
மீண்டும் உரலிழுத்து, மாமருதம் சாய்த்தரவத்,
தாண்டவம் ஆடி, தயிருண்டு -வேண்டிய,
ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
யாதவா வந்திங்(கு) எழுது ….கிரேசி மோகன்….
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
இன்று ஓராண்டு !
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
காலம் கரைந்து செல்கிறது.
நேற்று இருந்தவர் இன்று இல்லைவாழ்க்கை என்கின்ற நியதிக்குள் யாவரும் உட்படுகின்றனர்.
அந்த நியதியையும் வென்று
மக்கள் மனங்களில் வாழும் உறவுகள்
என்றென்றும் மதிக்கப்படுகின்றார்கள்.
நினைவுபடுத்தப்படுகின்றார்கள்அவ்வகையில் என் இதயத்தின்
அடையாளமாக இருக்கக் கூடிய உறவு
என் றாத்தா சித்தி பௌசியா(ஜெஸிமா ) ‘அவர்கள்
.அவருடைய மறைவு நிகழ்ந்து
இன்று ஓராண்டு பூர்த்தியாகின்றது.
நம்ப முடியவில்லை.
என் றாத்தா என்னுடன் இல்லை என்பதை!
அவர் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்கின்ற உணர்வையே தந்து கொண்டிருக்கிறது.
அந்த உணர்வு இன்று இக் கவியோடு நிழலாடுகின்றது!
……………………………………………………………………………………………..
நகர்ந்து விட்டது ஓர்ஆண்டு மனத்துயரம் மாறவில்லைஉடன்பிறப்பு உன்பிரிவால் மகிழ்ச்சி பறந்தது
சுமையாகிவிட்ட உலகில் சுமக்கமுடியா நிலையிலே நான்
மனநிம்மதி யில்லாமல் துடிக்கின்றேன் உன்மறைவால்
வாழுகின்ற வாழ்க்கையில் உன்னைநினைத்து எந்நாளும்
வடி(க்)கின்ற கண்ணீரை துடைத்து ஏங்குகின்றேன்
மரணத்தால் என்னை விட்டுச்சென்றீர், தொப்புள்கொடியுறவால்லல்ல
சுவர்க்கலோகம் சென்றதுபோல் நினைத்திருக்கின்றேன் மண்ணில் .!
உடன்பிறந்த தங்கையாய் தவிக்கின்றேன் றாத்தா !எழுதிடும் கவிதைகள் என்மன நிலைதனை புரிந்து
இடி விழுந்து சிதறிய மன நிலை போல
கலங்குகின்றேன் உன்மௌத்தை நினைத்து நினைத்து
குருவிக் கூட்டம்போல றாத்தா மகிழ்ந்திருந்தோம் நாம்
இன்று நிலையாகச்சென்றுவிட்டீர் மனதில் வேரூன்றிவிட்டு
கலண்டர் தாள்களை ஒன்றொன்றாய் கிழித்தாலும்
மாறாத்துயரத்தை தாங்கிட பொறுமை தா! யாஅல்லாஹ் !
அன்புத் தோழியாக பாச பிறப்பாக என்னோடு
இணைந்திருந்து வரம்பெற்ற உறவாக வாழந்துவிட்டு
இன்று என்னைவிட்டுச் சென்றாலும் உங்களன்பு
ஒருபோதும் என்னுள்ளத்தைவிட்டு நீக்கிடாது பேணுகின்றேன்
ஒற்றைத்தாயின் இரட்டைக்குழந்தையாய் வாழ்ந்தோம் பிறப்பிலே
சுனாமியடித்துச் சிதறிய கிரமாம் போலானேன்
என்றும் என்னுயிர் இவ்வுலகில் உள்ளவரை
வருடங்கள்நகர்ந்தாலும் உன் நினைவு என்னைவிட்டுநீங்காது !
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”தாயே யசோதா வாயேன் விரைவாக
தாயேன் திரளாய் தயிர்வெண்ணை, -மாயனவன்
மீராபாய் பாட்டில் முதலைக்கண் ணீர்வடிப்பு
தாராமல் போனால்BOY CHOR”….(ஆங்கில அஜீர்ணத்திற்கு)
தாராமல் போனால் திருட்டு”….கிரேசி மோகன்…. -
வாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம்
– தேவகாந்தன்
வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம்.
சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் தேசத்திலேயே அடையும் துன்பங்களும், புலம்பெயர்ந்து எதிர்கொள்ளும் மனநோக்காடுகளும் பெரும்பாலும் கவனமற்றே இருக்கின்றன. இதை மிக வன்மையாக பிரக்ஞைப் படுத்தியிருக்கிறது இப் படைப்பு.
இவ்வாண்டு(2015) கான்ஸ் சர்வதேச திரப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு விவரணப் படத்தை எழுதி இயக்கிய சர்மினி பெலி என்கிற இலங்கைப் பெண் ஏப்ரல் மாத ‘தி சிறீலங்கா றிப்போர்ட்டர்’ பத்திரிகைக்கு கொடுத்துள்ள அறிமுகப் பேட்டி, இதுபோல் அறநெறிகளின் மீதாக தம் வாழ்க்கையை நிறுத்தியுள்ள பல்வேறு படைப்பாளிகள், விமர்சகர்கள், ஊடகவியலாளர்களின் மனநிலையின் ஒட்டுமொத்தமான வெளிப்பாடாக இருப்பதை காணமுடியும். அவர், முப்பதாண்டுகளுக்கு மேலாக தான் இலங்கையில் வசித்த காலத்தில் பல கொலைகளையே கண்கூடாகக் கண்டதாகவும், இலங்கை அரசாங்கத்தின் அவ்வகையான ஒவ்வொரு கொடுமை நிகழ்த்தலுக்கும் தானும் ஒருவகையில் காரணமென்பதை தான் உணர்ந்திருப்பதாகவும் அதில் கூறுகிறார்.
‘அம்மாவின் ரகசியம்’ ஒரு பெண்ணிலை நோக்காகவே விரிகின்றது. ஆனாலும் அது மறைமுகமாய் சுட்டுகிற விஷயமும் குறுநாவலில் உண்டு. எந்த அரசும் சரி, அரசாங்கமும் சரி மக்களைப் பார்ப்பதில்லை, அவை தமக்கு முன்னாலுள்ள வர்க்க சார்பான நலனைமட்டுமே பார்த்துக்கொள்கின்றன என்ற உண்மையை பெரும்பான்மையின அனுபவங்களினூடாக வெளிப்படுத்தியுள்ள படைப்பாகவும் இது இருக்கிறது. இக் குறுநாவலின் வேறு அம்சங்களைவிட இதுவே முக்கியமானதாக என் பார்வையில் பட்டது.
முத்துலதாவுக்கு நேரும் படையினரின் கொடுமைகள் அவள் ஒரு பெண்ணாகவிருப்பதால் விளைகிறது. ஆனால் தமது வர்க்க நலனுக்கு அச்சுறுத்தலாகும் சமயத்தில் தமது சமூகத்தவளாயினும்கூட அரசு அழித்தொழிக்கத் தயங்குவதில்லையென்பதையும் அது துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.
கலாபூர்வமான அம்சங்களிலும் இக் குறுநாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளதைச் சொல்லவேண்டும். ஒரு கயிற்றில் பிணைத்து பறக்கவிடப்பட்ட பறவை தன் எல்லைவரை பறந்து கயிற்றின் நீளத்துக்கு மேலே செல்ல முடியாது ஒரு அதைப்புடன் திரும்புவதுபோலத்தான், ‘அம்மாவின் ரகசிய’மும், குறுநாவல் என்ற தன் எல்லைக்கு மேல் செல்லமுடியாது அதைப்புடன் திரும்பும் வெளிகள் இப்படைப்பில் மிகுதியாக உள்ளமையை குறிப்பாகச் சொல்லவேண்டும்.
முத்துலதாவுக்கு ஏற்பட்ட பாலியல்ரீதியிலான கொடுமை சிங்கள சமூகத்தில் அவள் ஒருத்திக்கு மட்டுமே ஏற்பட்டதாக இருக்கமுடியாத பட்சத்திலும், அவள் தன் குடும்பம் சார்ந்து அடையும் துயரங்கள் அதன் காரணமாகவே இருக்கிறபட்சத்திலும், அவளுக்கு நேர்ந்தவை பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக வரும்வரை ரகசியமாகவே இருப்பது குறுநாவலில் பலஹீனமான அம்சமாகவே தோன்றுகிறது. வளர்ந்த பெண்ணின்மீது அவ்வளவு அக்கறை காட்டும் அவளது அம்மாவுக்குமே அவளது சிதைவு தெரியாமல் போனது அதிசயம். ஆயினும் அவளது தனக்குள்ளான ஒடுங்குகையே முத்துலதாவை அவளது இரண்டு பெண்பிள்ளைகளிடமிருந்தும் அந்நியமாக்குகிறது. அதை உடைக்கிற கணத்திலேயே பிள்ளைகளும் ரகசியம் வெளித்து தாயாக முத்துலதாவைக் கண்டு அன்பு செலுத்துகிறார்கள்.
இக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே. அடங்கியிருப்பவர்கள் மக்களென்றும், தன் நலனை அச்சுறுத்துபவர்களோ, அச்சுறுத்தக்கூடியவர்களோ தன் எதிரிகளென்றும் அது திட்டமாக அபிப்பிராயம் கொண்டிருக்கிறது.
இலங்கையின் மும்மொழிகளின் இலக்கிய ஊடாட்டத்தை இதுபோன்ற மொழிபெயர்ப்பு நூல்களால் வளர்க்கமுடியுமென்பதை இங்கே ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.
– தேவகாந்தன்
-
அமெரிக்காவில் காச நோய் பற்றிய பதைப்பு
நாகேஸ்வரி அண்ணாமலை
ஏப்ரல் 4-ஆம் தேதி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகருக்கு விமானத்தில் ஒரு பெண் வந்து இறங்குகிறார். எல்லோரையும்போல் அவருக்கும் குடிபுகல் பகுதியில் வழக்கமான சோதனைகள் முடிந்து விமான நிலையத்தை விட்டுக் கிளம்புகிறார். காரில் இல்லினாய் மாநிலத்திலும் அதற்கு அருகில் இருக்கும் மாநிலங்களான டென்னஸி, மிசௌரி மாநிலங்களிலும் இருக்கும் தன் உறவினர்களின் இல்லங்களுக்குச் செல்கிறார். மே மாதம் பதினெட்டாம் தேதிவரை இம்மாதிரி இடங்களுக்குச் சென்றவருக்கு ஏதோ உபாதை ஏற்பட்டு இல்லினாய் மாநில மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அட்மிட் ஆகிறார். அப்போது அங்கு அவருக்கு நடந்த பல மருத்துவ சோதனைகளில் மருந்துகளுக்கு எளிதில் கட்டுப்படாத XDR-TB என்னும் ஒரு வகைக் காச நோய் இருப்பது தெரிய வருகிறது. காச நோய் மட்டுமல்ல, இம்மாதிரி கிருமிகளால் பரவும் எந்த நோய் என்றாலும் அமெரிக்கா பதைபதைத்துவிடும். போன வருடம் எபோலா என்ற கொடிய உயிர்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அங்கிருந்து வரும் பயணிகள் மூலம் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா வெகுபாடு பட்டது. இப்போது இந்தப் பெண் கொடிய வகை டி.பி.யைத் தனக்குள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அது அமெரிக்காவில் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பெண்ணுக்குப் பரிசோதனைகள் செய்த மருத்துவர்கள் உடனேயே அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். அந்த மருத்துவமனையிலேயே மற்ற நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தபட்ட அந்தப் பெண் ஒரு சில தினங்களிலேயே மேரிலாந்து மாநிலத்திலுள்ள தேசிய உடல்நல நிறுவனத்திற்கு (National Institute of Health) மாற்றப்பட்டு அங்கும் தனிமைப்படுத்தப்பட்டார்.
இவரை மற்ற எல்லாக் குடிமக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தி அவரிடமிருந்து வேறு யாருக்கும் வியாதி பரவுவதைத் தடுத்த பிறகு இதுவரை இவருக்கு அருகில் இருந்தவர்கள் யாருக்காவது இவரிடமிருந்து வியாதி பரவியிருக்கிறதா என்று கண்டறியப் பல முயற்சிகளைக் கையாண்டனர். முதலில் அவர் அமெரிக்காவிற்கு பயணம் செய்த விமானக் கம்பெனிக்குத் தெரிவித்து இந்தப் பெண்ணோடு பயணம் செய்த எல்லாப் பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தும்படி யோசனை கூறப்பட்டது. பின் அவர் சந்தித்த உறவினர்கள், மனிதர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுரை கூறப்பட்டது.
இந்தப் பெண்ணோடு விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு இந்த வியாதி வருவதற்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றாலும் வருவதற்குரிய வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாதாம். தொத்து வியாதியால் பீடிக்கப்பட்டவர்களோடு நீண்ட தூரம் விமானத்தில் பிரயாணம் செய்தவர்களுக்கு வியாதி பரவியிருக்கிறதாம். அதனால்தான் அத்தனை பயணிகளையும் மருத்துவ சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்களாம். இந்த வகைக் காச நோய், ஃப்ளூ, தட்டம்மை போன்ற வியாதிகளைப் போல் எளிதாக மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இல்லையென்றாலும் அவரோடு நெருங்கிப் பழகிய உறவினர் போன்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பு இருக்கிறதாம்.
பொதுவாக அமெரிக்காவிலேயே தங்கிவிடுவதற்குரிய விசா வாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன் அவர்களுக்கு இம்மாதிரிக் கொடிய நோய்கள் இருக்கின்றனவா என்று அவரவர்கள் நாட்டிலேயே பரிசோதித்த பிறகுதான் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கிறார்கள். ஆனால் தினம் தினம் அமெரிக்காவிற்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இம்மாதிரியான காச நோய் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்கு இயலாது. ஏனெனில் இந்தப் பரிசோதனை நீண்ட நேரம் எடுக்கக் கூடியது. இதை விமான நிலையத்தில் வைத்துப் பார்க்க முடியாது.
காச நோயுள்ள பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தவர்களை சில மணி நேரங்களிலேயே தொடர்பு கொண்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தினார்கள். அதில் எத்தனை பேருக்கு வியாதி பரவியிருக்கலாம் என்ற விபரத்தை வெளியிடவில்லை. இப்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களை இன்னும் பத்து வாரங்களில் மறுபடியும் சோதிப்பார்களாம். ஏனெனில் முதலில் வியாதி இருப்பதற்குரிய அறிகுறி இல்லையென்றாலும் பின்னால் வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.
கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்க தேசிய உடல்நல நிறுவனம் இம்மாதிரியான கடும் நோயாளிகள் இருபது பேரைக் குணப்படுத்தியிருக்கிறதாம். வியாதியின் அறிகுறிகள் வெளியே தெரியாமல் உள்ளேயே இருந்தாலும் அவர்களுக்கும் சிகிச்சை கொடுக்கிறார்களாம். வியாதி பலருக்குத் தொற்றுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை.
இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பெண் மருத்துவமனையில் எல்லோரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்சுகள் அனைவரும் கையுறைகள், முகமூடிகள், உடல் முழுவதையும் மூடிக்கொள்ளும் உடைகள், கண்களைப் பாதுகாக்கும் சாதனங்கள் ஆகியவற்றை அணிந்துகொள்ள வேண்டும். இத்தனை பாதுகாப்பிற்குப் பிறகும் இவர்கள் வருடத்திற்கு ஒரு முறை பரிசோதிக்கப்படுகிறார்கள்.
இந்தப் பெண்ணை அவர் முழுவதுமாகக் குணமடைந்த பிறகே மருத்துவமனையிலிருந்து அனுப்புவார்கள். டி.பி.யை குணப்படுத்த நான்கு மருந்துகள் வேண்டுமாம். இந்த வகை காச நோயைக் குணப்படுத்த இன்னும் சில மருந்துகள் வேண்டும் என்பதோடு அதிக நாட்களும் எடுக்குமாம். இந்தப் பெண் பல மாதங்கள் வரை மருத்துவமனையில் இருக்க நேரிடலாமாம். இதற்கு எக்கச்சக்க செலவு ஆகலாம் என்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்ணிடம் எதையும் வசூலிக்க மாட்டார்களாம். இம்மாதிரியான நோயாளிகள் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அந்த நாட்டின் அரசிடமிருந்தும் எந்தப் பணமும் வசூலிப்பதில்லையாம். பொதுவாக மருத்துவச் செலவுகளுக்கு நிறையச் செலவாகும் அமெரிக்காவில் இந்த தேசிய உடல்நல நிறுவனத்தில் எல்லோருக்கும் மருத்துவ வசதி இலவசம். நாட்டில் வைரசுகள் பரவுவதைத் தடுக்க அமெரிக்கா எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் இவை.
எப்போதுமே அமெரிக்கர்கள் வைரசுகள், பாக்டீரியாக்கள் தங்களிடம் வந்து சேர்ந்துவிடக் கூடாதென்று மிகவும் ஜாகிரதையாக இருப்பார்கள். சூப்பர்மார்க்கெட்டுகளில் கிருமி கொல்லி மருந்து தெளித்த காகித டவல்களை எல்லா இடங்களிலும் வைத்திருப்பார்கள். அங்கு வாங்கும் சாமான்களை ஒரு சிறிய வண்டியில் வைத்து எடுத்துச் சென்று கடைசியில் பணம் கட்டி எடுத்து வரலாம். அந்த வண்டிகளைத் தொடுவதற்கு முன் மேலே கூறிய டவல்களைக் கொண்டு அவற்றைச் சுத்தப்படுத்திவிட்டுத்தான் அந்த வண்டிகளைத் தொடுவார்கள். ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் ‘இந்தியாவில் நாங்கள் கையால் சாப்பிடுவோம்’ என்றபோது அந்தப் பெண்ணுக்கு அப்படியொரு ஆச்சரியம். ‘எதை எதையெல்லாமோ தொட்ட கையால் எப்படி உணவைத் தொட்டுச் சாப்பிடுவது?’ என்று அந்தப் பெண் கேட்டாள். ‘சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவிவிட்டால் போயிற்று’ என்று நான் சொன்னதை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. அலுவலகத்தில் யாருக்காவது தடுமன் பிடித்தால் ‘அது போகும்வரை தயவுசெய்து வேலைக்கு வராதீர்கள்’ என்பார்கள். தடுமன் பிடித்தவர்கள் மற்றவர்களுக்கு எளிதாக அதைக் கொடுத்துவிடுவார்கள் என்பதால் இப்படிக் கேட்டுக்கொள்வார்கள். அதிலும் கணினியில் வேலைபார்ப்பவர்கள் வீட்டிலிருந்துகொண்டும் வேலைபார்க்கலாம் என்பதால் இப்படி கேட்டுக்கொள்ள வசதியாக இருக்கிறது.
அமெரிக்கர்கள் பிறந்ததிலிருந்தே இப்படி எல்லா விஷயத்திலும் கிருமிகள் பற்றி ஜாக்கிரதையாக இருப்பதால் அவர்களுக்கு நோய் தடுப்புச் சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது. அதனால் இன்னும் ஜாக்கிரதை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பிறகு தடுப்புச் சக்தி மேலும் குறைகிறது. சிறு வயதில் குளத்துத் தண்ணீரைக் குடித்து வளர்ந்த எனக்கு நல்ல எதிர்ப்புச் சக்தி இருந்தது. அமெரிக்கா வந்த பிறகு அது எவ்வளவோ குறைந்துவிட்டது. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக இயற்கையாகவே தங்களுக்கிருந்த எதிர்ப்புச் சக்தியை இழந்துவிட்டு இப்போது தங்களைக் கிருமிகளிடமிருந்து காத்துக்கொள்ள என்னென்னவோ செய்கிறார்கள். முதலிலேயே குழந்தைகளிடம் கொஞ்சம் வளர்ப்புச் சக்தியை வளர்த்திருக்கலாம்.
-
தாகூரின் கீதங்கள் – 8 ஆத்மாவைத் தேடி
தாகூரின் கீதங்கள் – 8
ஆத்மாவைத் தேடி
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
அறுவடை மாதங்களில் பரபரப்பாய்ப்
புத்தொளி வீசும் வேளைகளில்
புல்லிலைகள் போர்த்திய
புவித் தளமும் நடுங்குகிறது !
அப்போது தேடுகிறேன்
என் ஆத்மாவை !
பூரிப்பில் மூழ்கும் என் இதயம் !
தெரியும் எனக்கு
வாய் மொழியாக அந்த
வரிகளை !
மௌன பூமியின் மனத்திலே
எப்போதும்
உயிருடன் உலவி வருவது
ஓருணர்ச்சி !
ஈருடல் இணைந்த
நம் ஆத்மக் கூட்டுறவிலே
நீயும் நானும்
முடிவில்லா யுகங்களில்
நீடித்திருக்க வேண்டும் !
இலையுதிர் காலத்துப் பொன்னொளியில்
நிலை தடுமாறினோம்
பல்லினத்துப்
புல்லிலைகள் மீதிலே !
*********************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mumbai : 400023
********************** -
ஐந்து கை ராந்தல் (18)
வையவன்
“என் குடும்ப விஷயத்திலே தலையிடறதுக்கு நீங்க யாரு?”
பிரீதாவையும் சிவாவையும் பார்த்து சீறி வெடித்தார். புண்ணியகோடி.பனிரெண்டு மணிக்கு ஒரு காரில் வந்திருந்தார். வீடு பூட்டியிருப்பதைப் பார்த்த கொதிப்பும், வந்தவர்களிடம் பட்ட அவமானமும் அவரைக் கொதிப்பூட்டின.
“எம் பொண்ணை நான் சினிமாவுக்கு அனுப்புவேனோ. டிராமாவுக்கு அனுப்புவேனோ… அது என் இஷ்டம். அவ எம் பொண்ணு. அவ கேக்கறாளோ இல்லையோ… நான் அவளை வற்புறுத்துவேன்… அடிக்கக்கூட அடிப்பேன்… என் இஷ்டம்.”
அவர் பார்வை பிரீதா மீது பாய்ந்தது.“நீ யாரு… ஏம்மா நர்ஸம்மா, நீ இதைக் கேள். ஒங்க வழியிலே நான் குறுக்கே வந்தனா… நீங்க இன்னா எனக்கு ஜாதியா ஜனமா… சொந்த மனுஷாளா… எந்த தைரியத்திலே நீங்க என் வூடு ஏறி வந்தீங்க… ஏதோ பக்கத்திலே கொடக் கூலிக்கு இருக்கீங்கண்ணு மரியாதைக்கு நாலு வார்த்தை நல்லதனமா பேசியிருப்பேன்… அதுக்காக… என் வூட்டு விஷயத்திலே தலையிட ஒங்களுக்கு என்ன உரிமை?”
எல்லாவற்றையும் அவர்கள் எதிர்பார்த்தே வந்திருந்தனர். அதனால் வெறி தணியட்டும் என்று காத்திருந்தனர்.திஷ்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு உள்ளே ரூமிற்குப் போய்விட்டாள்.
புண்ணியகோடிக்கு மேல் மூச்சு வாங்கிற்று. இரைக்க இரைக்க நின்றார். இந்த வயசான தோற்றத்தில் இப்படிக் கத்துகிற அவரைப் பார்த்து சிவாவுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.வாழ்வில் கானலை விரட்டுவதையே ஒரு தொழிலாகக் கொண்டு வருந்தி அடிவாங்கியவர். சமுதாய நோய்களுக்கு பலியானவர்.
“சார்.”
“நான் எதையும் கேக்கத் தயாரா இல்லே”
“நீங்க கேக்கலேண்ணாலும் நாங்க சொல்ல வந்திருக்கோம். ஒங்க பொண்ணுக்கு இதிலே இஷ்டமில்லே” என்று உறுதியோடு சொன்னான் சிவா.“அதைச் சொல்ல நீ யாரு?”
“ஒங்க பொண்ணைக் கூப்பிட்டு நான் யாருன்னு கேளுங்க.”
“ராஸ்கல்” என்று சிவாவை அடிப்பது போன்று கையை ஓங்கிக்கொண்டு ஓடிவந்தார் புண்ணியகோடி. அவர் நெருங்கியபோது அவன் எழுந்து நின்றான்.அவர் முகம் திடீரென்று மாறிற்று.
எல்லாவற்றுக்கும் இவன்தான் காரணம் என்பது போல் ஒரு வெறுப்பு அவர் முகத்தில் திரண்டது. அந்த வெறுப்பில் ஒரு பயம்..திஷ்யா கைவிட்டுப் போய்விடுவாளோ என்ற பயம் அவர் உயர்த்திய கையைக் கீழே விட்டார்.
“நீ மிரட்டறியா?” என்று மூச்சு வாங்கக் கேட்டார். அவர் குரல் தாழ்ந்து விட்டது.“இல்லே, ஒங்க பெண்ணைக் கூப்பிட்டுக் கேளுங்க.”
“நான் கேக்க மாட்டேன்! நீ வந்திருக்கறதிலே இருந்தே தெரியுது ஒன் துணிச்சலுக்கு என்ன காரணம்னு சிவா… சிவா… நான் ஒனக்கு என்ன தீமை செஞ்சிருக்கேன்.”அவர் குரல் தாழ்ந்தது. பிச்சை கேட்பது போல் கெஞ்சத் தொடங்கியது. “வாண்டாய்யா… விட்டுடு… இது ரொம்ப நொடிஞ்ச குடும்பம். நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஒனக்கு என்ன… ஆயிரம் எடத்திலே பொண்ணு கெடைக்கும். நான் ஏழை. நீ பெரிய பொஸிஷனுக்கு வருவே… ஒனக்கு அருமையான பொண்ணு கெடைக்கும். வாண்டாய்யா… வாண்டாம். ஒன்னைக் கையெடுத்து கும்புடறேன். எம் பொண்ணை விட்டுடு ஐயா! அது லைஃபை கெடுத்துடாதய்யா”
“மிஸ்டர் புண்ணியகோடி” அவர் தேம்பி அழுவதைக் கேட்கச் சகிக்காமல் பிரீதா குறுக்கிட்டாள்.“எம்மா… நர்ஸம்மா.. ஒனக்குக் கோடிப் புண்ணியமுண்டு. இவனுக்கு புத்தி சொல்லு. எனக்கு இன்னும் மூணு பசங்க இருக்கு. இன்னும் எட்டு வருஷத்திலே நான் ரிட்டயராயிடுவேன். இதுங்களுக்கு இதுவரிக்கும் நான் ஒரு வழியும் பண்ணலே. எம் பொண்டாட்டி.. எம் பொண்டாட்டி…” என்று அவர் மேலும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டார்.
“அப்பா” என்று கத்திக் கொண்டே வெளியே வந்தாள் திஷ்யா.புண்ணியகோடி திரும்பிப் பார்த்தார்.
“இப்ப என்ன நடந்து போச்சுண்ணு இப்படி பொலம்பறீங்க”
“நீ உள்ளே போடி. உள்ளே போ” என்று திடீரென்று வெறிபிடித்துக் கத்தினார்.
திஷ்யா உள்ளே போகவில்லை.“போக மாட்டே, போக மாட்டே” என்று கத்திவிட்டு அவர் படார் படாரென்று தன் தலையில் அறைந்து கொண்டார்.
திஷ்யா அமைதியாக நின்றாள்.“எல்லாம் ஒன்னாலதாண்டி குடி கேடி! இப்படி நாலு பேர்கிட்டே நான் பொலம்பற நிலைக்கு ஆளாக்கிட்டியே. எல்லாம் ஒன்னால தான்”
“இல்லே, நான் என்ன பண்ணணும்?”
“உள்ளே போ”
“இல்லே, நான் வெளியே போகப் போறேன்!”“நீ போயிடுவியா? ஒனக்கு அவ்வளவு தைரியம் உண்டா?”
“நிச்சயமா. என்னை அழைச்சுட்டுப் போகத்தான் இவங்க வந்திருக்காங்க. நான் தன் தம்பி தங்கைகளை அழைச்சிகிட்டு வெளியே போகப் போறேன்.”“நீ எங்கே போவே?”
“இவங்களோடே”
“நான் போலீஸ்லே கம்ப்ளெயிண்ட் கொடுப்பேன்”
“நான் எதிர்பார்த்தேன். நான் மேஜராய்ட்டேன். எனக்கு என் பாதையை தீர்மானிக்கிற சுதந்திரம் உண்டு.”
“இதுக்காடி நான் ஒன்னைப் பெத்தேன்”
திஷ்யா உறுதியோடு பேசினாள்.“இது கௌரவமானதுப்பா. சினிமா சினிமான்னு நீங்க அலையறீங்களே அதைவிட அது உத்தமமானது. ஒண்ணு இவருக்கும் எனக்கும் நீங்க கல்யாணம் நடத்திவச்சு நீங்களே கௌரவமா அனுப்புங்க. இல்லே இப்ப ஒங்க கண்ணெதிரே திருட்டுத்தனமா இல்லே பகிரங்கமா நான் போறேன். தனியா இல்லே, கொழந்தைகளோடே”
சிவா அந்த நிமிஷம் வரை அவள் சொன்ன திருமணம் என்ற வார்த்தைக்கு தயாராயில்லாமல் இருந்து அவள் வாயில் அது வந்ததும் அதை ஏற்கச் சித்தமானான்.ஒரு தீர்மானத்துக்கு வருகிற வரை இருந்த மயக்கம் அப்படி வந்ததுமே பொழுது விடிந்த மாதிரி ஒரு தெளிவை அவனுக்கு வழங்கிற்று.
“ஆமா சார், இப்ப நாங்க பொண்ணு கேட்க வந்திருக்கோம்னு வச்சுக்கங்க. ஒங்களை மிரட்ட வரலே.”
புண்ணியகோடி எல்லா அம்புகளும் பயனற்று விட்டது போல் குறுகிப் போய் நாற்காலியில் உட்கார்ந்தார். தலை மீது கை வைத்துக் கொண்டார்.ஒரு நிமிஷம் அங்கே யாரும் பேசவில்லை.
எல்லா விதத்திலும் போராடித் தோற்று விழுந்தவனைச் சுற்றி நிலவும் ஒரு மௌனம் அங்கே சூழ்ந்தது.
சிவா பிரீதாவைப் பார்த்தான்.புண்ணியகோடியின் தோல்விக்கு தாங்கள் ஒரு காரணமான பச்சாதாபம் இருவர் பார்வையிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
“எம் பென்சிலை ஏந்தி எதுக்குதே… குது… குதுதீ” என்று குழந்தை ஆனந்து ஓ வென்று கூப்பாடு போடுவது கேட்டது.“ஏய் சீதா! பென்சிலைக் குடுத்துடு. அழவைக்காதே அவனை” என்று பிரேம் அதட்டினான்.
எதையோ படாரென்று வீசியெறியும் ஓசையும் கலகலவென்று பென்சில்கள் உருண்டோடும் ஒலியும் ஒன்றையொன்று தொடர்ந்தன.
பளாரென்று ஓர் அறை வைக்கும் சப்தம்.
ஏக காலத்தில் இரண்டு அழுகுரல்கள். தனது நிலை என்னவென்று உணர்ந்தது போல அந்தச் சிறு சச்சரவை ஏதும் செய்ய மாட்டாமல் வெறித்துப் பார்த்தார் புண்ணியகோடி.
“ஏய் சீதா, ஆனந்து, அழறதை நிறுத்துங்க” என்று அறைப் பக்கம் திரும்பி ஓர் உத்தரவு போட்டாள் திஷ்யா.
ஸ்விட்சை அணைத்த மாதிரி இரண்டு குரல்களும் அடங்கின.பிரீதாவுக்கு ஒரு புன்னகை வந்தது.
“ஆல்ரைட் சிவா, எம் பொண்ணை ஒனக்குக் கொடுக்கறேன். கல்யாணத்தை எதாவது கோயில்லே தான் நடத்த எனக்கு சௌகரியப்படும். முகூர்த்தத் தேதியை பார்த்து வந்து நாளைக்கு சொல்றேன்” புண்ணியகோடி ஈனசுரத்தில் பேசினார்.
பிரீதாவின் முகத்தில் வீசிய ஒளி திஷ்யாவை விட அதிகமாய் இருந்தது.“சீக்கிரமா நடக்கணும்” என்றான் சிவா.
“ரெண்டு மூணு நாள்ளே” – என்று ஈனசுரத்தில் பதிலளித்தார் புண்ணியகோடி.
பிரீதாவின் குவார்ட்டர்ஸ் வரை உடன் சென்றான் சிவா. ஒன்றும் பேசாமல் வழியெல்லாம் யோசனையில் சென்றான்.
“என்ன சிவா. ‘க்ளூமி’ ஆய்ட்டே?”
“நான் மதனபள்ளி போகணும்.”“எதுக்கு, தாமுவோட பர்மிஷன் வாங்கவா?”
“இதுக்கு பேர் பர்மிஷனா?”
“வாட் எல்ஸ்?”“அவர் என்னை மனுஷனாக்கினார், அவருக்கு இது தெரியணும். த ஹோல் ஸிச்சுவேஷன்.”
“அப்போ நானும் ஒன் கூட வர்றேன். நான்தான் அதை அவருக்குப் புரியறா மாதிரி விளக்க முடியும்.”“தாங்யூ. ஆனா அவர் கிட்டே ஒரு ரெகமெண்டேஷனோட நான் போற மாதிரி எனக்கே தோணிடும். இட்ஸ் குட் ஆர் பேட். நானே அதைத் தனியா சந்திக்கப் பிரியப்படறேன்.”
பிரீதாவுக்கு அவன் மீதிருந்த மதிப்பு உயர்ந்தது.“போய் வா! ஆனா அதுக்கு முன்னாடி புண்ணிய கோடிகிட்டே முகூர்த்த தேதியைக் கன்பார்ம் பண்ணிக்க.”
“எஸ், யூ ஆர் கரெக்ட்” என்றான் சிவா.இரவு ஒன்பது மணிவரை பிரீதாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு ராயப்பேட்டைக்கு பஸ் ஏறினான் சிவா.
வீட்டு வாசலில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. கும்பலாக பெண்கள் உட்கார்ந்திருந்தனர். ஏதோ துர்ச்சம்பவம்.
கீழ்ப் போஷன்காரர் வாசலில் மார்புத் துண்டோடு நின்றார்.“என்ன சார்” என்றான்.
“நீ எல்லாம் மனுஷனாய்யா? ஒன்னாலே அந்த கம்பவுண்டர் வெசம் குடிச்சு டேஞ்சரா ராயப்பேட்டை ஹாஸ்பிடல்லே அட்மிட் ஆயிட்டான்” என்று அவர் வெடித்தார்.
தொடரும்
-
பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: சேணோக்கி நந்துநீர் கொண்டதேபோன்று
தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்
முந்துற நாடிப் புறந்தர லோம்புக
அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி
நந்துநீர் கொண்டதே போன்று.(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
தம் தம் பொருளும், தமர்கண் வளமையும்,
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக
அம் தண் அருவி மலை நாட! சேண் நோக்கி,
நந்து, நீர் கொண்டதே போன்று!பொருள் விளக்கம்:
தத்தமது பொருளின் அளவினையும், தன்னைச் சார்ந்திருப்போரது செல்வத்தின் நிலையையும் முற்றிலும் நன்கு ஆராய்ந்து, பின்னாளில் உதவும் பொருட்டு தகுந்த அளவு பொருளைச் சேமித்து வாழ வேண்டும். அழகிய குளிர்நீர் அருவிகள் பாயும் மலைநாட்டில் வாழ்பவரே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நத்தை நீரைச் சேமித்துக் கொள்வது போல வாழ வேண்டும்.பழமொழி சொல்லும் பாடம்: நத்தை நீரை சேமித்துக் கொண்டுவாழ்வதுபோல, எதிர்காலத்தில் துன்பமின்றி வாழ்வதற்காகத் திட்டமிட்டுப் பொருள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, எதிர்காலத்திற்காகத் திட்டமிடலை வலியுறுத்த வள்ளுவரும்,
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். (குறள்: 429)வரப்போவதை முன்னே அறிந்து தன்னைக் காத்துக் கொள்ளும் திறன் கொண்ட அறிவுடையவர்க்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது, என்றும் அவ்வாறு திட்டமிடுதலை அறிவுடைமை என்பதனைக் குறிக்க,
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (குறள்: 662)இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம், என்றும் குறிப்பிடுகிறார்.
-
காதல் நாற்பது – 41 நன்றி கூறுவேன் நேசித்ததற்கு
நன்றி கூறுவேன் நேசித்ததற்கு
மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
எனை இதயத்திலே நேசித்த
அனைவருக்கும்
நன்றி நவில்கிறேன் !
பதிலுக்கு அவரை நேசிப்பேன்
நன்றியுடன்.
அங்காடி வீதிகளுக்கோ
அல்லது
ஆலயத்துக்கோ செல்லும் முன்பு,
சிறைச் சுவர்க்கருகில்
சிறிது நேரம் நின்று,
உரத்த குரலில் நான் பாடும்
இன்னிசைக் கேட்கத்
தமது கடமைகளை மறந்து
தங்கி நிற்போருக்கு
ஆழ்ந்த நன்றி !
பெருமூச்சு விடும் போது
என் குரல்
ஏற்ற இறக்கத்தில்
தெய்வீகக் கலை எழுப்பும் உன்
சொந்தக் கருவி
கைத்தவறி வீழுமுன் காலடியில்,
கண்ணீருடன் நான்
சொன்னதைக் கேட்கும் !
அதற்கு நன்றி கூற
எனக்குச் சொல்லிக் கொடு
எப்படி உரைப்பதென !
எதிர்கால நீண்ட இல்வாழ்வுக்கு
என் ஆத்மா உணர்த்தும்
முழுப் பொருள் மீது குறிவைத்தடி !
நழுவிப் போகும்
இந்த வாழ்க்கையில்
பொறுத்தி ருக்கும் காதலரைப்
பாராட்ட வேண்டும்
வரவேற்புடன் !
************
Poem -41
Sonnets from the Portuguese
By: Elizabeth Browning
I thank all who have loved me in their hearts,
With thanks and love from mine. Deep thanks to all
Who paused a little near the prison-wall
To hear my music in its louder parts
Ere they went onward, each one to the mart’s
Or temple’s occupation, beyond call.
But thou, who, in my voice’s sink and fall,
When the sob took it, thy divinest Art’s
Own instrument didst drop down at thy foot
To hearken what I said between my tears,–
Instruct me how to thank thee! Oh, to shoot
My soul’s full meaning into future years,
That they should lend it utterance, and salute
Love that endures, from Life that disappears!
**********
-
இணையத் தமிழே இனி!
-துஷ்யந்தி
உலகினில் ஆயிரம் மொழிகள் – அவை
என்னுயிர்த் தமிழ்போல் இல்லை
உலகினில் இதனைச் சொல்ல – கணினி
இணையதளத்திற்கு ஈடு இல்லை!மூன்று குலத்தமிழ் மன்னர் – அன்று
ஆண்ட கதைதனைக் கேளீர்
அவர் ஆற்றிய பணிகள் எல்லாம் – இன்று
காட்டிடும் தமிழ் இணையம் பாரீர்!வள்ளுவன் கம்பன் போல – தமிழை

போற்றியவர் யாரும் உண்டோ?
இறவாத புகழுடைய நூல்கள் – இன்றும்
இணையத்தில் காணலாம் வாரீர்!ஆங்கில மோகத்தில் திளைத்து – உலகில்
அழிந்திடும் நிலை நம் மொழிக்கு
அவை யாவையும் இன்று தடுக்க – வந்த
தமிழ் இணையங்களைப் பாரீர்!மொழிதனைப் பயிலும் குழந்தை – அதை
முறையாய்த் தொடரலாம் இங்கு
இலக்கண நூல்களும் தமிழகராதியும் – அதற்கு
இணையத்தில் மென்பொருளாகக் காணீர்!பிறநாட்டு நல்லறிஞர்கூட – தமிழை
சுவைபட உணர்ந்தனர் இன்று
தேமதுரத் தமிழோசையை – உலகில்
பரப்பிய பெருமை இணையத்திற்கே!ஆய்வுகள் எத்தனை செய்தோம் – இன்று
சான்றுடன் இணையத்தில் கண்டோம்
மாறிடும் வாழ்வில் இனி என்றும் – தமிழ்
மாண்டிடாது காத்திடும் இணையம்!சமூக வலைத்தளங்கள் கண்டோம்- அதில்
அறிஞர் பலரை நட்பால் இணைத்தோம்
ஒரு தாய் வீட்டுப் பிள்ளையாய் – இன்று
கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம்!தாய்த்தமிழ் மாறுவதில்லை – இனி
தாகத்திற்கு இடமுமில்லை
மொழியின் தேவைகள் யாவையும் – இன்று
வழங்கிடும் நிலையில் இணையம்! -
புதிராட்டம்
-இரா.சந்தோஷ் குமார்
தொண்டைக் குழியில்
பசையொட்டிய ஒருவித
உணர்வுப் பிழையேந்தும்
நாக்குத் தசை,
பேசமுடியா மூச்சிரைப்பில்
இதழ் வழியே
ஒரு சொல்லை வெளியிட்டது
அது ‘தாகம்’ என்றானது!என்னிதழுக்கு
உன்னிதழால் நீ
கவ்விக் குதறி
வேதனை நீர் ஊற்றினாய்
தாகத்திற்கு
எந்நீர் என்றாலும் என்ன
எந்த ரணமானாலும் என்ன…
அந்நொடியில் தீர்வது
ஒரு தீர்வுதானே?நிழல் தேவதையே…!
உன் கரங்களினால்
தேவைப்படுகிறது
ஒரு மருந்துக் களிம்பு!
இல்லையேல்
ஒரு மரண விளிம்பு!இமை திறந்து நான்
நெஞ்சு நிமிர்த்தி
நிரந்தரமாய்
இமை மூடிவிடக்கூடாது
என்பதற்காகவே
உன்னிடம் நித்தமும்
யுத்தம் போன்ற
முத்தப் போரிட்டுதானே
இருக்கிறேன்…?
ஆனாலும்,
புரியவில்லை தோழி…!
என்னவாக என்னை
புதிராகப் புதியதாகச்
செய்து கொண்டிருக்கிறாய்…
என்
வாழ்க்கைக் கவிதையே! -
ஓலைத்துடிப்புகள் (9)
கவிஞர் ருத்ரா
====================================================
உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
=========================================================தமிழ் மொழியின் நுண்சொற்பாடு ஒரு ஒப்பற்ற மொழியியல் வெளிச்சம் காட்டும் தன்மையது ஆகும்.உடல் என்றால் உடம்பு என்று தான் நாம் அறிவோம்.அந்த சொல் ஒரு ஆழமான தத்துவம் அல்லது மெய்யுணர்வு தரும் சொல்லாக அல்லவா இருக்கிறது.உடலின் இயல்பே உள்ளே இருக்கும் உள்ளம் என்பதனோடு எப்போதும் பொருது கொண்டே இருக்கும் இயல்பினது ஆகும்.இதுவே எல்லா மனித மற்றும் சமுதாய நோய்களுக்கு காரணம்.சங்கத்தமிழ் வரலாற்றில் இப்படியொரு ஆழமான ஆராய்ச்சிக்கு வித்திடும் சொல் (“உடல்”) என்பதை நான் மேலே கண்ட (ஐங்குறு நூறு..பாடல் 66)செய்யுள் புகுந்த போது தான் திக்குமுக்காடிப்போனேன். (உள்ளே இருப்பதால் தான் அது உள்ளம் எனப்படுகிறது என்பது மற்றொரு “வியப்பு தரும் சொல்” அது) அதனால் தான் திருமூலர் போன்ற சான்றோர்கள் “உடம்பையே” கோவில் ஆக்கினார்கள் போலும்.இந்த “உடலை” வைத்து என் சங்கநடைப்பாடலை இங்கு நான் எழுதியுள்ளேன்.ஓரம்போகியார் எனும் அந்த சங்கப்புலவர் உண்மையிலேயே இலக்கியம் எனும் இமயம் ஏறி நின்று ஒளி காட்டியவர் என்றே நாம் கொள்ள வேண்டும்.கீழ்வரும் செய்யுள் ஒரு சான்று.
“உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ;
யார் அவள், மகிழ்ந!தானே…தேரொடு,நின்
தளர்நடைப்புதல்வனை யுள்ளி,நின்
வளைமனை வருதலும் வௌவி யோளே?”(ஐங்குறு நூறு பாடல் 66)
“கோபம் கொள்ள மாட்டேன்.சண்டையிடமாட்டேன்.(உடலுதல் எனும் சொல் தெறிக்கும் அந்த “முரணும் உணர்வு” தலைவியின் வாயிலிருந்து எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்) பொய்யாது உரையுங்கள்.யார் அவள்? தேரை இன்னும் அதன் உரிய இடத்தில் கூட நிறுத்தவில்லை.அதற்குள் நம் மகனை கொஞ்சுவதற்கு இறங்கி விட்டீர்கள்.அந்தப்பயலின் “குறு குறு” நடை உங்களை குழைய வைத்திருக்கிறது.அதெல்லாம் சரி.கூடவே வந்த நம் புதல்வனை அள்ளியெடுத்துச்செல்கிறாளே! யார் அவள்?” தலைவியின் நெஞ்சம் உலைக்களம் ஆகிறது.அப்படியும் அவனை”மகிழ்ந” என்று அழைப்பதில் ஒரு குத்தல் நிறைந்த உணர்வு இருப்பினும் அவனைக்கண்டதும் அவள் மகிழ்கிறாளே அந்த மின்னல் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு தானே “ஆண்” பெண் மீது இத்தகைய கொடும் ஆதிக்கத்தை செலுத்துகிறான் என்பதனையும் காட்ட மேலே வரிகளில் “சூடு” போடுகிறார் புலவர். நம் முதுகு மட்டும் புண்ணாகவில்லை.நம் உள்ளுணர்வே (ஆத்மா)அந்த சூடு தாங்காமல் பற்றி எரிகிறது. என் பாடலின் பொழிப்புரையை அடுத்த இதழில் எழுதுகிறேன்.இதை அன்புடன் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
===================================================பைஞ்சாய்ப் பாவைக்கு பொய்ப்பாலூட்ட
நீள்தல் ஆற்றா குடுமியவாய் திகழ்தரு
பைஞ்சுரைச் சிறுகாய் அன்ன முலையின்
அண்மை காட்டி அரும்பவிழ் நகையொடு
தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்
மடவள் என்னிவள் வந்திசின் ஓம்புமன்!
முடமுது நாரை இறை தேடி அலம்ப
ஞாழல் கொடுஞ்சினை காலுடன் அலம்ப
பதைப்பத்ததைந்த நெய்தல் அங்கழி
பனி இமிர் பைந்திரை படர் கரை சேர்ப்ப!
உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
உறைநோய் உற்று நின்னை நோக்கும்
நரம்பார்த்த தீங்கிளவியள் குழறல் ஒல்லுமோ.
ஒள்மணல் படுத்தன்ன கருங்கோட்டெருமை
ஒத்த திண்ணிய அம்பி ஆங்கு அடைகரை
சிறைபெய் குருகு கணங்கொள் துறைவ
மடப்பம் தீண்டிய சில்மகள்ப் பெருநோய்
துடைப்புன ஆற்றுதி விழி தூஉய் கண்டிசின்.
வெண்முளை வித்திய வினைசெறி யன்ன
கண்முளை எல்கதிர் உள்சிறை ஒடுங்க
இருள் தின்ற ஒளியாய் அளியள் ஆனாள்.
உண்துறை ஆங்கு மண்மறை முன்னே
உய்யக்கொள்வாய் பெரும்பணைத் தோளாய்!தொடரும்
-
சிகரம் நோக்கி – (9)
சுரேஜமீ
மனிதம்
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே- இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
எனும் மருதகாசியின் வரிகளோடு இன்றைய சிந்தனையைத் தொடங்க நினைக்கிறேன். இரண்டு வரிகளில் எதிர்கால வாழ்க்கையை கண்ணாடியாகக் காட்டிய கவிஞர்களும், மனிதம் மலரவேண்டும் என்ற துடிப்புடைய தேசியவாதிகளும் வாழ்ந்த மரபு நம்முடையது!ஏனோ, தன் முனைப்பு, தவறான எண்ண ஓட்டங்கள், சமுதாயப் பொறுப்பற்ற செயல்கள் என கற்றவர்களாலும், கயவர்களாலும், இந்த சமூகம் மனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது என்பது கண்கூடு!
இந்த உலகில், இப்படியும் ஒரு மனிதரா எனப் போற்றப்பட வேண்டிய பண்பாளர், தமிழனின் தயாள குணத்திற்கு ஒரு சான்று, இந்த வாழ்வின் சுவையே, சக மனிதனின் கண்ணீர் மொழியை அறிவதில்தான் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அதைத் தன் வாழ்நாளில் செய்தும் காட்டிய வள்ளல் கலைவாணர் என்பதை கலைஉலகம் தாண்டி அவரோடு பழகியவர்கள் அறிந்திருந்தாலும் அவர் பற்றிய சில செய்திகளை, இன்று உங்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம், நாம் நம் மண்ணின் குணத்தை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!
பொன்னுச்சாமி நாடகக் குழு என்ற புகழ்பெற்ற நாடகக் கம்பெனி இருந்தது. அதிலிருந்த்துதான், நடிகர் திலகம், லட்சிய நடிகர், வி.கே.ஆர் போன்றோரெல்லாம் சினிமாவுக்கு வந்தனர் என்பது வரலாறு.
அந்த நாடகக் கம்பனி நலிந்த நிலையில் அதைக் காப்பாற்றும் நோக்குடன், கலைவாணர் அவர்கள் உரிமையேற்று எடுத்து நடத்த முனைப்பட்ட நேரம்,
ஒரு நபர் கலைவாணரிடம், அய்யா எனக்கு நன்றாக நடிக்கத் தெரியும். எனக்கு வாய்ப்புக் கொடுத்தால், நான் (சிவாஜி ) கணேசனை விட நன்றாக நடிப்பேன் என்று சொல்கிறார். இதைக் கேட்ட கலைவாணர் அருகில் இருந்த நண்பருக்கு கோபம் வந்துவிட்டதாம்.
என்ன சொன்னாய்? கணேசனை விட நன்றாக நடிப்பியா? எனக் கடிந்து கொள்ள,
கலைவாணர் நண்பரைத் தடுத்து, என்ன தப்பிருக்கிறது அவன் சொன்னதில் என்று கேட்டு,
உனக்குத் தெரியுமா? கணேசனை விட அவனுக்கு நடிக்கத் தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம்!
ஆனால், கணேசனை விட அவனுக்குப் பசி இருக்கிறது என்று சொன்னாராம்!
இது தான் தமிழர் பண்பாடு!
ஒருவன் பசியைப் புரிந்து கொள்ளும் மனநிலை என்பது தெய்வத்திற்குச் சமமானது!
கலைவாணர் அவர்கள் நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரனுக்கு மனைவி பிச்சையிட வரும்போது ஒருமையில் அழைப்பார். அதைப் பார்த்த கலைவாணர், தன் மனைவியைக் கடிந்து, மரியாதையாகப் பேசச்சொல்லுவார்! இப்படி தான் நடித்த காட்சிகளில் கூட, மற்றவர் மனம் புண்படக்கூடாது என்பதும், தானம் செய்வதன் நோக்கம் ஒரு இருமாப்பைத் தரக் கூடாது எனவும் அறிவுறுத்துகிறாரென்றால்,அந்தப் பண்பாடல்லவா நாம் கற்க வேண்டிய பால பாடம்!
இப்படித்தான், இன்னொரு முறை கலைவாணர் அவர்கள் சென்னையில் இருந்தபோது, ஒரு நாயனக் குழுவினர், கலைவாணரை அணுகி, நாயனம் நன்கு வாசிக்கும் திறமை பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை ஏற்று, தன் வீட்டிற்கு மாலை வருமாறு கலைவாணர் அந்தக் குழுவிடம் கூற, அவர்கள் அன்று மாலை கலைவாணர் இல்லம் வருகின்றனர். கலைவாணரும் தன் நண்பர்களை கச்சேரி கேட்கலாம் வாருங்கள் என்று அழைத்ததை ஏற்று நண்பர்கள் கூட, கச்சேரி ஆரம்பமாயிற்று!
வாசிக்க ஆரம்பித்தால் ஒரே அபஸ்வரமாகவே இருக்க, வந்தவர்கள் நெளிகிறார்கள். கலைவாணரோ, நல்லா வாசிக்கிறீர்களே….இன்னும் வாசிங்க….இன்னும் வாசிங்க என்று உற்சாகப் படுத்த,
நண்பர் ஒருவர் கலைவாணரைப் பார்த்து….என்ன வாசிக்கிறான்? இன்னும் வாசி…வாசி என்று உற்சாகமூட்டுகிறீர் என்று கேள்வி கேட்க, கலைவாணர் சொன்னாராம்…..அட பைத்தியக்காரர்களே அவன் பசி…பசின்னு கத்துறான்…..உங்களுக்கு அவன் மொழி புரியவில்லை! ஆனால், எனக்குப் புரிகிறது! உடனே பணம் கொடுத்து அனுப்பிவிட்டால், அவன் திறமை மீது அவனுக்கு நம்பிக்கை குன்றிவிடும். ஆதலால், அவனைப் பெருமைப்படுத்தி, அவன் பசியைப் போக்க நினைத்தேன் என்றார்!
என்ன நண்பர்களே….உங்கள் இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்!
இந்த ஈர நெஞ்சம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று?
ஆகத் தொடங்கிய பாடல் வரிகளாக இன்றைய வாழ்க்கை இருக்க,அதற்கு மாறாக நம் பண்பாடு இருக்க வேண்டுமென்று வாழ்ந்து காட்டிய அய்யா என்.எஸ்.கே அவர்கள் வாழ்க்கை இருக்க, மாறுவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியுடன்
சிகரத்தை நோக்கி பயணிப்போம்…….
அன்புடன்
சுரேஜமீ -
பால்மனம் பூமனம் பாவை மனம் …
— கவிஞர் காவிரிமைந்தன்.
திரைப்பாடல் ஒன்றில்கூட மனம் லயித்துவிடுகிறதே, ஏன்… சொல்லுங்கள். அதுவும் பல்லவியிலேயே நம்மைக் கட்டியிழுக்கும் கவிஞர்களின் சாமார்த்தியம். இசையிலே சுண்டியிழுக்கும் இசையமைப்பாளர்களின் கற்பனா சக்தி. பாடக பாடகியரின் இனிமைதவழும் குரல்களில் அந்தக் கவிதை நதி இசையோடு பயணித்து வருகின்ற அழகில் நாம் சொக்கித்தான் போகிறோம்!
இதோ இந்தப் பாடல்…
கதை என்ன என்பது முக்கியமல்லாமல், யார் நடித்தார் என்கிற கேள்வி எழாமல், கேட்க வைக்கிற ரகம்! ஆம், பல்லவியில் உள்ள சுகம் ஏதோ ஒரு பல்லக்கில் நம்மை அமர வைக்கிறது! அந்தப் பல்லக்கின் ஆடல்போல் இசையும் அமைந்துவிட, பூங்காற்று இதமாக வருடிக்கொடுக்கிற பல்லவிகள்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா இணைந்தளித்துள்ள தேவகானமா இது! தேன்மழை பொழிகிறமாதிரி, கண்ணன் ராதை காதல் லீலைகளின் அழைப்பிதழ் அச்சிடப்பட்டதுபோல் வாசகங்கள் வரிகளாய் அமைய வழிகிறது இனியதொரு கானம்!
பிருந்தாவனத்தில் தொடங்கி, பள்ளியறை தொடர்ந்து, சரசக்கலையை உரசிக்காட்டும் உன்னத வரிகள்! விரசமின்றி பொங்கிவழியும் காதல் அமுதம்!! நல்லிசையால் நம் இதயங்களை மீட்டியெடுக்கிறார் இசையமைப்பாளர் வி.குமார்!
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
பாடல்: பால் மனம் பூ மனம் பாவை மனம்
திரைப் படம்:ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
பாடல்: கவியரசு கண்ணதாசன்
இசை: வி.குமார்
பாடியவர்கள்: பீ.சுசீலா – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
காணொளி: https://www.youtube.com/watch?v=mcEr9r7qzF4“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
பெண்:
பால் மனம் பூ மனம் பாவை மனம்
பால் மனம் பூ மனம் பாவை மனம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்ஆண்:
கோதையின் பூவுடல் கோகுலம் என்றே
கண்ணன் விளையாட
கோதையின் பூவுடல் கோகுலம் என்றே
கண்ணன் விளையாட
காலம் என்ன நேரம் என்ன கண்ணே கொஞ்சவாஆண்:
பால் மனம் பூ மனம் பாவை மனம்
கண்ணே எனக்கது பிருந்தாவனம்ஆண்:
வாடை தான் பட்டாடை இழுக்கும்
செவ்வாழைப் பூ என் கண்ணைப் பறிக்கும்பெண்:
கிள்ளித் கிள்ளிப் பறிக்கின்ற கைகள் என்னவோ
கண் பட்டு கை தொட்டு கன்னிப் போகாதோஆண்:
பூ முத்தம் வேண்டும் கன்னம்
புண் படும் என்றா எண்ணும்பெண்:
எல்லாம் இன்று தந்தால்
நாளை மிச்சம் வேண்டுமேஆண்:
பால் மனம் பூ மனம் பாவை மனம்
கண்ணே எனக்கது பிருந்தாவனம்பெண்:
கால் முதல் என் கூந்தல் வரையில்
உன் காவியம் சொல் பள்ளியறையில்ஆண்:
சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
அம்மமா கேட்டுப்பார் அந்திப் பொழுதைபெண்:
ஆனந்த ராகம் ஒன்று ஆரம்பமாகும் அன்று
ஆனந்த ராகம் ஒன்று ஆரம்பமாகும் அன்றுஆண்:
ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமேபெண்:
பால் மனம் பூ மனம் பாவை மனம்ஆண்:
கண்ணே எனக்கது பிருந்தாவனம்














