Blog

  • உன்னையறிந்தால் … (10)

    நிர்மலா ராகவன்

    சமர்த்தா, கர்வியா?

    உனையறிந்தால்1 (1)

    கேள்வி: நான் ரொம்ப சமத்து, இல்லே?’ என்று என் மூன்று வயதுக் குழந்தை அடிக்கடி கேட்கிறான். ஏன் இப்படி? கர்வமா?

    விளக்கம்: கர்வத்தால் இல்லை. தன் நல்ல குணத்தைத் தானே உறுதிப் படுத்திக்கொள்ளும் முயற்சி அது.

    குழந்தைகளின் இயல்பு நம்மிலிருந்து வேறுபாடானது. அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை நம் கோணத்திலிருந்து பார்க்க முடியாது. வீட்டிலிருக்கும் பெரியவர்கள் குழந்தையைப் புகழ்வது அவசியம். `நீ எவ்வளவு சமர்த்து!’ என்று அடிக்கடி கூறி வளர்த்தால், அவனும் அதை அப்படியே ஏற்று, பிறர் மெச்சும்படி நடக்க முயல்கிறான்.

    சிலர் அந்த முயற்சியைத் தவறாகப் புரிந்துகொண்டு, `உனக்கு ரொம்பத்தான் தலைக்கனம்!’ என்று திட்டுவார்கள். தனக்கு ஏதோ வேண்டாத குணம் இருக்கிறது என்று குழந்தையின் மனம் நொந்துவிடும்.

    பெரியவர்களுக்கே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படித்தெரியும்? பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அதனால்தான், குழந்தைகளை அசடு, முட்டாள், சோம்பேறி, கறுப்பு என்று பலவாறாகப் பழிக்கக்கூடாது. அவர்கள் முகம் வாடினால், என்னமோ வேடிக்கை என்று நினைத்துச் சிரிப்பவர்கள் இங்கிதம் தெரியாதவர்கள். நாம் `வேடிக்கை’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் பிறரை வருந்தச் செய்தால், அதில் என்ன வேடிக்கை இருக்கிறது?

    குழந்தைகளைப் புகழ எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!

    குளித்துவிட்டு வரும்போது, `பளபளன்னு இருக்கியே!’ சாப்பிட்டு முடித்தவுடன், `தொப்பை அழகா, குண்டா இருக்கே!’ அழுது அமர்க்களம் செய்து, கடையில் முடியை வெட்டிக்கொண்டு வந்த சிறுவனிடம், `யாரிது! அழகா இருக்கு, அடையாளமே தெரியலியே!’ — இப்படி வயதுக்கேற்றபடி பாராட்டினால், குழந்தையும் மகிழும், அடுத்த தடவை நம் வேலையும் சுலபமாகும்.

    சிறு வயதில் பாராட்டுக்கும், புகழுக்கும் ஏங்கியவர்கள் காலம் பூராவும் அதைப் பெறத் துடிப்பார்கள்.

    `பெரிய பதவியிலிருக்கும் பெண்களிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்களைக் கொஞ்சம் புகழ்ந்தால் போதும். நாம் நினைத்ததைச் சாதிக்கலாம்!’ என்று ஆண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

    அதாவது, ஒருவர் செய்ய யோசிக்கும் காரியத்தைச் புகழ்ச்சியால் செய்ய வைப்பது பிறரது சூழ்ச்சி.
    இது தெரிந்தாலும், இன்னொரு முறை ஏமாறாது இருக்க முடியாது இவர்களால். பாவம்!

    நாம் ஒரு கதை சொன்னால், மறுநாளும் அதே கதையைச் சொல்லச் சொல்வார்கள் குழந்தைகள். அப்படிச் செய்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என்ற அர்த்தமில்லை. இம்முறையால் ஞாபகசக்தி நன்கு வளரும் என்று இயற்கையாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

    துணிச்சல் பெற ஒரு வழியை எங்கள் ஆசிரியையிடமிருந்து கற்றேன்.

    கதை: அப்போது எனக்குப் பதினான்கு வயது . எங்கள் ஆசிரியை கண்டிப்புக்குப் பேர்போனவர். அவர் சிரித்தே யாரும் பார்த்ததில்லை.

    `எனக்கு இந்தக் கணக்கு வரவில்லை, மிஸ்!’ என்று எங்கள் வகுப்பில் யாராவது சொன்னால், `நான் வரமாட்டேன்னு கணக்கு ஒன்கிட்ட வந்து சொல்லிற்றா?’ என்று ஏசுவார்.

    நான் ஒரு முறை துணிந்து, `எனக்கு இந்தக் கணக்கைப் போட வரவில்லை,’ என்று சொல்லிவிட்டேன்.

    எனக்குப் புத்தி மட்டு என்று ஒத்துக்கொள்ள அவமானமாக இருந்தாலும், எனக்குச் சவாலாக அமைந்த ஒன்றை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது.

    வகுப்பிலிருந்த அனைவரும் பயத்துடன் என்னையே பார்த்தார்கள். எல்லாவற்றிற்குமே திட்டும் ஆசிரியை! இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்?

    ஆசிரியை முகத்தில் சிறு புன்னகை. என்னை அவரருகே அழைத்து, தனியாகச் சொல்லிக்கொடுத்தார். அதன்பின், மற்ற மாணவிகளைப்போல, நான் அந்த ஆசிரியையைக் கண்டு அஞ்சவில்லை. பல முறை கணக்கில் சந்தேகம் கேட்க அவரை நாடினேன். நான் கற்று வந்து, சகமாணவிகளுக்குப் போதித்தேன். வேறு யாருக்கும் அவரருகே செல்லத் துணிவிருக்கவில்லை!

    அன்று கற்ற பாடம், தவறு செய்வதோ, ஒரு விஷயம் புரியாமலிருப்பதோ அப்படி ஒன்றும் அவமானத்துக்குரியது அல்ல என்பதே. தோல்வியால் மனம் துவளாமல், எந்த வயதிலும் புதிய காரியங்களில் ஈடுபட அது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. `எனக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுங்களேன்!’ என்று கேட்பதில் என்ன வெட்கம்?

    சிறு குழந்தைகளுக்கு இயற்கையாகவே இது தெரியும். தூங்கப் போகுமுன் ஒரு கதை சொன்னால், தினமும் அதேதான் வேண்டும் என்பார்கள். திரும்பத் திரும்ப ஒரே கதையைக் கேட்டாலோ, அல்லது படித்தாலோ ஞாபக சக்தி அதிகரிக்குமாம். இது புரியாமல், `மந்தம்!’ என்று அவர்களைப் பழித்தால், யாருக்கு புத்தி மட்டு?

    சில சமயம், மாணவர்கள் கேட்கும் ஏதாவது கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குப் பதில் தெரியாமல் இருக்கலாம். `என்னைச் சோதிக்கப் பார்க்கிறாயா?’ என்றுதான் பலரும் ஆத்திரப்படுவார்கள். ஆனால், `எனக்குத் தெரியாது. படித்துத் தெரிந்துகொண்டு, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன்,’ என்று சொல்லிப் பாருங்கள். (அடிக்கடி அல்ல!) அவர்கள் கணிப்பில் உங்களுடைய மதிப்பு உயர்ந்து போகும்.

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(77)

    -செண்பக ஜெகதீசன்

    பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
    மக்கட் பதடி யெனல். (திருக்குறள்-196: பயனில சொல்லாமை)

    புதுக் கவிதையில்…

    வயலில் மதிப்பு
    விளையும் நெல்மணிக்குத்தான்,
    வையத்தில் பாராட்டு
    பயனள்ள பேச்சுக்குத்தான்

    பயனிலாச்சொல் பேசுபவனும்
    பாராட்டுபவனும்
    பதர்தான் மக்களில்…!

    குறும்பாவில்…

    பயனுள பேசுபவர்கள்
    மக்கள் வயல் நெல்மணிகள்,
    பயனில பேசுவோர் பதர்கள்…!

    மரபுக் கவிதையில்…

    வயலில் வளரும் பயிரினிலே
    –விளையும் நல்ல நெல்மணிகள்
    உயர்வு பெறுமே நல்மணியாய்
    –உலகோர் பலரும் உளம்மகிழ,
    பயிரில் விளையும் நெல்மணிபோல்
    –பயனுள வார்த்தை பேசிடுவாய்,
    பயனிலாச் சொற்கள் பேசுவோரே
    பாரதன் மக்களில் பதராமே…!

    லிமரைக்கூ…

    பயனுள பேசுவோர் மக்கள்வயல் நெல்,
    பயனிலாச் சொற்கள் பேசுவோரை
    பாரிலுள்ள மக்களில் பதரென்றே சொல்…!

    கிராமிய பாணியில்…

    நெல்லுநெல்லு நல்லநெல்லு
    நஞ்சநெலத்து நல்லநெல்லு,
    சொல்லுசொல்லு நல்லசொல்லு
    நாலுவருக்கு நல்லசொல்லு,
    இதச் சொல்லுறவன்
    நெல்லுநெல்லு நல்லநெல்லு
    நஞ்சநெலத்து நல்லநெல்லு..

    ஒருத்தருக்கும் ஒதவாத
    சொல்லுசொல்லு கெட்டசொல்லு,
    இதச் சொல்லுறவன்
    நெல்லுயில்ல நெல்லுயில்ல
    பதருபதரு,
    ஒருத்தருக்கும் ஒதவாத
    ஒண்ணுமில்லா பதருபதரு..

    நெல்லுநெல்லு நல்லநெல்லு
    நஞ்சநெலத்து நல்லநெல்லு…!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 171

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    மேலான தன் கணவன் கூறியதைப் பின்பற்றி,
    அக்குரங்கு இறந்த பின்னும் கூட
    அதன் தீய பிறவி ஒழிய வேண்டும் எனக்கருதி  Donating gold
    தானம் செய்கையில் அதற்கான ஒரு பங்கை
    ஒதுக்கி வந்தாள் அப்பெண்.

    மத்தியதேசத்தில் வாரணாசி என்ற ஊரில்
    உத்தர கௌத்தர் என்பவர்க்கு மகனாய்
    மீண்டும் பிறந்தது அக்குரங்கு.

    அப்புதல்வன்
    அழகு, அறிவு, செல்வம் இவற்றில்
    சிறந்து விளங்கினான்.
    வள்ளல்தன்மையுடன் தானங்கள்
    பலவும் செய்து வாழ்ந்தவன்
    தன் முப்பத்தியிரண்டாம் வயதில் இறந்து
    தேவர் வடிவம்தனை அடைந்தான்.

    பெரிய செல்வத்தைப் பெற்ற பயன் யாவும்
    தன்னைப் பாதுகாத்துத் தானம் செய்து வளர்த்த
    சாயலன் மனைவியினால்தான் என்பதைக்
    கருத்தில் கொண்டு,
    அந்த நன்றிக்கடனை
    உலகத்தோருக்கு அறிவுறுத்த
    ஒரு கையைக் குரங்கின் கையாகக் கொண்டு
    இவ்வானவன் பிறந்தான்’ என்று
    சாரணர் கூறினார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 175- 191
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    aatamaa3கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் கவிஞர் பிறைசூடன் இயற்றிய பாடல் இது.

    வெற்றிச் சித்திரமான இப்படத்தில் இந்தக் காட்சி வில்லன்கள் இருவரின் கூடலை கொண்டாட்டம் போட காட்டுக்குள்ளே நடக்கும் திருவிழா. களிநடனம் புரிய மங்கையாக ரம்யா கிருஷ்ணன். இசையும் பாடலும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட, திரையிலும் வரவேற்பு மிக அதிகமாகவே இருந்தது.

    ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெள்ளித்திரை கண்ட வெற்றி சித்திரம். பிரம்மண்டாமான பொருட்செலவில் அடர்ந்த காடுகளின் இடையே, சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். காதால் கேட்ட கதைதான், செய்தித் தாள்களில் வாசித்தகதைதான் என்றாலும் தக்க பாத்திரங்களை பொருத்தி அக்கதையை முழுமையாக நம் கண்களுக்கு விருந்தாக்கி படைக்கப்பட்ட இப்படம் விஜயகாந்தின் 100வது படம் என்பதும், இப்படத்திற்குப் பிறகு அவர் கேப்டன் என்றே அழைக்கப்படுவதும் கூடுதல் தகவல்களாகும்.

    மறைந்த பின்னணிப்பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் குரலில் இனிமையும், புதுமையும், நிறைய துள்ளலும், ஆட்டமும் முழுவதும் நிரம்ப அசத்தலான நடனம்புரிந்த ரம்யா கிருஷ்ணனைப் பாராட்டத்தான் வேண்டும். பொதுவாக திரைப்படங்களில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சியில் நடனமாடும் மங்கையின் குறி வில்லனை நோக்கித்தான், அந்த வகையில் இந்தப்பாடல் நம்மைக் கவர்ந்த ஒன்று என்பது நிச்சயம்.

     

    ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
    ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
    வெகு நாளாக உன்னைத்தான்
    எண்ணித்தான் கன்னி நான்
    ஆடுறேன் வலை போடுறேன்
    பாடுறேன் பதில் தேடுறேன்

    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
    (ஆட்டமா..)

    ஏறாத மேடை இங்கே இளமானும் ஏறி
    ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி
    யாருக்கும் புரியாத புதிர் பாட்டு பாடி
    அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி
    ராக்கோழி சத்தம் கேட்குது – என் ராசாவே…
    பூ வாசம் வட்டம் போடுது
    வீராப்பு கண்ணில் பட்டது – நீ என்னை தேட
    மாராப்பு மெல்ல தொட்டது
    பொன் மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ
    புண்ணான நெஞ்சில் இன்று காயங்கள் ஆறாதோ
    கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
    (ஆட்டமா..)

    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..
    (ஆட்டமா..)

    யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு
    நீ வந்து சுகமாக்கி தர வேணும் முடிச்சு
    நான் உன்னை காணாமல் நூலாக இளைச்சு
    நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு
    கண்ணாலே கட்டி வைக்கவா – அட மாமா என்
    கையாலே பொட்டு வைக்கவா
    பூ பந்தல் போட சொல்லவா – அட மேளங்கள்
    தாளங்கள் சொல்லி தட்டவா
    பூ மஞ்சம் மெல்ல போட்டு போர்க்களம் காண்போமா
    போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா
    கன்னியின் எண்ணம் முடிவது திண்ணம் வா ஹாஹா..
    (ஆட்டமா..)

    ஏ ரம்பா சம்பா சம்பாதான்
    அம்மா பொண்ணு ரம்பாதான்
    சம்பா ரம்பா சம்பாதான்
    ரம்பா சம்பா ரம்பாதான் ஹோய்..

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    படம்: கேப்டன் பிரபாகரன்
    வரிகள்: பிறைசூடன்
    இசை: இளையராஜா
    பாடியவர்: ஸ்வர்ணலதா

    காணொளி: https://www.youtube.com/watch?v=vsTbNwqEDb0

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

     

    Share
  • பாரினில் பாரதப் பெண்கள் (3)

    சுலோசனா

    பாரினில் பாரதம்

    பெண்களின் தந்தை பெரியார் – பகுத்தறிவு பகலவன் – தந்தை பெரியார்

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

    யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.

    எலும்பில்லாத புழு பூச்சிகளினால் வெப்பத்தை தாங்க முடியாது.சுருண்டு விடும். அது போன்றுதான் மனித நேயம் எனும் அன்பிலாத முதுகெலும்பில்லாத மனிதர்களை அறக்கடவுள் தண்டிக்கிறார். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். சகமனிதர்களை சாதி போன்ற பேதங்களை உண்டாக்கி, தாழ்த்தி அவமானப்படுத்தியதோடு அல்லாமல் தன்னில் பாதியான பெண்ணை சாதி மத பேதமின்றி அடிமைப்படுத்தி வைத்தது பழகிய யானையைக் கொண்டே புதிய யானைகளைப் பழக்கப்படுத்துவது போல மாமியார் நாத்தனார் போன்ற உறவு முறைகளைக் கொண்ட பெண்ணே பெண்ணிற்கு எதிரியானாள்.

    மகன் சகோதரன் என்ற உறவில் உள்ள ஆணுக்கு கொடுமையை கடுமையாகப் போதித்தாள். சில நோய்களால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும்.பல மருந்துகளைக் கொடுத்துப் பார்த்துவிட்டு பலனின்றி பிறகு கடுமையான மருந்தை பிரயோகிப்பார்.அது போல் சமூகத்திற்கு கிடைத்த அரு மருந்து பெரியார்.தன் மனதில் உருவாகும் உஷ்ணமான உண்மைகளை அதன் வெப்பத்தோடு அப்படியே வெளியிட்டார். நாகரீகம் கருதி அதற்கு மேல் பூச்செல்லாம் பூசவில்லை. உச்சி வேளை சூரியனாக உதித்து வந்த கருத்துக்கள் பல சமூக விரோதிகளை உருவாக்கியது.

    பெண்ணடிமை செய்யும் ஆதிக்க மனப்பான்மையாளர்களை அதட்டியது. மூட பழக்கவழக்கங்களினால் பாதிப்பால் நடுங்கிக் கொண்டிருந்த பெண் இனத்திற்கு அந்த சிந்தனை கதிர்கள் இதமான வெப்பமளித்து நடுக்கத்தை விரட்டியது. இவர் சிந்தனையின் சிகரமாகத் திகழ்ந்தவர். அவர் கொண்ட கொள்கைகளின் பூரண செயல் வடிவமாகத் திகழ்ந்தார். சில சிறந்த சிந்தனையாளர்களுக்கு இந்த வாய்ப்பு சீர்திருத்தங்களை செம்மையாக செயல் படுத்தினர். தன் குடும்பத்தோடு தேச சேவையில் ஈடுபட்டவர். கள்ளுக்கடை போராட்டத்தின் போது தன் சகோதரியோடும் துணைவி நாகம்மையோடும் அந்த போர்க்களத்தில் ஈடுபட்ட தியாக மகாத்மா காந்திக்கும் கூட அந்த பெண்கள் சேவை தெரிந்திருந்தது. அவர்கள் குறித்து அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

    பெண்களின் சரீர உடல் அழகைப் புகழ்ந்து பேசி அவர்களை மூளை சலவை செய்யும் ஆண்களை கடுமையாகக் கண்டித்திருக்கின்றார். அழகு பதுமைகள் தங்களின் சொத்துக்களுக்கு தங்களுடைய வாரிசுகளை பெற்றுத்தரும் இயந்திரங்களாக உபயோகிக்கும் ஆண் திகழ்வதாகக் கூறுகின்றார். தங்களின் சுக அனுபவத்திற்காகவே பெண்கள் படைக்கப்பட்டிருப்பதாக ஆண் என்பவன் கருதுகின்றான்.அலங்காரப் பதுமைகளாக பாதுகாக்கின்றான். சொந்த உபயோகத்திற்கு மட்டுமே என்று வைத்து கல்யாணம் என்ற பெயரில் அழகிய மாளிகைகளில் அடக்கி வைத்திருக்கின்றனர் என்று செல்வந்தர்களைப் பற்றி கிளியை தங்கக் கூண்டில் வைத்து பால் பழம் தருவது போல.பணம் படைத்தவர்களின் வாழ்வினில் தான் ஆணாகப் பிறந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்.,என்று இருமாப்புடன் வாயினால் கூறாமல் செயல் மூலம் செய்து காட்டுவது போல் வாழ்கின்றான், என்கிறார்.

    கலைத்திறமை வாய்ந்த பெண்கள் தங்கள் கலைத்திறனால் மட்டும் இன்றி பெண் என்ற முறையிலும் ஆணை மகிழ்விக்க வேண்டிய ஒரு சூழ்நிலை பெண் சமூகத்தில் ஒரு நோய் போல் தோன்றியது. ஜமீன்தாரர்கள் மிட்டா, மிராசுதார்கள் , பணம் படைத்த தனவான்கள் கொண்ட ஒரு கூட்டம் இப்படிப்பட்ட ஒரு பெண்கள் கூட்டத்தை உருவாக்கியது. இந்த மகிழ்விக்கும் கூட்டத்தில் ஈடுபாட்டுடன் ஈடுபட்டவர்களும் இருந்தனர். சிறிதும் விருப்பம் இன்றி தாய் தந்தை தமக்கை இவர்களின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு இந்த வாழ்வில் தள்ளப்பட்டவர்களும் இருந்தனர். இதிலும் கூட சில பெண்கள் ஒரே நபருடன் வாழ்ந்தனர். இந்த இடத்தில்தான் தந்தை பெரியார் பெண்களுக்கு கூறிய அறிவுரைகள் என்றும் நினைத்துப் பார்க்கத்தக்கவை.

    பெண்கள் எளிமையுடன் வாழப் பழக வேண்டும். ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையானால் பணமுள்ள ஆணுக்கு பலியாக வேண்டிவரும் எனும் உண்மையை ஒளிக்காமல் ஒசையுடன் கூறுகிறார். உடல் அழகை வெளிச்சம் போட்டு காட்டும் அலங்கோல அலங்காரம் மற்ற ஆண்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அலங்காரத்தில் பெண்களின் கவனம் செல்லக்கூடாது. உன் முகம் நிலவு போல் உன் ஸ்பரிசம் மலர் போல் மிருதுவானது. மருண்டு விழிக்கும் உன் விழிகள் மான் போல அஞ்சி அஞ்சி அல்லது சஞ்சி சஞ்சி நடக்கும் உன் நடை அன்னம் போல என்றெல்லாம் ஒரு ஆணால் புகழப் பட வேண்டும் என்பதற்காகத்தானே.மு.வரதராசனாரின் கள்ளோ காவியமோ எனும் நாவலில் வரும் கதா நாயகி மங்கை,வீட்டு வேலை செய்து கொண்டே கல்லூரியிலும் படிப்பவள் அவளை அந்த வீட்டுத் தலைவரின் மகன் காதலிக்கின்றான்.தன்னிடம் காதலை வெளிப்படுத்தி மனம் புரிய வேண்டுபவரிடம் மங்கை சொல்கின்றாள்

    ஐயா நீங்கள் எதோ உணர்வில் உந்தப்பட்டு என்னிடம் கேட்கின்றீர்கள். நான் கல்லூரியில் படித்தாலும் என் தாய்க்கு உதவியாக என் படிப்பிற்காகவும் உழைத்து உழைத்து உரமேறிவிட்ட தன் மென்மையை இழந்துவிட்ட என் கைகளைத் தொட்டுப் பாருங்கள்.என்னிடம் நீங்கள் கொண்ட காதல் சில வருடங்கள் கூட நீடிக்காது. என்னிடம் நீங்கள் மென்மையும் நளினத்தையும் நாசூக்கையும் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் உங்களுக்கேற்ற மனைவியை தேர்த்தெடுங்கள் என்று கூறி முதலில் மறுக்கிறாள்.

    பெரியார் ,சுயமரியாதையைஇழ்ந்து பின் சுகப்படும் சோம்பேறியாக இராதீர்கள், நீண்ட கூந்தலை குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். பட்டு போன்ற விலையுயர்ந்த புடவைகளை அணிந்து கொண்டு அலையாதீர்கள். உடுத்த சுலபமான உழைக்க வசதியான ஆடைகளையே அணியப்பழகுங்கள்.

    பெற்றோரை சார்ந்து வாழவேண்டும் என்ற மனப்போக்கை விடுங்கள்.ஆணுக்கு நிகராக உடலையும் உள்ளத்தையும் பலப்படுத்துங்கள்.

    இவ்வாறெல்லாம் உரமூட்டி பேசுபவர் பால்ய விவாகம் இளம் விதவைகளும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு நீதி கேட்கும்பொழுது தந்தை பெரியார் பிறக்கின்றார்.

    ஆனின் சுய நலத்தின் உச்ச கட்டமே கற்பு என்ற நிலை.கற்பு என்ற ஒரு ஒழுக்க நிலை ஆண் பெண் என்ற உறவில் மட்டும் அன்றி சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் இருக்க வேண்டும். என ஒழுக்கத்தில் ஒரு புதிய பார்வையை கொண்டு வருகின்றார்.

    தந்தை பெரியார் காட்டும் பாதையில் தயக்கமின்றி நடைபோடும் பெண் மக்கள் (மகள்கள்) எவ்வளவு பெயர்கள் என்று தெரியவரும்.தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள்.தந்தை பெரியார் சொற்களும் மந்திரம் போன்ற சக்தி வாய்ந்த சொற்களாகும்.அந்த சக்தியின் ஒளியை தாங்க முடியாமல் கண்கள் கூசி கண்களை தாழ்த்திக் கொண்டவர்கள் தான் அதிகம் என்பதே உண்மை.

    ஒரு நாடு முழுவதற்குமான சமுதாய ன்நெறிகள் சமய நெறிமுறைகள் – நெறிமுறைகள் அற்றவைகள் பண்பட்ட பழக்கவழக்கங்கள் பண்பாடற்ற புண்பட்ட பழக்கவழக்கங்கள் அனைத்துமே கலந்தே இருந்து வருகின்றன. இந்த நெறிமுறைகள் பழக்க வழக்கங்கள் அனைத்திற்குமே தங்களால் இயன்றவரை அவைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை பின் பற்றும் மக்களே எண்ணிக்கையில் இருந்து வருகின்றனர்.

    அடுத்து சிந்திக்கும் திறன் உள்ளவர்கள்

    “எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்பொருள் காண்பரிது.

    என்ற தமிழ் திருமறையின் குறளின் பொருள் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.இவர்கள் தங்களின் அறிவின் பாற்பட்ட மனதிற்கு ஏற்ற வகையில் இருப்பவைகளை மட்டுமே பின்பற்றுவர்.தங்களின் அறிவிற்க்கும் மனச்சான்றிற்கும் ஏற்பில்லாவற்றை விட்டுவிடுவார்கள் .முதலில் குறிக்கபட்டவர்களை விடவும் இவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே. மூடப்பழக்கங்களைபின்பற்றுபவர்கள் அறிந்தோ அறியாமலோதெரிந்தோதெரியாமலோ பலர் மனதை புண்படுத்தி விடுகின்றனர்.இந்த வேதனைக்கு ஆளானோர்கள,பெரும்பாலும் பெண்களே. இதற்கு பலி ஆனவர்கள் ஆகிக் கொண்டிருப்போர்கள்,ஆகப்போகின்றவர்கள் யார் என்றால் 10 சதவீதம் ஆண்கள் மீதி 90 சதவீதம் பெண்களே.ஐந்து மாபெரும் வீரர்களானா ஐவரை கணவர்களாகத் கொண்ட பாஞ்சாலி .ஞானியரும் சாண்றோர்களும் வீரர்களும் கூடியுள்ள சபையில் ஒரு ஆணால் துகில் உரியப்பட்டாள்.இப்படி ஒரு சம்பவம் மஹாபாரதத்தில் வருகிறது.மன்னன் ஜனகனின் மகள் ஸ்ரீராமனின் ப்ரிய பத்தினியான சீதா பிராட்டி கணவனோடும் காவலாக கானகம் வந்த இளைய பெருமாள் இலக்குவனோடும் கானகம் சென்றது ஒரு முறை. இரண்டாவது முறை-முறையற்ற முறையில் தான் கானகத்தில் தனித்து விடப்படபோகின்றோம் என்பதை அறியாமல் விடப்படுகின்றனர்.தெய்வமே அவதாரம் எடுத்து வந்தது என்றபோதே மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.இப்படி இருக்கும் போது கீழ்சாதிகள் என அழைக்கப்பட்ட பற்பல சாதிகளில் பிறந்தப்பெண்களின் அவல நிலையைப் படிக்கும் பொழுதேப்மனம் பதறுகிறது.பார்த்தாலே பாவம் தொட்டாலே தீட்டு என்று மட்டும் இல்லாமல் நடைமுறை பழக்கவழக்கங்களில். எத்தனையோ வேறுபாடுகள்.கீழ் சாதியை சேர்ந்த பெண்கள் சிறுமியானாலும் சரி பருவப் பெண்னாலும் சரி முதிர்ந்த மூத்த மூதாட்டியானாலும் சரி ஒரு சரியில்லாதா நடைமுறைக் கொடுமை . மார்பை மறைத்து மேலாடை அணிதல் கூடாது. இடுப்பில் மட்டும் துணி.இந்த நிலையில் அண்ணிய ஆடவர் முன் கூட அரை நிர்வாணம். கீழ்சாதி தகப்பனுக்கு பிறந்து கீழ்சாதி கணவனோடு வாழ்ந்து கீழ்சாதி குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு பெண்———-ஆணால் அவள் சற்றேனும் அழகு படைத்தவளானால் ,மிக உயர்ந்த சாதி என அழைக்கப்படும் சாதிகளில் பிறந்த காமுகனின் கண்ணில் பட்டுவிட்டால் அப்பொழுது அந்த கீழ்சாதி இளம் பெண்கள் காமுகனான கயவனான் அந்த கண்ணியவானுக்கு அந்த சமயத்திற்கு மட்டும் தீண்டதக்கவர்களாகி விடுவார்கள் இதில் அந்த பெண்களின் விருப்ப்பத்தை எல்லாம் பற்றி கவலையே படமாட்டார்கள். கீழ்சாதி ஆனாலும் அவளுக்கு அந்த உயர் சாதிக்காரன் அந்நியன் தானே .எவனோ ஒரு அந்நியனால் உடலும் மனமும் புண்பட்டு எந்த அளவிற்கு எத்தனை பெண்கள் துடித்தனரோ.

    உயர்ந்த இனத்தைச் சேர்ந்த அத்தனை ஆண்களில் சிலரோ அல்லது பலரோ தீண்டாமை இனத்தை சேர்ந்த இளம் பெண்களை தீண்டி நாங்கள் இன்புற்று அவர்களை துன்புறுத்தியது என்பதுசரித்திரங்களில் சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இன்றும் கூட சில இடங்களில் இந்த தாழ்ந்த சாதியினர் கொத்தடிமைகளாகப் பட்டு ஆண் பெண் சிறுவர் அடங்களாக அநியாய கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த செய்திகள்.தொலைகாட்த்சியிலும் வருகின்றன.

    ஒரு பெண் கணவனை இழ்ந்துவிட்டால்,பூவைவிடவும் மென்மையான மனம் படைத்த பூவைக்கு தெய்வப்பிரசாதமான பூ பிரசாதமாக கிடைப்பதில்லை.மறுக்கப்படுகிறது.இந்த அநாகரிமான நடவடிக்கைகளை செயல்படுத்துபவர்கள் பெரும்பாலும் பெண்களே.தன் கையே ,தன் கண்களைக் குத்துவது போல் பெண்ணெ பெண்ணுக்கு அவமரியாதை செய்து வருகின்றார்கள்.காலங்காலமாக வந்த பழக்கங்களுக்கு கீழ்படிகின்றோம்.

    மனைவியை இழந்த ஆண்களுக்கு இந்த மரியாதைகள் எல்லாம் கிடையாது. அவன் மீண்டும் புதுமாப்பிள்ளையாக வேறு ஆகி விடுகிறான்.இதற்கு சமூகத்தீன் அங்கீகாரமும் முழு அளவில் கிடைத்துவிடுகிறது.

    எந்த விதமான துன்பம் என்றாலும்,காலப் போக்கில் அதன் தீவிரம் குறைந்து இயல்பான வாழ்விற்கு திரும்புவது என்பது மனித இயல்பாக இருக்கிறது.அந்த வகையில் பார்த்தாலும்கூட பெண் அப்படி எல்லாம் இயல்பாக நடந்து கொண்டுவிட முடியாது. பெரிய பெரிய நகரங்களில் நன்கு படித்து வேலை பார்க்கும் பெண்கள் ஒரு வேளை இந்த அவமதிப்பில் இருந்தும் கொடுமைகளில் இருந்தும் தப்பலாமோ என்னவோ ,சிறிய நகரங்களில் கிராமங்களில் வசிப்போருக்கு இன்றும் எல்லாவற்றையும் சந்திக்கவேண்டிதான் உள்ளது.இதிலும் இன்னும் ஒரு அறிவீனம் என்ன வென்றால் நியானமான காரணத்தினால் நீண்ட காலம் தாம்பத்திய வாழ்வில் இருந்து விடுபட்டு அல்லது விடுவிக்கப்பட்டு தாய் வீட்டில் வாழ்ந்து வரு பெண்களுக்கு ம் அந்த விதி விடுவதில்லை. 7 ஆண்டுகள் பிரிந்திருந்தால் இருவருக்குள்ளும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தால் அந்த பந்தம் தானாகவே முறிந்துவிடும்.இந்த விதியே மனுதர்மத்திலும் கூறப்பட்டுள்ளது.மனிதர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு ப்ந்தம் சூழ்நிலை முதலிய பல தவிர்க்கமுடியாத பல காரணங்களால்மனிதர்களால் உண்டாக்கப்பட்ட சட்டங்களாலும் மனி தர்மத்தினாலும் மனித நேயத்தாலும் விடுவிக்கப்படுகின்றன.இந்நிலை சிலசமயம் அரிதாக ஆண்களுக்கும் கூட ஏற்படுகின்றது.இந்த உண்மையை மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.ஆனால் நடைமுறையில் மிக மிக அரிது.எங்கோ ஆயிரத்தில் ஒன்று லஷ்ஷத்தில் ஒன்றுதான்,ஆணுக்கு அசம்பாவிதம் என்பது.அடுத்து விதவைகள் மறுமனம்,சும்மர் 50 வருடங்களுக்கு முன்னரும் சமீபத்திலும் கூட அடேயப்பா அவளுக்கென்ன கொழுப்பு?இன்னொரு கல்யாணம்,பொம்பலைக்கு கூட இன்னொரு ஆம்பளை கேக்குது பாரப்பா,என கேவலமான பொருளில் எள்ளி நகையாடுகின்றனர்.

    பெரும்பாலும் தனியாகவாழ இயலாத உலகம் இதில் ஒருவருக்கொருவர்துனையாக கைபிடித்துக்கொண்டு– ஒருவருக்கு இடரும் பொழுது ஒருவர் பாதுகாப்பாக கை கொடுக்க இதற்கெல்லாம் தானே துணை என்பது.

    “கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே

    இங்கே வேரில் பழுத்த பலா”

    என பாடிய பாரதி தாசன் வார்த்தை எவ்வளவு பொருள் பதித்தவை.இந்த விஷயத்திலும் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தே காட்டினார்.உலகறிந்த விவரம் இது.தனக்குத் தொண்டாற்றி வந்த மணியம்மை எனும் கணவனை இழந்த பெண்ணை தனக்கு த் துணையாகக் கொண்டு அவருக்கு பகுத்தறிவும் அறிவுக் கண்களாகவும் திகழ்கின்றார்.ஒரு வகையில் பார்த்தால் கணவனின் துனையை இழந்த பெண்கள் அனைவருக்குமே மறுபடியும் திருமணம் தான் தீர்வு என்பது முடிவான முடிவல்ல. அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஒரு உதவி சமூகத்தில் அந்தஸ்து எந்த விதத்திலும் குறைவு படாமல் பார்த்துக் கொள்வது நியாயத்தின் அடிபடையில் அவரவர் வாழ விரும்பியபடி வாழலாம் என்பதற்கான சூழல் வேண்டும்.பொருத்தமான மனமக்களாக அமைந்து இன்பமாக வாழ்ந்தவர்கள் அனேகமாக இன்னோரு ஆடவரோடு இல்வாழ்வில் ஈடுபடவிரும்புவதில்லை .விரும்பினால் மற்றொரு வாழ்வை அமைத்துக் கொள்வது அது அவரவர் சொந்த விருப்பம்.குடிகார கொடுமையான பெண்பித்தனான நடவடிக்கை உடைய ஆண்கள் இந்த வித பழக்கங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் கூட கடூரமான வார்த்தைகளை மனைவி மேல் அக்னி மழை போல் கொட்டும் ஆடவர்களும் உள்ளனர்.இதற்கு சில சமயம் பெண்களே உடந்தை .இந்த வகையான வார்த்தைகளால் கணவனை வாட்டும் பெண்களகூட உள்ளனர்.எங்கோஒரிருவர்கள் படாதபாடுபட்டு ஒரு வழியாக கனவன் என்ற கொடுமை யில் தப்பி அப்பா ப்ட்டதே போதும் ,இன்னொரு கல்யாணமா ? கனவில் கூட வேண்டாம் என்று முடிவெடுத்து

    தெனாலிராமன் வளர்த்த சூடு கண்ட பூனை போல் வாழ பயந்து விலகி ஒடுபவர்களும் இருப்பது சகஜமே .தேசிய மகாகவி பாரதியார் அவர்கள் தெளிவாகவும் தீரத்துடனும் பேசுகின்றார். பொதுவாகவே விதவை விவாகம் என்பது சான்றோர் நூறு சதவீதம் ஆமோதிக்கப்படவில்லை .என்பதே வருந்ததக்க உண்மை. இல் வாழ்வை ஏதொ ஒருவகையில் இழந்து விட்ட பெண்கள்,தியாக குணம் கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் சேவை செய்ய முன் வர வேண்டும். என்றே எதிர்பார்த்தனர்.

    ஆனால் பெண்களுக்காக குரல் கொடுத்த பாரதியார். தீர்க்கமாக தீர்மானமாகவீர முழக்கமிட்டார். என்றே சொல்லவேண்டும்.ம்காகவி பாரதியார் அவர்கள் “நான் ஸ்வாமி விவேகானந்தரையும் மகாத்மா காந்தி அவர்களையும் உயிரினும் மேலாக நேசிக்கின்றேன்.

    ஆனால் விதவைகளின் மறுமனம் பற்றிய கருத்துக்களில் இருந்து வேறுபடுகின்றேன்.என தீரத்துடன்தன் கருத்தை வெளியிடுகிறார்.(இந்த தகவல் சொல்லின் செல்வர் சுகி. சிவம் அவர்களின் சொற்பொழிவில்

    கிடத்ததாகும்.)

    மஹாகவி பாரதியார் ஒரு மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரிநிவேதிதா தேவியை சந்தித்து பெண்களை ஆண்கள் நடத்துவதைப் பற்றியும் நடத்தவேண்டிய முறைப்பற்றியும் கருத்துக்களை கேட்டறிந்து அது பற்றி சிந்தித்து பிறகே அந்த கருத்துக்களின் உண்மையை மனசாட்சியுடைய உந்துதலன் அறிந்து தெளிந்த பிறகே வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றும் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றும் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடி என தன்னுடைய மகிழ்வான சுதந்திர வெளிப்பாட்டை கும்மியடித்து கொண்டாடுகிறார் என்கிறார்.

    இதில் இருந்து நாம் உணர்வது வஞ்சனையின்றி ,பகையின்றி சூதின்றி வையக மாந்தரெல்லாம் வாழ நேர்மையே உருவானவளாக ,உண்மையே உரைப்பவளாக ஞானத்தின் செல்வியாக கலைமகளின் மகளாக வருகின்றாள் பாரதியின் புதுமைப்பெண்.சுத்தானந்த பாரதி கண்ட புதுமைப்பெண்
    தங்கதட்டான் உதவி யின்றி ,சாய மினுக்கின்றி ,ஒப்பனைகள் ஏதுமின்றி சுதந்திரமே வடிவாக , ஞானமே அழகாக ஒப்பில்லாக்கன்னிஅவள் உலக வலம் வ்ருகின்றாள்.இந்தியப் பெண்கள் அனைவரிடமுமே இந்த குண நலன் களையே இன்றும் எதிர் நோக்கி ஏங்கி நிற்கின்றனர்.சமூக நல ஆர்வலரான சான்றோர்கள் அப்படியின்றி இன்றுள்ள ஆபாசமான சுவரொட்டிகள் அருவருப்பான காட்சிகள் கொண்ட அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனும் நாற்குணங்கள் நாற்படையாக நடந்தால் —-

    நீச்சல் தெரிந்தவர்க்கு கூட ஆற்றின் போக்கோடு நீச்சல் அடிப்பது சுலபமாக இருக்கலாம். ஆனால் நீச்சல் தெரிந்தவருமே கூட எதிர் நீச்சல் அடிப்பது சிரமமே .இதில் கல்லை கட்டி ஆற்றில் தள்ளினால் சிலர் அப்படியும் அமைந்தும் அதயும் சமாளித்து எதிர் கரைஏறிய சிலர் அந்தந்த காலகட்டத்தின் சூழ் நிலைகளுக்கு ஏற்ப காலத்தின் கட்டாயத்தின் பிடியில் சிக்கித் திணரி சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற ஆயுதங்களோடுபோருக்கு வரும் உறவினர்களின் தாக்குதல்களுக்கு நடுவே, நியாயமான விருப்பங்களுடன் நேர்மையான நடத்தையும் கூடவே இவர்களைப் படைத்த இறைவன் தானே என்னையும் படைத்தான் என்ற திட நம்பிக்கைதுனைவர போர்புரிகின்றனர்.முட்புதர்களுக்கு நடுவே வெற்றுக் கால்களோடு நடந்து ஒற்றையடி பாதை ஒன்று உருவாக அதில் பாதுகை அணிந்த பல பாதங்கள் நடந்து நடந்துபாதை சிறிது சீர்பட்டது,அகலப்பட்டது.அப் பாதையில் இன்று வண்டிகள் செல்ல தொடங்கி விட்டன,

    முட்புதரில் வெற்றுக்காலோடு நடக்கத் தொடங்கியவர் டாக்டர் சுப்பு லட்சுமி ரெட்டி .இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவம் படிப்பதற்காக புதுக்கோட்டை மன்னர் வரை சென்று அழுது தொழுது போராடி அனுமதி பெற்றார்.ஆண்களோடு சமமாக அமர்ந்து படிக்க அனுமதியின்றி திரையிட்டு வாசலுக்கு அருகில் அமர்ந்த முதல் பெண்மணி மருத்துவரான டாக்டர் முத்து லஷ்மி ரெட்டி.

    தொடரும்

    Share
  • மரணத்தை முன்வைத்து….

    எஸ் வி வேணுகோபாலன்

    நண்பர் ஒருவர் மரணச் செய்தி ஒன்றைச் சொல்வதற்காக தொலைபேசியில் அழைத்தார். ‘இன்னார் போய்விட்டார்’ என்றார். தொடர்ந்து, “நீங்கள் எப்போது போவீர்கள்” என்று அவர் கேட்கவும், “தெரியலியே, வேளை வந்தால் போகவேண்டியதுதான்!” என்றேன். “அய்யய்யோ, என்ன தோழர், என்னென்னவோ பேசுகிறீர்கள். இறந்தவரின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த எப்போது போவீர்கள் என்றுதானே கேட்டேன்” என்றார். நான் சிரித்துக் கொண்டேன்.

    மரணம் என்றாலே அலற வேண்டியதில்லை. அது யாரது இசைவையும், தயார் நிலையையும், முன்மொழிதல் -வழிமொழிதல்களையும், ஏற்புரையையும் கோருவதில்லை. அது நிகழ்கிறது. மரணத்தின் சுவாரசிய ரகசியம், மீதம் இருப்போரை வாழுங்கள் என்று அது கேட்டுக் கொள்வது. அந்தக் குரல்தான் நமக்குச் சரிவர கேட்பதில்லை. ஒவ்வொரு மரணத்திலும் அது மறு ஒலிபரப்பு செய்யப்படுவதை கவனித்தால் மரணம் அல்ல, வாழ்க்கையும் கசந்துபோகாத சூட்சுமம் பிடிபட்டுவிடும் வரம் காத்திருக்கிறது.

    விழுப்புரம் புத்தகக் கண்காட்சி விழா ஒன்றில் பங்கேற்க சில ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்த அனுபவம் மறக்க முடியாதது. டி வி எஸ் 50 வாகனத்தில் எளிமையாக வந்து இறங்கினார் நகராட்சி தலைவர் திரு ஜனகராஜ். என்னை இன்னார் என்று அறிமுகப் படுத்திக் கொள்ளுமுன்பாகவே, “சார் கொஞ்சம் என் கூட வாங்க, உங்களுக்கு ஒண்ணு காட்டணும்” என்று அழைத்துப் போனார்.

    டிசம்பர் மாதத்தின் எதிர்பாராத மழை, வீதிகளின் சேற்றைக் குழைத்து வைத்திருந்தது. உடைத்துக் கொண்டிருந்த சாலையில் ஆட்கள் பணியில் இருந்தனர். அவர்களை விரைந்து நிவாரணப் பணிகளை முடிக்குமாறு கண்டிப்பான குரல் கொடுத்துக் கொண்டே என்னை ஒரு புதிய கட்டிடத்தின் முன் கொண்டு நிறுத்தினார். பெரிய காம்பவுண்ட் சுவர். உள்ளே மரங்கள். செடி கொடிகள். மனத்தைக் கவரும் சூழல் அது. மூடி இருந்த கதவுகளின் அருகே பெரிய பலகையில், நவீன தகன மேடை என்று எழுதி இருந்தது. வேறொன்றுமில்லை, சுடுகாட்டிற்கு அழைத்து வந்திருந்தார் நகரத் தந்தை.

    “இடம் அருமையாக இருக்கிறதே, இதில் எரியக் கொடுத்து வைத்த முதல் பாக்கியசாலி யாரோ?” என்று அவரைக் கேட்டேன்.

    “இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை சார்” என்ற அவரிடம், “நான் வெளியூர்க்காரன், எனக்கு வாய்ப்பு இருக்காது” என்றேன்.

    “என்ன சார், இப்படி சொல்றீங்க!” என்றவரிடம், “ஆமாம், நீங்கள் மட்டும் முன்ன பின்ன தெரியாத ஆளை சுடுகாட்டுக்குக் கூட்டி வந்து காண்பிக்கலாம், நான் சொல்லக் கூடாதா?” என்றேன். வஞ்சனையில்லாமல் சிரித்தார்.

    மரணம் ஒரு சுவாரசியமான பேசுபொருளாக இருக்கிறது. மரணத்தைப் பார்ப்பது வேறு. சிந்திப்பது முற்றிலும் வேறு.

    மரணத்தை முன்வைத்து எழுதப்படும் கவிதைகள், கதைகள் தத்துவ தரிசனமாக நகர்கின்றன. ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்று தொடங்கும் திருக்குறளை விடவா?

    மரண இல்லத்தில் நிலவும் பேரமைதி, வெளியே பேசப்படும் செய்திகள், சமாதான மொழி, அடுத்தடுத்து நகரும் காரியங்கள் எல்லாம் வாழ்க்கையின் இயல்பை நோக்கி விரைகின்றன. ஒரு மரண வேளையில் எத்தனையோ முந்தைய மரணங்கள் நினைவுக்கு வருகின்றன – ஒரு விபத்தின்போது பேசப்படும் வேறு விபத்துக்களைப் போல.

    ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு விதத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது. சில நிலைகுலைய வைக்கின்றன. சில குற்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றன. சில விடுதலையடைந்த உயிரின் அவஸ்தையை வழியனுப்ப வைக்கின்றன. சில மௌனத்தில் ஆழ்த்திவிடுகின்றன. மரணம் நிகழ்ந்த வீட்டுக்குச் செல்வது சிலருக்கு இயல்பாகவும், சிலருக்கு நிர்ப்பந்தமாகவும், சிலருக்கு தேடலாகவும் அமைகிறது.

    மரணத்தின்முன் மௌனமாக நிற்கும்போது மனிதர்கள் கொஞ்சம் சுயமிழக்க இயற்கை வாய்ப்பு நல்குகிறது. சொந்த கிரீடங்களின் பளுவிலிருந்து விடுவிக்க முயல்கிறது. ஏற்கெனவே இறந்த மனிதர்களிடமும், இப்போது நேர்ந்திருக்கும் புதிய மரணத்திடமும் சொல்ல விடுபட்டவற்றை, கேட்கத் தவறியவற்றை, பேசாது தவிர்த்தவற்றை, வழங்க மறுத்த கருணையை, பெற இயலாதுபோன மன்னிப்பை, பகிர வெறுத்த புன்னகையை, இன்ன பிறவற்றை அந்த நொடியில் சரி செய்துகொள்ளப் பார்க்கும் மனங்கள் அப்போதாவது இலேசாகும் தருணத்தை வரமாக்கிக் கொள்கின்றன. அப்போதும் தங்களது மேலாதிக்க மனநிலையில் மிதப்பவர்களை மரணங்கள் பெருந்தன்மையுடன் மன்னிக்கவே செய்கின்றன. இறந்த மனிதரின் வங்கிக் கணக்குகளை முடித்துக் கொடுக்கும் சமூகம், அவரோடு இருந்த வம்பு வழக்குகளை முடித்துக் கொள்ள இசைவதில்லை என்பது மரணத்தைக் கடந்தும் தொடரும் துயரம்.

    ஒரு நகைச்சுவை துணுக்கு மின்னஞ்சலில் வந்திருந்தது. வெளியூர்ப் பயணம் செல்லும் கணவன், இப்படி ஒரு மின்னஞ்சலை மனைவிக்கு அனுப்பி வைக்கிறான்: “கண்ணே, நான் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டேன். நீ நம்பமாட்டாய். எதிர்பாராத வசதிகள் எல்லாம் இங்கே இருக்கின்றன. அருமையான தங்குமிடம். இணையதள இணைப்பு. குளிர்பதன அறை. அருமையான வேலையாட்கள். உனக்கும்கூட இங்கே ஏற்பாடு செய்துவிட்டேன். நீ ஏன் உடனே புறப்பட்டு என்னிடம் வந்து சேரக் கூடாது?”

    அவருடைய அவசர தட்டலில், இந்த மெயில் வேறொரு பெண்மணிக்குச் சென்றுவிடுகிறது. அவரோ அதைத் திறந்து படித்து அதிர்ந்துபோய், மகனே இங்கே வாயேன், அய்யோ என்ன இது…என்று அலறுகிறார். மகனும் அதைப் படித்ததும் அதிர்ச்சி அடைகிறார். அப்புறம் தெளிகிறார்.

    அந்தப் பெண்மணியின் கணவர் அன்று காலைதான் இறந்துவிட்டிருந்தார். அவரைப் புதைத்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கும் நிலையில் மேற்படி மின்னஞ்சல் அவரிடமிருந்துதான் வந்திருக்கிறது என்று நினைத்துவிட்டார். இப்போது அந்த மெயிலை நீங்களே இன்னொருமுறை படித்துப் பாருங்கள், அதிர்ச்சிக்கான காரணம் தெரியும்.

    ஆனந்த் (பிரபல மலையாள எழுத்தாளர் சச்சிதானந்தன்) அவர்களது ‘மரண சர்டிபிகேட்’ (கேரளா சாகித்ய அகாதமி விருது பெற்றது) தனது இல்லத்தில் நேரும் மரணத்தைத் துயரத்தோடு அணுகும் பதட்டம் நிறைந்த மனிதர் ஒருவரைப் பேசுகிறது. அருமையான தமிழ் மொழிபெயர்ப்பில் பல ஆண்டுகளுக்குமுன் வாசித்த அந்தக் கதையில் ஒரே ஒரு மனிதரே அதிகம் இடம் பெறுகிறார். அவரது மொழியிலேயே கதை நகர்கிறது. அவரது வீட்டில் தற்செயலாக வந்து தங்கும் ஒருவர் மரித்துப் போய்விடுகிறார். அவரைக் குறித்த மேலதிக விவரங்கள் ஏதும் இவரிடம் கிடையாது என்று கொஞ்சம் வித்தியாசமாகத் தொடங்கும் கதை.

    உடல் நலம் குன்றியிருக்கும்போது பயன்படுத்திய ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் உபகரணங்களை திருப்பிக் கொடுக்க சம்பந்தப்பட்ட கடைக்குச் செல்கிறார் இவர். “வருந்துகிறேன் சார்..அந்த மரணம் எப்போது நேர்ந்தது?” என்று கேட்கும் கடைக்காரன் இவரை வியப்பில் ஆழ்த்துகிறான். “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்கிறார். “இந்த சாதனங்கள் ஒருமுறை கடைக்கு வெளியே சென்றால், நோயாளி மரிக்காமல் ஒருபோதும் திரும்புவதில்லை” என்கிறான் அவன்.

    தகனம் செய்யுமிடத்தில் விறகு வாங்கும்போது ரசீது தருபவன், இது மிகவும் முக்கியம். பத்திரமாக இருக்கட்டும். இல்லையெனில் மரண சான்றிதழ் கிடைக்காது என்கிறான். ஆனால் அதை கிரிமடோரியம் கிளார்க் பின்னர் பெற்றுக் கொண்டுவிடுகிறான், சான்றிதழ் ஏற்பாடு செய்ய.

    முதல்முறை பிரேதத்துடன் அச்சத்தோடு செல்லும் சுடுகாட்டுக்கு, பின்னர் சான்றிதழ் பெற திரும்பத் திரும்பச் செல்ல நேர்கிறது அவருக்கு. அச்சம் மெல்ல மெல்ல அகன்றாலும், மரணத்தின் நிழல் அவரை எதிர்ப்படும் எல்லா மனிதர்களையும் சூழ்ந்திருப்பதாகவே உணர்கிறார். சுடுகாட்டில் வேலையாளின் குடும்பம் வசிப்பதும், குழந்தைகள் அநாயசாமாக அங்கே ஓடியாடி விளையாடுவதும் அவருக்கு விசித்திரமாகப் படுகிறது. நிறைய கற்றுக் கொடுக்கிறது அந்த ஒரே ஒரு மரணம்.

    சுடுகாட்டு எழுத்தர் மாற்றலில் சென்றுவிடுகிறார். புதிய ஆள், விறகுக் கடை ரசீது எங்கே என்று இவரிடமே கேட்கிறார். சுமார் 190 பக்கங்கள் கொண்ட நாவலில் கடைசி கடைசியாக மாநகராட்சி அலுவலகத்தின் முக்கிய பொறுப்பு அதிகாரியிடம் சான்றிதழ் கையொப்பம் ஆகும் நேரத்தில் அவரெதிரே நிற்கிறார்.

    அந்த உயர் அதிகாரியோ எல்லாத் தாள்களையும் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்துவிட்டு, மன்னிக்கணும், மறைந்த அந்த மனிதரின் பிறப்புச் சான்றிதழ் நகலை நீங்கள் இணைக்கவே இல்லையே என்கிறார். இவருக்கு எரிச்சல் எடுக்கிறது.

    அந்த உயரதிகாரி சொல்கிறார்: “உங்கள் கோபம் நியாயமானது…இறந்த மனிதனுக்கு எதற்கு பிறப்பு சான்றிதழ் என்று நீங்கள் நினைப்பீர்கள்! ஓர் அடிப்படை சிக்கலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பூவுலகில் பிறக்காத ஒரு மனிதன் இங்கே மரித்தான் என்று எப்படி நான் சான்றிதழ் தர முடியும்?”

    கதை இப்படி முடிகிறது: பிறப்பின் சாட்சி வாழ்க்கை. வாழ்க்கையின் சாட்சி மரணம். மரணத்திற்குச் சாட்சியைத் தேடி அலைகிறேன்….

    நன்றி: செம்மலர் (மே, 2015)

    ***************

    Share
  • படக்கவிதைப் போட்டி 17-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் போட்டிக்கான புகைப்படத்தின் சொந்தக்காரர் திரு. ஆதித்யா நாகராஜுக்கும், இப்படத்தைப் போட்டிக்கு ஏற்றது எனத் தேர்ந்தெடுத்துத் தந்த வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை இதழின் நன்றி.

    sun

    உயர்ந்தோரெல்லாம் போற்றும் வகையில் ஞாலத்தின் இருளகற்றி ஒளிகூட்டும் ஞாயிற்றைக் காணும்போதெல்லாம் நம் உள்ளத்தில் எல்லையிலாப் பரவசம் ஏற்படுகின்றது இல்லையா? ஞாயிற்றைப் போன்றே இருளகற்றும் அருட்பணியை வேறொன்றும் செய்கின்றது. அஃது எது தெரியுமா? ’நம் அகஇருளை நீக்கி அறிவொளி கூட்டும் தன்னேரிலாத் தமிழ்தான் அது!’ என்கிறது தண்டியலங்கார மேற்கோள் செய்யுளொன்று. ஞாயிற்றை நிகர்த்த நம் தமிழைத் தாய்மொழியாய்ப் பெற்ற நாம் பேறுபெற்றோரே அல்லவா!

    ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
    ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
    மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
    தன்னே ரிலாத தமிழ். (தண்டியலங்கார மேற்கோள் செய்யுள்)

    இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைச் சுவைத்துவிடலாம் இனி!

    ***

    அலைமகளின் அழகைத் தன் கவிதையில் சொல்லோவியமாக்கியிருக்கிறார் திருமிகு. ரேவதிஸ்ரேயா.

    அலை மகளின் அழகு !
    இனிய இந்த பொன் மாலை பொழுதிலே
    அலை மகள் அசைந்து இசைந்து இன்னிசை கவி பாடி
    அலை மோதி ,விளையாடி
    தன்னை தேடி ரசிக்கவரும் ரசிகர்களை
    தனது அழகினால் மயக்கி தன்வசப்படுத்தி
    கவலைகளை நீக்கி முகத்தில் புன்னகைப்பொலிவூட்டும்
    எங்கள் கடல் அன்னையே நீ என்றும் இம் மண்ணில் வாழ்க வாழ்க !

    ***

    பிறவிப் பெருங்கடலில் பிறப்பும் இறப்பும் எவ்வாறு மாறிமாறி வருகின்றாதோ அதுபோன்றதுதான் சூரிய உதயமும் அத்தமனமும் எனும் வாழ்க்கை நியதியை நமக்கு நினைவூட்டுகின்றார் திரு. ஜெயபாரதன். 

    செந்நிறச் சினமோடு 
    கீழ்வானில்
    பொன்னிற விளக்கு எழுந்தது !
    காலையில் போட்ட விளக்கு
    அந்தி மாலையில்
    வேர்த்து
    ஓய்வு பெறும் பரிதி
    செந்நிறச் சினமோடு தான்
    அத்தமிக்கும் !
    பிறவிப் பெருங்கடலில்
    பிறப்பும் இறப்பும்
    சுழற்சி நிகழ்ச்சியே ! 
    பிரபஞ்ச நிகழ்ச்சி அனைத்தும்
    பம்பரச் சுழற்சி தான் !
    […]

    நீர்க்கோள மான நமது
    நில மடந்தைக்கு
    ஒப்பான பூமி
    வேறெங்கும் உள்ளதா வெனக்
    கூற முடியுமா ?
    […]
    கடல்நீர் வற்றாது !
    கதிர்ப் பரிதி அணையாது !
    மானிடம் தழைக்க 
    சூரிய உதயம் தவறாது !
    மரணம் மரிக்காது !
    அத்தமனம் உண்டு 
    அத்தனைப் பிறவிக்கும் !

    ***

    பெருநீராய் விரிந்திருக்கும் தன் உள்ளத்தின் விரிவை நமக்குத் திறந்துகாட்டுகிறார் திருமிகு. மணிமேகலை தன் கவிதையில்.

    விரிந்த மணல் பரப்பில்
    அலை படர்ந்த கடற்கரையில்
    தொலைதூர கதிர் ஒளியில்
    எங்கும் பரவிக் கிடக்கின்ற
    உனதன்பை வியந்து
    பெரு நீராய் விரிந்து
    கிடக்கிறது எனதுள்ளம் ..
    வா வந்து கொஞ்சம்
    அணை இட்டு தேக்கிப்போ …

    ***

    காதலனாம் ஆதவன் தந்த நீலப்புடவை அணிந்த கடற்கன்னியின் காதலைப் பேசுகிறார் திருமிகு. கிர்த்திகா.

    நீல பார்டரில்
    தங்க உடலில்
    புடவைப் பரிசு
    ஆர்ப்பரிக்கும்
    கடற்கன்னிக்கு
    ஆதிச் சூரியன்.

    புடவைக்கு
    அடங்கிடுவாளா
    மோதிப் பார்க்கிறாள்
    கரையில்..விடாமல்
    ஆதவனை அடைய..

    மோதிய வலியில்
    இரவில் அடங்கி
    பகலில் எட்டிப்
    பழுத்து கொதிப்பவனை
    நீல புடவையில்
    முடிந்து சூடாக இவள்
    குளிர்ந்தே இவளுள்
    அவன்.

    ***

    ’ஆதவனின் உறக்கத்திற்காய்க் காத்திருக்கும் நீலப்போர்வையே கடல்’ என்று கவிநயத்தோடு குறும்பா படைத்திருக்கிறார் திருமிகு. சிவகாமி.

     நீ உறங்குவதற்காகவே காத்திருக்கிறது 
    அலையெனும் நீலப் போர்வை 

    ***

    வெள்ளி நீரைத் தங்கமாக்க நினைக்கும் ஆதவனின் செப்படி வித்தையை நம்மிடம் செப்புகிறார் திரு. ஆதி வெங்கட்.

    வெள்ளியெனத் தோன்றும்
    கடல் நீரை
    தங்கமாக்க முயற்சிக்கிறதோ
    இந்தச் சூரியன்!

    ***

    இயற்கையன்னை தந்ததெல்லாம் எல்லார்க்கும் சொந்தமெனும் பொதுவுடைத் தத்துவத்தைப் பதமாய் உரைக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    கீழ்வானில் எழுந்து  குமரியிலே  மறைந்து
    பொன்மாலை பொழுதிற்  அலைகள்  அசைந்து
    நின்னை  காணுங்கால்  ஓர்  இயற்கை  அழகு 

    இயற்கை அன்னை தந்தெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா ,
    எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா !

     ***

    பொற்கதிரோன் அழகில் சொக்கி கவிபுனையாக் கவிஞரும் உளரோ? என்று கேட்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், விடியாத இருளும் விலகாத துயரும் உலகிலில்லை எனும் நன்மொழிகளோடு கவிதையை நிறைவுசெய்துள்ளார்.

    பொற்கதிர்       பரப்பி          வையம்
    பூரிக்கபகல்      தந்த         கதிரோன்
    அற்புதமாய்     வேலை     முடித்து
    அழகாய்         மறைய       துவங்குகிறான்
    […]

    தினம் உன்   வருகை      மறைவு அழகை
    இனிதாய்     காண்கிலேன்   எனில்
    இம்மண்ணில்  கவிஞர்    கள்யாரோ?
    சூரியன்        நிலவாய்     ஆகும் அங்கே
    சுடர்பரப்பி    நிலவு      காலை சூரியனாகுமோ?
    விடியாத     இருளும்   இல்லை 
    விலகாத     துயரமும்   இல்லை இது
    இறைவன்  செய்யும்     லீலை 

    ***

    ’இயற்கைக் கவிஞனொருவன் ’பார்’ திகைக்கப் பிரசுரித்திருக்கும் வானத் தீயைப் பார்!’ என்று நயமாய்க் கவி வார்த்திருக்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    எரிதணல் கக்கி  இடர்வழங்கும் சேவை
    புரிந்து இளைப்பாறும் போதுபரிதி
    விரிவானில் நின்று விழுந்த ஒளியால்
    தெரிவிக்கும் வண்ணம்  உழைப்பு!

    பொங்கும் கடல்மேல் புதுக்கவிதை யாத்து
    எங்கும் படர்த்தி மனதுக்குள்தங்கும்
    வகைசெய் இயற்கைக் கவிஞன் புவனம்
    திகைக்க பிரசுரித்தத் தீ!

    உழைத்துக் உருகும் உழைப்பாளி வாழ்வில்
    பிழைத்தோங்க சிந்தும் உதிரம்   – மழையாய்
    பொழிந்து கடல்கலக்கத் தோன்றச் சிவந்த
    விழியாமோ மாலை விசும்பு?

    ***

    ’ஆதவனின் இதயம் தொட்ட கடலன்னைக்கு நீலப்பட்டாடை கட்டியது யார்?’ என நமைப்பார்த்து வினவுகின்றார் திருமிகு. லட்சுமி.

    அலைகடல் ஓசையிலே
    ஆதவனின் செம்பஞ்சுத் தங்க நீரோடையிலே
    இதயம் தொட்ட
    ஈன்றவளுக்கு நீலப்பட்டாடை
    உடை உடுத்தியது யார்?
    ஊசிக் கதிரொளியினிலே 
    எட்டுதிக்கும் தமிழ்த் தாயன்பை
    ஏந்திழையாள் வடிக்கின்றாள்!
    ஐந்திறம் நிறைந்த
    ஒல்காப் புகழ் தமிழ்மண் தேடி
    ஓவியக் கடலாய் 
    ஔடதமாய் மன்பதைக்கு
    அஃதென உரைப்பவர் எங்கே?

    ***

    ’அழகின் சிரிப்பு’க்குப் பின்னே ஆபத்து ஏதும் மறைந்திருக்குமோ? என்று நம்மை எச்சரிக்கின்றார் திரு. எஸ். பழனிச்சாமி.

    தங்க நிறத்தில் வானம்
    தகதகக்கும் இளஞ் சூரியன்
    துள்ளி வரும் வெள்ளலைகள்
    கொள்ளை கொள்ளும் மணல்வெளி
    […]
    இயற்கையின் சிரிப்பை ரசிப்போம்
    இன்பமான வாழ்வில் மகிழ்வோம்
    எல்லாம் சரிதான் – ஆனால்…
    எச்சரிக்கை செய்கிறது மனது 
    அழகின் பின்னே மறைவாய்
    ஆபத்தும் இருக்கலாம்  ஜாக்கிரதை!
    இன்று போல்தான் உலகம்
    அன்றும் விடிந்தது நமக்கு
    அமைதியாய் தோன்றும் கடலும்
    ஆக்ரோஷமாய் சீறிப் பாய்ந்தது
    சுனாமி பேரலையாய் புகுந்து 
    சுருட்டிக் கொண்டு போனது
    மனித உயிர்கள் எல்லாம்
    […]
    ஒரே நாளில் வாழ்வு
    உருக்குலைந்து போனது 
    அழகான உதயம் அன்று
    அஸ்தமனமாய் ஆனது 

    ***

    இன்ப இம்சை அழகியான தன் சூரியக் காதலியைச் சிலிர்ப்போடு வர்ணித்திருக்கிறார் திரு. சந்தோஷ் குமார்.

    விடியல்
    ஒளி விரல்களால்
    காலை மணி ஆறில்
    எனை எழுப்பத் தூண்டியவள்..

    மதியம் பண்ணிரெண்டில்
    தன் அக்னி இதழ்கீற்றிகளினால்
    என் மேனியை
    முத்து வியர்வையில்
    குளிப்பாட்டினாள்.

    இப்படியான இன்ப இம்சை
    அழகியை காதல் கொஞ்ச
    கவிதைத் தூரிகையால்
    சீண்டலோவியமிட
    கடற்கரைக்கு விரைந்தேன்
    மாலைவேளையான
    மணி ஆறில்..!

    பாருங்களேன்…!
    இவளுக்கு என்ன திமிரு…!

    என் மன்மத சொல்வித்தைக்கு
    கிறங்கிவிடக்கூடாது என்பதற்காகவே
    ஆழி மெத்தையில்
    வெள்ளச்  சரிகையுள்ள
    மஞ்சள்பட்டுப் போர்வைக்குள்
    வெட்கச்சிவப்போடு
    ஒடி ஒளிந்துக்கொள்ள
    விரைகிறாள்
    இந்த கள்ளி
    என் சூரியத்தேவதை…! 

    ***

    ’கதிர் காட்டும் வழி நடந்தால் வாழ்வில் ஒளி பிறக்கும்’ என்று நம்பிக்கை விதைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கடலும் வானும் நிறம்மாறின
    காணும் இடமெலாம் அழகாகின,
    உடலில் அழகுடன் எழுகதிரே
    உனக்குச் சொல்லிடும் பலகதையே, 
    கடமை இருக்குது உழைத்திடவே
    காட்டிடு ஒளியை உலகினுக்கே,
    அடைதல் இயற்கை அதன்முன்னே
    ஆற்றிடு நற்பணி உலகினிலே…!  

    ***

    கவின் நிலவைத் தேடும் கடற்பாவையை எழிலோவியமாய் நம்மெதிரில் நிறுத்துகின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    நீலநிறப் பட்டாடை நெடுமணல் மேல் உலர்த்தி
    மஞ்சள் ஆடையுடுத்தி காதலனாம் மதியைத் தேடி
    நெஞ்சத்துக் காதல் அலையலையாய்ப் பொங்கி வர
    கொஞ்சி குதித்தோடி குரலெழுப்பி கூவும் கடற்பாவை

    தன்னழுகு காதலனாம் கவின் நிலவைக் காணாது
    என்ன நேர்ந்தது என வானோக்கி வருந்தி வியப்புற்று
    இன்னமும் இருக்கின்றாயா நீ மறைவதெப்போது என
    அன்ணணாம் கதிரவனை கேட்கின்ற அழகுதான் என்ன?

    ***

    நீலத்தரங்கத்தின் மேலுள்ள வான அரங்கில் கதிர்விரிக்கும் கதிரோனைப் பரவுகின்றார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    நீலத் தரங்கத்தில் நீராடி மெல்லெழுந்து
    கோலக் கதிர்விரித்தான் கோகபந்து ! –ஓலமிட்டுத் 
    துள்ளும் அலைகளும் தூக்கக் கலக்கத்தில் 
    மெள்ளத் தவழும் விழித்து !

    ***

    ’வெண் சீருடை கழுவ, மாயக்கண்ணனின் நீலநிற வண்ணத்தை இங்கே (கடலில்) கலக்கியது யார்?’ என்று கேள்விக்கணை தொடுக்கிறார் திருமிகு. வேதா. இலங்காதிலகம்.

    வெண் சீருடை கழுவ
    கண்ணன் மாயனின் வண்ணமாம்
    கண் பறிக்கும் நீலப்பொடியை
    எண்ணிக் கலக்கியது யாராகும்!
    அன்றி –
    விண்முகில் இங்கு சடுதியாய்
    மண்ணில் தெரியும் மாயை!
    திண்ணமோ இது நானறியேன்! 
    கண்ணின் எண்ண மயக்கமோ!…

    ***

    நல்ல சிந்தனைகளை அள்ளித் தெளித்திருக்கின்றீர்கள் கவிஞர்களே! உளப்பூர்வமான பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் என அறிந்துவருவோம்!

    செந்நிறப் புரவியில் கம்பீரமாய்ப் பவனிவரும் பகலவனை அலைகள் ஆர்ப்பரித்து வரவேற்கும் அற்புதக்காட்சியை மிகைப்படுத்தலின்றி மிக இயல்பாய், எளிய சொற்களால் வனப்போடு தீட்டியிருக்கின்றார் திருமிகு. தமிழ்முகில். அவரே இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார்.

    அவருடைய கவிதை…

    செந்நிறப் புரவியது
    சிறகு
    விரித்து
    பறந்து
    வர
    நடு
    நாயகமாய்
    கதிரோனும்
    அதிலேறி
    பவனி
    வர
    சமுத்திரம்
    தன்
    அலை
    கரம் அசைத்து
    நடனமாடி
    வரவேற்க
    வானும்
    தன் பங்கிற்கு
    அழகினை
    வாரி இறைக்க
    நீலம்
    சுமந்த கடலும்
    மணல்
    கொண்ட கரையும்
    கைகோர்த்து
    மகிழ்ந்தாட
    கலைக்
    கண்களுக்கு
    இவையனைத்தும்
    விருந்தாக
    இயற்கையின்
    எழிலான
    அரங்கேற்றம்
    !

    ***

    காதலியின் மடிசாய்ந்துகிடந்த அந்த மாலை நேரத்து மயக்கத்தை மனம்வருடும் கவிதையாக்கியிருக்கிறார் திரு. கவிஜி. அவரின் கவிதையைப் பாராட்டுக்குரியது எனத் தேர்வு செய்கிறேன்.

    கடக்க கடக்க
    அங்கேயே நிற்கிறது
    இந்தக் காதல்
    […]
    அத்து
    மீறியும்
    தொடமுடியாத பக்கத்தில்
    அச்சடித்த கண்களுடன்
    சிரிக்கிறது மஞ்சள் வெயில்
    […]
    கறிவேப்பிலை
    பழங்கள்
    போல
    கருஞ்சிவப்பு கூட்டுக்குள்
    மருதாணி முரண்பாட்டை
    கொத்தாய் பிடுங்குகிறது
    மணல் வெளி…….

    யாரோ நடந்த
    ஒற்றையடியில் அழிக்க
    முடியாத பாதங்களாய்
    கற்பனை விரிக்கிறது….

    சொல்லிவிட முடியாத
    தருணத்துக்குள் சொல்லிக்
    கொண்டே பேதலித்துக்
    கிடக்கிறது
    கடக்கவே முடியாத
    உன் மடி சாய்ந்து  கிடந்த
    இந்த மாலை
    நேரத்து மயக்கம்

    ***

    கவிஞர்காள்!  சிந்தனைக்கு ஓய்வு தராமல், ஒவ்வொரு கவிதைப் போட்டியிலும் உங்கள் ஆர்வத்தையே நெய்யாக வார்த்துக் கவிதைப் பந்தம் கொளுத்தி அறிவு வெளிச்சம் கூட்ட வாருங்கள்!

    மீண்டும் சந்திப்போம்!

     

    Share
  • வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழா

    மு.முருகேஷ்

    மனிதன் சமூக ஞானத்தை பெறுவதற்கு
    புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன

    – வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் பேச்சு –

    11

    வந்தவாசி.ஜூன்.21. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் அறிமுக விழாவில், ஒரு மனிதன் சமூக அக்கறையையும், சமூக ஞானத்தையும் பெறுவதற்கு புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

    கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர் இரா.சிவக்குமார், தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரி இணைப் பேராசிரியர் ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    112

    நிகழ்வில், தேசூர் கவிஞர் பால.வெங்கடேஷ் எழுதிய ‘சாம்பலில் உயிர்த்தெழும் பீனிக்ஸ்’ கவிதை நூலை வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் பெ.சம்பத் வெளியிட, வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் சி.பி.பாபு பெற்றுக் கொண்டார்.

    விழாவிற்கு தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் ’புத்தக வாசிப்பும் சமூக ஞானமும், எனும் தலைப்பில் பேசியதாவது: ” கல்வியறிவு மட்டுமே ஒரு மனிதனுக்கான உலக அறிவைத் தந்துவிடாது. கண்டதையும் படித்தால் பண்டிதன் ஆவான் என்பார்கள். உலகில் புதிய சிந்தனைகளை விதைத்த தலைவர்கள் பலரும், தங்களை மாற்றியவை புத்தகங்களே என்றுதான் கூறியிருக்கிறார்கள். இன்றைக்கு புத்தகங்கள் அதிகம் வெளியாகின்றன. ஆனால், புத்தகம் வாசிக்கிற பழக்கம் வெகுவாய் குறைந்து வருகிறது. வீட்டில் புத்தகம் படிக்கிற நேரத்தை காட்சி ஊடகங்கள் குறைத்துவிட்டன. ஒரு மனிதன் சமூக அக்கறையுடையவனாக வளர்வதற்கும், சமூக ஞானத்தைப் பெறுவதற்கும் புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன” என்றார்.

    1123

    விழாவில், ரூ. ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஜீவிதன் சேசுராஜா, கொரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.செல்லக்குட்டி, கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் பி.அஸ்வின் ஆகியோருக்கு பாராட்டு செய்யப்பட்டது.

    நிறைவாக, மூன்றாம்நிலை நூலகர் பூ.சண்முகம் நன்றி கூறினார்.

    படக்குறிப்பு :

    வந்தவாசியில் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் தேசூர் கவிஞர் பால.வெங்கடேஷ் எழுதிய ‘சாம்பலில் உயிர்த்தெழும் பீனிக்ஸ்’ கவிதை நூலை வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் பெ.சம்பத் வெளியிட, வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் சி.பி.பாபு பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். அருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ், தொழிலதிபர் இரா.சிவக்குமார், கிளைநூலகர் கு.இரா.பழனி, நூலாசிரியர் பால.வெஙக்டேஷ் ஆகியோர் உள்ளனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”நமோநா ரணமால் நவநீதம் உண்ண,
    கிமோனோவில் வந்த கிருஷ்ணன், -அமோகமாய்,
    கேசவ் கரங்களில் கைவல்ய வண்ணமாய்
    வாசம் புரிகின்ற வஸ்து’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    “தேகம் வலித்திடுமே, யோகம் அடிக்கையில்,
    சாகா வரத்திற்கும், சாந்திக்கும், -மோகா,
    அவாமிசை போய்ப்பல ஆஸனங்கள் செய்யாய்,
    சவாஸனத் தூக்கம் சுகம்”….கிரேசி மோகன்….

     

    Share
  • சுட்டும் விழிச்சுடர்! – சர்வதேச யோகாசன தினம்!

    பவள சங்கரி

    27-suryanamaskar

    யோகம் என்பது ….

    சுட்டும்-விழி2-300x76

    வியத்தகு ஆற்றல் பெற்ற உடலும், மனமும் இணைந்து, இசைந்து, இயங்கும் கலைதான் யோகாசனம். நம் அன்றாட வாழ்வியலில், நம்மை உற்சாகமாக கடமையாற்ற வழியமைத்து, ஆரோக்கியத்தையும், உள்ளத் தெளிவையும் ஒருசேர பேணிக்காக்கக்கூடியது. நம் வாழ்க்கை புறப்பட்ட இடம் எது என்ற தெளிவு இருக்கும் ஒருவருக்கே தாம் இறுதியில் போய்ச் சேரப்போகும் இடம் பற்றிய விழிப்புணர்வும் இருக்கும். இந்தத் தெளிவே நம்முடைய இடைப்பட்ட காலத்தில் நாம் வாழும் முறையை நிர்ணயிக்கிறது. நம் வாழ்க்கைப் பயணம் இடறின்றி அமைய சிறு தூண்டுகோலாக செயல்படுவதும் யோகாசனம் என்றும் சொல்லலாம். கீதையில் கண்ணன், சத்துவ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என மூன்றாகப் பிரிக்கிறார். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மூன்றின் ஒரு நிலையில் நின்றுதான் நம் பயணம் செல்கிறது. சத்துவ குணம் எதையும் புன்னகையோடு அலட்சியப்படுத்தும். ரஜோ குணம் பழி தீர்க்க நினைக்கும். தமோ குணம் நடந்ததை நினைத்து அழுது, கவலை கொள்ளும். இதில் ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என அந்த பின்னிரண்டு குணங்கள்தான் நம்மை அலைக்கழித்து, நம் உடல் நிலையையும் பாதிக்கச் செய்கிறது. ஆக, புலன்களை அடக்கி, ஒருமுகப்படுத்தி, பகை உணர்ச்சி என்பதே துளியும் அணுகாமல் நிதானம் காப்பது, நம் உடல்நிலை ஒரே சீராக இயங்குவதற்கு அத்தியாவசியமாகிறது. மனித மனம் உணர்ச்சியின் வேகத்தில் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி சூழ்நிலைகளுக்கேற்றவாறு மாற்றமடைகிறது. இந்த நிலையிலேயே துன்பங்களைப் பெருக்கும் பழிச் செயல்களும் பதிவுகளும் ஏற்படுகின்றன. இதை அறிவின் மயக்க நிலை, என்றும், மாயை என்றும் அழைக்கிறோம். இதிலிருந்து விடுபடவே நாம் எண்ணினாலும் சூழ்நிலைகள் மீண்டும், மீண்டும் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த மனித இயல்பை, இயற்கை நிலையை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சிறந்த சாதானமாக இந்த யோகாசனத்தைக் கூறலாம். உடற்பயிற்சியுடன், மனப்பயிற்சியும் (தியானம்) இணைந்து தெளிவான சிந்தையை அன்றாடம் ஊக்குவிக்கக்கூடிய கலை என்றே சொல்லலாம்.

    ‘யோகா’ என்ற சொல் ‘யுஜ்’ என்ற சமசுகிருத சொல்லிலிருந்து வந்துள்ளது. இதன் பொருள் தனிப்பட்ட மற்றும் பிரபஞ்ச உணர்வுகளின் கூட்டமைப்பு என்பதே. யோகாசனம் என்பது மனித வாழ்க்கையை செம்மைப்படுத்தக்கூடிய, நம் பழமையான வேத இலக்கியங்களின் ஊற்று. ரிக் வேதம் என்பது மனித வரலாற்றில் மிகப் பழமையானதும், புனிதமானதுமான, எட்டாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது.

    சர்வதேச அளவில் இன்று மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள யோகாசனம், கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பதஞ்சலி முனிவரால் எடுத்தாளப்பட்ட அற்புதமானதொரு கலை என்பதில் நாம் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விசயம். பதஞ்சலி முனிவர் யோகாசனத்தின் எட்டு அங்கங்களை தெளிவாக்கியிருக்கிறார். அவைகளாவன: யாமா என்கிற சமூகப் பண்பாட்டுக் கூறுகள், நியமம் என்கிற தனிப்பட்ட நன்னெறி, ஆசனம் என்கிற பயிற்சி முறைகள், பிரணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி, பிரத்யாகாரம் என்கிற புலன்களை உள்முகமாக மாற்றும் முறை, தர்ணா என்கிற ஒருமுனைப்படுத்துதல், தியானம் மற்றும் சமாதி நிலை ஆகியவை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அதனை ஒவ்வொரு மையங்களும் தங்களுக்குரிய பாணியில் ஆய்வு செய்து பயிற்சியளித்து வருகின்றனர்.

    “மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றி
    சினமெனும் சரக்கை ஏற்றி செறிகடல் ஓடும்போது
    மனனெனும் பாறை தாக்கி மரியும்போதறியவொண்ணா
    ஒற்றியூர் உடைய கோவே “

    என்பது அப்பர் சுவாமிகளின் அருமையான தேவாரப் பாடல். அதாவது, “மனம் எனும் தோணியில் அறிவு எனப்படும் கோலை நாட்டி, சினம் எனும் சரக்கை ஏற்றி உறவுகளுடன் பயணம் செல்லும்போது, மதம் எனப்படும் தீவினை தாக்கி நிலைகுலைந்து இறுதிக் காலத்திற்கு செல்லுவது உறுதி. இதனையெல்லாம் அறியாத நான் என் உணர்விலே, உன்னை எப்போதும் உறுதியுடன் நினைத்து வாழ அருள் செய்வாய் திருவொற்றியூர் பெருமானே’ என்கிறார்.

    ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கைக் கடலை கடப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் செய்தும், பலப்பல தடைக்கற்களைத் தாண்டியும் வரும்போது அதற்கான பின் விளைவுகளாக பல்வேறு விதமான நோய்களுக்கு ஆட்படுகிறோம். இதிலிருந்து மீள்வதற்கு பலவிதமான மருத்துவமும் மேற்கொள்கிறோம். அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும், தலைவலி போய் திருகுவலி வந்ததுபோல் அனுபவிக்கிறோம். இவையனைத்திற்கும் தீர்வு என்பது நம் முன்னோர்கள் வழிவழியாகக் கடைபிடித்து வந்த யோகாசனப் பயிற்சி முறைகள் என்றால் அது மிகையல்ல. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை அமைவது எவருக்குமே சாத்தியம் இல்லை என்றாலும், அந்தப் பிரச்சனைகளை அணுகும் முறையிலும், அதனைக் கையாளும் முறையிலும் ஒரு தனிப்பட்ட சக்தியை வழங்குவது யோகாசனப் பயிற்சிகள். அன்றையப் பணிகளை உற்சாகமாகத் தொடங்கவும், மனதை இலகுவாக வைத்துக்கொள்ளவும் இப்பயிற்சிகள் துணை புரிகின்றன.

    ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு, ‘வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்’ என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படும், திருமிகு யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றத்தின் யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டேன். எளிய உடற்பயிற்சிகளுடன் மன வளமும் ஏற்பட வழியமைந்தது அங்குதான். அகத்தாய்வுப் பயிற்சிகள் மூலம் அன்றாடப் பணிகளை அல்லல் இன்றி நிறைவேற்றும் வல்லமையும் பெற முடிந்தது.

    தற்சோதனை

    1547023501Copy-of-Scan10003

    நிறைவு செய்யமுடியாத நூறு ஆசைக் குப்பைகளை மனதில் சேர்த்து வைத்துக்கொண்டு திணறுவதில் யாருக்கு என்ன லாபம்; மன அமைதி முதலில் போயிற்று, மனதின் பலம் போயிற்று; செயல் திறன் போயிற்று, உடல் நலம் போயிற்று, நற்குணங்கள் போயின; எரிச்சலும் கோபமும் அடிக்கடி வந்தன. முகத்தில் தெளிவுபோய் சோகம் படிந்தது. நமது “மனவளக்கலை” பயிற்சியில் மனம் தன் திறமையையும், உறுதியையும், வல்லமையையும் பெருக்கிக் கொள்ளும் பயிற்சி தான் “அகத்தவ பயிற்சி” முறையாகும். தன்னைப்பற்றி, தன் தேவையைப் பற்றி, தன் செயலின் விளைவைப் பற்றி, தன் தகுதியைப் பற்றி, தன் மதிப்பைப் பற்றி ஆராய்வது தான் “தற்சோதனை” என்கிற தன்னை ஆராயும் பயிற்சியாகும். இந்தத் தற்சோதனை வெற்றி அடைந்த பின் பார்த்தால் மனம் கலகலப்பாக இருக்கிறது. மனதில் தைரியம் வந்துவிடுகிறது. எதையும் சாதித்துவிடலாம் என்ற உற்சாகம் மிகுந்து விடுகிறது. மனத்தின் குறுகல் ஒழிந்து விசாலம் வந்து விட்டதால் பொறுமை, அன்பு என்ற பல நற்குணங்கள் மிகுந்து இருக்கின்றன. கடமை உணர்ந்து பொறுப்புணர்ந்து எண்ணத்தில் தூய்மையோடு காரியங்களை ஆற்றுவதால் எடுத்த காரியத்தில் வெற்றியும் கிடைக்கிறது.
    – தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

    கீழகண்ட ஒன்பது தவங்களும் இங்கு பயிற்சியளிக்கப்பட்டன.

    மனவளக்கலை : ஒன்பது வகை தவங்கள்

    1. ஆக்கினை :
    மூலாதாரத்திலிருந்து உயிரை எழுப்பி புருவமத்திக்குக் கொண்டு வந்து உயிரை உணர்வது . பிட்யூட்டரி சுரப்பி நல்ல முறையில் வேலை செய்யும் .

    2. சாந்தி:
    மேலே புருவமத்திக்கு சென்ற உயிர் மையத்தைத் திரும்பவும் மூலாதாரத்திற்கு கொண்டு வருவது….

    3. துரியம்:
    உயிர் மையத்தைத் தலை உச்சிக்குக் கொண்டு வருவது. பீனியல் சுரப்பி நல்ல முறையில் செயல் புரியும் .

    4.துரியாதீதம் :
    உடலிலிருந்து வெளியே வந்து பிரபஞ்சம் வரை விரிந்து மேலும் பிரபஞ்சத்திற்கு அப்பாலுள்ள சுத்தவெளி என்ற இறைநிலையோடு கலக்க விடுவது.

    5. பஞ்சேந்திரியம்:
    மெய் ,வாய்,மூக்கு,கண், காது என்ற ஐம்புலன்களின் மூலம்தான் சீவகாந்தம் வெளியேறி உலகில் இன்ப துன்பங்களை அனுபோகிக்கின்றோம். ஐம்புலன்களுக்கும் ஆற்றலை கூட்டி அளவுமுறை காக்க உதவுகிறது.

    6.பஞ்சபூத நவகிரகம் :
    நாம் பூமி மீது வாழ்கின்றோம் . நிலம் , நீர்,நெருப்பு, காற்று ,விண் என்ற ஐந்து பெளதிகப் பிரிவுகளான பொருள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இனிமை காப்போம். சூரியன் ,புதன், வெள்ளி, சந்திரன், வியாழன் , சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கோள்களிலிருந்து வரும் காந்த அலைகளுடன் இணக்கம் கொள்கிறோம்.

    7.ஒன்பது மையம் :
    மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிப்பூரகம், அநாகதம் , விசுத்தி, ஆக்கினை, துரியம், என்று உடலுக்குள் உள்ள ஏழு இயக்க மையங்களிலும் பிரபஞ்சம், சுத்தவெளி போன்றவற்றில் மனம் வைத்து தவம் செய்வது .

    8. நித்தியானந்தம்:
    உடல் முழுவதும் சீவகாந்த ஆற்றலை நன்கு பரவ செய்வது.உடலும் , மனமும் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க உதவும்.

    9.இறைநிலை தவம்:
    இறைநிலையிலிருந்து மனிதன் வந்த வரலாற்றை உணர்ந்து மனதை இறைநிலையோடு கலக்க விடுவது.

    இந்த ஒன்பது வகை தவங்கள் மனவளக்கலை மூலமாக கற்றுக்கொடுக்கப் படுகின்றன. இவற்றை பயின்று வாழ்வில் எல்லா துறைகளிலும் வெற்றியும், மகிழ்ச்சியும் , மனநிறைவும் பெறுவதற்கு குருவருளும், திருவருளும் துணை புரியட்டும்.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் …

    மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு, திருமிகு. சிரீ சிரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை யோகாசனப் பயிற்சி மேற்கொண்டேன். இதில் ‘சுதர்சன் கிரியா’ என்ற தன் நிலை உணரும் தவம், அற்புதமான பயிற்சி. ‘ஒரு பரவச நிலை’ என்பதன் பொருள் விளங்கும் தவம் என்றால் அது மிகையாகாது. மனதுக்கும்,உடலுக்கும் இணைப்பாக மூச்சு செயல்படுவதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்றபடி தனிப்பட்ட விதத்தில் நமது மூச்சின் தன்மை மாறுவதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

    srisrionsky1

    சுதர்சன் கிரியா, உடல், மனம், புத்தி, மற்றும் உணர்வுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் தன்மையுடைய, இயற்கையாய் அமைந்த, மூச்சின் தாள ஒழுங்கைக் கொண்டது. இந்த தனிச்சிறப்புவாய்ந்த மூச்சுப்பயிற்சி நம்மிடமுள்ள மன இறுக்கம்,விரக்தி, மற்றும் எதிர்மறையான உணர்வுகளான கோபம்,சோர்வு,வருத்தம் ஆகியவற்றை வெளியேற்றி நம்மை அமைதியுடன் கூடிய உற்சாகத்துடனும், கவனத்துடன் கூடிய ஓய்வுடனும் வைக்கிறது.

    சுதர்சன் கிரியாவின் மூலமாக, நாம் மூச்சை திறமையாகப் பயன்படுத்தி, நமது உணர்ச்சிகளைக் கையாளமுடியும், மன இறுக்கத்துக்குக் காரணமான எதிர்மறை உணர்வுகளான கோபம், பதட்டம், சோர்வு, பயம் ஆகியவற்றை வெளியேற்றி மனதை அமைதியாக, ஆனந்தமாக, துடிப்புடன் வைத்துக்கொள்ள முடியும்.

    சுதர்சன் கிரியா, நமது முழு உடல், மன அமைப்பில் உள்ள மாசுகளையும் சேர்ந்துள்ள இறுக்கத்தையும் வெளியேற்றி அதை ஒழுங்குபடுத்துகிறது. நமது ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான புரோலாக்டின் ஹார்மோனின் அளவு முதல் முதலாக சுதர்ஸன் கிரியா பயிலும் போதே அதிகரிப்பதை ஆராய்ச்சிகள் உணர்த்துகின்றன. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

    ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை அருகில் உள்ள ஈஷா யோகா மையம் சென்றிருந்தோம். பிரம்மாண்டமான சிவலிங்கத் திருமேனியும், தியானம் செய்வதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குகைகளும், விஞ்ஞானப்பூர்வமாக ஏதோ சில மாற்றங்களை எனக்குள் ஏற்படுத்துவதை உணர முடிந்தது. தியானத்திற்கு ஏற்ற வகையில் நுட்பமான முறையில் இங்கு கட்டிட அமைப்புகள் உள்ளன.

    ஈஷா யோக மையம்

    dhy1-20061108_SHA_0326

    தென்னிந்தியாவின் எழில்மிகு இடங்களுள் ஒன்றாகிய வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. அடர்ந்த வனங்களும், மின்மினிப் பூச்சிகளும், வற்றாத நீர்வீழ்ச்சிகளும் வனவிலங்குகளின் உறைவிடங்களும் பின்னணியாகத் திகழும் இது, உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடமாக உள்ளது. 150 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் அதிகமாக விரிந்துள்ள இந்த மையம், தியானலிங்கத் திருக்கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா இல்லப் பள்ளி மற்றும் ஈஷா குடியிருப்புகளுடன், ஒருவர் தம் உள்நிலைப் பயணத்தை மேற்கொள்வதற்கு உறுதுணையான ஒரு சூழலை வழங்குகிறது.

    2065848021sadguruinisha-centre

    பாராட்டப்பட வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் இங்கு உள்ள குழந்தைகளுக்கான தங்கும் பள்ளி.

    ஈஷா ஹோம் ஸ்கூல்

    ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான தரமான கல்வியை, வீட்டுச் சூழலில் அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. உலகின் பல பகுதியைச் சார்ந்தவர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். குழந்தைகளுக்கு இயல்பாகவே உள்ள அறியும் மற்றும் கற்கும் ஆர்வம் தூண்டப்படும் வகையில் இதன் கற்கும் முறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தக வழிக் கல்வியை விட வாழ்க்கைத் திறன்கள் மற்றும் வாழ்வின் மதிப்பீடுகளை வளர்த்தெடுக்கும் விதமாக இதன் கல்விமுறை இருக்கிறது. இந்த முறையினால், கல்வி என்பது, இங்கு, ஒன்றை ஆராய்ந்து அறிவதாகவும் ஆனந்தத்தை தருவதாகவும் உள்ளது.

    சமீபத்தில் அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்த போது, கிளப் மெட்ரோ என்ற உடற்பயிற்சி மையத்தில் 30 நாட்கள் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். நம்முடைய ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரம்தான் அங்கு பயிற்சியின் ஆரம்பத்தில் தியானம் செய்யும்போது உச்சரிக்கப்படும் ஆரம்ப மந்திரம். உண்மையில் நம் இந்தியத் திருநாட்டின் பாரம்பரிய, மிகப் பழமையான யோகக்கலையை மேலை நாட்டவர் பய பக்தியுடன் பயிற்சி செய்வதைப் பார்ப்பதற்கு மிகவும் பெருமையாக இருந்தது. வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஜூம்பா நடனப் பயிற்சியும் கொடுக்கிறார்கள்.

    தவப்பயிற்சி

    நம் உடலிலுள்ள ஐம்பொறிகளையும் உள்ளத்தோடு ஒன்றும்படி செய்து, பின்னர் அந்த உள்ளமும் உயிரோடு ஒருமையடையப் பயிற்சி செய்வதே தவம். இப்பயிற்சியை முழுமையாக உணர்வுப்பூர்வமாக செய்யும்போது, உயிர் ஒளிமயமான இறையோடு கலந்து அமைதி பெற முடியும். இதையே தவப்பயன் என்பர் பெரியோர். இதன் பயனாக அன்றாட வாழ்வில் ஏற்படும் தொல்லைகள், துன்ப துயரங்களையும் பொருட்படுத்தாத மனத்திட்பம் பெற முடிகிறது. அதோடு பிற உயிர்களுக்கு எந்தவிதமான கேடும் நினையாமலிருக்கிற மனப்பண்பாட்டையும் பெற முடிகிறது. இதனையே வள்ளுவப் பெருந்தகை, தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்கிறார்.

    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு.

    சுய விடுதலை

    உலகின் பந்த பாசம், ஆசை, சுகம், துக்கம், சினம், பொறாமை, வஞ்சம், புகழ், பணம், அற்ப சுகம் என நாம் அடிமைப்பட்டிருக்கும் இவை அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று நம்மை அமைதியாக வாழ வழியமைத்துக்கொடுக்கும் இந்த யோகக்கலை அமையப் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள் எனக்கொள்ளலாம். விடுதலை என்பது நமக்கு யாரும் தரக்கூடிய ஒன்றல்ல. அது நம் உள்ளம் என்னும் மையத்துக்குள் ஏற்படுகிற மறுமலர்ச்சி. உளவியல் ரீதியிலான இந்த அடிமைத் தளையை நம் முயற்சியால், நாம் மட்டுமே உடைத்தெறிய முடியும். அதற்கு ஒரு முக்கியமான கருவியாகச் செயல்படுவதுதான் யோகப்பயிற்சி! காற்றைப் போன்று கனமற்றும், வெளிச்சத்தைப்போல் வெளிப்படையாகவும் , தண்ணீரைப் போன்ற தடையில்லாத ஓட்டமும் அளிக்கவல்லது யோகப்பயிற்சி! அதுவே நம் சுய விடுதலையும் கூட. ஆக, யோகாசனப் பயிற்சியை அன்றாடம் முறையாக கடைபிடிப்பதன் மூலம் புற அழகோடு சேர்த்து அக அழகையும் பெற முடியும் என்பதே நிதர்சனம்! இத்தகைய அரிய கலையை நம் குழந்தைகளுக்கு பள்ளியில் பயிற்றுவிக்க வேண்டியதும் அவசியம். சில தனியார் பள்ளிகளில் யோகாசனப் பயிற்சி வகுப்பு இருந்தாலும், அரசுப் பள்ளிகளில் இல்லை. அரசாங்கம் உடனடியாக இதற்கான ஏற்பாட்டை செய்வது நலம். இதனால் நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு  நிலைத்து நிற்கவும் ஏதுவாகும்.

    international yoga day 5656

    பி.கு. நான் யோகாசனப் பயிற்சியை தவறாமல் அத்தனை ஒழுங்காகக் கடைபிடிக்கிறேனா என்று கேட்டால், இல்லை என்றே வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம் என்று உறுதி கொள்வோம்! தவறாமல் யோகப் பயிற்சியை மேற்கொள்வோம் நண்பர்களே!

    Share
  • தேகமும் யோகமும்.. பகுதி12

     கவியோகி வேதம்

     யோக நிலையும்,மனித உதாரணமும்

     

    yoga211

     நம் மனிதர்களில் பாதி சதவிகிதம் பேராசையினாலும், தீவிர இச்சைகளாலும் ,உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மன வலிமை இழந்து, அதனால் உடல் பலத்தையும் இழந்து விரைவில் நோய்க்கு ஆளாகின்றனர். மனோ பலம் இல்லாததால் எந்த மருந்தும் அவர்களைக் குணப்படுத்த முடியாமல் போகிறது.

     உதாரணத்துக்கு… பேரைச் சொல்லாமல் சொல்லுகின்றேன். பிரபல சிரிப்பு நடிகர்.. அவர் திரைக்கு வந்து இரண்டு மூன்று தடவை முகத்தையும், காலையும் அஷ்ட கோணலாக ஆக்கிக் காட்டினாலே போதும் விழுந்து விழுந்து ஜனங்கள் சிரிப்பர். அப்பேர்ப்பட்ட நடிகர் சும்மா இருக்கக்கூடாதா! நானும் படம் தயாரிக்கிறேன் என்று சொல்லி ஆசை வலைக்குள் வீழ்ந்து, அதில் தோல்வியுற்று துக்கம் தாங்க முடியாமல் குடிவெறிக்கு ஆளாகி  இறந்தும் போனார். இன்னொரு குணசித்திர நடிகையும் அப்படியே. படத்தயாரிப்பில் விழுந்து நஷ்டப்பட்டு அந்தச் சோகத்தால் கஞ்சா முதலிய போதைக்கு அடிமையாகி நெடுநாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இந்த இருவர்க்கும் யோகா மூலம் மேலே ஏற, மீண்டும் தன்னம்பிக்கை ஒளியை அவர்கள் உள்ளே புகுத்தி வாழுமாறு செய்ய  யாரும் வழி காட்ட வில்லை.அதுவே உண்மை.

    ….இப்படி நடிகர்கள் மட்டுமல்ல. நிறைய பணக்காரர்களும் கூட நண்பர்களால் கெட்ட  வழியில் ஈர்க்கப்பட்டு, அவமானம் தாங்காமல் தற்கொலை வரை போகின்றனர்.  ‘வாழ்க்கை’ என்பது தானும் ஒழுங்காக வாழ்ந்து, பிறரையும் நல்வழிக்குத் திருப்பி, கூடுமானவரை சிக்கலில் மாட்டியோர்க்கும், ஏழைகட்கும் தீவிரமாக உதவுவதே என்ற கோட்பாட்டை மறக்கின்றனர்.

    ..இன்று உலகம் முழுதும் ‘யோகா ’ தினம் அனுஷ்டிக்கப்படுகிறது..  உடல், மன உணர்ச்சிகளை தியானம் மற்றும் யோக ஆசனங்களாலும்  கட்டுப்படுத்தி, அல்லது ஓர் ஒழுங்குக்குக் கொண்டுவந்தால் யாவரும் இன்பமாய் வாழலாம் என்று எல்லா யோகாசிரியர்களாலும் போதிக்கப்படுகிறது. மன வலிமையையும் , காரியத்தை வெற்றிகரமாகச் சாதிக்கும் திறனையும்  யோகா மூலமே மேம்படுத்தலாம்  என்று இன்றைய டெம்ப்டேஷன் (தூண்டுதல்) சூழ்நிலையில் அனைவராலும் அறிவு பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் ஒத்துக்கொள்ளப்படுகிறது. பெரிய அரச போக வாழ்க்கை கிட்டினாலும் கௌதம புத்தர் தம் மன வலிமையால் எல்லா உணர்ச்சிகளையும் அடக்கி, இந்த போக வாழ்க்கையில் நான் மூழ்க மாட்டேன். அனைவரும் எப்போதும் மனத்தில் மகிழ்ச்சியும் அமைதியும்  பெறவேண்டும் ;அதற்கான வழிவகை காண்பேன்

     என்று மனைவியை, மகவை, அரச வாழ்க்கையைத் துறந்து காட்டுக்கு ஏகவில்லையா? அதனால் மனம் ஒன்றே துக்கத்துக்கும், மட்டற்ற மகிழ்ச்சிக்கும் அமைந்த ஒரே சாதனம் என்று தெரியவில்லையா? சந்தோஷம் என்பது வெளியில் இல்லை, வெளியில் கிடைக்கின்ற பொருள்களால் இல்லை, உனக்குள் ஆழ்ந்து அறியும் ஞான மனத்தால்தான்  என்று வேதாந்திகள் மட்டுமின்றி இன்று சாதாரண கிராமத்தானும் உணர்கிறான். அதனால் ,..எனக்கு இது போதும், இன்று கிட்டும் பணம் போதும், மனத்துக்கு இன்று நிம்மதி கிடைக்கிறதா அதுவே எனக்கு இறைவன் அளித்த பெரிய கொடை என்று அனுபவத்தால் உணர்கின்றான். எந்தத் தீவிர இச்சைகளும், இலவசமாகக் கிட்டும் எந்தப்பொருளுக்கும்  உண்மையாக உழைக்கின்ற விவசாயி ஆசைப்படுவதில்லை.

     …. எல்லா மனிதருள்ளும் ஏதோ ஒன்றைச் சாதிக்கும்  வெறியும், உழைப்பு உணர்வும் ஆழ் மனத்தே அமைந்துள்ளது. அதனைப் பயன்படுத்தி இறைவனிடம் நம்பிக்கை பூண்டால் அவனுக்கு அபாரமான  இன்ப வாசல் திறக்கிறது.  ஒரு கதவு பூட்டப்பட்டாலும் அவனுக்கு இன்னொரு வாசல் நிச்சயம் திறக்கிறது…

     …..எனக்குத் தெரிந்த ஒரு துணி வியாபாரி சில வருடங்களாக வெற்றிப்பாதையில் போய் நிறைய லாபம் சம்பாதித்தார். அதனால்  ஒரு பெரிய கடையைத் தொடங்கி அதனை நிர்வகிக்கும் பொறுப்பை வேலைகிட்டுமோ என்று தவிப்பில் இருந்த தன் மைத்துனனுக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்து வழங்கினார். யாவற்றையும் கற்று, வியாபார நுணுக்கமெல்லாம் தெரிந்துகொண்டு மூன்றே வருடத்தில் அவருடைய பணம் பூராவும் சுருட்டிக்கொண்டு  அந்த மைத்துனன் வட நாட்டுக்கு ஓடிவிட்டான்.

     அவனைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.

     போலீஸும் உதவவில்லை.  ஆயின்  தனக்கு  ‘யோகா’ சொல்லிக்கொடுத்த ஒரு ராமகிருஷ்ண மடத்து சன்னியாசியின் ஆசிகள் மூலம்  தன்னிலை உணர்ந்தார். தைர்யமும் அவரால் பெற்றார். அவர் இதை ஒரு கர்ம பலன் என்று ஒதுக்கித் திரும்பவும் முதலில் இருந்து உன் வியாபாரத்தை ஆரம்பி என்றார். உனக்கு நஷ்டம் கொடுத்தவன் உன் உறவினன்தானே, சரி அவனுக்கு நானே மேல் நிலைக்கு வர உதவினேன் என்று மனத்தில் ஒரு மகிழ்வு நிலையை ஏற்படுத்திக்கொள் என்று உபதேசம் செய்தார்.

     .. தெளிந்தார் அவ்வியாபாரி. சரி போனது போகட்டும் என் அறிவு மழுங்கவில்லையே, அனுபவம் இன்னும் என் மூளைக்குள் ஒளிர்கிறதே என்று திரும்பவும் உண்மையாக  உழைத்து,ஒரு வங்கியை அணுகி கடன் பெற்று படிப்படியாக மேல் நிலைக்கு வந்துவிட்டார். இன்று அவருக்கு தென்னிந்தியாவில் ஆறு கடைகள் உள்ளன.  நிறைய சோதனைகள் வைத்த பிறகே, டெபாஸிட் முதலியன பெற்ற பிறகே தகுதியான ஆட்களுக்குக் கடையில் வேலை கொடுப்பார் இன்று.. அனுபவமும், யோகாவும் இப்போது அவரிடம் பேசுகின்றன அன்றோ?

     … இதுபோல் யான் நிறைய நல்ல பணக்காரர்களைச் சந்தித்திருக்கின்றேன்.

      அதில் ஒருவர், ..அவர் எந்த இரண்டு இன்ப எல்லைக்கோ,அல்லது பிறரின் தூண்டுதலுக்கோ ஆளாகாமல், தனது உண்மைநிலை, தன்  செயல்திறன்,தன்னால்  முடிந்த எல்லை இவற்றைக்கணித்து எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பார்.

     உலகம் மாயை என அவர் ஒப்பார், ஞானி ஜனகர் போல் இங்கேயே இருந்துகொண்டு பிறர்க்கும் உதவி செய்து கடமை ஒன்றையே பெரிதெனக்கொண்டு வாழ்கிறார். படாடோபம் கிடையாது அவரிடம்;தனது குடும்பத்தாரை மட்டுமின்றி, பறவைகளையும் நேசிக்கிறார். இயற்கையையும் நேசிக்கின்றார்.ஏழைகட்கும், கலைஞர்கட்கும் தன்னால் முடிந்தவரை உதவுகின்றார். யோகம்  உண்மையாகக் கற்பிக்கும் ‘மனிதத்தன்மை’ எனில் என்ன? என்பதற்கு உதாரணம் அவர்.எப்போதும் சிரித்த முகத்தால் நேர்மையான பேச்சால், நடவடிக்கைகளால் எல்லோரையும் அவர் கவர்கின்றார். யோகத்தன்மை என்பது இதுவே. ‘நல்லி’ என்று நல்லதே செய்யும் அவருக்கு மக்கள் வழங்கிய  பெயர்…(தொடரும்)

     &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    Share
  • வால்மீனில் ஓய்வெடுத்த ஈசாவின் தளவுளவி பரிதி ஒளிபட்டு மீண்டும் விழித்து இயங்கத் துவங்கியது

    Rosetta Program -1

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0

    http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo

    http://www.bbc.com/news/science-environment-30058176

    +++++++++++++++++++++++

    கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,
    பரிதி ஈர்ப்பு மண்டத்தில்
    திரிந்து வருபவை
    வால்மீன்கள் !
    வியாழக்கோள் வலையில்
    சிக்கிய
    வால்மீன் மீது கவண் வீசிக்
    காயப் படுத்தி
    ஆய்வுகள் புரிந்தார் !
    வால் நெடுவே வெளியேறும்,
    வாயுத் தூள்களை
    வடிகட்டியில் பிடித்து
    வையகத்தில் சோதித்தார் !
    அண்ட கோள்களின்
    ஆதித் தோற்றம் அறியவும்,
    உயிரின மூலத்தை உளவிடவும்
    ஏவிய விண்ணுளவி
    பூமிக்கு மீண்டது !
    வால்மீனில் முதன்முதல்
    கால் வைத்த தளவுளவி
    தகவல் அனுப்பி ஓய்வெடுத்தது
    மீண்டும்  எழுந்தது !

    +++++++++++++++

    Difficult landing

    ஓய்வில் இருந்த ஃபிலே தளவுளவியில் [Philae Lander] இன்னும் மிகை யான தகவல் சேமிப்பில் உள்ளது.  பரிதி ஒளிபட்டு கிடைக்கும் தொடர்பில் நிறையச் செய்தி நாங்கள் இப்போது பெற முடியும்.  இதுவரை பெற்ற தகவலில் தளவுளவியின் உடல்நலமும், விழித்துக் கொண்ட செய்தியும் அறிந்து கொண்டோம். தளவுளவி உட்புற வெப்பநிலை சீராக இருந்தது. பரிதி வெப்பத் தட்டுகள்  யாம் எதிர்பார்த்தது போல் சூரிய சக்தி சேமித்த வண்ணம் இருந்தன.

    பார்பரா கொஸ்ஸோனி  [ஜெர்மன் விண்வெளி மைய எஞ்சினியர்] 

    240 கி.மீ. [150 மைல்] உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோஸெட்டா விண்ணுளவி இப்போது வால்மீனை நெருங்கி, தளவுளவி தகவல் பெற 180 கி.மீ. [110 மைல்] உயரத்துக்குக் கீழிறக்கப்படும்.

    எல்ஸா மாண்டாகனன் [ரோஸெட்டா விண்ணுளவி துணைப் பயண மேலாளர்] 

    Rosetta near comet

    ஓய்வெடுத்த நாசாவின் தளவுளவி ஃபிலே பரிதி ஒளிபட்டு விழித்துக் கொண்டது.

    பத்தாண்டுக் காலம் விண்வெளியில் வால்மீன் ஒன்றைத் தேடிப் பயணம் செய்து நாசாவின் ரோஸெட்டா தாய்க்கப்பல் [Rosetta Spaceship] வால்மீனில் இறக்கிய தளவுளவி ஃபிலே [Philae Lander] மின்சக்தியின்றி  2014 நவம்பர் 12 இல் ஓய்வெடுத்து, பரிதியின் ஒளிபட்டு இப்போது மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது.  ஏழு மாதங்கள் சூரிய ஒளியின்றி மின்சக்தி இல்லாது தளவுளவி முடங்கி வால்மீன் மறைவுப் பகுதியில் ஓய்ந்து கிடந்தது.  வால்மீன் வினாடிக்கு 31 கி.மீ. [19 மைல்] வேகத்தில் பரிதி நோக்கிப் பயணம் செய்து, பரிதி ஒளிக்கதிர்கள் இப்போது பட்டு சூரிய தட்டுகள் மின்சக்தியைச் சேமித்து வருகின்றன.  முதலில் கிடைத்த தகவல்படி, தளவுளவியின் உடல்நலச் சீர்மையும், பத்துக் கருவிகள் இயக்கத் தகுதி பெற்றுள்ளதும் அறிய முடிந்தது.  சென்ற நவம்பரில் முடங்கிய தளவுளவில் அனுப்ப இயலாது தங்கிப் போன தகவல் அனைத்தும் இனிமேல் ரோஸெட்டா தாய்க்கப்பல் பெற்று பூமிக்கு அனுப்பி வைக்கும்.

    தற்போது வால்மீன் சூரியனிலிருந்து 215 மில்லியன் கி.மீ. [134 மில்லியன் மைல்] தூரத்தில் பயணம் செய்கிறது.  பூமியிலிருந்து வால்மீன் 305 மில்லியன் கி.மீ. [180 மில்லியன் மைல்] தூரத்தில் ஊர்ந்து வருகிறது.   வால்மீன்கள் உறைந்து போன தூசித் தொகுப்பு, நீர்ப்பனி, வாயுக்கள் கொண்டவை.  4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் சூரிய மண்டலம் தோன்றிய போது உண்டாவை இவை.  ஆகவே வால்மீனைப் பற்றி ஆழ்ந்து அறிந்தால் சூரிய மண்டத் தோற்ற அடிப்படைகளைப் புரிந்து கொள்ள முடியும்.  அப்பணியை நிறைவேற்றத்தான் ரோஸெட்டா விண்ணுளவித் திட்டம் தயாரிக்கப் பட்டது.  தளவுளவின் சூரிய சக்தி சேமிப்பாகி அதன் பத்துக் கருவிகள் இயங்க ஆரம்பிக்கும்.  அவை செய்யும் சோதனைகளில் முக்கியமானது, தளவுளவி வால்மீன் தளத்தைத் துளையிட்டு மாதிரி எடுத்து ஆய்வு செய்வது.  அடுத்து தாய்க்கப்பல் ரேஸெட்டா வால்மீனை நெருங்கி 180 கி.மீ [110 மைல்] தூரத்தில் சுற்றி, தளவுளவி அனுப்பும் தகவலைப் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வரும். வால்மீன் சூரியனை 2015 ஆகஸ்டு 13 இல் மிக்க அருகில் நெருங்கும். அதற்குப் பிறகு சூரியனை அப்பால் கடக்கும்.  இனிமேல் தளவுளவி வால்மீன் வெளியேற்றும் நீராவி, வாயுக்கள், தூசிகளை எப்படி ஆய்வு செய்யப் போகிறது என்று விஞ்ஞானிகள் ஆர்வமோடு காத்துள்ளார்.

    Rosetta probe landing

    “எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது.  ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது.  ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”

    ஜான் ஜேக்கஸ் டோர்டயின்   [ESA Director General]  [November 12, 2014]

    “விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”

    அல்வாரோ கிமென்னிஷ்  [ESA  Director of Scince & Robotic Exploration]  [November 12, 2014]

    “வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?  வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்?  காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்!  அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது!  நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும்.  இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது!”

    ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

    Roetta Probe on comet -1

    Mothership Rosetta  Drops Lander on the Comet

    முதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி

    2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் !  அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது.  1969  ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது.  2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து,  6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும்.   ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh]  வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது.  சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.

    First comet image from Philae

    வரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.   வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது.   மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர்.  “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும்.   அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார்.  தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph].  பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும்.  ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித்  திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]

    Rosetta Program

    வால்மீனில் இறங்கிய தளவுளவி  ஃபிலே

    தளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது.  மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும்.  வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே ! துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை.  மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது.  சூரியனை    வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது.  சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை.  அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன.  அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும்.  மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.

    ஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    Comet chasing probe

    2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள்.  அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”

    டாக்டர் பால் பெல், வானியல் நிபுணர் [Dr. Paul Abell, NASA Jonson Space Center, Houston]

    “டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று!  நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று!  வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல!  அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”

    டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து

    Rosetta Mission

    ரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?

    ஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது!  அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும்!  வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!

    வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!  ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும்.  விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும்.  பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா?  மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.

    Philae Lander parts

    ரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்]  ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை.  அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    ரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம்.  மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன.  பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.

    ESA Control Room -2

     விண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:

    1.  “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]

    2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    3. “காஸிமா” வால்மீன் அடுத்த நிலை அயான் நிறை அளவி [COSIMA: Cometary Secondary Ion Mass Analyser]

    4. “ஜியாடியா” தூள் மோதல் ஆய்வு, தூள் நிரப்பி [GIADIA: Grain Impact Analyser & Dust Accumulator]

    5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]

    6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]

    7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]

    ajay

    8. “ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]

    9. “ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]

    10 “ஆரெஸை” வானலை விஞ்ஞான உளவுக் கருவி [RSI: Radio Science Investigation]

    11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]

    வால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:

    தள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:

    1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]

    2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]

    3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    Philae Lander 

    Philae Lander

    4. “கோஸாக்” வால்மீன் மாதிரி உட்பொருள் ஆயும் சோதனை [COSAC: Cometary Sampling & Composition Experiment]

    5. “மாடுலஸ் டாலமி” வெளியேறும் வாயு உளவி [MODULUS PTOLEMY: Evolved Gas Analyser]

    6. “முபஸ்” மேற்தளக் கீழ்த்தள பல்வினை உணர்ச்சிக் கருவி [MUPUS: Multi-Purpose Sensor for Surface & Subsurface Science]

    7. “ரோமாப்” ரோலண்டு காந்தவியல், ஒளிப்பிழம்பு மானி [ROMAP: RoLand Magentometer & Plasma Monitor]

    8. “லெஸ்டி2″ மாதிரி பரிமாறும் கருவி [SD2: Sample & Distribution Device]

    9. “ஸெஸமி” தள மின்னொலிச் சோதனை மானி, தூசி மோதல் நிரப்பி [SESAME: Surface Electrical & Acoustic Monitoring Experiment, Dust Impact Collector]

    விண்ணுளவி கட்டுப்பாடு நிலையம்: ஈரோப்பியன் விண்வெளி இயக்க மையம் [European Space Operation Centre (ESOC), Darmstadt, Germany]  கண்காணிப்பு நிலையம்: நியூ நார்ஸியா, பெர்த், ஸ்திரேலியா [New Norcia, Near Perth, Australia]

    Philae Lander components

    அணுசக்தி உந்தும் விண்ணுளவியில் விண்கல் தள ஆய்வுகள்

    2007 மார்ச் 14 ம் தேதி நாசா வானியல் நிபுணர் டாக்டர் பால் பெல் 2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் கால் வைக்க மனிதரை அனுப்புவதற்கு முன்பாக, நிலவுக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு விண்கற்களில் [Asteroid] விண்வெளி விமானிகளை அனுப்பி அவற்றைப் பற்றி அறிந்து வரும் விண்கப்பல் ஓரியான் [Orion Spacecraft] திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஓரியான் விண்கப்பல் முதன்முதலில் அணுசக்தி ஆற்றலில் ஏவப்பட்டு அண்ட வெளியில் பயணம் செய்யப் போகிறது. அத்திட்டத்தில் விண்கப்பல் தேர்ந்தெடுத்த சிறு விண்கல் ஒன்றைச் சுற்றும். பயணம் செய்து பங்கெடுக்கும் மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் விண்கப்பலில் அமர்ந்து கண்காணிக்க இருவர் விண்கல்லில் இறங்கித் தடம் வைத்து அதன் மண்தளப் பண்பாடுகளை ஆய்வு செய்வார்.  அத்துடன் அங்கே நீர் உற்பத்தி செய்யத் தேவையான ஆக்ஸிஜென், ஹைடிரஜன் வாயுக்களைப் பிரித்தெடுக்க ஏதுவான மூலத்தாதுக்கள் கிடைக்குமா வென்றும் கண்டறிவார்.  செவ்வாய்க் கோள் யாத்திரைக்கு நிலவைப் போல் விண்கற்களை இடைத்தங்கு அண்டங்களாக விமானிகள் பயன்படுத்த முடியுமா வென்றும் கண்டறிவார்கள்.  அந்த பயணத்துக்கு நிலவுக்குச் செல்வதை விட சற்று கூடுமானதாய் 7 முதல் 14 தினங்கள் நாட்கள் எடுக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது.  டாக்டர் பால் பெல் தயாரித்த அந்த புதிய திட்டத்திற்கு நாசா மேலதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளர்கள்.

    Rosetta Spaceship Launching 

    [March 2, 2004]

    Rosetta launching

    2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் [Ariane-5G+] மூலமாக ஏவப்பட்டது, ரோஸெட்டா விண்ணுளவி.  ரோஸெட்டாவின் முதல் பூகோளச் சுழல்வீச்சு [Earth Gravity Assist (Earth’s Fly-by)] 2005 மார்ச் 4 ஆம் தேதி நிகழ்ந்தது. “ஈர்ப்பாற்றல் உந்தியக்கம்” என்பது கவண் கல்லைக் கையால் வீசிச் சுழற்றி அடிப்பது [Sling-shot like Effect] போன்றது.  விண்ணுளவியின் இரண்டாவது கவண் வீச்சைச் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பாற்றல் புரிந்தது.  அப்போது விண்ணுளவின் வேகம் செவ்வாய்க் கோளின் வேகத்துக்கு ஒப்பாக மணிக்கு 22,500 மைல் வீதத்தில் பயணம் செய்தது.  மூன்று டன் எடையுடைய ரோஸெட்டா விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றப் பின்புறம் சென்ற போது 20 நிமிடங்கள் ரேடியோ அலைச் சமிக்கைப் பூமிக்கு வராமல் தடைப் பட்டது!  விண்ணுளவியின் சூரிய ஒளித்தட்டுகளுக்கு பரிதி ஒளி மறைக்கப் பட்டு மின்சார உற்பத்தி நின்றது.  நுணுக்க விண்வெளி இயக்கத்தில் நடந்த அந்த பயங்கர 20 நிமிடங்களில் ஈசா எஞ்சினியரின் மூச்சும், பேச்சும் சற்று நின்று நெஞ்சத் துடிப்பு வேகமாய் அடித்துக் கொண்டது.  விண்ணுளவி செவ்வாயின் முதுகுப் புறத்தைத் தாண்டி வெளிவந்து, பூமியில் ரேடியோ தொடர்பு மீண்டதும் அனைவரது முகத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழுந்தது.

    Philae touchdown-3

    ஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் வால்மீன் உளவுப்பணி

    ஈசாவின் ராக்கெட் ஏவுதளம் தென் அமெரிக்காவின் வடக்கே பிரென்ச் கயானாவில் கௌரொவ் [Kourov, French Guiana] என்னுமிடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 1993 நவம்பரில் அகில நாடுகளின் ரோஸெட்டா விண்வெளித் திட்டம் ஈசா விஞ்ஞானக் குழுவின் அங்கீகாரம் பெற்றது.  அந்த திட்டத்தின் குறிக்கோள், விண்ணுளவி ஒன்றை அனுப்பி, வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சுற்றிவரும் “சூரியுமாவ்-ஜெராஸிமென்கோ” (Churyumov-Gerasimenko) என்னும் வால்மீனைச் (67P) சந்திப்பது.  விண்கப்பல் ஒன்று வால்மீனை வட்டமிட, தள உளவி ஒன்று கீழிறங்கி வால்மீனில் தங்கிச் சோதனைகள் செய்யும். அது பத்தாண்டு நீள் பயணத் திட்டம்.  அந்த விண்ணுளவிக்கு “ரோஸெட்டா” [Name from Rosetta Stone of Black Basalt with Egyptian Scripts about Ptolemy V] என்னும் பெயர் அளிக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் ஏரியன்-5 [Ariane 5 Generic Rocket Engine, Payload 6-9.5 Tons] 2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து, ஈசாவின் ரோஸெட்டா விண்ணுளவியைத் தூக்கிக் கொண்டு கிளம்பியது.

    Rosetta Orbit

    ரோஸெட்டாவின் வேகத்தை அதிகமாக்கவும், பயணப் பாதையை நீளமாக்கவும் பூமி, செவ்வாய், லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் [Astroids: Lutetia & Steins] ஆகிய அண்டக்கோள்களின் ஈர்ப்பாற்றல் சுழல் உந்துத் திருப்புகள் [Gravity Assist Maneuvers] பயன்படுத்தப் பட்டன.  2005 மார்ச் 4 ஆம் நாள் விண்ணுளவி பூமியைச் சுற்றி வந்து வேகத்தையும், பாதை நீள்வட்டத்தையும் முதலில் மிகையாக்கியது.  நுணுக்கமான அந்த இயக்க முறைகள் அனைத்தும் ஜெர்மெனியில் உள்ள ஈசாவின் விண்ணுளவி ஆட்சி அரங்க எஞ்சியர்களால் தூண்டப்பட்டுச் செம்மை யாக்கப்பட்டுக் கண்காணிக்கப் பட்டன.  சமீபத்தில் [2007 பிப்ரவரி 25] வெற்றிகரமாகச் செவ்வாய்க் கோள் சுழல் உந்துத் திருப்பல் [Mars Fly-by] செய்யப் பட்டுள்ளது.  அடுத்த இரண்டு பூகோளச் சுழல் உந்து திருப்பல்கள் 2007 நவம்பரிலும், 2009 நவம்பரிலும் நிகழப் போகின்றன.  பிறகு லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் சுழல் உந்துத் திருப்பல்கள் முறையே 2008 செப்டம்பரிலும், 2010 ஜூலையிலும் திட்டமிடப் பட்டுள்ளன.

    Rosetta-comet orbit

    பரிதியை நோக்கிப் பயணம் செய்யும் ரோஸெட்டா விண்ணுளவி நீள் வட்டப் பாதையை விட்டுப் புலம்பெயர்ந்து, வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்துக்குப் புகுந்திடும் நிகழ்ச்சி, இன்னும் ஏழாண்டுகள் கடந்து 2014 மே மாதம் ஆரம்பிக்கும்.  2014 ஆகஸ்டில் தாய்க் கப்பல் விண்ணுளவி வால்மீனைச் சுற்ற ஆரம்பித்து, நவம்பரில் தள உளவியைக் கீழே இறக்கி விடும்.  தள உளவி வால்மீனில் அமர்ந்து சில மாதங்கள் வால்மீனின் தளப் பண்பாடுகளை ஆய்வு செய்துத் தகவலைத் தாய்க் கப்பலுக்கு அனுப்பிக்கும்.  தாய்க் கப்பல் அனுப்பும் தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ அலைத்தட்டு உறிஞ்சி எடுத்து ஜெர்மெனியில் உள்ள ஆட்சி அறைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்.  ரோஸெட்டா வால்மீன் திட்டப் பணிகள் 2015 டிசம்பர் மாதம் நிறைவு பெறும்.

    Philae Lander

    Comet Details

    (தொடரும்)

    **********************
    தகவல்:

    1. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
    2. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
    3. Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
    4. Watch Deep Impact’s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.comJuly 1, 2005]
    5. NASA to Study Comet Collision www.PhysOrg.com [2005]
    6. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]
    7. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006]
    8. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
    9. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html [Deep Impact: 1]
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html [Deep Impact: 1]
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html[Stardust Probe: 1]
    13 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601272&format=html[Stardust Probe: 2]
    14 BBC News: Space Probe Performs Mars Fly-By [Feb 25, 2007]
    15 European Space Agency (ESA) Science & Technology -Rosetta Fact Sheet [Feb 19, 2007]
    16 Europe’s Space Probe Swings By Mars [Feb 25, 2007]
    17 Europe Comet Probe Makes Key Mars Flyby By: David McHugh (Associated Press) [Feb 24, 2007]
    18 Spaceflight Now: Comet-bound Probe Enjoys Close Encounter with Mars By: Stephan Clark [Feb 25, 2007].
    19 SkyNews: Was Hyakutake the Comet of the Century [July 1996] &
    SkyNews: Comet Hale-Bopp [April 1997]
    20 Sky & Telescope: Brightest Comet in 41 Years [April 2007]
    21 BBC News Houston: Asteroid Mission Concept Unveiled By: Paul Rincon [March 14, 2007]

    22. http://www.spacedaily.com/reports/Touchdown!_Rosettas_Philae_probe_lands_on_comet_999.html  [November 12, 2014]

    23.  http://www.spacedaily.com/reports/A_close_up_with_a_comet_999.html  [November 12, 2014]

    24. http://www.spacedaily.com/reports/European_probe_lands_on_comet_fails_to_anchor_999.html  [November 12, 2014]

    25.  http://www.bbc.com/news/science-environment-30034060  [November 13, 2014]

    26.  http://www.spacedaily.com/reports/Philae_to_attempt_comet_drill_mission_scientist_999.html  [November 14, 2014]

    27.  http://www.bbc.com/news/science-environment-30058176  [November 15, 2014]

    28.  http://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft)  [November 15, 2014]

    29.  http://fr.wikipedia.org/wiki/Rosetta_(sonde_spatiale)  [?November 15, 2014]

    30.  http://sci.esa.int/rosetta/14615-comet-67p/  [November 16, 2014]

    31. http://storiesbywilliams.com/2014/09/17/news-from-space-rosetta-maps-comet-surface/

    31a.  http://blogs.esa.int/rosetta/2015/06/11/the-quest-to-find-philae-2/  [June 11, 2015]

    32.  http://sci.esa.int/rosetta/  ESA Rosetta Website [June 19, 2015]

    33. https://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft) [June 20, 2015]

    34.  http://rosetta.jpl.nasa.gov/  [NASA Rosetta Site]

    35.  http://www.space.com/27697-rosetta-comet-landing-full-coverage.html

    36.  http://www.telegraph.co.uk/news/science/space/11195744/The-Rosetta-mission-everything-you-need-to-know-about-the-quest-to-catch-a-comet.html  [June 20, 2015]

    ********************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (June 20, 2015)]

    Attachments area
    Preview YouTube video Landing on a Comet – The Rosetta Mission

    Landing on a Comet – The Rosetta Mission

    Preview YouTube video CHASING A COMET – The Rosetta Mission

    CHASING A COMET – The Rosetta Mission

    Preview YouTube video Landing On a Comet – Worlds First

    Landing On a Comet – Worlds First

    Preview YouTube video Rosetta – Space Mission to a Comet

    Rosetta – Space Mission to a Comet

    Preview YouTube video Rosetta media briefing at ESOC 10 November

    Rosetta media briefing at ESOC 10 November

    Preview YouTube video Rosetta mission: Results from comet landing: 14 Nov, 13:00 GMT

    Rosetta mission: Results from comet landing: 14 Nov, 13:00 GMT

    Share
  • த.ம.க.ப. சிறுகதைப் போட்டி

    மீ. த. பாண்டியன்,
    தலைவர்,
    தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்

     

    amt

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”இந்தக் குழந்தைதான் இஞ்சா(று)(INCH 6) ,இதயத்து
    சந்தில் குடியிருக்கும் ஜீவனாம்சம், -வந்தித்(து),
    அழைத்திட வந்துன் அடிமையாய் ஆவான்:
    பிழைத்திட கண்ண பிரான்’’….கிரேசி மோகன்….

    இஞ்சாறு- கட்டை விரலளவு அங்குஷ்டாப்யாம்….’’ஹ்ருதய குஹாயாம்’’….

    நமக்கு ஆறடியில் அடக்கம்….அவனளிப்பான் ஆறு இஞ்ச்சில் அடைக்கலம்….

    Share