Blog

  • தமிழ் இனி மெல்ல… ஒரு அரிசோனனின் புதின வெளியீட்டு நிகழ்ச்சி!

    தமிழ் இனி மெல்ல…

    ஒரு அரிசோனனின் புதின வெளியீட்டு நிகழ்ச்சி!

    நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழன்பர்களை வரவேற்கிறோம்.

    The Venue:

    Youth Hostel

    2nd Avenue, Indira Nagar

    Chennai, Tamil Nadu 600020

    India

    Time

    15-02-2015

    Sunday 4.00 P.M to 6.P.M.

    ariso

    இது தமிழின் கதை. எதிர்காலத்தையும், தமிழ் மன்னர்களின் சிறப்பான ஆட்சியையும் இணைகிறது. தற்பொழுதைய நிலை நீடித்தால் தமிழ் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன், அந்த எதிர்காலத் தமிழர்களுக்கு பழங்காலத்துத் தமிழர்கள் ஒரு தங்கச் சுருளில் விட்டுச்சென்ற வரலாற்றை நான்கு பகுதிகளாகக் கூறும் புதினமே “தமிழ் இனி மெல்ல…”

    எதிர்காலம் எப்படி இருக்கும்? தமிழ்நாட்டின் நிலை என்ன, தமிழின் நிலை என்ன, தமிழர்களின் நிலை என்ன என்பதை முதல் பகுதி விவரிக்கிறது. முதல் பகுதி இருபத்தைந்தாம் நூற்றாண்டில் சுழல்கிறது.

    இரண்டாம் பகுதி இராஜராஜர் தஞ்சைகோவிலைக் கட்டிமுடித்த காலதத்தில் துவங்குகிறது. அரசை விரிவாக்கும் இலக்கை அடைத்த அவரின் புது இலக்கைப்பற்றி புதினம் பேசுகிறது. அவர் தனது இளவல் இராஜேந்திரனுக்கு சோழப்பேரரசை ஒப்படைப்பற்றியும் அவர்கது புதிய இலக்குபற்றி அவரது மன ஓட்டங்களையும் விவரிக்கிறது. சோழநாட்டிற்கும் சாளுக்கிய நாட்டிற்கும் உள்ள உறவினையும், மற்ற நாடுகளுடன் உள்ள போராட்டங்களையும் உணர்த்துகிறது.

    “தமிழ் இனி மெல்ல..”வின் முதல் புத்தகம் இத்துடன் முடிகிறது. இது தமிழிலும், ஆங்கிலத்தில் “The Golden Scroll (The story of a langugage and its people)” என்ற தலைப்பிலும் ஒரே சமயத்தில் வரும் பிப்ரவரி 15ம் தேதி தாரணி பதிப்பகத்தாரால் திரு வையவன் அவர்கள் முன்னிலையில் வெளியிடப்படுகிறது. இடம் [பின்பு அறிவிக்கப்படும். அனைவரும் வருக. வருபவர்கள் கீழ்க்கண்ட மின் அஞ்சலுக்கு எழுதினால், தொடர்பு கொள்ளப்படும். (oruarizonan@gmail.com )

    அடுத்த பகுதிகள் இராஜேந்திரன், அவனது மகன்களான இராஜாதிராஜன், இராஜேந்திரதேவன், வீர ராஜேந்திரன், இரண்டாம், மூன்றாம் குலோத்துங்க சோழர்கள், மற்றும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், மார்கோ போலோ கண்ட பாண்டியப் பேரரசை ஒரு குடைக்கீழ் ஆண்ட குலசேகர பாண்டியன் இவர்களின் காலத்தில் நடை போடுகிறது. அத்துடன் தமிழ் மன்னர்களின் அழிவு ஏற்படக் காரணமான மாலிக் காஃபூரின் படையெடுப்பையும் கண்முன் நிறுத்துகிறது.

    இந்த வரலாற்றை அறிந்த எதிர்காலத் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விளக்கி புதினம் நிறைவுபெறுகிறது.

    இந்தப் புதினம் ஒருசில நாயக-நாயகியரின் கோணத்தில் பார்க்கப்படுவதில்லை. அனைவரின் கோணங்களிலிருந்தும் வரலாற்றுக் கதையை நடத்திச் செல்கிறது.

    வரலாற்றை விவரிக்கும் புதினம், அப்படி ஏன் வரலாறு நிகழ்ந்தது என்பதை கதாசிரியரின் கற்பனைக் குதிரையில் வாசகர்களை ஏற்றிச் செல்கிறது.

    அரிசோனா மகாதேவன்

    (ஒரு அரிசோனன்)

    யு.எஸ்.ஏ.

    கதையைப் படித்த சிலரின் கருத்துக்கள்

    ஜவஹர் பிரேமலதா, பேராசிரியர், சேலம்

    அரிசோனா மகாதேவன் (ஒரு அரிசோனன்) புலம் பெயர்ந்த ஒரு தமிழர். தமிழின் அருமையை பெருமையை அந்நிய சூழலில் உணர்ந்து தனக்கான அடையாளம் மொழியே என்பதை உணர்ந்து தான் உணர்ந்ததை தாய்நாட்டுத் தமிழருக்கும் எடுத்துரைக்க இந்நாவல் புனைந்துள்ளார்.

    உணர்வதை உணர்த்த நினைப்பதே …அதுவும் சுவையாக … ஒரு கதையாக ….உணர்த்த முயல்வதே …..ஒரு படைப்பின் முதல் வெற்றியாகிறது. வெற்றுரைகளாக இல்லாமல் மாபெரும் வரலாற்றை ஆழ்ந்து அறிந்து வலுவான ஆதாரங்களினடிப்படையில் “தமிழ் இனி மெல்ல…” என்ற நாவல் எழுதப்பட்டுள்ளது.

    இது முன்னைப் பழைமைக்கும் பழமையான, பின்னைப் புதுமைக்கும் புதுமையான என்றுமுள தென் தமிழின் முந்தைய வரலாற்றையும் எதிர்கால வரலாற்றையும் எடுத்துரைக்க தமிழில் வந்துள்ள நாவல்களிலிலேயே தனித்தன்மை வாய்ந்தஒரு நாவலாகும்.

    தமிழ் நாவல்களில் பெண் விடுதலை,சமூகவிடுதலை இனவிடுதலை,சாதி விடுதலை என எத்தனையோ பாடுபொருள்களில் படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. சமூகத்தைப் பீடித்துள்ள பலச் சமூக விரோதப் போக்கை நாவல்கள் சாடியுள்ளன. ஆனால் தமிழுக்கு எதிரான தமிழர்களின் விரோதப்போக்கை எந்த நாவலும் எடுத்துரைத்ததில்லை. தமிழுக்குத் தமிழ் உணர்வில்லாத தமிழரிடமிருந்துதான் விடுதலை வேண்டும் என்பதை மிகச்சிறப்பாக நாவலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

    மிக எளிய நடை. படிக்கத்தூண்டும் உரையாடல்கள். இந்நாவல் ஒரு வரலாற்று நாவல். இதில் வரலாறும் உள்ளது. ஒரு துப்பறியும் நாவல் போல் வாசகரை கட்டிப்போடும் விறுவிறுப்பும் உள்ளது.தமிழின் நிலையை வைத்து எழுதப்பட்ட நாவல் இது ஒன்றாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் துப்பாக்கியோ, அணுகுண்டுகளோ தேவையில்லை.அந்த இனத்தின் மொழி அழிந்தாலே போதுமானது என்பதை நாவலாசிரியர் நிகழ்ச்சிகளின் வழியும் பாத்திரங்களின் வழியும் எடுத்துரைத்து எச்சரிக்கிறார்.

    ஒரு மொழியின் வாழ்வும், வளமும், வளர்ச்சியும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்வும் வளமும் வளர்ச்சியுமாகும். படைப்பாளர்கள் தாங்கள் உணர்வதைச் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உணர்த்த முயல்கின்ற போக்குத்தான் படைப்புகளாகத் தோற்றம் கொள்கின்றன.

    ஒரு சமூக மாற்றம் தேவை.

    ஒட்டார் பின்சென்று வாழ்தலின் அந்நிலையே

    கெட்டான் எனப்படுதல் நன்று.

    என்ற திருக்குறள் கருத்தை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். நாளை உலகிலுள்ள பிற மொழியாளர்கள், “பிறந்ததும்தான் பிறந்தேன் ஒரு தமிழனாகப் பிறந்தேனா?” என்று ஏங்க வேண்டும். அந்நாள் எந்நாள்?

    இந்நாவல் அந்நாளை எண்ணி ஏங்கிய ஒரு தமிழனின் ஏக்கமாக வெளிப்பட்டுள்ளது. தமிழ் இனி மெல்ல..சாகுமா? தமிழ் இனி மெல்ல… உலகை ஆளுமா? தமிழா உன் கையில்….

    ஹரணி, பேராசிரியர், அண்ணாமலை பல்கலைக்கழகம்

    தமிழின் தொன்மையும் பழம்சிறப்பும் உணர்வதற்கு மேற்சுட்டியவை ஒரு சிறு சான்றாகக் கொண்டு இப்போது திரு அரிசோனா மகாதேவன் அவர்கள் நாவலான “தமிழ் இனி மெல்ல…” வை அணுகுதல் வேண்டும்.

    ஒரு மொழி என்பது ஒரு சமுகத்தின் உருவாக்கம், வளர்ச்சி, மாற்றங்கள், விளைவுகள் இவற்றின் அடையாளம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல சமுகமும் மொழியும் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன. ஒருமொழியே ஒரு சமுகமாகவும் ஒரு சமுகமே ஒரு மொழியாகவும் நிலைநிறுத்தப்படுகின்றன. இந்த மொழியினை நேசித்தல், கற்றல், பயன்படுத்துதல், அனுபவித்தல், வளர்த்தல்,அடுத்தக் கட்ட தலைமுறைக்குக் கொண்டு செல்லுதல் என்பவை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள அனைவரின் தலையாயக் கடமையாகும்.

    ஆனால் மொழியின் பயன்பாடு என்பது குறிப்பாகத் தமிழமொழியின் பயன்பாடு என்பது இன்றைக்கு கேலியாகவும் தமிழ் படித்தால் என்ன பயன்? என்பதுபோலவுமான கருத்தாக்கங்கள் மிகுந்து அது மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக அழிவின் பாதைக்குக் கொண்டு சென்றுவிடுமோ என்கிற பலரின் அசசத்தையும் உணரமுடிகிறது. இது உண்மையான மொழிப் பற்றாளர்களின் உள்ளார்ந்த கவலை.

    இந்தக் கவலையே திருமிகு அரிசோனா மகாதேவன்அவர்களின் கவலையும். அயல்நாட்டில் இருப்பிருந்தாலும் மனசு முழுக்க இந்த தமிழ்மொழியின் நிலை குறித்து அது சவலைப் பிள்ளைப்போலப் பராமரிக்கப்படுவது கண்டு உணர்வுப்பூர்வமாக கவலைப்பட்டு இந்நாவலைத் தொடங்கியிருக்கிறார்.

    உண்மையில் மகாதேவன் அவர்களின் இந்நாவல் இன்றைக்கான அவசிய சமுகத் தேவையாக உருவெடுத்திருக்கிறது. ஒரு சிறிய குழந்தைக்கு உறவுகளை அறிமுகம் செய்யும் தாத்தாவோ அப்பாவோ அறிமுகம் செய்யும்பொது, “நம்முடைய முன்னோர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா, அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா, அவரின் செம்மாந்த வாழ்க்கை தெரியுமா, அவர்களின் செயற்கரிய செயல்கள் தெரியுமா? அந்தப் பரம்பரையில்தான் இப்போது நீ வந்து பிறந்திருக்கிறாய்!” எனும்போது அக்குழந்தை தன் பாரம்பரியத்தின் பெருமையை மட்டும் உணர்ந்துகொள்ளாமல், கூடவே தான் எப்படி அவர்களைப் போல வாழவேண்டும் சிறக்கவேண்டும் என்பதையும் கூடுதலாகக் கற்றுக்கொள்கிறது.

    இந்த உத்தியைத்தான் திரு மகாதேவன் அவர்களும் இந்நாவலின் வரலாற்றின் வேரைப் பிடித்து சேர,சோழ, பாண்டியர்கள் என்றிருந்தாலும்அவர்கள் மொழிக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு வளர்த்த விதத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நம் மொழியின் பெருமைகளை அடையாளப்படுத்தித் தொடங்கியிருப்பதன் சிறப்பே இந் நாவலாகும்.

    காதேவன் அவர்கள் ஒரு போராளியைப் போன்றே இந்நாவலைக் களமாக்கி இறங்கி நிற்கிறார் தமிழ்மொழியின் பெருமையைச் சிதைக்கும் எந்தவொன்றின் எதிராகவும். அவரின் அனுபவப் பின்புலத்தில் இந்நாவல் மெல்ல மெல்ல தமிழின் மாண்பையும் பண்பாட்டையும் படிப்போரின் மனத்துக்குள் இறக்குகிறது. நிச்சயம் இந்நாவல் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பதுபோல தமிழின் மாண்பையும் அதன் வளத்தையும் தொன்மையையும் காப்பதில் போராடும் சிலரில் மகாதேவனும் ஒருவர் என்றாலும் அவருக்கான தனித்துவம் இந்நாவலின் வழியாகக் குறிப்பிட்ட இலக்கை அடைந்து விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

    நாலைந்து முறைகளாவது இந்நாவலை வாசிக்கவேண்டும். அப்போதுதான் இன்னும் இதன் செம்மாந்த நோக்கம் மனத்தில் கிளர்ச்சியை உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன். திரு மகாதேவன் அவர்களின் முயற்சி வெல்லும் எனப்தோடு தமிழின் மாண்பு ஒருபோதும் எவராலும் நலிவடைந்துவிடாது என்கிற அழுததமான உணர்வையும் பல்வேறு சான்றுகள் வழியாக இந்நாவல் மனத்தில் எழுதிக்கொண்டேயிருக்கிறது.

    Paul Daniels, Mesa, Arizona, USA:

    The Golden Scroll, The Tamil Legacy… and What Might Have Been…

    aris

    Here is a journey spanning more than a thousand years — past, present, and future (not always in that order). It is a journey that goes over land, crosses rivers, and that requires ships at sea and aircraft. It is a journey into the hearts and minds of certain citizens (both ancient and modern) — decision makers, and those who are not usually seen as important, and which transcends caste and position. It is a journey about what might have been. There is loyalty to a great cause; there is intrigue; and there are those whose agendas conflict with a grand idea concerning how a people can be united, an idea found in a golden scroll, a document known to only a few…

    Share
  • அக்கமகாதேவி

    கிரேசி மோகன்

     

    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு
    ————————————————-

    1294
    காப்பு
    ——–

    சைவதிற்(கு) ஆண்டாள், சிவனின் மனம்புரிந்த
    மொய்விரித்தக் கூந்தலால் மேனிமூடும் -தெய்வத்தாய்
    அக்கமகா தேவியே அம்மல்லி கார்ஜுனரை
    சொக்கவைத்தத் தோழி சரண்….(0)….
    ——————————————————————

    akka-mahadevi-220x300

    மனத்தலையைக் கொய்து மயானத்தில் நித்தம்
    தனித்தலையும் தேவாதி தேவன் -பனிதலையன்
    சென்னமல்லி கார்ஜுனன் சேவடி சேர்ப்பிக்க
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(1)….

    கோலுக்குக் குரங்காக நூலுக்கு பொம்மையாய்
    தோலுக்குள் ஆடுகிறான் தாண்டவம் -மேலுக்கு
    சென்னமல்லி கார்ஜுனன் சொன்னபடி ஆடினால்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(2)….

    கரங்களில் ஓடு கிராமத்தில் பிச்சை
    கிறங்கிட பாழடைந்த கோயில் -குரங்கென
    சென்னமல்லி கார்ஜுனனை சிக்கென்(று) அணைத்திட
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(3)….

    கணுவில் கசப்பாய் கரும்பில் இனிப்பாய்
    அணுவிற்குள் அண்டத்தை ஆளும் -குணவானாம்
    சென்னமல்லி கார்ஜுனனை என்னசொல்லிச் சேர்ந்தாலும்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(4)….

    மன்ணில் புதையலாய் மாங்கனியில் தீஞ்சுவையாய்
    உன்னில் உணர்வாய் ஒளிந்தமுக் -கண்ணனவன்
    சென்னமல்லி கார்ஜுனரின் சர்வ வியாபகமே
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(5)….

     
    புல்லினோடு பச்சையாய் பூவினோடு வாசமாய்
    கல்லினோடு கெட்டியாய்க் குந்தியவன் -‘எல்லிநோடு’
    சென்னமல்லி கார்ஜுனரை சிந்தை நினைந்திட
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(6)….

    மன்றாடி வாழ்வோர்க்கும், அன்றாடங் காய்ச்சிக்கும்
    தின்றாடி தீர்ந்தபின் துக்கம்தான் -மன்றாடி
    சென்னமல்லி கார்ஜுனராம் அன்னமள்ளி உண்டிட
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(7)….

    சாவில் பறிபோகும் சாசுவதம் எல்லாமே
    ஆவி பிரியும்முன் அக்கமகா -தேவியின்
    சென்னமல்லி கார்ஜுனரை சென்னியள்ளிச் சூடிட
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(8)….

     
    கூத்தாடும் வேளையில் கோவணம் போனது
    தோத்தாடும் நேரத்தில் தான்தெரியும் -மாத்தாடு
    சென்னமல்லி கார்ஜுனரின் கன்னலொலி நாமத்தை
    உன்னையள்ளுக் கொள்ளும் உவப்பு….(9)….

    திகம்பர ஆடை திருநீறு வாடை
    அகம்புறத்தில் நீராடும் மேடை -சுகம்பெறும்
    சென்னமல்லி கார்ஜுனரின் சாரணர்க்கு சேவகம்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(10)….

    சூரணம் ஆயிரம் சூழப் படுக்கையில்
    தேறணும் தேகமென்று தேம்பிடாது -நீறணி
    சென்னமல்லி கார்ஜுனனின் எண்ணிலாத பேர்சொல்ல
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(11)….

    உமிக்குநீர் ஊற்ற உயருமோ நெல்லாய்!
    குமித்த பழவினைகள் குன்றும் -நிமித்தமாய்
    சென்னமல்லி கார்ஜுனரின் எண்ணமல்லி வாசத்தால்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(12)….

    வாழை வனம்புகுந்து பாழும் வினைகளைந்து
    ஆழ வசனித்த அக்கம்மா -தோழனாம்
    சென்னமல்லி கார்ஜுனரை சிந்திக்க சித்திக்கும்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(13)….

    தேடிக் களைத்துள்ளம் வாடி வதங்கிட
    கோடிக்கை கொண்டாலும் காட்டிடுவான் -வேடிக்கை
    சென்னமல்லி கார்ஜுனரின் சேவடி ஜோடிதான்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(14)….

    நெய்தடவும் மீசையும் பொய்தடவும் பாஷையும்
    மைதடவும் மங்கையும், மூப்புற -கைவிடுமே!
    சென்னமல்லி கார்ஜுனரால் சின்னவய சாகிடுவாய்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(15)….

    உடம்பை வளர்த்து உயிரை தளர்த்த
    இடம்பிடிப்பாய் ஸ்ரீசைல ஈசன் -குடும்பத்தில்
    சென்னமல்லி கார்ஜுனம் சொன்னவண்ணம் ஊர்ஜிதிக்க
    உன்னயள்ளிக் கொள்ளும் உவப்பு….(16)….

    வெக்கமென்ன மானுடா அக்கமகா தேவியின்
    சக்களத்தி ஆகிநீ சண்டையிடு -அக்கணமே
    சென்னமல்லி கார்ஜுனம் என்னதிது என்றுவர
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(17)….

    காமனிடம் கால்பிடித்துக் கெஞ்சாதே, கையேந்தி
    சோமனிடம் பிச்சைக்குச் செல்லாதே -ஷேமமாய்
    சென்னமல்லி கார்ஜுனர்முக் கண்ணசையக் காதலாய்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(18)….

    பொய்யடைத்துப் பேசி பொருள்குவித்துப் போகுங்கால்
    கையெடுத்துப் போகுமோ கூன்முதுகா -உய்படுத்து
    சென்னமல்லி கார்ஜுனரின் சன்னிதியில் நிம்மதியாய்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(19)….

    ஆர்ப்பரித்து ஓடிவந்த ஆகாச கங்கையின்
    நீர்பரப்பை வார்சடையால் நேர்படுத்தி -பார்விடுத்த
    சென்னமல்லி கார்ஜுனரின் சீதளம் சீர்படுத்த
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(20)….

    திருநீறு மஞ்சள், திகம்பரம் ஆடை
    குருபாத தீர்த்தம் குளியல் -மறுநாளை
    சென்னமல்லி கார்ஜுனரின் சித்தமென்று சாய்ந்திருக்க
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(21)….

    சொப்பன வாழ்விது கொப்பள நேரம்தான்
    எப்போ(து) உடையுமென்(று) யாறிவார் -அற்புதம்
    சென்னமல்லி கார்ஜுனன் சுண்டு விரலசைய
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(22)….

    வசமான லிங்க எசமானன் மீது
    பசவண்ணன் சிஷ்யை புகன்ற -வசனத்தை
    சென்னமல்லி கார்ஜுனரின் சன்னிதியில் செப்பிட
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(23)….

    மாற்றான் வனச்சென்ன மல்லியே ஆனாலும்
    நோற்றாளக் கம்மா நமக்காக -போற்றுஅச்
    சென்னமல்லி கார்ஜுனரை சொன்ன வசனத்தால்
    உன்னையள்ளிக் கொள்ளும் உவப்பு….(24)….

    ஏகனை, தேவியுமை பாகனை, தேவாரப்
    பாகனை, அக்கம்மா ராகனை, -மோகனை
    எண்ணியிரு பத்தைந்து பண்ணிசைக்கச் சொன்னவனை
    சென்னமல்லி கார்ஜுனனைச் சூடு….(25)….கிரேசி மோகன்….
    —————————————————————————————

    படங்களுக்கு நன்றி ; http://solvanam.com/?p=10377

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    அவரவர்(ஜீவாத்மா) கட்டை விரல் அளவுக்கு(அங்குஷ்டாப்யாம்) பரமாத்மா ‘’ஹ்ருதய குகை வாஸியாய்’’ இருப்பதாக ஐதீகம்….கேசவ் கைவிரல்கள் வரைந்த கட்டை விரல் பரமாத்மா கிளாஸ்….

    அங்குஷ்டாப்யாம்
    ———————-

    crazy

    “வீணாய் இலைகளும் வேர்களும் இல்லாது
    தானாய் முளைக்கும் மரமிவன் -நானார் ?
    உரலில் தலைவிட்டு ஓவென்(று) அழுதால்
    விரலளவு ஆகும் வியப்பு”….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 2, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்

     

    KALAIMAHEL HIDAYA RISVI-

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள் சென்ற வாரம் பாரிலே பிறப்பான்….!“, “யாஅல்லாஹ்!” என்ற இரு கவிதைகளை வல்லமையில் வெளியிட்டிருந்தார். கருத்தோட்டம், சொல்லோட்டம் இரண்டுமே அருமையாக அமைந்திருந்த கவிதை என்றப் பாராட்டினை “பாரிலே பிறப்பான்…” கவிதை பெற்றது. கவிஞரது அருமையான கவிதைக்காக இவ்வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் கலைமகள் ஹிதாயா அவர்களைப் பாராட்டுகிறோம்.

    இலங்கை கல்முனையைச் சார்ந்த கவிஞர் கலைமகள் ஹிதாயா; கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, ஹிதாயா மஜீத், மருதூர்நிஸா என்ற பெயர்களில் தனது இலக்கியப்படைப்புகளை அளித்து வருகிறார். இளமையிலேயே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட கலைமகள் ஹிதாயா அவரது பதினாறாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் துவங்கியவர். முதல் முயற்சியிலேயே இவரது “மீண்டும்” என்ற புதுக்கவிதையும், “அன்னை” என்ற மரபுக் கவிதையும் வெவ்வேறு பத்திரிக்கையில் ஒரே நாளில் பிரசுரிக்கப்பட்டது என்ற சிறப்பினைப் பெற்றவர்

    பதின்ம வயதில் தொடங்கி தொடர்ந்து மூன்று பத்தாண்டுகளாக இவர் எழுத்தின் வீச்சு மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை, நெடுங்கதை, மெல்லிசைப்பாடல், விமர்சனம் என, பற்பல பரிமாணங்களில் மிளிர்கிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதியுள்ளார்.

    நாளையும் வரும், தேன் மலர்கள், இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற புதுக்கவிதை மற்றும் மரபுக்கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். முப்பது சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், பற்பல நூல் மதிப்புரைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலங்கையின் பல பத்திரிக்கைகளிலும், இந்தியா, ஆஸ்திரேலியா பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளில் குரல்கொடுத்துள்ள இவர் ரூபவாகினிக் கவியரங்குகளிலும் பங்குகொண்டுள்ளார். அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

    இவரது இலக்கிய ஆர்வம் காரணமாக “தடாகம் கலை இலக்கிய வட்டம்” என்ற அமைப்பைத் துவக்கி, அதன் அமைப்பாளராகத் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் பல எழுத்தாளர்களை கௌரவித்துள்ளார், நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார். தடாகம் கலை இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினையும் வெளியிட்டு வருகிறார்.

    கவிதை இலக்கிய ஆர்வத்தின் காரணமாக பல கவிதைப்போட்டிகளில் பங்கு பெற்று தனது கவித்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அகில இலங்கை மற்றும் மாவட்ட அளவில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது, ரத்ன தீப சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர், இளம் படைப்பாளிக்கான விருது, கலை அரசி விருது, கவித்தாரகை விருது, கலைமுத்து விருது, கவிதைச் சிற்பி விருது, சாம ஸ்ரீ, தேசகீர்த்தி, கலாசூரி, சமூக ஜோதி, பாவரசு, காவியத் தங்கம், இலங்கையின் சிறந்த பெண் கவிஞர் பட்டங்களும் என இவரது பட்டங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல் விரிகிறது.

    KALAIMAHEL HIDAYA RISVI4

    இவரது கவிதைத்திறனை படித்து மகிழ கவிஞரின் இவ்வார வல்லமைக் கவிதையான “பாரிலே பிறப்பான்….!” கவிதையுடன் மேலும் இரு கவிதைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

     

    பாரிலே பிறப்பான்….!
    ______________________________________________________

    மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி
    அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து
    அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து
    பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்….!

    இருண்ட சூழலை மாற்றிய பின்னே
    ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க
    விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால்
    ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்…..!

    தத்தித் திரிந்து தளர்நடை பயின்று
    பள்ளிப் பருவ வாசல் ஏறி
    இளைஞனாகி என்றும் வனப்புடன்
    உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்….!

    குருடனாய்,செவிடனாய் குடிக்கு அடிமையாய்
    அறிஞனாய்க் கலைஞனாய் ஆயிரம் வேஷம்
    ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
    எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்….!

    முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே,
    பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான்
    போகப் போக நடை தளர்ந்திடுவான்
    பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான்…..!

    ***

     

    கல்வி ஒழுக்கம்
    ______________________________________________________

    கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
    கற்று நல் வாழ்வினில் நடைபோடு
    செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
    சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
    (கல்வி ஒழுக்கம்)

    வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே
    வலம் புல பெறுவோம் நம்பிக்கையிலே
    யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும்
    நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும்
    (கல்வி ஒழுக்கம் )

    பூத்திடும் மலர்கள் சோலையிலே
    புலர்ந்திடும் விடியில் காலையிலே
    ஆரத் தொழுவோம் நலம் செர்த்திடுமே
    அன்பினை உலகெங்கும் ஊட்டிடவே
    (கல்வி ஒழுக்கம் )

    ஊடக மென்பது உலகாளும்
    உன்னத மான செயலாகும்
    நாடக உலகம் நமதாகும்
    நன்மைகள் உழைப்பில் விளைவாகும்
    (கல்வி ஒழுக்கம் )

    கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
    கற்று நல் வாழ்வினில் நடைபோடு
    செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
    சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்

    ***

     

    கிள்ளி விளையாடாதீர்கள் ….!
    ______________________________________________________

    வாழ்க்கையை குழி தோண்டி புதைத்துக்
    கொண்டுதான் வாழுகின்றீர்கள்
    மனித ஆத்மாவுக்கு
    பகையை புகையாய் மாற்றுகின்றீர்கள்
    நம்பிக்கையான உள்ளங்களை
    துரோகிகளாக மாற்றுகின்றீர்கள்
    நாய்க்கு கொடுக்கும் மதிப்பைகூட,
    மனிதர்களுக்கு காட்டாமல் இருக்கின்றீர்கள்
    உடமைகளைக் கூட
    தீயிட்டு எரிக்கிண்றீர்கள்
    மான மரியாதைகளை காற்றில் பறக்க விடுகின்றீர்கள்
    உங்களை நினைத்து நீங்களே
    தலைக்கனம் பிடித்து புளகாங்கிதமடைகின்றீர்கள்
    ஏழை எளியோரைக் கண்டால்
    கண்டும் காணாமல் போகின்றீர்கள்
    அடுத்தவனின் முன்னேற்றத்தை தடுத்து
    தான் உயர நினைக்கின்றீர்கள்
    துரோகத்தை அன்பாய் காட்டி
    அடுத்தவன் சோற்றில்
    ஏன்
    சேற்றைப் பூசுகிண்றீர்கள் …?

    கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள் தொடர்ந்து இலக்கியப்பணியாற்றி மேலும் பல புகழ் உச்சங்களை அடைய வல்லமைக் குழுவிரின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    கவிஞர் கலைமகள் ஹிதாயாவின் தொடர்பிற்கு:
    மின்னஞ்சல்: s.k.risvi@gmail.com
    ஃபேஸ்புக்: https://www.facebook.com/hidaya.risvi
    கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/104217741513778703421/
    யூ டியூப்: https://www.youtube.com/user/kalaimahelhidaya123
    வலைப்பூ: http://www.kalaimahelhidayarisvi.blogspot.com/

     

    கவிஞர் கலைமகள் ஹிதாயாவின் பல்வேறு வலைப்பூக்கள்:
    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி – http://www.kalaimahelhidayarisvi.blogspot.com/
    கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் கவிதைகள் – http://www.kalaimahelhidayapoem.blogspot.com/
    கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் சிறுகதைகள் – http://kalaimahelhidayarisvishortstories.blogspot.com/
    கலைமகள் ஹிதாயாவின் பாடல்கள் – (http://kalaimahelhithayavinpaadalgal.blogspot.com/
    கலைமகளின் தாய்வாக்கு – http://kalaimahelinthaaivaakku.blogspot.com/
    வசந்தகாலம் – http://wwwvasanthakaalam.blogspot.com/
    விரியும் பூக்கள் (நூலாய்வு) – http://www.kalaimahelhidayapublication.blogspot.com/
    தடாகம் கலை இலக்கிய வட்டம் – http://www.thadagamkalaiilakkiyavattam.blogspot.com/
    இஸ்லாமியப் பூங்கா – http://wwwislamiyapoonga.blogspot.com/
    ஹிதயாவின் தரும் மருத்துவத் தகவல்கள் – http://hidayavummaruththuvamum.blogspot.com/

     

    தகவல் தந்துதவிய விக்கிபீடியாவிற்கு (https://ta.wikipedia.org/s/19jr) நன்றி
    படங்கள் உதவி: இணையதள வெளியீடுகள்

     

     

    Share
  • நின்னினும் நல்லன்!

    -மேகலா இராமமூர்த்தி

    நண்பர்களே! காலஎந்திரத்தில் பயணித்துப் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னே செல்வோம் (கற்பனையில்தான்!).

    நாம் இப்போது தஞ்சைக்கு அருகிலுள்ள ’வெண்ணிப் பறந்தலை’ எனும் இடத்திற்கு வந்துவிட்டோம். அதோ அங்கே பாருங்கள்! அங்கே போர்க்களம் ஒன்று காட்சியளிக்கிறது; கடும்போர் ஒன்று இப்போது அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக் காண்கிறோம். வாள்களோடு வாள்களும் வேல்களோடு வேல்களும் மோதி உண்டாக்கும் ஒலியும், வெயிலில் மின்னும் அவற்றின் ஒளியும், இடியும் மின்னலும் தரைக்கு இறங்கி வந்துவிட்டதாகவே தோற்றம் காட்டுகின்றன!

    போரில் ஈடுபட்ட வீரர்களின் எண்ணிக்கையோ அளவிடற்கரியது. வெற்றிகண்ட வீரர்களின் வீரமுழக்கமும், புண்பட்டுத் தரையில் சாயும் வீரர்களின் ஓலக்குரலும் ஒருங்கிணைந்து கடலின் இரைச்சலைப்போல் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இவ்வளவு உக்கிரமாக அங்கே போர் புரிந்து கொண்டிருப்பவர்கள் யார்…சற்று நெருங்கிச் சென்று பார்ப்போமா?

    kingsஅதோ! ஒரு பக்கம் புலிக்கொடி பறக்கிறது.கம்பீரமாக  யானையின்மீது அமர்ந்து போர்புரியும் மன்னர் ஒருவரைக் காணமுடிகிறது. உற்சாகமும் இப்பகுதியில்தான் அதிகமாக இருக்கக் காண்கிறோம். அது என்ன முழக்கம்? ”மாமன்னர் கரிகால் வளவர் வாழ்க!”

    அடடா! இவர்தான் கரிகால் வளவரா? இமயத்தில் புலிச்சின்னத்தைப் பொறித்த பெருவீரர் அல்லரோ இவர்? அவ்வீரர்கள் இவர் குறித்துப் பெருமிதம் கொள்வதில் பொருளிருக்கிறது!

    சரி…எதிர்ப்பக்கத்தில் போர்புரிவது யார் என்று அறிந்துவருவோம்!

    இங்கே விற்கொடி பறக்கிறது! கம்பீரமும் அரசகளையும் பொருந்திய ஒரு வீரபுருஷர், கரிய குன்றுபோலிருக்கும் யானைமீது அமர்ந்து கடும்போர் புரிந்துகொண்டிருக்கின்றார். இவர் சேரர்குலத் தோன்றல் என்று பார்த்தவுடன் தெரிகிறது.

    ”இவர் பெயரென்ன?”

    armies”அஞ்சாநெஞ்சர் பெருஞ்சேரலாதர் வாழ்க!” என்ற முழக்கமிடுகிறார்களே இவ்வீரர்கள்! ”ஓ! இவர்தான் பெருஞ்சேரலாதரா?” வீரத்தில் இவர் கரிகாலருக்குச் சற்றும் குறைந்தவரல்லவே! இவர்கள் இருவரும் புரியும் கடும்போரின் முடிவு யாதாயிருக்கும் எனும் பரபரப்பு இப்போதே நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

    போர்க்களத்திலிருந்து சிறிது விலகி, அதோ…அந்தப் பனைமரத்தடியில் நின்று இந்தப் போரை நாமும் கவனிப்போம்!

    கடுமையான போர் தொடர்ந்து நீடிக்கின்றது. இதோ…போரின் உச்சக்கட்டம் நெருங்கிவிட்டதாகக் காண்கிறது. ஆம்…கரிகாலரும் பெருஞ்சேரலாதரும் நேருக்கு நேராகவே தத்தம் யானைகளிலிருந்து ஒருவரையொருவர் எதிர்த்துப் போர்புரியத் தொடங்கிவிட்டார்கள். ”என்ன நடக்கப்போகிறதோ?” என்ற பதற்றத்தில் நம் இதயத்துடிப்பு எகிறுகின்றது.

    இருவர் வேல்களும் ஒன்றோடொன்று மோதி ’டணார் டணார்’ என்று ஒலியெழுப்புகின்றன. ”அற்புதம்! அருமையான வேற்போர்; ஆ! என்ன இது? கரிகாலர் சேரலாதரின் வேலைத் தன் வேலால் தட்டிவிட்டாரே! சேர மன்னரின் மார்புக்குக் குறிவைத்துத் தன்னை வேலைச் செலுத்துகிறாரே! ஐயோ…சேரமானின் மார்பில் வேல் பாய்ந்துவிட்டதே! அவர் தன் யானையிலிருந்து கீழே சாய்கிறாரே!”

    ”நல்லவேளை!” கீழே நின்று போர் புரிந்துகொண்டிருந்த அவருடைய காலாள் வீரர்கள் அவரைத் தாங்கிப் பிடித்துவிட்டனர்.

    சோழர் பக்கத்திலோ வெற்றிமுழக்கம் விண்ணை எட்டுகிறது. ”கரிகாலர் வாழ்க! பகைவருக்குக் காலர் வாழ்க!” என்ற முழக்கத்தோடு சோழவீரர்கள் சேரவீரர்களை ஓட ஓட விரட்டுகின்றனர். சேரர்படைச் சிதறி ஓடுகின்றது. கரிகாலர் வெற்றிக்களிப்போடு தன் பாசறைக்குத் திரும்புகிறார்.

    ஆனால் போர்க்களத்திலோ…மார்பில் வேல்பாய்ந்து புண்பட்டுச் சாய்ந்திருக்கும் சேரர்பெருமானின் அருகில் பத்துப் பதினைந்து வீரர்கள் வேதனையோடு நின்றிருக்கின்றனர். சேரர் தன்மார்பில் பாய்ந்திருக்கும் வேலைப் பார்க்கிறார்; அது குறித்து அவர் கவலை கொண்டாரில்லை. ஆனால்…அதன் மறுமுனை அவர் முதுகில் ஊடுருவியிருப்பதை உணர்கின்றார். அதனால் பெருவேதனையும் அவமானமும் கொள்கின்றார். அவர் கண்கள் கலங்குகின்றன.

    “என் வீரத்திற்கு இப்படி ஓர் களங்கமா? போரில் புறமுதுகிட்டதுபோல் அல்லவா புறப்புண் (முதுகில் ஏற்படும் புண்) ஏற்பட்டுவிட்டது! இனியும் நான் உயிர்வாழ வேண்டுமா? என் குலத்திற்கே மாறாப் பழியை ஏற்படுத்திவிட்டேனே!” என்று துடிக்கிறார். அவருடைய கம்பீரமான முகத்தில் கடுமையான வேதனையின் சாயை படர்கின்றது.

    ஒரு முடிவுக்கு வந்தவராய்த் தன் பக்கத்தில் கவலையோடு நின்றிருக்கும் வீரர்களைப் பார்க்கிறார். அவர்களில் ஒருவன், ”அரசே! ஊருக்குள் சென்று மருத்துவர் யாரையேனும் உடனே அழைத்துக்கொண்டு வருகிறேன்” எனக் கிளம்புகிறான். அவன் கையைப் பிடித்து நிறுத்திய சேரமான், அவனைக் கருணையோடு பார்த்து, ”வீரனே! என்மீது உனக்கிருக்கும் அன்பினைக் கண்டு மகிழ்கிறேன். எனக்கு மருத்துவர் வேண்டாம்; அதற்குப் பதிலாக நீ வேறோர் உதவி செய்யவேண்டும்” என்கிறார்.

    அவ்வீரன் அவர் முகத்தையே ஆவலோடு பார்க்க அவரோ, ”அன்பனே! ஊருக்குள் சென்று தருப்பைப்புல் கொஞ்சம் கொண்டுவந்து இப்போர்க்களத்திலே பரப்பி நான் அமர்வதற்கான ஆசனமாய் அதை ஆக்கு! போரில் புறப்புண் பெற்ற நான் இனியும் உயிர்வாழ விரும்பவில்லை; வடக்கிருந்து உயிர்த்துறந்து வீரசொர்க்கம் புக விரும்புகிறேன்!” என்கிறார்.

    தன் கண்களில் வழிந்த நீரைத்துடைத்துக் கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்த அவ்வீரன், தம் அரசரின் கொள்கையை மாற்றுவது கடினம் என்று மனத்துள் நினைந்தவனாய்க் கூறவந்ததைக் கூறாமலே தளர்ந்த நடையோடு அங்கிருந்து அகன்றான்.

    அடுத்து நடந்தவை தமிழரின் தன்மானத்திற்கும் வீரத்திற்கும் என்றென்றும் சான்று பகர்பவையாக அமைந்துவிட்ட நிகழ்வுகள். ஆம்…தன் புறப்புண்ணுக்கு நாணிப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர்த் துறந்தான் பெருஞ்சேரலாதன். அவனோடு அவன் வீரர்கள் சிலரும் அவ்வாறே உயிர்த்துறந்து வீரசொர்க்கம் ஏகினர்.

    சேரன் இவ்வாறு உயிர்த்துறந்ததை அறிந்தார் அதே ஊரைச் சேர்ந்த பெண்பாற் புலவரான ‘வெண்ணிக் குயத்தியார்.’ தம்மரசனான கரிகாலன் மீதும் பெருமதிப்புக் கொண்டவர் அவர். ஆயினும் சேரன் தன்முதுகில் புண்பட்டதற்காக மனம்வருந்தி உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்தது அவரைப் பெரிதும் நெகிழ்த்திவிட்டது. அச்செயல் அவனைச் சுத்தவீரன் என்று மெய்ப்பித்துவிட்டதையும், கரிகாலனினும் அவனை உயர்ந்தவனாகவும், நல்லவனாகவும் ஆக்கிவிட்டதையும் உணர்ந்தார் குயத்தியார்.

    நேரே தம்மரசனான கரிகாற் சோழனைக் காணப் புறப்பட்டார். அங்கே நாளோலக்கத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான் கரிகாலன். புலவரைக் கண்டதும் இன்முகத்தோடு வரவேற்று ஆசனத்தில் அமர்த்திவிட்டு, ”பெருமாட்டி! வெண்ணிப் போரைப் பற்றி அறிந்திருப்பீர்களே?” தன்மீசையை முறுக்கியபடிக் குயத்தியாரைப் பார்த்து கம்பீரமாக அவன் வினவ, குயத்தியாரும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு,

    ”நீர் செறிந்த பெரிய கடலின்கண்ணே மரக்கலத்தையோட்டி போர்செய்தற்குக் காற்றின்துணை அவசியம் என்றறிந்து வளிச் செல்வனை (காற்றை) அழைத்து ஏவல் கொண்ட வலியோன் மரபிலுள்ளோனே!

    (கடலில் இயங்கும் காற்றைக் கலஞ் செலுத்துதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை முதன்முதலிற் கண்டவர் பண்டைத் தமிழரே ஆவர் என்பது குயத்தியாரின் இப்பாடலால் உறுதிப்படுகின்றது; எனவே, சிலர் நினைப்பதுபோல் காற்றின் திசையறிந்து மரக்கலத்தை முதலில் செலுத்தியவர்கள் உரோமானியர் அல்லர்… தமிழரே என்பதை அறிக.)

    மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவனே! போர்மேற்சென்று போரில் நின்ஆற்றல் நன்கு வெளிப்படுமாறு வென்றவனே! புது வருவாயையுடைய வெண்ணியென்னும் ஊர்ப்புறத்தேயுள்ள போர்க்களத்தில், உலகத்துப் புகழுக்குப் பெரிதும் பாத்திரமாகும் வண்ணம் தன் புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்த சேரர்பெருந்தகை நின்னைவிட நல்லவன் அன்றோ?” என்று புலவர் கரிகாலனைப் பார்த்துக் கேட்க, அம்மையாரைச் சிறிதுநேரம் உற்றுப்பார்த்தவண்ணம் யோசனையோடு அமர்ந்திருந்த கரிகாலன், பின்பு அவரை நிமிர்ந்து பார்த்து ‘ஆம்!’ என்று தலையசைத்தான்.

    போரில் வென்று கரிகாலன் பெற்ற புகழ் வெற்றிப் புகழ்; போரில்பெற்ற புறப்புண்ணுக்கு நாணி உயிர்த் துறந்ததன் வாயிலாய்ச் சேரன் பெற்றதோ வளவனினும் விஞ்சிய பெரும்புகழ் என்பதே வெண்ணிக் குயத்தியாரின் எண்ணம்; அதுவே அவர் பாடலின் பொருள்.

    நளியிரு முந்நீர் நாவா யோட்டி
    வளிதொழி லாண்ட வுரவோன் மருக
    களியியல் யானைக் கரிகால் வளவ
    சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
    வென்றோய்
    நின்னினு நல்லன் அன்றே
    கலிகொள்
    யாணர் வெண்ணிப் பறந்தலை
    மிகப்புக ழுலக மெய்திப்
    புறப்புண் நாணி வடக்கிருந் தோனே. (வெண்ணிக் குயத்தியார்:புறம்-66)

    தம்மரசன் முன்பு பிறிதோர் அரசனை, அதுவும் தம்மரசனிடம் போரில் தோல்விகண்ட அரசனைப் போற்றுதற்கு ஒரு புலவருக்கு எத்துணைத் துணிச்சல் வேண்டும்! அஃது அந்நாளைய புலவோர்க்கு இருந்திருக்கின்றது என்பதற்கு இப்பாடல் சான்றாகிறது. வாழ்க புலவரின் அஞ்சாமை!

     

    Share
  • என்ன நீயதி ?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    மருமகள் நீதா  னென்றார்
    மனைக்கு நீ விளக்கு என்றார்
    திருமகள் நீயே யென்றார்
    தேடிய செல்வம் என்றார்
    அருவருக் கின்றார் இன்று
    அனுதினம் என்னை வை தார்!

    மாமியார் இட்ட வேலை
    மறுத்ததே இல்லை யானும்
    பூமியில் அவரை அன்னை
    போலவே கருதி வந்தேன் !
    நாவினால் அவரோ நாளும்
    நங்கையைத் திட்டு கின்றார்!

    வீட்டிலே அன்னை தந்தை
    விரும்பிய அண்ணன் தம்பி
    பாட்டியோ(டு )அக்கா தங்கை
    பாசத்தை விடவும் மாமி
    வீட்டிலே அன்பு காட்டி
    விட்டதால் மனம் தவித்தேன்!

    மண்ணிலே வாழு கின்ற
    மாமிமார் எல்லாம் வீணாய்
    எண்ணியே மறு மகளை
    ஏய்ப்பதுவும் முறை யாமோ ?
    பெண்களே பெண்ணை வாட்டும்
    பேரிடி என்ன நீயதி ?

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(57)

    -செண்பக ஜெகதீசன்

    வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
    யானையால் யானையாத் தற்று. (திருக்குறள்:678-வினைசெயல்வகை)

    புதுக் கவிதையில்…

    யானையை வைத்து
    யானை பிடித்திடல்போல்,
    செயலொன்றை வைத்து
    செயல் முடித்திடல்,
    ஜெயம்தரும் வாழ்விலே…!

    குறும்பாவில்…

    யானைபிடிக்க யானை வேண்டும்,
    செயல்முடிக்க
    செயல் வேண்டும் துணையாய்…!

    மரபுக் கவிதையில்…

    கட்டுப் பாடுகள் ஏதுமின்றி
      காட்டில் திரியும் யானைதனைத்
    தொட்டுப் பிடிக்க இயலாதே
      துணையாய் யானை ஒன்றின்றி,
    வெட்டிய குழியில் வீழ்த்திடினும்
      வேண்டும் மீட்டிட யானையொன்று,
    சட்டெனச் செயலை முடித்திடவொரு
      செயலை வைத்தே ஜெயிக்கலாமே…!

    லிமரைக்கூ…

    யானையைக் கூடவைத்து யானையைப் பிடி,
    செயலது ஒன்றை வைத்து
    செயல்முடித்தல் வெற்றிபெற முதலாம் படி…!

    கிராமிய பாணியில்…

    யானவேணும் யானவேணும்
    யானபுடிக்க யானவேணும்,
    காட்டுயானய அடக்கிப்புடிக்கக்
    கூடவொரு யானவேணும்..

    வாழ்க்கக்கதயும் இதுபோலத்தான்,
    ஒருசெயல வச்சித்தான்
    வேறசெயல் முடிக்கவேணும்-
    யானயவச்சி யானபுடிக்காப்புல…!

     

    Share
  • கவிதையும் கற்பனையும்!

    -அதிரை கவியன்பன் கலாம், அபுதபி

    கற்பனை என்னும் கவின்விதை போட்டு
    அற்புதம் நிகழ்த்தும் அருமலர்ப் பூத்துச்
    சொற்பதம் யாவும் சுந்தரக் கனியாம்
    கற்பதே ஈண்டுக் கவிதையாய்க் கனியும்!

    காதலி  காட்டும் கயல்விழி போதை
    ஆதவன் கதிரின் ஆளுமைப் பாதை
    மாதுளம் பழமாய் மனம்விழும் சொற்கள்
    பாதையைக் காட்டும்  பயணமைற் கற்கள்!

    வானகம் இடிக்க வண்ணமயில் ஆட்டம்
    கானகக்   குயிலின் காற்றிசைப் பாட்டும்
    தேனெனக் கவிதைத் தீஞ்சுவை தூண்டும்
    கானமாய்ச் சிறக்கக் கற்பனை வேண்டும்!

     

    Share
  • உனக்கென்ன குறைச்சல்.. கவிஞர் வாலி வி.குமார் எம்.எஸ்.விஸ்வநாதன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    kav1

    உனக்கென்ன குறைச்சல்..
    கடந்த காலமோ திரும்புவதில்லை..
    நிகழ்காலமோ விரும்புவதில்லை..
    எதிர்காலமோ அரும்புவதில்லை..
    இதுதானே அறுபதின் நிலை..

    வெள்ளிவிழா திரைப்படத்தில் வாலி + விஸ்வநாதன் கூட்டணியில் விளைந்த விளைச்சல்! ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என இளமைக்குப் பரிந்து வரிகள் தந்த கவிஞர், முதுமைக்கும் கவிஞர் வாலி தந்திருக்கும் முத்தான வரிகள் – இப்பாடலிலா பிறப்பில் தொடங்கி இறப்பில் அடங்கும் இவ் வாழ்க்கையில் இடையே நடக்கும் பருவ மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்தே வரும்!

    ‘காவோலை விழ குருத்தோலை சிரிக்கும்’ என்னும் பழமொழி இன்றைய இளைஞர்தாம் நாளைய முதியவர்களாக உருமாறப் போகிறார்கள் என்பதை உள்ளடக்கியதன்றோ? உறவுகளுக்குள் உள்ள பாசப் பிணைப்புகள் முழுமையாக இருக்கும் பட்சத்தில் முதியவர்கள், புறக்கணிக்கப்பட மாட்டார்கள். 60 வயதுக்கு மேல் அவர்களும் குழந்தைகளாகவே மாறிவிடுகின்றனர். அவர்களை அனுசரித்து ஆதரித்து வாழ வே்டிய இளையவர்கள், அதற்கான பக்குவம் பெறாமல் பரபரப்பு வாழ்க்கையையே பெரிதாகக் கருதி, ஓடிக்கொண்டிருக்கும் அவலங்கள் நம்மைச்சுற்றி நாளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன!

    சகோதரத்துவம், பெரியோரைப் பேணுதல் இவை எல்லாம் வாழ்க்கையில் முக்கியமானவை என்பதை மறந்து மனம்போன போக்கிலே நாகரீக உலகம் நடைபோட்டுவருகிறது என்றாலும் வயதில் மூப்படையும்போது உணரத்தான் செய்கிறார்கள்.

    kav

    ‘தலைமுறை இடைவெளி’ என்று தலையங்கம் எழுதிட ஏராளம் இருந்தாலும் உறவுக்குள் ஏற்படும் பரிதவிப்பினை பாசத்தை – கவிஞர் தன் தத்துவ சிந்தனையால் புடம்போட்ட தங்கம்போன்ற வார்த்தைகளை வழங்கி உருவாக்கியிருக்கிறார். இப்பாடலை தன் தனித்துவக்குரலால் வழங்கி மெருகேற்றியிருக்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் வி.குமார்! இப்பாடலை இதயத்தின்மீது தவழவிடுங்கள்! சுமையான வாழ்க்கை கூட சுகமாக மாறக்கூடும்!

    உனக்கென்ன குறைச்சல்.. நீயொரு ராஜா
    வந்தால் வரட்டும் முதுமை!

    https://www.youtube.com/watch?v=DcgjJZgrUdk

    உனக்கென்ன குறைச்சல் – நீயொரு ராஜா..
    வந்தால் வரட்டும் முதுமை!
    தனக்குத்தானே துணையென நினைத்தால்
    உலகத்தில் ஏது தனிமை?

    கடந்த காலமோ திரும்புவதில்லை..
    நிகழ்காலமோ விரும்புவதில்லை..
    எதிர்காலமோ அரும்புவதில்லை..
    இதுதானே அறுபதின் நிலை..

    எதையோ தேடும் இதயம்
    அதற்கு இன்பம்தானே பாலம்
    அந்த நினைவே இன்று போதும் – உன்
    தனிமை யாவும் தீரும்

    Share
  • கனவு காணுங்கள் …

    தேமொழி.

    poem-dreams

     

     

    கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
    கனவுகள் இறந்து விட்டால்
    வாழ்க்கை பறக்கவியலா
    சிறகொடிந்த பறவையாகிவிடும்

    கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
    கனவுகளை இழந்து விட்டால்
    வாழ்க்கை பனியுறைந்த
    பாலை நிலமாகிவிடும்

     

     

    கனவுகள் என்ற லாங்க்ஸ்டன் ஹியூஸ் (Dreams – by Langston Hughes)  கவிதையை மொழியாக்கம் செய்தது தேமொழி

    Share
  • சுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு

     
     

    ajay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&v=mjTFaSRd7QU&x-yt-cl=85114404&feature=player_embedded

    https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&x-yt-cl=85114404&v=DSyVXmdWsdo&feature=player_embedded

    https://www.youtube.com/watch?x-yt-ts=1422579428&feature=player_detailpage&v=LDVRLWhlqhk&x-yt-cl=85114404

    http://video.foxnews.com/v/4017531813001/scientists-discover-ring-system-200-times-bigger-than-saturn/#sp=show-clips

    https://www.youtube.com/watch?x-yt-cl=85114404&feature=player_embedded&v=7DhiKZKo1VE&x-yt-ts=1422579428

    https://www.youtube.com/watch?feature=player_embedded&x-yt-cl=85114404&v=VnrsJDhm3no&x-yt-ts=1422579428

    http://www.foxnews.com/science/2015/01/28/giant-planet-boasts-rings-200-times-bigger-than-saturn/

    ++++++++++++

    ajay

    அணுவின்  அமைப்பைக் கண்டோம்
    அணுவுக்குள் கருவான
    நுணுக்கக் குவார்க்குகள்
    அறிந்தோம் ! ஆனால்
    கோடி மைல் விரிந்த சனிக்கோளின்
    சுற்றும் வளையத்தை,
    வானத்தில் ஒளிந்த பூத வளையத்தை
    காணாமல் போனோம் !
    அண்டவெளிக் கப்பல்களும்
    விண்நோக்கி விழிகளும்
    கண்மூடிப் போயின !
    சனிக்கோளுக்குச் சாத்தி விட்ட
    பனித்த வெளி
    மங்கொளி மாலை
    அல்லது
    ஒளித்தலை வட்டம் கண்டார்.
    பரிதி சனிக்கோள் வளையம் போல்
    பெரிய வளையம்
    வெளிப்புறக் கோளில் கண்டார் இன்று !
    சுழலும் இப்பெரு
    ஒப்பனை வளையங்கள்
    துணைக் கோள்கள் பல உண்டாக்கும்
    அணிக் கணக்கில் !

    +++++++++++++++++

     

    Super Saturn

    கோளின் வளையங்கள் நேரடியாகத் தெரிய இயலாது,  அண்டவெளிப் பரிதி வெகு தொலைவில் இருந்தது.  வளையங்களின் இடைவெளிகளில் விரைவாக, வேறாக, மாறி மாறி  எழும் வெளிச்சத்தின் மூலம், நாங்கள் ஒரு விளக்கமான மாடல் தயாரிக்க முடிந்தது.  நமது சனிக்கோளின் மீது இந்த வளைய மாடலை, எங்களால் வைக்க முடிந்தால், அது இருளிலும் எளிதாய்த் தெரியும்.  நமது நிலா ஒளியைவிடப் பிரகாசமாய் இருக்கும்.

    மாத்யூ கென்வொர்த்தி [வானியல் விஞ்ஞானி, நெதர்லாந்து லெய்டன் வானோக்ககம்]

    நாங்கள் முதன்முதல் கண்ட வளையக் கோளானது சனிக்கோள், பூதக்கோள் வியாழன் இரண்டை விடவும் பெரியது. அதன் வளைய அமைப்புகள் சனிக்கோள் வளையங்களை விட200 மடங்கு பெரியவை.  அதைப் பூதச் சனிக்கோள் என்று குறிப்பிடலாம்.  வளையங்கள் 30 மேற்பட்டவை.

     எரிக் மாமஜெக் [துணை ஆய்வாளர், பௌதிகப் பேராசிரியர், ராச்செஸ்டர் பல்கலைக் கழகம்]

     

    Exoplanet Ring and satellites

     

    புதிய மாடல் தந்த தகவல் இலக்கங்களில் [Data] விஞ்ஞானிகள் கண்டது வளைய அமைப்புகளில் பளிச்செனத் தெரிந்த ஒரு இடைவெளி.   இதற்கோர் தெரிந்த விளக்கம்,  ஒரு துணைக்கோள் பிறந்து இப்படி இடைவெளி உண்டானது என்பதே.  புதிய பூத சனிக்கோள் வியாழனைப் போல் சுமார் 10 முதல் 40 மடங்கு நிறையென்றும்,   பிறந்த துணைக்கோளின் நிறை பூமிக்கும், செவ்வாய்க் கோளுக்கும் இடைப்பட்ட தாகக் கணக்கிடலாம்.  துணைக்கோளின் சுற்றுக் காலம் [Orbital Period] சுமார் 2 ஆண்டுகள் என்று கூறலாம்.

    மாத்யூ கென்வொர்த்தி 

    சனிக்கோள்போல் வளையங்கள் பூண்ட அகிலவெளிப் பரிதி மண்டலம் கண்டுபிடிப்பு

    2015 ஜனவரி 26 இல் நெதர்லாந்தின் லெய்டான்  வானோக்க விஞ்ஞானிகளும், அமெரிக்காவின் ராச்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகளும் அண்டவெளியில் கோள் வளையங்கள் கொண்ட ஒரு கோள் சுற்றும் பரிதி [Sun-like Star : J1407] மண்டலத்தை முதன்முதல் கண்டுபிடித்துள்ளார்.   அந்தப் பரிதி மண்டலம் 2012 இல் கண்டு பிடிக்கப் பட்டாலும், அதில் சுற்றும் வளையங்கள் கொண்ட சனிக்கோள் போலொரு கோளின் தோற்றம் முதன் முதல் 2015 ஜனவரியில்தான் விளக்கமாக அறியப்பட்டது.  வளையக் கோள் பரிதி அமைப்பை 2012 இல் கண்டு பிடித்தவர் அமெரிக்காவின் ராச்செஸ்டர் பல்கலைக் கழகத்துப் பௌதிகப் பேராசிரியர் எரிக் மாமஜெக்.

     

    Exoplanet Ring -1

     

    2015 ஜனவரியில் அதைத் தொடர்ந்து நோக்கி மேலும் நுணுக்கமான விளக்கங்கள் திரட்டியவர் நெதர்லாந்தைச் சேர்ந்த லெய்டன் வானோக்க விஞ்ஞானி: மாத்யூ கென்வொர்த்தி என்பவர்.   அவர் அறிவித்தது :  கோளின் வளையங்கள்  30 மேற்பட்டவை.  ஓவ்வொன்றும் சுமார் 120 மில்லியன் கி.மீ. விட்டமுள்ளவை.   அந்த வளையங்கள் ஊடே காணப்படும் இடைவெளிகள் துணைக்கோள் தோன்றி இருக்கக் கூடும் என்பதைக் காட்டுகின்றன.  கோள் பூதச் சனிக்கோள் என்று அழைக்கப் படுவதாகவும், அதன் வளையங்கள் நமது சனிக்கோள் வளையங்களை விட 200 மடங்கு பெரியவை என்றும் எரிக் மாமஜெக் அறிவிக்கிறார்.   இதன் மூலம் ஒரு கோளுக்கு எவ்விதம் துணைக்கோள் ஒன்று உருவாகிறது என்றும் தெரிகிறது.

    2012 இல் மாமஜெக் புதிய பரிதி அமைப்பைக் கண்டபோது, நிகழ்ந்த பரிதிக் கோள் மறைப்புகள்  [New Sun’s Eclipses]  மூலமே சனிக்கோள் வளையங்களையும், இடைவெளிகளையும், துணைக்கோள் பிறப்பு பற்றியும் விளக்கமாக அறிந்தார்.   வானியல் விஞ்ஞானிகள் இந்த வளையங்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் துணைக்கோள்கள் உண்டாக்கி மெலிந்து போகும் என்று எதிர்பார்க்கிறார்.   தற்போது தோன்றிய துணைக் கோளின் நிறை பூமிக்கும், செவ்வாய்க் கோளுக்கு இடைப்பட்ட தென்றும்,  அதன் சுற்றுக் காலம் [Orbital Period] 2 வருடம், வளையக் கோளின் சுற்றுக் காலம் 10 வருடம் என்றும் கணக்கிடுகிறார்.   வளையக் கோளின் நிறையைக் கணிப்பது கடினமாயினும், அது பூதக்கோள் வியாழனைப் போல் 10 முதல் 40 மடங்காக  நிறை கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்.

     

    Fig 1 Saturn' Biggest New Ring

    “ஸ்பிட்ஸர் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி (Infrared Instrument of the Spitzer Space Telescope) மூலம் சனிக்கோளுக்கு வெகு தொலைவில் சுற்றிவரும் அதன் சந்திரன் ஃபோய்பியின் (Phoebe) விந்தையான வெளிச்ச எதிரொளிப்பதைக் கண்டு எங்கள் ஆய்வு தொடர்ந்தது.  நானும் வானியல் பேராசிரியர் மைக்கேல் ஸ்குருட்ஸ்கியும் (Mike Skrutskie) தூசியும் துகளும் கலந்த ஏதோ ஓர் ஒளியூட்டி அந்தச் சந்திரன் மேல் படுகிறதென்று முடிவு கட்டினோம்.  அந்த விந்தை ஒளியூட்டியே பூத வளையத்தின் இருப்பை நிரூபித்துக் காட்டியது.”

    ஆன்னி வெர்பிஸெர் (Anne Verbiscer, Scientist, University of Maryland)

    “அடுத்த பத்தாண்டுத் துவக்கத்தில் நாசா புரியப் போகும் ‘விண்வெளி ஊடுருவு அளப்புத் திட்டம்’ [The Space Interferometry Mission (SIM)] 30 அடிச் சட்டத்தில் பற்பல தொலைநோக்கிகளை அமைத்து ஒளியியல் பௌதிகத்துறையின் உச்ச நுணுக்கத்தில் விண்வெளியைக் கூர்ந்து நோக்கப் போகின்றன.  அந்த விண்ணோக்கி விழிகள் பூமியைச் சுற்றிக் கொண்டு செவ்வாய்க் கோளில் விண்வெளி விமானி ஒருவன் சைகை காட்டும் கைவிளக்கு ஒளியைக் கூடக் கண்டுவிடும்.  அந்த உளவிகள் பூமியிலிருந்து 50 ஒளியாண்டு தூரத்தில் அடங்கிய 1000 விண்மீன்களை ஆராயக் கூடும் !  அடுத்து நாசா ஏவப் போகும் ‘அண்டவெளிக் கோள் நோக்கி’ (Terrestrial Planet Finder) பூமியைப் போலுள்ள மற்ற கோள்களைக் கண்டுபிடிக்கும் தகுதி உள்ளது”

    மிசியோ காக்கு, பௌதிகப் பேராசிரியர், நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகம் (Michio Kaku)

    Fig 1A NASA Spitzer Telescope

    இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவிக் கப்பலே உன்னத வேட்கைத் தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது.  மனித இனம் அண்டவெளியைத் தேடித் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது.டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

    பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம்’ [Time Machine] போன்றது, டிடான் எனப்படும் சனிக்கோளின் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனி நிலவு, பூர்வீகப் பூமி உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் !

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    Fig 1B Cassini-Huygens Spaceship


    சனிக்கோளின் ஒளிந்திருந்த பூத உரு வளையம் !

    2009 அக்டோபர் 6 ஆம் தேதி அமெரிக்க மேரிலாண்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் நாசா ஸ்பிட்ஸர் விண்ணோக்கி மூலம் (NASA Spitzer Space Telescope) பரிதி மண்டலத்திலே மிகப் பெரிய மங்கலான ஒளிவளையம் ஒன்று சனிக்கோளைச் சுற்றி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.  இந்த மகத்தான ஒளிவளையம் இதுவரைச் சாதாரண தொலைநோக்கியின் விழிகளுக்குத் தென்படவில்லை என்பது ஓர் ஆச்சரியம் !  அடுத்து 21 ஆம் நூற்றாண்டில் நாசாவின் உட்சிவப்புக் கருவியுடைய ஸ்பிட்ஸர் தொலைநோக்கி (Infrared View Spitzer Space Telescope) அதைக் கண்டுபிடித்துப் படமெடுத்தது ஒரு விந்தை !  அந்தக் கண்டுபிடிப்பு சனிக்கோள் சந்திரன்கள் இரண்டின் 300 ஆண்டு வானியல் புதிரை விடுவித்தது அடுத்து எழும் ஒரு பெருவியப்பு !

    “ஸ்பிட்ஸர் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி (Infrared Instrument of the Spitzer Space Telescope) மூலம் சனிக்கோளுக்கு வெகு தொலைவில் சுற்றிவரும் அதன் சந்திரன் ஃபோய்பியின் (Phoebe) விந்தையான வெளிச்ச எதிரொளிப்பதைக் கண்டு எங்கள் ஆய்வு தொடர்ந்தது.  நானும் வானியல் பேராசிரியர் மைக்கேல் ஸ்குருட்ஸ்கியும் (Mike Skrutskie) தூசியும் துகளும் கலந்த ஏதோ ஓர் ஒளியூட்டி அந்தச் சந்திரன் மேல் படுகிறதென்று முடிவு கட்டினோம்.

    Fig 1A Cassini-Huygens Path

    அந்த விந்தை ஒளியூட்டியே பூத வளையத்தின் இருப்பை நிரூபித்துக் காட்டியது.” என்று மேரிலாண்டு பல்கலைக் கழக விஞ்ஞானி ஆன்னி வெர்பிஸெர் கூறினார்.  2003 இல் சூரியனைச் சுற்றி வர ஏவப்பட்ட ஸ்பிட்ஸ்ர் விண்ணோக்கி இப்போது பூமியிலிருந்து 107 மில்லியன் கி.மீடர் (66 மில்லியன் மைல்) தூரத்தில் பரிதியைச் சுற்றி உளவி வருகிறது.

    மேலும் ஆன்னி வெர்பிஸெர் கூறியது : “சனிக்கோளைச் சுற்றிவரும் மற்றோர் சந்திரனின் புதிரையும் நாங்கள் தீர்க்க முடிந்தது !  ஐயாபீடஸ் (Iapetus) என்று அழைக்கப்படும் சனிக்கோளின் நெருக்கச் சந்திரன் ஒரு நூதனத் தோற்ற முகப்பு கொண்டிருந்தது.  வானியல் விஞ்ஞானிகள் அதை ‘இன் யாங் சந்திரன்’ (Yin Yang Moon) என்று விளித்தனர் !  காரணம் அதற்கு ஒளிமுகம் ஒருபுறமும், கருமுகம் மறுபுறமும் காணப் பட்டது !”  முன்னூறு ஆண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் இதற்குக் காரணங்களைக் காண முடியவில்லை !  ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஃபோய்பி சந்திரனுக்கும், ஐயாபீடஸ் சந்திரனுக்கும் ஒரு தொடர்பு உள்ளதாக ஒரு கொள்கை உருவானது.  இப்போது கண்டுபிடித்த சனிக்கோளின் பூத வளையமே அவ்விரண்டு சந்திரன்களுக்கும் உள்ள முக்கிய இணைப்பைக் காட்டியது !

    Fig 1D Saturn's Rings Discovery

    சனிக்கோள் பூத வளையத்தின் அளவுகள் & உட்துகள்கள்

    “ஃபோய்பி சந்திரனில் ஏற்பட்ட விண்கற்களின் தாக்குதல்களில் சிதறுய தூசி, துகள்களே பூத வளையத்தின் உட்துகள்களாகப் படிந்தன,” என்று மைக்கேல் ஸ்குரூட்ஸ்கி கூறினார்.  பூத வளையத்தின் தூசி துகள் அல்லது ஃபோய்பி சந்திரனின் தூசி துகள் ஐயாபீடஸில் பட்டு ஒருமுகத்துச் தூசியாய் ஒட்டி இருக்கலாம் என்று கருதுகிறார்.  பூத வளையக் கண்டுபிடிப்பு இப்போது அதற்கு உட்துகள் அளித்த ஊட்டுச் சேமிப்பையும் நிரூபித்தது !  பரிதி மண்டல வரலாற்றில் பல செ.மீடர் அல்லது மீடர் அளவு தூசிகள் ஃபோய்பி சந்திரனில் படிந்திருக்கலாம் என்றும் மைக்கேல் கூறினார்.

    “பூத வளையத்தின் அளவு மிகப் பெரியது” என்று ஆன்னி வெர்பிஸர் கூறினார்.  “நீங்கள் பார்க்க முடிந்தால் அந்த அசுர வளையம் பூமியின் ஒரு நிலவைச் சனிக்கோளின் ஒவ்வொரு புறமும் வைத்தால் எத்தனை அகற்சியில் தென்படுமோ அத்தனை அகண்ட விட்டம் உடையதாக இருக்கும்.  அந்த விரிப்புக் கோளத்தில் சுமார் ஒரு பில்லியன் பூமிகளை இட்டு நிரப்பலாம்.  பூத வளையத்தின் அகலம் 20 சனிக்கோள்களை ஒன்றின் மீது ஒன்றை அடுக்கிய அளவுக்குத் தடிப்புள்ளது !  புதிய வளையத்தின் விட்டம் சனிக்கோளின் விட்டத்தைப் போல் சுமார் 300 மடங்கு நீளமிருக்கும் !  (Diameter : 22.5 million miles)

    Fig 2 Saturn Rings

    சனிக்கோளின் பழைய வளையங்களுக்கும் புதிய பூத வளையத்திற்கும் முக்கியமான வேறுபாடுகள் இரண்டு.  மேலும் ஃபோயிபி சந்திரன் சுற்றுப் பாதையும் மற்ற சந்திரன்களை விட வேறுபடுகிறது.

    1.  புதிய வளையம் பழைய வளையங்களின் சுற்றுத் தள மட்டத்திலிருந்து 27 டிகிரி கோணத்தில் சரிந்து சனிக்கோளைச் சுற்றுகிறது.

    2. புதிய வளையம் சனிக்கோளின் பழைய வளையங்களுக்கு எதிரான வட்டப் பாதையில் சுற்றுகிறது.

    3. புதிய வளையத்தின் உள்ளே அதே திசைப்போக்கில் அத்துடன் சனியைச்சுற்றும் ஃபோய்பி  சந்திரன் சனிக்கோளின் மற்ற சந்திரன்களுக்கு எதிராகச் சுற்றி வருகிறது.

    4. பூத வளையத்தின் மறை முகில் தோற்றம் (Ghostly Appearance) விந்தையானது.  அது ஒரு முகில் வளையம்.  சாதாரணப் புகையை விட அந்த முகில் வளையம் ஒரு மில்லியன் மடங்கு கீழான ஒளி ஆழம் (Optical Depth) உடையது !

    5.  புதிய முகில் வளையத்துக்குப் புதுப் பெயரிடுவது அகில நாட்டு வானியல் ஐக்கிய அவையின் (International Astronomical Union) பொறுப்பு.  பெயர் பின்னால் வெளியிடப்படும்.

    Fig 2 Saturn's Biggest Ring & Two Moons

    புதிய முகில் வளையத்தின் இருப்பும் பண்பாடுகளும்

    பூத வளையம் வெளிப்புறச் சந்திரன் ·போயிபி சுற்றும் பாதையில் சனிக்கோளிலிருந்து சுமார் 12.5 மில்லியன் கி.மீடர் (7.5 மில்லியன் மைல்) தூரத்தில் உள்ளது !  சனிக்கோளின் பழைய வளையங்களில் அடுத்துப் பெரிய ‘ஈ’ வளையம் (‘E’ Ring) சனிக்கோளிலிருந்து சுமார் அரை மில்லியன் கி.மீடர் (0.3 மில்லியன் மைல்) தொலைவில் இருக்கிறது. சனிக்கோளின் முக்கிய பழைய வளையங்கள் ஏழு (Rings : A to G).  அவற்றில் இருப்பவை :  பனிப் பாறைகள், பனித் தூசி, பனித் துகள்கள்.  அவற்றுள் இடைவெளிகளும் உள்ளன.  ·போயிபி சந்திரன் சனிக்கோளிலிருந்து சுமார் 13 மில்லியன் கி.மீடர் (7.8 மில்லியன் மைல்) தூரத்தில் சுற்றுகிறது.

    பூத வளையத்தின் குளிர்ந்த உஷ்ணம் : 80 டிகிரி கெல்வின் (- 316 டிகிரி F). அந்த தணிந்த உஷ்ணத்தில் புது வளையம் வெப்பக் கதிர்வீச்சால் (Thermal Radiation) ஒளிவீசுகிறது.  பூத வளையத்தின் பளு மிக்க பகுதி சனிக்கோளின் விளிம்பிலிருந்து 6 மில்லியன் கி.மீடரில் (3.7 மில்லியன் மைல்) ஆரம்பித்து 12 மில்லியன் கி.மீடர் (7.4 மில்லியன் மைல்) தூரம் வரை நீள்கிறது என்று ஒரு விஞ்ஞானத் தகவல் கூறுகிறது.

    The Ring System

    சனிக்கோளுக்கு 60 சந்திரன்கள் (2009 ஆண்டு வரை) இருப்பதாக இதுவரை அறியப் பட்டுள்ளது.  ·போயிபி சந்திரன் சிறியது.  அதன் விட்டம் 200 கி.மீடர் (124 மைல்).  ஐயாபீடஸ் சந்திரன் சற்று பெரியது.  அதன் விட்டம் : 1500 கி.மீடர் (932 மைல்).

    2003 இல் சூரியனைச் சுற்றி வர ஏவப்பட்ட ஸ்பிட்ஸ்ர் விண்ணோக்கி இப்போது பூமியிலிருந்து 107 மில்லியன் கி.மீடர் (66 மில்லியன் மைல்) தூரத்தில் பரிதியைச் சுற்றி உளவி வருகிறது.  ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் ஸ்பிட்ஸர் விண்ணோக்கி சனிக்கோளை நோக்கித் தகவல் அனுப்பும்.  அதிலும் 20 நாட்கள்தான் முக்கிய பகுதிகளை உளவி அறிய முடியும் என்று ஆன்னி வெர்பிஸெர் கூறுகிறார்.

    Fig 5 Saturn's Old Rings

    சனிக்கோளின் தனித்துவ மகத்துவ ஒளிவளையங்கள்

    சூரிய மண்டலத்திலே நீர்மயமான பூமியைப் போல் தனித்துவம் பெற்றது ஒளிமய வளையங்கள் அணிந்த எழிலான சனிக்கோள் !  நானூறு ஆண்டுகளுக்கு முன்பு காலிலியோ தன் புதிய தொலைநோக்கியில் சனிக்கோளையும் இறக்கைபோல் தெரிந்த அதன் வளையங்களைக் கண்டது வானியல் விஞ்ஞானம் உலகில் உதயமாக அடிகோலியது !  சனிக்கோளைத் தொலைநோக்கியில் ஆய்வு செய்த முப்பெரும் விஞ்ஞானிகள், இத்தாலியில் பிறந்த காலிலியோ, டச் மேதை கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [1629-1695], பிரென்ச் கணித ஞானி கியோவன்னி காஸ்ஸினி [1625-1712].  முதன்முதலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனிக்கோளை ஆராய்ந்தவர் உலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானிக் கருதப்படும் காலிலியோ. அவர் ஆக்கிய தொலைநோக்கிப் பிற்போக்கானதால் சனியின் வளையங்கள் செம்மையாகத் தெரியவில்லை ! கால வேறுபாட்டால் பிறகு சனி வளையங்களின் சரிவுக் கோணம் மாறுவதையும், காலிலியோ காணாது தவற விட்டார்!

    Fig 6 Saturn's 60 Moons

    1655 இல் ஹியூஜென்ஸ் முதன்முதல் சனியின் துணைக்கோள் டிடானைக் [Titan] கண்டுபிடித்தார். வளையங்களை 1610 இல் சனியின் சந்திரன்கள் என்ற தன் கருத்தை மாற்றி 1612 இல் காலிலியோ சனி ஒரு நீள்கோளம் [Ellipsoidal Planet] என்று தவறாகக் கூறினார்!  1659 இல் ஹியூஜென்ஸ் காலிலியோவின் கருத்தைத் தனது மேம்பட்ட தொலைநோக்கியில் சரிபார்த்த போது, அவை சந்திரன்கள் அல்ல வென்றும், சனி நீள்கோள் அண்டமில்லை என்றும் அறிவித்தார். சனியைச் சுற்றி இருக்கும் ‘திடத் தட்டுதான் ‘ [Solid Plate] அவ்விதக் காட்சியைக் காலிலியோவுக்கு காட்டி யிருக்க வேண்டும் என்று ஹியூஜென்ஸ் எடுத்துக் கூறினார்.

    அதற்கடுத்து இன்னும் கூரிய தொலைநோக்கியை ஆக்கிய பிரென்ச் கணிதஞானி காஸ்ஸினி, அது திடப் பொருள் தட்டில்லை என்றும், சனியைத் தொடாது சுற்றி யிருக்கும் துளைத் தட்டு என்றும் கண்டுபிடித்தார். காஸ்ஸினி மேலும் சனியின் உட்தள, வெளிப்புற வளையங்கள், வளையங்களின் இடைவெளிகள், சனியின் மற்ற நான்கு பனிபடர்ந்த துணைக் கோள்கள் இயாபெடஸ், ரியா, டையோன், டெதிஸ் [Icy Moons: Iapetus, Rhea, Dione, Tethys] ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். வளையங்களின் விளிம்புகள் பூமியை நேராக நோக்கும் போது, சில சமயங்களில் வளையங்கள் தெரியாது சனியின் கோள வடிவம் மட்டுமே தொலைநோக்கியில் தெரிகிறது!

    Fig 1C Gaseous Saturn

    சனிக்கோள் வளையங்கள் எப்படி உருவாயின என்பது புதிரே

    பனித்தோல் மூடிய துணுக்குகள், தூசிகள் நிரம்பிய சனியின் வளையங்கள் பரிதியின் ஒளியை எதிரொளிக்கின்றன !  அவற்றின் மீது விழும் 80% ஒளித்திரட்சியை அவை எதிரனுப்புகின்றன.  ஒப்புநோக்கினால் சனிக்கோள் தான் பெறும் 46% சூரிய ஒளியைத் திருப்பி விடுகிறது.  பூதக்கோள் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஓரிரு வளையங்களைக் கொண்டிருந்தாலும் அவை பூமியிலிருந்து தெரியப் படுவதில்லை !  பரிதியின் வெளிக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் அனைத்தும் பெரும்பான்மையாக வாயுக்கள் கொண்ட வாயுக் கோள்கள்.  அசுர வேகத்திலும், பூதக் கவர்ச்சி ஆற்றலிலும் அகப்பட்ட கோடான கோடி துண்டு, துணுக்குகளை சனிக்கோள் ஒன்றுதான் தனது மத்திம ரேகைத் தளத்தில் (Equator Plane) வட்ட வீதியில் சுற்றும் பல்வேறு வளையங்களாய் ஆக்கிப் பிடித்துக் கொண்டுள்ளது !  செவ்வாய்க் கோளுக்கு அப்பால் கோடான கோடிப் விண்கற்கள், பாறைகள் பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றலில் சுற்றி வந்தாலும் அவற்றைத் தனது சொந்த வளையங்களாக மாற்றி இழுத்துக் கொள்ள முடியவில்லை !  சனிக்கோள் மட்டும் எப்படித் தன்னருகே கோடான கோடிப் பனிக்கற்களை வட்ட வீதிகளில் சுற்றும் தட்டுகளாய்ச் செய்தது என்பது இன்னும் புதிராகவே இருந்து வருகிறது !  பேராசிரியர் மிசியோ காக்கு கூறியது போல் இந்த புதிய நூற்றாண்டில் சனிக்கோளின் அந்த நூதனப் புதிரை யாராவது ஒரு விஞ்ஞானி விடுவிக்கப் போகிறார் என்று நாம் எதிர்பார்க்கலாம் !

    Fig 6 Sunrise over Saturn Planet

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Created Saturn’s Rings ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308155&format=html
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html
    13 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    14 “Physics of the Impossible” Michio Kaku – Article By : Casey Kazan (March 4, 2008)
    15 Skymania.com : Saturn’s Biggest Ring is Out of Hiding By : Paul Southerland (October 7, 2009)
    16 Associated Press : NASA Telescope Discovers Giant Ring Around Saturn (October 6, 2009)
    17 The Cavalier Daily : University Researchers Find Large Saturn Ring By : Katherine Raichlen (October 8, 2009)
    18 NASA Release : NASA Space Telescope Discovers Largest Ring Around Saturn By : Whitney Clavin (October 6, 2009)
    19 Astronomers Discover Solar System’s Largest Planetary Ring Yet Around Saturn (Update) By : John Matson (October 7, 2009)
    20 NASA Report : The King of Rings – Saturn’s Infrared Ring (October 6, 2009)

    21. http://www.iflscience.com/space/planet-has-gigantic-rings-200-times-bigger-saturns  [January 30, 2015]

    22. http://www.bbc.com/news/science-environment-31001936  [January 27, 2015]

    23. http://news.discovery.com/space/alien-life-exoplanets/monster-ring-system-circles-giant-alien-planet-150126.htm  [January 26, 2015]

    24.  www.dailygalaxy.com/my_weblog/2015/01/enormous-ring-system-200-xs-size-of-saturns-found-around-exoplanet.html?  [January 27, 2015]

    25. http://www.rochester.edu/newscenter/gigantic-ring-system-around-j1407b/  [January 26, 2015]

    26.http://article.wn.com/view/2015/01/28/Stupendous_Ring_System_Discovered_Around_Super_Saturn_Exopla/  {January 28, 2015]

    ******************

    S. Jayabarathan (jayabarathana@gmail.com) January 31,  2015.

    Attachments area
    Preview YouTube video Astronomers discover massive ringed planet

    Astronomers discover massive ringed planet

    Preview YouTube video Distant Exoplanet Hosts Giant Ring System

    Distant Exoplanet Hosts Giant Ring System

    Preview YouTube video Distant exoplanet hosts giant ring system: World News

    Distant exoplanet hosts giant ring system: World News

    Preview YouTube video Distant exoplanet hosts giant ring system

    Distant exoplanet hosts giant ring system

    Preview YouTube video Distant Exoplanet Hosts Giant Ring System

    Distant Exoplanet Hosts Giant Ring System
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    blogger-image--1645503086

    ”ஆனை படுப்பது அச்சுதற்கு மட்டுமே,
    தேனை கறவை திருடுது, -பூனை,
    கிசோரத்தை ஒத்து கிஷோரின் பதத்தில்,
    விசாரத்தை விட்டு விழு”….கிரேசி மோகன்….

    பூனை கிசோரம் -பூனைக் குட்டி ந்யாயம்….பகவான் பாத்துப்பார்….

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    பவள சங்கரி

    சுட்டும் விழிச்சுடர்! (1)

    சுட்டும் விழி

    நம் இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண் குழந்தைகளை பெரும் சுமையாக நினைப்பதாலேயே பெண் குழந்தை என்று தெரிந்தால் அதை கருவிலேயே அழிக்கும் சூழலும் காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், அதாவது 1990 – 2010 இடையே சுமார் ஒரு கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஆண் பெண் குழந்தைகள் விகிதம் கவலை தருவதாக உள்ளதென கருக்கலைப்புக்கு எதிரான அமைப்பு CAMPAIGN AGAINST SEX SELECTIVE ABORTION(CASSA) தெரிவிக்கிறது. தமிழ் நாட்டில் மாநில விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் என்பதாக இருக்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதுரை, தர்மபுரி,சேலம்,விழுப்புரம், அரியலூர்,பெரம்பலூர்,கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாக தெரிவிக்கிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 900 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள்தான் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நகர்புறங்களில் 946 ஆகவும், கிராமப் புறங்களில் சுமார் 900 ஆகவும் தான் இருக்கிறது. அதே நேரத்தில் படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவில் ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் இருக்கிறார்கள். ஹரியானா மாநிலத்தில் மிகக் குறைவாக 861 பெண்கள்தான் இருக்கிறார்கள்.

    கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 6 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பாலின விகிதம் சென்னை மாவட்டத்தில் 21 புள்ளிகள் குறைந்து 950 ஆகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 புள்ளிகள் குறைந்து 946 ஆகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 புள்ளிகள் குறைந்து 959 ஆகவும் உள்ளது. இந்த பாலின விகிதம் இயற்கையாக 985 ஆக இருக்க வேண்டும். ஆனால், மிகக் குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    2012ம் ஆண்டு பிறப்பு விகிதம் குறித்து தகவல் ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 18 மாவட்டங்களில் மாநில சராசரி அளவை விட குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக 3 மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 900க்கும் குறைவாகவே உள்ளது. காஞ்சிபுரத்தில் 914, விழுப்புரத்தில் 889, மற்றும் கடலூரில் 896 ஆகவும் உள்ளது.

    கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறும் முறை, கிராமப்புற பெண்களைக் காட்டிலும், நகர்ப்புற பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகவுள்ளது. இதன் விளைவாக, கடந்த, 50 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் அதிகளவில் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைதான். பாலியல் வன்முறைகள், வரதட்சணை பிரச்சனைகள் போன்றவைகளே. பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பரவலாக இருந்தும், போராட்டமான வாழ்க்கைச் சூழலே பெண் குழந்தைகளின் பிறப்பையே பெற்றோர் அஞ்சும் அளவிற்குச் சென்று கொண்டிருப்பது வருங்காலத்திற்கு நல்லதல்ல.
    ஆனால் எழுத்தறிவில் முன்னிலை வகிக்கும் கேரளா, இதில் முன்னுதாரணமாக விளங்குகிறது. இம்மாநிலத்தில், கடந்த, 50 ஆண்டுகளாகவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரியானா, இமாச்சல பிரதேசம், மிசோராம் போன்ற பல்வேறு மாநிலங்களிலும், தனிநபர் வருமானம் அதிகமுள்ள, “இந்தியாவின் உணவுக் களஞ்சியம்’ என வர்ணிக்கப்படும் பஞ்சாப் மாநிலத்திலும், பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் அளவில் மிகப் பெரியதும், அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டதுமான உத்தரப் பிரதேச மாநிலத்தில், பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது வேதனைக்குரிய விசயம். அதேபோன்று, நம் நாட்டின் தலைநகராகவும், உயர்வகுப்பினர் அதிகமாக வசிக்கும் பகுதியாகவும் விளங்கும் தில்லி மாநிலத்திலும், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்கிறது கணக்கெடுப்புகள். மேலும் நாட்டிலேயே ஆண் – பெண் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலமாக அரியானா பட்டியலிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    பெண்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள், குறைந்து வரும் ஆண், பெண் குழந்தைகள் விகிதத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவைகளைக் கருத்தில்கொண்டு, நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அரியானா மாநிலம் பானிபட் நகரில், ‘பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கும், கல்விக்கும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கான்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஒன்று சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 100 மீ. நீளமுள்ள கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இந்திய அஞ்சல் துறை சார்பில், “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனைக் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 24ஆம் தேதி, ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ ( National Girl Child day ) கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு சட்டப் பூர்வமாக பாதுகாப்பும் உள்ளது

    இப்படி ஆக்கப்பூர்வமான பல்வேறு திட்டங்கள் போடப்பட்டிருந்தாலும் நடந்துகொண்டிருக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கையில், இவை யாவும் செயல்படாமல் ஏட்டளவிலேயே இருக்கிறதோ என்ற எண்ணமே தோன்றுகிறது. எங்கோ ஓரிரு நிகழ்வுகளை வைத்துக்கொண்டு ஒரு முடிவிற்கு வரலாமா என்ற ஐயம் எழலாம். ஆனால் ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதோடு, பிரச்சனைகள் மென்மேலும் அதிகரிக்காமல் இருக்கும் விழிப்புணர்வும் வேண்டியது அவசியம். வெளியில் தெரியாமல் எத்தனையோ குழந்தைகள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சனை அதிகமாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வேளைகளில் மட்டுமே அவை வெடித்து வெளியே சிதறுகின்றன. அந்த வகையில் நாட்டில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமாயின் அவர்களுக்கு அதற்குரிய விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் வேண்டியது அவசியமாகிறது. பெண் குழந்தைகள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு சட்டப் பூர்வமாக பாதுகாப்பு உள்ளது என்பதை அவர்கள் அறிந்து வைத்துக் கொள்வதோடு அது பற்றிய சரியான புரிதலும் அவசியம்.

    அந்த வகையில் நாட்டில் அவ்வப்போது நடந்துகொண்டிருக்கும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்த சிறு அலசலே, ‘சுட்டும் விழிச்சுடர்’ எனும் இப்பகுதி. நாட்டு நலன் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொள்ளும் அனைவரும் இதில் பங்குகொண்டு தங்களுடைய வெளிப்படையான கருத்துகளை முன் வைக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

    0133

    முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட இளமொட்டு!

    படத்திற்கு நன்றி- தினகரன்
    படத்திற்கு நன்றி- தினகரன்

    நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே, காரைக்குறிச்சி புதூர் பகுதியை சேர்ந்த, கணவனை இழந்த, சாந்தி என்பவரின் மகள் அம்பிகா. பதினைந்து வயதான இச்சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சென்ற வெள்ளிக் கிழமை (ஜனவரி 24, 2015) வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அம்பிகா மதிய உணவு இடைவேளையின் போது, தன் வகுப்பு அறையிலேயே, தனது துப்பட்டாவின் மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து இறந்து விட்டார். காவல் துறை விசாரணையில், கடந்த மாதம் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில், அம்பிகா என்ற அந்தச் சிறுமி, குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் மனவேதனையில் இருந்ததாகவும், மதிப்பெண் குறைந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    “மாணவியின் மரணத்துக்குச் சொல்லப்படும் காரணம் சரியானதா என்ற ஐயம் ஏற்படுகிறது. இப்படிச் சாதாரண காரணத்திற்காகத் தற்கொலை செய்துகொள்ளும் அளவிலா நம் பெண்களின் மன முதிர்ச்சி இருக்கிறது?” – இப்படியும் எண்ணம் தோன்றலாம். உண்மையில் நாட்டில் ஆங்காங்கு நடந்துகொண்டிருக்கும் சில நிகழ்வுகள் இதனை உறுதிபடுத்தத்தான் செய்கிறது. பள்ளி, வீடு தவிர வேறு வகையான வெளித்தொடர்போ அல்லது பொழுதுபோக்கோ இருக்க முடியாத, தகப்பனும் இல்லாத, ஏழ்மையின் பிடியில் இருக்கும் ஒரு சிறுமிக்கு இது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. தம் சக மாணவர்களின் முன்னிலையில் ஏற்பட்ட அவமானம் இப்படி ஒரு முடிவைத்தேடும் அளவிற்கு தூண்டியிருக்கலாம்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: “விரைவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், மாணவ, மாணவியரை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறோம். அந்த வகையில், மாவட்டம் முழுவதும், முதல் திருப்புத் தேர்வு நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த திருப்புத் தேர்வில், இந்த மாணவி பங்கேற்க, தலைமை ஆசிரியர் அறிவழகன், வகுப்பாசிரியர் ராஜ் ஆகியோர் அனுமதிக்கவில்லை. மற்ற மாணவியர் தேர்வெழுதிய நேரத்தில், இந்த மாணவி மட்டும் வகுப்பறையில் தனிமைப்படுத்தப்பட்டார். முதல் தளத்தில் வகுப்பறை இருந்தாலும், இரண்டாம் தளத்தில் உள்ள அறையில் தான் திருப்புத் தேர்வு நடந்தது. முதல் தள வகுப்பறையில், தனிமையில் இருந்த மாணவி, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக, மாணவியை திருப்புத்தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எழுத அனுமதிக்கவில்லை. அந்த மாணவியிடம், ‘பொதுத் தேர்வு எழுதினால், நீ பெயிலாகி விடுவாய்; அதனால் எழுத வேண்டாம்’ என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சில ஆசிரியர்களின் அணுகுமுறை சரியில்லாததால், மொத்த கல்வித்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது”.

    பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்று நாம் அனைவரும் உணர்ந்து அதற்கேற்றவாறு பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்ற முயற்சிக்கும் இவ்வேளையில் இது போன்ற பின்னடைவுகள் வேதனைக்குரியவை. பல செய்திகள் இது போன்று வந்த வண்ணமே உள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் தனியார் பள்ளிகளின் வரிசையில் தற்போது அரசு பள்ளியும் இணைந்திருப்பது அதிர்ச்சியான விசயம். ஆசிரியர்களின் அதிகப்படியான கெடுபிடியின் காரணமாக மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ‘சில ஆசிரியர்களின் அணுகுமுறை சரியில்லாதலால் மொத்த கல்வித்துறைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது’ என்று பட்டும்படாமல் பதில் சொல்லி தப்பிக்க முடியாது. மேற்கொண்டு மீண்டும் ஒருமுறை இது போன்ற அவலம் நடவாமல் காக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். வளர் இளம் பருவத்தில், இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் மாணவர்களின் மன நிலையை அறிந்தவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு ஆசிரியப் பயிற்சியின்போது மனோதத்துவ முறையிலும் குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் முறையை பயிற்சியளிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளியிறுதித் தேர்வு சமயங்களில், இதைப்பற்றியெல்லாம் சிந்திப்பார் இருப்பதில்லை. 100 சதவீத தேர்ச்சி மட்டுமே இலக்கு என்ற வகையில், அதற்குத் தடையாக இருக்கும், படிக்க முடியாத குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்தி கற்கச் செய்வதை விடுத்து அவர்களை தேர்வு எழுத விடாமல் செய்வது எந்த விதத்தில் நியாயமாகும். இதனால் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் கடமை தவறியவர்களாகிறார்கள் என்பதே சத்தியம். தகப்பன் இல்லாத ஒரு பெண் குழந்தை, வசதி வாய்ப்பு இல்லாத, அரசு பள்ளியில் படிக்கும் ஒரு பெண் குழந்தையை எந்த அளவிற்கு அழுத்தம் ஏற்படுத்தியிருந்தால் அச்சிறுமி உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றிருப்பார் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கல்வித் துறையும், அரசும் இனிமேலாவது விழித்துக்கொண்டு இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கி, இது போன்ற எண்ணம் இன்னொரு முறை மற்ற ஆசிரியருக்கு தோன்றாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்.

    இது குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன் நண்பர்களே. நன்றி.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 42

    சு. கோதண்டராமன்.

     

    ஸத்யமும் ருதமும்

    ravi அர்த்தநாரீஸ்வரர்

     

    ஸத்யம் த்வா ருதேன பரிஷிஞ்சாமி  என்பது இறைவனுக்கு உணவு படைக்கும்போது சொல்லப்படும் மந்திரம். ஸத்யமே, உன்னை ருதத்தால் நனைக்கிறேன் என்பது பொருள்.

    ருதம் என்பது இயற்கை நியதியைக் குறிக்கிறது என்று பார்த்தோம். இனி, ஸத்யம் என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் பற்றிப் பார்ப்போம். ஸத்யம் என்பது ஸத் என்ற சொல்லிலிருந்து தோன்றியது. அதற்கு உள்ளது என்று பொருள். எது உள்ளதோ அது உண்மை, ஸத்யம்.
    (தமிழில் உள்ளது, இருக்கிறது ஆகிய இரு சொற்களும் ஒரே பொருள் உடையவை ஆயினும் உள்ளது என்ற சொல்லுக்கு மட்டும் இறந்த காலமும் வருங்காலமும் இல்லை. அது முக்காலத்தையும் குறிக்கும் வினையாகும்.)

    ஸத்யம் என்பது முக்காலத்திலும் எது இருக்குமோ அதைக் குறிப்பிடுகிறது. காலத்ரய அபாத்யம் (மூன்று காலங்களிலும் பாதிக்கப்படாமல் நிலைத்து நிற்பது) என்று சாஸ்திரங்கள் ஸத்யத்திற்கு விளக்கம் அளிக்கின்றன. எனவே ஸத்யம் என்பது பரம் பொருளைக் குறிப்பது அறியப்படுகிறது.

    ஸத்யம் தோற்பதில்லை:
    ஸத்யம் ஏவ ஜயதே என்ற உபநிடத வாக்கியத்தை, ‘வாய்மையே வெல்லும்’ என்று மொழி பெயர்த்து, கடைசியில் என்றோ ஒரு நாள் ஸத்யம் வெல்லப்போகிறது என நாம் கருதுகிறோம். அது சரியான பொருள் அல்ல.

    ஜயதே என்ற சொல் முக்காலத்திலும் வெல்கிறது என்று பொருள் தரும் நிகழ்கால வினை ஆகும். என்றும் வென்று நிலை நிற்பது உண்மையே (பரம் பொருளே) என்பதுதான் சரியான பொருள்.

    ருதமும் ஸத்யமும்:
    ருதம் என்பது பிரபஞ்சத்தின் ஒழுங்கு முறை. அதன் இயக்கத்துக்குக் காரணமான நியதி. இது இறைவனின் செயலாக்கத்தைச் சுட்டுவது. ஸத்யம் என்பது பரம்பொருளின் இருப்பைக் கூறுகிறது. பரம் பொருள் வெறுமனே இருக்கிறது, அது வேறு ஒன்றும் செய்வதில்லை (It just exists)என்னும் போது அது ஸத்யம் எனப்படுகிறது.

    உபநிடதக் காலத்தில் பரம்பொருளின் செயல்படும் தன்மையை ஸகுண ப்ரம்மம் என்றும் செயலற்று எந்த விதமான மாற்றமும் இன்றி இருக்கும் தன்மையை நிர்க்குண ப்ரம்மம் என்றும் கூறினர்.

    அதற்கும் பிந்திய புராணக் காலத்தில் தேவர்களாகிய இயற்கைச் சக்திகளை உண்டாக்கி அவற்றை இயங்கச் செய்யும் ருதத்தை சக்தி என்றும் செயலற்றுத் தன்னில் தான் அடங்கிச் சிவனே என்று இருக்கும் ஸத்யத்தைச் சிவன் என்றும் அழைத்தனர்.

    தூய்மையானவர்கள், பிறரைத் தூய்மைப்படுத்துபவர்கள், ருதத்தைப் பின்பற்றுபவர்கள் ருதத்தின் மூலம் ஸத்யத்தை அடைகிறார்கள். 7.56.12

    ருதத்தின் மூலம்தான் ஸத்யத்தை உணர முடியும் எனக் கூறப்படுவதால் ருதத்தைத் தாயாகவும் ஸத்யத்தைத் தந்தையாகவும் கருதி, தாயினுடைய பரிந்துரையின் பேரில்தான் தந்தையின் அருளைப் பெற முடியும் என்ற கருத்து பிறந்தது. இதுவே வைணவத்தில் தாயாரின் கருணை பெற்றுத்தான் பெருமாளின் திருவடியை அடைய முடியும் என்று கூறப்படுகிறது.

    பரம்பொருளின் இந்த இரு தன்மைகளும் பிரித்துப் பேசப்பட்டாலும் அவை பிரிக்க முடியாத ஒரே பரம்பொருளிடம் அமைந்திருப்பதால் சிவனும் சக்தியும் அம்மையப்பனாக ஒரே உடலில் இருப்பதாகக் கூறினர்.

    அன்ருதமும் அஸத்யமும்:
    ருதம் என்பதற்கு எதிர்ச்சொல்லாக அன்ருதம் என்பதை வேதம் கூறுகிறது. தர்மத்திற்கு மாறாக ஒருவன் பேசினாலோ, நடந்தாலோ அது அன்ருதம். இதைத் தேவர்கள் தண்டிக்கின்றனர் என்கிறது வேதம். ஸத்யம் என்ற சொல்லுக்கும் அன்ருதம் என்பது தான் எதிர்ச் சொல். அஸத்யம் என்ற சொல் வேதத்தில் காணப்படவில்லை.

    அஸத்யம் என்பது முக்காலத்தும் உள்ள பரம் பொருள் ஒன்று இல்லை என்று பொருள் ஆகிறது. அவ்வாறு யார் சொல்ல முடியும்? பல வேறு மதக்காரர்களும் வெவ்வேறு பெயரிட்டு அழைப்பர். ஆனால் பரம்பொருள் இல்லை என்று சொல்வதில்லை. நாத்திகர்கள் வணக்கம் அவசியமில்லை என்பரே அன்றி என்றும் நிலைத்திருக்கும் ஒரு இயற்கை நியதி உள்ளது என்பதை மறுப்பதில்லை. அதனால் ஸத்யம் என்பதற்கு எதிர்ச் சொல்லான அஸத்யம் என்ற சொல் வேதத்தில் ஒரு இடத்திலும் காணப்படவில்லை.

    பரம்பொருளின் செயல்படும் சக்தி வடிவையும் உருவற்ற, குணமற்ற, வேண்டுதல் வேண்டாமை அற்ற, சுத்த சத்துவ நிலையையும் ஒரு சேர நினைக்கிறேன் என்ற கருத்தைத்தான் ஸத்யத்தை ருதத்தால் நனைக்கிறேன் என்ற மந்திரம் கூறுகிறது.

    சக்தியின் திறமையைப் பெற்று நாம் செயலாற்றுகிறோம். சிவத்தின் மௌனத்தில் நம்மை ஆழ்த்தி அமைதியுறுகிறோம்.

     

     

     

    படம் உதவி: வல்லமை ஓவியர் திரு. சு. ரவி

    Share
  • சங்க இலக்கியங்களில் வானியல் செய்திகள்

    முனைவர் மு.பழனியப்பன்

    சங்க இலக்கியங்கள் பல்துறை செய்திகளைக் கொண்டு விளங்குகின்றன. உலக இலக்கியங்கள் என்று போற்றத்தக்க வகையில் அவற்றில் பற்பல துறைகள் சார்ந்த செய்திகள் அமைந்து கிடக்கின்றன. குறிப்பாக வானியல் பற்றிய பல குறிப்புகளையும் வானியல் நிகழ்வுகள் பற்றிய பல செய்திகளையும் சங்க இலக்கியங்கள் கொண்டுள்ளன. சங்க காலப்புலவர்கள் இதன் காரணமாக பல்துறை அறிவு சார்ந்து இயங்கினர் என்பதும் கருதத்தக்கது.

    வானத்தில் இருந்து பெய்யும் மழையின் இயக்கத்தை முல்லைப்பாட்டு மிக அழகாக அறிவியல் அடிப்படையில் அறிவிக்கின்றது.

    நனந்தலை உகலம் வளைஇ நேமியோடு

    வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

    நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்

    பாடிமிழ் பனிகடல் பருகி வலன்ஏர்பு

    கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி

    பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை ( முல்லைப்பாட்டு 1-6)

    என்ற இந்தப் பாடலடிகள் உணர்த்தும் மேகத்தின் இயக்கம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது ஆகும்.

    பனிகடல் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது வானப்பரப்பிற்குச் சென்று, குளிர்ந்த காற்று பட்டதும் வானத்திலிருந்து மழையாகப் பொழிந்தது என்று முல்லைப்பாட்டு சுட்டும் கார்கால வருகையை அறிவியலார் காட்டும் மழையின் இயக்கத்துடன் ஒப்பு வைக்க முடியும்.

    ஒரு காலத்தில் மாபலிச் சக்கரவர்த்திக்காக வாமன அவதாரம்  எடுத்த திருமாலின் உயர்ச்சிபோல இம்மேகக் கூட்டத்தின் எழுச்சி இருந்தது என்று முல்லைப்பாட்டு படைத்த நப்பூதனார் ஒரு புராணச் செய்தியுடன் இதனை ஒப்பு வைக்கின்றார்.

    மழை பொழிவதற்கும் வானத்துக் கோள்களின் அசைவிற்கும் தொடர்பு உண்டு என்று சங்கப்புலவர்கள் கருதியுள்ளனர். வானத்தில் உள்ள வெள்ளி என்ற கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும் தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும் என்றும் சங்கப் புலவர்கள் உரைத்துள்ளனர்.

    இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் ( புறம். 35.7) என்று வெள்ளக்குடி நாகனாரும், தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும் ( புறம் 117.2) என்று கபிலரும்,

    ‘‘வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

    திசை திரிந்து தெற்கு ஏகினும்

    தற்பாடிய தனி உணவில்

    புட்டேம்பப் புயன்மாறி

    வான்பொய்ப்பினும் தான் பொய்யா

    மலைத்தலைய கடற்காவிரி’’ (பட்டினப்பாலை 1-6)

    என்று கடடியலூர் உருத்திரங்கண்ணனாரும் பாடியிருக்கும் பகுதிகள் வெள்ளி மீனின் தெற்கு திசை நோக்கிய வளமிக்க பயணத்தை எடுத்துரைப்பன.

    இவ்வாறு மழைபொழியும் தன்மை குறித்தும், மழை பொழியும் வானியல் சூழல் குறித்தும் தமிழர்கள் கவனித்துக் கணித்துள்ளனர். மழை என்பது முக்கியமான வளம் என்பதால் இதன் தேவையை உணர்ந்த சங்கப் புலவர்கள் இவ்வகையில்  மழை பற்றிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

    உலகத் தோற்றம்

    உலகின் தோற்றத்தையும், உலகின் இயக்கத்தையும் காணும் இயல்புடையோராகச் சங்கப்புலவர்கள் இருந்துள்ளனர். பதிற்றுப்பத்தில் இடம் பெறும் பின்வரும் பகுதி உலக இயல்பை, அதன் இயக்கத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.

    நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்

    அளப்பு அரியையே;

    நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,

    ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;

    ஐந்து பூதங்களில் கூட்டுச் சேர்க்கையால் ஆகியது உலகம். இது நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல் போன்றவற்றின் இயக்கத்தால் நடைபெறுகிறது என்பதை இப்பாடல் எடுத்துக்காட்டுகின்றது. இவற்றின் சிறப்போடு அரசனின் சிறப்பு ஒப்பு நோக்கப்படுகிறது

    கோள்கள் விண்மீன்கள் பற்றிய செய்திகள்

    வான மண்டலத்தில் பல்வேறு கோள்கள் விண்மீன்கள் விளங்கியுள்ளன என்பதைச் சங்கப் புலவர்கள் அறிந்திருந்தனர். சூரியன், பூமி, வியாழன், புதன், வெள்ளி, சனி போன்றன பற்றியும், துணைக்கோளான திங்கள்  கோள் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. பற்பல் விண்மீன்களைப் பற்றிய செய்திகளும் சங்க இலக்கியங்களில் பதிவாக்கப் பெற்றுள்ளன. அடிப்படையில் வானத்தில் இயங்குபவனவற்றைக் கோள்கள் என்றும் வின்மீன்கள் என்றும் பகுக்கலாம். இவ்விரு பிரிவுகளைப் பின்வரும் பட்டினப்பாலை அடி தெளிவுபடுத்துகின்றது.

    நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
            நாள்மீன் விராஅய கோள்மீன் போல (பட்டினப்பாலை  67, 68)

    என்ற பாடலடி வானத்தில் உள்ளவற்றை நாள்மீன் என விண்மீனையும், கோள்மீன் என கோள்களையும் பிரித்தறிகின்றது. கோள்மீன்கள் பற்றிய செய்திகள் இதனடிப்படையில் முதலில் இங்கு அறிவிக்கப்பெற்று, அதன்பின் நாள்மீன்கள் பற்றிய செய்திகள் அறிவிக்கப்படுகின்றன.

    கோள்கள்

    செஞ் ஞாயிற்றுச் செலவும்,

    அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,

    பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,

    வளி திரிதரு திசையும்,

    வறிது நிலைஇய காயமும், என்று இவை

    சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்

    இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் (புறநானூறு 30)

    என்ற பாடல் ஞாயிற்று மண்டலம் என்ற ஞாயிற்றைச் சுற்றியிருக்கும் கோள்களின் வரிசையைக் குறிப்பதாக உள்ளது. பரிப்பு சூழ்ந்த மண்டிலம் என்பது சூரிய குடும்பத்தைக் குறிப்பதாகும். சங்கக் காலப்புலவர்கள் சூரியனை மையமிட்ட வானியல் நிலையை அறிந்துள்ளனர் என்பதற்கு இப்பாடல் சான்றாகும். சென்று அளந்து அறிந்தோர் என்ற தொடர் வானியல் அறிவு வாய்க்கப்பெற்றவர் என்று பொருள் தரக்கூடியது. எனவே சங்க காலத்தில் வானியல் நோக்கும் அறிஞர் கூட்டம் இருந்துள்ளது என்பதும் இப்பாடல் வழி தெரியவருகின்றது.

    விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து எனப் பட்டினப்பாலை உரைப்பதும் வான மண்டலம் இருப்பதை உறுதி செய்கின்றது.

    சூரியன் பற்றிய செய்திகள்

    ஞாயிற்றின் தோற்றம். மறைவு, அதன் உச்சி மீதமர்ந்த நிலை ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் காணமுடிகின்றது. ஞாயிறு அல்லது சூரியன் (Sun) மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, ஞாயிற்று மண்டலத்தின் மையத்தில் உள்ள, ஞாயிற்று மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன.[1] ஞாயிற்றின் எடை மட்டுமே பரிதி மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது . பரிதிக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். இத்தொலைவை ஒளி சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் பரிதி ஆற்றலேயாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில் சேகரிக்கப்படும் பரிதி ஆற்றல், பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும்.[2]. மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் பரிதியைச் சார்ந்தே உள்ளன.( விக்கிப்பீடியா) என்ற அறிவியல் கருத்து சூரியனின் தன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது.

    சங்கப்பாடல்களில் சூரியனை முன்வைத்தே அனைத்து வானியல் இயக்கங்களும் நடைபெறுகின்றன என்ற கருத்து பொதிய வைக்கப்பெற்றுள்ளது.

    வாள் நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த

    இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து ( சிறுபாணாற்றுப்படை)

    என்ற தொடரில் கோள்கள் அனைத்தும் ஞாயிற்றினைச் சுற்றி அமைந்துள்ளன என்ற கருத்து பெறப்படுகின்றது. இதனை அறிவியல் அடிப்படையில் சொல்வதானால் சூரியனைச் சூழ்ந்த வட்ட பாதையில் கோள்கள் அனைத்தும் இயங்குகின்றன என்பதை உணரஇயலும்.

    பல் இருள் விடிய புலம்பு சேண் அகல

    பாய் இருள் நீங்க பல்கதிர் பரப்ப

    ஞாயிறு குண முதல் தோன்றியாஅங்கு ( பதிற்றுப்பத்து 59)

    என்ற பதிற்றுப் பத்து அடிகள் ஞாயிறு கிழக்கில் தோன்றி உலக இருள் அகற்றும் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது,

    சூரியனின் மறைவினை

    சுடர்கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு

    குட கடல் சேரும் படர் கூர் மாலையும்  (அகம் 378)

    என்ற பகுதி சூரியன் மேற்கில் மறையும் தன்மையைக் காட்டுகின்றது.

    சூரியனின் ஒளி மற்ற நட்சத்திரங்களை விட மிகப் பிரகாசமானது. இதன் காரணமாகச் சூரியனின் ஒளியில் மற்ற நட்சத்திரங்கள் தென்படுவதில்லை. இதனைப் பதிற்றுப்பத்து

    ‘‘மாஇரு விசும்பின் பல் மீன் ஒளி கெட

    ஞாயிறு தோன்றியாங்கு’’ ( பதி. 64)

    என்ற இவ்வடிகளில் இரவில் விண்மீன்கள் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் செய்தியும் பகல் எழும்பொழுது அவை சூரியனின் ஒளியில் அதன் அதிகமான ஒளிப்பரப்பில் காணாமல் போவதும் சுட்டப் பெற்றுள்ளது.

    சூரியனின் உள்பகுதி எரிந்து கொண்டே இருக்கக் கூடியது. அதனையும் ஒரு சங்கப்பாடல் உணர்த்துகின்றது.

    ‘‘வான மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ்சுடர்

    கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிறு’’ ( நற்றிணை 163)

    என்ற பாடலடிகளில் கதிரவனின் உள்பகுதி அகம் கனலியாக அதாவது அகத்திலே கனன்று கொண்டிருக்கக் கூடிய தன்மையை உடையது என்பதை அறிவிக்கின்றது.

    சூரிய உள்ளகம் சூரியனின் மையப் பகுதியாகும். இப்பகுதியின் அடர்த்தி சுமார் 150,000 கிலோகிராம்/மீட்டர்3 ஆகும். இப்பகுதியின் வெப்பம் தோராயமாக 13,600,000 கெல்வின் ஆகும். (சூரிய மேற்பரப்பு 5,800 கெல்வின்) .[30] கதிரவனின் ஆற்றல் அணுக்கருப் புணர்ச்சி மூலம் கிடைக்கிறது. இவ்வகைப் புணர்ச்சியை புரோட்டான்-புரோட்டான் தொடர் விளைவு என்பர். இவ்விளைவில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிப்படியாக பரவுகிறது.(விக்கிப்பீடியா) என்ற அறிவியல் கருத்து மேற்கருத்துடன் ஒப்புநோக்கத்தக்கது.

    சூரியனின் உள்பகுதியில் ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியமாக மாற்ப்படும் தன்மை சுட்டப்பெறுகிறது. இதன் காரணமாக அதிக அளவு வெப்பம் வெளிப்படுகிறது எனச்சுட்டப்பெறுகிறது. சங்கப் புலவர் இதனை அகம் கனலி என்று வெளிப்படுத்துகிறார்.

    பூமி

    பூமியும் வான மண்டலத்தில் ஒரு கோளாகும். இப்பூமி சூரியனை மையமாக வைத்துச் சுழல்கிறது. மேலும் தன்னைத் தானேயும் அது சுற்றி  வருகின்றது. இதனைத் திருமுருகாற்றுப்படை

    உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

    பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு

    ஓஅற இசைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி  (திருமுருகாற்றுப்படை. 1-3)

    என்று அறிவி்க்கின்றது. இதில் உள்ள வலனேர்பு திரிதரு என்பது சூரியனின் இயக்கம் பற்றியதாகும். பூமி சூரியனை வலமாகச் சுற்றிவருகிறது. இதன் காரணமாக சூரியன் இடமிருந்து வலமாகச் சுற்றிவருவதாகத் தெரிகின்றது. இதனைத் திருமுருகாற்றுப்படை வலப்பக்கமாகச் சுழல்வதாகக் காட்டுகின்றது

    புதன்

    புதன் பற்றிய குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது. புந்தி மிதுனம் பொருந்த என்ற பாடலடி புதன் கோளைப் பற்றியதாகும். சூரியனின் வட்டப்பாதையில் முதலில் அமைந்துள்ள கோள் புதன் ஆகும்.

    வெள்ளி

    வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது அதிகரித்த பச்சைவீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. (விக்கிப்பீடியா) என்ற அறிவியல் செய்தி வெள்ளி என்ற கோளின் இயல்பினைச் சுட்டுகின்றது.

    வெள்ளி என்பதை வெண்மீன், சீர்சால் வெள்ளி என்று பலவாறு சங்கப்பாடல்களில் சுட்டப்பெற்றுள்ளது.  வெள்ளி என்பதைச் சுக்கிரன் என்றும் தற்போது அழைத்துவருகின்றனர்.

    வெள்ளி  தென்புலத்து உறைய விளைவயல்

    பள்ளம் வாடிய பயன் இல் காலை ( புறநானூறு. 388)

    என்ற குறிப்பு வெள்ளி மீன் இயக்கத்தைச் சுட்டுவதாக உள்ளது.

    வெள்ளிமீன் விடிகாலையில் வானத்தில் விளங்கும் காட்சியை

    வைகுறு மீனின் தோற்றம் ( அகம் 17)

    வைகுறு மீனின் பைபயத் தோன்றும் ( பெரும்பானாற்றுப்படை 318)

    குணக்குத் தோன்றும் வெள்ளியின் ( நற்றிணை 356)

    என்று சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்.

    வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

    உயர்சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே ( புறம் 397)

    என்ற பாடலடி அதிகாலையில் வெள்ளி என்ற கோளின் வரவை இயற்கை நிகழ்வுகளுடன் கலந்துரைக்கின்றது.

    செவ்வாய்

    செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஒட்சைட்டு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது (விக்கிப்பீடியா) என்ற அறிவியல் கருத்து செவ்வாய் பற்றிய செய்திகளை அறிவிக்கின்றது.

    செம்மீன் என்று இதனைச் சங்கத்தார் அழைத்தனர். பரிபாடலில் படிமகன் என்று இது சுட்டப்பெறுகின்றது. பதிற்றுப்பத்திலும் இக்கோள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

    வியாழன்

    வியாழன் கோள் பொன்னிறமானது. பொன்னிறமுடைய கோள் என்று வரும் புறநானூற்று அடியைக் கொண்டு சங்கப்புலவர்கள் வியாழன் கோள் பற்றி அறிந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. வியாழன் (Jupiter) சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும்

    ‘‘தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்

    கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ’’ (புறநானூறு 392)

    என்ற பாடலடிகள் வழியாக வியாழன் சுட்டப்படுகின்றது எனத் தெளியமுடிகின்றது. பொலங்கலம் உள்ள கள் என்பதற்கு உவமையாக கோள்மீன் சுட்டப்படுவதால் அது வியாழன் என முடிவது பொருத்தமானது.

    சனி

    சனிக் கோளை மைம்மீன் என்று சங்கத்தார் அழைத்துள்ளனர். மைம்மீன் என்றால் கருமையான கோள் என்று பொருள். ‘‘மைம்மீன் புகையினும் ’’ ( புறம் 117) என்று இதனைக் கபிலர் பாடியுள்ளார்.

    ஆகவே சங்கப் புலவர்கள் அக்கால அறிவு நிலையின்படி அவ்வப்போது தெரிந்த கோள்களைப் பற்றிப் பாடியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

    திங்கள்

    நிலவினைப் பற்றிய பல தகவல்கள் சங்க இலக்கியத்துள் செறிந்துள்ளன. நிலவு நிலத்தைச் சுற்றிவரும் ஒரு துணைக்கோள். வளர்பிறை நிலவு, தேய்பிறை நிலவு இவற்றையெல்லாம் சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர். இதனை முறையே அலர்தரு பக்கம் என்றும், வழியது பக்கம் என்றும் அழைத்துள்ளனர்.
    பல் மீன் நடுவண் திங்கள் போலவும், (மதுரைக்காஞ்சி 219) , பல் மீன் நடுவண் பால் மதி போல,( சிறுபாணாற்றுப்படை) என நிலவு விண்மீன்கள் சூழ இருக்கும் காட்சியைச் சங்கப் புலவர்கள் கவனித்துள்ளனர்.

    பிறையைத் தொழும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்துள்ளது. தொழுதுகாண் பிறை ( குறுந்தொகை. 178) என்று பிறைவணக்கம் செய்யப்பட்ட நிலை தெரியவருகின்றது.

    நாள்மீன் (விண்மீன்)கள் பற்றிய குறிப்புகள்

    சங்க இலக்கியத்தில் கார்த்திகை, உரோகினி, உத்திராடம், மகம், உத்தரம், திருவோனம், அனுஷம், மூலம் போன்ற பல நட்சத்திரங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் (நற்றிணை 202), அறுமீன் சேரும் அகல் இரு நடுநாள் (அகநானூறு 141) என்ற குறிப்புகள் கார்த்திகை நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் ஆகும்.

    முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய

    உரோகினி நினைவனள் நோக்கி (நெடுநல்வாடை 161-163)

    என்ற அடியில் உரோகினி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

    விண்மீன்களின் அமைப்பும், அவற்றின் பால் நிற்கும் சூரிய இயல்பும் இராசிகள் என்று  அழைக்கப்படுகின்றன. மொத்தம் பன்னிரு இராசிகள் உள்ளன. அவற்றைப் பற்றிய குறிப்பும் பரிபாடலில் காணப்படுகின்றது

    உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,

    வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

    புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்

    அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்

    இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்

    வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை

    மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

    பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

    மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்

    எதிர் வரவு மாரி இயைக’ என இவ் ஆற்றால்(பரிபாடல், 11)

    என்ற இப்பாடலில் இராசி மண்டலங்கள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.

    வெள்ளி என்ற கோள் இடப ராசியை அடைந்தது. புதன் மிதுன லக்கனகத்தில் பொருந்தினான். சூரியன் கடக ராசியில் இருந்தான்.வியாழன் மீனத்தை அடைந்தான். சனி மகரத்தை அடைந்தான். ராகு சந்திரனை மறைத்தபடி இருந்தான் என்ற இந்நிலை அமைந்திருந்தபோது காற்று வந்தது என்ற இக்குறிப்பு நாள்மீன் கோள்மீன், இராசிகள் போன்ற அனைத்தின் கலவையாக இருப்பதை உணரமுடிகின்றது.

    வான ஊர்தி

    வான ஊர்தி வழியாக சங்ககாலத்தில் வானியல் அறிவு பெறப்பட்டது என்பதைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் எடுத்துக்காட்டுகின்றது.

    சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,

    நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன,

    வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து,

    வீற்றிருந்தோரை எண்ணும்காலை,

    5              உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

    மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே;

    ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

    வலவன் ஏவா வான ஊர்தி

    எய்துப என்ப, (புறநானூறு 24)

    என்ற பாடலில்  வலவன் ஏவா வான ஊர்தி என்பது ஆளில்லாமல் பறக்கும் செயற்கைக்கோள் பற்றிய குறிப்பு ஆகும்.

    இவ்வகையில் வானியல் செய்திகள் பலவற்றை உட்பொதிந்துச் சங்க இலக்கியங்கள் வைத்துள்ளன.

    முனைவர் மு.பழனியப்பன்

    இணைப்பேராசிரியர்,

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

    திருவாடானை

    Share