வெங்கட் சாமிநாதன்

இம்மாதம் சிறுகதைகளின் வருகை இன்னமும் குறைந்துவிட்டது. வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம்.

இம்மாதம் வந்துள்ள கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று என்று சொல்லக் கூடியது பழையவரும் தேர்ந்த கையுமான பழமை பேசியினது தான். கொழுகொம்பு

அன்னிய சூழலில் தொடர்ந்து இருந்த போதிலும், பிறந்த மண்ணின் வாசம் விடாது, அதே சமயம் வாழும் அன்னிய மண்ணின் சூழலில் ஆழ்ந்த அனுபவம் நிறைந்த வாழ்நிலைகளை எழுதுகிறவர். இம்முறை மனிதனுக்கும் நாய்க்கும் இடையேயான உறவில் வாய் பேசாத ஜீவனின் நம்பிக்கையை மனிதன் பொய்க்கைச் செய்யும் கணங்களில் மனிதன் அதைக் குற்ற உணர்வோடு உணரச் செய்வது நன்றாக இருந்தாலும் அதை அதிக அலங்கார வார்த்தைகளால் நிரப்பாது செய்திருக்கலாம். இது காறும் பழமை பேசியின் எழுத்துக்களில் நான் காணாத ஒரு புதிய மாற்றம் இது

ஒரு உதாரணத்திற்கு ஆரம்பத்தையே எடுத்துக்கொள்ளலாம்,

நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் யாவும் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன்.

எனக்கு இது வேண்டாம் என்று தோன்றுகிறது. மற்றபடி, அவரது சுதந்திரம் இது.

இருப்பினும் அவரது கதை கொழு கொம்பு தான் வந்தவற்றில் சிறந்தது

பழமை பேசிக்கும், பங்கு கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

வெ.சா..

இந்த மாத சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற கதைகள்:

எழுச்சி

கல்யாணப் புடவை

“ ஐ லவ் யூ “

“ திருட்டுப் பூனைகள் “

மை லிட்டில் ரெட் வேகன்

கொழுகொம்பு

மனதின் உயரம்….

அன்பு நண்பர்களே,

’சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பார்கள். படைப்புத் திறனும் அப்படித்தான் அல்லவா. எழுத எழுத மெருகேறிக் கொண்டேயிருக்கும் இல்லையா. வெ.சா. ஐயா போன்று சிறந்த விமர்சகரின் மோதிரக் கையால் குட்டுப்பட நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  அதனைப் பயன்படுத்தி நம் திறமையையும் வளர்த்துக் கொள்ளலாமே.. இன்னும் நிறைய சிறுகதைகளை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து தங்கள் படைப்புகளை வரவேற்கிறோம். இந்த முறையும் பரிசுக்கு உரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு பழமைபேசி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்

பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on "ஏப்ரல் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்"

  1. நூற்றாண்டின் இலக்கிய விமர்சகரிடம் எப்படியாவது குட்டுப்பட வேண்டும். அந்நினைவினை வாழ்நாள் முழுக்க ஏந்திச் செல்ல வேண்டும் என்கிற ஆசை எழுந்ததுண்டு. அது இப்போது நிறைவேறி விட்டது. மகிழ்ச்சி!! 

    எனினும் இந்த மாதம் இன்னும் சிறப்பாய் எழுத அனைவருமே முயல்வோம். சக நண்பர்களுக்கு எமது வாழ்த்துகள். நல்ல படைப்புகளைப் படைத்திடுவோம்!! களம் அமைத்துக் கொடுத்த ஆசிரியர்குழு, நடுவர் ஐயா, ஐக்கியா நிறுவனம், படைப்பாளிகள், வாசகர் என அனைவருக்கும் நன்றி!

  2. வாழ்த்துக்கள் திரு.பழமைபேசி அவர்களே.

  3. வாழ்த்துகள் சகோ! இது எனக்கு நிச்சயம் செய்தியல்ல. வெல்வது உமக்கு பழக்கமாகிவிட்டது! 🙂 

    மதிப்பிற்குரிய வெ.சா அவர்களிடம் குட்டு ஒன்றே போதும் என்று விரும்பிக்கொண்டிருக்கையில், அவரிடம் மாதாமாதம் மோதிரங்களை வென்று கொண்டிருக்கும் அந்த ‘தேர்ந்த கைக்கு’ என் பாராட்டுகள்!    

    I feel so happy for you!! 

    வல்லமை குழு, ஐக்கியா நிறுவனம், திரு.வெ.சா மற்றும் கதாசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றியும், வாழ்த்தும்!

  4. ஆகா….மீண்டும் பழமை பேசியா  … மீண்டும் மீண்டும்  வாழ்த்துக்கள்.  
    உங்கள் கதைகள் அனைத்துமே உயர்ந்தவைதான்.  பாராட்டுக்கள்.  அடுத்த கதையினைப் படிக்க  ஆவலுடன் காத்திருக்கிறேன்.  வாழ்த்துக்கள். 

    அன்புடன் 
    ….. தேமொழி 

  5. முதலில் வல்லமை ஆசிரியைக்கு,

    நான் செய்யாத காரியத்துக்கு ஏன் இப்படி ஒரு குறிப்பு.  நான் இது காறும் கதை என்று ஒன்று கூட எழுதியதில்லை. இந்த இடத்தில் 56 கதைகள் எழுதியிருப்பதாக சொல்வது எப்படி? இவை எங்கே இருக்கின்றன?. ஒரு வேளை stories  என்பது பத்திரிகைதொழிலில் வழங்கும் அர்த்தத்தில், சொல்லப்படுகிறதா? சிறுகதைகளைப் பற்றிப்பேசும் இடத்தில் stories  என்று சொன்னால் சிறுகதைகளைப்பற்றியதாகத் தானே இருக்கும்?

    அடுத்து, ஏதும் critical ஆகச் சொன்னால் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கிக் கொள்வதில்லை என்பது என் 50 வருட அனுபவம். அதற்கு முன்னர் எவ்வளவு பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும் ஒரு critical comment-ஐ அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.  நியாயம் தான். அவர்கள் எல்லாம் கற்புக்கரசிகள் அல்லவா?. ஒரு தவற்றைக் கூட தாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஒரு தடவையானால் என்ன, புனிதம் கெட்டது கெட்டது தானே என்ற ஜ்வாலையில் வாழ்பவர்கள்.

    நல்ல வேளையாக இங்கு அந்த மாதிரி எனக்கு ஏதும் உத்பாதங்கள் இது வரை எனக்கு நேரவில்லை.  இனி எப்படியோ?

     எல்லோருக்கும் என் நன்றி.

    பி.கு. பழமை பேசி க்கும் மணி ராமலிங்கத்துக்கும்  ஒருபார்வையும் எழுத்துத் திறனும் இருக்கு.  அவர்கள் தங்கள் எழுத்துக்களைத் தொகுத்து அச்சில் வெளியிடவேண்டும். 

  6. பெயரில் பழமையிருந்தாலும் புதிய புதிய கோனத்தில் கதையை தரும் பழமைபேசிக்கு வாழ்த்துக்கள். இன்னும் உற்சாகமாய் எழுதுங்கள் இன்னும் வெல்லுங்கள்.

  7. உங்கள் ஆசியே, திரு.வெ.சா., இந்த இளைய த்ஜலைமுறைக்கு உத்வேகம் கொடுக்கும். உம்மை கதைப்பவர் என்று சொன்ன இதழாசிரியைக்கு என் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.