Blog

  • பேஸ்புக் ஸ்டேடஸ் (Facebook Status)

    மாதவன் இளங்கோ

    “ஹவ் ஆர் யு பீலிங், விக்ரம்?” – இப்படி கேட்ட என்னோட பேஸ்புக் ஸ்டேடஸ் பாக்சுக்கு இன்னைக்கு கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்னு தோணிச்சிங்க. அதனால என் மனசுல இருக்கற பாரத்த இந்த பாக்சுக்குள்ள இறக்கிவச்சி உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.

    கொஞ்சம் பாரம் ஜாஸ்திங்கறதால இந்த  ஸ்டேடஸ் மெசேஜ் கொஞ்சம் பெரிசா போவும் போல இருக்கு. உங்களுக்கு வேற ஏதாவது வேலை இருந்தா பாத்துட்டு வந்து பொறுமையா படிங்க. இல்ல, என் கஷ்டத்த இப்போவே தெரிஞ்சிக்கணும்னா தொடர்ந்து படிங்க.

    ஒரு வரி ரெண்டு வரின்னா இங்கிலீஷ்லயே எழுதியிருப்பேன். இவ்ளோ பெரிய விஷயத்தையெல்லாம் என்னால இங்கிலீஷ்ல எழுத முடியாதுங்க. தமிழில எழுதறதே பெரிய விஷயம். இதுல வேற, நம்ம ஊர்க்கார பசங்கல்லாம் பேஸ்புக் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. அவங்களுக்கும் நம்ம சொல்ல வர்றது புரியணுமில்லையா? ‘இங்கிலீஷ்லயே எழுதத் தெரியாத நீ அமெரிக்காவுல போயி என்னத்த கிழிக்கற’னு உங்க மைண்ட் வாய்ஸ் பேசறது எனக்குக் கேக்குதுங்க. நான் பாக்குற வேலைக்கு ஜாவா லாங்குவேஜும் அதோட கீவேர்ட்ஸும் போதும்! ஒருநாளைக்குப் பதினாலு மணிநேரம் கம்ப்யூட்டர் கூட தானே பேசுறோம். அதுவுங்கூட சரியா தெரியாதுங்கறது வேற விஷயம். ஆனா ஒன்னு, இந்த ஊர்க்காரங்க பேசற வழவழா, கொழகொழா இங்கிலீஷுக்கு என்னோடது எவ்வளவோ பரவாயில்லீங்க.

    என்னடா இவன் ரொம்ப மரியாதையா நெறைய ‘ங்க’ யூஸ் பண்றானேனு நெனெச்சீங்கதானே? என்ன பண்றது? இப்போதான் பேஸ்புக்ல என் பெரிப்பா, சித்தப்பா, மாமா, மாமினு எல்லா பெரியவங்களும் வந்துட்டாங்களே. என்ன பண்றது?

    சித்தப்பா “ஓ! சட்டை மேல எவ்ளோ பட்டன்!” பேஸ்புக் பேஜ்லர்ந்து போட்டோவ ஷேர் பண்றார். மாமா என்னடான்னா, “Ovvoru figurum thevai machaan”-னு ஏதோவொரு பேஜை லைக் பண்றாரு. என்னதான்  நடக்குது இந்த பேஸ்புக்ல?

    எங்க கெழவி மட்டும்தான் இன்னும் வரலைங்க. அவங்களுக்கும் சாவித்திரி சொல்லிக் கொடுத்துட்டு இருக்கானு கேள்விப்பட்டேன். உண்மையா @Savithiri Muthusamy?

    தமிழில எழுதறத்துக்கு இன்னொரு காரணம் – நான் இன்னைக்கு எழுத போறது இந்த ஊருக்காரங்கள பத்தி. சாதாரண ஆளுங்களப்பத்தி எழுதனாவே பிரச்சினை. அப்படி இருக்கும்போது, இந்த ஊர் போலீஸ்காரங்கள பத்தி எழுதினா சும்மா விடுவாங்களா? அட, இப்போல்லாம் நம்ம இந்தியாவுலையே கான்ட்ரொவர்ஷியலா எதாச்சும் பேஸ்புக் ஸ்டேடஸ் போட்டா, சரியில்லையேன்னு சொல்லி, புடிச்சி உள்ள வெச்சிடறாங்க. (கான்ட்ரொவர்சிக்கு தமிழ்ல என்னங்க?) நாளைக்கு நம்மளையும் புடிச்சி உள்ள வச்சிட்டாங்கன்னா என்ன பண்றது? நம்மளையும்னு சொல்றதுல இருந்தே உங்களுக்கு ஏதோ  புரிஞ்சிருக்கணுமே?

    டிஸ்க்ளைமர்: பிரச்சினைல மாட்டிக்கவேணாம்னு நெனெக்கற யாரும் இந்த ஸ்டேடஸ படிச்சிட்டு ‘லைக்கோ’, பாராட்டி ‘கமெண்டோ’ போட்டுறாதீங்க பா. வேணும்னா என்ன திட்டி எழுதுங்க. ஒருவேளை அதனால உங்களுக்கு அவார்டு கூட கெடைக்கலாம்.

    ஆனா ஒன்ன மட்டும் தெளிவா சொல்லிடறேன். இது இந்த ஊர்ல மட்டும் நடக்கற விஷயம் இல்ல. உலகம் பூராவும் இருக்கறதுதான். என்னடா இவன் புதிர் போட்டுட்டே போறானேன்னு பாக்கறீங்களா? சிலர் செய்யற தப்புனாலையும், பலர் தப்பா ஜெனெரலைஸ் பண்றதாலையும் எவ்ளோ அப்பாவிங்க பாதிக்கப்படறாங்க?

    மொதல்ல என்னோட பேஸ்புக் ஸ்டேடஸ் பாக்ஸ் என்கிட்ட கேட்ட கேள்விக்கு வருவோம் – “ஹவ் ஆர் யு பீலிங், விக்ரம்?”

    இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு பதிலா, உங்ககிட்ட ரெண்டு விஷயத்தை இப்போ ஷேர் பண்ணிக்க போறேன்: 16 மணிநேரத்துக்கு முன்ன நடந்த ஒரு விஷயம், அப்புறம் 16 நாளைக்கு முன்னால நடந்த இன்னொரு விஷயம்.

    மொதல்ல 16 நாளைக்கு முன்ன நடந்த விஷயத்தைப் பத்தி சொல்றேன்:

    அன்னைக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டில, ஹாலிவுட் பவுல்வர்டு ஏரியால இருக்கற மெக்டீல தனியா உக்காந்து, ப்ரைசும், சாண்ட்விச்சும் சாப்டிட்டு இருந்தேன். திடீர்னு எனக்கு எதிர இருந்த டேபிள்ல இருந்தவங்கல்லாம் பதறியடிச்சி எழுந்து நின்னு எனக்கு பின்னாடி இருந்த கண்ணாடிச் சுவரு வழியா வெளிய பாத்தாங்க.

    நானும் எந்திரிச்சி திரும்பிப் பார்த்தப்போ, ரோடுக்கு அந்தப்புறம் இருக்கற ஸ்னோ வைட் கபே கிட்ட ஒரே பரபரப்பாக இருந்தது. சாதாரணமாக இவ்வளவு கூட்டமெல்லாம் இந்த ஊர்ல கூடாதேனு நெனெச்சிக்கிட்டே வெளியே வந்தேன். ரெண்டு மூணு போலீஸ்காரங்க சேர்ந்து எவனோ ஒருத்தன தரையில அமுக்கிப்பிடிச்சி, ரெண்டு கையையும் முதுகுக்குப் பின்னாடி வளைச்சி, அவன் கைல விலங்கு மாட்டிட்டு இருந்தாங்க. அந்தப் போலீஸ்காரங்க அவனைத் தூக்கி நிறுத்தனப்போ அவன் மொகத்தப் பாத்தவுடனே அப்படியே என் ஒடம்பெல்லாம் ஜில்லிட்டு போச்சுங்க. ஏன்னா, அவங்க புடிச்சி வெச்சிருந்தது என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் – இம்ரான்!

    அவனைக் கார்கிட்ட இழுத்துட்டுப்போறத பாத்தவுடனே, ரோட க்ராஸ் பண்ண ஓடினேன். ஆனா அதுக்குள்ள சிக்னல் விழுந்துடுச்சி. இந்த ஊர்ல இது வேற ஒரு பெரிய தொல்லைங்க! தலை போற நேரத்துல கூட ரூல்ஸ பாலோ பண்ணியாகணும். எப்படா பச்சை விழும்னு பாத்துட்டே இருந்து, விழுந்த அதே செகண்ட் அடிச்சி பிடிச்சி க்ராஸ் பண்றதுக்குள்ள, இம்ரான கூட்டிட்டு போயிட்டாங்க போலீஸ்காரங்க.

    அங்க கூடியிருந்த கூட்டத்துல சத்தம் போட்டுப் பேசிட்டு இருந்த ஒரு ஆள்கிட்ட போயி என்ன ஆச்சுனு கேட்டேன்.

    “என்னாச்சுனே தெரியல. திடீர்னு பாருக்குள்ள வந்து பாட்டில தூக்கிக் கண்ணாடி மேல போட்டு ஒடச்சிட்டு வெளிய போயிட்டான்.  நல்லவேள, அந்த நேரம் கரெக்டா இந்த பக்கமா வந்த போலீஸ் அவனை அமுக்கி பிடிச்சிட்டுப் போயிட்டாங்க.” என்று இங்கிலீஷ்ல சொன்னான்.

    அவன் ஏன் அப்படி செஞ்சான்னு எனக்கு லேசா புரிஞ்சது. ஆனா, அந்த சமயத்துல நிஜமாவே எனக்கு என்ன செய்யறதுனே தெரியல.

    ஹி ஈஸ் மை ப்ரண்ட். அவன எங்க கூட்டிட்டு போனாங்கன்னு தெரியுமா?” என்று அந்த ஆள்கிட்டயே திரும்பவும் கேட்டேன்.

    ஓ! காட் டேம்! எல்.ஏ.பி.டி ஈஸ் நாட் பார் பிரம் ஹியர். கோ தேர் அண்ட் செக்! குயிக்!” என்றான்.

    என்னோட போன்ல ஜிபிஎஸ்-ஐ ஆன் பண்ணிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் டிபார்ட்மெண்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். போற வழியில இம்ரான பத்தியே நெனெச்சிட்டுப் போனேன். எப்படி இருந்தவன்? நான் மொதமொதல்ல லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தப்போ, அவன் கூடத்தான் தங்கினேன். எனக்கு இங்க யாரைத் தெரியும்? எவ்ளோ ஹெல்ப் பண்ணினான்? வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர்லர்ந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு வர்ற என்ன மாதிரி ஆளுங்களுக்கு அவன் தான் கைட், ப்ரண்ட், பிலாசபர், எல்லாமே. அவன் மட்டும் இல்லேனா இங்க வந்த அடுத்த வாரமே கிளம்பி இந்தியாவுக்குப் போயிருப்பேன்.

    அவனுக்கு ஒரு கேர்ல் ப்ரண்ட் கெடச்சவுடனே, அவன் இருந்த வீட்ல என்ன விட்டுட்டு, வெஸ்ட் ஹாலிவுட் ஏரியாவுக்குப் போயிட்டான்.

    அடிக்கடி என் ரூமுக்கு வருவான். பிரெண்ட்ஸ் எல்லாரும் ஒன்னா சேர்ந்து வாரத்துக்கு ரெண்டு படம் பாப்போம். இந்தியாவிலேயே ரெண்டு நாள் ஓடாத படத்தைக்கூட சீரியசா பாத்திருக்கோம். நல்லா ஊர் சுத்துவோம். சூப்பரா போயிட்டு இருந்த அவனோட வாழ்க்கைய ஒரு ஆக்சிடென்ட் அப்படியே புரட்டிப் போட்டுடிச்சி.

    அவனுக்கு அம்மா கெடையாது. ஆறு மாசத்துக்கு முன்னாடி அவனோட அப்பாவும் சித்தியும் ஆம்பூர்லர்ந்து திண்டுக்கல்லுக்கு ஏதோ கல்யாணத்துக்குப் போகும்போது ஆக்சிடெண்ட்ல ஸ்பாட் டெட். எதிர்ல வந்த வேன் டிரைவர் தண்ணி அடிச்சிட்டு ஓட்டிட்டு வந்ததால நடந்த கொடுமை. அவங்க ரெண்டு பேர் மேலயும் ரொம்ப ஜாஸ்தியா பாசம் வெச்சிருந்ததால ஒடிஞ்சி போயிட்டான்.

    இந்தியாவுக்கு போயிட்டு திரும்பி வந்ததுல இருந்தே ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தான். திடீர்னு நைட் முழிச்சிப்பானாம். ஓடுவானாம். சாப்பாட்ட தூக்கி எறிவானாம். ரெண்டு மூணுமுற எங்க கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண அவனோட கேர்ல் ப்ரெண்ட், நாலு மாசம் சகிச்சிட்டு அப்புறம் பிரிஞ்சி போயிட்டா. அப்பலர்ந்து அடிக்கடி என் ரூமுக்கே வந்திடுன்னு கூப்பிட்டுப் பாத்தேன், அவன் கேக்கவே இல்ல. நானும் இன்னொரு ப்ரெண்ட் கார்த்திக்கும் நெறைய முறை அவன ஹாஸ்பிடலுக்கு ட்ரீட்மெண்டுக்கு கூட்டிட்டுப் போனோம்.

    மென்டல் டிப்ரஷன்தான் காரணம், ரெகுலரா மெடிசின்ஸ் எடுத்துக்கிட்டா சரியா போய்டும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. ஆனா, அவன் ஒழுங்கா மருந்து சாப்பிடரானான்னு கூட எங்களுக்குத் தெரியல. அடிக்கடி அவன பாக்க அவன் ரூமுக்கு போவோம் – எப்பவுமே பூட்டியே இருக்கும்.

    “அடுத்த மாசம் இந்தியாவுக்கு போகும்போது பேசாம நான் அவன கூட்டிட்டு போயிடறேண்டா” என்று கார்த்திக் மூனு வாரத்துக்கு முன்னாடி கூடச் சொன்னான்.

    இப்படி நடந்ததெல்லாம் திங்க் பண்ணிக்கிட்டே பார்ட்டி மினிட்ஸ் நடந்ததுல வில்காக்ஸ் அவென்யூவில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் போய்ச்சேர்ந்தேன். உள்ள போயி எல்.ஏ.பி.டி ஆபீசர்கிட்ட என்ன அறிமுகப்படுத்திகிட்டு, இம்ரான் கானைப் பத்திக் கேட்டேன். அவ்வளோதான் என்னோட பாஸ்போர்ட உடனே வாங்கிக்கிட்டு, என்னப்பத்தியும், இம்ரானப் பத்தியும் எல்லா டீடைல்சயும் கேட்டு ரெகார்ட் பண்ணிட்டு என்னை போகச் சொல்லிட்டார்.

    நான் இம்ரானோட ப்ராப்லெம்ச பத்தி எடுத்துச் சொல்லி அவன பாக்கணும்னு சொன்னேன். எவ்ளோ சொல்லியும் அவர் கேக்கவே விரும்பல. கடைசியா,

    “வி கான்ட் லெட் யூ மீட் எ டெர்ரரிஸ்ட் லைக் ஹிம்” என்று கத்தினார்.

    அந்த ஆள் சொன்னதக் கேட்டு அரண்டு போயிட்டேங்க.

    ” டெர்ரரிஸ்ட்?? வாட் த ஹெக்? ஹவ் கேன் யூ கால் மை ப்ரெண்ட் எ டெர்ரரிஸ்ட்? வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்!” என்று என்னையறியாமல் ஆவேசமாக நானும் கத்திவிட்டேன்.

    “மை ப்ராப்ளெம்??? ஹிஸ் நேம் ஈஸ் த ப்ராப்ளெம். ‘கான்’ ஈஸ் த ப்ராப்ளெம். கெட் லாஸ்ட் ரைட் அவே!” என்று அவர் கத்திய கத்தில் என் காதே கிழிஞ்சிடுச்சோனு ஒரு டவுட்டே வந்திடுச்சு.

    இன்வெஸ்டிகேஷன் முடிஞ்சாத்தான் பாஸ்போர்ட்ட தருவேன்னு என்னை தொறத்தி அடிச்சிட்டார். அன்னைலர்ந்து நானும், கார்த்திக்கும் படாதபாடு பட்டுட்டோம். தொலச்சி எடுத்துட்டாங்க. ஒரு வாரம் கழிச்சி, என்னோட பாஸ்போர்ட்ட திருப்பி கொடுத்துட்டாலும், இம்ரானைப் பாக்கவே முடியல. ஒரு வாரத்துக்கு முன்னால போனப்ப அவன் தீவிரவாதிங்கறதால (??!!) எப்.பி.ஐ கஸ்டடில இருக்கான், நாங்க ஒண்ணுமே பண்ண முடியாதுனு கைய விரிச்சிட்டாங்க பாவிப்பசங்க. எப்.பி.ஐ சம்மந்தப்பட்டதுங்கறதால நம்ம இந்தியன் லாயர்சும் கைய விரிச்சிட்டாங்க.

    கார்த்திக் இந்தியன் எம்பசில ஹெல்ப் கேக்கறதுக்காக சான் பிரான்சிஸ்கோ போனான். கான்சலேட் சீரியஸா ஸ்டெப்ஸ் எடுத்துட்டு இருக்கார்னு தைரியம் சொன்னான். நானும் அலைஞ்சி திரிஞ்சி நாலு நாளைக்கு முன்னாலதான் என்னோட கொலீக் மூலமா ஒரு அமெரிக்க லாயரப் புடிச்சேன். அவர் கண்டிப்பா வெளிய கொண்டுவந்திடலாம்னு ஆறுதல் சொன்னார். அப்போதான் எனக்கு உயிரே வந்தது. வெளிய வந்தவுடனே பேசாம நானே இந்தியா கூட்டிட்டு போகலாம்னு நெனெச்சிட்டு இருக்கேன்.

    இப்போ 16 மணிநேரத்துக்கு முன்னாடி நடந்த விஷயத்துக்கு வருவோம்.

    அத சொல்றதுக்குப் பதிலா, இன்னைக்கு காலைல இதோ இங்க ஒரு பாபுலர் நியூஸ் பேப்பரோட பேஸ்புக் பேஜ்ல ஸ்டேடசா போட்டிருக்கற நியூஸ் அப்டேட்ட படிக்கறேன் கேளுங்க. இது உங்களுக்குப் புரிஞ்சா, என் வலியும் உங்களுக்குப் புரிஞ்சிடுச்சுனு அர்த்தம்:

    “சான் டியகோ நகரில் நேற்று மாலை ஒரு ‘கன் மேன்’ (??!!) – அதாவது ‘துப்பாக்கி ஏந்திய ‘நபர்’ – ஒரு வணிக வளாகத்தில் புகுந்து 23 பேரை சரமாரியாகச் சுட்டுக் கொன்றுவிட்டார். ‘ஆன்டர்சன்’ என்கிற அந்த ‘கன் மேன்’ ஒரு மன நோயாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவரை மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.”

    Share
  • அலைமகள் அருள் தரும் அக்ஷய திருதியை

    பார்வதி இராமச்சந்திரன்

    நமது இதிகாச புராணங்களின்படி, சில முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், சில குறிப்பிட்ட திதி/நட்சத்திரம் கூடிய தினங்களில் நடந்தேறியுள்ளன. அத்தகைய தினங்களில், இறையருட் பேராற்றல் பூவுலகில் அதிக அளவில் நிலைபெறுகிறதென்று கண்டறிந்துள்ளனர் நம் முன்னோர்கள்.  (ஒரு வருடத்தில் வரும்) அந்த‌ தினங்களையே நாம் பண்டிகை தினங்களாகக் கொண்டாடுகின்றோம். வருடம் முழுவதும் சிறப்பாக இறைவழிபாடு  செய்ய இயலாவிட்டாலும், அந்த குறிப்பிட்ட தினங்களில் செய்வது மிக அதிக அளவில் நன்மைகளைப் பெற்றுத் தரும் என்பதாலேயே இவ்வாறு செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

    அத்தகையதொரு திருநாளே ‘அக்ஷய திருதியை’.  அக்ஷயம் என்றால் குறைவில்லாத என்று பொருள்.  சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை திதி, அக்ஷய திருதியை. அந்நாளில் நாம் செய்யும் அறங்கள், தொடங்கும் செயல்கள் பன்மடங்காகப் பெருகிப் பலனளிக்கும் என புராணங்கள் கூறுகின்றன. குசேலர், ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் செல்வச் செழிப்பை அடைந்ததும், குபேரன் மஹாலக்ஷ்மியின் அருளால் நவநிதியைப் பெற்றதும், சூரிய பகவான் யுதிஷ்டிரருக்கு அக்ஷய பாத்திரத்தை அருளியதும், அகில உலகுக்கும் அன்னம் அளிக்கும் அன்னபூரணி தேவி திருஅவதாரம் செய்தருளியதும் அக்ஷய திருதியை தினத்தில் தான்.

    நலங்களையும் வளங்களையும் பல்கிப் பெருகச் செய்யும் தினம் என்பதால் அன்றைய தினம் லக்ஷ்மி தேவியின் வழிபாட்டுக்கு உகந்த தினமாகக் கூறப்படுகிறது.

    பாற்கடலில் உதித்தவளாதலாலும், திருப்பாற்கடலை வாசஸ்தலமாகக் கொண்ட எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனின் திருமார்பில் உறைபவளாதலாலும் ‘அலைமகள்’ என்ற திருநாமம் லக்ஷ்மிதேவிக்கு.

    ‘திரு’ வாகிய செல்வத்திற்கு அதிபதியாதலால், ‘திருமகள்’ என்றும் போற்றப்படுகிறாள் ஸ்ரீலக்ஷ்மிதேவி. செல்வத்துக்கு அதிபதியாக குறிக்கப்படும் ஸ்ரீதேவியானவள், பொருட்செல்வத்துக்கு மாத்திரம் அதிபதியல்ல. அருட்செல்வத்துக்கும் அவளே தலைவி.

    நல்ல உடல் நலம், நிறை வாழ்வு, ஆத்மானுபூதி அனைத்தும் அவள் அருளும் பிரசாதங்களே.

    ஸ்ரீலக்ஷ்மி ஹ்ருதயத்தில்,

    ‘கத்யை நமோஸ்து வரஸத்கதி தாயிகாயை’

    என்று மஹாலக்ஷ்மி போற்றப்படுகின்றாள். ‘ஸத்கதி’ எனச் சிறப்பிக்கப்படும் மோக்ஷ சாம்ராஜ்யத்தை அளிக்க வல்லவள் ஸ்ரீமஹாலக்ஷ்மியே.

    ஸ்ரீவைணவத்தில் ‘தாயார்’ என்றே  சிறப்பிக்கப்படுகின்றாள் திருமகள்.  ‘அகலகில்லேன்’ என்று திருமாலின் திருமார்பில் நிரந்தரமாக உறைபவளின் கருணைக்கு ஈடேது?!!. திருமகள், திருமாலின் திருமார்பில் உறைவதாகச் சொல்வதும் ஒரு உள்ளர்த்தம் காரணமாகத்தான். யாராவது நம்மிடம் கடுமையாக நடந்து கொண்டால் என்ன கேட்கிறோம்?. ‘நெஞ்சில் ஈவு, இரக்கம் இருக்கிறதா?’ என்று தானே!!. ஆம், இரக்கம், கருணை, அன்பு  அனைத்தும் இருக்கும் இடமாக‌,  நெஞ்சத்தைக் குறிப்பது மரபு.  ஆகவே இறைவனின் திருமார்பில் கருணையின் ஸ்வரூபமாக உறைகிறாள் அன்னை என்று சொல்கிறோம்.

    ‘ஸ்ரீ’ என்ற பதம், பொதுவாக, திருமகளையே குறிக்கும்.

    திருமகளைக் குறிக்கும் ‘ஸ்ரீ’ என்ற பதத்துக்கு ஆறு விதமான அர்த்தங்கள் உண்டு என்று அருமையாகச் சொல்வார் ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் அவர்கள்.

    1. நம்மிடம் இருக்கிற குற்றங்களை நிவர்த்திப்பவள்.

     

    2. பகவானுடைய அனுக்கிரஹத்தை நமக்குக் கிடைக்கப் பண்ணுகிறவள்.

     

    3. நாம் சொல்வதைக் கேட்கிறவள். அதாவது, நாம் நமது குறைகளையெல்லாம் சொன்னால் பொறுமையாகக் கேட்கிறாள். யாராவது கஷ்டத்தையே சொன்னால் கேட்டுக் கொண்டிருப்பார்களா?. ஆனால் நம் தாயார்  கருணையோடு நம் கஷ்டங்களையெல்லாம் காது கொடுத்துக் கேட்கிறாள்.  அதனால் “இதி ஸ்ரீ:”, ச்ருணோதி” என்று பெயர் அவளுக்கு.

     

    4. பகவானை, நம் கஷ்டங்களையெல்லாம்  கேட்கப் பண்ணுகிறவள். நாம் சொல்லும் குறைகளை எம்பெருமானிடத்திலே, ஏகாந்தத்திலே,  நம் குறைகளை எடுத்து சொல்கிறாள். அதிலும் நமது குறைகளை கொஞ்சம் அதிகப்படுத்திச் சொல்லி இன்னும் பகவானுக்கு நம்மீது விசேஷ காருண்யம் ஏற்படுவதற்கு தானே இரண்டு மூன்று சேர்த்துக்கொள்வாளாம். அதிலே நாம் சொன்னதைக்காட்டிலும் ரொம்ப அழகாக, அதையே பகவான் திருவுள்ளம் உகக்கும் படியாக, அவன் உடனே ஒடிவந்து உதவி விடும்படியாக அதை மாற்றி, பக்குவமாக சொல்வாளாம். இதனால் ச்ராவயதி இதி ஸ்ரீ: என்றழைக்கப்படுகிறாள்.

     

    5.பகவானான ஸ்ரீமந் நாராயணனை எப்போதும் ஆச்ரயிப்பவள்.

     

    6. நாம் எப்போதும் ஆச்ரயிக்கத் தகுந்தவளாக, நம்மிடத்தில் நெருக்கமாக, தாயாக இருந்து நம்மை ரக்ஷிப்பவள்.

     

    ‘ஸ்ரீ’ எனும் பதத்திற்கு ‘மிகச் சிறப்பு வாய்ந்த’ எனும்  அர்த்தமும் உண்டு.  ஸ்ரீநகரம், ஸ்ரீசக்ரம், ஸ்ரீமான், ஸ்ரீமதி என்றெல்லாம் குறிப்பிடுவது அதனால் தான். அதே நேரத்தில், ‘ஸ்ரீ’ எனும் பதத்திற்கு ‘விஷம்’ என்னும்  அர்த்தமும் உண்டு. பொருட்செல்வம் நன்முறையில் பெறப்பட்டு, பயன்படுத்தப்பட்டால்  அங்கு லக்ஷ்மி தேவி மகிழ்வடைந்து அருள் செய்கிறாள். இல்லையெனில் அந்தப் பொருளே அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது என்பதையே இது உணர்த்துகிறது.

    ஸ்ரீலக்ஷ்மி தேவி, நல்ல ஆடைகள், ஆபரணங்கள், பொன், வெள்ளி, தெளிந்த நீர், சுத்தமான இல்லம், நற்குணங்கள் நிரம்பிய பெண், நெல் முதலான தானிய வகைகள், இறை விக்ரகங்கள், நறுமணம் மிகுந்த பொருட்கள், மலர்கள், பால், சந்தனம், உப்பு, ஊக்கமுடன் செயல்புரிபவர், புலனடக்கம் உள்ளவர், நல்லியல்பு உடையவர், நல்ல இனிமையான வார்த்தைகள் பேசுபவர், துணிவுள்ளவர் இவர்கள் யாவரிடத்திலும் மிக விரும்பி உறைகிறாள்.

    பக்தர்கள் நிந்திக்கப்படும் இடம், பெரியோரை மதிக்காதவர்கள், அடக்கமற்றவர், வேலை அல்லது தொழில் செய்யாமல் பொழுதை வீணடிக்கும் சோம்பேறிகள், ஒழுக்கம் இல்லாதார், மிகுந்த கோபமுள்ளவர், எப்போதும் சோகமாகவே இருப்பவர்கள், ஊக்கமின்மையால் தான் நினைக்கும் அளவுக்குச் செயல்பட முடியாதவர், தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை நன்முறையில் உபசரிக்காதோர், பூமியை நகத்தால் கீறுபவர், துர்க்குணங்கள் நிரம்பியவர், அசுத்தமாக இருக்கும் நபர், அசுத்தமான இல்லம், ஈரக்கால்களுடன் படுத்து உறங்குபவர், வீணாக பிறரைப் பழிப்பவர், தேவையின்றி சிரிப்பவர், வார்த்தைகளையும் பொருட்களையும் விரயம் செய்வோர் இவர்களிடத்தில் திருமகள் வாசம் புரிவதில்லை. அவள் விரும்பாத நடத்தைகள் இவையெல்லாம்.

    மேற்கண்டவற்றில் இருந்து நாம்  அறிவது யாதெனில், நேர்மறை சக்தியை அதிகரிப்பவை அனைத்தும் திருமகள் உறையும் இடங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதே. நேர்மறை சக்தியே நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணம்  என்பது கண்கூடு.

    நல்ல விஷயங்கள் பேசுவது, சிந்திப்பது, செய்வது எல்லாம் நேர்மறை சக்தி (பாசிடிவ் எனர்ஜி) தரும் விஷயங்கள். அது போல், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், வீட்டிலுள்ள பொருள்களை சுத்தமாகப் பராமரித்தல், முறையாகப் பயன்படுத்துதல், பொருள்களை வீணாக்காமல் இருத்தல் ஆகியவை  நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் நன்மையளித்து,  நம்மைச் சுற்றி நேர்மறை சக்தியை அதிகரிக்கச் செய்யும் செயல்கள்.

    நாம் செய்யும் நன்மைகள் அனைத்தும் பல்கிப் பெருகும் தினம் அக்ஷய திருதியை. நல்லன அனைத்திற்கும் ஸ்ரீலக்ஷ்மி, அதிதேவதையாக அறியப்படுவதால், அன்றைய தினம் லக்ஷ்மிக்கு உகந்த செயல்களைச் செய்வது, நம்மைச் சுற்றிலும் நேர்மறை சக்தியை பெருகச் செய்யும் . இதனால் நம் வாழ்வு மகிழ்ச்சிப் பூங்காவாக மாறும்.

    இறை வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், இனிமையான வார்த்தைகளைப் பேசுதல், இயன்ற அளவு மற்றவருக்கு உதவுதல் இவையனைத்தும் திருமகள் அருளைப் பெற்றுத் தரும் சாதனங்களே.

    ஆனால்,   இன்று இது தங்கம் வாங்கச் சிறந்த நாளாக மட்டுமே அறியப்படுவது வருந்தத்தக்கது.  தங்கத்தில் லக்ஷ்மி தேவி உறைகிறாள் என்பதால் தங்கம் வாங்குவது செல்வத்தைப் பெருகச் செய்யும் என்று ஐதீகம்.  ஆனால் தங்கம்  வாங்கித்தான் ஆக வேண்டுமென்று கட்டாயமில்லை. இயன்றவர்கள் வாங்கலாம். உப்பு, நாம் உண்ணும் உணவிற்கு மிகத் தேவையான பொருள். உப்பிலும் திருமகள் உறைகிறாள். ஆகவே அன்றைய தினம் உப்பு வாங்குவதும் திருமகள் அருளை  நிலைக்கச் செய்யும்.

    அக்ஷய திருதியை அன்று, காலையிலோ அல்லது மாலையிலோ, லக்ஷ்மி தேவியின் படம் அல்லது ஐந்து முக‌ தீபத்தை, சந்தனம், குங்குமம், மலர்கள் முதலியவற்றால் அலங்கரித்து, இயன்ற துதிகளைச் சொல்லி, பூஜிக்கலாம். பால் பாயசம், தயிர் சாதம் முதலியவை நிவேதனம் செய்ய உகந்தவை. இயலாவிடில், பழங்கள் வைத்தும் நிவேதனம் செய்யலாம். கற்பூரம் காட்டி, அதன் ஜோதியில் ஆத்ம ஸ்வரூபமான ஸ்ரீதேவி தெரிவதாகப் பாவித்து, வணங்கி நமஸ்கரிக்க வேண்டும். பிரசாதங்களை கட்டாயம் விநியோகிக்க வேண்டும்.

    அன்னதானம் மிக விசேஷமாகச் சொல்லப்படுகிறது. குறைந்தது பதினோரு நபர்களுக்கேனும் அன்று அன்ன தானம் செய்ய வேண்டும். இயன்ற மற்ற விதமான தான தர்மங்களும் செய்யலாம். நீத்தார் கடன் என்று சொல்லப்படும் பித்ரு வழிபாடு செய்வதற்கும் அக்ஷய திருதியை உகந்த தினம். முக்கியமாக, அக்ஷய திருதியை தினத்தில் நல்ல இனிமையான வார்த்தைகளைப் பேசுதல்,  நல்ல செயல்களைச் செய்தல்  ஆகியவற்றைச் செய்தால், அவை அக்ஷயமாக வளர்ந்து, நம் வாழ்வை மேன்மைப்படுத்திச் சிறப்பிக்கும் என்பது நிச்சயம். அக்ஷய திருதியை தினத்தில் அன்னையை வழிபட்டு, அவள் அருள் பெற்று உயர்வோம்!!

    Share
  • உன் திருவடிகள் தேடி……

     
    விசாலம்

    கருத்தரித்தாய் என்னை
    காத்தருளினாய்
    வினாடியும் கண்கொட்டாமல்
    நானும் வளர்ந்தேன்
    நீயும் மெலிந்தாய்
    மசக்கை என்ற பெயரால்
    உணவும் குன்றியது
    வாந்தியும் எடுத்தாய்
    உன் வாழ்க்கையில்
    மேடு பள்ளங்கள்
    சுற்றிச்சுழலும் கவலைகள்
    உடன் என்னைச்சுமந்தாய்.
    கால்களும் வீங்க
    கீழே அமர தவித்தாய் ,
    பிரசவத்தின் சூல் வலிக்கும்
    ஈடு கொடுத்தாய் ,
    “குவா குவா” சத்தம்
    உனக்கு தேனாக இனித்தது.
    வலி மறந்தாய்,
    எனை அணைத்தாய் .
    தந்தாய் எனக்கு ஒரு சிம்மாசனம்
    மடியேற்றி அமுதூட்டினாய் .
    மலமூத்திரம் புடவை நனைக்க
    பொறுத்தாய் புன்னகையுடன்
    என்னைக்காணும் போதெல்லாம்
    உன் முகத்தாமரை மலர்ந்தது
    அன்றிலிருந்து நான் வளர்ந்தேன். .
    நலம் கோடி பெற்றேன்
    “மாத்ருகடன்” சுமை வளர்ந்தது
    அத்தனையும் தீர்ப்பது எப்படி?

    என்னை வளர வைத்த உரங்கள்
    நீ செய்த தியாகங்கள்
    அதற்கு அளவே இல்லையம்மா
    உன் திருவடிகளே என் கோயில்
    அதைத் தொழுவதே என் வேலை

     

     

    Share
  • இல்லுறை தெய்வம்!

     

    -மேகலா இராமமூர்த்தி

     

    (அன்னையர் தினத்திற்காக எழுதப்பட்ட கவிதை)

     

     

     

     

     

     

     

     

     

     

    மண்ணில் பிறந்த மனிதர்க் கெல்லாம்

    உண்மையில் உயர்ந்த உறவவள்!

    கண்ணின் மணிபோல் குடும்பம் காக்கும்

    விளக்காய் என்றும் திகழ்பவள்!

     

    இன்னல்கள் எத்தனை வந்தா லென்ன…

    தானே தாங்கும் கொள்கலம்!

    தன்னலம் என்ற சொல்லே அறியா(து)

    தரணியில் வாழும் நல்லுளம்!

     

    அன்ன தானம் செய்வதி னாலே

    வந்திடும் புகழோ கொஞ்சமே!

    அன்னையைத் தனமாய்க் காப்பதில் தானே

    மகிழ்ந்திடும் உயர்ந்த நெஞ்சமே!

     

    ஊதியம் இல்லை ஓய்வும் இல்லை

    அன்னை பணியே அருட்பணி!

    ஆதி சக்தியின் வடிவம் அவளே

    என்றும் அன்னையின் பதம்பணி!

     

    பொறுமை என்னும் அணியால் வீட்டின்

    பெருமை காப்பவள் அன்னையே!

    வெறுமையாய்ப் போகும் மானுட வாழ்வும்

    அவளின் அன்பு இல்லையேல்!

     

    சொல்லில் விளக்கிடக் கூடுமோ அந்தத்

    தூயவள் சேவையை மொத்தமாய்!

    இல்லில் உறையும் தெய்வம் அந்தத்

    தாயினைப் போற்றுவோம் நித்தமும்!

     

    Share
  • தாய்

    சு.ரவி

    ஒருகவளம் சோறும், ஒருகுவளை நீரும்
    தருபவரெல் லாமெனக்குத் தாய்!

    அடக்கமில் லாமல் அதிர நடந்தால்
    தடுக்கிடும் கல்லுமென் தாய்!

    முலைப்பால் கொடுத்தென் முகத்தையும் சேலைத்
    தலைப்பால் துடைப்பவள் தாய்

    அம்மாநீ எந்தன் அருகிருக்கும் தைரியத்தில்
    சும்மா இருத்தல் சுகம்!

    பன்னுமாக மத்தாள் பசித்தவர் ஓட்டிலிடும்
    அன்னவாக னத்தாள் அவள்.

    ஓயா தியங்கி இயக்கத் துறங்குவாள்
    மாயா மனோன்மணி தாய்!

    எண்ணமும், எண்ணும் மனமும்ஆங் கெண்ணத்தால்
    எண்ணப் படுவதும் தாய்.

    மூலத் துறங்கி முனைப்பிற் கிளர்ந்தெழுவாள்
    கோலக் குமிண்சிரிப் பாள்.

    ஸ்ரீபுரத்தாள், மாமதுரைக் கோபுரத்தாள், பண்ணிசைக்கும்
    நூபுரத்தாள் நெஞ்சே நினை.

    அன்பே சிவம் அதன் ஆன்மா அவள் எனவே
    அன்பே அவளேன் றறி!

    சு.ரவி

    Share
  • அம்மா

    சு.ரவி

    அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு!
    பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், ‘கண் பார்த்தால் கைசெய்யும்’ என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் கற்றுத்தேறும் ஆர்வமும்-

    ஓர் அபூர்வக் கலவை அம்மா!.

    பொருளாதார வசதி குறைவாய் இருந்த காலகட்டங்களிலும், எப்போதும் வீட்டுக்கு எத்தனை விருந்தினர் வந்தாலும், அத்தனை பேருக்கும் சுவையான உணவு இருக்கும். பண்டிகை நாட்களிலோ ‘குறைவொன்றும் இல்லை கோவிந்தா’ தான்! தீபாவளி என்றால் உள்ளாடை முதல்,கர்சீப் வரை எல்லாருக்கும் புதிதாக அடுக்கப்பட்டிருக்கும். 2 ஸ்வீட், 4 காரம், லேகியம் என்று அனைத்தும் வீட்டிலேயே தயாராகும்.

    உழைப்புக்கு அஞ்சாத அம்மா!

    தையல் கலையில் தேர்ச்சிபெற்று, மயிலையில் ஒரு மாதர் சங்கக் கூட்டுறவு அமைப்பில் சேர்ந்து, ஸ்கூல் யூனிஃபர்ம் போன்ற ஆர்டர் எடுத்து, வீட்டில் தைத்துக் கொடுத்து அந்த சிறு வருமானத்தையும் வீட்டுப் பொருளாதாரத்திற்கு முட்டுக் கொடுத்து-

    தன் நேரத்தை வீணாக்காத அம்மா!

    அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளையும், எங்கள் நண்பர்களையும் தன் மக்களாகப் பாவித்து அன்புகாட்டும் மனம். ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண்குழந்தை (வயது3) வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை மிட்டாயென்று எண்ணித் தின்றுவிட்டுத் துவண்டு தலைதொங்க, அத்தனை பேரும் செய்வதறியாது திகைத்த போது, போட்டது போட்டபடி விட்டு, குழந்தையை அள்ளிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, அவள் உயிரை மீட்டு வந்த

    செயல்வீராங்கனை அம்மா!

    எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், அப்பாவோடு சேர்ந்து காலை அலுவல்களுக்கிடையே லலிதாஸஹஸ்ரநாமம் தினசரி பாராயணம் செய்யும் அம்மா!

    மயிலை கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி மாத ப்ரம்மோத்ஸவத்தின் முக்கியத்திருவிழாக்களுக்கு (3ஆம் நாள் அதிகாரநந்தி, 5ஆம் இரவு வெள்ளிவிடை, 7ஆம் நாள் திருத்தேர், 8 ஆம் நாள் அறுபத்துமூவர், அன்றுமாலை வைரமுடி சேவை) வருடம் தவறாமல் அழைத்துச் செல்லும் அம்மா!

    வீட்டுப் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே எங்கள் வாழ்க்கைத்தரத்தை மெல்லமெல்ல முன்னேற்றி, ஒரு சொந்தவீடு என்ற கனவைத் திட்டமிட்டு நனவாக்கிய அம்மா!

    1967ஆம் ஆண்டு, எனக்குப் பொறியியல் படிப்புக்காகக் கோவையில் கிடைத்த உத்தரவை, ஒரு குடும்ப நண்பருடைய உதவியுடன் தொழில்நுட்பப் படிப்பின் இயக்குனரைச் சந்தித்து கிண்டி கல்லூரிக்கு மாற்றல் வாங்கித் தந்த அம்மா!

    1973 ஆம் வருடம், பிள்ளைகள் நாங்கள் வாழ்க்கையில் காலூன்றாத நிலையில் அப்பா திடீரென்று காலமானபோது, எங்கள் வாழ்க்கைப் படகு தத்தளிக்காமல் தேர்ந்த மாலுமியாகச் செயல்பட்டு எங்களைக் கரை சேர்த்த அம்மா!

    தனக்குக் கிடைத்த குடும்ப ஓய்வூதியத்தொகையை, சேமித்து வைத்து அதைக் கண்ணும் கருத்துமாகத் துல்லியமாகக் கணக்கிட்டுத் தன்பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும், அவ்வப்போது தவறாமல் பங்கீடு செய்யத் தவறாத அம்மா!

    தன்மக்கள் நலம் வேண்டி, தன் உடல் வருத்தி, உப்பில்லாத உணவும், உணவே இல்லாத நோன்புமாகத் தன் வாழ்வைத் தியாகவேள்வியாக வாழ்ந்த அம்மா!

    நான் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அறுவை சிகித்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாட்களிலும், என் ஐமபது வயதில் அம்மையின் வெம்மையால் வீழ்ந்தபோதும், இரவு பகல் பாராமல் என்னை அருகிருந்து அகலாமல் காப்பாற்றிய அம்மா!

    கால்மூட்டுகள் தேய்ந்தபோதும், 75 வயதில் அதற்குப் பயிற்சி கொடுக்க, எக்ஸர்சைஸ் ஸைக்கிள் வாங்கிப் பயிற்சி செய்த அம்மா! தன் கடைசிகாலங்கள் வரை தன் வேலையைத்தானே பார்த்துக் கொள்வதென்ற பிடிவாத அம்மா!

    நினைவு மழுங்கிய இறுதி நாட்களிலும் பயிற்சி தரவந்த ஃபிஸியோ தெரப்பிஸ்டிடம்
    “Don’t Touch me; self Help is the Best Help”என்று சொல்லி அசத்திய அம்மா!
    “என்னை என் அம்மா அழைக்கிறார்; ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்” என்று திடமாக எமனை எதிர்த்துப் போராடிய அம்மா!

    அம்மாவைப் பற்றிய நினைவுப் பதிவுகளுக்கு ஏது எல்லை!

    அம்மா,
    சிறுவனாக இருந்த நாட்களில், எங்களை வீட்டில் விட்டுவிட்டு, அப்பாவோடு மாலையில் வெளியில் செல்லும் நீங்கள் வீடுதிரும்ப நேரமானால், தவித்துத் தவித்து, வந்தவுடன் தாவிஅணைத்து ஆறுதல் பெறுவேனே, அம்மா-

    இன்றைக்கு….?

    சு.ரவி

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)

    பவள சங்கரி

    விட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்!

    அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த கொடுக்கல், வாங்கலும் இருக்க முடியாது. எந்த சமரசமும் சரணடைவதையையே அடிப்படையாகக் கொண்டது. காரணம் இவையனைத்தும் கொடுப்பதில் மட்டுமே உள்ளதேயன்றி எடுப்பதில் அல்ல…
    மகாத்மா காந்தி

    சில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாகவே அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்துப் போகும் நமக்கு, நாமாக விரும்பி ஏற்றுக் கொள்ளும் உறவுகள் மற்றும் நட்புகளின் சிறு தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை. ஒரு கை ஓசையாக இருக்கும் பிரச்சனைகள் வெகு விரைவிலேயே நீர்த்துப் போய்விடுவதும் கண்கூடு.

    வங்கியில் காசோலையைக் கொடுத்து ஞாபகக் குறியையும் பெற்றுக் கொண்டு காத்திருக்கும் வேளையில் இருக்கையின் மறு முனையில் எனக்குத் தெரிந்த பெண் ஒருவரைப் பார்த்தேன். அவர் முகத்தில் ஏனோ ஒரு வாட்டம் தெரிந்தது. இரண்டு வருடமாகக் காதலித்தவரை சமீபத்தில்தான் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மணந்து கொண்டவர். இருவரும் கணினித் துறையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அவர் அருகில் சென்று நலம் விசாரித்தேன். ‘ஏதோ இருக்கிறேன்’ என்பது போல பதில் வந்தது. கணவரும் மற்றும் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்களா என்று விசாரித்தேன். அதற்கும் ஒற்றை வரியில் பதில் வந்தது. ஏதோ உடல் நலக் கோளாறாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது. காரணம் அவர் எப்பொழுதும் கலகலவென பேசிக்கொண்டிருப்பவர். அடுத்தடுத்து எங்கள் இருவரின் ஞாபகக் குறி (டோக்கன்) எண்ணையும் அறிவிக்கவும் இருவரும் ஒன்றும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். மரத்தடியில் நிறுத்தியிருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுக்கப் போனவரை நெருங்கி, எடுத்த எடுப்பில் ‘கணவரிடம் ஏதும் பிரச்சனையா’ என்றேன் மனம் கேட்காமல். இதை சற்றும் எதிர்பாராதவர், என் கண்களை உற்று நோக்கியவாரு ஒரு நிமிடம் யோசித்தவர், வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் மரத்தடிக்கே வந்தார். பின்னாலேயே சென்ற நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன் அவர்கள் திருமணத்திற்கு நானும் என்னால் ஆன முயற்சியை செய்த உரிமையுடன்.

    ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. ஆனால் வீட்டில் நிம்மதி இல்லாதலால் ஆபிசில் வேலை சரியாக பார்க்க முடியவில்லை’.

    ‘என்ன அப்படிப் பிரச்சனைன்னு நான் தெரிந்து கொள்ளலாமா’ என்றேன்.

    சற்று தயங்கியவர், மளமளவென கொட்ட ஆரம்பித்துவிட்டார். “அவர் கொஞ்சமும் அனுசரித்துப் போக மாடேங்கிறார். என்னமோ அவர் மட்டும் வேலைக்குப் போவது போலவும், நான் வீட்டில் நிம்மதியாக இருப்பது போலவும், எதற்கெடுத்தாலும் என்னையே அதிகாரம் செய்கிறார். ஏதோ நான் அவரோட அம்மா மாதிரியும், இவருடைய தேவைகள் அனைத்தையும் நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். என்னைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை, வீட்டு வேலைகளை பங்கிட்டுச் செய்யத் தயங்குகிறார். நான் அவமானப்படுத்தப்படுவது போல உணருகிறேன். இதனாலேயே ஆபிசிலும் வேலையை சரியாகச் செய்ய முடியவில்லை” என்றார்.

    ‘அவ்வளவுதானா, இன்னும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? உன்னை சரிவர கவனித்துக் கொள்வதில்லையா அவர்?’ என்றேன் நிதானமாக.

    உடனே சட்டென்று, ‘அப்படியெல்லாம் இல்லை. என்மேல் உயிரையே வைத்திருக்கிறார். நான் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் தவித்துப் போய்விடுவார்’ என்றார்.

    நானும், ‘நீ முன்னால் சொன்ன அனைத்தையும் அப்படியே அவர் கோணத்திலிருந்து, அவர் சொல்வதாக நினைத்துப் பாரேன், அவரிடம் மனம் விட்டுப் பேசினாயா?’ என்றேன்.

    சற்று நேரம் அமைதியாக யோசித்தவர், ‘ஆமாம் அவரும் என்னை இப்படி நினைக்கலாமே.. ஆனால் ஒரு நாளும் இப்படியெல்லாம் அவர் என்னை திட்டுவதற்கு நினைத்துக்கூடப் பார்த்ததில்லை’ என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். சட்டென கண்ணில் நீர் கலங்க ‘நான் தான் தவறு செய்துவிட்டேனோ. அவருடைய சுபாவம் அதுதான் என்பதைப் புரிந்து என் ஈகோவை கொஞ்சம் விட்டுக் கொடுத்து, அவரிடம் என் நிலையை மெல்ல மெல்லப் புரிய வைத்திருக்க வேண்டும். என் மேல் இத்தனை அன்பு வைத்திருப்பவர் என் சிரமத்தையும் புரிந்து கொள்வார். நான் எப்படி யோசிக்காமல் போனேன்’ என்று கூறியவாறு கண்களை துடைத்துக் கொண்டவரின் முகத்தில் தெளிவைக் காண முடிந்தது. விட்டுக் கொடுக்கும் அந்த மனோபாவம் வந்த மறு நொடியே அவர் மனத்திலிருந்த குழப்பம் நீங்கி, நிம்மதி பிறந்தது தெரிந்தது. கட்டாயம் இனி அவர் மன நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிற மாற்றம் அவருடைய வாழ்க்கையை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

    ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் ஒரு எல்லைக்கோடு அவசியம் தேவைப்படுகிறது. மனிதருக்கு மனிதர் அது வித்தியாசப்படலாம். அதனை உணர்ந்து அந்த எல்லையை மீறாமல் நடந்து கொள்வதே, குடும்பத்தில் நல்ல அமைதியான சூழலை ஏற்படுத்தக்கூடியது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் வாழ்க்கையில் அமைதி நிலைத்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. நாம் உண்மையாக அன்பு செலுத்துபவரிடம் அதிகக் கோபம் காட்டவோ அல்லது வெறுப்பை உமிழவோ இயலாது. கோபத்தினால் ஏற்படும் விவாதமும், விதண்டாவாதமும், அந்த அன்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும். நாம் அன்பு செலுத்துபவர் நம்மீது தேவையில்லாத கோபத்தை வெளிப்படுத்தும்போது, இடையில் ஒரு நொடி அவர் நம்மீது அன்பு மழை பொழிந்த அந்த இனிய தருணங்களை நினைவில் கொண்டுவந்தால் போதும். அந்த சூழலே நொடியில் மாறிவிடும். பின்பு மெல்ல அவர் கோபப்பட்டதன் சூழலைக் கேட்டறிந்து அதற்கான உபாயம் மூலம் நம்மால் முடிந்த அளவிற்கு அதனைத் தீர்க்கப் பார்க்கலாம்.  இந்த  இடத்தில் நமக்கு வேண்டியதெல்லாம் ‘நான்’ என்ற அந்த எண்ணம் மறைந்து நாம் என்ற உணர்வு மேலிடல்தான்.  இது அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். இந்த உணர்வே அவர்தம் கோபத்தையும், வேகத்தையும் குறைக்க முயலலாம். ஆக, நெருங்கிய உறவோ, நல்ல நட்போ எதுவாயினும் அடிப்படையான அந்த அன்பு பலப்பட வேண்டுமாயின் விட்டுக் கொடுத்தல் என்ற அந்த வேதத்தை கடைபிடிப்பதே சிறந்த யுக்தியாகும்.

    படங்களுக்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 30

    இன்னம்பூரான்


    இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி என்று சொல்லாமலே புரியும்!) கண்டு. ஊடகம் என்றாலே அவர்களுக்கு வாசகர்களை தட்டி எழுப்பவேண்டும், சுட்டி அளித்து, கட்டித் தழுவவேண்டும்; ஆருஷி மர்டர் கேஸ் என்றால், உடனடி ஆஜர். உச்ச நீதிமன்றம்/ஆடிட் மவராஜன் என்றால், சுவையான தகவல் நாடி, வபையான செய்திகளை கோட்டை விடவேண்டும். சர்குலேஷனும், சந்தாவும் கூடினால் போதும். இந்த குறையை நீக்குவது வெளி நாட்டு ஊடகங்கள் என்பது, இன்றைய எகானமிஸ்ட் இதழில் வெள்ளிடைமலை.

    கனம் கோர்ட்டார் தீர்ப்புகளையும், ஆடிட் ரிப்போர்ட்களையும் ஊடகங்கள் சரிவர புரிந்துகொள்வதில்லை; துலாக்கோல் ஆய்வு செய்து, அவற்றின் சாராம்சங்களை அளிப்பது இல்லை என்ற கவலை எனக்கு பல வருடங்களாக உண்டு. வால்டர் லிப்மென் என்ற பிரபல இதழியல் வல்லுனர் ஊடகங்கள், மக்களின் கருத்துக்களை உருவாக்கும் பணியை நடுவு நிலையிலிருந்து, பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றார். நம் ஊடகங்கள் அதை மறந்து விட்டன என்று தான் பல நாளிதழ்களில், இன்றைய நிகழ்வறிக்கை தோற்றுவிக்கிறது.

    அது என்ன? ஒரு பன்னாட்டு நிறுவனமும், இந்திய நிறுவனமொன்றும் சம்பந்தப்பட்ட பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசும், அதனுடைய பெட் ரோலிய கம்பெனியும் (ஓ.என்.ஜீ.சீ) எடுத்த முடிவின் மீது ஆடிட்டர் ஜெனெரல் குறை கண்டுள்ளார். அது தவறு. மத்திய அரசு செய்தது தான் சரி. தணிக்கத்துறை சொல்வது எல்லாம் வேதவாக்கு அன்று. தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றம் விவாதிக்கும். பொதுக்கணக்குக் கமிட்டி அலசும். பிறகு, அமைச்சரகம் சொல்வதை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றம் தணிக்கை அறிக்கையை நிராகரிக்கக்கூடும் என்று கனம் உச்சநீதி மன்றத்தில் இன்று சொல்லிவிட்டார்கள். டும்! டும்! என்று ஹூங்காரத்துடன் தொடங்கி, ஆடிட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு பொது நலவழக்கு இது, தணிக்கைத்துறையின் செயல்பாடுகளை கனம் கோர்ட்டார் விமரசிக்கவில்லை என்பதையெல்லாம் அடக்கி வாசித்தது, வால்டெர் லிப்மென் என்ற இதழியல் பிதாமகனின் அரிச்சுவடிக்கு முரண்.
    சரி. கனம் கோர்ட்டார் சொன்னது தான் என்ன என்று அறிய உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பைப் படித்தேன். அன்றாடம் தீர்ப்புகள் வெளி வந்து விடுவது ஒரு பெரிய ஆறுதல்.

    அருண் குமார் அகர்வால் என்ற விண்ணப்பதாரரின் பொது நலவழக்கு (ரிட் பெட்டிஷன் 69/2012) மீது இன்று (09 04 2013) நீதிபதிகள். திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் & தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், தள்ளுபடி செய்யப்பட்டது. விண்ணப்பத்தில் தணிக்கை அறிக்கை சான்றாகக் கூறப்பட்டிருந்தது. 46 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில், முதல் 36 பக்கங்களில் தணிக்கை அறிக்கை பற்றிய பேச்சே இல்லை. அரசு எடுத்த முடிவுகள் பற்றி ய சாட்சியம், ஆவணங்கள், இரு தரப்பு வாதங்கள், அரசியல் நடைமுறைகள், பொருந்தும்/பொருந்தாத முன்னைய தீர்ப்புகள் பற்றி விவரமான, தெளிவான அலசல்கள் தான் இடம் பெற்றன. அடுத்த பத்து பக்கங்களில், ஆடிட்டர் ஜெனரல் பற்றி அரசியல் சாஸனம் கூறுவது, நாடாளு மன்றத்தின் மேலாண்மை, ஆடிட் வரலாறு, வல்லுனர்களில் கருத்து எல்லாவற்றையும் விலாவாரியாக அலசி, தொகுத்து அளித்து விட்டு, நான்கு வாக்கியங்களில், தணிக்கை அறிக்கையின் மீது நாடாளும் மன்றத்துக்கு உள்ள மேலாண்மையை கோர்ட்டார் ஸ்வீகரிக்கலாகாது என்பதை விளக்கும் போது, ஆடிட் கூற்றை வேதவாக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றாலும், இந்திய அரசியல் சாஸனம் அமைத்த தணிக்கைத்துறையின் அறிக்கையின் மதிப்பை குறைத்து எடை போடக்கூடாது; அதே சமயம் எதிர்வாதங்களில் நியாயம் இருந்தால் அதை புறக்கணிப்பதும் சரியல்ல என்று தீர்ப்பு கூறுகிறது. இதையே தான் தணிக்கைத்துறையும் ஒவ்வொரு அறிக்கையிலும் முன்னெச்சரிக்கையாக, பல வருடங்களாக தாக்கல் செய்து வருகிறது. இந்த வழக்கில் தணிக்கைத்துறை ஒரு கட்சிக்காரர் இல்லை. அதனால், இந்த விளக்கம் அளிக்க அவர்களுக்குத் தருணம் கிட்டவில்லை.

    இந்த தீர்ப்பில், மற்றும் பல வகைகளில் முக்கியமானது.
    அரசு தீர்மான கட்டங்கள் துல்லியமாக அலசப்பட்டுள்ளன;
    நடைமுறை சாத்தியங்கள் அழகாக விவாதிக்கப்பட்டுள்ளன;
    ஆடிட் வரலாறு நிரல் நிறையாக கொடுக்கப்பட்டுள்ளது;
    குறிப்பிடப்பட்ட பழைய தீர்வுகள் மிகவும் தேவையானவை;

    இன்றைய காலகட்டத்தில் -கர்நாடக தேர்தல் முடிவுகள், ஜேபிஸி வில்லங்கம், ஸீபீஐ வில்லங்கள் – இது மேலும் ஆய்வு செய்ய வேண்டிய ஆவணம்.
    வாசகர்களுக்கு ஆர்வம் இருக்கும் பக்ஷத்தில், ‘கனம் கோர்ட்டார் அவர்களே!’ என்ற தொடரில் அவற்றை பற்றி எழுதுவதாக உத்தேசம். பார்க்கலாம்.

    உசாத்துணை:

    http://judis.nic.in/supremecourt/imgs1.aspx?filename=40390


    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-vcKSHYj-3lc/TfM1y3C05wI/AAAAAAAAAFg/A-HNd614QXk/s1600/SUPREME+COURT+AND+PRIVACY+RIGHTS.jpg


    Share
  • நாம் பெத்த ராசா….

     

    -பார்வதி ராமச்சந்திரன்

     

    தவமாத் தவமிருந்து

    தருமராசர் நோம்பிருந்து

    பூமிதி தா(ன்) மிதிச்சி

    பூச்சட்டி கையேந்தி

    பலநாள் பொறுத்திருந்து

    பாதகத்தி பெத்த மகெ(மகன்).

    பெத்தவ மொகம் பாக்க‌

    எப்பத்தா வருவானோ?

     

    பொன்னேதுங் கேக்கலையே

    பொடவ கூட கேக்கலையே

    கண்ணால ஒரு வாட்டி

    பாக்கத்தான் துடிக்கிறேனே

    பணங்காசு கேக்கலயே

    பழய சோறுங் கேக்கலயே

    பாவி மவ‌ ஒம் மொகத்த‌

    பாக்க நெதம் தவிக்கிறேனே

     

    அரக்கஞ்சி நாங் குடுச்சு

    அருமயா வளத்தெடுத்தே

    பூவடிச்சா நோகுமுன்னு

    பொத்திப் பொத்தி பாத்திருந்தே

    ஒன்னப் பிரிஞ்சிருக்கும்

    ஒரு காலம் வருமின்னு

    ஒரு நாளும் நெனக்கலயே

    ஒரு பேருஞ் சொல்லலையே

    பணங்காசு வந்துப்புட்டா

    பழசெல்லா மறந்திருமா

    புதுசாக ஒறவு வந்து

    புத்தியத்தா கெடுத்திருமா

    ஆத்தாவ வேண்டான்னு

    அரமனசா நீ நெனச்சிரலாம்

    அரும மகெ(ன்) வேண்டான்னு

    எ ஆவி கூட நெனக்காதே

     

    கண்ணீரு மழ கொட்ட‌

    காத்திருக்கே எம் மகனே

    புண்ணியமாப் போகுமப்பு

    பூ மொகத்தக் காட்டிப்புடு

    போக் காலம் வந்து நா

    போன தடம் மறயுமுன்ன‌

    பூ லோக மகராசா

    பெத்த என்ன பாத்துப்புடு.

    **

     

    சமீபத்தில் ஒரு கிராமத்தில், தன் வாழ்வின் இறுதியை நெருங்கும் ஒரு ஏழைத்தாய், தன் மகன் வந்து பார்ப்பதில்லை என மனம் உருகும் வண்ணம் அழுததைக் கண்டேன். ஆதரவற்ற அன்னையர் எத்தனையோ பேர்… இந்த அன்னையர் தினத்தில் அவ்வாறு ஆதரவற்று இருப்போரைக் கண்டால், ஒன்றிரண்டு ஆறுதல் வார்த்தைகளேனும் சொல்வோம் நண்பர்களே!!!!

     

    Share
  • அந்தர் முக ஸமாராத்யா. பஹிர் முக ஸுதுர்லபா.

     

    -கவிநயா

     

    லலிதா சகஸ்ரநாமத்தில் வருகின்ற அன்னையின் நாமங்கள்.

    அந்தர் முகம் என்றால் உள் முகமாக. உள் நோக்கி.
    பஹிர் முகம் என்றால் வெளி முகமாக. வெளி நோக்கி.

    உள் நோக்கிய, ஒருமுகப் பட்ட மனதால் மட்டுமே அறியப்படுபவளாம், லலிதாம்பிகை.
    வெளிப்புறத்தில் எங்கு, எப்படி நோக்கினாலும் நமக்குச் சிக்க மாட்டாளாம்.

    அவளை நினைக்கும் போதும், பூஜிக்கும் போதும், ஒரு முகமாக அவளை நினைக்க வேண்டும்.  மனம் நிறைந்த அன்பு இருக்க வேண்டும். பக்தி இருக்க வேண்டும். அதல்லாமல், வெளி நோக்கிற்காக மட்டுமே, வெளிப் பகட்டிற்காக மட்டுமே அவளை பக்தி செய்வதாக பாவித்தால், அவளை அறிய முடியாது என்கிறது லலிதா சகஸ்ரநாமம். புற வெளிப்பாடுகள் அவளைப் பொறுத்த வரை அவசியம் இல்லாதவை. புறத்தில் எப்படி இருந்தாலும், மனதில் தூய்மையான பக்தி இருக்க வேண்டும். அதுவே முக்கியம்.

    சில பேர் எக்கச்சக்கமாக பணத்தைச் செலவழித்து ஆடம்பரமாக ஹோமங்கள் செய்து, தான தருமங்கள் செய்வார்கள். ஆனால் அவர்கள் மனதில், “எவ்வளவு செய்கிறோம், எவ்வளவு நன்றாகச் செய்கிறோம்” என்ற எண்ணம் வந்து விட்டால், செய்தது அத்தனையும் வியர்த்தமாகி விடும். அதே சமயம், ஒரு சிறிய மலரால் பூசித்தாலும், அன்புடனும், அடக்கத்துடனும் அன்னைக்கு அர்ப்பணித்தால் அதிலேயே அவளுக்கு ப்ரீதி அதிகம் ஏற்படும்.

    சிலர் தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்வார்கள். ஆனால் ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கண்களும் காதுகளும் மற்ற விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருக்கும்; வாய் பேசிக் கொண்டே இருக்கும். “கொஞ்சம் அந்த அடுப்பை அணைச்சுடுங்களேன்…”, என்றும், “கண்ணா, ஃபோன் அடிக்குது பாரு… எடுத்து, அப்புறம் கூப்பிடறேன்னு சொல்லிடேன்…” என்றும் ஸ்லோகத்தோடு சேர்த்தே சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐம்புலன்களையும் அடக்கி (அல்லது முயற்சியாவது செய்து), உள்ளத்தை அவளிடம் திருப்பினால்தானே அவளை அடைய முடியும்?

    மகாபாரதத்தில் பல உப கதைகள் உண்டு. அவற்றில் ஒன்று, ஒரு கீரிப் பிள்ளையின் கதை. நினைவிலிருந்து சொல்கிறேன், கதை ரொம்பச் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது; கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    மகாபாரதப் போர் முடிந்த பிறகு தருமன் மிகப் பெரிய யாகம் ஒன்று செய்கிறான். அந்தக் காலத்தில் ராஜாக்கள் யாகங்கள் செய்து, அவை முடியும் தருவாயில் அளவில்லாமல் தான தருமங்கள் செய்வார்கள். அப்படி யாகம் முடியும் சமயத்தில், ஒரு கீரிப் பிள்ளை அங்கு வருகிறது.

    அந்தக் கீரிப் பிள்ளை, பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. எப்படி என்றால், அதனுடைய ஒரு பக்க மேனி முழுவதும் தங்க மயமாக இருக்கிறது. மற்றொரு புறம் சாதாரணமாக, அதனுடைய நிறத்திலேயே இருக்கிறது. இந்த அதிசயக் கீரிப் பிள்ளையை எல்லோரும் அதிசயமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்தக் கீரிப்பிள்ளை, யாக சாலை முற்றிலும் சுற்றி,  தானம் கொடுக்கையில் சிந்தியிருக்கும் தானியங்களிலும், மாவுகளிலும், மற்ற பொருட்களிலும், தன் உடம்பு முழுக்க படுமாறு புரண்டு எழுந்து வருகிறது. பிறகு தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டு, ஒரு பெரிஞ் சிரிப்பு சிரிக்கிறது.

    இத்தனை நேரம் இதனை வேடிக்கை பார்த்தவர்கள் என்னடா இது, இந்தக் கீரிப் பிள்ளை வித்தியாசமாக இருப்பதோடல்லாமல், மனிதர்களைப் போல சிரிக்க வேறு செய்கிறதே என்று அசந்து போய் விடுகிறார்கள்.

    “ஏய், கீரிப் பிள்ளையே! எங்கள் யாக சாலைக்கு வந்தது மட்டுமல்லாமல் ஏன் இப்படி ஏளனமாகச் சிரிக்க வேறு செய்கிறாய்? ஏன் உன் உடல் ஒரு பக்கம் மட்டும் தங்க மயமாக இருக்கிறது?” என்று கேட்கிறார்கள்.

    அதற்குப் பதிலாக அந்தக் கீரிப் பிள்ளை அனைவரது ஆச்சர்யத்துக்கும் நடுவில் மனிதர்களைப் போல் பேசவும் ஆரம்பிக்கிறது.

    “சிறிது காலம் முன்பு, நான் ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்த போது, ஒரு வீட்டில் நடந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள். அந்த வீட்டில், ஒரு பிராமணரும், அவர் மனைவியும், இளம் மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்கள். அவர்கள் மிகவும் ஏழைகள். தினமும் உஞ்சவிருத்தி செய்து, அதில் கிடைப்பதை அன்றன்றைக்கு சமைத்து சாப்பிட்டு வந்தார்கள். இப்படி இருக்கையில், ஒரு நாள், சோதனையாக அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. கொஞ்சம் சோளம் மட்டுமே கிடைத்தது. அந்தக் குடும்பத் தலைவியும் அந்த சோளத்தை மாவாகத் திரித்து சாப்பிடுவதற்குத் தயார் செய்தாள். அந்த சோள மாவை, ஆளுக்கொரு பகுதியாகப் பிரித்து கொண்டு சாப்பிட அமர்ந்தார்கள்.

    அந்த சமயத்தில் அவர்கள் வீட்டிற்கு ஒரு அதிதி வந்து சேர்ந்தார். நமக்கே இல்லை, இப்போது விருந்தாளி வேறா என்றெல்லாம் சங்கடப் படாமல், வந்தவரை மகிழ்வோடு வரவேற்றார்கள். அவர் மிகவும் பசியோடு வந்திருப்பதை அறிந்து, குடும்பத்தின் தலைவர் தன் பங்கு சோள மாவை அவருக்கு உண்பதற்கு அளித்தார். ஆனால் அதிதியின் பசிக்கு அது போதவில்லை. அதைக் கண்ட குடும்பத் தலைவி தன் பங்கையும் அவருக்கு அளித்தார். அப்படியும் அவர் பசி அடங்கவில்லை. அதன் பின் இளம் பிள்ளையும், பிறகு அவன் மனைவியும், இப்படி எல்லோருமே தங்கள் பங்கை அதிதிக்குக் கொடுத்து விட்டார்கள். அதன் பிறகே அவர் பசி ஒருவாறு தீர்ந்தது.

    தங்கள் உணவை அவருக்குத் தந்த போது அவர்களில் யாருமே வேண்டா வெறுப்பாகத் தரவில்லை. அனைவருமே, மிக்க மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும், மனமுவந்தும், தங்கள் பங்கை அவருக்குத் தந்தார்கள். அதன் பிறகு ஒரு தேவ விமானம் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றது. இதை நான் என் கண்களால் பார்த்தேன்”, என்ற கீரிப் பிள்ளை,

    “அப்போது அங்கு சிந்திக் கிடந்த சோள மாவில் நான் புரண்ட காரணத்தால் என் ஒரு பக்க உடம்பு முழுவதும் சுவர்ண மயமாகி விட்டது. அது முதல் நானும் இந்த உலகில் நடக்கும் எத்தனையோ யாகங்களுக்குச் சென்று பார்த்து விட்டேன், என் உடம்பின் மறுபாதியைச் சுவர்ணமயமாக்கும் தகுதி இது வரை எவர் செய்த தான தருமங்களுக்கும் இல்லை”, என்றதாம்!

    உள்ளார்ந்த ஈடுபாட்டோடு, பலன் எதிர்பாராது செய்யும் செயலே சிறந்த பலன் அளிக்கும்.

    ஸ்ரீ ராமானுஜரைப் பற்றியும் ஒரு செய்தி சொல்வார்கள். ஒரு முறை அவர் சீடர்களுடன் நடந்து போய்க் கொண்டிருந்தாராம். வழியில் சில சிறுவர்கள் ஒரு கல்லை எடுத்து அதை சுவாமியாகப் பாவித்து பூசைகள் செய்து, சிறிய மரக் குச்சிகளால் பல்லக்கு போல செய்து, அதில் அந்த சுவாமியை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தார்களாம். பிறகு பாவனையாகவே தீர்த்தம், பிரசாதம், எல்லாம் கொடுத்தார்களாம். அதனை ஸ்ரீ ராமானுஜரும் மிகுந்த பயபக்தியோடு பெற்றுக் கொண்டாராம். அவரோடு இருந்த சீடர்கள், “இந்தப் பிள்ளைகள் விளையாட்டுக்குச் செய்வதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களே?” என்று கேட்டார்களாம். “அவர்கள் விளையாட்டாகச் செய்தாலும், அவர்கள் பாவனையில் உள்ளார்ந்த அன்பும் பக்தியும் இருக்கிறது. அதனால்தான் ஏற்றுக் கொண்டேன்”, என்று பதிலளித்தாராம்.

    இதனையே வாக்தேவதைகளும் லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்கிறார்கள்.

    உள்ளன்போடு செய்யும் செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுவே இறைவனை மகிழ்விக்கும். இதற்கு உதாரணமாகப் பலப்பல அடியார்களின் சரித்திரங்கள் இருக்கின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், சபரித் தாயார், இப்படி எத்தனையெத்தனையோ.

    அன்பே உருவான அன்னையை உள்ளார்ந்த அன்போடு உள்ளத்துள்ளே வைத்து வழிபட்டு, அவள் அருளைப் பெறுவோம்.
    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

     

    படத்துக்கு நன்றி: http://mahasakthipeetam.wordpress.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/

     

    Share
  • ஏன் முதல் ஏடு வரை…

     

    மாதவன் இளங்கோ

     

    சிறிது குழப்பமான தலைப்புதான்.

    என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே!

    ஓரிரு நாட்களுக்கு முன்பு எனது பெல்கிய நண்பருக்கு ‘கிப்ளிங் முறை’ (Kipling Method) பற்றி விளக்கிக் கொண்டிருந்தேன்.

    அது என்ன ‘கிப்ளிங் முறை’ என்று உங்கள் புருவங்கள் சுருங்குவது தெரிகிறது.

    Rudyard Kipling – எனது ஆதர்ச கவிஞர், எழுத்தாளர். தலைவலி வந்தால் மருந்தை உட்கொள்வது போல, எப்போதாவது மனவலி வந்தால் அவருடைய ‘IF’ என்கிற கவிதைதான் எனக்கு மருந்தே! என்னைப் பொறுத்தவரையில், IF – உலகின் தலைசிறந்த கவிதைகளில் ஒன்று.

    அவரது “The Elephant’s Child” கதையில் வரும் “I KEEP…“ என்கிற கீழ்வரும் கவிதைதான் கிப்ளிங் முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

    I KEEP six honest serving-men

     (They taught me all I knew);

    Their names are What and Why and When

     And How and Where and Who.

    நாம் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முயலும்போதும் அல்லது ஒரு திட்டத்தைத் (Project) தொடங்கும்போதும், ‘ஏன்?’, ‘என்ன?’, ‘எப்போது?’, எங்கே?’, ‘எப்படி?’ மற்றும் ‘யார்?’ என்கிற இந்த ஆறு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டும். இந்த ஆறு கேள்விகளுக்கு விடையளித்தாலே பாதித் தீர்வு கிடைத்ததற்குச் சமம், பாதித் திட்டத்தை முடித்ததற்குச் சமம்.

    இது ஒன்றும் நமக்குப் புதிய விஷயமில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது பாட்டனார் ‘வினைசெயல்வகை’அதிகாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று விளக்கிவிட்டார்.

    ஆனால், என் மகனுக்கு என்னவோ இவர்கள் இரண்டு பேரையும் விட,   டாய்ச்சி ஓனோ-வைத்தான் நிறைய பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஓனோ, ஆறு கேள்வியெல்லாம் வேண்டாம், ஒரே ஒரு கேள்வி போதும் – ‘ஏன்?’. ஆனால், அதை விடாமல் ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’, ‘ஏன்?’ என்று கேட்டுகொண்டே போக வேண்டும் என்றார்.

    இதைத்தான் செம்மையாக செய்து கொண்டிருக்கிறான் என் மகன் – ஒனோவை பற்றியெல்லாம் தெரியாமலேயே! நேற்று முழுவதும் ‘ஏன்? ஏன்? ஏன்?’ என்று அவன் கேட்ட கேள்விகளை எண்ணியிருந்தால் நிச்சயமாக எண்ணிக்கை ஐநூற்றைத் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

    “ஏன் அலுவலகத்திற்குப் போகிறீர்கள்?” என்பதில் தொடங்கி “ஏன் பாட்டு பாடுகிறீர்கள்?” என்பதில் முடியும் (முடியாது.. நீளும்!). ஏதோ நான் அலுவலகத்துக்குச் செல்வதே பாட்டு பாடுவதற்காகத்தான் என்று தோன்றுமளவிற்கு எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடியும் அந்தக் குழந்தையின் கேள்விகள்.

    சிறிது சிந்தித்துப் பார்த்தோமானால், இப்படி ஏன்-களைப் போட்டுக்கொண்டே செல்லும் போதுதான் ஒரு சிக்கலுக்கான அடிப்படைக் காரணத்தை தெரிந்துகொள்ள முடியும். அடிப்படைக் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நம்மால் எந்தவொரு சிக்கலையும் தீர்க்கவே முடியாது.

    நான் அலுவலகத்தில் என் அணியினருக்கு அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம்: “அறிகுறிகள் எல்லாம் மூல காரணங்கள் அல்ல. அறிகுறிகளுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அறிகுறிகளே காரணங்கள் அல்ல. எனவே காரணங்களைத் தேடுங்கள்!”.

    ‘ஏன்-கள் மூல காரணங்களை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் சாதனங்கள்!’.

    சிறுவர்களுக்கு இருக்கும் இந்தக் ‘கேள்விகேட்டுப் பெறும் திறம்’, அவர்கள் வளரும் போது சிறிது சிறிதாகக் குறைந்து, பின்னர் முற்றிலும் அழிந்தே போய்விடுகிறது. இவற்றிற்கான காரணங்களை சற்று அலசுவோம்.

    • குழந்தைகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கச் சோம்பல்பட்டுக்கொண்டு , அவர்களை நன்றாகத் திட்டி, அதனைத் அவர்கள் தொடரவிடாவண்ணம் ஒருவித குற்ற உணர்ச்சியையை அவர்களுக்குள் ஏற்படுத்தி விடுகிறோம்.
    • இன்னும் சொல்லப்போனால், அவர்கள் சிறிது வளர்ந்த பிறகு கேட்கும் நிறைய கேள்விகளுக்கு நமக்கு உண்மையாக பதிலே தெரிவதில்லை. ஏனெனில் நம்மில் பலர் அறிவை வளர்த்துக்கொள்ளப் படிப்பதில்லை – அந்தப் பழக்கமே இருப்பதில்லை.
    • ‘கற்றலின் கேட்டல் இனிது’ என்பதுபோல பிறர் சொல்வதைக் கேட்டோ, கவனித்தோ அறிவைப் பெறலாம். ஆனால் யார் பேசுவது? பெரும்பாலான நேரம் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து கொண்டு சினிமாவைப் பற்றியோ அல்லது வீடு, மனை விற்றல்-வாங்கல் தொடர்பாகத்தான் பேசுகிறோம்..

    அறிவியலும், இலக்கியமும், வரலாறும், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களைப் பற்றியுமா பேசுகிறோம்?

    “அதையெல்லாம் எதற்குத் தெரிந்துகொள்ள வேண்டும்? இணையம் இருக்கிறதே, விக்கிபீடியா இருக்கிறதே!” என்று ஒரு கேள்வி எழலாம்.

    Wikipedia is a great platform. However, It may not be complete. நானும் ஒரு விக்கிப்பீடியன் என்கிற முறையில், இதனைக் கூறமுடியும். நாங்கள் எங்கோ எப்போதோ, படித்தோ கேட்டோ தெரிந்துகொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்கிற உந்துதலால் விக்கிபீடியாவில் பதிவு செய்கிறோம். அவற்றை யார் வேண்டுமானாலும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் செம்மைப்படுத்த முடியும்.

    ஆனால், விக்கிபீடியாவைக்கூட இன்று எந்த அளவிற்கு உபயோகிக்கிறோம் என்று தெரியவில்லை.

    ஒரு காலகட்டத்தில் சினிமாவில் போதிக்கப்படுவது மட்டுமே அறிவாக இருந்தது மாறி, இப்போது FACEBOOK-இல் பகிர்ந்து கொள்ளப்படும் விஷயங்கள் மட்டுமே நம் அறிவை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது என்பது ஒரு Painful reality!

    இவையனைத்துமே ‘நுனிப்புல் மேய்வது’ போலத்தான். நாம் பார்க்கும் விஷயங்களைப் பற்றிய நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள இவை சிறிதும் உதவாது.

    வேறு என்னதான் வழி?

    ஏடுகளை வாங்கிப் படிக்கலாம்.

    ஆயிரம்தான் விஷயங்கள் இணையதளத்தில் பொதிந்து கிடந்தாலும், புத்தகத்தை கையில் எடுத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசிப்பது போல் வராது.

    கடந்தமுறை இந்தியாவிற்கு வந்தபோது நண்பர்களைச் சந்திக்கக்கூட  நேரமே போதவில்லை. ஆனால், Landmark-ற்கு இருமுறையும், Higgin Bothams-ற்கு ஒருமுறையும் சென்றேன்.

    எனக்கு இதுபோன்ற புத்தகக்கடைகள் – மது அருந்துபவர்களுக்கு TASMAC போன்றது. இதைவிட மோசமான உவமை இருக்கமுடியாது என்று உங்களுக்குத் தோணலாம். இதைக்கூறிய உவமைக்கவிஞர் வேறு யாருமல்ல – என் மனையாளே தான்.

    இதற்கான காரணத்தைச் சொன்னால், அவருடைய இந்த உவமை உங்களுக்குச் சரியெனப் படலாம். புத்தகக் கடைகளைக் கண்டாலே என் கைகள் பரபரவென்றும், கால்கள் நடுநடுங்கவும்  ஆரம்பித்துவிடும். உள்ளே சென்றுவிட்டு வந்தால் CARD நன்றாகவே தேய்ந்து போயிருக்கும்.

    இந்தமுறை நான் வாங்கிய புத்தகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

    1. பாற்கடல் – லா.ச.ராமாமிருதம் (சந்தியா பதிப்பகம்)

    2. புத்ர – லா.ச.ராமாமிருதம் (சந்தியா பதிப்பகம்)

    3. நடந்தாய்; வாழி, காவேரி! – தி.ஜானகி ராமன் – சிட்டி (காலச்சுவடு பதிப்பகம்)

    4. வாழும் கணங்கள் – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    5. பள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    6. நானும் என் எழுத்தும் – சுந்தர ராமசாமி (காலச்சுவடு பதிப்பகம்)

    7. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)

    8. நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    9. பதினெட்டாம் நூற்றாண்டின் மழை – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    10. வாசக பர்வம்  – எஸ்.ராமகிருஷ்ணன் (உயிர்மை பதிப்பகம்)

    11. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (உயிர்மை பதிப்பகம்)

    12. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா (விசா பதிப்பகம்)

    13. கண்ணீரில்லாமல் – சுஜாதா – (உயிர்மை பதிப்பகம்)

    14. இன்னும் சில சிந்தனைகள் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    15. எழுத்தும் வாழ்க்கையும் – சுஜாதா – (உயிர்மை பதிப்பகம்)

    16. தமிழ் அன்றும் இன்றும் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    17. சுஜாதாவின் நாடகங்கள் – முழுத்தொகுப்பு (உயிர்மை பதிப்பகம்)

    18. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா (உயிர்மை பதிப்பகம்)

    19. டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன – மனுஷ்யபுத்திரன்  (உயிர்மை பதிப்பகம்)

    20. பூமித்தாயே – கோ.நம்மாழ்வார் (இயல்வாகை பதிப்பகம்)

    21. Famous Chinese Short Stories – Lin Yutang (Classic Library)

    22. Great Short Stories – Anton Checkov (Classic Library)

    23. By the River Piedra I sat down and Wept – Paulo Coelho (Harper Collins)

    24. Sudden flash of a thunder – OSHO (Wisdom Tree)

    இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே?

    இவற்றில் சில நான் ஏற்கனவே படித்தவை. இது தவிர, திரு.அண்ணாகண்ணன் அவர்கள் வேறு மூன்று புத்தகங்கள் அனுப்பி இருந்தார். விமானத்தில் 30 கிலோ எடைக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் புத்தகங்களே கிட்டத்தட்ட இருபது கிலோ தேறும். என்ன செய்வது, இங்கெல்லாம் தமிழ் புத்தகங்களே கிடைப்பதில்லையே!

    ‘யாம் பெற்ற இன்பம் யாவரும் பெற’ வேண்டுமென்பதால் கூறுகிறேன்.  விரைவாய்ச் சென்று புத்தகங்களை வாங்குங்கள்! வாசியுங்கள்! UPSC, CAT, GRE, GMAT இவற்றிற்குத் தயாரிப்பது போல, ஏதோ ஒரு இலக்கிற்காக அல்லாமல், அனுபவத்திற்காக வாசியுங்கள். வாசித்தல் என்பது மனதிற்கினிய விஷயம்.

    ‘ஏன் என்பதில் தொடங்கி ஏடுகள் வரை’பேசிவிட்டோம்!

    வாசி!

    வல்லமைக்கு வா…SEE …!

    Share
  • சிவதனுசும் விஷ்ணுதனுசும்

    -ஓம் வெ.சுப்பிரமணியன்

    ஓம்
    ”செய்யும் தொழிலே தெய்வம்”-இது சான்றோர்கள் நமக்கு உரைத்துச் செனற நல்மொழி. அதாவது, நாம் எந்தத்தொழிலைச் செய்தாலும், அதைத் தெய்வம் அருளிச் செய்த வரப்பிரசாதம் அல்லது கலை என்று எண்ணிப் போற்றி வழிபடவேண்டும்.

    செய்யும் தொழில் அல்லது தொழிலுக்கு உதவிடும் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மீது நாம் கொள்ளவேண்டிய பக்தி குறித்து தெய்வப் புலவர் திருவள்ளுவர், “ நமக்கு மகிழ்ச்சியளித்து, வாழ்வாதாரம் என்ற இன்பத்தை நல்கிடும் தொழிலைச் செய்யும் போது துன்பங்கள் பல நேரிடலாம். அத்தருணத்தில், அத்துன்பங்களைக் கண்டு மனம் கலங்கிடாமல் தொழில் மீதான பக்தி, மற்றும் துணிவு இவைகளுடன் அத் தொழிலைச் செய்வோமானால், தானாகவே இன்பம் விளையும்.”

    துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை.

    மிதிலாபுரியில் திருமணம் முடித்து, தங்கள் மனைவியர்கள், தாய்மார்கள், தந்தை தசரதர், சுற்றம்- மற்றும் பரிவாரங்கள் இவர்களுடன் அயோத்தி நகரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் ராம லட்சுமண பரத சத்ருக்கன- சகோதரர்கள். வழியில் அவர்கள் முன் பரசுராமர் தோன்றுகிறார். க்ஷத்திரியர்கள் மீது மிகுந்த விரோதமுள்ளவர் பரசுராமர். பாரத தேசம் முழுவதும் ஆட்சி செய்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் வதம் செய்தவர் அவர். பரசுராமரைக் கண்டவுடன், அவரால் அரச குமாரர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என அஞ்சுகிறார் தசரதர். எனவே, நிலைமை மீறிப்போவதற்கு முன், பரசுராமருக்கு முன்சென்று நின்ற தசரதர், அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறார்.ஆனால், பரசுராமரோ,தசரதர் அளித்த மரியாதையைப் புறக்கணித்துவிட்டு ஆணவத்தோடு இவ்வாறு சவால் விடுகிறார்.

    “க்ஷத்திரிய குமாரா, முன்னரே சிறிது முறிந்து, பின்னர் இறறுப்போன (பழுதாகிப் போன), சிவனின் ஆயுதமான சிவதனுசுவை முறித்துவிட்டதனால் நீ வலிமையானவன் என்று எண்ண வேண்டாம். அது உன் வீரத்திற்கும் அழகல்ல. இதோ, என் கையில் உள்ள திருமாலின் வில்லை நீ வாங்கி, வளைத்து, நாணேற்று பார்க்கலாம்”

    “ஊனவில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்
    “மலைகுவென் வல்லை ஆகின் வாங்குதி தனுவை என்றான்”

    -என பரசுராமர் ராமனுக்கு விடுத்த ஆணவச் சவாலை கம்பர் விளக்குகிறார்.

    பரசுராமனின் கூற்றைக் கேட்ட தசரதரோ நடுநடுங்குகிறார். ஆனால், ராமனோ, சிறிதும் அஞ்சாமல், எந்தவிதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல், பரசுராமரின் கையிலிருந்த வில்லை நிதானமாக வாங்கி, வணங்கி, பிறகு வளைத்து, நாணேற்றி அந்த வில்லில் அம்பு ஒன்றைப் பொருத்துகிறான். மேலும் பொருத்திய அம்புக்கு இலக்கு எது எனவும் பரசுராமரிடமே வினவுகிறான் ராமன். அதனால் வெட்கமடைந்த பரசுராமர், கர்வம் அழிந்து, தன் தவங்களின் மூலம் பெற்ற அனைத்து பலன்களையும் அந்த அம்புக்கு இலக்காகத் தாரை வார்த்துவிடுகிறார்.

    ஓம்
    ஜனகரிடம் சிவ தனுசு வந்த கதை.

    மிதிலையில் ராமன் முறித்த சிவதனுசுவின் கதை. மிதிலாபுரியில் ராமன் வளைத்து, நாணேற்றி முறித்த சிவ தனுசு, பரசு ராமர் கூறியது போல், முன்னரே சிறிது இற்றுப்போய் முறிந்திருந்ததா? அப்படியென்றால் அந்த முறிவும் பழுதும் எவ்வாறு ஏற்பட்டன? அதற்கான காரணம் என்ன? முறிவும் பழுதும் ஏற்பட்ட அந்த சிவதனுசு கவனியாமல் விடப்பட்டதா ? சீதையை மணம் புரியும் பொருட்டு, ஏற்கனவே சிறிது முறிந்து, பின்னர் பழுதாகிப் போன ஒரு வில்லை வளைத்து முறித்த ராமனின் செயல் ஜனகரை ஏமாற்றும் விதத்தில் அமையப் பெற்றதா? இத்தகைய சந்தேகக் கேள்விகளுக்கு அல்லவா இடம் கொடுத்துவிட்டன அந்தப் பரசுராமரின் ஆணவச் சவால்.

    பரசுராமர் கூறியதில் கால் பாகமே உண்மை. சிவதனுசுவின் முழுச் சரித்திரத்தை பரசுராமர் அறிந்திருக்கவில்லை. காரணம் அவர் பாரத தேசத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததுதான். அந்த நேரத்தில் பல நிகழ்வுகள் நடந்திருந்தன. மேலும், பல க்ஷத்திரியர்களைத் தன் கோடரியாலும்,திருமால் அளித்த அந்த வில்லாயுதத்தாலும் அவர் அழித்ததனால், அவருக்குத் தன் வசமுள்ள ஆயுதங்களே சிறப்பானதாகத் தெரிகின்றன. மட்டுமல்லாமல், ராமன் யார் என்றும் உணர்ந்து கொள்ளாததால் அவருடைய பேச்சிலும் ஆணவம் வெளிப்பட்டது.

    பரசுராமர் மறைமுகமாக மேல் கூறிய சந்தேகங்களுக்கும், கூடவே ஆயுத வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், ஆயுத வழிபாட்டால் கிடைக்கப் பெறும் நற்பலன்களையும், தவறும் பட்சத்தில் உண்டாகும் துன்பங்கள் குறித்தும் கம்பர் விரிவாக விளக்குகிறார்.

    முன்காலத்தில் விஸ்வகர்மாவினால் இரு மகோன்னத விற்கள் படைக்கப்பட்டன. அவை பிரகாசத்தில் சூரியனைப்போல ஜொலித்துக்கொண்டும், மேகம் போல் வளைந்தும் மேரு மலை போல் உறுதியாகவும், மானிடர்களின் கற்பனைக்கு எட்டாத்தாகவும், வேறு வில் ஆயுதங்களுடன் ஒப்பிடமுடியாததாகவும் இருந்தன.

    “ஒருகால் வருகதிர் ஆம் என ஒளி கால்வன உலையா,
    வருகார் தவழ் வட மேருவின் வலிசால்வன வையம்
    அருகா வினைபுரிவோன் உளன் அவனால் அமைவனதாம்,
    இருகார்முகம் உள யாவையும் ஏலாதன மேல் நாள்”

    அந்த இரண்டு விற்களில் ஒன்றை உமாபதியான சிவபெருமான் மனம் உகந்து ஏற்றுக்கொள்கிறார். மற்றொரு வில்லை, சக்கரதாரியும், உலகளந்த பெருமாளும் ஆன மஹாவிஷ்ணு முறையாக ஸ்வீகரித்துகொண்டார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இந்திராதி தேவர்கள், “இரு விற்களுமே வலிமை மிக்கவை. இதில் எந்த வில் அதிக வலிமை மிக்கதாக இருக்கக்கூடும்?” என ஐயங் கொள்கின்றனர். தங்கள் ஐயத்தைப் பிரம்மதேவனிடம் கூறி அதற்கு விடை கேட்கிறார்கள் இந்திராதி தேவர்கள்.

    “ஒன்றின உமையாள் கேள்வன் உவந்தனன்- மற்றை
    ஒன்றை உலகளந்த நேமி நெடியமால்- நெறியின் கொண்டான்
    என்று இது உணர்ந்த விண்ணோர்- இரண்டிலும் வலிமை எய்தும்
    வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அந்நாள்”

    இங்கே ஒரு விஷயத்தைக் கூறியே ஆகவேண்டும். இந்திராதி தேவர்களுக்குத் ’தாங்கள் தேவர்கள்’ என்ற இறுமாப்பு எப்பொழுதும் இருப்பதுண்டு. அதன் விளைவாய் அவர்கள் வீண் சந்தேகங்களைக் கிளப்பி விடுவார்கள். பிறரைச் சங்கடப்படுத்துவார்கள். பிற்பாடு அந்த இறுமாப்பால் தாங்களும் துன்பமடைவார்கள். சந்தேகம் என்பது ஒரு மன நோய். புலன்களைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த சந்தேக நோய் ஏற்படுவது திண்ணம். எனவேதான் வள்ளுவர் பெருமான் இந்திரனைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஐந்து புலஙளால் உண்டாகும் உணர்ச்சிகளை நாம் முளையிலேயேக் கிள்ளி எறிந்துவிடவேண்டும். இல்லையென்றால், வேறு ஒருவர் வந்து தன்னுடைய வலிமையால் அவற்றை நம்மிடமிருந்து அழித்து விடுவார். அதற்குச் சான்று தேவர்களின் தலைவன் இந்திரன்”- என்று கூறுகிறார்.

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்பு
    வார்கோமன் இந்திரனே சாலுங்கரி

    தேவர்களின் இந்த வீண் சந்தேகத்தைச் செவிமடுத்த பிரமன், அந்த விற்களில் ஒன்றினாலேயே இறுமாப்புப் பிடித்த தேவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணம் கொள்கிறார். ஒரு நாள் அந்த விற்களைக் காரணமாக்கி, சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் இடையே ஒரு பெரிய போர் வruமாறு தூண்டிவிடுகிறார், பிரம்மன்.

    “சீரிது தேவர் தங்கள் சிந்தனை என்பது உன்ன
    வேரிஅம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம் தன்னால்
    பாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை
    மூரி வெஞ்சிலைமேல் இட்டு மொய் அமர் மூட்டிவிட்டான்.”

    அரனும், ஹரியும் அவ்விற்களை நாணேற்றிக் கடும்போர் புரிந்தனர். அப்போரின் விளைவால் ஈரேழு உலகங்களும் கலங்கின. அஷ்ட திக்குகள் இடம் பெயர்ந்தன. அந்தப் போரின் ஒரு கட்டத்தில் சிவபெருமானின் வில் சற்று முறிந்தது. அதனால் சிவபெருமான் பெரும் கோபம் கொள்கிறார்.

    ”இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும்
    வெகுவர தயீசைகள் பேர வெஙகனல் பொங்க மேன்மேல்
    செருமலைகின்ற போழ்திரிபுரம் எரித்த தேவன்
    வரிசிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ”

    தன் வில் முறிந்ததனால் ஆக்ரோஷமான சிவபெருமான் தன் போர்த்திறனின் தீவிரத்தை அதிகரிக்கிறார். சிவனின் தீவிரமான போரைக் கண்டு நடுங்கிய தேவர்கள், போரின் நடுவே தலையிட்டுப் போரை நிறுத்துகிறார்கள்.

    சினம் தணிந்தனர் அரனும் மாலும். சிவபெருமான் தனது வில்லை இந்திரனுக்கும், திருமால் தனது வில்லை ரிசிகன் என்ற முனிவருக்கும் அருளிச் செய்துவிட்டு தம் தம் இடத்திற்கேகினர்.

    “மீட்டும் போர் தொடங்கும் வேலை விலக்க வல்லில்
    நீட்டினன் தேவர் கோன் கை நெற்றியில் கண்ணன் வெற்றி
    காட்டிய கரிய மாலும் கார்முகம் தன்னைப் பாரில்
    ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகர்க்கு ஈந்து போனான்.”

    திருமாலிடமிருந்து தான் பெற்ற வில்லை அதன் கட்டமைப்பு சீர்கெட்டுக் கலையாமல், அதை நித்தமும் பராமரித்துக் காத்துவந்த ரிசிக முனிவர், அதை ஜமதக்கினி முனிவருkகு வழங்க, பின்னர் ஜமதக்கினி அந்த வில்லை நன்றாகப் பராமரித்துத் தன் மகன் பரசுராமருக்கு அளிக்கிறார் இதைத்தான்,

    “இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்குத் தந்த
    வரிசிலை இது தொல்தின் வாங்குதி ஆயின் மைந்த

    என பரசுராமர் இராமனிடம் ஆணவத்துடன் கூறுகிறார்.

    சிவ பெருமானிடமிருந்துபெற்ற வில்லை அது சிறிது முறிந்திருந்ததனால், அலட்சியமாக ஆயுதக் கிடங்கில் கவனிப்பாரின்றி போட்டு விடுகிறான் இந்திரன். அதனால் சிவ தனுசு வேதனை அடைகிறது. மேலும் பழுதாகவும் துவங்குகிறது. தன் வில்லுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை சிவனின் காட்சிக்கும் தெரிகிறது. தன்னுடைய வில்லில் ஏற்பட்ட விரிசலையும், இந்திரனால் விளைந்த பழுதையும், வீரியக் குறைவையும் சீர் செய்யும் பொருட்டு அவ்வில்லை இந்திரனிடமிருந்து தன்னிடம் அழைத்துக் கொள்கிறார் சிவபெருமான்.

    அவ்வாறு திரும்ப சிவபெருமானிடம் செல்லும் போது, அந்த சிவதனுசு இந்திரனைப் பார்த்து,” சிவனின் ஆயுதம் என்றும் கருதாமல், என்னை நீ கைவிட்டதற்கு தண்டனையாக தக்க தருணம் வரும்போது நான் உன்னைத் தண்டிப்பேன்” எனச் சாபம் அளித்துவிட்டு சிவபெருமானைச் சென்றடைகிறது. தன்னிடம் வந்து சேர்ந்த அந்த வில்லைச் சரி செய்து அதற்கு மீண்டும் வீரியம் அளிக்கிறர் அரன்.

    இந்திராதி தேவர்களுக்கு சிவ தனுசு கொடுத்த சாபம் நிறைவேறும் தருணம் வருகிறது. சிவபெருமானையும், அரனின் மனைவியும், தன் மகளுமான தாட்சாயிணியையும் அவமானம் செய்து அவமரியாதை செய்யும் பொருட்டு, அவர்களுக்கு அழைப்பு அனுப்பாமல், யாகம் ஒன்றைச் செய்கிறான் தட்சப் பிரஜாபதி. அந்த யாகத்தில் இந்திராதி தேவர்கள், வேத விற்பன்னர்கள் இன்னும் பலர் கலந்து கொள்கிறார்கள். சிவ பெருமானின் பேச்சினையும் மீறி தட்சன் நடத்தும் யாக சாலைக்குச் சென்ற தாட்சாயிணி, தட்சனால் இகழப்படுகிறாள். இதனால் சினமுற்ற அரன் தன்னுடைய சிவ தனுசுவை எடுத்துக் கொண்டு யாக சாலைக்கு விரைகிறார். அங்கு, தட்சன் நடத்தும் வேள்வியில் பங்கெடுத்த இந்திராதி தேவர்களின் பற்களையும், கரங்களையும் வில்லால் உடைத்தும், அறுத்தும் தள்ளுகிறார் சிவபெருமான். அதனால் அஞ்சிய தேவர்கள் மறைவிடத்தல் ஒளிந்து கொள்கிறார்கள். அதனால் அவர்கள் உயிர் தப்புகிறார்கள். பிறகு தட்சனின் வேள்வியை அழித்து சினம் தணிந்த அரன், தேவர்களை மன்னித்து, தன்னுடைய சிவ தனுசை, ஜனகனின் முன்னோரான தேவநாதன் என்னும் மன்னனுக்கு அளித்துவிட்டு கயிலாயத்தை அடைகிறார்.

    “இமையவில் வாங்கிய ஈசன் பங்கு உறை
    உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய
    கமை அறு சினத் தணி. கார்முகம் கொளா,
    சமை உறு தக்கனார் வேள்வி சாரவே”

    “உக்கன பல்லோடு கரங்கள் வீழ்ந்தன,
    புக்கனர் வானவர் புகாத சூழல்கள்,
    தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின
    முக்கண் எண் தோளவன் முனிவு மாறினான்.”

    “தாளுடை வரிசிலை சம்பு உம்பர்தம்,
    நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இக்,
    கோளுடை விடை அனா குலத்துள் தோன்றிய,
    வாளுடை உழவன் ஓர்மன்னன் பால் வைத்தான்.”

    அரனிடமிருந்து தான் பெற்ற அந்தக் கட்டமைப்புக் கலையாத வில்லை தேவ நாதன் நன்றாகப் பராமரித்து, தன் சந்ததியர்களிடம் கொடுக்க, முடிவில் அந்த சிவ தனுசு ஜனகரிடம் வந்து சேருகிறது. சான்றோர்கள் உரைத்த, “மறவாமை என்னும் கருவி கொண்டு தொழில்களைப் போற்றினால், , செய்வதற்கு அரியவை என்னும் செயல்கள் எதுவுமே இல்லை என்ற நல்மொழியைப் பின்பற்றி ஜனகரும் அந்த சிவ தனுசை சிறப்பாகப் பேணிக் காக்கிறார்.

    சிவனின் ஆயுதமான அந்த சிவதனுசை மிக்க மரியாதையுடன், பூஜைகள் செய்து சிறப்பாக கவனித்ததின் பலனாக, தேவநாதன், ‘ஜீவன்முக்தர்’ என அறியப்படும், ஜனகரை வாரிசாக அடைகிறார்.. ஜனகரோ, திருமகளின் அவதாரமான சீதையை மகளாகவும், திருமாலின் அவதாரமான இராமனை மருமகனாகவும் அடையும் பேற்றைப் பெறுகிறார். மாறாக, அந்த சிவ தனுசுவை உதாசீனம் செய்ததின் விளைவாக, தேவர்கள் அந்த சிவதனுசினாலேயே தக்க தண்டனை அடைகிறார்கள்.

    ….நன்றி:-பெங்களூரு எஸ். கிருஷ்ணமூர்தி- தெய்வதரிசனம் இதழ்.
    ஓம்

    Share
  • அறுமுகநூறு (13)

     

    -சச்சிதானந்தம்

     

    விடிந்தி ருக்கும் வை கறையில்,

    படிந்தி ருக்கும் புது ஒளியே!

    படிந்தி ருக்கும் மனத் துயரைக்,

    கடிந்த கற்றும் நின் ஒளியே!                                                                                              61

     

    தணிந் தெழுந்து விளையாடும் கடலலையை,

    அணிந் தணிந்து நனைந்திருக்கும் செந்தூரனே,

    பணிந் துனது தாள்களுக் கணிவிக்கவே,

    புனைந் தேனினிய கவிதைகளே!                                                                                  62

     

    முருகனை நினைந்து இருவிழி நனைந்து,

    மருவிய மனதின் மாயை கடந்து,

    குருவென அவனைப் புனைந்தடி பணிந்து,

    கருவென குகனைப் பாவில் வைத்தேன்!                                                                         63

     

    செருக்கென்னும் சீர்கேட்டில் சிதையாமல் செம்மையுற்று,

    நெருப்பென்னும் தீமையினை நெருங்காத நெஞ்சமுற்று,

    இருள்என்னும் அறியாமை அடையாமல் ஞானமுற்று,

    பொருப்பெங்கும் பூத்தவனைப் பணிகின்ற பேறுபெற்றேன்!                                        64

     

    அதிகாலை வானம்போன்ற அழகான ஆறுமுகனை,

    நதிநீரின் சலசலப்பில் சுகமாக வாழ்பவனை,

    நொதிக்கின்ற நெஞ்சத்தின் நோய்தீர்க்கும் நாதனை,

    துதித் தென்றும் தூமனத்தைக் கொள்வோமே!                                                                65

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 8

    குன்றக்குடி அடிகள்

    8. வாழ்வாங்கு வாழ்வோம்!

    வாழ்தல், அறிவியல் சார்ந்த கலை, உளவியல், சமூகவியல், தாவரவியல், வேளாண்மையியல், கால்நடையியல், கட்டுமானவியல், தொழிலியல், பொருளியல், நிர்வாகவியல் ஆகிய அறிவியல் துறைகள் அனைத்தும் சங்கமித்த தனிச்சிறப்புடைய வாழ்க்கையே வாழ்க்கை! மானிட வாழ்வியல், விலங்குத் தன்மையுடையதல்ல.

    மனிதன், மிருகமும் அல்ல; மனிதனும் அல்ல. விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையை அடையக்கூடிய படைப்பு! மனிதனாகிய பிறகு, அதிமானுடத் தன்மை அதாவது இறைத்தன்மை அடைய வேண்டிய படைப்பு! இந்தப் பரிணாம வளர்ச்சி, முறையாக நிகழ்ந்து நிறைவெய்துதலே வாழ்கையின் குறிக்கோள்; பயன்! இத்தகு மாற்றங்களும் வளர்ச்சியும் நிகழாத வாழ்க்கை, வாழ்க்கையாகாது. “வாழ்கின்றாய்! வாழாத நெஞ்சமே!” என்பது திருவாசகம்.

    வாழ்க்கை என்பது தற்செயலாக ஏற்பட்டதல்ல. வாழ்வியல் திட்டமிட்டதே! அற்புதமான ஒழுங்கமைவுகளுடன் அமைந்ததேயாம். ஆதலால், சிறந்த முறையில் வாழ முயற்சி செய்வதும் ஒருவகை அறிவியல் முயற்சியேயாகும். ஏன்? சீராக வாழ்ந்து – வாழ்ந்த காலத்திற்கும் தலைமுறைக்கும் ஏற்றம் தரும் வகையில் வாழ்ந்து முடித்தால் அஃது ஓர் அறிவியற்சாதனை என்று கூட பாராட்டலாம்.

    வாழ்க்கையென்பது பல்வேறு பொறிகளைக் கொண்ட, புலன்களால் அமைந்த உடலைக் கருவியாக்கிக் கொண்டு வாழப்பெறுகிறது; இயக்கப் பெறுகிறது. உடம்பின் இயக்க ஆற்றலின் பாதுகாப்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இந்த உடம்பின் அனைத்துப் பொறிகளையும் புலன்களையும் சிறப்புற இயக்கிப் பயன் கொள்வதன் மூலம் வாழ்க்கை பயனுடையதாகிறது; முழுமையாகிறது.

    இத்தகைய முழு வாழ்க்கைக்குத் தொடக்கம் இல்வாழ்க்கை, காதல் ஒருத்தியுடன் கூடி வாழ்க்கையை நடத்துதல் என்பது, ஒரு கூட்டு வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் மூலம் தென்புலத்தார் பேணப்படுகின்றனர்; தெய்வம் பூசிக்கப் பெறுகிறது; விருந்தோம்பும் வேளாண்மை நிகழ்கிறது; துறந்தவ்ர்களுக்குத் துய்ப்பனவும் உய்ப்பனவும் வழங்கப் பெறுகின்றன.

    துய்த்து மகிழும் வாய்பிழந்தார்க்கெல்லாம் துய்ப்பன வழங்கப் பெறுகின்றன. இரந்தாருக்கும், இறந்தாருக்கும் ஏற்ப உதவிகள் செய்யப் பெறுகின்றன. தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையாக, சமூக வாழ்க்கையாக, நாட்டு வாழ்க்கையாக வளர்கிறது! இதுவே வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சி! இங்ஙனம் வாழ்தலே வாழ்க்கை!

    “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்”

    வானத்திற்கு என்று ஒரு தனிவாழ்க்கை முறை இல்லை. இந்த வையகத்தில் வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்துபவர்களை நோக்கி வானகம் வந்துவிடும். வானத்தை இந்த மண்ணிலேயே காணலாம். இங்கேயே – இந்த மண்ணுலகிலேயே அமர வாழ்வு வாழலாம். வாழ்வாங்கு வாழ்தல் மூலம் மட்டுமே அமர வாழ்வு கிட்டும்! அறிவியல் சார்ந்த வாழ்க்கை வாழ்வோமாக! அறிவறிந்த ஆழ்வினை இயற்றுவோமாக! பொருள்களைச் செய்து குவித்து இன்பத்துடன் வாழ்வோமாக!

    ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • ஒன்றானது…

    செண்பக ஜெகதீசன்           

     

    கருவறை இவர்க்குப் பொதுவானது

    காட்சி என்றும் எதிர்பார்ப்பது,

    உருவினில் அழகின் இடமானது

    உரைக்கும் முறுவல் மொழியானது,

    பெருகிடும் அன்பே ஊற்றானது

    பேசிடா தென்றற் காற்றானது,

    திருவருள் தெய்வச் சிலையதுவும்

    தீதிலாக் குழந்தையும் ஒன்றன்றோ…!

     

           http://www.hiren.info/desktop-wallpapers/babies-pictures/surprised-child-looking                         

    Share