Blog

  • கொடிக்கம்பம்

    தேவா

    மந்திரிக்கு காத்திருக்கும் ”கொடிக்கம்பம்”’
    வாடிப்போன பூக்கள்
    சோர்ந்துபோன மாணவர்கள்
    வியர்த்து ஒழுகும் ஆசிரியர்கள்
    சுதந்திரதினத்தில் சுதந்திரம் இல்லா மனிதர்கள்,

    சரித்திரம் படித்தவர்களும்
    சரித்திரம் படைத்தவர்களை மறந்துபோனார்கள்
    புலம்பும் தியாகியின் கிழிந்த சட்டையில் காந்தியின்
    புகைப்படம் ….

    மறுநாள்  செய்தித்தாளில்
    கொடியெற்றிய மந்திரி
    கொடிக்கம்பம் நட்டதில் ஊழலால் கைது ,…

    என்ன!!,
    ஆங்கிலேயன் நம்மிடம் சுரண்டிச்சென்றானா??..
    இவர்களும்,அவர்களும் ,
    சுரண்டினார்கள்!
    சுரண்டுகிறார்கள்!!
    சுரண்டிக்கொண்டிருப்பர்கள்!!!

     

    படத்துக்கு நன்றி: http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=8250

     

     

    Share
  • நெறியல்லா நெறிதன்னை நெறியாகக் கொள்வேனை….

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    கடலை நோக்கி ஆறுகள் பாய்கின்றன. நோக்குவது ஒரே இடத்தை. ஆனாலும் பாயும் வழிகள்? ஒரே தன்மைத்தனவா?

    சிவாச்சாரியார் நீராட்டுவார், மலர் தூவுவார், தூபமிடுவார், திருவமுது படைப்பார், போற்றிகள் பாடுவார், சிவனாகிய இறைவனை வழிபடுவார். அவர் வழி அஃதாம்

    கருவறையை நோக்கிக் கற்களை எறிவார், சிவனாகிய இறைவனை வழிபடுவார், புத்தத் துறவி வேடத்தில் சாக்கிய நாயனார். அவர் வழி அஃதாம்.

    அம்மையே அப்பா எனச் சிவனை அழைப்பார் மணிவாசகர், அதை விடுத்துப் பித்தனே என்பார் சுந்தரர்.

    பித்தன் என்று அழைத்தாய், அப்படியா பாடு என்பார் சிவனாரும்!

    வழி எது? வழி எது? வழி இது.. வழி இது.. என அவரவர் கொள்ளும் வழியே வழி, அதுவே மனிதம் அதுவே இயற்கை என்ற செய்தியைச் சென்னை மார்கழி இசை விழாவில் சொல்ல முயல்கிறார், தீர்மான அழகுமுறையாளர், வழக்குரைஞர், கலைமாமணி அனிருத்தர்.

    திருமூலரின், ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆடரங்கம், ஆனந்தம் பாடல்கள், ஆனந்தம் பல்லியம், ஆனந்தம் வாச்சியம் ஆனந்தமாகி ஆனந்தம் அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந்தானுக்கே என்ற வரிகள் நாட்டியத்துக்கான ஒரு மணி நேர ஆடலின் அடிநாதம்.

    வாய்க்குள் நீர், தலையில் பூ, எச்சிலாக்கிச் சுவை பார்த்த இறைச்சி, இவை பூசனைப் பொருள்கள். ஏற்பாரா இறைவன்? அதையே தா எனக் கேட்பவரே இறைவன். கண்ணப்பர் அன்புடன் கொடுத்ததை ஏற்றார்.

    அலாரிப்புடன் தொடங்கும், தில்லானாவுடன் நிறைவுறும். அதுவே 300 ஆண்டு கால மரபு வழிப் பரதம். தில்லானாவுடன் தொடங்கினால்? திருவமுதுக்குப் பதிலாக எச்சிலாக்கிய இறைச்சியைப் படைப்பது போலாகாதா? தில்லானாவுடன் தொடங்கலாம் என்கிறார் அனிருத்தர்.

    நடனத்தில் இல்லாத ஞானம் இல்லை, நடனத்தில் இல்லாத சிற்பம் இல்லை, நடனத்தில் இல்லாத கல்வி இல்லை, நடனத்தில் இல்லாத யோகம் இல்லை, நடனத்தில் இல்லாத நாளாந்த செயலும் இல்லை என நாட்டிய நன்னூல் கூறும் வரிகளுடன்  கல்யாணி இராகத்தை அழைத்துக்கொண்டு அரங்கத்துள் நுழையும் நாட்டியமணிகள் பிரியா முரளி, பிரியா தீட்சிதர், கிருத்திகா சுப்பிரமணியம், பிரபா தீட்சிதர் நால்வரும் அரங்கத்தை ஆட்கொண்டனர்.

    என்றுமில்லா அழகுடன் அரங்கம் அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்காகத் தயாரித்த அரங்கத்தில், நிலவு தண்ணொளி வீசியது. கோயிலின் கோபுரம் நிமிர்ந்தது. மஞ்சள் வண்ண மலர் மாலைகள் நெடுந் தோரணமாகத் தொங்கின.

    நாட்டை இராகத்தில் சிறீகாந்தரின் கணீர் குரலில், திருமூலரின் வரிகளுக்கு நடனத்தில் பொருள் சொல்லியவாறே அம்சநாதத்தில் மதுரை என். கிருஷ்ணன் தந்த தில்லானாவைத் தொடர்ந்தனர் நடன மணிகள். கண்ணனின் கானத்தைச் சரணமாக்கினர்.

    ஏற்றமும் இறக்கமும் மென்மையும் குழைவுமாய்க் கலைமாமணி சசிரேகாவின் சொற்கட்டுகள் தந்த சோதி, அருட்பெருஞ்சோதி வரிகள் வர்ணத்துள் நடன மணிகளை அழைத்துச் சென்றன. பிரீதி இராமபிரசாதரின் ஆங்கில வரிக் குரலாக்கம் மெருகூட்டியது.

    வண்ணக் குழையலாய் சந்திரகாந்தமான ரூபமாய் எனக் கரகப்பிரியாவில் தொடங்கி, ஆதாரம் நீயே பல்லவிக்குள் நுழைந்து, கருத்தினில் உனை நிறுத்தி வழிபட அருள் செய்வாய் எனத் தோடியில் வியந்து, தா நிதம் தா, அருள் தா, பொருள் தா எனப் பந்துவராளியில் மிதந்து, உன்னையே நம்பினேன் செகநாதா எனப் பைரவியில் நயந்து, நடனமணிகள் அரங்கை அசத்தினர்.

    நந்தினி ஆனந்தனாரின் குரல் வளத்தில், தெளிவான உச்சரிப்பில், இசையின் எழிலில் அரங்கத்தார் மயங்கினர். அவருடன் சிறீகாந்தரும் இசைத்து மகிழ்வித்தார்.

    இடையிடையே சசிரேகாவின் சொற்கட்டுகளுக்குப் பதம்பிடித்து, காலடிகளைப் பணிவித்து, கையசைவுகளை மெருவாக்கி, விரல்வழி கண்ணசைத்து, கழுத்தசைவில் செழிப்புற்ற பரதத்தின் பண்பட்ட முத்திரைகளை  ஒருங்கிணைத்து அனிருத்தரின் அடிநாதக் கருத்துக்கு உயிரூட்டினர் பிரியா, பிரியா, கிருத்திகா, பிரபா நால்வரும்.

    அடிமேல் அடி வைத்தால் நடனம். அடிமேல் அடிவைத்தல் படிப்படியாக முன்னேறும் முயற்சி. அதற்காக அடிமேல் அடிவாங்குவது துன்பம். அவ்வடியவன் நாடுவதோ மேலேயுள்ள இறைவனின் அடி, எனப் பல்பொருளை முன்னிறுத்திக் கருத்து விருந்து தந்தவர் அனிருத்தர். சொற்கட்டாக்கிச் செவிக்கு விருந்து தந்தவர் சசிரேகா, நடனமாகக் கண்ணுக்கு விருந்து தந்தவர் நடனமணிகள் நால்வரும்.

    அலாரிப்பில் துயரத்தைக் காட்டி, தோடியில் சீறீகாந்தர் சங்கடம் தீர்த்திடக் கடைக்கண் பாராய் என இசைக்க, ஆனந்தம் ஆனந்தம் எனச் சசிரேகாவின் குறுகுறுவான எத்துக்கடைச் சொற்கட்டில் நாட்டியத்தின் வழி ஆனந்தம் அடைவதை நடனமணிகள் காட்டினர்.

    தூணிலும் இருப்பவன் துரும்பிலும் இருப்பவனைச் சிறீகாந்தர் கீரவாணியில் இசைக்க, உள்ளத்தைக் கடைந்து உள்ளத்தைக் கடந்து, நமக்குள்ளேயே கடவுள் இருப்பார் எனத் தொடரும் சசிரேகாவின் சொற்கட்டுகளுக்கு அப்பால் சப்தத்தில், நந்தினியின், கடவுளே வினை தீர்க்கும் முழுமுதற் கடவுளே எனும் காம்போதிக்குப் பரதம் தந்தனர் நடன் மணிகள்.

    சுருதியை Strauss எனும் மேற்கத்திய இசை சார்ந்து, நான் இசையின் வழியே என்ற பாடலை வேதாந்தர் தர, பிரியா முரளி பரதத்தை ஆடி அசத்தினார்.

    லயத்தைக் கருவிகளூடே  தனஞ்செயன் மிருதங்கத்திலும் வேங்கடசுப்பிரமணியன் காலக்கட்டிலும் தர, சசிரேகாவின் சொற்கட்டுகளில் பிரபா மெய்மறந்து ஆடி, பரதக் கலையின் நுண்ணிமைகளில் திண்ணியராகினார்.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும், ஆள்பாதி ஆடை பாதி, புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு, அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன், போதுமென்ற மனமே பொன்செயும் மருந்து, பொறுத்தார் பூமியாள்வார் ஆகிய பழமொழிகளுக்கு முக பாவங்களைத் தந்தவர் பிரியா தீட்சிதர்.

     சிருங்காரித்தலைச் சிறீகாந்தர் இசைக்கக் கிருத்திகா ஆடினார். அதற்காக அவர் தன்னை அலங்கரித்து வந்தார், அரங்கம் பொலிந்தது.

    நடனத்தின் வழி நம் மனம் இறைவனை நோக்கிப் புறப்படுவதாகச் சொல்ல வருகிறார் அனிருத்தர். நாட்டிய நன்னூலின் உட்பொருளை மல்லாரியில் நாகசுரமும் தவிலுமாய் இராசேந்திரனும் கசேந்திரனும் இசைக்க, கால்நுனியில் உடலை உயர்த்தி, தோளை நிமிர்த்திய நடன மணிகள், இறைவனை உலாக் கொணர்ந்த பாங்கினை அரங்கம் நயந்து வியந்தது.

    அமைதி நிலவுக எனும் உயர் நோக்கை வாத்தியர்கள் வடமொழியில் பாராயணமாக்க, நடன மணிகள் நால்வரும் அரங்கத்தை ஆட்கொள்ள, பார்வையாளர் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.

    சிறீகாந்தரின் கம்பீரக் கணீர்க் குரலிசை, நந்தினியின் தேன் மழலைச் சிந்திசை, சசிரேகாவின் தாளம்பிறழாச் சொற்கட்டும் நட்டுவாங்கமும், தனஞ்செயனின் மத்தள ஓசை, வல்லுநரின் வயலினின் நாதம், புல்லாங்குழலின் ஊதோசை, ஏனைய கருவிகளின் செவ்விசை, யாவும் ஒன்றுக்கொன்று  மாறுபடாமல் ஒன்றோடொன்று ஒத்திசைத்ததால் கேட்போர் காதுகள் இசைத் தேனில் ஊறின.

     விரலசைவில் கையசைந்தது. கைகள் செல்வழி கண்கள் சென்றன. கண்களின் வழி மனம் சென்றது. மனத்தின் வழி காலடி கட்டமைத்தது. காலடி அசைவுக்குக் கழுத்தசைந்தது. செம்மைசார் நுண் இடையார் பிரியா, பிரியா, கிருத்திகா, பிரபா நால்வரும் செவ்விதாய் ஆடிச் செழிப்புற, அவையோரின் கண்கள் ஆடக அரங்குடன் ஒட்டிக்கொண்டன.

    கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல, ஐயநுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார், என மிதிலைப் படலத்தின் 8ஆம் பாடலில் கம்பன் கூறியதை நினைவூட்டினர் ஆடல் வல்லார்.

    அனிருத்தரையும் அவர் கருத்துக்குச் செம்மாந்த இசையும் செழுமைசேர் நடனமும் குவித்த கலைஞர் யாவரையும் சுவைஞர் மீண்டும் மீண்டும் கைதட்டிப் பாராட்டிப் போற்றினர்.

    பத்மசிறீ விருது பெற்ற பேரா. சுதாராணி இரகுபதியின் 65 ஆண்டுகால நடன வாழ்வுக்கும் வாத்தியார் மதுரை என். கிருஷ்ணன் நினைவுக்கும் பெரும் பொருட்செலவில் இந்நிகழ்ச்சியைத் தயாரித்து, தன் குருவுக்கு நடனக் காணிக்கையாக்கிய கிருத்திகா சுப்பிரமணியனை எத்துணை போற்றினும் தகும்.

    05. 12. 2012இல் இராயப்பேட்டை சங்கீத வித்துவ சபையில் அரங்கேறிய இந்நிகழ்ச்சி, 19. 12. 2012இல் கார்த்திகை நுண்கலைக் கழகம் சார்பில் மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவனில் மீளேறியது.  இரு நிகழ்ச்சிகளையும் கண்ணாரக் காணும் பேறுற்றேன்.a

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் .. (38)

     சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    2012ம் ஆண்டு தனது முடிவை நெருங்கிக் கொண்டு இருக்கும் வேளியிலே ஒரு பரபரப்பு , பலரது புருவங்களை உலகளாவிய ரீதியில் சுருங்க வைக்கும் வகையில் பரப்பப்பட்ட ஒரு செய்தி ஏன் வதந்தி என்று கூடச் சொல்லலாம்.

    என்ன அது ?

    2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி உலகம் அழிந்து விடப்போகிறதாம் ! கொஞ்சக் காலமாகவே ஒருவகையான மன்க்கிலேசம் உள்ளவர்களின் மத்தியிலும் இணையத்தளங்களிலும், இணையசமூகத் தளங்களிலும் பரபரப்பாக பரவி வந்த ஒருவகை பீதியுடனான ஒரு செய்தி.

    ஓ ! இன்று என்ன தேதி ! டி சம்பர் 24 அல்லவா ? அப்படியானால் உலகம் அழிவிலிருந்து தப்பித்துக் கொண்டது போலும் …. சரி இதெல்லாம் என்ன ஒரே பிதற்றல் போல இதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்து என்ன பயன் ? உங்கள் அலுப்புடனான ஆதங்கத்தை உணர்கிறேன்.

    தென் அமெரிக்க பகுதியில் வாழும் ஆதி மக்களாகிய “மாயன்” இனத்தவரின் புராதான நாட்காட்டியின் கணிப்புகளின் படி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதியுடன் உலகம் அழிந்து போயிருக்க வேண்டும் என்பது ஒருவகை அபிப்பிராயம்.

    ஆனால் தொலைபேசியில் அதே “மாயன்” வம்சத்தைச் சேர்ந்த ஒருவரின் கூற்றுப்படி அந்நாட்காட்டியின் படி ஒருபோதுமே உலகம் முற்றாக அழிந்து போய்விடும் என்று கூறப்படவில்லையா. 34000 வருடங்களுக்கு ஓடிய ஒரு காலச்சக்கரம் முடிவுக்கு வந்து இப்போ ஒரு புது காலச்சக்கரம் உருளத்தொடங்கியுள்ளதாம்.

    ஆத்திகவாதியாகட்டும், நாத்திகவாதியாகட்டும் உலகத்தின் அழிவிலிருந்து அப்பபடிப்பட்ட ஒரு அழிவு ஏற்படுமாயின் தப்பித்துக் கொள்ள முடியாது.

    சரியோ, தவறோ ……. உணமையோ, பொய்யோ எது எப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஒன்று மட்டும் கண்ணுக்கு முன்னே தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. அது என்ன என்கிறீர்களா?

    உலகத்தின் மாற்ற‌த்தையே குறிப்பிடுகிறேன்.

    ஆதிகால மனிதன் வெறும் இலைகளையே ஆடையாகக் கட்டிக் கொண்டிருந்த காலத்திலிருந்து இன்று இலட்சக்கணக்கில் செலவழித்து உடையணியும் காலம்( அது கூட அரைகுறையாகத் தான் இருக்கிறது என்கிறீர்களோ ! உஷ் …. நமக்கெதுக்கடா வம்பு ) வரை மனிதனுடைய ஆசைகளும், அந்த ஆசைவழி எழுந்த தேடல்களும் அந்தத் தேடல்களின் வழி வந்த கண்டுபிடிப்புகளும் மனிதனின் வாழ்க்கைமுறையையும் அவன் வாழும் சூழலையும் மாற்றித்தான் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையே .

    தனது கட்டுப்பாட்டுக்கு மீறிய, தனது ஆஅசை எனும் பெயரில் வளரும் பேராசைகளைக்கூட நியாயப்படுத்திக் கொண்டு வாழும் ஒரு காலகட்டத்திலே நாம் இருக்கிறோம்.

    எமது தேவைகளுக்காக நாம் வாழும் இயர்கையைச் சுரண்டிக் கொண்டே இருக்கிறோம். அந்த இயற்கையின் பொறுமையின் எல்லைகளை சோதித்த வண்ணமே இருக்கிறோம்.

    இப்படியான ஒரு கட்டத்திலே இதோ அடுத்தவாரம் நான் வாழும் இந்தப்புலம்பெயர் நாட்டின் மிக முக்கியமான கொண்டாட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன ?

    அன்பையும், அருளையும் மனிதனுக்குப் போதித்து, தன்னைப் போல பிறரையும் நேசி எனும் தத்துவத்தைத் தனது வாழ்க்கையாக்கி வாழ்ந்து காட்டிய தேவகுமாரன் இயேசுநாதரின் பிறந்தநாளை, கிறிஸ்துவ மக்களின் வாழ்வில் ஒரு உன்னதமான நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் நாம் வாழும் இச்சமூகம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    வேலையற்றோர் பட்டியல் என்றுமில்லாதவாறு அதிகரித்து விட்டது, நாட்டின் பொருளாதாரம் பள்ளத்தாக்கில் விழுந்து அங்கிருந்து எழுவதற்கு ஒரு அடி முன்னாலும் இரு அடி பின்னாலுமாக சறுக்கி, சறுக்கி ஏறிக் கொண்டிருக்கிறது.வங்கிகளில் கடன்வாங்கி தாம் வாழும் இல்லங்களை வாங்கியபலர் அக்கடனைத் திரும்பச் செலுத்தமுடியாமல் திண்டாடி தமது இல்லங்களைப் பறிகொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், சமுதாயத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

    இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ………………..

    இன்று எமது இல்லத்திற்கு அருகாமையில் இருக்கும் அங்காடிக்கு (Super Market) சென்றிருந்தேன். அப்பப்பா !

    கூட்டமென்றால் அப்படிப்பட்ட கூட்டம். காரை பார்க் செய்வதற்கு விமான நிலையத்தில் இறங்க முடியாமல் வானில் சுற்றிக் கொண்டிருக்கும் ஆகாயவிமானத்தைப் போல ஒரு இரண்டு தடவைகள் ரவுண்டு அடித்த பின்னால்தான் பார்க் செய்யவே இடம் கிடைத்தது.

    அப்படி எதைத்தான் வாங்க வந்திருக்கிறார்கள் ?

    “பொருளாதாரச் சிக்கலில் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்” இங்கிலாந்து ஊடகங்களின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது இந்தனோடு சம்மந்தப்பட்ட செய்திகள் தான்.

    ஆனால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து பொருட்களை அள்ளிக் கொண்டு வெளியே வரும் மக்களைப் பார்த்தால் அல்லல் படுபவர்களைப் போலத்தெரியவில்லையே !

    சரி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விருந்துபசாரங்களுக்கான அவசியப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள் என்று பார்த்தால் , 50″ திரையுடைய தொலைக்காட்சி தொடக்கம், நவீன வகையிலான கணினிகள் என அவர்கள் கஷ்டப்பட்டுத் தூக்கிச் செல்லும் பொருட்களைக் காணும் போது பொருளாதாரச் சிக்கல் போலத் தெரியவில்லையே !

    சரி அதை விடுவோம் ………

    கிறிஸ்துவ‌ பண்டிகை அதற்கான விடுமுறை நாட்கள் இதனை எமது இந்து நண்பர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் ?

    புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அந்நாட்டுக் கலாச்சாரங்களோடு ஒத்துப் போனால்தான் இனிவரும் காலங்களில் அவர்கள் நிம்மதியாக வாழலாம் என்று பல புத்திஜீவிகள் கொடுத்த அறிவுரைகளை இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகையில் தான் எமது மக்கள் அழகாகக் கடைபிடிக்கிறார்கள் போலும் !

    மாறி,மாறி கிழமைக்குக் கிழமை ஒவ்வொரு பகுதியாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எம்மவர் மத்தியில் ஏராளம்.

    அது மட்டுமா? ஒருவருக்கொருவர் கொடுக்கும் பரிசுப்பொருட்களில் கிறிஸ்துவ நண்பர்களை மிஞ்சி விட்டார்கள் போங்கள் ……….

    அன்பு, அருள் இவைகளின் ஆழத்தை அமைதியாகப் புகட்டியவர் இயேசுநாதர் இன்று நாமோ அடுதவரின் வாழ்வின் இன்னல்களை எள்ளளவும் எண்ணாமல் இயேசுநாதரின் பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோமோ ?

    கவிஞர் வாலியின் அற்புதமான பாடலின் வரிகள் ஒன்று நினைவிற்கு வருகிறது.

    “எதையும் வாங்கிட மனிதன் வந்தான்
    விலை என்னவென்றாலும் அவன் தந்தான்
    இதயம் என்பதை விலையாய்க் கொடுத்து
    அன்பை வாங்கிட எவருமில்லை “

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    Share
  • கண் பேசும் வார்த்தைகள்

    புவனா கோவிந்த்

    “என்னங்க, நெக்ஸ்ட் வீக் எங்க சித்தப்பாவும் சித்தியும் அவங்க பொண்ணுக்கு மாப்ள பாக்கற விஷயமா ஊர்ல இருந்து வராங்க. நாமளும் கூட போகணும், லீவ் சொல்லிடுங்க” என்றவள் கூற

    “ஐயையோ… புதன்கிழமையா மட்டும் இருக்கக்கூடாது கடவுளே” என வேண்டியபடியே “எப்போ?” என்றான்

    “புதன்கிழமை” என குண்டை வீசினாள்

    “ஓ நோ… எனக்கு புதன்கிழமை ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. லீவ் போட முடியாது” என்றான்

    “ஆமா… எங்க வீட்டு சொந்தம் வராங்கனு சொன்னாலே உங்களுக்கு மீட்டிங், டெட்லைன், கோ-லைவ் எல்லாம் வந்துடும்” என சண்டையை துவங்கினாள்

    “ஏன் புரியாம பேசற? நீயும் வேலைக்கு போறவ தான, தெரியாதா?” என புரியவைக்க முயன்றான்

    “போன மாசம் உங்க அக்கா வந்தப்ப மட்டும் மூணு நாள் லீவ் போட்டீங்க, என்னையும் போட வெச்சீங்க. எனக்கு கூட தான் வேலை இருந்தது, உங்களுக்காக செய்யலையா?”

    “எங்கக்கா ரெண்டு மாசம் முன்னாடியே வர்றத பத்தி இன்பார்ம் பண்ணினா, சோ பிளான் பண்ண வசதியா இருந்தது” என நியாப்படுத்தினான்

    “ஓஹோ… உங்க சொந்தமெல்லாம் ரெம்ப இங்கிதம் தெரிஞ்சவங்க, எங்களுக்கு அவ்ளோ பத்தாதுன்னு சொல்ல வரீங்க, அப்படி தானே” என அவள் கோபமாய் சீற

    “ஸ்டாப் இட், டோண்ட் புட் வோர்ட்ஸ் இன் மை மௌத்… உன்கிட்ட பேச முடியாது ச்சே” என சலிப்பாய் நகர்ந்தான்

    “ஆமா என்கிட்டயெல்லாம் பேச முடியாது. உங்க டீம்ல இருக்காளே அவ பேரென்ன… நின்னாவோ உக்காந்தாவோ, அவகிட்ட பேசறதுன்னா மட்டும் இனிக்கும்” என கழுத்தை நொடித்தாள்

    “அது நின்னாவும் இல்ல உக்காந்தாவும் இல்ல… நீனா” என பற்களை கடித்தான் எரிச்சலில்

    “அது ரெம்ப முக்கியம் இப்ப… நீங்க லீவ் போட முடியுமா முடியாதா?” என அவள் பிடிவாத குரலில் கேட்கவும்

    “அட்ஜஸ்ட் பண்ண பண்ண ஓவரா டாமினேட் பண்றா, திமிரு” என மனதிற்குள் எரிச்சல்பட்டவன் “முடியாது” என ஒரே வார்த்தையில் எழுந்து சென்றான்

    அதன்  பின் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரவு உணவின் போது கூட மௌனமே ஆட்சி  செய்தது

    பின்  அவன் இருப்பையே உணராதவள் போல் ஒரு புத்தகத்தை எடுத்து  கொண்டு அறைக்குள் செல்ல, “நானும் உனக்கு சளைத்தவனல்ல” என்பது போல் அவன் முன்னறையில் லேப்டாப் சகிதம் இல்லாத வேலையில் மூழ்கினான்

    நடுஇரவில் அவன் வரும் அரவம் கேட்டு தூங்குவது போல் பாவனையில்  கண் மூடினாள். மெல்லிய  படலம் போல் அவன் அவளை பார்ப்பதை  உணர்ந்தும் கண் திறக்காமல் இருந்தாள்

    மெல்ல அவளருகே குனிந்தவன் “ராட்சசி… பேசறதெல்லாம் பேசிட்டு கொழந்த மாதிரி மூஞ்சிய வெச்சுட்டு தூங்கரத பாரு” என மெல்ல  முணுமுணுத்தபடி, அவளை எழுப்பி விடாவண்ணம் மெல்ல நெற்றியில் இதழ் ஒற்றினான்

    “உறங்குவது போல் நடித்தேன்

    உன்ரகசிய நாடகத்தை ரசிக்க”

    என  இன்ஸ்டன்ட் ஹைக்கூ உதித்தது அவள் மனதில்

    திறக்க  துடித்த இமைகளை அடக்கி நாடகத்தை தொடர்ந்தாள், அப்படியே உறங்கியும் போனாள்

    காலையில்  கண் விழித்தவளுக்கு அவனின் முகதரிசனம் முன்னிரவை நினைவூட்ட “வெவ்வவெவே” என பழித்தபடி, செல்லமாய் அலுங்காமல் அவன் கேசத்தை கலைத்தாள்

    அடுத்த  நாள் இரவும் இதே நாடகம் தொடர்ந்தது. ஆனால் பகலில் ஜென்ம விரோதிகள்  போல் முகத்தை திருப்பி கொண்டனர்

    மூன்றாம்  நாள் கண் விழித்ததும் இரு  நாளின் வழக்கம் போல் தனிச்சையாய்  அவன் முன்னுச்சி கேசத்தை  கலைத்துவிட்டு விலகியவளின்  கரம் பற்றினான் அவன்

    “அய்யோ நாடகம் அம்பலமாகி விட்டதே” என வெட்கமும், கூடவே சிறு கோபமும் சேர “கைய விடுங்க, நான் இன்னும் கோபமாத்தான் இருக்கேன்” என கையை உதறினாள்

    “நான் கூட ரெம்ப கோவமாத்தான் இருக்கேன்” என்றான் அவனும்

    “எதுக்கு?” என முறைத்தாள்

    “ம்… தூங்கற மாதிரி நடிச்சு ஏமாத்தினதுக்கு” என்றான் கேலியாய் சிரித்தபடி

    “அதுவும் தெரிஞ்சு போச்சா? ச்சே” என அவள் மனதிற்குள் புலம்ப

    “ஆமா, அதுவும் தெரிஞ்சு போச்சு” என்றான் அவள் மனதை படித்தது போல்

    “எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆச்சு” என அவன் பிடியில் இருந்து ஓட விழைந்தவளை அருகே இழுத்தவன்

    “இன்னிக்கி நீ வொர்க் ப்ரம் ஹோம்னு எனக்கு தெரியும்… அதான் நானும் வொர்க் ப்ரம் ஹோம் சொல்லிட்டு வந்துட்டேன்” என கண் சிமிட்டினான்

    “ஐயோ கடவுளே… நேத்து சாயங்காலம் அந்த நீனா என்னை பாத்து ‘என்ஜாய் வொர்கிங் ப்ரம் ஹோம்’னு சிரிச்சது இதுக்கு தானா, ஏன் இப்படி மானத்த வாங்கறீங்க?” என பொய்யாய் சலித்தாள்

    “ஒரே ஆபீஸ்ல வொர்க் பண்றதுல கூட சில அட்வான்டேஜ் இருக்கு இல்லடி”

    “எனக்கு ‘டி’ போட்டா கோபம் வரும்”

    “அப்ப காபி போடட்டுமா?” என சிரிக்க, அதற்கு மேல் நடிக்க இயலாமல் தானும் சேர்ந்து சிரித்தாள்

    “ஏய்… ஒரு நியூ இயர் ரெசல்யூசன் எடுக்கலாமா?” என்றவன் கேட்க

    “என்ன? இனிமே அடிக்கடி வொர்க் ப்ரம் ஹோம் பண்றதுனா?” என்றவள் சிரிக்க

    “எனக்கொன்னும் அப்ஜக்சன் இல்ல” என சீண்டியவன் “இன்னொன்னும் கூட” என்றான்

    “என்ன?” என அவள் புரியாமல் பார்க்க

    “இந்த 2013 வருசத்துல நானும் நீயும் சண்டையே போடாம இருக்கணும். டீல்?” என அவன் கை நீட்ட

    “நோ டீல்” என அவன் கையை தட்டி விட்டாள்

    “அடிப்பாவி… ஏன்?” என விழிக்க

    “சண்டையே இல்லைனா என்ன லைப் அது, செம போர். மாசத்துக்கு நாலு சண்டை போடணும், ரெண்டு நாள் மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு யார் மொதல்ல பேசுவாங்கனு தவிக்கனும், ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் ரசிக்கணும். சண்டைய சாக்கா வெச்சு உங்ககிட்ட நாலு கிப்ட் தேத்தணும், இதெல்லாம் இல்லைனா என்ன சுவாரஷ்யம் இருக்கு லைப்ல” என அவள் அபிநயத்துடன் கூற, அதை கண்ணெடுக்காமல் ரசித்தவன்

    “பொண்ணுங்க எல்லாம் பிளான் பண்ணிதான் பண்றீங்க… இது புரியாம பசங்க நாங்க பீலிங்க்ல பீஸ் பீஸா போறோம்… ஹ்ம்ம்” என பாவமாய் அவன் கூற, அதை பார்த்தவளுக்கு சிரிப்பு பீறிட சத்தமாய் வாய் விட்டு சிரித்தாள்

    சிரிப்பு  ஓய்ந்ததும் “ஹாப்பி நியூ இயர்… ரெண்டு நாள் அட்வான்சா  சொல்றேன், ஏன்னா என்னோட விஷ் தான் உங்களுக்கு முதல் விஷ்ஷா இருக்கணும்” என்றாள் தன் உரிமையை பறைசாற்றுவது போல்

    அதையும் ரசித்தவன் “ஐ லவ் யு” என்றான், அவளை விட்டு பார்வையை விலக்காமல்

    “ஹாப்பி நியூ இயர் சொன்னா திருப்பி ஹாப்பி நியூ இயர் தான் சொல்லுவாங்க, ஐ லவ் யு சொல்ல மாட்டாங்க… இது கூட தெரியாதா?” என்றாள் வேண்டுமென்றே

    “ஐ லவ் யு சொன்னா திருப்பி ஐ லவ் யு டூ சொல்லுவாங்க, சண்டை போட மாட்டாங்க… இது கூட தெரியாதா?” என்றான் அவனும் வேண்டுமென்றே

    “இப்ப யாரு சண்டை போட்டா?” என அவள் முறைக்க, மீண்டும் அங்கு ஒரு சண்டை (!) ஆரம்பமாகியது.

    (முற்றும்)

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-23

    பெருவை பார்த்தசாரதி

    ஒரு குறிப்பிட்ட  வயது வரை “சிறார்” என்று  அழைக்கப்படுபவர்கள், 15 வயதை எட்டும்போது “இளைஞர்கள்”, “இளைய தலைமுறையினர்” என்ற பட்டத்திற்கு உரியவராகிறார்கள். பள்ளிப் படிப்பில் பத்தாம்  வகுப்பைத் தாண்டிவிட்டாலே, வாலிபன் ஆகி விடுகிறான். இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களின், திறமைகள், அவர்களின் குறிக்கோள், நோக்கம், செயல்பாடுகள் பற்றிய எண்ணங்களை இக்கட்டுரை மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    முதலில் இந்திய இளைஞர்களின்  சாதனைகளைப் பற்றிய ஒரு சிறிய  கண்ணோட்டத்தோடு இக்கட்டுரையை ஆரம்பிக்கிறேன். அண்மையில் இந்தியாவிலிருந்து இன்சாட் செயற்கைக்கோள் மற்றும் பிருதிவி ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து உலக அளவில் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு மேலும் ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் வெற்றியின் பின்னணியில் இரவு பகலாக உழைத்த எத்துனையோ இளைஞர்களின் திறமைகள் ஒளிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சில பட்டதாரி இளைஞர்கள் கிராமப்புறங்களில் விவசாயத்தில் புதிய உத்திகளைக் கொண்டு பயிர் விளைச்சலிலும், மகசூலிலும் சாதனை படைக்கிறார்கள்.  சிலர் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்தோடு புதிய கருவிகளைக் கண்டுபிடித்து உலக சாதனை நிகழ்த்தி வருவதையும் ஊடகங்கள் மூலமாக அறிந்து கொள்கிறோம். இப்படி இளைஞர்களின் ஆற்றல்களுக்கு சவால் விடும் துறைகள் பல இந்தியாவில் இருந்தாலும், இன்று படித்த இளைஞர்கள் வேலை தேடி அதிகம் நாடுவது வெளிநாடுகளைத்தான் என்ற பரவலான கருத்து நிலவுகிறது.  ஏனென்றால் வெளிநாடுகளில் இளைஞர்களுக்கு கட்டுக்கடங்காத சுதந்திரம் உண்டு, இங்கே தனிப்பட்ட கலாச்சாரம் அனைத்தையும் கட்டுக்கோப்புக்குள் வைக்கிறது. மேலும் படித்தவுடன் இங்கே உடனே வேலைகிடைப்பதில்லை, உலக அளவில் 20 கோடியே 50 இலட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள், இந்தியாவில் 6 கோடிக்கும் மேல் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதால், வங்கிகளில் வசூலாகாத கல்விக் கடன்கள் அதிகரித்துள்ளது என்பதை ‘தினமலர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

    பிறவிகளிலேயே மனிதப் பிறவி அரிது. அதிலும் இளைமைப் பருவம் என்பது மிக அரிது. இப்படி அரும்பிறவி எடுத்த அனைவரும் தம் வாழ்நாள் முழுவதும் நல்ல ஒழுக்கத்துடன், நன்னடத்தையுடன் வாழ்கின்றனரா .என்பது கேள்விக்குறியே. நூற்றில் ஒரு சிலரே நல்ல மனிதராக வாழ்கின்றனர். ஏன் என்றால், ஏனயவர்கள் சிறார் முதலே நல்ல பண்புடனும், ஒழுக்கத்துடனும் வளர வழிகாட்டப்படாததுதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறமுடியும். அனைத்துத் தரப்பினரிடமிருந்து இன்றய இளைஞர்களைப் பற்றிய சிந்தனையை மதிப்பிடும்போது, ஒருமித்த கருத்தாக வெளிப்படுவது “இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள்” என்பதுதான். இப்படி வெறும் சொல்லிலே மட்டும் சொல்லிவிட்டால் போதுமா?.. அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும் ஆராயத் தவறி விடுகிறோம் என்பதே  உண்மை நிலை.

    குழந்தையாகப் பள்ளிப்  படிப்பை முடித்துவிட்டு, வளர்ச்சியடைந்த வாலிபனாக கல்லூரியிலிருந்து வெளிவந்து,  அபரிமிதமான கனவுகளோடு சமுதாயத்தில் கலக்கும்போதுதான் பலவித இன்னல்களுக்கு ஆளாகி விடுகிறான். ஒரு அரை நூற்றாண்டுக்கு பின்னே சென்று பார்த்தால், இதே கனவு சற்று வேறுபடும். அன்று இருந்த பொருளாதார சூழ்நிலையில் ஒரு சைக்கிள், ரேடியோ அல்லது தொலைபேசியோ ஒரு வளர்ச்சியடைந்த கிராமத்தில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. அப்போது வளர்ந்த சூழ்நிலை, இளைஞர்களுக்கு சிந்தனையை சிதறவிடுவதற்கு வழிவகுக்கவில்லை. தானுண்டு தன்பள்ளியுண்டு, படிப்புண்டு என்றிருந்த போது கடமையும் ஒழுக்கமும், பண்பும் இளைஞர்களோடு ஒட்டி உறவாடியது. ஆனால் இப்போது காணும் விஞ்ஞான வளர்ச்சியினால், இணையதளம் (net), முகநூல் (Facebook) சினிமா, எலக்ட்ரானிக் கேட்கெட்டுகள் (Electronic gadgets) போன்றவற்றில் கவனம் சிதறி படிப்பிலும், பண்பிலும் நாட்டம் குறைந்து விட்டது. ஒரு விதத்தில் இன்றைய இளைஞர்களை தவறான பாதையில் செல்ல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதிக அளவில் காரணிகளாக இருக்கின்றன என்று கூடச் சொல்லலாம்..  ஒன்றுக்கும் உதவாத இத்தகைய களிப்பூட்டும் நிகழ்ச்சிகளில் அதிக அளவில் நேரத்தைச் செலவிடுவதால், இளைமையில் கல்லாது ஊர்சுற்றித் திரிந்து, வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கின்ற பலரைக் காணமுடிகிறது. இப்படிச் சமுதாயத்தில் நிலவி வரும் சீர்கேடுகளே இளைஞர்களுக்கு ஒரு சவாலாக அமைந்துவிடுவதை நாம் உணர்ந்து கொண்டு வருகிறோம்.

    இச்சமுதாயச் சூழ்நிலையை மேலும் சற்று ஆராய்ந்து  நோக்கினால், உண்மை நிலவரம்  புரியும். இப்போது வெளிவருகின்ற பெரும்பாலான திரைப்படங்கள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், வலைதளம், வானொலி, செய்தித்தாள் போன்றவை வெளியிடும் தலையங்கச் செய்திகள் அனைத்துமே, இளைஞர்களுக்கு வக்கிரத்திற்கும், வன்முறைக்கும் வழிகாட்டுகின்றன என்பதே பெற்றோர்களின் ஒருமித்த கருத்து. இவர்களின் கூற்றுப்படி, இன்றைய சமுதாய சூழ்நிலை இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகிறதா?… என்றால் ‘இல்லை’ என்று அடித்துக் கூறமுடியும். இளைஞர்கள் தவறான பாதையில் செல்லும்போது, ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?….என்பதற்கு இந்த வருடத்தில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களை உதாரணங்களாக உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

    சமீபத்தில்  தமிழகத்தில் ‘பாங்க் கொள்ளை’  பல இடங்களிலும் பரவலாக சர்வ சாதாரணமாக நிகழும் ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், இந்தக் குற்றங்களுக்குப் பின்னணியில்  பொறியியல் துறையில் நன்றாகப் படித்துப் பட்டம் பெற்ற  இளைஞர்களே காரணமாக இருந்தனர்  என்ற தகவல் தமிழக மக்களை அதிர்ச்சி அடையவைத்தது. காவல்துறையினர் இவர்களைக் கைது செய்யமுடியாமல் கடைசியில் அந்த இளைஞர்களைச் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றது, அனைவரின் நினைவை விட்டு அகலவில்லை. பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன் தனது ஆசிரியரைக் கத்தியால் குத்தி கொலைசெய்து விட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளான். அந்த மாணவனை இத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியது எது?……என்ற கேள்விக்கு கல்வி அறிஞர்களும், சான்றோர்களும் பெற்றோர்களும் ஒரே ஒரு காரணத்தை மட்டுமே முன் வைக்காமல், இன்றைய சீர்கெட்ட சமூகம், தரமற்ற கலாசாரம், வன்முறை நிறைந்த சினிமா போன்றவை உடந்தையாக இருந்திருக்கிறது என்று அன்றைய  பத்திரிக்கையிலும், தொலைக்காட்சிகளிலும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    படித்துப் பட்டம் பெற்ற  ஒரு குழுவினர், தங்களின் ஆடம்பரத்திற்கு அதிகப் பணம் தேவைப்பட்டது. இளவயதிலேயே இணையதள வியாபாரத்தில் தோற்று நஷ்டமடைந்த இவர்கள் தேர்ந்தெடுத்த குறுக்கு வழி என்ன?…..ஒரு பணக்காரரின் பள்ளிக் குழந்தையைக் கடத்தி பணம் பறிக்க முயன்று, கடைசியில் சிறைச்சாலையில் இளைமைக் காலத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று 20-12-12 இச்சம்பவங்களைப் பற்றி எழுதும் போது கூட, தலைநகர் புதுதில்லியில், நான்கு இளைஞர்கள் ஒரு பெண்ணுக்கு இழைத்த கொடூரச் சம்பவத்தையும் படித்திருப்பீர்கள். ஒட்டு மொத்த இந்திய மக்களையே உலுக்கும் செய்தியாக, இந்த இளைஞர்கள் இக்கொடூரச் செயலைச் செய்திருக்கிறார்கள்.

    அனைத்து வசதிகளையும்  ஒரே நாளில் அனுபவித்து விடவேண்டும் என்கிற இளைஞர்களின் பேராசைகளைப் பூர்த்திசெய்ய பெற்றோர்கள் செவிசாய்ப்பது இன்னொரு காரணம். நம்ம பையன் நன்றாகக் படிக்கிறானே என்று ‘ப்ராவிடண்ட் பண்ட்’ (Provident Fund), ‘த்ரிஃப்ட் சொஸைட்டி லோன்’ (Society loan) என்று அனைத்து விதமான கடனையும் வாங்கி அம்மாவும், அப்பாவும் கஷ்டப்பட்டு தினமும் 12 மணிநேரம் உழைத்தது போதாது என்று ‘ஒவர்டைமில்’ (OT) சேமித்த பணத்தில் விலைமதிப்பு மிகுந்த அதிவேகமாகப் பறக்கும் இரு சக்கர வாகனங்களை வாங்கிக் கொடுக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் படும் அல்லல்களை என்றாவது ஒருநாள் இந்த இளைஞர்கள் சிந்தித்திருக்கிறார்களா?….மாறாக பெற்றோர்களை மதிக்காமல், முகத்தை மூடியபடி, பனியன் அணிந்த யுவதிகளோடு இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றுவது, போதைப் பொருள் பரிச்சயம் இவற்றால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோரைப் புறக்கணித்தல் போன்ற சம்பவங்களையும் கேள்வியுறுகிறோம்.

    அப்பா, அம்மாவினுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுகிற இன்னொரு விஷயம் பாக்கெட் மணி (pocket money). பெற்றோர்களை  வற்புறுத்திப் பெறுகின்ற  இந்த பாக்கெட் மணி, இளைஞர்களை  அழைத்துச் செல்லும் இடம் எது தெரியுமா?………அவசர கதியில் நின்று கொண்டே சாப்பிடும் ‘துரித உணவகம்’ (Fast food), சுகாதாரம் சற்றும் இல்லாத ‘சாலையோர கையேந்திபவன்’ (Roadside eatables), பள்ளி, கல்லூரிக்கு அருகாமையில் சந்துமூலையில் அவ்வப்போது முளைக்கும் ‘சாட்ஷாப்’ (chat shop) ‘பானிபூரி’ அல்லது ‘பான்ஷாப்’ (pan shop). இதைப்போல், இன்னும் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    இன்று இளைஞர்களின் கல்வி அறிவுக்குப் பஞ்சமில்லை என்றாலும் நல்வாழ்க்கைக்கு இட்டுச் செல்லுகின்ற பாதைகள்தான் அவ்வப்போது தடம் மாறுகிறது. ஒரு வகையில் அபரிமிதமான விஞ்ஞான வளர்ச்சியும் கூட இளைஞர்களின் சிந்தனையைத் திசை திருப்புகிறது என்பதை முன்பே சொல்லியிருந்தேன். “தனிமரம் தோப்பாகாது” என்பது போல, பலதரப்பட்ட மக்களைக் கொண்ட ஒரு சமுதாயம் சிறப்பாக அமையவேண்டுமானால், நல்லொழுக்கமும், பண்பும் நிறைந்த இளைஞர்களின் பங்கு மிக மிக அவசியம். இளைஞர்களின் பிரச்சினைகளை மட்டுமே சீர்தூக்கிப் பார்க்காமல், நல்வழி காணும் யோசனைகளையும் ஒவ்வொரு மனிதனும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

    வாழ்க்கையில்  பலவித இன்னல்களைச் சந்தித்த பிறகுதான் ஒரு தாய் தன்  மகவை ஈன்றெடுக்கிறாள், பின்னர்  அவன் வளந்து வாலிபனாகி அறிவிற்சிறந்து விளங்கினால் மட்டுமே அந்தத் தாயின் இன்னல்கள் மறைந்து வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நீடிக்கிறது. தந்தைக்கு மகனைச் சான்றோனாக்குகின்ற கடமை மற்ற கடமைகளுள் முன்னிலை வகிக்கிறது. இத்தகைய கடமைகள் எல்லோருக்குமே பொதுவானது என்றாலும், அதை நிறைவேற்றுவதில்தான் ஒவ்வொருவரும் வேறுபட்டு நிற்கின்றனர். இன்றைக்குக் கூட தந்தையின் அன்புக்கு ஏங்கும் பல குழந்தைகளைக் காணமுடியும். அவர்களுக்கெல்லாம் துருவனின் சாதனையையையும், பிரகலாத சரித்திரத்தையும் எடுத்துக் கூற வேண்டிய காலக்கட்டாயத்தில் இன்று நாம் உள்ளோம்.

    அன்னிய ஆதிக்கத்தின் பிடியில் இந்தியா சிக்கித் தவித்தபோது, இந்தியாவின் பெருமைக்குரிய கலை, கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் போன்றவையும் அடிமைப்பட்டுக் கிடந்தது. இந்திய இளைஞர்கள் குருட்டு நம்பிக்கையிலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும், சமயப் பூசல்களிலும் உழன்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு இளைஞன் குறுகிய காலத்தில் அரும் பெரும் தலைவனாகவும், இந்திய கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் உலகுக்கு அறியச் செய்து அரும்பணியாற்றி உலக சாதனை செய்யமுடிந்தது. தியாக மனப்பான்மையோடு சேவையாற்றுகின்ற இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி “ராமகிருஷ்ணாமிஷன்” என்ற பேரியக்கத்தை நிறுவமுடிந்தது. அவரது இளமைப்பருவத்தில் பண்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியதால்தான் ஒரு ‘மஹானாக’ முடிந்தது. குடும்பத்தில் பெண்குழந்தைகளுக்கு நடுவே அதிக தவம் செய்து பெற்ற ஆண்குழந்தை அவர். நல்லொழுக்கம் நிறைந்து ‘நரேந்திரன்’ என்ற பெயரோடு தனது இளைமைப் பருவத்தில் ஆற்றிய பணி பாரதப் பண்பாட்டை வெளிஉலகுக்கு அறிமுகப் படுத்தியதோடு மட்டுமில்லாமல் உலக அளவில் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்தது. இவர் ஆற்றிய உரையில் மனம் நெகிழ்ந்து போன மக்கள் இவரை “ஸ்வாமி” என்றே அழைத்தனர். அன்று முதல் ஸ்வாமி விவேகானந்தர் என்று உலகத்தாரால் அழைக்கப்பட்டார். ஒரு இளைஞனாக தமது 39 வயது முடிவதற்கு முன், மற்ற இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக விளங்கி, தன்னம்பிக்கையே வாழ்க்கை, உடலின் சக்தியே பலம், பலவீனம் மனித வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதல் எழுந்திருங்கள், விழித்திருங்கள் குறிக்கோளை எட்டும் வரை அயராது உழையுங்கள் என்று வீரமுழக்கம் செய்தவர்.

    இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் செல்ல பல காரணங்கள் இருந்தாலும், நல்வழியில் செல்வதற்கு ஒரு சில வழிகளே உள்ளன. தற்காலத்தில் இளைஞர்களின் அபரிமிதமான செயல்திறம் அதிகமாக இருந்தாலும் ஒழுக்கமும் பண்பும் மிகக் குறைந்து காணப்படுகிறது என்பதால்தான்…..இந்திய விஞ்ஞானிகளும், பொருளாதார வல்லுனர்களும் மற்றும் அறிஞர்களும் இன்றைய இளைஞர்களை மையமாக வைத்து, அவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் என்ற மாபெரும் சக்தி இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை.  ஒரு வலுவான, ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உண்டாக்க முதன் முதலில் வழிகாட்டுபவர் ஈன்றெடுத்த அன்னை பிறகு கடமையை உணர்த்தும் தந்தை அடுத்தடுத்து ஆசிரியர், சமூகம் இவையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து, கடைசியில் இறை நம்பிக்கையோடு கலந்து நிற்கவேண்டும். இளைமைபருவத்தில் எந்த ஒரு செயலுக்கும் முடிவெடுக்கும் திறன் மிக முக்கியம், முடிவெடுக்க முடியாத நிலை வரும்போது பெரியோர்களின் வழிகாட்டல் இளைஞர்களுக்கு அவசியமாகிறது. தற்போது இருக்கும் சமுதாய சூழ்நிலையில், இளைஞர்களை நல்வழியில் செயல்பட வைப்பது அனைவருக்கும் ஒரு “சவால்” என்றே கூறமுடியும்!..அதில் வெற்றி கிடைத்தால் “சாதனை” என்று கூடச் சொல்லிக்கொள்ளலாம். இதனால்தான், இளைஞர்களின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுத்த, இந்தியாவில் தோன்றிய எண்ணற்ற மகான்களும், அறிஞர்களும், தலைவர்களும் நிகழ்த்திய சாதனைகளையும், அருமை, பெருமைகளையும், அவ்வப்போது இன்றய இளைஞர்களுக்கு ஞாபகப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இன்றும் நாம் இருக்கின்றோம்.

    தொடரும்………

    Share
  • ஜோடிக்கிளிகள்

    முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

    அழகிய பூங்கா அது. மரக்கிளைகளில் பற்பல ஜோடிக்கிளிகள் கிரீச் கிரீச் சத்தத்தோடு பேசிச் சிரித்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. மரநிழலில் ஒரு ஜோடிக்கிளி ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டிருந்தது. அந்த ஜோடிக்கிளியின் பெயர் அறிவழகன் – நிலா. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வரும் ஜோடிகள். தங்கள் காதலை வளர்த்தது இந்தப் பூங்காவில் தான். இரண்டு பேரும் வேறு வேறு சாதியில் பிறந்தவர்கள்.

    இன்றும் வழக்கம்போல் அதே இடத்தில் அதே மரத்தின் நிழலில் ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்தபடி ஒருவர் நகத்தை ஒருவர் கடித்தபடி ஒருவரை ஒருவர் கொஞ்சியபடி காதலில் மூழ்கிக் கிடந்தனர்.
    ‘இன்னும் எத்தன நாளைக்குத்தான் நாம ரெண்டு பேரும் இப்டியே இருக்கிறது?’ என்றான்.

    ‘என்னடா பண்றது? கூடிய சீக்கிரம் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்றம் இப்ப இருக்கிறது மாதிரியே எப்பவுமே பிரியாம வாழலாம்’ என்றபடி தன்மடியில் படுத்துக் கிடந்த அறிவழகனின் தலையைக் கோதிவிட்டபடியே சொன்னாள்.

    அந்த மென்மையான ஸ்பரிச உணர்வும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலும் நேரம் மறந்து காலம் மறந்து இருக்கும் இடம் மறந்து இலயித்துக் கிடக்கச் சொன்னது.
    நிமிர்ந்து பார்த்தாள் நிலா. மெல்ல மெல்ல வானில் மேலெழும்பிக் கொண்டிருந்த வான்நிலா பூமியில் உள்ள நிலாவைப் பார்த்து வியந்தது. வெட்கத்தில் மேகக் கூட்டங்களுக்கிடையே ஓடி ஒளிந்தது.

    நிலா திடுக்கிட்டு எழுந்தாள். தன் மடியில் கிடந்த அவனை தட்டி எழுப்பினாள். ‘டே அறிவு, எழுந்திருடா, இருட்டிருச்சு’ என்றபடியே பதறினாள். ‘ஆம் நிலா’ என்றபடியே அவளின் தலைகோதிவிட்டு நெற்றியில் ஒரு முத்தமிட்டான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு ‘நான் கேளம்புறேண்டா’ என்றபடி அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வேகமாக வீடு நோக்கி நடந்தாள். அவனும் தன் வீடு நோக்கி நடந்தான்.
    வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா. அவளின் அப்பா கேட்டார்

    ‘நிலா, எங்க போய்ட்டு வர்ற?’.

    ‘தோழி வீட்டுக்கு போய்ட்டு வர்றேன் ப்பா’.

    ‘தோழி வீட்டுக்கா? இல்ல காதலனோடு கொஞ்சிக் குலவீட்டு வர்றியா?’

    நிலாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘அப்பாவுக்கு எப்படித் தெரியும்?’ மனதிற்குள்ளேயே தீவிரமாக யோசித்தாள்.

    ‘எனக்கு எப்டித் தெரியும் னு யோசிக்கிறியா?’ என்றபடியே ‘அந்த வழியே போனபோது நானும் உன்னையும் ஒரு பையனையும் பார்த்தேனே’ என்று உண்மையை ஆவேசமாகக் கத்தினார் அவர்.

    ‘அப்பா, அது… அதுவந்துப்பா…’ என்று இழுத்தபடியே நிறுத்தினாள்.

    ‘நானே எப்படியும் அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்’ என நினைத்தவள் அவரே கேட்டவுடன் சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்தாள்.

    ‘அப்பா, நான் அந்த அறிவழகனைத் தான் காதலிக்கிறேன் ப்பா. அவன் ரொம்ப நல்லவன் ப்பா. என் மேல் ரொம்ப பாசம் வச்சிருக்கான் ப்பா’ என்றபடி பக்கத்தில் வந்து அவரின் நாடிபிடித்து ‘என் செல்ல அப்பால்ல’ என்றபடியே கொஞ்சினாள்.

    அவர் அமைதியாக இருந்தார். நிமிர்ந்து அவள் முகம் பார்த்தார். சிரித்தபடி கண்ணீர் விட்டார். ‘உன் விருப்பப்படியே நடக்கட்டும் ம்மா. என் மகளைப் பற்றி எனக்குத்தான் நன்றாகத் தெரியுமே’. என்றபடி கர்வப்பட்டார். அவளின் உச்சி முகர்ந்தார்.

    அவள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.

    அறிவழகன் ஒரு நல்ல எழுத்தாளன். அவனின் எழுத்தையும் அவனின் சிந்தனைகளையும் நல்ல குணத்தையும் பார்த்துப் பழகிக் காதலிக்கத் தொடங்கினாள் நிலா. அவனும் காதலால் ஜாதிகள் அடியோடு அற்றுப்போகும் சமுதாய மலர்ச்சி பெறும் என உறுதியாக நம்பினான்.

    அறிவழனும் அம்மாவிடம் பேசத் துவங்கினான். ‘அம்மா, அம்மா, அது… அதுவந்து…’ என்றபடி நிறுத்தினான்.
    ‘என்னடா மென்னு முழுங்குற? ம்… சொல்லு’ என்றபடி அவன் முகம் பார்த்து நின்றாள்.

    ‘நான் நிலா ன்னு ஒரு பொண்ணை விரும்புறே ம்மா. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிறேன் ம்மா’ என்றபடி அவள் அருகில் வந்தான்.

    ‘நானே உனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்க்கணும் னு நெனச்சேன். எனக்கு வேல வைக்காம நீயே பார்த்துட்ட போல. சந்தோசம் ப்பா’ என்றாள்.

    அறிவழகன் எதிர்பார்த்த பதிலைத்தான் அவள் சொன்னாள்.

    மகிழ்ச்சியில் திளைத்தான் அவன்.

    நல்லபடியாய்த் திருமணம் நடந்தேறியது. இன்பமான இல்லறம். மகிழ்ச்சியான வாழ்க்கை. அன்பான துறுதுறுவென ஆண் குழந்தையும் பிறந்தது.

    குழந்தையையும் நல்லபடியாக அன்புடன் வளர்த்தார்கள் நிலாவும் அறிவழகனும்.

    குழந்தையை பள்ளியில் சேர்க்க முதல்முறையாக அக்குழந்தைக்கு சாதிச்சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது.

    தன்னுடைய ஜாதியே தன் குழந்தையின் ஜாதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. திடுக்கிட்டான். ‘ஜாதியால் ஜாதி ஒழியும்’ என்ற அவனுடைய முழுமையான நம்பிக்கை உடைந்தது. ‘காதலால் ஒரு ஜாதி இன்னொரு ஜாதியைத்தான் அழிக்கும்.’ ஆக மொத்தத்தில் மனித மனங்கள் ஒன்றிணைந்து மனித நேயத்தைப் போற்றாத வரை ஜாதிகள் புரையோடிப் போய் மனித மனங்களில் கொலுவீற்றிருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கிப் போனான்.

    அவன் யோசனை தொடர்ந்தது.

    Share
  • மின்வெட்டு !!!

     

    பி.தமிழ்முகில் நீலமேகம்

     

    ஏர் கண்டிஷனும்  ஃபேனும்  தான்

    உதவாமல் போய்விட

    கைகொடுப்பது பனையும்

    தென்னையும்  தான் – விசிறிகளாய் !!!

     

    கிரைண்டரும் மிக்சியும்

    ஓரமாய் படுத்துறங்க -மீண்டும்

    துள்ளியோடி வந்து வாசலை

    அலங்கரிக்குது – அம்மியும் ஆட்டுரலும் !!!

     

    குளிர்ந்த நீருக்காக ஃப்ரிட்ஜ் அருகே

    காத்திருந்த காலம் மாறி

    கண்ணுக்கு அழகாய் கைக்கடக்கமாய்

    ஆரோக்கியத்துடன் – மண்பானைகள் !!!

     

    டிவியில் லயித்து – உலகை மறந்திருந்தோர்

    இப்போது சுற்றியிருப்போரின்

    முகங்களில் சிரிப்பினைப்

    பார்க்கவும் பழகியிருக்கிறார்கள் !!!!

     

    கம்ப்யூட்டரால் கட்டுண்டிருந்த குழந்தைகளுக்கு

    இப்போது  மனப்பயிற்சியும் உடற்பயிற்சியும் ….

    தாயமும் பரமபதமும் – கண்ணாமூச்சியும்

    தொட்டு விளையாட்டும் கூட விளையாடுகிறார்கள் !!!

     

    செயற்கையோடு செயற்கையாகவே

    வாழப் பழகிவிட்ட நமக்கு- இயற்கையோடு

    இயைந்த வாழ்வினை அதன் சிறப்பினை

    நமக்கு கற்றுத் தருகிறது – மின்வெட்டு !!!

    Share
  • கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்!

    ராஜராஜேஸ்வரி ஜெகமணி

    ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

    என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்

    துன்பத்தில் என் நல் துணை அவரே

    என்றென்றும் ஜீவிக்கிறார்

     செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது

    பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது

    அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது

    அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

     உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே

    என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே

    நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்

    உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

    மக்களுக்கு நல்வழி காட்ட வந்த மகான் இயேசு கிறிஸ்துவின் தியாக குணமும் மன்னிக்கும் மாண்பும் பாரதியைக் கவர்ந்தன. நல்லவை எங்கு இருந்தாலும் யாரிடம் இருந்தாலும் அதைப் பாராட்டத் தயங்காத பாரதி இயேசுவை வணங்குகிறார். ஒரு கிறித்தவர் எப்படி உருகிப் பாடுவது போல் பாரதியின்  விளங்கும் பாடல்….

    ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

         எழுந்து உயிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்

    நாசம் இன்றி நமைநித்தம் காப்பார்

         நம்அகந் தையை நாம்கொன்று விட்டால்!

    வானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன்பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம்

    கிறிஸ்து பிறப்புவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும்.

    பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது .

    மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான மரியன்னைக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை வண்ணமயமாக, கேளிக்கைகள், உறவினர், நண்பர்களுடனும் விருந்துகளுடனும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்..

    ஒளிரும் நட்சத்திரங்களை வீட்டின் முன்பு தொங்கவிட்டும், பல வகை வண்ண விளக்குகளால் வீடுகள், கடைகள், அலுவலகங்களை அலங்கரித்தும் பிரியமானவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பியும், பரிசு வழங்கியும் சுவை மிகுந்த கேக்குகள், பலகாரங்கள் வழங்கியும் அறுசுவை உணவுகளை உண்டும் ஆனந்தமாகக் கொண்டாடுவார்கள்.

    இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டு

    ஓ, எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…கிறிஸ்துவும் பிறந்தது”என்பார்கள்..

    டிசம்பர் 25 குளிர்கால சம இரவு பகல் நாள்..

    அன்பின் திருவுருவம், கருணையின் வடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாள் ஆகும்.

    இயேசுபிரான் “அன்பே வாழ்வின் நெறி” என்று வாழ்ந்து காட்டிய திருமகன், இன்னா செய்தவர்கள் நாணும்படி அவர்களுக்கு நன்னயம் செய்த பெருமகன்.

    அவர் அன்பை போதித்தார்.

    அந்த போதனைகளுக்கு தனது வாழ்க்கையையே முன்னுதாரணமாக ஆக்கினார்.

    அன்பு வார்த்தையாலும், அன்பு வாழ்க்கையாலும் உலகை ஆட்கொண்ட இரக்கத்தின் வடிவமாம் இயேசுபிரான் பிறந்த நன்னாளாம்  இனிய திருநாளில் உலகமெங்கும் அன்பு தவழவும், அமைதி நிலவவும்,சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்திப்போம்..

    அன்பின் ஒளியாய் கருணையின் வடிவாய் அவதரித்த இயேசுபிரான் பிறரின் பாவங்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்.

    தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும்படி பரமபிதாவிடம் மன்றாடியவர்.

    மன்னிப்பதன் மூலம் மன்னிக்கிறவர் மட்டுமல்லாமல், மன்னிக்கப்படுகிறவரும் உயருகிறார் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் இயேசுபிரான் அவர்கள் அவதரித்த  கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுகளோடும் நட்புகளோடும், நேசங்களோடும் பகிர்ந்து கொள்கிற இதுபோன்ற விழாக்கள் ஒருநாட்டின் பண்பாட்டையும் கலாச்சார உறவுகளையும் வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது ..

    இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் இயலாதவர்களிடம் கருணை கொண்டவர்.

    அன்பு, மனிதநேயத்தை உலகுக்குஉணர்த்தி தானும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்.

    அன்பும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் பெருமைக்குரியது.

    அது நன்மை மட்டுமே செய்யும், பொறாமைப்படாது, தற்புகழ்ச்சி கொள்ளாது. ஏசுகிறிஸ்து அன்பே உருவானவர், நிபந்தனை இல்லாத அன்பு தான் அவருக்கு ஆயுதமாய், கேடயமாய், அனைத்துமாய் இருந்தது.

    அப்படி, அன்பால் மக்களின் வாழ்வை நெறியாக்க இறைவனின் மகனாய் இயேசு கிறிஸ்து மண்ணில் உதித்த இந்த புனித நாளே கிறிஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    மக்களின் வாழ்க்கையின் பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாக   கிறிஸ்துமஸ் பண்டிகையில் கிறிஸ்துமஸ் மரம் மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது.

    கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தை – தேவதைகளை ‘சம்மனசுகள்’- நினைவூட்டுவதற்கான சின்னமாகும்.

    உலகம் முழுவதும் குளிர்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது ஆஸ்திரேலியாவில் மட்டும் உச்ச வெப்பகாலமாக இருக்கிறது …

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிறிஸ்மஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து கலந்துகொண்டனர்.

    தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் ஓட்டபந்தயத்தில் பங்கேற்றனர்.

    கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்த பலர் நீரில் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.

    Share
  • Degree of Doctor of Science (Honoris Causa)

    23. 12. 2012 காலை 1100 மணி

    கோயம்புத்தூர் ஈச்சநாரி, கற்பகம் பல்கலைக்கழகம்

    வேந்தர் முனைவர் இரா. வசந்தகுமார்

    துணைவேந்தர் முனைவர் க. பாலசுப்பிரமணியன்

    பட்டமளிப்பு விழா

    சிறப்புவிருந்தினர் உயர்நீதிமன்ற நீதியரசர் வி. இராமசுப்பிரமணியம்

    மதிப்புறு முதுமுனைவர் பட்டம் (Honoris Causa D. Sc.) மூவருக்கு

    தொழிலதிபர் க. கஸ்தூரிரங்கன்

    இந்தியன் ஓவர்சீஸ்வங்கித் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ம. நரேந்திரா

    ஐக்கிய நாடுகள் சபை மேனாள் ஆலோசகர் மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    38 முனைவர் (Ph. D.) பட்டம்

    89 முதுமாணி (M. Phil.) பட்டம்

    118 முதுநிலை (Masters) பட்டம்

    1323 இளநிலை (Bachelors) பட்டம்

    36 பட்டயம் (Diploma)

    Maravanpulavu Kanapathipillai Sachithanananthan


    Born in Jaffna, in the year 1941, Maravanpulavu Kanapathipillai Sachithanananthan graduated with a Degree in Zoology from the University of Madras in 1963. After obtaining his Masters Degree in Zoology with Marine Biology from the University of Madras under the Government of India General Scholarship Scheme, he served as a Research Officer in the Sri Lanka Scientific Service, Colombo. As a marine biologist, he has carried out scientific investigations related to, the Beche-de-mer fishery of Sri Lanka and the physical, chemical and biological nature of the Jaffna lagoon. On a scholarship from the Government of Japan, he underwent training in Marine Biochemistry in Tokyo. He participated in UNESCO training programme on Marine Microbiology in Singapore. As an Expert / Consultant to the UN/FAO he worked for 23 Governments in Asia, Africa and the Pacific, travelling through 60 countries across the world. His travels and consultancies helped him acquire proficiency in languages such as Sinhalese, English, Japanese and Arabic. His extensive studies on marine ecology related issues of the Sethusamudram project provided support to the Government of India towards speedy implementation. His research publications were carried by reputed journals in Sri Lanka, Australia, Japan and the UK and some of them are available in French, Arabic, Swahili and Japanese. His intense zeal for the Tamil language motivated him to obtain a Masters Degree in Tamil from the University of Madras in 1992.

    Subsequent to the communal disturbances of July 1977, he resigned from the Sri Lanka Scientific Service to join the teaching faculty of the University of Jaffna, to serve for two years. He also established Kaanthalakam, a book publishing house in Jaffna. In 1980 he established Kaanthalakam in Chennai, India.

    He made meaningful international contacts with people and governments in making them aware of the problems faced by the Tamils at home and canvassed support for the suffering Tamils of his native land who are very close to his heart. He has been singularly responsible for inducing the Government of Tamilnadu to grant a sum of Rs. 100 crores for the relief of Sri Lankan refugees living in the refugee camps of Tamilnadu in December 2009.

    Post-retirement from active scientific service, he plays an active role in propagating the cultural heritage of India. His contribution in the proliferation of knowledge towards self-realisation and life sustainability through www.thevaaram.org, the internet site for Panniru Thirumurai is noteworthy. From 2010, he is the coordinator of the project for the Tirumalai Tiruppathi Devasthanam to translate the Panniru Thirumurai from Tamil to Telugu. So far 7,090 songs of the 18,268 hymns have been translated by experts in the field. He is also the coordinator for the project of the Dharmapuaram Adheenam of Mayiladuthurai for translating the Panniru Thirumurai from Tamil to Kannada, Malayalam, Sanskrit, Hindi, Sinhalese and Burmese. His unique efforts are to promote and foster knowledge-sharing among different linguistic groups occupying a common cultural area by rendering centuries old middle age literature hymns of the Tamil language in other languages for reading by more people over a greater geographical space thus broadening the bases of their thought and perspective, less parochial and more universal.

    In recognition of Maravanpulavu Kanapathipillai Sachithanananthan’s individual effort and contributions to industry and society, friendship and harmony, peace, literature, knowledge-sharing and progress and spirituality, Karpagam University is pleased to confer on Maravanpulavu Kanapathipillai Sachithanananthan the Degree of Doctor of Science (Honoris Causa) in the 3rd Convocation on 23rd December 2012 and wishes him many more years of useful service to society.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    ஆதி காலத்தில் எல்லாம் அதிவேக வாகனங்கங்கள் இல்லை.. குதிரை, யானை எல்லாம் கூட சாதாரண மக்களுக்கு, பொது மக்களுக்கு வசதிப்படாது. சற்று வசதிப்பட்ட மக்களுக்கென ஏற்பட்ட காளைமாட்டு வண்டி கூட உள்ளூர் வரைக்கும்தான் உதவும், அதுவும் மகளிருக்கும் குழந்தைகளுக்கும்தான், ஆகவே எங்கும் எல்லோருக்கும் நடையோ நடைதான்.. அதுவும் வெகுதூரம் செல்லவேண்டி இருந்தால் திரும்பி வர மாதக் கணக்கில் ஆகும்.. வாணிகம் செய்ய செல்லவேண்டி வந்தால் ஊர் மண்ணைத் திரும்பவும் காண வருடக் கணக்கில் கூட ஆகும், ஒருவேளை யுத்தத்துக்கு செல்ல வேண்டி வந்தால் கேட்கவே வேண்டாம், திரும்பி வருவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகுறைவு (அப்படியும் திரும்பி வந்தால் எங்கே விழுப்புண் பெற்றாய், மார்பிலா, முதுகிலா, என்று உணர்ச்சிகட்ட வசனங்கள் பேசுவார்களாம்).

    இப்படித்தான் தலைவன் ஒருவன் தலைவியிடம் தான் வெகுதூரம் செல்லப்போவதாக பிரியா விடை கேட்பதாக ஒரு சங்கத் தமிழ்ப் பாடல் வரும். இந்தப் பாடல் பற்றி சற்று நகைச்சுவையாக எழுத்தாளர் தேவன் (புத்தகத்தின் பெயர் ‘கல்யாணி’) இப்படி எழுதினார் – தன்னை விட்டு தலைவன் பிரிய விடை கேட்கிறான் என நினைத்ததுமே தலைவி அந்த வார்த்தை தாளாமல் உடல் மெலிவாள், உடல் மெலிந்தால் கையும் மெலியும்தானே, கையில் போட்டிருந்த அழகு வளையல்கள் ஒவ்வொன்றாய் கழன்றுகொண்டே வர, அந்தக் காதலன் பயந்துபோய், அடடே, நான் உன் அன்பைப் பரீட்சித்துப் பார்த்தேன், மெய்யாகச் சொல்லவேண்டுமெனில் நான் அப்படியெல்லாம் வெகுதூரம் பயணப்படுவதாக இல்லவே இல்லை. நீ மெய் மெலிவதைக் கண்டு என் மனம் துன்புறுகிறது என்பானாம். இந்த சந்தோஷ வார்த்தையைக் கேட்டதும் காதலி உடனே உடல் பூரித்துப்போவாளாம். இதனால் அவள் கையும் சற்று அதிகமாக பூரித்துப் போய் மீதி அங்கே இருந்த ஒரே ஒரு வளையும் அளவு கொள்ளாமல் படா’ரென்று தெறித்து வெளியே  விழுகிறது.

    காதலர் பிரிவு என்பதே ஒரு இன்பம்தான், பிரிவுக் காலத்தில் அன்பு மேலும் கெட்டிப்படுகின்றது. அது அந்த ஆதி காலமாக இருந்தாலும் சரி, இந்த அதி வேக இயந்திரமய காலமாக இருந்தாலும் சரி. மனிதனுக்கே இயல்பானஉணர்ச்சியுள்ள வரைக்கும் காதல் இருக்கவே செய்யும். காதல் இருக்கும் வரை நற்பண்புகளை வளர்க்கவே செய்யும். அப்படிப்பட்ட காதலில் பிரிவு என்பது தேவைதான். பிரிவு முதலில் கசக்கும், ஆனால் பிரிந்தவர் கூடும்போது அதற்கான இனிமைக்கு உவமையே இல்லை.. ஆகையினால்தான் உவமைக்கு பெயர் போன கம்பன் கூட ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்று ஒரே வரியில் பிரிவின் சக்தியையும் பிரிவின் பின் கூடும் இன்பத்தையும் விவரித்து விடுகிறான்.

    காதலில் பிரிவு என்பது எல்லாக் கவிஞர்களுக்கும் தேனி ஊறிய பலாச்சுளை போல தித்திக்குமோ என்னவோ. திருக்குறளை வடித்த வள்ளுவன் முதல் இந்தக் காலக் கவிஞர் வரை இந்தக் காதல் பிரிவை ஒரு பிடி பிடித்துவிடுகின்றனர். இந்த வாரம் வல்லமைக்குள் இருந்த இந்தக் கவிதை ஒன்று இப்படித்தான் வர்ணிக்கின்றது.

    அனுதினமும் வளர்ந்திடுமே
    அளவிலா   காதலும் ….
    பிரிவதுவும் ஏற்படுத்துமே
    ஆழமான வலுவான
    அன்பின்  அஸ்திவாரம் !!!

    உந்தன் அன்பின் அருமையை
    எனக்கும் ……எந்தன் –
    காதலின் வலிமையை
    உனக்கும் ……உணர்த்திடாதோ ???
    இந்த தொலைதூரக் காதல் !!!

    இந்தக் கவிதையை எழுதிய திருமதி தமிழ்முகில் நீலமேகம் மிக எளிமையான தமிழில் காதலர் பிரிவின் மகிமையைத் தெரியப்படுத்தி இருப்பது மிக அழகாக இருக்கிறது. திருமதி தமிழ்முகில் நீலமேகம் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் தேர்ந்தெடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் உரித்தாகுக. சீக்கிரமே பிரிந்தவரை சேர்த்து வைக்கும் நற்பணியையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கடைசி பாரா: கவிஞர் தனுசுவின் ஒரு அழகான கவிதை வரிகள்

    “நிலவோடு
    நேசக்கலவையின்
    இச்சை முடியாத போது
    இரவுப்பொழுது முடிந்து விட்டதை எண்ணி
    பச்சைப் புற்கள்
    கண்ணீர் சிந்துகிறது”

    Share
  • முன்னேற்றம்

    தேவா

     

    முன்னோர்கள் கண்ட கனவு 

    பின்னோர்கள் வந்தும் கனவாகவே நின்றது 

    முன்னேறும் நாடு என்று மூன்று தலைமுறை முடிந்துவிட்டது ,

    எங்கள் தலை முடிகள் தான் உதிர்ந்துபோனது

    வசதிகள் பல வந்துவிட்டதாம்

    மாற்றங்கள் பல நடந்துவிட்டதாம் – அட

    உலகம் இன்று சுண்டு விரலில் வந்து விட்டதாம்

    கணினியில் உலகம் காட்டப்படுகிறதாம்                                                     

    கணினி பசிக்கு உணவளிக்குமா ?

    வறுமை கோட்டை ”டிலிட்”செய்யுமா ??

    பாவம் அது என்ன செய்யும்

    மின்சாரம் இல்லாமல்  அது மூச்சை விடுகிறது

    மின்சாரம் தாக்கியவன் மட்டுமே மடிவான்

    மின்சாரம் இல்லாமல் பல சம்சாரங்கள் மடிகிறது

    இதுவும் முன்னேற்றம்தான்.!!

    விவசாயி இன்னும் அம்மணமாகத்தான் திரிகிறான்

    எலிக்கறி கூட கிடைப்பது அரிதானது

    எலிகள் எல்லாம் இன்று பட்டணத்து பிள்ளைக் கறிக்கு பழகிப்போனது

    விலைமதிக்க முடியாத உயிர்களை எல்லாம்

    விலைவாசி முடித்து விட்டது

    தவித்த  வாய்க்கு தண்ணீர் தர மறுக்கும் நாட்டில்

    முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்பது ???????

     

    படத்துக்கு நன்றி: http://blog.sysomos.com/2010/05/19/twittera-as-a-resource-tool/question-mark/

    Share
  • துன்பம் தொடராமல்…

    -செண்பக ஜெகதீசன்-

     

    ஆடும் குட்டியும் கிடையிலே

       அடித்திட ஓநாய் இடையிலே,

    தேடும் மேய்ப்பன் நடுவிலே

       திகைத்து நிற்கும் திருடனே,

    ஓடும் பாம்பும் பதுங்கிட

       உள்ளே வந்தது கீரியும்,

    கூடும் துன்பம் அனைத்தையும்

       குறைத்திட வருபவன் இறைவனே…!

     

    படத்துக்கு நன்றி: http://www.facebook.com/pages/I-Believe-In-God-/157310268082?sk=notes

     

    Share
  • வைகுண்ட ஏகாதசி தத்துவம் …

    ராஜராஜேஸ்வரி ஜெகமணி

    காவிரி நதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோக நித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கி நிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.

    அம்பரீஷன் என்னும் மஹாராஜா துர்வாச மகரிஷி தன் சடைமுடி ஒன்றை அம்பரீஷன் மீது ஏவி விட்டார்.

    அது பயங்கர பூதமாக மாறி அம்பரீஷனைத் துரத்தியது. அப்போது, மகாவிஷ்ணு அந்தப் பூதத்தின் மீது, தன் சுதர்சனச் சக்கரத்தை வீசி எறிந்தார். அச்சக்கரத்தின் வெப்பம் தாங்காமல் பூதம் எரிந்து சாம்பலானது.

    ”பக்தியோடு ஏகாதசி நாளில் என்னைக் குறித்து விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படியானால் தான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்,” என்றார் மஹாவிஷ்ணு ..

    துர்வாசரும் அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியதோடு, அவனுடன் உணவு அருந்தி, பல வரங்களையும் தந்து விட்டு கிளம்பினார்.

    ஏகாதசி விரதமிருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் ….

    ஏகாதசி விரதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனாகிய திருமாலே, இந்த விரதத்தினை மேற்கொள்கிறார் என்பார்கள். எனவே, இதன் மகிமையை அளவிட கருவியே இல்லை.

    அஸ்வமேத யாகம் செய்த பலனை அளிக்கும் விரதம் ..

    மார்கழி மாதம் இருபது நாட்கள் வைகுண்ட ஏகாதசித் திருவிழா ஸ்ரீரங்கத்தில் விசேஷமாக நடைபெறுகிறது.

    பகல் பத்து என பத்து நாட்களும், ராப்பத்து என பத்து நாட்களும் திருவிழா நடைபெறுகிறது.

    இந்த முதல் பத்து தினங்களில் மூலவர் சன்னதியிலிருந்து நம்பெருமாள் கீழ் நிலைக்கு இறங்கி வந்து நமக்காக யோகத்தைச் செய்து காண்பிக்கிறார்.

    சமாதி நிலையைக் கலைத்து இடை நிலையைக் கலைத்து, இடகலை, பிங்கலை வழியாக சந்திர கலை, சூர்யகலை, மும்மலங்கள் போன்றவற்றைக் கடந்து ஆறு ஆதாரங்களையும் கடந்து அர்ச்சுன மண்டபத்திற்குச் செல்கிறார்.

    யோகத்தை பத்து நாட்களும் செய்த பின் பத்தாவது நாள் மோகினித் திருக்கோலம் கொள்கிறார்.

    இதன் தத்துவம் குண்டலினி சக்தி புறப்பட்டு விட்டது என்பதை நமக்கு உணர்த்துவதாகும்.

    பத்தாம் நாள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    இது பிரம்ம மந்திரம் திறப்பதைக் குறிப்பதாகும்.

    பிரம்மநிலை என்பது ஆயிரங்கால் மண்டபம். அந்த இடமே ஜெகஜ்ஜோதியாய் திகழும். யோகாக்னி அதிகமாவதால் நல்ல ஆகாரம் வேண்டும்.

    அதனால் பெருமாளுக்கு 8 மணிக்கு பொங்கலும், மதியம் நெய்யிலே செய்யப்பட்ட சம்பார தோசையும் நிவேதிக்கப்படுகிறது.

    சராசரி உடல் ஆரோக்கியம் கொண்ட ஒருவர் ஒரே வேளையில் விதவிதமான உணவு வகைகளை உண்ண முடியாது. ஆனால், யோகிகளால் முடியும்.

    எனவேதான் ரங்கநாதருக்கு செல்வரப்பம், அரிசி வடை, தோசை, சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன.

    எட்டாம் நாள் வேடுவர்பறி திருவிழா. இது 96 தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்றதைக் குறிக்கும்.

    முழுப் பட்டினியாக இருந்து பெருமாள் நாமத்தையே சுவாசித்து, புசித்து, உயிர்த்து வாழும் பக்தர்கள், பரந்தாமன் வழிகாட்ட, சொர்க்க வாசல் வழியாக சென்று அந்த நிறைவிலேயே தம் உண்ணா நோன்பை முடித்துக் கொள்வார்கள்.

    வேண்டியதை வேண்டியதற்கும் மேலே அருளும் திருவரங்கனை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தரிசித்தால் இகபரசுகம் நிச்சயம்.

    பெருமாள் தங்கக் குதிரையில் உலாவருவார்.

    அது வாசியின் ஓட்டத்தைக் குறிக்கும். குதிரை என்பது மனது. குதிரைபோல மனதும் கட்டுக்கடங்காது முன்னும் பின்னும் ஓடும்.

    அதை நினைவுறுத்த குதிரைவாகனம் முன்னும் பின்னும் வேகமாக ஆடும்போது அதில் ஆரோகணித்திருக்கும் அரங்கனைக் காணக் கண் கோடி வேண்டும்.

    ராப்பத்து உற்சவத்தில் பரமபதவாசலைக்கடந்து திருமாமணி மண்டபத்தைச் சேர்வது ஜீவாத்மா சரீரத்தை விட்டு வைகுண்டத்தை அடைவதன் சாட்சியாகக் கருதப்படுகிறது.

    யோகத்தில் உள்ள சர்ப்பகதி, வியாக்ரகதி, கஜகதி, விருஷபகதி, சிம்ம கதி எனும் ஐந்து கதிகளிலும் பெருமாளின் வையாளி சேவை நடைபெறும்.

    இத்தகு பெருமை பெற்ற வைகுண்ட ஏகாதசியை சிரத்தையுடன் போற்றுவோம் …

    Share
  • ஸப்தபதி

       சு.கோதண்டராமன்

    ஏழு அடி வைப்பது எதற்காக?

    இரு மனம் இசைந்து ஒன்றாக.

    முதலடி வைக்கையில் வேண்டுவதோ

    முகுந்தன் அருளால் மிகு உணவு.

     

    இரண்டாம் அடியை எடுப்பது

    இலட்சுமி நாயகன் புஷ்டி தர

    மூன்றாம் அடியை வைக்கும்போது

    முராரி காப்பான் விரதங்களை.

     

    நான்காம் அடியை வைப்பதனால்

    நாரணன் அளிப்பான் நல்ல சுகம்.

    ஐந்தாம் அடியால் வேண்டுவது

    அரியின்  அருளால் பசுச் செல்வம்.

     

    பருவ காலங்கள் துணை புரிய

    பிரார்த்திப்பது தான் அடுத்த அடி.

    ஏழாம் அடியை வைப்பதனால்

    இறைவனிடம் வேண்டும் வரம் என்ன?

     

    கணவன் செய்யும் நற்பணிகள்

    காரியம் யாவினும் கைகொடுக்க

    கண்ணபிரான் அருள் பின் தொடர்க.

     

    ஏழடி நடந்த நீ என் தோழி.

    என்றும் விலக்கோம் நம் நட்பை.

    சிந்தனையில் நாம் ஒன்றாவோம்.

    செயலிலும் நாமினி ஒன்றாவோம்

    உள்ளத் தூய்மை அன்புடனும்

    ஒன்றாய் இன்பம் அனுபவிப்போம்.

     

    இருக்கு வேதம் நீ என்றால் இசைக்கும் சாமம் நான் ஆவேன்

    பொறுக்கும் பூமி நீ என்றால் பொழியும் வானாய் நானிருப்பேன்

    விளையும் வயலாய் நீ இருப்பாய். விதையாய் உன்னுள் மறைந்திடுவேன்

    செல்லும் வாக்காய் நீ இருக்க, சிந்தனை மனமாய் நான் இருப்பேன்

     

    இன்சொல் நங்காய் என்னிடம் வருக.

    நன்மக்கள் பேறும் நலிவிலாச் செல்வமும்

    பெற்று நாம் வாழ்வோம், பெரும் புகழ் அடைவோம்

    படத்துக்கு நன்றி

    https://picasaweb.google.com/lh/photo/hjO-U6-l75FB2KaN6EwPVg

     

    Share
  • கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?

    தேமொழி

    காலை நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய பரபரப்பில், அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் வீடு களேபரமாக இருந்தது.  மேகலையின் தம்பியும், தம்பி மனைவியும் வீடு முழுவதும் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது  ஐந்து வயது மகள் மஞ்சரி தன் பங்கிற்கு பள்ளி கிளம்ப அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள்.

    காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்சில் வந்து இறங்கி இருந்தாள் அத்தை மேகலை. அவள் வெளி நாட்டில் இருந்து கொண்டு வந்து பரிசாகக் கொடுத்த ‘ஹாலோ கிட்டி’ பொம்மையுடன் விளையாட வேண்டும், அத்தையுடன் விளையாட வேண்டும்.  இதை எல்லாம் விட்டு விட்டுப் பள்ளிக்குப் போவதா? அவளது நியாயமான கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. கடைசிக் கணையாக பொம்மையை பள்ளிக்கு எடுத்துச் செல்வேன் என்ற அம்பையும் விட்டு அடம் பிடித்தாள். அவசரத்தில் இருந்த அம்மாவிடம் அநியாயமாக அடி வாங்கி அழுதவாறு தோல்வியைத் தழுவி குளிக்கப் போனாள்.

    தம்பி மனைவிக்கு தன்னால் ஆன உதவி செய்ய எண்ணி சமையலறைக்குப் போனாள் மேகலை.  அவள் அம்மா ஆட்சி செலுத்திய சமயலறையில் தம்பி மனைவி உரிமையுடன் வலம் வருவதைக் காண அவளுக்கு சகிக்க முடியாமல் இருந்தது. பல பொருட்களும் இடம் மாற்றி வைக்கப்பட்டு அவள் வளர்ந்த வீடே மேகலைக்கு அந்நியமாகப் போய்விட்டது வேதனையாக இருக்க ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

    தம்பி மனைவி, “அண்ணி, இந்தாங்க காபி குடிங்க, இதோ இட்லி வெந்துடும்” என்றாள்.

    “நீ வேலைக்கு வேற கிளம்பணுமே மல்லி, நான் ஏதாவது உதவி செய்யவா?” என்றாள் மேகலை.

    “நீங்க டையர்டா இருக்கீங்க, ரெஸ்ட் எடுங்க அண்ணி. எனக்கும் உங்க தம்பிக்கும் வேற இன்னிக்கு லீவு தராம ஆபீசில கழுத்தறுத்திட்டாங்க. உங்கள சரியா கவனிக்க முடியலேன்னு கஷ்டமா இருக்கு. நீங்க உதவி செய்யறேன்னு சொல்றதக் கேட்க வருத்தமா இருக்கு.  இன்னைக்கு அத்தை இருந்தா உங்களுக்கு  நல்லா இருந்திருக்கும்”, என்றவாறு இட்லி குக்கர் விசில் கேட்டு மீண்டும் சமையறைக்கு ஓடினாள் மல்லி.

    மேகலையின் அம்மா இறந்து ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டிருந்தது. அம்மா மறைவுக்கு வந்து போன மேகலை இப்பொழுதான் மீண்டும் இந்தியாவிற்கு வந்திருக்கிறாள். சென்ற முறை வந்த பொழுது தம்பிக்கு திருமணம் ஆன புதிது, குழந்தை பிறந்திருக்கவில்லை. முன்னறை சோபாவில் உட்கார்ந்து காபி குடித்த வண்ணம் தொலைக்காட்சி பார்த்த மேகலை அசதியில் சரிந்து தூங்க ஆரம்பித்தாள்.

    மகளுக்குத் தலை வாரிவிட அங்கு வந்த மல்லி, “அண்ணி, தூங்கிடாதீங்க, சாப்பிட்டுட்டுத் தூங்கலாம், ஏங்க, ஏன் இவ்வளவு நேரம்? இங்க பாருங்க உங்க அக்காவுக்கு தூக்கம் வருது.  பேச்சு கொடுத்திக்கிட்டிருங்க.  இதோ சாப்பாட்ட மேஜை மேல வைக்கிறேன்”, என்று  சொல்லியவாறு மஞ்சரிக்கு சடை பிண்ணத் தொடங்கினாள்.

    அக்கா படிக்க வாரப் பத்திரிக்கைகளை கடையில் இருந்து அள்ளிக்  கொண்டு உள்ளே நுழைந்த தம்பி, “சாப்பிட வா, அக்கா”, என்று சொல்லி, பத்திரிக்கைகளை அவளிடம் கொடுத்தான்.

    “நான் அப்புறமா சாப்பிடறேன் தம்பி, கொஞ்ச நேரம் தூங்கறேன்” என்ற அக்காவை நன்கு புரிந்த தம்பி, “சரி, வா படுக்கையில படுத்துக்கோ” என்று சொல்லி படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றான்.  “அத்தை” என்று கூச்சலிட்டவாறு  ஓடி வந்த மகளை “உஷ், கத்தாதே” என்று அடக்கினான்.

    “ஏசி போடவாக்கா?”

    “வேணாம் ஃ பேன்  போதும்” என்று சொல்லியவாறு தூங்கிவிட்ட அக்காவிற்கு போர்வையைப் போர்த்திவிட்டு, ஜன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு, அறைக்கதவை  சாத்திக்கொண்டு சென்றான் தம்பி.

    மீண்டும் மேகலை கண் விழித்த பொழுது சிறிது நேரம் அவளுக்கு எங்கு இருக்கிறோம் என்று புரியவில்லை.  மின்சாராம் நின்று, மின்விசிறியும் நின்று லேசாக வியர்த்ததில் விழித்துக் கொண்டிருந்தாள்.  வீடே அமைதியாக  இருந்தது.  வெளியில் காகம் கரையும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.

    சுற்றும் முற்றும் பார்த்தாள்.  அவளும் அவள் தங்கையும் அங்கு வளர்ந்த பொழுது பகிர்ந்து கொண்ட அதே படுக்கை அறைதான்.  அலமாரியில் அவள் கதைப் புத்தகங்கள், அவள் உபயோகித்த மேஜை, நாற்காலி எல்லாம் அப்படியே இருந்தது. ஆனால் இப்பொழுது அது மஞ்சரியின் அறையாக மாறிவிட்டிருந்த சாயலும் இருந்தது.  பொம்மைகள், சுவரில் கார்ட்டூண் உருவப் படங்கள் என அறையில் புதிய அலங்காரங்கள்.

    படுக்கைக்குப் பக்கத்தில் அவளுடைய கைபேசி, ஹாட்பேக்கில் உணவு, தண்ணீர், டவல், சோப்பு, பேஸ்ட்,  ப்ரஷ் என அவளுக்குத் தேவையானவற்றை கைக்கெட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, தம்பியும் மல்லியும் வேலைக்குச் சென்றுவிட்டது புரிந்தது.  மஞ்சரியும் பள்ளிக்குச்  சென்றிருப்பாள்.  கை பேசியில் மணி பார்த்தாள்.  காலை மணி பதினொன்றரை.  தெருவில் ஆட்டோ போகும் ஒலி தேய்ந்து மறைந்தது.  யாரோ இருவர் பேசிக்கொண்டே போனார்கள்.  அதைத்தவிர எங்கும் அமைதி.  காகம் மீண்டும் கரைந்தது.

    அம்மா இருக்கும்பொழுது வீடே கலகலப்பாக இருக்கும்.  தெருக்கதவை சாத்தியதே இல்லை. இவ்வளவு நேரம் தூங்கினால் அம்மாவிடம் இருந்து ஏகப்பட்ட திட்டு கிடைக்கும்.  இவளது பொறுப்பில்லாத தன்மையைச் சுட்டிக்காட்டியும், அம்மா வளர்ந்தபொழுது அதே வயதில் அம்மாவிற்கு  என்னென்ன பொறுப்புகள் இருந்தது என்றும் சொல்லிக்காட்டுவார்கள். வழக்கமாக சொல்லும் உன் வயசில எனக்கு ரெண்டு கைகுழந்தைங்க போன்ற வசனங்கள்தான்.  இதுபோல நண்பகலில் விழித்து ஒருமுறை அம்மாவிடம் திட்டு வாங்கியது நினைவில் ஓடியது.

    ஆண்டுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்கு விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்திருந்தாள்.  இரயிலில் பயணம் செய்த பொழுது, அவள் தோழி அடைக்கலமேரி ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிய சிட்னி ஷெல்டனின் ‘ப்ளட் லைன்” புத்தகம் படித்துவிட்டு அதை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே வந்தாள்.  மேகலை வீட்டில் ஆங்கில நாவல்கள், திரைப்படங்களுக்குத் தடை.  இப்பொழுதுதான் பல்கலை கழக நூலகத்தில் சில ஆங்கிலப் புதினங்கள் படிக்கிறாள்.  ஆனாலும் பாடங்கள் அதிகமாக இருந்ததால் கதைகளுக்கு அதிகம் நேரம் ஒதுக்க முடிந்ததில்லை.

    அடைகலத்திடம் இருந்து அந்தப் புத்தகத்தை இரவல் வாங்கினாள் மேகலை.  இரயிலில் படித்துக் கொண்டே வந்தாள்.  கதை மிக விறுவிறுப்பாக இருந்ததால் இரவு உணவை அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, இதே படுக்கையில் குப்புறப் படுத்துக் கொண்டு தொடர்ந்து படித்தாள்.  அம்மா அப்பாவிடம் கூட சரியாகப் பேசவில்லை.  அவர்களும் தொலைகிறது என்று விட்டு விட்டார்கள்.  இரவு மணி இரண்டு, மூன்று என ஓடிக் கொண்டே இருந்தது. கதையின் நாயகி எலிசபெத்தை கொலைகாரன் ஒரு மாளிகையில் கொலை செய்யத் துரத்துகிறான்.  மேகலைக்கோ திகில். அவளால் புத்தகத்தைக் கீழே  வைக்க முடியவில்லை.

    “என்ன இன்னமும் தூங்கலையா?” என்ற குரல் கேட்டு மேகலைக்குத் தூக்கி வாரிப் போட்டது.  நெஞ்சு பட படவென அடித்துக்கொண்டது. திரும்பிப்பார்த்தாள். அப்பா கோபமாக முறைத்துப் பார்த்துவிட்டு விளக்கை அணைத்து விட்டுப் போனார்.  அவர் நகர்ந்ததும் இவள் ஓடி, ஒரு டார்ச் விளக்கைத் தேடி எடுத்து தலை முழுவதும் போர்த்திக் கொண்டு மீண்டும் போர்வைக்குள் தொடர்ந்து படித்தாள்.  மீண்டும் விளக்கைப் போட்டு அப்பாவிடம் திட்டு வாங்க  பயம். கதையை படித்து முடித்த பொழுது விடிந்து விட்டது.   வீட்டு வேலைக்கு வந்த சரோஜா கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்டு வெளிக்கதவைத் திறந்து விட்டாள்.

    சரோஜா, “எப்பக்கா  வந்தீங்க? என்ன அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க?”  என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

    “ராத்திரி எட்டு மணி வண்டில வந்தேன், படிச்சுக்கிட்டிருந்தேன், இன்னமும் தூங்கப் போகலை சரோஜா” என்று சொல்லிவிட்டு வந்து படுக்கையில் படுத்தவள் மீண்டும் விழித்த பொழுது ஏறத்தாழ இன்று எழுந்த அதே நேரம்தான்.

    வெளியில் அம்மா தரையைத் துடைத்துக் கொண்டிருந்த சரோஜாவிடம் பேசுவது கேட்டது.

    “சரோஜா, இத முடிச்சிட்டு கொஞ்சம் சின்ன வெங்காயம் தோல் உறிச்சுக் கொடுத்துடு”

    “சரிங்கம்மா, அக்காவுக்கு இன்னமும் பரீட்சை முடியலையா?”

    “ஏன் கேக்கிற? நேத்தே முடிஞ்சிடுச்சே”

    “இல்லம்மா,  அக்கா காலையில கதவத் திறந்து விட்டப்போ, ராவு முழுக்க படிச்சேன், இப்பத்தான் தூங்கப் போறேன்னு சொன்னாங்க”

    “ஆமா, நீயும் உன் அருமை அக்காவும், ராத்திரி முழுக்க கதைப்  பொஸ்தம் படிக்க வேண்டியது, விடிஞ்ச பிறகு தூங்க வேண்டியது. வயசுக்கேத்த பொறுப்பில்லை.  சரி, நீ அங்க கொஞ்சம் நல்லாப் பாத்து தரையத் தொட, தம்பி காபியைக் கை தவறி கொட்டிடுச்சி. சக்கரைக்கு எறும்பு மொய்க்கும்.  ஊர்ல இருந்து ஐயாவோட தங்கச்சியும் அவங்க  பேரனும் வருவாங்க. சின்னப்புள்ள ஜட்டி இல்லாம எங்க பாத்தாலும் மண்டி போட்டுப் போவான். எறும்பு கடிச்சிடப்போவுது,” என்று சொன்ன அம்மாவின் குரலில் கடுப்பு அதிகமாக இருந்தது.

    அவர்கள் பேசுவதைக் கேட்டவாறு எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்த மேகலை, அவள் அறையை நோக்கி வரும் அம்மாவின் காலடி சத்தம் கேட்டவுடன் துண்டையும் மாற்றுடையயையும் அள்ளிக் கொண்டு குளியலறைக்கு ஓடி கதவை சாத்திக் கொண்டாள்.  அம்மாவிடம் “பொறுப்பிருக்கா உனக்கு?” என்று திட்டு வாங்குவதை அப்பொழுதைக்குத் தவிர்த்தாள்.

    இன்றும் அதே போல நண்பகலில் விழிக்கிறாள்.  விட்டத்தைப் வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தவள் மெதுவே எழுந்து முழங்காலைக் கட்டிக்கொண்டு சாத்தியிருந்த அறைக்கதவைப் பார்த்தாள். அம்மா கதவைத் திறந்து கொண்டு வந்து “எழுந்திரிக்கிற நேரத்தைப் பாரு, வயசாச்சே தவிர கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?” என்று திட்ட மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது.

    அம்மா இனிமேல் வரவே மாட்டார்கள், அவளைத் திட்டவே மாட்டார்கள் என்ற உண்மை புரிந்த பொழுது தலையணையில் முகம் புதைத்து பொங்கிப்  பொங்கி அழ ஆரம்பித்தாள்.

    படம் உதவி: http://media.tumblr.com/tumblr_lnl5n9MQeF1qfhtnu.jpg

    Share