Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    இன்று கண்ணன் அம்ப்யர் போல் இருகரங்களை தூக்கி
    மழையில் நனையும் மாடுகளுக்கு ‘’ஆறு’’தல் சிக்ஸர்
    அளிக்கிறான்….

    ”ஆண்டவன் நானென்(று) அறிந்தபின்னும் இந்திரா,
    மூண்டெழச் செய்வதேன் மாரியிது -வேண்டாமே!,
    மேடெடுத்து அம்ப்யர்போல் மாடுகளுக்(கு) ஆறளித்த
    தேர்ட்அம்ப் பயரும்நான் தான்’’….கிரேசி மோகன்….

    மேடு -கோவர்த்தனக் குன்று….மாரி -மழை….

    Share
  • ரிபு கீதை படித்த பாதிப்பில்….

     

    ஆதித்தன் அம்புலிவிண் மீன்கள் மாயை
    ஆடவரும் பெண்டிரும்அவ் அலிகள் மாயை
    போதிமரத் தடிவாழும் புத்தரும் மாயை
    புகன்றவந்த நிர்வாணப் பூச்சும் மாயை
    வாதிட்டு வென்றசங் கரனும் மாயை
    விளைந்தஷண் மதங்களும் மாயை மாயை
    ஆதியந்த மிலாபிரமன் அடையா தோற்கு
    அகமாயை சகமாயை அனைத்தும் மாயை

    அதனாலோ இதனாலோ அதுயிங் கில்லை
    அதுவாக அதற்குள் அதுவாய் ஆகி
    அதன்பின்னே அதுஅலுத்து அதுவே றாகி
    அதுவென்றும் இதுவென்றும் அதனால் மாறி
    அதற்கப்பால் இதற்குள்ளே அதுபோய் நின்று
    அதுஆதி இதுஅந்தம் எனப்பேர் கொண்டு
    எதுஇதுவென்(று) எனஅதுவே எங்கும் தேடி
    இதுஅதுவென்(று) அதுஅகமென்(று) அடங்கும் ஆன்மா
    வைகுண்டம் கைலாஸம் வானம் பூமி
    வார்த்தைகள் தானன்றி வேறே இல்லை
    பொய்கொண்ட வாழ்க்கையைப் புறத்தே தள்ளி
    புலன்களுக்கு அப்பாலே பார்த்துப் பார்த்து
    மெய்கண்டு கொள்ளஅம் மாயை போகும்
    முயல்கொம்பால் மலடிமகன் பேரை நீரில்
    கைகொண்டு எழுதிடலாம் குருடன் என்று
    கையெழுத்து காய்வதற்குள் காலம் மாறும்….

    காட்சிகளும் காண்போனும் காணும் கண்ணும்
    கற்பிதமா சொப்பனமா கானல் நீரா
    ஆட்சியிது ஐம்புலன்கள் ஆட்டம் அன்றோ
    ஆதலினால் ஆன்மாவை ஆத ரித்து
    சாட்சிபரி பாலனமாய் சான்றோர் போக்கில்
    சுகதுக்க பேதமற சார்ந்தோர் உள்ளம்
    சூழ்ச்சிபுரி காலன்தன் சூதை வென்று
    சும்மாயி ருக்கலாமே சுகமாய் என்றும்….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    கட்டை விரல் சைஸுக்கு ஆன்மா இருப்பதாய் ஐதீகம்(அங்குஷ்டாப்யாம்)
    அந்த ஆன்மன் கிருஷ்ண ஆண்மன்….

    அங்குஷ்டாப்யாம்
    ———————-

    வீணாய் இலைகளும் வேர்களும் இல்லாது
    தானாய் முளைக்கும் மரமிவன் -நானார் ?
    உரலில் தலைவிட்டு ஓவென்(று) அழுதால்
    விரலளவு ஆகும் வியப்பு….கிரேசி மோகன்….

    பகவான் ஸ்ரீ அரவிந்தர் சொல்வார்….
    ‘’An Eternal Child Plaqying An Eternal game
    In an Eternal Garden”…..

    அந்தக் குழந்தைதான் கிருஷ்ணன்….
    அவனது GAME தீராத விளையாட்டு….
    அவன் ஆடும் GARDEN பிருந்தாவன் -கார்டன்….

    ‘’சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே,
    எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே!
    தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்,
    சீராக ஆடிடும் சேய்’’….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 15, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு ‘மல்ட்டி ஃபன்’ குழு மாணவர்கள் 

    20150527_499_HR_042

    ஏர்பஸ் விமான நிறுவனம் யூனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கான உலகளாவிய போட்டியாக “ஃப்ளை யுவர் ஐடியாஸ்” (Unesco-Airbus ‘Fly Your Ideas’ global student competition) என்ற போட்டியை நடத்தி வருகிறது. மாணவர்களிடம் வானூர்தி தயாரிப்பின் தொழில் நுட்ப ஆர்வத்தைத் தூண்டுவதும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஊக்கமூட்டுவதுமே இப்போட்டியின் அடிப்படை நோக்கமாகும். நான்காவது முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிபெற்ற “மல்ட்டி ஃபன்”(Multifun) என்ற இந்திய மாணவர் குழுவினரை இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். மல்ட்டி ஃபன் மாணவர் குழுவினரை வல்லமையாளர்களாகப் பரிந்துரைத்தவர் வல்லமை இதழின் நிறுவனர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள். அவரது பரிந்துரைக்காக அவருக்கு நன்றியை வல்லமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

    Team Multifun2

    இந்த ஆண்டு இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,700; 104 நாடுகளில் இருந்து பலதுறைகளையும் சேர்ந்த 518 குழுவினர் போட்டியிட்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஆசியா பசிஃபிக் நாடுகளின் மாணவர்கள் 45%, ஐரோப்பியர் 35%, அமெரிக்கர் 15%. இவர்களில், 71% குழுக்கள் பலவகைப் படிப்புகளைக் கொண்ட மாணவர்களையும், பலநாடுகளில் வாழும் மாணவர்களையும், ஆண்களும் பெண்களும் எனப் பல பிரிவினரும் இணைந்த குழுக்களாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் செயல்திறன் மேம்பாடு, பயணிகளின் வசதி அதிகரிப்பு, எரிபொருள் சேமிப்பு, எளிய செயல்படுத்தும்தன்மை, பயணப் பாதுகாப்புக்கு உதவி, மக்கள் தொடர்பு மேம்பாடு என விமானப்பயணத்தினை மேம்படுத்தும் வகையில் குறிப்பிட்ட இந்த ஆறு பிரிவுகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து தங்கள் திட்டத்தை மாணவர்கள் ஏர்பஸ் நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.  இவ்வாறு மாணவர்கள் சமர்ப்பித்த திட்டங்களைப் பரிசீலித்த பின்னர், சென்ற ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற முதல் சுற்றில் 100 குழுவினர் இரண்டாம் சுற்றுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். சென்ற மாதம் மே 27 ஆம் தேதி அன்று நடந்த இறுதிச் சுற்றில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்கள் பிரேசில், சீனா, ஜப்பான், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 5 குழுவினர்.

    Finalists on the stage collage

    நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Delft University of Technology, Netherlands) பயிலும் இந்திய மாணவர் சதீஷ்குமார் அனுசூயா பொன்னுசாமியின் தலைமையில் நான்கு நாடுகளில் படிக்கும் ஐந்து இந்திய மாணவர்கள் ‘மல்ட்டி ஃபன்’ என்ற ஒரு குழுவாக இணைந்தார்கள். தாமோதரன் வீராசாமி (சிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன்), மொஹித் குப்தா (ஜியார்ஜியா டெக் யுனிவர்சிட்டி, அமெரிக்கா) , சஷாங்க் அகர்வால் மற்றும் அஜித் மோசஸ் (இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு) என உலகின் பல பகுதிகளில் படித்துவரும் இந்திய மாணவர்கள் தொலைத்தொடர்பு வழியாகவே இணைந்து பணியாற்றினார். இவர்கள் பொறியியல் துறையிலும், விண்வெளிப் பொறியியல் துறையிலும், வானியல் துறையிலும் உயர்கல்வி, முனைவர் ஆய்வுக்காகப் பயிலும் மாணவர்கள். மொஹித் குப்தாவைத் தவிர்த்து பிறர் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை வழி நடத்தியவர் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸின் பேராசிரியர் தினேஷ்குமார் ஹருர்சம்பத் அவர்கள். கடந்த ஆறு மாதங்களாக இணையவழி ஒருங்கிணைந்து பணியாற்றிய பின்னர், ஜெர்மனியில் நடந்த இறுதிப் போட்டியில் நேரடியாக முதன்முதலில் சந்தித்து தங்களது அறிவியல் கருத்தை போட்டியின் நடுவர்களிடம் மல்ட்டி ஃபன் குழுவினர் விளக்கினர்.

    மல்ட்டி ஃபன் குழு ஏர்பஸ் நிறுவனத்தின் போட்டியில் முன்வைத்தத் திட்டம்:

    Team Multifun3
    விமானப்பயணத்தின் பொழுது ஏற்படும் அதிர்வுகளைப் பயன்படுத்தி அவற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, மின்கலங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து விமானப்பயணத்தின் பொழுது தேவைப்படும் விளக்குகள், கேளிக்கை பயன்பாட்டிற்கான மின்திரைகள் ஆகியவற்றை இயக்கப் பயன்படுத்துவது இவர்கள் முன்வைத்த திட்டமாகும். விமானப்பயணத்தில் ஏற்படும் அதிர்வுகள் யாவும் இதுநாள்வரை விரயமாகின்றன. ‘பைஸோஎலக்ட்ரிக் இழைகள்‘ (Piezoelectric fibres) சிறு அதிர்வுகளால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இந்த இழைகளால் ஆன உறையை விமானத்தின் இறக்கைகளின் மேல் அமைத்து அதன்மூலம் பெறும் பெறும் மின்சக்தியை மின்கலத் தகடுகளில் சேமித்து பயன்படுத்த இயலும். நீண்ட தூர விமானப்பயணத்தில் விமானம் 12 மணி நேரம் வரை பறக்கும், அப்பொழுது கிடைக்கும் மின்சக்தியே விமானத்தின் விளக்குகளை ஒளிர்விக்கப் போதுமானது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் விமானப்பயணத்தில் எரிபொருள் சேமிப்பிலும் முன்னேற்றம் காணலாம் என்று மல்ட்டி ஃபன் குழுவினர் நடுவர்களுக்கு விளக்கினர். இவர்களது திட்டம் நடைமுறைப்படுத்தவும் எளிதானது, தொலைநோக்குப் பார்வை கொண்டது, முன்னர் இதுவரை எவரும் முன்வைக்காத ஒரு புதிய கோணம் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 30,000 யூரோ வெள்ளிகள் பரிசளிக்கப்பட்டனர்.

    SKETCH_Multifun 1

    வெற்றிபெற்ற குழுவின் தலைவர் சதீஷ்குமார் அனுசூயா பொன்னுசாமி, தனது குழுவினர் யாவரும் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸில் ஒன்றாகப் படித்த மாணவர்கள், இந்தியாவின் பின்புலம் கொண்ட மாணவர்கள் என்றாலும் பல்வேறு மொழிகளையும் பேசும் பின்புலம் கொண்டவர்கள் என்றும், அவர்களது பலவிதப் பின்னணியே மல்ட்டி ஃபன் என்று குழுவிற்குப் பெயரிடக் காரணமானது என்று வெற்றிபெற்ற பின்னர் பத்திரிக்கைகளுக்கு அளித்த நேர்காணலில் கூறினார். இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸின் கல்விச் சூழ்நிலையும், வழங்கும் பயிற்சியும் புதுமையான எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது என்றும் கூறியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி, புதுமையான திட்டமொன்றை முன்வைத்து, உலகளாவிய போட்டியில் வெற்றிபெற்று தாய்நாட்டின் பெருமையை உயர்த்திய இம்மாணவர்களை வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பாராட்டிப் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தகவல்களும் படங்களும் வழங்கிய இணையதளம்: http://www.airbus-fyi.com/article/769/team-multifun

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 1

    புலவர் இரா.  இராமமூர்த்தி.

    திருவள்ளுவரின் ஆன்மிகக் கொள்கை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பது. அவர் இறைவன் , உயிர், தளை ஆகியவற்றைப் பற்றித் தனிச்சிறப்புடைய கருத்துக்களை வழங்கியுள்ளார். இறைவன் பற்றிய இந்துமதத்தின் புராணக் கருத்துக்களை இடையிடையே விளக்கியுள்ளார்.

    அவர் ”மடியின்மை” அதிகாரத்தில்,

    “மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅயது எல்லாம் ஒருங்கு.”

    என்ற திருக்குறளிலும்,

    ”ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி”

    என்ற திருக்குறளிலும்,
    ”மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு மூவுலகையும் அளந்த திருமாலின் வாமனாவதாரக் கதையையும், இராமாயணத்தில் அகலிகை சாபம் பெறக் காரணமான இந்திரன் இறைவனிடம் தண்டனை பெற்ற வரலாற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

    முதல் திருக்குறளில், ” மடியிலா மன்னவன்” என்ற தொடரின் பொருளை – என்றும் முழுமையான சுறுசுறுப்புடன், வஞ்சனை இன்றி உழைக்கும் மன்னவன் – என்று பொருள் கொண்டால், மாபலி முன் குறளனாய்த் தோன்றி ” மூன்றடி மண் வேண்டும்” என்று வரம் கேட்டபின், யாருமே நினைந்திராத பேருயரம் பெற்று வளர்ந்து, தான் கேட்ட மூன்றடி நிலத்தின் அளவை மாற்றி வஞ்சனை செய்த வாமனன் அளந்து பெற்ற மூவுலகையும், வள்ளுவர் காட்டும் மடியிலாத சுறுசுறுப்புடைய வஞ்சனையில்லாத மன்னவன் பெறுவான் என்று புதுப் பொருள் கொள்ளலாம் !

    இதனை, இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குறிப்பாக விளக்குகிறார்…

    ”மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
    தாவிய சேவடி சேப்பத் தம்பியோடும் கான்போந்து
    சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
    சேவகன்!”

    என்ற பாடற்பகுதியில், ”முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி ” என்ற தொடரின் பொருளாக, ”முறைமை நிரம்பாத வஞ்சனைச் செயலால் தாவிய சேவடி” என்ற கருத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டதை உணர்கிறோம்! அதுமட்டுமல்லாமல், அவ்வாறு வஞ்சனையால் தாவிய சேவடிக்கு தண்டனை தந்து கொண்டு , பெருமாளே தம் சேவடி சிவக்கச் சிவக்க நடந்தார் – என்ற பொருளில் அவர் எழுதியுள்ளார் என்பதையும் உணர்கிறோம்! ஆதலால், வாமனன் வஞ்சனையால் அடைந்த மூவுலகையும், மடியின்றி நேர்மமையாக அரசாளும் மன்னவன் எய்துவான் என்ற புதுப்பொருள் நமக்கு உரிய வகையில் நல்ல விளக்கத்தைத் தருகிறது.

    திருவள்ளுவரும் ஏனைய சான்றோர்களும் உலகில் பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறக்கும் உயிரின் நிலையை மிகவும் துன்பமுடையது என்றே கூறுகின்றனர். திருக்குறளில்,”பிறவிப் பெருங்கடல்”(10) , வாழ்நாள் வழியடைக்கும் கல்”(38), ”வாழ்க்கை வழி எஞ்சல்”(44) , எழுபிறப்பும் ”(62, 107), ”இழிந்த பிறப்பு”133) , ”தோன்றின் புகழோடு ”(236), ”சாக்காடு, பிறப்பு”(339) ”பிறப்பறுக்கல்”(345), ”பிறப்பறுக்கும்”(349), முதலான நாற்பத்து நான்கு குறட்பாக்களில் பிறப்பின் இழிவைத் திருவள்ளுவர் கூறியுள்ளார்!

    இந்த பிறப்பிறப்புத் தொடர்ச்சியை மாணிக்கவாசகர்,

    ”பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் ”,

    ” புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் ” என்றும் ,

    ”மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே” என்றும் பாடுகிறார்…

    இந்தப் பிறப்பினுள் பலவகைப்பட்ட துன்பங்களை நாம் அனுபவிப்போம், இவை பிறக்கும் முன்னரே உருவாகி, நம்மை அச்சுறுத்தும் என்கிறார் மாணிக்க வாசகர்.

    பிறப்பதற்கு முன்னர் தாயின் கருப்பையுள் கிடக்கும் குழவி, ஒவ்வொரு திங்களும் எத்தகைய துன்பச் சூழ்நிலையிலிருந்து தப்பிப் பிழைக்கிறது என்பதை அவர் துன்பங்களை

    யானை முதலா எறும்பு ஈறு ஆய,
    ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
    மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
    ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
    ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;
    இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;
    மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;
    ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;
    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;
    ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;
    ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
    தக்க தச மதி தாயொடு தான் படும்
    துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

    என்றும் பாடுகிறார். மேலும் பிறந்து வளரும்போது எத்தனைத் துன்பங்களிலிருந்து ஓர் உயிர் பிழைக்கிறதுஎன்பதையும் அவரே பாடுகிறார்…

    ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
    ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
    காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
    வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
    கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
    ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
    கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
    எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
    ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
    கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
    பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
    மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
    கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
    செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
    நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;
    புல் வரம்பு ஆகிய பல துறை பிழைத்தும்
    தெய்வம் என்பதோர் சித்த முண்டாகி
    என்று பாடுகிறார்.

    இவ்வாறு தாயின் கருப்பைக்குள்ளும், பிறந்தபின் வெளி உலகிலும் இந்த உயிர் படும் பாட்டை பிறவித்துன்பங்கள் என்று சான்றோர் கூறுவர்.

    ”கருப்பத்தூறிப் பிறவாதே கனக்கப் பாடுற்று உழலாதே” என்று அருணகிரிநாதர் பாடுகிறார்! இவற்றுக்கெல்லாம் மூலகருத்தைத் திருக்குறள் அழகாகக் கூறுகிறது. நாம் பிறப்பதற்கு உரிய கருவி, தாயின் கருப்பை. இந்தக் கருப்பைக்குள் உயிரை இட்டு இறைவனே வளர்க்கிறார்! இனி, தனிச் சிறப்புடைய இரண்டு குறட்பாக்களை இங்கே ஆராய்வோம்

    ”வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல ”

    என்ற குறட்பாவுக்கு, ”விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் திருவடியை வழிபாடு செய்தோருக்கு, எக்காலத்தும், என்றும் பிறவித் துன்பங்கள் இல்லை!” என்றே அனைவரும் இதுகாறும் பொருள் கூறி வந்தனர். மேலே நாம் கண்ட பிறப்புத் துன்பங்களைப் பற்றிய கருத்துக்களின் படி, ”இடும்பை ” என்ற சொல்லை – இடும்+ பை – என்று பிரித்து நாம் புதிய பொருளைக் காணலாம்! இதன் படி இடும் பை என்பது நம்மை ஏற்றுத் தாங்கிப் பிறப்பிக்கும் கருப்பையைக் குறிக்கும்! விருப்பு வெறுப்பற்ற இறைவனை வழிபட்டார்க்கு எக்காலத்தும் இனிப் பிறப்புத் துன்பம் இல்லை; அதாவது இடும் (கருப்)பை இல! என்று இத் திருக்குறளுக்குப் புதிய , பொருத்தமான பொருளைக் காணலாம் ! இவ்வாறே,

    ”நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும் ”(138)

    என்ற திருக்குறளுக்கும் இவ்வாறே புதிய பொருளைக் காணலாம்!மேலும் …

    ” இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
    கையாறாக் கொள்ளாதாம் மேல்” (627)

    என்ற திருக்குறளையும் இவ்வாறே காணலாம். திருக்குறளுக்குப் பொருள் காணும் முறைகளுள் இதுவும் ஒருவகையே! அதற்காக இடும்பை என்ற சொல் துன்பம் என்ற பொருளில் அமைந்த மற்ற குறட்பாக்களுக்கும் இடும்+பை என்று பொருள் கொள்ளுதல் தவறாகும்.

    திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
    ஆலந்தூர், சென்னை 600 016.

    Share
  • படக்கவிதைப் போட்டி (17)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11356062_847745791946288_1022635255_n

    123121007@N08_rதிரு ஆதித்யா நாகராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 170

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    சாரணர் கூறிய குரங்குக் கை வானவனது வரலாறு

    சாரணன் கூறியதாவது:

    முன்பு ஒரு காலம்
    ’எட்டி’ எனும் பட்டம் பெற்ற
    ‘சாயலன்’ எனும் வணிகன் ஒருவன் இருந்தான்
    பட்டினி இருந்து நோன்பு செய்யும் பலரும் வந்து
    தம் இல்லம் சேர்ந்து தானம் செய்ய வேண்டி
    அவன் இல்லம் துறவாது வாழ்ந்து வந்தான்

    மேலான தவத்தால் சிறப்புப் பெற்ற ஒருவனை
    இல்லறத்துணையாகிய சாயலன் மனைவி,
    தம் தீவினைகள் அழிய வேண்டி                       monkey for silambu
    ஒரு நாள் எதிர் கொண்டழைத்து
    உணவு படைத்தாள்

    அப்போது அவ்வூர் மக்கள் அலைக்கழித்ததால்
    அச்சப்பட்ட சிறுகுரங்கு ஒன்று
    அம்மனைக்குள் புகுந்தது
    அருளும் அறனும் வாய்க்கப்பெற்ற
    அம்மாதவ(ன்) அடிகளை வணங்கி,
    அவன் உண்டபின் மிஞ்சிய சோற்றையும்
    அவன் ஊற்றிய நீரையும் விரும்பி உண்டு
    தன் பசி நீங்கியது

    இன்பமடைந்த அக்குரங்கு
    அவன் முன்னே சென்று நின்று
    தன் நன்றியை அறிவிக்கும் வண்ணம்
    அவன் முகத்தை நோக்கியபடி இருந்தது

    இச்செய்கையை விரும்பிய
    பிறழாத அறக்கொள்கையுடைய அம்மாதவனும்
    சாயலன் மனைவியை நோக்கி,
    ‘இல்லக்கிழத்தி!
    இக்குரங்கினை நின் மக்களைப் போலப்
    போற்றிப் பாதுகாப்பாயாக!’ என்றுரைத்தான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 163 – 174

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • இரட்டைவால் குருவி!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    கரிக்குருவி, வலியன் குருவி, கரிச்சான்,
    கருவாட்டு வாலி, ஆனைச்சாத்தன், காரியெனும்
    கறுப்பான பல பெயருடைய இரட்டைவால் குருவி
    கண்டம் ஆசியா தாயகமான சிறுகுருவி

    கீச்சுக் கீச்சு ராகமாய் உற்சாகச் சுரத்தில்               sparrow
    கீதமிசைக்கும்; அடர்த்தியற்ற காட்டில் வாழும்
    வால் இரண்டாய்ப் பிளந்து ஆங்கில
    ’வி’  எழுத்துருவில் இருபத்தெட்டு செ.மீ. நீளம்

    பயமற்றது, துணிச்சல், உரமுடை மனம்
    பசுக்களின் மீதேறிச் சவாரி செய்யும்
    பருந்து, காகம், கழுகுகளை ஓடஓட
    பராக்கிரமமாய் விரட்டிக் கொத்தி எதிர்க்கும்!

    எறும்புப் புற்றின் மீது அமருமாம்
    எண்ணற்ற தன்னுடலின் உண்ணிப் பூச்சிகளையழிக்க!
    எறும்புகள் வெளியாக்கும் பாஃமிக் அமிலத்தில்
    எல்லாப் பூச்சிகளும் அழியுமாம்! வியப்பு!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(76)

    -செண்பக ஜெகதீசன்

    கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர். (திருக்குறள்-393: கல்வி)

    புதுக் கவிதையில்…

    கண்போன்றது கல்வி,
    கற்றவர்தான்
    கண்ணுடையார் எனப்படுவர்…

    கல்லாத மூடர்
    முகத்திலிருப்பவை
    கண்களல்ல,
    பயனிலாப் புண்கள்…!

    குறும்பாவில்…

    கல்வி கற்றோர்தான் கண்ணுடையோர்,
    கல்லாதவர் முகத்திருப்பவை
    கண்களல்ல, புண்கள்…!

    மரபுக் கவிதையில்…

    முன்னால் நடப்பதைப் பார்ப்பதற்கே
    –முகத்தில் இரண்டு கண்வேண்டும்,
    தன்னால் உலகைக் காண்பதற்கே
    –தரமிகு கல்வி தான்வேண்டும்,
    சொன்னார் பெரியோர் கண்ணெனவே
    –சொத்தாம் கல்வி அறிவினையே,
    முன்னால் முகத்தில் உள்ளதெல்லாம்
    –மாசுடைப் புண்ணாம் கல்லார்க்கே…!

    லிமரைக்கூ…

    கல்வி அறிவுதான் உண்மையில் கண்,
    கல்லார் முகங்களில் உள்ளவை
    காணும் கண்ணல்ல, கவலைதரும் புண்…!

    கிராமிய பாணியில்…

    கண்ணுகண்ணு பாக்கும்கண்ணு
    கல்விதானே காக்கும்கண்ணு,
    பொன்னுபொன்னு மின்னும்பொன்னு
    படிப்புத்தானே மின்னும்பொன்னு…

    கல்வியறிவு கண்ணா ஆச்சி
    படிப்பறிவு பார்வயா ஆச்சி,
    படிச்சவன் மொகத்திலத்தான்
    பாத்துக்கநீ கண்ணுகண்ணு,
    படிக்காதவன் வச்சிருக்கான்
    புண்ணுபுண்ணு ரெண்டுபுண்ணு…

    கண்ணுகண்ணு பாக்கும்கண்ணு
    கல்விதானே காக்கும்கண்ணு…!

     

    Share
  • இரட்டை நான்!

    -இரா.சந்தோஷ் குமார்

    அதுவோர் இல்லம்
    ஊதுப்பத்தி மணம் பரவிய
    வரவேற்பறையில்
    ஒரு விளக்கு எரிகிறது
    அதனருகே…
    நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறேன்!

    சற்று நிமிடங்களுக்கு முன்
    அடிவயிற்றிலிருந்து எழும்பிய
    வலிப்போன்ற
    ஓர் உணர்வு
    தொண்டைக்குழியில்
    சிக்கித்திணறி
    விக்கி விக்கி
    நாசிவழியே வெளியேறியது
    அனற்போன்ற குளிர்காற்று!

    யாரோ ஒரு பெண்
    அழுதபடியே
    வெள்ளைத்திரவத்தை
    என் வாய்வழியே ஊற்ற
    அது நிரம்பிய குடத்திலிருந்து
    வெளியேறும் நீரைப்போல
    பீறிட்டது!
    ஊற்றியது என் தாயாக இருக்கும்

    யாரோ ஒரு பெரியவர்
    உடல் குலுங்கித்
    தேம்பித் தேம்பிச் சாய்கிறார்
    அவரென் தந்தையாக இருக்கும்

    இப்போது,
    வரவேற்புரை முழுக்க
    உறவு, நட்பு, மனிதமுள்ள
    மானிடர்களுடன் சில
    துரோக எதிரித் தலைகளும்!

    அன்றொருநாள்
    மூளைவெடிக்கச் சிந்தித்தெழுதிய
    என் எழுத்துகளுக்கு
    மறுப்புச்சொன்னவர்
    இன்று
    ரோஜாப்பூ மாலையினை
    என் மீது கிடத்துகிறார்…

    வெறுப்பு எச்சில்களில்
    எனைக் கழுவியவர்கள்
    மல்லிப்பூ மாலையிடுகிறார்கள்!

    சற்று நாழிகைக்குப்பின்
    பூக்கள் அலங்கரித்த
    மூங்கில் பல்லக்கில்
    எனைத்தூக்கிச் செல்கின்றனர்
    பறையின் இசையுடன்
    சங்கு முழங்குகிறது!

    ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறேன்
    என் பின்னால்
    இருபதுக்கும் மேற்பட்டவர்கள்
    சோகம் கவ்வியவாறு…

    ஓ! நான் மனிதர்களை
    சம்பாதித்து இருக்கிறேனே…!

    அதிலொருவர்
    பாவம் நல்லா எழுதுவான்
    செத்துட்டான் என்கிறார்
    ஓ இவரா…? இவர்தான்
    புத்தகப் பதிப்பகத்தார்!
    வாய்ப்புக்கேட்டு
    என் தன்னம்பிக்கையில்
    பலமாக இவர் கதவை
    ஓர் அங்கீகாரத்தென்றலுக்காக
    அன்று தட்டியப்போது
    சாளரத்தினை சற்றுத்திறந்து
    “பத்துவிரல்கள் வைத்து
    கணினி எலிக்கருவி பிடித்து
    இணையத்தை இயக்கத்தெரிந்த
    நீயெல்லாம் ஓர் எழுத்தாளனா?” என
    ஏளன எச்சில் துப்பியவர்தான் இவர்

    நான் எப்போது செத்துப்போனேன்.
    உடலுக்குள் ஓர் உயிராக நானாக
    உயிருக்குள் ஓர் உயிராக வேறொரு நானாக
    வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறேன்!

    பிரபஞ்சத்தில் உலாவியவாறு
    ஒரு நானாக
    பூமிப்பந்தில் உலாவியவாறு
    ஒரு நானாக
    இரட்டை நானாக
    வாழ்கிறேனே…!

    அய்யோ… வெட்டியானே…
    ஏன் என்னுடலை எரிக்கிறாய்?
    உடலுக்குள்ளிருக்கும் நான்
    மரித்துவிட்டேனா…?

    ஓ… ! ஓ….!
    இப்போது நான் எந்த நான் ?
    உடலற்ற நானா?
    உடலுள்ள நானா ?

    அச்சோ… தோழர்களே….!
    ஓர் உதவி வேண்டும்…
    இந்தப் படைப்பை
    கவிதை என்றோ
    கட்டுரை என்றோ
    ஏதேனும்
    இலக்கியப் பத்திரிகையிலோ
    மின்னிதழ்களிலோ
    பிரசுரம் செய்யவேண்டுமே..!

    உதவி…உதவி… உதவி…!

    Share
  • ஈகைக் குணம் நன்றே !

    -பா.ராஜசேகர்

    சிந்தையிலே
    விந்தையுண்டு
    பிறர்க்குதவும்
    குணமும் ஒன்று !

    இல்லாதோர்
    காண்கையிலே
    இளகிநின்று
    மனம் நோகும் !

    பிறர்க்கீய
    மனம் துடிக்கும்
    தன்
    பசி மறக்கும் !

    மறுநொடி
    மடிதேடும்
    உதவும்
    மனம் மகிழும் !

    பலன் காணாது
    பழகும்
    வரம்கண்டு
    வாழும் !

    சிந்தையிலே
    அரிய விந்தை
    வள்ளல்
    குணம் ஈகை !

    செல்வத்துள்
    சிறப்போன்றே
    இச்செல்வக்
    குணம் நன்றே !

    பிறர்க்குதவத்
    தேவை
    செல்வச்செழிப்பல்ல…
    மனக்களிப்பே!

     

    Share
  • உன்னையறிந்தால் … (9)

    நிர்மலா ராகவன்

    வாழ்வின் மறுபக்கம்

    உனையறிந்தால்

    கேள்வி: தந்தையை இழந்து நிற்கும் ஒரு சிறுவனுக்கு எப்படி ஆறுதல் அளிப்பது?

    விளக்கம்: பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையாக இருந்தால், தன் நண்பன் இறந்துவிட்டான் என்பதைக் கேட்டு அதிர மாட்டான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்வும், சாவும் இரவு, பகல் போலத்தான். ஒன்று மாற்றி ஒன்று வந்தே தீரும். `நேத்திக்குத்தானே செத்துப்போனான்? இன்னிக்கு ஏன் ஸ்கூலுக்கு வரலே?’ என்று அப்பாவித்தனமாகக் கேட்பான்.
    அப்படிப்பட்ட குழந்தையிடம் `மரணம்’ என்றால் என்னவென்று விளக்க வேண்டுவது அவசியம்.

    `தாத்தா செத்தா ஏன் எல்லாரும் அழறா? ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போங்களேன்!’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டான் என் மகன். மூன்றே வயதே ஆகியிருந்ததில், மரணத்துக்கும், நோய்க்கும் வித்தியாசம் புரியவில்லை.

    தெருவில் விரைந்த கார்களினால் நசுக்கப்பட்டு, உருத்தெரியாது கிடக்கும் தவளையை சசிக்கு இப்படி அறிமுகப்படுத்தினேன்: `இந்த தவளை செத்துப்போச்சு. தாத்தா மாதிரி. நடக்க முடியாது — கால் இல்லே..,’ என்ற ரீதியில் ஆரம்பித்தேன்.
    நாளடைவில், அவனுக்கு அது ஒரு விளையாட்டாய் ஆயிற்று. `FROG செத்துப்போச்சு. பாக்க முடியாது — கண் இல்லே, நடக்க முடியாது, பேச முடியாது, காது கேக்காது’ என்று ஒப்பிப்பான். மரண பயம் போயிற்று. அந்த ஆண்டே தான் சாகப்போகிறோம் என்று தெரிந்திருந்தது சசிக்கு.

    கதை: எனக்குத் தெரிந்த ஒருவர் எதிர்பாராவிதமாக (தூக்கத்திலேயே, 34 வயதில்) இறந்தபோது, அவரது ஒரே மகனுக்கு எட்டு வயது. அவர்களிடையே இறுகிய பிணைப்பு இருந்தது. இயந்திர கதியில் தந்தைக்கான ஈமச்சடங்குகளைச் செய்தாலும், மரணம் என்றால் என்னவென்று சரியாகப் புரியாத பருவம்.
    முப்பது பிராயம்கூட நிரம்பாத தாயுடன், வீட்டுக்கு வருகை புரிந்தவர்கள் அனைவரும் அழுது புலம்பியதைக் கண்ட பையனுக்கு ஒன்றுதான் புரிந்தது: இனி தான்தான் வீட்டில் ஆண்பிள்ளை. அம்மாவைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பாவை இனி பார்க்கவோ, பேசவோ முடியாது! நிதரிசனம் வருத்தமளிப்பதாக இருந்தாலும், அழுதால், அம்மாவின் துக்கம் அதிகரிக்கும் என்றெல்லாம் தோன்றிப் போயிற்று.

    அடுத்த பத்து வருடங்கள் அவன் மிக பொறுப்பாக நடந்துகொண்டு, கல்வியிலும் சிறந்து, தாய்க்கு மகிழ்ச்சியூட்டப் பார்த்தான். ஆனால் அவளோ! `இப்போதெல்லாம் என் மகன் யார்கூடவும் பேசறதே இல்லே!’ என்று ரகசியக் குரலில் தெரிந்தவர்களிடமெல்லாம் எடுத்த எடுப்பிலேயே சொல்லிப் புலம்புவாள்.

    உற்றாரின் சாவு தன்னைப் பாதிக்கவில்லை என்பதுபோல் காட்டிக்கொள்பவன், தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான். அவனுடைய வளர்ச்சியில் ஏதோ ஒரு குறை ஏற்பட்டு விடுகிறது. `துக்கம்’ என்றிருந்தால், அழுதுதான் தீர்க்க வேண்டும். வேறு வழியே கிடையாது.

    சில சிறுவர்கள் துக்கத்தை கோபத்தின்மூலம் வெளிப்படுத்துவார்கள். கோபம் — தம்மை இப்படி நிராதரவாக விட்டுவிட்டுப் போனவர்மேல்; தம்மீதும், பிறர் மீதும் — அந்த மரணத்தைத் தடுக்கத் தெரியாத குற்றத்துக்காக. `எனக்கு ஒரு பாதிப்பும் இல்லையே!’ என்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். ஆனால், உள்ளுக்குள் சொல்லத் தெரியாத உணர்வுகளுடன் குமைவார்கள்.

    நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டால், `ஒங்கப்பா போயிட்டார்’ என்று ஒரு குழந்தையிடம் மொட்டையாகக் கூறுவது சரியல்ல. எதனால் இறந்தார், உடலை எங்கே கொண்டு போனார்கள், என்ன செய்தார்கள் — இப்படி விரிவாக. இல்லாவிட்டால், துக்கமும், குழப்பமும் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள் கவுன்செலர்கள்.

    குழந்தைகளோ, பெரியவர்களோ, மரணம் ஒருவரை ஆட்டுவிக்கும் விதமே தனி.

    கதை:என் பக்கத்து வீட்டில் குடியிருந்த நூருல் (உண்மைப் பெயரில்லை) என்ற மலாய் பெண்மணி தன் சோகக்கதையை என்னிடம் பகிர்ந்துகொண்டாள்.
    அவளுடைய ஒரே மகன் பத்து வயதாக இருந்தபோது, ஏதோ நோய் கண்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். நூருல் கூடவே இருந்தாள்.

    ஆனால், அவள் அருகில் இல்லாத சமயம், அவன் உயிர் பிரிந்துவிட, அவளிடமிருந்து மகனுடைய மரணம் மறைக்கப்பட்டது. ஏற்கெனவே இருதயம் பலகீனமாயிருந்தவளுக்கு ஏதேதோ மருந்து கொடுத்துத் தூக்கத்திலேயே ஆழ்த்திவிட்டார்கள் — அவளால் அந்த துக்கத்தைத் தாங்க முடியாது என்றெண்ணிய குடும்பத்தினர்.

    நூருல் கண்விழித்தபோது, மகனின் உடல்கூட இல்லை. அவனை இனி என்றுமே பார்க்க முடியாது என்ற செய்திதான் கிடைத்தது. அந்த அதிர்ச்சி தாங்கமுடியாது, பார்ப்பவர்களிடமெல்லாம் அதைப்பற்றிப் பேசுவாள். பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும், அவளுடைய மகனைப்பற்றி யாராவது பேச்செடுத்தாலே கதறி அழுவாளாம்.

    அவளுடைய குடும்பத்தினர் இதைத் தலைக்குனிவெனக் கருதினர். அவளுடைய மகள், `என் தம்பியைப்பத்தி ஒங்ககிட்ட சொல்லிப் புலம்பி இருப்பாங்களே! எங்கம்மாவுக்குப் பைத்தியம், ஆன்ட்டி!’ என்று முகத்தைச் சுளித்தபடி என்னிடம் கூறினாள். அந்த இளம்பெண்ணுக்குப் புரியவில்லை ஒரு தாயின் மனம். (நீரில் மூழ்கிவிட்ட என் மகனுடைய உடலைக் கட்டிக்கொண்டு அவள் கதறியபோது எனக்குப் புரிந்தது — அவ்வளவு காலமாக வெளிவராத துக்கம் இப்போது அவள் நேசித்த இன்னொரு சிறுவனது மரணத்தில் பீறிட்டுக் கிளம்புகிறது என்று).

    “ஒரு குழந்தையோ, தாயோ இறந்தால் பெரியவர்கள் எப்படி அதைத் தாங்கிக்கொள்ள இயலும்?” (என்னை நன்றாகக்கூடத் தெரியாத சிலர் நேரில் என்னிடம் கேட்ட கேள்வி இது).

    நான்: இறந்த நபருடன் நீங்கள் ஒன்றாக இருந்திருப்பீர்கள். அதில் எந்த தருணத்தில் அவரது இழப்பை பெரிதும் உணர்கிறீர்கள்?

    கூடவே இருந்த தாயை இழந்த மாது : நானும், அம்மாவும் பால்கனியில் உட்கார்ந்து ஒன்றாகப் பேசிக்கொண்டு டீ குடிப்போம். இப்போது தனியாக இருந்தால், அழுகை வருகிறது.

    நான்: எப்போதும்போல இரண்டு கப் டீ போட்டு, `அம்மா! இது உங்களுக்கு,’ என்று சொல்லுங்கள். அம்மா எதிரில் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, அன்று நடந்ததில் உஙகளைப் பாதித்ததை வழக்கம்போல் பங்கு போட்டுக்கொள்ளுங்கள். பிறகு டீயைக் கீழே கொட்டிவிடலாம். சில நாட்கள் இப்படிச் செய்தால், மனம் சற்று லேசாகிவிடும்.

    சிலர் பார்க்குமிடங்களில் எல்லாம் இளமையில் எதிர்பாராவிதமாக மாண்டவரின் புகைப்படத்தை மாட்டி வைத்திருப்பார்கள். பார்ப்பவர்கள், `யாரிது? என்று கேட்க, கடந்தவைகளை ஒரு விவரம் குறையாமல் கூற, துக்கம் மீண்டும் மீண்டும் மேலெழுமே!

    துக்கத்தைத் தாளமுடியாது போனால், நெருங்கிய உறவினர்களிடம், நாம் சொல்வதை அப்படியே புரிந்துகொள்ளக்கூடிய நண்பர்களிடம் மாண்டவரைப்பற்றிப் பேசுவது அவசியம். பேசும்போது கண்ணீர் பெருகினாலும், ஆறுதல் அளிக்கும் வழி இது.

    `எந்த துக்கமும் ஒன்றரை வருடங்களுக்குமேல் இருக்காது. தானே கதையாகிடும்,’ என்றார் என் தாய், எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்.

    நான் ஒப்ப மாட்டேன். மனத்தடியில் ஒரு பொறி இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதாவது நினைவு எழும்போது, துக்கமும் கிளர்ந்து எழும்– காலமெல்லாம்.

    தொடருவோம்

    Share
  • யாதுமாகிய யாவும்!

    -கவிஜி 

    காதல் ஒன்றுமில்லை…
    காதல்
    கடவுள் ஒன்றுமில்லை…
    கடவுள்
    நான் ஒன்றுமில்லை…
    நான்
    நீ ஒன்றுமில்லை…
    நீ
    ஒன்றுமில்லாத ஒன்று
    ஒன்றுமில்லாத, ஒன்று…
    புரிதல், அறிதல்
    பின்பக்கம்-முன்பக்கம்
    மாற்று-என் பக்கம்
    உன் பக்கம்…

    எது அது – அது இது
    சுற்றும், நிற்கும்
    நிற்கும், சுற்றும்…
    உடைந்த பின்
    உடையாது…
    உடையாது உடைந்த
    பின்னும்…

    எரிகிறது காடு
    வலிக்கிறது ஆகாயம்…
    பூமி பாதமாகின்-
    யாதுமாகிய யாவும்
    சாவும்-பிறவி…
    ஒன்று இருக்கிறது
    உவமை-யாக
    உடைத்தெரியுங்கள் கண்ணாடியை…!

     

    Share
  • காலம் பொன் போன்றது!

    -ரா.பார்த்தசாரதி

    காலம்  நம்மை  வாழ  வைக்கும்
    காலம் நம்மைச் சிந்திக்க வைக்கும்
    காலம் கருதி  செயலாற்றத் துவங்கு
    அதுவே உன் வெற்றிக்கு  இலக்கு!

    காலம் என்பது கடிவாளமில்லாக் குதிரை
    கடிவாளமிட்டு  அடக்குவது நம் திறமை
    காலம்  எனும் கண்ணாடியில் முகம் காணுங்கள்
    கண்ணாடியைப்  பார்த்தே வெற்றி காணுங்கள்!

    காலத்தின் அருமை அறிந்து செய்தால் வெற்றி தேடி வரும்
    காலத்தைச்  சரிவரப்  பயன்படுத்தினால் மகத்தான வெற்றி
    காலம் என்பது  யானை  போன்றது
    அதனை அடக்கும் அங்குசம் நம்மிடம் உள்ளது !

    காலம் மதியாதவனை மிதித்துவிட்டுப் போகும்
    காலத்தின் அருமை உணர்ந்தவனை வெற்றி சேரும்
    காலமும் கடல் அலையும்  மனிதனுக்காகக் காத்திருக்காது
    காலம் கடந்த செயல்கள் என்றும்  பலன்  தராது !

    நமது லட்சியத்தைக்  காலத்தோடு கைகோத்துச்
    சந்தர்ப்பத்தையும் நேரத்தையும் ஒருங்கே சேர்த்து
    எத்தொழிலையும் தொடங்கினால் வெற்றி நமதே
    நாம் நினைக்க  வேண்டியதுகாலம் பொன் போன்றதே !

     

    Share
  • விடியும்!

    நாகினி

     

    வந்த எதுவும்
    விரும்பிய வரமல்ல
    சென்ற யாவையும்
    செதுக்கி பதித்தவையல்ல!

    வந்ததை விரும்பி
    வெந்ததைத் தின்று
    விதி வந்து மாள
    வெட்கித் தலைகுனிவதென்ன!

    எழுதிய எழுத்ததை
    ஏளனம் செய்து நொந்திட்டால்
    கையில் அகப்பட்ட வாழ்வு
    கடைச்சரக்கு ஆகிடுமோ!

    விதிக்கப்பட்ட விதியை
    வாழ்வின் நிலை யென்று
    விருப்புடன் ஏற்று முன்னேற
    வாய்ப்பு வாசல் திறந்து
    விடியும் பொற்காலம்!

    .. நாகினி

    Share