Blog

  • வெடிக்கும் விண்மீன்கள் வெளியேற்றும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியின் இடிமுகிலில் மின்னழுத்தம் அளக்க உதவுகிறது

    Lightening measurements

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    பூமியில் இடி இடிக்குது

    மின்னல் அடிக்குது

    பேய்மழை பெய்யுது

    மின்னழுத்தம் தீமூட்டுது

    காடுகளில் !

    மனிதரைத் தாக்கி எரிக்குது.

    விண்வெளியில் ஒளி மந்தைகளோ 

    வெடிப்பு மீன்களோ,

    பரிதிக் கதிர்த் துகள்களோ

    அகிலக் கதிர்களாய்

    அடிக்குது.

    பூமியில் புரளும்

    இடிமுகில் மின்னழுத்தம் அளக்க 

    அகிலக் கதிர்கள் உதவும்.

    மின்னலைத் தூண்டி விடுமா அவை

    என்றறிய உதவலாம்

     +++++++++++++

    Thunder clouds -2

    அகிலக் கதிர்கள் இடிமுகில் மின்னழுத்தம் அளக்கப் பயன்பாடு
    20 கி.மீடர் [12 மைல்] உயரத்தில் அகிலக் கதிர்ப் புரோட்டான் பூகோளச் சூழ்வெளி வாயுவைத் தாக்கிய பிறகு, 10 மில்லி செகண்டுகளில் உண்டாகும் கதிர்ப் பொழிவுகளை ஒரு கணினிப் போலி வடிவில் [computer Simulation Model] போட்டு வானியல் பௌதிக விஞ்ஞானி  ஹைனோ ஃபால்கே [Heino Falcke] ஆராய்ந்ததில் ஓர் அரிய விளைவைக் கண்டார். ரேடியோ வானியல் ஆய்வகத்தில் வேலை செய்யும் ஃபால்கே குழுவினர் பூமியின் இடிமுகிலில் உள்ள ஆற்றல் மிக்க மின்னழுத்ததை, ஒரு கருவி மூலம் அளக்க முடிந்தது.  அந்தக் கருவி அகிலக் கதிர்கள் உருவாக்கும் மின் காந்த விளைவை அளவிட்டுக் காட்டியது.  இதற்கு முன் வாயு பலூன்கள், உளவு ராக்கெட்டுகள் மூலம் அளந்தாலும், ஃபால்கேயின் புதுவித பொறிநுணுக்கம் துல்லிய முறையில் மேம்பாட்டாகக் காட்ட முடிந்தது.  அத்துடன் மின்னல் எப்படி தூண்டப்படுகிறது என்று அறியவும், அகிலக் கதிர்கள் மின்னலைத் தூண்டுகிறதா என்று அறியவும், ஆய்வுகள் உதவின.  ரேடியோ வானியல் கருவியின் பெயர் : லோஃபர் [(LOFAR – Low Frequency Array) A Network of Radio Antennas & Particle Detectors, kept in Five European Countries]
    Lightning on Earth

    பரிதியின் ஆற்றல் மிக்க காந்தப்புலம் இங்கிலாந்தில் மின்னல் அடிப்பு வீதத்தை மிகைப் படுத்தத் தூண்டுவதில் பெரும்பங்கு ஏற்கிறது.  சூரிய காந்தப்புலம் ஒரு பட்டைக் காந்தம் போல் [Bar Magnet] நடந்து கொள்கிறது.  பரிதி சுற்றும் போது, அதன் காந்தப்புலம் பூமியை நேராக நோக்கியோ அல்லது மாறாக எதிர் நோக்கியோ தென்பட்டுப் பூகாந்தப் புலத்தை இழுத்தோ, விலக்கியோ வருகிறது.  காந்தப்புல மாற்றங்கள் மின்னேற்றும் பாட்டரிபோல் [Battery Charger]  சேர்ந்து இடிமின்னல் புயல்களைத் தீவிரமாக்கி அதிகப் படுத்துகின்றன.

    டாக்டர் மாத்தியூ ஓவன்ஸ் [Leading Researcher, University of Reading, UK] 
    காலநிலை அறிவிப்போர் சம்பிரதாய முன்னறிப்புடன், துல்லியமாகப்  பரிதியின் சுழி வடிவக் காந்தப் புலத்து அளவையும் [Spiral-shaped Magnetic Field, known as Heliospheric Magnetic Field (HMF)] சேர்த்து வெளியிட வேண்டும்.   2001  ஆண்டு முதல் 2006 வரை கிடைத்த காலநிலைத் தகவலை ஆராய்ந்து, பரிதி காந்தப்புலம் பூமிக்குப் புறம்பாக நோக்கிய போது,  இங்கிலாந்தில் 50% இடிமின்னல் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகத் தெரிகிறது.
    டாக்டர் மாத்தியூ ஓவன்ஸ் [Leading Researcher, University of Reading, UK] 
    ajayபரிதியின் காந்தப் புலச் சுழற்சி இடிமின்னலை மிகையாக்குகிறது
    2014 நவம்பர் 19 ஆம் தேதி வெளியான ஓர் விஞ்ஞான அறிக்கையில் [IOP Journal, Environmental Research Letters] இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக் கழக [University of Reading, UK] ஆராய்ச்சியாளர், ஐந்தாண்டு காலத்தில் 50% மிகையான எண்ணிக்கையில் இடி மின்னல்கள் இங்கிலாந்தில் அசுர ஆற்றலில் அடித்துள்ளன வென்று கூறியுள்ளார்.  குறிப்பாக அந்தக் காலங்களில் பூமியின் காந்தத் தளத்தைச் சூரியனின் காந்தப் புலம் ஒருபுறமாய் வளைத்துள்ளது என்று காரணம் தெரிந்துள்ளது.  விண்வெளியிலிருந்து வீழும் அகிலக் கதிர் மின்னேற்றத் துகள்களி லிருந்து [Charged Particles like Protons from the Cosmic Rays ] பாதுகாத்துக் கவசம் அளிப்பது பூமியின் காந்த மண்டலமே.  அவ்விதத் துகள்களே தொடரியக்கங்களைத் தூண்டி, தீவிரமான இடி மின்னல் களை முன்பு அறியப்பட்டது.  இம்முறைகள் மூலமாய் இப்போது பல வாரங்களுக்கு முன்பே இடி மின்னல் பேரிடர் விளைவுகளை முன்னதாகவே அறிவிக்க முடியும் என்பது புலனாகிறது.
    Lightening striking Earth

    அதைச் செய்ய காலநிலை அறிவிப்பாளருக்கு, சம்பிரதாயக் காலநிலைக் குறிப்புகளும், துல்லியமாக சூரியனின் கோள நிலைக் காந்தப் புலம் [Heliospheric Magnetic Field (HMF)]  தேவைப்படுகிறது.  சூரியன் சுற்றும் போது, பரிதிப் புயல், பூமியை நோக்கிக் காந்தப் புலத்தை உதைத்துத் தள்ளுகிறது.  இதை அறிவித்த பிரிட்டீஷ் ஆய்வாளர் டாக்டர் மாத்யூ ஓவனஸ் [Dr. Matthew Owens] “சூரியனின் ஆற்றல் மிக்க காந்தப்புலம் இங்கிலாந்தில் வீழும் இடி மின்னல் எண்ணிக்கையை அதிகமாக்குவதில் பெரும் பங்கு ஏற்கிறது,” என்றார்.  இங்கிலாந்தின் காலநிலை நிறுவகம் [United Kingdom Met Office], கடந்த 2001 ஆண்டு முதல் 2006 வரை கணிசமாக இடிமின்னல் எண்ணிக்கை 50% கூடியுள்ளதாக வெளியிட்டுள்ளது. இடிமின்னல்களின் எண்ணிக்கை, தீவிரத்தை முன்பெல்லாம் முன்னறிய முடியாது.  புதிய ஆய்வுகளின்படி எங்கு, எப்போது இடிமின்னல்கள் தாக்கும் என்பதை முன்னறிவிப்பு செய்வது எளிதானது.   சூரியனின் காந்தப் புல எழுச்சி மேலும், கீழும் ஏறி இறங்கும் போது, பூமியின் காந்தப் புலத்தை ஒருபுறம் வளைத்து, தீவிரச் சக்திப் புரோட்டான்கள் கொண்ட அகிலக் கதிர்களைப் [The Cosmic Rays (High Energy Protons)] புவித்தளம் மீது பொழியச் செய்கிறது.   அப்போது அகிலக் கதிர்கள் புவியின் வாயு மண்டலத்தில் வழி யுண்டாக்கிப் புயல் முகிலில் மின்னேற்றம் மிகையாக்கி [Electrical Charge builds up in Storm Clouds] பூமியைத் தாக்குகிறது.  சூரிய கோளம் 27 நாட்களுக்கு ஒருமுறை தன்னச்சில் சுற்றுகிறது.  அதாவது சூரிய காந்தப்புலம் இரண்டு வாரங்கள் பூமியை நேர் நோக்கியும், இரண்டு வாரங்கள் எதிர் நோக்கியும் உள்ளது.  ஆதலால் பாதி பரிதி சுழற்சியில், பூமியில் தாக்கும் இடிமின்னல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    Solar magnetic field -1“சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான் : பூமியின் உட்கருவை மெதுவாக ஆனால் அசுரத் தீவிரத்தில் பாதிப்பது சூரியன் ஒன்றே !  பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனே பிரதானக் காரணி என்பதை நானும் எனது கீர்த்தி பெற்ற விருந்தினர்கள் டாக்டர் பீட்டர் ஆல்ஸனும் டாக்டர்  நிகோலா ஸ்கஃபீட்டாவும்  ஒப்புக் கொண்டோம்.”
    மிட்செல் பாட்டிரோஸ் (Mitchel Battros) (Solar Rain நூல் படைப்பாளி)
    “பரிதி உச்சத்தின் (Solar Maximum) போது எப்போதும் (பரிதித் துருவத் திருப்பம்) நிகழ்கிறது !  பரிதி வடுக்களின் எண்ணிக்கை (Sunspots) உச்சமாகும் போது அதன் துருவ முனைகள் மாறுகின்றன.  இப்போது அந்த உச்ச நிலையைப் பரிதி அடைவது ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது.”
    டேவிட் ஹாத்தவே (David Hathaway, Solar Physicist, Marshal Space Flight Center)
    பரிதிக் கோளத்தில் (Heliosphere) நிகழும் துருவத் திருப்பத்தின் தாக்கம் மிகவும் சிக்கலானது !  பரிதி வடுக்கள் தீவிரக் காந்த முடிப்புகள் சேமிக்கப் பட்டுள்ள பெரும் களஞ்சியம். இரட்டைத் துருவக் காந்தப் பட்டை (Dipole Magnetic Field) மறைந்து போனாலும் முடிச்சு அவிழ்ந்து காந்த தளம் சுருள் சுருளாக வெளிப்புறம் பாய்கிறது.  துருவத் திருப்பம் நேரும் போது பரிதிக் கோளம் காணாமல் போவதில்லை !  வெற்றிடத்தை நிரப்பிட ஏராளமான, சிக்கலான அளவுக் காந்த அமைப்பாடுகள் இருக்கின்றன.  இதுவரை விஞ்ஞானிகள் மேலிருந்து கீழ் நேரான நோக்கில் துருவத் திருப்பத்தைக் காணவில்லை.  இப்போது “யுலிஸிஸ் விண்ணுளவி” விஞ்ஞானிகளுக்கு பரிதியின் மெய்யானச் சோதிப்பு உளவைக் காட்டப் போகிறது.
    டேவிட் ஹாத்தவே. (டிசம்பர் 9, 2005)
    “பரிதியின் காந்த மண்டலம் சூரிய குடும்பம் முழுவதையும் பரிதிக் கோளம் எனப்படும் ஒரு குமிழிக்குள் (Heliosphere Bubble) மூடிக் கொள்கிறது.  அப்பரிதிக் கோளம் 50 AU முதல் 100 AU வானியல் அளவீட்டில் நீட்சி அடைந்து புளுடோ சுற்று வீதிக்கு அப்பாலும் செல்லும்.  [1 Astronomical Unit (AU) = Unit Distance Between Sun & Earth]. சூரியனின் காந்தத் தள மாறுபாடுகள் பரிதிக் கோளத்தின் வழியாக பரிதிப் புயலால் எடுத்துச் செல்லப் படுகின்றன.”
    ஸ்டீவ் சூயஸ் (Steve Suess, Solar Physicist, Marshal Space Flight Center)
    Fig 1A Earth's Internal Structure

    அடித்தட்டு நகர்ச்சியின் போது பூமிக்குள்ளே என்ன நிகழ்கிறது ?

    பூமிக்குள் அடித்தட்டு நகர்ச்சியைத் (Plate Tectonics) துடிக்க வைத்துப் பூகம்பத்தை எந்த விதப் புறத் தூண்டல் உண்டாக்குகிறது என்பதைப் பூதள விஞ்ஞானிகள் இதுவரைக் குறிப்பிட்டுக் காட்ட வில்லை !  ஆனால் அவர்கள் கருதுவது : பூமியின் உட்கருவில் எழும் வெப்பம் மெதுவாக உள்தட்டு (Mantle) ஓட்டத்தைத் தடிப்பான மேல்தட்டு (Lithosphere) அடுக்கில் எழுப்பி விடுகிறது.  கடந்த மில்லியன் கணக்கான ஆண்டுகளாய்க் கடையும் இந்த கொந்தளிப்பு இயக்கமே கடற்தட்டுகளையும், அடித்தட்டு
    களையும் நகர்த்தி வருகிறது.  பூதள விஞ்ஞானிகள் இவ்வித அடித்தட்டு நகர்ச்சி நிகழ்ந்து கடந்த 2.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் மேல் தளத்தை உருவாக்கி வந்திருக்கிறது என்று மதிப்பிடு கிறார்கள்.  இப்போதும் அந்த நகர்ச்சி தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்திய மண்திணிவு எதிர்த்துத் தள்ளுவதால் இமயத்தின் சிகரங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன !  ஹவாயித் தீவுகள் ஜப்பானை நோக்கி அங்குல அங்குலமாய் நகர்கின்றன ! ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன !  அதாவது அட்லாண்டிக் கடல் அகலமாகிப் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது !  இன்னும் மில்லியன் ஆண்டுகள் தாண்டி ஒருவர் நோக்கினால் உலகக் கண்டங்களின் புதிய அமைப்பில் வேறு முகத்தோடு செதுக்கப் பட்டிருக்கும் !  பூமியானது மாபெரும் ஏழு அடித்தட்டுகளோடு பல்வேறு சிறு அடித்தட்டுகளைப் பின்னி மேல் தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது !  உள்ளே உள்ள பூமியின் வெப்ப திரவம் வலுவற்ற பகுதிகளின் வழியே கசிந்து வெளியேறி அவற்றில் எரிமலை அரங்குகள், தீவுகள் உண்டாகின்றன.
    Sun's Pole Reversalஓராண்டில் சுமார் ஒரு மில்லியன் நிலநடுக்கங்கள் பூமியில் நேருகின்றன என்று பூதள விஞ்ஞான நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது !  இவற்றில் பல மிகச் சிறிய அதிர்வுகள்.  கருவிகளால் மட்டுமே அவை உணரப்பட்டுப் பதிவாகின்றன.  ஒவ்வோர் ஆண்டிலும் சராசரிச் சுமார் 10,000 பூகம்ப மரணங்கள் நேருகின்றன.  அதாவது ஓராண்டில் இரண்டு பூகம்பங்கள் நேர்ந்தால் சராசரி மரணங்கள் 5000 (2X5000 =10,000) ஏற்படலாம்.  1900 ஆண்டு முதல் 2009 வரை 6.1 முதல் 9.5 ரிக்டர் அளவீட்டில் சுமார் 50 அசுரப் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன !  அவற்றில் 2004 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் 9 ரிக்டர் அளவீட்டில் நேர்ந்த இந்தோனேஷியா கடற்தட்டுப் பூகம்பத்தில் எழுந்த சுனாமி அலையடிப்பில் தென்னாசியக் கடற்கரை நாடுகளில் 250,000 மக்கள் உயிரிழந்தனர் !  உடைந்த இல்லங்கள், இழப்புகள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ளவை !  வரலாற்றில் மாபெரும் மனித இனச் சேதம் !
    Fig 1C Solar Magnetic Field

    பூகம்ப நகர்ச்சியும் பூமியின் பூதள மின் ஜனனியும்

    பூகம்பம் என்பது பூமிக்கடியில் எழுந்து மேல் தளத்தில் அல்லது கடற் தளத்தில் நேரும் ஒரு திடீர் நில அதிர்ச்சி !  அந்த நிலநடுக்கத்தைப் பூமிக்கடியில் மெதுவாகப் பாறைகளில் சேமிக்கப்பட்ட சக்தியின் வெளிப்பாடே உண்டாக்குகிறது !  இந்தச் சக்திக்கு மூல காரணி யாது ?  எப்படிச் சக்தி பாறைகளில் சேமிப்பாகிறது ?  ஏன் திடீரென நிலநடுக்கம் ஏற்படுகிறது ?  பூமியின் உள்ளமைப்புப் படத்தைப் பார்த்தால் “லித்தோ கோளம்” (Lithosphere) முறியும் பாறைகளைக் கொண்டதாகத் தெரியும்.  அக்கோளம் சுமார் 100 கிலோமீடர் (60 மைல்) தடிப்புள்ளது.  மேலும் “ஆஸ்தெனோ கோளத்தின்” (Asthenosphere) சூடான பிளாஸ்டிக் பாறையில் அது மிதக்கிறது.  லித்தோ கோளம் அனைத்தும் “நகர்ச்சி அடித்தட்டுகள்” (Tectonic Plates) எனப்படும் ஏழு பெரும் துண்டங்களாகவும் பல்வேறு சிறு துண்டங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன !  அந்த நகர்ச்சி அடித்தட்டுகள் ஆண்டுக்குச் சதா 1 முதல் 1.8 செ,மீடர் நகர்ந்து செல்வதால், ஒன்றை ஒன்று முட்டி, மோதி, நழுவிக் குதிரை ஏறி எல்லைப் பகுதியில் (Plate Boundaries) தள முறிவுகளை ஏற்படுத்துகின்றன.  அவ்விதம் அடுத்தடுத்து ஜப்பான், இந்தோனேஷியா, ஸான்பிரான்சிஸ்கோ, தென்னமெரிக்காவின் பெரு (Peru) நாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
    Fig 1D Earthquake Wave Travel

    பூதள விஞ்ஞானிகள் பூமி உட்கருவின் காந்தத் தளத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம் என்பதை நீண்ட காலமாக அறிந்திருந்தார்கள்.  நமது பூமி மற்ற சூரியக் கோள்களைப் போல் தனது உட்புறப் “பூதள மின் ஜனனியைக்” (Internal Geodynamo) கொண்டு சுயக் காந்த தளத்தை உண்டாக்கிக் கொள்கிறது.  பூமியின் மின் ஜனனி சாதாரண மின்சார ஜனனி போல் சுழலும் உட்கருவின் இயக்கத்தால் மின்னோட்டத்தை நிகழ்த்துகிறது.  நிலவைப் போல் ஏழு மடங்கு கொள்ளளவுள்ள ஓர் இரும்புத் திரவக் கடல் பூமிக்குள் சுற்றிப் பூதள மின் ஜனனியாக இயங்கி வருகிறது.

    பரிதி வடுக்களின் விளைவுச் சமன்பாடு
    பூமியின் மாறுதலைப் பற்றி ஒளிக்காட்சி (Earth Change TV) முறையில் அறிவித்து வரும் மிட்சல் பாட்டிரோஸ் (Mitchel Battros) என்பவர் சூரிய வடுக்களின் தீவிரக் காந்த சக்தி பூமியைத் தாக்கி விளைவிக்கும் தீங்குகளுக்கு ஒரு சமன்பாட்டை (Sunspot Effect Equation) எழுதி யிருக்கிறார்.  அவர் சூரிய மழை (Solar Rain) என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அவர் தயாரித்த சமன்பாடு கீழே கொடுக்கப் பட்டுள்ளது :
    Mitch Buttros Equation : Sunspots ==>> Solar Flares ==>> (Solar) Magnetic Field Shift ==>> (Earthern) Shifting Ocean & Jet Stream Currents ==>> Extreme Weather & Human Disruption
    Fig 3 The Equation for Sunspots & Extreme Weather

    மிட்செல் பட்டிரோஸ் சமன்பாடு :

    பரிதி வடுக்கள் ==>> பரிதி கனல்வீச்சுகள் ==>> பரிதிக் காந்த முனைத் திருப்பம் ==>> பூமியின் கடல் தட்ப வெப்ப ஆறோட்ட நகர்ச்சி ==>> அசுரக் காலநிலை மற்றும் மனித இனத் துன்பங்கள். மிட்செல் பாட்டிரோஸ் இரண்டு முறை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவாதி டாக்டர் பீட்டர் ஆல்ஸன் (Dr. Peter Olson) & டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிகவாதி டாக்டர் நிகோலா ஸ்கா·பெட்டா (Dr. Nicola Scafetta) ஆகியோருடன் உரையாடித் தனது சமன்பாட்டைத் தெளிவாக விருத்தி செய்தார்.
    Fig 5 Ulysses Solar Probe

    சூரியனே பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குக் காரணம்

    பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனின் வாயுக் கோளக் கொந்தளிப்பே காரணம் என்பது பூதள விஞ்ஞானிகள் பலரது முடிவாகத் தெரிகிறது.  பூகோளச் சூடேற்றத்தின் நீட்சிக்குப் (Global Warming Trend) பரிதியின் கொந்தளிப்புப் புயலே பெரும் பங்கேற்கிறது.  அதற்கு மனித விளைவுகளின் பங்கு சிறிதளவே !  சூரியனே நமது பூமியில் நேரும் பாதிப்புகளுக்கு பூகோளத்தின் உட்கருவில் ஒரு சங்கிலி இயக்கத்தைத் தூண்டும் ஒரு யந்திரமாக உள்ளது !  நமது விஞ்ஞான நுண்கருவிகள் அனைத்தும் (விண்ணுளவிகள், தொலைநோக்கிகள்) விண்ணை நோக்கிப் பரிதியின் இயக்கத்தையும், அதனால் ஏற்படும் பூமியின் காந்த தளம், பூமியின் சூழ்வெளியில் அயனிக் கோளம், ஸ்டிராடோ கோளம் ஆகியவற்றின் பாதிப்புகளையும் ஆராய்ந்து அளந்து வருகின்றன. பூமியில் இடி மின்னல் தாக்குவது போல் பூமியின் சக்தி முறுக்கேறிய உட்கருவும் (Highly Charged Core) நடந்து கொள்கிறது.  பூமியின் உட்கரு, கீழ்த்தட்டு, மேல்தட்டு (Core, Mantle & Crust) ஆகிய வற்றை ஆய்ந்து உளவு செய்த டாக்டர் பீட்டர் ஆல்ஸன் கருத்துக்கேற்ப பரிதியின் “கனற் திணிவு வெளியேற்றம்” [Corona Mass Ejection (CME)] மற்றும் பல்வேறு விண்வெளி அனுப்பும் மின்கொடைத் துகள்கள் (Charged Particles) மின்னல் அடிப்பு போல் தாக்கும் பொருட்களில் எதிரடியும் உண்டாக்குகின்றன !
    [தொடரும்]
    +++++++++++++++++++
    தகவல்:
    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
      2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
      3. Astronomy Facts File Dictionary (1986)
      4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
      5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
      6. Cosmos By Carl Sagan (1980)
      7. Dictionary of Science – Webster’s New world (1998)
      8. Physics for Poets By :  Robert March (1983)
      9. Atlas of the Skies (2005)
      10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
      11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
      12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
      13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
      14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
      15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
      16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
      17 Solar Pole Shift & Pole Reversal in 2012 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools) By : Patrich Geryl (May 19, 2009)
      18 Science at NASA – The Sun Does a Flip (February 15 2001)
      19 India Daily Technology Team (Aug 8, 2005)
      20 NASA Claims Sun Polar Shift Due in 2012 (Dec 9, 2005)
      21 Earth Wobbles Linked to Extinctions (Oct 11, 2006)
      22 The Sun’s Magnetic Cycle By Dr. David Stern (April 12, 2007)
      23 Earth’s Magnetic Reversals & Moving Continents By Dr. David Stern (Feb 23, 2008)
      24 The Sunspot Cycle By Mitzi Adams (June 6 2009)
      25 ECTV News Letter – Has The Solar Magnetic Pole Reversal Already Begun ? By : Mitch Battros (Oct 10, 2005)
      26 New Sunspot Activity Threatens Mobile Phone Networks (Jan 7, 2008)
      27 Sun’s Polar Reversal 2012 – The Next Magnetic Polar Shift & Consequences
      28http://www.thinnai.com/?module=displaystory&story_id=40906041&format=html(Earth’s Pole Reversal)
      29 National Geographic Picture Atlas of Our Universe By : Roy Gallant (1986)
      29 (a) National Geographic – Sun Bursts By Curt Suplee (July 2004)
      30 American National Oceanic & Atmospheric Administration (NOAA) Forecast – Next Solar Storm Cycle 24 Will Start Late NOAA Website :http://www.noaa.gov & NOAA’s Space Environment Center: <http://www.sec.noaa.gov&gt; (April 25, 2007)
      31 Philip’s World Atlas – Solar System Profile & Anatomy of the Earth (2005)
      32 Oxford Essential World Atlas – Restless Earth (2006)
      33 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
      34 National Geographic Picture Atlas of Our Word (1990)
      35 Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)

    ******************
    S. Jayabarathan [jayabarathans@gmail.com] May 2, 2015

    Share
  • உரம் ஏற்றட்டும் மே தின தியாக நினைவலைகள்

    எஸ் வி வேணுகோபாலன்

    amd

    “…..இறைவன் எங்கே? விடுதலை எங்கே?கோயிலிலா,
    பூஜையிலா, ஏகாந்தத்திலா ? இல்லை. பிறகு?

    உழைப்பினில், வேர்வையில், புழுதியில், மக்கள் மத்தியில்……”

    arbஇந்த வாசகங்களை, மிக அண்மையில் புதிதாக வாய்த்த நண்பர் பெரியவர் பெங்களூர் வி எஸ் கல்யாணராமன் அனுப்பி வைத்தார். குருதேவர் ரவீந்திரநாத் தாகூர் அவர்களது அற்புதமான கீதாஞ்சலி கவிதை தெறிப்புகளை தனது அருமையான பேராசிரியர் அ சீ ரா (அ சீநிவாசராகவன்) மொழி பெயர்க்கையில் மேலாக எழுதி வைத்த மேற்கோள் வரிகள் இவை என்று குறிப்பிட்டார். மந்திரங்களில், கோயில்களின் இருட்டுக் கருவறைகளில் கடவுளைத் தேடாதே, அவர் உழைப்பவரோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லும் மேலான கீதாஞ்சலி வரிகளின் இதயமான கருத்தைப் பேசும் வாசகங்கள் இவை.

    உழைப்பைக் கொண்டாடும் வரிகள் எத்தனை மெய்யாய் ஒலிக்கின்றன…சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்றார் பாவேந்தர் பாரதிதாசன். உழைப்புக்கும், இயற்கைக்கும் பிறந்த குழந்தைதான் செல்வம் என்றார் அல்லவா கார்ல் மார்க்ஸ்.

    உழைப்பவர் திருநாளை விட கொண்டாட்டம் இந்த பூமியில் வேறு என்ன இருக்க முடியும் ? மே தினம் விடிகிறது, நம்பிக்கையின் திருவிழாவாக! கோடையின் செம்புழுதிக் காற்றில் செங்கொடி கம்பீரத்தோடு பறக்கிறது…நம்பற்குரிய வீரர் அதன் கம்பத்தின் கீழ் நிற்கிறார் என்ற செம்மாந்த பெருமிதம் அந்தக் கொடிக்கு !

    சிகாகோ எங்கே, சிந்தாதிரிபேட்டை எங்கே? மே தின பூங்கா எப்படி இங்கே வரப் போயிற்று! நாடு, இனம், மொழி எல்லாம் கடந்து தொழிலாளிகளின் தியாமிக்க வரலாறு கடல் கடந்து, காடு, மலைகளைக் கடந்து, கண்டங்களைக் கடந்து கொடிகட்டிப் பறக்கிறது…..அறுவடைத் திருநாளை விவசாயிகள் கொண்டாடுவது போலவே, தங்கள் திருநாளை மே தினத்தில் கொண்டாடிக் களிக்கின்றனர் தொழிலாளி தோழர்கள்.

    ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்தும் உரிமைகளுக்காக மன்றாடிக் கொண்டிருந்த தொழிலாளிகளின் முணுமுணுப்புகளின் உரசல் ஒரு தீப்பொறியாகப் பரவி வெடித்த ஒரு நாளில் எத்தனை எத்தனை பெரிய வரலாறு படைக்கப்பட்டது…..

    முதலாளிகளின் லாபத்திற்காக நேரம் காலமின்றி உழைத்துக் கொண்டிருப்பதா என்ற கோபாவேசக் கேள்வி, என்னையும் மனிதனாக நடத்து என்ற முழக்கம் வெளிப்பட்டது. எட்டு மணி நேரம் வேலை செய்தால் போதும், அந்த உழைப்புக்கு உரிய கூலியைக் கொடு, எனக்கு ஓய்வெடுக்கவும், பொழுது போக்கிற்கும் சிந்தனை செய்வதற்கும் தேவையான நேரத்தை உன்னிடம் கொடுத்துவிட்டு ஏமாற முடியாது என்று தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தைப் பார்த்து ஆர்ப்பரித்தது. அந்த வெஞ்சினம் ஒரே நாளில் ஒற்றை இரவில் உருவானதல்ல.

    சுரண்டிப் பிழைக்கும் கும்பல்களுக்கு ஆதரவாக அரசுகள் இருந்தன. வேலையாட்களை ஒடுக்குவதற்கு, அதட்டி மிரட்டி வழிக்குக் கொண்டு வருவதற்கு அதிகார வர்க்கத்தின் படை மட்டுமல்ல, மத போதனையும் பயன்படுத்தப் பட்டது. தொழிலாளி வர்க்கத்தின் விடியலுக்கு ஒரு தத்துவ விடி வெள்ளி முளைத்தது. மார்க்சிய தத்துவம்தான் அது!

    உனக்குக் கொடுக்கப்படும் கூலிக்கு மேல் உபரியாக நீ உழைப்பைச் செலுத்துகிறாய். அது தான் லாபத்தின் தோற்றுவாய். அந்த லாபம் உன்னைச் சுரண்டி ஈட்டப்படுவது. அதிலிருந்துதான் மூலதனம் மேலும் கொழுத்துக் கொண்டு போகிறது என்று விளக்கினார் கார்ல் மார்க்ஸ். இதுவரை வந்த தத்துவ ஞானிகள் இந்த உலகைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தனர். அநீதியான இந்த உலகை மாற்றி அமைக்க வேண்டிய வேலையைத் தான் நாம் செய்யவேண்டும் என்றார் அவர்.

    1886 மே முதல் நாள், அமெரிக்க தொழிலாளர்கள் சிகாகோ நகரில் பெருந்திரளாகத் திரண்டு முழங்கிய காட்சி முதலாளிகளை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தையும் சேர்த்து நடுங்க வைத்தது. அவர்களை அடித்து நொறுக்கிப் பாடம் கற்றுத் தந்து பணிய வைக்கப் பார்த்தது. மே 3ம் தேதி இந்த அடக்குமுறைக்கு எதிராக மீண்டும் ஓர் ஆர்ப்பாட்டம். அதன்மீதும் ஆளும் வர்க்கத்தின் முரட்டுத் தாக்குதல். நான்காம் தேதி, ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையில் திரண்ட தொழிலாளர்கள் சவால்களை முறியடிப்போம் என்று குரல் எழுப்பினர்.

    சதிகார ஆளும் வர்க்கத்தின் அராஜக நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஒரு சார்ஜெண்டை கையெறி குண்டு வீசித் தாக்கி அதன் பழியை தொழிலாளர் தலைவர்களின் பேரில் போட்டுச் சிறையிலடைத்துத் துன்புறுத்தியது. மோசடியான விசாரணையின் முடிவில் பார்சன்ஸ், எங்கெல், ஸ்பைஸ், ஃபிஷர் ஆகிய நால்வரும் 1887ம் ஆண்டு நவம்பர் 11 அன்று தூக்கில் போடப்பட்டனர்.

    அப்போது அகஸ்டஸ் ஸ்பைஸ், “இன்று நீங்கள் நெரித்துப்போடும் குரல்களை விட, எங்கள் மௌனம் உரத்துக் கேட்கும் காலம் வரும்” என்று சொன்னார்.

    நேர்மையற்ற பேர்கள் வீழ நின்று வாட்டுவோம், நீதி நாட்டுவோம் என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களது எழுதிய கவிதை வரியைப் போலவே, சுரண்டல் வர்க்கத்தை நின்று வாட்டிக் கொண்டிருக்கிற – நீதியை நாட்டுகிற வலுப்பெற்ற மௌனமாக மே தின தியாகிகளின் தீரமிக்க முழக்கம் இன்றும் எழுச்சியாக கேட்கவே செய்கின்றது.

    உலகெங்கும் தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடுகையில் கண்ணுக்குப் புலனாகாத இணைப்பு ஏற்படவே செய்கிறது. 99% மக்கள் அன்றாடம் உழைத்து, 1 சதவீத பெருந்தனக்காரர்கள் வயிற்றை நிரப்ப வேண்டுமா என்று 2 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் போராட்டம் நடந்தது அங்கு மட்டுமா கேட்டது, உலகம் முழுக்க எதிரொலித்தது. அய்ரோப்பிய நாடுகளில் எங்களைச் சுரண்டி கார்பொரேட் நிறுவனங்களை வளர்க்கப் பார்க்காதே என்று நாள் கணக்கில் தொடரும் போராட்டங்களின் எதிரொலி உலகம் முழுக்க கேட்கவே செய்கிறது. கீரிஸ் நாட்டுத் தேர்தலில் அது பிரதிபலித்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் ஆட்சி அதிகாரத்தில் இடதுசாரி கருத்தோட்டம் கொண்டவர்களை அமர்த்துகிறது. உலக நெருக்கடி குறித்து சிந்திக்கையில், கார்ல் மார்க்ஸ் அளித்துச் சென்ற மூலதனம் நூலை எடுத்துப் படிக்குமாறு கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவரைத் தூண்டுகிறது. சோஷலிச நாடுகளின் வளர்ச்சியை, முன் மாதிரியை உலகம் இப்போது புதிய வெளிச்சத்தில் வாசிக்கத் தொடங்குகிறது. முரண்பாடுகள், பலவீனங்களை மீறியும் முன்னேறுகிறது தொழிலாளி வர்க்கத்தின் விடியலுக்கான போராட்டங்கள்.

    இந்தியாவில் தொழிலாளர் நிலைமை என்ன? படிப்படியாக நிரந்தரத் தொழிலாளர்கள் சதவீதம் வீழ்ச்சி கண்டு, காண்டிராக்டு, கேசுவல் முறைகளில் ஆட்கள் வேலைக்கமர்த்தப்பட்டு சுரண்டப் படுகின்றனர். லாபம், மேலும் லாபம் என்பதைத் தவிர வேறு சிந்தனை இல்லாத தொழில் அதிபர் உலகம், தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி எந்த உரிமையும் அற்றவர்களாக தொழிலாளி வர்க்கத்தை நடுவீதிக்குக் கொண்டு வந்து நிறுத்துமாறு அரசை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.

    கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகள், ஊழல் இவற்றைக் கண்டு வெறுத்துப் போயிருந்த மக்களை உற்சாக வாக்குறுதிகள் அள்ளிவீசி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி எந்தக் கவலையுமற்று நாடு நாடாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். வளர்ச்சியின் பொய்யான பிம்பம் சந்தி சிரிக்கிறது.

    வேலை பறிப்பு, கல்வி-சுகாதாரம்-மருத்துவம் அனைத்தும் காசு உள்ளவர்க்கே என்ற மோசமான நிலைமை, சமூகக் குறியீடுகளில் உலக நாடுகளில் மிகவும் பின்தங்கிய இடத்தில் இந்தியா, ஊட்டச் சத்தின்றி குழந்தைகள்-இரத்த சோகையில் கர்ப்பிணிகள்-வாழ்வாதாரம் அற்று தற்கொலை செய்து கொள்ளும் வேளாண் மக்கள்…என்று அனைத்து விதங்களிலும் பாழ்பட்டு நிற்கிறது நாடு.

    உழைப்பாளி மக்களை ஒன்று சேரவிடாது, சாதி-மத-இன-மொழி வேறுபாடுகளால் கூறு போட்டுவிட மத வாத சக்திகள் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. உணவு, உணர்வு அனைத்தையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர் எஸ் எஸ் – பா ஜ க கூட்டம் பல விதங்களில் மக்கள் விரோத தாக்குதல்கள் நடத்தி வருகின்றது.

    செப்புமொழி பதினெட்டு உடையாள், எனில், சிந்தனை ஒன்றுடையாள் என்றார் மகாகவி. இப்படியான உன்னத எண்ணங்களால் வழி நடத்தப் பட்ட தேசம் சுதந்திரம் பெற்றது. பெற்ற சுதந்திரத்தைப் பேணி பாதுகாக்காமல் வீணில் தொலைக்கத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள்.

    உழைப்பாளி மக்கள் தங்களையும் தற்காத்துக் கொண்டு, தேச ஒருமைப்பாடு, மக்கள் ஒற்றுமை இவற்றையும் பாதுகாக்கக் குரல் கொடுத்து தேச இறையாண்மையைத் தக்க வைக்கப் போராட வேண்டி இருக்கும் காலம் இது.

    விவசாயி-தொழிலாளி ஒற்றுமை வலுப்பட உறுதி ஏற்கும் நாள் இந்த மே தினம்! மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை இடதுசாரி அரசியல் முன்வைத்து மக்களை வென்றெடுக்க முழு வீச்சில் களமிறங்கும் இந்தக் காலத்தில் தொழிலாளி-விவசாயி ஒன்றிணைத்து மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைக்கத் திரண்டு எழுவோம்.

    மே தினம் மாற்று உலகை இங்கேயே படைக்க நம்பிக்கை அளிக்கிறது. சோசலிசத்தின் விதைகளைத் தூவுகிறது. ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டாம், வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி திருநாட்டில் வரவேண்டும் பொதுவுடைமை’ என்ற கவிஞர் கண்ணதாசன் திரைப்பாடல் வரிகளை உண்மையாக்கும் சாத்தியங்களை முன்வைக்கிறது மே தின எழுச்சி வரலாறு.

    மே தின பாரம்பரியம் நமக்கு வழி காட்டட்டும். உரம் ஏற்றட்டும். உறுதி ஊட்டட்டும்.

    ———————–
    பகவன் அங்கில்லை

    யாரடா மந்திரம் முணுமுணுத்தே ஜப
    மாலையை உருட்டுகிறாய் ?
    கார் இருட் கோயிலின் தனிமை ஓர் மூலையில்
    கதவெல்லாம் அடைத்த வண்ணம்
    யாரை நீ தேடுவாய்? அறிவையோ, சொல்லடா,
    ஐய, நீ கண்விழித்து ப்
    பாரடா, அங்கில்லை, நாளும் நீ தேடிடும்
    பகவன் அங்கில்லை என்றே.

    ஏர்பிடித்து இரும்புநேர் இடத்தினைத் திருத்தும் ஓர்
    ஏழையின் அருகில் உள்ளான்
    ஊர் வெளிப்பாதையில் கல்லுடைத்து அயரும் ஓர்
    உழைப்பவன் நிழலில் உள்ளான்.
    மாரியிற் கோடையில் அவருடன் இருந்து தன்
    மணிக்கரம் புழுதி தோய்த்தான்,
    போர்வையாய் உள்ள உன் பூசுரம் வீசடா
    புழுதியில் இறங்கி வாடா.

    *********

    பூவும், மென் சாந்தமும், தீபமும், தூபமும்,
    பூஜையும் விட்டு வாடா!
    மேவும் உன் தியான வெம் சிறையினை விடுவிடு,
    மேதினி வெளியில் வாடா!
    ஆவதும் ஏதடா, உன்னுடைய கந்தலாய்,
    அழுக்கினில் அழிந்து போனால்?
    தேவனே உழைப்பினால் வேர்வையில் மூழ்கினான்
    சேர வா சேர வாடா!

    – ரவீந்திர நாத் தாகூர் (கீதாஞ்சலி வரிகள்)

    (தமிழில்: பேராசிரியர் அ.சீ.ரா)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy2

    கடவுளின் கார்-டிரைவர் ஆக இரு….கல்யாணத்திற்கு கடவுள் சென்றால் ‘’டிரைவருக்கு விருந்து மொதல்ல வையுங்கப்பா” என்று வாத்சல்யமாய் சிபாரிசு செய்வார்….இந்த உலகம் ஆண்டவன் வீடு….அதில் நீ விசுவாசமான வேலைக்காரனாக இரு என்பது போல பரமஹம்ஸர் கூறுவார்….’’கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி….விசுவாசி’’….

     

    ‘’மேதினம் இன்றும்ஆ மேய்க்கின்ற உத்தமன்,
    ஊதியம் இன்றி உழைக்கின்றான், -ஆதியிந்த,
    கண்ணனுன் தெய்வம் , கரம்கொடுக்கும் கூலியாள்,
    எண்ணவனை BOSSசாய் ஏற்று’’….கிரேசி மோகன்….

    Share
  • தேகமும் யோகமும்—பகுதி 6

    கவியோகி வேதம்

    yoga

    நமது முன்னோர்கள் எப்போதும் ‘நமக்கு மேல் ஒன்று’ எக்கணமும் நம்மைக் கண்காணிப்பதாக நம்பினார்கள். அந்த ‘ஒன்றோ’டு ஒன்றி’– நாம் இணைந்து கொண்டால் புதிய அந்த கன்ணுக்குப் ‘புலப்படாத உலகத்தட்டு’ (Plane of consciousness) நமக்கு நிச்சயம் நன்மை செய்யும் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்தனர். இதற்கு யோகம் அவர்களுக்கு உதவி செய்தது., தீவிர தியானத்தில் பல யோகிகள் கடவுளுடன் பேசியிருக்கிறார்கள். பலருக்கும்  இறைவனிடம் பதில் கேட்டு பரிகாரமும் சொல்லியிருக்கிறார்கள். சிக்கல்களையும் நோயையும் தீர்த்துவைத்திருக்கிறார்கள். இதற்குப் பரமஹம்ச யோகாநந்தர் ஓர் உதாரணம்.

    நம்மைச்சுற்றிய வாயுத்திரள், பிரபஞ்ச அணுக்கள், இவற்றில் இன்னதென்று இனம் காண முடியாத ஒரு எனர்ஜி (ஊக்க அணு), ஒரு காந்தம், ஒரு ஈர்ப்பு, ஒரு திரண்ட சக்தி எந்நேரமும் பொங்கிப்பொங்கி வருவதைக் கண்டார்கள், ; நன்றாக உணர்ந்திருந்தார்கள்.

    மேலும் அவற்றைக் கும்பிட்டு, பணிந்து, புகழ்மாலை (ஸ்தோத்ரம்) சூடுவதன் மூலம் தமக்குள் அது மூளை, மற்றும் உடலுள்ளே புகுந்து யாண்டும் புதிய

    புதிய சக்திகளைத் தருவதாக உணர்ந்தார்கள். இந்தப் புதிய ‘சக்திகள்-உணர்வை’ Feel energies என்று ஜெர்மானியரும், சில ஆங்கிலேயர் அதை metaphysics, என்றும்,  விஞ்ஞான ரீதியாக நூலில்  எழுதிவைத்துள்ளார்கள்.

    ..   ஆம்!  கடவுளுடன் அப்படிப்பேசிய அவர்களே மகான்கள். இந்த உண்மையை நாத்தழும்ப நாத்திகம் பேசும்

    அன்பர்கள் இன்னும் மறுக்கின்றார்கள். இதனால் சூஷ்மச் சக்திகளைத்தேடி அவற்றை ஸ்வீகரித்துப் பயன் அடையும் மானுடர்க்கு யாதொன்றும் நஷ்டமில்லை.

    அது அவரவர் வந்த வழி. கர்ம வினை! அழகியகுளிர்ச் சோலையில் பற்பல குயில்கள் இனிமைக்குரலில் பாடுகின்றன என்று அங்கு செல்லும்  ‘இயற்கை ரசிகன்’ கண்டும் கேட்டும் உடல் சிலிர்க்கப்புளகாங்கிதம்

    அடைகின்றான். கவிஞனோ கவியில் அதை அனுபவித்து ப் பாடியிருக்கிறான்.

      .. இல்லை, இல்லை, அப்படி ஒன்றும் இனிமைக்குரலில்

    குயில்கள் பாடா’ என்று நாத்திகன் சொல்வதால் அப்படி அனுபவிக்கும் ரசிகனுக்கு நஷ்டமுண்டோ? அவன் அல்லவோ அந்த இனிமைக்குரல் மூலம் தன் உடம்பில், நரம்பில் புதிய ஜீவனை ஜிவ்வென்று ஏற்றுகிறான்!

    இன்னும் பல கிராமங்களில் போய்ப்பாருங்கள்! மழையே பெய்யவில்லையா நீண்ட நாட்களாக! கவலை ஏன்? என்று உடனே ஆஸ்தீக அன்பர்கள் கூடி

    வேத வித்துக்களையும் மந்திர உச்சாடனத்தில் துறைபோகிய, பிரசித்திபெற்ற ஹோம வல்லுநர்களையும் தேடிப்பிடித்து, தாங்களே கிராம மக்களிடம் பணம் வசூலித்து வேத விற்பன்னர்களை நெய் ஆகுதி சொரிந்து, யாகம், ஹோமம்

     முதலிய செய்வித்து இரண்டு நாளைக்குள் மேகங்களைத் திரளச் செய்துவிடுகிறார்கள். இது யானே அனுபவ பூர்வமாக எங்கள் கிராமத்திலும் திருநெல்வேலியின் –அத்தாழநல்லூர்– மற்றும் பக்கத்து ஊரான ‘ரெங்க சமுத்திரத்திலும்’ நேரடியாகக்

    கண்டறிந்து ஆச்சர்யப் பட்டிருக்கிறேன்.

      … ஆம்! அது 1956 ஆம் வருடம். யான் அப்போது திருநெல்வேலி கல்லூரியில் பட்டப்படிப்பு முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். கோடை விடுமுறை

    விட்டார்கள். சரியான வெய்யில்! மொத்தம் இரண்டு மாதம் வரை தகித்தது.

    பயிர்களுக்குப் போதுமான நீர் இல்லை. இருக்கின்ற ஒரே ஆறு தாமிரவருணியும் வேகமாக வற்றத்தொடங்கிய காலம். பாட்டிமார் புடவையின் ‘கொசுவம்’ போல் ஒரு மெல்லிய ஓடையில்தான் ஜலம் ஓடிக்கொண்டிருந்தது அந்த நதியில்!

    சில அயல்நாடுகளில் போய் வேலை பார்த்து ஊருக்குத்திரும்பிய எங்கள் தாத்தா மந்திர சக்தி மிகுந்த பாரதியார் பாடல்கள், வேத மந்திரங்கள், புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம், ஸ்ரீசூக்தம் எல்லாம் பொருள்பொதிந்த வியாக்யானத்தோடு

     கற்றறிந்தவர். கிராமத்து ஜனங்களில் மிகப்பெரியவர். ஆஜானுபாகுவான உயர்ந்த தோற்றம். முகமோ ரொம்ப வசீகரம்! அவரிடம் வந்து ஊர்மக்கள் ஆலோசனை

     கேட்டார்கள். அவர்தான்  கேட்டவர்களிடம் நான் மேலே சொன்ன  “‘கவலை ஏன்?  நெய் ஆகுதி யாகம்

    செய்யுங்கள், நிச்சயம் மழை பெய்யும். ஏற்பாடு செய்யுங்கோ, நான் கலந்துகொள்கின்றேன்”’ என்று உத்தரவு போட்டு அவர்கள் கை நிறையக் காசு தந்து ‘முதல் ஆசி’யை

    வழங்கினார்.

      …யான் அப்போது கல்லூரி விடுமுறையினால் கிராமத்து வீட்டில் இருந்தேன்.

    பெரியவரே ஆசிதந்து விட்டார்; ஆரம்பிங்கடா என்று இளைஞர்களும், பள்ளி ஆசிரியர்களும், வாத்யார்களும், (விசேடங்களை நடத்தித்தருபவர்கள்), உற்சாகமாக

    களத்தில் இறங்கினர். அப்போது ஜூன் (கடும் அக்னி நட்சத்திர) மாதம்…

      …  தெரு அடைத்துப் பெரிய பந்தல் போடப்பட்டது. யாக குண்டங்கள் பன்னிரண்டு தோண்டப்பட்டு பெரிய பெரிய ஆழமான குழிகளில் அக்னி வளர்த்து மந்திர, வேத வல்லுநர்களால் இரண்டு நாட்கள் மிக மிக நம்பிக்கையுடன் மந்திர கோஷத்துடன் ஹோமம் செய்யப்பட்டது. பலவித வாசனைப் பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள், அற்புதச் சொல் பலத்தோடு வருண பகவானை அன்போடு அழைக்கும் விதமாய் யாகக் குண்டத்தில் போடப்பட்டன.

    மொத்தம் 24 பண்டிதர்கள் இடைவிடாமல் வேத கோஷம் முழங்கினால், வருணனால்

    ஆகாய மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே சும்மாச் சும்மா, சதா ரம்பை,

     ஊர்வசி நடனத்தைப்பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? கீழே இறங்கி பூமிக்கு வரத்தானே வேணும்? யான் அந்த ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் என் இள வயதில் உற்சாகமாய் (பல உதவிகள் செய்துகொடுத்து) ரசித்துக்கொண்டிருந்தேன். உண்மையாகச் சொல்கின்றேன். மூன்றாவது நாள் அதிகாலை இடி மத்தளம் போல் முழங்க, மின்னல்

    ஒவ்வொன்றும் சாட்டை சாட்டையாய் ஆகாயத்திலிருந்து மண்ணில் கோடு கிழித்து,

     கன்னிப்பெண்கள் ஒரு கயிறு விளையாட்டு விளையாடுவார்களே அதுபோலச் சுற்றிச்

    சுற்றி வர, கரும் மேகங்கள் வெடித்து முன்னும் பின்னும் சுழன்று மூன்று நாட்கள் புயல்

    மழை கொட்டியது பாருங்கள்! இன்னும் என்னால் மறக்கவே முடியாத பயங்கர நிகழ்ச்சி அது!  …    …………தாமிரபர்ணியில் சட்டென வெள்ளம் கரைபுரண்டோடியது, கரையோரமாய் ஓடி

    ஓடி பசங்கள் நாங்கள் வேடிக்கை பார்த்தது நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது.

    அப்படிப் பதிந்த அந்த சம்பவத்தின் மூலம்தான் நான் பாரதியைக் கற்றேன்.

       “தேவர்களைக் கவர்ந்து கீழே இழுக்கும்  மந்திரச் சொல் ஒன்று வேண்டும் அம்மா!”.. ஆம்!  நன்கு மழை பொழியச் செய்த சொற்களின் வலிமை எல்லாம் புரிந்தது. அம்மட்டோ! மந்திரம், யோக சாஸ்திரம், சொல் நுட்பப் பயிற்சி

    முறைகள், ப்ராணிக் ஹீலிங் மூலம் எப்படிப் பிறர் உடல் நோய் தீர்ப்பது, மிக ஆழ்ந்தபிராணாயாமப் பயிற்சிகளை எப்படிப் பெற்றால், எப்போதும் உற்சாகமாக மனமும் உடம்பும் திடகாத்திரமாக வேலை செய்யும், ஆசனங்களை எந்த அளவு கற்றால், நம்

    மூளைக்கு சக்திகளைப் பிரபஞ்ச (force) ஈர்ப்புச் சுரங்கத்திலிருந்து கொணர்ந்து வேகமாய்

     உள்ளே பாய்ச்சும் என்பன போன்ற நுட்பங்களை எல்லாம் ஒரு தீவிரக் காதலன்போல் பயின்றேன். என்ன, இவை என்னுள் முழுமை பெற ஒரு 12 ஆண்டுகள் ஆயின!

    இந்த ‘அமிர்தக் கிண்ணங்’களைப் பெறுவதற்கு எனக்கு வழிகாட்டியாயிருந்த ஆசான்கள் பல பேர். முதலில் எங்கள் ஊர் மகாதேவ சாஸ்திரிகள். அவரிடமிருந்து ஆரம்பித்து, சிங்கப்பெருமாள் கோவில் சக்தி உபாசகர் ஸ்ரீ ‘ராமய்யங்கார்’ ஸ்வாமிகளும், பின்பு

    எனக்குள் நயன தீட்சை கொடுத்து ‘மூன்றாம் கண்’ என்றால் என்ன என்று காண்பித்த ஸ்ரீ காஞ்சி மகானும் (பெரியவா), ஆசனங்கள், யோக முத்ரா, அஸ்வினி முத்ரா இவை மூலம் மூளை மற்றும், நரம்புகட்குள் அட்டகாசமாய்ச் சக்தி ஏற்றலாம்டா; உனக்குக்

    கஷ்டமே இல்லை என்று கற்றுக்கொடுத்த பெரியவர் வேதாத்ரி மகரிஷியும் என இத்தனை

    குருமார் ஆவர். யானும் தீவிரப்பயிற்சியில் இறங்கி விடாப்பிடியாகக் கற்று நாடி நரம்பில் ஒளிச்சக்தி ஏற்றிக்கொண்டு, பிறர்க்கும் இவற்றைப் பயிலுவித்தேன்.

    ஆகவே, இதெல்லாம் ஒரு அனுபவ உண்மையாக, பிரத்யட்சப் பிரமாணமாக ஏன் விரிவாய்ச் சொல்கின்றேன் என்றால் நம் பெற்றோர்களும் தத்தம்

    குழந்தைகட்கு பள்ளிக்கூடப் பாடங்களோடு இந்த சூட்சும சக்தி ‘யோக’ வழிகளையும் ஒரு தகுந்த ஆசான் மூலம் கற்பிக்க வேணும் என்பதற்கே. இதனால்

     நம் வருங்கால சந்ததிகள், குழந்தைகள், அற்புத ஞானமுடன் வளர்வதோடு, பல புதிய விஞ்ஞான வழிகள் மற்றும் கருவிகளையும் இந்தப்பிரபஞ்ச நுட்ப சக்திகளிலிருந்து கண்டுபிடிப்பார்கள். உண்மை இது!  சமுதாயத்திற்கே இது நல்ல உபயோகம் இல்லையா?

     நம் குழந்தைகள் வெறும் சினிமா மாயையில் மட்டுமே சிக்கிச் சுழல வேண்டுமா? தம் அறிவினால் அகில உலகப்புகழ் பெறவேண்டாமா? ஏன் நம் மகாகவி பாரதியே சொல்லிச் சொல்லி மிக மகிழ்வோடு கூத்தாட வில்லையா?

    ..   “நம் பாரதம்தான்  உலக முழுமைக்கும் ஆன்மிக ஞானத்தைக் கற்பிக்கும்! ஆம்! நிச்சயம் கற்பிக்கும்! ”– என்று!” (தொடரும்)

     ********************************************************

    Share
  • புல்மேல் விழுந்த பனித் துளியே!

    பவள சங்கரி

     

    அன்பு நண்பர்களே,

    என் பாடல் உயிர் பெற்றிருப்பதைக் கேளுங்கள்… அன்பு நண்பர் திரு ஆர். எஸ். மணி (கனடா) அவர்கள் இசையும், குரலும் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார்.. (GAZAL)

     

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    என்னை எழுப்பிய வெண்பனியே
    ஏன் மறைந்தாய் இத்தனை நாளாய்

    கல்லை உருக்கிய கவிமழையே
    கனவில் நிறைந்த கற்கண்டே
    உயிரில் கலந்த இன்னிசை போல்
    உனக்குள் தானே உறைந்திருந்தேன்

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    பனியில் கதிரொளி வீழ்ந்தால் நீராகும்
    விதியின் புத்தொளி வீழ்ந்தால் சுகமாகும்

    வலியைக் கடந்தால் சுகம் இருக்கும்
    மழையில் நனைந்தால் குளிரெடுக்கும்

    கானம் இசைத்தால் உள்ளம் திறக்கும்
    உள்ளம் திறந்தால் உயிர் நிலைக்கும்

    உயிரும் உணர்வும் உலராமல் இருந்தால்
    மலரும் மணமாய் பரவசமாய் இருக்கும்

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    குருவிகளிரண்டும் மூக்கால் உரசுகையில்
    குழலோசையாய் அது இசைத்திடுமோ
    பனியும் காற்றும் உரசுகையில்
    மெல்லிய கீதம் இசைத்திடுமோ

    மலையும் நதியும் உரசுகையில்
    எந்த மொழியில் குலவிடுமோ
    நினைவெல்லாம் பார்வையானால்
    மொழியெலாம் ஊமை ஆகிடுமோ

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    என்னை எழுப்பிய வெண்பனியே
    ஏன் மறந்தாய் இவ்வளவு நாளாய்
    என்னை உருக்கிய கவிமழையே
    எங்கே போனாய் இத்தனை காலமாய்

    உயிரில் கலந்த இன்னிசை போல்
    உனக்குள் தானே உறைந்திருந்தேன்

    புல்மேல் விழுந்த பனித் துளியே
    எங்கே போனாய் இத்தனை நாளாய்
    இன்று குளிர்ந்த என் மனமே
    ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

    —————————————————————-

    Share
  • உழைக்கும் வர்க்கம் எங்கள் வர்க்கம்!

    விஜய குமார் விஜய்

    images

    உழைத்து உழைத்தே ஓடாய்போன
    காலம் கப்பலேறிப் போச்சே
    உழைப்புக்கேத்த கூலி எனும்
    நிலைமை மாறியாச்சே
    உழைக்கும் வர்க்கம் எங்கள் வர்க்கம்
    பிழைக்கும் வர்க்கமாச்சே
    உழைப்பை நம்பி தாழ்ந்த கூட்டம்
    ஏதும் இல்லாமல் போச்சே
    உழைப்பின் அருமை உணர்ந்தவர்
    வாழ்வில் வருமை ஓடிப்போச்சே
    உழைப்பவர் வாழ்வில் என்றும்
    சளைத்தவர் இல்லை என்பதாச்சே

    Share
  • நேபாளத்தில் கோர பூபாளம் !

    ajay

    நேபாளத்தில் கோர பூபாளம் !
    சி. ஜெயபாரதன், கனடா

     

     

    இமயத் தொட்டிலில் ஆட்டமடா !

    இயற்கை அன்னை சீற்றமடா !

    பூமாதேவி சற்று தோள சைத்தாள் !

    பொத்தென வீழும் மாளிகைகள்

    பொடி ஆயின குடி வீடுகள் !

    செத்து மாண்டவர் எத்தனை ?

    உற்றார், பெற்றோர் இழந்தவர் எத்தனை ?

    கைகால் முறிந்தோர் எத்தனை ?

    இமைப் பொழுதில்

    எல்லாம் இழந்தவர் எத்தனை ?

    கட்டிய இல்லம், சேமித்த செல்வம்

    பெட்டி, படுக்கை, உடுப்பு,

    உணவெல்லாம் மண்ணாய்ப் போச்சு !

    அந்தோ !

    வசந்த கால வாடைக் காற்றில்,

    அழும் சேய்க ளோடு

    தெரு மேடையில் தூங்குகிறார் !

    வானமே கூரை !

    சுவரில்லை ! கதவில்லை !

    போர்த்திக் கொள்ள

    துணி யில்லை !

    மானம் போனது, மதிப்பு போனது !

    தானம், தர்மம் நாடி

    வானம் நோக்கித் துதிக்கிறார் !

    கடவுளுக்கு

    கண்ணில்லை ; காதில்லை !

    கருணையும் இல்லை !

    எண்ணிலா நேபாளியர் புதைபட்டார்

    உயிரொடு !

    இடிந்த வீடுகள் புதை காடாயின !

    எங்கெங்கு வாழினும்

    இன்னலடா!

    ஏழு பிறப்பிலும் தொல்லையடா !

    சூழ்வெளி மட்டும்

    பாழாக வில்லை யடா!

    ஆழ்பூமிக் குள்ளும்

    புற்று நோய் தொற்றுமடா !

    ++++++++++++++

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: புலத்தகத்துப் புள்அரைக்கால் விற்பேம் எனல்

     

    செய்த கருமம் சிறிதானும் கைகூடா
    மெய்யா உணரவுந் தாம்படார் – எய்த
    நலத்தகத் தம்மைப் புகழ்தல் புலத்தகத்துப்
    புள்அரைக்கால் விற்பேம் எனல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    செய்த கருமம் சிறிதானும் கைகூடா
    மெய்யா உணரவும் தாம் படார் எய்த
    நல தக தம்மை புகழ்தல் புலத்தகத்து
    புள் அரைக்கால் விற்பேம் எனல்

    பொருள் விளக்கம்:
    செய்த செயலின் பலன் சிறிதளவும் கைக்குக்கிட்டாது, (அவ்வாறு அவர் சொன்னபடி) செய்து முடிக்கக் கூடியவர் என்ற நம்பிக்கையும் பிறருக்கு அவரிடம் இருக்காது, தன்னல நோக்கோடு தற்புகழ்ச்சி பேசுபவரின் பேச்சானது, (தனது கைவசம் இல்லாது) வயலில் உள்ள பறவையை அரைக்கால் பொன்னிற்கு விற்பேன் என்று கூறும் வீண்பெருமை பேச்சிற்கு ஒப்பானது

    பழமொழி சொல்லும் பாடம்: தன்னால் செய்ய இயலாத காரியத்தைச் செய்வேன் என்று கூறும் வாய்ச்சொல் வீரராக தற்பெருமை பேசுதல் நல்லதல்ல.

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல். (குறள்: 664)

    நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம் என்பது குறள் கூறும் பாடம். அதையுணர்ந்து வெற்றுப்பெருமை பேசாது செயலில் இறங்குவதே ஒருவருக்கு மதிப்பைத் தரும் என்பதை இப்பழமொழி அறிவுறுத்துகிறது.

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 54

    சு. கோதண்டராமன்.

     

    என்னதான் இருக்கிறது வேதத்தில்

    இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி இது. கடந்த ஓராண்டு காலமாக இதைப் படித்து வந்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியவர்களுக்கும், வல்லமை ஆசிரியர் குழுவுக்கும், குறிப்பாக, இதைப் பெரிய வாசகர் வட்டத்துக்கு வாரம் தோறும் கொண்டு சேர்க்கும் பொறுப்பை விரும்பி மேற்கொண்டு நிறைவேற்றிய திருமதி தேமொழிக்கும் என் நன்றிகள்.

    இந்நூல் புத்தக வடிவில் வெளிவருகிறது. கிழக்கு பதிப்பகத்தார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கிழக்கு பதிப்பகம் வெளியிடும் என் நூலின் பெயர்:

    “வேதம் – சந்தேகங்களும் விளக்கங்களும்”

    மே இரண்டாவது வாரத்தில் விற்பனைக்குக் கிடைக்கும். விலை ரூ. 175. பிரதி வேண்டுவோர் கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

                       போன்- 9445 97 97 97, 94459 01234

    *************************************************************************************

    சந்தேகம் தீர்ந்தது

    [ நிறைவுப் பகுதி ]

    முன்னுரையில் பாமரனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைப் பார்த்தோம். அவற்றிற்கு அவன் பெற்ற விடைகளை இங்கு பார்ப்போம்.

    கடவுளுக்கு உருவம் உண்டா?

    வேதத்தில் உருவச் சிலைகளை வைத்து வழிபடும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பாரதி சொல்வது போல தெய்வத்தை நேரே கண்டு தொழும் வழக்கம் தான் இருந்திருக்கிறது. அந்தத் தெய்வங்கள் ரிஷிகளின் கண்ணுக்குப் புலனாயினர். தேவர்கள் ஒளிமயமாக இருந்தார்கள். அவர்கள் தங்க ரதத்தில் ஏறி வந்தார்கள். அவர்களுக்கு கை கால்கள் இருந்தன. தாடி மீசைகள் கூட இருந்தது சொல்லப்படுகிறது. தெய்வத்தை நம் மனக்கண் முன் நிறுத்தும் முயற்சியாக உருவச் சிலைகளைப் பயன்படுத்தல் வேத சம்மதமானதே. இந்தத் தேவர்களுக்கெல்லாம் அப்பால் உள்ள பரம்பொருளோ உருவமற்று, குணமற்று, பெயரற்று ஸத் (இருக்கிறது) என்னும் சொல்லால் மட்டுமே குறிப்பிடப்படுவதையும் காண்கிறோம். எனவே உருவமற்ற பரம்பொருளை மனதால் தியானிப்பதும் வேத சம்மதமானதே.

    முத்தி என்பது எது?

    தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு வித புருஷார்த்தங்கள் ரிக் வேதத்தில் கூறப்படவில்லை. வாழ்க்கையைத் துறந்து சன்னியாசி ஆவதும் அங்கு இல்லை. ரிக் வேத ரிஷிகள் வாழ்க்கையை நன்கு அனுபவித்தார்கள். இயற்கை அழகை ரசித்தார்கள். பிள்ளை குட்டிகளுடன், பேரன் பேத்திகளுடன் சௌக்கியமாக வாழ்வதில் ஆனந்தம் கண்டார்கள். வாழ்க்கை துன்பமயமானது என்ற புலம்பல் அவர்களிடம் இல்லை. அதற்காக, அவர்கள் வாழ்வில் துன்பமே இல்லை என்று சொல்லி விட முடியாது. அவர்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. அவர்கள் சமூகத்திலும் ஏழைகள் இருந்தார்கள், தீமை செய்பவர்கள் இருந்தார்கள், தர்ம சிந்தனை இல்லாமல் கறாரான வணிகத் தனத்துடன் நடந்து கொண்டவர்களும் இருந்தார்கள். குடும்பத்தைக் கவனிக்காத சூதாடிகள் இருந்தார்கள். குற்றவாளிகள் இருந்தார்கள், பகைவர்கள் இருந்தார்கள், போர்கள் நடந்தன. இதனால் மனம் உடைந்து இந்த வாழ்க்கையே மோசம், இதிலிருந்து விடுபடவேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

    வாழ்க்கையின் லட்சியமாக அவர்கள் கருதியது அமரத்வம் அடைவதைத்தான். அமரத்வம் என்பது உடல் சாகாமல் வாழ்வது அல்ல. உடலுக்கு நூறாண்டு வேண்டிய அவர்கள் தன் குழந்தை, பேரக்குழந்தைகள் மூலம் வம்சம் விருத்தி அடைவதை அமரத்துவமாகக் கருதினர். சோமத்தை அருந்தி காலம் கடந்த நிலையில் திளைப்பதை தற்காலிக அமரத்துவ அனுபவமாகக் கருதினர். அருஞ் செயல்கள் செய்து அதனால் வரும் புகழ் மூலம் என்றென்றும் வருங்கால சந்ததியினர் மனதில் இடம் பிடிக்கும் அமரத்துவமே அவர்களது வாழ்வின் மிகப் பெரும் குறிக்கோள். இயற்கை நியதிப்படி வாழ்வதும் தேவர்களை வணங்குவதும் உணவு முதலான உலகியல் வசதிகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல. ஒளி உலகை அடைந்து ஒளிமயமாகச் சூரியன் போல, இந்திரன் போல, அக்னி போலப் புகழுடன் விளங்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய முக்கிய பிரார்த்தனை.

    முழு முதல் கடவுள் எது?

    வேதத்தில் பல வகையான தேவர்கள் போற்றப்படுகிறார்கள். அவர்களில் அம்சன் போன்ற சிலர் ரிக் வேத காலத்திலேயே செல்வாக்கு இழந்த நிலையில் காணப்படுகின்றனர். அக்னி தேவர்களுக்குள்ளே மிக இளையவர் என்று போற்றப்படுகிறார். அவர் அக்காலத்தில் புதிதாக ஏற்பட்ட தெய்வமாக இருக்கலாம். தேவ நிலையை அடைவது மனித வாழ்வின் குறிக்கோள் என நிர்ணயித்துள்ள வேதம் காலம் தோறும் புதுப் புது தெய்வங்கள் தோன்றுவதற்கும் இடம் அளிக்கிறது. அவரவர் விருப்பமான தெய்வத்தை வழிபடலாம். இந்தப் பெயர்கள் உருவங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பரம்பொருள் உள்ளது என்பதையும் வேதம் எல்லா இடங்களிலும் நினைவூட்டுகிறது. என் தெய்வம் சிறந்தது, இதுவே பரம்பொருள் என்று பேசுவது தவறு இல்லை. உன் தெய்வம் மட்டமானது என்று கூறுவது வேதத்திற்கு உகப்பானது அல்ல.

    சிவன் மேலானவரா, விஷ்ணு மேலானவரா?

    இருப்பது ஒன்று. அதைப் பலரும் பல விதமாகப் பேசுகின்றனர். ஒருவர் சிவன் என்று அழைக்கிறார். மற்றவர் விஷ்ணு என்கிறார். எப்படிப் பெயரிட்டாலும் அது அந்த ஒன்றையே குறிக்கும். காடன், மாடன், காட்டேரி என்று அழைத்தாலும் அது பரம்பொருளே. யெஹோவா, அல்லா என்று அழைக்கப்படுவதும் அதே பரம்பொருள் தான்.

    இறப்புக்குப் பின் என்ன?

    இறப்புக்குப் பின் என்ன ஆகிறது என்ற கவலை ஸம்ஹிதை இயற்றிய ரிஷிகளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அங்கிரஸ், ப்ருகு, மனு போன்ற முன்னோர்களை மனித குலத்தின் மூதாதையர்களாக அவர்கள் பெரிதும் மதித்தார்கள். தாய் தந்தையர், தாத்தா பாட்டி இவர்களுக்கு சிராத்தம் செய்வது அல்லது வேறு ஏதேனும் வகையி்ல் வணங்குவது என்பது ரிக் வேதத்தில் கூறப்படவில்லை. நூறாண்டு வாழ வேண்டும் என்று விரும்பினார்கள். உறவினர்கள் இறந்தால் வருந்தினார்கள். அக்னியே, எங்கள் சோகத்தை மாற்று என்று வேண்டினார்கள். அருஞ்செயல்கள் செய்து புகழ் பெற்று உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் வீற்றிருக்கும் அமரத்வத்தை லட்சியமாகக் கொண்டார்கள். அது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தார்கள். பலர் மர்த்யராகவே இறந்தனர். சிலர் நரர் என்ற நிலைக்கும், சிலர் ரிஷி நிலைக்கும் உயர்ந்தனர். சிலர் மகோனர்களாயினர். மிகக் குறைந்த சிலரே சூரிகளாயினர். அதிலும் மிகச் சிலரே தேவ நிலையை அடைய முடியும் என்பதை உணர்ந்திருந்தனர்.

    சிராத்தம் செய்வது ரிக் வேதத்தில் கூறப்படவில்லை என்றால் அது வேத விரோதமானதா?

    அல்ல. முன்னோரை வணங்கும் வழக்கத்தை ரிக் வேதம் ஏற்படுத்தி உள்ளது. மனு, அங்கிரஸ் போன்றோர் வணங்கப்படுகின்றனர். இப்படித் தான் வணங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. சிரத்தையின் உயர்வு பற்றிப் பேசுகிறது வேதம். அந்த சிரத்தை ஏற்படவேண்டும் என்பதற்காக, வேத மந்திரங்களைக் கூறி முன்னோர்களை வழிபடுவது வேத சம்மதமானதே.

    கோயில் வழிபாடு வேதத்தில் சொல்லப்படவில்லையே, அது வேத சம்மதமானதா?

    பரம்பொருள் ஒன்று உள்ளது என்பதையும் அதை எந்தப் பெயரிட்டும் அழைக்கலாம் என்பதையும் வேதம் ஏற்றுக் கொள்கிறது. வேத காலப் பிரதான வழிபாட்டு முறை யக்ஞம் என்றாலும் யக்ஞம் மட்டுமே வழிபாட்டு முறை என்று வேதம் முடிவு கட்டி விடவில்லை. யக்ஞம் இல்லாத பிரார்த்தனையும் ஏற்புடையதே என்றும் கூறுகிறது. ஆகவே எந்த வழிபாட்டு முறையும் வேத சம்மதமானதே. நமக்கு மேலான சக்தி ஒன்று உண்டு என்பதை உணர்ந்து செய்யப்படும் எச்செயலும் யக்ஞமாகவே கருதப்படும்.

    வேதம் கற்காமல் பஜனை போன்றவற்றில் ஈடுபடலாமா?

    தவறில்லை. நாம ஜபத்தின் சிறப்பு பற்றி வேதம் புகழ்ந்து கூறுகிறது. இறைவனின் பல பெயர்களைப் பல விதமாக, அர்ச்சனையாகவோ, நாமாவளியாகவோ, பாட்டாகவோ எப்படிப் பேசினாலும் அது வேத சம்மதமானதே.

    தெய்வங்களுக்கு உயிர்ப் பலி கொடுக்கலாமா?

    மாமிச உணவு சாப்பிடுபவர்கள் கொடுக்கலாம். வேதத்தில் ஆடு, மாடு, குதிரை பலி கொடுக்கப்பட்டது பற்றிய குறிப்புகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உள்ளன. புதிய மந்திரம் இயற்றுவோம் என்று கூறிக் கொள்ளும் ரிஷிகள், உயிர்க் கொலையையும், யக்ஞங்களையும் நீக்கி பிரார்த்தனை ஒன்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர் என்பதையும் பார்க்கிறோம். புதிய ரிஷிகள் பழைய யக்ஞ முறைகளைக் கண்டிக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. பின்னர் யஜுர் வேத காலத்தில் மிருக பலியுடன் கூடிய யாகங்கள் பெருகியதையும் பார்க்கிறோம். புத்த சமண மதங்களின் பிரசாரத்தால் இந்து சமயத்தில் பலி இடுதல் குறைந்ததையும் வரலாறு தெரிவிக்கிறது. இது காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது. அதனால் அவரவர் வழக்கப்படி செய்து கொள்வதை வேதம் தடுக்கவில்லை.

    மாமிச உணவு சாப்பிடலாமா?

    வேத ரிஷிகள் காலத்தில் மாமிச உணவைச் சாப்பிடுவது தவறாகக் கருதப்படவில்லை. எனவே இன்று மாமிசம் உண்பவர்களை நாம் வேத விரோதிகளாகக் கருதித் தாழ்வாகப் பார்க்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் வேதத்திலேயே உயிர்களைக் கொல்லாதீர்கள் என்ற கருத்தும் காணப்படுவதால், வேதம் தொகுக்கப்படுவதற்கு முன்னமேயே மாமிச உணவுக்கு எதிரான கருத்தும் தோன்றி விட்டது என்பதை அறிகிறோம். ஆடை அணியாதிருந்த மனிதன் வளர்ச்சி பெற்று ஆடை அணியத் தொடங்கினான். அது போல, உணவு விஷயத்திலும் நாகரிக வளர்ச்சியின் காரணமாக மாமிசம் உண்பது மறையத் தொடங்கியது. சிந்தனை வளர்ச்சியில் நாம் எந்த நிலையில் இருக்க விரும்புகிறோம் என்பதைப் பொறுத்து அவரவர் தத்தம் உணவுப் பழக்கத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

    அஹம் ப்ரம்மாஸ்மி என்ற உபநிடதக் கருத்து ரிக் வேதத்தில் உள்ளதா?

    உள்ளது. த்ரஸதஸ்யு என்ற ரிஷி பரவச நிலையில் பாடிய ஒரு சூக்தத்தில் நானே வருணன், நானே இந்திரன் என்று பாடுகிறார். 4.42
    8.43.14 இல் ரிஷி தன்னை அக்னியுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.
    3.26.7 இல் நானே அக்னி, நெய் எனது கண். அம்ருதம் எனது வாய். நான் வானை அளக்கும் சூரியன். நான் குறையாத வெப்பம். என் பெயர் ஹவிஸ் என்று எல்லாவற்றிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்.
    4.26.1-3 இல் நான் மனுவாக இருந்திருக்கிறேன். சூரியனாக, கக்ஷிவானாக, ரிஷியாக. நான் பூமியைக் கொடுத்தேன், மழையைக் கொடுத்தேன், ஆறுகளை ஓடச் செய்தேன். தேவர்கள் நான் சொன்னதைக் கேட்கிறார்கள். நான் இந்திரனாக இருந்து சம்பரனின் 99 கோட்டைகளை அழித்தேன் என்று சொல்லும் மந்திரம் அந்த ரிஷி நானே பரம்பொருள் என்னும் நிலையை அடைந்திருந்ததைக் காட்டுகிறது.

    (இது வரை பாமரன் படித்துத் தெரிந்து கொண்டது இவ்வளவு தான். ஆழ்ந்து படிக்கப் படிக்கப் புதிய கருத்துகள் தோன்றுகின்றன. அப்பொழுது இதில் சொல்லப்பட்ட சில கருத்துகள் திருத்தம் பெறலாம். வேதத்தைப் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் பலரை ஈடுபடுத்த இந்நூல் தூண்டும் என்றால் இதன் நோக்கம் நிறைவேறும்.)

    Share
  • எதிர் வீடு

    உமாஸ்ரீ

    அதிகாலை நேரம். இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேத கோஷங்களின் இனிமையான இசை என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் நன்றாக குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் அவர் தூக்கம் கலையாது. அப்படி ஒரு வரம் வாங்கிக்கொண்டு பிறந்திருக்கிறார். நான் அதற்கு நேர் எதிர். சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன்.

       வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர் வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேதபாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் செம்மண் இட்டு பெரிய கோலம் கண்ணைக் கவர்ந்தது. வீட்டை புதியதாக வாங்கியவர்கள் அதைப் புதுப்பித்து ஹோமம் செய்கிறார்கள். அன்று எதிர் வீடு கோலாகலமாகயிருந்தது.

    நாங்கள் குடியிருக்கும் ”அபிநயா பிளாட்ஸ் “ கோடம்பாக்கத்திலிருக்கிறது. கீழே இரண்டு வீடுகள். முதல் மாடியில் மூன்று, இரண்டாவது மாடியில் மூன்று  ஆக மொத்தம் எட்டு  வீடுகள் கொண்ட அழகான அடுக்கு மாடி குடியிருப்பு. உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் இரண்டு திண்ணைகள் இருக்கும். காலை பத்து மணிக்கு அந்தத் திண்ணைகளில் வீட்டிலுள்ள வேலைக்குப் போகாத பெண்கள் அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். மாலைநேரத்தில் முதியவர்கள் அந்தத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

    நான் கீழேயிருக்கும் வீட்டில் குடியிருக்கிறேன். முதல் மாடியில் பட்டாபி சாஸ்திரிகள் அவர் மனனவி பத்மா, குழந்தை காஞ்சனா இருக்கிறார்கள்.

    என் எதிர் வீடு ரொம்ப நாளாக பூட்டியிருந்தது. போன மாதம் தான் விற்றுப் போனது.

    அபிநயா பிளாட்சில் உள்ளவர்கள் எல்லோரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்பும் பண்பும் நிறைந்தவர்கள.  ஒருவருக்கு ஒருவர் வலிய வந்து உதவி செய்வார்கள். ஓரிருவர் மட்டும் அதற்கு விதிவிலக்கு.

    நான் கதவை மூடி விட்டு வீட்டிற்குள் வந்துவிட்டேன். சிறிது நேரத்தில் என் கணவரும் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி  தேநீர் பருக வந்தார்.

    ” இன்று காலை எதிர் வீட்டில் பூஜை நடந்தது. வீட்டை விலைக்கு வாங்கியவர்கள் வந்து விட்டார்கள். “ என்றேன்.

    ” நல்ல செய்தி. ஆறு மாத மாதத்திற்கு மேல் பூட்டியிருந்த வீட்டில் இனி ஆள் நடமாட்டம் இருக்கும் என்று சொல். வருகிறவர்கள் நல்ல குடும்பமாகயிருக்க வேண்டும்.”

    “ ஆமாம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளலாம். எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.”

    “ இன்று என்ன சமையல்?”

    “ ஞாயிற்றுக்கிழமை என்ன சமையல் செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குப் பிடித்த வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும்தான் செய்ய போகிறேன் “ என்று சொல்லி முறுவலித்தேன்.

    அப்போது “  உள்ளே வரலாமா? என்று கேட்டுக் கொண்டே ஒரு நடுத்தர வயது பெண்மணி உள்ளே வந்தார். கண்ணைக் கவரும் சிவப்பு . நல்ல உடல் வாகு. சிவப்பு கலர் பார்டர் வைத்த பச்சைப் புடவையும் அதற்கு மேட்சாக அணிந்திருந்த பச்சைக் கலர் ரவிக்கையும் அவருக்குப் பாந்தமாக பொருந்தி அழகுக்கு அழகு சேர்த்தது. காதிலும், கழுத்திலும் தங்க நகைகள் மின்ன பிரமிக்க வைக்கும் பெண்ணரசியாக தோன்றினார்.

    ” நாங்கள் உங்கள் எதிர் வீட்டை விலைக்கு வாங்கியிருக்கிறோம். இப்போதுதான் பூஜை முடிந்தது. எங்கள் வீட்டில் நீங்கள் எல்லோரும் உணவு உட்கொள்ள வேண்டும். இன்னும் அரை மணியில் இலை போட்டுவிடுவார்கள். வீட்டில் சமையல் செய்யாதீர்கள் “ என்று புன்முறுவலுடன் அன்பு கட்டளையிட்டார். நான் என் கணவரைப் பார்த்தேன். அவர் கண்களில் சம்மதம் தெரிந்தது . அதீத அழகுடன் இருந்த அந்தப் பெண்மணியை எனக்கு முதல் பார்வையிலே பிடித்துப் போய்விட்டது.

    ” கண்டிப்பாக வருகிறோம். நீங்கள் அன்பாக கூப்பிடும்போது மறுக்க முடியுமா?. என் பெயர் ராதா. இவர் பெயர் ராமன். ஒரு தனியார் கம்பெனியில் பணி செய்கிறார். என்னுடைய ஒரே பையன் அமெரிக்காவில் இருக்கிறான். வருடம் ஒரு முறைதான் வருவான். நான் வீட்டிலிருக்கும் இல்லத்தரசி. எப்போதும் கதை புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். நீங்கள் இப்போதுதான் புது வீடு வாங்கி குடி வந்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். “ என்றேன்.

    ” என் பெயர் சித்ரா. என் கணவர் பெயர் ராஜன். அவர் ஒரு தனியார் வங்கியில் பணி செய்கிறார். எங்களுக்கும் ஒரே பையன். அவன் பெயர் மாதவன். பத்து வயது. கே கே நகரில் ஒரு பள்ளியில் படிக்கிறான். மற்றவற்னற அப்புறம் விரிவாக சொல்கிறேன். என்றார் அந்தப் பெண்மணி.

    “ எதிர் வீட்டில் யாருமில்லை என்று கவலைப்பட்டோம். நீங்கள் வந்து விட்டதில் எங்களுக்கு நிரம்ப மகிழ்ச்சி. ராதா உங்களுக்கு ஏற்ற தோழியாகயிருப்பாள். “ என்றார் என் கணவர் சிரித்துக்கொண்டே.

    “ இலை போட்டாகிவிட்டது. எல்லாரும் சாப்பிட வரலாம் “ என்று எதிர் வீட்டிலிருந்து ஒரு மாமா உரக்க கத்தினார்.

    சித்ரா எங்கள் வீட்டை விட்டு அவசரமாக நகர்ந்தார்.

    அன்று எதிர் வீட்டில்தான் நானும் என் கணவரும் அறுசுவை உணவு உட்கொண்டோம்.

    மாலை நேரத்தில் எதிர் வீட்டில் சாமான்கள் வந்திறங்கின. சித்ராவும் அவள் கணவரும் சாமான்களை எல்லாம் எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் வைத்து வீட்டை அழகு படுத்தினார்கள்.

    இரண்டு நாட்கள் கழித்து மாடி வீட்டு பத்மா என்னிடம் வலிய வந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் சுவாபமே அதுதான். ஏதாவது வேலையிருந்தால், தேவையிருந்தால் தானே வந்து பேசுவாள். இல்லாவிட்டால் கண்டு கொள்ள மாட்டாள். சில சமயம் மற்றவர் புண்படும்படி பேசிவிடுவாள். மற்றபடி அவள் நல்லவள்தான். அப்போது சித்ராவும் அங்கே வந்தாள். நான் பத்மாவை சித்ராவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

    “ இவங்க பெயர் பத்மா . பட்டாபி சாஸ்திரிகள் மனைவி. எம் காம்  படித்திருக்கிறார். திருச்சி சொந்த ஊர்.  முதல் மாடியில் இருக்கிறார்கள். பட்டாபி சாஸ்திரிகள் நன்கு வேதம் படித்தவர், தீட்சிதர். அவர் தங்கக் கம்பி . அந்தச் சமயம்  பட்டாபி சாஸ்திரிகள் வந்தார் . பத்மா தன் கண்வரை சித்ராவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

    கம்பீரமான குரலில் ‘வணக்கம்’ என்று சொன்ன சாஸ்திரிகளைப் பார்த்து சித்ரா இருகரம் கூப்பி வணங்கினாள். சாஸ்திரிகளால் சித்ராவின் குடும்பத்திற்கு பெரும் நன்மை ஏற்படப்போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரியாது.

    அடுத்த நாள் சித்ராவின் வீட்டிற்குப் போயிருந்தேன். ஜன்னலுக்கு கண்ணைக் கவரும் அழகான திரைச்சீலையெல்லாம் போட்டு வீடு அழகுடன் காட்சியளித்தது.

    அங்கு ஓரு சிறுவன்  கையில் ஒரு புத்தகம் வைத்து புரட்டிக் கொண்டிருந்தான். பால் வடியும் முகம். நான் அவனைப் பார்த்தேன். அவன் முதலில் என்னைப் பார்க்கவில்லை. நான் அவனை உற்றுப் பார்த்தபோது அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான்.

    “உன் பெயர் என்ன? “ என்ன படிக்கிறாய்?”

    அவன் பேசாமல் சிரித்தான். அவன் பெயர் மாதவன். அவன் எதுவும் பேசமாட்டான்.அவனுக்கு காது கேட்கும் . முயற்சி செய்தால் பேசலாம். ஆனால் பேச மாட்டான். அவன் ஆடிசம் என்ற நோயால் சின்ன வயதிலிருந்தே பாதிக்கப் பட்டான். குழந்தையாய் இருந்தபோது தாமாத பேசுவான் என்று பார்த்தோம். டாக்டரிடம் பரிசோதனை செய்தபோதுதான் தெரிந்தது அவனுக்கு  ஆடிசம் நோய் வந்திருக்கிறது என்று. நாம் பேசுவது அவனுக்குக் கேட்கும். என்ன சொல்கிறோம் என்பது புரியும். ஆனால் பதில் பேச மாட்டான். ஏதாவது ஒரு புத்தகத்தை எப்போதும் கையில் வைத்திருப்பான். அவன் உலகமே வேறு. நாங்கள் அவனைப் புரிந்து கொண்டு  அவனுக்கு அன்பை ஊட்டி வளர்க்கிறோம்..” என்றாள் சித்ரா.

    எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  இந்தச் சிறுவனுக்கா இப்படிப்பட்ட நிலைமை?  என்று வருத்தப்பட்டேன்.

     மாதவன் பேச முடியாமல் இருக்கிறானே என்பது  உங்களுக்கு பெரிய குறையில்லையா?” தழுதழுத்த குரலில் கேட்டேன்.

    என்ன செய்ய முடியும். குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்துதான் எங்களுக்கு  இந்தக் குறை இருக்கிறது என்பது தெரியும். முதலில் வேதனையாகயிருந்தாலும் யோசித்துப்பார்த்ததில்  பிரச்சனையைக் கண்டு வருந்துவதை விட ஏதாவது செய்வதுதான் யதார்த்தம் என்று புரிந்தது. எங்களை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டோம். அவனுடன் வெகுநேரம் செலவழிக்கிறோம். நன்றாக பேசும் குழந்தைகளைப் பார்த்து மனம் சஞ்சலப்படாமல் இருக்க பழகிக் கொண்டோம். எங்களுக்கு கடவுள் கொடுத்ததை ஏற்றுக்  கொண்டுவிட்டோம்.மாதவன் மேல் பிரத்யேகமாக கவனம் செலுத்துகிறோம். கே கே நகரில் இந்த மாதிரி ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சிறப்பு பள்ளியிருக்கிறது. மாதவன் அங்குதான் படிக்கிறான். காலை எட்டு மணியிலிருந்து பகல் ஒரு மணிவரை பள்ளிக்கூடம் . தினந்தோறும் ஒரு டீச்சர் வந்து மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரை அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு போகிறார். டீச்சர் என்றால் மாதவனுக்கு ரொம்ப பயம். ஒழுங்காக படிப்பான். டாக்டரிடம் மாதம் ஒருமுறை காண்பிக்கிறோம். அவர் சொன்னபடி மருந்து கொடுக்கிறோம். குழந்தையை பெற்றவர்கள்தானே பாரத்தை சுமக்க வேண்டும். ஆனால் அவனை எங்களுக்குப்  பாரமாக ஒருபோதும் நினைப்பதில்லை. ராஜன் அவருக்குத் தெரிந்த தஞ்சாவூர் ஜோதிடரிடம் மாதவன் ஜாதகத்தைக் காண்பித்துக் கேட்டதில் அவன் இன்னும் ஒரு வருடத்தில் பேசிவிடுவான் என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்கும் மாதவன் கூடிய விரைவில் பேசி விடுவான் என்ற நம்பிக்கையிருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை” என்றாள் புன்முறுவலுடன்.

    ” காலைக் கடன்களை அவனே கழித்துவிடுவானா? “

    பல் விளக்குவது, காலை கடனை கழிப்பதற்கு உதவி செய்வது , குளிப்பாட்டுவது, உடை அணிவிப்பது, உணவு ஊட்டுவது போன்ற எல்லா வேலைகளையும் நாம்தான் செய்ய வேண்டும். அவன் குழந்தை. அவனுக்கு என்ன தெரியும்? “

    ”உங்களுக்கு வேலை அதிகம். அவனைப் பார்த்து கொள்வதற்கே நேரம் சரியாகயிருக்குமே?

    “என்ன செய்வது? செய்துதானே ஆக வேண்டும்.

    images (3)

    ‘கவலைப் படாதீங்க சித்ரா. மாதவன் சீக்கிரம் பேசி விடுவான். நான் சீரடி பாபாவின் பக்தை. நான் பாபாவிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய அருள் அவனுக்குக் கண்டிப்பாகயிருக்கும்’ என்று சொல்லிவிட்டு என் வீட்டுக்கு  வந்து விட்டேன்.

    அபிநயா குடியிருப்பில் தினந்தோறும் நடக்கும் அரட்டைக் குழுவில் நான் வம்பளக்க போக மாட்டேன்.  சித்ராவும் அதில் சேர மாட்டாள்.. சித்ராவிடம் இன்னொரு  நல்ல குணம் உண்டு.  அவள் காலை வேலையில் ஏதாவது ஒரு சுலோகம் சொல்லிக்கொண்டிருப்பாள். ஒரு நாள் அபிராமி அந்தாதி சொல்லிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் அவள் வாய் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். இந்த நல்ல குணத்திற்காக அவளை எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. நாளாக ஆக எங்கள் நட்பு வலுபெற்றது. அந்நியர்களாகயிருந்த நாங்கள் மிகவும் அன்யோன்யமாக ஆகிவிட்டோம். அந்தக்  குடியிருப்பில் இருந்தவர்கள் எங்களை உடன் பிறவா சகோதரிகளாக பார்த்தார்கள் . சித்ரா என்னை “ அக்கா” என்று அழைக்க ஆரம்பித்தாள். நானும் எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சித்ரா என் தங்கை போல என்று சொன்னேன். நான் எப்போது வேண்டுமானாலும் அவள் வீட்டிற்குள் நுழைவேன். அவள் எப்போது வேண்டுமானாலும் என் வீட்டிற்குள் வருவாள். எதிர் வீடு என்ற பாகுபாடு எங்களுக்குள் முற்றிலும் போய் விட்ட்து.

    ஒரு நாள் எதிர்  வீட்டிற்குள் போனபோது சித்ரா வீட்டில் இல்லை . மாதவன் மட்டும் தனியாகயிருந்தான். என்னைப் பார்த்ததும் உறுமினான்.  வாயிலிருந்து சப்தம் மட்டும் வந்தது. என் கையைப்பிடித்து சமையலறைக்கு அழைத்துச் சென்றான். சாப்பிடும் தட்டை காண்பித்தான். அவனுக்குப் பசி என்று புரிந்த்து. தட்டில் தயிர் சாதம் பிசைந்து வைத்து அவனுக்கு ஊட்டினேன்.மருந்து வாங்க போயிருந்த சித்ரா வீட்டிற்குள் நுழைந்தபோது மாதவன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அவள் முகம் மலர்ந்தது.

    ”மாதவனுக்கு உணவு கொடுக்க வேண்டுமே என்று அவசரமாக வந்தேன். நல்ல வேளை, நீங்கள் அவனுக்கு உணவு கொடுத்துவிட்டீர்கள். அவனுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது” என்றாள்.

    “ அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு சமையல் அறைக்கு அழைத்துச் சென்று சாப்பிடும் தட்டை காண்பித்தான். அதனால் அவனுக்குப் பசி என்று புரிந்தது.

    சித்ராவின் முகத்தில் பெருமிதம் தெரிந்த்து.

    “ மாதவன் ரொம்ப புத்திசாலி என்று கூறியவள் என் கையைப் பிடித்து கொண்டு “ ரொம்ப நன்றி அக்கா. மாதவன் உங்களிடம் வித்தியாசம் பார்க்காமல் நடந்து கொள்கிறான். அவன் வேறு யாரிடமும் இதுபோல் செய்ததில்லை “ என்று கண் கலங்கினாள்.

    இதெற்கெல்லாம் நன்றி எதற்கு ? மாதவன் என் பிள்ளையைப் போல “ என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தேன்.

    அப்போது பத்மா அங்கே வந்தாள். மொட்டை மாடியில் நிலாச் சோறு சாப்பிட வேண்டும் என்று என் பெண் காஞ்சனா பிடிவாதம் பிடிக்கிறாள் “ என்றாள்.

    ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று மொட்டை மாடியில் குழந்தைகள் விளையடிவிட்டு நிலாச்சோறு சாப்பிடுவார்கள்.

    இன்று பெளர்ணமி. மாதவனை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். எனவே மாதவன் மொட்டை மாடிக்கு விளையாட போக மாட்டான்.

    மாதவன் ஏக்கத்துடன் தன் அம்மாவைப் பார்த்தான். சித்ரா மாதவனின் கன்னத்தை லேசாக தட்டி விட்டு “ மாதவனுக்குப் படிக்க வேண்டும் மாலை டீச்சர் வநது விடுவார், ” என்றார்.

    என்னுடைய கைபேசி ஒலிக்கவே நான் அவசரமாக என் வீட்டிற்குள் வந்து விட்டேன். பத்மா சித்ராவிடன் பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் எங்கள் பிளாட்ஸ் வாட்ச்மேன் டேவிட் அங்கே வந்தார். நல்ல மனிதர். வயது அறுபத்தி ஐந்து. பருமனான உருவம். மேலே வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிலிருந்து ஓடி வந்த மாதவன் அவருடைய பானையைப் போலிருந்த தொப்பையில் ஓங்கி ஒரு குத்து விட்டான். ” ஐயோ, அம்மா ” என்று டேவிட் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறினார். மாதவன் அப்படி குத்துவான் என்று அவர் எதிர் பார்க்கவேயில்லை. பத்மா விழுந்து விழுந்து சிரித்தாள். சப்தம் கேட்டு நான் வெளியே வந்தேன்.

    ” வாட்ச்மேன் தொப்பையைக் காண்பித்துக்கொண்டு நின்றிருந்திருந்தால் மாதவன் குத்தாமல் என்னப் பன்னுவான் ?” சிரித்தாள் பத்மா  கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்.

    நான் பத்மாவை பார்த்து முறைத்தேன்.

    சித்ரா “ சாரி வாட்ச்மேன் “ என்றாள்.

    “ பரவாயில்லையம்மா , குழந்தைக்கு என்ன தெரியும் ? ஏதோ தெரியாமல் செய்துவிட்டான் “ என்று பெருந்தன்மையோடு சொன்னார்.

    செய்வதையும் செய்துவிட்டு ஒன்றும் செய்யாதவன் போல் மாதவன், டேவிட் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

    ” மாதவா, வீட்டுக்கு போ “ என்றேன்.

    மன சஞ்சலத்துடன் இருந்த சித்ரா, “ அவன் எப்போதும் அப்படிதான். சில சமயம் என்ன செய்வான் என்பதை அனுமானிக்க முடியாது“என்றாள் வேதனையுடன்.

    இரவு என் கணவரிடம் இந்தச் சம்பவத்தை பற்றிச் சொன்னேன்.

    அவர், ” வாட்ச்மேன் நல்லவர் . அதனால் மாதவன் மேல் கோப்ப்பட வில்லை. அவர் அந்தச் சிறுவனை அடித்தால் என்ன ஆகியிருக்கும் “ என்றார்.

    ” நீங்கள் சொல்வது மிகவும் சரி.”

    இப்பொழுது நானும் மாதவனும் ரொம்ப நட்பாகிவிட்டோம். டீச்சர் வராத நாட்களில் நான் அவனுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பேன்.

    ஒரு முறை நான் திருச்சிக்குப் போயிருந்தேன். மூன்று நாட்கள் ஊரிலில்லை. நான் ஊரிலிருந்து திரும்பி வந்த்தும் சித்ரா என்னிடம் “ ராதா, நீ ஊருக்குப் போயிருந்தபோது மாதவன் உன்னைத் தேடினான். உங்கள் வீட்டு சமையலைறையின் பின் பக்கம் நின்று நீ இருக்கிறாயா என்று சன்னல் வழியாக பார்த்தான் “ என்றாள்.

    நான் மாதவனுக்காக ஊரிலிருந்து வாங்கி வந்த இனிப்பைக் கொடுத்தேன்.

    அடுத்த நாள் காலை சித்ரா மாதவனுடன் வந்தாள். அவள் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள். காட்டன்  புடவை கட்டியிருந்தாள். கூந்தலை அள்ளி முடித்து கொண்டைப் போட்டிருந்தாள்.  நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து பார்ப்பதற்கு பவித்தரமாக காட்சி அளித்தாள்.

    ” வா சித்ரா, கோவிலுக்கு போய் கொண்டிருக்கிறாயா?

    ” அம்பாளுக்கு அபிராமி அந்தாதி படித்து பூஜை செய்துவிட்டு வருகிறேன். பட்டாபி சாஸ்த்ரிகள் ஒருத்தர் வீட்டில் அமாவாசை தர்ப்பணம் செய்து வைக்கப் போயிருந்தபோது ஒரு டாக்டரை பார்த்தாராம். அவர் இலண்டினில் ஆடிசம் நோயைப் பற்றி சிறப்பு பயிற்சி பெற்றவர். நிபுணர். அண்ணா நகரில் ஆஸ்பிட்டல் வைத்திருக்கிறார் .அவரிடம் காட்டலாமே என்றூ சாஸ்திரிகள் சொன்னார். அவர் சொன்ன யோசனை எனக்கு சரியாக  பட்டது. நிபுணர் டாக்டரிடம் போனில் பேசினேன். இன்று காலை அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். மாதவனை அழைத்த்துக் கொண்டு ஆஸ்பிட்டலுக்குப் போகிறேன்.” என்றாள்.

    சிலர் யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன ? தான் உண்டு தன் வீடு என்று சுயநலமாக இருப்பார்கள். ஆனால் பட்டாபி சாஸ்திரிகள் அப்படிப் பட்டவர் இல்லை. பிறருக்கு உதவி செய்வது அவருடைய பிறவி குணம். வள்ளுவர் கூறியதுபோல் காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப்ப்பெரிது. எனவே சாஸ்திரிகள் செய்த உதவி மிகப் பெரிய உதவிதான். அவருடைய உயர்நத குணத்தை பாராட்டத்தான் வேண்டும்.   மாதவன் ஏதாவது சொதப்பிட போகிறான். பத்திரமாக பார்த்துக்கொள் மாதவனுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது. உடனே போ. நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன், என்றேன்.

    அன்று மாலை சித்ரா ஆஸ்பிட்டலிலே தங்கி விட்டாள். டாக்டர் அறுவை சிகிட்சை செய்திருக்கிறார். மாதவன் ட்ஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் “ என்று வாட்சுமேன் சொன்னார்.

    அவனுக்கு பேச வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

    அடுத்த நாள் பொழுது விடிந்து கதிரவன் தகதகவென்று கீழ்த்திசையில் எழுந்தான். சமையலை முடித்துவிட்டு சீரடி சாய் பாபா படத்தின் முன்  உட்கார்ந்தேன்.

    ” நம்பிக்கை , பொறுமையுடன் உன்னை துதிக்கிறேன் பாபா.

      உன் திருபாதங்களில் சரண் அடைகிறேன் பாபா

     என் தாயும் நீயே, உடல் பிணி தீர்க்கும் தன்வந்தரியும் நீயே பாபா

     உன் சேய் மாதவன் துயர் துடைத்து நிம்மதி அளிப்பாய் சாய்நாதா.”

     

    என்று மனமுருகி பிரார்த்தனை செய்தேன். பாபாவிற்கு ஆரத்தி காண்பித்துக் கொண்டிருக்கும்போது கைபேசி அழைத்தது . சித்ராவின் கணவர் ராஜன் என்னை உடனே ஆஸ்பிட்டலுக்கு வர சொன்னார். அவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது. மாதவனுக்கு ஏதாவது பிரச்சனையா என்ற கேள்விக்கு சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற கலங்கிய மனத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அண்ணா நகர் வந்தேன். ஆஸ்பிட்டலில் நுழையுமிடத்தில் நான்கு டாக்டர்கள் ஒன்று சேர்ந்து விவாதித்து கொண்டிருந்தார்கள். பட்டாபி சாஸ்திரிகளும் அவர்கள் பக்கத்தில் இருந்தார். நான்  “மாதவன் எங்கிருக்கிறான்? “  என்று  ரிசப்ஷனில் விசாரித்து கொண்டு பரபரப்புடன் மாதவனிருந்த அறைக்கு வந்தேன். எனக்கு மூச்சு வாங்கியது.

    கட்டிலில்  மாதவன் படுத்திருந்தான். பக்கத்தில் சித்ரா தரையில் அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ணீர். உதட்டில் கையை வைத்து  மாதவனை நோக்கி கையைக் காண்பித்தாள். நான் திடுக்கிட்டேன்.

    ‘சித்ரா மாதவனுக்கு என்ன ஆச்சு ? ’ என்றேன் கலவரத்துடன்.

    அவள் என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. நான் பேசியது எதுவும் அவள் காதில் விழுந்ததாகவும்  தெரியவில்லை.

    “ அற்புதம் நிகழ்ந்து விட்டது. மாதவன் இன்று அம்மா என்றூ பேசத் துவங்கி விட்டான்’ …………… என்றார் ராஜன்.

    “ மிகவும் மகிழ்ச்சிதரும் விசயம்தானே. சித்ரா ஏன் பேசாமலிருக்கிறாள்?. மாதவா உனக்குப் பேச்சு வந்துவிட்டது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. பாபா என் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார். உனக்கு என்ன வேண்டும் சொல்? ” என்றேன்.

    ”எனக்குப் பேச்சு வந்துவிட்டது. ஆனால் அம்மா ஊமையாயிட்டா . அம்மா பேச வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும் ……………………….“ விம்மி விம்மி அழுதான் மாதவன்.

    ” பெருமாளே ! இதென்ன கொடுமை. ஒருத்தருக்கு இன்பத்தை கொடுக்கிறே.. இன்னொருத்தருக்கு துன்பத்தை கொடுக்கிறே. உன் மனசென்ன கல்லா. சித்ரா என்ன தப்பு பன்னாள். ஏன் அவளுக்கு இந்தத் தண்டனை ?……………” என்றேன் கரகரத்த குரலில்.

    அதிகமான சோகம் ஒருவரை பாதிப்பது போல் அதீத மகிழ்ச்சியும் ஒருவரை பாதிக்கும் போலிருக்கு. மாதவன் பேசிவிட்டான் என்பதில் ஏற்பட்ட மிதமிஞ்சிய சந்தோஷத்தால் சித்ரா பேச்சையிழந்துவிட்டாள். சைகாலஜி  டாக்டர் வந்து பார்க்க வேண்டும். போகப்போக சரியாகிவிடும்“ என்றார் ராஜன் வேதனையுடன்.

    நான் வருத்தத்துடன் சித்ராவைப் பார்த்தேன்.

    அவள் எதையும் கண்டு கொள்ளாமல் திரும்பத் திரும்ப தன் உதட்டில் கை வைத்து  மாதவனை நோக்கி கையை காண்பித்துக் கொண்டிருந்தாள்.

                             ****** நிறைவு *****

    Share
  • சகோதரிகள் இருவர் (ஆபிரிக்க தேசத்துச் சிறுகதை)

    – அஹ்மத் ஈஸொப்

    தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்

     ahmed

                “எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க எல்லாவிதத்திலுமே சுயநலவாதிகள். எனது சித்தியும், அப்பாவும் அறைக்குள்ளே புகுந்து கதவை மூடிக் கொண்டிருப்பாங்க. சில நாட்கள்ல நாள் முழுவதுமே அப்படித்தான் இருப்பாங்க. அவங்க என்ன செய்றாங்கன்னு எனக்குத் தெரியாது. வீட்டில சாப்பிடவும் எதுவுமிருக்காது. அப்படி எதுவும் இருந்தாலும் நாங்கதான் சமைக்க வேணும். பிறகு அவங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து நாங்க சமைச்சு வச்ச சாப்பாடு எல்லாத்தையும்  விழுங்கித் தள்ளுவாங்க.”

                “ஏன் நீ அப்பாக்கிட்ட சொல்லக் கூடாது?”

                “அந்தப் பொம்பளையக் கல்யாணம் கட்டினதிலிருந்து அப்பா நாங்க சொல்ற எதையுமே கேட்குறதில்ல. அப்பா நல்ல மனுஷன்தான். ஆனா அந்தப் பொம்பளையைக் கல்யாணம் கட்டினதுக்கப்புறம் அவர்க்கிட்ட இருந்த நல்ல குணங்களெல்லாம் காணாமப் போயிடுச்சு. அவள் அவரை நாசமாக்கிட்டாள். அப்பா எங்களைப் பற்றித் தேடிப் பார்க்கிறதில்ல. அதனாலதான் நான் என்னோட தங்கச்சி  ஹபீபாக்கிட்ட நாம எங்கேயாவது போயிடலாம்னு சொன்னேன். அதுதானே நிஜம் ஹபீபா?”

                “நிஜம்தான்.”

                “இந்தப் பக்கம் வாடகைக்கு அறையொண்ணு இருக்குறதா கூட்டாளிகள் சொன்னாங்க. நாங்க இங்க வந்தது அப்படித்தான். “

                ருகையா என்னிடமும், எனது நண்பன் உமரிடமும் அப்படித்தான் விவரித்தாள். சகோதரிகள் இருவரும் அம் மாடி வீட்டுக்குக் குடிவந்தமை பெரிய பிரச்சினைக்குக் காரணமாக அமைந்தது. அவர்கள் காற்சட்டையும், நீண்ட ஆடையும் அணிந்திருந்தனர். அதிலேதும் வினோதமாக இல்லை. ஆனால் வினோதமாக இருந்தது அவர்களது தலைமயிரின் நிறம்தான். அவர்களது தலைமயிர் செம்பு நிறத்திலிருந்தது. அவர்களது உடல் நிறத்தோடு செம்பு நிறத் தலைமயிர் சிறிதும் பொருந்தவில்லை. அடர்த்தியாக வளர்ந்திருந்த அவர்களது கூந்தல் கீழ்படியாது அடிக்கடி முகத்தில் விழுந்த காரணத்தால் அதனைச் சரிசெய்து கொள்வதற்காக அவர்கள் அடிக்கடி கூந்தலோடு போராட வேண்டியிருந்தது. எனது நண்பன் உமர் அதனை இப்படி விவரித்தான்.

                “அவர்கள் உல்லாசமான யுவதிகள் என்பதைத்தான் அவர்களது கூந்தல்கள் வெளிப்படுத்துகின்றன”

     hajji

                 ருகையா முப்பது வயதைத் தாண்டியவளாக தெரிந்ததோடு ஹபீபா அதை விடவும் வயது குறைந்தவளாகத் தெரிந்தாள். அதிக நாட்கள் செல்லும் முன்பே அவர்களது ஆடைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்று பெண்களின் இயல்பு என்பதால் அல்லது நவீன நாகரிகத்தின் தூண்டுதல் காரணமாக சகோதரிகள் தாம் முன்னர் அணிந்த நீண்ட ஆடைகளைத் தவிர்த்துவிட்டு மேற்கத்தேய ஆடைகளை அணியப் பழகியிருந்தார்கள்.

                உமரும் நானும் அச் சகோதரிகளை நேசிக்கத் தொடங்கியிருந்தோம். நான் இளையவளான ஹபீபாவைத் தேர்ந்தெடுத்திருந்தேன். எமது புறத்தில் அவ்வாறான  விசேட தெரிவொன்றும் இருக்கவில்லை. ஆகவே அவர்கள்பால் ஈர்க்கப்பட்ட நாம் இலேசான மனதோடு காதலிக்க ஆரம்பித்தோம்.

                ஹபீபா எப்பொழுதுமே உதைத்தபடியும், ஆடியபடியுமிருக்கும் ஒரு பெண்ணாக இருந்தாள். அவளது உடலானது, முடுக்கிவிடப்பட்ட இயந்திர விளையாட்டுப் பொருளொன்றைப் போன்றது. அவள் நடக்கும்போது கூட விளையாட்டுப் பொருளொன்றைப் போல உதைத்தபடியும், தடுக்கியபடியுமே நடந்தாள். ஒருமுறை இடது பக்கமும், மறுமுறை வலது பக்கமும் திரும்பியபடியும் அடிக்கடி பின்னால் திரும்பித் திரும்பி பார்த்தபடியும் யாரையோ பார்த்து பயந்தது போல நடந்து செல்வாள். அவளது கை கால்களை தொண்ணூறு பாகைகளுக்கே திருப்ப முடியும். தலைகீழாக ஆணியடிக்கப்பட்ட படுக்கையொன்றில் கிடப்பவளைப் போல அவள் நடந்துகொண்டாள். அவளை முத்தமிட்டபோது ஒரு புதிய உணர்வை நான் அடைந்தேன். சரியாகச் சொன்னால் ஒரு நடமாடும் எலும்புக் கூட்டை முத்தமிட்டது போன்ற உணர்வு அது.

                காலம் செல்லச் செல்ல உமரும், நானும் அச் சகோதரிகள் கூட்டணி மீது சலிப்படைந்திருந்தோம். எங்களிடமிருந்து விலகிய அவர்கள் வேறு காதலர்களைத் தேடிச் சென்றார்கள்.

                நேர்த்தியாக உடுத்துக் கொண்டு, தமது அறையிலிருந்து வெளியேறி அவர்கள் படியிறங்கிச் செல்வதை காலையில் எவரும் காணலாம். ருகையா முன்னாலும், அவளுக்கு பாதுகாப்பளிப்பதுபோல ஹபீபா அவளுக்குப் பின்னாலும் நடந்துசெல்வர். அவர்கள் பிரதான தெருவுக்குள் நுழைந்து தமது அலுவலகத்துக்குப் போவதற்காக ட்ராம் வண்டியில் ஏறுவர். சகோதரிகள் இருவரும் விற்பனைப் பிரதிநிதிகளாக கடையொன்றில் வேலை செய்தனர். மாலையில் திரும்பிவரும் அவர்கள் உணவு தயாரித்து உண்டு, பாத்திரங்களையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு அழகாக உடுத்துக் கொண்டு, சில நாட்களில் மிக அழகான சேலைகளை உடுத்துக் கொண்டு காத்திருப்பர். மோட்டார் வாகனங்களில் வரும் மனிதர்கள் அவர்களைக் கூட்டிச் செல்வர்.

                சகோதரிகள் இருவர் குறித்தும் அயலில் வசிக்கும் பெண்களினது நிலைப்பாடானது, அமைதியான வெறுப்பில் தொடங்கி கடும் எதிரிகளாக எண்ணும்வரை வளர்ந்தது. அவர்களது அயல்வீடுகளில் வசித்த  திருமணமான ஆண்கள், தம் மனைவிமாரின்  கண்காணிப்புக்குள்ளானதன் காரணத்தால் அச் சகோதரிகளை நெருங்க முடியவில்லை. ஆனால் திருமணமாகாத இளைஞர்கள் அவர்களை வட்டமிட்டனர். சகோதரிகள் இருவரும் அவர்களது காதலர்களிடையே கை மாறியபடியே சென்று இறுதியில் நரகத்துக்குப் போகப் போவதாக அஸீஸ்கான் எதிர்வு கூறினார்.

                சனிக்கிழமையின் மாலை வேளைகளிலும், ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளைகளிலும் சகோதரிகள் இருவரும் கட்டைக் களிசானும், குட்டைப் பாவாடையும் அணிந்து தமது மாடிவீட்டின் இரும்பு வேலியில் சாய்ந்து நின்றபடி கீழேயிருந்த இளைஞர்களோடு கதைத்துச் சிரித்தபடி காலத்தைக் கடத்தினர்.

                எவராலும் எதிர்வு கூறக் கூடிய விதத்தில், சகோதரிகள் இருவரும் கர்ப்பமடைந்தனர். ஆரம்பத்தில் இருவரும் கலவரப்பட்டு குற்றம் சாட்டிக் கொண்டனர். தனது கர்ப்பத்திற்கு உமர்தான் காரணம் என ருகையா குற்றம் சாட்டினாள். அவளிடமிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது.

                “எனக்கு குழந்தை கிடைக்க இருக்குன்னு தயவுசெஞ்சு உமர்கிட்ட சொல்லுங்க. குழந்தையோட அப்பா அவர்தான். நான் எப்ப வேணும்னாலும் அவரைக் கல்யாணம் செஞ்சுக்கத் தயார். அவர் என்னை விட இளையவர். அதுதான் எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு.”

                “எப்படித் தெரியும்?”

                “நாங்க பொண்ணுங்க. குழந்தைக்கு அப்பா யாருன்னு எங்களுக்குத்தான் தெரியும். அப்படித்தானே ஹபீபா?”

                “ஆமா. அப்படித்தான்.”

                “ஹபீபா உன்னோட குழந்தைக்கு தகப்பன் யாரு?”

                “புது நகரத்துல இருக்குற ஹமீத் மஜீத். அவருக்கு கடையொண்ணும் இருக்கு.”

                “இந்த விஷயம் அவருக்குத் தெரியுமா?”

                “நான் குழந்தையப் பற்றி அவர்கிட்ட சொன்னேன். ஆனா அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ஆறு பிள்ளைகளும் இருக்குதென்று அவர் சொன்னார். ஆனா இந்தக் குழந்தையையும் பார்த்துப்பேன்னு சொன்னார்.”

                “நீ அதிர்ஷ்டசாலி.”

                “நானும் அதிர்ஷ்டசாலிதான்” என ருகையாவும் சிரித்துக் கொண்டே கூறினாள்.

                தந்தை எனும் குற்றச்சாட்டைப் பற்றி நான் உமருக்கு அறியத் தந்தேன்.

                “அவள் கர்ப்பமானது என்னாலதான்னுஅவளுக்கு எப்படித் தெரியும்?”

                “சிலநேரம் பொண்ணுங்களுக்கு இருக்குற ஞானத்தால தெரிஞ்சிருக்கும்.”

                “நான் கீழ்ப்படியாத கோமாளியொருத்தன்னு அவ நினைக்கிறாளோ?”

                உமர், ருகையாவைச் சந்திப்பதைத் தவிர்த்தான். அவளிடம் தவிர்க்க முடியாத சாட்சிகளேதேனும் இருக்கும் என எண்ணிப் பயந்தான். அவனது பெற்றோர் என்ன கூறுவர்? மக்கள் என்ன கதைப்பர்? விபச்சாரியொருத்தியின் குழந்தைக்குத் தந்தை? பாடசாலைப் பிள்ளைகள் அவனைக் கிண்டல் செய்வர். மோசமான இளைஞனொருவன் குறித்து உதாரணம் கூற ஆசிரியர்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடுவர்.

                சில தினங்களுக்குப் பிறகு ருகையாவைச் சந்தித்து அவளுடனான இக் கொடுக்கல் வாங்கலை முடிவுக்குக் கொண்டுவர அவன் தீர்மானித்தான். அவர்கள் வாக்குவாதம் செய்தனர். உமருக்குள் கண்ணீர், குரோதம், துயரம் பெருக்கெடுத்தது. ஆனாலும் கூட சிக்கலைத் தீர்க்க முடியவில்லை.

                ருகையா திரும்பவும் என்னை அழைத்தாள்.

                “அது என்னோட குழந்தைன்னு உமர்க்கிட்ட சொல்லுங்க. நான்தான் அந்தக் குழந்தையை வளர்ப்பேனே தவிர வேறு யாருமில்ல. உமரை நான் நேசிக்கிறேன்னு உமர்கிட்ட சொல்லுங்க. வருத்தப்பட வேண்டாம்னும் சொல்லுங்க.”

                “ஆனாலும், குழந்தைக்கு கட்டாயமா ஒரு தகப்பன் வேணுமே?”

                “என்னோட குழந்தைக்கு தகப்பனொருத்தன் தேவையில்ல. தகப்பனொருத்தன் இல்லாம இருப்பதே எனக்கு சந்தோஷம். என்னோட மனசுக்குள்ள இருப்பது அப்படித்தான். என்னோட தகப்பனே எங்களைக் கவனிக்கல. அதனால என்னோட குழந்தைக்கும் தகப்பனொருத்தன் தேவையில்ல.”

                “அப்போ ஹபீபா?”

                “ஹபீபாவோட குழந்தையின் தகப்பன் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அப்படித்தானே ஹபீபா?”

                “ஆமா. அது உண்மைதான்.”

                காலம் செல்லச் செல்ல சகோதரிகள் இருவரினதும் வயிறுகள் பெரிதாகத் துவங்கின. அயல்வாசிகளின் பண்பாட்டு உணர்வும் கோபமும் பெருக ஆரம்பித்தன.

                “வளர்ற பெண்களுக்குத் தரக் கூடிய புதுமையான வழிகாட்டல் இது” என எமது மாடி வீட்டுச் சொந்தக்காரியான பெண்ணிடம் திருமதி.மூஸா கூறினார்.

                “வளர்ற பருவத்துல எனக்கு இரண்டு மகள்கள் இருப்பது அவளுங்களுக்குத் தெரியலையோ?”

                “நல்லவேளை எனக்கு பெண்பிள்ளைகள் இல்ல. அதனால எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல.”

                “இதுக்கு ஏதாவது செய்யச் சொல்லி நான் என்னோட புருஷன்கிட்ட கதைக்க வேணும். அடுத்த வீட்டுல கல்யாணமாகாத கர்ப்பிணிப் பொண்ணுங்க இருக்குறதை நாங்க பார்த்திட்டிருக்கிறதெப்படி? அடுத்தது, என்னோட மூத்த மகள் அவங்களோட கூட்டாளி.”

                பாதி சீன வம்சாவளியில் வந்த திருமதி. மூஸா இப்படிக் கூறினார்.

                “கல்யாணமாகாத பொண்ணுங்க ஒருபோதும் கர்ப்பமாக மாட்டாங்கன்னு என்னோட அம்மா அடிக்கடி சொல்வார்.”

                “ஆமா. அது சரிதான்” என மலாய் இனப் பெண்ணான ஹலீமா அதனை ஏற்றுக் கொண்டாள்.

                “கேப்டவுன் நகரத்தில் பொண்ணுங்க ரொம்ப நல்லா நடந்துக்குவாங்க. அவங்க ஆம்பளைங்க கூட சுத்தினாலும் கூட, தங்களைப் பாதுகாக்கவும் தெரிஞ்சவங்க.”

                “ரெண்டு பேருமே ஒண்ணா கர்ப்பமானது எப்படின்னுதான் எனக்குத் தெரியல?” என திருமதி. காஸிம் கேள்வியெழுப்பினார்.

                “சிலவேளை ஒரே ஆம்பளை, ஒரே ராத்திரியில ரெண்டு பேரோடையும் இருந்திருப்பான்” என எனது வீட்டின் சொந்தக்காரி கூறினாள். இவ்வளவு நேரமும் தொடர்ந்து வந்த ஆழமான உரையாடலை மறந்து எல்லோருமே சிரித்தனர்.

                “அவங்க பலதார மணத்தைப் பழக்குறாங்க போல” என சொலமனின் மனைவி டோரதி சிரிப்போசையை அதிகரித்தபடி கூறினாள்.

                “மன்னிக்கணும் திருமதி. சொலமன்”

                திருமதி.மூஸா குறுக்கிட்டார். டோரதி தனது மார்க்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகச் சந்தேகித்துக் கோபப்பட்டார்.

                “இது பல தார மணமில்ல. அவங்க ஒருத்தனைக் கூட இன்னும் கல்யாணம் கட்டிக்கல.”

                கடந்த வருடம் மக்காவுக்கு புனித யாத்திரை சென்று வந்த ஹாஜியானி பாத்திமா, அரேபியா போன்ற நாடுகளில் இந்த இருவரையும் கல்லெறிந்து கொல்வர் எனக் கூறினார்.

                “அவங்களோட மர்மஸ்தானங்களை வெட்டிப் போடணும்” என டோரதி கூறினாள். (அவள் கீழ்த்தரமான ரசனையைக் கிளப்பிவிடும் நாவல்களை வாசிப்பதற்கு அடிமையானவள்). அவள் கூறிய வசனங்களை இதற்கு முன்பு எவருமே அறிந்திராத காரணத்தால் ஏனையவர்களுக்கு அதனைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தது. எனவே ஏதோ ஒரு வகையிலாவது அதனைத் தெளிவு படுத்த வேண்டியிருந்தது. ஏனைய பெண்கள் பேச்சோடு நிறுத்திக் கொண்ட போதிலும், அஸீஸ்கானின் மனைவி செயன்முறைப்படுத்தத் தீர்மானித்தாள்.

                ஒரு மாலை நேரம், அவள் தனது வீட்டிலிருந்து வெளியேறி சகோதரிகள் இருவரும் வசித்துவரும் மாடிவீட்டுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் போய் நின்றாள். ஆர்வத்தின் காரணமாக சுற்றியிருந்த மக்களும் அங்கே குழுமினர். சகோதரிகள் இருவரும் வந்தபோது அவள், அவர்களது வயிறுகளைப் பார்த்துக் காறித் துப்பிவிட்டுக் கத்தத் தொடங்கினாள்.

                “ஆஹ்… முஸ்லிம் பொண்ணுங்க….ஹ்ம்..நீங்க ரெண்டு பேரும் என்ன காரியம் பண்ணிக்கிட்டீங்க? என்ன பண்ணிட்டிருக்கீங்க? முஸ்லிம்னு சொல்லிக்குற உங்களை ஆண்டவன் தண்டிப்பான்! ஐயோ முஸ்லிம்களே..நீங்க பண்ணிக்கிட்டது!”

                அவள் நிலத்தில் அமர்ந்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். சகோதரிகள் இருவரும் பயந்துபோய் அவளைப் பார்த்தபடியே படிகளேறிச் சென்று தமது வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடித் தாழிட்டுக் கொண்டனர்.

                திருமதி.அஸீஸ்கானின் நடவடிக்கையானது சுற்றிவர இருந்த குடியிருப்பினரது கேலிக்குள்ளானது. அவர்கள் சிறுவர்களை அமைதியாக இருக்கும்படி எச்சரித்தனர். எல்லோரும் தாம் வசித்துவரும் வீடுகளிலிருந்து வெளியே வந்து சகோதரிகள் இருவரும் வசித்துவரும் வீட்டைப் பார்த்தனர். சரியாகச் சொன்னால் ஏதோவொரு துயரம் நிகழ்ந்த வீடொன்றைப் போல காட்சியளித்தது அது.

                மெல்லிய நூலிழையைப் போன்ற மெலிந்த சரீரத்தைக் கொண்ட அஸீஸ்கான் வந்து இவ்வாறு கூறினார்.

                “எனக்கு மட்டும் நேரமிருந்தால் இந்தச் சகோதரிகளுடைய மோசமான நடத்தையைப் பற்றி புத்தகமொன்றே எழுதுவேன். இந்தக் காலத்துல முஸ்லிம் ஜனங்கள் எதிர்கொள்ற ஒழுக்கச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்ட இவங்கதான் சரியான உதாரணங்கள். இவங்கள சிறையில அடைச்சு சாகும்வரை பட்டினி போடணும்.”

                ‘அவர்களது கர்ப்பத்துக்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல’ எனும் கூற்றை ஒருவர் முன்வைத்தார். அதற்கு அஸீஸ்கான் இப்படிக் கூறினார்.

                “அவங்களுக்கு தங்களுடைய சரீரத்துல உள்ள மர்மஸ்தானங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியலன்னா நீங்க சொல்ல வர்றீங்க? இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுற பொண்ணுங்க தங்களோட இச்சைக்கு அடிபணிந்து நடத்தை கெட்டுப் போறதுக்கு இஸ்லாம் மார்க்கம் ஒருபோதும் இடமளிக்கிறதில்ல.”

                சில மாதங்களுக்குப் பிறகு சகோதரிகள் இருவரும் பெண்குழந்தைகளிரண்டைப் பிரசவித்தனர். இந்தப் பிரசவம் குறித்தும் பல கதைகள் உலவின. சிலர் குழந்தைகள் மீது அனுதாபம் காட்டியதோடு அவற்றை எடுத்து வளர்க்கவும் தமது விருப்பங்களைத் தெரிவித்தனர். இன்னும் சிலர் ‘அக் குழந்தைகளை மிருகக்காட்சிசாலைக்குக் கொண்டுபோய் மிருகங்களுக்குத் தீனியாக்க வேண்டும்’ என்றனர். இன்னுமொருவருக்கு அவர்களது வீட்டுக்கு தீ வைக்க அவசியமாக இருந்தது.

                சகோதரிகள் இருவரையும் அவர்களது குழந்தைகளோடு மாடி வீட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதே அஸீஸ்கானின் தேவையாக இருந்தது. அவர்கள் அங்கே தொடர்ந்தும் இருப்பதானது கலாசாரத்துக்கும், நற்பெயருக்கும், மார்க்கத்துக்கும் கேடு விளைவிக்கும்.

                வெள்ளிக்கிழமை மதியவேளை, ஜும்மாத் தொழுகை முடிந்ததன் பிற்பாடு அஸீஸ்கான் அப் பிரதேசத்தில் பிரபலமாக விளங்கிய கொலைகாரனாகிய குல்லின் வீட்டுக்குத்தான் முதலில் போனார். எனினும் குல் தனது பசியைப் போக்கிக் கொள்வதிலேயே அதிக கவனத்தைச் செலுத்தினான். கலாசாரம் பற்றிய கதையில் அவதானம் செலுத்தத் தவறிய அவன் சமிக்ஞையாகப் புன்னகைத்துக் கதவைச் சாத்தினான்.

                பிறகு அவர் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரான, புதுநகரப் பள்ளிவாயிலின் மதகுருவான ஹரூஃப் மௌலவியைத் தேடிச் சென்றார். அஸீஸ்கானைக் கூட்டிச் சென்ற மௌலவியின் ஊழியர்களில் ஒருவரான அப்துல்லாஹ் அங்கு நடந்ததை பின்னர் இவ்வாறு விவரித்தார்.

                “நாங்க முகம்கொடுக்கப் போற ஒழுக்கச் சீர்கேடு பற்றியும், பாரிய சிக்கல்களைப் பற்றியும் அஸீஸ், மௌலவியிடம் விபரித்தான். அதுக்கு அவர் என்ன சொன்னார்னு தெரியுமா? அந்த பொண்ணுங்க ரெண்டுபேருக்கும் தண்டனை தர்றது எல்லாம் வல்ல இறைவனுடைய வேலன்னு அவர் சொன்னார். கோபம் வந்த அஸீஸ் மோசமான வார்த்தைகளால மௌலவியைத் திட்டினான். மௌலவி அவரோட ஊழியர்களோட சேர்ந்து அஸீஸைப் பிடிச்சு நல்லா அடிச்சு வெளியே துரத்திட்டார்.”

                வாடகை வீடுகளின் உரிமையாளர் யூசுப்பை அஸீஸ்கான் அடுத்ததாக நாடினார். குளிர்காலங்களிலும் கூட வெண்ணிற குர்தாவை அணியும் அவர் விசித்திரமான ஒரு நபராவார். அடர்த்தியான நீண்ட தாடியை வளர்த்துள்ள அவரது தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. ஆழமான மார்க்கப்பற்றுள்ள அவர் நடுத்தெருவில் கூட இறைவனை நாடித் தொழக் கூடியவர். ஒரு தடவை ஈத் பெருநாள் தினமொன்றில் குரங்கொன்றையும் எடுத்துக் கொண்டு அவர் அம் மாடிவீடுகளுக்கு வந்திருந்தார். அக் குரங்கின் தலையில் சிவப்பு நிறத்தில் ஒரு துருக்கித் தொப்பி இருந்தது.

                “இந்தக் குரங்கு ஒரு முஸ்லிம். இந்தக் குரங்கு ஒரு முஸ்லிம் ” எனக் கூறியபடி அதனை அவதானிப்பவர்களுக்கு, விஷேடமாக தனது கூலியாட்களுக்குக் கேட்கும்படி

                “ஆனா நீங்க முஸ்லிமில்ல. நீங்க முஸ்லிமில்ல” எனக் கத்தியபடி இரு கை நிறையக் காசுகளையள்ளி வீசினார்.

                அப் பெட்டை நாய்களிரண்டையும் தனக்குச் சொந்தமான வாடகை வீட்டிலிருந்து வெளியேற்ற யூசுப் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். அவர் அதனைத் தனியாகச் செய்வதற்குப் பொறுப்பேற்றார். தனது குடியிருப்பில் இவ்வாறான பெட்டை நாய்கள் இருப்பதற்கு இடமளிக்க அவர் தயாரில்லை.

                ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அவர், சாரதி ஓட்டிவந்த மேர்ஸடீஸ் வாகனத்தில் வந்திறங்கினார். சகோதரிகள் இருவரும் வசித்துவரும் மாடிவீட்டுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் நின்றுகொண்ட அவர், அவர்களைத் தான்  தாக்கப் போவதாக பல தடவை அச்சுறுத்தினார். பீதிக்குள்ளான மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர் படிக்கட்டுகளின் கைப்பிடியைப் பற்றிக் கொண்டு மிகுந்த சிரமத்தோடு படியேறினார். படிக்கட்டுகளின் இடையே சற்றுத் தங்கிச் செல்ல கட்டப்பட்டிருந்த இடத்தில் சில நிமிடங்கள் நின்று இளைப்பாறினார்.

                அச்சத்தில் நடுங்கியபடி சகோதரிகள் இருவரும் தமது வீட்டின் கதவருகே நின்று கொண்டிருந்தனர். அவர் முதலில் ருகையாவை நெருங்கி அவளது கன்னத்தில் அறைந்து நாயே, பேயே என குஜராத் மொழியில் கத்தினார். அவரைத் தாண்டிச் செல்ல முயற்சித்த ஹபீபாவுக்கும் தலையில் அடி விழுந்தது. அவள் கீழே விழுந்து படிக்கட்டு வழியே கீழே விழப் பார்த்தாள்.

                இதற்கிடையே யூசுப் வீட்டுக்குள் நுழைந்திருந்தார். பீதியில் நடுங்கிக் கொண்டிருந்த சகோதரிகள் இருவரும் அடுத்ததாக அவர் என்ன செய்யப் போகிறாரென வாசலருகிலேயே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர், கையில் ஒரு பாத்திரத்தோடு முன்னே தோன்றினார். அதன் பித்தளை மேற்பரப்பு சூரிய ஒளியில் மின்னியது. அவர் அதனை படிக்கட்டை நோக்கி வீசியடித்தார். அது டாங் எனச் சத்தமெழுப்பியபடி துண்டுதுண்டாக உடைந்து கீழே சிதறியது. அதனைத் தொடர்ந்து ஒரு கதிரை வந்தது. அவற்றைத் தொடர்ந்து அந்த வீட்டின் சட்டி, பானைகளெல்லாம் வர ஆரம்பித்தன. யூசுபுக்குள் எழுந்த அழிப்புணர்வு உக்கிரமடைந்ததோடு வீட்டுப் பாவனைப் பொருட்களுக்கு மேலதிகமாக துணிகளும் பறந்து வரத் தொடங்கின. செய்ய வழியேதுமற்ற சகோதரிகள் இருவரும் தமது வீட்டின் சொந்தக்காரர் தமது உடைமைகளுக்குச் செய்யும் அழிவுகளை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

                தொடர்ந்து யூசுப் குழந்தைகளிலொன்றைத் தூக்கிக் கொண்டு வந்தார். ருகையாவும், ஹபீபாவும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினர். யூசுப் ஒரு கையால் அவர்களைப் பின்னால் தள்ளிவிட்டு மறுகையால் கதறியழும் குழந்தையின் கழுத்தை நெரிக்க முயற்சித்தார்.

                இச் சந்தர்ப்பத்தில் கூட்டத்தை ஊடறுத்துக் கொண்டு படிகளிலேறியபடி சொலமன் முன்னால் வந்தார். அவர் சகோதரிகளிருவரையும் மிருதுவாக பின்னால் நகர்த்திவிட்டு யூசுப்பின் கழுத்தைப் பிடித்து அசைத்தார். அத்தோடு அவரது கைகளிலிருந்து குழந்தையைப் பறித்து தாயின் கையில் கொடுத்தார். பின்னர் யூசுபைப் பிடித்து அவரது முகத்தை கதவு நிலைக்கம்பில் சாய்த்து அழுத்தினார். யூசுப்பின் முகம் வேதனையில் துடித்தது. யூசுப்பை மிக வலிமையாக ஆக்கிரமித்துக் கொண்ட சொலமன், அவரையும் இழுத்துக் கொண்டு படியிறங்கினார். அவர்கள் நிலத்தை அண்மித்ததும் கூட்டம் அவர்களுக்கு இடமளித்தது. சிறுவர்கள் கை தட்ட ஆரம்பித்தனர். யூசுப்பை படிக்கட்டு நெடுகவும் இழுத்துக் கொண்டு வந்த சொலமன், அவரது மேர்ஸிடிஸ் வாகனத்தின் கதவைத் திறந்து அவரை உள்ளே தள்ளினார். நிலைமையை உணர்ந்த சாரதி வாகனத்தைக் கொஞ்சம் பின்னாலெடுத்து பின்னர் அங்கிருந்து வாகனத்தைச் செலுத்திச் சென்றான்.

                நெடுங்காலமாக எமக்கு யூசுப்பைக் காணக் கிடைக்கவில்லை. எனினும் மனநோயாளி ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றில் இதற்குமேலும் வசிக்க முடியாதென சகோதரிகள் இருவரும் தீர்மானித்தனர். அவர்கள் புதுநகரத்திலேயே வேறொரு வீட்டைத் தேடி, அங்கு குடியிருக்கச் சென்றனர்.

    M.Rishan Shareef,

    No – 126,

    Hemmathagama Road,

    Mawanella,

    Srilanka.

     

    mrishanshareef@gmail.com

    Font – Unicode

     

    எழுத்தாளர் பற்றிய குறிப்பு

     

    அஹ்மத் ஈஸொப் (Ahmed Essop) –

    arishi

    1931 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த இவர், தனது மூன்று வயதில் பெற்றோர் தென்னாபிரிக்காவில் குடியேறியதன் காரணமாக அங்கு வளர்ந்தவராவார். 1956 இல் தென்னாபிரிக்கப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததோடு, தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1986 ஆம் ஆண்டு தனது ஆசிரியத் தொழிலைக் கைவிட்ட இவர் தொடர்ந்து முழுநேர எழுத்தாளரானார்.

     

    இவரது படைப்புக்களில் அநேகமானவை, தென்னாபிரிக்க சமூகத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ள நேரும் சவால்களை விபரிப்பவையாகும். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ள இவர், தனது முதலாவது சிறுகதைத் தொகுதியான The Hajji and Other Stories எனும் தொகுப்புக்கு 1979 ஆம் ஆண்டு ‘ஒலிவ் ஷ்ரெய்னர் (Olive Schreiner) பரிசினை வென்றுள்ளார்.

    Share
  • காற்றில் மிதக்கும் சிறகு!

    -புலமி

    பூவிற்குள் மொட்டாய்ப்
    பூக்கும் வரமாய்
    உனக்குள்ளே காதலாய்க்                     siragu
    காத்திருக்கின்றேன்

    மேகத்துள் மழையாய்
    உருகும் நினைவாய்
    அருகாமையற்ற உறவாய்
    தேடித் தீர்கின்றேன்

    தென்றலுக்குள் இதமாய்
    உள்ளத்தில் கனவாய்
    உரிமையற்ற உணர்வாய்
    விழிகளில் துளிகளானாய்

    இரவிற்குப் பகலாய்
    நாளுக்கொரு நகர்தலாய்த்
    திசைகளாய்ப்  பிரிந்திருக்கும்
    வாழ்வின்
    ஒற்றைப் பயணம்
    எப்போதோ ?

     

    Share
  • காலம்! (3)

    மீ. விசுவநாதன்

    vallamai11

    வானவில் இன்பம் , வளர்கதிர் பேரின்பம் ,
    வான்மழை அற்புதம் , வாழ்க்கையோ தேன்துளி ;
    அம்புலி கண்விருந்து ; அம்மாப்பா ஆனந்தம்;
    நம்புஇவை யாவையும் நன்று. (21)

    கருவில் இருந்தநம் காலங்க ளொன்றும்
    திரும்ப நினைத்துத் திரையில் தெரியும்
    நிழற்பட மன்று ; நிறைந்த கொடையே
    பழக்க மறதிப் பலன். (22)

    புள்ளுக்குள் தோன்றுவான் , புள்ளாகத் தோன்றுவான்,
    அள்ளிக்கொள் இந்தா அழகெனத் துள்ளி
    நடனமும் ஆடுவான் , நம்கண்ணன் என்போல்
    விடலை களுக்கும் விருந்து. (23)

    துங்கைக் கரையிலே தோன்றிய பீடத்து
    “சங்கரர் சீடர்கள்” சத்தியக் கங்கணம்
    பூண்ட துறவிகளே ; பூப்போல் புனிதர்கள் ;
    நீண்ட தவமே நிஜம் (24)

    ஊரெங்கும் சிட்டுக் குருவி கிடையாது ;
    சீரோங்கு(ம்) நல்லூர் சிருங்கேரி சாரதா
    கோவில் வளாகத்தில் கொஞ்சும் குருவியினம்
    கூவி வளர்க்கும் குலம். (25)

    வேதம் படிப்பதுவும் வேதாந்தம் கேட்பதுவு(ம்)
    ஏதும் குறைவில்லை ; என்றாலும் ஓதும்
    படியே நடக்கிற பண்பாளர் பார்த்துப்
    படிந்தாலே கிட்டும் பலன். (26)

    எல்லா மொழியும் இனிது அறிந்தோர்க்கு !
    இல்லார்க்குத் தன்மொழியே இன்பமாம் ; பொல்லாங்கும்
    சொல்வர் புரியாமல் ; சோதனை செய்தாலே
    வல்லமை கூடி வரும். (27)

    அம்மாவோ, அப்பாவோ, ஆசானோ, பந்துவோ ,
    எம்மாம் பெரிய எதன்முன்னும் எம்பிக்
    குதிக்கு மகந்தைக் குரங்கு ; அதனை
    மதிக்காது வாழ்தல் மதி. (28)

    எல்லோரும் நல்லவரே என்கின்ற எண்ணமே
    நெல்லாய் முதிர்ந்துளது நெஞ்சுள்ளே – புல்லாய்
    இருந்தாலும் அப்புற்கே ஈடிலா தர்ப்பைப்
    பெருமைப் பவித்ரமாம் பேர். (29)

    கட்டிப் புரண்டு களிக்கிறான் காசிலான் !
    முட்டியும் துட்டெனும் மோகமுள் வெட்டிலும்
    மாட்டி முழிக்கிறான் மாமனிதப் போக்கிரி !
    வெட்டியாய்க் காலமோ வீண். (30)

    Share
  • எத்தனை நிலவுகள்!

    -துஷ்யந்தி, இலங்கை

    இரவோடு உறவாட
    தினந்தோறும் மறவாமல்
    வான் பரப்பில் ஜாலமிட
    வாராயோ…
    வட்ட நிலவே…!

    வார்த்தையின்றிக் காத்திருக்கும்                    moon
    கவிஞனுக்கும் பார்த்தவுடன்
    பல நூறு சொல்லெடுத்துத்
    தரமான கவிபடைக்க,
    கவியோலை கொண்டிங்கு
    வாராயோ…
    காவியநிலவே…!

    இருமனங்கள் இணைந்துள்ள
    காதலுக்கு தூது சென்று
    துன்பமெல்லாம்
    வாங்கிக்கொண்டு
    இன்பங்கள் கொண்டுசேர்க்க
    வாராயோ…
    காதல் நிலவே…!

    பால்மணக்கும்
    குழந்தைக்கெல்லாம்
    நட்பென்னும் நூல் கொண்டு
    பல வர்ணப் பட்டமாய்
    வானமெங்கும் பறக்கவே
    நித்தமும் முற்றத்திலே
    வாராயோ…
    பால் நிலவே…!

    சூரியனுக்கு ஓய்வு தந்து
    உலகெல்லாம் குளிர வைக்க
    இரவென்னும் படலம் கொண்டு
    பனிப்படலப் போர்வை செய்து
    பூமியை மெத்தையாக்க
    வாராயோ…
    பனி நிலவே…!

    வண்டெல்லாம்
    உறங்கும் நேரம்
    உன் வதனத்தின் எழில்
    அல்லியின் மேல் படவே – அவள்
    மெல்லத் திறக்கும் அழகைக்
    கொஞ்சிப்போகத் தினம்
    இருளிலே ஒளி கொண்டு
    வாராயோ…
    அல்லி நிலவே…!

    மனங்களெல்லாம் மகிழ்வித்தாய்
    உலகெல்லாம் குளிரவைத்தாய்
    உயிர்களெல்லாம் உறங்கவைத்தாய்
    தென்றலோடு கீதம் தந்தாய்
    நதியிலே ஓவியமானாய்…!

    நாளையென்ற சொல்லுக்கு
    ஒளியேற்றி மறைகின்றாய்
    நாளைகள் உனக்காகக் காத்திருக்கு
    மறவாமல் உன் வதனத்தைக்
    காட்டிவிட்டுச் சென்றிடு வானத்து
    வெண்ணிலவே…!

     

    Share