Blog

  • இழப்பின் மறுபக்கம்

     

    தமிழ் மூலம் : கிருஷ்ணன்

    ஆங்கில மொழிபெயர்ப்பு : அஜித் சுப்பிரமணியன்

     

    இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!

    இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக் கென்றேன்

    இழந்த தெவை என இறைவன் கேட்டான்!

     

    பலவும் இழந்திருக்கிறேன்,கணக்கில்லை

    பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?

     

    கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்

    கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்

    காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்

    காணாமல் போனாளே அவளை இழந்தேன்

    வயதாக ஆக உடல் நலமிழந்தேன்

     

    எதை என்று சொல்வேன் நான்

    இறைவன் கேட்கையில்?

     

    எதையெல்லாம் இழந்தேனோ

    அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.

    அழகாகச் சிரித்தான் பரமன்

     

    “கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்

    உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்

    நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்

    சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல

    தரட்டுமா அனைத்தையும் திரும்ப”, என்றான்.

    திகைத்தேன்!

     

    இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்

    வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்
    இணைந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்

    இறைவன் மறைந்தான்.

     

    ஆங்கில மொழிபெயர்ப்பு : அஜித் சுப்பிரமணியன்

     

    Give my losses back, Mr.God!

    Mr.God! Give me back everything that I have lost
    “What have you really lost my child?” was his retort

    I told myself it’s an endless list but I will have it furnished
    For one, I grew up so fast that my youth just vanished!

    My beauty faded away with the seconds that were ticking,
    And you plucked away my lady love and my heart’s still pricking!

    The touch of time aged me and made me old and sick
    What do I tell him? I should tell him something quick!

    “Give all that I have ever lost in my life back to me!” I demanded
    He looked at me with a charming smile and responded:

    “When you got educated, your ignorance was lost!
    With all your hard-work poverty was left in the dark past

    And you lost all your enemies with the habits you cultured, just think
    I could give all that you have lost there even before you blink!”

    Dumbstruck I realized two sides of the same coins were to gain and to part,
    He vanished in thin air leaving a queer peace in my heart.

    Ajith

    படத்திற்கு நன்றி :

    http://shirdisaibaba100.blogspot.in/2011/06/lord-krishna-beautiful-childhood-photos.html

    Share
  • கண்ணன்-பீஷ்மர் சந்திப்பு

    சு.ரவி

    வணக்கம்,வாழியநலம்,

    மஹாபாரத யுத்தகளத்தில் கண்ணன் ஆயுதமேந்தி வரும் தருணமும், காட்சியும் என்னை மிகவும் ஈர்த்த்வை.

    பகவானுடைய சபதமும், பாகவதனுடைய சபதமும் உரசிப் பார்த்த உணர்ச்சிகரமான சம்பவம்.

    யுத்தகளத்தில் “கறங்கு போல விற்பிடித்து காலதூதனா”க நின்ற பிதாமஹர் பீஷ்மரின் விறலுக்கு முன்னே

    அர்ஜுனன் உட்பட எவராலும் எதிர்நிற்க முடியாதபோது, கண்ணன் ஆயுதமேந்தமாட்டேன் என்ற தன் சபதத்தை

    மீறி சக்கரப்படையோடு களமிறங்குகிறான். யுத்தகளத்தின் புழுதி படிந்தமேனியும், காற்றினாலும், ஓடிவரும்

    வேகத்தினாலும் குலைந்து பறக்கும் பீதாம்பரமும், மாலையும், முகத்தில் மட்டும் பீஷ்மருக்கருளும் கனிவான

    பார்வையுமாக வருகின்ற கண்ணனை பயத்துடனும், கலக்கத்துடனும் கால்களைக் கட்டித்தடுக்கும்

    அர்ஜுனனும், கைவில்லையும், படைக்கலன்களையும் கீழே போட்டு, கண்ணன் கையால் முக்தி ஏற்கத் தயாராக

    வரவேற்றுத் தேர்த்தட்டில் நிற்கும் பீஷ்மரையும் சித்தரிக்கும் இஸ்கான் ஓவியம் என்னை மிகவும் கவர்ந்த

    ஒன்றாகும்.

    இதனைப் பெரிய அளவில் எண்ணெய் வண்ண ஓவியமாக வரையும் முன்னே, ‘Net practice” போல

    முயற்சி செய்த Poster Colour painting இணைப்பாக…

     

    பார்க்க, படிக்க,ரசிக்க….

    கண்ணனும், பீஷ்மரும்..

    பாரதப் போரில் அன்று

    பாண்டவர் சேனை எல்லாம்

    வேரறு மரங்கள் போலே

    வீழ்ந்தனர்; வீரன் பார்த்தன்

    கூர்முனைச் சரங்கள் தைக்கக்

    குருதியில் நனைந்துவிட்டான்.

    மாரதன் பீஷ்மன் ஆங்கே

    மறலியாய்க் களத்தில் நின்றான்

    எதிர்ப்பவர் எவரும் உண்டோ

    எனக்கெதிர் போரில் என்று

    முதியதோர் சிங்கம் போலே

    முழங்கிடும் பீஷ்மன் முன்னே

    விதிக்கொரு விதியைச் செய்யும்

    வித்தகக் கண்ணன் கீழே

    குதித்தனன்;  பீஷ்மன் நெஞ்சைக

    குறித்தனன் புயலைப் போலே!

    எத்தனை பழிவந்  தாலும்

    ஏற்கலாம், பக்தன் வாக்கு

    பொய்த்திடக் கூடா தென்ற

    பெரியதோர் நோக்கம் கொண்டு

    அத்தனை பேரும் பார்க்க

    “ஆயுதம் ஏந்தேன்”  என்ற

    சத்தியம் காற்றில் விட்டான்

    சக்கரப் படையைத் தொட்டான்!

    “யாதவா, வருக! வேத

    நாயகா, வருக! வேணு

    மாதவா, வருக! செங்கண்

    மாலவா, வருக! வாழ்வின்

    கேதமே போக்கிக் காக்கும்

    கேசவா, வருக! ஜீவ

    நாதமே, வருக! எந்தன்

    நாரணா, வருக,வருக!

    அடியனைக் கொல்வதற்கோ

    ஆயுதம் ஏந்தி வந்தாய்!

    நெடிதுயர் மாலே,  இந்தா

    நேயமாய் என்னைத் தந்தேன்!

    நொடியிலே ஏற்றுக் கொண்டு

    நோயெனும் பிறவி தீர்ப்பாய்!

    அடிமலர் சரணம் கண்ணா!

    ஆட்கொள்ள வேண்டும்” என்றான்!

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (14)

    பவள சங்கரி

    “நான் உலகத்திற்கு எப்படி தோற்றமளிக்கிறேன் என்பது எனக்குத் தெரி்யாது; ஆனால் என்னைப் பொருத்தவரை, ஒரு சிறுவனாக கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன், கண்டறியப்படாத எத்தனையோ உண்மைகள் எம் முன் பெருங்கடலாக விரிந்து கிடக்கிறது. ஆனால் நானோ அவ்வப்போது ஒரு மென்மையான கூழாங்கல்லோ அல்லது சாதாரண சிப்பியைக் காட்டிலும் மேலும் அழகான ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக என் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறேன் ”.

    ஐசக் நியூட்டன்

    உள்ளொளியை மதித்துப் போற்றுவோம்!

    உயர, உயரப் போன எதுவும் ஓர் நாள் கீழே வந்தாக வேண்டும். கீழே வீழ்ந்ததும் ஓர் நாள் திரும்ப உயரும் காலமும் வரும். ஆனால் இது எப்போதும் எல்லோருக்கும் தானாக நடக்கக் கூடியது அல்ல. பொருளாதார அடிப்படையில் நல்ல நேரங்களும், கெட்ட நேரங்களும், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற நிலைகளும் யதார்த்தம். இருப்பினும் அறிவார்ந்த மக்கள் உயர்வு நிலையைக் கொண்டாடுவதுபோல தாழ்வு நிலையையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை. எந்த ஒரு தொழிலும் சில காலங்கள் உச்சாணிக் கொம்பிலும், சில காலங்கள் சந்தையில் தாழ்வு நிலையிலும் இருப்பதைக் காண்கிறோம். பொதுவாக உயர்வான நிலையில் இருக்கும்போது எவருக்கும் மனதில் தாழ்வு நிலை வரக்கூடும் என்ற சந்தேகமே எழுவதேயில்லை. பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்பவர்கள், அடிக்கடி இந்த அனுபவத்தைப் பெறக்கூடும். நம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் ஒவ்வொரு வெற்றியும், பல துன்பங்களின் மீது கட்டப்பட்டிருக்கலாமே தவிர அந்த துன்பங்களாலேயே ஆனது அல்ல என்பதே நிதர்சனம். ஒருவருக்கு பொருளாதாரப் பின்னடைவு என்பது எந்த நேரத்திலும் எழலாம். இது எத்துனைப் பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்று. இப்படிப்பட்ட ஆபத்துக் காலங்களிலும் நம் வாழ்க்கை ஓட்டத்தைச் சீரமைக்கக்கூடிய ஒரு வரப்பிரசாதம் நம்முடனேயே இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இந்த இயற்கை வரத்திற்கு ஏற்றவாரு நம் போக்குகளையும், சக்திகளையும், வெற்றிக்கான வாய்ப்புகளையும் அமைத்துக் கொள்வதால் பொருளாதாரம் ஏற்படுத்துகிற எந்த ஒரு சூழலையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பெற்றுவிட முடியும். அப்படி ஒரு வழிகாட்டியாகச் செயல்படும் வல்லமை பெற்றதுதான் நம்முடைய உள்ளுணர்வு. இதன் அளவுகோளைக் கண்டுபிடிக்கும் எந்தவொரு இயந்திரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த உள்ளுணர்வின் சக்தியை எப்படி முழுமையாகப் பெற முடியும்?

    நமக்குள்ளேயே பிறந்து, நம்முடனேயே வளர்ந்தாலும் கூட, தெளிவான சிந்தையும், அமைதியான மனமும், முழுமையான நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே இந்த உள்ளுணர்வை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். நம்மை தெளிவான முடிவு எடுக்க உதவி புரிந்து, வழி நடத்திச் செல்வது நம் அறிவு மட்டுமே. இந்த அறிவு மட்டுமே நமக்கு நம்பிக்கையை ஊட்டி, தொடர்ந்து பாடம் பெறவும், புத்திசாலித்தனமான முடிவெடுக்கவும், ஆபத்தை கணக்கிட்டு முன்கூட்டியே எதிர்நோக்கி அதிலிருந்து தப்பிக்க ஆவண செய்யவும் வைக்கிறது. நம் பலவீனங்களை களையெடுக்க உதவுவதும் இதே அறிவுதான்.

    நம் செலவுகள் எல்லை மீறும்போதோ, நாம் தவறு செய்ய நேரும்போதோ, நம்முடைய செயல்களில் மாற்றங்கள் அத்தியாவசியமாகும் பொழுதோ, இந்த உள்ளுணர்வு மட்டுமே அபாயமணியை ஒலிக்கச் செய்கிறது. அதற்கு செவிசாய்க்க ஆரம்பித்தாலே அது வெற்றிப்படியை நோக்கி வழிநடத்திச் செல்லும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையுடன் கவனித்து அதன்வழி நடப்பதுதான். நம் சிந்தையை அலையவிடும்போதுதான், நம் எண்ணங்கள் மரத்திற்கு மரம் தாவும் குரங்கைப் போன்று சிதறுண்டு போகிறது. இழிந்த சிந்தனைகளோ, அச்சமோ, நம்மீதே சந்தேகம் கொள்வதோ அல்லது பழைய தோல்விகளை எண்ணி அச்சமுற்று நம்மை நாமே தரக்குறைவாக கற்பனை செய்து கொள்வதோ நம் ஆக்கப்பூர்வமான உள்ளுணர்வுகளை கட்டிப்போடச் செய்யலாம். இதையெல்லாம் தவிர்ப்பதோடு, நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைச் சட்டை செய்யாமல் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம். இத்தகைய பயிற்சியை மேற்கொள்ளும் ஒருவர் எக்காலத்தும் அடிமட்டத்தில் எழ முடியாதவாறு வீழ்வதில்லை என்பதே சத்தியம். நாம் எந்த அளவிற்கு இந்த மனநிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு ஆழ்ந்த உள்ளுணர்வுகளின் ஆதிக்கம் நம்மை ஆகச் சிறந்த செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. இதையெல்லாம் சொல்லும்போது எதிர்மறை எண்ணங்களே குறுக்கிடாது என்பது அர்த்தமல்ல. சந்தேகம், அச்சம், அவநம்பிக்கை போன்ற எண்ணங்கள் லேசாக தலை தூக்கினாலும், விரைவிலேயே அது கடந்து போய்விடும். பின் நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் தெளிவானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் ஆகிவிடும். திறந்த மனதுடன், குழப்பமில்லா சிந்தையுடன், நிதானமாக உள்ளுணர்விற்குச் செவிசாய்த்து பிரச்சனையிலிருந்து எளிதாக மீண்டு வரும் உபாயத்தைக் காணலாம். நாம் நம் மீது வைக்கும் ஆழ்ந்த நம்பிக்கையே இதற்கான ஆதாரம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்! தீர்வு இல்லாத பிரச்சனை என்பதே இல்லை. கடந்த காலத்தில் எது நடந்திருந்தாலும், அல்லது இன்று நம் முன்னால் நிற்கும் பிரச்சனை எத்தகையதாயினும், அதைப்பற்றி கவலை கொள்ளாமல், அதற்கும் தீர்வுண்டு என்ற நம்பிக்கையுடன், இந்த முறையைப் பின்பற்றும்போது நாம் மேற்கொண்டு செய்ய வேண்டியது என்ன என்பதற்கான வழி கட்டாயம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை!

    வாழ்க்கை என்பதே போராட்டம்தானே!
    அதை வாழ்ந்துதான் பார்ப்போமே!

    தொடருவோம்

    படங்களுக்கு நன்றி :

     http://www.geocities.com/Colorado933/page1.htm

    http://sayingimages.com/words-to-live-by-with-pictures/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(59)

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

    அன்பினியவர்களே !

    அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திக்கும் மகிழ்விருப்பினும் இம்மடல் தாங்கி வரும் செய்தியின் துயரச்சாயல் நெஞ்சினில் சிறிதளவு துன்பத்தினை தவழத்தான் செய்கிறது.

    மதம், மதம் தாங்கி நிற்கும் தெய்வத்தின் போதனைகள் என்பன என்றுமே தீய எண்ணங்களின் அடிப்படியீஈல் எழுந்தவை அல்ல. எந்த மதமாயினும் சரி தம் வழி நடக்கும் மனிதர்களின் மனதைத் தூய்மைப்படுத்தி அன்பின் வழி நின்று நல்ல மனிதர்களாக வாழ வழிகளைக் கற்றுத் தருவதே அவற்றின் முக்கிய நோக்காகிறது.

    ஆனால் அம்மதங்களின் பெயர்களின் அவற்றின் போதகர்கள் எனக்கூறிக் கொள்ளும் பலர் அம்மதத்தின் கூற்றுக்களின் உண்மையான கூறுகளை விளங்கிக் கொள்ளாது அன்றி அவற்றைத் தமது எண்ணங்களுக்கேற்ப திரிபு படுத்தி வன்முறைகளின் வழிகளில் அவற்றைப் போதித்து வருவது வேதனைக்குரியது.

    கடந்தி சில நாட்களுக்கு முன்னால் லண்டன் தெருவினிலே நடந்த ஒரு அகோரமான, மிலேச்சத்தனமான செய்கை இங்கு வாழும் அனைத்து மக்களின் உள்ளங்களையும் உலுக்கி விட்டது.

    ஓ இப்படியும் ஒரு மிருகத்தனமான செய்கை கூட நடக்குமா? என்னும் எண்ணத்தை அனைவரினதும் உள்ளங்களிலும் ஓடவிட்டு நட்டையே ஒருவித பீதிக்குள்ளாக்கி விட்டது எனலாம்.

    நடந்தது என்ன ?

    கடந்த 22ம் திகதி புதன்கிழமை மதியம் 2 மணியளைவில் லண்டன் தென்கிழக்குப் பகுதியில் உள்ள “வூல்விச்(Woolwich)” எனும் இடத்தில் ஒரு பயங்கர நிகழ்வு இடம் பெற்றது.

    அவ்விடத்தில் அமைந்துள்ள “இராணுவ முகாம் (Army Barracks)” ஒன்றிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் 22 வயதே நிரம்பிய “லீ ரிக்பி(Lee Rigby) . இவர் இங்கிலாந்து இராணிவ வீரர்களில் ஒருவராவார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பணியாற்றி விட்டுத் திரும்பியவராவார்.

    ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் அசம்பாவிதங்களினால் காயமுற்று அங்கவீனர்களாகிய இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்ட ஒரு உதவி மையமான “ஹெல்ப் த ஹீரோஸ் (Help The Heros)” எனும் அமைப்பினை விளம்பரப்படுத்தும் டீ சார்ட்டை அணிந்திருந்தார்.

    அச்சமயம் அவரை நோக்கி காரைச் செலுத்திய இருவர் அக்காரின்ன்ன்ன்ன்னால் அவரை வழி மறித்து கையில் கொண்டு வந்திருந்த வாளினால் அவரை வெட்டி பட்டப்பகலில் பலரின் முன்னிலையில் படுபயங்கரமாகக் கொலை செய்துள்ளனர்.

    கத்தி மட்டுமின்றி அக்கொலையாளிகளின் கைகளில் துப்பாக்கியும் இருந்தது என்று கண்கூடாகக் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.

    அக்கொலையைப் புரிந்தது மட்டுமல்ல அக்கொலையாளிகளில் ஒருவர் இரத்தம் தோய்ந்த கைகளுடன் தாம் இக்கொலையைப் புரிந்ததை தமது மதமாகிய இஸ்லாமின் அடிப்படையில் நியாயப் படுத்தியுள்ளார்.

    தானாகவே அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பொலிசாரை அழைக்குமாறு பணித்துள்ளார். போலிஸார் அங்கு விரைந்து வந்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கி சகிதம் ஓடியுள்ளானர் அச்சமயம் அவர்கள் இருவரும் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து கைது செய்யப்பட்டு காவலுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர்.

    இச்செயல் இங்கு வாழும் பல சமூகத்தினரிடையே நிலவி வந்த பரஸ்பர ஒற்றுமை உணர்வைச் சீர்குலைத்து வைத்துள்ளது. இங்கு வாழும் பெரும்பான்ம்மை இனத்தவர் வெள்ளையர் என்பதும், அவர்களில் பெரும்பான்மையோர் கிறீஸ்துவர் என்பதுமே உண்மை.

    தம்முடைய நாட்டில் புகலிடம் தேடியும், வாழ்க்கையை மேம்படுத்தீஈஈஈஈஈக் கொள்ளும் வகையில் குடிபெயர்ந்தவர்களின் தமது மத்ஹ்ஹ்ஹ்ஹங்களைப் பின்பற்றுவதில் இவர்கள் யாருக்கும் எதுவித தடையும் விதித்ததில்லை.

    அப்படி இருக்கையில் இங்கு தம்மை இந்நாட்டுப் பிரஜைகள் என்று கூறிக் கொள்பவர்கள் இந்நாட்டு இராணுவ வீரர்களையே சமயத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் கொலை செய்யும் அளவிர்கு முன் வந்து விட்டது இந்நாட்டு பெரும்பான்மை மக்களின் மனதில் ஒருவித ஆத்திர உணர்வினைத் தோற்றுவிப்பது சகஜமே.

    இவர்களுள்ளும் ஏற்கனவே வெளிநாட்டவரின் குடியேற்றத்தைத் தடை செய்ய வேண்டும் எனும் கோஷம் கொண்ட நிறவெறி கொண்ட தீவிரவாதிகள் இல்லாமலில்லை.

    இத்தகைய செய்கை அவர்களின் இனவெறி எனும் தீயிற்கு எண்ணெய் வார்த்தது போலாகி விட்டது.

    இக்கொலைச்சம்பவத்தைத் தொடர்ந்து சில இஸ்லாமியர்களின் கலாச்சார மையங்கள் தாக்கப்பட்டுள்ளன.

    அதுதவிர ஆசிய இனத்தவர்கள் ஆனைவரினதும் மனங்களிலேயும் ஒரு விதமான பாதுகாப்பின்மை எனும் பீதியைக் கீளப்பி விட்டுள்ளது.

    நாம் புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளில் எமக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்கிறோம். எமக்கென தரப்பட்ட சுதந்திர எல்லைக்குள் எமது மதம், காலாச்சாரம் என்பனவற்றை நாம் பேணிப் பாதுகாப்பதில் எதுவித தவறுமில்லை.

    அதேவேளை இந்நாட்டுப் பிரஜைகளாக வாழும் எமக்கு ஒரு அளவிலாவது இந்நாட்டின் பாதுகாப்பினைப் பலப்படுத்தும் உணர்வு இருக்க வேண்டும். எமக்கும், எமது சந்ததிக்கும் ஒரு நிலையான நிம்மதியான வாழ்வை ஈந்த இம்மண்ணின் மீது ஓரளவாவது பற்று இருக்க வேண்டும்.

    இல்லையெனில் இனக்கள், மதங்களுக்கிடையே நிலவி வரும் பரஸ்பர ஒற்றுமை உணர்வு சீர்குலைந்து வாழ்வு நிலையற்றதாகி விடும்.

    அன்பு உள்ளங்களே ! நான் எனது மதத்தை மதிப்பவன், மிகுந்த இறைபக்தி உள்ளவன். ஆனால் எந்த ஒரு மதமும் மற்றவர்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்க வைக்கும் வகையில் தமது மக்களை வழிநடத்துவதில்லை.

    சுயலாபம் கொண்ட பல தீவிரவாதிகள் மாதம் எனும் போர்வையில் மக்களை ஏமாற்றும் செய்கையாலேயே உலகெங்கும் மததின்ன்ன்ன்ன்ன் அடிப்படையிலான பேத்ங்கள் தலை தூக்குகின்றன.

    இக்கோரச் சம்பவத்தின் எதிரொலியாக விளைந்த ஒரு நன்மை என்னவெனில் இங்குள்ள அனைத்து இஸ்லாமிய மத அமைப்புக்களுமே ஒட்டு மொத்தமாக இக்கொலையை நடத்தியவர்கள் “அல்லாஹோ அக்பர்” எனும் கோஷத்தை ஒலித்திருப்பினும் இக்கொலைக்கும் இஸ்லாம் எனும் மதத்திற்கும் எதுவித சம்மந்தமுமில்லை என்று கூறியிருப்பதுவே.

    அது மட்டுமின்றி வானோலிகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் நடைபெற்ற கருத்தரங்குகளில் இஸ்லாமியர் பெருமளவில் கலந்து கொண்டு இக்கொலையை வன்மையாகக் கண்டித்ததுடன் இதச் செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்கள்.

    மனிதன் என்பது ஒன்றே ஒரு இனம், அன்பு என்பது ஒன்றே ஒரே மதம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • குரு பெயர்ச்சி பலன்கள்: (28.05.2013 முதல் 12.06.2014 வரை)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    இந்த ஆண்டு, குரு பகவான் மே 28-ம் தேதி, வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு 9.03 மணியளவில், ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
    12 ராசிகளுக்கு உரிய பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் குருவின் அருளைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள துதிப் பாடலைப் படித்து வரவும்.

    மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
    கறைசொரி கற்ப கப்பொன் னாட்டினுக் கதிப னாகி
    நிறைதனஞ் சிவிகை மண்ணி நீடுபோ கத்தை நல்கு
    மிறையவன் குருவி யாழ னிருமலர்ப் பாதம் போற்றி.

    அனைவருக்கும் பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் வளம் பல நல்கட்டும்!

    மேஷ ராசி: இது நாள் வரை 2-ல் இடத்தில் இருந்து ஏற்றமான வாழ்வு தந்த குரு பகவான், இந்த பெயர்ச்சி மூலம் 3-ம் இடத்திற்கு மாறுகிறார்.
    மாணவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்களிலிருந்து நன்மை தீமையை அலசி நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடையலாம். வெளியூர்களுக்கு செல்லும் வியாபாரிகள் உணவு பழக்கத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், மருத்துவச் செலவுகளை ஓரளவிற்கு கட்டுக்குள் வைக்க இயலும். பெண்கள் வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காட்டி வாருங்கள். இல்லத்தின் இனிமை குறையாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பல நேரங்களில் உழைப்பு அதிகமாகவும், அதற்கான பலன் குறைவாகவும் இருக்கும். பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வுக்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். அதிக தடவைகள் அலைந்தபின், வியாபாரிகளுக்கு வர வேண்டிய தொகை கையில் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு செலவுகள் அதிகம் என்பதால், சேமிப்புக்கு அதிக தொகை ஒதுக்க இயலாத நிலை இருக்கும். நேரான பாதையில் சிந்தனையைத் திருப்பினால், நிறைவான வாழ்க்கை நிலைத்திருக்கும்.

    ரிஷப ராசி : இது வரை உங்கள் ராசியிலிருந்த குரு, இப்பொழுது 2-ம் இடத்தில் அமர்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்கள் வெளி வட்டார பழக்கங்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் நிலவிய வில்லங்கங்கள் நீங்கி சுமூகமான முடிவுகள் ஏற்படும். தொழில் விரிவாக்கத்தால் வியாபாரிகள் விரும்பிய லாபம் கையில் வந்து சேரும். இது வரை பெண்களுக்கு தலைவலியாய் இருந்தவர்கள் மனம் மாறி, உங்களுடன் உறவாட வருவார்கள். நல்ல சுற்றமும், நட்பும் உடனிருந்து தரும் ஊக்கத்தால், கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். கை வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள எடுக்கும் முயற்சிக்குத் தக்க பலனிருக்கும். மாணவர்களுக்கு நண்பர்களிடையே நீண்ட நாளாய் நிலவி வந்த பகை விலகி உறவுகள் மீண்டும் சுமூகமாகும். பணியில் இருப்பவர்களுக்கு தெளிவான சிந்தனையும், தீர்க்கமாக முடிவெடுக்கும் ஆற்றலும் பெருகும். சுய தொழில் புரிபவர் கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றும் காரியங்கள் நல்ல விதமாக முடியும்

    மிதுன ராசி : இது வரை 12-ல் இருந்த குரு பகவான், இந்தப் பெயர்ச்சிமூலம் உங்கள் ராசியில் அமர்கிறார். வியாபாரிகள் அசையாச் சொத்துக்களில் அதிக மூதலீடுகளைத் தவிர்ப்பதுடன், நம்பிக்கைக்கு உகந்தவர்களை பங்காளிகளாகச் சேர்த்துக் கொண்டு செயலாற்றினால், வியாபாரம் ஓரளவு லாபகரமாய் அமையும். மாணவர்கள் நண்பர்களுக்கு, பணம் தருவதில் கவனமாய் இருந்தால், நட்பு நிலை நன்றாக இருக்கும். சில நேரங்களில் தேவையற்ற அலைச்சலும், இடமாற்றமும் பெண்களின் அமைதியை கெடுக்கும் . பணியில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்க ளிடமிருந்து அதிக ஒத்துழைப்பை பெற இயலாத சூழல் நிலவும். பொது வாழ்வில் இருப்பவர்கள் அமைதியாக தங்கள் பணிகளை செய்து வந்தால், அனைத்தும் சீராகவே நடக்கும். பொருப்பில் இருப்பவர்கள் தேவையற்ற இடங்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் வேண்டும். கலைஞர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கும் கூடா நட்புக்கும் கும்பிடு போட்டு விட்டு விலகுவது நல்லது.

    கடக ராசி : இது நாள் வரை 11-ம் இடத்தில் அமர்ந்து கொண்டு நற்பலன் பலவற்றைத் தந்து கொண்டிருந்த குரு பகவான் இந்த பெயர்ச்சி மூலம், உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்கிறார். நிதானத்துடன் செயல்பட்டால், எதிலும் அதிக சிக்கல் இராது. மாணவர்கள் உடனிருந்து தொல்லை தருபவர்களிடமிருந்து விலகி இருங்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் கவனாமாய் இருந்தால், இழப்புகள் குறையும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் வெளி மாநிலங்களில் வேலையில் அமர்வார்கள். கலைஞர்கள் தேடி வரும் வளர்ச்சி வாய்ப்புகளை கவனத்துடன் செயல்படுத்தினால் வளமான வாழ்வு அமையும். வீடு, மனை, வாகனம் வாங்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. பொது வாழ்வில் இருப்பவர்கள் உண்மையே பேசினாலும், இடம் பொருள் அறிந்து பேசினால், அதிக நன்மை பெறலாம். பெண்கள் இதமாக நடந்து கொண்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு தலை காட்டாமலிருக்கும்.

    சிம்ம ராசி : இது வரை உங்கள் ராசிக்கு 10-ல் இருந்த குரு பகவான், இந்த பெயர்ச்சி மூலம், 11-ம் இடத்தில் அமர்வதால், இது வரை மனதில் இருந்த கலக்கம், குழப்பம் யாவும் விலகுவதால் தெளிவான சிந்தனையுடன் களமிறங்குவீர்கள். வியாபாரிகள் வராமல் இருந்த பணத்துக்காக வருத்தப்பட்ட காலம் இனி இராது. பெண்கள் புதிய சொத்து மற்றும் நகை வாங்கி எதிர்காலவளத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வார்கள். முன்னேற முடியவில்லையே என்று வருந்தியவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் அவ்வப்போது தொல்லை கொடுக்கும் எதிரிகளை தங்கள் தைரிய நடவடிக்கையால் ஒடுக்கி விடுவார்கள். பணியில் இருப்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட சாதுர்யத்தால் கடினமான காரியங்களையும் எளிதில் முடித்து, அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். மாணவர்கள் தூசி படிந்து கிடந்த தங்கள் திறமைகளை வளப்படுத்தி மீண்டும் ஒரு வலம் வருவார்கள். குழந்தைகள் பெறக்கூடிய பெருமையால் உங்கள் அந்தஸ்து உயரும்.

    கன்னி ராசி : உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திலிருந்த குரு பகவான் இந்த பெயர்ச்சி மூலம் 10-ம் இடத்திற்கு மாறுகிறார். தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு, உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை இருக்கும். பெண்கள் நம்பிக்கை , தெய்வ பலம் இரண்டையும் பக்க பலமாக வைத்துக் கொண்டால், வெற்றியும், மதிப்பும் உங்களைத் தேடி வரும். சுய தொழில் புரிபவர்கள் பேசும் வார்த்தைகளில் இனிமையை சேர்த்துக் கொண்டால், உங்களின் கோரிக்கைகள் நிறைவேறுவது எளிதாகும். வியாபாரிகள் கடையில் உள்ள பொருள்களின் பாதுகாப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல் அவசியம். பணி சுமை கூடுவதால், வேலையில் இருப்பவர்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும். மாணவர்கள் மன உறுதியுடன் செயல்பட்டால், பிரச்னைகள், தடைகள் ஆகியவற்றைத் தாண்டி வெற்றியின் பக்கம் உறுதியாக செல்ல இயலும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும்.

    துலா ராசி : உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த குரு தற்பொழுது 9-ம் இடத்தில் அமர்ந்துள்ளார். பிரிந்த உறவுகளும், நட்பும் திரும்ப வந்து சேர்வதுடன் உங்கள் வளர்ச்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் தோள் கொடுத்து உதவும் நிலை உருவாகும். மங்கல காரியங்களின் பொருட்டு புதிய இடங்களுக்குச் செல்லுதல், புதிய மனிதர்களை சந்தித்தல் என்று பெண்களுக்கு பொழுது மகிழ்ச்சியாகச் செல்லும். அயல்நாடு செல்ல முயன்று கொண்டிருப்பவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து சிறந்த தேர்ச்சியும், பரிசுகளும் பெற்று மகிழ்வார்கள் . கணினியை இயக்கும் இடங்களில் பணி புரிபவர்களுக்கு விசேஷ சலுகைகளும், வாய்ப்புகளும் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கான நிதி உதவி பெற விரும்புவர்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும் உதவியால், தொழில் வளம் ஏற்றமான பாதையை நோக்கிச் செல்லும். கலைஞர்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு குறைவிராது. வரும் வாய்ப்புக்களையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால், வியாபாரிகளின் எதிர் காலம் வளமானதாக அமையும்.

    விருச்சிக ராசி : இது நாள் வரை 7-ல் இடத்தில் இருந்து ஏற்றமான வாழ்விற்கு பொறுப்பேற்ற குரு பகவான், இந்த பெயர்ச்சி மூலம் அஷ்டம குருவாய் அமரப் போகிறார். பெண்கள் குடும்பத்திலுள்ள மூத்தோரை கலந்தாலோசித்து எல்லா செயல்களிலும் ஈடுபட்டால் நிச்சயம் முன்னேற்றம் உண்டு. வியாபாரிகள் பங்குதாரர்களிடையே இருக்கக் கூடிய உரசலை இதமான அணுகுமுறையால் சரி செய்வது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் விதண்டாவாதத்தை தவிர்த்தால், உங்கள் நிம்மதியும், பிற்ர் நிம்மதியும் குலையாமல் இருப்பதுடன்,நினைத்த வண்ணம் செயல்கள் நடைபெறுவதில் எந்தத் தடையும் இராது. வியாபாரிகள் பங்குச் சந்தையில் அளவான முதலீடு செய்வது புத்திசாலித்தனம். மாணவர்கள் யாரையும் குற்றம் சாட்டிப் பேச வேண்டாம், மற்றும் தங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் சொந்தப் பிரச்சனைகளை அவர்களிடம் கொட்ட வேண்டாம். கலைஞர்கள் .சீரான உணவுப் பழக்க வழக்கம், தேவையான உடற்பயிற்சி -இந்த இரண்டையும் கடைபிடித்து வர, ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

    தனுசு ராசி:  இந்த பெயர்ச்சி மூலம் குரு பகவான் உங்கள் ராசியிலிருந்து 7-ம் இடத்திற்கு சென்றுள்ளார். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவுகளும்போட்டிப்போட்டுக் கொண்டு உதவுவதால், மகிழ்ச்சியும், மன நிறைவும் உண்டாகும். மனதி ல் இருந்த பின்னடைவும், இறுக்கமும் மாறுவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் புதிய திட்டங்களில் ஆர்வத்துடன் இறங்குவார் கள் .. நண்பர்கள் நட்பை பலப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் வலம் வருவார்கள். பணிபுரிபவர்களுக்கு, வேலை செய்யும் இடங்களில் நல்ல செல்வாக்கும் மரியாதையும் இருக்கும் . சுய தொழில் புரிபவர்கள் தங்களின் அயராத உ ழைப்பால் உன்னதனமான நிலையை அடைவார்கள் . பரிசுப் பரிமாற்றம், விருந்து என்று கலைஞர்கள் மகிழ்வாக இருப்பார்கள். கொடுக்க வேண்டிய கடன்கள் சிக்கலின்றி முடிவது போல், வரவினங்களும் தடையின்றி வருவதால், வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளின் விரிவாக்கத்திற்கு தேவையான பணம் கிட்டும்.

    மகர ராசி : இந்த பெயர்ச்சி மூலம் குரு பகவான் உங்கள் ராசியிலிருந்து 6-ம் இடத்திற்கு மாறியுள்ளார். வியாபாரிகள் எதிர்பாராத மாற்றத்திற்கு ஈடு கொடுத்து தன் வேலைகளை முடிக்க வேண்டி இருக்கும். பணியில் உள்ளவர்கள், நெருக்கடியான சூழலுக்கு நடுவில், தங்கள் திறமையை மூலதனமாக வைத்து நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள். மாணவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு முயற்சியைப் போடுகின்றார்களோ, அவ்வளவுக்களவு, நல்ல பலன்கள் வந்து சேரும். .குடும்ப அமைதியை நிலை நிறுத்த, பெண்கள் சாதுரியமாக செயல்பட வேண்டும். தீய பழக்கத்திலிருந்து தள்ளி நின்றால், கலைஞர்களுக்கு வெற்றி நடை போடுவது எளிதாகும். முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பது அவசியம். சுய தொழில் புரிபவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையினை உரிய காலத்தில் செலுத்தி விட்டால், அவர்களைத் தேடி வரும் சலுகைகள் சீராக வந்து கொண்டிருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள், எந்த சூழலிலும், பக்குவமாக நடந்து கொள்வதே புத்திசாலித்தனம்.

    கும்ப ராசி : இது நாள் வரை 4-ல் இருந்த குரு பகவான், இந்தப் பெயர்ச்சி மூலம் 5-ம் இடத்தில் அமர்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வாழ்வில் பல நல்ல மாறுதல்கள் இருக்கும். பிரிந்திருந்த உறவுகளும், குடும்பமும் இணைவதால், பெண்களுக்கு மகிழ்ச்சி பெருகும். குழந்தைககளின் மேல் படிப்பு, வேலை ஆகியவை அதிக சிரமமின்றி அவர்களின் விருப்பப்படி நிறைவேறும். வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கான வாய்ப்பு கூடி வருவதால், கலைஞர்கள் தனி உறசாகத்துடன் வளைய வருவார்கள்.. சுய தொழில் புரிபவர்கள் இது வரை அனுபவித்த பொருள் கஷ்டம், மனக் கஷ்டம் யாவும் நீங்கிவிடும் . சிறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உடலும், மனமும் வலிமை பெறுவதால், புதிய முயற்சிகளில் துணிவுடன் இறங்குவதுடன், நினைத்த ஆதாயமும் கிடைக்கப் பெறுவார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு தொழிலில் ஏற்பட்ட தேக்கம் நீங்குவதால் கூடுதல் லாபத்தை எதிர்பார்க்கலாம்.

    மீன ராசி: இது நாள் வரை 3-ல் இருந்த குரு,இந்த பெயர்ச்சி மூலம், 4-ம் வீட்டுக்கு செல்கிறார். பெண்கள் பொருளாதார நிலையில் சற்றே ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் பொறுமை என்னும் தாரக மந்திரத்தை கடை பிடித்தால், சிறப்பான பலன்களை பெறுவீர்கள். தொழில் நிமித்தம் சிலர் அடிக்கடி பிரயாணங்களை மேற் கொள்ளும் நிலை இருப்பதால், உடல் நலனை நன்கு பேணிக்காப்பது நல்லது. பத்திரம் எதிலும் கையெழுத்து போடும் முன் தகுந்த ஆலோசனையை மேற்கொள்ளுங்கள். பணியில் இருப்பவர்கள் பண விவகாரங்களில் பிறர்க்கு ஜாமீன் தருவதையும், பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதையும் தவிர்த்தால், சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றில் சிக்காமல் நிம்மதியாய் காலம் செல்லும். வியாபாரிகள் வாக்கில் நிதானமாக இருப்பதன் மூலம் வரும் வரவுகளை தக்க வைத்துக் கொள்ள இயலும். கலைஞர்கள் ஏமாற்றங்களைக் கண்டு சலிப்படையாமல், முழு சக்தியையும் உழைப்பில் போட்டால், வெற்றி உங்கள் வாசல் தேடி வரும்.

    Share
  • கடற்கரை நினைவுகளில்……….

    எஸ் வி வேணுகோபாலன்

    என் கடந்த காலத்தைத்
    துணைக்கு அழைத்து வந்திருக்கிறேன்
    இன்றைய கடற்கரைக்கு…

    உறுத்துகின்றது மணல்
    நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளால் நிரம்பி –
    பேரோசை எழுப்பும் அலைகளின்
    கண்டனத்தை
    அமைதியோடு ஏற்றுக் கொள்கிறது மனம்

    கைகளில் தட்டுப்படும்
    உடைபட்ட கிளிஞ்சல்களின்
    விட்டுப் போன பகுதிகளைத்
    தேடுகிறது பேதை உள்ளம்
    இழந்த நட்புகளின் எஞ்சிய நினைவுகளில்

    அப்போது திமிராய் மிதித்துத்
    தகர்த்த மலைக் கோவில்களைத்
    திரும்ப மீட்டெடுத்து எழுப்பினாலும்
    யாரிடம் தர என ஏங்குகிறது இதயம்

    வறண்ட உதடுகளைத் திரும்பத் திரும்ப
    ஈரப்படுத்தித் தோற்கும் நாவைப் போல்
    தீண்டும் நுரையலைகளின்
    சுழிப்பு அழித்துப் போட்ட
    பெயர் ஒன்றை
    எழுதிவைத்த மண் எந்தப் பக்கம்
    எனத் தேடுகின்றன கண்கள்

    உப்புக் காற்றின் சில்லென்ற நேயம்
    கழுவி விடுகிறது கன்னங்களை
    ரணங்களை ஆற்றுப் படுத்தும் காலத்தைப் போலவே

    நீரோடு சேர்ந்து கருத்துவிடும்
    இரவின் வெளிச்சத்தில்
    விடை சொல்லி எழுகையில்
    கைக்குட்டை திருடியிருக்கும்
    மணல் துகள்களை உதறி
    அவ்விடத்திலேயே பத்திரப் படுத்தி
    மீள்கிறேன்

    தடயம் பதிந்திருக்கும்
    தோழமை நினைவுகளையும்…

    **********

    Share
  • எண்ணத்தால் வாழ்வு வரும்!!!

     

    -பார்வதி இராமச்சந்திரன்

     

    நாம் பெத்த ஓவியமே

    நடந்து வரும் பூந்தேரே

    பூதலத்து ராசாவே

    புன்சிரிக்கும் ரோசாவே

    எம்மடியில அதிசயமா

    வந்துதிச்ச சூரியரே

    பொன்னான ஒன் வாழ்வு

    கண்ணு முன்ன தோணுதய்யா!!

     

    தங்கத்தால் அரமணையாம்

    தகதகக்கும் கோவுரமாம்

    கருந்தேக்குக் கதவுகளாம்

    கண்மூடா காவலுண்டாம்

    கோட்டை மதிலு தாண்டி

    கோமகனார் வாசலிலே

    காத்திருக்கும் கோடி சனம்

    கண்ணார உனைப் பார்க்க‌

     

    வெள்ளியிலே வீதிகளாம்

    வீதியெல்லாம் ரத்தினமாம்

    முத்து நவரத்தினத்தைக்

    கொட்டி அங்கே விப்பாகளாம்

    முத்தத்தில் (முற்றத்தில்) முந்நூறு

    முழுப்பவளக் கோலமிட்டு

    மாணிக்கம் நிறைப்பாராம்

    மகராசன் வருகைக்கு

     

    கண்ணா உன் முகம் பாத்தா

    காணாத வாழ்வு வரும்

    கங்கை  வீட்டு வாசல் வரும்

    கனவெல்லாம் நனவாகும்

    கலகலன்னு நீ சிரிச்சா

    மளமளன்னு முத்துதிரும்

    தங்கமே நீ நடந்தா..

    தங்கத்தேரு ஆடி வரும்.

     

    எட்டடிக் குடுசக் குள்ள‌

    ஏந்தான் பொறந்தோமின்னு

    என்னைக்கும் நெனக்காதே

    எந் தங்க ராசாவே!!

    இருளெல்லாம் வெடிஞ்சு வரும்

    ஏழைக்கும் காலம் வரும்

    எம் மகனே நீ  நெனைக்கும்

    எண்ணத்தால் வாழ்வு வரும்!!!

     

    படத்துக்கு நன்றி: https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcS7_Wnk2Ekn0w5GnNsEmAEzw0KFuFBVXHrW96B46kDXkF0uJcuDSg

     

    Share
  • எங்க ஊரு சந்தெ

    நடராஜன்கல்பட்டு

    எங்கெ ஊருன்னு நான் எப்பொவுமே சொல்லிக்கிறது திருச்சி பக்கத்துலெ இருக்குற பொன்மலை தாங்க.  ஏன்னா அந்த ஊருலெ தான் நான் பொறந்தது லேந்து இருபது வயசு வரெ இருந்துருக்கேன்.

    அந்த நாளுலெ, அதாங்க ஒரு எண்பது வருசத்துக்கு முன்னெ, வெள்ளெக் காரன் நம்ம நாட்டெ ஆண்டுகிட்டு இருந்த காலத்துலெ, எங்க ஊருலெ தான் இந்தியாவுலேயே பெரிய ரயில்வே தொழிற்சாலை இருந்துதுங்க.  அங்கெ இந்தியா பூராலேந்தும் ப்ராடு கேஜு, மீட்டர் கேஜு, நேரோ கேஜு எஞ்சினுங்க, பயணிங்க போற பொட்டீங்க எல்லாம் ரிப்பேருக்கு வருங்க.  ஒரு விசேசம் அந்த நாளுலெ எங்க ஊருலெதான் மூணு வித எஞ்சினுங்க, வண்டிங்க, அதுக்கான லயனுங்க இதுகளெப் பாக்க முடியும்.

    எங்க ஊருக்குப் பொன்மலைனு ஏன் பேரு வெச்சாங்க தெரியுமா?  ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக் காரனுக்கும் சண்டெ நடெந்த போது பிரெஞ்சு தளபதி டூப்ளேயோட சோல்ஜருங்க எங்க ஊருலெ இருக்குற மலெயோட குகைலெ ஓளிஞ்சிகிட்டாங்க.  அவுங்களெத் தொரத்திகிட்டு வந்த கிளைவோட, அதாங்க வெள்ளெக் காரனோட தளபதி, ஆளுங்க குகெலெ ஒளிஞ்சு கிட்ட இருந்த சோல்ஜருங்களெ கொன்னு அந்த இடெத்தெக் காலி பண்ண போது அவங்க ஒளிச்சு வெச்சிருந்த தங்கக் காசுங்க அங்கெ கெடெச்சுதான்.  அதுனாலெ அந்த மலெய்க்குப் பொன் மலென்னு பேரு வெச்சங்களாம்.

    மலெ அடிவாரததுலெ பொன்னேஸ்வரி அம்மன் கோவிலும், மலெயோட கால் பங்கு ஒயரத்துலெ முருகன் கோவிலும் இருக்குங்க.   அந்த முருகன் கோவில் பக்கத்துலெயே ஒரு குட்டி மொட்டெ மலெ.  கோவிலுக்குப் போயிட்டு அந்த மொட்டெ மலேலெ கொஞ்ச நாளி குந்தி அரெட்டெ அடிச்சூட்டுதான் ஊட்டுக்குத் திரும்புவோம் நாங்க.  அங்கெ எங்கெ பேரெக் கூட பதிச்சிருக்கோம்.  தேடினா ஆயிரத்துலெ ஒண்ணா எங்க பேரும் கெடெய்க்கலாமுங்க.

    கோவில உட்டு வெளியெ வந்தோம்னா ஒரு சதுரக் கெணறு.  கொஞ்சமா பதினெஞ்சு இருபது அடி ஆழம்தான் இருக்கும்.  கைப்பிடி சுவரெல்லாம் கெடெயாதுங்க.  எட்டிப் பாத்தா தண்ணி, நீரு கலந்த பாலு கலருலெ இருக்குங்க.  அந்தத் தண்ணியெ குடிச்சீங்கன்னா மெய்யாலுமே பாலு குடிக்கிறீங்களோன்னு சந்தேகம் வருங்க.  அவ்வொளோ தித்திப்புங்க (அதே கலருலெ தண்ணியெ 1965லே பங்களூருலெ பன்னேர்கட்டா போற வளிலெ இருந்த சுந்தர் ராஜ் என்பவரோட ஊட்டுக் கெணத்துல பாத்திருக்கேங்க.)  பக்கத்து ஊருங்களான பொமைலைப் பட்டி, கொட்டைப் பட்டி கிராமங்களுக்குப் பூரா குடி தண்ணி அந்தக் கெணத்துலேந்து தான் எடுத்து கிட்டுப் போவாங்க. (நாப்பது வருசத்துக்கு முன்னெ ஒரு வாட்டிப் போனேங்க எங்க ஊருக்கு.  அந்தக் கெணெத்தெ எட்டிப் பாத்தா பாறெதான் தெரிஞ்சுது.  எங்க ஊடும் பாழடெஞ்ச ஊடு மாதிரி இருந்தீச்சு.

    எங்க ஊட்டுலேந்து பாத்தா எதுத்தாப்புல ஏரோபிளேனுங்க இறங்கறதும் ஏறுறதும் தெரியுங்க.  ஏன்னா ஒரு மைலு தொலவுலெ ரன்வேங்க.  அதுல உலக யுத்தம் நடந்த நாளுலெ ஏரோபிளேனுங்க நிறுத்தி வெச்சிருப்பாங்க.  கிட்டெ போயி பாக்கலாமுங்க.  ஏன், அதுங்கள்லெ ஏறிக் கூட பாக்கலாமுங்க.  நான் ரெண்டு மூணுக்குள்ளெ ஏறிப் பாத்துருக்கேனுங்க பக்கத்துலெ நின்னு கிட்டு இருந்த சோல்ஜரு கிட்டெ சொல்லீட்டு.  ‘ஆர்டெமிஸ், ஆஸ்ற்றேயியா’ ன்னு பேருங்க அதுங்க ரெண்டுக்கும்,

    சரி அதெல்லாம் உடுங்க.  மெயின் மேடருக்கு வருவோங்க, அதான் சந்தெய்க்கு வருவோங்க.

    எங்க ஊருலெ வாராவாரம் ஒரு சந்தெ கூடும்.  ஆனா அதெ விட முக்கியமான சந்தெ மாசா மாசம் ஒண்ணாந் தேதியும், பதினஞ்சாந் தேதியும் ஒர்க் ஷாப்பு வாசலுலெ கூடுற சந்தெய்ங்க.  அந்த ரெண்டு தேதிங்கள்லெ ஒர்க் ஷாப்புலெ சம்பளம் தருவாங்க.  அதுனாலெ தான் அந்த ரெண்டு நாளு சந்தெ கூடுறது.  இந்த சந்தேலெ பாருங்க ஊட்டுக்கு வேணுங்கெற துணி, மணி, அரிசி, பருப்பு, காய் கறி, சோப்பு, சீப்பு, கண்ணாடி, அலுமினிய, இரும்பு, பித்தாளெ பத்திரங்க இப்பிடி எல்லா ஜாமானுங்களுமே கெடெய்க்குங்க,

    எங்க அப்பாரு ஒரு சோப்பு ஃபேக்டரி வெச்சிருந்தாரு. சிம்மா சோப்பு ஒர்க்ஸ்னு பேரு அதுக்கு.  அவரு பண்ணுற துணி தோய்க்கிறெ சோப்பு ரொம்பப் பிரபலங்க மார்கெட்டுலெ.  அந்த சந்தெலெ நாங்களும் கடெ வெச்சிருப்போம் ஒரு கண்ணாடி தள்ளு வண்டிலெ.  அரெ மணிலெ வித்துப் போயிடும் வண்டிலெ கொண்டாந்த சரக்கு பூரா.

    எங்க கடெய்க்குப் பக்கத்துலெ தரெலெ ஆறுக்கு எட்டுலெ ஒரு ஜமுக்காளத்துலெ கடெ பரெப்பி இருப்பாரு ஒருத்தரு.  அது ரொம்ப ரொம்ப விசேஷ மான கடெய்ங்க.  வாங்க அதெப் போயி பாக்கலாம்.

    “ஓடிவா…ஓடிவா….. ஒங் கஷ்டம் என்னவானாலும் ஒடிவா……இருக்கு அதுக்கு மருந்து எங்கிட்டெ..”  “டக…டக…டக…” இது அவர் ஒரு கொட்டாங்கச்சி டமாரத்தில் எழுப்பும் ஒலிங்க.

    தயங்கித் தயங்கி வருகிறார் ஓமக் குச்சி வடிவமும் சோவின் தலையையும் கொண்ட ஒருவர்.

    “என்னையா?  மயிரு வளறணுமா?  வாங்கித் தேயி இந்தத் தைலெத்தெ.  பத்தே நாளுலெ வளர ஆரம்பிக்கும் பாரு ஒம் முடி.  சின்ன பாட்டிலு எட்டணா.  பெரிய பாட்டிலு ஒரு ரூவா.  சட்டுனு வாங்கு.  பட்டுனு தேயு.  வளருது பாரு ஒம் முடி.  சோதனெ பண்ணதையா இந்தத் தைலம்.  பத்தே நாளுலெ முட்டைக்கெ மயிரு முளெச்சுதுன்னா பாத்துக்க.”

    “பெரிய பாட்டிலே குடுங்க.”

    அடுத்து வருகிறார் கரடியா? மனிதரா? என்று சந்தேகிக்கும் படியான செந்தில் போல ஒரு ஆளு.

    “என்னையா?  ஒடம்புலேந்து ஒனக்கு மயிரு கொட்டணுமா?  அதுக்கும் இருக்குது எங்கிட்டெ தைலம்.  சின்ன பாட்டிலு எட்டணா.  பெரிய பாட்டிலு ஒரு ரூவா.”

    “ஆமாங்க.  சட்டெ போடாமெ வெளிலெ கெளெம்பவே முடியறதில்லீங்க.  தெருவுலெ சுத்துற குறும்புப் பசங்க, ‘டேய் கரடி வருதுடா’ ன்னு கிண்டல் பண்ணுறானுவ.”

    “சின்ன பாட்டிலா இல்லெ பெரிய பாட்டிலா?”

    “பெரிசே குடுங்க.  அது தான் என் பெரிய ஒடம்புக்குப் பத்து நாளெய்க்கு வரும்.”

    “டக… டக…. டக…. ஓடிவா….. ஓடிவா… ஒங் கஷ்டம் எதுவானாலும் ஓடிவா.  இருக்குது எங்கிட்டெ மருந்து அதுக்கு.  டக…டக…டக…”

    “ஒடெம்பெல்லாம் அரிச்சுப் புடுங்குதுங்க.  சொறிஞ்சு சொறிஞ்சு ஒடெம்பே புண்ணாயிப் போயிடுதுங்க.  அதுக்கு எதுனா……”

    “இருக்கு அதுக்கும் எங்கிட்டெ தைலம்.  சொறியோ, சிரங்கோ, கரப்பானோ, படையோ எதுவானாலும் பத்தே நாளுலெ பறந்து போயிடும் இந்த எண்ணெயெத் தடவினையானா.  சின்ன பாட்டில் எட்டணா.  பெரிய பாட்டிலு ஒரு ரூவா.  எடு காசெ.  எது வேணும் ஒனக்கு?”

    “பெரிசே குடுங்க,  அப்பொ தானே பத்து நாளெய்க்கு வரூம்?”

    “ஆமாம்.  இந்தா புடி.  டக… டக…. டக…. ஓடிவா….. ஓடிவா… ஒங் கஷ்டம் எதுவானாலும் ஓடிவா.  இருக்குது எங்கிட்டெ மருந்து அதுக்கு.  டக…டக…டக… அடுத்த சந்தைக்கு வர மாட்டார் சாயபு.  ஹைதராபாத் போறாரு அவரு.”

    பதினைந்து நாட்களுக்குப் பிறகு கூடுகிறது மீண்டும் சந்தை.  எங்கள் கடைக்குப் பக்கத்துக் கடை அதே சகல வியாதி நிவாரணி மருந்துக் கடை!

    (கதையல்ல.  கற்பனையல்ல.  கட கட கட… அக்மார்க் நிஜம் இது.)

    (சந்தை படங்கள் இணையத்தில் இருந்து)

    Share
  • தாகம் தீர்க்காத நதிகள்

     

    சச்சிதானந்தம்

     

    கொதிகலன் போலுலகைக் கதிரவன் காயவைக்க,

    மதிமுகம் சுமந்தோடிக் குளிர்ந் திருந்த,

    நதிகளின் ஊற்றுக்கண் குருடாகிக் காய்ந்திருக்க,

    விதியென நொந்துசெத்து மனிதனும் வீழுகின்றான்!

     

    வனங்கொண்ட வளங்களை தினந்தினம் அழிக்க,

    பணங்கொண்ட மமதையில் பசுமையைப் பழிக்க,

    சினங்கொண்ட மரங்களின் சாபத்தால் இப்போது,

    குணங்குன்றி ஆறுகள் நீரின்றி வறண்டன!

     

    மலர்களை, மீன்களைச் சுமந்த நதிகள்,

    மணல்வெளிப் பாதையாய் அனல்கக்கி நிற்க,

    மதகணைக் கதவெங்கும் தேனீக்கள் கூடுகட்ட,

    மலைத்தேனால் நிறைந்திருக்கும் எம்மாற்று வளங்காணீர்!

     

    ஆற்றங்கரை அரசமரம் நீரின்றிச் சாக,

    அங்குவாழும் பிள்ளையாரும் நாவறண்டு வாட,

    அழகுகங்கை சூடியவன் சடைவறண்ட கோலத்தால்,

    அகிலமெங்கும் தாகத்தில் தவித்துறைந்து நிற்கிறதே!

     

    மாதம் ஒரு செடி நடுவோம்,

    மேகஞ் சூல் கொள்ள வைப்போம்,

    மாரித் துளி பூக்க வைத்து,

    மண்ணு லகைக்  காத்திடு வோம்!

    Share
  • வைகாசி அனுஷம்- பவ சங்கர தேசிக மே சரணம்!

    -சு.ரவி

     

    வணக்கம் வாழியநலம்!

    சென்ற 25ஆம் தேதி வைகாசி அனுஷம்.

    காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மஹாஸ்வாமிகளுடைய ஜயந்தி தினம்.

     

    ஆதிசங்கரரின் மறுஅவதாரம், அன்னை காமாக்ஷியே குரு உருவில் புரிந்த அனுக்ரஹம், நமது காஞ்சி மாநகரின் பாக்கியம் என்று பலகோடி மாந்தர் மதித்துப் பணியும் ஸ்ரீமஹாஸ்வாமிகளுடைய  பாதகமலங்களுக்கு நமஸ்காரங்கள்.

    “ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமை.

    பீடமேறிய தனது ஆரம்பநாட்களில் ஒருபயணத்தின் போது, ஆற்றங்கரையில், பொய்பேசிய தன் 6 வயதுத் தம்பியைத் திருத்தும் முகமாக, சத்தியத்தின் உயர்வு பற்றி எந்த வேதமும், உபநிஷத்துக்களும், புராணங்களும் சொல்லியதை விடஅற்புதமாகவும், எளிமையாகவும் விளக்கிய 8 வயது குடியானவச் சிறுமியைத் தனது குருமார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்ட நேர்மை;

    ஆன்மபரிசுத்தி எனும் அக்னியில் புடம்போட்டு ஞானக் கனலாகவும், கருணைப் புனலாகவும் விளங்கிய  மேன்மை;

    பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தமது திருவடி தோயத் தோய நடந்து விஜயம் செய்து இந்துமதத்தின் உயிர்மூச்சை, உள்ளுறை ஒளியை அணையாது காத்துக் கொடுத்த மஹான், தமது விஜயங்களின் போது “மேனா” வின் பின் நடந்து செல்லும் காட்சி

    இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும்.

     

    கருணையே வடிவான அன்னையும், கண்டித்து வழிநடத்தும் தந்தையும், தானே முன்னுதாரணமாய் நடந்து காட்டி உபதேசிக்கும் குருவும் ஒரு வடிவாய் வந்துதித்த பேரருளாளரின் ஆழ்ந்த தியானக் கோலம்.

    ஐந்து சுடர்களுக்கு நடுவே ஒருகால் ஊன்றித் தவம் செய்யும் அன்னை காமாக்ஷியும், காமகோடி பீடத்தை அலங்கரிக்கும் காஞ்சிமாமுனிவரும் வேறு வேறல்ல என உணர்த்தும் தவக்கோலம். (தற்செயலாக ஒரு அடியவருக்குக் கிடைத்த தரிசனம் இது).

    ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்கள் ஒரு குரு எப்படி இருப்பார் என்பதை நமக்கு உணர்த்த வல்லவை.

    நான் கேட்டறிந்த ஒரு நிகழ்ச்சி.

    திண்டிவனத்துக்கு அருகே ஆலக்கிராமம் என்றஒரு சிறு கிராமம். அங்கு ஸ்வாமிகள் செல்லும் போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது.

    சிலநாட்களாகப் பெய்து வந்த கடும் மழை காரணமாக, வீடு, வாசல், பொருட் சேதமடைந்து துயருற்ற ஏழைக் குடியானவ ஜனங்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்கக் கூட்டமாக வந்திருந்தனர்.ஸ்வாமிகள் அம் மக்களுக்கு மடத்தின் சார்பாக உதவும்நோக்குடன் உடனிருந்த மடத்து நிர்வாகியிடம் அவர்களுக்கு வேட்டி, துண்டு, சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யக் கூறினார்.

    முகாம் வந்த இடத்தில் மடத்தின் கைவசம் ஸ்டாக் இல்லாததால் திண்டிவனம் சென்றுதான் வாங்கி வரவேண்டும். பெய்துகொண்டிருந்த மழைகாரணமாகப் போதுமான துணிமணிகள் வாங்கிவரத் தாமதமாகிவிட்டது. பின்னர் அவற்றைக் குடியானவர்களுக்கு ஸ்வாமிகள் தமது திருக்கரங்களால் வழங்கி முடிக்கும்போதுமாலைப்பொழுது சாய்ந்து இரவு ஆகிவிட்டது. மனநிறைவோடு எழுந்த ஸ்வாமிகளிடம் நிர்வாகி,

    ” ஆனால் பெரியவாளுக்கு சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்குத்தான் நேரமாயிடுத்து” என்றார்.

    அவரை ஏறிட்டு நோக்கிய ஸ்வாமிகளோ “சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிஞ்சாச்சு” எனச் சொல்லிவிட்டு உள்ளேசென்றார்.

    நம்மைக் கரையேற்றுவதற்காகத் தாம் தவவாழ்வு வாழ்ந்த மஹான் கரைஏறிவரும் காட்சியும்,

    உண்மையான சந்திரமௌளீஸ்வரர் பூஜை எது என உணர்த்தியவர் பூஜை செய்யும் கோலமும்,

    யோகிராஜராக, ருத்ராக்ஷ கிரீடத்துடன் நிற்கின்ற தரிசனமும்..

     

    கோட்டோவியங்களாக…

     

    ஒரு கருத்தை விளக்கி உபதேசிப்பதில் ஸ்ரீமஹாஸ்வாமிகள் தனித்து ப்ரகாசித்தார்.நான் படித்த இரண்டு உதாரணங்கள்:

    1. அம்பாளுடைய லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ‘அபர்ணா’ என்றொரு நாமம்.  வழக்கமாக இந்த நாமத்திற்கு ‘ கடும்தவம் செய்கையில் இலைகளைக் கூடச் சாப்பிடாமல் தவமிருப்பவள்’ என்றுபொருள் கொள்வர்.

    ஸ்ரீ மஹாஸ்வாமிகளோ, ” தவம் செய்கையில் இலைகளற்ற கொடிபோல் காட்சி தருபவள்” என்று அற்புத விளக்கம் அளித்தார்.

     

    2. ஸ்ரீ ராமானுஜர் வரலாற்றில், சைவம் தழுவிய சோழமன்னனின் கட்டளைக்காக, ஸ்ரீ. ராமானுஜருக்குப் பதிலாக மன்னனைச் சந்தித்த அவரது சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வார் பற்றிய நிகழ்ச்சி. மன்னன் “சிவாத் பரதரம் நாஸ்தி ( சிவத்திற்கு மேல் ஏதுமில்லை)” என்றெழுதிய ஓலையில்  பரம வைணவரான அவரைக் கையெழுத்திடுமாறு பணிக்க, அவர் அவ்வோலையில்

    ” அஸ்தி த்ரோணம் அதஃபரம்” என்றெழுதி கையொப்பம்  இட்டார். “சிவம்” என்பது சிவனைக் குறிப்பதல்லாமல் ‘ஆழாக்கு போல ஒரு முகக்கும் அளவையும் குறிக்கும். ஸ்ரீ கூரத்தார் அதை சிலேடையாக்கி  அதை விட ‘த்ரோணம்’ என்ற முகக்கும் கருவி பெரியது எனப் பொருள்படும் வாக்கியத்தை எழுதினார் என்பர்.

    ஸ்ரீமஹாஸ்வாமிகள் ” சோழமன்னன் எந்த நோக்கத்தோடு சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என கூரத்தாழ்வானை ஒப்புக் கொள்ளக் கட்டாயப் படுத்தினானோ- ஆனால் மஹா ஞானியும், பண்டிதனும், பாகவதனும் ஆன கூரத்தாழவான் வேடிக்கைக்காகக்கூட சிவ தூஷணை தவனிக்கப் பதில் அளித்திருக்க மாட்டார். எனவே இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் எனத்தோன்றியது.

    சிவலிங்கத்தை அலங்கரிக்கும் போது, அதன் உச்சியில் விலவ இலைகளிச் சூடுவர். ஆம், “த்ரோணம்” என்றால் வில்வம் என்றும் பொருள்படும்.    ” சிவனுக்கு மேலே ஒன்றுமில்லை” என்பதற்குப் பரம பாகவதனான கூரத்தாழ்வார் ” அதற்கு மேலே வில்வம் இருக்கிறது” என்று பொருள்படத்தான்மாற்றுரைதிருப்பார்”  என்று விளக்கி உள்ளார்.

     

    மஹான்கள் பார்வையே தனி.

     

    அவர்கள் பூஜை செய்யும் போது அந்த அந்த மந்திரங்களின் அதிதேவதைகள் நேர்வந்து அவற்றை ஏற்கும்.

     

    அன்னாரது ஜயந்தியை ஒட்டி, அடியேனது கோட்டோவியங்களை என் காணிக்கையாக்குகிறேன்!

     

    ” பவ சங்கர தேசிக மேசரணம்! “

    Share
  • அன்பே அழகானது – 1

    ராஜ்ப்ரியன்

    சாந்தமும், அமைதியும் குடிகொண்ட பிரபலமான குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளி பிரின்ஸ்பல் நாற்பத்தியெட்டு வயது சிஸ்டர் சில்வியா கண் கண்ணாடியை கழட்டி வைத்தபடி சொன்னதும் எதிரே அமர்ந்திருந்த சுதா புன்னகையுடன்  நன்றி மேடம் என்றாள்.

    எங்க பள்ளியை விட பிரபலமான பள்ளிங்க இங்க இருக்கு. நீங்க நல்லா படிச்சியிருக்கிங்க. உங்க தகுதிக்கு காலேஜ்கள்ளயே நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைக்கும்மே அங்கயெல்லாம் போகாம குறைந்த சம்பளத்துக்கு இங்க டீச்சரா வேலைக்கு சேர என்ன காரணம் ?

    என்னோட சின்ன வயசுல இந்த ஸ்கூல்ல படிக்கணம்ன்னு ஆசை. அப்ப முடியல. இப்ப வேலை பாக்க வேண்டிய நிலை வந்ததும் இங்க சேரணம்ன்னு ஆசைப்பட்டன். விளம்பரத்த பாத்து அப்ளே பண்ணேன் என சுதா சொன்னபோது மெல்ல புன்னகைத்த சிஸ்டர் சில்வியா, நீங்க எய்த் டூ டென்த் ஸ்டூடன்ட்க்கு கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுங்க.

    சரிங்க மேடம்.

    தன் இருக்கையில் இருந்து எழுந்த சிஸ்டர் சுதாவிடம் வாங்க என அழைத்தார்.

    மேடம் ஒரு நிமிஷம். உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டிங்களே ?.

    தெரியாததைத்தான் கேள்வியா கேட்பாங்க. அதல என்ன தப்புயிருக்கு. கேளும்மா என்றார் சிரித்தபடியே ?.

    ஸ்கூல்ல எல்லாரும் இங்கிலிஷ்ல தான் பேசணம்ன்னு வெளியில சொன்னாங்க. நீங்களே தமிழ்ல பேசறிங்களே.

    ஆங்கிலம் கத்து தர்றோம் இல்லன்னு சொல்லல. ஆனாலும் இங்க தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வெளிநாட்லயிருந்து வந்த கால்டுவெல் தமிழ் கத்துக்கிட்டு தமிழைப்பத்தி சிறப்பா நூல்கள் எழுதனாரு. ஆப்படியிருக்கும் போது நம்ம மொழிய நாம பேசலன்னா நல்லாயிருக்கும்மா. முதல்ல தாய்மொழிக்கு முக்கியத்துவம், அதுக்கப்பறம் தான் பிறமொழி. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ங்கறதால இங்கிலிஸ்ல தான் பேசுவாங்கன்னு வெளியில இருக்கறவங்க நினைக்கறாங்க. அப்படியெல்லாம் இல்ல பசங்களுக்கு ஆங்கிலத்த கற்று தர்றோம், தாய் மொழிய உணர வைக்கறோம் என்றவர் போகலாம்மா என கேட்டார் சுதா தலையாட்டியதும் நடக்க தொடங்கினார். அலுவலக வாயிலில் நின்று டேவிட் என அழைத்தார். வந்துட்டன் மேடம் என குரல் தந்தப்படி 40 வயதான டேவிட் பவ்யமாக வந்து நின்றார். சுதா இவர் ஆபிஸ் பியூன் டேவிட் என அறிமுகப்படுத்தியவர், டேவிட் இவுங்க சுதா புது அப்பாய்மெண்ட் 8 டூ 10 கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுக்கபோறாங்க. இவுங்களுக்கான டைம்டேபிள் கம்ப்யூட்டர் ரூம்ல இருக்கும் பிரிண்ட் அவுட் வாங்கி வாங்க எனச்சொல்லிவிட்டு நடந்தார்.

    ஸ்டாப் ரூம்க்குள் நுழைந்த சிஸ்டரை கண்டு அனைவரும் எழுந்து நின்றனர். தன் பின்னால் நின்ற சுதாவை சுட்டிகாட்டி எம்.எஸ்.சி. எம்.பிஎல் முடிச்சியிருக்காங்க. நம்ம ஸ்கூல்க்கு கெமிஸ்ட்ரி டீச்சரா அப்பாய்மென்ட் பண்ணியிருக்கு. நீங்க இவுங்களுக்கு ஒத்தொழைப்பு தரனும் என்றவர் சுதா பக்கம் திரும்பி இதான் ஸ்டாப் ரூம், டைம் டேபிள் தரச்சொல்றன், போய் உட்காருங்க குட் லக் எனச்சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார்.

    சுதா காலியாக இருந்த இடத்தில் அமர அருகில் இருந்த ஒரு ஆசிரியை ஹாய், ஐயெம் மாலதி. இங்கிலிஷ் டீச்சர் என அறிமுகமானார்.

    நீங்க என்ன ஊர் ?.

    இதே ஊர் தான் காந்தி நகர்ல இருக்கன்.

    எங்க படிச்சிங்க ?.

    திருச்சியில எம்.எஸ்.சியும், பெரியார் யுனிவர்சிட்டியில எம்.பில் பண்ணன்.

    அப்பா என்ன பண்றாரு ?

    பிஸ்னஸ் பண்றாரு.

    இதுக்கு முன்னாடி எங்கயாவது வேலை பாத்திங்களா?.

    இல்ல.

    ஏன் ?.

    சும்மா தான் எங்கயும் முயற்சி பண்ணல.

    மாலதி மேடம் அவுங்க இப்பத்தான் வந்துயிருக்காங்க. அதுக்குள்ள அவுங்கள ஏன் ராக்கிங் பண்றிங்க விடுங்க என ப்ரியா சொல்ல அந்த அறையே சிரிப்பால் அதிர்ந்தது.

    ஏன் மேடம் கலாய்க்கறிங்க. புதுசா வந்துயிருக்காங்க. அவுங்களப்பத்தி உங்களுக்கும் தெரியாது. உங்க மனசுல இருக்கற கேள்வியையும் தான் நான் கேட்கறன் தெரிஞ்சிக்கிட்டா பழகா ஈசியா இருக்கும்மில்ல அதுக்குத்தான் கேட்கறன் என்றார்.

    நீங்க கேளுங்க மேடம் என சுதா சொன்னதும்

    கல்யாணமாகிடுச்சா

    என கேட்டதும் சுதா அமைதியாகி சுதாவின் முகம் சுருங்கி கண்ணீல் நீர் கோர்த்தது. இதை பார்த்த மாலதிக்கு சுதா பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.

    தொடரும்……………

    Share
  • பாரதியின் வேத முகம் – 12

     

    -சு.கோதண்டராமன்

    நம்புவதே வழி

    இஸ்லாமிய வேதம் குர் ஆன் பல இடங்களில் அல்லா மேல் ஈமான் கொள்ளுங்கள் என்று நம்பிக்கையை வலியுறுத்துகிறது. கிருத்துவர்களின் பைபிளும் பல இடங்களில், விசுவாசியுங்கள் என்று நம்பிக்கையை முதன்மைப்படுத்துகிறது. ஆனால் இந்து மதமோ அந்த அளவுக்கு நம்பிக்கையை வலியுறுத்துவதாகத் தெரியவில்லை.

    வேதம் தனி மனித சிந்தனைக்குக் கொடுத்துள்ள சுதந்திரம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. வேதத்தை ஒப்புக் கொள்ளாதவரைப் பாவி என்றோ காபிர் என்றோ இந்துக்கள் இகழ்வதில்லை. மாறாக புதிய சிந்தனைகளை வரவேற்று அவற்றின் உண்மைகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்லனவற்றை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரே வேதத்திற்கு சங்கரர் ஒரு விதமாகவும் ராமானுஜர் ஒரு விதமாகவும் மத்வர் ஒரு விதமாகவும் விரிவுரை எழுதியுள்ளனர். அவரவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை ஏற்றுக் கொள்ளவும் அதன்படி நடக்கவும் பிறப்புரிமை பெற்றவன் இந்து. கடவுள் இல்லை என்று சொல்பவனையும் வேத மதம் வெறுப்பதில்லை. இன்றைய பெரியார் மட்டுமல்ல, முற்காலத்தில் வாழ்ந்த ஜாபாலி என்ற முனிவரின் கருத்துகளும், சார்வாகர்கள் என்றழைக்கப்பட்ட நாஸ்திகர்களின் கருத்துகளும் இந்து சமய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

    வேதம் நம்பிக்கையை வலியுறுத்துகிறதா? சாதாரண மக்கள் வழக்கில் நம்பினவருக்கு நடராசா, நம்பாதவருக்கு யமராசா என்று சொல்லப்படுகிறது என்றாலும் வேதத்தில் எந்த இடத்திலும் இந்த வேதம் சொல்வதை நம்புங்கள். நம்பினால் தான் கடைத்தேறுவீர்கள், இல்லாவிட்டால் நரகத்துக்குப் போவீர்கள் என்ற மிரட்டல்கள் காணப்படுவதில்லை.

    இத்தகைய சூழ்நிலையில் பாரதியின் இரு வரிகள் நமக்குப் புதிராக உள்ளன. முதலாவது, சக்தியைக் கும்பிடுமாறு தன் மனத்துக்கு அறிவுறுத்தும் இடத்தில்

    நம்புவதே வழி என்ற மறை தனை

                    நாம் இன்று நம்பி விட்டோம் என்கிறார்.

    இன்னொரு பாடலில்

    நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு

                    அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக நலம் பெறலாம்

    என்கிறார்.

    வேதம் நம்பிக்கையை வலியுறுத்துவதாக அல்லவா கூறுகிறார். உண்மையா? தேடினால் கிடைப்பது சிரத்தை பற்றிய ஒரு சூக்தம். ரிக்வேதம் பத்தாவது மண்டலம் 151வது சூக்தம்.

    சிரத்தை என்பது அடைய வேண்டிய லட்சியத்தில் உறுதியும் அதை அடைவதற்கான வழியில் முழு முனைப்புடன் ஈடுபடுவதையும் குறிக்கும். செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் தன் இறுதி நோக்கத்துக்குப் பயன்படுமா என்று ஆராய்ந்து பயன்படக்கூடிய எந்த சிறு செயலையும் விடாமல் செய்வதும் பயன் தராத எந்த சிறு செயலையும் செய்யாதிருப்பதும் இதில் அடங்கும். இதில் நம்பிக்கை எங்கே வந்தது?

    ஆதி சங்கரர் சிரத்தை என்பதற்கு நம்பிக்கை என்றே பொருள் தருகிறார். இறைவன் ஒருவர் உண்டு என்பதில் சந்தேகம் இல்லாத தெளிவான மனத்துடன் இருப்பதே நம்பிக்கை என்கிறார். அதுவே சிரத்தையின் அடிப்படை. குறிக்கோளில், அதாவது இறைவனிடத்தில், நம்பிக்கையும் அதை அடையும் வழியாகிய, குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையும் தான்.

    ஒரு உதாரணம் பார்ப்போம். ஒருவன் ஒரு புதிய ஊருக்குச் செல்ல விரும்புகிறான், ஒருவரிடம் வழி கேட்கிறான். அவன் அதில் நம்பிக்கையோடு பயணம் செய்ய வேண்டும். கொஞ்ச நேரம் சென்ற பின் இந்தப் பாதை சரியானது தானா? நமக்குச் சொன்னவர் சரியாகத் தான் சொல்லி இருப்பாரா? நாம் போய்ச் சேருவோமா என்று ஐயுறுதல் கூடாது.

    நம்பிக்கை இன்றி, சந்தேகம் தன்னை ஆட்கொள்ள அனுமதிப்பவன் அழிவான் என்கிறது கீதை. (ஸம்சயாத்மா விநச்யதி)

    இந்த சிரத்தை, அதாவது குறிக்கோளில் உறுதியும் செயல்பாட்டில் சந்தேகம் மற்றும் குறை இல்லாத வினைத் திட்பமும், ஒரு தேவியாக உருவகப்படுத்தப்பட்டு வேதத்தில் போற்றப்படுகிறது. அதன் சுருக்கமான மொழி பெயர்ப்பு இதோ:-

    சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. அதைச் சொற்களால் போற்றுவோம். சிரத்தையே, கொடுப்போருக்கும் கொடுக்க விரும்புவோருக்கும் விரும்பிய பலன்களைக் கொடுப்பாயாக. (சிரத்தையோடு செய்தால் விரும்பிய பலன் கிடைக்கும்.) தேவர்கள் அசுரர்களுடன் இட்ட போரில் சிரத்தையைக் கைக் கொண்டனர். வெற்றி பெற்றனர். (நோக்கத்தில் வெற்றி பெற வேண்டுமென்ற) இதய தாகத்தால் சிரத்தை அடையப்படுகிறது. சிரத்தையால் செல்வம் அடையப்படுகிறது. சிரத்தையைக் காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் வணங்குகிறோம். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு.

    இந்தக் கருத்துகளைத் தான் பாரதி ஒரு வரியில் கூறுகிறார்.

                    நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு.

    சிரத்தையை, அதற்கான இதய தாகத்தை, அடைவது எப்படி? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல சிரத்தையை அடைய சிரத்தை என்னும் அம்பிகையைத் தான் வணங்க வேண்டும். சிரத்தா தேவியே, எங்களுக்கு சிரத்தையைக் கொடு என்று தான் அந்த ரிக் வேத சூக்தம் நிறைவடைகிறது. பாரதியும் அதையே எதிரொலிக்கிறார்.

    அம்பிகையைச் சரண் புகுந்தால்

                    அதிக நலம் பெறலாம்.

     

                    நம்புவதே வழி என்ற மறை தனை

                    நாம் இன்று நம்பி விட்டோம்.

     

    Share
  • ஐயப்பன் கீர்த்தனைகள்-கேட்க,ரசிக்க…

    -சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

    ஒரு மாறுதலுக்கு இம்முறை ஒலிவெளிப் பயணம்.

    ( ஓவியத்தை விட்டுக்கொடுக்கமுடியாமல், என்னை ஆட்கொண்ட சபரிகிரீசன், நெய்ப்பிரியனின் ஓவியம் பார்க்க, ரசிக்க..)

    என் சபரிமலைப் பயணங்களை இசைப்பயணங்களாக மாற்றியதில் பெரும்பங்கு

    என்நண்பன் V.K நாராயணனையே சாரும்.

    1980- 2000 களில் சபரிமலைப்பயணங்களின் போது, வழிநடையில் நாராயணனின் ராக ஆலாபனைகளைத் தொடர்ந்த இசைப்பாடல்களாகவோ, என்னில் உதித்த பாடல்களின் இசைவடிவங்களாகவோ உருவெடுத்த பாடல்கள் இவை.

    பலவருடங்களுக்கு முன் ஒரு மதியப்பொழுதில் என் இல்லத்தில் ஒரு MONO டேப் ரெகார்டரில் சுருதிப்பெட்டியுடன் நாராயணனின் குரலில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை வலைத்தளத்தில் ஏற்றி, அந்த இணைப்பைக் கீழே தருகிறேன்.

    http://archive.org/details/Su.raviIyyappanKeerththanaikal

    3 Track களில் உள்ள இந்தப் பாடல்களைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:

    ( பத்துப் பாடல்கள் உள்ளதால், பாடல்களின் முழுவரிவடிவங்களுக்குப் பதில்

    இவை உருவான பின்னணிகளிப் பற்றிய குறிப்புகளை மட்டும் தருகிறேன்)

     

    1. என்மனம் ஆனந்தக் கூத்தாடுதே- கமாஸ் ராகம்:

    பெரிய குருஸ்வாமி திருச்சியில் இருந்ததால் கட்டுநிறை திருச்சியில்.

    ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் திருச்சிக்குச் செல்லும் போது கமாஸ் ராகத்தில்

    நாராயணன் ஆரம்பித்த பல்லவி விழுப்புரம் வருவதற்குள் நிறைவு செய்யப்பட்டு இசைவடிவமும் பெற்றது.

    சரணத்தில் வரும் சூசித ராகமுத்திரைக்கு ( சுகமா சுகமா என) inspiration கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானாமோகனாம்பாள் நாவலில் வரும் ‘கமாஸ்’ கிட்டாவையர் சொல்லும் dialog.

     

    2. மழைச்சாரல் வரவேற்குது- அம்ருதவர்ஷிணி ராகம்

    சபரி மலையிலிருந்து திரும்பும் வழியில் வேனில் அச்சங்கோவில் செல்கிறோம்.இயற்கைஎழில்கொஞ்சும்

    வனப்பகுயதியில், அச்சங்கோவில் மலை மீது வேன் செல்லும்போது பூந்தூரலாக மழை பன்னீர் தெளிக்கின்றது.

    பஞ்சுப் பொதிகளாக மேகங்கள் தவழ்கின்றன. நாராயணனின் உற்சாகக் குரலில் அம்ருதவர்ஷிணி ராகம் பீறிட்டுவர

    பாடல் பிறந்து சன்னிதானம் சேர்வதற்குள் நிறைவடைகிறது, வன் புலியேறும் ராவுத்தனுக்குக்.காணிக்கையாக!

     

    3.’உனைக் காணும் வரை கண்கள் மூடாது- ஷண்முகப்ரியா ராகம்

    மற்றுமோர் ஜனவரி மாதம் சபரிமலைப் பயணம். சென்னையிலிருந்து வேன் ஒன்றில் நாங்கள் 12 ஐயப்பன்மார் திருச்சிக்குப் போய்க்கொண்டிருந்தோம். நள்ளிரவு. பாடல்கள் ஓய்ந்து அவரவர் கண்ணயரும் தருணம்.ஓட்டுனருக்கு அருகில் உறங்காமல் மௌனமாக நான்.

    பின்ஸீட்டிலிருந்து ஓர் ஐயப்பன் ” என்ன, சு.ர. தூங்கிட்டியா” என்று குரலெழுப்ப, அவருக்கு விடையாக ஷண்முகப்ரியாவில் எழுந்த பதில்.

    சரணத்தில் ‘நினைப் பாட’ என்ற வரிகளை ஒவ்வொரு சரண முடிவிலும் நிரவல் செய்து பாடுமாறு அமையப்பெற்றபாடல்.

     

    4. சரீர வீணை தன்னிலும் சங்கீதம் கேட்குது-அமீர்கல்யாணி ராகம்

    1987/88 வருடம் என்று நினைவு. எண்ணூர்ஃபவுண்டரி நிறுவனத்தில் பணி. ஒருநாள்காலை 8:00 மணிக்கு நணபன் க.ரவி தொலைபேசியில் அழைத்தான்.

    ” சு.ர, ‘அமரத்வனி- 2’ கேஸட்- ஐயப்பன் மீது- இன்று ஒலிப்பதிவு- நணபன் K.S ராஜகோபால் பாட, என் இசையில் சங்கீதா நிறுவனம் தயாரிக்கிறது. 9: 30 க்கு மறுபடி அழைக்கிறேன்.நீ ஒரு பாடல் தயார் செய்து தா”

    அமீர் கல்யாணியில் அப்போது உருவான பாடல்.

    பாடலை முழுவதும் ஃபோனில் கேட்ட க.ரவி, பாடலின் இறுதியில் அமைந்த சந்தப் பகுதியைப் பாடுவது கடினமாக இருக்கும் எனக்கருதி வேறு பாடலைக் கேட்க, தர்பாரி கானடாவில் ” பூதமைந்தும்” என்ற பாடலை அளித்தேன்.

    கேஸட்டில் இடம் பெறாவிடினும், நாராயணனின் குரலில் எங்கள் ஐயப்பன் பஜனைகளில் இப்பாடல் இடம் பெறும்.

     

    5.வானவர் போற்றிட- பூர்விகல்யாணி ராகம்

    கர்நாடக சங்கீதம்(வீணை) பயில்கையில், கீர்த்தனைகள் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலகட்டம். நாராயணனை ராக அலாபனை செய்யச்

    சொல்லி நான் பயணத்தின் போது உருவாக்கிய முதல் கீர்த்தனை. இப்பாடலிலும், இதனை அடுத்து உருவாக்கிய தோடி ராகக்

    கீர்த்தனையிலும் பல்லவி, அநுபல்லவி, மத்யமகாலம், சரணங்கள், மத்யம காலம் என்ற ஃபார்மேட்டில், ‘குருதாஸ’ எனற

    முத்திரையும், ராகமுத்திரையும் அமைந்துள்ளன.

     

    6. உனையொருகணம் நினைவதும்- மலயமாருதம் ராகம்

    தரிசனம் முடித்து, மலையிலிருந்து திரும்புகிறோம். நண்பன் க.ரவி ” பாடல் தொட்டுத்திறக்குமா நுழைவாயிற் கதவங்கள்”

    என்ற கவிதையை ஆசுகவியாகப் பொழிந்தான். சுகமாக வீசிய மலயமாருதமும், கவிதையும், ஐயனின் தரிசன அனுபவமும் உள்ளுருக்க, மலயமாருதத்தில் உருவான பாடல். 99% குறில்களால் அமைந்த பாடல்.

     

    7. அஹங்காரத்திரை அறுபடுமோ- சுப பந்துவராளி ராகம்

    மஹனீயர் தியாகைய்யரின் ‘தெரதீயகராதா’ கீர்த்தனை கொடுத்த உந்துதல் இந்த சுபபந்துவராளி.

    சரணத்தில் வரும் கருத்துக்கு Inspiration கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் வரிகள்

    ” அங்கவ் வயனும் இருக்க ஒட்டான்”-

    அங்கே பிரமனும் இருக்க விடமாட்டான் – இங்கே யமனும் தங்க விடமாட்டான்” என்கிற யதார்த்த உண்மை.

    நாராயணன் ஒரு சுபபந்துவராளி ஸ்பெஷலிஸ்ட்- செம்மங்குடி மாமாவின் ‘ஸ்ரீ சத்ய நாராயணம்:” வழி…

     

    8. நெஞ்செலாம் நின் ராஜ்யம்- ரஞ்சனி ராகம்

    பாடலின் இறுதியில் வரும் சிட்டை ஸ்வரம் நாராயணனின் கற்பனை. ‘ரஞசனி’, நாராயணனுக்கு மிகவும்

    நெருக்கமான ராகம். இதில் திருமதி.ரஞ்சனிநாராயணனுக்கு விருப்பம்தான்!

     

    9. தவத்தில் நிலைத்த தயைவடிவம்- சிந்துபைரவி ராகம்

    அந்த வருடப் பயணத்தில் எங்களுடன் என் லேலண்லட் தோழன் கிருஷ்ணன் சேர்ந்து கொண்டான்.

    (T.K.S. சகோதரர்களில் இரண்டாவது சகோதரர் திரு. டி.கே. முத்துஸ்வாமி அவர்களின் இரண்டாவதுமகன் கிருஷ்ணன். அற்புதமான குரல்வளம் – இவனுக்காக, அந்த கால ஹிந்தி, தமிழ்ப்படப் பாடல்களின் மெட்டில் இயற்றிக்கொடுத்த ஸ்வாமி பாடல்கள் பல. எங்களுடன் ஒருமுறையே மலைக்கு வந்த கிருஷ்ணன் இன்று மறைந்துவிட்டான்).

    எருமேலியில், ஒரு கீர்த்தனை எப்படி உருவாகிறது என்ற அவன் கேள்விக்கு விடையாக, நாராயணன் பாட, சிந்துபைரவியில் உருவான கீர்த்தனை.

    ( இதே பயணத்தில் திரும்பும் போது, கிருஷ்ணன் ‘ஹரிவராஸனம்’ HUM செய்ய, அதே மெட்டில் “விரியும் வானெலாம்’ பாடல் பிறந்தது வேறு அனுபவம்)

     

    10. நினைத்ததுமே மெய்சிலிர்க்குதையா- ரீதிகௌள ராகம்

    நாராயணன், க.ரவி ஆகியோருடன் கட்டுநிறைக்காகத் திருச்சிக்கு ராக்ஃபோர்ட்டில் இரவுப் பயணம்.

    எங்களை மிகவும் ஈர்த்த ரீதி கௌள ராகத்தில், நாராயணன் இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளைப் பாட

    க.ரவியும், சு.ரவியும் மாறி,மாறி ஆளுக்கொரு வரி எனப் பாடி நிறைவு செய்த பாடலிது.

    ( இதன் தொடர்ச்சி ஒரிஜினல் கேஸட்டின் மறுபகுதிக்குப் போய் விட்டதால், நான் பிற்பாடு Up-Load செய்ய இருக்கும்

    இழையில் கேட்கலாம்)

    Share
  • பெற்றோர்

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    தட்டுத் தடுமாறி மெல்ல
    எட்டு எடுத்து வைக்கையிலே
    பட்டுக் கரம் தா என்
    கட்டித் தங்கமே என்றேந்தி
    எட்டி வைக்கும் அடிகளுக்கெல்லாம்
    தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டி
    எட்டுத் திக்கு சென்றாலும்
    கட்டி ஆள்வாய் உலகையே
    நாட்டிடுவாய் வெற்றிக் கொடியையே !!!
    என்று
    உற்சாகமூட்டும் அன்னை தந்தை
    உற்ற துணையாய் இருக்கையிலே
    உன்னத நம்பிக்கை  மலையென
    உள்ளமதில் எழுந்து நிற்க
    உலகையே கைப்பற்றி விட்டது போன்றொரு
    உயர் எண்ணம் உள்ளமதில் குடியேற
    உள்ளங்கையில் தவழ்ந்தாடும் வெற்றி மாலைகள் !!!

    Share
  • புத்தகங்கள் சூழ்ந்த வீடு

    வாசிப்பின் மோகம் குறையாது மாடத்தி !

    எஸ் வி வேணுகோபாலன்

    கணையாழி இதழில் சுஜாதா எழுபதுகளின் இறுதியில் “வேண்டாம்” என்ற தலைப்பில் பதினாறு சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்று போட்டுக் கவிதை ஒன்றை எழுதி இருந்தார். “காலையிலே எழுந்திருந்தால் செய்தித் தாளில், கற்பழிப்புச் செய்திகளைப் படிக்க வேண்டாம் / காப்பித் தூள் கடன் வாங்கும் மனைவி கண்ணில் காத்திருக்கும் நீர்த் துளியை மதிக்க வேண்டாம்..”என்று போகும் அதை வெளியிட்ட ஆசிரியர், அதற்குப் பதிலாக “வேண்டும்” என்ற தலைப்பில் கவிதைகளை வரவேற்று எழுதி இருந்தார். எல்லோரும் வேண்டும் என்று தானே எழுதுவார்கள் என்று எண்ணிய நான், மறுபடியும் வேண்டாம் என்ற தலைப்பில் எழுதிய கவிதை இப்படித் தொடங்கியது:

    கணையாழி விற்றிருந்தால் வாங்க வேண்டாம்
    கைதவறிக் கிடைத்தாலும் படிக்க வேண்டாம்
    காசிருக்கும் வரை நூலாய் வாங்கிப் போட்டுக்
    கடை கடையாய் கால் விலைக்குத் துறக்க வேண்டாம்..

    ஆனாலும் புத்தகங்களை வாங்கித் தள்ளும் தீராத ஆசையும், வாசிப்பின் தணியாத தாகமும் நின்ற பாடில்லை. புத்தகங்கள் சூழும் வாழ்க்கை எப்படி உருக் கொண்டது என்று துல்லியமாய்ச் சொல்லத் தெரியவில்லை என்றாலும், அதன் நீர்க் கோலம் ஒன்று இப்படி கண் முன் நிற்கிறது…

    எட்டாம் வகுப்பில் நுழைய இருந்த நேரம் எனது தாய் வழி பாட்டனார் – வாலாஜாபாத் இந்து மத பாடசாலையின் புகழ் மிக்க தலைமை ஆசிரியராக விளங்கியவர் – தமது பணி ஓய்வுக்குப் பின் குடியேறியிருந்த காஞ்சிபுரத்திற்கு என்னை அழைத்து அங்கே அவரோடு தங்கிப் படிக்கச் செய்திருந்தார். பள்ளிக்கூடம் திறக்க இருந்த சில நாட்களுக்குள் அவர் மாரடைப்பால் காலமானது எனது வாழ்வின் இரண்டாவது அதிர்ச்சி…இரண்டரை வயதில் தாயைப் பறிகொடுத்த முதல் அதிர்ச்சிக்குச் சிகிச்சையை தமது அன்பால் பொழிந்து இதமளித்த அந்த மாமனிதர் வைத்திருந்த ஆளுயர மர அலமாரியின் பெரிய அறைகள் எதை இழுத்தாலும் அவற்றில் புத்தகங்கள் நிறைந்திருந்தது. சின்னஞ்சிறு கதைகள், சுதந்திர வேள்வியில் தியாகம் புரிந்தோர் கதைகள், வாசித்து வாசித்து அட்டை வெளிர் மஞ்சளாக ஆகியிருந்த நாலாயிர திவ்விய பிரபந்தம், யாரோ காலண்டர் அட்டை போட்டுப் பளபளக்க வைத்திருந்த கம்ப ராமாயணத்தின் முதல் மூன்று காண்டங்கள் அடங்கிய அற்புத புத்தகம்…..

    புத்தக வாசிப்பையும், நூல்களை நோக்கிய ஒரு வெறியையும் என்னை விட நான்கு வயது மூத்தவரான எனது அண்ணன் எஸ் வி ரங்கராஜனிடம் தான் நான் பழக்கிக் கொண்டிருக்கவேண்டும். என்ன வகையான புத்தகம் என்றாலும் கையில் எடுத்துப் புரட்டாமல் இருக்க அவரால் முடியாது. வீட்டிற்குள் ஒரு சேர புத்தகங்களை வைத்திருக்க முடியும் என்பதை காஞ்சிபுரம் தெற்கு மாட வீதி உணர்த்தியது என்றால், ரங்கசாமி குளத்தருகே (இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும்) மாவட்டக் கிளை நூலகம் கொத்துக் கொத்தாகப் புத்தகங்களைப் பார்த்த முதல் இடமாக இருந்தது. வேலூர் மாவட்ட நூலகம், எனது முந்தைய பள்ளிக்கூடத்தின் நேரெதிரே இருக்க விடுமுறைக்குத் தந்தை வீட்டுக்கு வேலூர் செல்லும் ஒவ்வொரு முறையும் எனது அனைத்து விடுமுறை நாட்களையும் நான் அங்கே தான் கழிக்க விரும்பினேன். தண்ணீர் வைத்திருக்கும் டிரம், சங்கிலி பிணைத்திருக்கும் பித்தளை தம்ளரின் பிரத்தியேக வாசத்தோடும் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீர் இன்னும் நினைவுக் காப்பகத்தில் இருக்கிறது. ஆனாலும் எனக்கான நூல் சேகரிப்பைத் தொடங்கும் தாகம் என்னைக் கல்லூரி நாட்கள் வரை காத்திருக்க வைத்தது. அதற்கான உண்டியலில் முதலில் விழுந்தவை பள்ளி நாட்களில் தவறாது எனக்குக் கிடைத்து வந்த பரிசு புத்தகங்கள்.

    சென்னை மாநகரில் புகுமுக வகுப்பில் சேர பாட்டியின் அரவணைப்போடு மேற்கு மாம்பலத்தில் தாய்மாமன் வீட்டை வந்தடைந்த போது, எனது கவிதைகள் வெளியாகியிருந்த சிற்றிதழ்களையும், பரிசு நூல்களையும், எப்படியோ சேர்ந்திருந்த சில புத்தகங்களையும் ஒரு நீல நிற பெட்டிக்குள் உடைகளோடு சேர்த்து அடைத்து வைத்திருப்பேன். எனது சொந்த நூலகம் அந்தக் கைப்பெட்டிக்குள் தான் பிறப்பெடுத்தது. கோவையில் முதுநிலை கல்விக்காக மீண்டும் தந்தையோடு சென்று சேர்ந்தபோது டெபுடி கலெக்டர் என்ற அவரது அந்தஸ்து காரணமாகக் கிடைத்திருந்த பெரிய தனி வீட்டின் மாடியில் எனக்கு ஒரு தனியறையும், புத்தகங்களுக்காக சுவரில் அடித்து மாட்டிவைக்கும் ஒரு மர ஷெல்ஃபும் வாய்த்தது. கல்லூரிப் புத்தகங்களுக்கான இடம் தான் என்றாலும், அதில் மெதுமெதுவாகக் குடியேறத் தொடங்கின எனது வாசிப்பு வசந்தங்கள். அப்போதும் சிற்றிதழ்களே அதிகமிருந்தன, அழகியசிங்கர், ஸ்ரீதர்-சாமா ஆகியோர் என்னையும் உள்ளடக்கி நடத்திவந்த மலர்த் தும்பி பத்திரிகையில் வரும் படைப்புகளை எடுத்து எடுத்துப் படித்தபடி தான் வேதியல் பாடத்தின் மேற்கல்வியை மேற்கொண்டிருந்தேன். கோவை வானொலி நடத்திய நிகழ்ச்சிகள், இலக்கிய கூட்டங்கள் இவற்றோடு பாலகுமாரன், மாலன், சுப்ரமணிய ராஜூ எல்லோரும் எழுத்தாளர் சாவியோடு வந்து கலந்து கொண்டிருந்த கூட்டத்தில், சில உணர்ச்சிகர பேச்சுக்களைக் கேட்டபிறகு நூல் வாசிப்பின் வேகம் கூடியது. கணையாழி உள்ளிட்டுச் சில இதழ்களின் தொடர் வாசகன் ஆனேன். பெரிய அளவில் நூல்கள் வந்தடைய எனது சொந்த நிதி நிலைமை அனுமதித்திருக்கவில்லை.

    இடமாற்றலில் எனது தந்தை தருமபுரிக்குச் சென்றுவிடவும், கோவையில் அரிசி மண்டி வைத்திருந்த நண்பர் ஒருவர் முன் என்னை நிறுத்தினார் தந்தை. அவரோ, தாம் அரிசி மூட்டைகள் வைத்திருந்த அறை ஒன்றில் எந்த வாடகையும் இல்லாமல் நான் குடியிருக்கலாம் என்று அனுமதித்தார். அந்த அறைக்குள் எனக்கு முன்பே நான்கு பெருச்சாளிகள் என்னைப் போலவே வாடகை கொடுக்காமல் குடியிருந்தது எனக்குப் பின்னர் தான் தெரியவந்தது. அவற்றிடமிருந்து என்னையும், எனது நூல்களையும் தற்காத்துக் கொள்ள இருபத்து நான்கு மணி நேரமும் டியூப் லைட் எரியவிட்டிருப்பேன் (அந்த அறைக்குள் சன்னல்கள் கிடையாது !). வங்கியில் வேலை கிடைத்து திருத்தணி அருகில் வங்கனூர் என்ற சிற்றூரில் குடியேறியபோது எப்படியோ அந்த நீலப்பெட்டி என்னோடு வந்துவிட்டிருந்தது. தரையிலேயே புத்தகங்களை அடுக்கி வைக்கத் தொடங்கினேன். தருமபுரி பேருந்து நிலையம் அருகில் முதன்முறை பார்க்க நேர்ந்த நியூ செஞ்சுரி புக் அவுஸ் கடைக்குள் வேதியல் பற்றிய 107 கதைகள் என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகம் தான் முதலில் கண்ணில் பட்டது. அதன் எழுத்து நேர்த்தியும், அசத்தல் சித்திரங்களும் சோவியத் வாசிப்புலகை நோக்கி ஈர்த்தது. முன்னதாக பதினோராம் வகுப்பு விடுமுறையின்போது வேலூரில் அண்டை வீட்டில் அஞ்சல் ஊழியர் சங்கத் தலைவர் சி எஸ் பஞ்சாபகேசன் அவர்களது குடும்பத்தோடு ஏற்பட்ட நெருக்கம், அவரது இளைய மகள் சி பி மல்லிகா பத்மினி என் வசம் வாசிக்கக் கொடுத்த மக்சீம் கார்க்கியின் தாய் நாவலின் நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டேன். வங்கனூரில் உள்ளூர் மாணவரகள் பலர் மாலை நேரங்களை என்னோடு கழிக்க அவர்களது பாடப் புத்தகங்களோடு வந்து விடுவார்கள். கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல் என பல்வேறு பாடங்களில் அவர்களது ஐயங்களைத் தீர்க்க உதவியபடி, அவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் ஊட்ட எனது நூலகம் இப்போது கொஞ்சம் விரிவடைத் தொடங்கியிருந்தது. ஆனாலும் அது தரைமீதே கொலுவிருந்தது.

    இடமாற்றல் கேட்டுச் சென்னைக்குக் குடிபெயர்ந்த போது, மீண்டும் தந்தையின் நிழலில் வந்து இளைப்பாறிய பொழுதில், வாடகை வீட்டில் எனது நூல்களை மீண்டும் நீலப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்தும் இடம் காணாது சுவர் அலமாரியில் திணித்து நிரப்பியிருந்தேன். தங்கை ஆண்டாள் (இன்றும்) வீட்டின் சிறந்த வாசகி. விரைந்து சொந்தமாக வாங்கிய எளிமையான சிறுவீட்டில் புத்தகங்கள் கம்பீரமாக வரிசையாக எனது பார்வைக்கு எப்பொழுதும் அடையாளம் காட்டியபடி அடுக்கப் பட்டிருந்தன. அந்த வரிசை, நியூ செஞ்சுரி தயவில் மிக மிக மலிவான விலையில் நீண்டு கொண்டு சென்றது. சோவியத் நூல்களோடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் போருக்கு விடை கொடுப்போம் போன்ற அழகு நூல்களும், வேறு தமிழ் பதிப்பக நூல்களும், அதிகமாகக் கவிதை நூல்களும் என்னிடம் சேரத் தொடங்கிய நேரத்தில் திருமணம் நிகழவும், அதற்கு முந்தைய சந்திப்புகளில் எனக்கும் எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி இருவருக்கும் இடையேயான உரையாடலில் பரஸ்பரம் படித்திருந்த புத்தகங்கள், வீட்டில் வைத்திருக்கும் நூல்கள் முக்கிய இடம் பெற்றிருந்தது. நீரோடு நீர் போல நாம் சேருவோம் என்று எங்கள் புத்தகங்கள் கலந்த வீட்டில் நாங்களும் அன்போடு குடியேறினோம். எங்கள் குடும்பத்தின் இன்னொரு பேசும் உறுப்பினராக நூல்கள் வளர்ந்தன.

    எனது மாமனார் குடும்பம் பம்மல் பகுதியில் வாங்கியிருந்த காலி மனையில் கட்டிய வீட்டில் மாடியில் தனியறையும், நூல்களுக்கான சிறப்பு சுவர் அலமாரியும் ஏற்பாடு ஆனது. அந்தப் பெரிய நூலகத்தில், எனது சேகரிப்போடு, மைத்துனி கங்காபாய், அவரது கணவர் தோழர் நடராஜன், மைத்துனர் கவிஞர் மா குருமூர்த்தி ஆகியோர் வாங்கியிருந்த புத்தகங்களும், (மாமனார் மாத்ருபூதம் அவர்கள் பள்ளிக் காலத்தில் பெற்றிருந்த அருமையான பரிசுப் புத்தகங்களும், அகராதிகளும்) இரண்டறக் கலந்துவிட்டிருந்தன. எல்லாம் இடதுசாரி இயக்க சிந்தனைப் பரப்பில் வளர்ந்தவர்கள். ஆதலால் சில புத்தகங்கள் இரண்டு, மூன்று கூட தட்டுப்படும். வாசிப்பு தளம் விரிவடைந்து வரும் அதே வேகத்தில், எப்போது எல்லாம் வாசிப்போம் என்ற பெருமூச்சும் எழுந்த காலங்கள் அவை. சுவர்ப் பல்லிகளின் சீழ்க்கை ஒலி கூட இது பற்றிய பழிப்பு தானோ என்று நான் எண்ணுவதுண்டு. இத்தனைக்கும், ஜோல்னாப் பை புத்தகங்களோடு தான் வீட்டை விட்டு வெளியேறும், கூடுதல் கனத்தோடுதான் இரவு மீளும் என்றானது. ஒரு கட்டத்தில், குழந்தைகளுக்காக என்று நூலகம் அடுத்த கட்டம் சென்றது. என் பி டி, சி பி டி புத்தகங்களின் வசீகர மயக்கத்தில் ஆங்கிலமும், தமிழுமாய் சொல்லச் சொல்லத் திகட்டாத கதைப் புத்தகங்கள் ஜாம் ஜாம் என்று உடன் பயணம் செய்யத் தொடங்கின.

    அதற்கு முன்னும், பின்னும் சென்னை மாநகரில் ஆறே முறை தான் வீடு மாற்றினோம். (அதில் ஒற்றை அறை மட்டுமே இருந்த ஒரு சிறு வீட்டில் பரணில் ஏற்றிவிட்ட புத்தக மூட்டையைப் பார்த்து அரற்றியே எட்டு மாதங்கள் கடந்து போனது…). வீடு மாற்றும் நேரத்தில், அடேங்கப்பா, புத்தக மூட்டைகளைத் தொடுகிற வரை எல்லாம் மங்களகரமாகப் போய்க் கொண்டிருக்கும். அந்த இடத்தில் கை வைக்கிற போது சுற்றி நின்று ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிப்பார்கள். புது இடத்தில் இத்தனை இடம் கிடையாது…எதற்கு மூட்டை மூட்டையாய்க் குப்பைகளை எடுத்துக் கொண்டு. இப்போதே உட்கார்ந்து கழித்துக் கட்டுங்கள்..என்று. அதிலும் குறும்பு நிறைந்த கண்களோடு மைத்துனர் குருமூர்த்தி சொல்லிக் கொண்டே போவதை மறக்க முடியாது. ‘ஐந்தாவது மாநாட்டு அறிக்கை, அதைத் தூக்கிப் போடுங்க, அப்புறம் ஆறாவது மாநாட்டிலும் அதே அறிக்கையைத் தான் எழுதி வைப்பீங்க, இதென்ன புத்தகம், பெரிஸ்த்ரோய்க்கா? கொர்பச்சேவே எல்லாத்தையும் வித்துட்டு அமெரிக்கா போய்ட்டாரு, கழுதையத் தூக்கி வீசுங்க, புதிய கல்விக் கொள்கையா, அது பழையதாய்ப் போய் வருஷமாச்சு, எதுக்கு இத்தனை ஃபிரண்ட்லைன் ? அவங்க ஆபீஸ்ல இருந்து வந்து கேப்பாங்கன்னா?…’ அப்படியே அள்ளி எடுத்துக் காப்பாற்றி ஒவ்வொன்றையும் அடுத்த வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது பெரும் பாடு.

    மாம்பலத்தில் இருந்து தற்போது இருக்கும் கோடம்பாக்கம் சொந்த இல்லத்திற்கு வந்த போது, வேறு எந்த அறைக்கும் கொடுத்த கவனத்தைப் போல் பல மடங்கு அக்கறையோடு எனக்காகப் புத்தக அலமாரியை வடிவமைத்திருந்தார் தோழர் ராஜி. அது நிறைந்தாலும், அட்டைப் பெட்டிகளில் வந்திறங்கிய புத்தகங்கள் குறைந்தது மாதிரி தோன்றவில்லை. பெண் விடுதலை, சிறுகதைத் தொகுதிகள், அதிகாலையின் அமைதியில், முதல் ஆசிரியர், வீரம் விளைந்தது, உண்மை மனிதனின் கதை, தாய், மாதவராஜ், தமிழ்செல்வன் கதைகள், பிரளயனின் சந்தேகி, என் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுத்தில் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, கப்பற்படை எழுச்சி, நினைவுகள் அழிவதில்லை,……….என பெருகிய நூல் நதியை அணை கட்டி யார் தடுப்பது. துணிக்காக ஒதுக்கப் பட்டிருந்த இடத்திலும் தஞ்சம் புகுந்தன நூல்கள். ஆனாலும் ஜோல்னாப் பை கனத்தே தான் வீடு மீண்டு கொண்டிருந்தது.

    திடீரென்று சுவர் அலமாரியைத் திறந்தால், நான்கு ஐந்து ஜோல்னாப்பைகள் அப்படியே இடத்தை அடைத்துக் கொண்டிருக்க, புத்தகங்களும் வகை தொகையில்லாமல் துணி வரிசையிலும் ஒண்டிக் கொண்டிருக்கும். ஏம்ப்பா, இன்னிக்கு ஒரு நாள் சீக்கிரம் வந்து இந்த அலமாரியை ஒழித்துச் சுத்தமா அடுக்கி வச்சிருங்க என்று குரல் வரும். ஒரு பத்து மணிக்கு சாவகாசமாக அந்த அறைக்குள் நுழைந்து புத்தகக் கட்டுக்களை இழுத்துக் கீழே வீழ்த்தினால், பை பையாய்ப் புத்தகங்கள், கவர் கவராய்ப் புத்தகங்கள் சரிந்து விழுந்து இடத்தை நிரப்ப, ஜவுளிக் கடையில் இறைத்துப் போட்ட துணிகளை மடிக்க உட்காருபவனாக அமர்வேன். அடுக்க வேண்டியது, ஒழிக்க வேண்டியது…எல்லாம் ஐந்து நிமிடத்தில் அகன்று விட, எடுத்த புத்தகத்தில் பிடித்த பக்கத்தை எடுத்து அந்த வரிகள் அங்கே தான் இருக்கின்றனவா, இடம் பெயர்ந்துவிட்டதா என்று படிக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவேது…தோழர் ராஜி அறைக்குள் எட்டிப் பார்த்து, என்னப்பா முடிக்கலையா மணி ரெண்டு (நள்ளிரவைக் கடந்து..) என்பார்…தோ..இன்னும் கொஞ்சம் தான் என்று அவரது தலை மறைந்ததும் வாசிப்பு தொடரும் மறுபடியும். அப்படியே நூல்களை வாரி எடுத்து நாற்காலிகள் மீதும், பெரிய ஜூட் பையிலும், துணிக்கடை பிளாஸ்டிக் உறைகளிலும் நிரப்பி சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு, அடுத்த நாள் முடித்துவிடலாம் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு அன்றாட ஓட்டம்.

    ஆனாலும், தவறாது புத்தகக் கண்காட்சியில் ஆஜர். ஒரு நண்பரிடம் கேட்டேன், நீ தான் போன ஆண்டு சந்தித்தபோது இனிமேல் நூலே வாங்க மாட்டேன், வாங்கியதையே படிக்க முடியவில்லை என்று சொன்னாயே, எங்கே இங்கே என்றேன். குடியை நிறுத்திவிட்டேன் என்று சொல்லும் ஒருவன் கடைக்கு அடுத்த நாள் போய் நின்றபோது, போதை மறந்து விடக் கூடாது என்று வந்ததாகச் சொல்வது மாதிரி தான் என்றார்.

    தேர்வு செய்யப்பட்டிருக்கும் தனது விருப்ப நூல்களை ஆர்வத்தோடு படிக்கும் மகள் இந்து (இரா.நடராசனின் ரோஸ் புத்தகத்தை எவ்வளவு விலை கொடுத்தாலும் தர மாட்டாள் ), அன்றன்று வாங்கிய புதிய புத்தகங்களை அன்றே ஒயிலாய் சாய்ந்து உட்கார்ந்து ஆசை தீர வாசிக்கும் மகன் நந்தா, இரண்டு கைகளாலும் புத்தகத்தை ஏந்திப் பிடித்துக் கொள்ள இயலாத படிக்கு இடது கை, தோள்பட்டை செயலற்ற நிலையிலும் நூல்களை வாசித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் மாமியார் கோமதி அம்மாள் (பிரசுரமாகும் எனது எழுத்து அனைத்தின் முதல் வாசகர் அவர்), படிக்க நேரமற்றுப் போக வைக்கும் அன்றாட நச்சரவை சபித்தபடி ரயில் பயணத்திற்குப் புத்தகத்தைத் தேக்கிக் கொள்ளும் மனைவி ராஜி எல்லோரும் வாசிப்புச் சூழலை வளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

    நூல்களை அடுக்கி வைக்கவோ, எதையாவது எடுக்க எண்ணி கை வேறொன்றின் மேல் படவோ நேரும்போது விரிவது புத்தகங்கள் மட்டுமா, அது எப்போது வாங்கியது என்ற நினைவின் பின்னோட்டம், அதை வாசிக்கத் தொடங்கிய அந்தப் பொழுது, அதில் இன்னும் பத்திரமாக இருக்கும் பிடித்த வரிகள் எல்லாமும் ஒரு மறு ஒளிபரப்பாக மனத்தில் ஓடுவதை யார் தான் தடுக்க முடியும்..உங்களுக்கு அறிமுகமான இலக்கிய வீதி தான் என்றாலும் சில வீடுகளில் அதிகம் உரிமையோடு அடிக்கடி நுழைவீர்கள், சிலவற்றைக் கடக்கும் போது வெளியில் இருந்தபடி குரல் கொடுத்துப் பார்த்துவிட்டு நகர்வீர்கள், வேறு சிலவற்றை அடுத்த முறை வரும்போது உள்ளே எட்டிப் பார்க்கலாம் என்று வேகமாகக் கடந்து போவீர்கள் தானே, புத்தக வீதியும் அப்படியே தான் இருக்கிறது. படித்தவை, மீண்டும் படித்தவை, தொடாது வைத்திருப்பவை, முன்னே இருந்த நிலையில் இருந்து மக்கிய பக்கங்களோடு நைந்து போயிருப்பவை…என்று!

    ஆனாலும் வாசிப்பின் மோகம் குறையாது பெருகுவதே வாழ்க்கையை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது. தீக்கதிர் இலக்கியச் சோலையில் வெளியான எனது இந்த சுய விமர்சனக் கவிதை அதைத் தான் பேசுகிறது:
    நூல்களோடு…….

    வாங்க விடுபட்ட புத்தகங்களிடம்
    இன்னும் கால அவகாசம் கேட்கிறேன்

    உறங்கவிடாது அலைக்கழித்தவற்றோடு
    தொடரும் உறவுகளையும்
    உறக்கத்தை ஊட்டியவற்றிடம்
    கருணையையும் கேட்கிறேன்

    காலத்தின் இரக்கம் மறுக்கப்பட்டு
    நைந்துபோன நூல்களிடம்
    மன்னிப்பு கோரி மன்றாடுகிறேன் –
    கவனமற்றுக் கையாளப்பட்டவற்றிடமும்!

    பல்வரிசையில் காணாமல் போன பல் போல்
    உருவப்பட்டுக்
    களவாடப்பட்ட நூல்களிடம்
    யாசிக்கிறேன் அவற்றின் மீட்சியை

    பைகளைக் கிழித்துக் கொண்டு நிறைந்தும்
    மேசை முழுக்க இறைந்தும்
    வானொலிப் பெட்டிக்கும்
    தொலைக்காட்சிப் பெட்டிக்கும்
    காதுகள் முளைத்ததாய்
    அவற்றருகே அடைந்து கொண்டும்

    இன்னும்
    தொலைபேசி உட்கார்ந்திருக்கும்
    சுவர்ப் பலகையில் குடியேறியும்

    பெரிய வாசக தோரணையைக்
    கொடுத்துக் கொண்டு
    கண்ணாடிக் கதவறைக்குள்ளிருந்தவாறு
    (தண்ணீர் குடிக்க
    எழும்
    ஒவ்வொரு நள்ளிரவிலும் )
    என்னை நியாயம் கேட்டுக் கொண்டும்

    கிடக்கும் எண்ணற்ற நூல்களிடம்
    முன்வைக்கிறேன்
    வாசிப்பிற்கான
    நிரந்தர கால நீட்டிப்புக்
    கோரிக்கை விண்ணப்பத்தை –

    வெட்கத்தோடும்
    விடமுடியாத தாகத்தோடும்………..

    ***********

    நன்றி ; புத்தகம் பேசுது இதழ்

    Share