமோல்யோ கம்ப்யூடர்லே?”

    “என்னமாவது பண்ணுங்கோ.”

    நான்கு நாட்களுக்குப் பின்:

    “அம்மா அய்யா மேலெ ஒரு கண்ணு வெச்சுக்கோம்மா.”

    “என்னடீ சொல்லறே?”

    “நான் எந்த அறைக்குள்ளெ போனாலும் எம் பின்னாடியே வறாரு அய்யா.  அது மட்டும் இல்லேம்மா.  அப்பொப்போ அலமாரிலேந்து ஏதோ எடுக்கறாப்புளெ எம் பின்னாடி வந்து குனியுறாரு.  அப்பொ அவரு கையி எம்மேல படுதோன்னும் தோணுதும்மா.”

    “சீச்சீ அதெல்லாம் ஒண்ணும் இருக்காதுடீ.  அவரு எதுனா அலமாரிலேந்து எடுக்க வந்திருப்பாரு.  நீ போயி அதெத் தப்பாப் புரிஞ்சிண்டு இருக்கேடீ.”

    “அம்மா நீ ரொம்பவே வெள்ளந்தியா இருக்கேம்மா.  இப்பிடி இருந்தா பக்கத்து தெரு பங்கஜமாட்டம் ஒம் புருசனெ ஒரு நாளு கோட்டெ உட்டூடுவேம்மா.  பங்கஜத்தோட புருசன் அவுங்க ஊட்டுக்கு வந்த வேலெக்காரியோட ஓடிப் போயிட்டாரு தெரியுமில்லே?”

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 12

    குன்றக்குடி அடிகள்

    12. மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை

    மனிதன் விரிந்த பரந்த உலகத்தோடு பழகும்பொழுது விரிவு அடைகிறான். சுருங்குவன எல்லாம் அழியும். விரிவன எல்லாம் வளரும். சுருங்குவன எல்லாம் ஆவது போல் காட்டி அழியும். விரிவன எல்லாம் அழிவது போல் காட்டி சால ஆக்கம் தரும்.

    மனிதன் மானுடத்தின் பரப்பெல்லை முழுதும் உறவு கொண்டு பழகுதல் நல்லது; விரும்பத்தக்கது. இத்தகு விரிந்த பரந்த உறவுக்கு – நட்பாடலுக்கு நாட்டெல்லைகள், அரசியல் எல்லைகள் தடையாக இருத்தல் கூடாது. மொழிகளும், சமய நெறிகளும் துணையாகவே அமைவன; மொழியின் பெயரால், சமய நெறிகளின் பெயரால், மனிதன் சுருங்குவது அறம் அல்ல. அதுமட்டுமல்ல, மொழியின் குறிக்கோளுக்கும் மாறுபட்டது; சமய நெறிகளின் நோக்கத்திற்கும் முரண்பட்டது.

    இத்தகு விரிந்த பரந்த உலகத் தொடர்பை, கொள்வதற்கு விஞ்ஞான வளர்ச்சி மூலம் மனிதன் ஆர்வத்துடன் முயன்றிருக்கிறான். தொன்மைக் காலத்தில் யாத்திரை என்ற பெயரில் இந்த முயற்சி அமைந்திருந்தது. ஏசுவின் யாத்திரை, முகம்மது நபியவர்களின் யாத்திரை, ஆழ்வார்கள், நாயன்மார்களின் யாத்திரை, காந்தியடிகளின் யாத்திரை ஆகியன எடுத்துக்காட்டுகள். மிகப் பழங்காலத்தில் நாடு விட்டு நாடு யாத்திரை – பயணம் சென்றால் உணவு முதலியன கிடைப்பதற்கு வழியில்லை. திருக்கோயில் நாகரிகம் தலையெடுத்த பிறகு இப்படிப் பயணத்தில் வருவோருக்கு உணவளிக்கும் பொறுப்பை திருக்கோயில்கள் ஏற்றுக்கொண்டன.

    இப்பொழுது எங்கும் உணவுச் சாலைகள் வணிகத்தொழில் அடிப்படையில் அமைந்துவிட்டன. ஆனால் விழுமிய பயனைத் தரவில்லை. மிகப்பழைய காலத்தில் வீடுகளில்தான், இத்தகு பயணிகளுக்கு உணவு வழங்கப் பெற்றது. வீடுகளில் உணவு வழங்கப் பெறுதலே சிறப்பு. இங்ஙனம் இல்லத்திற்கு வருபவர்கள் ‘விருந்தினர்’ என்றழைக்கப் பெற்றனர்.

    இன்றோ உறவினர்களும் சுற்றத்தினரும் விருந்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது முறையன்று. முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத அயலாரே விருந்தினர் எனப்படுவர். இவர்கள் இல்லங்களில் வந்து தங்கிப் போவதினாலே மொழி – கலை வழிபட்ட உறவுகளும் வளரும். தொழில், பொருள் வழிபட்ட உறவுகளும்கூட வளரும். இத்தகு பயணங்களைத்தான் இன்றைய அரசு, சுற்றுலாத்துறை என்று ஒரு துறை அமைத்து வளர்த்து வருகிறது. இத்துறை பல நாடுகளுக்கு அதிகப் பொருள் ஈட்டத்தையும் தருகிறது.

    மனையறம் பேசும் திருவள்ளுவர் விருந்தோம்பல் என்ற நெறியையும் எடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பல் அதிகாரம் முழுமையும் படித்தால் விருந்தோம்பலினும் சிறந்த அறம் இல்லை என்று தெரிய வரும். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் இல்லங்களில் நாள்தோறும் விருந்தினர் வந்த வண்ணம் இருந்தனர் என்று தெரிய வருகிறது. இந்த விருந்தோம்பும் பண்பைத் தமிழர்கள் பேரறமாகப் போற்றி வளர்த்ததினாலேயே தமிழ்ப் பண்பு உலகந் தழீஇய பண்பாக வளர்ந்து வந்துள்ளது. “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற உயர் நெறி முகிழ்ப்பதற்கு விருந்தோம்பும் பண்பே காரணமாக அமைந்திருக்கும் என்று கருதவேண்டியிருக்கிறது.

    விருந்தோம்பல் பண்பு சிறந்து விளங்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் பொருள் புழக்கம் அதிகமாவதற்குரிய வாயில்கள் மிகுதி. ஒருநாடு விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பர்; முதலீடு செய்வர்.

    அதுபோல ஒரு வீட்டினர் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த வீட்டினருடைய வளர்ச்சியில் விருந்தினர் பங்கேற்பர். ஒரு குடும்பத்தினர் விருந்தோம்பலில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் வயலில் விதை பாவவில்லை. விதியில்லை அல்லது காலம் கிடைக்கவில்லை. வந்த விருந்தினர்கள் வாளாவிருக்க மாட்டார்கள். விருந்தினர்களும், அந்தக் குடும்பச் செல்வத்தின் பயனை நுகர்ந்தவர்களும் வாளாவிருக்க மாட்டார்கள். தாமே வலியச்சென்று அக்குடும்பத்தினரின் வயலில் விதையை விதைப்பார்கள். இஃது அறஞ்சார்ந்த வாழ்வியல் முறை. இதனைத் திருக்குறள்

    “வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்”

    என்று கூறும், ஆதலால் எல்லைகளைக் கடந்து பழகுக. நட்பினைக் கொள்க; உறவாகுக; உவந்து உண்பித்துப் பழகுக. இதுவே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share