Blog

  • படக்கவிதைப் போட்டி 215-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 215-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கிளைமீது அமர்ந்திருக்கும் பால்வண்ணக் கொக்கைக் கலைநயத்தோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் பார்கவ் கேசவன். இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 215க்கு அளித்துள்ளார் சாந்தி மாரியப்பன். பார்கவுக்கும் சாந்திக்கும் என் நன்றிகள்!

    ”கண்ணைக் கவர்கின்ற கொக்கின் வெண்ணிறத் தோற்றமானது மாரிக்காலத்து ஆம்பல் மலரை ஒத்திருக்கின்றது” என்கிறது சங்கநூலான நல்ல குறுந்தொகை.

    ”மாரி யாம்ப லன்ன கொக்கின்…”  (குறுந்: 117)

    கொக்கினைப் பற்றிப் பாப்புனையக் காத்திருக்கும் பாவலர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன் கவிபடைக்க!

    ”காட்டைக் கொளுத்தித் தன் கூட்டை அழித்துவிட்ட மனிதனிடம் தான்பட்ட பாட்டைக் கூறும் கொக்கின் சொற்கள் அவன் செவியில் ஏறுமா?” என்று கேட்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கேட்குமா…

    மரங்களை வெட்டி
    மனிதன்
    மழையைத் தடுத்துவிட்டான்..

    காட்டைக் கொளுத்திக்
    கொக்கின்
    கூட்டைக் கலைத்துவிட்டான்..

    மீன்கள் வாழும்
    குளங்களைத் தூர்த்தே
    மாடிவீடுகள் கட்டிவிட்டான்,
    கொக்கின் பிழைப்பில்
    மண்ணைப் போட்டுவிட்டான்..

    பட்டமரக் கிளையிலிருந்து
    கொக்கு
    பட்ட பாட்டைக்
    கூறுவது
    கேட்குமா மனிதன்
    காதுகளில்…!

    *****

    ”பற்றற்ற எதிர்பார்ப்பில் தனித்துத் திரிதலில் அலுப்பேதுமில்லா இக்கொக்கு, நாளைய பறத்தலின் நம்பிக்கையோடு காத்திருக்கின்றது” என்கிறார் முனைவர் ம. இராமச்சந்திரன்.

    காத்திருத்தலின் அதீத சுகத்தில்
    போனவை திரும்புவதில்லை
    வருவதில் பற்றற்ற எதிர்பார்ப்பில்
    தனித்து அலைந்து திரிதலில்
    அலுப்பேதும் அருகில் இல்லை
    கூட்டமாகப் பறந்து திரிந்தாலும்
    தனி யுலகின் ஏமாற்றங்களும் யதார்த்தங்களும்
    யார் மீதும் குறை சொல்லாத
    வாழ்தலின் நிறைவு
    நாளைய பறத்தலின் நம்பிக்கையில்!

    *****

    ”என்றோ வரப்போகும் வசந்தத்தை வரவேற்கவும், வெள்ளத்து நீரில் துள்ளி வரப்போகும் உறுமீனைக் கொத்தவும் காத்திருக்கின்றது கொக்கு” என்று பேசும் பாவினைப் படைத்திருக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    கொக்கு ஒன்று காத்திருக்குது
    அதற்குப் பரிச்சயமில்லா உலகம்
    நீர்நிலை தேங்க இயலா நிலம்
    அக்னிப் பிழம்பில் சுட்டுப்போன சுடுவெளி
    இலைகளும் தழுவாத பட்டமரம்
    பசுந்துளிர்களைப் பறிகொடுத்த கிளைகள்
    மலர்களின் மணம் பரப்ப மறந்து போனாலும்,
    என்றோ வரப்போகும் வசந்தத்தை வரவேற்று
    வெள்ளத்து நீரில் புரண்டு வரப்போகும்
    உறுமீனுக்கென
    பாவம் கொக்கு ஒன்று காத்திருக்குது!

    *****

    ”பறவைகளும் விலங்குகளும் நிறைந்திருந்த கானகம் நீரின்றி வறண்டுபோனதால் மகிழ்வாய் மீனுண்ட கொக்கு இன்று வான்நோக்கி அமர்ந்திருக்கின்றது மழைக்காக!” என்றுரைக்கின்றார் திரு. சுந்தர்.

    தனிமை
    நினைவுகளின் சாரலில்
    சிறகடிக்கிறேன்
    தனிமையின் தாகம் தணிக்க
    நினைவுகளின் ஈரமே மிச்சம்!
    வசந்தகாலங்கள் வாசல் தெளிக்க
    வண்ணமயில்கள் கோலமிட
    வண்டுகளும் பூச்சிகளும்
    ரீங்காரமிட
    காகம் கரைய
    பருந்து வட்டமிட
    ஆந்தையின் அலறலில்
    அறிவிப்புமணி அலறடிக்க
    மைனாவின் மெல்லிசை
    தேன் சிந்த
    வானரங்களும் வௌவால்களும்
    களிநடனமாட
    நரியின் ஊளையிலும்
    புலியின் உறுமலிலும்
    புள்ளி மான்கள் பாய்ந்தோட
    விண்ணைப் பிளக்கும்
    யானையின் பிளிறலையடுத்து
    சிங்கத்தின் கர்ஜனையில்
    நிசப்தம் சிறிது நீடிக்கும்
    ஆரவாரம் மீண்டும் ஆர்ப்பரிக்கும்
    அருவியின் வீழ்ச்சியும்
    ஓடிய நீரோடைகளும்
    தேங்கிய குன்றுகளும்
    பசையற்றுப் போனதேனோ…?
    வனத்தின் வாரிசுகள்
    தாகவேட்கையில் திரிவதேனோ….?
    அறிவற்ற மனித மிருகத்தின்
    மரங்கள் வேட்டைதான் காரணமோ…?
    நீர் நிலையில் ஊன்றிய
    என் கால்களும்
    மீன்களை நோக்கிய
    என் கழுத்தும்
    மழையின் வரவை நோக்கி
    பட்டமரத்தில் உச்சிக்கிளையில்
    விண்ணை நோக்கிய
    காத்திருப்பு மேன்மேலும் தொடர்கிறது…!

    கொக்கினை வைத்து நம் வித்தகக் கவிஞர்கள் வித்தாரக் கவி படைத்திருக்கின்றனர் நன்று! அவர்களுக்கு என் பாராட்டுக்கள் சேரட்டும் சென்று!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    இலைகள் எல்லாம் கிளைகளின் உறவறுத்தாயிற்று..!
    பசுந்தளிர்களை மீண்டும் பிரசவிக்க இயலாது பட்டமரமாயிற்று!
    இருந்தும்…வெள்ளைநிறப் பூவொன்று
    இங்கே விரிந்திருக்கும் விந்தையென்ன…?
    முற்றும் இழந்தபின்னும் கிளை
    கொக்கைத் தாங்கிநிற்கும் கோலம் புரிகிறதா…?
    மரம் இறந்தும் வாழ்கிறது…!
    மனிதம்…? இரக்கமின்றிச் சாகிறது!

    ”கிளைகளும் இலைகளும் உறவறுத்து, பட்டுப்போய்விட்ட மரமோ பால்வெள்ளைக் கொக்கு பூவாய் அமர்ந்திருக்க இடம் கொடுத்ததனால் இறந்தும் வாழ்கின்றது! இயற்கை நேயமற்று வனமழிக்கும் மனிதமோ இரக்கமின்றிச் சாகின்றது!” எனும் புதிய சிந்தனையைத் தன் கவிதையில் பதியம் போட்டிருக்கும் திருமிகு சத்யாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.   

     

     

    Share
  • பறையரை அவமதித்த அரையர்

    பறையரை அவமதித்த அரையர்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    பண்டைய தமிழக அரசியலில் நான்கு அதிகார அடுக்குகள் இருந்தது, கல்வெட்டுகள் மூலம் தெள்ளப் புலனாகின்றது. அவை முறையே வேந்தன்(emperor). அவன் கீழ் மன்னன்(king). மன்னன் கீழ் அரையன்(duke). அரையன்  என்ற அரசன் கீழ் கிழான்(knight) அல்லது கிழார் கோன் என்பவாம். தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வேந்தர் 4-5 பேர் இருந்தால் மன்னவர் அதைவிட கூடுதலாக 15-20 பேர் வரை இருந்தனர். அரையர்கள் 40-50 பேருக்கு மேல் இருந்தனர். கிழார்கள் 150-200 பேருக்கு மேல் இருந்தனர். கல்வெட்டுப் பதிவுகளில் நிலம் விற்று ஆவணமாகும் போது அதை வேளாண் எனும் அரையர்களும் கிழார்களும் ஒப்பமிட்டு ஏற்பிசைவு தந்ததை வைத்து மேற்சொன்ன கூற்றைச் சரி என்று உணரலாம்.

    வேளாண் என்னும் அரையர்களான அரசர்கள் இக்கால் ஆண்ட பரம்பரை, ஆளப்பிறத்தவர், அடக்கி ஆண்டவர், மண்ஆண்டவர், பாராண்டவர் என்று மார்தட்டிக் கொள்ளும் சாதிகளில் கலந்துவிட்டது தெரிகின்றது. குறிப்பாக, வெள்ளாளர், துளுவ வேளாளர், படையாச்சி, கொங்கு வேளாளர், கள்ளர் முதலாய சாதிகளே அவை. பறையர்கள் சில இடங்களில் கிழார்களாக அல்லது கிழார்களிடத்திலும் அரையர்களிடத்திலும் பாதுகாவலர்களாக (பந்தோபஸ்து), ஊராளிகளாக, படைத் தலைவர்களாக இருந்த போர்க்குடிகளாவர். இதனால் இந்த அரையர், கிழார்களிடத்தில் பறையருக்குப் பல நேரங்களில் அவமதிப்பு நேர்ந்துள்ளது. இந்த அவமதிப்பு பிற்காலத்தே 16-17ஆம் நூற்றாண்டில் தீண்டாமையாக உருப்பெற்றது. மேற்கண்டதை விளங்கிக்கொள்ள சில கல்வெட்டுகள் சான்றாக உள்ளன.

    இக்கால் பறையர்கள் பலர் தமது தீண்டாமைக் கொடுமைக்குப் பிராமணரே பொறுப்பு, காரணம் என்று தப்பும் தவறுமாக எண்ணமிட்டு வருகின்றனர். ஆனால் ஆயுதம் ஏந்தாத, எண்ணிக்கையில் குறைவான பிராமணரால் அவ்வாறு தம்மைத் தீண்டாமையில் ஆட்படச் செய்திட முடியாது என்பதை அவர்களால் சிந்திக்க முடியவில்லை. இதற்குக் காரணம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னோடிகளாகக் கருதப்படும் அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர் போன்றோர் பிராமணரை முன்னிலைப்படுத்தியே, பிராமணரை வெறுக்கும்படியாக எழுதியும் பேசியும் பரப்புரை செய்து வந்தது தான். இதைப் பறையர் மட்டுமல்லாமல் பிராமணர் அல்லா பிற சாதிமாரும், அரையர் குடியில் வந்த சாதிகளும் கூட முழுமையாக நம்புகின்றனர். இதனால் தமிழ்ப் பிராமணர், தமிழ்ச் சாதிகளின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளனர். எப்படி என்றால் அடுத்த வரும் 500 ஆவது ஆண்டில் ஒரு குழந்தை பிராமண சாதியில் பிறக்கப் போகின்றது என்றால் அதையும் இதே வெறுப்பில்தான் தமிழ்ச் சாதிகளில் பலர் அணுகுகின்றனர். குழந்தை பிறக்கும் என்ற செய்தி மட்டும் தான் உறுதியே தவிர அதற்கு பெயர் இல்லை, அதன் வினை என்ன என்பதெல்லாம் எவருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட நிலையிலும் அதன்மீதும் வெறுப்புக் கருத்து சுமத்தப்படுகின்றது. இது எந்த வகையிலும் பகுத்தறிவின்பாற்படாது என்பதை யாவரும் அறிவர்.   இதைப் பற்றி தமிழ்ச் சாதிகள் கருத்துத் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக ஈண்டு சில கல்வெட்டுகள் ஆராயப்படுகின்றன. இதைப் படித்தாவது தமிழ் மக்கள் இந்த அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கரின் கற்பனைக் கருத்துகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். ஏனென்றால் பறையர்கள் அரையர் குலத்தவரான பண்ணையார்களிடம் தான் வேலை செய்கின்றனர். அவருடைய சுரண்டலுக்கும் ஏச்சிற்கும் பேச்சிற்கும் ஆளாகி அவமானப்பட்டனர் என்ற வகையில் இந்த நிலக்கிழார் சாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றாக வேண்டும் என்பதை உணர்த்தாமல் பிராமணரை நோக்கி, தப்பாக இம்மக்களை வழிநடத்தியதால் 130 ஆண்டுகாலப் போராட்டம், உழைப்பாற்றல், காலம் எல்லாம் வீணாகிப்போனது.  இன்றுவரை பறையர் இழிவு, குறை தீரவில்லை என்பதே உண்மை.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் அரங்கநாதர் கோவில் உடையவர் சன்னதி எதிரே 4 –ம் பிரகாரத்தில் பொறிக்கப்பட்ட 3 கல்வெட்டுகள்.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீற்றிருந்தாந் சேமனாந அகளங்க நாடாழ்வா(ர்)
    2. ற்கு திருவரங்கத்து கைக்கோள முதலிகளில் நாயநான அழகிய ம
    3. ணவாள மாராயநேந் இவற்கு பிந்பு சாவாதே  இருந்தேநாகில் எந்
    4. மிணாட்டியைப் பறையற்குக் குடுத்து எங்கள்ளம்மைக்கு நானே
    5. சிதைந்துள்ளது

    கைக்கோளர் – செங்குந்தப் படைவீரர்; முதலி – தலைவர்; நாயநான – தலைவர்க்கு தலைவனான; மிணாட்டி – மனைவி; அம்மை – தாய்; மிணாளன் – கணவன்; உடன்வேளையாக – in no time, சட்டென்று.

    விளக்கம்:  அழகிய மணவாள மாராயன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தர் படைத்தலைவர்களுக் கெல்லாம் தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அந்தவகையில் இவர் உயிர் துறக்கும் முன்பே நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடும் அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

    1. ஸ்வாஸ்தி ஸ்ரீ வீற்றி[ரு]ந்தாந் சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு திருவரங்
    2. கத்துக் கைக்கோளரி லரியாநாந கிடாரத்தரைய னேந் இவற்கு உட
    3. ந் [வே]ளையாகச் சாவக்கடவேநாகவும் இவற்கு பிந்பு சாவாதே இருந்
    4. தேநாகில் எந் மிணாட்டியை பறையற்கு [கு]டுத்து எங்களம்மைக்கு நா
    5. நே மிணாளநாவேந்.

    விளக்கம்:  அரியானான கிடாரத்தரையன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தர் படைத்தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அதனால் உடன்வேளையாக (in no time) இவர் உயிர் துறக்கும் முன்பே அவர் உயிரைக் காப்பதில் நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடும் அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

    1. ஸ்வாஸ்தி ஸ்ரீ வீற்றிருந்தாந் சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு
    2. திருவரங்கத்துக் கைக்கோளரில் உலகநாந அழகானைச் சோ
    3. ழ மாராயநேந் இவற்கு உடந் வேளையாகச் சாவக்கடவேநாகவு
    4. ம் இவற்கு பின்பு சாவாதே இருந்தேநாகில் எந் மிணாட்டியைப் 
    5. றையற்குக் குடுத்து எங்கள்ளம்மைக்கு நாநே மிணாளநா
    6. வேந்.

    விளக்கம்: உலகனான அழகானைச் சோழன் மாராயன் என்பான் வீற்றிருந்தான் சேமனான அகளங்க நாடாழ்வான் எனும் அரையனிடம் கைக்கோளச் செங்குந்தப் படைத்தலைவனாக பொறுப்பேற்றுக் கொண்டு சூளுரை செய்தது யாதெனில், ‘’ இவரது உயிருக்கு எப்போதும் பாதுகாப்பாய் இருப்பேன். அதனால் உடன்வேளையாக (in no time) இவர் உயிர் துறக்கும் முன்பே அவர் உயிரைக் காப்பதில் நான் உயிர் துறப்பேன். அப்படி அல்லாமல் நாடாழ்வார் இறந்து நான் அதன்பின்னும் வாழும் சூழல் ஏற்படுமானால் என் மனைவியை பறையர் புணர விட்டுக் கொடுத்ததோடு அல்லாமல் என் தாயை நானே  புணர்ந்தவன் ஆவேன்’’.

    மேற்கண்ட மூன்று திருவரங்கக் கல்வெட்டில் மூன்று செங்குந்தர்களான கைக்கோளர்கள் படைத் தலைவர்களாக தனித் தனியே சூளுரை ஏற்றது பொறிக்கப்பட்டுள்ளது. கைக்கோளர் என்போர் பல்லவரது பட்டடைக்குடி / படைக்குடியாக பல்லவர்களால் உருவாக்கப்பட்ட தனி சாதியார் ஆவர். அரையரான அகளங்க நாடாழ்வான் இவர்களை கட்டாயப்படுத்தி எவ்வாறு இழிவாக சூளூரை ஏற்கசெய்துள்ளார் என்பது தெரிந்தாகிவட்டது. பார்வை நூலில் இவர்கள் சாகும்  வரை வேலைக்காரனாக சாவதாக சூளுரை ஏற்பதாக பொருத்தமற்ற விளக்கம் தரப்பட்டுள்ளது. வேந்தர் பெயரும் காலமும் குறிக்காததால் கல்வெட்டின் காலம் என்ன என்று அறிய முடியவில்லை.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 24, பக்கம் 162, தொடர்ச்சியாக மூன்று கல்வெட்டுகள்  (A.R.No 267 to 269 of 1930) 

    விழுப்புரம் மாவட்டம், ஜம்பை, ஜம்பநாதர் கோயில் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சகலபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவற்கு யாண்டு 11 வது பெண்ணை வடகரை வாணகோப்பாடி நாட்டு செண்பையான வீரராசேந்திர சோ
    2. ழபுரத்து உடையார் திருத்தொந்தோன்றி ஆவுடையனாயனார் தேவதாநம் பெண்ணை தென்கரை குணமங்கலம் பயிற் செய்யும் படிக்கு ஏழாவழ முதல் காசாயம், பொன்வரி, ஆளமஞ்
    3. சி, அன்தராயம் கொள்ளக் கடவதல்லவாகச் சொன்னோம் ஆறகளூருடைய வாணகோவரையன் இராசராச தேவன் வந்நெஞ்ச இராயனேந். இப்படி சன்திராதித்தவரை செய்வதே. இது மாறுவான்
    4.  தன் மிணாட்டியை பரைமாயன்நுக்கு குடுப்பான். இது பன்மாகேசுர இரக்ஷை.

    செண்பை – ஜம்பை; காசாயம் –  காசாக வந்த வரி; ஆளமஞ்சி – நீர்நிலைகள் பேண வரி; அன்தராயம் – நிலவரி அல்லாத அகநாட்டு வரி ; மாறுவான் – இந்த ஏற்பாட்டை மாற்றுபவன்; குடுப்பான் – கொடுத்தவன் ஆவான்.

    விளக்கம்: காடவப் பல்லவன் கோப்பெருஞ்சிங்கனின் 11 ஆம் ஆண்டு ஆட்சியில் (பொ.ஊ.1253) பொன்பரப்பின வாணகோவரையர் வழிவந்த வாணகோ இராசராச தேவன் வன்நெஞ்சராயன் தென்பெண்ணையின் வடகரையில் அமைந்த வாணகோப்பாடி நாட்டு செண்பை கிராமத்தில் அமைந்த திருத்தொன்தோன்றி ஆவுடையார் கோவிலின் தேவதானம் ஆன தென்பெண்ணை தென்கரையில் உள்ள குணமங்கலம் என்ற ஊரில் பயிர் செய்வதற்கு காசாயம், பொன்வரி, அன்தராயம் உள்ளிட்ட  வரிகள் தண்டவேண்டாம் என்று வரிவிலக்கு அளித்தேன் என்கிறான். இந்த ஏற்பாட்டை மாற்றுபவன் தன் மனைவியை பரைமாயன் புணர விட்டுக் கொடுத்தவன் ஆவான். இந்த தர்மத்தை சிவபக்தர்கள் காக்க வேண்டும். பறையர் குறித்து வாணகோ வன்நெஞ்சன் கொண்டிருந்த இழி கருத்து இக்கல்வெட்டில் வெளிப்படுகின்றது.

    பார்வை நூல்: தொல்குடி வேட்டுவர் சமூக ஆவணங்கள், ஆசிரியர் ப. ஆனந்தகுமார், பக்.106

    கோயம்புத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், திருமுருகன்பூண்டி முருகநாதர் கோவில்

    ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சொழதேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லியாண்டு 11 வதுக் கெதிராவது புரட்டாதி மாதம் 18 தியதி ஞாயிற்றுக் கிழமை முதல் வாயறைக்கா நாட்டுப் பல்லவிடத்தில் வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலனேன். நாயனார் திருமுருகன்பூண்டி ஆளுடையார்க்கு கோயில் நாயகர்க்கு நாளொன்றுக்கு நாழியரிசி அமுதுபடி செல்வதாக இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர் காஸ்ய கோத்திரத்து அவிநாசி முருகனான சீகாழியானும் அவிநாசிமுருகன் உள்ளிட்டாரும் சாந்தாரைக் காப்பான் திருவேங்கடமுடையானும் இவ்வனைவோங்கள். இவ்வச்சு பத்துக் கொண்டு எங்கள் மக்கமக்கள் குடங்கொண்டு கோயில் குடங்கொண்டு கோயில் புகுவான் சந்திராதித்தவரை செல்வதாக. இது பன்மாகேஸ்வர ரட்சை.

    நல்லியாண்டு – முடிசூட்டிய ஆண்டு, வெள்ளாளன் – கிழான் அல்லது அரையன், மாப்புள்ளி – தலைமை மதிப்பீடு செய்வோன், chief assessor, சாந்தாரை – சந்தனக் கல், மக்க மக்கள் – பேரர் வழிப் பேரர்.

    விளக்கம்: கொங்கு சோழன் விக்கிரமசோழன் முடிசூட்டி 11 ஆம் ஆண்டிற்கு எதிர்ஆண்டான 12 ஆம் ஆண்டு ஆட்சியில் (பொ.ஊ.1285) புரட்டாசி மாதம் 18 –ம் நாள் ஞாயிறு தொட்டு வாயறைக்கா நாட்டு பல்லடத்தின் கிழானான வெள்ளாளனிடத்தில் மாப்புள்ளியாக பொறுப்பில் இருக்கும் சோழன் பறையனான தனபாலன் திருமுருகன் பூண்டி இறைவர்க்கு ஒவ்வொரு நாளும் அமுதுபடிக்காக நாழியரிசிக்கு பத்து அச்சு வழங்கினான்.  இக்கோயில் காணியுடைய சிவப்பிராமணர் காசியப கோத்திரத்து அவிநாசி முருகன் சீகாழியான், அவிநாசி முருகன்,  திருவேங்கடமுடையான் ஆகியோர் பத்து அச்சு பெற்றுக்கொண்டு மக்களுக்கு மக்கள் என வழிவழிப் பேரர் காலம் வரை இதைநடத்தி வருவோம் என்று உறுதி கூறுகின்றனர்.

    இதனால் சோழப்பறையன் தனபாலன் கோவிலில் நுழைந்து இறை வழிபாடு செய்துள்ளான் என்று உறுதி ஆவது தீண்டாமை அக்கால் இருந்த்தில்லை என்பது மட்டுமல்ல அவன் தலைமை மதிப்பீட்டாளனாக இருந்துள்ளான் என்பது பறையர் உயர் பொறுப்பில் இருந்தனர் என்பதையும் தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டு பறையர் உயர் பொறுப்பில் இருந்தனர் என்பதற்கு சான்று. இதாவது, நிலம், பயிருக்கு வரி மதிப்பீடு செய்தான் என்பதற்கு சான்று.

    பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடலும், பக். 138

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேசுவரர் கோயில் வடக்குக் கருவறைச் சுவர் 11 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் ஆயிரத்து ஒரு நூற்று எண்பதின் மேல் செல்லாநின்ற ஸிம்ஹ நாயற்று அபரபக்ஷத்துத்ருதியையும் நா[ய]ற்றுக்கிழமையும் பெற்ற ரேவதி நாள் ஆடையூர்நாட்டு எலியூற்றுக்கு மேற்கும் நம் _ _ _ _ _ _ _  க்கு உள்ளுப்பட்ட நாடும் மலையும் அடிவாரமும் தென்கரை நாடும் மூவரை வென்றநல்லூற்கு மேற்கு சிற்றிங்கை[க்]குக் கிழக்கு உட்பட்ட 
    2.  நாடும் மலையு முட்பட்ட நாடும் இந்த இரண்டு கரைநாட்டுக்கு உள்ளுப்பட்ட நாட்டவரும் நாட்டுநாயகஞ் செய்வார்களும் மன்றாடுவார்களும் பிள்ளைமுதலிகளும் [தனி]யாட்களும் படைநாயகஞ் செய்வார்களும் தனியாள் முதலிகளும் _ _ _ _ _ _ ம்பனாயகரு _ _ _ _ _ லிகளும் கூலிச்சேவகரும் கொந்த விச்சாதிரரும் நவிரமலைத் தென்பற்று நாட்டவரும் நாட்டுமுதலிகளும் வடமலைநாட்டவரும் நாட்டுமுதலிகளு முன்னுப்பட்ட
    3. பலசனத்தோமும் அடிவாரத்து மலையாளரும் மலையாள முதலிகளும் முதுநீர்மலையாளரும் மலையரண்முதலிகளும் செட்டிகளும் வாணிகரும் கணக்கரும் கருமப்பெரும் பன்னாட்டவரும் பன்னாட்டு முதலிகளும் பொற்கொ[ற்ற] கைக்[கோளரும் ஆண்]டார்களும் சிவப்ராஹ்மணரும் மன்றாடிகளு முவச்சரும் தென்கரைநாட்டு வடதலைநாட்டவரும் தென்மலை நாட்டாரும் உட்பட்ட நாட்டவரும் தெல்ல _ _ _ _ _ புலவ[ரு]ம் பண்
    4. ணுவாரும்  நியாயத்தாரும் பன்னிரண்டு பணிமக்களு முள்ளிட்ட பெரும் வேடரும்   பாணரும் பறையரும் பறைமுதலிகளும் செக்கிலியரும்      இறுளரு முள்ளிட்ட அனைத்துச்சாதிகளு[ம்] அந்தணன் தலையாக அரிப்பான் கடையாக உள்ளுப்பட்ட அனை[த்}துச்சாதி[மா]ற்க்கு தெ _ _ _ _ ல்லாரும் __ _ _ _ _ [ண]ம் பண்ணினபடியாவது எங்கனாயனாரமட்டன் கரிகாலச்சோழ ஆடையூர் நாடாழ்வார் திருவிராச்சியம் பண்ணி எழுந்தருளி[இ]ருக்க. இவர் ஏவி அருளினபடியே இவர்கள் திருத்தம்பி
    5. யார் நாயனார் நரசிங்கபன்மர் செய்து எழுந்தருளியிருக்க நாயனார் நரசிங்கபன்மர் மகன் பெரியுடையானும் இவன் தம்பி அர[சக]ணாயனும் கருப்புக்கட்டி நாயக்க[ருட]னே கூடி எங்கள் நாயன்[மாற்]கும் எங்களுக்கு[ம்] பகைதேடிக் கிழற்றுப்போயிருக்க இவர்கள் செய்த பிழையும் பொறுத்து இவர்கள் கூச்சந்தீ[ர்த்து]த் திருவெழுத்துச்சாத்தின திருமுகமும் குடுத்துச் செட்டிபுணை[ப]ட்டு அமைத்துவிட்ட இடத்து திருமுகமு மறுத்து எங்கள் நாயன்மாற்கு
    6. ம் எங்களுக்கும் பகைதேடி வெறுப்பான பேருடனே கூடி எங்களுக்குப் பகையாகையினாலும். இவர்கள் பிரிதிகங்கர் வ[ழியி]லுள்ள பேராகையாலும் இப்பெரியுடையாநும் அரசகணாயனும் இவர்கள் [த]ம்பி அமட்டாழ்வானும் எங்கள் நாயன்மாற்கு இராசத்துரோகிகளும்      நாட்டுத் துரோகிகளுமாய் இவர்கள் மூவரையும் பெண்டிழந்தான் கூட்டத்தில் ஒன்றாகப் புற[க்]கடித்தோம். பிரிதிகங்கர் மக்கள் எங்கள் நாயன்
    7.  மாற்குப் புகுந்த நம்பிராட்டியார் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளை அரசுக்குக் கொள்ளக் கடவதல்லவாகவும் அல்லாத பிள்ளைகள் பூர்வர்முறையிலே இராச்சியம் பண்ணப் கடவர்களாகவும் இம்மண்[ணு]ம் மலையு முள்ளதனையும் எங்கள் [ம]க்கள் மக்கள் வழிவழி இப்பெரியுடையானையும் அரச[கணா]யனையும் இவர்கடம்பி [அ]மட்டாழ்வாரையும், இவர்கள் மக்களி[ல்] [வழி]வழி ஒருத்தரையும் இம்மண்ணில் புகுத ஒட்டோம்
    8. இவர்களுக்கு இடங்குடுப்பதுஞ் செய்யோம், இடங்குடுப்பாரோடு கூடுவதுஞ் செய்யோம். இவர்க[ள்] மூவரும் இம்மண்ணுக்கு உரியரென்று சொல்லு[த]ல் சொல்லுவ[ர்க்கு] இடங்குடுக்[கச்] செய்யக்கடவோமு மல்லோம். இவர்களுக்குக் கீழோலை விடுதல், இவர்களைக் கா[த்]தல், இவர்க[ள் _ _ _ _ _] சருடன் பேசுதல்  செய்தாருண்டாகில் இராசத்துரோகிகளுமாக்கி நாயிலும் பன்றியிலும் கடையா[க ரு]த்தறுக்கக்கட _ _ _ _ கவும். இவர்கள் பெண்டுகளை மூக்கு மூலையுமறுத்துவிட
    9.  க்கடவோமாகவும். இவர்கள் பக்கல் பெண்டுகள் போனவன் குடியாக இப்படி [ஆகச்] செய்யகடவோமாகவும் இவர்கள் பக்கல் போன பேரைப் ப[ணி]செய் மக்[களை]  இட்டுக் கொன்றுபோடக்  கடவோமா[க]வும் இப்படிக்கு நாங்க ளனைவரும் பூணை ஓலைப்பாடியு[ம் ந]ந்திமங்கலமும் உள்ளுப்பட்ட இந்த அனைத்து[ங்] _ _ _ _ _இப்படி நிலைமைக் _ _ _ _ள் ப்ரமாணமிட்டோம்.
    10. இப்படி அற்றுமறவும் செய்திலோமாகில் வல்லவரையன் சத்தியம் தங்களம்மைக்குத் தானே மிணாளன் அசல வன்னியர் குதிரைக்குப் புல்லுப்பறிக்கி[ற] ப[றை]யற்கு எங்கள் பெண்டுகளைக் குடுத்தோமாகில் படுக்க[த] ஒலைப்பாடிக்குத் தப்பினாருண்டாகில் செயங்கொண்ட நாச்சியார் கோயிலில் செவ்வாய்க்கிழமையில் பட்ட[ஆ]டுபட்டது படக்கடவோமாக செயங்கொண்ட நாச்சியார் திரி_ _ _ _ _ தமிட்டுச் சிங்கநாயற்று இருபத்துமூன்றா
    11.  ந் தியதியான பஞ்சமியும் கஸ்வதியும் பெற்ற செவ்வாய்க் கிழமை நாள் ஆடுவெட்டிப் பூதமுதை[த்]து நிலைமை ப[ண்ணி] இப்படிக்குத் [தி]ருஇடவந்துறை நாயனார் கோயிலிலே கல்லும் வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம். இக் கல்வெட்டினபடிக்குத் தப்பினவன் கெங்கை குமரியிடைக் குராற்பசுக் கு[த்]தினவன் பாவங்கொள்வான். இப்படிக்கு இவனைத்து நாட்டவரும் பணிக்கக் கல்லுவெட் _ _ _ _ ய நாட்டாசாரியனேன். இவை என்னெழுத்து.

    மலையாளர் – மலையகத்து வாழ்வோர், பெண்டிழந்தான் – கம்மனாட்டி, புறக்கடித்தோம் – புறக்கண்ணித்தோம், ஓடவிட்டோம், பூரவர்முறை – தந்தைக்கு பின் மூத்த மகன் நாடாளுதல் முறை. இராச்சியம்  பண்ணு – அரசாளுதல், கீழோலை – நட்புத் தூது, அற்றுமறவும் – செய்யாமல் மறத்தல்.

    விளக்கம்: வேந்தன் பெயர் குறிப்பிடாத சக ஆண்டு 1180, பொது ஆண்டு 1258 இல் பொறித்த கல்வெட்டு. அமட்டன் கரிகாலச் சோழ ஆடையூர் நாடாழ்வான் என்ற அரையன் ஆட்சி செய்துவர இவன் ஏவியபடி இவனுடைய தம்பி நரசிங்கபன்மன் ஆட்சி செய்துவர, இவனது மூன்று மகன்கள் பெரியுடையான், அரசகணாயன்,  அமட்டாழ்வான் ஆகியோர் கருப்புக்கட்டி நாயகனுடன் சேர்ந்து கொண்டு இந்த சூளுரையை செய்யும் ஊரவர்க்கும் ஆடையூர் நாடாழ்வானுக்கும் இடையே பகையை வளர்த்து விடுகின்றனர். இந்த பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவர் பிரிதிகங்கரைசருடன் நட்பு கொண்டவர்கள் என்பதோடு ஆடையூர் நாடாழ்வானுக்கு இராச துரோகிகளும் நாட்டுத் துரோகிகளும் ஆனதினால் இம்மூவரையும் பெண்டிழந்தான் (மனைவி இழந்தான்) கூட்டத்தோடு ஒன்றாக்கி சூளுரைப்போர் புறக்கடித்தனர். பிரிதிகங்கரைசர் பிள்ளைகள் ஆடையூர் நாடாழ்வான் பிராட்டிக்கு பிறந்த பிள்ளைகளை மகுடம் ஏற்கமுடியாதவராக ஆக்கி அப்படி அல்லாத பிள்ளைகளை பூர்வர்முறையில் அரசாளவைத்துவிட்டனர். அதனால் இம்மண்ணும் மலையும் உள்ள காலம் வரை, எமக்குப் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள் என வழிவழியாக பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவரையும் இவர்கள் பிள்ளைகள் வழிவழி ஒருவரையும் இம்மண்ணில் புகவிடமாட்டோம், இவர்களுக்கு இடம் கொடுக்கவும் மாட்டோம். இவர் மூவருக்கு இடங் கொடுப்பவரோடு நட்பு கொள்ளமாட்டோம். இம்மூவர் இம்மண்ணுக்கு உரியவரென்று சொல்பவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம். இவர்களுக்காக தூதுபோதல், இவரைக் காத்தல், இவருடன் பேச்சு வைத்திருப்போர்  ஆகியோரை இராசதுரோகிகளாக்கி நாயினும் பன்றியினும் கடையராக எண்ணி அத்தகையோர் மனைவியர் மூக்கு முலைகளை அறுத்துவிடுவோம். இம்மூவருக்காக பணிசெய்யும் மக்களை கொன்றுபோடுவோம். இப்படிக்கு பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் உள்ளிட்ட ஊர் மறவர்கள் நாங்கள் மேற்கண்ட அனைத்தையும் பிரமாண செய்தோம். அப்படிச் செய்யாமல் மறந்துவிட்டோமானால் எங்கள் தாயை யாமே புணர்பவர் ஆனோம் அதோடு அசல வன்னியர் குதிரைக்கு புல்பறிக்கும் பறையருக்கு எமது மனைவிமாரை புணர விட்டவர் ஆனோம். படுக்கத ஓலைப்பாடிக்கு தப்பிச்செல்வோர் இருந்தால் செயங்கொண்ட நாச்சி கோவிலில் செவ்வாய்க் கிழமை பலிஇடப்படும் ஆடுபோல படுவோமாக என்று செய்ங்கொண்ட நாச்சியார் திருமுன்பு சபதமிட்டோம். சிங்க ராசி நிகழும் ஞாயிற்றுக் கிழமை 23 ம் நாள். பஞ்சமியான செவ்வாய்க் கிழமை ஆடுவெட்டி பூதம் உதைத்தோம். இப்படிக்கு திருஇடவந்துறை இறைவர் கோவிலில் நாங்கள் கல்வெட்டினோம். இக்கல்லில் உள்ளது படி நடவாதவன் கங்கைக்கும் குமரிக்கும் இடை வாழ்பவர் குராற்பசுவை கொன்று கொண்ட பாவத்தை கொள்வானாக.

    ஆடையூர் நாடாழ்வான் தன் பிள்ளைகள் சிறியவராய் இருப்பதால் தன் தம்பியை அரசனாக பதவி ஏற்க செய்துள்ளான், அவன்பின் தன் பிள்ளை அரசராக பதவி ஏற்க வேண்டும் என்ற புரிந்துணர்வோடு. ஆனால் தம்பி நரசிங்கபன்மன் பிள்ளைகள் தந்தைக்கு பின் மூத்தபிள்ளை என்ற முன்னைய வழிமுறைப்படி பிரிதிகங்கர் மகன்களின் உதவியோடு தாமே அரசராக ஆனதாகத் தெரிகின்றது. இதை எதிர்த்து தம் நாயகன் மீதான தமது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வண்ணமாக பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் வாழ் மறவர்கள் மேற்கண்டபடி  சூளுரை செய்துள்ளனர். அரசியல் அறியாத வெகுளி மக்கள் அவர்கள் என்று தெரிகின்றது. இவர்கள் பறையரை இழிவாக மதிப்பிட்டது படைத்துறையில் அப்படியாக இருந்த ஒரு சொல்வழக்கைப் நமக்குப் புலப்படுத்துகின்றது. இக்கல்வெட்டில் சாதி குறிப்பிடப்படுவது சாதிமுறை 13 ஆம் நூற்றாண்டிலேயே வலுப்பெற்றுவிட்டதைக் காட்டுகின்றது.மொத்தத்தில் கல்வெட்டுச் செய்து அரிய செய்திகளை நமக்கு வழங்குகிறது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 7, பக். 49-50, (A.R.No 105 of 1990) 

        

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    53. சுற்றந் தழால்

    குறள் 521:

    பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள

    ஒருத்தன் ஏழையான பொறவு கூட அவனுக்கும் தங்களுக்கும் முன்னால இருந்த ஒட்டுஒறவ நெனப்புல வச்சி பேசுத கொணம் சொந்தக்காரங்களுக்கு  உண்டு.

    குறள் 522:

    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவுந் தரும்

    ஒருத்தனுக்கு எப்பமும் கொறையாத நேசத்தோட சொந்தபந்தம் அமைஞ்சிடுச்சின்னா அது அவனுக்கு வளர்ச்சி கொறையாத செல்வங்கள் பலதையும் கொடுக்கும்.

    குறள் 523:

    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று

    சொந்தக்காரங்களோட மனசு விட்டு பேசிப் பழகாதவனோட வாழ்க்க, கரையில்லாத குளத்துல தண்ணி நெறஞ்சது கணக்கா ஒபயோகமில்லாமப் போயிடும்.

    குறள் 524:

    சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
    பெற்றத்தாற் பெற்ற பயன்

    சுத்திச்சூழ இருக்குத பாசமான சொந்தக்காரங்களோட வாழுத வாழ்க்க தான் ஒருத்தன்கிட்ட இருக்க காசுபணத்தோட ஒபயோகம்.

    குறள் 525:

    கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
    சுற்றத்தாற் சுற்றப் படும்

    வேண்டியதக் கொடுக்குத குணமும், நயமா பேசுத கொணமும் இருக்கவனச் சுத்தி சொந்தக்காரங்க இருந்துக்கிட்டே இருப்பாங்க.

    குறள் 526:

    பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
    மருங்குடையார் மாநிலத் தில்

    தேவைப்படுதவங்களுக்கு அள்ளிக் கொடுத்து கோவப்படாம ஒருத்தன் இருந்தாம்னா அவனப்போல சுத்திவர சொந்தபந்தம் இருக்கவன் ஒலகத்துல இல்லன்னு சொல்லிப்புடலாம்.

    குறள் 527:

    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள

    தனக்கு சாப்பிடக் கெடச்சத ஒளிச்சு வையாம தன் இனத்தக் கூப்பிட்டு சாப்பிடுத காக்கா கணக்கா கொணம் உள்ளவுகளுக்கு மட்டுமே ஒலகத்துல செல்வம் உண்டு. .

    குறள் 528:

    பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்

    ராசா எல்லாரையும் ஒண்ணுபோலப் பாக்காம அவனவன் சிறப்புக்கு ஏத்தபடி பாத்தா அத விரும்பி அவரப் பிரியாம வாழுத சுற்றத்தார் பலர் இருப்பாங்க.

    குறள் 529:

    தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரண மின்றி வரும்

    ஏதோ ஒரு காரணத்துக்காக பிரிஞ்சு போன சொந்தக்காரவுக அந்தக்காரணம் பொருந்தாது னு தெரிஞ்ச பொறவு திரும்ப சொந்தம் கொண்டாட வருவாக.

    குறள் 530:

    உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத்திருந் தெண்ணிக் கொளல்

    தன்னவுட்டு பிரிஞ்சு போயிட்ட  ஒருத்தன் ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கிட்டு திரும்பி வந்தாம்னா அவன சோதிச்சு பாத்த பொறவுதான் சேத்துக்கிடணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • இதோ இதோ சிவலோகம்

    இதோ இதோ சிவலோகம்

    மீ.விசுவநாதன்

    இதோ இதோ சிவலோகம் – என்
    இதயம் அவனின் பனிமேகம்
    நிதானமாய் ஓங்காரம் – அதில்
    நின்று காண்பேன் சிவரூபம்.

    மின்னலை வீசிடுவான் – கார்
    மேக மாகப் பொழிந்திடுவான்
    என்னிலைத் துடிப்பறிந்து – மன
    இம்சை அலம்பித் துடைத்தெறிவான்

    நந்தியை நகரவைத்து – சிவ
    நடனம் காண அருள்புரிவான்
    புந்தியில் புரியவைத்து – என்
    பொல்லா “நானை” விரட்டிடுவான்.

    Share
  • விடையறியா வினாக்கள்

    விடையறியா வினாக்கள்

    -சக்தி சக்திதாசன்

    நான் இங்கிலாந்துக்குள் நுழைந்து நாற்பத்தைந்தாவது ஆண்டில் கால் பதித்திருக்கிறேன். இந்த 45 வருட காலத்தினுள் நான் கண்ட மாற்றங்கள் பல. இம்மாற்றங்களின் ஊடாக நான் பயணிக்கும்போது என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் பல. நாட்டினில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கத்தினால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறம், இம்மாற்றங்களைச் சரியான வகையில் உள்வாங்கிக் கொள்ளாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டதினால் என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மறுபுறம். 18 வயது முடிவுற்று பத்தொன்பதாவது ஆண்டில் காலடி வைத்த நிலையில் மாணவனாக உள்நுழைந்த எனக்கும் இன்று 63வது வயதை நோக்கி நடைபோடும் எனக்கும் இடைப்பட்ட இக்காலத்தின் வாழ்க்கை மாற்றங்கள் தந்த அனுபவச் செழிப்புகள் கணக்கிலடங்காதவை.

    மாணவனாக நுழைந்தபோது அன்றைய என் முன்னால் இருந்த இலட்சியம் வேறோர் பார்வையைக் கொண்டிருந்தது. கல்வித் தகமைகளை வெற்றிகரமாகப் பெற்றுக் கொண்டு தாய்நாட்டிற்குத் திரும்பவேண்டும் எனும் முனைப்பு அன்ரைய என் பல சக மாணவர்களுக்கு இருந்தது போல் எனக்கும் ஒரு முக்கிய இலட்சியமாகவே இருந்தது. பின் எப்படி 45 வருடங்கள் ஓடிய பின்பு இன்னமும் இந்த இங்கிலாந்து நாட்டில் ஒரு மாணவனாக அல்லாமல் ஓய்வூதியம் பெறும் ஒரு ஜக்கிய இராச்சியப் பிரஜையாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்? இம்மாற்றத்துக்கு உரிய காரணத்தைத் தேடி பல சமயங்களில் என் உள்ளத்தில் விரிவான சுய அலசல்கள் எழுவதுண்டு.

    அன்றைய மாணவ வாழ்க்கையில் ஜக்கிய இராச்சியத்தின் அரசியல் போக்குகள், அரசியல் மாற்றங்கள், நாட்டின் தலைவர்களின் கொள்கைகள் இவற்றைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருந்ததற்குக் காரணம் அதைப்பற்றிய ஆர்வம் இருக்கவில்லை என்பதோடு அது எனக்கு தேவையற்ற ஒன்று எனும் மனப்பான்மையும் இணைந்திருந்தது என்பதுதான் உண்மை. அன்றைய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களின் வகையில் ஏற்படுத்தும் மாற்றங்களின் தாக்கங்களைப் பற்றி காலத்தின் கட்டாயத் தேவையினால் அறிந்து கொள்ள வேண்டிய தேவையிருந்தது.

    எனது வாழ்வின் வாழ்வாதரத்திற்காக படித்துப் பட்டம் பெற வேண்டும் எனும் முனைப்பில் மிகவும் சிரமத்துக்குள்ளான நிலையில் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது அவ்வாழ்க்கையில் தனிப்பட்ட எனக்கு ஏற்படும் சிக்கல்களைப் பற்றிய மனத்தாங்கல் இருந்ததேயொழிய ஒரு வெளிநாட்டு மாணவனாக கல்வி கற்றுக் கொண்டு வாழவும் வழி வகுத்துக் கொடுத்த ஜக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பற்றிய அனுமானத்தை சரியான வகையில் உள்வாங்கியிருக்கவில்லை எனபதுவே உண்மை. பெரிய பிரித்தானிய எனும் பெயரில் எமது தாய்நிலங்களை ஆக்கிரமித்திருந்தவர்கள் இந்நாட்டவர் எனும் அபிப்பிராய பேதத்தோடு இந்நாட்டிற்குள் நுழைந்த எனக்கு அக்கால மனநிலை மாறிய வித்தியாசமான கால கட்டத்தில் விசாலமான பார்வையோடு வாழும் மக்கள் மத்தியில் வாழ்கிறோம் என்பது புரியாமல் இருந்ததில் வியப்பொன்றுமில்லை.

    45 வருடங்கள் என்பது நாலு தசாப்தங்களை உள்ளடக்கியிருக்கிறது இக்காலத்தினுள் மாணவனாக இருந்த நான் கணவனாக , தந்தையாக, இன்று ஒரு தாத்தாவாக மார்றம் பெற்றிருக்கிறேன் என்பதுவே கண்முன்னால் கணப்படும் உண்மைகள். இப்பாத்திர மார்றங்கள் எனக்குக் கொடுத்த அனுபவப் பாடங்களோடு எனது நீண்டகால வாழ்க்கையும் பிணைந்திருப்பதினால் அரசியல் மார்ரங்களை கூர்ந்து நோக்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. நான் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த ஒரு புலம்பெயர் மாணவன் எனும் போது எமை ஒரு தனிக்குழுவாக எம்மோடு ஒத்தவர்களோடு இயங்குவது வழக்கமாகவிருந்தது. அந்த நிலையிலிருந்து ஒரு ஜக்கிய இராச்சியப் பிரஜையாக இங்கிலாந்து சமுதாய மாற்றங்களின் தாக்கத்துக்கு முகம் கொடுக்க வேண்டியவனாக மாறிய போது அக்குழுநிலை மனப்பான்மையை மார்றி சமுதாயத்தோடு , மற்றைய சமூகங்களோடு இணைந்து செயலாற்ற வேண்டிய தேவையிருந்தது.

    இக்காலகட்டத்தினுள் எனது கல்விக் காலத்தை முடித்துக் கொண்டு பணியாற்ற வேண்டிய நிலையில் நிலையான ஒரு பணியைப் பெற முன்பு பல இடங்களில் மாறி, மாறி பணிபுரிய வேண்டிய தேவையேற்பட்டது. அப்போது பல சமூகத்தினரோடும் இணைந்து பணியாற்றத் தேவையிருந்தது. அத்8உவரை பிரிந்து வாழ்ந்த சூழல் மாறி அனைவரும் மனிதர்களே அவர்களின் உணர்வுகளும் எமைப் போன்றதே அவர்களும் என்னைப் போல பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துத்தான் வாழ்கிறார்கள் எனும் உண்மை புலப்பட்டது. எமது மொழி, எமது கலாச்சாரம் என்பன எமக்கு அத்தியாவசியமானவை எனும் உண்மை ஒருபுறம் இருக்க, அவற்றின் முக்கியத்துவத்துக்கு முன்னிலை கொடுத்து அடுத்தவரின் கலை , கலாச்சாரத்தை முற்று முழுதாகப் புறக்கணிக்கும் மன்ப்பன்மையைத் தவிர்த்துக் கொள்ளும் மனப்பக்குவம் தேவைப்பட்டது.

    நாம் வாழ்ந்த காலம் வேறு எமது குழந்தைகள் இன்றைய சமுதாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் வேறு. நிற வேற்றுமை, இனத்துவேஷம் என்பன ஆங்காங்கே சில, சில இடங்களில் என்னை எதிர் கொன்டாலும் நான் நிலையான பணிபுரிந்த நேரத்தில் அத்தகைய வேறுபாடுகள் என்றுமே எனது முன்னேற்றத்தை தடுக்கவில்லை. மாறாக இந்நாட்டவர்கள் எனக் கருதப்படும் பெரும்பான்மை இனத்தவர் ஒன்றாகப் பணிபுரியும்போது நேர்மையான, கடுமையான உழைப்பை இனங்கண்டு அதற்குரிய வேளைகளில் அதற்குரிய உயர்வைப் பெற்றுத்தந்தார்கள் என்பதுவே உண்மை. ஆனால் பல சமயங்களில் எம்முள் நாம் கொண்ட தாழ்வு மனப்பான்மையால் எம்மை நாமே ஒதுக்கிக் கொள்ளும்போது அடுத்தவர்கள் எம்மை விலக்குவது போலவே தென்படும் ஒரு சூழலில் பலர் எதிர்மறையான அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளேன்.

    இந்த 45 வருட காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறிய பல வெளிநாட்டவர் பல சூழ்நிலைகளின் நிமித்தம் இங்கு வந்திருக்கிறார்கள். வந்த னைவரும் ஏதோ ஒரு வகையில் தமது வாழ்வினை நன்கு தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவே உண்மை. ஆனால் அதிலே எத்தனை பேர் உலசுத்தியுடன் இந்நாட்டினைத் தமது சொந்த நாடாகக் கருதி அதன் முன்னேற்றத்தை மனதில் கொண்டு உழைக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே ! இந்நாடு வாழ்வில் தடுக்கி விழுந்தோருக்கு கைகொடுக்கும் வகையில் கொடுக்கும் உதவிகளை பல முறையர்ற வகையில் பெற்றுக் கொள்ளும் தந்திரோபாயங்களை பலர் மேற்கொள்ளுகிறார்கள் என்பது துயரத்துக்குரிய உண்மையாகும். அத்தோடு பொருளாதாரச் சிக்கல்களினால் எழும் வீட்டு வசதியின்மை, பாடசாலைகளில் குழந்தைகளுக்கு போதிய இடமின்மை, வைத்தியசாலைகளில் வைத்தியத்துக்காக காத்திருக்கும் கால அவகாசத்தின் நீடிப்பு என்பன இந்நாட்டு மக்கள் என்று கருதப்படுவோரின் (இதில் இங்கு குடியுரிமை பெர்று இந்நாட்டு பிரஜைகளாகிய பல வெளிநாட்டவரும் அடங்குவர்) மனதில் வெளிநாட்டவரின் குடியேற்றக் கொள்கை மீதான கண்ணோட்டத்தை மிகவும் எதிர்மறையாக மாற்றியுள்ள நிலையில் இன்றைய அரசியல் சூழல் இந்த 45 வருட காலத்தில் நான் என்றுமே கண்டிராத வகையில் ஒரு முக்கியமான் சந்தியில் நிற்கிறது.

    இனத்துவேஷம் கொண்டவர்கள் குளிர்காய்வதற்காக இச்சூழலைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கிறேன். அமேரிக்காவில் ஆரம்பித்த மாற்றம் இன்று ஜரோப்பிய நாடுகளில் முக்கியமானவைகளையும் தொற்றிக் கொண்டதோ எனும் ஜயம் எழும் வகையில் பலநாடுகளின் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.
    இவையனைத்துக்கும் இருக்கும் ஒரேயொரு ஒற்றுமை வெளிநாட்டவரின் வருகைக்கான எதிர்ப்பு ஒன்றே. கட்டுப்பாடின்றி வெளிநாட்டிலிருப்பவர்கள் மற்றைய நாடுகளில் குடியேறுவது என்பது ஆதங்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் இவ்வுணர்வு ஒரு இனத்துவேஷ வெறியாக மாறி இனக்கலவரங்களைத் தூண்டும் அளவிர்குச் செல்ல விடாமல் இன்றைய அரசியல் தலைவர்கள் கட்டுப்படுத்துவார்களா? என்பதுவே கவலைக்குரிய கேள்வியாகும்.

    இங்கிலாந்து நாட்டிலே 45 வருடங்களாகப் புலம்பெயர் வாழ்வினை மேற்கொள்ளும் என் முன்னால் இன்று நிகழும் அரசியல் மாற்றங்கள் மனதில் சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது எனக்குள் இத்தகைய உணர்வை முதர் தடவையாக ஏற்படுத்தியதான்ல் கொஞ்சம் சத்தமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இன்றைய அரசியல் விளையாட்டுத் திடலில் நான் ஒரு சாதாரண பார்வையாளனே ! வினாக்களுக்கு விடை காலத்தின் கைகளிலோ?

    Share
  • விண்ணுலகத்தில் கிரேஸி நாடகம்

    விண்ணுலகத்தில் கிரேஸி நாடகம்

    -விஜய்பிரகாஷ்

    “கிரேஸி மோகன்” என்கிற பெயர் தெரியாதவர்கள் கூட, அவரின் நகைச்சுவைகளை ரசித்திருப்பார்கள். கிரேஸி மோகன் இல்லாமல் கமல்ஹாசனின் நகைச்சுவை படங்கள் கிடையாது என்றே சொல்லலாம். அபூர்வ சகோதர்களில் ஆரம்பித்து மைக்கல் மதன் காம ராஜன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் என்று பட்டியல் நீளும். ஒவ்வொரு படமும் நகைச்சுவையில் தனித்து விளங்கும். அதிலும் பஞ்சதந்திரம் படம் இன்று பார்த்தாலும், எதோ கவலையில் இருப்பவர் கூட சிரித்துவிடுவர். அவரின் வசனத்திற்காக திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்ததுமுண்டு.

    மைக்கல் மதன காம ராஜனில்,

    குஷ்பு – யூ ஆர் நாட்டி

    கமல் – நான் நாட்டின்னா நீ கம்முனாட்டி

    காதலா காதலா படத்தில்,

    “நாமளும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நிறைய  அனாதை குழந்தை பெத்துக்கலாம்”

    பஞ்சதந்திரம் படத்தில்,

    “பர்தார்ஜி சாடி”

    “சாபூ த்ரீ இல்ல.. சா பூ ஃபோர்”

    மேகியும் மைத்திலியும் சந்திக்காமல் சாமாளிக்கும் காட்சி என்று படத்திற்குப் படம் நிறைய எடுத்துக்காட்டு சொல்லி சிரிக்கலாம். தேடினேன் வந்தது படத்தில் பிரபுவிடம் கனவைப் பற்றி பேசும் காட்சி பார்க்கும் போது, அப்பொழுதே ஹாலிவுட் இன்செப்ஷன் படத்தைப் போன்ற கதையை நகைச்சுவையாய் சொல்லியுள்ளாரே என்ற ஆச்சரியமாக இருக்கும். மகளிர் மட்டும் படத்தில் பிணமான நகேஷுடன் தலைவாசல் விஜய் சண்டை போடும் காட்சியெல்லாம் அவருக்கே தனித்துவமான நகைச்சுவை. வியட்னாம் காலனி, அருணாச்சலம், ரட்சகன், பூவெல்லம் கேட்டுபார் போன்ற அரசியல் காதல் படங்களுக்கும் திரைக்கதைகளும் வசனங்களும் எழுதியிருக்கிறார். வசனகர்த்தாவாய் ஒரு பக்கம் இருக்க, கிரேஸி மோகன் ஒரு நடிகரும் கூட. திரையில் குணச்சித்திர பாத்திரங்களிலும் அவருடைய நாடகங்களிலும் நடித்திருக்கிறார். அவரது மேரேஜ் மேட் இன் சலூன், கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், மீசை ஆனாலும் மனைவி போன்ற  நாடகங்கள் எல்லாம் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பன.

    நாடகத்தில் அவருக்குப் பக்கபலமாய் அவரது தம்பி மாது இருந்தார். இருவரையும் ஒரு சேர பார்த்தாலே காரணமின்றி சிரிப்பு வந்துவிடும். தொலைக்காட்சியிலும் அவரது நாடகங்கள் பார்த்து வளர்ந்த காலமுண்டு. மாது சீனு, நில் கவனி கிரேஸி, கிரேஸி டைம்ஸ் எல்லாம் பார்த்து வயிறு குலுங்க சிரித்ததெல்லாம் நீங்கா நினைவுகள். கிரேஸி மோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி கேட்ட போது, விரைவில் குணமாய் வந்துவிடுவார் என்ற நம்பிகையில்தான் அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்தேன்.ஆனால், கொஞ்ச நேரத்திலேயே கிரேஸி மோகன் இறந்துவிட்டார் வதந்தி வரத் தொடங்கியது. மனதும், அது உண்மையாக இருக்கக் கூடாது என எண்ணுகையில் அவர் அதை மெய்ப்பித்து என்னைப்போன்ற லட்சோப லட்சம் ரசிகர்களைப் பிரிந்து சென்றுவிட்டார். அதைக் கேட்டபின் என்னால் எந்த செயலையும் செய்ய முடியவில்லை. உடனே ஏதாவதொரு அவரது நகைச்சுவையைத்தான் பார்க்கச் சொன்னது மனம். இனி அவரது நகைச்சுவைகளைப் பார்த்து சிரிக்கும்போது, அந்தச் சிரிப்பில் மென்சோகம் கலந்திருக்கும். கிரேஸி மோகனின் மறைவு திரையுலகத்திற்கும் நாடக உலகத்திற்கும் பெரிய இழப்பு. அவரைப் போன்று ஒருசேர சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வசனகர்த்தாக்கள் எழுத்தாளர்கள் இனி வருவார்களா என்பது சந்தேகமே.

    இனி மேலோகத்திலும் அவரது ஏதாவதொரு நாடகம் அரங்கேறி, கடவுள்களையும் தேவர்களையும் சிரிக்க வைக்கட்டும்.

    Share
  • கோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை

    கோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை

    கோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை. விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

    Share
  • புன்சிரிப்பு மோகன் புறப்பட்டுப்  போய்விட்டார்!

    புன்சிரிப்பு மோகன் புறப்பட்டுப்  போய்விட்டார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, ஆஸ்திரேலியா
      தமிழறிஞர், பேராசிரியர் இரா.மோகனுக்குக் கண்ணீர் அஞ்சலி 
                                       

    தமிழ்த்தேனீ  பறந்தது  தமிழறிஞர்  கலங்குகிறார்
    அறிவுநிறை  தமிழறிஞர்  அழவிட்டே  அகன்றுவிட்டார்
    அறிஞராம் மு.வ.வின் அருமைமிகு செல்லப்பிள்ளை
    அனைவரையும் அழவிட்டே அவ்வுலகு போனதேனோ !

    மோகனென்று நினைத்தவுடன் புன்னகைதான் வந்துநிற்கும்
    காதலுடன் தமிழ்படித்துக் காத்திரமாய் எழுதிநின்றார்
    நோதலுடன் பேசாத  நுண்ணறிவும் பெட்டகமாய்
    பூதலத்தில் இருந்தமோகன் புறப்பட்டுப் போனதேனோ!

    பட்டம்பல பெற்றாலும்  பதவிபல  வகித்தாலும்
    மற்றவரை நோகடிக்கும் வகையிலவர் இருந்ததில்லை
    கற்றபடி ஒழுகிநின்றார் கண்ணியத்தைக் காத்துநின்றார்
    கண்ணீரில் மிதக்கவிட்டு காணாமல் போய்விட்டார்!

    அவர்படைத்த  நூலடுக்கோ அழுதபடி இருக்கிறது
    அவர்பெற்ற விருதடுக்கோ அலமந்தே நிற்கிறது
    பட்டிமன்றம் கவியரங்கம் பரிதவித்தே நிற்கிறதே
    கட்டழகுச் சிரிப்பழகர் கலங்கவிட்டுப் போனதேனோ!

    இலக்கியத்தில் இரட்டையராய் இருந்தார்கள் இணைபிரியா
    இப்போது இரா.மோகன் இணையைவிட்டு ஏகிவிட்டார்
    பிரிந்தஇணை நிர்மலாவோ  புரண்டேங்கி அழுகின்றார்
    சிரித்தமுகம் காணாமல்  சென்றவிடம்  தேடுகிறார்!

    புன்சிரிப்பு  மோகன்  புறப்பட்டுப்  போய்விட்டார்
    என்கின்ற செய்தி இடியெனவே இருந்ததுவே
    அவர்நட்பை எண்ணியெண்ணி அழுதபடி நிற்கின்றேன்
    அறிவுநிறை இரா.மோகன் அழவிட்டுப் போனதேனோ!

    Share
  • வல்லமையும் கிரேஸியும்

    வல்லமையும் கிரேஸியும்

    விவேக் பாரதி

    சிரிப்பு என்னும் மருத்துவத்தால் நம் கவலை நோய்கள் அத்தனையும் மறைக்க வைத்த சிரிப்பு டாக்டர் கிரேஸி மோகன். அவரது பன்முகத் தன்மையை என்னென்று சொல்லி வியப்பது? வசனகர்த்தா, நாடக ஆசிரியர், நடிகர், நகைச்சுவை வித்தகர், கவிஞர், பேச்சாளர், ஆன்மீக சிந்தனையாளர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கிரேஸி மோகனுக்கும் வல்லமை மின்னிதழுக்கும் இருந்த தினசரி உறவு. கிரேஸி மோகன் அதிகம் எழுதிய இதழ் என்ற பெருமை வல்லமைக்கு மட்டுமே உண்டு. பார்ப்பவர்கள் பிரம்மித்துப் போகும் அளவுக்கு வெண்பாக்களை எழுதிக் குவித்துள்ளார். கிரேஸி மோகனின் வெண்பாக்கள் தனி ரகம். ஒருபக்கம் புதுமையான நடையைக் கொண்ட வெண்பா என்றால் இன்னொருபக்கம் திருப்புகழ் பாணியில் வண்ணப் பாடல்கள். திருமால் திருப்புகழ். கிரேஸி மோகனின் படைப்பாற்றல் வியக்க வைப்பது. எந்த அளவுக்கு என்றால் அவர் மறைந்த தினத்துக்கு முன் தின இரவு வல்லமைக்குத் தன்னுடைய இரு வெண்பாக்களையும் அனுப்பி வைத்திருக்கிறார். பொதுவாகவே அவருடைய வெண்பாக்கள் படித்ததும் புரியும். அதை அவர் சொல்லும்போது கூட, “ஸ்வீட் மாதிரி கொஞ்சூண்டு இருந்தாலும் டக்குன்னு மனசுல பதிஞ்சுடுதுல்ல… வெண்பாவோட ட்விஸ்ட் ஆஃப் த டேல் அதோட ஈற்றடிதான். அதுலதான் கதையோட க்ளைமேக்ஸ்” என்று அதையும் திரைக்கதை பார்வையில் பார்த்தவர் கிரேஸி மோகன். அவருடைய வெண்பக்கள் எளிமையாக இருக்கும். அதற்குத் தனியே பதவுரை எல்லாம் தேவைப்படாது. ஆனால், நேற்று அவர் அனுப்பியிருந்த வெண்பாவின் ஆழமும் பொருளும் விளங்க கொஞ்ச நேரம் பிடித்தது.

    மற்கடக்(குரங்குக்) குட்டியே, மாதா ரமணரை
    நிற்க அனுமதிப்பாய் நின்னுள்ளே – வர்கத்தின்
    பேதங்கள் போகும் பிறவிப் பிணிதீரும்
    மோதுங்கள் அண்ணா மலை’’….!

    வந்த மனக்குரங்கு வாயுள்ளே வாத்ஸல்யம்
    சந்திர வம்சத்து சூரியன் – பந்தமறுப்பு:
    முற்றும் துறக்க முனிவனாய் மாறலாம்
    கற்ற களவை மற….கிரேசி மோகன்…! (09.06.2019)

     

    எத்தனை பொருள் பொதிந்த வெண்பா.. அவருடைய இறுதி வெண்பாக்கள் முக்தியை நோக்கி, நிலையாமை நோக்கி அமைந்திருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. கிரேஸி மோகனின் ஆன்மா சாந்தி பெற பிராத்திக்கிறோம். அவரை இழந்து வாழும் எம் போன்ற நண்பர் குழாத்துக்கும், குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வல்லமை மின்னிதழ் தெரிவித்துக்கொள்கிறது.

    வல்லமையில் கிரேஸி மோகன் படைப்புகளைப் பார்க்க…

    கேஷவ் வண்ணம் கிரேஸி எண்ணம், பெருமாள் திருப்புகழ், கட்டுரைகள் இன்னும் பல…

    http://www.vallamai.com/category/thirumal-thiruppugazl/

    http://www.vallamai.com/category/thirumal-thiruppugazl/crazyquotes/

     

     

    Share
  • குழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்

    குழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்

    எஸ் வி வேணுகோபாலன்

    கிரேசி மோகன் மறைவுச் செய்தி கிடைத்து, உடனே, இல்லை, அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார், தவறுதலாக யாரோ கொடுத்த செய்தியை உங்களுக்குத் தெரிவித்தேன், மன்னிக்கவும் என்று அதே நண்பர் குறுஞ்செய்தி போட்டிருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், மோகன் காலமாகிவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரே ஒரு முறை கூட நேரில் பரஸ்பரம் சந்தித்திராதபடியே, உயிரோட்டமாக ஆத்மார்த்தமாகப் பழகிய கடந்த நான்காண்டு நட்பு இனி நினைவில் மட்டுமே நிற்பதாயிற்று. நான் தான் இன்னார் என்று பார்த்து அறிமுகம் செய்துகொள்ள இனி ஒருபோதும் புன்னகை பூத்த அந்த முகம் கிட்டப்போவதில்லை. மறைந்தே போய்விட்டார் கிரேசி மோகன்.

    திரையில் ஒலிக்கும் அதே குரல், கொஞ்சம் வெற்றிலை சீவல் குழைவோடு மேலும் கனிந்து எத்தனையோ நாட்கள், இரவுகள் தனிப்பட எனக்காக என் காதில் ஒலிக்கக் கேட்ட அந்தக் குரல் காற்றில் கலந்துவிட்டது. ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம், மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி’ என்று வரும் நந்திக் கலம்பகம்போல், ‘காற்று வெளியை நிறைத்ததுன் சிரிப்பு, கனிவகை புகுந்ததுன் நேயம்’ என்றுதான் எழுத வேண்டும். அவரை அறியாத தமிழ்த்திரை ரசிகர்களோ, சாதாரண மனிதர்களோ தமிழகத்தில் இருக்க இயலாதென்றே திடமாக நம்புகிறேன்.

    செம்மலர் இதழில் வெளியாகி இருந்த ‘மரணத்தை முன் வைத்து..’ என்ற எனது கட்டுரை ஒன்றைத் தற்செயலாக மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி இருந்தேன். அதை உடனே வாசித்துவிட்டு, பாராட்டுதலோடு சுருக்கமான ஒரு பதிலை அனுப்பி இருந்தார்:

    பிரமாதம் சார் கட்டுரை….

    ”மரணமென்ற வார்த்தையை மாற்றி அமைத்தால்
    வரணும் ரமணனென்ற வார்த்தை, -பெறணும்
    அவனருளைப் பெற்றால் அனைத்தும் பெறலாம்
    சிவனருளுன் சீமந்தச் சேய்”..

    அதனோடு நிறைவு பெறாத மனத்தோடு, இரவு அலைபேசியில் அழைக்கவும் செய்தார். அவரோடான முதல் உரையாடல் அது. மரணத்தை முன்வைத்து எப்படி அத்தனை நகைச்சுவையாக எழுத முடிந்தது என்ற அவரது பாராட்டுக் குறிப்போடு முகிழ்த்தது நான்காண்டுகளுக்குமுன் அவரோடு வாய்த்த நட்பு.

    கவிதை பிரியர், வெண்பா சித்தர் என்பதை அப்போதே உணர்ந்த என்னை, இடையறாது திக்குமுக்காடச் செய்து கொண்டிருந்தார் மோகன். அவரது வேகத்திற்கேற்ப பதில் அனுப்புவது சவாலான வேலை. ஏனெனில், வெண்பாவுக்கு பதில் வெண்பா எழுதி அனுப்புவதை மிகவும் சிலாகித்து வாசித்து ரசிக்கவும் செய்தது அவரது குழந்தைமை பொங்கிய குதூகல உள்ளம். எண்ணற்ற வெண்பாக்கள்….ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு என்ன மொழியிலும் சொற்களை முந்திரி பருப்பு போல மேலே தூவி கமகமக்க சூடான வெண்பா(யசத்தை) மின்னஞ்சல் வழி ஊற்றி அனுப்பிக் கொண்டே இருப்பார்.

    சிறந்த ஓவியரும், தி இந்து கார்ட்டூனிஸ்டுமான திரு கேஷவ் அவர்கள், மோகனுக்கு விருப்பமான வேலையை அன்றாடம் வழங்கி மகிழ்ந்திருப்பார். கிருஷ்ணரைத் தமது கற்பனையில் இழைத்த தூரிகையைக் கொண்டு அவர் வரையும் அற்புதமான ஓவியங்களை முன்வைத்து, புராண இதிகாச கதைகள், உபநிடத உட்பொருள்களை உள்ளடக்கிய செய்திகளை நான்கே அடிகளாலான வெண்பாக்களில் அசாத்தியமாக எழுதித் தள்ளிக்கொண்டே இருந்த கிரேசி மோகனே ஓர் ஓவியர்தான்! இராமாயண ஓவியங்கள் உள்ளிட்டு ரவிவர்மா ஓவியங்களையும், மிக ஈர்ப்பாக ரமணரையும் மிக அழகாக வரைந்திருப்பார் மோகன்.

    நான் ஒரு நாத்திகன், உங்களைப்போல் அல்ல என்று ஒருமுறை அவருக்கு எழுதிய அஞ்சலுக்கு, அவர் இப்படி பதில் எழுதி இருந்தார், நீங்கள் நாத்திகன் அல்ல, naughtyகன் (குறும்பர்) என்று. பிறகு அலைபேசி உரையாடலில், இறை நம்பிக்கை இல்லாதவர் என்பதால் உங்களை வெறுக்க மாட்டேன், அது அவரவர் விருப்பம். அடுத்தவருக்காக சிந்திப்பது, உழைப்பது இதைத்தான் ஆன்மிகம் என்று நான் கருதுவேன். உங்களோடு பேச இந்த விஷயம் ஒரு தடையே அல்ல என்றார்.

    வாழ்க்கையின் அபத்தங்களை அனாயாசமாக நகைச்சுவை வசனங்களில் அபாரமான கற்பனையோடு கொண்டுவரும் திறமை அவரது தனித்துவமான அம்சங்களுள் ஒன்று. அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில், ‘உங்க வயசு என்ன 55ஆ’ என்று நாகேஷ் கேட்கும்போது, எதிரே இருப்பவர் ‘இன்னொரு 5 சேர்த்துக்குங்க’ என்றால், ‘555ஆ?’ என்று நாகேஷ் வியப்போடு கேட்கும் வசனத்தைப் பற்றி ஒருமுறை அவரிடம் கேட்டேன், அதெல்லாம் வீட்டுல பாலாஜியோடு பேசினது, எங்கப்பா சொன்னது எல்லாம் தான் இப்படி வசனங்களுக்கு காரணம் என்றார். அடுத்தவர்களைப் பாராட்டும் மனம் அவருடையது.

    திரையில், அவரது ஹாஸ்யத்தை மிக நுட்பமாக கவனிக்கத் தவறினால், அடுத்தடுத்த வசனங்கள் போய்க்கொண்டே இருக்கும். அவரது வசனத்திற்காகப் புகழ் ஈட்டிய படங்கள் நிறைய உண்டு. ஆனால், அவரது பேச்சில், எழுத்தில் கொஞ்சமும் கர்வம் தலைதூக்கிப் பார்த்ததில்லை. இதைப் பலமுறை அவரிடமே கேட்டிருக்கிறேன். மிகப் பெரிய மனிதர்கள் பலரது பெயர்களை எல்லாம் வரிசையாகச் சொல்லிவிட்டு, நாம எங்கோ கீழே சாதாரண மட்டத்தில் இருக்கோம் சார், இதில் பெரிய ஆட்டம் எதுக்குப் போடணும் என்று தன்னடக்கத்தோடு பதில் வரும்.

    அவரது நகைச்சுவை வசனங்களில் ரசித்த ரசிப்பை விடவும், அவ்வை சண்முகி திரைப்படத்தில் ஆழமான ஓர் ஒருமைப்பாட்டு உணர்வை விதைக்கும் வசனம் ஒன்றை அவர் வழங்கி இருந்ததைக் கொண்டாட வேண்டும். நாசர், தம்மை அய்யர் என்று பொய் சொல்லிவிட்ட ஒரு முகம்மதியர் என்றறிய வந்ததும் கோபப்படும் ஜெமினி கணேசனை, மாமி வேடத்தில் இருக்கும் கமல் ஹாசன் ஆற்றுப்படுத்தும் காட்சி அது. ‘மாட்டுக்கறி சாப்பிடறவா’ என்று சொல்லும் ஜெமினியிடம், கமல் இப்படி சொல்வார்: :நீங்க பண்றது லெதர் பிசினஸ், அவாளுக்காக வெட்டப்படற மாடுகளை விட, உங்களுக்காக வெட்டப்படறது அதிகம்”. சாதி மதங்களைக் கடந்த பேதமற்ற உள்ளம் கொண்ட ஒருவரால் அன்றி வேறு யாரால் இப்படி எழுத முடியும்?

    ஓயாது எழுதிக் கொண்டிருந்தார் மோகன். நேர்காணல் எந்த இதழில் வந்தாலும், ஒரு குழந்தைமை உள்ளத்தோடு பகிர்ந்து கொண்டிருந்தார். ரமணரை நோக்கிய தேடல் அவரது அண்மைக்கால தனிப்பட்ட எழுத்தில் அதிகம் மேலோங்கி இருந்தது. இரவு உறங்கப்போகுமுன் என்று அவர் எழுதியதிலும், காலை விழித்தவுடன் என்று எழுதி அனுப்பியதிலும் இந்த ‘பற்றறுத்தல்’ ஒலித்துக் கொண்டே இருந்தது.

    “சார், இந்த வெண்பாவில் தளை தட்டி இருக்கிறது என்றால், தலை தட்டாமல் இருந்தால் சரி என்று பதில் போடுவார்…வெண்பாவை உடனே திருத்தி அனுப்பி வைப்பார். பதில் வெண்பாவை அத்தனை ரசித்து அதற்கும் மெயில் போடுவார். பத்து பதினைந்து நாட்கள் அவரது வெண்பாவிற்கு பதில் போடாமலோ, கருத்து தெரிவிக்காமலோ இருந்தால், அவ்வளவுதான், அழைத்தும் பேசிவிடுவார்.

    எத்தனை எத்தனை ஆயிரம் பேரிடம் இப்படி, இதேபோல் உயிரான கேண்மை பாராட்டி இருந்தார் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. அவரது தந்தை திரு ரங்காச்சாரி அவர்கள் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளராக, இயக்குநர் குழுவின் செயலாளராக பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றி ஓய்வு பெற்றவர். முதல் உரையாடலிலேயே அதைக் குறிப்பிட்டவுடன், வாஞ்சையோடு அப்படியானா அவரைப் பார்க்கவாவது ‘ஆத்துக்கு வாங்கோளேன் ‘ என்று அவரது பேச்சுத் தமிழில் அழைத்தார். அப்பாவுடன் பேசுவதற்கு தொடர்பு எண்ணையும் எனக்குத் தந்தார். மறுநாளே அவரோடு பேசிய இனிமையான நேரத்தையும் மறக்க முடியாது.

    ஆனால், நேரில் சென்று பார்க்காது நாட்களைக் கடத்திக்கொண்டு இருந்துவிட்டேன், மன்னிக்க முடியாத பாவி! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு மறுநாள் காலை அவருடைய தந்தை திரு ரங்காச்சாரி காலமான செய்தி அறிந்து அவரை உடனே அழைத்தேன். மிகவும் இயல்பாக, ‘எஸ்விவி சார், அப்பா காலமாயிட்டார்” என்று பேசத் தொடங்கினார். ‘நேரில் வந்து பார்க்காதிருந்து விட்டேன், இப்போது வெளியூர் வந்திருக்கிறேன், உங்கள் அப்பா என்னை மன்னிப்பாரா ?” என்று கண்ணீர் மல்க அவரோடு பேசினேன்.

    “அதெல்லாம் மன்னிப்பார், கவலையே படாதீங்கோ. தூக்கத்திலேயே அமைதியாய் பிரிந்துவிட்டது அவர் உயிர்” என்றார்.

    நீண்ட ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன், திரு சாரி குறித்து! அதை வாசித்துவிட்டுப் பேசுகையில், மிகவும் ஆறுதலாக இருந்ததென்றார் மோகன். இப்போது அவரையும் இழந்துவிட்டோம். யார் தர முடியும், ஆறுதலை?

    Share
  • இந்த வார வல்லமையாளர் 308 – ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ அப்துல் கனி

    இந்த வார வல்லமையாளர் 308 – ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ அப்துல் கனி

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    இந்த வார வல்லமையாளர் 308 – அப்துல் கனி

    உலக வெப்பமயமாதல் அதனால் ஏற்படும் வறட்சி பேரழிவு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதே ஆகும். இதிலிருந்து மீண்டு வருவதற்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே தீர்வாக அமையும். .

    தொல்காப்பியம், சங்க இலக்கியப் பாடல்களில் தொடங்கி  தற்கால புதுக்கவிதைகள் வரை அனைத்திலிருந்தும் நம் தமிழர்கள் மரங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை உணரலாம். பண்டைய தமிழகத்தில் ஒவ்வொரு மன்னனும் ஒரு குறிப்பிட்ட மரத்தினை காவல் மரமாகக் கருதினர்.  . இறை வழிபாட்டோடு தொடர்புடைய தல விருட்சங்களாகவும் மரங்கள் இருந்ததற்குப் பக்தி இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

    ஆனால் இன்றைய நிலையில் வேளாண்மை, நகரமயமாக்கம் போன்ற பல காரணங்களுக்காக சிறிது சிறிதாக நாம் காடுகளை அழித்து வந்துவிட்டோம். அதன் விளைவு புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்கள். இயற்கையான காட்டு மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டு எரிபொருள் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படுவதோடு , அந்த இடங்கள் மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக உருமாறிவிட்டன. மரங்கள் தொடர்ந்து குறைந்துவருவதால் உயிரியற் பல்வகைமை (bio diversity) குறைந்து சூழலும் தரம் குறைந்துவிட்டது. வாழ்விட சேதம், பல்லுயிர் இழப்பு, மற்றும் வறண்ட நிலங்கள் பெருகிவிட்டன.. வளிமண்டல கரியமிலவாயுவை நீக்க போதிய காடுகள் இன்மையால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு காலநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

    தற்போதைய மிகப்பெரும் பிரச்சினையான தண்ணீர்ப் பஞ்சத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் , மரங்கள் அழிப்பால் போதிய  மழைப்பொழிவு இல்லாமல் போனது முக்கிய காரணம். இதேபோல் போதியமரங்கள் இல்லாததால் சென்னை போன்ற பெரு நகரங்களில் காற்று மாசுபாடும் அதிகரித்து வருகின்றது.

    மனிதன் இன்புற்று வாழ

    மழை வளம் பெருக்கி, மண்வளம் காத்து,

    உறைவிடம் கொடுத்து,  உணவு வழங்கி

    மகிழ்ச்சியுடன் நாளும் மாசில்லாக் காற்றளிக்கும்

    மரங்கள் இயற்கைச் சீற்றத்தால் இன்னலுரும்போது கை கொடுத்துக் காப்பது நம் கடமையன்றோ.

    அந்த மாபெரும் பணிக்காகத்தான் சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் ட்ரீ ஆம்புலன்ஸ் சேவை ஒன்றைத் தொடங்கியுள்ளது. உலக சுற்றுச் சூழல் தினத்தன்று மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அவசர ஊர்தி சேவையை இந்த நிறுவனம் சென்னையில் துவக்கியது. இந்த சேவையை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்தியில் பயணிக்கும் சுற்றுச் சூழல்  ஆர்வலர்கள், மரங்களுக்கு முதலுதவி அளித்தல், வேரோடு சாய்ந்த மரங்களை மறு பதியம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இது குறித்து திரு அப்துல் கனி பேசுகையில் பசுமையின் தேவையை மனிதர்கள் உணர வேண்டும். அதனால்தான் இந்த மர ஆம்புலன்ஸ் சேவை என்றும் தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாகவும் 2020க்குள் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாகவும் கூறினார். முதற்கட்டமாக தமிழகத்தில் பயணிக்கும்  இந்த அவசர ஊர்தி நாட்டின் பல்வேறு இடங்களுக்கும்  சென்று பாதிக்கப்பட்ட மரங்களுக்கு முதலுதவி அளித்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளைச் செய்யும்.

    9941006786 என்ற எண்ணில் ட்ரீ ஆம்புலன்ஸ் குழுவினரை அழைத்து, அவர்களின் சேவையைப் பெறலாம். இவர்களின் இணையத்தளம் – www.treeambulance.org

    உயிர் காக்கும் மரங்களின் உயிர் காக்கும் பணி செய்யும் ட்ரீ ஆம்புலன்ஸ் நிறுவனர் அப்துல் கனி அவர்களையும், உடன் பணியாற்றும் ஆர்வலர்களையும் வல்லமை மின்னிதழ் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம். இந்த நற்பணிக்காக அவருக்கு “இந்த வார வல்லமையாளர்” விருதினை அளித்துப் பாராட்டுகிறோம்.  அப்துல் கனி குழுவினர், இன்னும் பற்பல தொண்டுகள் புரிய வாழ்த்துகிறோம்.

    தொடர்புடைய பக்கங்கள்

    https://www.indiatimes.com/news/india/in-a-first-chennai-environmentalist-launches-tree-ambulance-to-give-first-aid-to-trees-368673.html

    http://www.nxtpix.com/tree-ambulance-demonstration-program-on-world-environmental-day-an-initiative-by-dr-k-abdul-ghani-and-mr-suresh-k-jadhav-sasa-group/

    Share
  • படக்கவிதைப் போட்டி – 216

    படக்கவிதைப் போட்டி – 216

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (16.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    52. தெரிந்து வினையாடல்

    குறள் 511:

    நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்

    நன்ம எது தீம எது னு தெரிஞ்சுக்கிட்டு நல்லதுல மட்டுமே நாட்டம் செலுத்துதவன் எந்த வேலைய செய்யுததுக்கும் ஏத்தவன்.

    குறள் 512:

    வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
    ஆராய்வான் செய்க வினை

    வருமானம் வருத வழிய விரிவாக்கி வளத்த பெருக்கி வார தொந்தரவெல்லாத்தையும் கண்டுக்கிட்டு நீக்கி இருக்கவன் தான் காரியத்த செய்யணும்.

    குறள் 513:

    அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு

    நேசம், புத்திசாலித்தனம், திறம, பேராச இல்லாத கொணம் இந்த நாலையும் இருக்கவங்கள தேர்ந்தெடுக்கது தான் நல்லது.

    குறள் 514:

    எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்

    எம்புட்டுத்தான் ஆராஞ்சு தேர்ந்தெடுத்தாலும் எதிர்பாக்குத அளவு சிறப்பா நடந்துக்கிடாதவங்க பல பேர் இருக்காங்க.

    குறள் 515:

    அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
    சிறந்தானென் றேவற்பாற் றன்று

    செய்யுத வழிய தெரிஞ்சு எத்தன தடங்கல் வந்தாலும் செஞ்சு முடிக்கவன தவித்து மத்தவன ஒசந்தவன்னு நெனச்சி ஒருவேலையும் ஏவக்கூடாது.

    குறள் 516:

    செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
    டெய்த உணர்ந்து செயல்

    காரியத்த செய்ய வேண்டியவனோட தகுதிய அறிஞ்சுக்கிட்டு, காரியத்தோட தன்மயையும் புரிஞ்சுக்கிட்டு அத செய்யுத காலத்தையும் உணந்து காரியத்த செய்ய வைக்கணும்.

    குறள் 517:

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
    ததனை அவன்கண் விடல்

    இந்தக் காரியத்த இவன் இன்னின்ன ஆள் பலத்தாலையும், பொருள் பலத்தாலையும் செஞ்சு முடிப்பான் னு தெரிஞ்சுக்கிட்ட பொறவு காரியத்த ஒப்படைக்கணும்.

    குறள் 518:

    வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்

    ஒருத்தன ஒரு காரியத்துல ஈடுபடுத்துதக்கு முன்ன அவன் அதுக்கு ஏத்தவனானு அறிஞ்சுக்கிட்டு செய்யணும்.

    குறள் 519:

    வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்குந் திரு

    எடுத்த காரியத்த கண்ணும் கருத்துமா செய்யுத ஒருத்தன சந்தேகப்பட்டு தப்பா நினைக்குத தலைவனோட செல்வம் அவன் கையவிட்டு போவும்.

    குறள் 520:

    நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
    கோடாமை கோடா துலகு

    உழைப்பாளிங்க மனசு நோவாம இருந்தாங்கன்னா தான் ஒலகம் செழிப்பா இருக்கும். அதனால ராசா தெனைக்கும் அவங்க நெலம பத்தி தெரிஞ்சுக்கிட்டு வேண்டியத செய்யணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share