சு. கோதண்டராமன்

ருதத்தின் பிற பெயர்கள்

திமிங்கில முதல் புழு வரை ஒவ்வோருயிர்க்கும் அததற்குரிய தர்மங்கள் உண்டு. நட்சத்திரங்கள் சூரிய சந்திரன் முதலாக அணுக்கள் வரை ஒவ்வொரு வஸ்துவுக்கும் உரிய தர்மங்கள் உண்டு. மேலும் ஒன்றிற்கே கால தேச வர்த்தமானங்களுக்குத் தக்கபடி தருமங்கள் மாறுபடுகின்றன. – பாரதி

ருதத்திற்கு தர்மம், ஸ்வதா, விரதம் என்ற வேறு பெயர்கள் உண்டு. எல்லாமே காரணப் பெயர்கள் தாம்.
இந்த இயற்கை நியதி மனிதனை மேல் நிலைக்கு உ.யர்த்துகிறது. அதனால் இது உயர்வாகப் போற்றப்படுகிறது. அதனால் உயர்த்தப்பட்டது என்ற பொருளில் ருதம் எனப்படுகிறது.

ருதம் என்ற சொல்லின் வேர் – ரு ऋ என்பதாகும். இது படர்க்கை ஒருமையில் ருச்சதி ऋच्छति, இயர்த்தி इयर्ति, ருண்வதி ऋण्वति என மூன்று வகையாக உரு மாறும். ரிக் வேதத்தில் இவை இயக்குதல், உயர்த்துதல், தூண்டுதல் என்ற பொருளிலேயே வருகின்றன. இதிலிருந்து தோன்றியதுதான் ருதம் ऋतम्. எனவே எது உயர்த்தப்படுகிறதோ, எது தூண்டப்படுகிறதோ, எது இயக்கப்படுகிறதோ அது ருதம் ஆகும். இதை இயக்கும் சக்தி ஒன்று உண்டு என்பது மறைமுகமாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் தன்மையாலும் மனித முயற்சி இன்றித் தானாகவே நடைபெறுவதாலும் ஸ்வதா எனப்படுகிறது.

(ஸ்வ+தா= தன்னைத் தானே தாங்குதல்)
நீர் ஸ்வதாவின்படி ஓடியது. (1.33.11)
சூரியன் ஸ்வதாவின்படி மேலே உயர்கிறது. (10.37.5)
கடந்த காலத்திலும், இன்றும் வருங்காலத்திலும் உஷா தினம்தோறும் ஸ்வதாவின்படி ஒளியைப் பரப்புவாள். (1.113.13)
இந்த இயற்கை நியதியின் இயக்கம் தான் பிரபஞ்சத்தைத் தாங்குகிறது. இதனால் இது தர்மம் என்று அழைக்கப்படுகிறது. (எது தாங்குகிறதோ, எது தாங்கப்படுகிறதோ அது தர்மம்.)
ஆதித்யர்கள் உலகத்தைத் தாங்குவது ருதத்தினால். (2.27.4)
இந்திரன் தர்மத்தைக் கொண்டு ஆறுகளை விரியச் செய்தார், வயல்களில் தாவரங்களை மலர்வித்துக் கனி தரச் செய்தார். (2,13.7)
மித்ரனும் வருணனும் தங்கள் தர்மத்தைக் கொண்டு விரதங்களைக் காக்கின்றனர். ருதத்தைக் கொண்டு எல்லா உலகங்களையும் ஆள்கின்றனர். அவர்கள் சூரியனை விண்ணில் அமைத்தனர். (5,63.7)
விண்ணும் மண்ணும் வருணனின் தர்மத்தைக் கொண்டு நிலை நாட்டப்-பட்டுள்ளன. (6,70.1)
இயற்கை நியதியில் ஒவ்வொரு பிராணிக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு தேவருக்கும் ஒரு தனித் தன்மை உண்டு. அந்தத் தனித் தன்மையைக் குறிப்பிடும்போது ருதத்திற்கு வ்ரதம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. எதிரிகளை அழிப்பது இந்திரனின் விரதம். மருத்துவம் செய்வது அசுவினிகளின் விரதம்.
ராட்சசர்களுக்கும் ஸ்வதா உண்டு. (7.104.9) துன்புறுத்துவது அவர்கள் இயல்பு. குதிரைக்கு ருதம் உண்டு. உயிரற்ற கதவுக்குக் கூட ருதம் உண்டு.
பசுக்களும் ஆறுகளும் இந்திரனின் விரதத்தைப் பின்பற்றுகின்றன. (1.84.12, 1.101.3)
தேவர்களின் விரதத்தின் காரணமாக இரவும் பகலும் உண்டாகின்றன. (1.24.10, 3.60.6)
பறவைகள் மரத்தில் வசிப்பது விரதங்களை அனுசரித்தே. (2.38.7)
தேவர்கள் விரதங்களைக் காப்பாற்றுகிறார்கள். அவரவருக்கும் தனித் தனி விரதங்கள் உண்டு. (10.61.7, 1.31.10)
தேவர்களின் விரதங்கள் ரகசியமானவை. அவற்றை ரிஷிகள் மட்டுமே அறிவார்கள். (10.114.2)
தேவர்களின் விரதங்கள் மீறப்பட முடியாதவை. (1.69.4)
மாயாவிகளும் விரதத்தை மீற முடியாது. அறிஞர்களும் முடியாது. (3.56.1)
அறிவாளிகளான ரிஷிகள் விரதங்களை மீறுவதில்லை. (7.31.11, 7.76.5)
விரதங்களை அனுசரிப்பவர்கள் சிறப்படைகிறார்கள். (3.59.2)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.