நிர்மலா ராகவன்

வாழ்வின் மறுபக்கம்

உனையறிந்தால்

கேள்வி: தந்தையை இழந்து நிற்கும் ஒரு சிறுவனுக்கு எப்படி ஆறுதல் அளிப்பது?

விளக்கம்: பாலர் பள்ளியில் படிக்கும் குழந்தையாக இருந்தால், தன் நண்பன் இறந்துவிட்டான் என்பதைக் கேட்டு அதிர மாட்டான். அவனைப் பொறுத்தவரையில் வாழ்வும், சாவும் இரவு, பகல் போலத்தான். ஒன்று மாற்றி ஒன்று வந்தே தீரும். `நேத்திக்குத்தானே செத்துப்போனான்? இன்னிக்கு ஏன் ஸ்கூலுக்கு வரலே?’ என்று அப்பாவித்தனமாகக் கேட்பான்.
அப்படிப்பட்ட குழந்தையிடம் `மரணம்’ என்றால் என்னவென்று விளக்க வேண்டுவது அவசியம்.

`தாத்தா செத்தா ஏன் எல்லாரும் அழறா? ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போங்களேன்!’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டான் என் மகன். மூன்றே வயதே ஆகியிருந்ததில், மரணத்துக்கும், நோய்க்கும் வித்தியாசம் புரியவில்லை.

தெருவில் விரைந்த கார்களினால் நசுக்கப்பட்டு, உருத்தெரியாது கிடக்கும் தவளையை சசிக்கு இப்படி அறிமுகப்படுத்தினேன்: `இந்த தவளை செத்துப்போச்சு. தாத்தா மாதிரி. நடக்க முடியாது — கால் இல்லே..,’ என்ற ரீதியில் ஆரம்பித்தேன்.
நாளடைவில், அவனுக்கு அது ஒரு விளையாட்டாய் ஆயிற்று. `FROG செத்துப்போச்சு. பாக்க முடியாது — கண் இல்லே, நடக்க முடியாது, பேச முடியாது, காது கேக்காது’ என்று ஒப்பிப்பான். மரண பயம் போயிற்று. அந்த ஆண்டே தான் சாகப்போகிறோம் என்று தெரிந்திருந்தது சசிக்கு.

கதை: எனக்குத் தெரிந்த ஒருவர் எதிர்பாராவிதமாக (தூக்கத்திலேயே, 34 வயதில்) இறந்தபோது, அவரது ஒரே மகனுக்கு எட்டு வயது. அவர்களிடையே இறுகிய பிணைப்பு இருந்தது. இயந்திர கதியில் தந்தைக்கான ஈமச்சடங்குகளைச் செய்தாலும், மரணம் என்றால் என்னவென்று சரியாகப் புரியாத பருவம்.
முப்பது பிராயம்கூட நிரம்பாத தாயுடன், வீட்டுக்கு வருகை புரிந்தவர்கள் அனைவரும் அழுது புலம்பியதைக் கண்ட பையனுக்கு ஒன்றுதான் புரிந்தது: இனி தான்தான் வீட்டில் ஆண்பிள்ளை. அம்மாவைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்பாவை இனி பார்க்கவோ, பேசவோ முடியாது! நிதரிசனம் வருத்தமளிப்பதாக இருந்தாலும், அழுதால், அம்மாவின் துக்கம் அதிகரிக்கும் என்றெல்லாம் தோன்றிப் போயிற்று.

அடுத்த பத்து வருடங்கள் அவன் மிக பொறுப்பாக நடந்துகொண்டு, கல்வியிலும் சிறந்து, தாய்க்கு மகிழ்ச்சியூட்டப் பார்த்தான். ஆனால் அவளோ! `இப்போதெல்லாம் என் மகன் யார்கூடவும் பேசறதே இல்லே!’ என்று ரகசியக் குரலில் தெரிந்தவர்களிடமெல்லாம் எடுத்த எடுப்பிலேயே சொல்லிப் புலம்புவாள்.

உற்றாரின் சாவு தன்னைப் பாதிக்கவில்லை என்பதுபோல் காட்டிக்கொள்பவன், தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான். அவனுடைய வளர்ச்சியில் ஏதோ ஒரு குறை ஏற்பட்டு விடுகிறது. `துக்கம்’ என்றிருந்தால், அழுதுதான் தீர்க்க வேண்டும். வேறு வழியே கிடையாது.

சில சிறுவர்கள் துக்கத்தை கோபத்தின்மூலம் வெளிப்படுத்துவார்கள். கோபம் — தம்மை இப்படி நிராதரவாக விட்டுவிட்டுப் போனவர்மேல்; தம்மீதும், பிறர் மீதும் — அந்த மரணத்தைத் தடுக்கத் தெரியாத குற்றத்துக்காக. `எனக்கு ஒரு பாதிப்பும் இல்லையே!’ என்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். ஆனால், உள்ளுக்குள் சொல்லத் தெரியாத உணர்வுகளுடன் குமைவார்கள்.

நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டால், `ஒங்கப்பா போயிட்டார்’ என்று ஒரு குழந்தையிடம் மொட்டையாகக் கூறுவது சரியல்ல. எதனால் இறந்தார், உடலை எங்கே கொண்டு போனார்கள், என்ன செய்தார்கள் — இப்படி விரிவாக. இல்லாவிட்டால், துக்கமும், குழப்பமும் நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள் கவுன்செலர்கள்.

குழந்தைகளோ, பெரியவர்களோ, மரணம் ஒருவரை ஆட்டுவிக்கும் விதமே தனி.

கதை:என் பக்கத்து வீட்டில் குடியிருந்த நூருல் (உண்மைப் பெயரில்லை) என்ற மலாய் பெண்மணி தன் சோகக்கதையை என்னிடம் பகிர்ந்துகொண்டாள்.
அவளுடைய ஒரே மகன் பத்து வயதாக இருந்தபோது, ஏதோ நோய் கண்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். நூருல் கூடவே இருந்தாள்.

ஆனால், அவள் அருகில் இல்லாத சமயம், அவன் உயிர் பிரிந்துவிட, அவளிடமிருந்து மகனுடைய மரணம் மறைக்கப்பட்டது. ஏற்கெனவே இருதயம் பலகீனமாயிருந்தவளுக்கு ஏதேதோ மருந்து கொடுத்துத் தூக்கத்திலேயே ஆழ்த்திவிட்டார்கள் — அவளால் அந்த துக்கத்தைத் தாங்க முடியாது என்றெண்ணிய குடும்பத்தினர்.

நூருல் கண்விழித்தபோது, மகனின் உடல்கூட இல்லை. அவனை இனி என்றுமே பார்க்க முடியாது என்ற செய்திதான் கிடைத்தது. அந்த அதிர்ச்சி தாங்கமுடியாது, பார்ப்பவர்களிடமெல்லாம் அதைப்பற்றிப் பேசுவாள். பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும், அவளுடைய மகனைப்பற்றி யாராவது பேச்செடுத்தாலே கதறி அழுவாளாம்.

அவளுடைய குடும்பத்தினர் இதைத் தலைக்குனிவெனக் கருதினர். அவளுடைய மகள், `என் தம்பியைப்பத்தி ஒங்ககிட்ட சொல்லிப் புலம்பி இருப்பாங்களே! எங்கம்மாவுக்குப் பைத்தியம், ஆன்ட்டி!’ என்று முகத்தைச் சுளித்தபடி என்னிடம் கூறினாள். அந்த இளம்பெண்ணுக்குப் புரியவில்லை ஒரு தாயின் மனம். (நீரில் மூழ்கிவிட்ட என் மகனுடைய உடலைக் கட்டிக்கொண்டு அவள் கதறியபோது எனக்குப் புரிந்தது — அவ்வளவு காலமாக வெளிவராத துக்கம் இப்போது அவள் நேசித்த இன்னொரு சிறுவனது மரணத்தில் பீறிட்டுக் கிளம்புகிறது என்று).

“ஒரு குழந்தையோ, தாயோ இறந்தால் பெரியவர்கள் எப்படி அதைத் தாங்கிக்கொள்ள இயலும்?” (என்னை நன்றாகக்கூடத் தெரியாத சிலர் நேரில் என்னிடம் கேட்ட கேள்வி இது).

நான்: இறந்த நபருடன் நீங்கள் ஒன்றாக இருந்திருப்பீர்கள். அதில் எந்த தருணத்தில் அவரது இழப்பை பெரிதும் உணர்கிறீர்கள்?

கூடவே இருந்த தாயை இழந்த மாது : நானும், அம்மாவும் பால்கனியில் உட்கார்ந்து ஒன்றாகப் பேசிக்கொண்டு டீ குடிப்போம். இப்போது தனியாக இருந்தால், அழுகை வருகிறது.

நான்: எப்போதும்போல இரண்டு கப் டீ போட்டு, `அம்மா! இது உங்களுக்கு,’ என்று சொல்லுங்கள். அம்மா எதிரில் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, அன்று நடந்ததில் உஙகளைப் பாதித்ததை வழக்கம்போல் பங்கு போட்டுக்கொள்ளுங்கள். பிறகு டீயைக் கீழே கொட்டிவிடலாம். சில நாட்கள் இப்படிச் செய்தால், மனம் சற்று லேசாகிவிடும்.

சிலர் பார்க்குமிடங்களில் எல்லாம் இளமையில் எதிர்பாராவிதமாக மாண்டவரின் புகைப்படத்தை மாட்டி வைத்திருப்பார்கள். பார்ப்பவர்கள், `யாரிது? என்று கேட்க, கடந்தவைகளை ஒரு விவரம் குறையாமல் கூற, துக்கம் மீண்டும் மீண்டும் மேலெழுமே!

துக்கத்தைத் தாளமுடியாது போனால், நெருங்கிய உறவினர்களிடம், நாம் சொல்வதை அப்படியே புரிந்துகொள்ளக்கூடிய நண்பர்களிடம் மாண்டவரைப்பற்றிப் பேசுவது அவசியம். பேசும்போது கண்ணீர் பெருகினாலும், ஆறுதல் அளிக்கும் வழி இது.

`எந்த துக்கமும் ஒன்றரை வருடங்களுக்குமேல் இருக்காது. தானே கதையாகிடும்,’ என்றார் என் தாய், எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்.

நான் ஒப்ப மாட்டேன். மனத்தடியில் ஒரு பொறி இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதாவது நினைவு எழும்போது, துக்கமும் கிளர்ந்து எழும்– காலமெல்லாம்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.