வைகுண்ட ஏகாதசி தத்துவம் …
ராஜராஜேஸ்வரி ஜெகமணி
காவிரி நதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோக நித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கி நிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.
அம்பரீஷன் என்னும் மஹாராஜா துர்வாச மகரிஷி தன் சடைமுடி ஒன்றை அம்பரீஷன் மீது ஏவி விட்டார்.
அது பயங்கர பூதமாக மாறி அம்பரீஷனைத் துரத்தியது. அப்போது, மகாவிஷ்ணு அந்தப் பூதத்தின் மீது, தன் சுதர்சனச் சக்கரத்தை வீசி எறிந்தார். அச்சக்கரத்தின் வெப்பம் தாங்காமல் பூதம் எரிந்து சாம்பலானது.
”பக்தியோடு ஏகாதசி நாளில் என்னைக் குறித்து விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படியானால் தான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்,” என்றார் மஹாவிஷ்ணு ..
துர்வாசரும் அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியதோடு, அவனுடன் உணவு அருந்தி, பல வரங்களையும் தந்து விட்டு கிளம்பினார்.
ஏகாதசி விரதமிருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் ….
ஏகாதசி விரதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனாகிய திருமாலே, இந்த விரதத்தினை மேற்கொள்கிறார் என்பார்கள். எனவே, இதன் மகிமையை அளவிட கருவியே இல்லை.
அஸ்வமேத யாகம் செய்த பலனை அளிக்கும் விரதம் ..
மார்கழி மாதம் இருபது நாட்கள் வைகுண்ட ஏகாதசித் திருவிழா ஸ்ரீரங்கத்தில் விசேஷமாக நடைபெறுகிறது.
பகல் பத்து என பத்து நாட்களும், ராப்பத்து என பத்து நாட்களும் திருவிழா நடைபெறுகிறது.
இந்த முதல் பத்து தினங்களில் மூலவர் சன்னதியிலிருந்து நம்பெருமாள் கீழ் நிலைக்கு இறங்கி வந்து நமக்காக யோகத்தைச் செய்து காண்பிக்கிறார்.
சமாதி நிலையைக் கலைத்து இடை நிலையைக் கலைத்து, இடகலை, பிங்கலை வழியாக சந்திர கலை, சூர்யகலை, மும்மலங்கள் போன்றவற்றைக் கடந்து ஆறு ஆதாரங்களையும் கடந்து அர்ச்சுன மண்டபத்திற்குச் செல்கிறார்.
யோகத்தை பத்து நாட்களும் செய்த பின் பத்தாவது நாள் மோகினித் திருக்கோலம் கொள்கிறார்.
இதன் தத்துவம் குண்டலினி சக்தி புறப்பட்டு விட்டது என்பதை நமக்கு உணர்த்துவதாகும்.
பத்தாம் நாள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
இது பிரம்ம மந்திரம் திறப்பதைக் குறிப்பதாகும்.
பிரம்மநிலை என்பது ஆயிரங்கால் மண்டபம். அந்த இடமே ஜெகஜ்ஜோதியாய் திகழும். யோகாக்னி அதிகமாவதால் நல்ல ஆகாரம் வேண்டும்.
அதனால் பெருமாளுக்கு 8 மணிக்கு பொங்கலும், மதியம் நெய்யிலே செய்யப்பட்ட சம்பார தோசையும் நிவேதிக்கப்படுகிறது.
சராசரி உடல் ஆரோக்கியம் கொண்ட ஒருவர் ஒரே வேளையில் விதவிதமான உணவு வகைகளை உண்ண முடியாது. ஆனால், யோகிகளால் முடியும்.
எனவேதான் ரங்கநாதருக்கு செல்வரப்பம், அரிசி வடை, தோசை, சர்க்கரைப் பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன.
எட்டாம் நாள் வேடுவர்பறி திருவிழா. இது 96 தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்றதைக் குறிக்கும்.
முழுப் பட்டினியாக இருந்து பெருமாள் நாமத்தையே சுவாசித்து, புசித்து, உயிர்த்து வாழும் பக்தர்கள், பரந்தாமன் வழிகாட்ட, சொர்க்க வாசல் வழியாக சென்று அந்த நிறைவிலேயே தம் உண்ணா நோன்பை முடித்துக் கொள்வார்கள்.
வேண்டியதை வேண்டியதற்கும் மேலே அருளும் திருவரங்கனை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தரிசித்தால் இகபரசுகம் நிச்சயம்.
பெருமாள் தங்கக் குதிரையில் உலாவருவார்.
அது வாசியின் ஓட்டத்தைக் குறிக்கும். குதிரை என்பது மனது. குதிரைபோல மனதும் கட்டுக்கடங்காது முன்னும் பின்னும் ஓடும்.
அதை நினைவுறுத்த குதிரைவாகனம் முன்னும் பின்னும் வேகமாக ஆடும்போது அதில் ஆரோகணித்திருக்கும் அரங்கனைக் காணக் கண் கோடி வேண்டும்.
ராப்பத்து உற்சவத்தில் பரமபதவாசலைக்கடந்து திருமாமணி மண்டபத்தைச் சேர்வது ஜீவாத்மா சரீரத்தை விட்டு வைகுண்டத்தை அடைவதன் சாட்சியாகக் கருதப்படுகிறது.
யோகத்தில் உள்ள சர்ப்பகதி, வியாக்ரகதி, கஜகதி, விருஷபகதி, சிம்ம கதி எனும் ஐந்து கதிகளிலும் பெருமாளின் வையாளி சேவை நடைபெறும்.
இத்தகு பெருமை பெற்ற வைகுண்ட ஏகாதசியை சிரத்தையுடன் போற்றுவோம் …