Blog

  • அறுமுகநூறு (18)

     

    சச்சிதானந்தம்

    ஆற்றல்நிறை ஆதவனும் வணங்கி நிற்க,

    ஆலயமாய்க் கானகமே அமைந்து நிற்க,

    ஆற்றங்கரை நாகரிகம் பிறக்கும் முன்னே,

    ஆறுமுகன் அவதரித்து அகிலம் காத்தான்!                                                                     86

     

     

    வெட்டிரும்பின் விசையுடனே உள்ளத்தில் பாய்ந்து,

    உட்செருக்கைக் கட்டறுத்து, நற்குணத்தின் மொட்டவிழ்த்து,

    பற்றறுக்கும் பணியேற்று, எக்கணமும் துணையிருக்கும்,

    தண்டபாணி கொண்டிருக்கும், காக்குந் தனிவேல்!                                                        87

     

    சிற்றின்பக் கோட்டுக்குள் கட்டுண்ட உலகை,

    மற்றின்ப மாயைக்குள் மூழ்கிடும் மனதை,

    அற்றின்ப துன்பங்கள், வாழ்ந்திடும் வழியில்,

    கற்ற்பித்து வழிநடத்தும் கந்தனின் கருணை!                                                                 88

     

    நிறமற்ற நீருக்கு நிறம்தரும் அருவியைப்போல,

    உயிருக்கு நிறம்தந்து நிரந்தரமானவன் நாதன்,

    மணமற்ற நிலத்துக்கு மணம்தரும் மழைத்துளிபோல,

    மனதுக்குள் நறுமணம் பரவிடச்செய்வான் நாதன்!                                                        89

     

    நிலவின் தனித்துவம் இரவில் உதிப்பது,

    இரவின் தனித்துவம் நிலவைச் சுமப்பது!

    உயிரின் தனித்துவம் குகனைத் துதிப்பது,

    குகனின் மகத்துவம் கருணை நிறைந்தது!                                                                      90

    Share
  • மாற்றிக் காட்டுவோம்

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
    என்றோ சொன்ன வார்த்தை இன்றும்
    நன்றே பயன் படுகிறது……!

    நூற்றாண்டுகள்  எப்படியோ
    வாழ்ந்து விட்டோம் இனி யாரும்
    சிவப்புக் கம்பளம் விரித்து
    வண்ண மலர்கள் தூவி
    மஞ்சள் சிம்மாசனத்தில் அமர்த்த
    அணுசரணையாய்க்  கொடி பிடித்து நம்மை
    வரவேற்கப் போவதில்லை……!

    நாட்டின் நடப்புகள் நாளும்
    நடுக்கத்தைத் தருகின்றன
    கனவுகள் நிறைவேறும் சூழல்
    மங்கலாகத் தெரிகிறது நாட்டின்
    சுதந்திரத்துக்குக் கைகொடுத்தும்
    வாழ்க்கைப் போராட்டம்
    தாளம் தப்பாமல் குதிபோட்டு நிற்கிறது………!

    கவன ஈர்ப்புத் தீர்மானத்தை
    சமூகம் உச்சத்தில் கொள்ள வேண்டும்
    கரணம் தப்பினால் மரணம்
    பிளவுகளை வீசிவிட்டு
    தினம் செத்து பிழைக்கும் அவலத்தை
    துணிவாய்த் துறந்து
    அடிமை விலங்கை உடைத்து
    அறியாமையைத் துடைத்து
    தலைநிமிர்ந்து
    போராட்டத்தைத் தொடங்குவோம்………!

    மொழியைக் காப்பதற்குத்
    தமிழ்ப்பள்ளிகளின் ஆயுளை நீட்டிவைப்போம்
    பெற்ற பிள்ளைகள் தவறாமல் தாய்ப்பால்
    அருந்த வழிகாண்போம்
    கலாச்சாரம் அழிவதற்கு சூது
    செய்வோரைத் தரைமட்டம் ஆக்கிடுவீர்……!

    ஆணவத்தால் அடக்கிவைக்கும்
    அவமானச்சின்னங்களை வேரறுப்பீர்
    நேற்று முளைத்த காளான்கள்
    நம்மை மிரட்டுவதோ?
    கிழடுகள் சில வரிந்து நின்றே
    சிண்டுமுடிக்கும் வேலைகளைக்
    கச்சிதமாய்  முறியடிப்பீர்……..!

    நம்மைக் கிள்ளுக்கீரையாய்
    எண்ணித்திரிவோர் கொட்டம்
    அடங்கும் காலம் தொலைவில் இல்லை
    நன்றியைக் கொன்று
    சதா வம்புக்கு நிற்கும்
    ஒற்றுமைக்கு ஊறு செய்யும்
    முந்திரிக் கொட்டைகள்
    முகத்தில் கரியைப்பூசுவோம்
    உலகத்தார் காறி துப்பட்டும்………!

    அறிஞர்கள், கல்விமான்கள்
    தொழிலதிபர்கள்,நிபுணர்கள்,
    கொடைநெஞ்சர்கள்,இலக்கியவாதிகள்,
    கலைஞர்கள்,தொண்டர்கள்,
    தியாகிகள்,அரசியல்வாதிகள்
    வழக்கறிஞர்கள்,இளைஞர்கள்
    இனமானம் காக்க இன்றே
    ஒன்றாய்  எழுவோம்
    நாட்டின் தலையெழுத்தை
    மாற்றிக் காட்டுவோம் வாரீர்……!

    படத்துக்கு நன்றி

    http://www.dreamstime.com/stock-images-united-hands-image2370904

    Share
  • கோபுர பொம்மையாய்…

    செண்பக ஜெகதீசன்

     கிடைத்திருக்கும் உயர்ந்த இடம்,

    கோபுர பொம்மைக்குக்

    கொண்டுவந்துவிடுகிறது கர்வத்தை-

    கோபுரத்தையே தாங்குவதாய்..

     

    கவலைப்படுவதில்லை கோபுரம்,

    உண்மை அதற்குத் தெரிவதால்..

     

    இதுதான் கதை மனிதனிடமும்-

    அவனுக்குக் கர்வம்

    அதிகமாகும்போது சிரிக்கிறான்

    ஆண்டவன்…!

    படத்துக்கு நன்றி

       http://www.elanguages.org/20283

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(62)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலுடன் உங்கள் முன்னே !

    நம் பிறந்து வளர்ந்து எமது தாய்மண்ணில் தவழ்கிறோம். எமது தாய்மொழி எமது உதடுகளில் இருந்து முதல் மொழியாக வெளி வருகிறது.

    இதே முறையில் வளர்ந்து பெரியவர்களானதும் அம்மொழியின் விரிவாக்கம் எமது உள்ளத்தினுள் வியாபித்து விடுகிறது. வசரத்தில், ஆபத்தில் எம் தாய்மொழியே முதல் மொழியாக எம் உதடுகளுக்குளிருந்து பீறிட்டு வருகிறது.

    ஆம் அம்மொழி , அம்மொழியை நாம் பேசும் வகை, எமது மொழியின் உச்சரிப்பு இவைகளே எமது அடையாளங்களாகின்றன.

    தாய்மொழியைத் தொலைத்தால் நாம் முகவரி தொலைந்தவர்கள் ஆகிறோம்.

    ஆங்கிலம் என்பது ஒரு அகிலம் முழுவதுமே பேசப்படும் பொதுமொழியாகக் கணிக்கப்படுகிறது இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் அவர்களின் தாய்மொழி ஆங்கிலமாக இருந்து வருகிறது.

    ஆனால் இம்மொழி இந்நாடுகளில் பேசப்படும் போது அவர்கள் உச்சரிக்கும் முறையில் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இலகுவாகக் கூறி விடலாம். ஏனெனில் அவர்களது ஆங்கில உச்சரிப்பு அந்தந்த நாடுகளுக்கே உரித்தான வகியில் அமைந்திருக்கும்.

    ஒரு உதாரணத்திர்கு இலங்கைத் தமிழர் ஒருவரை எடுத்துக் கொள்வோம் அவர் தாமிழ்நாட்டில் வந்து தமிழ் பேசும்போது அவர்களுக்கேயுரிய பொதுமொழியாகத் தமிழ் இருந்தாலும் அவர் இலங்கையச் சேர்ந்த தமிழர் என்பதை தமிழ்நாட்டில் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள். இல்லையா?

    என்னடா இது ? வழக்கத்திற்கு விரோதமாக மிகவும் அழமான கருதை அழுத்தமான பீடிகையுடன் ஆரம்பிக்கிறானே என்று எண்ணுகிறீர்களா?

    சரி எனது இந்தப் பீடிகைக்கான காரணத்தைப் பார்ப்போமே !

    சமீபத்தில் நான் படித்த ஒரு விசித்திரமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்தப் பீடிகை. அவுஸ்திரேலியாவை அண்மித்த ஒரு தீவகமே டாஸ்மேனியா (Tasmania) ஆகும். இங்கு வசித்து வரும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியின் வாழ்வில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவமே எனது ஆச்சரியத்திற்குக் காரணம்.

    லியான் ரோவ் (Leanne Rowe) எனும் இந்தப் பெண் எட்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

    இவ்விபத்தின் போது இவருக்கு தஒயில் பலத்த அடி பட்டுள்ளது. மேலும் இவ்விபத்தின் காயங்களாக இவரது அலகும், முதுகெலும்பும் முறிவடைந்து அதற்கான சிஒகிச்சை பெற்றிருந்திருக்கிறார்.

    கொஞ்சம் கொஞ்சமாக இவரது அலகு குணமடைந்து வருகையில் இவரது வாயிலிருந்து சம்மந்தமில்லாத வார்த்தைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவர் தனது உடம்பின் வலியைத் தாங்கிக் கொள்ல எடுக்கும் மாத்திரைகளின் வீரியமே இவரது இந்தச் சம்மபந்தமில்லாத பேச்சுக்குக் காரணம் என்று வைத்தியர்கள் கூறியிருந்திருக்கின்றனர்.

    இவர் தனது தாய்மொழியான ஆங்கிலத்தைப் பேசத் தொடங்கியதும் அனைவரும் திகைக்கும்படியான விடயம் நடந்துள்ளது. அது என்ன என்கிறீர்களா ?

    ஒரு அவுஸ்திரேலியப் பிரஜையான இப்பெண்மணி இதுவரை காலமும் ஒரு அவுச்திரேலியப் பாணியில் ஆங்கிலத்தை பேசிவந்திருந்தார் ஆனால் இப்போதோ ஒரு பிரெஞ்சுக்காரர் எப்படி ஆங்கிலத்தைப் பேசுவாரோ அதே உச்சரிப்பிலேயே இவரால் தனது தாய்மொழியான ஆங்கிலத்தைப் பேசக்கூடியதாக இருக்கிறது.

    டாஸ்மேனியாவில் பிறந்து வளர்ந்த இவர் ஒருபோதும் பிரெஞ்சு நாட்டுக்கே சென்றிருக்கவில்லை. அப்படியான தான் பிரெஞ்சு உச்சரிப்பில் ஆங்கிலத்தைப் பேசுவது இவருக்கு ஆழ்ந்த மனவருத்தத்தையும், அமனழுத்தத்தையும் கொடுத்துள்ளது என்கிறார்.

    பொதுஇஅடங்களில் பேசுவதையே தவிர்த்து வரும் இவருக்காகப் பொதுஇடங்களில் இவரது மகளே பேசிவருகிறாராம்.

    இவரது குடும்ப வைத்தியரான ரோபேர்ட் நியூட்டன் (Robert Newton) என்பவர் கூறும்போது தான் இவரை அறிந்த நாள் நாள் முதல் சாதாரண அவுஸ்திரெலியப் பாணியிலான ஆங்கிலத்தைப் பேசிவந்த இவர் இந்த விபத்திற்குப்பின்னர் தான் இப்படி மாறியுள்ளார் என்கிறார்,

    பாடசாலை மாணவியாக இருந்தபோது பிரெஞ்சு மொழியை ஒரு மேலதிகப் பாடமாகப் பயின்றிருக்கிராரெ ஒழிய இவர் பிரெஞ்சு நாட்டுக்குக் கூட சென்றதில்லை என்றார் குடும்ப வைத்தியர்.

    இதுவரை உலகில் ஏறத்தாழ 60 பேர் வரை இத்தகைய ஒரு நிலைமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

    இப்படிப்பட்ட ஒருவகை வியாதியால் பீடிக்கப்பட்ட முதலாவது அறிந்த வியாதி 1907ம் ஆண்டு பதியப்பட்டுள்ளதாம்.

    2010ம் ஆண்டு மல்டிப்பில் செல்ரோசிஸ் (multiple sclerosis ) எனும் ஒருவகை வியாதியால் பீடிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் ஒருவர் தனது நியூசிலாந்து உச்சரிபிலான ஆங்கிலத்திலிருந்து மாறி வேல்ஸ், ஸ்கொட்லாந்து,வட இங்கிலாந்துப் பகுதிகளின் பாணியிலான உச்சரிப்பில் பேசினார்

    கடந்த வருடம் பேர்மிங்காம் நகரைச் சேர்ந்த டெபி ரோய்ஸ்டன் (Debie Royston ) என்பவர் பயங்கரமான ப்ளூவிலிருந்து மீளும்போது தனது வழமையான ஆங்கில உச்சரிப்பிலிருந்து மாறி பிரெஞ்சுக்காரர் ஆங்கிலம் பேசும் வகையில் பேசத்தொடங்கியுள்ளார்.

    அதேபோல இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த81 வயது அலன் மோர்கன் (Alun Morgan ) ஸ்ட்ரோக் எனும் இருதய வியாதியிலிருந்து மீளும் போது வேல்ஸ் பாணி ஆங்கிலத்தைப் பேசியுள்ளார்.

    இதைப்பற்றி ஆராய்ச்சி செய்த வைத்திய நிபுணர்கள் மூளைப்பகுதியில் பேச்சைக் கட்டுப்படுத்தும் நரம்புகளில் ஏற்படும் சிலவகையான பாதிப்புகளே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    19.06.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 14

    குன்றக்குடி அடிகள்

    14. ஒட்ட ஒழுகல்

    ஒழுக்கம் உடையராதல் அரிது. ஆயினும் ஒழுக்கம் உடையராக வாழ்தலே வாழ்தல். “ஒழுக்கம்” என்ற சொல் பலராலும் கேட்கப் பெறும் சொல். ஆயினும் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு மக்கள் மன்றத்தில் கற்பிக்கப் பெற்றுள்ள பொருள் மிகச் சுருங்கியது. அதாவது ஆண் பெண் உறவுகளில் குற்றம் ஏற்படாமல் வாழ்வதே ஒழுக்கமுடமையாகும் என்பது வலிமை சான்ற ஒரு கருத்து. இதில் தவறில்லை; உண்மை இருக்கிறது. ஆயினும் பெண் வழி நேரிடும் பிழைகளைத் தவிர்த்தல் மட்டுமே ஒழுக்கமுடமையாகாது. இது ஒழுக்கமுடைமையின் ஒரு கூறு.

    மேலும் கள்ளுண்ணல், கவறாடல் முதலியன செய்யாமை ஒழுக்கம் என்று கூறுவாரும் உளர். இதிலும் உண்மை இருக்கிறது. ஆயினும் கள்ளுண்ணாதிருத்தல், கவறாடாதிருத்தல் மட்டும் ஒழுக்கமுடைமையாகாது. இவையும் ஒழுக்கத்தின் கூறுகளே! இந்த அளவில் மட்டும்தான் ஒழுக்கம்பற்றி நமது நட்டு மக்கள் அறிந்திருக்கின்றனர். கள்ளுண்ணாதிருத்தல் கவறு (சூது) ஆடாதிருத்தல், முறை தவறான பால் ஒழுக்கங்கள் மேற்கொள்ளாதிருத்தல் மட்டும் உடையவரே ஒழுக்கமுடையவர் என்று கருதும் கருத்து நமது சமுதாய அளவில் மேம்பட்டிருக்கிறது. இவைகள் ஒழுக்கத்தின் கூறுபாடுகளே. ஆனால் நிறை நலம் மிக்க ஒழுக்கம் எது?

    நாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். இந்த உலக சமுதாயம் நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கியது; நாம் இந்த மானுட சமுதாயத்துக்குள் சங்கமமாக வேண்டும். மானுட சமுதாயத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஒழுகி வெற்றி பெறுதல் வேண்டும். உலக நடைமுறை தீயதாக இருக்கலாம். அத்தீய ஒழுக்கமும் ஏற்புக்குரியதா என்ற கேள்வி தோன்றும். இல்லை. இல்லை. தீயஒழுக்கத்தை ஏற்றுக் கொள்ளல் இல்லை! உலகத்தைப் புரிந்து கொண்டு அதற்குத்தக ஒழுகுதல் என்பதே பொருள். உலக இயலுக்குத் தக்கவாறு என்றால் ஒத்து ஒழுகுதல் என்று மட்டுமே பொருள் கொள்ளுதல் வேண்டா. உலக நடையினைப் புரிந்து கொண்டு அதனோடு மோதாமல் ஒத்துப் போகக் கூடியதாயின் ஒத்து ஒழுகுதல் வேண்டும். ஒத்து ஒழுக இயலாதது எனில் அதனை நாம் விரும்பும் நிலைக்கு மாற்ற முயலுதல் வேண்டும். இங்ஙனமின்றி முரண்பட்டு நின்றும், கலகங்களை வளர்த்தும் வாழ்தல் கூடாது.

    இந்த உலகில் எல்லாவற்றுக்கும் மேலானது மனித நேயமே ஆதலால் உலக மாந்தர்க்கு நல்லது செய்யும் வழியில் வாழ்தலே ஒழுக்கமுடைய வாழ்க்கை. உலக மானுட சமுதாயத்துடன் ஒத்து உடன் நின்று வாழ்தலே ஒழுக்கமுடைமை.

    “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்”
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • ‘லட்சுமி வண்டு’ !…

    விசாலம்

    நான் போன வருடம் மன்னார்குடிக்குச்சென்றிருந்தேன்.அங்குக்கொல்லைப்பக்கம் குளிக்கும் அறை இருந்தது  அதன் அருகில் பெரிய பித்தளை அண்டாவும்  ஒரு மண் அடுப்பும் இருந்தது காய்ந்த குச்சிகள் போட்டு வெந்நீர் வைப்பது வழக்கம் அந்தக்குளியல் அறையில் இரண்டு கரப்பான் பூச்சிகள் தன் மீசையை ஆட்டியபடி என்னைப்பயமுறுத்திக்கொண்டிருந்தன ,நான் பாம்பின் முன்னால் கூட நின்றுவிடுவேன் என நினைக்கிறேன் ஆனால் இந்தக்கரப்பாம்பூச்சிகள் கண்டால் சிம்மசொப்பனந்தான்.  அவ்வளவு பயம் ஒருதடவை அப்பளம் பொரித்து அவைகளை ஒரு தட்டில் நான் போன வருடம் மன்னார்குடிக்குச்சென்றிருந்தேன். அங்குக் வைத்து எடுத்துவருகையில் ஒரு கரப்பு சன்னல் வழியே பறந்து வர  …….சிவசிவா    அது நான் நடந்த வழியில்தான்  வரவேண்டுமா என்ன …….வீலென்ற சத்தம் ……என் கையிலிருந்த  தட்டு கீழே விழ அப்பளங்கள்  சுக்குநூறாக உடைய  என் கணவரின் வருகை என்னை………… மேலும் அழாத குறைதான்

    “அது என்ன செய்துவிடும்  கடித்து  தின்றுவிடுமா என்ன ?  என்று மேலும் சில அடைமொழிகளை அடுக்கி வீச  …….என் கோபமெல்லாம் அந்தக்கரப்பான் பூச்சிமேல் சென்றது    எனக்கு மட்டும் மந்திர சக்தி இருந்தால் அந்த்க்கரப்பு என் ஒரு பார்வையிலேயே பஸ்மம் ஆகி இருக்கும் .

    இந்த நினைவில் அந்தக்கரப்பைப்பார்த்தபடியே குளிக்க முயற்சி செய்தேன் ஆனால் என் பயத்தைத்தெரிதுக்கொண்டு என் பக்கமே அது வேகமாக நகர்ந்துவந்தது .இனி குளிக்கமுடியாது என்று ஒரு பழையபுடவைச்சுற்றியபடி வெளிவந்தேன்

    என் அத்தை  என்னிடம் “ஏண்டி இப்பத்தான் உள்ளே நுழைந்தாய்   அதுக்குள்ளே குளிச்சாச்சா?”

    இல்ல அத்தே   உள்ளே ரெண்டு கரப்பான் பூச்சி இருக்கே எப்படி குளிக்கறது?

    “இதுக்கா ஓடி வந்துட்டே ,சிவகாமியைக்கூப்பிட்டு விரட்டச்சொல்லு “

    வேலைக்காரி சிவகாமியைக்கூப்பிட்டேன்  …”சிவகாமி இங்க வாயேன்  இந்த…   இந்த  .கரப்பை அடி அல்லது விரட்டு “

    சிவகாமி வந்தாள் ”  அக்கா இது லட்சுமி வண்டுன்னா இத எப்படி அடிக்கறது ?அது ஒன்னும் செய்யாது அத கொன்னா வூட்லேந்து  லட்சுமி போய்விடுவா அக்கா ?நீ மாட்டும் குளிச்சுக்கோ “

    நான் மறுக்க அவள் தன் கையால் பிடித்து  அதை ஆசையாக எடுத்து கொல்லைப்பக்கம் வீசி எறிந்தாள் ……அப்பாடி போச்சு …. அதன் கலரும் அதன் மீசையும்  பார்த்தாலே மனதில் ஒரு அறுவருப்பு…..

    ஆனால் இன்னும் பலர் அது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு மிகப்பிடித்தமான  பூச்சி என்று நம்புகிறார்கள் .    கரப்பான் பூச்சியைக்கொன்றால் அல்லது அடித்தாலோ செல்வம் போய்விடும் என்று நம்புகிறார்கள்.கிராமபுரங்களில்

    அதிகமாக  இதை நம்புகிறார்கள் யாராவது அடிக்க வந்தாலும் தடுத்து விடுகிறார்களாம்  ஏன்  ! என் அம்மா கூட அதைக்கொல்லாமல் துணியால் பிடித்து வெளியே வீசிப்போடுவார் .அதுவும் செவ்வாய் வெள்ளி என்றால் கேட்கவே வேண்டாம் .லட்சுமியின்  அம்சமாயிற்றே !

    மனிதகுலத்திற்குத்தீமையை     அளிக்கும் இந்தக்கரப்பான் பூச்சியை  இவர்கள் காப்பாற்றுவதேன் ? அசுத்தமான அறைகள் , இருள் சூழ்ந்த இடங்கள் சாக்கடைகள் போன்ற  பகுதிகள் செப்டிக் டாங்கின் மூடிகள் போன்ற இடங்களில் அப்படியே  அடை அடையாக தரிசனம் தருவது இவைகள்தான் .மூலைகள் இதற்கு மிகவும் பிடித்த இடம்.    இரவு நேரங்களில் தான் இவைகளுக்கு சாப்பாட்டு நேரம்.   உணவு  பண்டங்களை மெல்ல பதம் பார்க்கும் .சில சமயத்தில் அசந்து தூங்கும் மனிதனின் விரல்களைக் கண்டுப்பிடித்து கடித்து வைக்கும்     அந்த இடம் மறுநாள் சுரீரென்று எரியும் போதுதான் கரப்பு கடித்துபோனது தெரியும். அவ்வளவு சுகமான ஆழ்ந்த தூக்கம் .

    சாப்பாடு தான் சாப்பிடுகிறதே திரும்ப தன் இடம் போகிறதா என்றால் அதுவும் இல்லை அந்த இடத்திலேயே புழுக்கை என்ற கழிவுபொருளை கழித்துவிட்டு செல்கிறது அதன் துற்நாற்றம் ஒரு ஸ்பெஷல்  தான்

    டாக்டர் இதைப்பற்றிச்சொல்வது என்னவென்றால் இதன் மூலம் உண்டாகும் நோய்க்கிருமிகள்  தொற்றிய பாத்திரங்கள் அல்லது நீரையோ கையாளும் போது பல வியாதிகள் உண்டாகுகின்றன காலரா   க்ஷயரோகம் தொழுநோய் டைபாய்டு போன்றவைகள்  இந்தபூச்சிகளால் பரவுகின்றன   தவிர வயிற்றுவலியும் வயிற்றுகடுப்பும் வருகின்றனவாம்

    தடுக்கும் முறைகள்

    வீடு அதிக சாமானகள் சேராமல் சுத்தமாக இருக்க வேண்டும்  சுற்றுப்புறங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்

    வீட்டில் இருக்கும் பழைய சாமான்களை அப்புறப்படுத்தவேண்டும் பழையபேபர்களை சேர்க்காமல் கபாடிவாலாவுக்கு போடவேண்டும்

    பாத்ரூம் இடுக்கில் அப்பப்போது மருந்து அடிக்கவேண்டும். எதாவது ஓட்டை இருந்தாலும் அதை அடைக்க வேண்டும்

    கிச்சன் மேடையை வேலை முடிந்தப்பின் சுத்தமாகத்துடைத்து வைக்கவேண்டும்  பாத்திரங்களை ஈரத்துடன் அப்படியே அலமாரியில் வைக்கக்கூடாது  ஒரு காய்ந்த  துணியால் துடைத்து வைக்க வேண்டும்

    வருடத்தில் இரண்டு முறையாவது முனிசிபாலிடி மூலம் பூச்சி மருந்து அடிக்கச்சொல்ல வேண்டும்  புடவை அலமாரியை நன்றாக இடுக்கில்லாமல் சார்த்தி வைக்க வேண்டும்

    கரப்பான் பூச்சிக்கொல்லிகளையும் உபயோகிக்கலாம்

    Share
  • கம்பன் காரைக்குடி

    75 ஆண்டுகாலமாக கம்பன் புகழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகமும், பவளவிழாவின் அடையாளமாகத் தோற்றுவிக்கப் பெற்ற கம்பன் தமிழ் ஆய்வு மையமும் இனி ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், அறக்கட்டளைகள், நூலகம், பதிப்புப் பணிகள்- கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சென்று அவர்களுடன் இணைந்து இளைஞர்கள்- மாணக்கர்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குதல் போன்ற எவ்வெவற்றை எங்களிடம் தமிழ் ஆர்வலர்களும்,சுவைஞர்களுமாகிய நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என சுருக்கமாக இருபக் கஅளவில் எழுத்து வடிவில் ஒரு வரைவுத் திட்டம் ( அஞ்சல் குறியீட்டு எண், தொலைபேசி எண், உள்ளடக்கிய தங்கள் முழு முகவரியுடன்) 20.07.2013 ஆம் தேதிக்குள் நேரிலோ அஞ்சலிலோ தந்துதவ மிகப் பணிவுடன் வேண்டுகின்றோம். கூட்டத்திற்கு வர இயலாதவர்களும் வெளியூர் அன்பர்களும் அஞ்சலில் அனுப்பிஉதவிடுக. இவை தொகுக்கப் பெற்று 3.8.2013 அன்று 7-9-2013 அன்று நடைபெறும் மாதக்கூட்டத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகக் கூட்டப் பெறும். அஞ்ஞான்று விரும்பும்தமிழ் ஆர்வலர்கள் எவரும் பங்கேற்று உரையாடி பைந்தமிழ்ப் பணியில்பங்கேற்க அழைக்கிறோம்

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத்தலைவர்
    மன்னர் துரைசிங்கம் அ்ரசு கலைக்கல்லூரி
    சிவகங்கை
    மற்றும்

    காரைக்குடி கம்பன் தமிழ் ஆய்வு மைய உறுப்பினர்

    Share
  • நீயும் நானும் விஞ்ஞானமும் – 3

    இன்னம்பூரான்

    ‘அவர் (கரியமாணிக்கனார்) புகழ் வாய்ந்த விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் அதற்கெல்லாம் மேலே மிகவும் உயர்ந்தவர்; புருஷோத்தமன்; லட்சியப் பிரஜை; முழுமையான மனிதர். ‘ – ஜவஹர்லால் நேரு.

    உங்களுக்கு சிவக்கொழுந்து சாரைத் தெரியுமோ? தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் பெளதிக பாடம் எடுத்த காலக்கட்டம், நூறு வருடங்களுக்கு முன்னால்: 1911: 9ஆவது வகுப்பு: ஹிந்து உயர்நிலை பள்ளி: ஶ்ரீவில்லிபுத்தூர். தமிழில் பெளதிகத்தையும், பூகோளத்தையும்/ வேதியியலையும்  எளிதில் விளக்கி எனக்கு அதில் ஆர்வமூட்டினார், என்கிறார் ஒரு விஞ்ஞானி. அவரும் சளைத்தவரல்ல. மதிய விருந்துண்ணும் வேளையில், போகிற போக்கில், பாட அட்டவணையில்லாமல், பெளதிகத்தை போதித்து இறவாப் புகழ் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அருமையான விஞ்ஞான கட்டுரைகள் எழுதியவர்.

    விஞ்ஞானத்துக்கும் நமக்கும் காத தூரம் என்று நமக்குள் பச்சாதாபப்பட்டுக்கொண்டு மருகி வாடவேண்டிய தேவை ஒன்றுமில்லை. விடுதலை பெற்ற காலக்கட்டத்தில், அறுபது ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானத்தின் மீதும், பொறியியல் மேலாண்மை மீதும், மாபெரும் தொழிற்சாலைகளை அமைப்பதிலும் ஆர்வமும் தீவிரமும் இருந்தது. பிரதமர் நேருவின் தீர்க்கதரிசனமும், கற்றோர்களின் தொண்டும், அன்றைய இளைய சமுதாயத்தின் தீவிர ஆர்வமும் அதற்குத் துணை நின்றன. காரைக்குடியில் இருக்கும் நவீன மின் – ரசாயன பரிசோதனை சாலையில் நடந்த இரும்பு துருப்பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் ஆய்வுகளும், அந்த மையத்தின் தலைவர் டாக்டர் பி.பி.டே அவர்கள் அளித்த பேட்டியும் நினைவலையில் உலவி வந்த போது, புனே நகரில், பெளதிகம் சார்ந்த பரிசோதனை மையம் கண் முன் வந்து நின்றது. மாபெரும் கட்டடம். ஒரு குட்டி கலாட்டா. கவின் அழகைப் பாதிக்கிறது என்று இரு மரங்களை வெட்டிக்கொண்டு இருந்தனர். காரில் அந்த பக்கம் வந்த ஒருவர் ‘சட்’ என்று இறங்கி ஓடோடி வந்து அரைகுறை ஹிந்தியில் சத்தம் போடுகிறார். மரத்தை வெட்டக் கூடாது என்கிறார். மற்ற அதிகாரிகள் வந்து வினயத்துடன் பிரச்சினையைச் சொன்னவுடன், மலர்ந்த முகத்துடன், ‘ மூன்றாவது மரம் நட்டு விட்டால், அழகு கூடுமே’ என்றார். கணக்குப் புலி; பாவ்லாவோ பாலே நாட்டியத்திலும் ரசனை. அவர் தான் இன்றைய தலைமாந்தன், கரியமாணிக்கனார்.

    இராமனும் கிருஷ்ணனும் இணைந்து விஞ்ஞான சாதனைகள் புரிந்த கதை, இது. அணுக்களுக்குள் புகுந்து விளையாடிய சர். கே.எஸ்.கிருஷ்ணன் அவர்களை ராயல் சொஸைட்டியில் அனுமதிக்கப் பரிந்துரை செய்த சர்.சி.வி.ராமனின் பரிசோதனைகளுக்கு உடனிருந்து பல ஆராய்ச்சிகளை செய்த தம்பி கிருஷ்ணனை வானாளவ புகழ்கிறார், அண்ணா. ராமன் எஃப்பெக்ட்’ என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான சாதனை, சொல்லப் போனால், ‘ராமகிருஷ்ண எஃப்பெக்ட்’ தான். ஆனால், தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும், ராமன், ‘இது கிருஷ்ணன் எஃப்பெக்ட்’ என்கிறார். கிருஷ்ணன், ‘இது ராமன் எஃப்பெக்ட் தான்’ என்கிறார்.  பெளதிக சாத்திரத்தின் மற்ற கிளைகளிலும் இவரது கொடி பறந்தது. தற்காலத்தில், ஒளஷதங்கள், வர்ணங்கள், பிளாஸ்டிக், எரிபொருள்கள், நடையுடை யாவற்றிலும் கரியமாணிக்கனாரின் கைவண்ணம் மிளிர்கிறது.

    வத்திராயிருப்பு கிராமத்தில் டிசம்பர் 4, 1898இல் பிறந்த நமது கரியமாணிக்கம் சிவக்கொழுந்து சாரைப் பற்றி சொல்வது,’…அவர் விஞ்ஞானியல்ல. ஆனால். விஞ்ஞானத்தை விளக்குவதில் மன்னன். மகுடிக்கு மயங்கிய அரவம் போல எங்களைக் கட்டிப் போட்டார். பெளதிகமோ, பூகோளமோ, வேதியியலோ, அவரது ஸ்டைலே தனி. அவர் பாடம் மட்டும் நடத்தமாட்டார். பரிசோதனைகளைச் செய்து காட்டுவார். எங்களைச் செய்ய ஊக்குவார். அவரால் தான் நான் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டேன்…’.

    சிவக்கொழுந்து சாருக்கு நெடுஞ்சாண்கிடையாக தாள் பணிந்து வந்தனம் செலுத்தும்

    இன்னம்பூரான்

    சித்திரத்துக்கு நன்றி:

    http://royalsociety.org/DServe/dserve.exe?dsqIni=Dserve.ini&dsqApp=Archive&dsqCmd=ImageView.tcl&dsqDb=Catalog&dsqImage=EC_1940_12.jpg

    உசாத்துணை:

    http://www.vigyanprasar.gov.in/scientists/KS_Krishnan/KariamanikkamSKrishnan.htm

    Share
  • பாரதியின் வேத முகம் – 15

     

    -சு.கோதண்டராமன்

     

    செங்கதிர்த் தேவன்

          பாரதி பூணூலைக் கழற்றி எறிந்ததாக ஒரு திரைப்படத்தில் காட்டுகிறார்கள். அதற்கான சான்று எதுவும் அவரது எழுத்துகளில் இல்லை. மாறாக அவர் பிராமண தர்மத்தில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதையே அவரது படைப்புகள் காட்டுகின்றன.

    காஷ்மீர இந்துக்கள் எல்லோருமே பிராமணர்கள், வேறு சாதியினரே அங்கு இல்லை என்கிறார் பாரதி. தமிழ் நாட்டிலும் பிராமணர் அல்லாதார்க்குப் பூணூல் அணிவித்து, மது மாமிசங்களை நிறுத்தச் சொல்லி எல்லோரையும் பிராமணர் ஆக்க வேண்டும் என்றும் சொல்கிறார் அவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்குப் பூணூல் அணிவித்ததை நாம் அறிவோம்.

    பூணூல் என்பது யாகம் செய்வதற்கான அடையாளம் என்றும் அதற்கு மேல் அதில் ஒன்றும் முக்கியத்துவம் இல்லை என்றும் கூறுகிறார். எனவே பாரதி விரும்பியது என்னவென்றால், எல்லாச் சாதியினரும் யக்ஞம் செய்வதற்குரிய தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது தான்.

    யக்ஞம் என்பது தீ வளர்த்துச் செய்யப்படும் வேள்வி மட்டும் அல்ல, தெய்வ ஆராதனையாகச் செய்யப்படும் எல்லாச் செயல்களையும் குறிக்கும் என்கிறார். எல்லோரும் தெய்வத்தை ஆராதிக்கத் தகுதி பெற வேண்டும் என்பது அவரது விருப்பம்.

    அந்தணர்கள் செய்கின்ற ஜபத்தில் பயன்படும் காயத்ரி மந்திரத்தைப் பாரதி அழகான தமிழில் தருகிறார் கேளுங்கள்.

    செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன்

    எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.

     

    பாரதிக்கு ஓம் என்னும் பிரணவத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. ஒலிக்கு என்று ஒரு தனிச் சக்தி இருப்பதை அறிந்த அவர் மந்திரத்தைத் தமிழில் மொழி பெயர்த்த போதும் ஓங்கார ஒலியை விடாமல் அதைச் சமத்காரமாக மந்திரத்தின் நடுவில் நுழைத்திருப்பதைக் கவனியுங்கள்.

    காயத்ரி மந்திரம் தவிர சூரியனைப் போற்றும் மந்திரங்கள் பல வேதத்தில் உள்ளன. அதனால் பாரதியார் சூரியனைக் குறிப்பிடும்போது சீரடியாற் பழவேத முனிவர் போற்றும் செழுஞ் சோதி என்று பாராட்டுகிறார்.

    காலை ஸந்த்யா வந்தனத்தில் இந்தப் பாட்டுகள் உதய சூரியனை நோக்கி ஓதப்படுகின்றன. சூரியன் பரமாத்மாவின் ஞான ஒளி. இந்த தேவன் நான்கு அம்சங்கள் உடையவன். மித்திரன், வருணன், அர்யமான், பகன். இவருள்ளே மித்திரன் அந்த ஒளியின் அன்பைக் குறிப்போன். வருணன் அதன் அனந்த நிலை (எல்லையற்ற தன்மை) ஆவான். அர்யமான் வலிமைத் தேவன். பகன் அவ்வொளியின் இன்ப உணர்ச்சியாக நிற்பவன்.

                    “முழுமுதற் கடவுளுக்கு ஒளியே விழி. ஒளியையே சூரியன் என்று போற்றுகிறோம். பூலோகத்திலே ஒளியாகத் தோன்றும் சக்தி தான் சுவர்க்க லோகத்திலே ஞானமாகச் சுடர்கின்றது. அதன் அன்பு வடிவத்தை அதாவது தெய்வீக அன்பையே மித்திரன் என்று வாழ்த்துகிறோம்.

    இந்த முன்னுரைக்குப் பின் பாரதி அந்தணர்கள் தினசரி செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குப் பொருள் தருகிறார். எந்த மந்திரம் சொன்னாலும் பொருள் தெரியாமல் வெறுமே ஒலியைத் தியானம் செய்வதால் பயனில்லை என்பது அவரது கருத்து. அந்தக் கருத்துகளைத் தன் பாடல்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இனி மந்திரங்களின் பொருளையும் அவற்றைப் பாரதி தன் பாடல்களில் புகுத்தி இருக்கும் அழகையும் காண்போம்.

    மந்திரத்தின் பொருள்:

    மக்களைக் காப்பவன் சூரியன். அவனது புகழத் தக்க அழிவற்ற மனம் கவரும் பெருமைகளைத் தியானிக்கிறேன். சூரியன் அனைத்தையும் அறிந்து கொண்டு மக்களை நடத்தி வைக்கிறார். பூமியையும் வானுலகத்தையும் தாங்கும் சூரியன் ஜீவராசிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    பாரதியின் பாடல்

    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்

                    வாழி நோக்கிடும் வள்ளிய தேவா

                    காதல் கொண்டனை போலு மண் மீதே

                    கண் பிறழ்வின்றி நோக்குகின்றாயே

     

    மந்திரத்தின் பொருள்

                    அழியாத பலன் பெறுவதற்காக அவருக்கு நெய் ஹவிஸ் அளிக்கிறோம். சூரியனே யார் உம்மை நியமத்துடன் ஆராதிக்கிறானோ அவன் பரிபூர்ண தர்ம பலனுடன் கூடினவனாக ஆகட்டும். உம்மால் காக்கப்பட்டவன் நோய்வாய்ப்படான். பாவம் இவனைத் தூரத்திலிருந்து கூடத் துன்புறுத்தாது.

    பாரதியின் பாடல்:

    கவலைகள் சிறுமை நோய் கைதவம் வறுமைத் துன்பம்

                    அவலமாம் அனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமையாகும்

                    இவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேய்கள்

                    நலமுறு ஞானபானு நண்ணுக; தொலைக பேய்கள்

     

    மந்திரத்தின் பொருள்

    ஆன்ம ஜோதியாலும் பிரகாசத்தாலும் தேவர்களையும் மனிதர்களையும் அவரவர் கருமங்களில் புகுத்திக் கொண்டு சுற்றி வரும் சூரியன் பொன் மயமான தேரில் உலகங்களைப் பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறார்.

    பாரதியின் பாடல்

    பரிதியே பொருள் யாவற்கு முதலே

                    பானுவே பொன்செய் பேரொளித் திரளே

     

    மந்திரத்தின் பொருள்

    இருளை விழுங்கிக் கொண்டு உதிக்கும் உயர்ந்த ஜோதி, தேவர்களைக் காப்பவர். இவரைப் பார்ப்பதால் நாம் உத்தமமான ஆத்ம ஜோதியை அடைவோம். அந்த பிரசித்தமான, அனைத்தையும் அறிகிற சூரியனை கிரணக் குதிரைகள் உலகோரின் தரிசனத்திற்காக உயரத் தாங்கிச் செல்கின்றன.

    பாரதியின் பாடல்

    கடலின் மீது கதிர்களை வீசி

                    கடுகி வான்மிசை ஏறுதி ஐயா

     

    மந்திரத்தின் பொருள்

    மித்திரன் வருணன் அக்னி இவர்களது கண்ணாக விளங்கும் சூரியன் விசித்ரமான சர்வ தேவ ஸ்வரூபி. அசையும் பொருள் அசையாப் பொருள் இவற்றின் ஆத்மாவாக விளங்கும் சூரியன் தேவ லோகம், பூலோகம், அந்தரிக்ஷம் எங்கும் வியாபிக்கிறவர், கிழக்கில் உதிப்பவர், தேவர்களுக்கு நன்மை செய்பவர், கண் போன்றவர். இவரை நூறாண்டு காலம் வணங்குவோம், வாழ்வோம், உறவினருடன் குலாவுவோம், மகிழ்வோம், கீர்த்தி பெறுவோம், இனியன கேட்போம், இனியன பேசுவோம், தீமைகளை வென்று நிற்போம்.

    பாரதியின் பாடல்

    திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம்

                    மருவு பல்கலையின் சோதி வல்லமை என்பவெல்லாம்

                    வருவது ஞானத்தாலே வையகமுழுது மெங்கள்

                    பெருமை தானிலவி நிற்கப் பிறந்தது ஞான பானு.

     

    மந்திரத்தின் பொருள்

                    சூரியனைக் காண விரும்புகிறோம். விரும்பிய பலனை அளிப்பவரும் சிவந்த கண்ணரும் எல்லாம் அறிந்தவரும் எத்திக்கிலும் பிரகாசிப்பவரும் பெரிய கடலின் நீரின் நடுவிலிருந்து காலையில் உதிப்பவரும் ஆன சூரியன் முழு மனதுடன் என்னைப் புனிதன் ஆக்குவாராக.

    பாரதியின் பாடல்

    பண்ணிய முயற்சி எல்லாம் பயனுற ஓங்கும் ஆங்கே

                    எண்ணிய எண்ணம் எல்லாம் எளிதிலே வெற்றி எய்தும்

                    திண்ணிய கருத்தினோடும் சிரித்திடு முகத்தினோடும்

                    நண்ணிடும் ஞான பானு அதனை நாம் நன்கு போற்றின்

     

    இவற்றிலிருந்து பாரதி சந்தியா வந்தனத்தைப் பொருளுணர்ந்து போற்றியதை  அறிய முடிகிறது.

     

    Share
  • கரி உரி போர்த்தபிரான்

     

    -சு.ரவி

     

     

    வணக்கம், வாழியநலம்

    சிதம்அரம் கீழ்க்கோபுர வாயிலருகில் உள்ள கஜசம்ஹாரமூர்த்தி

    என்னும் கரி உரி போர்த்த பிரான் திரு உருவம். அருகில் ஐயனின்

    உக்கிரம்ம்கண்டு அஞ்சி, குழந்தை முருகனை இறுகப் பற்றி விலகிச் செல்லும் உமையவள்..

    பார்க்க, ரசிக்க…

    Share
  • அன்பே அழகானது – 4

    ராஜ்ப்ரியன்

    கார்த்திகை விளம்பர நிறுவனம் என்ற போர்டு தொங்கிய கட்டடத்துக்குள் மதன் நுழைந்ததும் அந்த அலுவலகத்துக்குள் இருந்தவர்கள் எழுந்து குட்மார்னிங் சார் என்றனர். மதன் அப்படியே நின்று ஒருமுறை திரும்பி வாசல் பக்கம் பார்த்தான், வணக்கம் வைத்தவர்களும் பார்த்தனர். யாரும் தன் பின்னால் இல்லை என்பதை கண்ட மதன் திரும்பி வணக்கம் வைத்தவர்களிடம் எனக்கு தான் வணக்கம் வச்சிங்களா என கேட்க எல்லாரும் சிரித்தனர்.

    என்ன புதுசா எழுந்து நின்னு வணக்கம் வைக்கறிங்க என கேட்டபடியே மதன் உள்ளே வந்தான்.

    சும்மா தான் சார் என்றாள் மஞ்சு. அருகே பாண்டியன், ரேவதி, கீதா, ஸ்ரீதர் நின்றிருந்தனர்.

    மத்தவங்களுக்கு வணக்கம் சொல்ற மாதிரி சொன்னாலே போதும். ஸ்கூல் வாத்தியார்க்கு சொல்றமாதிரி எழுந்து நின்னு சொல்றதெல்லாம் வேணாம். வெளியாளுங்களுக்கு தான் நான் எம்.டி. மத்தப்;படி இங்க வேலை பாக்கற ஏழு பேர்ல நானும் ஒருத்தன் சரியா என கேட்க.

    சரி சார் என தலையாட்டினர்கள் சிரித்தபடி.

    பிரபு எங்க ?.

    உங்க ரூம்ல சார் என்றாள் மஞ்சு.

    கதவை திறந்து உள்ளே போனதும் ஃசேரில் அமர்ந்திருந்த பிரபுவிடம் ஒரு எம்.டி வர்றன் எழுந்து நின்னு வணக்கம் வைக்கறதில்லையா?.

    செருப்ப கழட்டி தான் வைக்கனும்.

    அப்பறம் எதுக்கு மத்தவங்கள எழுந்து வணக்கம் வைக்க சொன்ன.

    சத்தியம்மா நான் சொல்லலடா.

    அப்பறம் என்ன புதுசா எழுந்து வணக்கம் வைக்கறாங்க என சந்தேகமா கேட்டதும்

    அதுவா, இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கிளையண்ட் ஆபிஸ்க்கு வந்து பார்த்துயிருக்காரு. நீயும் இல்ல, நானும் இல்லன்னதும் எனக்கு கால் பண்ணாரு. நான் வேகமா ஆபிஸ்க்கு வந்தன். எல்லாரும் உட்கார்ந்தபடி எனக்கு வணக்கம் வச்சத பாத்தவரு இது என்ன ஆபிஸா? இல்ல டீ கடையா? ஒரு மேனேஜர் வர்றார் மரியாதை இல்லாம உட்கார்ந்துக்கிட்டு வணக்கம் வச்சா என்ன அர்த்தம், நீங்க சரியில்ல, உங்க எம்.டி வரட்டும் பேசிக்கறன்னு கோபமா கர்ஜித்தாரு. அத கேட்டு எல்லோரும் மரியாதை ராமன்களா மாறிட்டாங்க.

    யார்ரா அந்த ஆபிஸர் ?.

    உங்கிட்ட பேசுவாரு அப்ப தெரிஞ்சிக்க என சிரித்தவன் அதெல்லாம் இருக்கட்டும் என்னச்சொல்றான் உன் பையன்.

    காலையில ஸ்கூல் போகும்போதே உம்முன்னு போயிருக்கான்.

    ஏன்

    ஃபைக்ல அழைச்சிப் போய் விடுன்னான், வேலையிருக்குடான்னு சொன்னன் அதான் கோபமா போயிருக்கான்.

    மதியம் லஞ்ச்.

    வாங்கிப் போய்த்தான் தரணும்.

    அதுக்கு தான் நாங்க சொல்றத கேளுடாங்கறோம்.

    டேய் சாமி காலையிலயே ஆரம்பிச்சி கடுப்பேத்தாத என்றபடியே கொஞ்சம் எல்லாரையும் உள்ளவரச்சொல்லு. பிரபு எழுந்து போய் தகவல் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் அக்கவுண்டன்ட் மஞ்சு, சீனியர் டிசைனர் பாண்டியன், டிசைனர்கள் கீதா, ரேவதி, விளம்பர பொறுப்பாளர் ஸ்ரீதர் என அனைவரும் அவன் முன் அமர்ந்திருந்தனர்.

    எப்படி நடந்துக்கிட்டு இருக்கு வேலையெல்லாம் ?.

    சார் இந்த மாசம் வர வேண்டிய பில் நிறைய பென்டிங் இருக்கு சார் என்றாள் மஞ்சு.

    ஸ்ரீதரை பார்த்ததும், காலேஜ், ஸ்கூல் அட்மிஷன் இப்பத்தான் நடக்குது பாஸ். ஏப்ரல், மே, ஜீன் மாசம் பில் எல்லாம் ஜீலைல தான் தருவோம்ன்னு சொல்லிட்டாங்க.

    அவுங்க ஜீலையில தந்தா எப்படி நாம ஆபிஸ்ச ரன் பண்றது என பிரபு கேட்க ஸ்ரீதர் மவுனமாகவே இருந்தான்.

    அடிக்கடி கரண்ட் கட் பண்றதால பேட்டரி பேக்கப் நாலு மணி நேரம் கூட வரமாட்டேன்குது இதனால ஓர்க் நிறைய பென்டிங்ல கிடக்கு. பெரிய யூ.பி.எஸ்சா போட்டா நல்லாயிருக்கும் சார் என்றான் பாண்டியன்.

    செய்துடலாம் பாண்டியா.

    வேற ஏதாவது என கேட்டும் அனைவரும் அமைதியாக இருந்தனர். சரி நான் அழைச்ச விஷயம் வேற. இப்ப நாம விளம்பரம் டிசைன் செய்து தர்றது, அத பேப்பர்களுக்கு தர்றது, பிரஸ் மீட் அரேஞ்ச் பண்றதுன்னு இருக்கோம். நாம அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நேரம் வந்துடுச்சி. நாம புதுசா டிஸ்ப்ளே விளம்பரம் செய்யலாம்ன்னு ஓரு ஐடியா.

    டிஸ்ப்ளே விளம்பரம்ன்னா என்ன சார் என ரேவதி கேட்க அனைவருக்கும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர்களது முகத்திலேயே தெரிந்தது.

    நகரத்தோட மையத்தல, மக்கள் நடமாட்டம் அதிகமாயிருக்கற பகுதியில இருக்கற பில்டிங்கோட மாடியில பத்துக்கு பத்து அளவுல எல்.இ.டி டிஸ்ப்ளே வச்சி விளம்பரம் ஓடவிடறது. நைட், பகல்ன்னு எல்லா நேரமும் ஓடிக்கிட்டு இருக்கும். சென்னை, மதுரை, கோயம்பத்தூர் பகுதியில வச்சியிருக்காங்க. இதல டெக்ஸ்ட் மட்டும் டிஸ்ப்ளே பண்ற மாதிரியும்மிருக்கு, வீடியோவ ஓடறமாதிரியும் இருக்கு. இப்ப வீடியோ ஓடறமாதிரி வச்சா தான் நல்லாயிருக்கும். நாம யாருக்கும் விளம்பரம் தர தேவையில்ல. நம்மை தேடி விளம்பரம் வரும் எப்படி என சொல்லி நிறுத்தியதும்.

    சூப்பர் ஐடியா பாஸ் என குதுகலித்தான் ஸ்ரீதர்.

    ஐடியா நல்லாத்தான் இருக்கு வருமானம் வருமா என இழுத்தான் பிரபு.

    நல்லா சம்பாதிக்கலாம் சார் என பிரபுவுக்கு பதில் தந்தான் ஸ்ரீதர்.

    ஓன் டைம் இன்வஸ்மென்ட். சிஸ்டத்தல ப்ரோகிராம் பண்ணிட்டோம்ன்னா ஆட்டோமேட்டிக்கா விளம்பரம் போய்க்கிட்டு இருக்கும். நமக்கு செலவுன்னு பாத்தா பில்டிங் வாடகையும், ஈ.பி பில்லும் தான் நீங்க ஓ.கேன்னு சொன்னா இறங்கிடலாம் எனச்சொன்னதும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். மவுனத்தை கலைத்து என்ன பாண்டியன் ஓ.கேவா இறங்கலாமா என கேட்டதும்

    இறங்கலாம் தான் சார். ஆனா அத பாத்துக்க ஒருத்தர் போய்ட்டா இங்க வேலை அதிகமாயிடும் சார்.

    பிரச்சனையில்ல பாண்டியன் யாராவது பசங்கயிருந்தா இரண்டு பேரை பாருங்க வேலைக்கு வச்சிக்கலாம்.

    அப்ப ஓ.கே சார்.

    அப்படியே டவுன்க்குள்ள எங்கயாவுது நல்ல இடம் கிடைக்குதான்னு பாருங்க.

    சரி சார்.

    ஒ.கே எல்லாரும் போய் வேலை பாருங்க என்றதும் அனைவரும் எழுந்துச்சென்றனர். கீதா மட்டும் சைலண்டாக எழுந்து சென்றது ஆச்சர்யமாக இருந்தது.

    வெளியேற முயன்ற மஞ்சுவை அழைத்து அக்கவுண்ட்ல எவ்வளவு அமௌண்ட் இருக்கும்.

    ஒரு லட்சம் இருக்கும் சார்.

    ஓ.கே என தலையாட்டியதும் கதவை சாத்திவிட்டு சென்றாள்.

    பிரபுவை பார்த்து மேனேஜர் சார் என அழைத்ததும்

    சொல்லுடா என்றான் கோபமான குரலில்.

    என்னடா அதுக்குள்ள கோபம்.

    புதுசா ஒரு ஓர்க் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி எங்கிட்ட சொல்றதில்லயா என கேட்டான் அதே கோபமான குரலில்.

    காலையில மதுரை கள்ளழகர் திருவிழா டிவியில ஓடிக்கிட்டு இருந்தது. அப்பத்தான் மதுரையில ஒரு இடத்தல டிஸ்ப்ளே விளம்பரம் ஓடறத பாத்தேன். நாமளும் பண்ணலாம்மேன்னு ஐடியா வந்ததும் சென்னையில இருக்கற ஒருத்தர்க்கு போன் பண்ணி தகவல் கேட்டேன் அவர் அவருக்கு தெரிஞ்சத சொன்னாரு. அதான் பண்ணா நல்லாயிருக்கும்மான்னு ஐடியா கேட்டேன். நீ என்னவோ வேலைய ஆரம்பிச்சிட்டு ஓடிக்கிட்டு இருக்கறமாதிரி பேசற என்றதும் கொஞ்சம் சாந்தமானவனிடம் நெட்ல அதப்பத்தின தகவல்கள தேடி எடுத்து வை. நான் போய் யூ.பி.எஸ் பத்தி விசாரிச்சிட்டு வர்றன்.

    டிசைன் வேலையும் பாக்கணும், இதயும் பாக்கணும்ன்னா என்னடா அர்த்தம்.

    சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்தல வச்சிக்கிட்டு வேலையப்பாருங்க எனச்சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

    யூ.பி.எஸ் மாடல்கள், ரேட், பேட்டரி, வாரண்டி பற்றி விசாரித்துவிட்டு, சில முக்கிய கிளையன்டுகளை பார்த்துவிட்டு அலுவலகம் வந்தபோது மதியம் மூன்றாகி இருந்தது. பசி வயிற்றை கிள்ள அப்போது தான் நினைவுக்கு வந்தான் ரஞ்சித். ஆஹா வேலை டென்ஷன்ல மறந்து போயாச்சே என நெஞ்சு பரபரக்க அலுவலகத்தில் இருந்து பள்ளியை நோக்கி வண்டியை விரட்டினேன். பள்ளி கேட் முன் வண்டியை நிறுத்தியதும் ஸ்கூல் விடற டைம் சார் வண்டிய ஓரம்மா விடுங்க என்றார் வாட்ச்மேன். அவர் சொல்லும் போதே மணியடித்தது பிள்ளைகள் ஓடிவர காத்திருந்த அவர்களது அம்மாக்களோடு ஒவ்வொரு பிள்ளைகளும் சென்றது.

    ரஞ்சித்தை கண்கள் தேடியது. நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள சார் என்ற குரல் காதருகே கேட்க திரும்பினேன். ஆட்டோ டிரைவர் மணி நின்றிருந்தவர், என்ன சார் நீங்களே வந்துயிருக்கிங்க.

    இல்ல மணிண்ணே. காலையில லேட்டானதால மதியம் லஞ்ச் வாங்கி எடுத்துக்கிட்டு வர்றன்னு சொல்லியிருந்தன், வேலை டென்சன்ல மறந்துட்டன். இப்பத்தான் ஞாபகம் வந்தது. அதான் என இழுத்ததும் என்ன சார் இப்படி பண்ணிட்டிங்க. எங்கிட்ட சொல்லியிருந்தா நான் வாங்கி வந்து தந்துருப்பனே என்றார்.

    பதில் சொல்ல முடியாமல் மீண்டும் பிள்ளைகள் வருவதை பார்க்க தொடங்கினேன். ஒரு பையனோடு ரஞ்சித் சிரித்து பேசிக்கொண்டு வருவது காண முடிந்தது. தூரத்தில் இருந்து என்னை பார்த்தவன் கை அசைத்தான். நானும் பதிலுக்கு கை அசைத்ததும் ஓடிவந்தான். தன்னுடன் வந்தவனை காட்டி டாடி நானும், இவனும் ஓரே க்ளாஸ். வினய்ன்னு பேரு என்றான்.

    ஹாய் அங்கிள் என்றவன் ஆட்டோ நிக்குது அங்கிள் நான் கிளம்பறன். ரஞ்சித்க்கு டாட்டா காட்டிவிட்டு சென்றான்.

    ரஞ்சித் என் முகத்தை பார்க்க நான் அவனிடம், ஸாரிடா. ஓர்க் டென்ஷன்ல மதியம் லஞ்ச்சோட வர்றன்னு சொன்னத மறந்துட்டேன். நீயாவது எனக்கு ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம்மில்ல.

    என்மேல உனக்கு அக்கறையேயில்ல டாடி என்றான் மெல்லிய குரலில்.

    பக்கென்றது. என்னடா இப்படி சொல்ற.

    எதுவும் பேசாமல் தரையை பார்த்தபடி நின்றான்.

    நான் குற்றணர்ச்சியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்து அவனை தூக்கி உட்கார வைத்துக்கொண்டு ஹோட்டலை நோக்கி சென்றேன். ஹோட்டலில் போய் அமர்ந்ததும் இட்லி தாங்க என்றதும் இட்லி வந்தது சாப்பிட்டுக்கொண்டே அடுத்து என்ன வேணும் என கேட்டதும் சோலாபூரி என்றான். அவனுக்கு சோலாபூரி, நான் ஒரு ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரிம் வாங்கி ரஞ்சித்திடம் தந்துவிட்டு அவனை அழைத்துக்கொண்டு ஆபிஸ் வந்தேன். இருவரும் சைலண்டாக வருவதை பார்த்து மஞ்சு அதியமாக பார்த்தாள். அறைக்குள் இருந்த பிரபு ரஞ்சித்தை கண்டதும் எனக்கு எங்கடா ஐஸ்கிரிம் ?.

    ஒன்னு தான் அங்கிள் வாங்கி தந்தாரு.

    பிரபு என் மெயில் ஓப்பன் பண்ணி யூ.பி.எஸ்க்கான டீட்டய்ல் இருக்கு அத பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு வா என்றதும் அவன் நீயும் வா ரஞ்சித் என்றபடி அவனையும் அழைத்துக்கொண்டு பிரிண்டர் அறைக்கு சென்றான்.

    அவன் வெளியே சென்ற அடுத்த நிமிடம் கதவை திறந்துக்கொண்டு தயங்கி தயங்கி கீதா உள்ளே வந்தாள்.

    என்ன கீதா?.

    தயக்கத்துடனே ஒரு ஹெல்ப் சார்.

    என்ன ?.

    அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கோம்.

    சொல்லவேயில்ல. என்னாச்சி ?

    கால்வலியால இரண்டு மாசம்மா கஸ்டப்பட்டாங்க. இரண்டு நாளைக்கு முன்னாடி நடக்க முடியாம போனதால சென்னைக்கு அழைச்சிம் போய் ஆஸ்பிட்டல்ல சேர்த்தோம். ஆப்ரேஷன் பண்ணனம்ன்னு சொல்லிட்டாங்க. ஆப்ரேஷன்க்கு பணம் தேவைப்படுது சார்.

    எவ்ளோ ?

    முப்பதாயிரம் சார்.

    எப்போ வேணும்.

    நாளைக்கு தந்தா நல்லாயிருக்கும் சார்.

    அப்போது பிரிண்ட் எடுக்கப்பட்ட பேப்பர்களோடு பிரபு உள்ளே வந்தவனிடம் கீதாவோட அம்மாவ ஆஸ்பிட்டல்ல அட்மிட் செய்துயிருக்காங்கலாம். ஆப்ரேஷன்க்கு முப்பதாயிரம் தேவையாம் ?.

    பிரபு கோபமாக கீதா பக்கம் திரும்பி ஏன் இப்படி பொய் சொல்ற என்றான் கோபமாக.

    தொடரும்………………

    Share
  • அவளா? இவளா?

    தேமொழி

     

    என்ன ஒரு செக்கச் சிவப்பு
    கண்ணைக் கவரும் வாளிப்பு
    மதியை மயக்கும் வனப்பு
    அழகிய பளபளப்பு மினுமினுப்பு
    பார்த்தாலே தெரியும் உன் மேன்மை
    பரவசமூட்டுவதோ உனது புதுமை
    உனையடைய விழைவதும் உண்மை
    அடைந்தாலோ கிடைத்திடும் பெருமை

    உன் இளமை, உன் வேகம்
    உன் ஆற்றல், உன் விவேகம்
    யாவும் அனைவரும் அறிவர்
    அனைவரின் விருப்பமும் நீயே
    அருகில் நின்று மயக்கும்
    உனை ஒப்பிடுகிறேன்
    தொலைவில் எனக்காகவே
    காத்திருக்கும் எனதன்புடன்

    இளமை இழந்து
    தளர்ந்த உடல்தான்
    புதுமையும் வேகமும்
    உன்போல் இல்லைதான்
    அன்று என் கல்லூரி காலத்தில்
    தொடங்கிய சொந்தம் அது
    இன்றும் என் குழந்களைச் சுமந்து
    பள்ளியில் சேர்க்கும் பந்தம் அது

    விட்டுப் பிரிவேனோ என்று
    எந்நேரத்திலும் தடங்கலின்றி
    நம்பிக்கையுடன் வேலைக்குச்
    செல்லத் தயாராக உதவிடும் பாங்கு
    கடும்பனி, காற்று, வெயில், மழை
    அனைத்திலிருந்தும் கொடுத்த
    அக்கறை நிறைந்த பாதுகாப்பை
    நன்றியுடன் நினைக்கிறது மனம்

    என்றும் எனதன்பை உன்னுடன்
    ஒப்பிடவே முடியாது என்னால்
    பிரிந்துவர நினைக்கவும் இயலாது
    அன்பை நோக்கி விரைகிறது
    எனது கால்கள் வெளியில்
    அழகு காத்திருக்கிறது அங்கே
    சிற்றுந்து விற்பனையாளரின்
    குளிரூட்டிய காட்சி அறையில்

     

     

     

    படம் உதவி:  http://www.graceorlando.com/wp-content/uploads/2013/05/OldCar-NewCarBulletinCover.jpg

    Share
  • வினையான விளையாட்டு

        பி.தமிழ் முகில் நீலமேகம்

          வனிதா, இளங்கலை இரண்டாமாண்டு பயிலும் மாணவி.அந்நகரிலிருக்கும் புகழ் பெற்ற கல்லூரியில் பயின்று வந்தாள். கல்வி, கலை என அனைத்துத் துறைகளிலும் திறமை வாய்ந்தவள்.குறும்புத்தனமும் சூட்டிகையும் நிறைந்தவளும் கூட.எப்போதும் கலகலப்பாய் வளைய வரும் அவளைச் சுற்றி எப்போதும் தோழிகள் கூட்டம் நிரம்பி வழியும். பந்தயம் கட்டி ஜெயிப்பதென்றால் அதிலோர் தனி ஆர்வம் அவளுக்கு.

       அந்தக் கல்லூரியில் கட்டுப்பாடுகள் அதிகம்.நூலகத்திற்கு செல்வதாகட்டும், கணிப்பொறி மையத்தினை பயன்படுத்துவதாகட்டும், அடையாள அட்டை இல்லாமல் உள்ளே நுழைய எவருக்கும் அனுமதி கிடையாது.ஒருமுறை, தோழிகளிடம்

    நான் லைப்ரரி கார்ட் இல்லாம லைப்ரரிக்கு போய் ரெஃபரென்ஸ் எடுத்துட்டு வந்து காமிக்கறேன்.என்ன பெட்?” என்றாள்.

    சரி.நீ போய்ட்டு வந்தீன்னா உனக்கு ஒரு டைரி மில்க் சாக்லேட்” என்று தோழிகளும் சொல்ல, “சரி” என்று கூறியவள் நூலகத்தினை நோக்கி நடந்தாள்.அனைவரும் எதிர்பார்த்தபடியே நூலக வாசலிலேயே அவள் நிறுத்தப் பட்டாள்.

    லைப்ரரி கார்ட் எங்க?” என்றார் அங்கிருந்த அட்டென்டர்.

    இல்லைக்கா, எங்க மேடம் என்னை வரச்சொன்னாங்க” என்றதும், அவள் உள்ளே அனுமதிக்கப் பட்டாள்.

    உள்ளே சென்ற அவள், அங்கு தனது விரிவுரையாளரைக் கண்டதும் திகைத்தாள்.ஒருவாறு,  சகஜ நிலைக்கு வந்தவள்,

    குட் ஆஃப்டர்னூன் மேம்” என்றுவிட்டு, “மேம், எனக்கு ரெஃபெரென்ஸ் புக் வேணும்.அடுத்த மாசம் செமினார்க்கு நிறைய நோட்ஸ் எடுக்கனும்.ஆனா, ஸ்டூடன்ட்ஸ்க்கு ரெஃபெரென்ஸ் புக்ஸ் தரமாட்டாங்க.நீங்க எடுத்து தந்தீங்கன்னா, நோட்ஸ் எடுத்துட்டு ரெண்டு நாள்ல குடுத்துடறேன் மேம்” என்றாள்.

            ஆசிரியையும் அவளுக்கு புத்தகம் எடுத்துக் கொடுத்தார்.அதை வாங்கிக் கொண்டு அவள் வெளியே வர, அன்று அவளுக்கு பந்தயத்தில் ஜெயித்ததற்கு ஒரு சாக்லேட் கிடைத்தது.

            ஓரிரு மாதங்கள் சென்றிருக்கும்.அன்று மாலை வகுப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், தோழிகள்  அனைவரும்  மரத்தடியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அவசர அவசரமாய் மூச்சிரைக்க ஓடி வந்தாள்  ரஞ்சனி.

    என்னடி? இப்படி மூச்சிரைக்க ஓடி  வர்ற ? என்னாச்சு? ” என்றாள் வள்ளி.

    ஏய், இன்னைக்கி ஹாஸ்டல்ல ரூம் செக்கிங் பண்ண வர்றாங்களாம்” என்று  பதட்டதுடன்  கூறினாள்.

    அதனால என்னடி? எதுக்கு இப்படி பயப்படற? ” என்றாள் வனிதா.

                         “நான் அடுத்த வாரம் நடக்க இருக்கற  கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம்க்கு, நாம போடப்போற கிராமிய நடனத்துக்கு தேவையான பட்டு சேலை,நகைகள் எல்லாம் வெச்சிருக்கேன். ரூம் செக்கிங் அப்போ பாத்தாங்கன்னா  காஸ்ட்லி திங்க்ஸ் வெச்சிருக்கறதுக்காக  ஃபைன்  போட்டுடுவாங்க.அது போக நான் இன்னும் நிறைய இங்கிலீஷ் நாவல் எல்லாம் வெச்சிருக்கேன்.பாட புத்தகங்களைத் தவிர வேற புத்தகங்கள் வெச்சிருந்தா எல்லா பொருட்களையும் வாங்கி வெச்சுடுவாங்க.அதுக்கு பிறகு அப்பா வந்து ஹாஸ்டல்  வார்டனை பார்த்து ஃபைன்  கட்டின பிறகு தான்  பொருளெல்லாம் தருவாங்க. அதுவும் போதாதுன்னு, ஒரு மாசம் காலேஜ் ஹாஸ்டல்ல இருக்க விட மாட்டாங்க.நானும் வெளியூர்ல இருந்து எப்படி தினமும்  காலேஜ்க்கு வந்துட்டு போறது?”

                 ஒரு பிரச்சனையும் ஆகாதுடி.எதுக்கு கவலைப்படற?” என்ற வனிதா சற்று நேரம் அமைதியாய் இருந்தாள்.நேரமானபடியால், தோழிகள்  அனைவரும் ஒவ்வொருவராய் கிளம்ப ஆரம்பித்தார்கள்.ஒருத்தி, “நான் ரூம்க்கு போய் என் திங்க்ஸ் எல்லாம் ஒழுங்கா அடுக்கி வைக்கறேன்.ரூம் செக்கிங் ன்னு பேச்சு அடிபடுதுல்ல.அப்புறம் திங்க்ஸ் ஒழுங்கா இல்லைன்னு கூட சில சமயம் ஃபைன்  போட்டுடுவாங்க.” என்றவாறு கிளம்பிச் சென்றாள்.மற்ற மாணவியர், ” நான் காலேஜ் பஸ்க்கு  போய் நிக்கறேன். இப்போ போய் நின்னாத் தான் ரெண்டு ட்ரிப் கழிச்சாவது வீட்டுக்கு போக முடியும்.” என்று கிளம்பிச் சென்றனர்.

              ஏதோ சிந்தனையில்  ஆழ்ந்தவள் போலிருந்த வனிதா, ” இருங்கடி.இதோ  வந்துடறேன்” என்றவாறு விறுவிறுவென்று  நூலகத்தின்  மாடிக்குச் சென்றாள். இப்பொதெதுக்கு செல்கிறாள் ? நூலகம் பூட்டும் நேரமாயிற்றே என்றெண்ணியபடி  அனைவரும் நிற்க, “இந்நேரம் எங்கடி போற? ” என்றொருத்தி கேட்க, “வந்துடறேன் இரு” என்று பதில் கூறிவிட்டு  சென்றாள் .

                நூலகத்தின் ஐந்தாவது தளமான மொட்டை மாடிக்குச் சென்றவள், அங்கிருந்து தன்  தோழிகளை அழைத்து கையசைத்தாள்.

    இந்நேரத்தில் எதற்கு அங்கு போனாள் ? “  என்று தோழிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கைப்பிடிச் சுவற்றின் மீது ஏறி  அமர்ந்தாள்  வனிதா. தோழியின் செய்கையைப் பார்த்து அதிர்ந்தவர்களாய்  ” ஏய் ! என்னடி பண்ற? ஏன்  அங்க ஏறி உக்காந்திருக்க?” என்றனைவரும் அலற   ” ஒரு பதினைந்து நிமிஷம்டீ , வந்துடறேன் ” என்றாள் .

                  இதற்குள், யாரோ நூலகத்தின் மாடியில், தடை செய்யப்பட்ட  பகுதியில் சுவற்றின் மீதேறி அமர்ந்து இருப்பதறிந்த ஆசிரியைகள் அங்கு வந்து விட்டனர். ஹாஸ்டல் பொறுப்பாசிரியர்கள் அனைவரும் என்ன ஆனதோ ஏதானதோ என்ற பரபரப்புடன் அங்கு ஓடி வந்தனர்.என்னாயிற்று, ஏதாயிற்று என்று பரபரப்புடன் விசாரித்தனர்.கூட்டம் சேர்ந்து வருவதைக் கண்ட வனிதாவிற்கு உள்ளூர  “ஒருவாறு இன்றைக்கு ஹாஸ்டலில் நடக்கவிருந்த  ரூம் செக்கிங் நடக்காதவாறு பரபரப்பை  செய்து விட்டோம். இந்த பரபரப்பு அடங்கி, அவர்கள் செக்கிங் ஆரம்பிக்க இன்று முடியாது. இனிமேல் செக்கிங் வருவதாய் இருந்தாலும், அவளது பொருட்களை நாம் வாங்கிச் சென்று, வீட்டில் வைத்திருந்துவிட்டு, அவள் ஊருக்குச் செல்லும் போது  கொடுத்துவிடலாம்” என்று எண்ணியவாறு இறங்க எத்தனித்தவள், நிலை தடுமாற ஆரம்பித்து விட்டாள் . மேலிருந்து கீழே பார்த்து  பேசிக் கொண்டு நின்றதில், அவளுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. தடுமாறி கைப்பிடிச் சுவரைப் பிடிக்க எத்தனித்தவள், எவரும் எதிர்பாராவண்ணம் கண்ணிமைக்கும் நேரத்தில், மாடியிலிருந்து விழுந்து விட்டாள் .

                          ஐயோ ” என்று  அலறியபடி விழுந்தவள் , எழுந்து கொள்ள எத்தனித்த போது, ஏதோ தன் உடலின் கீழ்ப்பகுதி மிகவும் இலேசாகிப் போனது போல் உணர்ந்தாள்.வலது கையை  தரையில் ஊன்றி எழுவதற்கு எத்தனித்தவள், கைகளை தரையில் வைத்ததற்கான உணர்வுகளே இல்லையே என்றெண்ணி கையைப் பார்த்தாள்.அப்போது ஓர் ஆசிரியர், ” என்னம்மா ! என்னாச்சு? என்ன செய்யுது உனக்கு? ” என்றலற, அவள் விழுந்த இடத்தில், அவள் உடலிலிருந்து ஏதோ நீராய்க் கசிந்திருக்க, “என்னாச்சுடீ உனக்கு? கீழ பாரு” என்று தோழிகள் அலற, அங்கு கண்டவள், சிறுநீர் தன்னிச்சையாய் வெளியேறுவதைக் கண்டதும் படபடப்பானாள். “ஐயோ! என்னால எழுந்திருக்க முடியலையே. என் கை, கால்ல உணர்ச்சியே இல்லையே ! ” என்றரற்றினாள்.

              அடுத்த சில நொடிகளில் ஆம்புலன்சில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு எடுத்துச் செல்லப் பட்டாள்.அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், ” அதிகமான எலும்பு முறிவு, அதிர்ச்சி, இவற்றினால  உணர்விழந்திருக்காங்க. எங்களால முடிந்தவரை நாங்கள் சிகிச்சை செய்யறோம். அதற்கு மேல் ஆண்டவன் தான் காப்பாற்றனும்.” என்று கூறி விட்டனர். 

                   கலையும் கற்பனையும் ஒருங்கே இணைந்தவோர் எழில் ஓவியத்தில் வண்ணக் கலவைகள் கொட்டி விட்டால் அது எந்நிலையில் இருக்குமோ, அதே நிலையில் தான் இருந்தாள் வனிதா. அவளது தாய் அன்னபூரணிக்கும் தந்தை கமலக்கண்ணனுக்கும் கண்களில் நீர் கரைபுரண்டோடியது.நினைவு தப்பிப் போய், உணர்விழந்தவளாய் கிடக்கும் மகளிற்கோர் வழி பிறந்திடாதா, என்றேங்கினர் அவளைப் பெற்றவர்கள்.

                தன்னைச் சுற்றிலும் நடப்பதை உணர்ந்து கொள்ள முடியாதவளாய் சிதிலமடைந்த ஓவியமென கட்டிலில் வீழ்ந்து கிடந்தாள் வனிதா.

                                    

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    Sundarji Prakashசென்ற வாரம்  ஹைதராபாதில் மணமான ஒரு பெண், தன் கணவனின் கொடுமை தாங்காமல் திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, ‘தம்’மெனப் பெரிய சப்தத்துடன் கீழே விழுந்து மரணித்துப் போன காட்சி.. நாங்கள் அப்போது ஒன்றாவது மாடியில் இருந்து இந்தப் பெரிய சப்தத்தைக் கேட்டு ஓடிப் பார்ப்பதற்குள் கூட்டை விட்டு அவள் உயிர் போய்விட்டது என்றுதான் நினைத்தேன். நமக்கு சம்பந்தமில்லாதவள்தான்.. இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஏதோ தகராறு போல.. தாங்க முடியாமல் அந்தப் பெண் தன் உயிரைத் தானே இப்படி மாய்த்துக்கொண்ட சோகம் இன்னமும் என் மனத்தை விட்டு விலகவில்லை..

    எத்தனைதான் இருந்தாலும் உயிர் என்ன அத்தனை மலிவா.. சடக்கென்று நினைத்தமட்டில் உதறிக்கொள்ள, அது என்ன அன்னப் பறவையா.. நீரில் வந்ததால் படர்ந்த ஈரத்தை சிறகடித்துப் போக்கிக் கொள்ளுவதைப்போல நினைத்த மாத்திரத்தில் நீக்கிக்கொள்ள முடியுமா.. இறைவன் கொடுத்த உயிரை இறைவனே எடுத்துக்கொள்ளும்வரை பொறுத்திருக்க வேண்டாமா.. நம்முடைய உடலில் உள்ள நம்முயிர்தான் அது.. ஆனாலும் நமக்கென்ன உரிமை அதன் மீது? மனிதனுக்கு அந்த உரிமை இல்லை என்றுதான் பெரியவர்கள் ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வருகிறார்கள். உயிர் வரும்போது அதை உணரும் அளவுக்குத்தான் மனிதனுக்கு உரிமை உண்டு என்றுதானே சொல்லி வருகிறார்கள். அந்த உயிர்உள்ள உடல் நீண்டகாலம் நிலைக்கவேண்டும் என்பதால்தானே இந்த உலகமே இத்தனை அல்லாடுகின்றது. உடலிலிருந்து முடிந்தவரை, உயிர் போக விடக்கூடாது என்றுதானே உலகத்து மருந்துகள், மாத்திரைகள், மருத்துவர்கள் என்று கோடிக்கணக்கானவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்..

    சென்று போனவள் எப்படியோ போய்விட்டாலும் எத்தனை கேள்விகளை விதைத்துவிட்டுப் போய்விட்டாள். ஆனால் இதற்கான விடையை அன்பர் சுந்தர்ஜி இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு மடலில் கவிதையாக எழுதி அனுப்பி இருந்தார். இதோ சுந்தர்ஜியின் கவிதை உங்கள் பார்வைக்கு:

             எறும்புக்கு ஒற்றை விரல்.

    கொசுவுக்கு ஒரு கை.

    ஓணானுக்கும்

    தட்டானுக்கும் ஒரு சுருக்கு.

    குருவிக்கு ஒரு சிறுகல்.

    பாம்புக்கு ஒரு கழி.

    தவளைக்கு ஒற்றை அடி.

    நத்தைக்கு ஒற்றை மிதி.

    நாய்க்கோ கல்லெறி.

    மாட்டுக்கும் பன்றிக்கும்

    ஆட்டுக்கும் கோழிக்கும்

    அதனதற்கேற்றாற் போல்.

    மீனுக்குப் புழு.

    யானைக்குப் பெரும்பள்ளம்.

    மானுக்கு ஒற்றைக் குறி.

    காளைக்கும் கழுதைக்கும்

    பெரும் பாரம்.

    ஒட்டகத்துக்கு

    முடிவில்லாப் பாலை.

    குதிரைக்கோ விதவிதமாய்.

    வாழாதிருந்து சாகிறான்

    மனிதன்.

    சாகாதிருக்க வாழ்கின்றன

    உயிர்களெல்லாம்.

    சுந்தர்ஜியின் கவிதையைப் படித்ததும் எத்தனை அருமையான விவரிப்பு என்றுதான் எனக்குப் பட்டது. மரணம் என்ற ஒன்றைப் பற்றி மனிதனுக்கு மட்டுமே உணர்வு உண்டு. அந்த உணர்வு உணரப்படுவதால் மனிதப் பிறவியை நல்ல விதத்தில் அவன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அந்தப் பிறவியைப் பயன்படுத்தி இன்னமும் மேல்நிலை அடையவேண்டும் என்பதுதான் இறைவன் விதித்த விதி. அந்த உணர்வை மதிக்காதவர் அருமையான இந்தப் பிறவியைப் பாழாக்கிக்கொண்டார்களே என்றுதான் வருத்தப்பட வைக்கிறது.

    நல்லதொரு விவரணையைக் கொடுத்த திரு. சுந்தர்ஜியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவர் மேலும் மேலும் பல கவிதைகள் தரவேண்டும் என்பது என் விருப்பம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும் சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான் உண்மையில் நீங்கள் அறிவுத் திறன் உடையவராய் இருக்க முடியும். ஜே.கிருஷ்ணமூர்த்தி – (திருமதி பவளசங்கரியின் ‘வெற்றிக் கனியைத் எட்டிப் பறிப்போமா’ என்ற கட்டுரையில் பார்த்தது)

    Share
  • மொட்டைக்காளி

    -விசாலம்

     

    காளியின் பல ரூபங்கள் கண்டிருக்கிறோம் .இது என்ன மொட்டைக்காளி என்று யோசிக்கிறீர்களா? இந்தக்காளி கோயிலில் இருப்பவள் இல்லை . இது என் வீட்டில் பல்லாண்டுகளாக வாழையடி வாழையாக பயணித்து வரும் ஒரு இலுப்பச்சட்டி. இந்த இலுப்பச்சட்டி என்ற பெயர் எதனால் வந்திருக்கும்? இரும்பினால் செய்த சட்டியானதால் வந்திருக்குமோ? சரி அது போகட்டும். நான் இப்போது மொட்டைக்காளியைப்பற்றி சொல்கிறேன்.

    ஐம்பதாண்டு முன் ……இதோ என் அம்மா கல்லுரலில் நீரில் ஊறிய அரிசியும் கொஞ்சம் வெந்தயமும் இட்டு நன்றாக நைஸாக அறைக்கிறாள். “கடக் கடக் ” என்ற ஒலிக்கேற்ப ‘சாமஜவரகமனா” என்ற ஹிந்தோள ராகப் பாடலை நான் பாடிப் பார்க்கிறேன்; தாளம் அழகாக அதில் அமர்கிறது. பாவம் அம்மா. இப்போது இருப்பதுபோல் மிக்ஸி இல்லாத நேரம் ஆனதால் வாரத்தில் ஐந்து நாட்களாவது இந்தக் கல்லுரலை அன்புடன் அணைத்துக் கொள்ள வேண்டும் இந்தக் காலமாக இருந்தால் கல்லுரலைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் முன் காலத்தில் அரைப்பதும் தோய்ப்பதும் மிகவும் ரசித்துச் செய்யும் வேலையாக இருந்திருக்க வேண்டும் . அந்த வேலைகளில் இருந்த “அக்குபிரஷர்’ அவர்களை நல்ல ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியது. தவிர தன் குடும்ப அங்கத்தினர்களுக்கென்று அன்புடன் செய்யும் சமையல் மிகவும் ருசியாகவும் நல்ல சத்துடனும் இருந்தது. அதுவும் குடும்பத்தில் பல உறவுகளுடன் அமர்ந்து சாப்பிட மனதுக்குள் ஒரு நிறைவும் ஏற்பட்டது. தற்காலம்போல் டிவியில் ஒரு கண்ணும் வாயில் என்ன போகிறது என்று தெரியாமலே நன்கு மென்று சாப்பிடாமல் இயந்திர கதியில் கவளம் கவளமாக விழுங்கி ஆபீஸுக்கு ஓடும் காட்சி அந்தக் காலத்தில் இல்லை. அந்தக் காலத்திலும் ஆபீஸ் இருந்தது வேலை இருந்தது அத்துடன் ஒரு கட்டுப்பாடும் இருந்ததால் இரவு பத்து மணிக்குள் படுக்கை. காலை பிரம்மமுகூர்த்தத்தில் கண் விழிப்பு என்று வாழ்க்கை அமைந்ததில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருந்ததது .இதனால் பிரச்சனைகள் மிகக்குறைவாக இருந்தன. அப்படியே இருந்தாலும் குடும்பத்தில் இருக்கும் மூத்த தலைவர்கள். தலைவிகள் அவைகளை எளிதாக தீர்த்து வைத்தனர்.

    ஐயோ எங்கேயோ திசை மாறி போய் விட்டேன். நான் சொல்ல வந்தது எங்க வீட்டு “மொட்டைக்காளி”யைப் பற்றி ……….. ஆ..எங்கே விட்டேன் , என் அம்மா தோசைக்கு அரைக்கிறாளா…… ஆம் அந்தத் தோசை வெந்தயத் தோசை. வெந்தயம் கலந்திருப்பதால் ஒரு விதமான பளபளப்புடன் ரொம்ப சாப்டாக இருக்கும் .. வயிற்றுக்கு ரொம்ப நல்லது . இந்த “மொட்டைக்காளி” அடிப்பக்கம் வழவழவென்று திருப்பதியில் மொட்டை அடித்ததுபோல் இருக்கும் ஆனால் கருப்பு கலர். அது எப்படி கருப்பு கலர் ஆனது என்று தெரியவில்லை. இரும்பானதால் அப்படி ஆகியிருக்குமோ என்னவோ! ரொம்ப சின்ன சைஸ் தான் ஆனால் தூக்கினால் நல்ல கனமாக இருக்கும் இரண்டு பக்கமும் காது கிடையாது , தூக்க வேண்டுமென்றால் இடுக்கியால் தான் தூக்கிப் பிடிக்க வேண்டும். முதல் நாள் அரைத்த மாவை இதோ என் அம்மா ரெடியாக எடுத்து வருகிறார். நிதானமாக அடுப்பை எரியவிட்டு அதில் இந்த “மொட்டைக்காளி” யை அமர்த்துகிறார் பின் கொஞ்சம் எண்ணெயை அதில் ஊற்றுகிறார் கொஞ்சம் சூடு வந்தவுடனே “சொய்” என்ற சத்தத்துடன் ஒரு கரண்டி மாவை அதில் இடுகிறார் . பின் ஒரு பிடி வைத்த மூடியால் அந்தத்தோசையை மூடுகிறார் . சில வினாடிகளுக்குப்பிறகு அதைத்திறக்க ஆஹா என்ன டிசைன் தோசையின் மேல் அழகாக பல புள்ளிகள் விட்டுக்கொண்டு அதன் கலரும் வெந்தயக்கலராக மாற என் தாய் என் தந்தைக்குப்பிடிக்குமே என்று கொஞ்சம் நெய்யும் ஊற்றுகிறார். கமகமவென்று வாசனை அறையைச் சுழ்ந்து கொள்ள நாக்கில் ஜலம் ஊறுகிறது . பின் அதைத் திருப்பிப் போடாமல் எடுக்க அழகாக “கும்”மென்று உப்பிக் கொண்டு ஒரு பக்கம் பிரௌன் கலராக இருக்க மறுப்பக்கம் புள்ளி டிசைன் போட்டபடி அழகாக இருந்தது. கொஞ்சமாவது அடிப் பிடிக்க வேண்டுமே! தோசையின் சைஸ் ஒரு சின்ன பூரியின் அளவுதான் இருக்கும் இதற்குத் தொட்டுக்கொள்ள மிளகாய்த் துவையல் அல்லது வெங்காயத் துவையல் ரொம்பவே ருசியாக இருக்கும். சில சமயம் இத்துடன் வெல்லம் சேர்த்து இனிப்பு தோசையாகவும் செய்வதுண்டு, கொஞ்சமாக பகோடா போடவும் இது உபயோகமாகும் இந்த மொட்டைக்காளி க்கு என் வீட்டில் ஒரே சண்டை. வீட்டில் பலரும் அதை அபகரிக்க முயற்சித்தனர். வீட்டுப்பெண்களும் அதில் கண் வைத்தனர் . நானும் தான். ஆனால் அதிருஷ்டமில்லை.

    அந்தச் சொத்து இன்னும் என் வீட்டில் என் தம்பியிடம் இருக்கிறது . பரம்பரையாக வரவேண்டுமென்பதால் வம்சத்தை வளர்க்கும் மகனுக்குத்தான் அந்தச் சொத்து சேருமாம் . அதே போல் நானும் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன். யாரிடமாவது இந்த பழையகால “மொட்டைக்காளி” இருந்தால் நான் வாங்கிக்கொள்கிறேன்.

     

    Share