Blog

  • மீனாட்சி திருக்கல்யாணம்

    கிரேசி மோகன்

     

    3027
    ———————————–

    ஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை
    பூசலா நாயனார் போலவே -யோசனையில்
    கண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்
    குண்டு குமாரனே காப்பு….(1)

    ———————————————————-
    கல்யாணக் கதை கதையாம் காரணமாம்
    —————————————————-

    images (3)

    சென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)
    அன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென
    மீண்டுமவன் காண மதுரையில் மீனாட்சி
    ஆண்டவன் கல்யாணம் ஆம்….(2)

    பெண்வீட்டார் – பிள்ளை வீட்டார் அறிமுகம்
    ———————————————————–

    images (4)

    மண்சுமந்தோன் பிட்டுக்கு மாப்பிள்ளை, மைத்துனனோ
    மண்சுமந்த வாயன், மணமகளோ -மண்புகுந்த
    மேனாள் இமவான் மகளான மாதங்கி
    மீனாளாய் வந்த மலைப்பூ….(3)

    நிச்சயதார்த்தம்
    ———————

    images (5)

    சித்திரைத் திங்களில் சித்திறை சொக்கனுக்கு
    இத்தரை வந்த, இமவானின் -புத்திரியை,
    தத்தாய் மலயத் துவசன் வளர்த்தவளை,
    முத்தண்ணா செய்தார் மணம்….(4)

    கல்யாணப் பத்திரிகை
    ——————————–

    சித்திரைத் திங்கள் சனிக்கிழமை அன்றுபகல்
    இத்தரையில் மீன இலக்கினத்தில் -பத்தரைக்கு
    பின்னாலே மீனாளை அண்ணா மஹாவிஷ்ணு
    கன்னிகா தானம்சொக் கர்க்கு….(5)

    கல்யாணச் சத்திரம்
    ————————-

    அத்தனைபேர் வந்ததால், ஆலவாயில் தங்கிட
    சத்திரம் இல்லாமல் சம்புமையாள் -கைத்தலம்
    பற்றுவதை மச்சான் பெருமாள் தமுக்கத்தின்
    வெற்றிடத்தில் வைத்தான்பார் விஷ்ணு….(6)

    சீர் வரிசை
    ————–

    பிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்
    வெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்
    குச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்
    மச்சினர் மல்லாந்த மால்….(7)

    வரதட்சிணை
    —————

    குவளைக்குள் பிச்சைக்கூழ் கொள்வோன் கறாராய்
    அவலுக்(கு) அளித்தேழை ஆன -குவளைக்கண்
    மாலோனை முன்ஜாமீன் மன்றாடி கேட்பதற்குள்
    பாலாழிக் கண்ணஅம் பேல்….(8)

    ஜான்வாசம்
    ————–

    சித்திரை வீதியில் ஜான்வாசம், கொட்டாவி
    நித்திரை மைத்துனர் நீட்டிவிட -பித்தனமர்
    அக்காளை அஞ்சி அலங்காநல் லூர்சென்று
    உட்கார ஊர்வலத்திற்க்(கு) ஓய்வு….(9)

    கண்ணூஞ்சல்
    —————–

    கண்ணூஞ்சல் ஆடினர் பெண்ணும்மாப் பிள்ளையும்
    விண்ணூறும் தேவர்கள் வீசிட -மண்ணூறும்
    மக்களண் ணாந்துமண மக்களைக் காட்டியிட்டார்
    கக்கமுறை சேய்களுக்குக் கூழ்….(10)

    மாப்பிளைக் கண்ணுக்கு மையிடுதல்
    ———————————————-

    மாப்பிள்ளை கண்ணுக்கு மையிட்டோர் கைகளில்
    தீப்புண் தகிக்க தவித்தனர் -கூப்பிட்ட
    மைத்துனர் மாலன் மருத்துவனால் பச்சிலையை
    வைத்தணைத்தார் நெற்றிக்கண் வீச்சு….(11)

    காசியாத்திரை-மாப்பிள்ளைத் தோழன்
    ———————————————-

    யாப்பில்லை என்றாலும் ஏழை தருமிக்கு
    மாப்பிள்ளைத் தோழன் மரியாதை -கூப்பிட்டு
    காசியாத்தி ரைக்கு குடைவிசிறி தந்தனன்
    ஈசன் விளையாடல் இது….(12)

    சிவகாசி யாத்திரை செல்லல் தடுக்க
    விவகா ரமானமச்சான் விஷ்ணு -சிவகேசம்
    மேலமர்ந்த கங்கையை மொண்டு தரையிலிட
    ஆலவாய் காசிநகர் ஆச்சு….(13)

    சம்பந்தி சண்டை
    ———————

    சொக்கன்கல் யாணத்தில் சம்மந்தி சண்டையிட
    விக்கினமாய் யாரும் வராததால் -சக்களத்தி
    கங்கை குதித்திறங்க செங்கண்மால் தம்பதிக்கு
    தன்கையில் ஏந்தித் தெளிப்பு….(14)

    மாப்பிள்ளை-முறுக்கு
    ————————-

    குனித்த தலையாய், குதிகால் நடையாய்
    பனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து
    புக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி
    முக்கண்ணன் சொக்கன் முழிப்பு….(15)

     
    மீனாளைப் பார்த்து மதுரை மயங்கியதில்
    மானாளை முற்றும் மறந்தது -தூணாளும்
    ஆய்ப்பிள்ளை மச்சான் அநுதா பமாயளிக்க
    மாப்பிள்ளை வாயில் முறுக்கு….(16)

    கன்னிகாதானம்
    ——————-

    தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
    யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
    பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
    சேக்கிழார் சாமி சபைக்கு….(17)

    பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
    சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
    நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
    அள்ளிவந்தார் சேலை அலைந்து….(18)

    கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
    மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
    மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
    முடிந்தான் அரன்முடிச்சு மூன்று….(19)

    அம்மி மிதித்தேறி அருந்ததி பார்த்தல்
    ————————————————

    சொக்கனுடம் மீனாட்சி அக்கினியைச் சுற்றிவரல்
    வக்கணையாய்க் காண வசிட்டனுடன் -அக்கணம்
    அம்மிமிதித்(து) ஏறி அருந்ததி பார்த்தனள்
    விம்மிஆ னந்தநீர் விட்டு….(20)

     

    கல்யாணத்திற்கு வந்த VIP பிள்ளைகள்
    ————————————————

    கல்யானைக்(கு) அன்றுயிர் கொள்ளவைத்த சொக்கனைக்
    கல்யாணம் கொள்கிறாள் கன்னிமீனாள் -தொல்யானைப்
    பிள்ளையும் வேலனும் பார்த்ததால் பெற்றோர்க்கு
    இல்லையொண் ணாத இனிப்பு….(21)

    images (6)

    கல்யாணச் சாப்பாடு
    —————————-

    உண்ட பெருவிருந்தால் குண்டோ தரன்கொண்ட
    தொண்டை அடைத்திடும் தாகத்தைக் -கண்டசிவன்
    கைவை எனச்சொல்லக் கைமாற்றி வைத்தவன்முன்
    வைகை விரைந்தாள் வளைந்து….(22)
    மொய் எழுதுதல்
    ——————–
    மாப்பிள்ளை சொக்கன் மணமகள் மீனாளைக்
    காப்பிட்டுக் கொள்கிறார் கல்யாணம் -சாப்பிட்டு
    மொய்யெழுது வோர்க்குமச்சான் மாலோலன் தாம்பூலப்
    பையேந்தி நிற்பார் பணிந்து….(23)

    நலங்கு
    ———

    விடக்கண்டன் சொக்கன் விடாக்கண்டன் ஆகி
    விடமறுத்தான் தேங்காய் நலங்கில் -படபடத்த
    கெண்டை விழிமீனாள் கோபிக்க அஞ்சியரன்
    அண்டத்துக் கோளை அளிப்பு….(24)

    மாலை வரவேற்பு
    ——————–

    மச்சினன் வேண்டியதால் மாலை வரவேற்பில்
    அச்சிவன் தாண்டவம் ஆடிட -உச்சத்தில்
    ஓடிவந்து மீனாள் ஒயிலாக சேர்ந்துகொள்ள
    கூடலுக்குக் கூடுதல் கூத்து….(25)

    சாந்தி முகூர்த்தம்
    ———————–

    முதலிரவில் மீனாள் கதவடைத்துச் சொன்னாள்
    மதுரைவாழ் மக்களின் மாண்பு -பொதுவிடத்தில்
    பதவிசாய் நாகரீகப் பண்பு -பொதுவிடத்தில்
    மாட்டோடும் ஓட்டோடும் மானத்தை வாங்காதீர்
    வீட்டோட மாப்பிள்ளை வாள்….(26)

    இச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட
    நச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ
    என்றலறி மீனாள் எகிறி குதித்தோட
    அன்றுசிவ ராத்திரி ஆச்சு….(27)

    பாலிகை கரைப்பு
    ———————–

    மாளிகை மீனாள் மயானனை ஏற்றிட
    பாலிகையை பெண்கள் பகிஷ்கரிப்பு -நாலுகை
    மைத்துனன் வைகையில் மோகினியாய் தானியத்தைக்
    கைத்தலம் ஏந்திக் கரைப்பு….(28)

    கட்டுச் சாதக் கூடை
    —————————

    கழுத்தரவம் தன்னை கடாசி எறிந்தான்
    அழுத்தியுமை யாளை அணைக்க -பழித்தனர்
    கட்டு விரியன்கள் கட்டிக் குலாவிடும்
    கட்டுச்சா தக்கூடை கண்டு….(29)

    மலயத்துவசன் பிரிவோபசாரம்
    —————————————

    கலையத் துவங்கினர் கல்யாணம் கண்டோர்
    அலையில் படுத்தான் அரிமால் -மலயத்
    துவசன் வளர்ப்பை தழுவிப் பகர்ந்தான்
    கவசமே கூடலைக் கா….(30)

     

    சிவசிவ என்று சிரத்தில் மலையத்
    துவசனார் குட்டித் தொழுது -அவசரமாய்
    கெஞ்சினார் ”நஞ்சுண்டா மிஞ்சினாலும் மீனாளை
    நெஞ்சில் அமிழ்தாய் நிறுத்து”….(31)

    கோயிலுக்குல் புகுதல்
    —————————-

    சித்தரின் சன்னிதியில் சொக்கனும் மீனாளும்
    சுத்திவந்து தம்பதியாய் சேவித்து -தத்தம்
    கருவறைக்குள் செல்வதைக் கண்ட மதுரை
    அரஹர சம்போவென்(று) ஆர்ப்பு….(32)

    பல ஸ்ருதி
    ————-

    மாதரசி மீனாள் மஹாதே வனைமணந்த
    போதரிசி வாழ்த்தைப் பொழிந்தோர்க்கும் -காதுருசி
    கொண்டதைக் கேட்டோர்க்கும் கேட்டதை சொன்னோர்க்கும்
    விண்டதெலாம் வாணியவள் வாக்கு….(33)

    ——————————————————————————————————————————————————————————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”மடிவரைய பால்சிந்தி மாடதன் கோலப்
    படிதாண்டாப் பத்தினியாய் பாலன், -முடிஉயர,
    யோசிக் கிறான்தப்ப, வாசிக் கணும்கீதை,
    க்லேசிக்கும் காண்டீப னுக்கு’’….கிரேசி மோகன்…

    க்லேசிக்கும் -போட்ட காரணம் ‘’க்லேச நாசாய கோவிந்தாய’’….

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 2

    புலவர் இரா.  இராமமூர்த்தி.

     

     

    ”நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.” (783)

    என்னும் திருக்குறளின்படி , நம் வாழ்வில் ஒருமுறை படித்த நூலை மீண்டும் மீண்டும் படிக்கும்போது நம் தனிப்பட்ட, மற்றும் சமுதாய வளர்ச்சிக் கேற்பப் புதிய புதிய பொருள்களைத் தந்து மகிழ்விக்கிறது. அதனால்தான் நாம் இளமையில், பள்ளி வகுப்புக்களில் அன்று படித்த பாடத்தின் இன்றைய பயன்பாடு நமக்கு உதவுகிறது. அன்று கற்ற நூலின் அனுபவப் பாடம் இன்று நமது உள்ளார்ந்த ஆன்மிகப் பயிற்சிக்கு உறுதுணை ஆகிறது.

    ”இதன் விளக்கத்தை வல்லார்வாய்க் கேட்டறிக”, என்ற உரையாசிரியர்களின் கருத்து, அந்த நூலை மீண்டும் கற்றறிந்த நூல்வல்லார் ஒருவருடன் இணைந்து மீண்டும் பயில வேண்டும் என்பதை நிறுவுகிறது. அவ்வகையில் ஆன்மிக அனுபவங்களை – சிலவகை தியானம், யோகம், ஆகியவற்றை- தக்க வழிகாட்டி- குரு , ஒருவரிடம் முறையாகக் கற்றுப் பயிலவேண்டும் என்று தத்துவ நூல்கள் வலியுறுத்துகின்றன! இதனை,

    ”உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்;
    கடையரே கல்லா தவர்”(395)

    என்ற குறட் பாவும் வலியுறுத்துகிறது. இல்லார் உடையார் முன் சென்று, நின்று, வேண்டிப் பெறுவதுபோல் ஆசிரியரிடம் சென்று நின்று, பலமுறை வேண்டி வேண்டி, அறிவைப் பெற வேண்டும் என்பது இதன் பொருள்.

    ”பொங்கரில் நுழைந்து வாவி
              புகுந்து பங்கயம் துழாவிப்
    பைங்கடி மயிலை முல்லை
              மல்லிகைப் பந்தர் தாவிக்
    கொங்கலர் மணம்கூட் டுண்டு
              குளிர்ந்து மெல்லென்று தென்றல்
    அங்கங்கே கலைகள் தேறும்
              அறிவன்போல் இயங்கும் அன்றே!”

    என்ற திருவிளையாடற் புராணப் பாடல் அறிவைத் தேடுபவன் எவ்வாறெல்லாம் மீண்டும் மீண்டும் முயன்று அங்கங்கே தேவைப்பட்ட அறிவைப் பெறுகிறான் என்பதை, வீசும் காற்றை உவமையாக வைத்து விளக்குகிறார் (இதன் விளக்கத்தை வேறொரு கட்டுரையில் எழுதவிருக்கிறேன்!).

    பலமுறை படித்துப் பொருள் புரிந்து கொள்ள முயற்சி செய்த போதெல்லாம் திருக்குறளின் பொருள் புதுப்புதுப் பொலிவுடன் வளர்வதைக் கண்டுள்ளேன்! அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை வருகிறது. தக்கவர் ஒருவரிடம் ஒரு திருக்குறளின் பொருளைக் கேட்டறிந்து, மிக்க மகிழ்ச்சி யடைந்து இதனை எழுதுகிறேன்!

    ”கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா வுயிரும் தொழும்” (260)

    என்பதே அத்திருக்குறள்! இந்தக் குறட்பாவுக்குப் பொருள்காண முற்பட்டால், உயிர்களைக் கொல்லாதவனையும், அவற்றின் புலாலை உண்ணமாட்டேன் என்று மறுத்தவனையும், அதாவது உயிரிரக்கம் காட்டுபவனையும், புலால் மறுத்தவனையும், எல்லாவுயிரும் கைகூப்பித்தொழும் என்று பொருள் அமைகிறது! இதில், ‘எல்லாவுயிரும்’ என்ற தொடர் எந்தெந்த உயிர்களைக் குறிக்கிறது? விலங்குகளைக் கொன்று தின்பதுதானே புலாலுண்ணுதல்? விலங்குகளைக் கொல்லாமல், அவற்றைச் சமைத்துத் தின்னாமல் இருப்பவனை விலங்குகள் எவ்வாறு கைகூப்பித் தொழும்? அவ்வாறு தொழும் செயலை எல்லாவுயிர்களும் செய்யுமா? என்ற வினாக்கள் எனக்குள் எழுந்தன! ”இதற்குத் தக்க விளக்கம் தேடினேன்” என்று கவிமாமணி இலந்தை இராமசாமியிடம் கேட்டேன்! உடனே அதற்குத் தகுந்த விளக்கத்தை அவர் அளித்தார்! அவருக்கு என் நன்றியைப் புலப்படுத்துவது என் கடமை! திரு. இராமசாமி, கைகூப்பி’ என்பதை ” எல்லாவுயிரும்” என்ற தொடரில் இணைத்து ஏன் தடுமாறுகிறீர்கள்?

    புலாலைக் கைகூப்பி மறுத்தானை என்று அமைத்துக் கொள்ளுங்கள்! பொதுவாக எதனையும் வேண்டவே வேண்டாம் என்று மறுப்பவர், இருகரமும் கூப்பி , ‘எனக்கு இது வேண்டா!’ என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் என்றுதான் கூறுவர். அவ்வகையில் புலாலுணவு வேண்டாதவர் ”இது வேண்டா’ என்று கூறும்போது பணிவுடன் கைகூப்புவதுதானே வழக்கம்? ஆகவே கொல்லானை, புலாலைக் கைகூப்பி மறுத்தானை எல்லாவுயிரும் தொழும் என்று அமைத்துக் கொள்ள வேண்டும்! இங்கே எல்லாவுயிரும் என்ற தொடர் ‘எல்லாச் சான்றோரும்’ என்ற பொருளில் மனிதவுயிர்களை மட்டுமே சிறப்பிக்கும்! ”மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்” (457) என்ற குறட்பாவிலும், ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல (1012) என்ற குறட்பாவிலும், ”எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு, என்ற குறட்பாவிலும் உயிர்கள் உயர்திணை மக்களையே குறித்தது!

    இவ்வகையில் திருக்குறளுக்குப் புதிய பொருள் காண்கிறோம். இன்னும் காண்போம்.

    Share
  • வளவன் கனவு-3

    சு.கோதண்டராமன்

    vallavan kanavu

    புதிய பாடல் புதிய தெய்வம்

    ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து

    கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து பேசி

    மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்

    பிறவாமைக் காக்கும் பிரான்

    -அம்மையார்.

    சோழ மன்னர் செந்தீ வளவன் கொலு மண்டபத்தில் வந்து அமர்ந்தார். அவர் முகம் கவலைக் குறியைக் காட்டியது. தலைமை அமைச்சர் அச்சுதப் பிரமராயரை நோக்கி, “பிரமராயரே, நம் மனிதர்கள் நர்மதைக்கரைக்குப் போய் மூன்று மாதம் ஆகிறது. இன்னும் வரவில்லை, அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லையே” என்றார்.

    “வந்துவிடுவார்கள் மன்னா. கவலை வேண்டாம். எப்படியும் போக ஒரு மாதம், வர ஒரு மாதம் ஆகும். மேலும் ஆங்கிரஸ பிரமராயர் போன காரியத்தைச் செவ்வனே முடித்துக்கொண்டுதானே வரவேண்டும். நாடுவிட்டு நாடு குடியேறுவது என்பது எளிதான செயல் அல்லவே? அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்து அவர்கள் யோசனை செய்து சம்மதித்தபின் அவர்களை ஒன்று கூட்டிக் கொண்டு வரவேண்டும். இதற்கு நான்கு மாத காலம் ஆகும். நேற்று வந்த ஒற்றர் செய்தியின்படி, வர விரும்புபவர்கள் அனைவரும் வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அதாவது முந்தாநாள், கார்வான் நகரில் கூட வேண்டும் என்று ஆங்கிரஸர் அறிவித்து இருக்கிறார். நேற்று புறப்பட்டிருப்பார்கள். இன்று கடல் பயணத்தைத் தொடங்கியிருப்பார்கள்.”

    “நம் அமைச்சர் ஆங்கிரஸரின் திறமையில் நமக்கு நம்பிக்கை உண்டு. இருந்தாலும் நீண்ட கடற்பயணம் ஆயிற்றே, புயல் போன்ற இயற்கை உற்பாதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்பது தான் நம் கவலைக்குக் காரணம்.”

    “நம் மாலுமிகள் திறமையானவர்கள். எந்தப் புயல் வெள்ளமானாலும் பாதுகாப்பாகப் படகைச் செலுத்துவதில் வல்லவர்கள். மேலும் இது புயல் வீசும் காலமும் அல்ல. கடுங்கோடை. இன்னும் ஒரு மாதம் போனால் மேற்குப் பகுதிகளில் பெரு மழை தொடங்கிவிடும். அதற்குள் அவர்கள் வந்து விடுவார்கள். லகுலீசர் காப்பார். கவலை வேண்டாம் மன்னா.”

    லகுலீசர் பெயரைக் கேட்டவுடன் அரசரின் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.

    ஒரு ஆண்டுக்கு முன்னால் ஒரு நாள். அரசர் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும்போது ஒரு புலவர் வந்தார். வழக்கம்போல மன்னரைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்வதற்காக வருவோரில் ஒருவர் என்று  நினைத்த மன்னருக்கு அவர் பேசிய முதல் சொல்லே அதிர்ச்சியைத் தந்தது.

    “மன்னா, இப்பொழுது நான் சொல்லப் போகும் பாடல் உங்களைப் புகழ்ந்து பாடப்பட்டதும் அல்ல, என்னால் இயற்றப்பட்டதும் அல்ல. மேலும் நான் பரிசு பெறவும் வரவில்லை. மன்னர் தயவால் என்னுடைய நிலம் எனக்குப் போதுமான வருவாய் தருகிறது.  பாடலைப் படிக்கவா?”

    “படியும்.”

    அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

    அழகால் அழல்சிவந்த வாறோகழலாடப்

    பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்

    தீயாடு வாய்இதனைச் செப்பு.        

    சுடலையில் தீயின் நடுவே கையில் தீயேந்தி நடனமாடுபவனைப் பார்த்துப் புலவர் கேட்கிறார், “உன் கையின் சிவப்பு நிறத்தால் தீ சிவந்ததா அல்லது அத்தீயினால் உன் கை சிவந்ததா ?

    “அடடா, என்ன கற்பனை நயம்! மேலே படியும்.”

    காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்

    வேலையே போன்றிலங்கும் வெண்ணீறுமாலையின்

    தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு

    வீங்கிருளே போலும் மிடறு.

        காலை நேரத்துச் சிவந்த வானம் அவனது திருமேனிக்கும், உச்சி வேளை வெண்ணிற வானம் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் மறைகின்ற ஞாயிற்றின் கதிர்கள் அவனது விரிந்த சடைக்கும், கருத்த இரவு அவன் கறை மிடற்றிற்கும் உவமையாயின.

    “ஆஹா, என்ன சிறப்பான உவமை! மேலே படியும்.”

    இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ

    மருளின் மணிநீலம் என்கோஅருளெமக்கு

    நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்

    ஒன்றுடையாய் கண்டத் தொளி.

    இறைவா, உன் கண்டத்தில் உள்ள ஒளி பொருந்திய கருமைக்கு உவமையாக எதைக் கூறுவேன்? இருளையா, மாமேகத்தையா, நீல மணியையா ?

    “என்கோ, என்கோ என்ற தொடர் என்னை எங்கோ உயர்த்திச் செல்கிறது. என்ன அழகான சொல் பிரயோகம்! இன்னும் இருக்கிறதா?”

    “நிறைய உள்ளது மன்னா. சொற்சுவை மட்டுமல்ல. இறைவனிடத்து அவர் காட்டும் அன்புச் சுவையும் சிறப்புடைத்து. இதைக் கேளுங்கள்.”

    இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்

    படரும் நெறிபணியா ரேனும்சுடருருவில்

    என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்

    கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

        என் துன்பத்தை அவர் தீர்க்காவிட்டாலும், என் மேல் இரக்கம் கொள்ளாவிட்டாலும், நான் பின்பற்ற வேண்டிய வழி பற்றி எனக்கு உணர்த்தாவிட்டாலும் எலும்பு மாலை அணிந்து, சுடுகாட்டு நெருப்பினிடையே தானும் ஒரு சுடராகக் கையில் தீ ஏந்தி நடனம் ஆடுகின்ற எம்மானிடம் நான் கொண்ட அன்பு மாறாது.                                                                     

    அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

    அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்பவர்ச்சடைமேல்

    பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்

    காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

        நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் அவ்வப் பிறவிகளிலும், தன் நீண்ட சடையில் பிளவுபட்ட திங்களைச் சூடிய பெம்மானுக்கே அடிமையராய் வாழ்வோம். அவரல்லாத பிறர்க்கு ஒருபோதும் ஆளாக மாட்டோம்.                                                              

    வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்

    காதியனை ஆதிரைநன் னாளானைச் சோதிப்பான்

    வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது

    கில்லேன மாஎன்றான் கீழ்.

     

        வேதத்தை ஓதுபவனும், வேதத்திற்குப் பொருளாய் உள்ளவனும், வேதத்தைச் செய்தவனும் ஆகிய ஆதிரை நன்னாளானைச் சோதிப்பதற்கு மாலவனும் பன்றி உருவெடுத்து கீழே தோண்டிச் சென்று ‘என்னால் முடியவில்லை அம்மா’ என்றான்.

    “புலவரே, இந்தப் பாடல்களில் போற்றப்பட்டுள்ள தெய்வம் யார் என்று தெரியவில்லையே. அவர் வேதத்துக்கு ஆதியன் என்று பேசப்பட்டாலும் அவர் வேத தெய்வமாகவும் தெரியவில்லை. கிராமியத் தெய்வமாகவும் தெரியவில்லை. எப்படி இருப்பினும் அந்தத் தெய்வத்தின் மேல் புலவர் செலுத்தும் அன்பு மிக ஆழ்ந்தது, உறுதியானது. இதை இயற்றியவர் யார்? இது போன்று இன்னும் எத்தனை பாடல்கள் உள்ளன?”

    “மன்னா, இது என் தந்தையார் எழுதி வைத்த சுவடி. அவர் என் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டார். இந்தச் சுவடி என் வீட்டுப் பரணில் இருந்தது. இது பேயார் என்ற ஒரு பெண்பால் புலவர் இயற்றியது என்று என் தாய் சொல்லி அறிந்தேன்.  படித்துப் பார்த்ததில் சிறப்பாக இருக்கவே, சிறப்புடைய பொருள்கள் அரசர்க்கே உரியன என்ற வழக்குப்படி சமூகத்தில் இதைத் தெரிவிக்க வந்தேன். மொத்தம் 143 பாடல்கள் உள்ளன. இது எந்தத் தெய்வத்தைக் குறிக்கிறது என்பதை நான் அறியவில்லை.”

    “புலவரே, நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்கள். முழுவதையும் படித்துக் காட்டிவிட்டுப் போகலாம். அமைச்சரே, இந்தப் பாடலை நீர் கேட்டிருக்கிறீரா, இதை எழுதியது யார் தெரியுமா?”

    “பேயார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காரைக்காலைச் சேர்ந்தவர். அவர் ஏதோ பேய் பிடித்த பெண் என்றுதான் நினைத்திருந்தேன். அவர் இவ்வளவு அழகிய பாடல்களை இயற்றியிருப்பார் என்று நான் இதுவரையில் அறியவில்லை.”

    “அமைச்சரே, அவரைப் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரித்துச் சொல்லும்.”

    “உத்தரவு மன்னா.”

        புலவர் அமைச்சர் காட்டிய விடுதியில் தங்கினார். அரசருக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அரண்மனைக்கு வந்து பாடல்களைப் படித்துப் பொருள் கூறி வந்தார்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(154)

    –சக்தி சக்திதாசன்.

    web-human-rights-act

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    புதியதோர் வாரத்தில் புலரும் கருத்துகளுடன் உங்களோடு உறவாட மீண்டும் உங்கள் முன்னே மடல் வாயிலாக விழைகிறேன்.

    அடிப்படை மனிதஉரிமை என்பது மகத்தான பொதுவுடமையாகும். மனிதன் மனிதனாக மதிக்கப்பட்டு அவனுக்கு உலகில் நியாயமான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது யாவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு அத்தியாவசியமானத் தேவையாகும்.

    உலகவரலாற்றில் அதாவது ஐரோப்பியக் கண்டத்தில் இம்மனித உரிமையின் முக்கியத்துவம் மிகவும் அதீத வகையில் உணர்த்தப்பட்டது எனலாம்.

    எப்படி என்கிறீர்களா ?

    1928ஆம் ஆண்டு அமெரிக்க ஸ்டாக் எக்ஸ்ச்சேஞ் வீழ்ச்சியடைந்தது. அது அமெரிக்காவில் ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்கா தான் அந்நியநாடுகளுக்கு அளித்திருந்த கடனுதவியை தனது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மேற்கோள் காட்டித் திரும்பக் கோரியது.

    இந்த நடவடிக்கை ஜெர்மனிய நாட்டை மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியது. ஜெர்மனியின் வேலையில்லாதோர் தொகை ஆறு மில்லியனாக உயர்ந்தது.

    ஜெர்மனிய அரசாங்கம் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது, 1930ம் ஆண்டு ஜெர்மனிய அதிபதி ஹின்டன்பேர்க் ப்ரூனிங் அரசாங்கச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல செலவுகளைக் குறைத்தார். அதன் நிமித்தம் வேலையற்றோருக்கு கொடுக்கப்படும் உதவிப்பணம் நிறுத்தப்பட்டு பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருந்த மக்களை வெகுவாக பாதித்தமையால் அவர்கள் வெகுண்டெழ அரசாங்கம் இதை அவசரக்கால திட்டத்தின் மூலம் நடைமுறைப் படுத்தியது.

    ஆத்திரமுற்ற மக்கள் கம்யூனிசத்தின் பால் திரும்புவது கண்டு அச்சமுற்ற தொழிலதிபர்கள் தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்டவரும், இனவேற்றுமையை தீவிரப்படுத்துபவரும், யூதர்களுக்கு எதிரானவருமான ஹிட்லரை ஆதரிக்கத் தலைப்பட்டார்கள். 1928ஆம் ஆண்டில் 12 இடங்கள் மட்டுமே பெற்றிருந்த ஜெர்மனிய நாஸிக் கட்சி, 1932ம் ஆண்டு 230 இடங்களைக் கைப்பற்றுமளவிற்கு ஆதரவைப் பெற்றது. ஜெர்மனிய அரசாங்கம் நிலைகுலைந்தது. ஜனாதிபதி ஹின்டன்பேர்க் ப்ரூனிங்கை பதவியிறக்கி ஆறுமாதமே தாக்குப்பிடித்த பாப்பன் அவர்களை பிரதமராக்கினர். அவரைத் தொடர்ந்த ஸ்லெய்ச்சர் இரண்டு மாதமே தாக்குப்பிடித்தார். அந்நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து ஹிட்லருக்கு உதவிப்பிரதமர் பதவி கொடுக்கத் தீர்மானித்தார்கள். ஆனால், ஹிட்லரோ பிரதமர் பதவியை மட்டுமே எதிர்பார்த்தார்.

    விளைவு !

    1933ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனிய நாட்டு அதிபதியானார். அதைத் தொடர்ந்து நடந்த உலக அநியாயங்களில் முதலிடம் வகிப்பதான ஹிட்லரின் யூதப்படுகொலைகள் அரங்கேறியதும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் நாமனைவரும் அறிந்ததே !

    சரி எதற்கு இந்த சரித்திர அலசல், இதற்கும் மனித உரிமைகள் பற்றி ஆரம்பத்தில் கூறியவற்றிற்கும் என்ன தொடர்பு என்றுதானே எண்ணுகிறீர்கள். இதோ வருகிறேன் …

    இங்கிலாந்தின் புதிய அரசாங்கத்தின் பழைய பிரதமர் டேவிட் காமரன் அவர்கள் 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது செய்த கொள்கைப் பிரகடனங்களில் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறைவேற்றப்பட்ட மனிதஉரிமைச் சட்டத்தில் இடம்பெறும் நாடுகளில் ஒன்றாக அதைக் கடைப்பிடிப்பதை நிறுத்தி இங்கிலாந்து நாட்டிற்கான தனியான மனிதஉரிமைச் சட்டம் ஒன்றை தாம் பதவிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்பதே. இவருடைய இந்தக் கொள்கைப் பிரகடனத்திற்குக் கணிசமான அளவில் மக்கள் ஆதரவும் உண்டு.

    அட, தமது உரிமைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் பாதுகாக்கும் உரிமைகளை இவ்வளவு இலகுவாக விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கிறார்களே என்று வியப்பதற்கு இடமுண்டு. சமீபகாலமாக உலகில் பலபாகங்களிலும் மதங்களின் பெயரால் இடம்பெற்று வரும் பயங்கரவாதச் செயல்களைப் பற்றி நாம் நன்கறிவோம். அத்தகைய பயங்கரவாதச் செயல்கள் புரிவோரை பகிரங்கமாக ஆதரிக்கும் வெளிநாட்டினரை இங்கிலாந்தில் இருந்து அப்புறப்படுத்த இங்கிலாந்து நீதிமன்றங்கள் உத்தரவிட்ட போதும் அவர்கள் இம்மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய நீதிமன்றத்தின் மூலம் தொடர்ந்தும் இங்கிலாந்தில் தங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதி இங்கிலாந்து மக்கள் பலரை மிகவும் ஆத்திரமூட்டியுள்ளது. எப்போது இந்த மனிதஉரிமைச் சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது ?

    MAIN-Magna-Cameronஹிட்லர் யூத மக்களுக்குச் செய்த அகோரச் செயல்களின் பின்னர், ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின்னால் இனிமேல் உலகில் குறிப்பாக ஐரோப்பாவில் இத்தகைய கொடிய செயல்கள் இடம்பெற இடமளிக்கக் கூடாது எனும் காரணத்திற்காக அப்போதைய ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து இந்த மனிதஉரிமைச் சட்டத்தை அமுலாக்கின. ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் ஒரு தனிமனிதனின் கொள்கைக்காகப் பறிக்கப்பட்டதினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புச் சட்டம், மதத்தின் பெயரால் காவு கொள்ளப்படும் உயிர்களினால் மீண்டும் எதிர்க்கப்படும் ஒரு துயரமான சந்தியில் நிற்கிறோம்.

    இச்சட்டத்தை இங்கிலாந்தில் நிறுத்தக்கூடாது எனும் குரல்கள் பலபாகங்களிலும் ஒலிக்கத்தான் செய்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட உரிமைகளுக்கான சட்டம் “மக்னா காட்டர்” என்பதே முதன்முதாலக ஐரோப்பிய பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மனித உரிமைச் சட்டம். இச்சட்டத்தின் 800ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்படும் வேளையில், இத்தகைய சட்டத்தை ஐரோப்பாவில் அனைவர்க்கும் முதலாக ஏற்படுத்திய எமக்கு, எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை எம்மால் ஏற்படுத்த முடியாதா ? என்று வாதிடுகிறார் பிரதமர் டேவிட் காமரன்.

    ஏதோ ஒருசில பயங்கரவாதிகளுக்காக வேறுபல நன்மைகளைத் தரும் ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைச் சட்டத்திலிருந்து நாம் விலகுவது ஒரு மூடத்தனமான காரியம் என வாதிடுகிறார்கள் பல முன்னணி அரசியல்வாதிகள். மனிதனை மனிதனாக வாழவிடுவதற்கு ஒரு சட்டமூலம் அவசியம் எனும் நிலை வந்த பின்பு . . . .

    ம் . . . பொறுத்திருந்து பார்ப்போம் …

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    இயற்கைக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth)

    இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியிலுள்ள காக்கர்மவுத் (Cockermouth) எனும் இயற்கையெழில் கொஞ்சுமிடத்தில், ஜான் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் ஆன் குக்ஸன் எனும் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளுள் இரண்டாவதாகப் பிறந்தார் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். அவருடைய உடன்பிறப்புக்களில் அவரை அடுத்துப் பிறந்த சகோதரியான டோரதி வேர்ட்ஸ்வொர்த் என்பவரும் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்திருக்கின்றார். அண்ணனோடு இறுதிக்காலம்வரை நெருக்கமான உறவைப் பேணியவரும் அவரே.

    wordsworthவேர்ட்ஸ்வொர்த்தின் தந்தைதான் இளமையில் அவருக்கு ஷேக்ஸ்பியர், மில்டன், ஸ்பென்ஸர் போன்ற புகழ்பெற்ற கவிஞர்களின் படைப்புக்களை அறிமுகப்படுத்தி அவற்றைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

    1787-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படைப்பான பதினான்கு வரிப் பாடலொன்றை (Sonnet) ஐரோப்பியச் சஞ்சிகையில் (The European Magazine) பிரசுரித்து எழுத்துத்துறையில் தன் பாதம் பதித்தார் வேர்ட்ஸ்வொர்த்.

    தொடர்ந்து கவிதைகள் படைத்துவந்த அவர், 1793—ஆம் ஆண்டு தன் கவிதைகளைத் தொகுத்து ’மாலை நடையுலாவும் கவிதைத் தீற்றல்களும்’ (Evening walk and Descriptive Sketches) எனும் பெயரில் கவிதை நூலாய்ப் பதிப்பித்தார்.

    சாமுவெல் டெய்லர் கோல்ரிட்ஜ் (Samuel Taylor Coleridge) எனும் ஆங்கிலக் கவிஞரோடு இணைந்து ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் (Romantic age in English literature) முதலில் தொடங்கிய முன்னோடிக் கவிஞர் எனும் பெருமைக்குரியவர் வில்லியம்  வேர்ட்ஸ்வொர்த்.

    பிற கவிஞர்களால் அதிகம் பதிவுசெய்யப்படாத, அடித்தட்டு மக்களையும் (people from the lower classes), தங்க இடமின்றித் திரிவோரையும் (wanderers), உழவர் பெருமக்களையும் (peasants), சிறு வணிகர்களையும் (peddlers) பாடுபொருளாக்கிப் பெருமை சேர்த்தவர் வேர்ட்ஸ்வொர்த். எல்லாவற்றிற்கும் மேலாக, இயற்கையன்னையின்மீது தணியாத காதல் கொண்ட தனயன் இவர். அதனாலல்லவோ தன்னுடைய ’The Tables Turned’ (அட்டவணைகள் மாறுகின்றன) எனும் கவிதையில், புத்தகங்களை வீசியெறிந்துவிட்டு இயற்கையிடம் பாடம்கேட்கப் பள்ளிப் பிள்ளைகளை அன்போடு அழைக்கின்றார்.

    அக்கவிதை…

    Up! up! My Friend, and quit your books;
    Or surely you’ll grow double
    Up! up! my Friend, and clear your looks;
    Why all this toil and trouble?
    […]
    And hark! how blithe the throstle sings!
    He, too, is no mean preacher
    Come forth into the light of things,
    Let Nature be your teacher…

    தனியே வயலில் அறுவடை செய்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மதுர கானத்தைப் போற்றி, அவர் எழுதிய ‘The Solitary Reaper’ (அறுவடை செய்யும் பெண்) என்ற கவிதையும் மிகவும் புகழ்வாய்ந்தது.

    அக்கவிதை…

    Behold her, single in the field,
    Yon solitary Highland Lass!
    Reaping and singing by herself;
    Stop here, or gently pass!
    Alone she cuts and binds the grain,
    And sings a melancholy strain;
    O listen! for the Vale profound
    Is overflowing with the sound
    […]
    Will no one tell me what she sings?
    Perhaps the plaintive numbers flow
    For old, unhappy, far-off things,
    And battles long ago
    Or is it some more humble lay,
    Familiar matter of to-day?
    Some natural sorrow, loss, or pain,
    That has been, and may be again?
    …………………………………………….

    மிகவும் இளகிய மனம் படைத்தவராகவும் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் திகழ்ந்திருக்கின்றார் என்பதைப் பின்வரும் நிகழ்வால் அறியலாம்.

    ஒருமுறை வேர்ட்ஸ்வொர்த் ஒரு மலைச்சாரல் பக்கமாய் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த பாறை இடுக்கிலிருந்து ஒரு மலர் எட்டிப்பார்த்ததாம். அதைக் கண்டவுடன், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, ஆதரிப்பார் யாருமின்றி அநாதையாய் உயிர்விட்ட இளங்கவிஞன் சாட்டர்டனின் நினைவு அவருக்கு வந்துவிட, “சாட்டர்டன் நீ இங்கேயா இருக்கிறாய்?” என்று அந்த ஒற்றை மலரைப் பார்த்துக் கேட்டுவிட்டுக் கண்ணீர் சிந்தினாராம். முல்லைக்கொடி பற்றிப்படரக் கொழுகொம்பில்லாமல் வாடுவதைக் கண்டு மனங்கசிந்த வள்ளல் பாரியை  இத்தருணத்தில் நம்முள்ளம் நினைவுகூர்கின்றது இல்லையா? பாரி புவியரசன், எனவே தேரைத் தந்தான் கொடிக்கு; வேர்ட்ஸ்வொர்த்தோ கவியரசன் மட்டுமே…ஆதலால் கண்ணீரைத்தான் அவரால் தர முடிந்திருக்கின்றது மலருக்கு!

    தன் சுயசரிதையைக் கருவாகக்கொண்டு அவர் எழுதிய ‘முன்னுரை’ (The prelude) எனும் கவிதை, கவிஞர் மில்டனின் ‘இழந்த சொர்க்கத்திற்கு’ப் (The Paradise Lost) பின்பு எழுதப்பட்ட மிக நீண்ட கவிதை எனும் சிறப்பைப் பெற்றதோடல்லாமல், வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளிலேயே  சிறந்தவொன்று எனும் அங்கீகாரத்தையும் உலக மக்களிடம் பெற்றிருக்கின்றது.

    சிறந்த கவிஞராகவும், அருளுள்ளம் கொண்ட மனிதராகவும் வாழ்ந்து மறைந்த வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், காலத்தைவென்ற தன்னுடைய அமர கவிதைகளால் என்றும் நிலைத்து வாழ்வார் என்பதில் ஐயமில்லை.

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தீயன ஆவதே போன்று கெடும்

     

    அல்லது செய்வார் அரும்பொரு ளாக்கத்தை
    நல்லது செய்வார் நயப்பவோ? – ஒல்லொலிநீர்
    பாய்வதே போலும் துறைவ! கேள் தீயன
    ஆவதே போன்று கெடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
    நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர்
    பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன
    ஆவதே போன்று கெடும்.

    பொருள் விளக்கம்:
    அறநெறி வழியல்லாத செயல்களில் ஈடுபட்டு ஒருவர் ஈட்டிய செல்வத்தை நன்னெறியினைக் கடைப்பிடிப்பவர் விரும்புவார்களோ? (விரும்புவதில்லை, எனவே) ஒலியுடன் பாறையில் நீர் பாய்வது போன்று அமைந்த துறையைச் சேர்ந்தவரே, கேட்பாயாக. தீயவழியில் சேர்த்த செல்வம் பெருகுவது போலத் தோற்றம் தந்தாலும் விரைவில் அழிந்துவிடும்.

    பழமொழி சொல்லும் பாடம்: தீயவழியில் பொருள் சேர்க்கக்கூடாது. நல்வழி நடப்போர் தீயவழியில் வந்த பொருளை விரும்புவதில்லை, தீயவழியில் சேர்த்த செல்வமும் வளர்வது போன்று தோன்றினாலும் அழிந்து போகும். இக்கருத்தையே வள்ளுவரும்,

    களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
    ஆவது போலக் கெடும். (குறள்: 283)

    கொள்ளையடித்துப் பொருள் குவிப்பதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோற்றத்தைத் தந்தாலும், தீய வழியில் ஈட்டிய பொருளானது முன்னர் சேர்த்திருந்த செல்வத்தையும் இல்லாது அழித்துவிடும் என்று அறிவுறுத்துகிறார்.

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ​​

    வாழ்(வு)நீட்டின் யாதுபயன் மெய்யது கண்டிலார்
    சூழ்கேடும் கொண்டு விதியென்பர் – சூத்திரம்
    வள்ளுவம் ஏகிட்டுச் செல்பாதை மாற்றிட
    ஊழும் தொலையும் பார்!

    செவிச்சுவை சொல்கேளார் கண்ணெழில் காட்சியிலார் valluvar
    இன்சொல் பகர்மறுத்தார் தோள்கொடு சொந்தமிலார்
    காற்றின் மணமேகார் ஆறறிவை வென்றிடப்
    போற்றின் திருக்குறள் மேல்!

    இலக்கில்லா வாழ்வும் துடுப்பிலா ஓடமும்
    வீழுமொரு நாளே அதன்முன்னே – வள்ளுவம்
    வந்திட்டால் நிச்சயம் பெற்றிடலாம் போமுயிர்
    மருந்தாம் காக்கும்  குறள்!

    தந்தைதாய்ச் சேர்ந்தார் வணங்கிச் செய்செயல்
    யாவும் பிறழ்நெறியில் போகா – திருக்குறள்
    கொண்டு வகுக்கும் பண்போடு வாழ்ந்தால்
    மானுடம் போற்றும் தலை!

    புலன்வழிச் செல்மாந்த ரென்றும் நிலைகொள்ளார்
    தீவினைசூழ் துன்பம் மிகக்கொண்டு – ஆழ்நிலை
    சென்றுணர்வார் வாழ்வின் வசந்தம் ஏகிட
    வள்ளுவம் சாற்றும் வழி!

     

     

    Share
  • ரமலான் வருக! வருகவே!!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    உலகமெலாம் செழிக்கவேண்டி
    உள்ளமெலாம் ஒளியையேந்தி     ramalaa
    வான்பிறையின் வழித்தடத்தில்
    வயிற்றுப்பசி தான் உணர்ந்து
    மாதம் ஒரு முப்பது நாள்
    மாண்புடனே நோன்பிருந்து
    தன்னுயிர்போல் மண்ணுயிர்களெனும்
    தத்துவத்தைத் தான் அறிந்து
    இறையருளின் கருணையினால்
    ஈகைக்குணம் நிறையக்கண்டு
    ஒருமித்தக் கருத்தாலே
    ஒன்றிவாழும் அனைவருக்கும்
    உள்ளம்நிறை வாழ்த்துக்களை
    உரித்தாக்கும் திருநாள் ரமலான் வருக! வருகவே!!

     

    Share
  • அவன், அது , ஆத்மா (17)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 17

    “திரைப்படப் பாடல்களில் ஈர்ப்பு”

    அவனுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோரின் திரைப்படப் பாடல்கள் மிகவும் பிடிக்கும். கவிஞர் வாலியின் தனிப்பாடல்களில் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்”, “ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும்” போன்றவை அவனுக்குப் பிடித்தமானவை. அவனது கிராமத்தில் ஒருவர் தினமும் காலை வேளையில் ஒவ்வொரு வீடாக இந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டே வருவார். அவனும் அந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டே அவர்பின்னால் சில வீடுகள்வரைத் தொடர்ந்து செல்வான். அந்தப் பாடகர் வள்ளலாரைப் போல வெள்ளை உடை அணிந்திருப்பார். நெற்றியில் திருநீறும், புருவ மத்தியில் சந்தனப் பொட்டும், கும்குமமும் இருக்கும். கழுத்தில் ஒரு ருத்ட்ராக்ஷ மாலையும் உண்டு. வலது கையில் ஒரு அலுமினியத் தூக்கு தொங்கிக் கொண்டிருக்கும். அதில்தான் ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் அரிசியை வாங்கிப் போட்டுக் கொள்வார். அருணகிரிநாதரின் “முத்தைத்திரு பத்தித்திரு” பாட்டை அவர் பாடும்பொழுது கண்களை மூடிக்கொண்டு கேட்டால் T.M. சௌந்தரராஜன் பாடுவது போலவே இருக்கும். தமிழ் வார்த்தைகளை அத்தனை அழகாக அவர் உச்சரிப்பர். திரைப்படத்தில் இருந்தும் பக்திப் பாடல்களை அவர் பாடுவார். “கையில் ஒரு கிடிக்கியை” வைத்துத் தாளம் தப்பாமல் வாசித்துக்கொண்டே பாடுவார். பின்னாளில் அவரை மையமாக வைத்து “தெருப்பாடகன்” என்ற சிறுகதையை அவன் எழுதினான். அவரது பாடல்களைக் கேட்டுக் கேட்டுத்தான் திரைப்படப் பாடல்களில் அவனுக்கு ஈர்ப்பு வந்தது.


    அவனுடைய வீட்டில் வானொலிப் பெட்டி கிடையாது. அவனது வீட்டிற்கு கிழக்கில் நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் அவனது நண்பன் “ரகு”வின் வீட்டிலும் , நேர் எதிர்ப் புறத்தில் இருக்கும் மற்றொரு நண்பன் “சுரேஷ்” வீட்டிலும் பெரிய “மர்பி” ரேடியோ எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். காலையில் கர்னாடக சங்கீதமும், மாலையில் “விவித பாரதி” நிகழ்ச்சியில் திரைப்படப் பாடலும், இரவில் பத்து மணிமுதல் பதினொரு மணிவரை நல்ல கர்நாடக சங்கீதக் கச்சேரிகளும், ஞாயிறு தோறும் மாலை “வானொலி அண்ணா கூத்தபிரானின்” சிறுவர் நிகழ்ச்சியும், மாலை நாலுமணி முதல் ஐந்து மணிவரை திரைப்படப் பாடலும் வைப்பார்கள். அவன் வீட்டிற்கும் அந்தப் பாடல்கள் நன்றாகக் கேட்கும். அவன் அவனுடைய வீட்டின் வாயில் திண்ணையில் அமர்ந்தபடி அந்தப் பாடல்களைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பான். சில வேளை களில் அவன் அந்த நண்பர்களின் வீட்டிற்கே சென்று பாடல்களைக் கேட்பதுண்டு. பாடல்களில் உள்ள கவித்துவத்தைத் தானே பாடிப் பாடி ரசிப்பான். ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும் பொழுதும், பள்ளிக்குச் செல்லும் பொழுதும் நல்ல திரைப்பாடல்களை மனதிற்குள்ளே ரசித்துப் பாடியபடியே செல்வது அவனுக்குப் பழக்கம்.

    கிராமத்தில் பார்த்த நாடகங்கள்

    அவனைவிட வயதில் பெரிய நண்பர்கள் சேர்ந்து அந்த கிராமத்தில் “என்னதான் முடிவு”, மெழுகுவர்த்தி, “பங்களூரில் பிரும்மச்சாரிகள்” போன்ற நாடகங்களை நடத்தினர். “என்னதான் முடிவு” என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதி இயக்கியவர் “கண்ணன்”சார். இவர் சிறிதுகாலம் திலகர் வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். எழாபுரம் தெருவில் அரிசி அப்பளம் வியாபாரம் செய்து வந்த குத்தாலம் ஐயரின் மைத்துனர்தான் இந்தக் “கண்ணன்” என்பவர். வேடிக்கை வேடிக்கையாகப் பேசும் குணம் இவருக்கு இருந்தது. அது “என்னதான் முடிவு?” நாடகத்திலும் பிரதிபலித்தது. அதன் பிறகு மெழுகுவர்த்தி, “பெங்களூரில் பிரும்ம சாரிகள்” போன்ற நாடகங்களும் அவன் குடியிருந்த குத்துக்கல் தெருவிலேயேதான் நடந்தது. மூன்று பையன்கள் ஒரு பெண்ணைக் காதலிப்பார்கள். அந்தப் பையன்களின் அப்பவே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு விடுவார். இந்த ஒரு வரிக் கதையை நல்ல நகைச்சுவையோடு சொன்ன நாடகம் தான் “பெங்களூரில் பிரும்மச்சாரிகள்”. இந்த நாடகங்களில் சாமிநாதன், V. குருசாமி, H. குருசாமி, சங்கரமணி, பேப்பர் ராமலிங்கம், ராமலிங்கம் போன்றவர்கள் நடித்தனர். இதில் H. குருசாமி, சங்கரமணி இருவரும் பெண்வேடம் போட்டு மிகச் சிறப்பாக நடித்திருந்தது அவனுக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.

    amvs
    இந்த நாடகங்களுக்கு இசை அமைத்தவர் ” C. S. கண்ணன். இவர் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் அவர்களின் மகன். இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் இருவரில் “சங்கர்” இவருக்குச் சித்தாப்பா. இவர் பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூருக்குப் பக்கத்தில் இருக்கும் “சிந்தாமணி அக்ரஹாரம்”. சி.ஆர். சுப்புராமன் அவர்கள் இசையமைத்த கடேசிப் படம் தியாகராஜ பாகவதர் நடித்த “தேவதாஸ்”. அந்தப் படம் வெளியாகும் முன்பே 1952ம் வருடம் சி.ஆர்.சுப்புராமன் காலமாகிவிட்டார். அந்தப் படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பு வேலைகளை சி.ஆர். சுப்புராமனிடம் உதவியாளர்களாக வேலை செய்து வந்த எம்.எஸ். விஸ்வநாதனும், T. K. ராமமூர்த்தியும்தான் பூர்த்தி செய்த்தனர்.

    தந்தை இறந்த பின்பு சென்னையில் மூன்று வருடங்கள் இருந்த பின்பு, சி.எஸ்.கண்ணனின் தாயாரின் மூத்த சகோதரியின் கணவரும், சிங்கம்பட்டி கிராமத்தின் கணக்கையருமான “வேங்கட்ராமையரின்” அழைப்பின் பேரில் கல்லிடைக்குறிச்சிக்கு வந்து விட்டனர். சி.எஸ். கண்ணன் தேரடித்தெருவில் இருந்த சரஸ்வதி பள்ளியிலும், திலகர் வித்யாலயம் பள்ளியிலும் கல்வி கற்றிருக்கிறார்.

    “சிறுவயதில் கிரிகெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்ததால் திலகர்வித்யாலயம் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் வீ. சங்கரராமன், காசிராமன் ஆகியோர்தான் தனக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஊக்கம் கொடுத்து உயரே வர வழிகாட்டினார்கள் என்றும், அதன் பிறகு “தாழையூத்தில்” சங்கர் பாலிடெக்கினிக்கில் படிக்கும் பொழுது, இந்தியா சிமிண்ட்ஸ் கம்பெனிக்கு எதிரணியில் K.S. காசிவிஸ்வநாத ஐயரின் “கார்பைடு” கம்பெனிக்காக விளையாடி வெற்றி பெற்று அதிக “ரன்” எடுத்தவன் என்ற பெருமையும் தனக்குக் கிடைத்தது என்றும், அந்த விளையாட்டில் இந்தியா சிமிண்ட்ஸ் சார்பாக விளையாடிய கே.எஸ். ராமன் ( Geneal Manager-India cements) தான் சிறப்பாக “பௌலிங்” செய்ததோடு மட்டுமல்லாது எதிரணியில் நன்றாக விளையாடிய என்னை ரொம்பவும் பாராட்டியதாகவும் ” சி.எஸ். கண்ணன் அவனிடம் பெருமையாகத் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கல்லிடைக்குறிச்சியில் சு.ராமைய்யா, ஸ்டேட் பேங்க் ஹரிஹரன், சங்கரமணி, சாமிநாதன், சின்னப்பா, ரங்கன், சந்துரு போன்ற நண்பர்கள் சேர்ந்து ஒரு “கிரிகெட்குழு” வைத்திருந்ததாகவும், விகிரமசிங்கபுரம் “ஆர்வி”மில் அணியுடன் போட்டியிட்டு வென்றதாகவும் அவனிடம் சொன்னார். சமையல் வேலை செய்து வந்த “கைலாசம் ஐயர்” சில நாட்கள் தங்களுடன் விளையாடுவார் என்றும், அவர் பந்தை அடித்தால் அது சிக்ஸர்தான். அதனால் அவரை “சிக்ஸர் கைலாசம்” என்றுதான் அழைப்போம் ” என்றும் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஏன் என்றால் அவன் “கைலாசமையருடன்” கிட்டிப்புள் விளையாடி இருக்கிறான். பிரமாதமாக விளையாடுவார். அவர் “கிட்டிப்புள்” அடித்தால் அது யார்வீட்டு மொட்டை மாடியிலோ அல்லது தெருக்கோடியிலோதான் சென்று விழும். தெருப்பிள்ளைகளோடு நெருங்கி விளையாரும் குணம் அவருக்கு இருந்தது.

    ஒருமுறை எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நெல்லை சங்கீத சபாவின் நடந்திருக்கிறது. அப்பொழுது அந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்று கேட்ட சி.எஸ்.கண்ணனும், நன்னி சங்கரராமையரின் இளைய மகன் எஸ். சாமிநாதனும் தாங்களும் திரைப்படத்தில் பங்கு பெறவேண்டும் என்ற ஆசையில் கல்லூரிக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கட்டாமல், அந்தப் பணத்தில் சென்னைக்குச் சென்று சி.எஸ். கண்ணனின் சித்தப்பாவான இசையமைப்பாளர் “சங்கரை”ச் சந்தித்து தங்களையும் அவரது இசைக்குழுவில் சேர்த்துக் கொள்ளக் கெஞ்சி இருக்கிறார்கள். அவர் அவர்கள் இருவரையும் உடனேயே ஊருக்குத் திரும்பிச் சென்று படிப்பை முடித்துவிட்டு வரச் சொல்லி அறிவுரை கூறித் திருப்பி அனுப்பி இருக்கிறார். எப்படியாவது தாங்களும் திரைப்படங்களுக்கு இசை அமைக்கவேண்டும் என்ற ஆர்வத்தில், தங்களது திறமையைக் காட்டவே, ஊருக்குத் திரும்பியதும் சாமிநாதன், சந்துரு, சங்கரமணி போன்ற நண்பர்களுடன் சி.எஸ்.கண்ணன் “ப்ளூ பேர்டு ஆர்கெஸ்ட்ரா” என்ற மெல்லிசைக் குழுவை ஏற்படுத்தியுள்ளார். அந்த மெல்லிசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை அவன் பலமுறை கேட்டிருக்கிறான். அந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை, சி.எஸ். கண்ணன் வீட்டில் வைத்து நடக்கும். அப்பொழுது அவர்கள் வைத்தியப்பபுரம் தெருவில் குடி இருந்தனர். அவனது நண்பன் சங்கரன் (ரகுவின் அண்ணன்) அந்தக் குழுவில் வயலின் வாசிப்பான். ஒத்திகையைப் பார்க்க அவனை சங்கரன் அழைத்துக் கொண்டு போனான். “நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே” என்ற பாட்டுக்கு ஒத்திகை நடந்தது. சி.எஸ். கண்ணன் சங்கரிடம் ,”இந்த இடத்தில் “தாரார” என்று அழுத்தமாக வயலின் வாசிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொடுத்தார். அந்தப் பாடல் முழுவதும் கேட்ட பொழுது அவனுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. “பாவை பாவைதான் ஆசை ஆசைதான்” என்ற சுசீலா பாடலுக்கு இடையில் வருகின்ற “பாங்கோஸ்” வாத்தியத்தின் லயம் “சந்துரு” வாசிப்பில் பிரமாதமாக இருந்ததை அவன் நன்றாக அனுபவித்தான். சந்துரு தாள வாத்தியங்கள் வாசிப்பதில் “கை”தேர்ந்தவர். கந்தப்பபுரம் தெரு லக்ஷ்மணனின் அண்ணா அனந்தராமனும், பாவா சங்கரன் மாமாவின் மகன் “கோவை ராமகிருஷ்ணனனும்” T.M.S. குரலுக்கு மிகப் பொருத்தமானவர்களாக இருந்தனர். “கல்லிடை ரமேஷ்” என்ற பெயரில் சாமிநாதன் எஸ்.பி.பி., பி.பி.எஸ். பாடல்களைப் பாடுவார். மாடு கறக்கும் மூக்காண்டியின் சகோதரி சுசீலா பாடல்களை பாடவும் அவன் கேட்டிருக்கிறான். ஒரு திறந்த சத்துரமான பெட்டியின் ஓரத்தில் ஒரு பெரிய கம்பைக் கட்டி, அதிலிருந்து ஒரு கயிற்றை கீழ்முகமாக இறக்கி அந்தப் பெட்டியின் வாய்ப்பகுதியில் கட்டி இருப்பார்கள். அந்தக் கயிற்றின் நடுப்பகுதியை தனது வலது கையால் சங்கரமணி இழுத்து இழுத்து விடும் பொழுது “தொம் ..தொம்..” என்று மெல்லிய குரல் வரும். அது ரசிக்கும் படியாகவே இருக்கும். அந்த வாத்தியத்தின் அமைப்பு அவனுக்கு வேடிக்கையாக இருக்கும். அதை சங்கரமணி ரசித்து வாசிப்பார். இதை அவனுக்கு நண்பன் பிரபுவும் அவனோடு பகிர்ந்து கொண்டான். “அக்காடின், ஆர்மோனியம்” என்று அந்த குழுவினர் கலக்கத்தான் செய்தனர். டைட்டில் பாடலாக “நாளாம் நாளாம் திருநாளாம்” பாடலையும், கச்சேரிக்கு இடையில் “பூமாலையில் ஓர் மல்லிகை” பாடலையும் வாத்தியத்தை மாத்திரம் வைத்து அற்புதமாக இசைப்பார்கள். அப்பொழுதெல்லாம் அவர்களுக்கிருந்த சில வாத்தியங்களை வைத்துக் கொண்டே அசுர சாதனைகளை சி.எஸ்.கண்ணன் குழுவினர் செய்தது “முயற்சி திருவினையாகும்” என்பதற்கான விளக்கமாகவே அவன் புரிந்து கொண்டான்.

    ams

    திருமணத்திற்குப் பிறகு “கண்ணன் லதா” குழுவினர் என்று மெல்லிசை நிகழ்சிகளை நிறைய ஊர்களுக்குச் சென்று செய்து வந்தனர். சி.எஸ். கண்ணனின் மனைவி “லதா” அருமையாகப் பாடுவார். சுசீலாவின் குரல் அப்படியே இருக்கும். திரைப்படங்களுக்கும் சி.எஸ்.கண்ணன் இசையமத்திருக்கிறார். வெளிநாடுகளுக்கும் தனது குழுவினருடன் சென்று பல இசை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார். கண்ணன், லதா தம்பதியருக்கு “ரஷாந்த் அரவிந்த்” என்ற மகன் இருக்கிறார். அவரும் நல்ல இசை ஞானம் உள்ளவர். வீணைக்கலைஞர். திரைப்படங்களுக்கும், சின்னத்திரைத் தொடர்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

    சி.எஸ்.கண்ணன்-லதா இசைக்கலைஞர்கள் தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் “மார்ஸ் வின்” (Maar’s Win – School for Music) என்ற பெயரில் ஒரு “இசைப் பள்ளி”யை நடத்தி வருகின்றனர். பதினைந்து வருடங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக நடந்துவருகின்ற இந்த இசைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வாய்பாட்டு மற்றும் இசைக்கருவிகளை வாசிப்பதற்கும் கற்றுத்தருகின்றார்கள்.

    மிகச் சிறந்த இசைமேதை சி.ஆர்.சுப்புராமன் தனது நாற்பத்தொன்றாவது வயதிலேயே இறைவன் திருவடியை அடைந்தாலும் அவரது சந்ததியர்கள் மூலமாகத் தொடர்ந்து தனது “இசைப் பயணத்தை”த் தொடர்ந்து கொண்டேதான் இருப்பார். அவனோடு சேர்ந்து நீங்களும் கேட்டு இன்புற்றுக் கொண்டுதான் இருப்பீர்கள்.
    “பாட்டினைப்போல் ஆச்சர்யம் பாரின்மிசை இல்லையடி” என்ற மஹாகவி பாரதியாரின் வாக்கு சத்தியம் அல்லவா.

    18.06.2015 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • தற்கொலை!

    -கவிஜி

    நீளப் புரியாமை
    நிறமாறிய வானவில்லில்
    தொடுவானமாய்ச் சிதறிய
    பின்னோக்கிய சிந்தனைக்
    கூடுகளின் கற்குவியல்
    பயங்களாய்
    கூடு விட்டுக் குருவியான
    இலக்கியச் சந்தையில்
    தீ சுட்ட ஒற்றை விரலை
    மருதாணி சிவக்கடிக்க,
    சிந்திய வெண்பனி
    மழைத் தேசத் தாவலாய்
    தன்னிலை மறக்க…
    உச்சி மலைப் பாட்டை
    காற்றொன்று தேடுவதாய்த்
    தலை விரித்த கவிதையாய்
    உடல் வளைத்த ஆடையில்
    மிச்சமென  ஒரு
    நிர்வாணம்
    இலை இணுங்கிய
    சிறு துளிகளில்
    ஓ வெனக் கதறியது அருவி…
    அது தீ சுட்ட புகை
    என்ற மாற்றுக்
    கருத்தில்
    என் தற்கொலை!

     

    Share
  • காலம் (10)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x1501111

    ஒருபாட்டுக் கேட்டேன் உளம்மகிழ்ந்தேன் ; இன்னும்
    ஒருபாட்டுக் கேட்டேன் உடலே ஒருதளர்வாய்ப்
    போனது ! இந்தப் புரளும் மனந்தானே
    போகமாம் வைக்கோல் பொதி. (91) 31.03.2015

    அனைவரும் வேண்டும் ; அகம்மலர வேண்டும் !
    நினைவிலே நன்றிதான் நின்று பனைபோல
    பல்லாண்டு காணவேண்டும் ; பற்றினை நீக்கவும்
    கல்மனங் கண்டு கட. (92) 01.04.2015

    திராவிட ஆரிய தீண்டத் தகாத
    சராசரிச் சண்டையைத் தாண்டி , நிராதர
    வானவரின் வாழ்வு வளம்பெற எண்ணினால்
    வானம் வசப்படும் வா. (93) 02.04.2015

    குல்மோகர், சில்வண்டு, கொல்சிரிப்பு , புல்வெளிகள்,
    மல்லிப்பூ , பல்லக்கு , மல்வேட்டி , வில்வித்தை ,
    மல்லாரி , கல்யாணி , வல்லூறு , எல்லாமே
    சொல்லுக்குள் வில்லடிக்கும் சொல். (94) 03.04.2015

    பஞ்சாக மேகம் பறந்து திரியுது ;
    குஞ்சாக ஆனை முகனாகக் கொஞ்சம்
    தெரியுது ; மாயை திரிந்தேதான் தோன்றும் !
    புரிந்தாலே சொர்க்க புரி. (95) 04.04.2015

    உண்பதுவும் தூங்குவதும் ஒவ்வொரு நாளுமே
    கண்ணெனவே கொண்டவர்க்குக் காலனை எண்ணிப்
    பயமிருக்கும் ; தர்மத்தின் பாதையிலே போனால்
    பயமிருக்கும் காலனுக்கே பார். (96) 05.04.2015

    வாதமும் செய்திடார் ; மௌனியாய்க் கூடத்தில்
    ஏதொரு பந்தமும் இன்றியே வீதியில்
    காதுகள் வைத்திருப்பார் ; கண்ணே இவர்களே
    சாதுபோல் தோன்றும் சதி. (97) 06.04.2015

    பள்ளிக்குச் செல்லும் பருவம் கிராமத்தில்
    அள்ளிய பாடம் அனந்தமே ; வெள்ளை
    உடைக்குள் கருப்பான உள்ளமும் கண்டேன்
    எடைக்கெடை எல்லா(ம்) இருக்கு. (98) 07.04.2015

    காரியமாய்ப் பேசியும் , காரியம் தீர்ந்ததும்
    ஓரிடமாய்ப் பார்த்து ஒதுங்கியே வேறிடம்
    சேரத் துடிப்பதுவும் , சேர்ந்து விலகுவதும்
    காரிய வாதி கலை. (99) 08.04.2015

    எனக்காம் உரைகல் எனதுசெயல் என்றே
    உனக்குத் தெரிய உரைக்க மனமில்லை !
    என்னை அறிய எளிய வழியாக
    உன்னை அறிந்து உயர். (100) 09.04.2015

    Share
  • ரமலான் நோன்பின் மகிமை!

    -பா.ராஜசேகர்

    நரகத்தின்
    வாசலைத் தாளிடு
    ரஹ்மத்தின்
    வாசலைத் திறந்திடு !

    இஸ்லாத்தின்
    தத்துவம் மேன்மையே
    இறைவன்
    அருளியது உண்மையே!

    உண்ணாமை
    மட்டும் நோன்பல்ல
    ஐம்புலனை
    அடக்கினால் தீங்கல்ல!

    பசித்திரு
    பிறர்பசியறி நீகொடு
    வலியறி
    மனமிரங்கு உதவிடு !

    நாவடக்கு
    புறம்பேசும் பழிவிடு
    செவிமடு
    தீயவைகளை நீவிடு!

    இச்சைகளை
    நீ தவிர்
    நிச்சயமில்லா
    இவ்வுலகம் நீ உணர் !

    ஆன்மிகம்
    தழைக்கவும்
    மனிதம்
    செழிக்கவும்
    மனிதா…
    துளியேனும்
    இறைவணங்கு !

    ரமலான்
    வாழ்த்துக்கள் நண்பர்களே !

     

    Share
  • தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே …

    —  கவிஞர் காவிரிமைந்தன்.

     

    தங்கத் தோணியிலேதங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே …

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றில் மைல் கற்களாய் அமைந்த திரைப்படங்கள் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகியவையாகும். மேலும் இவ்விரண்டு திரைப்படங்களையும் தானே இயக்கிய பெருமையும் எம்.ஜி.ஆருக்கு உண்டு. 1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70 எனும் கண்காட்சியை முழுக்க முழுக்க தமிழ் மக்கள் காண வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பியதால், இப்படத்தின் திரைக்கதையோட்டம் ஜப்பான் நோக்கித் திரும்பியது.

    எம்.ஜி.ஆர் அவர்களின் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கே உண்டு. அவ்வரிசையில் உலகம் சுற்றும் வாலிபன் பாடல்கள் உலகப் புகழ் பெற்றவை. இத்திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னரை ஒப்பந்தம் செய்தபோது எம்.ஜி.ஆர். அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார். திரைப்படத்தில் மொத்தம் பத்துப் பாடல்கள், அனைத்தும் முத்துப் பாடல்கள் எனலாம். கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், புலவர் வேதா ஆகிய கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் இன்றும் மின்னுகின்றன. இப்பாடல்கள் பதிவான பின் எம்.ஜி.ஆர். அவர்கள் மெல்லிசை மன்னரை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாராம். மெச்சிப் புகழ்ந்தாராம்.

    அப்பாடல்களில் ஒன்று இதோ, கவிஞர் வாலி அவர்களின் வசந்த வரிகளில் தமிழ் வார்த்தை விளையாட்டு நடக்கிறது பாருங்கள்.

    மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
    கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
    மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
    இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ 

    பத்மஸ்ரீ கே.ஜி.யேசுதாஸ் பி. சுசீலா குரல்களில் இழைந்து வரும் இசைத் தென்றல் இது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அபூர்வ ராகம் இது. காட்சியமைப்பும் காண வெகு கச்சிதமாய் மக்கள் திலகத்தின் திரைச் சரித்திரத்தில் மற்றுமொரு மாணிக்க மகுடம். கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இளமை நந்தவனம் நர்த்தனமிடுகிறது, அதற்கு மெல்லிசை மன்னரின் இசை கவரி வீசி விடுகிறது! வாழ்க்கையின் அன்றாடப் பரபரப்பிலிருந்து சற்று விலகி இளைப்பாற இப்பாடல் அழைக்கிறது…

    தங்கத் தோணியிலே
    தவழும் பெண்ணழகே
    நீ கனவுக் கன்னிகையோ
    இல்லை காதல் தேவதையோ
    தங்கத் தோணியிலே
    தவழும் பெண்ணழகே
    நீ கனவுக் கன்னிகையோ
    இல்லை காதல் தேவதையோ

    வண்ணப் பாவை
    கன்னித் தேனை
    கன்னம் என்னும்கிண்ணம்
    கொண்டு உண்ணச் சொன்னாளோ
    தங்கத் தோணியிலே
    தவழும் பொன்னழகே
    நான் கனவில் வந்தவளோ
    உன் மனதில் நின்றவளோ

    மின்னல் கோலம் கண்ணில்
    போட யார் சொன்னதோ

    கோலம் போடும் நீலக் கண்ணில்
    யார் நின்றதோ

    மென்மை கொஞ்சும் பெண்மை
    என்ன பாடல் பெறாததோ

    இன்னும் கொஞ்சம் சொல்லச்சொல்ல
    காதல் உண்டானதோ
    (தங்கத் தோணியிலே)

    அல்லி பூவைக் கிள்ளிப்
    பார்க்க நாள் என்னவோ

    கிள்ளும்போதே கன்னிப்
    போகும் பூ அல்லவோ

    அஞ்சும் கெஞ்சும் ஆசை
    நெஞ்சம் நாணம் விடாததோ

    அச்சம் வெட்கம் விட்டுப்
    போனால் தானே வராததோ
    (தங்கத் தோணியிலே)

    காணொளி: https://www.youtube.com/watch?v=I-qRFUpdqME

     

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 3

    சி. ஜெயபாரதன்.

    kahlil-gibran

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    காதலியுடன் வாழ்வு

     

    “காதல் அன்பு தன்னைத் தவிர வேறெதையும் தருவதில்லை. தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. காதல் அன்பு எதனையும் தனக்கென பற்றிக் கொள்வதில்லை. அதை எவரும் கைப்பற்ற முடிவதில்லை. ஏனெனில் காதல் அன்புக்கு காதல் அன்பே போதுமானது.”
    – கலில் கிப்ரான்

    “ஒவ்வொருவருக்கும் உன் உணவைப் பங்கிட்டுக் கொடு. ஆனால் அதே உண்டியிலிருந்து எடுத்து நீ உண்ணாதே. ஆடிப் பாடிக் கூடிக் களித்திரு. ஆனால் உங்களில் ஒவ்வொருவரும், வீணைக் கருவியின் நாண்கள் தனித்தனியாய் ஒலித்து ஒருங்கே கீத இசையை எழுப்புவதுபோல் தனித்த உரிமையோடு வாழ்ந்திருக்கட்டும்.”
    – கலில் கிப்ரான்

    காதலியுடன் வாழ்வு
    (வசந்த காலம்)
    ____________________________________________

    என் கண்மணியே ! வா
    இந்தக் குன்றின் மேல்
    இருவரும் உலாவி வருவோம் !
    பனிப் பொழிவுகள்
    நீராய் ஓடும் !
    உறக்கத்தி லிருந்து வாழ்க்கை
    உயிர்த் தெழுந்து
    மேடு பள்ளங்களில்
    திரிந்து வருகிறது !
    வசந்த காலம்
    வைத்த தடங்களைப்
    பின்பற்றுவோம்
    தூரத் தளங்களில் !
    பசுமைக் குளிர்
    வயல்களுக்கு மேல்
    உயர்ந்த
    மலை உச்சிக்கு நாம்
    ஏறுவோம்
    மகத்தான உள்ளெழுச்சி நம்மை
    இழுத்துக் கொள்ள !

    விடிந்துள்ள வசந்த காலம்
    குளிர் காலத்து
    அங்கியை
    மடித்து வைத்து
    எலுமிச்சை மரங்கள் மேல்
    படிய விட்டது !
    பார்ப்பதற்கு
    இரவில் அலங்கரித்த
    பெருநகர்த்
    திருமணப் பந்தலில் உள்ள
    மணப்பெண் போல்
    தெரிகிறது !

    ஒருவரை ஒருவர்
    தழுவிக் கொள்ளும்
    காதல் ஜோடிகள் போல்
    தெரிகின்றன
    திராட்சைக் கொடிகள் !
    பாறைகளுக் கிடையில்
    நடனமிடும்
    சிற்றோடைகள் களிப்புடன்
    பாடிக் கொண்டு !
    மொட்டுகளில் சட்டென
    முகிழ்த் தெழும் பூக்கள்
    இயற்கை இதயத்தில்
    களஞ்சியாய்ச் செழித்த
    கடல் வயிற்றி லிருந்து வரும்
    நுரை போல் !

    என் கண்மணியே ! வா
    மல்லிகைக் கிண்ணத்தில்
    கடந்த காலத்தில் குளிர்ந்த
    கண்ணீர்த் துளிகளைக்
    குடித்துத்
    தேற்றுவோம் நம் ஆத்மாவை !
    பறவைகள் பொழிந்திடும்
    கீதங்களைக் கேட்டு
    உலாவித் திரிவோம்
    உவகை யோடு
    மதி மயக்கம் உண்டாக்கும்
    தென்றலில் !

    ஊதாப் பூக்கள்
    ஒளிந்திருக்கும்
    அந்தப் பாறை அருகிலே நாம்
    அமர்ந்தி ருப்போம் !
    அவை கொடுக்குக் கொள்ளும்
    இனிய முத்தங்களை
    பரிமாறிக் கொள்வோம்
    நாமிருவரும் !

     

    காதலியுடன் வாழ்வு
    (வேனிற் காலம்)
    ____________________________________________

    வயல் வழியே செல்வோம்
    வா என் கண்மணி !
    வருகிறது
    அறுவடைக் காலம் !
    பரிதியின் விழிகள்
    பக்குவ மாக்கும் பயிர்களை !
    காசினி விளைத்திடும்
    கனிகளைக்
    கண்காணித்து வருவோம்
    இதயத்தின் ஆழத்தில்
    விதைக்கும்
    காதல் வித்துக்கள்
    விளைவிக்கும்
    களிப்புத் தானி யங்களை
    ஊட்டி வளர்ப்பது
    அந்த ஆன்மா !

    முடிவில்லாக் கொடைகள்
    அளிப்பது இயற்கை !
    இதயத்தை ஆட்கொண்டு
    வாழ்வு செழிப்படைந்து
    மூழ்கிப் போவதால்
    நிரம்பட்டும் நமது
    சேமிப்புக் களங்சியம்
    இயற்கையின் விளைவுப்
    பயிர்களால் !
    பூக்களால் நமது படுக்கை
    ஆக்கப் படட்டும் !
    ஆகாயம் நமது போர்வை யாய்
    அமையட்டும் !
    மெல்லிய வைக்கோல்
    தலையணை மேல்
    சாயட்டும்
    நம்மிரு தலைகளும் !
    உடல் உழைப்பில் சற்று
    ஓய்வெடுத்து
    ஓடை முணு முணுப்பைக்
    கேட்போம் நாம் !

     

    காதலியுடன் வாழ்வு
    (இலையுதிர் காலம்)
    ____________________________________________

    வா நாமிருவரும் போவோம்
    முந்திரிப் பழத் தோப்புக்கு
    திராட் சையைச்
    பறித்துச் சாரெடுக்க !
    பழரசத்தை விட்டு வைப்போம்
    பழைய குடங்களில் !
    காரணம் :
    யுக யுகமாய்ச்
    சேர்ந்திடும் அறிவை
    ஆன்மா
    முடிவில்லா நீடிப்புப்
    படகுகளில்
    வடித்துள்ளதால் !

    மீளுவோம் நமது குடிலுக்கு !
    வீழ்ந்திட வைக்கும்
    மஞ்சல் இலைகளை
    வீசிடும் காற்று !
    வேனிற் காலத் துக்கு
    இலைகள் மூடும்
    உதிரும் பூக்கள்
    இரங்கற் பா பாடும் !
    எனக்கென்றும் உரியவளே !
    வீட்டுக்குள் வா என் கண்மணி !
    வேனிற் தளம் நோக்கிப்
    புள்ளினம்
    புரிந்திடும் பயணம் !
    குளிர்ந்து போன
    அறுவடை வயல்கள்
    அழுது வாடும் தனிமையில் !
    கண்ணீர் வரண்டு போகும்
    மல்லிகைச் செடிக்கும்
    முல்லைக் கொடிக்கும் !

    திரும்பிச் செல்வோம் நாம்
    பாடிக் களைத்த அந்த
    ஓடைக்கு !
    பொங்கி எழுந்த ஊற்றுகள்
    அடங்கி விட்டன
    அழுது தீர்த்த தீவிரத்தில் !
    பழங் குன்றுகள்
    கழற்றிச் சேமிக்கும் தமது
    பன்னிற உடுப்புகளை
    எச்சரிக்கை யோடு !
    வா என் கண்மணி !
    இயற்கை ஓய்ந்து போனது
    நியாயமே !
    மகிழ்ச்சிக்கு விடைகூறி
    வழியனுப்பி வைக்கும் இயற்கை
    மௌன மாக
    மனத் திருப்தி யோடு
    சோக கீதம் இசைத்து !

    காதலியுடன் வாழ்வு
    (குளிர்  காலம்)
    ____________________________________________

    குளிர் காலம் விரைவில் வரும் …..

    Share