Blog

  • இயற்கையின் கோலம்!

    -துஷ்யந்தி, இலங்கை

    வாழ்க்கையை ரசிக்க
    வைகறையைத் தேடிவந்தேன்
    வருடிச்சென்றது என் மேனியில்
    சில்லென்ற காற்று…!                                        nature

    சிலிர்ந்தது என் மேனி
    குளிர்ந்தது உள்ளம்
    தெளிந்த நதியின் நடையில்
    தொலைகின்றது என் மனம்!

    பஞ்சணைப் படுக்கையாய்
    புல்லினங்கள் மேனி தடவ
    ஏதேதோ எண்ணங்கள்
    அரவணைக்கக் கண்டேன்…!

    பாடித்திரியும் பறவைகள்
    காதிலே காதல் கானம் சொல்ல
    வண்டினங்கள் பூவை வட்டமிட்டு
    ரீங்காரமிட…
    காதலின் கோலத்தைக்
    கணப்பொழுதில் கண்டேன்…!

    நதி நீரில் மீனினங்கள்
    மேலேழுந்து பாய்கையில்
    நானும் கூட மீனினமாக
    பிறக்கவில்லையே…என்று
    கற்பனையில் ஓர் ஆதங்கம்!

    அந்திவானம் ஒளியிரங்க
    நதிநீரில் கதிரவனின் மேனிபடப்
    பறவைகள் வானத்தில் வட்டமிடக்
    கங்கையின் கோலத்தை
    என்னவென்று சொல்ல…!

    பட்டாம்பூச்சியாய் நானும் மாறி
    நதிநீரை முகத்தில் தெளிக்க
    நினைவுகளும் மறந்துபோக
    மயங்கிவிட்டேன் இயற்கையில்!!


    Share
  • வைகாசி விசாகத் திருநாளாம்!

    -சரஸ்வதி ராசேந்திரன்

    தேடி   உன்னைச் சரண் அடைந்தேன்
    திருத்தணிகை   முருகா!
    தீமைகளைத்    தகர்த் தெறிவாய்
    திருச்செந்தூர்    ஷண்முகனே!                   lord muruga

    பாடி உன்னைச்   சரணடைந்தேன்
    பழனிமலை  முருகா!
    கோடி நலம்    செய்திடுவாய்!
    குறைகள்     எல்லாம் தீர்ப்பாய்!

    பாவங்களைப்    போக்கிடப்பா
    பச்சை மலை   முருகா!
    வல்வினைகள்  போக்கிடுவாய்
    வைகாசி    விசாகனே!

    அமைதியைத்   தந்திடுவாய்
    அழகர்   மலைக் குமரா!
    சிரத்தையுடன்    வேண்டுகிறோம்
    சிக்கல்   சிங்கார வேலா!

    விரைந்து நீ  வந்திடு
    விராலிமலை   வேலவா!
    பக்தர்களின்   குறை தீர்த்திடு
    பவழமலைஆண்டவனே! 

    பால் காவடி,  பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்
    பக்தர்கள் வந்து நின்றோம் உன் காலடிக்கு!

     

    Share
  • எடுத்தெறிய வேண்டிய சாத்தான்கள் பற்றிய கனவு!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    என் உறுதிகளைப் பறித்தவனிடமிருந்து
    காப்பாற்ற முடியாமல் போன
    வாழ்வின் இருப்பை நொந்தபடி
    நேற்றின் அவமானத்தோடான
    அலைச்சலிலிருந்து மீள அயர்கிறேன்!

    இன்றும் ஒரு கனவு
    விழிமடல் மூட விரிகிறது முன்…

    முதற் பரிமாணத்தில் தந்திரம் மிக்க நரியாகிப்
    பின் மெல்லச் சாத்தான்களாவது
    விடாமுயற்சியின் பலன்களிலொன்று!

    என் கனவுக்குள் வருபவர்களுக்கு
    எடுத்தெறிய வேண்டிய
    சாத்தான்களின் சபையை
    நிறைத்திருந்தன நரிக்கூட்டம்!

    நரிகள் ஓதிய வேதங்கள் ஏதும்
    பலிக்கவில்லை செவிடென இருந்த
    அரசக் கடவுளின்முன்!

    பின் இன்னொரு காட்சி
    தொடர் கனவின் பிரதியாய் விரிகிறது…

    ஒருபக்கம்
    வாலுயர்த்திக் கொம்புகளை ஆட்டியவாறு
    விஷத்துடன் கொடுக்ககலக்
    கருந்தேள்கள் வாசலெங்கும்
    மண்மேய்ந்து உலாவ
    மறுபக்கம் நாக்கிழும் புழுக்கள்
    திரிந்தன எம் நிலமெங்கும்
    புனித மண்தேடி…

    தாவிக் கழித்துக் குருத்துப்புல் கொறித்த
    முயல் குட்டிகள் இல்லிடமற்றுக்
    கறியாடுகளாய் உலையேறுகின்ற
    கனவிலிருந்து விழித்தபோது
    கட்சி இலச்சினையோடு பல்லிளித்தபடி
    நரிமுகத்துடன் ஒரு சாத்தான் என் முன் நின்றது
    இம்முறையும் அவனது தேவையொன்றின் நிமித்தம்!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 168

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    கவுந்தி அடிகள் மாதரியிடம் கண்ணகியைப் போற்றும் வகை கூறி உரைத்தல்

    “மங்கலம் வாய்க்கப்பெற்ற
    இம்மங்கையைத்
    தூய நீரினால் நீராட்டி,
    சிவந்த கயல் போன்ற கண்களில்
    அஞ்சனம் தீட்டி,
    மணம்மிக்க இவள் கூந்தலில்
    சில மலர்களைச் சூட்டி,
    தூய புடவை உடுத்தி,
    முன்னோர் கூறிய சிறப்பனைத்தும் வாய்ந்த
    தோழியாகவும், செவிலியாகவும்,
    தாயும் ஆகி இவளைக் காப்பாயாக!

    இங்கே என்னோடு தங்கியிருந்த
    இந்த இளைய கொடி போன்ற நங்கையின்
    அழகுவாய்ந்த சிறு பாதங்களின் அடிகளை
    மண்மகளும் கண்டாள் இல்லை
    சூரியனின் கடுமையான கதிர்களின் வெப்பத்தால்
    துன்புற்று வாடிய தன் கணவன் துயர்கண்டு
    நடுங்கி வருந்தியிருக்கிறாள் இவள்;
    அது தவிரத் தன் நாவே உலர்ந்து போகும்படித்
    தான் வாடியதை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை

    தன் கணவனுக்கு இனிய மனைவியாய் விளங்கும்
    பெண்கள் தமக்கு இன்றியமையாததாக விளங்கும்
    கற்பு நெறி தன்னை அணியாகப் பூண்டுள்ள
    இவள் சிறப்புமிக்கப் பெண்தெய்வம்!
    இவளைத் தவிர சிறப்புமிக்க
    வேறோர் பெண்தெய்வத்தை நான் கண்டதில்லை

    இத்தகைய கற்பிற் சிறந்த
    பெண்கள் வாழும் நாட்டில்
    வானம் பொய்க்காது;
    நிலத்தின் வளமும் குன்றாது;
    நீண்ட நிலமதை ஆள்கின்ற
    அரசர் தம் கொற்றமும் சிதையாது;
    இத்தகைய நல்வாக்குகளை
    நீ கேட்டதில்லையோ?” எனக்
    கவுந்தி அடிகள் மாதரியிடம் கூறினார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 131 – 148
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>

     

    Share
  • நாம் பெற்ற உரிமை!

    -துஷ்யந்தி, இலங்கை

    பாரதிகண்ட புதுமைப் பெண்
    ஆணுக்குச் சரிநிகர் சரி பாதி
    என்றதோடு நின்றிடவில்லை
    ஒருபடி மேல் சென்றுவிட்டாள்!

    நீர் மேல் நிலையில்லா
    நீர்க்குமிழியாம் வாழ்க்கை
    அதில் காற்றோடு ஒட்டிய
    தூசுகளே பந்தங்கள்!

    நீரின் மேல் வள்ளம் போல்
    பந்தங்களோடு தடை தாண்டி
    வெற்றி இலக்கை அடைவதே
    வாழ்வின் உண்மைத் தத்துவம்!

    உரிமை பெற்றோம் என
    ஒதுங்கி வாழ்ந்திடாது
    இன்ப துன்பங்களில்
    தோள் கொடுப்போம் – வரும்
    விளைவுகளைச் சமமாய்
    முகம் கொடுக்கக் கற்றிடுவோம்!

    இணைந்த கைகள் எழுப்பும் ஒலி
    தனித்த கையில் வருவதில்லை
    ஆணவம் நம்மிடை இருக்கும்வரை
    வெற்றி நம்மிடம் வருவதில்லை!!

     

    Share
  • என் குடியிருப்புக்கு உன்னை அழைக்கிறேன்!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    வேர் அறுந்த வலியுடன்
    வசித்தல் என்பது எனக்கு
    வாழ்வாகிற்று…

    உறவற்ற அன்றில் நான்
    ரணங்களின் குறிப்புகளோடு
    அழித்து அழித்து எழுதப்பட்டிருக்கின்றன
    எனது நாட்கள்!

    சொப்பனங்களில் லயித்து
    வெகுமதிகளில் சுகித்து
    ஒரு பறவையாய்ச் சிறகடிக்க
    இறக்கைகள் கத்தரிக்கப்படுவதற்கு முன்
    எனக்கும் இருந்ததொரு எண்ணம்!

    மன்னிக்க…
    வசீகரங்களைத் தூவி நீ வாழ்த்த
    ஏற்று வணங்கி வரவேற்கும் நிலையில்
    இப்போது என் இருப்பு இல்லை!

    உன் பூங்கொத்துகளைச் சுமக்க
    மனசின் கை
    ஆசையோடு அணுகுகிற போதும்,
    வலிமை இழந்த தகிப்பில்
    மீள்கிறேன் பழைய இடத்திற்கே!

    என் இரவுகளைப் பருகிப்பருகித்
    தனிமைப் பூதமாகும் இனி…
    வாசலே வீடாயிருக்கும்
    என் இல்லிடத்திற்கு வா!

    காதலோடு அல்ல…
    ஒரு கூடைக் கைக்குட்டைகளோடு !

     

    Share
  • பாதை தவறிய பயணங்கள்!

    -துஷ்யந்தி, இலங்கை

    மண்ணிலே பிறந்தோம்
    மனிதர்களாய் வளர்ந்தோம்
    மனதிலே இறைவனை
    மறவாமல் நினைத்தோம்!

    மதங்களை ஆக்கினோம்
    மனிதனாய் வாழ்வதற்கே!
    மரணித்து மரணித்து தினம்
    மடிந்திடவா மதங்கள் எமக்கு?

    மனித உடலிலே இறைவனவன்
    மாறாத நிறமாய்க் குருதி தந்தானே…
    மானிடா அதை மறந்ததேனோ?
    மண்ணிலே பிறந்ததெல்லாம்
    மண்ணுக்கே உரிமையல்லவா?
    மாறாக அதைக் கையில் எடுக்க
    மனம் வந்தது எப்படி மனிதா?

    மாற்றங்கள் நம் மனதில் வரட்டும்
    மனிதம் நம்மில் குடிகொள்ளட்டும்
    மதங்களில் பிரிவுகள் அழிந்திடட்டும்
    மக்களெல்லாம் இன்பத்திலே
    மகிழ்ந்திடட்டும்!!

     

    Share
  • கருத்துச் சுதந்திரம்!

    -பா. ராஜசேகர்

    மனத்தெண்ணம்
    வெளிக்கொணர்ந்து
    பகிர்ந்துண்ணும்
    சுதந்திரம்!

    கருத்துக்கள்
    முரண்படினும்
    பிறர் புண்படுத்தாச்
    சுதந்திரம் !

    பிறர் மானம்
    மரியாதை
    கெட இடங்கொடாச்
    சுதந்திரம் !

    உடல் பொருளும்
    தனி மனிதம்
    சேதமில்லாத
    சுதந்திரம் !

    அண்டையர்
    மத நம்பிக்கை
    பழித்திடாச்
    சுதந்திரம் !

    துரத்துகின்ற
    வாதங்கள்
    பிடிவாதமாகாச்
    சுதந்திரம் !

    எதிர்வாதம்
    மதிப்பளிக்கும்
    மிதவாதமான
    சுதந்திரம் !

    கருத்துக்கும்
    கற்புண்டு
    கண்ணியமான
    சுதந்திரம்!

    அடிப்படை
    உரிமைகளில்
    பொறுப்பானது
    சுதந்திரம்!

    சிந்தனைகள்
    சீர்தூக்கச் சேதிகளைச்
    செப்பனிடும்
    சுதந்திரம் !

    பிறர் மனம்
    மதிப்போம்
    கருத்துரிமை
    காப்போம் !

     

    Share
  • உன்னையறிந்தால் ….. ! (7)

    பதின்ம வயதினர்

    நிர்மலா ராகவன்

    உனையறிந்தால்

    கேள்வி: என் மகளைச் சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக, அவள் விருப்பப்படியெல்லாம் நடக்கப் பழக்கிவிட்டேன். ஆனால், பதினைந்து வயதிலும் தன் விருப்பப்படிதான் நடப்பேன், நான் எதுவும் கேட்கக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறாள். டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது?

    விளக்கம்:

    பால்ய விவாகமும், தந்தையின் தொழிலையே கற்று, மகன் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டபோதும், `பருவ வயது 13 – 18’ என்றெல்லாம் தனியாகப் பிரிக்கப்படவில்லை. பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் குழந்தைகளாகக் கருதப்பட்டார்கள். (ஆனால், அந்தந்த வயதுக்கு மீறிய பொறுப்புகளும் அவர்கள்மீது திணிக்கப்பட்டன).

    சுமார் 65 ஆண்டுகளாகத்தான் பதின்ம வயதினர் குழந்தைகளும் இல்லை முதிர்ச்சியுற்ற பெரியவர்களும் இல்லை, இவர்கள் வேறு ஒரு பிரிவினர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு, அவர்களுடைய உளவியலைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

    இந்த வயதினர், `நியாயம்’, `அநியாயம்’ என்ற முறையில்தான் எந்த பிரச்னையையும் அணுகுவர். எளிதில் உணர்ச்சிவசப்படுவர். உடலிலும், மனதிலும் மாற்றம். ஆனால், இதைச் சரிவர விளக்குவார் யாருமில்லை. `இதையெல்லாமா சொல்லித் தருவார்கள்!’ என்று கூசியபடி விளக்கினால், இந்த விஷயத்தில் வேண்டாத ஆர்வம்தான் வரும். அபாயமான விளைவுகளை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடத் தூண்டும் துணிச்சலும் இந்தப் பருவத்தினருக்கு இயற்கையிலேயே எழுகிறது.

    இதையெல்லாம் புரிந்துகொண்டு, சிறு வயதிலிருந்தே குழந்தைகளையும் ஒரு பொருட்டாக மதித்துப் பெற்றோர் நடக்க வேண்டும்.

    குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பும்போது, யாராவது வீட்டில் இருக்க வேண்டுவது அவசியம். எப்போதாவது வெளியில் போகவேண்டிய அவசியம் நேர்ந்தால், அவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு — எங்கே போயிருக்கிறீர்கள், எப்போது திரும்புவீர்கள், சாப்பிட என்ன, எங்கே வைத்திருக்கிறீர்கள் — இப்படி. இதைப் படிக்கும்போது, பெற்றோர் தம் கூடவே இருப்பதுபோல உணர்வார்கள் குழந்தைகள்.

    `என் மகள் (வயது 17) வெளியே போகும்போது, நான் கேட்காவிட்டாலும், போகுமிடத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போகிறாள். அவளுடைய சிநேகிதர்களை வீட்டுக்கு அழைத்து வந்து, அறிமுகம் செய்து வைக்கிறாள்!’ என்று என்னிடம் கூறி அதிசயப்பட்டாள் என்னுடன் வேலை பார்த்த ஒரு மாது. என்னைவிட ஏழு வயது பெரியவள். இந்த தாய், மகள் சிறுமியாக இருந்தபோது, இதேபோன்ற கரிசனத்தை (நான் சீக்கிரமே திரும்பி விடுவேன், அனாவசியமாக கவலைப்படக்கூடாது), மரியாதையை அவளுக்கு வழங்கியிருக்கிறாள் என்று ஊகித்துச் சொன்னேன். தான் பெற்றதைத் திருப்பி அளிக்கிறாள் பெண். இதில் அதிசயப்பட என்ன இருக்கிறது?

    பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் நண்பர்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். பண்டிகை நாட்களின்போது, நண்பர்களை வீட்டுக்கு அழைக்கச் சொல்லுங்கள். ஒரு சிலர், உங்கள் குடும்பத்தில் வழக்கமாக அனுசரிக்கப்படும் மரியாதை, தைரியம், ஒழுக்கம் போன்ற சில கொள்கைகளிலிருந்து மாறுபட்டிருக்கக்கூடும். அவர்களைப்பற்றிப் பிறகு பேசுங்கள். ஆத்திரமின்றி, நட்புணர்வோடு. நாம் கொண்டிருக்கும் அக்கறை குழந்தைகளுக்குப் புரியும்.

    உதாரணமாக, ஒரு பெண் பதினைந்து வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்கிறாள். அவளுடன் ஊர்சுற்றுவதில் ஒத்துப்போகாத தோழியை `பழைய காலம்! அம்மாவின் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து போகிறவள்!’ என்று பலவாறாகப் பழிக்கிறாள். திரும்பத் திரும்ப இப்படியே செய்தால், எவரையும் தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறாள்.

    அவள் நினைத்தபடியே, பெண்ணும் அம்மாவுடன் சண்டைக்குப் போகிறாள், `என் வயதொத்த பெண்கள் எல்லாம் சுதந்திரமாக இருக்கிறார்கள். நான் சந்தோஷமா இருந்தா ஒங்களுக்குப் பொறுக்காதே! என் சிநேகிதிகளோட அம்மா இவ்வளவு மோசம் இல்லே!’ என்று.

    தாய் தானும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினால், காரியம் கெட்டுவிடும். ஏன் தெரியுமா?

    பதின்ம வயதுப் பையனாக இருந்தால், முன்பின் யோசியாமல், ஏதோ உணர்ச்சிவசத்தில் தப்பு செய்கிறான். வயது வந்தவர்களோ, நன்றாக யோசித்து, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெண்ணின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, நிறையப் புகழ்ந்து, அவளை வசப்படுத்தப் பார்ப்பார்கள்.

    பதினைந்து வயதில் ஒரு பெண்ணுக்கு உடல் வளர்ந்திருக்கிற அளவுக்கு உலக விவரம் புரிவதில்லை. மனதளவில் அவள் குழந்தைதான். யாராவது, `ஒன்னைப் பாத்தா சின்னப்பொண்ணா தெரியல. என்னமா வளர்ந்திருக்கே! எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கே! புத்திசாலி!’ என்றெல்லாம் புகழும்போது, மயங்கிவிடுகிறாள்.

    (எத்தனை வயதானாலும், நம்மை முகத்துக்கு நேர் புகழ்கிறவர்கள் ஏதாவது ஆதாயம் எதிர்பார்த்துத்தான் அப்படிச் செய்கிறார்கள். அப்படி யாராவது புகழ்ந்தால், `நன்றி,’ என்றுவிட்டு, போய்க்கொண்டே இருக்க வேண்டும். பத்து வயதிலேயே உங்கள் குழந்தைக்கு இதைச் சொல்லிவைங்கள். அதிகம் ஏமாற மாட்டார்கள்).

    இப்படி, உலகத்தின் நடப்புகளைப் பக்குவமாக எடுத்துச் சொன்னால், பெண் யோசிக்க ஆரம்பிக்கிறாள். எப்போதும் நம் நன்மையைத்தான் கோருவாள் தாய் என்ற நம்பிக்கையுடன், `ஓ! அதான் என் ஃப்ரெண்ட் என்னைப் பாத்து பொறாமைப்படுகிறாளா!’ என்று தெளிந்து, எந்தக் குழப்பத்திலும் சிக்காமல் தப்புகிறாள்.

    ஆம், `சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடப்பவர்கள் எப்போதும், தன்னைக் கட்டுப்படுத்த யாருமில்லையே என்ற ஏக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    எது சரி, எது தவறு என்று விளக்க ஒரு பெண்ணோ, பிள்ளையோ தவறு செய்யும்வரை காத்திருக்க வேண்டாம். உங்களுடன் தனியாகப் பிரயாணம் செய்யும்போதோ, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போதோ, பொதுவாக இந்த வயதினருக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும், அவைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் பேச்சுவாக்கில் சொல்லுங்கள்.

    உதாரணமாக, சிறு வயதிலிருந்தே தாயிடம் அனுமதி கேட்டு விளையாடப் போகும் வழக்கமுடைய பெண், `இருட்டுவதற்குள் வர வேண்டும்,’ என்று தாய் சொன்னபடி நடந்திருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பதினைந்து வயதிலும், `என் சிநேகிதி வீட்டில் ஒரு பார்ட்டி. டீன் ஏஜ் பையன்களும் வருவார்கள். நான் போகட்டுமா?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

    `எங்க காலத்திலே..,’ என்று ஆரம்பித்தால், `போர்!’ என்று முகத்தைச் சுருக்கிக் கொள்வார்கள்.
    `ஆண்பிள்ளை,’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஏதேதோ கற்பனை செய்து, அதிலேயே பயந்து கத்தும் தாய் தன் மகளின் மதிப்பில் தாழ்ந்து விடுகிறாள்.

    `வேண்டாம். அப்பா கோபிப்பார்,’ என்னும் தாயோ தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாள்.
    முன்கூறியபடி விளக்கிவிட்டு, `ஒனக்கு என்மேல வருத்தம். தெரியும். இன்னும் நாலு வருஷம் போனா, நான் ஒன் நன்மைக்குத்தான் சொன்னேன்னு புரியும்!’ என்று, அவளுடைய உணர்வுக்கு ஆதரவு கொடுத்துப் பேசுங்கள். (`உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது,’ என்று கூறினால், நம்மை எவ்வளவு எதிர்ப்பவரும் சற்று அடங்கிவிடுவார்).

    உணர்ச்சிபூர்வமான இந்த வயதினர் தெரியாத்தனமாக ஏதாவது பிழை புரிந்துவிட்டு, ஆத்திரமும், அவமானமும் அடைவது சகஜம். தவறு செய்வது மனித இயல்பு என்று ஒவ்வொரு முறையும் பக்கபலமும், பாதுகாப்பும் அளியுங்கள். முடிந்தால், அந்த வயதில் நீங்கள் அதேபோல் எதையாவது செய்துவிட்டு, அதை மறைக்கப் பார்த்ததை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    எனக்குப் பிடித்த தேங்காய் துவையலை கல்லுரலில் அரைக்கச் சொன்னார்கள் என் பாட்டி. அவர்கள் புளி நிறையப் போடுவார்கள். எனக்குப் புளித்தால் பிடிக்காததால், பாதியை எடுத்து, கல்லுரலின் பின் பக்கத்தில், சுவரருகே ஒட்டிவிட்டேன், யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி. `புளிப்பே இல்லையே! பாதி புளியை ஒளிச்சு வெச்சுட்டியா?’ என்று பாட்டி சந்தேகப்பட்டுக் கேட்டபோது, `இல்லவே இல்லை,’ என்று சாதித்து விட்டேன்!

    பொய்தான். என்ன செய்வது!
    அது பாட்டிக்கும் புரிந்ததால்தானே சிரித்தார்கள்! என் வயதில் அவர்கள் என்ன தில்லுமுல்லு செய்தார்களோ!

    தொடருவோம்

    Share
  • பழையன வேண்டாம்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    vanathiவாருங்கள் தமிழ்புரிக்குச் செல்வோம்!
    வேருங்கள் சுய அறிவால்
    சேருங்கள் தீந்தமிழ் வரிகள்
    எங்கும் வெளியிடாத ஓவியம்
    எங்கும் பாடாத பாடல்
    எங்கும் ஆடாத நடனம்
    எங்கும் எழுதாத வரிகள்
    எங்கும் தேவையாம் கொடுங்கள்!

    தொல்காப்பியம் தண்டியலங்காரம் புலமைப்
    பல் நூல்கள் புரட்டுங்கள்!
    வல்லமையாய்ப் புதிதாய் வார்த்திடுங்கள்
    கல்லுதல் செய்தே வரைந்தவைகள்
    எல்லாம் பழையன என்றால்
    கொல்லையில் வீசுவதா சொல்லுங்கள்!
    வள்ளுவன் பாரதியின் பழையவைகள்
    ஊரதிரத் தேரோடுது பாருங்கள்!

    மல்லாட்டம் தமிழோடு போடுங்கள்!
    கல்லாதாரும் கற்றவரும் விளங்க
    வில்லவனாகிக் காதலையும் வரையுங்கள்!
    வில்லங்கமின்றிக் கவி இலக்கணம்
    நல்லங்கமாக்கி நெஞ்சக் கிண்ணத்தால்
    துல்லியமாய் வெல்லமாய் ஊற்றுங்கள்!
    எல்லோரும் மேதை என்பார்கள்!
    சொல்வளம் பஞ்சமற்ற புலவராகுங்கள்!

    (கல்லுதல்- தோண்டுதல்;  வில்லவன் – மன்மதன்)

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 42

    42. நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி (3)

    சுபாஷிணி

    நியாண்டர்தால் அருங்காட்சியகம் ஒரு தகவல் சுரங்கமாக திகழ்கிறது. மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான இக்காலகட்டத்தில் பண்டைய பழங்கூறுகளையும் அதன் பொதுத் தன்மைகளையும் வெளிப்படுத்தும் ஒரு காட்சிக்கூடமாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.

    கற்கால மனிதர்களின் ஈமச்சடங்கு முறைகளை ஆராயும் போது உலகின் பல மூலைகளில் இவ்வகைச் சடங்குகளில் இருக்கும் ஒற்றுமைக் கூறுகளைக் காண முடிகிறது. பூகோள ரீதியாக மனிதர்கள் நிலப்பரப்பில் பிரிக்கப்பட்டிருந்தாலும் அடிப்படையில் மனித மனம் ஒரே வகையில் சிந்திப்பதை பொதுக்கூறுகளாகக் காணமுடிகிறது. உதாரணமாக, பெருங்கற்காலத்தில் இறந்து போன மனிதர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கற்திட்டை வடிவங்களைக் கூறலாம். ஐரோப்பிய நிலப்பரப்பில் பிரித்தானியாவில் வரலாற்றாய்வாளர்கள் சுட்டும் stonehenge வடிவங்களை இவ்வகையில் இருக்கும் ஒற்றுமையாகக் குறிப்பிடலாம். இதே போன்ற ஈமக்கிரியை தொல் வடிவங்களைத் தமிழக நிலப்பரப்பிலும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    a

    மற்றொரு ஈமக்கிரியை தொல்வடிவம் வட்டக் கல் என்பது. நான் சென்னைக்கு புற நகர்ப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஒரு வரலாற்றுப்பயணத்தில் இவற்றை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். அதே போல கொடுமணல் அகழ்வாய்வுப் பகுதியிலும் இதே போன்ற வடிவங்களைக் கண்டேன்.இதே போன்ற மெகாலித்திக் காலகட்டத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கபப்ட்ட Mystical Circle எனப்படுபவை பிரித்தானிய தீவுகளில் இருப்பதையும் இங்கே புகைப்படங்களுடன் கூடிய தகவல் வழி இங்கு வருவோர் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

    தாய் தெய்வ வழிபாடு என்பது தொண்மையான ஒரு வழிபாட்டு முறை. பழம் நாகரிகங்கள் அனைத்திலும் ஏதாகினும் ஒரு வகையில் தாய் தெய்வ வழிபாடு என்பது அமைந்திருந்தது என்பதும் அவற்றின் உருவப் படிமங்களும் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் வரலாற்று உண்மை.

    1

    இதன் தொடர்பில் ஐரோப்பிய நிலப்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட தொண்மையான தாய்தெய்வ வடிவங்களை இந்த அருங்காட்சியகத்தில் சிறு தொகுப்பில் காணமுடிகின்றது. ஆஸ்திரிய நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாய்தெய்வ வடிவத்தின் ரெப்ளிக்கா ஒன்றினை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். இதன் அசல் வடிவம் ஆஸ்திரியாவின் வீன் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இதனைப் போலவே உக்ரயேன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட 22,000 ஆண்டு பழமையான ஒரு தாய்தெய்வ வடிவமும் இங்கு உள்ளது.

    உலகில் வேறெங்கும் சென்று ஆச்சரியங்களைத் தேடவேண்டியதில்லை. நம் உடலே ஆச்சரியங்கள் பல கொண்ட ஒரு அற்புதப் புதையல் தான். நம் உடலில் இருக்கும் பாகங்களில் ஒவ்வொன்றும் ஒரு செயலைச் செய்தாலும் பிராதன முக்கியத்துவத்தைப் பெறுகின்ற மூளையானது ஆச்சரியத்தும் மேல் ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது. காலங்காலமாக நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியில் மனித உடலின் வளர்ச்சியில் மனித மூளையில் அளவின் வளர்ச்சி என்பதும் அடங்கும். மூளைவின் அளவு பெரிதாகப் பெரிதாக அதன் திறன்களும் அதிகரிக்கின்றன. சிந்தனையின் ஆழமும் சிந்தனைப் பதிவின் திறமும் மூளையின் அளவு பெரிதாகும் போது அதற்குத் தகுந்தார் போல பெரிதாகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் மனித மண்டை ஓடுகளும் மூளை பற்றிய ஆய்வுகளும் அமைந்துள்ள பகுதியில் இத்தகைய தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

    2

    மனித இனம் விலங்கினமாக இருந்து பின்னர் வேட்டையாடும் திறனை அமைத்துக் கொண்டு குடும்பம், சமூகம் என வளர்ந்து விவசாயத்தையும் கற்றுக் கொண்டு, அதனை பெருவாரியாக விரிவாக்கி, நாடு, நகரம், அரசியல், ராஜ்ஜியம் என இருந்து பின்னர் மொழி, கலை, வழிபாடு, சடங்குகள், மாந்திரீகம், தத்துவம் என தன் ஆளுமையை விரிவாக்கிக் கொண்டு, வர்த்தகம், தொழில் நுட்பம் என்றும் உயர்வடைத்து விட்டது. இந்தத் தொடர் வளர்ச்சி பல போராட்டங்களைக் கடந்து வந்த ஒரு வரலாற்று நிகழ்வு. இது பல தேடுதல்களும் மாற்றங்களும் இருந்தமையால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒரு வளர்ச்சி.

    மாற்றங்களை விரும்பாத, தேடுதலில் ஈடுபடாத ஒரு இனம் வளர்ச்சி பெற முடியாது. மனித இனத்தின் தேடுதல் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

    Was ist der Mensch? (மனிதன் என்பர் யார்?)
    Was soll ich tun? (நான் என்ன செய்ய வேண்டும்?)
    Was kann ich wissen? (நான் என்ன தெரிந்து கொள்ள முடியும்?)
    Was darf ich hoffen? (நான் எதை எதிர்ப்பார்த்திருக்க முடியும்?)
    -Immanuel Kant

    3
    நமது தேடலையும் தொடர்வோம். அடுத்த கட்டுரையில் மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்தில்!

    Share
  • முற்றுப் பெறாத புள்ளியில் முடிவுறாது தொடரும் …

    — எஸ் வி வேணுகோபாலன்.

     

    ஓவியர் கோபுலு (1924 – 2015)

    முற்றுப் பெறாத புள்ளியில்  முடிவுறாது தொடரும் …

    கோடுகளே குழந்தைகளின் முதல் செய்தி பரிமாற்றம் என்று தோன்றுகிறது. திருத்தமாக எதையும் பேசத் தொடங்குமுன் அவர்களது கை விரல்கள்தான் முதலில் பேசத் தொடங்குகின்றன…. குழந்தைகளின் கவனத்தைப் பெறக் காத்திருக்கும் சுவர்களைக் கொண்ட வீடுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை. குழந்தைகளின் உரிமை மறுக்கப்பட்ட சுவர்கள் சபிக்கப்பட்டவை என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

    எங்கள் வீட்டில் நாங்கள் வேடிக்கையாகப் பேசிக் கொள்வதுண்டு. இளவயதில் எங்கள் செல்ல மகள் வரைந்த ஓர் ஓவியம் ஐயாயிரம் ரூபாய்க்குப் போனது! ஏதேதோ கற்பனைக்குச் சென்று விடாதீர்கள்….சுத்தமாக இருந்த ஒரு சுவரின் மூலையில் பளிச்சென்று தனது தாத்தாவை ஓவியமாக வரைந்து வைத்திருந்தாள் அவள். வீட்டைக் காலி செய்யும்போது, கலாரசனையே அற்ற வீட்டு உரிமையாளர் அதைப் பார்த்தார். ‘ஒன்று சுத்தமாக சுவர் முழுக்க சுண்ணாம்பு அடித்துக் கொடுத்துவிட்டுப் போ அல்லது அட்வான்ஸ் தொகையில் ஐயாயிரம் ரூபாய் பிடித்துக் கொள்வேன்’ என்று தீர்த்துச் சொல்லிவிட்டார். ஒருவழியாக நாங்களாக ஓர் ஏற்பாடு செய்து வண்ணமடித்துக் கொடுத்துவிட்டு வெளியேறினோம். ஓர் எளிய ஓவியத்தின் விலை ஐயாயிரம் வரைக்கும் பேசப்பட்ட கதை அது!

    ‘மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்’ என்று தொடங்கும் பல்லவியை ஒரு திரைப்படப் பாடலில் கொண்டு வந்திருந்தார் கண்ணதாசன். நாற்பதாண்டுகளுக்குமுன் வேலூரில் நடைபெற்ற இலக்கியக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், வாகீச கலாநிதி என்று அழைக்கப்பட்ட கி வா ஜகந்நாதன் அவர்கள், தாம் ஆசிரியராக இருந்து நடத்தி வந்த கலைமகள் இதழில் ஒரு சிறுகதைக்கு ஓவியர் பொருத்தமற்ற முறையில் வரைந்த நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டார். கதையில் வரும் ஐம்பதைக் கடந்த ஆணுக்குப் பதில், வாலிப வயதில் நாயகன் காட்சியளித்த அந்த ஓவியத்தை அவர் நிராகரிக்கப் போனாராம். கொஞ்சம் பொறுங்கள் என்று சொன்ன அந்த ஓவியர், அதே ஓவியத்தில் முகத்தில் மிகச் சில கோடுகளை இழைத்துக் காட்டியதும், பல ஆண்டுகள் கழித்து வரவேண்டிய முதுமைத் தோற்றம் உடனே வந்துவிட்டிருந்ததாம். அதுதான் கலையின் கை வண்ணம் என்றார் கி.வா.ஜ.

    Gopulu Artistகோடுகளின் சுவாரசியமிகுந்த பேரரசைக் கட்டியாண்ட மகத்தான ஓவியர்களில் அண்மையில் மறைந்த கோபுலுவின் பெயர் தனியிடம் பெற்றிருப்பது! ஓவியங்களுக்கு முற்றுப் புள்ளி ஒன்று கிடையாது, கற்பனையின் விரிவில் ஏதோ ஒரு புள்ளியில் அது நிற்கிறது, அவ்வளவுதான் என்று சொல்லப்படுவதுண்டு. கோபுலுவின் படைப்புகளில் இந்த விவரிப்பின் உண்மை சுடர்விடுவதைக் காணலாம்.

    ‘முப்பது கோடி முகம் உடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்ற கவிதை வரியை மகாகவி பாரதி எப்படி கண்டடைந்தானோ தெரியாது, ஆனால், கோபுலு வித விதமான முகங்களை உயிரோட்டமாகக் கொண்டு வந்து சேர்த்தார். கோணிக் கொண்டு போகும் முகம், அசடு வழியச் சிரிக்கும் முகம், அசாத்திய கோப முகம், அன்பு வதியும் முகம், ஆசை திரண்டிருக்கும் முகம், ஆத்திரம் பற்றி எரியும் முகம்….என அவரவர் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும் என்று பொதுவான பத்திரிகையில் அவர் தீட்டியபடி இருந்தார் போலும்!

    கோபுலுவின் எந்த ஓவியத்தைக் கண்ணுறுவோர்க்கும் எங்கோ ஓரிடத்தில் மாய விசை ஒன்று தட்டுப்பட்டுவிடும். மானசீகமாக அதை அழுத்தின மாத்திரத்தில், ஓவிய பாத்திரங்கள் கடகட என்று தங்கள் செய்கையில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பதை சன்னல் திறந்து வைத்துப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நாமாக அடுத்த பக்கத்திற்குக் கடந்து செல்கிறவரை அந்தப் பாத்திரங்கள் ஓடியாடி வேலை செய்துகொண்டிருக்கும்.

    எத்தனை எத்தனை பாத்திரங்கள், துணுக்குகளில்…..! யாராவது நம்மைப் பார்த்துவிடுவார்களோ என்று விஷமக் கொடுக்குப் பயல் ஓசைப்படாமல் நழுவிச் செல்வது, என்ன வம்பு கிடைக்கும் என்று ஆசாமி ஒருவன் அலைவது, பந்தா பேர்வழி ஆரவாரத்தோடு நகர்வது, திருட்டுமுழி முழித்தபடி யாரோ நடப்பது…. எதைத்தான் மனிதர் விட்டுவைத்தார்!

    நகைச்சுவை துணுக்குகளில் வசனக் குறிப்புகளை விடவும் வேகமாக விஷயத்தைப் பேச வேண்டியது அதற்கான படம்தான். கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கும் குட்டிப்பெண்ணுக்கு, கண்ணாடியே போட்டுக்கொள்ளாத பாட்டி அனாயாசமாக ஊசியில் நூல் கோத்துக் கொடுத்து உதவும் துணுக்கைப் பாருங்களேன், அதில் வேறு எத்தனை பாத்திரங்கள் எவ்வளவு முகபாவமும், உடல்மொழியும் காட்டுகின்றனர்! சுவரில் ஆணியில் எத்தனை விதமான பொருள்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அருகே ஒரு மரப்பெட்டி…..எத்தனை எத்தனை உள்விவரங்கள்! அ ஃறிணை பொருள்களும் பேசும் சித்திரங்கள் அவருடையவை!

    Gopulu joke Old woman with needle on hand

    கேலிச் சித்திரம், கதைக்கான ஓவியம், கருத்துப் படம், அரசியல் நையாண்டி, வண்ணப் படங்கள்….என விகடன் இதழில் அவரது பன்முக ஆளுமை பொங்கித் ததும்பி வழிந்த காலங்கள் மகத்தானவை. விகடன் அட்டைப்படங்களில் நகைச்சுவை துணுக்குகளே வெளிவந்துகொண்டிருந்த பல பத்தாண்டுகளில் கோபுலுவின் கைவண்ணம் சிறப்பு கவனம் பெற்றுவந்தது. பிறகு தீபாவளி மலர்களைக் கேட்பானேன்! பட்டாசு வகைகளில் எத்தனை வகைகள் உண்டோ, இனிப்பு காரங்களில் எத்தனை வகைகள் உண்டோ, உடுத்தும் உடைகளில் எத்தனை வண்ணங்கள் உண்டோ அத்தனையையும் அதேபோல் ஒளியும், ஒலியும், சுவையுமாகப் படைக்கும் ஓவியர்களின் கொண்டாட்ட பக்கங்களில் கோபுலுவின் தூரிகைக்கு ரசிகர் பட்டாளம் வாண வேடிக்கை செய்து வரவேற்பு கொடுத்த காலங்கள் அவை….

    ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகளில் வந்த வார இதழ் கதைகளை, தொடர்களை அந்தந்தப் பக்கங்களோடே பைண்டு செய்துவைத்து இன்றும் பாதுகாத்து வரும் வீடுகளில் நிலைபெற்று விட்டவை கோபுலுவின் ஓவியங்கள்……அது சரித்திரத் தொடராக இருக்கலாம், சமூக நாவலாக இருக்கலாம், நையாண்டி சித்திரமாக இருக்கலாம்… கோபுலு கைலாகு கொடுத்து உள்ளே அழைத்துச் செல்லாமல் எந்தக் கதையின் வாசிப்பு முழுமை பெற்றுவிடக் கூடும்!

    தேவன் படைத்த துப்பறியும் சாம்புவிற்கு இரட்டை மண்டையும், வளைந்த மூக்கும் கொடுத்து அசத்தியது கோபுலு அல்லவா…ஜெயகாந்தனின் நாயகியர் செம்மாந்து பார்த்த பார்வையின் விழியாக இன்றும் மின்னிக் கொண்டிருப்பது அவரது தூரிகையின் மொழி அல்லவா…..வாஷிங்டனில் நடந்த திருமணத்தில் எழுத்தாளர் சாவி முதலில் கொண்டுபோய் இறக்கியது கோபுலுவைத்தானே! அடடா…அடடா…எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் ஓவியத் தலைவா….

    thuppariyum sambuGopulu Art 1

    gopulu art 5

    Washingtanil Thirumanamgopulu Art 4

    மகத்தான புதினங்களைப் படைத்த கல்கி தொடங்கி உமாசந்திரன், ராஜம் கிருஷ்ணன்….என்ற வரிசையில் மாலன், பாவை சந்திரன் வரை அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் படைப்புக்கு வரைந்து வந்ததில் மூப்பின் களைப்பு தெரியாது வயதுக்கே சவால் விடுத்த கரம் அல்லவா அவரது !

    1924ல் பிறந்த கோபுலு, கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்றவர். 1945ம் ஆண்டுமுதல் விகடன் இதழில் பணியாற்றத் தொடங்கி நீண்ட கால சாதனை படைத்தவர். விகடனை நாடி வந்த அவரை, புகழ் பெற்ற ஓவியர் மாலி அவர்கள் சளைக்காது வேலை வாங்கிப் பல மாதங்களுக்குப்பின் தான் உள்ளே நுழைய விட்டிருக்கிறார். அவர் கொடுத்த முதல் வேலையே தீபாவளி மலருக்கானது! கோபுலு என்ற புனைபெயரையும் அவரே சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

    Gopulu Art 3Rajaraja Chozhan

    பல்லாண்டுக்காலம் தூரிகையைப் பிடித்திருந்த கைக்குச் சற்று ஓய்வு தேவைப்பட்டிருக்கிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குமுன் பக்கவாதம் தாக்கி அவரால் வலது கையைப் பயன்படுத்த இயலாமல் போயிருக்கிறது. மருத்துவர் செரியன் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கையில், நான் தான் இத்தனை நாளாய் ஸ்ட்ரோக் (கோடுகள்) போட்டுக் கொண்டிருந்தேன்…எனக்கே இப்போது ஸ்ட்ரோக் (வாதநோய்) வந்துவிட்டது என்று அப்போதும் நகைச்சுவை உணர்வு வற்றிவிடாது சொல்லி இருக்கிறார் கோபுலு. அதைவிட வியப்புக்குரிய விஷயம், இடது கையால் ஓவியம் வரையத் தொடங்கி இருக்கிறார். எந்தக் கை என்பதில் என்ன இருக்கிறது, கையா வரைகிறது, மூளைதானே வரையவைக்கிறது என்று அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தாராம் அவர்.

    அண்மையில் தனது 91ம் வயதில் இயற்கை எய்திய அவரது வாழ்க்கை கூட, ஒரு புள்ளியில் தவிர்க்க மாட்டாமல் நின்றுவிட்ட, ஆனால் நீட்சி பெறத் தக்க ஓவியமாகவே நிலை பெற்றுவிட்ட ஒன்று என்றே தோன்றுகிறது. நேரடியாக எத்தனையோ பேருக்கும், தாங்களாக ஏற்றுக் கொண்ட எண்ணற்ற ஏகலைவன்களுக்கும் ஆசானாக இருந்த மகத்தான எளிய மனித ஆசிரியர் கோபுலு. எதிர்கால ஓவியத் தலைமுறையினருக்கும் கூட!

    _____________________________________

    நன்றி: செம்மலர் ஜூன் 2015

     

     

    Share
  • கண்ணன் வந்தான்… அங்கே கண்ணன் வந்தான் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    கண்ணன் வந்தான்

    கண்ணனின் கானங்கள்… கண்ணதாசன் என்னும் புல்லாங்குழல் வழியாக… என்ன சுகம்? என்ன சுகம்?

    யமுனா நதியிங்கே … ராதை முகம் இங்கே… கண்ணன் போவதெங்கே…
    கண்ணான கண்ணனுக்கு அவசரமா…
    இன்னும் பல பாடல்கள்… கண்ணதாசன் கைவண்ணத்தில்…

    நீங்கள் பட்டியலிட்டிருக்கும் பாடல்கள் – இசையின் அமோக விளைச்சல் ரகம்!!

    கண்ணதாசன் கண்ட தெய்வதரிசனம் என்னும் நூலில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டதைப்போல்…

    இந்தப் பாடலை கண்ணதாசனா எழுதினார்… இல்லை… இல்லை…
    கண்ணதாசன் என்று பெயர் போடுகிறார்கள்…
    கண்ணதாசனால் இப்படிப்பட்ட பாடல் எழுத முடியுமா? முடியாது… முடியவே முடியாது…

    கண்ணனே கண்ணதாசன் வடிவில் வந்து தனக்கொரு பாடல் எழுதிக் கொண்டான் என்று படித்தபோது கண்ணில் நீர் கனத்தது! கடவுளே உன் வடிவம் தாங்கி பிறந்த பாடலாய் கருதப்படுகின்ற ஒரு பாடலில் எத்தனை அடர்த்தி… உருக்கம்… நெகிழ்ச்சி…

    அறிந்தவர் அறிவாராக….

    கண்ணன் வந்தான்… அங்கே கண்ணன் வந்தான் …

    கானங்கள் எனும்போதே கண்ணனின் புல்லாங்குழல் நினைவுக்குள் வட்டமிடும்! அதுவும் அமுதகானம் எனும்போது காதுகளில் ரீங்காரமிடும்! சுகமான வார்த்தைகள் சேரும்போது சொர்க்கமே எனத் தோன்றும்! இதயத்தைத் தாலாட்டும்! ஆயர்பாடி மாளிகையில்… அந்த ரகம்தான்! ஆனால், இதோ வருகிறது… ஒரு திரைப்பாட்டு ‘ராமு’ என்கிற திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இன்னிசையில் கண்ணதாசன் எழுதிவைத்த பாட்டு! சீர்காழி கோவிந்தராஜனுடன் ஏழிசைமன்னர் டி.எம்.செளந்திரராஜன் இணைந்து குரல் கொடுக், கண்ணனின் சன்னிதானத்தில் ஊமைப்பிள்ளையுடன் கதாநாயகன் கண்ணனிடம் முறையீடு! உணர்ச்சிகரமான கட்டம்! எல்லாமே பாடல் காட்சி மூலம், கல்மனதும் கரைய வைக்கும் கானம்… கல்லாக நின்ற கண்ணனைக் கரைய வைத்ததோ? காண்போரின்கண்கள் கலங்கியது உண்மைதானே! திரு.நாகையா என்னும் நவரச நடிகரின் உன்னத நடிப்பில்!

    இப்பாடலை எப்போதும் போல் ரசித்துக் கேட்டேன். ஆனால் இதில் என்னென்ன இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ள எனக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.

    ஒரு ஞாயிற்றுக்கிழமை… வழக்கம்போல் தமிழ்ச்சங்கப் பணிகள் தொடர்பாக வெவ்வேறு சந்திப்புகள்… அன்றையதினம் நண்பர் வேலுமணி அவர்களது இல்லத்தில் மதிய உணவின்போது அவர்தம் மகள் சசிரேகா கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் பெற்ற வெற்றிக்காக இரண்டு புத்தகங்கள் பரிசாகக் கிடைத்தன என்று நீட்டினாள். அவற்றில் ஒன்று கண்ணதாசன் பெயர் கொண்டது. சட்டென்று வாங்கி… சில வார்த்தைகள் அவர்களைப் பாராட்டி… உடனே நண்பரிடம் இதுபற்றி ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை என்றே உரிமையுடன் கேட்டேன். எனக்கே இப்போதுதான் தெரியவருகிறது என்று பதிலுரைத்தார் திரு.வேலுமணி. புத்தகத்தை படித்துவிட்டு தருவதாகச் சொல்லி இல்லம் திரும்பினேன். புத்தகத்தின் பெயர் – கண்ணதாசன் கண்ட தெய்வ தரிசனம் – வானதி வெளியீடு – ஆசிரியர் – திரு.ஆர்.சீனிவாசமூர்த்தி.

    அந்த நூல் என் கையில் கிடைத்த நான்காவது நாள் பல்லவபுரம் துவங்கி… மயிலை வரையிலான எனது அன்றாடப் பேருந்து பயணத்தில் புத்தகத்தைப் பிரித்தேன். முன்னுரை… அருளுரை, வாழ்த்துரை என நூலின் முன்பகுதி மட்டுமே படித்திருந்தேன்… இதயம் கனத்துப் போனது! என்ன ஆனது என்பது மட்டும் விளங்கவில்லை! அதுவும் அருளுரையில் ஜீயர் எனப்படும் மகான் 95 வயதில் கண்கள் பழுதான பின்னும் இந்நூலைப் படிக்கச் சொல்லிக் கேட்டு அருளுரை வழங்கியிருக்கிறார் என்றால்… இலக்கியச் சுடர் த.இராமலிங்கம் வழங்கிய உரை என… முத்தாய்ப்பாய் ஒரு வரி… ஒரு பக்கத்தின் முழுமையாய்…

    மூல ஆசிரியன் சொல்ல நினகை்காததையும் உரை ஆசிரியன் காண முடியும் – என்கிற கருத்தைச் சுமந்த கண்ணதாசனே செப்பிய வரியாக…

    அழுத்தம் திருத்தமாய் ஒரு நூலில் இப்படி அடங்கிப்போது இதுவே முதல் முறை! இந்நூலை மேற்கொண்டும் படிக்க மனம் இடம்கொடாமல்… இதயம் நிறைந்திருந்தது. அலுவலகம் (நகலகம்) நுழைந்து முதல் வேலையாக ‘வானதி’ பதிப்பகத்திற்கு தொலைபேசி அழைப்புவிடுத்து… ஆசிரியரின் தொடர்பு எண்ணைக் கேட்டேன். உடனே தெரியாது… என்றே பதில் வந்தது. பொங்கிய வெள்ளம் வடியவில்லை… உள்ளம் அலைமோதியது. வழிதேடி மீண்டும் அழைத்தேன்… வானதியை… ‘மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன்… இன்றிரவு புறப்படுகிறேன்… அதற்குள் அவரைச் சந்திக்க வேண்டும்,” என்றேன்… கொஞ்சம் இருங்கள் என்றார்கள். சில நிமிடங்களில் அவரின் தொலைபேசி எண்ணைத் தந்தார்கள். மலேசியா என்று சொன்னது சரியா என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டேன். சரிதான் என்றது தாயின் குரல்… ஆம்… என் தாயார் திருமதி. தங்கம் முத்தையா அவர்களின் பிறப்பும் வளர்ப்பும் மலேசியாதான். எனவே அங்கிருந்த வந்தவன் என்பதில் ஐயமில்லை… உடனே அந்த ஆசிரியரைத் தொடர்பு கொண்டு அவருக்காக எழுதிவைத்த ஆனந்த மடலைப் படித்தேன்! அப்பொழுதுதான் அடங்கியது அந்த உற்சாக வெள்ளம்! அன்றிரவு மீண்டும் அவரை நேரில் சந்தித்து மடலைச் சமர்ப்பித்து காலில்விழுந்து ஆசிபெற்று வீடு திரும்பினேன்.

    அந்தப் புத்தகம் என்ன சொல்லியது என்பதற்கு ஒரே ஒரு சான்று போதும் என்று கருதுகிறேன்… ஆம்… அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் உள்ளடக்கங்களாக… அத்தியாயங்களாக…

    ஒரு தாய் தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டபின்னரும் சிறிது நேரம் அழட்டும் … பிறகே நன்றாக பால் குடிக்கும் என்று நினைப்பாள்… ஆனால்… ஏழைக் கண்ணீரைக் கண்டதும் … கண்ணன் வந்தான் என்கிறபோது… ஒரு தாயின் வேகத்தைவிட…கண்ணனின் வேகம் என…

    அந்த நூல் முழுவதும் விளக்கங்கள் தொடர்கின்றன! அந்த நூலுக்கும் அந்த ஆசிரியருக்கும் நன்றி தெரிவிக்கும்பொருட்டு… அந்த ஆண்டு நடைபெற்ற கண்ணதாசன் விழாவில்… கண்ணன் வந்தான் என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி… திரு. சாஸ்தா தாசன் அவர்கள் குழுவினருடைய சிறப்பு மெல்லிசை நிகழ்ச்சி நடந்தேறியது!

    நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
    நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
    பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
    பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே………..

    கண்ணன் வந்தான் அங்கே
    கண்ணன் வந்தான் – ஏழை
    கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் …
    கண்ணன் வந்தான் ஆ…

    தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
    தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
    கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
    கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
    தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
    தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
    கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
    கண்னன் வந்தான் …
    (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

    முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
    மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
    குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
    ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
    அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
    அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
    சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்
    சந்நிதானம் …
    (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

    கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
    காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
    கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
    கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
    கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
    கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
    கண்ணா … கண்ணா … கண்ணா … கண்ணா …
    (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    படம்: ராமு
    பாடல்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    குரல்கள்: சீர்காழி கோவிந்தராஜன், டி எம் சௌந்தரராஜன்
    காணொளி: https://youtu.be/izx_k8Y_f9o

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    https://youtu.be/izx_k8Y_f9o

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (15)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11216346_840352649352269_429205382_n

    திரு எம். வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு  ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடையவலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 14-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. வனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்தை  (பட்டுப்புழுவின் கூடுகள் இவை)  போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழின் நன்றிகள்.

    10609031_716498245161097_1832540875_n

    பட்டுநூலைச் சுரந்துதரும் பட்டுப்புழுவைக் கொன்றே மனிதர்கள் அந்நூலைச் சேகரிக்கின்றனர் என்று அறியும்போது மனம் துயரத்தில் துடிக்கின்றது.

    பட்டுநூலைத் தந்துவிட்டுப்
    பட்டுப்போகும் புழுவே  என்
    பளபளக்கும் பட்டுக்குள் உன்
    மரண ஓலம் கேட்கின்றதே! என்று அவற்றின் தியாகத்தை நம் உதடுகள் வேதனையோடு முணுமுணுக்கின்றன.

     ***

    சரி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் நெஞ்சம் தொ(சு)டும் கவிதை வரிகளைப் படித்துவருவோம் முதலில்!

    விருப்பமில்லாவிடினும் வயிற்றுப் பிழைப்புக்காய்க் கூட்டுப்புழுக்களை வளர்க்கும் தானும் ஒரு கூட்டுப்புழுவே எனக் குமுறும் மாதரசியின் எண்ணவோட்டத்தைப் பதிவுசெய்திருக்கிறார் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர்.

    ரெண்டு மாசகாலமா
    காவலிருந்து கண்ணுல
    வெச்சு வளர்த்த
    வெண்பட்டுக் கூடிது.!
    […]
    கருவுக்குள் உறங்கும் உயிரை
    நானறிய மாட்டேனா?
    சிறகுகள் முளைக்குமுன்னே
    சூரியனைக் காணுமுன்னே
    கூண்டோடு கைலாசம்..
    அனுப்ப எனக்கும்
    நெஞ்சம் ஒப்பவில்லை..!

    மனித வயிறு இல்லையென்றால்
    கூடைக்குள் கூறு கட்டி
    வெந்நீரில் வேகப் போடும்
    வேதனை ஏதுமின்றி
    கூட்டுப் புழுக்களிதும்
    சுதந்திரமாய்ப் பறந்திருக்கும்..!
    […]

    பாவங்கள் எண்ணாத
    மலட்டு மனங்கள்..!
    வருமானங்கள் எண்ணியே
    பழகிக் கொல்லும்..!

    பாவிதான் நானுமிதில்
    மீளாது மாட்டிக்கிட்டேன்
    கூட்டுப்புழுக்களாய்
    கூடைக்குள் நெளியும்
    உயிர்கள் பலியாக..!

    காய்ந்த வயிறும்
    காலித் தட்டுமே
    இந்நிலைக்கு
    என்னைத் தள்ள
    உள்ளுக்குள் வேதனையும்
    உதட்டளவில் புன்னகையும்
    சுமந்து நெளியும்
    நானும்கூடக் கூட்டுப்புழு..!

     ***

    ’இரவுகள் என்னைப் பயமுறுத்துவதில்லை; ஜன்னல் கீறி உள்ளே நுழையும் பகலின் அத்துமீறல் என்னால் மன்னிக்கமுடியாதது’ என்று இங்கே குரல்கொடுப்பது கூட்டுப்புழுவா? இல்லை….புன்னகைக்கும் மாதரசியா? என நம்மை யோசிக்கவைக்கிறார் திரு. கவிஜி.

    …மெழுகுவர்த்தி அற்ற 
    இரவுகள் கூட
    நிலவுக்கு அழைத்துச் 
    செல்லும் 
    யதார்த்தங்களில் ஒன்று…

    கீற்றொளியென 
    ஜன்னல் கீறும் பகலை நான் 
    மன்னிப்பதில்லை
    அது ஓர் அத்துமீறல்…
    […]
    இரவுகளின் கைகளில் 
    சிறு குழந்தையென
    பசி மறக்கும் இறுமாப்புடன் 
    நீண்டு கிடக்கிறது 
    எனது நீட்சிகள்…

    அங்கே பல்லாங்குழியோ 
    கோலி குண்டோ 
    விளையாடும் 
    இரவின் நிழலுக்குள் 
    நான் காலம் கடந்து 
    பின்னோக்கி செல்கிறேன்…

    அப்போது 
    தலை தடவிச் 
    சிரிக்க எப்போதும் 
    பகலை விரட்டிய 
    ஒரு பின்னிரவு 
    காத்திருக்கிறது…
    எனக்காக…

    ***

    பட்டுநூல் விற்றுப் படிக்கவைத்து மகளை மருத்துவராக்கிவிட்டதில் மகிழும் அன்னை உள்ளத்தைக் காட்டுகிறார் திரு. ஹரீஷ்.

    பூச்சி தந்த நூலெடுத்துப்
    பெரும்பாடு பட்டு வித்து
    வாயக் கட்டி வாழ்ந்து பழகி
    வயத்துப் பாட்டப் பாத்தாச்சு
    மனசு போலப் படிச்சிடத் தான்
    மவ அவளும் ஆசப்பட்டா

    வாழ்க்கைக்கே வழி இல்ல
    வக்கணையாப் படிப்பெதுக்குன்னு
    கேள்வியேதும் கேக்காம
    கெழவி நானும் தலையசைச்சேன்
    […]
    தங்கம் போலப் பொண்ணு மவ
    டாக்டராவே ஆகிப்புட்டா
    சங்கடமெல்லாம் ஓடிப் போச்சு
    சந்தோசம் இனி நிரந்தரமாச்சு
    மூஞ்சியில பொங்குது சிரிப்பு
    இனி கவுரதையாச்சு எங்க இருப்பு.

    ***

    தான் கட்டிய பட்டுக்கூடு தனக்கே சிறைச்சாலை ஆனதை எண்ணிச் சீறும் பட்டுப்பூச்சியின் கோபத்தைப் பாட்டாக்கியிருக்கிறார் திரு. சாயாசுந்தரம்.

    இழை இழையாய்
    கட்டப் பட்டக் கூட்டுக்குள்
    எப்போது நான்
    சிறைப்பட்டேன் என எப்படி
    யோசித்தும் தெரியவில்லை எனக்கு …….

    கேட்பதற்கு ஆயிரம்
    கேள்விகள் இருந்தும்
    கேட்கவே கூடாது என
    எந்த இழையால்
    கட்டப் பட்டது என் நாவு …..

    முளைத்த சிறகுகள் விரித்து
    பறக்க இயலாமல்
    அடைத்து வைத்து என்னை
    அடையாளம் இழக்கச்செய்வது தான்
    அன்பென்று சொன்னால் …..
    அறுத்துக் கிழிக்கவா

    அத்துமீறவா—-இல்லை
    அகப்பட்டுக் கொண்டது தான்
    சாஸ்வதம் என
    ஆசுவாசப்படுத்திக் கொண்டு
    […]
    நேரம் வந்தால் செத்துப் போவதா? 

    ***

    மரத்தை வெட்டிச் சாலைகள் அமைத்ததிலும், குளத்தைத் தூர்த்துக் குடியிருப்புக்கள் கட்டியதிலும் சமுதாயத்தின் வாழ்வாதாரத் தேவையிருக்கின்றது. ஆனால் பகட்டுக்கான பட்டிற்காகப் பட்டுப்புழுவைக் கொல்வதில் பாவத்தைத் தவிர வேறென்ன இருக்கிறது? என வினாத்தொடுக்கிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    நீண்ட நெடிதுயர்ந்த மரங்களை
    நெடுஞ்சான் கிடையாய் வீழ்த்தி
    நெடுஞ்சாலைகள் அமைத்தோம்
    நேரத்தை மிச்சப்படுத்த
    […]
    நீர் தேக்கும் மையங்களாம்
    ஆறு குளம் ஏரியென
    அத்தனையும் தூர்த்து
    அடுக்குமாடிகள் கட்டினோம்
    இனப் பெருக்கத்தை எதிர் கொள்ள
    […]
    அத்தனை அழித்தல்களும்
    சமூக குறிக்கோளொன்றைச்
    சார்ந்திருந்தது

    ஆனால்
    பட்டுப் புழுக்களே
    உங்களை பலியிடுவது
    பணத்தின் பலம் காட்டும்
    பகட்டிற்காக மட்டுமே…
    ஆனால்
    அந்தப் பாவத்தில்
    எனக்கேதும் பங்கில்லை
    ஏனென்றால்
    பட்டாடை அணிய 
    பணவசதி எனக்கில்லை
    என் புன்முறுவலதை
    உங்களுக்கு புரியவைத்திருக்கும்!

     ***

    தன்னுழைப்பில் முன்னேறிய பெண்ணின் பெருமிதம் கூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பட்டுப் பூச்சி கூடுகட்டிப்
         பாது காத்தது பட்டுநூலை,
    பட்டு நூலைச் சேர்த்தவள்தான்
         பருத்தி நூலின் ஆடையிலே,
    கெட்டிட வில்லை, வாழவைத்தாள்
         கடின உழைப்பில் பிள்ளைகளை,
    மட்டிலா மகிழ்வை முகங்காட்டும்
         மங்கை வாழ்வை வென்றவளே…!

     ***

    பருத்திப்பஞ்சை நெய்து உடுத்தும் எளிமையான ஆடைகளே ஏற்றமிக்கவை; பட்டாடைகளுக்கு ஏது அந்த மிடுக்கு? எனக் கேட்கின்றார் திருமிகு. துஷ்யந்தி.

    …பட்டுடுத்தி செல்வாக்காய்
    இருந்ததில்லை நாமிங்கே
    பருத்தி நூலில் செய்யுமாடை
    நிகரில்லை பட்டுக்கே…!

    பத்துதரம் துவைத்த போதும்
    பதம் குறையா நூலிதே…
    பாட்டன் பூட்டன் காலந்தொட்டு
    நமக்கு கைவந்த கலையிதே…!

    சிட்டுபோல சேர்த்தெடுத்து
    கொண்டுவந்த பருத்திப் பஞ்சிதே
    செல்வாக்காய் நம்நாட்டை
    உயர்த்தும் ஒரு தொழிலிதே….!

    ***

    ’பட்டு’ எனும் சொல்லையே இறுதிச் சொல்லாக்கிப் பாவையொருத்தியின் வாழ்க்கையைப் ’பா’வாக்கியிருக்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    வாலிபத்துக் காலந்தொட்டு பட்டுப்பூச்சி 
    ==வளர்த்தெடுக்க ஆசைப்பட்டு பழக்கப்பட்டு  
    தாலிகட்டி வந்தபின்னும் தொடரப்பட்டு 
    ==தனிமரமாய் ஆனபின்னும் துணையாய்பட்டு 

    விட்டுப்போன கணவனாலே வெறுக்கப்பட்டு 
    ==வீதியிலே அனாதைபோல விடவேபட்டு 
    பட்டுப்போன வாழ்க்கைதனை மீட்கப்பட்டு…

    ***

    பட்டுப்புழுவைக் கொல்வதால் ’தீட்டு’ப்பட்ட அந்தப் பட்டை உடுத்துதல் தவிர்மின் பெண்டிர்காள்! என நல்லுரை நவில்கிறார் திருமிகு. புனிதா கணேசன்.

    கூட்டுப் புழுவின் பட்டு
    கூட்டைப் பிரித்து உயிர்க்
    கூட்டை வதைக்கும் கோரம்
    பட்டுப் புழுவின் வாழ்வு ..
    வெட்டிப் புதைத்துத் தேடும்
    தீட்டுப் (பட்ட) பட்டை நாடும்
    வீட்டுப் பெண்டிர் கேண்மீர்
    கூட்டுப் புழுவை வதைத்து
    பட்டுச் சீலை சூட நாட்டமேன்?
    விட்டு விடும் உயிர் பிழைக்க…

    ***

    தம் உமிழ்நீரே தனக்கு எமனானதை எண்ணி வருந்தும் பட்டுப்புழுவின் சோகத்தைப் பிழிந்து தந்திருக்கின்றார் திருமிகு. தமிழ்முகில்.

    புழுவாய் ஊர்ந்த நானும் எந்தன்
    உமிழிக் கூட்டுள் அடைக்கலமானேன் !
    எந்தன் உலகம் சுருங்கிய போதும்
    ஆசைக் கனவு சுருங்கவில்லை !
    ஆனால்…..
    ஏனோ இறைவா ! ஏனிந்த வேதனை !
    எதிர்பாரா நொடியில்
    வெந்நீரில் வெந்து மாண்டேன் !
    என் உமிழ்நீரே எனக்கு
    எமனாகிப் போனதே !

    ***

    வறுமையிலும் செம்மையாய் வாழும் கண்ணியமான பெண்மையை நமக்கு அறிமுகப்படுத்தி, இல்லார்க்கு உதவுவதே நல்லறம் என்பதையும் எடுத்தியம்புகிறார் திரு. சுரேஜமீ.

    …மானுடம் வாழ்வல்ல
     மனிதம் வாழ்ந்திடுங்கள்
    மண்ணில் நிலைபெறவே
     மாற்றவர் வணங்கிடவே
    மாதவம் செய்திட்ட
     மலர்கள் சொல்லுமிதை
    மங்கை யான்பெற்ற
     மண்ணின் தவமிதுவே!

    மலர்கள் மட்டுமல்ல
     மனதும் வெண்மைதான்
    மதியொளி ஒத்தவொரு
     மழலையின் சுகமிதுதான்
    மாண்பாய் வாழ்வதில்தான்
     மண்ணும் பயனுறுமே
    மகிழ்ச்சிக் கடலினிலே
     மல்லிகை மணமுடனே!
    […]
    இதயம் உணரட்டும்
     இல்லார் துயரத்தை;
    இருப்பவர் கொடுக்கட்டும்
     இன்முகம் பார்க்கட்டும்
    இல்லை வருமையென
     இனிமை மலரட்டும்
    இயன்றவரை செய்வோம்
     இனியொரு விதிசெய்வோம்!!

    ***

    பட்டுச்சேலை நெசவிற்காக ஆயிரமாயிரமாய்ப் பட்டுக்கூடுகள் அழிவதைக் கண்டாலும், பட்டுடுத்தும் மக்களின் ஆசை அழியாது என்கிறார் திருமிகு. வானதி வேதா. இலங்காதிலகம்.

    ஒரு பட்டுச் சேலை நெசவிற்கு
    ஒரு 4000 – 5000 பட்டுக் கூடு
    ஒரு புறம் கொலை, அழிவு, கொடுமை!
    மறுபுறம் அழகிய ஆடை புதுமை!
    பலர் சீவனம், வருவாய் பிழைப்பு!
    எவர் பட்டை வேண்டாம் என்பார்!
    சிலர் பட்டு அணிவதே இல்லை!
    சிந்தனைக்குரிய சிறு கைத்தொழிலே!

     ***

    பட்டுப்புழுவிடம் தன் அவலக் கதையைச் சொல்லிப் புலம்பும் மங்கையின் சோகத்தைக் கவிதையாக்கியுள்ளார் திரு. ரோஷான் .ஜிப்ரி.

    பட்டுப் புழுவே,பட்டுப் புழுவே
    என் பாட்டினை நீ அறிவாய்
    கொட்டும் மழையிலும்
    வெட்ட வெளியிலும்
    என் ஏக்கத்தை நீ உணர்வாய்
    பட்டுப் போகாது தினம்
    வாழ்வை துளிர்ப்பிக்க
    பட்டு நூல் செய்கின்றேன்-பிறர்
    கெட்டுப் போகாமல்
    தேகம் மறைத்திட
    ஆடை நான் நெய்கின்றேன்
    கொட்டன் உடுதுணி தேடி அலைபவர்
    குறைகளை களைகின்றேன்
    கூழுக்கு மாரினை அடித்த படி நான்
    நாளும் அலைகின்றேன்.

    ***

    ஒருவரின் மகிழ்ச்சியில் இன்னொருவரின் வீழ்ச்சி ஒளிந்திருக்கக் காண்கிறோம். இதுதான் வாழ்வின் நியதி என்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    கொடுத்து கொடுத்தே
    சிவந்தன கர்ணனின் கரங்கள்
    நீயும் கூட நூலிழை கொடுத்தே
    சிவப்பு நிறம் கொண்டாயோ
    மல்பரி இலைகளில் வளர்ந்து
    மற்றவர்களுக்காக உயிர் விடுகிறாய்
    இது யார் குற்றம்?
    படைத்தவனின் குற்றமா இல்லை
    பட்டுப்புடவைக்கு ஆசைப்பட்ட
    மகளிரின் குற்றமா?இல்லை இல்லை
    இறைவன் போட்ட கணக்கு பாதி வழியில்
    இறப்பு,ஒருவரின் துன்பம்
    மற்றவரின் லாபம்
    இது இறைவன்வகுத்த நியதி
    இதில் வருத்தம்  ஏன்  அமைதி

    ***

    அருமையான கவிதைகளால் கவனம் ஈர்த்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டுவருவோம்!

     மனிதர்களே! உங்களுக்கு நியாயம் வேண்டுமென்றால் மேடை போட்டு முழக்குகின்றீர்! நீதிமன்றம் செல்கின்றீர். ஆனால் பேச வாயில்லாத ஓர் சீவனைச் சித்திரவதை செய்து கொல்கின்றீரே? நீதி மனிதர்களுக்கு மட்டுந்தானா…எங்களுக்கில்லையா? என்று ஏக்கத்தோடு வினவி, ’நாங்கள் பஞ்சுப் பொதிகளல்ல! வெந்து கருகிய பிஞ்சுக்கனவுகள்’ எனும் பட்டுப்புழுவின் கோபம் கலந்த வேதனைக்குரலைப் பிரதிபலித்த கவிதையொன்று நெஞ்சைப் பதைக்க வைத்தது.

    அக்கவிதை…

    பட்டுப்பூச்சி நியாயங்கள்

    உனக்குத் தெரியுமா?
    உன் தோள் சாய்ந்திடும் பட்டு
    உன் அடக்குமுறைகளின் வெளிப்பாடு

    உயிரைப் பிழிந்து நூலெடுத்து
    கனவுக் கோட்டையை வேய்ந்தது
    கல்லெறிந்துக் கலைக்கவா?

    இங்கே கொட்டி வைத்துள்ளது
    பஞ்சுப் பொதிகள் அல்ல
    வெந்து கருகியப் பிஞ்சுக் கனவுகள்

    மாய்ந்து மாய்ந்து கட்டிய
    கருவறையே
    அன்பின் சமாதி ஆனால்?
    வெற்றுத் தட்டில் வேதனையும்
    பஞ்சுப் பெட்டகத்தில்
    பட்டுப் பூச்சிகளின் வெந்த ஆன்மாக்களும்
    மட்டுமே மிஞ்சும்!

    இக்கவிதையின் ஆசிரியர் திரு. கனவுதிறவோனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்கிறேன்.

    ***

    ’பட்டுப்புழுவும் ஓர் படைப்பாளியே! படைப்பாளிக்குச் சமூகத்தில் மதிப்பில்லை; பட்டுப்புழுவும் அதற்கு விதிவிலக்கில்லை!’ எனும் உண்மைநிலையைப் பதிவுசெய்திருக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்ச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

     அக்கவிதை…

    படைப்பாளி!

    மனதுக்கு பிடித்த கலரில்
    மயில்கழுத்து வண்ண பார்டரில்
    பட்டுப்புடவை வாங்கத்தான் ஆசை
    மகிழ்ச்சிக் கனவில் திளைக்கும்
    அந்த மங்கைக்குத் தெரியுமா 
    புடவை நெய்ய நூல் தந்தது 
    மல்பெரியைத் தின்று இங்கே
    தான்வாழவே நூலில் வீடுகட்டிய
    புழுவும் ஒரு படைப்பாளி என்று

    படைப்பாளிக்கு என்றும் மதிப்பில்லை
    பட்டுப்புழுவும் அதற்கு விலக்கில்லை
    மல்பெரியைத் தின்று பட்டுநூல் 
    பிறப்பிக்கும் பட்டுப்புழுவைப் போன்றே
    படைக்கும் மனிதர்களும் பாரினிலுண்டு
    படைப்புதனை வாங்கி விற்கும் 
    கெட்டிக்கார வியாபாரி மட்டும் 
    பணம்தனை ஏராளமாய் குவிப்பதுண்டு

    பட்டுப்புழு கடவுள் அருளால்
    யோசிக்கும் சக்தி பெற்றால்
    மறுகணமே அது மல்பெரியைத்
    தின்னக்கூட காசு கேட்கும்
    தான் படைக்கும் நூலுக்கு
    விலை சொல்லியே விற்கும்
    பெரும் பணம் சேர்த்த
    பிஸினஸ்மேனாய் அது இருக்கும்
    படைப்பாளியே நீயும் யோசி!

    ***

    போட்டியில் கலந்துகொண்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுக்கள்!

     

    Share