கிரேசி மோகன்
“வங்கக் கடல்கடைந்தான் வாய்க்குள் யசோதையாள் –
சங்கினால் பாலூட்டும் சாகசத்தை – எங்களுக்கு –
தின்றிடக் கூலியாய் தந்தனை ஓவியம் –
சென்றிடும்நா ளும்மால்கே சவ் “….கிரேசி மோகன் ….
கிரேசி மோகன்
“வங்கக் கடல்கடைந்தான் வாய்க்குள் யசோதையாள் –
சங்கினால் பாலூட்டும் சாகசத்தை – எங்களுக்கு –
தின்றிடக் கூலியாய் தந்தனை ஓவியம் –
சென்றிடும்நா ளும்மால்கே சவ் “….கிரேசி மோகன் ….
எஸ் வி வேணுகோபாலன்
அன்பானவர்களுக்கு
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இரண்டு நாட்களுக்குமுன் ஒரு பத்திரிகை அலுவலகத்திற்குள் தீவிரவாதிகள் மூவர் நுழைந்து ஆசிரியர் குழு கூட்டத்தில் இருந்த ஆசிரியர், உலகின் சிறந்த கேலிச் சித்திரக்காரர்கள் உள்பட 12 பேரைச் சுட்டுக் கொன்றனர்…….
அது தொடர்பான சில முக்கியமான தலையங்கங்கள், கட்டுரைகள், அற்புதமான கார்ட்டூன் எதிர்வினை இவற்றை வேறொரு மெயிலில் சேர்த்து அனுப்பி வைக்கிறேன்…
இங்கே உடனே இணைத்திருப்பது நாளைய தீக்கதிரில் வரவிருக்கும் எனது எளிய பிரதிபலிப்பு:
அன்பையே பேசுகின்றன
எல்லா சமயங்களும்
ஆனால்
எல்லா சமயங்களிலுமல்ல !
விவாதங்களின் புல்வெளியில்
யாரும் இனி
சுதந்திரமாக நடந்துபோய்விட முடியாது
நிலக் கண்ணிகள் புதைந்திருக்கும்
பூமியாகிவிட்டது
சிந்தனையின் பரந்த
தெளிய நீர்ப்பரப்பை நாசப்படுத்த
பாசிஸ நஞ்சு
ஒரே ஒரு துளி போதுமாயிருக்கிறது
ஜனநாயக பொழுதுகளில்
அராஜக வன்முறைகளை
(நமக்கென்ன வந்ததென்று )
மௌனமாகக் கடந்து போகிறவர்களின்
வழித்தடத்திலேயே அமைக்கப்படுகிறது
கொடுங்கோன்மைக்கான ராஜ பாட்டை
துப்பாக்கிகளும் தோட்டாக்களும்
வெடிமருந்துகளும் ஏவுகணைகளும்
நேற்றைய முன்தினம்
வெடிச்சத்தம் கேட்ட பாரீஸ் நகரின்
எளிய பத்திரிகை அலுவலகத்திலும்
கடந்த மாதம்
சிறார்களைப் பொசுக்கிப் போட்ட
பள்ளியிலும் மட்டிலுமல்ல
உலகெங்கிலும் அவை
எடுத்தாளப்பட்டிருக்கின்றன
அதற்குமுன்னரும் பின்னரும் கூட
மனிதத்திற்கு அப்பாற்பட்ட
அந்த வெறிக்கு
இருக்ககூடும்
அதுவாக சூட்டிக் கொள்ளும் ஒரு போலிப்பெயர்
ஏதாவது ஒரு மதத்தின் பெயரில்
அன்பான சமூகத்தைக்
கனவு காண்போர்
முகவரியைக் கொடுத்துவிடக் கூடாது
தப்பித் தவறிக்கூட –
ஒற்றை விரலசைவில்
நழுவிப் போய்விடத் தக்க
அழைப்பிலும்கூட !
****************
மு. கோபி சரபோஜி
இப்ப அவனுக்கு நேரம் சரியில்ல. சனி பிடிச்சு ஆட்டுது. ஏழரைச் சனி நடக்குதாம். அதுனால எதைத் தொட்டாலும் ஏழரை தான்! ஒன்னுமே வெளங்க மாட்டேங்குது. துலங்க மாட்டேங்குது. சனிச் சுழி சும்மா இருக்குமா? அதான் அவனைப் போட்டு சுழட்டியடிக்குது. இப்படியான மிரட்டல்களையும், பயமுறுத்தல்களையும் தனக்கே உரிய அடையாளமாகக் கொண்டிருப்பவர் சனிபகவான். இந்தப் பகவானுக்குப் பலம் மிக்க பகவான்கள் பலர் பயந்து ஓடியிருக்கின்றனர். ஒளிந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சனிபகவானையே ஓட, ஓட விரட்டியடித்த ஒருவர் இருக்கிறார். அவர் தான் அனுமன்!
சனிபகவான் அனுமனிடம் சிக்கி அவஸ்தைப்பட்டதற்கு ஒரு நெடுங்கதை உண்டு. அரக்கர்களின் அரசனான இராவணன் தன் பலத்தால் இறைவனையும் வெல்லும் வலிமை கொண்டிருந்தான். ஒவ்வொருவராக வீழ்த்தித் தன் வெற்றியை நிலை நாட்டி வந்த வேளையில் குபேரனை வென்று அவனுடைய நாடான இலங்கையையும் கைப்பற்றிக் கொண்டான். ஏழேழு உலகங்களையும் வெல்லும் ஆவல் கொண்டிருந்தவனுக்கு பம்பர் பரிசாய் குபேரனின் வாகனமான புஷ்பக விமானம் கிடைத்தது. ஆகாயத்தில் பறக்கும் சக்தி கொண்ட அவ்விமானம் மூலம் உலகம் முழுக்க வலம் வந்தான்.
தன் இயக்கத்தின் மூலம் மனிதர்களுடைய நிலையை, இருப்பை மாற்றியமைக்கும் சக்தி கொண்ட எல்லாக் கிரகங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். சாஸ்திரங்களில் வல்லவனான இராவணன் தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளை அனைவரையும் வெல்லும் வலிமை கொண்டவனாகவும், சகல சம்பத்துக்களை பெற்றவனாகவும் இருக்க வேண்டும் என நினைத்தான். அதற்காகத் தன் கட்டுப்பாட்டில் இருந்த எல்லாக் கிரகங்களையும் குப்புறத் தள்ளி இயங்காதவாறு அவைகளின் மேல் தன் கால்களை வைத்து அழுத்திக் கொண்டான்.
இராவணனின் இந்தச் செயலால் அவன் நினைத்தபடியே அவனுக்குப் பிறக்கும் குழந்தை இருக்கும் என்பது உறுதியானது. அப்பன் செய்யும் அட்டூழியம் போதாதென்று பிள்ளையும் சேர்ந்து தங்களை இம்சிக்கப் போகிறானே என நினைத்த தேவர்கள் எல்லாக் கிரகங்களையும் சந்தித்து இயக்கத்தின் மூலம் தங்களின் நிலைகளை மாற்றிக் கொள்ளும் படிக் கேட்டனர். காசு கொடுத்தால் மட்டுமே உனக்கு வாக்களிப்பேன் எனச் சொல்லும் நவீன வாக்களனைப் போல உங்கள் கெஞ்சலுக்காக எல்லாம் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக் கொள்ள முடியாது. அப்படி மாற்றினால் வெற்றி பெற்ற பின் தனக்கு வாக்களிக்காத மக்களை பழி வாங்கும் அரசியல் தலைவர் போல இராவணன் தன் பலத்தினால் எங்களை உண்டு, இல்லைன்னு ஆக்கி விடுவான். அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கிரகங்கள் எல்லாம் மறுத்து கை விரித்து விட சனிபகவான் மட்டும் தன்னுடைய இயக்கத்தை மாற்றிக் கொண்டு அதன் மூலம் இராவணனின் ஆசைக்கு முதல் சங்கை நான் ஊதுகிறேன் என தேவர்களுக்கு உறுதியளித்தார். உறுதியளித்த கையோடு அப்படிச் செய்ய வேண்டுமானால் இராவணன் தன் மீது வைத்து அழுத்திக் கொண்டிருக்கும் கால்களை சிறிது நேரம் எடுக்க வேண்டும் என்று ஒரு கண்டிசனையும் போட்டார். ”கண்டிசன் அப்ளே” (CONDITION APPLY) அப்பவே இருந்திருக்கு!
கண்டிசன் என்னமோ கேட்க நல்லாத்தான் இருக்கு? ஆனால் நடைமுறைக்கு உகந்ததாய் இல்லையே? என தேவர்கள் யோசிக்க ஆரம்பித்தனர். உன் காலைக் கொஞ்சம் எடு என இராவணனிடம் போய் கேட்க அவன் நம் தலையை எடுத்து விட்டால் என்ன செய்வது? இதைக் கேட்ட மாத்திரத்தில் நம்மைக் குதறி எறிந்து விடமாட்டானா? என புலம்பித் தவித்தவர்கள் தங்களுக்கு உதவ நாரதரைத் தேர்ந்தெடுத்தனர். அவரைச் சந்தித்து விசயத்தைச் சொன்னார்கள். வளர்த்த அப்பனுக்கு எதிராக மகனையே கொம்பு சீவி விட்டு அவனுக்காகவே திருமாலை நரசிம்ம அவதாரம் எடுக்க வைத்த நாரதரோ அது ஒன்றும் தனக்குப் பெரிய விசயமில்லை. ஒரு சூழ்ச்சி நாடகத்தைப் போட்டாவது நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறி விட்டு நாராயண நாமத்தைச் சொல்லியபடியே இராவணனை வந்து சந்தித்தார். புகழுக்கு அலையும் இராவணனை அந்தப் புகழ் வார்த்தையாலயே வீழ்த்துவது என முடிவு செய்த நாரதர், “அரக்க மகாராஜாவே! போரில் வென்றவன் வீழ்ந்தவர்களின் மார்பில் கால் வைத்து நிற்பது தானே வழக்கம். ஆனால், பெரும் பலசாலியான, வெற்றி வீரனாகத் திகழும் நீங்கள் கிரகங்களை எல்லாம் குப்புற வீழ்த்தி முதுகில் கால் வைத்து நிற்கிறீர்களே! இது உங்களுக்கு அவமானமில்லையா?” எனச் சொன்னதும் இராவணன் எல்லா கிரகங்களையும் திருப்பி போட்டான். அப்படி சனிபகவானை திருப்பிய விநாடி அவர் இராவணனை பார்த்து விட அவனுக்கு கஷ்டகாலம் ஆரம்பமானது. வந்த வேளையை நாசுக்காய் முடித்த நாரதர் வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து கிளம்பினார்.
அச்சமயத்தில் இராவணனின் சகோதரி இராம, இலட்சுமணரிடம் போய் வம்பிழுத்து மூக்கறுபட்டு வந்து நின்றாள். தன் தங்கைக்கு நேர்ந்த அவமானத்திற்குப் பழிக்குப் பழி வாங்க முடிவு செய்த இராவணன் அடுத்தடுத்து செய்த செயல்கள் அவனுக்கே தீராத தலைவலியாய் மாறியதால் கடுப்பானவன் இதற்கெல்லாம் காரணமான சனிபகவானை ஒரு இருட்டு அறையில் தள்ளி பூட்டிச் சிறை வைத்தான்.
அச்சமயத்தில் சீதையைத் தேடி இலங்கைக்கு வந்திருந்த அனுமனைக் கட்டி வைத்து வாலில் தீ வைத்து அரக்கர்கள் பொசுக்க நினைத்த போது அவர்கள் வைத்த நெருப்பைக் கொண்டே அரக்கர்களை அழித்த அனுமன் இலங்கை நகருக்கும் தீ வைத்தான். அப்படி தீ வைத்துக் கொண்டு வந்த சமயத்தில் இருட்டறை ஒன்றிற்குள் முனங்கும் சப்தம் கேட்க அதற்குள் நுழைந்த அனுமன் அங்கு எலும்பும், தோலுமாய் கிடந்த ஒரு உருவத்தைக் கண்டு அதிர்ந்து போனார். அழாத குறையாய் நடந்தவைகளைச் சொல்லி தன்னைக் காப்பற்றும் படி சனிபகவான் வேண்டிக் கொள்ள அனுமனும் அவருக்கு உதவினார்.
இனாமாய் கொடுத்த இடத்தை தன் பெயருக்கே பத்திரம் போட்ட கதையாய் தன்னைக் காப்பாற்றிய அனுமனிடம் ”என் பார்வை யார் மீது படுகிறதோ அவர்கள் ஏழரை ஆண்டுகள் கஷ்டப்பட்டே ஆக வேண்டும்” எனத் தான் வாங்கி வந்த வரம் காரணமாக இப்போது என் பார்வை பட்டதால் நீயும் கஷ்டப்பட்டே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறாய் என சனிபகவான் கூறினார். பரமன் இராமபிரானின் பக்தன் நான். உன் கஷ்டம் என்னை ஒன்றும் செய்து விடாது எனக் கூறிய அனுமன் உன் பார்வை பட்டதால் அப்படி என்ன கஷ்டம் எனக்கு வந்து விடப்போகிறது? எனக் கேட்டார். சனிபகவானோ, ”உன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, வீட்டை விட்டு விலகிச் சென்று கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்” எனச் சொன்னதும் சிரித்துக் கொண்ட அனுமன், ”இவ்வளவு அப்பிராணியா இருக்கியே சனிபகவானே! நீ சொல்லும் கஷ்டமெல்லாம் சம்சாரிகளுக்கு. சராசரிகளுக்கு. நானோ பிரம்மச்சாரி எனச் சொன்னதோடு நீ வாங்கி வந்த வரம் அப்படி என்பதால் வேண்டும் போது வந்து என்னை பிடித்துக்கொள்” எனச் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்.
சிலகாலம் கழித்து சீதையை மீட்க இராம, இலட்சுமணர் தலைமையில் வானர சேனைகளின் உதவியுடன் இலங்கைக்கு பாலம் அமைக்கும் (சேது அணை) பணியில் அனுமன் பிசியாக இருந்த போது அங்கே வந்த சனிபகவான் தங்களை ஒன்றரை மணி நாழிகை பிடிக்க வேண்டும் எனக்கூறி அனுமதி கேட்டார். அதோடு, தாங்கள் இராமபக்தராக இருப்பதால் நான் பிடிக்க வேண்டிய இடத்தை நீங்களே தேர்வு செய்து சொல்லலாம் எனச் சலுகையும் தந்தார். இன்னைக்கு சிக்குன சனி இனி நம்ம பக்கமே வரக்கூடாது என முடிவு செய்த அனுமன் பல வீடுகளில் கோபத்தால் ஆண்கள் சொல்லும் டயலாக்கைப் போலவே என் தலையில் உட்காரு எனச் சொன்னார். வீட்டு ஆண்கள் திமிரில் சொல்வதை அனுமன் திட்டமிட்டுச் சொன்னார். அடடா……….இவ்வளவு எளிதாக அனுமதி கிடைச்சிடுச்சேன்னு நினைத்த சனிபகவானும் சமர்த்தாக தலையில் ஏறி அமர்ந்து கொண்டார்.
அடுத்த நொடி சனிபகவானுக்கு பிடித்தது சனி! அனுமன் அணைகட்டுவதற்கு வேண்டிய பெரிய கற்களையும், வேரோடு
பறித்த மரங்களையும் தன் தலையில் ஏற்றிக் கொண்டே இருந்தார். ஆரம்பத்தில் சங்கடமாக உணர்ந்த சனிபகவானுக்கு நேரம் போகப் போக மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. துடி துடித்துப் போனார். உங்களின் பெருமை தெரியாமல் உங்களைப் பிடிக்க வந்தது என் தப்பு தான். என்னை விட்டு விடுங்கள். உங்கள் பக்கமே இனி தலைவைத்துப் படுக்க மாட்டேன் என அனுமனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.
அப்படியானால் எனக்குக் கொடுத்த இதே உறுதிமொழியை என் பக்தர்களுக்கும் சேர்த்து தருவதாய் உத்தரவாதம் கொடுத்தால் விட்டு விடுகிறேன் என அனுமன் கூறினார். கண்டிசனா? கஷ்டமா? என யோசித்த சனிபகவான் கண்டிசனுக்கு ஒப்புக்கொண்டு உத்தரவாதம் தர தலையில் இருந்தவரை தரையில் இறக்கி விட்டார். அதனால் தான் அனுமனின் பக்தர்களிடம் சனி பகவானின் சால்சாப்புகள் எடுபடுவதில்லை. சனிபகவான் மாதிரி தாங்க நம்மில் பலர் விசயம் தெரிந்தவர்களிடம் தன்னுடைய அரைகுறை ஞானத்தைக் காட்ட நினைத்து தங்களுக்குத் தாங்களே சூடு வைத்துக் கொள்கிறார்கள். சரி…நீங்க எப்படி?
—————————————————————————————————————————————————
கவிஞர் காவிரி மைந்தன்
புதுக்கவிதை மூலம் பலரையும் கவிதை எழுதவைத்தவர் மு.மேத்தா. தனது கண்ணீர் பூக்கள் படைப்பின் மூலம் இளைஞர்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்த கவிஞர். கவியரங்கங்கள் பலவற்றின் தலைமை இவருக்கு சொந்தம்! முத்தான கருத்துக்களால் முன்னிலையில் இருப்பவர்! இவரின் திரையுலகப் பிரவேசம் சிற்சிலப் பாடல்களில் மட்டுமிருந்தாலும் சிறப்புக்குப் பஞ்சமில்லை! கற்பனைகளை மட்டும் தொட்டுக் கொண்டிருக்காமல், எதார்த்தங்களை எடுத்தாள்வது இவரின் கலை!
கவிதாலயா நிறுவனத்தின் சார்பில் கே.பாலச்சந்தர் தயாரிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் மு.மேத்தா வழங்கியிருக்கிறார் என்பது இனிப்பான செய்தியாகும்! இதே போல்.. கவிவேந்தர் இளந்தேவன் அவர்களைப் பயன்படுத்தி கல்கி திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதவைத்தவர் பாலச்சந்தர் ஆகும் என்கிற செய்தியையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
வேலைக்காரன் திரைப்படத்தில்.. இடம்பெற்ற பாடல்களில்.. வேலைக்காரன் என்கிற தலைப்பையொட்டி அமைந்த பாடல் வரிகளும் சரி.. தோட்டத்திலே பாத்தி கட்டி.. என்று தொடங்கும் பாடலில் சென்னையைப் பற்றிய குறிப்புகளும் சரி.. இதோ இங்கே நாம் காணவிருக்கிற காதல் பாடலான.. வா..வா.. கண்ணா.. வா.. என்கிற பாடலும் சரி.. அங்கங்கே திரைப்படப்பாடலாசிரியர் என்கிற தளத்திலும் கவிஞர் என்கிற படைப்பாளர் தன் முகம் காட்டியிருப்பதை நாம் காணமுடிகிறது.
சோத்துக்குள்ளே பாத்தியை கட்டுற பட்டணம் பட்டணமே.
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே
கட்சிகளும் வாங்கி இங்கே கட்டிடங்கள் வச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம் கட்டாந்தரை தானிருக்கு
கல்யாண மண்டபங்கள் கட்டிவச்சு காத்திருக்கு
கைகளிலே காசு இல்லை கன்னிப்பொண்ணு மூத்திருக்கு
இன்னமும் கதையை சொல்லட்டுமா
குப்பையை கூடையில் அள்ளட்டுமா
காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்
ஷாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்
தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்
கிடைக்கிற சிறு சந்தர்ப்பத்தையும் தன் கருத்துக்களைச் செதுக்கி வைக்கத் தெரிந்த வித்தகராய் தெரிகிறார் கவிஞர். மு.மேத்தா. இசைஞானி இளையராஜா அவர்களின் இன்னிசையும் இதற்கு ஏற்ற களமாய் அமைந்திட மேத்தாவின் கொடி பறக்கிறது.. வேலைக்காரன் படம் முழுவதும்!!
படம் : வேலைக்காரன்
பாடல் : வா வா வா கண்ணா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: மு.மேத்தா
பாடியவர்கள் : சித்ரா, மனோ
வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
உனக்கொரு சிறுகதை நான்
தொடத் தொட தொடர்கதை தான்
உருகி உருகி இதைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா
வா வா வா
வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ
காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ
நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை
நாலு கண்கள் பாதை போட
நாகரீகம் தொடர்ந்தது
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ
தொடத் தொட தொடர்கதை நீ
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா
ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே
ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதி மன்றம் போகுமே
பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே
ராக வீணை போலவே நானும் வந்து போகவோ
தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ
நானும் நீயும் காதல் கைதி
எண்ண எண்ண இனிக்குது
வா வா வா அன்பே வா
தா தா தா அமுதம் தா
காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்
ஷாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்
தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்
பாதி நீயும் பாதி நானும்
ஜோதியாக இணைந்திட
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா
எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ..ஆ..
தொடத் தொட தொடர்கதை நீ..
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா
சக்திசக்திதாசன்
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
2015ம் ஆண்டில் இரண்டாவது மடல் உங்களுக்கு வரைந்து கொண்டிருக்கிறேன். காலத்தின் வேகத்திற்கு எம்மால் ஈடு கொடுத்து ஓட முடிகிறதா ?
கோடை, வசந்தம், மாரி என வருடங்கள் தமது விலாசங்களுக்கூடாக பறந்தோடிக் கொண்டிருக்கின்றன.
வருடங்கள் பறந்தோடினால் என்ன? என்று வாளாவிருக்க முடியாமலிருக்கிறதே ! வருடங்களோடு சேர்ந்து உனது வயதும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது என்று எமக்கும் மேலே இருக்கும் ஒருவன் நரை முடிகள் மூலம் எமக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருக்கிறான்..
1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி எனது தந்தையின் அரவணைப்போடு இலங்கையின் தலைநகராம் கொழும்பில் அமைந்துள்ள ஜக்கிய இராச்சியத்தின் தூதரகத்தினுள் மாணவன் நுழைவு அனுமதி பெறுவதற்காக நுழைந்தவன் நாற்பது வருடங்களின் பின்னே வல்லமை எனும் அருமையான இணைய இதழில் அந்நாட்டு அனுபவங்களை இனிய வாசக உள்ளங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பேன் என்று எண்ணியிருப்பேனா?
1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி புதன்கிழமை பிரித்தானிய விமானசேவையில் புறப்பட்டு 30ம் திகதி வியாழக்கிழமை இந்த இங்கிலாந்து மண்ணில் கால் பதித்தேன்.
அன்னை, தந்தை எனும் பாதுகாப்புக் கவசங்களுக்கிடையில் எனது 18 வருட காலத்தைப் பயமின்றி எந்த விதப் பொறுப்புக்களுமின்றிக் கழித்த நான் அறியாத, புதிய மொழியில் பேச வேண்டிய கட்டாயத்திற்கு என்னை உள்ளாக்கி எதற்காக என் தாய்மண்ணை விட்டு புலம் பெயர்ந்தேன் ?
இது என்னை நான் பல சமயங்களில், பல தடைவைகள் கேட்டுக் கொண்ட கேள்வி.
ஈழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் வரலாற்றில் 1983க்கு முன், 1983க்குப் பின் எனும் காலகட்டம் உண்டு.
அரசியல் காரணங்களுக்காக, உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலையில், உரிமை மறுக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்தோர்கள் ஏராளம்.
ஆனால் நான் என் புலம்பெயருக்கு அரசியல் முலாம் பூசுவது முறையல்ல. கல்வி கற்பதற்கு சகல வசதிகளையும் செய்து தந்த என் அன்னை, தந்தையின் அன்பு அர்ப்பணிப்பின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியாத முட்டாளாய் அந்நாளைய வாலிப முறுக்குகளுக்கு உள்ளாகி காலத்தையும், நேரத்தையும் விரயம் செய்ததினால் ஈழத்தில் கல்வியில் கரைகாண முடியாமல் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தவன் நான்.
மிகவும் அச்சத்துடன் இங்கிலாந்தில் நுழைந்த என்னை ஆதரித்து அரவணைத்த இந்த நாட்டின் உன்னதத்தை உண்மையாக உணர்ந்து கொள்ளத் தவறினால் அது செய்நன்றித் துரோகமாகும்.
வாழ்வில் முன்னேற்றத்தை நல்கியது மட்டுமின்றி சகலவிதமான அனுபவ யாத்திரைகளுக்கூடாக என்னை வழிநடத்திச் சென்றது இங்கிலாந்து.
நிறவெறியின் தாக்கத்தை நான் குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால் எந்த நாட்டில் இருவேறு சமூகத்தினிடையே வேறுபாடுகளைக் காட்டும் சிறுஅளவிலான மக்கள் இல்லை ?
அதற்காக நாட்டின் அனைத்து மக்களுமே நிறவெறி கொண்டவர்கள் என்று கூறுவது சரியாகுமா?
என்னுடைய இந்த நற்பது ஆண்டுகால அனுபவத்திலே இங்கிலாந்தில் கல்வி கற்பதிலும் சரி, அதன் பின்பு பணிபுரிந்த அலுவலகத்திலும் சரி என்றுமே நிறவெறியால் நான் பாதிக்கப்படவில்லை.
சில இடங்களில், சில நேரங்களில் சில கல்வியறிவு அற்ற நாகரீகம் தெரியாத வெள்ளை இனத்தவரால் நிறத்தின் அடிப்படையில் நான் பழிக்கப்பட்டதுண்டு. ஆனால் அந்நிகழ்வுகள் மிகவும் சொற்பமானவையே !
வாழ்வின் நெளிவு சுளிவுகள், வாழ்வில் நாம் எமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனும் யதார்த்த விதிகளை நான் கற்றுக்கொள்ள ஏதுவாக இருந்தது இங்கிலாந்து வாழ்க்கை.
அது மட்டுமா?
34 வருடங்களாக எனது நண்பியாக, அன்பு மனையாளாக, எனது மைந்தனின் அன்புத் தாயாக, எனது எழுத்துக்களின் முதல் வாசகியாக என்னுடன் இணைந்திருக்கும் தமிழ்நாடு தந்த என் அன்பு மனைவியின் சந்திப்பும் அதைத் தொடர்ந்து நடந்த எமது திருமணமும் என்னை வாழவைத்த இந்த இங்கிலாந்து நாட்டில் தானே !
மாணவனாக வாழ்ந்த காலத்தில் பகுதிநேர வேலை பார்த்து எனது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையேற்பட்ட போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எனது பெற்றோரின் அர்ப்பணிப்புகளின் ஆழம் புரியத் தொடங்கியது.
அவ்வன்புத் தெய்வங்களின் அருமையும், பெருமையும் உள்ளத்தில் உறையத் தொடங்கியது. அதுவரையும் அவர்கள் மீது தான் விரித்திருந்தது வெறும் பாசத்திரையே !. ஆனால் அத்திரைக்குப்பின்னால் அவர்கள் எனக்காக எனக்கு மட்டுமல்ல எனது சகோதரங்களுக்காக செய்த அன்பான தியாகங்கள், அர்பணிப்புக்கள் என்பனவற்றை முறையாக உணர்ந்ததினால் தான் இன்று எனது மனைவிக்கு ஒரு கணவனாக அன்பு மைந்தனுக்கு ஒரு பாசமிகு தந்தையாக எனது கடமைகளைப் புரிய முடிகிறது.
இந்த அளப்பரிய அறிவை எனக்குப் புகட்டியது இவ்விங்கிலாந்து தேசத்து நாற்பது வருட வாழ்க்கை அனுபவம் என்றால் அது மிகையாகாது.
உண்மையான நட்பை அடையாளம் காணுவது , அந்நட்புகளின் அத்தியாவசியம் என்பன எனக்குத் தெளிவாகத் தெரிந்ததும் இவ்வாழ்க்கையின் அடிப்படையில் தான்.
அனைத்திற்கும் மேலாக எனது உள்ளத்தில் எங்கோ சிறுபொறியாகத் திகழ்ந்த தமிழுணர்வைத் தட்டியெழுப்பி மனவோட்டங்களை வரிகளாக்கி எழுத்துக்களில் மூழ்கவைத்ததும் புலம்பெயர் வாழ்க்கைதான்.
என் அன்பு வாசக நெஞ்சங்களே ! இம்மடல் எனது நாற்பது ஆண்டுகால இங்கிலாந்து வாழ்க்கைக்கான ஒரு அஞ்சலி மடலாக உங்கள் முன்னே பரிமணிக்கிறது.
ஒரு சிறிய ஓய்விற்காக மூன்றுவார கால விடுமுறையின் பின்னே பெப்பிரவரி மாத முதல் வாரத்தில் மீண்டும் உங்களுடன் மடல் வாயிலாக இணைகிறேன்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
[download id=”கசடதபற”]பயணம்
உடல் நலத்திற்குக் கேடெனும்
அறிவிப்பு வேகத்தடையிருந்தும்
வாடிக்கையாளரை ஏற்றிச் சுமந்து
விற்பனையில் வேகமாக பயணிக்கும்
போதை விட(ஷ)ப் பொருள்கள்..
தலை வெடித்துச் சிதறும்
மரணத்தூது வருமென அறிந்தும்
தலைக்கவசம் அணியாது
சாலையில் சுய ஓட்டுநராய்
வண்டி பறக்க பயணிக்கும்
இளைய மட மனங்கள்..
சட்டம் வகுத்து தரும்
நெறிகளைச் சட்டைசெய்யாமல்
அசட்டையாய் சாலையில்
பேசியும் இசை நுகர்ந்தும்
கைபேசியுடன் உறவாடியபடி
பயணிக்கும் பாதசாரி
பகுத்தறிவு ஜட உயிர்கள்..
ஒன்றும் அறியாத
குழந்தைகளா
நினைவிழப்பு நோயின்
வயது முதிர்வா
பகுத்தறியத் தெரியாத
இயற்கை சதிசெய்த
பிறவிப் பைத்தியங்களாயென
அறிந்துகொள்ள இயலாதவாறு
மூடர்களாய் மூடப்பழக்கவழக்கத்தில்
இணைந்து பயணிக்கும்
கூடயிருந்தே குழிபறிக்கும்
கபட உறவுகள்..
பொய் முகம் கழற்றி
பொலிவான பகுத்தறிவு தலைக்கவசமிட்டு
பொங்கும் அன்போடு நிலைக்கும்
பொறுமை பண்பு வண்டியை
பொறுப்பாய் இயக்கினால்
பொன்னாகும் வாழ்க்கைப் பயணம்..!!
… நாகினி
நாகேஸ்வரி அண்ணாமலை
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருபத்தோராம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு அதிசயத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. மொத்த இந்தியாவிலும் குற்றம் புரிந்த ஒன்பது இந்துச் சாமியார்கள் அரசிற்குச் சவாலாக இருந்து தீராத பிரச்சினைகளை உருவாக்கி வருவதாக ஒரு தமிழ்ப் பத்திரிக்கை பட்டியல் கொடுத்திருந்தது. இவர்களில் பலர் பாலியல் குற்றங்கள் புரிந்தவர்கள். இதில் நான் கீழே குறிப்பிடப்போகும் சாமியாரும் அடக்கம். ஆனால் அவருடைய சிஷ்யர்கள் அவர் இறந்த பிறகும் அரசிற்கு இடைஞ்சல் கொடுத்துவருகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
இவர் ஒரு பெரிய ஆசிரமம் நடத்திவந்தார். நானூறு ஏக்கர் நிலத்தில் இவரது ஆசிரமம் நடந்துவருகிறது. பல ஏழை மக்கள் அங்கு வாழ்ந்துவருகிறார்கள். அங்கு எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து நிலங்களில் பாடுபடுகிறார்கள். ஆனந்தமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். ஒரு ஆயுர்வேத மருந்தகமும் ஆசிரமத்திற்குள் இருக்கிறது. தினமும் 25 லிட்டர் பால் கொடுக்கும் 750 கறவைப் பசுக்கள் இருக்கின்றன. ஏழை மக்களுக்கு வாழ வழிவகுத்திருக்கும் இந்தச் சாமியாருக்கு ஏராளமான பக்தர்கள். இப்படிச் சில பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன.
இவர் 2013-ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமாகிறார். ஆனால் அவருடைய சிஷ்யர்களும் பக்தர்களும் அவர் மறுபடியும் உயிர்பெற்று வருவார் என்று நம்பிக்கொண்டு அவருடைய உடலைத் தகனம் செய்யாமல் ஒரு குளிர் பெட்டியில் பத்திரமாக பதப்படுத்தி ஆசிரமத்தின் ஒரு உள் அறையில் வைத்திருக்கிறார்கள். அவருடைய மகன் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்து அவருக்கு மகன் என்ற முறையில் ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் என்கிறார். ஆனால் அவர் இறக்கவில்லை, எப்படியும் மறுபடி உயிர்பெற்று வருவார் என்று திடமாக நம்பிக்கொண்டிருக்கும் அவருடைய சிஷ்யர்களும் மற்ற பக்தர்களும் இதற்குச் சம்மதிக்கவில்லை. இந்த விஷயம் நீதிமன்றம் வரை கொண்டுசெல்லப்பட்டு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் பதினைந்து நாட்களுக்குள் இவருடைய உடல் தகனம்செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது. ஆயினும் நீதிமன்ற ஆணைக்கு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. இப்போது ஆசிரமத்திற்குள் ஒரு சிலரையே அனுமதிக்கிறார்கள். சாமியார் உயிரோடு இருந்தபோது அவருக்கு வேண்டாதவர்களால் ஆபத்து ஏற்படும் என்பதால் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இப்போதும் அதே பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அதாவது அவருடைய உடலை தகனம் செய்யக் கூடாது என்று அடம்பிடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவருடைய ஆசிரமத்தைச் சுற்றிப் பலத்த காவல் இருக்கிறது. இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அதுபோல் இவருக்கு உயிரோடு இருக்கும்போதும் பாதுகாப்பு, இறந்த பிறகும் பாதுகாப்பு.
அரசு உயர் அதிகாரிகளில் பலரும் காவல்துறையைச் சேர்ந்தவர்களில் பலரும் இவருடைய பக்தர்கள். இவருடைய ஆசிரமத்திற்கு அடிக்கடி வருபவர்கள். இவர்களுக்கு இப்போது தர்மசங்கடமான நிலை. தாங்கள் கடவுளுக்குச் சமமானவர் என்று நினைத்து மதிக்கப்பட்டவரை உயர்நீதிமன்ற ஆணையின்படி தகனம் செய்வது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதே சமயம் நீதிமன்ற ஆணையை மீறவும் முடியவில்லை. ஆசிரமத்தைச் சுற்றியிருக்கும் சுவர்களுக்கு உள்ளே யூனிபார்ம் அணிந்த காவலர் யாரும் தென்படவில்லை. ஒரு சிலரே ஆசிரமத்திற்குள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆசிரமத்திற்கு வெளியே இருக்கும் ஊரில் உள்ள மக்களிடையே அவரது உடலை வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்போரும் அவர் திரும்பி வருவார் என்போரும் ஆக இரு தரப்பினர் இருக்கிறார்கள். அந்த ஊரில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் ஒருவர் கடந்த மூன்று வருடங்களாக அவருடைய வியாபாரம் செழித்துவருவதாகவும் அதற்கு அவர் அடிக்கடி ஆசிரமத்திற்குச் சென்று சாமியாரைத் தரிசித்து வந்தது ஒரு காரணம் என்றும் அவர் எப்படியும் உயிர்பெற்று வருவார் என்றும் ஏனெனில் அவருடைய ஆத்மா மிகவும் சுத்தமானது என்றும் வாதிடுகிறார். 81 வயதான ஒரு விவசாயி அவருடைய ஊரில் பலர் சாமியாரின் பக்தர்கள் என்றும் ஆனால் ஒருவர் கூட அவரைப் பார்த்ததில்லை என்றும் கூறுகிறார். முந்தையவர் அவரைத் தான் பார்த்ததாக உறுதியாகக் கூறுகிறார். இப்போது அவர் உயிரோடு இருக்கிறார் என்றால் எழுந்துவந்து எல்லோருக்கும் தரிசனம் கொடுக்க வேண்டியதுதானே என்கிறார் பிந்தையவர். ‘சமாதி’ நிலையில் இருப்பவர் குளிர்சாதனப் பெட்டியில் இருப்பானேன் என்பதும் இவருடைய கேள்வி.
மற்ற மாநிலங்களிலிருந்து வேலை தேடி வந்திருக்கும் பலருக்கு இவர் வேலைவாய்ப்பும் வாழ்க்கை வசதிகளும் செய்துகொடுத்து அவர்களுடைய ஓட்டுக்களை இவர் வாங்கிக் கொடுத்ததால் சாமியாருக்கு நிறைய அரசியல்வாதிகள் நண்பர்கள். சாமியார் இறந்த பிறகும் அரசியல்வாதிகளும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இறந்த சாமியாருக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.
விஞ்ஞான வளர்ச்சியும் சிந்திக்கும் திறனும் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இறந்த ஒரு மனிதர் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கை மனிதர்களுக்கு இருக்குமானால் சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் சிலுவையில் உயிர்துறந்த இயேசு உயிர்த்தெழுந்தார் என்று அப்போது மக்கள் நம்பினார்கள் என்றால் அதில் வியப்பேதும் இல்லை.
சு. கோதண்டராமன்
ருதத்தின் பிற பெயர்கள்
திமிங்கில முதல் புழு வரை ஒவ்வோருயிர்க்கும் அததற்குரிய தர்மங்கள் உண்டு. நட்சத்திரங்கள் சூரிய சந்திரன் முதலாக அணுக்கள் வரை ஒவ்வொரு வஸ்துவுக்கும் உரிய தர்மங்கள் உண்டு. மேலும் ஒன்றிற்கே கால தேச வர்த்தமானங்களுக்குத் தக்கபடி தருமங்கள் மாறுபடுகின்றன. – பாரதி
ருதத்திற்கு தர்மம், ஸ்வதா, விரதம் என்ற வேறு பெயர்கள் உண்டு. எல்லாமே காரணப் பெயர்கள் தாம்.
இந்த இயற்கை நியதி மனிதனை மேல் நிலைக்கு உ.யர்த்துகிறது. அதனால் இது உயர்வாகப் போற்றப்படுகிறது. அதனால் உயர்த்தப்பட்டது என்ற பொருளில் ருதம் எனப்படுகிறது.
ருதம் என்ற சொல்லின் வேர் – ரு ऋ என்பதாகும். இது படர்க்கை ஒருமையில் ருச்சதி ऋच्छति, இயர்த்தி इयर्ति, ருண்வதி ऋण्वति என மூன்று வகையாக உரு மாறும். ரிக் வேதத்தில் இவை இயக்குதல், உயர்த்துதல், தூண்டுதல் என்ற பொருளிலேயே வருகின்றன. இதிலிருந்து தோன்றியதுதான் ருதம் ऋतम्. எனவே எது உயர்த்தப்படுகிறதோ, எது தூண்டப்படுகிறதோ, எது இயக்கப்படுகிறதோ அது ருதம் ஆகும். இதை இயக்கும் சக்தி ஒன்று உண்டு என்பது மறைமுகமாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மையாலும் மனித முயற்சி இன்றித் தானாகவே நடைபெறுவதாலும் ஸ்வதா எனப்படுகிறது.
(ஸ்வ+தா= தன்னைத் தானே தாங்குதல்)
நீர் ஸ்வதாவின்படி ஓடியது. (1.33.11)
சூரியன் ஸ்வதாவின்படி மேலே உயர்கிறது. (10.37.5)
கடந்த காலத்திலும், இன்றும் வருங்காலத்திலும் உஷா தினம்தோறும் ஸ்வதாவின்படி ஒளியைப் பரப்புவாள். (1.113.13)
இந்த இயற்கை நியதியின் இயக்கம் தான் பிரபஞ்சத்தைத் தாங்குகிறது. இதனால் இது தர்மம் என்று அழைக்கப்படுகிறது. (எது தாங்குகிறதோ, எது தாங்கப்படுகிறதோ அது தர்மம்.)
ஆதித்யர்கள் உலகத்தைத் தாங்குவது ருதத்தினால். (2.27.4)
இந்திரன் தர்மத்தைக் கொண்டு ஆறுகளை விரியச் செய்தார், வயல்களில் தாவரங்களை மலர்வித்துக் கனி தரச் செய்தார். (2,13.7)
மித்ரனும் வருணனும் தங்கள் தர்மத்தைக் கொண்டு விரதங்களைக் காக்கின்றனர். ருதத்தைக் கொண்டு எல்லா உலகங்களையும் ஆள்கின்றனர். அவர்கள் சூரியனை விண்ணில் அமைத்தனர். (5,63.7)
விண்ணும் மண்ணும் வருணனின் தர்மத்தைக் கொண்டு நிலை நாட்டப்-பட்டுள்ளன. (6,70.1)
இயற்கை நியதியில் ஒவ்வொரு பிராணிக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு தேவருக்கும் ஒரு தனித் தன்மை உண்டு. அந்தத் தனித் தன்மையைக் குறிப்பிடும்போது ருதத்திற்கு வ்ரதம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. எதிரிகளை அழிப்பது இந்திரனின் விரதம். மருத்துவம் செய்வது அசுவினிகளின் விரதம்.
ராட்சசர்களுக்கும் ஸ்வதா உண்டு. (7.104.9) துன்புறுத்துவது அவர்கள் இயல்பு. குதிரைக்கு ருதம் உண்டு. உயிரற்ற கதவுக்குக் கூட ருதம் உண்டு.
பசுக்களும் ஆறுகளும் இந்திரனின் விரதத்தைப் பின்பற்றுகின்றன. (1.84.12, 1.101.3)
தேவர்களின் விரதத்தின் காரணமாக இரவும் பகலும் உண்டாகின்றன. (1.24.10, 3.60.6)
பறவைகள் மரத்தில் வசிப்பது விரதங்களை அனுசரித்தே. (2.38.7)
தேவர்கள் விரதங்களைக் காப்பாற்றுகிறார்கள். அவரவருக்கும் தனித் தனி விரதங்கள் உண்டு. (10.61.7, 1.31.10)
தேவர்களின் விரதங்கள் ரகசியமானவை. அவற்றை ரிஷிகள் மட்டுமே அறிவார்கள். (10.114.2)
தேவர்களின் விரதங்கள் மீறப்பட முடியாதவை. (1.69.4)
மாயாவிகளும் விரதத்தை மீற முடியாது. அறிஞர்களும் முடியாது. (3.56.1)
அறிவாளிகளான ரிஷிகள் விரதங்களை மீறுவதில்லை. (7.31.11, 7.76.5)
விரதங்களை அனுசரிப்பவர்கள் சிறப்படைகிறார்கள். (3.59.2)
கிரேசி மோகன்
ஒருமடியில் அன்னை மறுமடியில் பிள்ளை,
இருமடியில் முன்பு இரணியன், -கரபடையோன்,(நகங்கள் ஆயுதம் நரசிம்மனுக்கு)
சத்ருவை சம்ஹரித்து சாந்தமு லேகாவாய்,
இத்தருணம் கண்டேன் இகம்”….கிரேசி மோகன்….
இசைக்கவி ரமணன்
விசைத்துநிற்கும் சூலம் வியந்தடங்கும் காலம்
விரல்கள்பத்தும் தங்கம் நகங்கள் வெள்ளிமின்னும்
இசைக்குளே ஸ்வரங்களாய்த் துளிர்க்கும் விந்தைக் கோலம்
இதற்குமேல் பதங்களில் அகப்படாத மாயம்
சிலிர்த்த தங்க அருவிபோலச் சிங்கமொன்றின் பிடரி
பணிந்துவென்ற வாழ்வினைப் பரப்பும் இன்பப் புலரி
புலிக்குகை புகுந்தமான் நிலைநிகர்த்த பாதம்
இகம்பரம் சுகம்துயர் இலாது நீளும் மாயம்
சினக்கணப்பி னுள்ளே புனத்துழாயின் வாசம்
தனிக்கணத்தில் வந்து தனைக்கவிழ்க்கும் நேசம்
இனிப்பிறப்பிறப்பிலாத இன்பம் மண்டும் பாதம்
அணுக்கணுப் பிளந்துபொங்கும் அந்த மந்தகாசம்
வினாக்களில் விடைகளாய் விளங்கும் ஞான வெள்ளி
விடைகளில் வினாக்களாய்க் குழப்பும் மோனக் கள்ளி
அனைத்தும்நீ எனப்பணிந்த போதொடுங்கும் புள்ளி
நினைப்பிலா வியப்பிலே தனைவழங்கும் அள்ளி
நரைவிழாத நெஞ்சம் கறைபடாத சித்தம்
மறைவிலாத காதல் மனம்விடாத போதை
குறைவிலாத வாழ்வெலாம் இவள்கொடுத்த பிச்சை
நிறைவெலாம் தகர்த்து மீறும் இவள்பதத்தின் இச்சை
அனைத்திலும் இவள்முகம் ஜனித்து நெஞ்சம் கூசும்
அகத்திலே சுகந்தமாய் அமிழ்தவார்த்தை பேசும்
இதற்குமேலும் ஏதுமில்லை என்றெழுந்த சொல்லைச்
சிதைக்கவே மனத்திலே சிலிர்த்தெழுந்த முல்லை
தலைவணங்கும் போது தனைவழங்கும் தேவி
தலைமணக்கும் தமிழின் தரம்வளர்க்கும் ஆவி
கரங்களும் ஒடுங்க கண்ணில் கங்கை வந்து பொங்க
கரைகிறேன் கரைகிறேன் உன் கால்கள் மட்டும் தங்க
தொடர்ந்துகொஞ்சும் தோழியேவுன் தோள்கள் சரணம் சரணம்
தொடர்ந்திடும் வினைவிரட்டும் வாள்கள் சரணம் சரணம்
படர்ந்தகண்கள் பட்டுவீழ்ந்த பாதம் சரணம் சரணம்
தடங்கள் தீர்த்துத் தழுவிக்கொண்ட
தாயே சரணம் சரணம்!
முனைவர் மு.பழனியப்பன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை
தொல்காப்பியப் பொருள் இலக்கணம் இருவகைப்படுகின்றது. அக இலக்கணம், புற இலக்கணம் எனபனவாகும். இவ்விரண்டிற்கும் தனித்த இலக்கண மரபுகள் தொல்காப்பியரால் காட்டப்பெற்றுள்ளன. அக இலக்கண மரபுகளை அப்படியே தாங்கிச் சங்க இலக்கிய அகப் பாடல்கள் அமைந்துள்ளன. புற இலக்கண மரபுகளை அப்படியே ஏற்று புற இலக்கியங்கள் படைக்கப்பெற்றுள்ளன. சங்கம் மருவிய காலத்தில் சிற்சில மாறுபாடுகள் இவ்விலக்கண மரபுகளி;ல் தோன்றினாலும், அப்பகுப்பு சார்ந்த அக, புற இலக்கியங்கள் தொல்காப்பிய மரபுகளைப் பின்பற்றின என்பதில் ஐயமில்லை. இதற்குப் பின் சிலப்பதிகாரம் தோற்றம் பெறுகின்றது. ஏறக்குறைய பத்துப்பாட்டின் வளர்ச்சி நிலை சிலப்பதிகாரம் எனக் கொள்ளலாம். நெடிய பாடலாக விளங்கும் பத்துப்பாட்டு அமைப்புமுறையின் நீட்சிச் சிலப்பதிகாரக் காப்பியமாக வளர்கின்றது. இதனுள்ளும் அக, புற இலக்கணங்களின் மரபுகள் பின்பற்றப்பெற்றுள்ளன. அவற்றை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
புற இலக்கணம் வரையறை
புறம் என்ற இலக்கணத்தின் அடிப்படையை அறிந்து கொள்ள இளம்பூரணரின் விளக்கம் பயன்படுகின்றது. ~~புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் செங்தலும் ஆகலான் அவற்றானாய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார் என்ற புற இலக்கணம் பற்றிய குறிப்பு, புறத்திணைப் பொருள் இலக்கணத்தின் அடிப்படையை எடுத்தியம்புகின்றது.
தொல்காப்பியர் அகத்தை ஏழாகப் பிரித்தது போலவே புறத்தையும் ஏழாகவேப் பிரித்தார். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய எழு திணைகள் தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் ஆகும்.
வெட்சி என்பது ஆநிலை கவர்தல் ஆகும். வஞ்சி என்பது மண் கருதிய போராகும். உழிஞை எதிரி அரசனின் அரணை முற்றுகையிடலும், அம்முற்றுகையை அவ்வரசன் முறித்தலும் ஆகும். தும்மை என்பது இரு பெரு வேந்தர்களும் போர் எதிர்தலாகும். வாகை என்பது வெற்றியைக் குறி;ப்பதாகும். காஞ்சி என்பது யாக்கை, செல்வம், இளமை ஆகியனவற்றின் நிலையாத் திறம் காட்டிப் போரை விலக்கல் ஆகும். பாடாண் என்பது இவ்வகையில் n;வற்றி பெற்று அடங்கி வாழ்ந்தத் தலைவன் ஒருவனின் புகழ் பாடுவதாகும். இத்துறைகளுக்கு வைக்கப்பெற்ற பெயர்கள் பூக்களின் பெயர்கள் ஆகும். இப்பூக்களை மூடி இவ்வினைகளைத் தமிழர்கள் ஆற்றினர். இதன் காரணமாக சமுதாயத்தில், போர்க்களத்தில் அவர்கள் எக்குழு சார்ந்தவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளமுடிந்தது.
சிலப்பதிகாரம் – புறத்திணைச் சார்புடையது
சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வகையில் அமைந்த முத்தமிழ்க் காப்பியம் ஆகும். இதனை இயற்றிய இளங்கோவடிகள் அரச மரபினர் என்பதால் அவர் புறத்திணை மரபுகளைப் பெரிதும் அறிந்தவர் ஆகின்றார். இதன் காரணமாக அவர் படைத்த சிலப்பதிகாரம் முழுவதிலும் தொல்காப்பிய புறத்திணை மரபுகள் விரவிக் கிடப்பதைக் காணமுடிகின்றது.
சிலப்பதிகாரப் புறத்திணைக் கூறுகள் என்ற பொருளில் நூல் வரைந்துள்ள, இராம தட்சிணாமூர்த்தி சிலப்பதிகாரத்தில் அனைத்துக் காதைகளிலும் இடம்பெற்றுள்ள புறத்திணைக் கூறுகளை எடுத்தியம்பியுள்ளார். அவர் தம் நூலில், சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலும், புறப்பொருள் வெண்பாமாலையின் புறத்திணையியலும் இணைந்து இடம்பெற்றுள்ள திறத்தைக் காட்டியுள்ளார். அவரின் கருத்துகள் சிலப்பதிகாரம் பின்பற்றிய புறத்திணை மரபுகளின் இயல்புகளை தெளிவுடன் காட்டுகின்றன. அவற்றில் சில பின்வருமாறு.
~~சங்க இலக்கிய மரபை முழுக்க மறுக்காமலும், முழுக்கப் பற்றாமலும் சிலப்பதிகாரத்தை அடிகள் ஆக்கினார். ஒரு வணிகக் குடிமகனுக்கும், அவன் மனைவிக்கும் ஏற்பட்ட வாழ்க்கைச் சுழல்களையும், அழல்களையும் விளக்கி ஒரு பெரிய தொடர்நிலைச் செய்யுளைப் படைத்தார். தம் கதையின் மூலமாக, சில உண்மைகளைக் கூற முனைந்தார். அவற்றையே முப்பேருண்மைகளாகக் குறிப்பிட்டார். அதுகாறும் இலக்கியங்களின் போக்குக்கும், நோக்குக்கும் அடிப்படையாக அமைந்த ~பொருளிலக்கண வழக்கு அவரது புதிய இலக்கியத்திற்கு இன்றியமையாத தேவையாயில்லை. ஆனாலும் சங்க இலக்கியப் பொருள் இலக்கண மரபின் தாக்கத்தை அவர் நூலில் காணமுடிகின்றது என்ற அவரின் கருத்து சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் புறத்திணை மரபுகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் இளங்கோவடிகள் பின்பற்ற முனைந்துள்ளமையைக் குறிப்பிடுகின்றது.
அவரே ~~மறத்துறையைச் சார்ந்த திணை, துறைகளை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பொருத்தி, வீரப் பெண்மைக்குப் புகழ் பாடியவர் இளங்கோவடிகள். வஞ்சிக் காண்டத்தில் கண்ணகி ~வீரபத்தினி| என்றே குறிக்கப் பெறுகிறாள். பண்டைக்காலத்தில் தமிழகத்தில் வீரமிக்க ஆடவர்கட்குக் கல்லெடுப்பது மரபு. இதை நடுகல் என்பர். நடுக்கல்லில் இறந்த தலைவனுடைய பெயரையும், சிறப்புகளையும் எழுதி மயிற்பீலி சூட்டி வணங்குவர்.
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடு மெழுதி யதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
சிலம்பில், கண்ணகி என்ற பெண்ணுக்கே நடுகல் விழா நடக்கின்றது.
~~காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர
என்று தொல்காப்பியம் கூறும் புறத்திணைத் துறைகளையே வஞ்சிக்காண்டத்தின் தலைப்புக்களாகக் கொடுத்துள்ளார் இளங்கோவடிகள் என்ற மேற்குறித்த ஆய்வாளரின் கருத்து தொல்காப்பியத்தில் காட்டப்பெற்ற ஆண் புற மரபுகள் சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கும் உரியதாக ஆக்கப்பட்டதைக் காட்டுகின்றது.
சிலப்பதிகாரக் காட்சிக் காதை- தொல்காப்பிய புறத்திணையியலின் சிறிய வடிவம் எனக் கொள்ளத்தக்கது என்கிறார் மேற்சுட்டிய ஆய்வாளர். ~~செங்குட்டுவன் தன் நாட்டைந்த பத்தினிக் கடவுளுக்குச் சிலையெடுக்க நினைந்து இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்தல் சிறந்தது எனக் கூறுகின்றான். மலையரசன் மாபெரும் பத்தினிக் கடவுளுக்குக் கல் தாரான் எனின், அவனோடு மலைவேன் என்று வஞ்சினம் கூறுகின்றான். செங்குட்டுவன் வடதிசை நோக்கிப் போர் மேலெழுவதற்காக வஞ்சினம் உரைப்பது போலவமைந்துள்ளது இப்பகுதி. தான் வஞ்சி சூடி வாளமர் செய்யும் வஞ்சி வேந்தன் :போலவும், மலையரசன் (இமயமலை) காஞ்சி வேந்தன் போலவும் குறிக்கப்பெறுகின்றனர். சேரன் கூறும் வீரவுரை முழுவதும் ~ஒரு சிறிய புறத்திணையியல்| போலவே அமைகின்றது. என்ற கருத்து சிலப்பதிகாரம் தொல்காப்பிய புறநெறிகளின்படி போர்த்திறத்தைக் காட்டியுள்ளது என்பதைத் தெரிவிக்கின்றது.
மேற்சுட்டிய ஆய்வாளரின் கருத்துகள் சிலப்பதிகாரம் தொல்காப்பிய புற மரபுகளின் வழிப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.
சிலப்பதிகாரப் புறத்திணைச் சார்புப் பகுதிகள்
சிலப்பதிகாரத்தில் புறத்திணையை ஒட்டிய மரபுகள் காதைகள் தோறும் அமைந்துள்ளன என்றாலும், கட்டுரையின் அளவு கருதி இங்கு ஒரு சில பகுதிகள் மட்டும் சுட்டிக்காட்டப்பெறுகின்றன. குறிப்பாக தொல்காப்பிய புறத்திணைகள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பாங்கு இக்கட்டுரையில் தொட்டுக் காட்டப்பெறுகின்றது.
வெட்சி
வெட்சி புறத்திணைகளில் முதல் திணையாகும். இதன் திணை மற்றும் துறைகளை மிக்க வெளிப்படையாகவே வேட்டுவ வரியில் இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
கொற்றவை கோலம் புனைந்து வந்த பெண்மகளைக் கொற்றவையாகவே கருதி அவளுக்கு வேண்டுவன செய்யும் நடைமுறை வேட்டுவவரியில் விவரிக்கப்படுகின்றது. அப்போது கொற்றவை விரும்புவது வெட்சிப் போரும், கரந்தைப்போரும் என்றுக் குறிக்கிறார் இளங்கோவடிகள்
~~உட்கு உடைச் சீறூர் ஒருமகன் ஆநிரை கொள்ள உற்ற காலை
வெட்சி மலர்புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும்போலும்
வெட்சி மலர்புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுள் காரி கரிய குரல் இசைத்துக் காட்டும் போலும்
என்ற அடிகளில் வெட்சிப் போர் முறை விளக்கப்பெற்றுள்ளது. வெட்சிப் பூக்களைச் சூடி ஒரு ஆடவன் போருக்குச் செல்கின்றான். அவனுக்குத் துணையாகக் கொற்றவையும் (கொற்றவையாகிய நீயும்) செல்லுவாய். இதன் காரணமாக வெட்சிக்கு எதிரான ஊரில் அழிவு நேரப்போகின்றது என்பதைக் கரிக்குருவி அறிவிக்கக் கிளம்பிவிட்டது என்ற செய்தியும் புள்வாய்ப்பச் சொன்ன நிமித்தமாக வெளிப்படுத்தப்பெற்றுள்ளது.
அடுத்த பாடலில்
~~கள்விலையாட்டி மறுப்பப் பொறா மறவன் கைவில் ஏந்திப்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும்போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங்காலைக்
கொள்ளும் கொடி எடுத்துக் கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும்
என்ற இந்தப் பாடலில் கொடி எடுத்துக்கொண்டு வெட்சிப்போருக்குப் புறப்பட்ட ஆண்மகனின் வீரத்திற்குத் துணையாகக் கொற்றவையும் போவாள் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.
இச்செய்திகள் அப்படியே வெட்சி பற்றி தொல்காப்பிய நூற்பாவின் மறுவடிவமாக விளங்குகின்றன.
~~வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின்
ஆ தந்து ஓம்பல் வேற்று ஆகும்
வெட்சித் துறைகள் சிலவற்றையும் இளங்கோவடிகள் இதனுள் புகுத்தி உரைக்கின்றார். பாதீடு, கொடை ஆகிய துறைகளை அவர் பெரிதும் சிலப்பதிகாரத்தில் விளக்குகின்றார். கொண்டு வந்த ஆநிரைகளைப் போருக்கு உதவியவர்களுக்கு, ஊருக்கு உதவியர்களுக்கு மறவர்கள் அளிக்கின்றார்கள். அவர் அளித்தபட்டியல் நீண்டதாகும்.
இள மா எயிற்றி! இவை காண், நின் ஐயர்
தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆன் நிரைகள்
கொல்லன், துடியன், கொளை புணர் சீர் வல்ல
நல் யாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன.
முருந்து ஏர் இள நகை! காணாய், நின் ஐயர்
கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள்
கள் விலைஆட்டி, நல் வேய் தெரி கானவன்,
புள் வாய்ப்புச் சொன்ன கணி, முன்றில் நிறைந்தன.
கய மலர் உண் கண்ணாய்! காணாய், நின் ஐயர்,
அயல் ஊர் அலற, எறிந்த நல் ஆன் நிரைகள்
நயன் இல் மொழியின் நரை முது தாடி
எயினர், எயிற்றியர், முன்றில் நிறைந்தன .
என்பன கொடை பெற்றவர்களின் பட்டியல். இவ்வடிகளுக்குள் ஒரு நகைச்சுவையும் கலந்துள்ளது. கள் விற்பவள் போர் செல்ல இருந்த மறவனுக்குக் கள் தராமல் காலம் நீட்டித்தாள். அவன் கள்ளுண்ணாமலே போருக்குச் சென்றுவி;ட்டான். ஆனால் வெற்றி பெற்றதும் கள் தராத அம்மங்கைக்கும் ஆநிரைகளைத் தந்து அப்போர்வீரன் வெற்றிகண்டான். தராதவளுக்கும் கொடை அறித்த பெருந்தன்மையாளனாக அப்போர்வீரன் இளங்கோவடிகளால் காட்டப்பெற்றுள்ளான்.
இதன்பிறகு அவிப்பலி என்ற துறையும் எடுத்துரைக்கப்படுகின்றது. இவ்வாறு வெட்சியின் விளக்கம் வேட்டுவவரியில் இடம்பெற்றுள்ளது.
வஞ்சித்திணை, காஞ்சித்திணை வஞ்சித்திணையும் கர்ஞ்சித்திணையும் காட்சிக்காதையில் இளங்கோவடிகளால் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. சேரன் வஞ்சினம் கூறிப் போருக்குச் செல்லும் செயலைக் குறிக்கும் பகுதியில் வஞ்சியை எடுத்தாள இளங்கோவடிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதனுடன் இணைந்துக் காஞ்சியும் இடம்பெற்று விடுகின்றது.
பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று
புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்,
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை
நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு| என,
~குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும்,
வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
புட்கைச் சேனை பொலிய, சூட்டி
பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்| என-
என்ற இப்பகுதியில் சேரன் வஞ்சினம் கூறுகின்றார். வஞ்சினக்காஞ்சியாக இது அமைகின்றது. அவ்வஞ்சினத்தில் காஞ்சித் திணை செய்திகளும். வஞ்சித் திணை செய்திகளும் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன.
குடைநிலை வஞ்சி, கொற்ற வஞ்சி, நெடுமாறாயம், பெரு வஞ்சி,பெருஞ்சோற்று வஞ்சி, கொற்ற வள்ளை ஆகிய வஞ்சித் துறைகள் மேற்சுட்டிய பகுதியில் இடம்பெற்றனவாகும். வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என்ற பாடலடியின் வழியாக வஞ்சிப் பூவினை வாளுக்குச் சூடி சேரன் படையெடுத்த நிலை தொல்காப்பிய புறத்திணையியல் சார்ந்த்தாகும்.
இதற்கு முன்பே மூன்று காஞ்சித் துறைகள் இடம்பெற்றுள்ளன. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சி என்ற தொல்காப்பியத் து:றை, கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை எனச் சிலப்பதிகாரத்தால் வழிமொழியப்பெற்றுள்ளது. முதுகுடிப்பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக்களித்த மகட்பாற் காஞ்சி என்ற சிலப்பதிகாரம் காட்டும் காஞ்சித் துறை தொல்காப்பியம் குறிக்கும் ~முதுகுடி மகட்பாடஞ்சிய மகட்பாலானும்| என்ற துறையாகக் கொள்ளத்தக்கது. தென்றிசை என்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதிரூன்றிய நீள் பெருங்காஞ்சி என்ற சிலப்பதிகாரத்துக் காஞ்சித் துறை, மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை| என்றத் தொல்காப்பியத் :துறையாகக் கொள்ளத்தக்கது.
தும்பைத்திணை
சேரனின் போர்திறம் தும்பைத் திணையுடன் சிலப்பதிகாரத்தில் விளக்கம் பெறுகின்றது.
நும்போல் வேந்தர் நும்மொடு இகலி
கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயல்கொடி
பகைப்புறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கு அவை
திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன
கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர்
பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்
வட ஆரியரோடு வண்தமழ் மயக்கத்து உன்
கடமலை வேட்டம் என் கண்புலம் பிரியாது
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எம் கோமகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர் ஈர் ஐந்நூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செருவேம் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்
என்ற இப்பகுதி சேரன் மற்ற மன்னர்களுடன் நேருக்கு நேர் மோதிய ஆற்றலைத் தெரிவிக்கின்றது. இது ~மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை அழிக்குஞ் சிற்ப்பிற்றென்ப என்ற தொல்காப்பியத் தும்பை வரையறையின் சார்பினது ஆகும். மேலும் போர்த்தானைகளைச் சிறப்பிப்பது தானை நிலை எனப்படும். அத்தானைநிலையை
மேலும் கனக விசயருடன் சேரன் போர் புரிந்த ஆற்றலை,
~~எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்n;தாகை
ஒரு பகல் எல்லையில் உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய
நூழில் ஆட்டிய சூழ்கழல்வேந்தன்
போந்தொடு தொடுத்த பரவத்தும்பை
ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய|
என்ற பாடலடிகளில் தும்பையைச் சேரன் அணிந்த நிலை எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. வடபுலத்து அரசர்களை வெற்றி கொள்ளும் நிலையிலும் தமிழ் போர்மரபு பின்பற்றப்பெற்றிருப்பதை இவ்வடிகள் எடுத்துரைக்கின்றன.
வாகைத்திணை
போரில் சேரன் வெற்றி பெறுகின்றான். அவனின் தேருக்குப் பின்னாலும், முன்னாலும் மகிழ்ந்து வீரர்கள் ஆடிவருகின்றனர். இவ்வாட்டம் வாகைத்திணையின் வயப்பட்டதாகும்.
~~…..பேர்இசை
முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி
பின்தேர்க்குரவைப் போய் ஆடு பறந்தலை
முடித்தலை அடுப்பில் பிடர்த்தலைத் தாழி
தொழத்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
மறப்பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட
சிறப்பு ஊண் கடிஇனம் செங்கோல் கொற்றத்து
அறக்களம் செய்தான் ஊழி வாழ்க
என்ற பாடலடிகளில் வென்ற கோமான் முன்தேர்க்குரவையும், ஒன்றிய மரபிற் பின்தேர்க்குரவையும் அரும்பகை தாங்கும் ஆற்றலும் ஆகிய தொல்காப்பியத் துறைகள் சிலப்பதிகாரத்தால் ஏற்கப்பெற்றன என்பதைக் காட்டுகின்றன.
பாடாண் திணை
சிலப்பதிகாரத்தில் சேரனைப் போற்றும் மாடலனின் பாடலடிகள் பாடாண் திணை வயப்பட்டனவாக உள்ளன.
~~…நின்
மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பெறாஅர் ஏவல் கேளார்
வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவர்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
பழையன காக்கும் குழைபயில் நெடும்கோட்டு
வேம்பு முதல் தடிந்த ஏந்து வாழ் வலத்து
போந்தைக் கண்ணிப் பொறைய
என்ற பகுதி சேரனின் பெருமையைப் பேசும் பாடாண்திணைப்பகுதியாகும்.
இவ்வாறு அரசர் போர்ப்பகுதியை விளக்கும் வஞ்சிக்காண்டம் தொல்காப்பியப் புறத்திணைச்சாயலுடன் ஒட்டிப்படைக்கப்பெற்றுள்ளது என்பது உறுதியாகின்றது.
வஞ்சிக்காண்டத்தின் காதைகளின் பெயரமைவு என்பது தொல்காப்யிர் சுட்டும் கரந்தைத்திணை சார்ந்த துறைகளை ஒட்டியே இளங்கோவடிகள் அமைத்திருப்பது அவரின் தொல்காப்பிய நெறி பின்பற்றலுக்குச் சான்றாகின்றது. காட்சி, கால்கோள், நீர்ப்படை நடுகல், வாழ்த்தல் என்ற அதே அமைப்பில் கண்ணகிக்குச் சிலை காணும் போக்கை இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.
~மதுரை மூதூர் மாநகர் கோடுஉற
கொதிஅழல் சீற்றம் கொங்கையின் விளைத்து
நல்நாடு அணைந்து நளிர்சினை வேங்கை
பொன்அணி புதுநிழல் பொருந்திய நங்கையை
அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்பியர் தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
இமையவர் உறையும் இமையச் செல்வரைச்
சிமைய சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றுஇழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து. காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்து
கடவுள் மங்கலம் செய்க என ஏவினான்
வடதிசை வணங்கிய மன்னவர் ஏறுஎன்
என்ற இந்தப் பாடலடிகளில் கண்ணகிக்குக் கடவுள் மங்கலம் செய்யப்படும் திறம் நடுகல் நாட்டி வணங்கும் திறமாக உள்ளது. தொல்காப்பியத்தில் ஆணுக்குச் சொல்லப்படும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி ஒரு பெண்ணிற்கு செய்யப்பெற்றதாக இளங்கோவடிகள் படைத்துக்காட்டுவது என்பது மரபு மீறல்அல்ல… புறத்திணை பெண்களுக்கும் உரியது என்ற எண்ணம்தான்.
மு. கோபி சரபோஜி
எவரிடமாவது கொஞ்சம் முகம் கோண வசவு வாங்கினாலே வதங்கிப் போய்விடுவோம். இந்த வசவு, ஏச்சு, கோபம் எல்லாம் இந்தக்காலத்தில் தான். அந்தக்காலத்தில் எல்லாம் சாபம் தான்! கடுப்பேத்துறார் மை லார்ட் என்பது மாதிரி முனிவர்களும், அவர்கள் வழிபடும் கடவுளும் தனக்கு எதிராக யாராது குழிபறிக்கும் வேலைகளைச் செய்தாலோ, தனக்கு விரோதமாக நடந்து கொண்டாலோ உடனே சாபத்தை கொடுத்து ஒடுக்கி விடுவார்கள். வரம் கொடுக்கும் வாயாலயே சாபங்களும் கொடுக்கப்பட்டன. கூடவே அதற்கான பரிகாரங்களும் இலவச இணைப்பாய் வழங்கப்படுவதுண்டு. சில சமயங்களில் அதில் விதிவிலக்கும் இருக்கும்.
ஒரு கடவுள் இன்னொரு கடவுளுக்கே சாபம் கொடுத்து வந்த அந்தக்காலத்தில் முனிவர்களும், தேவர்களும் தங்களுக்கு விருப்பமான கடவுளை வேண்டி வரம் வாங்கி அதைச் சாபங்களாக மாற்றி தங்களுக்கு எதிரானவர்கள் மீது எறிந்து வந்தனர். அப்படி ஒரு முனிவரால் சாப அம்புக்கு உள்ளானவன் தான் நளன்!
விசுவகர்மாவின் மகனான நளன் குழந்தைப்பருவத்தில் அந்த வயதிற்கே உரிய குறும்புகளுடன் இருந்தான். அப்பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்த முனிவர்கள் இருக்கும் பகுதிக்கு அடிக்கடி விளையாடச் செல்லும் சமயங்களில் தன் சேட்டைகளால் அவர்களுக்கு தொல்லைகளையும் கொடுத்து வந்தான். முனிவர்கள் ஆற்றில் மூழ்கி குளிக்கும் சமயத்தில் கரையில் வைத்திருக்கும் அவர்களுடைய துணிமணிகளை அள்ளி தண்ணீரில் வீசி மூழ்கடித்து விடுவான். அதேபோல, அவர்கள் முங்கி எழும் சமயமாக பார்த்து கரையில் கிடக்கும் சிறு, சிறு கற்களை எடுத்து அவர்கள் மீது எறிவான். சிறுபிள்ளை தானே என பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முனிவர்கள் ஒருநாள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். கோபம் வராதவரைக்கும் தான் முனிவர்கள் சாதுக்கள். வந்துவிட்டால் வாயால் சத்ருக்களாக மாறி விடுவார்கள்.
கோபம் கொண்ட முனிவர்கள், ”இனி நீ எதைத் தண்ணீரில் தூக்கி எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கவே செய்யும். தவிர, குரங்குச் சேட்டை செய்து எங்களுக்கு துன்பம் தந்து வந்ததால் இனி நீ குரங்காக மாறிப்போவாயாக” என்று சாபம் கொடுத்து விட்டனர். சாபம் தன் வேலையைக் காட்ட வானரமாக மாறிய நளன் அனுமன் தலைமையில் வானரப்படையில் சேர்ந்ததோடு இராம சேவைக்கும் வந்தான்.
சீதையைப் பறி கொடுத்த இராமர் அதற்காக இராவணனிடம் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் படையெடுப்பை நிகழ்த்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். அது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கடல் மேல் பாலம் அமைத்து படை நடத்திச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதற்காக கடலரசனிடம் அலைகளின் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டியும், அனுமதி கேட்டும் இராமர் தவமிருந்தார். அவனின் தகவலுக்காக தர்ப்பைப் புல் மீது அவர் சயனித்திருந்த இடம் தான் “திருப்புல்லணை”. அது பின்னர் மருவி “திருப்புல்லாணி” என்றானது. மூன்று நாட்களாகியும் கடலரசன் வராததால் கோபம் கொண்ட இராமர் கோதண்டத்தை எடுத்து எய்யத் துவங்கிய நொடி கடலரசன் வந்து சேர்ந்தான்.
![]()
விசுவாமித்திரரின் யாகத்திற்காக தன் பாணத்தாலயே (அம்பால்) பந்தலிட்டு பாதுகாத்தவர் தன் மீது கோதண்டத்தை எய்தால் என்ன கதியாவது? என நினைத்து பதறி வணங்கி நின்ற கடலரசன் தாங்கள் என்னை முதலில் மன்னிக்க வேண்டும். நான் நீங்கள் நினைப்பது போல அகம்பாவத்தால் வராமல் இருக்க வில்லை. வடதுருவத்தில் எனக்கு தொல்லை தந்து கொண்டிருந்த சில துரோகிகளை ஒழித்துக்கட்டும் வேலை இருந்ததால் அங்கு சென்றிருந்தேன். அந்தப் பிரச்சனையை முடித்து விட்டு செய்தியறிந்து உங்களைச் சந்திக்க வருவதற்குள் மூன்று தினங்களாகி விட்டது என்று கூறியதுடன் நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டான்.
இராமர் விசயத்தைச் சொன்னதும் பாலம் கட்ட தன்னால் ஆன எல்லா ஒத்துழைப்பையும் தருவதாக கடலரசன் உறுதியளித்தான். உடனடியாக பாலம் கட்டுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வானரசேனைகள் அணிவகுக்க அனுமன் தலைமையில் வேலைகள் ஆரம்பமானது. இமயமலையிலிருந்து கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு கை மாற்றி, கை மாற்றி சேதுக்கடலுக்கு கொண்டுவரப்பட்டன. கற்களை தூக்கிக் கடலில் போட்டால் ஒரு கல்லும் மிதக்கவில்லை. அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. நிலைமை சிக்கலாக இருப்பதை அறிந்து அனைவரும் சோர்ந்திருந்த நிலையில் கடலரசன் தங்களின் வானர சேனையில் உள்ள நளன் என்பவன் பெற்றிருக்கும் சாபம் இப்போது நமக்கு வரமாக இருந்து உதவப்போகிறது. அந்த சாப பயனால் இந்தச் சிக்கலைத் தீர்த்து விடலாம். அவன் பெற்றிருக்கும் சாபப்படி எதைத் தூக்கி தண்ணீரில் போட்டாலும் மிதக்கும் என்பதால் முதல் கல்லை அவனைப் போடச்சொல்லி அதன் மீது மற்றவர்கள் கற்களை போடுங்கள் என யோசனை கூறினான்.
உடனடியாக சித்தாள் போல கல் கொண்டு வரும் வேலையிலிருந்த நளன் வரவழைக்கப்பட்டு பொறியாளராக நியமிக்கப்பட்டதோடு பாலம் கட்டும் பணியை மேற்பார்வை செய்யும் பொறுப்பும் கூடுதலாகத் தரப்பட்டது. முதல் கல்லை நளன் எடுத்துப் போட அதன் மீது வேரோடு கூடிய மரங்கள், சிறு மலைக்குன்றுகள், பாறைகள் என அனைத்தும் பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டு வந்து குவிக்கப்பட்டன. அனுமன் வானுக்கும், பூமிக்குமாய் பறந்து, பறந்து வேலைகளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார். இராமரும், இலட்சுமணரும் அருகில் அமர்ந்து பாலம் கட்டும் வேலையின் வேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தங்களின் வழிபாட்டுக்குரியவராக, கடவுளாக நினைக்கும் இராமருக்காக எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்க திடீரென இராமருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. மழைக்காக நடந்த யாகத்தில் குடையோடு வந்த சிறுவனின் பேச்சால் தன் சக்தியின் மேல் சந்தேகம் கொண்டு அதை நிவர்த்தி செய்து கொள்வதற்காக சங்கெடுத்து ஊதி சரிபார்க்கப் போய் தன் வீராப்பை இழந்த வருணபகவானுக்கு வந்த மாதிரி இராமருக்கும் தன் சக்தியின் மீது சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது.
எல்லோரும் கடலில் போடும் கல் மிதக்கிறது. நாம் போட்டால் மிதக்குமா? என்ற சந்தேகம் பற்றிக் கொள்ள அருகில் கிடந்த கல்லை எடுத்து கடலுக்குள் வீசினார். போட்ட வேகத்தில் கல் தண்ணீருக்குள் மூழ்கிவிட இராமருக்கோ தன் சக்தியின் மீது மெல்ல சந்தேகம் பரவி பதற வைத்து விட்டது. எப்படி யோசித்தும் தன் சந்தேகத்திற்கு விடைகாண முடியாமல் தவித்தபடி உட்கார்ந்திருந்த இராமரின் தவிப்பை அவரின் முகக்குறிப்பால் கண்ட அனுமன் அருகில் வந்து விசாரித்தார்.
இராமர் விசயத்தைச் சொன்னதும் சிரித்துக் கொண்ட அனுமன் இதற்கு தானா இவ்வளவு யோசனை? நாங்கள் கற்களைப் போடும் போது “ஹேராம்” என்று உங்கள் நாமத்தை உச்சரித்தபடி போடுகின்றோம். அதனால் மிதக்கிறது. நீங்களோ அப்படிச் சொல்லாமல் போடுவதால் மிதக்காமல் மூழ்குகிறது என்றான். உள்ளன்போடு இறை நாமத்தை உச்சரிப்பவனிடம் இறைவன் கருணை கொள்கிறான். அருள் புரிகிறான் என்பதை அனுமனின் பக்தியும், இறைவனான இராமனின் சந்தேகமும் நமக்கு உணர்த்துகிறது. ஆலயம் சென்று அங்கொரு மனமும், இங்கொரு மனமுமாய் வழிபடுவதை விட இருந்த இடத்தில் இருந்த படியே உள்ளத்தூய்மையோடு அவன் நாமத்தை உச்சரித்தாலே போதும் காரிய சாத்தியமாகும். இந்த உண்மையை என்றைக்காவது நாம் உணர்ந்திருக்கிறோமா?
———————————————————————————————————————————————-