பி.தமிழ் முகில் நீலமேகம்
மாற்றம் ஒன்றிற்கு வித்திட்டு
உருவான திர்மானத்தில்
வேள்வித்தீ என
மக்கள் உள்ளங்களில்
கோலோச்சும் சிந்தனைகள்
எழுதுகோல் துணைகொண்டு
உருவாக்கப்பட்டவை அன்றோ ???
பி.தமிழ் முகில் நீலமேகம்
இன்னம்பூரான்
“எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்
சொன்முறை தொடுப்பது நன்மையாகும்.” (தண்டியலங்காரம்: 2)
தண்டியலங்காரத்தின் முதன்மை ஸ்தானம் தன்மையணிக்கே. உள்ளது உள்ளபடி. அவ்வாறு அமைந்துள்ள திருமதி. விசாலம் ராமனின் மூன்று தொடர்கட்டுரைகளை படித்த போது பல எண்ணங்கள் மனதில் வந்து போயின. எங்கள் புதுக்கோட்டை சமஸ்தானம், விராலிமலையும், சித்தன்ன வாசலும், குடுமியான் மலையும், ஆதிரங்கன் கோயிலும், திருகோகர்ணமும், பேரையூரும் ஆக ஒரு சிற்ப சாம்ராஜ்யமே. பேரையூரில் ஒரு பெரிய ஜலதரங்கம், நாகநாதசுவாமி கோயில் புஷ்கரணி. தவழும் வாயு தேவன் அபூர்வமாக அங்கு இசைப்பதுண்டு. அது ஒரு நினைவு. வல்லமை இதழின் வாசகர்களை பற்றி யான் அறியேன். கபிலரும், பரணரும் வந்து எழுதினால் கூட, படித்ததைக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். அத்தனை பரவசம், மவுனத்தின் மீது! அந்த மரபை மீறத் துணியாதே என்று மனம் அடித்துக்கொண்டது. (மனத்தின் ஈசான்ய மூலை,‘இதைப் படித்தாலும் சொல்லமாட்டார்கள்.’ என்று சவால் விட்டது.) இது நிற்க.
திருமதி. விசாலம் ராமனின் கோர்வையான கட்டுரைத் தொடர், அரிய செய்திகளின் தொகுப்பாகவும் அமைந்துள்ளது. அவர் சொல்வது போல இசை பாடும் சிற்பங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றன என்பதை நாம் கண்டறிய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு குதிரை சிற்பம் சிதைந்து கிடப்பதாக, படித்ததும் நினைவில் வந்தது. ‘…அங்கிருக்கும் தெய்வத்தைக் குஷிப்படுத்த தகுந்த சமயத்தில் இசை, நடனம், நாடகம் என்ற கலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன…’ என்று அவர் சொல்வதை மனதார ஆமோதிக்கிறேன். முதலிடம் இசைக்கு. ‘ஓம்’ என்று ஒலித்தது உடுக்கு. அந்த ஓசையை அசைத்து இசையாக்கியது மனிதனின் ரசனை. அது இறைவனின் வரம். பாறைக்கும் நாபி உண்டு; ஆத்மா உண்டு; இறையருள் உண்டு. டில்லிவாசியாக இருந்த விசாலத்துக்குத் தெரிந்து இருக்கும், உத்தர சுவாமி மலை மூலவர் சிற்பத்திற்கு உரிய கல்லை தேட காஞ்சி பெரியவர் அளித்த ஆலோசனை பற்றி. விசாலத்தின் கட்டுரையின் நேர்த்தியே, அவர் கூறும் செய்திக்களஞ்சியம். வட இந்தியகோயில்களில் நாமே அபிஷேகம் செய்யலாம் என்பதிலிருந்து ஆகம சாத்திரங்கள் வரை.
ஒரு கற்பனை: வெள்ளைத்தாமரையில் அமர்ந்தவள் கையில் மாசிலா வீணை: சங்கராபரணம். மூங்கில் குழலோதும் மாயக்கூத்தன்: கதனகுதூகலம். உடுக்கொலி: தேவகாந்தாரம். மத்தளத்தில்லானா. பரமாத்வாவும் ஜீவாத்மாவும் சுயநினைவிழந்த ராகமாலிகை நேரம் இது. அற்ப மாந்தர்களாகிய நாம் தள்ளி நிற்கவேண்டும். திருமதி விசாலம் ஓவியங்களை பற்றி மிக குறைவாக எழுதியிருக்கிறார். அவர் நிறைய எழுதவேண்டும், அது பற்றி. அக்காலத்தில் சுவரோவியங்கள் வீடுகளிலும் உண்டு. புதுக்கோட்டையில் நாங்கள் இருந்த வீட்டில் ஒரு மாபெரும் ஶ்ரீராமபட்டாபிஷேக வர்ண ஓவியம். என்ன ஆச்சோ? தஞ்சை பெரியகோவிலில் அம்பாள் சன்னதி விமானத்தில் இருக்கு அதியற்புத ஓவியங்கள் மீது புகை மண்டலம். இதுவா பக்தி?
‘ஸ்வரித்தா, உதத்தா, அனுதத்தா’ எல்லாம் நமக்கு புதிய செய்திகள். நன்றி, விசாலம்.
‘… வேதங்கள் எல்லாமே ஒரு நியதியுடன் ஸ்வரஸ்தானங்கள் பிசகாமல் சொல்ல வேண்டும். அதனால் எழும்பும் ஒவ்வொரு ஒலிக்கும் மந்திர சக்தி உண்டு. அவை காற்றுடன் கலந்து நல்ல அதிர்வலைகளை உண்டு செய்யும்…’ என்கிறார், அவர். அதனால் பேரையூர் ஜலதரங்கம் நினைவுக்கு வந்தது. தமிழ் செய்யுள் இலக்கணத்தில் கலிப்பாவின் துணை உறுப்புகளில் ‘அம்போதரங்கம்’ ஒன்று. நாற்சீரடி இரண்டு அடியால் இரண்டு, நாற்சீரடி ஓரடியால் நான்கு, முச்சீர் ஓரடியால் எட்டு, இரு சீர் ஓரடியாக பதினாறு என்று சொல்லும்போதே, அலை அலையாக என்ற எண்னம் உமக்கு எழுகிறதல்லவா! அந்த நீர்த்தரங்கம் (கடல் அலை) எம்மனதை விட்டு அகலவில்லையே.
பஜனை: பாபநாசம் சிவன் அவர்களின் விடியற்காலை பஜனையைப் பற்றி என்றோ ஒரு நாள் எழுதினேன். அதை சமீபத்தில் தான் என வலைப்பூவில் பதிவு செய்தேன். ரஷ்யா, ஈரான், பெரு ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் வாசகர்கள். விசாலத்தின் இந்தத் தொடரும் அவ்வாறு விரவி வரவேண்டும். எனக்குப் பிடித்த பஜனை புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர் பந்ததி.
நாதசுரம் என்றவுடன் ஞாபகம் வருவது: புதுக்கோட்டை கீழராஜவீதி, வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நடு ராத்திரி ஒரு மணிக்கு வெள்ளப்பெருக்கு எடுத்தோடிய டி.என்.ராஜரத்னம் பிள்ளையவர்கள் வாசிப்பும், ஐம்பது வருடங்கள் கடந்து பாகவதமேளாவுக்காக, நிலவொளி வெள்ளத்தில் நடந்து போகும் போது, காற்றில் வந்த கீதம்: கம்பீர நாட்டை. ‘ஆன்மீக நற்றலை’ விசாலம் சொல்லில்.
மணியோசை மண்டைக்கு லாஹிரி. மாதாகோயில்களில் மாபெரும் மணி. ஒவ்வொரு மணிக்கும் தனியொரு நாதம். பக்கம் பக்கமாக வரலாறு, இங்கிலாந்தில். அவற்றை தொகுத்து வைத்த சீ.டி. அகப்படவில்லை. போகட்டும். விசாலம் தான் பக்க வாத்தியங்களின் வரலாறு படைத்து விட்டாரே.
இசை பாடும் தூண்களைப் பற்றி அவர் எழுதிய மூன்றாவது கட்டுரையின் நிறைவை மெச்சத்தான் வேண்டும். அவர் பெருமையுடன் கூறுவது சாலத்தகும்.
‘…இசை கடவுளிடம் செல்ல ஒரு பாலமாக அமைகிறது. பழங்குடி மக்கள் தங்கள் திருவிழாவில் பலவிதமான வாத்தியங்களை உபயோகித்து வந்திருக்கின்றனர். ஆன்மீக வழிபாட்டின் போது தாரை தப்பட்டை ,மேளம் என உபயோகித்து இயற்கையைப் பூசித்திருக்கின்றனர் தேவாலயங்களிலும் பியானோ வாசிக்கப்பட்டு கரோல் என்ற இசை பாடப்படுகிறது. ஆன்மாவை உயர்ந்த நிலைக்கு அழைத்துப்போகும் சக்தி இசைக்கு உண்டு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட உண்மை…’
என்கிறார் திருமதி.விசாலம். ஒவ்வொரு சொல்லும் இறையாண்மையின் பிரதிபலிப்பு. பல புது தகவல்களை இவருக்கு கொடுத்து உதவிய,இசை மேதையும் சங்கீத வித்துவானும் ஆன அவரது சகோதரர் திரு வெங்கட் அவர்களுக்கும் வல்லமை வாசகர்கள் சார்பில் (!) நன்றி தெரிவிக்கும்,
இன்னம்பூரான்
11 06 2013
சித்திரத்துக்கு நன்றி: http://upload.
http://innamburan.blogspot.co.
வெ.திவாகர்
வேலைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு பெண்மணி தான் புகுந்த இல்லத்துக்காக உழைக்கிறாள் என்று சொல்லவே கூடாது. மனைவி வேலைக்குச் செல்வதால் குடும்பம் பொருளாதார சிக்கல் இல்லாமல் சுகமான வசதிகளைப் பெருக்க உதவுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாமோ என்னவோ.. ஏனெனில் மனைவி என்பவள் சதா உழைத்துக்கொண்டேதான் இருக்கிறாள். கணவனின் சகல பொறுப்புகளையும் தானே சுமந்து குடும்பத்தின் மேன்மைக்குக் காரணமாகிறாள்.
சமீப காலங்களில்தான் இந்தக் குடும்பப் பெண்களின் வேலைப் பளுவைப் பலர் உணர்ந்து வருகிறார்களோ என்ற சம்சயம் எனக்கு உண்டு. வேலைக்குச் செல்லாமல் குடும்ப பாரத்தைச் சுமந்து அதைப் பொறுப்பாகக் கொண்டு போகும் பெண்களை ஹவுஸ் வைஃப் அல்லது ஹோம் மேக்கர் என்ற நயமான பதத்தால் பலர் விளிக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.. காரணம் பொறுப்பான முறையில் குடும்ப பாரம் சுமப்பது என்பது நிச்சயமாகக் கடினமானது. மாறிவிட்ட இந்த மாயமான நவீன வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் குழந்தைகளைப் பெற்று, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பித்து அவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஏற்படுத்தித் தருவதில் அந்தப் பெண்மணியின் பங்கு மிக மிக அதிகம்.
குடும்பப் பொறுப்பாளர் என்ற பதவியை அடைந்த பின்னர் அந்தப் பெண்ணின் அன்றாட அலுவல்களை நாம் சற்றே அலசினால்தான் தெரியும் அவர்கள் படும் பாடு. சமீபத்தில் திரு. அப்பாதுரை அவர்களின் மூன்றாம் சுழி வலைப் பூவில் நமக்காக, அந்த குடும்பப் பொறுப்பாளரின் பணிகளை சற்றுப் பட்டியலிட்டிருக்கிறார்.
இவர்கள்
அதிகாலையில் எழுந்துவிடுகிறார்கள்.
அவர்களுக்குப் பற்பசை
குளியல் துணிமணி புத்தகப்பை
ஷூ சாப்பாடு கையில் டிபன்..
அவருக்கு காலையுதவி
காப்பி
அலுவல் புறப்பாட்டுச் சேவை
சாப்பாடு கையில் டிபன்..
எல்லோருக்கும் வாசலில் நின்று
சிரித்துச் சிரித்து
முகமனும் விடையும் தருகிறார்கள்.
ஓடியாடி நின்று நடந்து
எல்லோரும் உட்கார்ந்த பின்னரே உட்காருகிறார்கள்.
வீட்டுவேலை வெளிவேலை என்று சுழல்கிறார்கள்
வழியில் காய்கறி
பால்பழம் மளிகை
சட்டைப் பித்தான்
கிழிந்த உடைக்கு ஊசி நூல்
வாங்கி வருகிறார்கள்
மொழி பாட்டு நடனம் ட்யூஷன்
கோவில் மருந்துக்கடை
என்று தினம் போகிறார்கள்.
ஓரங்கட்டிய தூசுபடிந்த வயலினைப் பார்த்தும்
எப்போதேனும் பிடித்தவர் குரல் கேட்டும்
பெருமூச்சு விடுகிறார்கள்.
வாக்கு தவறாமல் நடக்கிறார்கள்
தவறான வாக்கெனினும்.
அடுத்தவர் சோகத்தில் பங்கெடுத்து
‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று
புன்னகைத் துண்டால் கவலை துடைக்கிறார்கள்.
எல்லோரும் திருப்தியானதும்
எல்லாம் அடங்கியதும்
விளக்கணைத்த நள்ளிரவில்
அமைதி கலைக்காத ஓசையுடன்
தங்கள் கவலைகளில் உரக்க அழுகிறார்கள்.
தாரியா தொமித்ரொவிச் எழுதிய ‘sad women’ எனும் கவிதையைப் பதிவாக்கியுள்ள திரு. அப்பாதுரை அந்தக் கடைசி வரிகளில் அவர்களின் உழைப்பு பற்றி கண்ணீர் வரிகளில் கவிதையாய் விவரித்திருக்கிறார். பிறருக்காக, (அவர்கள் தம் கணவர், ,குழந்தைகள் என்றே இருந்தாலும்) உழைக்கும் குடும்பப் பொறுப்பாளர்களுக்கு எமது வந்தனங்கள். உங்கள் உழைப்பு மேலும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்குத் தணியாத ஆசை. கவிதையாய் அழகாகச் சொன்ன திரு. அப்பாதுரை அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு எம் வாழ்த்துகள்.
கடைசி பாரா: சரியாக மூடப் படாத குழாயைப் பார்த்தால், பொது இடமாக இருந்தாலும் நமக்கென்ன என்று போகாமல் சரியாக மூடலாம்.
தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்! – கவிநயா
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
தலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்)
பரிசளிப்பவர்: சுதாமா கோபாலகிருஷ்ணன்
உரை : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி.
நாள் : 15-06-2013, மாலை 5 மணி
இடம் : மத்திய அரிமா சங்கம்,ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர்.
விருது பெறுவோர்:
* அஜயன் பாலா – திரைப்படக்கலைஞர்
( சிறந்த திரைப்பட நூல் ‘உலக சினிமா வரலாறு’)
* சக்தி விருது 2013
ஈழவாணி ( சென்னை), கோவை சரளா (கோவை)
பவள சங்கரி (ஈரோடு), நீலவேணி ராதாகிருஷ்ணன்(அவிநாசி)
அமுதினி ஏ,வி (திருப்பூர்)
* குறும்பட விருது 2013
வினாயக மூர்த்தி, இரா.செல்வி, வியாகுல மேரி,முத்து
தி.சிவகுமார்,ஜி.திருநாவுக்கரசு,நவயுகன் ஏ.ஏ,எஸ்.சுபாஷ்
வருக.. செய்தி: சுபமுகி ( சி.ரவி 9994079600 )
தேமொழி
மாலைகொடு வீரைய்யா!
வண்டி ஒட்டும் வீரைய்யா!
சண்டிதனம் ஏனைய்யா?
ஒண்டிக்கட்டை நானையா -என்னை
கட்டிக் கொண்டு போய்யா!
முருக்கு மீசை மாமனே!
திறுக்கை மீன் நானாவேன்
திருக்கிக் கொண்டு போவானேன்?
செருக்கு வேண்டாம் கோமானே.
கவிஞர் தனுசு அவர்களின் கவிதைக்கு வரைந்த ஓவியம்.
முழுக்கவிதையினையும் படிக்க இங்கு செல்லவும்
வாய்ப்பளித்த கவிஞர் தனுசுவிற்கு நன்றிகள் உரித்தாகுக.
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 11 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9 >>
புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
தாழை மடலவிழ்க்கும் கானற்சோலையில்
கடல் விளையாட்டு கண்டு களித்தபோது
ஊடி நின்ற கோவலன் பிரிந்து சென்றிட
தான் மட்டும் தனியளாய் இல்லம் புகுந்தனள்
கரிய மலர் போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி.
பின் குயிலோன் அறிவித்த செய்தியை விரும்பியவளாய்
வானுயர்ந்த மேல் நிலை மாடத்தின் ஒரு புறமிருந்த
இளவேனில் காலத்துக்குரிய பள்ளியறையில்
மன்மதனை எதிர்கொள்ளச் சென்றனள்.
பெருமையும் சிறப்பும் பொருந்திய அணிகலன்களும்
தென்கடல் முத்தும் பொதிகை மலைச் சந்தனமும்
மன்மதனுக்கு எப்போதும் செலுத்தப்படும் காணிக்கைகள்.
மன்மதன் வீற்றிருக்கும் அரண்மனையாகிய
தனது முலை முற்றத்தில்
அக்குங்குமக் கோலமிடப்பட்ட பரப்பினில்
குற்றமற்ற சிறப்புடைய பொருட்களைக்
காணிக்கையெனச் செலுத்தினள்.
ஒன்பது வகைப்பட்ட நிலையினுள் முதன்மையான
பத்மாசன நிலையில் அமர்ந்து
சுரங்கள் குலைந்திடாத மரபினை உடைய
தனது யாழது தொழுது வாங்கித்
தன் வாயால் இனிய பண் பாடினள்.
பண் அது மயங்கவே
யாழினை மட்டும் மீட்டினள்.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 26
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html
படத்துக்கு நன்றி:
நட்டு வைத்தால் மரமாகி
நன்மை தருமொரு தோப்பாகும்,
வெட்டி வெட்டி எடுத்துவிட்டால்
வளரும் தோப்பொரு மரமாகும்,
கொட்டும் மழையும் குளிர்காற்றும்
கூடவே தந்திடும் மரமழித்துக்
கெட்டிட வேண்டாம், மரம்வளர்த்து
காப்போம் சுற்றுச் சூழலையே…!
படத்துக்கு நன்றி
http://topendsp.ipower.com/image/clipart/non-sporting/more/a-green-tree.gif.php
குடகில் பிறந்து குன்றுகள் கடந்து,
குதித்துத் துள்ளிச் சமவெளி அடைந்து,
கயல்கள் சுமந்து கனிவுடன் தொடர்ந்து,
கதிர்தரு நெல்லுடை வயல்களில் நடந்து,
கடைமடை வரையிலும் கருத்துடன் புகுந்து,
கரையிரு மருங்கிலும் வாழும் மக்களைக்,
கடவுள் போலக் காத்தநற் காவிரி,
கருணை வறண்டு கவினை இழந்து,
கடலைக் காணா நிலையை அடைந்து,
கலியுக அரசியல் சூழ்ச்சியில் வீழ்ந்ததோ?
எஸ் வி வேணுகோபாலன்
தினமும் காலையில் முக்கியமாகத் தேவைப்படும் வேளையிலோ, இரவிலோ தமது கைப்பேசியை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் அதைத் தேடுவது பலருக்கும் தவிர்க்க முடியாத வாழ்க்கை விதியாகிவிட்டது. உடனே, பக்கத்தில் கிடைக்கும் ஒரு தொலைபேசி அல்லது அலைபேசியில் தமது எண்ணைத் தட்டி ஒரு மிஸ்ட் கால் கொடுத்து ரீங்காரம் எந்தத் திசையில் இருந்து கேட்கிறதோ அங்கே காதையும் கண்ணையும் வைத்துத் தேடி எடுப்பது அடுத்த கட்டம். சில வேளைகளில் அந்த ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருக்கும், சம்பந்தப் பட்ட கைப்பேசி கண்ணில் சிக்காது…சோஃபாவில், டீப்பாயில், மேசையில் செய்தித் தாள்களின் அடியிலோ, சிறு தலையணைகளுக்குக் கீழோ, மடித்து வைத்திருக்கும் துணிமணிகளுக்கு இடையிலோ மாட்டிக் கொண்டு என்னைக் கையில் எடேன், கையில் எடேன் என்று கதறிக் கொண்டிருக்கும். சட்டென்று சிக்காது.
வாழ்க்கையில் நாம் எத்தனையோ முக்கியமான பொருள்களைத் தவற விடுகிறோம். இந்தக் கைப்பேசிகள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் எவ்வளவோ நெருக்கமான விஷயங்களை இப்படி தடயம் தெரியாமல் இழந்து தவிக்கவே செய்திருக்கின்றனர். சாவி கையில் இருக்கும், கண்ணருகே இருந்தாலும் பூட்டு டக்கென்று கண்ணில் படாது. வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படுமுன் வீட்டு மனிதர்களைக் கூறு போட்டு ஊறுகாய் போட்டு முடிந்திருக்கும். ரேஷன் கார்டு, படிப்புச் சான்றிதழ், ஐ டி அட்டை, ஊருக்கான பயணச் சீட்டு, வங்கி பாஸ்புக், நேற்று வரை வீடு முழுக்க எங்கே நடந்தாலும் தட்டுப் பட்டிருந்த செய்தித் தாள், முக்கியமாக, கைக்குட்டை………எத்தனை எத்தனை பொருள்கள் கண்ணா மூச்சி காட்டிக் கொண்டே இருக்கின்றன, அன்றாட வாழ்வில்.
சமையல் அறையில் எந்த டப்பாவைத் திறந்தாலும் சிக்காத மிளகு சீரகப் பொடி, எங்கோ ஒளிந்து கொண்டு தோசை தீயும் வரை கையில் வந்து சேராத – தோசைக்கென்று வைத்திருக்கும் இரண்டு கரண்டிகளில் வாகான ஒன்று, குழந்தையின் டிபன் பாக்ஸ் மூடி, தண்ணீர் பாட்டில்….எத்தனை எத்தனை தேடல்கள் நகர வாழ்வின் சோதனையான காலை நேரங்களில்..
இதற்கெல்லாம் மிஸ்ட் கால் மாதிரி ஒரு ஏற்பாடு இருக்கக் கூடாதா என்று கேட்டார் ஒரு நண்பர். ஆனந்த விகடனில் ஓவியர் மதன் ஒரு முறை, இயற்கையில் இப்படி ஏற்பாடுகள் இருந்தால் வசதியாக இருக்குமே என்ற பொது தலைப்பில், உரிக்க வாகாக ஜிப் வைத்த வாழைப்பழம், தூக்கிச் செல்ல பிடி வைத்தே விளைந்திருக்கும் பெரிய பூசணிக் காய் என்று கலக்கி இருந்தார். அப்படி காணாமல் போகும் பொருள்களுக்கு தலையில் மினுக் மினுக் என்று மின்னும் சிறு விளக்கு ஏற்பாடு இருக்கலாம் தான்.
ஆனால், அப்புறம் தேடலின் சுவாரசியமும், சண்டையும், தவிப்பும், பரிதவிப்பும் அற்ற வாழ்க்கை எவ்வளவு போரடித்துவிடும்?
இருந்த இடத்தில் இருந்தபடி வீட்டில் காணாமல் போன பொருள்களின் இருப்பிடம் குறித்த வரைபடத்தை ஏதோ கையில் வைத்திருப்பது போல அம்மாக்கள் சொல்வது வழக்கம். எங்கே எனது ஸ்கூல் பேக் என்று கத்திக் கொண்டிருக்கும் யூ கே ஜி வாண்டின் காதைத் திருகி கட்டிலுக்குக் கீழே உதைத்துத் தள்ளிய இடத்தில் தான் இருக்கும், போய்ப் பாரு, அதற்கென்ன காலா முளைத்திருக்கு, வேறெங்கேயும் ஓட என்று கேட்பார்கள் அம்மா. அதற்குக் காரணம் பொருள்களின் அருமை அவர்களுக்குத் தெரிந்திருப்பதன் சூட்சுமம் தான். உன்னிப்பான கவனிப்பு தான் உள் மனத்தில் பதிந்திருக்கும். இதம் பதமாக வருடிக் கேட்டால் எடுத்துக் கொடுக்கும். பதறிக் கொண்டே தேடினால் தாவு வாங்கி விடும்.
பள்ளி நாட்களில் ஆண்டு தவறாமல் இசைப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கிய பெண் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி மணம் முடித்தபின் சுவடே தெரியாமல் தொலைத்திருக்கும் தங்கள் இசையை எந்த மிஸ்ட் கால் போட்டுக் கண்டெடுக்க? கவிஞர் நா முத்துக்குமாரின் தூர் என்ற அற்புதமான கவிதையில் (கணையாழி, 1995) கிணற்றில் தூர் எடுத்துக் கொண்டிருக்கும்போது கிடைக்கும் பொருள்களின் பட்டியலில் வேலைக்காரி திருடியதாக சந்தேகப்பட்ட வெள்ளி தம்ளர் என்று ஒரு அதிர்ச்சி வரி வைத்திருப்பார். அவளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அவள் மீது கட்டப்பட்ட திருட்டுப்பட்டத்தை எந்த சூத்திரத்தாலும் திரும்பப் பெறவே முடியாது. அந்தக் கவிதையின் கடைசி வரி, இதையும் விட பேரதிர்ச்சி கொடுத்து
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க
என்று முடியும்.
மவுனத்திற்கு என்ன மிஸ்ட் கால்? பேசப்படாத செய்திகளுக்கு எந்த மிஸ்ட் காலும் இல்லையே. அப்படியானால் எத்தனை எத்தனையோ ஒருதலை காதல்கள் வாழ்வில் தொலைத்தவற்றை இலக்கியங்களில் போய் ஒளிந்து கொண்டு வாழ வைத்துக் கொண்டிருக்குமா? அவசரப்பட்டு இழக்கும் நட்புறவுகள், கணவன்-மனைவி உறவில் விரிசல்கள், தந்தைக்கும் மகனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் இடையில் விரிவடைந்து போய்க் கொண்டிருக்கும் இடைவெளிகள் இவை எவற்றின் இடையேயும் மிஸ்ட் கால் ஏற்பாடு இருந்தால் எத்தனை கோடி புன்னகைகளைப் பூக்க வைத்து சமாதானக் கொடியைக் காற்றில் பறக்க விட முடியும்?
ஆனால் யோசித்துப் பார்க்கையில் மனிதகுலத்தின் அரிய தவமாகக் கிடைத்திருக்கும் நேயம் தான் மிஸ்ட் கால் என்று தோன்றுகிறது. அன்பின் வழியே உருகி உருகிப் பாயும் தன்னலமற்ற பேராற்றுப் பூம்புனலில் எல்லா அழுக்குகளையும் கழுவி மனத்தைச் சீராக்கித் துடைத்து பளபளப்பாக்கி அறவே அறாத சங்கிலித் தொடராக மக்களை இணைத்துவிட முடியும் என்றுதான் படுகிறது.
அன்பு என்பது நீர் மட்டுமல்ல, நெருப்பும் தான் என்றும் இன்னொரு பார்வையில் படுகிறது. மார்கழி மாதத்தில் இசைக்கப் படும் ஆண்டாளின் அற்புத திருப்பாவைப் பாசுரங்களில் ஐந்தாவதாக வரும் “மாயனை மன்னு” என்று தொடங்கும் அழகுக் கவிதையில், நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு என்று நிறைவாக வரும் இடத்தில் மாசுகளைச் சுடும் நெருப்பு தேவைப்படுவதும் உணர்த்தப்படுகிறது. கரைக்கவோ, சுட்டெரிக்கவோ அன்பு தான் நம்மைச் சூழ வேண்டியிருப்பது.
மூப்பின் களைப்பில் மூளையின் இயக்கங்களின் தளர்வில் தவறவிடும் நினைவோட்டங்களோடு போராடிக் கொண்டே அடுத்தடுத்த தலைமுறைகளின் அவமதிப்பையும், வசைமொழிகளையும், நிராகரிப்பையும் வேளை தவறாது புசித்துக் கொண்டிருக்கும் வயதான மூதாட்டிகளோ, பெரியவர்களோ ஏதோ தாங்களாக முணுமுணுத்துக் கொண்டிருப்பது ஒரு வேளை ஏக்கத்தின் பெருமூச்சில் எழும் மிஸ்ட் கால்களாக இருக்கக் கூடும். வண்ணதாசனின் ஓர் அற்புதமான சிறுகதையில் வரும் தாத்தா ஒருவரின் பேச்சு மொழி வீட்டில் இருக்கும் யாருக்கும் அர்த்தமாவதில்லை. அவரை யாரும் லட்சியம் செய்வதுமில்லை. ஆனால் வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு நுழையும் நாவிதர், ஒரு நாற்காலியில் அவரை உட்கார வைத்து முகத்தில் சோப்பு நுரையைக் குழைத்துப் பூசிக் கொண்டே கத்தியைத் தீட்டிக் கொண்டு தமது வேலைக்குத் தயாராகும் ஒரு கணத்தில் தாத்தா அந்த சவரத் தொழிலாளியோடு சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தார் என்று கதை முடியும், தாத்தாவின் மிஸ்ட் கால் அந்த எளிய மனிதரின் காதில் இலகுவாகப் போய் விழுகிறது.
பிரச்சனை மிஸ்ட் கால் ஏற்பாடு இல்லாதது அல்ல, எத்தனையோ உன்னத விஷயங்கள் என்னைப் பார், பார் என்று குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவை மனிதர்களுக்கு சித்திக்காமல் போவதற்கு ஒரு காரணம் உண்டு. தாராளமய உலகில், தன்னலத்தின் கொடூர வேடத்தில் தங்களைப் பொருத்திக் கொண்டு எல்லாவற்றையும் வென்றெடுப்பதான வெறியில் தம்மையும் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு காதுகள் அற்றுப் போய்க் கொண்டிருப்பதுதான் அது.
*********
நன்றி : வண்ணக்கதிர்
இன்னம்பூரான்
(‘… ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை…’)…
‘வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்.அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம். சிங்களத் தீவினிக்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம். வங்கத்திலே ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருட்களும் குடைந்தெடுப்போம்’
என்ற மஹாகவியின் சொப்பனங்களுடன் தொடர்புடைய விஞ்ஞான சாதனைகளை இன்று காண்கிறோம். ஆலய நிர்மாணத்துக்கான பொறியியல் சூத்திரங்கள் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் உதயம். அதையும் சுட்டி நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை இராமானுஜம் மையம் வெளியிட்டது தான் இத்தொடருக்கு ஊக்கம் அளித்த நிகழ்வு. கணக்கு சாத்திரம் கிருஷ்ண பகவான் மாதிரி. எல்லா துறைகளும் அதற்கு கோபிகைகள். அது ஒருபுறமிருக்க, மற்றொரு சிந்தனை.
மாயை (mysticism) மயக்கியது ஆதிமனிதனை; நம்மையும் தான். அதனுடைய ஈர்ப்பு/ஆகர்ஷணம் ஆழமானது. சிந்தனையின் முதல் பரிமாணம்,‘அதுவோ அல்ல இதுவோ?’ (speculation) என்ற அலைச்சல். விஞ்ஞானத்தின் முதல் படி,‘சோதனை/பரிசோதனை (experimentation). அதனுடைய குறிக்கோள், நிரூபணம் (validation). என்னுடைய இந்த குறும்சிந்தனையை பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு, தேடுபொறிகளில் ‘விஞ்ஞானம்/அறிவியல்’ என்ற சொற்களுக்குப் பதிவுகள் தேடினேன். பல்லாயிரம் கிடைத்தாலும், பெரும்பாலும் திசை மாறியவை. விஞ்ஞான அணுகுமுறையை (scientific temper) அறவே தவிர்த்தவை. ஆம். திருமதி சுபாஷிணி ட்ரம்மெல் கூறியது போல் தமிழில் விஞ்ஞானத்தை பற்றிய விரிவுரைகள் சொற்பம். அவற்றில் விஞ்ஞான அணுகுமுறையை பற்றி ஒன்று கூட தென்படாததால், அதை பற்றிய ஒரு பழங்கதையை கூற துணிவு பூண்டேன்.
ஐம்பது வருடங்கள் முன்னால், நான் அடிக்கடி செல்லும் சைண்ட் லூயிஸ் நகரத்திற்கு ஆஷ்பி பிரபு (Lord Ashby FRS: Vice Chancellor of Belfast and Cambridge Universities) வந்திருந்தார். அங்குள்ள புகழ்வாய்ந்த வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தில் ( அதன் ஜன்ம சரித்திரம் ஒரு நன்முத்து.) பெளதிக பேராசிரியர் ஆர்தர் க்ராம்டன் (1927 நோபெல்: electromagnetic radiation) அவர்களின் பாமரகீர்த்தி பாட. அடக்கம், பொறுமை, தன்னிச்சை விலக்கல், திறந்த மனம், விஞ்ஞானத்தின் தார்மீகத்தின் மீது அசையா உறுதி, சாதி மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு இயங்குவது ஆகியவை தான் பேராசிரியர் ஆர்தர் க்ராம்டனின் வாழ்நெறி; அது தான் விஞ்ஞான அணுகுமுறையின் அடித்தளம் என்று அவரை பாராட்டி பேசினார். அந்த பிரசங்கத்தை இருபது வருடங்களுக்கு பிறகு நினைவு கூர்ந்த பேராசிரியர் மைக்கேலிஸ் (Anthony R. Michaelis) மேற்கூறிய வாழ்நெறியின் மற்றொரு உறைவிடம் ஆஷ்பி பிரபு என்று எழுதி, அவருடைய ‘தன்னுடைய அதிகாரம், ஆளுமை, தலைமை ஆகியவற்றை திணிக்காமல், மற்றவர்களை தன்வசம் படுத்தும் திறன்’ பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தூண் என்றார்.
ஆம். இன்று விஞ்ஞானம், புலமை, ஆய்வு, கல்வி ஆகிய துறைகளிலும் நிர்வாகம் ( தமிழ்த்தாத்தா வாக்கின் படி ‘கார்வார்’) இன்றியமையாதது. ஆஷ்பி பிரபு தன்னுடைய அபார அனுபவத்தின் பயனாக, சொல்வதை கேட்போம். ஆர்வமிருந்தால் மீண்டும் சந்திப்போம்.
‘தற்காலம் பல்கலைகழகங்கள் கோடிக்கணக்காக வரவு செலவு செய்கின்றன. நல்ல நிர்வாகமிருந்தால் தான் அவற்றின் பயன் சமுதாயத்திற்கு கிட்டும். அரசு/தனியார் துறை/ராணுவம் போல் அல்லாமல், இங்கு கொள்கை தீர்மானங்களின் பிறப்பு, விஞ்ஞான பரிசோதனை பலகைகளில், நூலகத்தில், விருந்துண்ணும் வேளைகளில்…‘
~ஆஷ்பி பிரபு
அவற்றுடன் கவனம் ( ஆப்பிள் விழுந்த கதை), கனவு (மரபணு சூத்திரத்தின் சித்திரம்), மாயை (புஷ்பக விமானம்), இதரவிதரம் (மின்விளக்கு) ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
சித்திரத்துக்கு நன்றி:http://www.tribuneindia.com/2004/specials/lead4.jpg
உசாத்துணை: http://garfield.library.upenn.edu/michaelis/title328.pdf
-சு.கோதண்டராமன்
கவிவாணர்க்கு நல்லமுது
அரவிந்த கோஷ் சொல்கிறார், “அக்னியைப் பற்றிய வேத மந்திரங்களில் கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கிறது. பாட்டின் பொருளாகிய அக்னி தேவனின் தழலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.”
அரவிந்தரின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டி விட்டு பாரதி பேசுகிறார், “ஆம். உயர்ந்த கவிதையின் நெறி அது. கவியின் இஷ்டதேவதையின் காந்தி அவனுடைய உள்ளத்தில் வீசும். அந்த ஒளி பாட்டிலே தெரியும்.”
இந்த முன்னுரையுடன் பாரதி வேத மந்திரங்களில் அக்னியின் புகழ் கூறுவனவற்றை மொழி பெயர்த்துத் தருகிறார். அவரது மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. அடைப்புக்குள் உள்ள விளக்கமும் பாரதியினுடையதே.
அக்னிமீளே என்று தொடங்கும் ரிக் வேதம் முதல் மண்டலம் முதல் சூக்தம்.
1 தீ வேள்வியின் முன் நிற்பவன். அதன் பருவங்களை வகுக்கும் தேவன். அங்கு வானவரை அழைப்பவன். செல்வங்களை மிகுதியுறக் காட்டுவோன். அவனை வேண்டுகிறேன். (அமிர்தத்தின் பிறப்பிடமாகிய சூர்யன் என்ற ஒளியில் நான் என்னையே ஹோமம் செய்து கொள்கிறேன் என்று வேத ரிஷிகள் கூறினர். இன்றைக்கும் காலையில் ஒவ்வொரு வேதியனும் சூர்யச்ச மாமன்யுச்ச என்ற இந்த மந்திரத்தைச் சொல்கிறான். இவ்விதமான வேள்வி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தீயின் துணை வேண்டும். தீயை எழும்படி செய்தால் போதும். பிறகு இந்த வாழ்க்கை வேள்வியின் பொறுப்பு. அவனே வேள்வியை அதன் பருவங்களுக்குத் தக்கவாறு மேலே ஏற்றிக் கொண்டு போகிறான். எல்லா விதமான தெய்வ சக்திகளையும் அங்கு அழைத்து வருகிறான்.)
2 தீயை முன்னைப் புலவர் போற்றினர். புதியோரும் அவனையே போற்றுக. அவன் இங்கு அமரரைக் கொண்டு தருக.
3 நாளுக்கு நாள் வளரும் செல்வமும் வீரமிக்க புகழும் தீயாலே பெறுக. (தீக் கடவுள் எல்லா மனிதரிடத்தும் உள்ளத் திண்மையாக நிற்கிறான். அவனை வளர்த்தால் எண்ணிய பொருள் எதுவும் எவ்வுலகத்திலும் கை கூடும்.)
4 தீயே, நெறியில் ஓங்கும் வேள்வியதனை நீ எப்புறத்தும் சூழ்ந்து காக்கிறாய். அஃதே வானவரிடம் சேரும்வழி. (மனித நிலையிலிருந்து அமர நிலை நோக்கிச் செல்லும் வழி தான் வேள்வி போகும் வழி.)
5 தீ வானவரை அழைப்போன். புலமையுள்ள செய்கைத் திறமை ஆவோன். ஞானக் கேள்வி தருவதில் சிறந்தோன். அவ்வானவன் வானவருடன் வருக.
6 அன்ப, வேள்வி தருவோனுக்கு நீ சீர் தருவாய். அதுதான் தீயே உனது உண்மை.
7 தீயே, நின்பால் நாள் தோறும் இரவும் பகலும் நாம் பணிவு ஏந்தி வருகிறோம். (அகங்காரத்தை விட்டு முழுவதும் பணிவு கொள்வதே தேவரை அழைக்கும் வழி)
8 நெறியில் ஓங்கும் வேள்விகளின் அரசே, நேர்மை காப்பாய். சுடர் வீசுவாய். எனது மனையிலே வளர்வாய். தீயே நின்னை அடைகிறோம். (சொல்லிலும் நடையிலும் உள்ளத்திலும் முழு நேர்மை காணும்போது அங்கே அக்னி சக்தி பிறந்திருப்பதாக அறிந்து கொள்ளலாம்.)
9 அருகே போவதற்கு எளியனாய் மகனுக்குத் தந்தை போல் நீ எமக்கு ஆகுக. நல்வாழ்வு பெறும்படி எம்மைச் சார்ந்திடுக.
இந்த வேதக் கருத்துகளை உள்ளடக்கி எளிய தமிழில் பாரதி பாடிய பாடலின் ஒரு பகுதியைக் கீழே காண்போம்.
நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை – உயிர்
நீளத் தருபவனை – ஒளிர்
நேர்மைப் பெருங் கனலை – நித்தம்
அஞ்சேல் அஞ்சேல் என்று கூறி – எமக்கு நல்
ஆண்மை சமைப்பவனைப் – பல் வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் – பெருந் திரள்
ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.
வானகத்தைச் சென்று தீண்டுவன் இங்கென்று
மண்டி எழும் தழலைக் – கவி
வாணர்க்கு நல் அமுதைத் – தொழில்
வண்ணம் தெரிந்தவனை – நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
தீம் பழம் யாவினையும் இங்கே உண்டு
தேக்கிக் களிப்பவனைப் பெருந் திரள்
ஆகிப் பணிந்திடுவோம் வாரீர்.
குன்றக்குடி அடிகள்
12. மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை
மனிதன் விரிந்த பரந்த உலகத்தோடு பழகும்பொழுது விரிவு அடைகிறான். சுருங்குவன எல்லாம் அழியும். விரிவன எல்லாம் வளரும். சுருங்குவன எல்லாம் ஆவது போல் காட்டி அழியும். விரிவன எல்லாம் அழிவது போல் காட்டி சால ஆக்கம் தரும்.
மனிதன் மானுடத்தின் பரப்பெல்லை முழுதும் உறவு கொண்டு பழகுதல் நல்லது; விரும்பத்தக்கது. இத்தகு விரிந்த பரந்த உறவுக்கு – நட்பாடலுக்கு நாட்டெல்லைகள், அரசியல் எல்லைகள் தடையாக இருத்தல் கூடாது. மொழிகளும், சமய நெறிகளும் துணையாகவே அமைவன; மொழியின் பெயரால், சமய நெறிகளின் பெயரால், மனிதன் சுருங்குவது அறம் அல்ல. அதுமட்டுமல்ல, மொழியின் குறிக்கோளுக்கும் மாறுபட்டது; சமய நெறிகளின் நோக்கத்திற்கும் முரண்பட்டது.
இத்தகு விரிந்த பரந்த உலகத் தொடர்பை, கொள்வதற்கு விஞ்ஞான வளர்ச்சி மூலம் மனிதன் ஆர்வத்துடன் முயன்றிருக்கிறான். தொன்மைக் காலத்தில் யாத்திரை என்ற பெயரில் இந்த முயற்சி அமைந்திருந்தது. ஏசுவின் யாத்திரை, முகம்மது நபியவர்களின் யாத்திரை, ஆழ்வார்கள், நாயன்மார்களின் யாத்திரை, காந்தியடிகளின் யாத்திரை ஆகியன எடுத்துக்காட்டுகள். மிகப் பழங்காலத்தில் நாடு விட்டு நாடு யாத்திரை – பயணம் சென்றால் உணவு முதலியன கிடைப்பதற்கு வழியில்லை. திருக்கோயில் நாகரிகம் தலையெடுத்த பிறகு இப்படிப் பயணத்தில் வருவோருக்கு உணவளிக்கும் பொறுப்பை திருக்கோயில்கள் ஏற்றுக்கொண்டன.
இப்பொழுது எங்கும் உணவுச் சாலைகள் வணிகத்தொழில் அடிப்படையில் அமைந்துவிட்டன. ஆனால் விழுமிய பயனைத் தரவில்லை. மிகப்பழைய காலத்தில் வீடுகளில்தான், இத்தகு பயணிகளுக்கு உணவு வழங்கப் பெற்றது. வீடுகளில் உணவு வழங்கப் பெறுதலே சிறப்பு. இங்ஙனம் இல்லத்திற்கு வருபவர்கள் ‘விருந்தினர்’ என்றழைக்கப் பெற்றனர்.
இன்றோ உறவினர்களும் சுற்றத்தினரும் விருந்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். இது முறையன்று. முன்பின் தெரியாத அறிமுகம் இல்லாத அயலாரே விருந்தினர் எனப்படுவர். இவர்கள் இல்லங்களில் வந்து தங்கிப் போவதினாலே மொழி – கலை வழிபட்ட உறவுகளும் வளரும். தொழில், பொருள் வழிபட்ட உறவுகளும்கூட வளரும். இத்தகு பயணங்களைத்தான் இன்றைய அரசு, சுற்றுலாத்துறை என்று ஒரு துறை அமைத்து வளர்த்து வருகிறது. இத்துறை பல நாடுகளுக்கு அதிகப் பொருள் ஈட்டத்தையும் தருகிறது.
மனையறம் பேசும் திருவள்ளுவர் விருந்தோம்பல் என்ற நெறியையும் எடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பல் அதிகாரம் முழுமையும் படித்தால் விருந்தோம்பலினும் சிறந்த அறம் இல்லை என்று தெரிய வரும். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் இல்லங்களில் நாள்தோறும் விருந்தினர் வந்த வண்ணம் இருந்தனர் என்று தெரிய வருகிறது. இந்த விருந்தோம்பும் பண்பைத் தமிழர்கள் பேரறமாகப் போற்றி வளர்த்ததினாலேயே தமிழ்ப் பண்பு உலகந் தழீஇய பண்பாக வளர்ந்து வந்துள்ளது. “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற உயர் நெறி முகிழ்ப்பதற்கு விருந்தோம்பும் பண்பே காரணமாக அமைந்திருக்கும் என்று கருதவேண்டியிருக்கிறது.
விருந்தோம்பல் பண்பு சிறந்து விளங்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் பொருள் புழக்கம் அதிகமாவதற்குரிய வாயில்கள் மிகுதி. ஒருநாடு விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பர்; முதலீடு செய்வர்.
அதுபோல ஒரு வீட்டினர் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த வீட்டினருடைய வளர்ச்சியில் விருந்தினர் பங்கேற்பர். ஒரு குடும்பத்தினர் விருந்தோம்பலில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் வயலில் விதை பாவவில்லை. விதியில்லை அல்லது காலம் கிடைக்கவில்லை. வந்த விருந்தினர்கள் வாளாவிருக்க மாட்டார்கள். விருந்தினர்களும், அந்தக் குடும்பச் செல்வத்தின் பயனை நுகர்ந்தவர்களும் வாளாவிருக்க மாட்டார்கள். தாமே வலியச்சென்று அக்குடும்பத்தினரின் வயலில் விதையை விதைப்பார்கள். இஃது அறஞ்சார்ந்த வாழ்வியல் முறை. இதனைத் திருக்குறள்
“வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்”
என்று கூறும், ஆதலால் எல்லைகளைக் கடந்து பழகுக. நட்பினைக் கொள்க; உறவாகுக; உவந்து உண்பித்துப் பழகுக. இதுவே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை.
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
மின்பதிப்பாக்க உதவி: தேமொழி