அறுமுகநூறு (18)
சச்சிதானந்தம்
ஆற்றல்நிறை ஆதவனும் வணங்கி நிற்க,
ஆலயமாய்க் கானகமே அமைந்து நிற்க,
ஆற்றங்கரை நாகரிகம் பிறக்கும் முன்னே,
ஆறுமுகன் அவதரித்து அகிலம் காத்தான்! 86
வெட்டிரும்பின் விசையுடனே உள்ளத்தில் பாய்ந்து,
உட்செருக்கைக் கட்டறுத்து, நற்குணத்தின் மொட்டவிழ்த்து,
பற்றறுக்கும் பணியேற்று, எக்கணமும் துணையிருக்கும்,
தண்டபாணி கொண்டிருக்கும், காக்குந் தனிவேல்! 87
சிற்றின்பக் கோட்டுக்குள் கட்டுண்ட உலகை,
மற்றின்ப மாயைக்குள் மூழ்கிடும் மனதை,
அற்றின்ப துன்பங்கள், வாழ்ந்திடும் வழியில்,
கற்ற்பித்து வழிநடத்தும் கந்தனின் கருணை! 88
நிறமற்ற நீருக்கு நிறம்தரும் அருவியைப்போல,
உயிருக்கு நிறம்தந்து நிரந்தரமானவன் நாதன்,
மணமற்ற நிலத்துக்கு மணம்தரும் மழைத்துளிபோல,
மனதுக்குள் நறுமணம் பரவிடச்செய்வான் நாதன்! 89
நிலவின் தனித்துவம் இரவில் உதிப்பது,
இரவின் தனித்துவம் நிலவைச் சுமப்பது!
உயிரின் தனித்துவம் குகனைத் துதிப்பது,
குகனின் மகத்துவம் கருணை நிறைந்தது! 90
/////அற்றின்ப துன்பங்கள், வாழ்ந்திடும் வழியில்,
கற்பித்து வழிநடத்தும் கந்தனின் கருணை!////
////குகனின் மகத்துவம் கருணை நிறைந்தது!////
அருமையான வரிகள்!!!.
‘நாதன்’ என்ற திருநாமத்துள் இருக்கும் பொருளறிந்து, மிக அருமையாக,கருத்தாழம் மிக்க வரிகளுள் பொருத்தியிருக்கும் விதம் பிரமிக்கச் செய்தது. தொடர்ந்து படிக்க மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்!!!.