Blog

  • ஆழ்வார்கள் வரிசையில் அடிகள்!…

    மேகலா இராமமூர்த்தி

    குடிமக்கள் காப்பியமாக இன்றளவும் கோலோச்சும் சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள் பேசாத பொருளில்லை; பாடாத தெய்வமில்லை எனுமளவிற்குப் பல்வேறு துறைகளையும் தொட்டுக்காட்டி, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார்.

    சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், சமணம் என்ற பல்வேறு மதங்களின் வழிபடு தெய்வங்களையும் எவ்விதப் பேதமுமின்றிப் போற்றிப் பாடியுள்ளார். பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானையும், நீலமேனி நெடியோனாகிய திருமாலையும், அறுமுகச் செவ்வேளையும், மாலை வெண்குடை மன்னவனாகிய இந்திரனையும் பாடியுள்ளார்.

    மதுரைக் காண்டத்தில் ’வேட்டுவ வரி’ என்ற பகுதியில் கொற்றவையின் பெருமை வேட்டுவர்கள் மூலம் பேசப்படுகின்றது. வஞ்சிக் காண்டத்தில் இடம்பெற்றுள்ள இனிய பகுதியாகிய ‘குன்றக் குரவை’யில் மலைவாழ் மக்களாகிய குறவர், செவ்வேளாகிய முருகனைப் பாடிப் பரவிக் குரவையாடுகின்றனர். வெவ்வேறு தெய்வங்களைத் தொழுதேத்தும் வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் மூலம் அத்தெய்வங்களின் சிறப்பை அடிகள் நமக்கு கூறிச்செல்கின்றார். அவ்வாறு அவர் நமக்கு சுட்டிச் செல்லும் ஓர் அழகிய பகுதியே ஆய்ச்சியர் (இடையர்குல மக்கள்) திருமாலைப் போற்றிப் பரவும் ‘ஆய்ச்சியர் குரவை.’ மேற்குறிப்பிட்ட ‘வேட்டுவ வரி’, ‘குன்றக் குரவை’ ஆகியவற்றினும் விஞ்சிய பக்திச்சுவை ’ஆய்ச்சியர் குரவை’ப் பாடல்களில் வெளிப்பட்டிருப்பது கற்பார்க்கு நன்கு புலனாகும்.

    திருமாலின் அவதாரப்  பெருமைகளையும், அவன் செய்த  அருளிச் செயல்களையும் இப்பகுதியில் படிக்கும்போது, அக்காட்சிகளை நாமும் நேரில் காண்பதுபோலவே அல்லவா செய்துவிடுகின்றார் அடிகள்! சிலம்பில் இளங்கோவின் முத்திரை பளிச்சிடும் பகுதிகளில் தலைசிறந்த ஒன்றாக ‘ஆய்ச்சியர் குரவை’ திகழ்கிறது என்று கூறினால் அஃது மிகையில்லை. அத்துணை சிறப்புமிகு ’ஆய்ச்சியர் குரவை’யைச் சற்றே நாமும் சுவைத்தின்புறுவோம் வாருங்கள்.

    ஆயர் முதுமகளான  ’மாதரி’ (கண்ணகிக்கும், கோவலனுக்கும் மதுரையில் அடைக்கலம் தந்தவள்) காலையில் எழுந்ததும் தயிர் கடைவதற்காகக் கடைகயிற்றுடன் தயிர்த் தாழியிடம் செல்கின்றாள். தாழியில் பால் உறையாதது கண்டு திகைக்கிறாள். அத்தோடு ஆநிரைகளின் (பசுக்கள்) கண்களிலிருந்து கண்ணீர் வழிவதையும், அவை நடுங்கி நிற்பதையும் கண்டு, ’நமக்கு ஏதோ தீங்கு வருவதற்கான அறிகுறிகளாக இவை தோன்றுகின்றனவே’ என்று கலங்கி, ’நம் ஆயர்குலத் தோன்றலான கண்ணன், தன் அண்ணனாகிய பலராமனுடனும், காதலியாகிய நப்பின்னையுடனும் சேர்ந்தாடிய பால சரிதங்களைக் குரவைக் கூத்தாக ஆடி அவனைப் பணிவோம். நம் ஆநிரைகளுக்கும், கன்றுகளுக்கும் ஏற்பட்ட துயரத்தை அந்தக் கடல்வண்ணன் களைவான்’ என்று தன் மகளாகிய ‘ஐயை’ என்பவளிடம் கூறியபடிக் குரவையாட ஏற்பாடு செய்கின்றாள்.

    குரவைக் கூத்தென்பது  பெண்கள் எழுவராகவோ அல்லது ஒன்பதுபேராகவோ இணைந்து, நண்டுபோல் (மோதிர விரலையும், நடுவிரலையும் மடித்து) கைகோர்த்துக் கொண்டு கண்ணனின் புகழ்பாடியபடியே ஆடும் கூத்தாகும். இங்கே மாதரி, ஆயர்குல மகளிர் எழுவரை வரிசையாக நிறுத்தி அவர்களுக்கு மாயவன், பலதேவன், நப்பின்னை என்று (குரவை முறைப்படி) பெயர்சூட்டுகின்றாள். பின்பு நப்பின்னை என்று பெயர் சூட்டப்பட்டவள் தன்னருகில் நிற்கும் மாயவன் கழுத்தில் துழாய் (துளசி) மாலையைச் சார்த்தி கூத்தாடிக் கொண்டே பாடுவதாக இப்பகுதி அமைகின்றது. அவள் கண்ணனைப் புகழ்ந்து பாடுவதாக ’அடிகள்’ இயற்றியுள்ள பாடல்கள் தேனில் தோய்த்தெடுக்கப்பட்ட பலாச்சுளைகளாக இனிக்கின்றன. அவற்றை நாமும் சற்றுக் காதுகொடுத்துக் கேட்போம்.

    ”கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
    இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
    கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!

    கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
    எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
    முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!”

    இப்பாடல்களில் கண்ணனின் லீலாவிநோதங்கள் சிறப்பாய்ப் பேசப்படுகின்றன. கண்ணனின் மாமனாகிய ’கம்சன்’ குழந்தைக் கண்ணனைக் கொல்ல எத்தனையோ வழிமுறைகளைக் கையாள்கின்றான்; கணக்கற்ற அரக்கர்களையும், அரக்கியரையும் ஏவுகின்றான். அந்த ஆபத்துக்களையெல்லாம் அத்தெய்வக் குழந்தை மிகச் சாதாரணமாக எதிர்கொண்டு அப்பலவான்களைப் பந்தாடிய வரலாறு மிகச் சுவையானது. அவ்வரலாறுகளில் சில இப்பகுதியில் காட்டப்பட்டுள்ளன.

    கண்ணனைக் கொல்ல  விளா மரமாக வந்து நின்றான் ஓர் அரக்கன்; மற்றொரு அரக்கனோ கன்றுக்குட்டியாக வந்து நின்றான். ஆனால் சகலமும் அறிந்த அந்த மாயக் குழந்தை என்ன செய்தது தெரியுமா? கன்றிக்குட்டியாக வந்த அரக்கனையே குணிலாகக் (குறுந்தடி) கொண்டு, மரமாக நின்ற அரக்கன் மீது மோதி விளாங்கனியைக் கீழே விழச்செய்து இருவரையும் ஏககாலத்தில் அழித்தொழித்தது.

    கண்ணனைக் கொல்வதற்குக் குருந்த மரமாக வடிவெடுத்து நின்றான் மற்றோர் அரக்கன். அம்மரத்தை முறித்து அரக்கனை அழித்தான் கண்ணன். இத்தனை மாயங்கள் செய்த அந்தக் கண்ணன் இப்போது நம் பசுக்கூட்டங்களுக்கு மத்தியில் வருவானேயானால், உலகையே மயக்கும் அவன் புல்லாங்குழல் இசையை நாமும் கேட்டு இன்புறலாமே தோழீ! என்று பாடியபடியே குரவை ஆடுகின்றனர் ஆய்ச்சியர்.

    ‘முன்னிலைப் பரவல், படர்க்கைப் பரவல்’ என்ற தலைப்புக்களில் இங்கு இடம்பெற்றுள்ள பாடல்கள் திருமாலின் பல்வேறு அவதாரச் செய்திகளையும், அவற்றின் சிறப்புக்களையும் அற்புதமாக விவரிக்கின்றன.

    ”வானுலகத்திலுள்ள அமரர்களும் ’அறுதியான உறுதிப் பொருள் இவனே’ என்று போற்றித் துதிக்கும் திருமால், துவாபர யுகத்தில் கண்ணனாய் அவதரித்தான் என்பது அனைவரும் அறிந்ததே. குழந்தையாக இருந்தபோது, பசியே இல்லாமல் அனைத்து உலகங்களையும் உண்டவன் அந்தக் கண்ணன். அப்படி உலங்களையெல்லாம் உண்டவன், ஆயர்பாடியில் எல்லா வீட்டிற்குள்ளும் திருடனைப்போல் புகுந்து உறியிலிருந்த வெண்ணெயையும் உண்டானே! துளசி மாலை அணிந்தவனே, இஃதென்ன மாயம்…..! அச்சமும், வியப்பும் மேலிடுகின்றதே!

    அமரர்களெல்லாம் தொழுதேத்தும் திருமால், மற்றொரு சமயம் வாமனனாக (குள்ளன்) அவதாரம் செய்தான். மாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்று, ’மூன்றடி நிலம் வேண்டும்’ எனக் கேட்டான். மன்னனோ ஏளனத்துடன் ’உனக்கு வேண்டிய மூன்றடியை நீயே அளந்து எடுத்துக்கொள்’ (இந்தக் குள்ளன் மூன்றடியால் எவ்வளவு தூரத்தை அளந்துவிடப் போகிறான்? என்ற எண்ணம்) என்று கூற, அதுவரையில் வாமனனாக இருந்தவன் வானளவு உயர்ந்த ’திரிவிக்கிரமனாக’ மாறித் தன் செந்தாமரை போன்ற சிவந்த பாதங்களினால் இரண்டே அடிகளில் மூன்று உலகங்களையும் (அவற்றின் இருள் நீங்குமாறு) அளந்தான் அல்லவா! அப்படிப்பட்டவன் சாதாரண மனிதன்போல் பாண்டவர்களுக்காகவும் ’துரியோதனிடம்’ தூதனாக நடந்து சென்றான். பிரகலாதனைக் காக்க ’நரசிங்கமாக’ அவதரித்துப் பகைவனாகிய ‘இரணியனை’ அழித்தவனும் இந்தத் திருமால்தான் அன்றோ! இவற்றையெல்லாம் எண்ணும்போது மனம் மருட்சிகொள்கின்றதே!”

    மேற்கண்ட நிகழ்ச்சிகள் அடிகளின் அமுதவரிகளில்…….

    ”………………………………………………………………………………………………………………………………………………

    அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
    உறுபசியொன் றின்றியே உலகடைய வுண்டனையே
    உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
    வண்துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே!

    திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
    இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
    நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
    மடங்கலாய் மாறட்டாய் மாயமோ? மருட்கைத்தே!”

    ”மூவுலகங்களையும் இரண்டடியால் அளந்த அந்தப் பரம்பொருள், திரேதா யுகத்தில் இராமனாக அவதரித்துத் தன் சிவந்த அடிகள் மேலும் சிவக்கத் தன்னருமைத் தம்பியாகிய இலக்குவனோடு கான் புகுந்து, தன் மனைவியை மீட்கும் பொருட்டு ’சோ’ என்ற அரணையும், இலங்கை நகரின் காவலையும் அழித்தவன் ஆயிற்றே! அவன் பெருமைகளைக் கேளாத செவி என்ன செவி? என்று சினந்து வினவுகின்றார் இளங்கோவடிகள்.

    அந்தப் பெரியவனை, மாயக்காரனை, உலகமெல்லாம் தன் உந்தியில் விரித்தவனை, கண்களும், திருவடிகளும், கைகளும், அழகிய வாயும் சிவந்து தோன்றும் கரு நிறமுடையவனைக் காணாதகண்கள் என்ன கண்கள்? (பயனற்ற கண்கள்). கண்ணிமைத்துக் காண்பாருடைய கண்கள்தாம் என்ன கண்கள்? (இறைவனின் அழகைக் கண்ணிமைக்காது காணவேண்டும் என்ற குறிப்பு இங்கே சொல்லப்படுகின்றது. இல்லையேல் அஃது பயனற்றது என்கிறார் இளங்கோ).

    அறியாமை நிறைந்த  கஞ்சனின் (கம்சன்) வஞ்சத்தை வென்றவனை, வேதங்கள் முழங்க, அனைவரும் புகழப் பாண்டவர்களுக்காக ’நூற்றுவரிடம்’ (நூறு பேர் -கவுரவர்கள்) தூதாக நடந்தவனைப் புகழாத நா (வாய்) என்ன நா? நாராயணா என்று சொல்லாத நா என்ன நா? என்று அடிகள் தொடுக்கும் சொல்லம்புகள் நம் அகக்கண்களைத் திறந்து திருமால்பால் காதல் கொள்ள வைக்கின்றன.

    பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட அடிகள் அருளிய அற்புதப் பாக்கள் நம் பார்வைக்கு…..

    ”மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
    தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
    சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
    சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே?
    திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே?

    பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
    விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
    திருவடியும் கையும் திருவாயும் செய்ய
    கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே?
    கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே?

    மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
    கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
    படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
    நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
    நாராய ணாவென்னா நாவென்ன நாவே?”

    ஆழ்வார்களினும் விஞ்சிய  திருமால் பக்தியை, இறைக் காதலை இப்பாடல்களில் சிலப்பதிகார ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறினால் அஃது சற்றும் மிகையில்லை. திருமாலின் திருவருளின்றி இத்தகைய அற்புதப் பாடல்களை, அருட்பாக்களைப் படைத்திருக்க முடியாது என்பதில் ஐயமில்லை.

    ’ஆய்ச்சியர் குரவை’ வாயிலாய் நாம் அறியும் மற்றொரு முக்கியச்செய்தி, ‘இராமாயணம், மாபாரதம் போன்ற காவியங்கள் சங்க காலத்திற்கு முன்பிருந்தே நம் மக்கள் அறிந்த கதைகளாக வழக்கத்தில் இருந்திருக்கின்றன; அவை நமக்குப் புதியவை அல்ல’ என்பதே அது. (புறநானூறு, அகநானூறு போன்ற சங்க நூல்களிலும் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.)

    அடுத்து, திருமாலைப் போற்றிப் பாடிய பன்னிரு ஆழ்வார்களில் முதலாமவராகக் கருதப்படும் ‘பொய்கையாழ்வாரின்’ காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவரைவிடக் காலத்தால் மிக மூத்தவர் நம் இளங்கோவடிகள் (கி.பி இரண்டாம் நூற்றாண்டு). அடிகள் இயற்றிய ’ஆய்ச்சியர் குரவை’யே பின்னாளில் இயற்றப்பட்ட வைணவ பக்திப் பனுவல்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், தோற்றுவாயாகவும் விளங்கின்றது எனலாம்.

    சிலம்பில் இடம்பெற்றுள்ள ஓர் சிறிய பகுதியாகிய ’ஆய்ச்சியர் குரவை’யின் மூலம், கண்ணனின் குழந்தைப்பருவ மாயச் செயல்கள் தொடங்கி, அவன் வளர்ந்த பிறகு பாண்டவர்க்காகத் தூது சென்றது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும், திருமால் தன் மற்றைய அவதாரங்களில் நிகழ்த்திய அற்புதங்களையும், சாதாரண மக்கள் ஆடுகின்ற எளிய கூத்தின் வாயிலாக, அழகிய இசைப்பாடல் வடிவிலே சுருங்கச் சொல்லி விளங்கவைத்துவிட்ட ’கவிப்பேரரசர்’ இளங்கோவின் திறமையையும், நுண்மாண் நுழைபுலத்தையும் என்னவென்று புகழ்வது?

    இராமகாதை படைத்த கம்பரை நாம் ’கம்பநாட்டாழ்வார்’ என்று பெருமைப்படுத்தியுள்ளோம். கண்ணன் பாட்டுப் பாடிய மகாகவி பாரதியையும் ஆழ்வார்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டாடியுள்ளோம். இவர்கள் அனைவரிலும் காலத்தால் முற்பட்டவரும், திருமாலின் புகழை மிகச்சிறப்பாய் முதலில் எடுத்தோதியவருமான ’தெய்வக்கவி’ இளங்கோவடிகளை நாம் மூத்த ஆழ்வாராக, முதல் ஆழ்வாராகக் கருதிப் போற்றினால் தவறில்லை அல்லவா!

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.holydrops.com/photo-gallery/god/lord-krishna/5/83-lord-krishna-with-flute.htm

    http://www.holydrops.com/photo-gallery/god/lord-krishna/5/22-krishna-balram.htm

    Share
  • ஏப்ரல் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வெங்கட் சாமிநாதன்

    இம்மாதம் சிறுகதைகளின் வருகை இன்னமும் குறைந்துவிட்டது. வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம்.

    இம்மாதம் வந்துள்ள கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று என்று சொல்லக் கூடியது பழையவரும் தேர்ந்த கையுமான பழமை பேசியினது தான். கொழுகொம்பு

    அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர். இம்முறை மனிதனுக்கும் நாய்க்கும் இடையேயான உறவில் வாய் பேசாத ஜீவனின் நம்பிக்கையை மனிதன் பொய்க்கைச் செய்யும் கணங்களில் மனிதன் அதைக் குற்ற உணர்வோடு உணரச் செய்வது நன்றாக இருந்தாலும் அதை அதிக அலங்கார வார்த்தைகளால் நிரப்பாது செய்திருக்கலாம். இது காறும் பழமை பேசியின் எழுத்துக்களில் நான் காணாத ஒரு புதிய மாற்றம் இது

    ஒரு உதாரணத்திற்கு ஆரம்பத்தையே எடுத்துக்கொள்ளலாம்,

    நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் யாவும் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன்.

    எனக்கு இது வேண்டாம் என்று தோன்றுகிறது. மற்றபடி, அவரது சுதந்திரம் இது.

    இருப்பினும் அவரது கதை கொழு கொம்பு தான் வந்தவற்றில் சிறந்தது

    பழமை பேசிக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    அன்புடன்,

    வெ.சா..

    இந்த மாத சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற கதைகள்:

    எழுச்சி

    கல்யாணப் புடவை

    “ ஐ லவ் யூ “

    “ திருட்டுப் பூனைகள் “

    மை லிட்டில் ரெட் வேகன்

    கொழுகொம்பு

    மனதின் உயரம்….

    அன்பு நண்பர்களே,

    ’சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பார்கள். படைப்புத் திறனும் அப்படித்தான் அல்லவா. எழுத எழுத மெருகேறிக் கொண்டேயிருக்கும் இல்லையா. வெ.சா. ஐயா போன்று சிறந்த விமர்சகரின் மோதிரக் கையால் குட்டுப்பட நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  அதனைப் பயன்படுத்தி நம் திறமையையும் வளர்த்துக் கொள்ளலாமே.. இன்னும் நிறைய சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து தங்கள் படைப்புகளை வரவேற்கிறோம். இந்த முறையும் பரிசுக்கு உரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு பழமைபேசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (10)

    பவள சங்கரி

    இரசனையில் செல்வந்தராகவும், பொறாமையிலிருந்து விடுதலை பெற்றவராகவும், அடுத்தவரின் நன்மைகளைக் கொண்டாடுபவராகவும், இல்லாத மற்றும் இரக்கமற்ற வேளையிலும் இன்னும் நெருக்கமான பெருந்தன்மையுடனான இருதயத்தினாலான அன்பு – இவை அனைத்துமே பணத்தினால் வாங்க முடியாத பரிசுகள்.
    ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் (1850 – 1894)

    தயங்காமல் வழங்கவேண்டிய உற்சாகமான பரிசு!

    தத்தித் தத்தி முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தையைப் பார்த்தவுடன் யாருடைய குழந்தை என்ற பாரபட்சமில்லாமல் ‘ஆகா, அருமையாக நடந்துவிட்டாயே. நீ பெரிய ஆளாகிவிட்டாயே என் செல்லமே…’ என்றெல்லாம் மனமார பாராட்டத் தோன்றும். அந்தக் குழந்தையும் அதனைப் புரிந்து கொண்டு பெருமையாக அடுத்த அடியை எடுத்து வைக்க முயலும். அந்த சின்னச்சின்ன பாராட்டுகள் மூலமாகவே குழந்தை ஒவ்வொரு காரியமாக செய்து வளர்ந்து வருகிறது. வளர்ந்த பிறகும் மனிதர்களிடம் இந்த எதிர்பார்ப்பு அப்படியே நிலைத்துவிடுகிறது. பாராட்டுகளுக்கும், புகழுக்கும் பெருவிருப்பம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். நம்முடைய அந்த மனம் திறந்த நேர்மையான பாராட்டும் அவருக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அது யதார்த்தமான நல்லெண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. இதனால் மனமும் இலகுவாகி நம் பணியையும் உற்சாகத்துடன் கவனிக்க வழிவகுக்கிறது. அடுத்தவர்களின் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அதிகரிக்கும் விதமாக எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நாம் செய்யும் இந்த சிறிய காரியம் அவருடைய நல்லலெண்ணத்தை முழுமையாக சம்பாதித்துக் கொடுத்துவிடுகிறது. ஆக நம் சூழலுக்கு ஏற்றவாறு நம்மைச் சுற்றியுள்ள நம் சக மனிதர்களிடம் நம்மைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவதன் மூலம் நம்மைச் சுற்றியும் நல்ல விசயங்கள் நடந்து நம் வெற்றிப் பாதையை சீரமைப்பதையும் உணர முடியும்.

    கடந்த காலத்தில் நடந்துபோன தவறுகளை இறுகப் பிடித்துக்கொண்டு குற்ற உணர்ச்சியிலிருந்து மீளாமல் தவிப்பது நம்மில் பலரின் இயல்பாகாவே இருக்கிறது. தவறே செய்யாத மனிதன் என்ற ஒருவன் இந்த உலகில் பிறந்திருக்கப் போவதில்லை. சின்னச் சின்ன தவறுகளே நம்மைப் புடம் போட்ட பொன்னாக ஆக்குகிறது. செய்த தவறையே திருத்திக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பது மட்டுமே நிம்மதியைக் குலைக்கக்கூடியது. குற்ற உணர்ச்சியை ஒதுக்கி விட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் நம் மனதைச் செலுத்துவது அறிவார்ந்த செயல்.

    கடந்த காலம் என்பது உடைந்த பானை
    எதிர் காலம் என்பது மதில் மேல் பூனை
    நிகழ் காலம் என்பது கையில் வீணை

    மீட்க முடியாத கடந்த காலத்தை எண்ணிக் கொண்டிருப்பதை விட்டு, என்ன நடக்கப் போகிறது என்று உறுதியாக தெரியாத எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையையும் அளவாக நிறுத்தி, சுகமான இராகங்களை இசைக்கக் கூடிய வீணையான நிகழ் காலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சுகமாக வாழலாமே. சில நேரங்களில் நம் உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போல அன்பான மனைவிக்கு சிடுமூஞ்சியான கணவனோ அல்லது அமைதியான கணவனுக்கு அதிரடியான மனைவியோ வாய்ப்பதும் உண்டு. இது போன்ற நேரங்களில் எதிர்மறையான அவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல், தவிர்த்து வந்தாலே நாளடைவில் அவர்களே சலிப்படைந்து தங்களுடைய எதிர் வினைகளை குறைத்துக் கொள்ளக் கூடும். அதை விடுத்து ஒவ்வொன்றிற்கும் எதிர்வாதம் செய்வது என்று ஆரம்பித்தால் நம் வாழ்நாளில் பெரும் பகுதி அதிலேயே கழிந்துப் போவதோடு நம் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு காரியத்தையும் நிதானமாகவும், மகிழ்ச்சியுடனும், செய்யும் வழமையை மேற்கொண்டாலே நம் அகம் குளிர்ந்து முகம் பொலிவுறும் என்பதில் ஐயமில்லை அல்லாவா? அகத்தின் அழகுதானே முகத்தில் தெரியும்?

    படத்திற்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-_RbK8VLphH4/UOm42iJPH2I/AAAAAAAAAC0/FWP9rRUUZqY/s1600/inspirational-quotes-5.jpg

    Share
  • நட்சத்திர பரிதாபம்

     

     

    -தனுசு

     

    நாயும் அனாதையும்
    இங்கு
    ஒன்றானதடா!
    நாதியற்ற ஜீவன்களுக்கு
    வீதியே வீடடா!

    பேயும்
    பிசாசும்
    ஊருக்குள்ள வாழுதடா!
    மனித நேயமிங்கு
    மண்ணாகி நாறுதடா!

    நண்டு
    சிண்டு
    தடி
    கைத்தடி
    ஊருக்குள்
    அடங்காமல் ஆடுதடா!

    வியர்த்து
    களைத்து
    ஓடி
    உழைக்கும்
    உயிரெல்லாம்
    அடங்கிக் கிடக்குதடா!

    ஐந்தாண்டு திட்டங்கள்
    ஆரம்பமாச்சு
    அது
    ஐந்தாண்டுக்கொரு முறை
    புதுப்பிக்கலாச்சு
    ஐம்பதாண்டாய் இதே பேச்சு
    இன்று
    வேலைக்கு கூலியென்றாச்சு.

    நரிக்கூட்டம் நாட்டையாளும்
    நாடகத்தில்
    தொலை நோக்கு
    வறுமை போக்கு
    என்பெதெலாம் நடிப்படா!
    நம்பியிருக்கும்
    நாமெல்லாம்
    கண்டு களிக்க
    நடத்தும் கூத்துடா!

    அணு உலைக்கும்
    அரிசி விலைக்கும்
    பாதுகாப்பு இல்லையடா!
    இதில்
    ஏழைக் கிழவிக்கும்
    வாயில்லா ஜீவனுக்கும்
    எதிர்பார்த்தால்
    நீ ஒரு ஏமாளியடா!

    கருவறையும் இருட்டுடா
    கல்லறையும் இருட்டுடா
    இடைப்பட்ட பயணத்தில்
    வெளிச்சம் தருபவன் மனிதனடா!

    பணம்
    பதவி
    பட்டம் கொடுக்குமடா
    உயிர் விட்டால்
    பிணம்
    எனும் பட்டம்
    அனைவருக்கும் பொதுவடா!

     

    Share
  • பெண்மை

     

    -தமிழ்த்தேனீ

     

    ஏங்க ஒரு உதவி  என்றாள் காயத்ரி  சொல்லு என்றார் ஸ்வாமிநாதன். ஒண்ணும் இல்லே  இந்த உள்ளே  ஒரு வேலையா இருக்கேன் திடீர்ன்னு மழை வரா மாதிரி இருக்கு என்றாள் காயத்ரி

    பாத்துப் பாத்து கட்டின வீடு  மழையே வந்தாலும் அந்த உள்ளே  ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது என்று கூறிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார்  ஸ்வாமிநாதன்  ஏதோ விரதத்தை  மீறினாற்ப் போல்.

    அய்யே  போறும் வழியாதீங்க  கொல்லைப் புறம்  துணி காயப் போட்டிருக்கேன்   நனைஞ்சிடப் போகுது . அதையெல்லாம்  எடுத்துகிட்டு வாங்கன்னு சொல்ல வந்தேன்  என்றாள் காயத்ரி.

    சரி என்று சொல்லிவிட்டு  கொல்லைப்புறம் விரைந்தார் ஸ்வாமிநாதன்.  .

    அதிர்ந்தே பேசாமல்   இனிமையாகவே செஞ்சாலும் செய்வார், அப்பிடியே இஷ்டம் இல்லேன்னா    இனிமையாவே செய்யாம விட்டுடுவார் .கொஞ்சம் வழிஞ்சாலும்  நல்ல புருஷன்தான்  .

    அது சரி ஏன் இவரு  ரெண்டு நாளா இப்பிடி  கேட்ட கேள்விக்கு ஹும் ,இல்லே ,ஆமா  ன்னு  சுருக்கமா  பதில் சொல்றாரு  . ஏதோ  ரெண்டு வார்த்தை அவரை மறந்து பேசிட்டு  நாக்கை வேற கடிச்சிக்கறாரு , என்ன ஆச்சு இவருக்கு  திடீர்ன்னு காயத்ரிக்கு  சந்தேகம் .  சரி துணிகளை எடுத்திட்டு வரட்டும் கேப்போம் என்று  வேலையைத் தொடர்ந்தாள் காயத்ரி

    காயப் போட்ட துணிகளை எடுத்துக்கொண்டு  உள்ளே நுழைந்து மௌனமாக  ஒவ்வொரு துணியாக மடிக்கத்  தொடங்கினார் ஸ்வாமிநாதன்

    நான் மடிச்சு வெச்சிக்கறேன் .  ஆமா நீங்க பாட்டுக்கு  கலகலன்னு இருப்பீங்களே  என்ன ஆச்சு ஏன் ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கீங்க. ஏதாவது கேட்டா ஒத்தை வார்த்தையிலே  பதில் சொல்றீங்க.

    ஹும்ம்  ஒண்ணுமில்லே என்றார் ஸ்வாமிநாதன்

     

    இந்தாங்க காப்பி சாப்பிடுங்க என்று அவள் நீட்டிய காப்பியை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு  அப்படியே மேசை மேல் காப்பியை வைத்துவிட்டு   சோபாவில் உட்கார்ந்தார்  ஸ்வாமிநாதன் .. ஏன் காப்பி நல்லா இல்லையா வெச்சிட்டீங்க என்றாள் காயத்ரி

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு   என்று கூறிவிட்டு  தொலைக் காட்சியைப் பார்க்கத் தொடங்கினார்  ஸ்வாமிநாதன்

    ரெண்டு நாளா நான் கோவமா இருக்கேன் . ஒண்ணுமே தெரியாத மாதிரி எப்பிடி இவ்ளோ இயல்பா  இருக்கா இவ.  எனக்கு ரெண்டு நாளாக் கோவம்ன்னு இவளுக்கு  தெரியவே தெரியாதா ,  போச்சு ! எனக்கு கோவம்னே இவளுக்கு  தெரியலேன்னா  நான் கோவிச்சிகிட்டு  என்னா ப்ரயோசனம், இப்பிடி ஒரு நிலமை ஒரு ஆம்பிளைக்கு வரக் கூடாது என்று நினைத்துக்கொண்டார்  ஸ்வாமிநாதன்.

    சரி நீங்க டீவீ பாருங்க நான் போயி இருக்கற வேலையைக் கவனிக்கறேன் என்று எழுந்தாள் காயத்ரி.  இவளுக்கு எப்படியாவது  தான் கோபமாய் இருப்பதை உணர்த்த வேண்டும் என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்வதாய் நினைத்துக்கொண்டு  சாதாரணமாய் வைத்துக்கொண்டார்.

    இதோ பாருங்க எனக்கு உங்களைப் பத்தி  நல்லாத் தெரியும் .உங்களுக்கு கோவப்படத் தெரியாது ஏன் அனாவசியமா முகத்தை கோவமா வெச்சிக்கணும்னு ட்ரை பண்ட்ரீங்க , என்றாள்   காயத்ரி

    சிரித்துக் கொண்டே என் மேலே கோவம்னா சொல்ல வேண்டியதுதானே   என்றாள் காயத்ரி.

    ஓ வாய்விட்டு சொன்னாத்தான் புரியுமா எனக்கு கோவம்னு , ரொம்பக் கஷ்டம் . என்னை கவனிச்சு பாத்திருந்தாலே  தெரிஞ்சிருக்குமே, அது சரி நீ எங்கே என்னைக் கவனிக்கறே   என்றார்  ஸ்வாமிநாதன் சுய இரக்கமாய் .

    சரி விடுங்க ரெண்டு நாளா  நிறைய வேலை, நான் ஏதோ நினைப்புலே உங்களை கவனிக்கலே  . உங்களுக்கு என் மேலே கோவமே வராதுன்னு நான் நெனைச்சிட்டு இருந்தேனே. உங்களுக்கு என் மேலே கோபம் கூட வருமா  . அடடா எங்க வீட்டுலே உங்களைப் பத்தி நல்லா விசாரிச்சுதானே  என்னை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாங்க ஒங்களுக்கு கோவமே வராதுன்னு சொன்னாங்களே  என்றாள் நமட்டுச் சிரிப்புடன் காயத்ரி .

    ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொண்டு வந்து அவர் முகத்தருகே பிடித்துக்கொண்டு  இதோ இந்தக் கண்ணாடியிலே உங்க முகத்தை  பாருங்க,இப்போ சொல்லுங்க நீங்க கோவமா இருக்கீங்களா என்றாள் .

    அவருக்கே அவர் முகத்தைப் பார்க்க பாவமாய் இருந்தது. ஒரு சதவிகிதம் கூட அந்த முகத்திலே கோவமே தெரியலே. அட ஆமா என் முகத்திலே கோவமே தெரியலையே, நான் ரொம்பக் கோவமா முகத்தை வெச்சிண்டு இருக்கேன்னு  நெனைச்சிண்டு இருந்தேன். என்றார் ஸ்வாமிநாதன்.

    இப்போ சொல்லுங்க உங்களுக்கு என் மேலே, அதுவும் என் மேலே என்ன கோவம் என்றாள் காயத்ரி.  ஸ்வாமிநாதன் சொன்ன பதிலைக் கேட்டு  சிரிப்பாய் வந்தது காயத்ரிக்கு

    அதானே ப்ரச்சனை ! நான் எதுக்கு கோவிச்சிகிட்டேன்னு யோசிச்சு பாக்கறேன் . ஆனா ரெண்டு நாளா யோசிக்கறேன். எதுக்கு கோவம் வந்துதுன்னே  மறந்து போச்சே என்றார்  ஸ்வாமிநாதன். சிரித்தாள்  காயத்ரி

    இப்போ எதுக்கு சிரிக்கறே ! இந்தச் சிரிப்புலே மயங்கித்தானே கல்யாணமே பண்ணிகிட்டேன். உனக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு நான் பயந்த சுபாவம் உள்ளவன் ஏமாளின்னு அதான் என்னை ஏமாத்தறே என்றார்  ஒரு விதப் பெருமையுடன்

    நீங்களா பயந்தவர் , நீங்களா ஏமாளி .  அடேங்கப்பா  என் கிட்டேயே இப்பிடி சொல்றீங்களே அப்பிடியே  கொஞ்சம் நேத்திக்கு  அந்த பஸ்லே நடந்ததை நெனைச்சுப் பாருங்க,  அப்பா என்னா வீரம்  என்னா வீரம்  நானே பயந்து போயிட்டேன், எல்லாருமே பயந்து போயிட்டாங்களே

    அதுவா அது ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்திலே என்னை அறியாம வந்துது. பின்ன  கல்யாணம் செஞ்சிண்டு முதன் முதலா ஆசையா உனக்குன்னு நான் ஒரு புடவை எடுத்துக் குடுத்தேன் , அதை ஒருத்தன் பஸ்லே எடுத்தான். அவ்ளோதான் எனக்கு எங்கேருந்து அவ்ளோ வீரம் வந்துதுன்னே தெரியலே. அவனைப் போட்டு சாத்து சாத்துனு நல்லா சாத்திட்டேன். ஆனா ஒண்ணு இப்போ நெனைச்சா கூட பயமா இருக்கு . அவன் என்னை ஒரு அடி அடிச்சிருந்தாக் கூட நான் மயங்கி விழுந்திருப்பேன். நல்ல வேளை கையும் களவுமா பிடிபட்டுட்டமேன்னு அவன் பயந்து போயிட்டான் அதுனாலே நான் தப்பிச்சேன் என்றார்.

    இதோ பாருங்க   கோபம் பாபம் சண்டாளம்னு சொல்வாங்க  இந்த உலகத்திலே யாரு நம்மைப் பார்த்து பயப்படறாங்களோ அவங்களுக்கு நம்ம மேலே கோவம் வரும் ,  யாரைப் பாத்து நாம பயப்படறமோ அவங்க மேலே நமக்கு   கோவம் வரும். நீங்க பயப்பட மாட்டீங்க,அதுனாலே  கோப்ப்படவும் மாட்டீங்க , வீரமான ஆம்பிள்ளை நீங்க என்றாள் காயத்ரி.

    ஸ்வாமிநாதனுக்கு அவரை நினைத்தே பெருமையாக இருந்தது

    ஏங்க உங்க கிட்டே சொல்லணும்னு நெனைச்சேன்  ஒரு குட்டிக் காக்காய் நம்ம வீட்டிலே  மரத்திலேருந்து கீழே விழுந்துடுத்து, அதுக்கு சாப்பாடு வைக்கலாம்னு போனா அந்தப் பெரிய காக்காய்  என்னைத் துரத்துது

    அட்டா பாவம் அந்தக் காக்காய் குஞ்சுக்கு பசிக்கும் இந்த மேசை மேலே இருக்கற இட்லியை போட்டுட்டு வரேன் என்றபடி புழக்கடைப் பக்கம் போய் இட்லியைக் காக்காய்க் குஞ்சுக்கு போட்டுவிட்டு  உள்ளே வந்து  காயத்ரி ஒரு அதிசியம் பாரேன்

    நான் இட்லியை போடலாம்னு போனேன். அதே காக்காய் என்னையும்  துரத்த ஆரம்பிச்சுது. நான் அந்தக் காக்காய்கிட்ட  உன் குட்டிக்கு வயிறு பசிக்கும் அதுக்குதான் இட்லி போடப் போறேன். நான் உன் குட்டியை ஒண்ணும்  செய்ய மாட்டேன்  அப்பிடீன்னு பேசினேன்.

    அது அந்தக் காக்காய்க்கு  என்ன புரிஞ்சுதுன்னு தெரியலே அப்புறம் என்னைத் துரத்தவே இல்லே , அமைதியா   மதில் சுவத்துமேலே உக்காந்து பாத்துகிட்டே இருக்கு . அதுக்கு நல்லது செய்யறவங்க யாருன்னும் புரியுது. ஆனாலும் குட்டிக்கு ஏதேனும் ஆபத்து வராம பாதுகாக்கணும்னு  ஜாக்கிரதையாவும் இருக்கு என்றார்.    ஏன் காயத்ரி இந்தக் காக்காய் கூட இவ்ளோ புரிஞ்சுக்கறதே ஆச்சரியமா இல்லே என்றார்.

    வாசலில் யாரோ ஆழைப்பு மணியை அழுத்தினார்கள் . எதிர் வீட்டு ஜானகியம்மா , அடேடே  வாங்க வாங்க   என்றாள் காயத்ரி

    இதோ பாருங்க  காயத்ரிம்மா ஏதோ என் பொண்ணு பஸ் ஸ்டாண்டிலே நின்னு ஒரு பையன்கூட  பேசிகிட்டு இருந்தாளாம் .நீங்க என் பொண்ணைக் கூப்பிட்டு கண்டிச்சீங்களாமே  என்றாள்

    ஆமாங்க ஒங்க பொண்ணு அந்தப் பையன்  நல்ல ப்ரெண்டுன்னு சொல்லுது அனுபவப் பட்டவங்களுக்கு  பாத்தவுடனே தெரியும் இது சாதாரண ப்ரெண்ட்ஷிப்  இல்லேன்னு. அந்தப் பையன்  சரியான பையன் இல்லே. நம்மவீட்டு எதிர்லே இருக்கீங்க ,உங்க பொண்ணு அவனை நம்பி ஏமாந்து போயிடப் போறாளேன்னு  எச்சரிச்சேன் . நானே உங்ககிட்ட வந்து சொல்லணும்னு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க  என்றாள் காயத்ரி

    இதோ பாருங்க என் பொண்ணை எப்பிடி வளக்கணும்னு எனக்கு தெரியும். நீங்க அனாவசியமா அவகிட்ட பேசாதீங்க . நாங்க பாத்துக்கறோம் நீங்க உங்க வேலையைப் பாருங்க நான் வரேன் என்றபடி போனாள் ஜானகி

     

    என்ன காயத்ரி  இது உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. நீ நல்ல எண்ணத்திலே சொல்றேன்னு புரிஞ்சிக்காம பேசறாங்க அந்தம்மா

    அவங்களுக்கும் தெரியும் நான் நல்ல எண்ணத்திலேதான் சொல்றேன்னு. அவங்க பொண்ணு செய்யறதும் தெரியும்  இருந்தாலும் அதை என்கிட்ட ஒத்துக்க அவங்களுக்கு மனமில்லே அதுனாலெ  அவங்க பொண்ணு கெட்டுப் போகமாட்டா  நல்ல  பொண்ணு அப்பிடீன்னு அவங்களை அவங்களே  ஏமாத்திகிட்டு என் கிட்ட நடிக்கறாங்க

    முன்னாலே பள்ளம் இருக்குன்னு சொன்னா  ஒன் வேலையைப் பாத்துகிட்டு போ அப்பிடீன்னு சொல்லிட்டு    பள்ளத்திலே விழுந்துட்டு நீ வாயை வெச்சே நான் பள்ளத்திலே விழுந்துட்டேன்னு  சொல்றவங்கதான் மனுஷங்க

    ஆனா ஒண்ணுங்க அஞ்சறிவு படைச்ச எதுக்கும் நடிக்கத் தெரியாதுங்க , ஆறறிவு  மனுஷங்கதான்  நடிப்பாங்க என்றாள் காயத்ரி    நீ சொல்றது சரிதான்  என்று மீதி இருந்த காப்பியைக் குடிக்க ஆரம்பித்த அவருக்கு   திடீர்ன்னு ஒரு சந்தேகம்

    நமக்கும் நடிக்கத் தெரியலையே   அப்போ நமக்கு  அஞ்சறிவா, ஆறறிவான்னு !  மறுபடியும் அவருக்கு கோபம் வந்தது.

    அவரையே பார்த்துக்கொண்டிருந்த காயத்ரி

    அவர் மனதைப் படித்தாற்போல்  சிரித்தாள்

     

    Share
  • அறுமுகநூறு (12)

     

    -சச்சிதானந்தம்

     

    கிரியைச் சுற்றி வலம் வருவோம்,

    விரி மனமே என்று வணங்கிடுவோம்,

    உறியைச் சுற்றிய கண்ணன் மருமகன்,

    அடியைப் பற்றி நலம் பெறுவோம்!                                                                                  56

     

    வண்ண மயில் தோகையின் தண்டாக,

    வெண்முகம் கொண்ட வடிவேலா! மனம்

    வெண்டாகிச் சருகாகி, வன்மத்திற் கிரையாகி,

    உண்டான வடு நீக்கு வேலா!                                                                                             57

     

    நடந்து நடந்து நடைபழகித் துன்பத்தைக்

    கடந்து கடந்து துயர் விலகி,

    அடர்ந்து படர்ந்த அறியாமை நீங்கி,

    தொடர்ந்து உன்னைத் தொடர்ந்திடு வேனே!                                                                   58

     

    மனம் புரண்டு, தடம் இருண்ட

    நிலை கடந்து, நிறை வடைந்து,

    இறை உணர்வில் தினம் மகிழ்ந்து,

    எனை உனக்கு அர்ப்பணிக் கின்றேன்!                                                                               59

     

    அதி மதுர மதி முகத்தில்,

    எதி ரொலிக்கும் எழில் சிரிப்பில்,

    உதித் தெழுந்த பெரும் ஒளியில்,

    உழல் வினைகள் விலகி டுமே!                                                                                           60

     

    Share
  • உயிர்ப்பிழந்த சாசனங்கள்!!!

     

    -மகேந்திரன்

    நியாயத்தின் சாரங்களால்
    நியமனம் செய்யப்பட்ட
    நிதர்சன சாசனங்கள் – யாவும்
    நீர்த்துப்போன படிமங்களோ?!!

    படிமங்களாயின் பாதகமில்லை
    வடிவங்கள் உருமாறி
    நொடியிழந்த மணித்துளியாய் – தாவும்
    கடிவாளமற்ற புரவியாமோ?!!

    புரவியின் பிடரியாய் உலுக்காது
    நரம்புகள் தளர்ந்து
    தரங்களின் துணை தவிர்த்த – காவாம்
    நரகத்தின் காவலாமோ?!!

    காவலின் தொனியிலே
    பாவலன் போல் இறுமாந்து
    சேவகம் தனை மறந்து – பாழும்
    நாவடி பிறழ்ந்த வஞ்சகமோ!!

    வஞ்சகப் பேய்களுக்கு
    தஞ்சம் கொடுத்துவிட்டு
    நெஞ்சம் அழுகிப்போன – மேவும்
    மஞ்சம் வீழ்ந்த சாமரமோ!!

    சாமரத் தென்றல் வீசி
    கமல வதனம் சிவந்திருக்க
    கோமள நாண்பூண்டு – ஆங்கே
    தமனியன் தாள் புகுந்தாயோ!!

    புகுந்த வீட்டிலோ
    தகுந்த மரியாதை இல்லாது
    வெகுண்டால் வெண்காடு தானென – ஊதும்
    மகுடிக்கு அடங்கினாயோ!!

    அடங்கியதால் தவறென்று
    முடக்கியுனை போட்டுவிட்டு
    சடங்குகள் கொண்டாடி – உன்னை
    அடக்கிவைத்தல் நியாயம்தானே?!!

     

    Share
  • காக்கும் கடவுளாய்..

                   .

     செண்பக ஜெகதீசன்

    புதிது புதிதாய்க் கொடுப்பவன்

    போரிட வேலினை எடுப்பவன்,

    விதியை வேறாய் மாற்றுவான்

    வீட்டினில் ஒளியை ஏற்றுவான்,

    சதியை எளிதில் நைப்பவன்

    சாதனை செய்திட வைப்பவன்,

    பதியது செந்திலில் அருள்பவன்

    பணிந்திடு, காப்பான் முருகனே…!

     

    வங்கக் கடலலை வந்து தாலாட்டும்

    வாச மலர்கள் மலர்ந்து மணமூட்டும்,

    எங்குமே கூட்டம் கூடிக் கொண்டாட

    ஏழையும் உயர்வுற நின்று வாழவைப்பான்,

    திங்களைச் சூடிடும் ஈசன் திருமகன்தான்

    தீதெலாம் அகற்றிடும் திருமால் மருமகன்தான்,

    செங்கையில் வேலொடு அருளும் வேலவன்தான்

    செந்திலம் பதியெனும் இத்திருத் தலமதிலே…!

    படத்துக்கு நன்றி

    http://rajeswari-amman-wallpapers.blogspot.in/2011/01/lord-muruga-saravanna-hq-wallpapers.html


    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- 5

    சாகர் பொன்னியின்செல்வன்  

    கைரோ : எகிப்திய கலைபொருட்கள்.

    கீஸாவிலிருந்து சுமார் அரைமணிநேர பயணத்திற்கு ஒரு கலைபொருட்கள் கண்காட்சியகத்திற்கு மஹ்மூத் எங்களை அழைத்து சென்றார். ஏற்கனவே எகிப்திய கலை பொருட்களை அரசாங்கம் அங்கீகரித்த கடைகளில் வாங்குங்கள், சாலையோர கடைகளில் விற்பவை எல்லாம் சைனாவில் செய்த போலிகள் என்று அவர் சொன்னது நினைவிற்கு வந்தது. இந்த கடையில் எங்கு பார்த்தாலும் ஸ்பிங்கஸ், பிரமிட்கள், எகிப்திய கடவுள்கள் மற்றும் ஓவியங்கள். எகிப்தில் இந்தியாவில் உள்ள அளவு அத்தனை கடவுள்கள்! .

    சிறிது நேரம் சுற்றி பார்த்தபிறகு உள்ளே எகிப்திய கார்டூச்(Kartouche) சிலவற்றை காட்டி, எங்களுக்கு கார்டூச் வேண்டுமென்றல் செய்து தருவதாக சொன்னார்கள். கார்டூச் என்பது ஒரு வகையான ஆபரணம் நீண்ட டாலர் போன்ற இந்த ஆபரணத்தில் பெயரை ஹீரோக்லிய்பிக்ஸ் முறையில் எழுதியிருக்கும். பண்டைகாலத்தில் எகிப்திய அரசினரும், பெரியமனிதர்களும் அணிந்திருந்த ஒரு ஆபரணம் இது. வெள்ளியில் செய்யப்படும் இந்த ஆபரணம் சிறிதாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்தது. ஒன்று இருபத்தைந்து டாலர் என்றார் கடைகாரர். சரி பிள்ளைகள் இருவருக்கும் ஆளுக்கொன்று செய்வோம் என்று செய்தோம்.

    கார்டூச் செய்யும் முறை மிகவும் சுவராசியமாக இருந்தது. அதை பார்க்கும் போது காபி கொடுத்தார்கள், மிகவும் கசப்பான கஷாயம் போன்ற துருக்கிய காபி. வாயில் வைத்தவுடன்  ஒரு மடங்கு முழுங்குவது ஆலகால  விஷத்தை முழுங்குவது போல இருந்தது. சிறிது நேரம் நான் குடிக்காமல் வைத்திருந்ததை பார்த்துவிட்டு , “இது பிடிக்கவில்லை என்றால் சாய்” எடுத்து வரட்டுமா என்றார்.   மிகவும் பணிவாக வேண்டாம் என்று மறுத்தேன்.

    கார்டூச் ஒரு நீள்வட்டமான உலோகத்துண்டு, அதை அலங்கரிக்கும் சிறிய உலோகத்துண்டு  மற்றும் இவற்றை இணைக்கும் ஒரு கயிறால் ஆனது. சிறிய உலோகத்துண்டு பெயரின் முடிவை குறிக்கும். நீள்வட்ட துண்டில் பெயரை எகிப்திய மொழியில் பத்தவைப்பார்கள். நமது விருப்பத்திற்கு ஏற்ப பலவகையான பதக்கங்கள் உள்ளன, பின்னர் நமது பெயரை ஹீரோகிளிபிக்ஸ் மொழியில் எழுதி காட்டுவார்கள். நாம் ஒப்புதல் அளித்தததும் அந்த எழுத்துக்களை தேர்ந்தெடுத்து நம் கண் முன்னாலே பத்தவைத்து பட்டைதீட்டி கொடுத்தார்கள். நமது சிறிய ஊர்களில் உள்ள தங்க ஆசாரிகள் வீட்டில் கும்முட்டி அடுப்பில் செய்வது போலதான் இவர்களும் இந்த பதக்கத்தினை செய்கின்றனர். பெரும்பாலும் வெள்ளியில் தான் இந்த பதக்கங்கள் செய்யபடுகின்றன.

    இவ்வகையான கார்டூச் பதக்கம் மட்டும் இன்றி கல்வெட்டுகளிலும் காணப் படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    எகிப்திய அரசர்களை போல தங்களுக்கும் கார்டூச் கிடைத்த சந்தோஷத்தில் பிள்ளைகள் இருவர் முகத்திலும் பெரும் சந்தோஷம் பொங்க வேக நடைபோட்டு வந்து வேனில் ஏறிக்கொண்டார்கள்.

    பிறகு மஹ்மூத் எங்களை ஒரு பாபிரஸ்(Papyrus) செய்து விற்கும் ஒரு ஸ்தாபனத்திற்கு அழைத்து சென்றார். காட்சியகத்திற்கு நுழைந்த எங்களை மிகவும் இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார் ஒரு பெண்மணி. பாபிரஸ் எப்படி செய்தனர் என்பதை விளக்கி பின்னர் அங்குள்ள பாபிரஸ் ஓவியங்களை கட்டுவதாக சொன்னார்.

    பாபிரஸ் என்பவை பண்டை எகிப்தியர் உபயோகப்படுத்திய ஒரு வகை காகிதம். இந்தியாவில் எப்படி ஓலைசுவடிகளில் இலக்கியங்களை எழுதி வைத்தார்களோ அதுபோல எகிப்தியர்கள் பாபிரஸ் என்ற இந்த காகிதத்தில் எழுதி வைத்தனர்.

    நைல் நதி தீரத்தில் விளையும் ஒரு செடிதான் இந்த பாபிரஸ், தமிழகத்தில் ஆறு மற்றும் எரிகரையில் விளையும் நெட்டி போன்றது இந்த செடி. நல்ல நறுமணம் உள்ள இந்த செடி மிகவும் போற்றப்படும் ஒரு செடி.

    இந்த செடியின் முக்கோண வடியுடைய தண்டுகளை வெட்டி , அதன் பச்சை தோலினை செதுக்கி உரித்து உள்ளே உள்ள வெள்ளை நிற தண்டுகளை சேகரித்தனர் எகிப்தியர்கள். அந்த தண்டுகளை நீட்டவசமாக நறுக்கினார். நறுக்கிய துண்டுகளை தண்ணீரில் ஊறவைத்தனர் என்று சொன்னார். பண்டை நாட்களில் நைல் நதியின் நீரில் மட்டுமே அதனை பதப்படுத்தமுடியும் என்று நம்பினார்கள் ஆனால் எந்த தண்ணீரானாலும் போதும் அது பாபிரஸ் செய்ய உதவும் என்று பிற்பாடு அறிந்தனர். ஊறிய இந்த சிறு தண்டுகளை அழுத்தி தண்ணீரை வெளியேற்றினார்கள். பின்னர் அழுத்திய துண்டுகளை குறுக்கும் நெடுக்குமாக பாய் போல அடுக்கினார்கள். அடுக்கிய சதுரமான நெய்தலை ஒரு சமமான அமைப்பில் வைத்து இடித்து தட்டையாக்கினர். இப்படி செய்யும்போது தண்டிலிருந்து வெளியேறும் சாறும் பாலும் சேர்ந்து தண்டுகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்து ஒரு சீலை போல மாற்றும். அடுத்ததாக இதனை இரண்டு துணிகளின் நடுவே வைத்து அழுத்தி காயவைத்தனர்.

    இப்படி பதப்படுத்தப்பட்ட இந்த பாபிராஸ் ஓவியங்கள் வரையவும், காவியங்கள் எழுதவும் பயன்படுத்தப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பாபிரஸ் பல விஷயங்களை நமக்கு விளக்கியது.இவ்வாறாக எப்படி பாபிரஸ் செய்வது என்ற செய்முறை விளக்கம் அளித்து, அங்கிருந்த ஓவியங்களை பார்த்து எதாவது வாங்குங்கள் என்றார். மேலும் வெளியில் கம்மி விலைக்கு விற்கும் பபிருஸ் எல்லாம் வாழைத்தண்டில் செய்த போலி என்றும் விளக்கினார். சிறிது நேரம் வித விதமான படங்களை பார்த்து முடித்து எதுவும் வாங்காமல் வண்டியில் ஏறி கிறித்துவ கைரோ நோக்கி சென்றோம்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(55)

    சக்தி சக்திதாசன்

     அன்பினியவர்களுக்கு ,

    அடுத்தொரு மடலில் அன்புடன் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.

     ஒவ்வொரு புலம்பெயர் தமிழனின் வாழ்விலும் தான் வாழும் நாட்டில் “குடியேறுதல்” (Immigration) எனும் கொள்கையினால் ஏற்படும் தாக்கங்களைப் பற்றிய அக்கறை எப்போதுமே தகித்துக் கொண்டிருக்கும்.

     காரணம்?…..

    அதன் எதிர்மறையான தாக்கம் அவர்களது அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், தாம் வாழும் சமுதாயத்தில் அந்நாட்டின் சொந்த ம்க்களெனக் கருதப்படுவோர் தம்மை நோக்கி காட்டப்போகும் உணர்வுகள் என்பனவற்றைப் பற்றிய பிரதிபலிப்புகளே !

    அவ்வகையில் நான் வாழும் இந்த இங்கிலாந்து தேசத்திலே வெளிநாட்டவரின் வருகையால் “குடியேறுதல்” எனும் இந்தக் கொள்கையின் அழுத்தம் தற்போதைய அரசியல் வானிலே வாக்குப் பெறும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    இங்கிலாந்து தேசத்து வெள்ளை இன மக்களிடையே தாம் தமது சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறிக் கொண்டிருப்பதாக எழும் ஒரு பிரமைக்கு பல அரசியல் கட்சிகளும் அதன் பங்களிப்பாளர்களும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் , இத்தகைய ஒரு பீதி இந்நாட்டு மக்களிடையே எழுவதன் பின்னனியைச் சற்று ஆராய்ந்தோமானால் அதற்கு வலுவான காரணங்கள் உண்டு என்பதனையும் நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    அவ்வெளிநாட்டவர் “குடியேறுதல்” கொள்கைவழி எனது வாழ்வினை இந்நாட்டில் மேற்கொள்ளுபவர்களின் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்தாலும், இத்தகிய பீதியின் உருவாக்கத்திற்கு எம்மைப் போன்றவர்களின் நடவடிக்கைகள் வழிகோலாமலில்லை என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

    பி.பி.சி நிறுவனத்தின் அரசியல் அவதானிப்பாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான “நிக் ரொபின்சன் ” (Nick Robinson) என்பவர் சமீபத்தில் ஒரு ஆய்வொன்றை நடத்தியிருந்தார்.

    இங்கிலாந்தின் “கேம்பிரிட்ஜ்சையர் (Cambridgeshire)” எனும் மாவட்டத்தைச் சேர்ந்த “பீட்டபரோ (Peterborough)” எனும் இடத்தில் ஒரு சிறிய மாதிரி ஆய்வை நடத்தியிருந்தார்.

    சுமர் 40 வருடங்களின் முன்னே ஒரு முற்றிலும் ஆங்கில நகரமாயிருந்த இந்நகர் இன்றைய வெளிநாட்டவரின் “குடியேறுதலை” அடுத்து எவ்வகையான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது என்று ஒரு சிறிய காணோளியை எடுத்துள்ளார்.

    இன்றைய பீட்டர்பரோ நகரில் சுமார் 24000 வெளிநாட்டவர் குடியேறியுள்ளார்கள். இவர்களில் பல வருடங்களுக்கு முன்னால் மிகவும் அன்புடன் வரவேற்கப்பட்ட பல ஆசிய நாட்டு மக்களுடன் சமீபத்தில் குடியேறிய கிழக்கு ஜரோப்பிய மக்கள் பலரும் அடங்குகிறார்கள்..

    நிக் ரொபின்சன் அவர்கள் பலரை நேர்காணல் கண்டுள்ளார். அப்போது அவருடன் உரையாடிய ஒரு பீட்டர்பரோ நகரைல் பல தலிமுறைகளாஅக வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தவர் தான் அந்நகரை விட்டு வெளியேறப் போவதாகவும், தனது குழந்தைகளின் கல்வியைப் பற்றி தான் சச்சம் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

    வகுப்பறைகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அவர்களின் கல்வியின் தரம் குறைகின்றது என்று குற்றம் சாட்டியதோடு, பல வெளிநாட்டவர் பொது இடங்களில் தமது சொந்த மொழிகளில் உரையாடும் போது அருகிருக்கும் தனக்கு அவர்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்று தெரியாததினால் அவர்களின் மீது சந்தேகக் கண் கொண்ட பார்வையையே வீசத் தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.

    அதே போல இரண்டு, மூன்று தலைமுறைகளாக பீட்டர்பரோ நகரில் வாழ்ந்து வரும் குடியேறிகளில் ஒருவரான சீக்கியர் ஒர்வருடன் நிக் ரொபின்சன் பேசியபோது அவரது கருத்துக்கள் ஆச்சரியமானவைகளாக இருந்தது.

    சமீபத்திய வெளிநாட்டவர் இங்கிலாந்து சமுதாயத்துடன் கலந்து வாழாமல் தாம் தனிக்குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இது இப்பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்கிறார் இவர்.

    அட ! ஒரு வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய சமூகத்திலிருந்து வந்த உங்களுக்கே இப்படியான கருத்து இருக்கிறதா ? என ஆச்சரியப்பட்ட நிக் ரொபின்சனிடம் தற்போதைய “குடியேறுதல்” கொள்கை அளவுக்கதிமான வெளிநாட்டவரின் வருகைக்கு இடமளிக்கிறது என்று வேறு அந்தச் சீக்கியர் குறிப்பிட்டார்.

    உண்மையான தெளிவான வகையில் யதார்த்தத்தை முன்னிலைப்படுத்தி கூற வேண்டுமானால் வேறுநாடுகளில் இருந்து இங்கிலாந்து தேசத்தில் குடியேறிய எம்மைப் போன்றவர்கள் சமுதாய ஒருங்கிணைப்புக்கு எவ்விகிதத்தில் எமது பங்களிபினைச் செய்திருக்கிறோம் என்பது கெள்விக்குறியே !

    எமது நாடுகளில் கிடைக்காத அளவு சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம் எமது காலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாக்கிறோம் எனும் மன்ப்பான்மையினால் எம்மை இந்தச் சமுதாயத்தினின்றும் வேறுபடுத்தி வைத்துக் கொள்கிறோமா? என்று எம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம்.

    மொழியைத் தக்க வைத்துக் கொள்வது, கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்வது, எமது தனித்தன்மையைப் பேணிக்கொள்வது இது ஒருபோதும் தவறாகாது.

    ஆனால் இவைகளைச் செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு எமது சுயாதீன எல்லைகளைக் கடந்து மர்றவரின் தனித்தன்மையைப் பறிக்கும் அள்விற்கு எமது வாழ்வியலை உபயோகிப்பது தவறு என்பதே எனது கருத்து.

    எமது அடுத்த தலைமுறை தமக்கு கலாச்சாரம் எனும் பெயரால் போடப்படும் தடைகளைக் கடந்து இச்சமுதாயத்தில் முக்கிய பொறுப்புக்களை வகிப்பதற்கு வழிவகுப்பது இத்தலைமுறையாகிய எமது கைகளிலேயே தங்கியுள்ளது.

    எம்மை இன்முகத்துடன் வரவேற்று எமக்கு ஒரு நிம்மதியான வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு உதவிய இந்நாட்டவரின் மனதில் பீதியை உருவாக்க நாம் காரணமாகலாமா?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    30.04.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • உன்மத்தம் : 3

    இன்னம்பூரான்

    எதுவாயினும் காய் பழுக்கக் காலம் தழைக்க வேண்டும். தெய்வசங்கல்பம் அருளிச்செய்தல் கிட்ட வேண்டும். ஒரு மாதகாலமாக, எழுதி வைத்ததை, வாசகர்கள் விரும்பியும், கண்டும் காணாமலும் இருந்தேன். இன்று உத்தரவு பிறந்தது.

    ‘…அப்பரும் சுந்தரும் ஆளுடைப் பிள்ளையும்
    அருள் மணிவாசகரும் பொருளுணர்ந்து உனையே
    அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே
    எப்படிப் பாடினாரோ…’

    ~ சுத்தானந்த பாரதியார் பாடல்: டி.கே. பட்டம்மாள் பாடியது: கர்நாடக தேவகாந்தாரி: இணையதளம்.

    சில நாட்கள் முன்னால் அசரீரியாக ஒரு வாக்கு உலவி வந்தது; எம்மை ஆட்கொண்டது. அது ஒரு நிகழ்வை பற்றியது. ‘ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல்’ இணையதளத்தில் பதிவாகிறது.

    ‘… வடமொழியில் பல நூல்கள் இயற்றி ஒப்பற்ற சிவபக்தராக விளங்கியஅப்பைய்யதீக்ஷிதர் அவர்களது சொந்த தலமாகிய அடையபலம் என்னும் சிற்றூருக்கு ஸ்வாமிகள் 2-6-1930-ல் விஜயம் செய்தார்கள். இந்த ஊர் ஆரணிக்கு அருகில் மூன்று மைல் தூரத்திலுள்ளது. ஸ்வாமிகள் அவ்வூர்ச் சிவன் கோவிலில் தங்கி பூஜைகளை முடித்துக் கொண்டு, 400 வருடங்களுக்கு முன் அவ்வூரில் வாழ்ந்த அந்த மஹானைப்பற்றி பிரஸங்கம் புரிந்தார்கள். தீக்ஷிதரது அவதார நாளை ஒவ்வொருவருடமும் கொண்டாட வேண்டமென்று ஸ்வாமிகள் அவ்வூராரிடம் வற்புறுத்தினார்கள். தீக்ஷிதர் பிறந்த ஊராகிய விரிஞ்சிபுரத்திற்கும் ஸ்வாமிகள்…’
    என்ற வாக்கியம் ‘ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் பற்றி பிறகு எழுதலாம். மஹான் அப்பய்ய தீக்ஷிதரவர்களின் உன்மத்தத்தை பற்றியும் அவர் அந்த நிலையில் ‘பொருளுணர்ந்ததை’ பற்றி எழுது.’ என்று பணித்தது தெய்வசங்கல்பம். அதை அடுத்து, உடனக்குடன்
    ‘… பொருளுணர்ந்து உனையே அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே…’
    என்ற பாடல் வந்தது திவ்ய சமிக்ஞை. உடனே, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பேராசிரியர் ஆர். பாலசுப்ரமண்யம் அவர்கள் தீக்ஷிதர்வாள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை என் சேகரத்தில் விழுந்து விழுந்து தேடினேன். கிடைக்கவில்லை. கிடைத்தது என்னமோ காஞ்சி மடத்து இணைய தளத்தில் தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்). அது ஒரு மஹாபாக்யம் என்பதில் எனக்கு சம்சயம் இல்லை.

    ‘உன்மத்தத்தின்’ நிரல்நிறை ஒரு சுயம்பு. ‘பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…’ என்று துவங்கி, அங்குமிங்குமாக அலைந்து திரிந்து, ‘… உன்மத்தத்தின் பளிங்கு நீர் தெளிவை எழுதும் முன் அப்பைய தீக்ஷிதரின் ‘உன்மத்த பஞ்சாசத்’ பற்றி எழுதுவது சிலாக்கியம்…’ என்று கோடி காட்டிவிட்டு, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளிடம் தஞ்சம் புகுந்தாலும், அப்பைய தீக்ஷிதரிடம் பசுவின் கன்றைப்போல திரும்பி வருகிறது, ஆக்ஞைகள் பல பிறப்பித்து. இனி ‘தெய்வத்தின் குரல்’:

    ‘மரக்காலை விடப் பதக்கு பெரிசு’

    “…த்ரோணம் என்றால் தும்பை என்றும் அர்த்தம். பரமேஸ்வரனுக்கு மிகவும் ப்ரீதியான பூ அது. பத்ரங்களில் பில்வம் மாதிரி, புஷ்பங்களில் எந்தக் கடையிலும் விலைக்கு விற்காததான ஊமத்தை, எருக்கு, தும்பை இதுகள்தான் சிவபெருமானுக்கு ரொம்பவும் உகந்தவை. அப்பைய தீக்ஷிதரைவிட ஒரு சிவபக்தர் கிடையாது. அவர் ‘ஆத்மார்ப்பண ஸ்துதி’என்று செய்திருக்கிறார். இதற்கு ‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு*.

    அர்க்க-த்ரோண-ப்ரப்ருதி குஸுமை : அர்ச்சநம் தே விதேயம்

    ப்ரப்யம் தேந ஸ்மரஹர பலம் மோட்ச ஸாம்ராஜ்ய லக்ஷ்மி :*

    என்கிறார். “பரமேஸ்வரா!உன்மேலே எருக்கையும் த்ரோணத்தையும் (தும்பையையும்) அர்ச்சனை பண்ணி விட்டால் போதும், அது ஒருத்தனுக்கு மோட்ச ஸாம்ராஜ்யம் என்ற பரம ச்ரேயஸைப் பலனாகக் கொடுத்து விடுகிறது”என்கிறார்.

    சிவனுக்கு மேலே தும்பைப் பூ அர்ச்சனை செய்த பூ விழுகிறது. அவனுக்கு மேலே போய் அது உட்கார்ந்திருக்கிறது. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு தும்பைப்பூவை வைத்து விட்டால், அப்போது அது அவனுக்கு மேலே, அவனைவிட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறது!ஆகையால் “சிவனுக்கு மேலே உயர்வாக எதுவுமில்லை;சிவாத் பரதரம் நாஸ்தி”என்றால் எப்படி ஸரியாகும்?அதுதான் மேலே த்ரோண புஷ்பம், இத்தனூண்டு பூ வெள்ளை வெளேரென்று பரம நிர்மலமாக, அத்தனை பெரியவனுக்கும் மேலே இருக்கிறதே!”இருக்கிறது”என்பதை அடித்துச் சொல்லவே “அஸ்தி”என்று ஆரம்பித்து, “அஸ்தி த்ரோணம் அத:பரம்”என்றதாகத் தோன்றுகிறது.

    ‘தரம்’என்றால் ஒன்றைவிட இன்னொன்று comparative degree -ல் உயர்ந்தது என்று அர்த்தம். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’என்றால் சிவனைவிடப் பரமாக (உயர்ந்ததாக) கம்பேரடிவ் டிக்ரியில் சொல்ல எதுவும் கிடையைது என்று அர்த்தம்.

    சிவனுக்கு ‘மேலே’தும்பை இருக்கிறது என்று வேண்டுமானால் அது இருக்கும் பொஸிஷனைக் கொண்டு சொல்லலாமே தவிர, சிவனோடு கம்பேர் பண்ணி அதாவது அவருடைய குணத்தோடும் மஹிமையோடும் ஒப்பிட்டுப் பார்த்துத் தும்பை அவரைவிட உசத்தி என்று எப்படிச் சொல்லமுடியும்?

    அதுவும் முடியும். வேதமந்த்ரமான ஸ்ரீருத்ர வாக்யமே இதற்கு ஆதரவாயிருக்கிறது. அதிலே முடிகிற இடத்திலே இப்படி வருகிறது:”இதோ என்னுடைய இந்தக் கை இருக்கிறதே, இதுவுமே பகவான்தான், பரமசிவன்தான். இல்லை, பகவானுக்கும் மேலே – ‘ பகவத் தர :’என்று கம்பரேடிவ் ‘தர’த்தையே சொல்லியிருக்கிறது!

    எப்படி இந்தக் கை பகவானைவிட உசத்தி?

    எப்படியா?”இது அவனை அபிமர்சனம் பண்ணுகிறதோ இல்லையோ, அதனால்தான்”என்று ச்ருதியே சொல்கிறது.

    ‘அபிமர்சனம்’என்றால் நன்றாகத் தொடுவது. பூஜையின் போது அவனை நன்றாகத் தொட்டுத் துடைத்து, சந்தனமிட்டு, அர்ச்சனை பண்ணுவது இந்தக் கைதானே?இப்படி அவனைத் தொட்டுவிட்டால் போதும், அவன்மேலே போய் விழுந்துவிட்டால்போதும், அவன் காலிலே சித்தே (சிறிதே) கிடந்தால் போதும் – அவனுடைய ஸ்பரிசம் படுகிறதே, அப்போது அவன் தன்னுடைய குணம், மஹிமை எல்லாவற்றையும் தானாக இருந்துகொண்டு எவ்வளவு காட்டுகிறானோ அதைவிட ஜாஸ்தியாகவே தன்னை ஸ்பரித்துக் கொண்டிருப்பவனுக்குக் கொடுத்துவிடுவான்;தான் பகவான் என்றால் தன்னை ஸ்பர்சிப்பது ‘பகவத்தரம்’என்று ஆக்கிவிடுவான்!

    அதனால் ஒரு தும்பைப்பூ அவனுடைய தலை மேல் ஏறி உட்காரணும் என்று கூட இல்லை, அவனுடைய காலிலே அர்ச்சிக்கப்பட்டுக் கிடந்தாலுங்கூட சிவத்தன்மையிலே அது சிவனைவிட ‘மேல்’:’ சிவாத் பரதரம் ‘தான்…”

    ‘உன்மத்த பஞ்சாசத்’என்றும் காரணப்பெயர் உண்டு’ என்றார் ஆசார்யாள். தீக்ஷிதரவர்கள் ‘கனகபல ரஸம்’ அருந்தி உன்மத்தம் நாடினார் என்று அமரர் டோண்டு சார் எழுதி வைத்தார். அதை சுருக்கி எழுத எனக்கு மனம் வரவில்லை.

    “…ஒரு சமயம் தமது சிவபக்தி நிலைக்குமா என்று கவலை கொண்ட ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் தன்னையே பரீக்ஷை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டார். அந்திய காலத்தில் தனது சிவபக்தி எப்படி இருக்குமோ என்று எண்ணி கனகபல ரஸத்தை (இது தமிழில் ஊமத்தங்காய் சாறு என்று சொல்லப்படும்) உட்கொள்ள எண்ணி, தனது மாணவர்களிடம் இந்த பல ரஸத்தைச் சாப்பிட்ட பிறகு தான் பேசுவதையெல்லாம் எழுதி வைக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் மாற்று மருந்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து அந்த ஊமத்தங்காய்ச் சாற்றினை உட்கொண்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு உன்மத்த நிலை (சித்தஸ்வாதீனமற்ற நிலை) ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்தார்கள். குறிப்பிட்ட நேரம் கடந்ததும், மாற்று மருந்தைச் சீடர்கள் கொடுக்க, தமது பிரக்ஞை திரும்பப் பெற்றார். சித்தஸ்வாதீனமற்ற நிலையில் தாம் கூறியவற்றையெல்லாம் சீடர்கள் எழுதி வைத்திருந்ததைப் படித்துப் பார்த்து தனக்குச் சிவபக்தி நிலைத்தது என்று எண்ணி பரமானந்த நிலையை அடைந்தார். உன்மத்த நிலையில் அவர் பாடிய ஐம்பது சுலோகங்களும் ‘உன்மத்த பஞ்சாசத்’ அல்லது ‘ஆத்மார்ப்பணஸ்துதி’ என்று ஒரு தனி நூலாக விளங்குகின்றது. இதில் உள்ள ஒவ்வொரு சுலோகமும் உள்ளத்தை உருக்கும் சிவபக்திப் பிரவாஹமாகும்.”

    நிரல் நிறை உன்மத்தம், பால் ப்ரண்டனை இழுத்துக்கொண்டது போல், நம்மை மறுபடியும் பகவான் ரமணமஹரிஷிகளிடம் இழுத்துச் செல்கிறது, பொருளுணர.

    “…ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்…”

    (முற்றும்?)

    பி.கு. ஸ்வாமி சிவானந்தா அவர்கள் அப்பையதீக்ஷிதர் வம்சாவளி. நான் அமெரிக்காவில் சந்தித்த நண்பரொருவரும் அந்த வம்சாவளியில் வந்தவர் என்று தெரியவந்தது. மகிழ்வூட்டியது.

    உசாத்துணை:

    1. http://www.kamakoti.org/tamil/3dk293.ht
    2. ‘Conscious Immortality, Conversations with Ramana Maharisi, Paul Brunton and Munagala Venkataramaiah, page 53 -54’ Cited in விக்கிப்பீடியா.
    3. dondu.blogspot.com/2009/07/30072009.html

    சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilhindu.com/wp-content/uploads/appayya-didkhitar.jpg

    Share
  • ஒபாமாவிற்கு என்ன ஆயிற்று?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இரணடாவது முறையாகப்  பதவியேற்ற ஒபாமாவிற்கு  என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.  முதல் நான்கு ஆண்டுகள் பதவி வகித்தபோது இல்லாத சில குணங்களை இப்போது இவரிடம் காண முடிகிறது.  அவரைத் தேர்ந்தெடுத்த என்னைப் போன்ற பலருக்கு அவர் நடந்துகொள்ளும் விதம் அதிருப்தியைத் தருகிறது.  இஸ்ரேல் நாட்டை எதிர்க்கும் எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் யூதர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காது என்பது உண்மைதான்.  ஆனால் அதற்காக சென்ற மார்ச் மாதம் இஸ்ரேலுக்குச் சென்றபோது ஒபாமா இஸ்ரேல் அரசு செய்யும் எந்தக் காரியத்தையும் கண்டிக்காமல் இருந்தது சரியா?

    2009-லேயே – அதாவது பதவிக்கு வந்த வருடமே – இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட பகுதியான வெஸ்ட் பேங்கில் தொடர்ந்து குடியிருப்புகளை அமைத்துக்கொண்டே போனதை ஒபாமா கடுமையாகக் கண்டித்தார்.  ஆனால் 2013 மார்ச்சில் இஸ்ரேலுக்குச் சென்றபோது குடியிருப்புகள் பற்றி எந்தப் பேச்சும் எடுக்கவில்லை.  இஸ்ரேல் அரசு செய்யும் எல்லாவற்றையும் ஆதரிப்பதுபோல் இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹுவுடன் மிகவும் குழைந்தார்.  நேத்தன்யாஹுவை அவருடைய செல்லப் பெயரை வைத்துப் பத்து முறை அழைத்தாராம்.  பாலஸ்தீன அத்தாரிட்டி தலைவர் முக்கம்மது அப்பாஸுடன் அப்படி எதுவும் பேசவில்லை.  அதோடு எந்த வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்குத் தயாராகும்படி அவரை வற்புறுத்தியிருக்கிறார்.  குடியிருப்புகளை நிறுத்தும்படி நேத்தன்யாஹுவிடம் கூறுவதற்குப் பதில் பாலஸ்தீனர்களை இன்னும் பணிந்து போகச் சொல்கிறார்.  இது என்ன நியாயம்?  சென்ற மாதம் வெளிவந்த Brokers of Deceit என்னும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் ரஷீத் கலிடி (Rashid Khalidi) கூறியுள்ளபடி அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதி நிலவ எடுக்கும் முயற்சிகளில் நடுவர் மாதிரி நடந்துகொள்ளவில்லை; இஸ்ரேலுக்காக வாதாடும் வழக்கறிஞர் போல்தான் நடந்துகொள்கிறது.  இப்போது உலகிலேயே பலம் வாய்ந்த அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதி நிலவவும் தன்னால்தான் முடியும் என்று நினைப்பதால் எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அத்தாரிட்டிக்கும் இடையில் சமாதானம் செய்யப் பார்க்கிறார்கள்.  மேலும் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டிய அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரைச் சரித்திரத்தில் எடுக்கவும் விரும்புகிறார்கள்.  ஒபாமாவும் இந்த விதிக்கு விலக்கல்ல.  அதற்காக இப்படியா நடந்துகொள்வது?

    ஏப்ரல் 25-ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி புஷ் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதிகளுக்கான நூலகம் மற்றும் மியுசியத்தின் (Presidential Library and Museum) திறப்பு விழாவில் ஒபாமா புஷ்ஷை ஒரேயடியாகப் புகழ்ந்திருக்கிறார்.  இப்போது அமெரிக்காவில் இருக்கும் இம்மாதிரியான நூலகங்கள் நாற்பத்தி மூன்று இருக்கின்றனவாம்.  இதில் பதிமூன்று நூலகங்களை தேசிய ஆவணச்சாலை மற்றும் ஆவண நிர்வாகத் துறை(National Archives and Records Administration) நிர்வகித்து வருகிறது.  மற்றவை தனியார் பராமரிப்பில் இருக்கின்றனவாம்.  முதல் முதலாக 1939-இல் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஃப்ராங்ளின் ரூஸ்வெல்ட் தன்னுடைய பதவிக் காலத்தில் ஏற்படுத்திய ஜனாதிபதி ஆவணங்களை நூலகம் ஒன்றில் சேர்த்துவைக்க ஜனாதிபதிகளுக்கான நூலகத்தை ஆரம்பித்து வைத்தாராம்.  அதன் பிறகு பதவி வகித்த எல்லா ஜனாதிபதிகளுக்கும் இப்படிப்பட்ட நூலகங்கள் இருக்கின்றன.  லிங்கன் உட்பட பழைய ஜனாதிபதிகளுக்கும் இப்படி நூலகம் திறக்கும் வழக்கம் ஏற்பட்டது.  இப்போது இந்த நூலகங்களை ஜனாதிபதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் செய்த தவறுகளை திரித்துக் கூற அல்லது அந்தக் காரியங்கள் சரியென்று வாதிட பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள்.

    இப்போது இது முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் முறை.  அவருடைய மாநிலமான டெக்ஸாஸில் அவர் பெயரில் ஒரு நூலகத்தைத் திறந்திருக்கிறார்கள்.  இந்த நூலகத்தை நிர்மாணிக்க 250 மில்லியன் டாலர் நன்கொடை பெறப்பட்டிருக்கிறது.  புஷ்ஷிடமிருந்து நன்மை பெற்றவர்கள் கொடுத்தது.

    இந்த நூலகத் திறப்பு விழாவிற்கு புஷ்ஷின் தந்தை உட்பட முன்னாள் ஜனாதிபதிகள் மூவரும் இப்போதைய ஜனாதிபதி ஒபாமாவும் அவர்களுடைய மனைவிமார்களும் வந்திருந்தனர்.  அப்போதுதான் ஒபாமா புஷ்ஷை ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளினார்.  இம்மாதிரி சந்தர்ப்பங்களில் நூலக நாயகரைக் கடுமையாக விமர்சித்திருக்க முடியாதுதான்.  ஆனால் அதற்காக இப்படிப் புகழ்ந்து தள்ள வேண்டுமா?  ‘ஜனாதிபதி புஷ்ஷை (அமெரிக்காவில் எந்தப் பதவி வகித்தவரையும் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகிய பிறகும் அந்தப் பதவியின் பேரில்தான் அழைக்கிறார்கள்.  உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதிகள் எல்லோரையும் ஜனாதிபதி என்றே அழைக்கிறார்கள்.  ஒபாமாவோடு தேர்தலில் போட்டியிட்ட ராம்னி பல வருடங்களுக்கு முன் கவர்னர் பதவி வகித்ததால் அவரை எப்போதும் கவர்னர் என்றே அழைத்தார்கள்.  இவர்கள் ’முன்னாள்’ ஆவதில்லை!) தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.  ஏனெனில் அவர் தன்னுடைய கொள்கைகளில் பிடியாக இருப்பவர்.  அவருக்குப் போலியாக நடிக்கத் தெரியாது.  அவர் செய்யும் எதையும் சீரியஸாக எடுத்துச் செய்வார்.  தன்னைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்” என்று புகழ்ந்துவிட்டு,  அவர் ஒரு நல்ல மனிதர்’ என்று முத்தாய்ப்பும் வைத்திருக்கிறார்.

    புஷ்ஷின் கொள்கைகளால்  அமெரிக்கா போகும் திசை சரியில்லை  என்று தான் நினைத்ததாலும் புஷ் ஆரம்பித்த ஆப்கானிஸ்தான், ஈராக் சண்டைகளினால் உலக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட படிம வீழ்ச்சியிலிருந்து அமெரிக்காவை மீட்கப் பாடுபடப் போவதாகவும் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய ஒபாமா, இந்த நிகழ்ச்சியில் அந்த யுத்தங்களைப்பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் புஷ்ஷின் கொள்கைப் பிடிப்பு பற்றி ஏதேதோ கூறியிருக்கிறார்.  ஜனாதிபதியாக இருந்தவர்கள் ‘இம்மாதிரி நூலகங்களைத் திறந்து சரித்திரத்தையே திருத்தி எழுதப் பார்க்கிறோம்’ என்று கிளிண்டன் சொல்லியது மாதிரி ஏதாவது ஜோக் மாதிரிச் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

    புஷ்ஷை இப்போது  குஷிப்படுத்தும் தேவை ஒபாமாவுக்கு  ஏன் ஏற்பட்டிருக்கிறது  என்று தெரியவில்லை.  இரு  கட்சிக்காரர்களையும் அணைத்துப் போவதாக அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒபாமா புஷ்ஷை இப்படிப் புகழ்ந்தால்தான் குடியரசுக்கட்சி அங்கத்தினர்களை தனக்குச் சாதகமாகக் காரியங்கள் செய்யவைக்கலாம் என்று நினைக்கிறாரா?  இவருக்கு எந்த நல்ல பேரும் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் குடியரசுக் கட்சிக்காரர்களைப் பற்றி இவருக்குத் தெரியவில்லையா, என்ன?

    தியாகம் செய்வதற்கு இனி அவர்களிடம் எதுவும்  இல்லை என்று ஏழைகளின் சார்பில் அன்று வாதிட்ட ஒபாமாவின் சுருதி இன்று இறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையைச் சரிக்கட்ட காங்கிரஸ் மானாவாரியாக அரசின் பல திட்டங்களில் செலவைக் குறைக்கச் சொல்லியது. அதில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் ஒன்று. விமான நிலையங்களின் செலவைக் குறைப்பதும் ஒன்று. இதனால் விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்படுகிறது. விமானத்தில் பயணம் செய்பவர்கள் வசதியானவர்கள். அவர்கள் குரல் எழுப்பினார்கள். இதனால், காங்கிரஸ் விமான நிலையங்களின் செலவிற்கு பட்ஜெட் குறைப்பிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. ஆனால், ஏழைகளின் கல்விக்கு அரசு செய்யும் செலவுக்கு விலக்கு அளிக்கவில்லை. முதல் விலக்கை ஒப்புக்கொண்ட ஒபாமா இரண்டாவது விலக்கிற்குப் போராடவில்லை.கைவைத்திருக்கிறார்.  ஆனால் அதே சமயம் செல்வந்தர்கள் மட்டுமே பயன்படுத்தும் விமானநிலையங்களில் வேலைபார்க்கும் ஊழியர்களைக் குறைத்து செலவைக் குறைக்க முற்பட்டதை இப்போது வாபஸ் வாங்கியிருக்கிறார்.

    வெளிநாட்டு விவகாரங்களிலும்  மாறிவிடுவாரோ என்று பயமாக  இருக்கிறது.  இஸ்ரேல் பிரதம  மந்திரி நேத்தன்யாஹுவின் வற்புறுத்தலால் ஈரானின் மீது படையெடுத்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.  சிரியாவின் உள்நாட்டுப் போரில் அமெரிக்காவை ஈடுபடுத்திவிடுவாரோ என்றும் பயமாக இருக்கிறது.  ஆளில்லா ட்ரோன் தாக்குதலைச் (drone attack) செய்வதைப் பார்த்தால் இவர் ஒரு சமாதான விரும்பியா மனித உரிமைகளில் நாட்டமில்லாதவரோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

    சமீபத்தில் அடையாளம் பதிப்பகத்தார் வெளியிட்ட ‘அமெரிக்க அனுபவங்கள்’ என்ற என் புத்தகத்தின் முன்னுரையில் கடைசியில் ‘ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது.  அவருடைய பதவிக் காலத்தில் உலகில் நன்மை மட்டுமே விளையும் என்று மகிழலாம் என்று எழுதியிருந்தேன்.  நண்பர்கள் சிலர் ‘நன்மை மட்டுமே விளையும் என்று மகிழலாம்’ என்பதற்குப் பதில் ‘மகிழலாமா?  பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று மாற்றலாமே என்றார்கள். ஆனால் நான் மாற்றவில்லை. இப்போது நான் ஒபாமாவைப் பற்றிச் சொன்னது பொய்த்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

    Share
  • பாரதியின் வேத முகம் – 9

     

    -சு.கோதண்டராமன்

    இனி ஒரு விதி செய்வோம்

          பாரதியின் கோபம் வெளிப்படும் இடங்களில் ஒன்று ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்று துவங்குகிறது. ‘தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்பதை எந்த நாளும் காக்க வேண்டிய ஒரு விதியாக அவர் விதிக்கிறார். தின்ன வரும் புலியை அன்போடு சிந்தையில் தேக்கச் சொன்ன அவர் இவ்வளவு கொடூரமாகச் சபதம் செய்தது ஏன் ?

    சற்றே பின்னோக்கி, அவர் வாழ்ந்த காலத்தைப் பார்ப்போம். புகழ் பெற்ற தாது வருஷத்துப் பஞ்சம், இந்திய மக்களில் மூன்று கோடிப் பேரைப் பலி வாங்கிய கொடுமை அவர் பிறப்பதற்கு ஆறு ஆண்டுகள் முன்பு தான் ஏற்பட்டது. இதன் துன்பங்கள் எல்லாம் மக்கள் கூறக் கேட்டு இளம் பாரதி மனதில் படிந்திருக்க வேண்டும். பசியின் கொடுமையை அனுபவித்தவர் தான் உள்ளபடி உணரமுடியும். பாரதியும் அதை அனுபவித்திருந்தார். கவிதையையும் நாட்டுக்கு உழைத்தலையும்  தொழிலாகக் கொண்ட அவருக்குப் பரிசாகக் கிடைத்தது வறுமை தான். ஆனால் அவர் ஒரு போதும் வாடிய தன் வயிற்றுக்காகக் கவலைப் படவில்லை. அவர் வருந்தியது இந்நாட்டு மக்களுக்காகத் தான்.

    கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன்

    காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்

    பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்

    பரிதவித்தே உயிர் துடிதுடித்தே

    துஞ்சி மடிகின்றாரே இவர்

    துயர்களைத் தீர்க்கவோர் வழி இல்லையே         

    என்று நெஞ்சு பொறுக்காமல் புலம்புகிறார்.

    பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயிரிட்டு இந்திய மண்ணின் சாரம் குறைந்துவிட்டது என்ற வாதத்தைப் பாரதி ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியா பாருக்குள்ளே நல்ல நாடு என்றும், கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு என்றும் இனிய பொழில்கள் நெடிய வயல்கள்  எண்ணறு நிறை நாடு என்றும் கூறுகிறார்.

    பின் ஏன் பஞ்சம்? நம் மக்கள் உழைக்க அஞ்சுவதாகச் சிலர் கூறுகின்றனர். ஜப்பானியரைப் போல் உழைத்தால் நாம் எங்கோ போயிருப்போம் என்பர். பாரதி இதையும் மறுக்கிறார்.

    மானிடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் நீர் பாய்ச்சாவிடினும் வகை வகையாப் புற்கள் நெற்கள் மலிந்திருக்கும் என்பார் அவர்.

    ஆக, பஞ்சத்துக்குக் காரணம் வளமின்மையோ உழைப்பின்மையோ அல்ல. எல்லாம் விளைந்தும் சரியான பங்கீடு இல்லாதது தான் காரணம். உடையவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்காமல் பதுக்குகிறார்கள். அதற்கு அடிப்படையான அன்பு இல்லை அவர்களிடம். அதனால் பாரதி பல இடங்களிலும் அன்பையே வலியுறுத்துகிறார்.

    மனிதரின் கடமையாக அவர் கூறும் நான்கில் ஒன்று, பிறர் துயர் தீர்த்தல். இதைச் செய்யச் சிலர் தவறுவதால் உலகில் பிறர் துடிதுடிக்கின்றனர். பஞ்சத்திலும் நோய்களிலும் பாரத மக்கள் புழுக்கள் போலத் துஞ்சத் தம் கண்ணால் கண்டும சோம்பிக் கிடக்கும் இந்நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் துடிக்கும் அவரது சொல்லின் வேகத்தைப் பாருங்கள்.

    மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? 

    இந்நிலை வளரவிட்டால் என்ன ஆகும் ? ரஷ்யப் புரட்சியைச் சுட்டிக் காட்டுகிறார். அங்கு

    உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை

    மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்

    ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி

    அன்பு கொண்டு பகுத்துண்டு வாழ்ந்தால் மேன்மையுறலாம். இன்றேல் மாகாளியின் கோபத்துக்கு இலக்காகி வஞ்சனையாளர் எல்லாம் வீழ்ந்திடுவர். எனவே நான் அழிக்காவிட்டாலும் மாகாளி இந்த சுயநல ஜகத்தை அழிக்கப் போவது திண்ணம். எனவே அன்பு செய்யுங்கள். அடுத்தவர் பசியை நீக்குங்கள். கிருத யுகம் மீண்டும் மலரும் என்கிறார் அவர். பாரதியின் கோபம் நமக்குப் புரிகிறது.

    பாரதியின் அன்பு வட்டம் இந்தியாவை மட்டுமோ, மனிதரை மட்டுமோ உள்ளடக்கியதல்ல. பூமண்டலம் முழுமையும் உள்ள எல்லா உயிர்களையும் கொண்டது அது.

    மண் மீதுள்ள மக்கள் பறவைகள்

    விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்

    யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே

    இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

    செய்தல் வேண்டும் தேவதேவா

    ஞானாகாசத்து நடுவே நின்று நான்

    பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

    விளங்குக. துன்பமும் மிடிமையும் நோவும்

    சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்

    இன்புற்று வாழ்க என்பேன். இதனை நீ

    திருச்செவிக்கொண்டு திருவுளமிரங்கி

    அங்ஙனே யாகுக என்பாய் ஐயனே.

    “மங்கலம் நல்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். யக்ஞம் சிறப்பாக நிறைவுற வேண்டுகிறோம். யக்ஞம் செய்பவருக்காக வேண்டுகிறோம். நமக்கு தேவதைகள் நன்மை செய்யட்டும். மனிதர்கள் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும். செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும். நம்மிடமுள்ள இரண்டு கால் பிராணிகளுக்கு மங்கலம் உண்டாகட்டும். நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்” என்ற வேதத்தின் கூற்றே இங்கு எதிரொலிக்கக் கேட்கிறோம்.

     

    Share
  • ” ஒரு யோசனை “

    தமிழ்த்தேனீ

     

    ஶ்ரீராமஜெயம்

    யோசிக்காம எடுக்கற எந்த முடிவும் சரிப்பட்டு வராது. யோசித்துக்கொண்டே இருந்தால் நேரம் போய்விடும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள்.  இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை மிகவும் கவனமாகக் கையாண்டு பயனுள்ளதாக யோசனை செய்து  ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்

    யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன். யோசித்தால்தான் எந்த ஒரு செயலையும்  சரியான முறையில் செய்யமுடியும் . வருமுன் காப்பது நல்லது வந்தபின் வருத்தப்படுவது என்பது  அறிவு பூர்வமான செயல் அல்ல . என்று பல சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

    அப்படி இருக்க  யோசிக்காமல் பேசவும் கூடாது எழுதவும் கூடாது என்பது அறிவு பூர்வமாக மனதில் உறைத்ததால் யோசிக்கத் தொடங்கினேன்.   யோசித்தல் என்றால் என்ன என்று மனதில் ஒரு யோசனை உதித்தது? ஆமாம் யோசித்தல் என்றால் என்ன?

    எவ்வளவு வேலைகள் , இடையூறுகள் இருப்பினும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மனதில் அடி நாதமாக வைத்துக் கொண்டு  தியானம் போல் இடைவிடாது ஒரு அதைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருப்பது யோசனை என்னும் முடிவுக்கு வந்தேன்.

    ஆகவே யோசிக்கத் தொடங்கினேன்!  முதலில் நாம் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவைச் செயலாக்க யோசிக்க வேண்டும் .  எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தேன். எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது .

     நாம் எதைப் பற்றி எழுதலாம்?   எதைப் பற்றி எழுத வேண்டுமென்றாலும் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். அதன் பிறகுதானே எழுத வேண்டும் .   ஆம் முதலில் அதைப் பற்ற வேண்டும், அப்படி  முழுமையாக அதைப் பற்றினால்தான், அதைப் பற்றி யோசிக்கவே முடியும். இப்படி இருக்க பற்றுவது என்பதைப் பற்றி  முழுமையாக அறிந்து கொண்டால்தான் பற்றவே முடியும்.

    ஆகவே பற்றுவது பற்றி யோசித்தேன். பற்று என்னும் சொல்லுக்குள் இருக்கும் பற்றைப் பற்றி யோசித்தேன்.  யோசிக்க யோசிக்க பற்று வந்தது , இன்னும் ஆழ்ந்து யோசித்தேன் இன்னும் அதிகமாக ஆழமான பற்று வந்தது.

    பற்றுவது என்பது நம்மை மறந்து நம் சுயத்தை முழுவதுமாக இழந்து நாம் எதைப் பற்றி யோசிக்கிறோமோ   அதை முழுமையாகப் பற்றி  அதன் பிறகு அதைப் பற்றி யோசிப்பது  என்னும் தெளிவு வந்தது.

    இப்போது தெளிவாக யோசித்தேன். கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தேன் திடமாக, தீர்மானமாக எதைப் பற்றி யோசிப்போம் என்று அதைப் பற்றினேன் . அதைப் பற்றியே யோசித்தேன் .  அதனால் வந்த  எழுத்து இது.    மீண்டும் ஒரு முறை எழுதியதைப் படித்துப் பார்த்தேன். நான் எதைப் பற்றி இது வரை ஆழ்ந்து யோசித்திருக்கிறேன் என்று புரிந்து கொள்ள மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படித்தேன்.

    இபோதுதான் புரிந்தது நான் இவ்வளவு நேரமாக இதைப் பற்றித்தான் யோசித்திருக்கிறேன் என்று.   ஆக இன்னும் நான் எதை எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதைப் பற்றி இன்னும்  யோசிக்கவே இல்லை  என்று புரிந்தது.

    இப்போது நான் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன் எதைப் பற்றி நான் யோசிக்க வேண்டுமென்று. கடைசியில் ஒன்று புரிந்தது,   நாம் எவ்வளவுதான் யோசித்தாலும்  அவற்றையெல்லாம் எழுத முடிவதில்லை.

     நாம்  எழுதத் தொடங்கியவுடன் நம்மை அறியாமல் நம் மனம் எதை பற்றுகிறதோ  அதிலேயே ஆழ்ந்து அதைப் பற்றியே யோசித்து ப்ரபஞ்ச  வெளியில் இணைந்து , ப்ரபஞ்ச வெளியில் அலைந்து  பல செய்திகளைச் சேகரித்து அதன் சேகரங்களின் விளைவாகிய  முழுக் கருவை உள்வாங்கி அதைப் பற்றி எண்ணங்களையே நம் மனதில் விதைத்து  நம்மை எழுதத் தூண்டுகிறது.

    ஆகவே நம் மனம் எதை விதைக்கிறதோ  அதற்கு நாம் கட்டுப் பட்டு,  நம் உணர்வுகள் கட்டுப்பட்டு அதன் விளைவாக மனதிலிருந்து  நேராக நம் கைகளுக்கு அந்த  எண்ணங்கள் அனுப்பப்பட்டு,  தாமாகவே  மனம் சொல்வதை விரல்கள் எழுதுகின்றன.   ஆக நாம் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைப் பற்றி  எழுத முடிவதே இல்லை  அதைத் தவிர  மற்ற எல்லாவற்றையும் பற்றி எழுதுகிறோம் என்பதே உண்மை என்று உணர்ந்தேன்.

    இப்போது  நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்  .யோசனை செய்யலாமா வேண்டாமா?   மனம் யோசிப்பதை  எழுதிவிட்டுப் போகலாமா, அல்லது நாமே  இன்னும்  ஆழ்ந்து யோசிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

     

     

    Share